பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -15

Mademoiselle சொல் இனி இல்லை:

ஆங்கிலத்தில் Miss அல்லது My young lady என்ற பொருள்கொண்ட மத்மசல் (Mademoiselle )

என்ற பிரெஞ்சு சொல்  இளம்பெண்களையும், திருமணம் ஆகாத பெண்களையும் குறிப்பிடும் சொல்லாக வழக்கிலிருந்தது. நீங்கள் ஆண்களெனில் Bonjour Monsieur என்றோ, பெண்களெனில் உங்கள் தோற்றம் வயதைப்பொறுத்து Bonjour Mademoiselle என்றோ Bonjour Madame என்றோ பொதுவிடங்களிலும், அலுவலகங்களிலும் (பிரான்சு நாட்டில்) முகமன்கூற கேட்டிருப்பீர்கள்.

பல காரணங்களை முன்னிட்டு  Mademoiselle (Miss- குமரி அல்லது யுவதி) என்ற சொல் பெண்களைப் புண்படுத்துவதாகவும், அதன் தேவை பொருளற்றதெனவும் கொள்ளப்பட்டு ஜனவரி 1- 2012லிருந்து Cesson-Sévigné நகரசபை (Ille-et-Vilaine, Bretagne)  தமது அலுவலக நடவடிக்கைகளிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்தது. இம்மாதம் 21ந்தேதியிலிருந்து பிரான்சுநாட்டின் பிரதமர் பிரான்சுவா ·பிய்யோன்(François Fillon) இச்சொல்லை நாடு முழுவதும் அரசு அலுவலக உபயோகத்திலிருந்து அதிகாரபூர்வமாக  நீக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆக பிரான்சு நாட்டில் Mademoiselle என்ற சொல் உத்தியோகபூர்வமாக இனியில்லை. பெண்கள் அனைவரும் வயது வேறுபாடின்றி அவர்களுடைய மணவாழ்க்கையைக் கணக்கில் கொள்ளாது இனிமேல் Madame (மதாம்) என்றே அழைக்கப்படுவார்கள். அவ்வாறே இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற சொற்களும் அரசாங்க ஆவனங்களில் இனி தொடராது.

அண்மையில் பிரெஞ்சு பெண்ணுரிமை அமைப்புகள் எழுப்பிய உரிமைக்குரலுக்கு அரசு அளித்திருக்கும் அனுகூலமான பதிலிது. இரண்டொரு மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது காரணமாக இருக்கலாம். இங்கே வேறொரு செய்தியையும் குறிப்பிட்டாகவேண்டும். தொடக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு Mademoiselle, Madame என பெண்களுக்கு இருந்ததைப் போலவே ஆண்களுக்கும் Demoiselle என்ற சொல்லுக்கு ஈடான Damoiseau, Monsieur சொற்கள் இடைக்காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் Damoiseau என்ற சொல்லை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு Monsieur என்ற சொல்லை மட்டும் உபயோகிப்பதென தீர்மானித்திருக்கிறார்கள். ஆக பெண்களுக்கு காலம் கடந்து நீதிவழங்கியிருக்கிறார்கள்.

——————————

 

இசைவானதொரு இந்தியப் பயணம் -2

பிப்ரவரி- 2

சென்னை சூளைமேட்டிலிருந்த இந்தியன் வங்கி விடுதியில் விழித்தபோது காலை 7 மணி. நண்பர் சவியே கிடைத்த நேரத்தைச் சிக்கெனப் பிடித்து பராபரமேயென குறட்டைக்குள் உறங்கினார். உறங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். எனக்கும் படுத்தால் உடனே உறங்கிவிடும் பழக்கமுண்டு. சென்னையில் அன்றைக்கு வாய்க்கவில்லை. ஆக விழித்தும் விழியாமலும் படுத்திருந்தேன். நண்பர் எழுந்து உட்கார்ந்தார். ஏற்கனவே மேசையில் திறந்து வைத்திருந்த மடிக் கணினி முன்பாக அமர்ந்தார். அதை ஒரு வேடிக்கைபோல பார்த்துக்கொண்டிருந்தேன். கணினிக்கு உயிர்ப்பூட்டி இணைப்புக்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றதை வெளிச்சம் பூசிய அரையிருட்டில் தெரிந்த முகத்தில் காணமுடிந்தது. ஆனால் அடுத்த கணம் ஓ Merde! என்றார். அதனை இங்கே மொழி பெயர்த்து ஆகப்போவதொன்றுமில்லை. என்னதான் புற உலகுக்கென நமது நடை உடை பாவனைகளுக்கு முலாம் பூசினாலும், இப்படி இயல்பு குணங்கள் சொற்களூடாக திடீரென்று பல்லை இளிக்கும். சாயம் வெளுத்துவிடும். மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. பொதுவிடங்களில் கவனத்துடன் காப்பாற்றப்படும் இயற்கைக்குணம் தனித்திருக்கும்பொழுதும், நெருங்கியவர்களுடன் உரையாடும்பொழுதும் வெளிப்பட்டு நாம் இன்னாரென்று காட்டிக்கொடுத்துவிடும்.

கணினியை மடித்து ஒதுக்கிவிட்டு என்னைப்பார்த்தார். அவருடைய கணினி எதிர்பாராமல் கிடைத்த இணைப்புகாரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அப்பிரச்சினையைத் தொடவில்லை. புரிந்து கொண்டவிதமாக தலையாட்டினேன். இருவருமாக ஒருவர் பின் ஒருவராக காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு விடுதிக் காவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காப்பிவரவழைத்து குடித்தோம். நண்பர் சவியேக்குள்ள பிரச்சினை, கறுப்புக் காப்பி குடிப்பது. இந்தியாவில் பால் கலந்த காப்பி நன்றாக இருக்கிறது. கறுப்புக் காப்பியை தயாரிக்க நமக்குப் போதாதென்பது நண்பரின் அபிப்ராயம். மேலை நாடுகளில் எஸ்ப்ரெஸ்ஸோ காப்பிகளை குடித்துப்பழகியவர்களுக்கு நிலமை சங்கடந்தான். நட்சத்திர ஓட்டல்களில் அப்படியான சங்கடங்கள் இருக்காதென நினைக்கிறேன். வயிற்றில் பசி தலைகாட்டியது. விடுதிக் காவலரை அழைத்து நண்பருக்கு பிரெட் பட்டரென்றும், எனக்குப் பொங்கல் வடையென்றும் தீர்மானித்து வாங்கிவரும்படி அனுப்பினேன். எனது தொலைபேசிக்கு சிம் கார்டும் தேவைபட்டது. அதிலுள்ள சிக்கல்களை கூறிய விடுதிக்காவலர் கடவுச்சீட்டு அல்லது வேறு ஆதாரங்கள் வேண்டுமென்றார். என்னிடத்தில் OCI (Overseas Citizen of India) இருந்தது கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல பசி சீக்கிரம்வந்தால் நல்லதென்று கூறி அனுப்பினேன். அவர் தலையாட்டியவிதம், அற்புதவிளக்கு பூதம்போலிருக்க அறைக்கதவை தாழ்ப்பாள்கூட போடாமல் விட்டுவைத்திருந்தேன். முதல் நாள் இரவு உணவென்ற பேரில் லூப்தான்ஸா எங்களைப் பழிவாங்கியிருந்தது. விமானம் இறங்க ஒரு மணிநேரமிருக்க  அவசர அவசரமாக ஒரு சாண்ட்விச். பின்னர் கொடுத்த தட்டை திரும்ப வாங்கும்போது கெச்சப்பும், டிஸ்யூவும் விநியோகித்தார்கள். நண்பருக்கு அதுபோல நான்கு சாண்ட்விச் வேண்டும்.

காலை மணி எட்டு. விடுதிக் காவலர் வரவில்லை. 8.30 ஆயிற்று வரவில்லை. சென்னையில் வந்திறங்கி ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. இந்திரனுக்கும், பதிப்பாள நண்பர் நடராஜனுக்கும் வருகையைத் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக நண்பர் இந்திரனுடன் பிப்ரவரி 5ந்தேதி புதுவையில் நடபெறவிருந்த கவிதை வாசிப்புக்காக தயாரிக்கவிருக்கும் ஒரு சிறிய கையடக்கமான புத்தகம் தொடர்பாக பேசவேண்டியிருந்தது. மறுமுனையில் கிடைத்தார். காலையில் என்ன திட்டமென்றார். எங்கள் அட்டவணையில் உங்களைச் சந்திப்பதென்று இருக்கிறது,  தொந்தரவுகளேதுமில்லையெனில் சந்திக்கலாமே என்றேன். அவரும் உங்களௌக்குக்காகத்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் பேசலாமென்றார். அவர் வீட்டிற்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் முகவரி தேவைபட்டது. ஆட்டோகாரருக்குச் சொல்லவேண்டிய அடையாளத்தையும் தெளிவுபடுத்திக்கொண்டு காலை பத்து மணிக்கு வந்துவிடுவோமென தெரிவித்தேன்.

காலை 9மணி. உணவுடன் வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்ற காவலர் வரவில்லை:

சார்லி சாப்ளின் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படமொன்றுண்டு. அதில் சாப்ளின் பனிமலையொன்றில் கடும் பனிப்பொழிவால் கிடைத்த சிறுகுடிலொன்றில் தங்க நேரும். அக்குடிலில் வேறொரு மனிதரும் இவரைப்போலவே பனியிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருப்பார். இருவரும் கொடூரப்பசிக்கு ஆளாகி எதையும் தின்னலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். எதிராளியின் பார்வையில் சாப்ளின் கோழியாகத் தோற்றம் தருவார். நண்பர் சவியே என்னைப் பார்த்தபோது சாப்ளின்போலவே எனக்கும் இறக்கை முளைத்திருக்க தப்பிக்க வேண்டியிருந்தது.

விடுதியின் கீழே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் பிரிந்து கிடந்தன. கதவைத் தட்டினேன், எட்டிப் பார்த்த நபரிடம்:

– விடுதிக்காவலரின் பெயரைத்சொல்லி தேடுவதாகக் குறிப்பிட்டேன்.

– வெளியே போயிருக்கிறார் வந்துவிடுவார்- என்றார்.

அந்த வந்துவிடுவார் என்கிற சொல் தந்த உத்தரவாதத்தில் மயங்கி தெருவைப்பார்த்தேன். இந்தியப் பெரு நகரங்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்புக்குட்படாமல் தமது ரகசிய குணங்களை போற்றிக் காக்கும் இலட்சோப இலட்ச தெருக்களில் அதுவுமொன்று. போடிகோவும் வண்ணப்பூச்சுமாக நிற்கிற கவர்ச்சிகரமான ஒற்றை வீடுகள், சோகையான நிறத்திற்கு வாழ்க்கைப்பட்டு மூக்கைச் சிந்தும் குடியிருப்புத் தொகுதிகள், முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கும் ஒண்டிக் குடித்தனங்களை உள்ளடக்கிய வீடுகள், அண்ணாச்சி கடை, நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிக்கு இஸ்திரிபோடும் மனிதர், குப்பையை வாரலாமா விடலாமா என யோசித்து யோசித்து பதுகாப்பு எதுவுமின்றி குப்பைகளை சைக்கிள் வண்டியில் நிறுத்திய பிளாஸ்டிக் கூடைகளில் நிரப்பிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் இருபக்கமும் தலையை திருப்பியவண்ணம் தமது வாகனத்தை முட்டி இழுத்து செல்லும் நடுத்தரவயது பெண்மணி. அரசு பெண்கள் விடுதியென்று எழுதியிருந்த ஒரு மாடி வீட்டின் தெருக்கதவு விசுக்கென்று திறக்கப்பட வெளிப்பட்ட இளம்பெண் ஒருத்தி தோளில் தொங்கியிருந்த பையை அவ்வப்போது முன்னால் தள்ளி பிடித்தபடி இடது கை கைக்குட்டையால் முகத்தில் அரும்பிய வியர்வையை ஒத்தியபடி நடந்துபோனார். இரண்டு ஆட்டோகாரர்கள் அருகருகே வண்டியை நிறுத்தியபடி உரையாடுகிறார்கள்.  சென்னை மொழியில் திட்டியபடி சிறுவனொருவனை திட்டிக்கொண்டு ஓடினான். சுவரொட்டியில் கண்ணீர் அஞ்சலி.

காலை மணி 10. விடுதிக்காவலர் வருவதாக இல்லை. பொறுமை இழந்து தொலைபேசியில் பிடித்தேன்.

– என்னங்க ஏதாச்சும் கிடைச்சுதா? நாங்க இன்றைக்கு காலமைதான் ஏதாவது சாப்பிடவேண்டுமென்று உங்களிடம் சொன்னது, நாளைகில்லை.

– அஞ்சு நிமிடத்திலே வந்துவிடுவேன் சார்.

ஐந்து நிமிடத்தில் வரவும் செய்தார். ஆனால் கைகளை வீசிக்கொண்டு 2G ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு முந்தைய ராஜா போல நடந்துவந்தார்.

– என்னங்க சும்மா வறீங்க..

– கோபிச்சுக்காதீங்க சார். ஒரு வேலையா போயிட்டேன். நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேன். பத்து நிமிடம் பொறுக்கமுடியுமா?

மிஸ்டு காலையோ கையையோ கொடுக்கவிருப்பமில்லாததால்

– இல்லைங்க பரவாயில்லை. நாங்கள் போகிற வழியில் பார்த்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டு கீழிருந்தபடியே நண்பரை அழைத்தேன். பிரெஞ்சு நண்பர் இறங்கிவந்தார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து, நண்பர் இந்திரன் முகவரியைக் கூறினேன். ஆட்டோகாரர் புரிந்துகொண்டார் ஐம்பது ரூபாய் கேட்டார். நண்பரும் நானுமாக ஏறிக்கொண்டோம். வழியில் ஐரோப்பிய மற்றும் இந்திய உணவுகள் சேர்ந்தாற்போல கிடைக்கும் உணவு விடுதி தென்படுகிறதா எனபார்த்தோம். எதுவுமில்லையென்றானது. நண்பர் இந்திரன் வீட்டிற்கு பத்து நாற்பதுக்கெல்லாம் வந்தாயிற்று. எதிர்பார்த்ததுபோலவே காலை உணவு ஆயிற்றா என்றார். இல்லையென்றேன். இங்கேயே சாப்பிடலாமே, தோசை இருக்கிறதென்றார். தோசையுடன் பூரியும் வந்தது. பிரெஞ்சு நண்பர் விருப்பமாக சாப்பிட்டார், நானுந்தான்.

மூவருமாக காலை உணவுக்குப்பிறகு ஏற்கனவே கூறியதுபோல கவிதைக் கையேடு தொடர்பாக நண்பர் இந்திரனுக்குத் தெரிந்த கணினி அலுவலகத்துக்குச் சென்றோம். காலை பதினோரு மணிக்கே வெயிலின் கடுமை தெரிந்தது. சில பிழைகளை திருத்தியதோடு எங்கள் பணி முடிந்தது.  சிறிய கலைபெட்டகமாக வடிவமைக்கப்பட்ட அப்புத்தகத்தின் வெற்றிக்குரியவர் இந்திரனென்று சொல்லலாம்.  இந்திரனுக்குள் ஒரு பிரம்மனும் உடன்வாழ்ந்ததை அன்றுதான் கண்டேன். மனதில் நிறைவுடன் மதிய உணவுக்கு ஒரு மலேசியன் அசைவ விடுதிக்குச் சென்றோம்.  விலை, தரம், அமைதி நன்றாக இருந்தன. மீண்டும் கணினி  கூடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இறுதியாக ஒருமுறை படிவத்தைப் பார்த்து மனதுக்கு நிறைவு ஏற்பட்டவுடன் திரும்பினோம். திரும்பியபோது மாலை மணி ஏழு. அன்று நண்பர் எஸ்.ராவுக்கு இயல்விருது பெற்றமைக்காக ரஜனியின் தலமையில் பாராட்டுவிழா இருந்தது. நேரம் இணக்கமாக இல்லாததாலும், சுதா ராமலிங்கம் கிரீன் பார்க் ஓட்டலில் எங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்ததாலும் செல்ல முடியவில்லையென்கிற வருத்தம்.

மாலை வெகுநேரம் இந்திரனுடன் ச¨ளைக்காது இலக்கியம் பேசினோம். நண்பர் சவியே தமது Philomensurable குறித்து இந்திரனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். இடையில் நான் மொழி பெயர்க்கவேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இருவருக்கும் தெரிந்த மொழியில் இடைமனிதரின்றி உறவாடுவதிலுள்ள புரிதல் சாத்தியம் மொழிபெயர்ப்பில் கிடைக்காதென்பது நிச்சயம். நேற்றைய இன்றைய இலக்கிய ஆளுமைகள் சிற்பக் கலைஞர்கள் ஓவியர்களென்று பேச்சு நீண்டது. இடைக்கிடை நண்பர் இந்திரன் யாளிப்பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பிரான்சிலிருந்து புறப்படும்போதே காய்ச்சலுடன் புறப்பட்டிருந்தேன். காய்ச்சல் தோள்வலியையும் சேர்த்திருந்தது. அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நண்பர் இந்திரன் அழைத்துப்போனார். அவர் நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுகிற மருத்துவரென்று விளங்கிக்கொண்டேன். அபூர்வமான மனிதர். நண்பர் இந்திரன் அவரைப்பற்றி முன்னதாகக் கூறியிருந்த வார்த்தைகளுக்குப் பழுதின்றி நடந்துகொண்டார்.

இரவு எட்டு மணிக்கு நண்பர் இந்திரனின் சகோதரர் வாகனத்தில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச்சென்றோம். சுதாராமலிங்கம் அவர் துணைவர் ராமலிங்கம் அடுத்தவாரம் மணமுடிக்கவிருந்த அவர்கள் பிள்ளை, பெங்களூர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அவர் மகளென்று அனைவரும் வந்திருந்தனர். பெரிதாக வயிற்றுக்கு ஈயப்படுவதற்கு முன்பாக சிறிதாக செவியையும் கவனிக்க நினைத்ததால் அரசியல், இலக்கியம், பெண்ணுரிமை, உளப்பகுப்பாய்வு, கீழைநாடுகளைப்பற்றிய ஐரோப்பிய பார்வையென உரையாடல் நீண்டது.

தொடரும்…

இசைவானதொரு இந்தியப்பயணம் -1

பிப்ரவரி 1.

முதல்நாள் எனது துணைவி, தனது மகள் வயிற்று பேரனுடைய முதல் ஆண்டு பிறந்த நாளைக்கொண்டாட அமெரிக்கா சென்றாள். தனித்து அவ்வளவுதூரம் பயணிக்க தயக்கம் காட்டினாள் நான் நவீன பெண்கள்  அவதாரத்தையெல்லாம் விளக்கி, ஊக்கப்படுத்தினேன். இங்கே பார், உண்மையில் நீ இல்லாமல் இந்தியா செல்ல எனக்குங்கூட பயமென்றேன்.  பொய் சொல்லாதப்பா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்ற கண்களைச் சமாதானபடுத்த வேண்டியிருந்தது. ஊடியவளை உணராமல் போனால் எழுத்தாளானாக இருந்து என்ன பயன் சொல்லுங்கள்.

அமெரிக்கா புறப்படும் முன்னரேயே எனது பெட்டிபடுக்கைகளையும் பதினைந்து நாளுக்காக துணிமணிகளையும் வேண்டிய பணத்தையும் கொடுத்து, எனது பயணத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள். என்னை ஊருக்குத் தயார்படுத்திய பட்டியலில் மூன்றாவதாகக் கைசெலவுக்கான பனத்தையும் சேர்த்திருக்கிறேன் கவனித்தீர்களா? ஏதோ வியாபாரம், கடை, எழுத்தென்று அலைந்துகொண்டிருக்கிறேனே தவிர, உண்மையில் நிதிமந்திரி அவள்தான். எழுத்தாளனாக இருக்கிறோமில்லையா? எனது புனைவு பிற இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ அவளிடத்தில் ஜெயிப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி. வழக்கம்போல நான்கு மணிக்கு எழுந்தேன். கடந்த சில நாட்களாக Strasbourg நகரில் நல்ல குளிர். கவனமாக உடுத்திக்கொண்டு மனைவி குறித்துவைத்திருந்த கட்டளைகளின் படி வீட்டை இருத்திவிட்டு காரில் இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து எனது பிரெஞ்சு நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, இரயில் நிலையம் அருகிலிருக்கும் எனது கடைக்கருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க பெட்டிகளை நண்பரும் நானுமாக இழுத்துக்கொண்டு ஓடி, இரயில் நிலையத்துக்கருகிலுள்ள லூப்தான்ஸாவின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி பத்து நிமிடம் இருக்கலாம். பேருந்தில் எங்களைப்போலவே பிராங்க்பர்ட் விமானதளத்திற்குச் செல்லவிருந்த சக பயணிகள் வரிசையில் குளிரும் பெட்டியுமாகக்  காத்திருந்தார்கள். பேருந்து ஓட்டுனருக்கு குளிரைப்பற்றிய கவலை இல்லையென நினைக்கிறேன். நான்கு மணி பதினைந்து நிமிடத்திற்கு முன்பாக கதவைத் திறக்கமாட்டேன் என்பதுபோல நிதானமாகத் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஏதோ தயவு பண்ணவிரும்பியவர்போல ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சொர்க்கவாசலைத் திறந்துவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து 250 கி.மீட்டரிலுள்ள பிராங்பர்ட் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. பேருந்தில் ஒரு குட்டித் தூக்கம். ஏழேகால், ஏழரைக்கெல்லாம் பிராங்பர்ட்டை அடைந்துவிட்டோம். நுழைவாயிலில் பிரெஞ்சு நண்பருக்கல்ல எனக்குச் சோதனை. அந்நியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கறுப்பர்கள் (இந்தியர்களும் அதிலடக்கம்) என்றால் கையில் குண்டினை வைத்துக்கொண்டு அலைகிறார்களென்ற பார்வை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. வேண்டா வெறுப்பாக அவனிடம் எனது கடவுசீட்டையும் மற்ற அத்தாட்சிகளையும் காண்பித்துவிட்டு ‘புறப்பாடு’ வரிசைக்கு வந்தோம். கையில் மிண்ணனு பதிவுச்சீட்டு அதை எந்திரத்தில் கொடுத்து பயணத்தைப் பதிவு செய்து அதற்கான அட்டையை எடுக்கவேண்டும். எந்திரத்திற்குக்கூட நான் கறுப்பனென தெரிந்திருக்கவேண்டும் அடம் பிடித்தது. அதைச் சமாதானப்டுத்துவதற்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. ஒருவழியாகச் சமாளித்து பெட்டிகளை பதிவு செய்துவிட்டு, சுங்க அதிகாரிகளையும் கடந்து பாதுகாப்புசோதனையை முடித்துக்கொண்டு, கை பைக்காக காத்திருந்தோம். நண்பரின் பை வந்தது. எனனுடையதில்லை. ஓர் ஆரியப்பெண் -இடலரின் தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். கையை அசைத்தாள். பின்னாலிருந்த நண்பரைப் பார்த்தேன், அவர் வேறு திசையில் கைகாட்டினார். எனது கைப்பையை திறந்துவைத்துக்கொண்டு ஏதோ இரணிய கசிபுவின் வயிற்றைக் கிழித்த நரசிம்ம அவதாரம்போல மற்றொருத்தி. அருகிற் சென்றேன். விஸ்கி போத்தல் கைப்பையிற்கூடாதென்றாள். பத்துவருடங்களுக்கு மேலாக ஒரு விஸ்கி போத்தல் எங்கள் வீட்டில் சீண்டுவாரின்றி இருந்ததென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களாவென்று தெரியாது. சிகரேட், மது, இத்யாதிகளை தொட்டது கிடையாதென சத்தியமெல்லாம் செய்யமாட்டேன். ஆனாலும் எனக்கு விருப்பமானவை பட்டியலில் அவைகளெல்லாம் இல்லை. எப்போதாவது இந்த எப்போதாவதிற்கு இரண்டு மாத இடைவெளியிளியிலிருந்து ஆறுமாதம்வரை பொருள் கொள்ளலாம். ஆகப் பாட்டிலுக்காக கைப்பையை பதிவு  செய்து விமானத்தில் அனுப்பிவிட்டு பறந்து, ஓடி, நடந்து, நீந்தி எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் கடந்து விமானத்தின் நுழைவாயிலைக் கடந்தபோது காத்திருந்த  கொத்தவரங்காய் பணிப்பெண் களின் குட்டன் மோர்கனை ஏற்றுக்கொண்டு நொண்டி நடந்து கபினுக்குள் கையிருப்பை துருத்திவிட்டு நாற்காலிக்குள் அடைபட்டபோது காலை பத்து. மிக மோசமான சேவை. சென்னையில் எங்களை வரவேற்க தோழி சுதாராமலிங்கம் வந்திருந்தார். அதிகாலை சென்னையை தரிசித்துக்கொண்டு இந்தியன் வங்கி விருந்தினர் விடுதியில் படுத்தபோது விடிந்துவிட்டிருந்தது.

தொடரும்…

பண்பாட்டு சந்திப்பு

அன்புடையீர்

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

நா.கிருஷ்ணா

மூன்று மொழிபெயர்ப்புகள்

வணக்கம் நண்பர்களே

அண்மையில் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்கு:

1. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்

மேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகைமையுண்டு. பின்னர் கவிதைகளிலும் எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேகச் சிறப்பு. அவற்றை வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இக்கதையில் இழையோடும் அதிர்வு அசப்பில் சீரான ஓட்டத்தையும் ஆழ்ந்துணர்கிறபோது இதயத் துடிப்பில் ஒரு சுனாமியையும் ஏற்படுத்தும் வல்லமை கண்டு அதிர்ந்தது உண்மை.

உலகங்கள் விற்பனைக்கு
அதிர்வுக்கதைகள்
விலை-90ரூபாய்
சந்தியா பதிப்பகம் 57, 53rd street
சென்னை -600083, இந்தியா

2. உயிர்க்கொல்லி
ஐந்து பிரெஞ்சுக் கதைகளின் தொகுப்பு.
விலை -100ரூபாய்

இதற்கு முன்பு செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்கர்களுக்கு இந்தக்கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகுகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. எல்லாக்கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக் குலைக்கும் ‘புனிதச் சடங்கு’ என்பதை நிறுவும் தொகுப்பு இது.

3. மார்க்ஸின் கொடுங்கனவு
டெனிஸ்கோலன் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
விலை 200ரூபாய்
மார்க்ஸிய சித்தாந்தத்தை பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவ பேராசிரிஅய்ருமான டெனிஸ்கோலன் பிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல்மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்ரங்களைக்கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மஏஏஒரு பரில்மாணத்தை துலக்கமாக்குகிறது.

மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்துப் பிறவற்றைப் புறந்தள்ளிவிடுவதும் முழுமுயற்சியில் முதலாளித்துவம் இறங்கியுள்ள இன்றையச் சமுதாயச் சூழல் குறித்தும் மார்க்ஸிய சிந்தனைகள் மறுவாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள்  பயனுள்ளவகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்ககூடியவை.

மேற்கண்ட இருநூல்களும்
காலச்சுவடு பதிப்பகம்
பழைய எண்130, புதிய எண்257
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை-600005

பிரான்சைத் தெரிந்து கொள்ளுங்கள்- ஜனவரி 20

 

 

Saint Germain -Des -Prés

பாரீஸின் நகரின் 6வது வட்டத்தில்( 6 ème arrondissement) சேன் நதியின் தென்னண்டையில் உள்ள புகழ்பெற்ற பகுதி Saint Germain -Des -Prés. பிரெஞ்சு படைப்புலகத்தின் புனித பூமி. நமது படைப்புலக நண்பர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்தால் கட்டாயம் பார்க்கவேண்டியவை பட்டியலில் இதற்கென கொஞ்சம் நேரத்தை ஒதுக்கவேண்டும்.

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் மொழி, இலக்கியம், கலைதவிர வேறு சுவாசங்களில்லை என்றிருப்போர் அவ்வப்போது வந்து இளைப்பாறும் பகுதியாக இருந்து வருகிறது. முதலில் மாண்டெல் காப்பிக் கடையில் ( Café Landelle) ஆரம்பித்து வைத்த அறிவுஜீவிகளின் சந்திப்பு இன்றைக்கும் ப்ரோக்கோப் காப்பிக் கடையில் (Café Procope)முகமன்கள், நலன் விசாரிப்புகள், இலக்கிய புதினங்கள், கேலி பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள், விவாதங்கங்கள்; அமைதியாகவும் – உரத்த குரலிலும் தெருவில் போவோர் வருவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும்படியாகவும்; பிரெஞ்சு மக்களின் பண்பாட்டினை சுண்டியவண்ணமும் தொடர்கின்றன. பிரெஞ்சு புரட்சியின் கர்த்தாக்கள்: Danton, Marat, Guillotin (கில்லெட்டின் புகழ்?) போன்றவர்கள் புரட்சிக்கு முன்பாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். பிரெஞ்சு படைப்புலகைச்சார்ந்த பலருக்கும் எழுத்தாளர்களென்ற தகுதியை இங்கே பெற்றால்தானுண்டு, அவர்களுக்கு பிற விருதுகள் பரிசுகள் இரண்டாம் பட்சம். வோல்த்தேர், ரூஸ்ஸோ, சார்த்த்ரு, சிமோன், கிளேசியோ, ஹ¥ல்பெக் கென்று இங்கே கோட்டையும் தொப்பியையும் கழற்றிவிட்டு காப்பிக்கடையின் காலியான மேசைகளைத்தேடி அலையாதவர்கள் எவருமில்லை. கோடைகாலத்தில் காபியை உறிஞ்சியபடி ப்ரோக்கோப் காப்பிக்கடையின் வெளியில் சுவாரஸ்யமாக உரையாடுபவர்களில் இன்றைய கவால்டாவோ, கிஞ்ஞாரோ இருக்கக்கூடும். காப்பிகடைகளோடு, இரவு விடுதிகளுக்கும் பங்குண்டு. படைப்புலக அறிவுமாந்தர்களின்றி திரைப்படம், நாடகம் சார்ந்து இயங்கும் மனிதர்களும், படைப்பில் ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளும் வந்துபோவதுண்டு. முன்னாள் பிரெஞ்சு அதுபர் பிரான்சுவா மித்தராண்ட் தமது அதிபர்காலத்தில் இதற்கென நேரத்தினை ஒதுக்கி இலக்கிய நண்பர்களைத் தேடி (குறிப்பாக Duras) வந்து போவதுண்டாம்.

சென்னைக்கருகே சந்தடிகளற்ற இடத்தைத் தேர்வு செய்து எழுத்தாளர்கள் வந்துபோக, கலந்துரையாட ஓரிடத்தை உருவாக்கலாம். நம்மால முடிந்தது ஏக்கத்தோடு கூடிய பெருமூச்சொன்றுதான்.. அண்ணா நூலகம் படும்பாட்டை பார்க்கிறபோது தமிழனுக்கு இதுபோன்ற பேராசைகள் கூடாது. அதுவும் தவிர  நமது நண்பர்கள் அநேகமாக ஒரு பாரை (Bar) தேர்வுசெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நான்கு பேர் சேர்ந்து சந்திப்பதென்றால் அதற்கு வேறு பொருள். அந்நோய் தமிழ்நாட்டில் படைப்புலகையும் விட்டுவைக்கவில்லை. கூடுவது குடிப்பதற்கென்றானபிறகு ஊர்வம்புதான் அரங்கேறும். இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது?

———————————

கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் விஷ்ணுபுர அறக்கட்டளை பூமணியை விருதுகொடுத்து கொண்டாடியிருக்கிறது. நண்பர் ஜெயமோகனுக்கு முகம் விருது, நண்பர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது. எழுத்தாளனை வாழுங்காலத்தில் கொண்டாட மனம் வேண்டும். வேருக்கு நீர்போல அது இன்றிமையாதது. அது எழுத்தாளருக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட மனைவி, மக்கள் மகிழ்ச்சிகொள்ளும் தருணம். நமது கடந்தகால இலக்கிய வரலாற்றில் இப்படியொரு வாய்ப்பில்லை. இன்று அதைக் கருத்தில்கொண்டு இயங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. பரிசுபெற்ற நண்பர்களை பாராட்டும் நேரத்தில், உரியவர்களை தேர்வுசெய்து பாராட்டும் பரிசுக்குழுவினருக்கு மீண்டும் நன்றிகள்.

—————————————–

அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக்கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

ருமேனியா நாட்டிலிருந்தும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புறப்பட்டு பரவலாக மேற்கு ஐரோப்பிய நாடுகளெங்கும் அலைந்து திரியும் நாடோடி மக்களின் பூர்வீகம் இந்தியா என்கிறார்கள். ஆக அவளுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது, நானொரு இந்தியன் என்பதால் மட்டுமல்ல, நானுமொரு நாடோடி என்பதால், அதாவது புலம் பெயர்கிறவர்களெல்லாம் நாடோடிகளெனில் நானும் நாடோடி என்கிற அடிப்படையில். இரண்டாவது முறையாக சிரிக்கிறாள். சிரிப்பில் ஒத்திகையின் பலன் வெளிப்படையாகவே தெரிகிறது. பாசாங்கில்லை. வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக துவங்கியிருக்கிற மே மாத வெக்கையைத் தணிக்கும் குளுமையும் அச்சிரிப்பில் இருக்கிறது. சிரிப்பில் ஓர் ஒழுங்கு. உதடுகள் சீராகப் பிரிந்து பற்களின் முன்வரிசையை, என்னை ஒரு புகைப்படக்காரனாகப் பாவித்து வெளிப்படுத்தியதைப்போல  உணர்ந்தேன். இளம்சிவப்பாக தெரிந்த அதரங்களின் மினுமினுப்பிலும் கன்னங்களின் இரு கதுப்புகளிலும் புத்தம் புதிய அச்சிரிப்பு மெல்லிய சவ்வுபோல ஒட்டியிருக்கிறது. அவளுடைய முதல் சிரிப்பும் கிட்டத்தட்ட இதுபோலத்தான் இருந்ததென்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். ஆனால் அச்சிரிப்பு அதற்கான விளைவை ஏற்படுத்த தவறிவிட்டதென்ற ஐயம் அவளுக்கு இருந்திருக்கவேண்டும். தலையை வணங்குவதுபோல தாழ்த்தியபோது, காத்திருந்ததுபோல விழுந்த தலைமுடியை விரல்தொட்டு காதுமடலுக்கும் தலைக்குமிடையே அனுப்பியபடி இரண்டாவது முறையாகச் சிரித்தபோது கூடுதலாக உதடுகள் பிரிகின்றன. இரு உதடுகளும் சேரும் இடங்கள் இம்முறை பின்னோக்கி இழுபட்டு மீண்டும் சுய நிலைக்கு வருகின்றன. சிரிப்பின் உபயோகம் என்னைப்போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். எதிராளியின் கவனத்தை தமக்கு இலாபம்தர தக்கதாக மாற்றவேண்டும். அவளுடைய எண்னமும் அதுவாகத்தான் இருக்கிறது. என்னை – என் கண்களை- குறிவைத்தே தாக்குதல் நிகழ்ந்தது. வேட்டையாடல் அநிச்சையாக நிகழ்ந்ததைப்போன்ற தோற்றம் தரினும் குறி தப்பவில்லை. குறிப்பொருள் வீழ்த்தப்பட்டது. வீழ்ந்திருந்தேன்.

கையை எனக்காக நீட்டியதும் சிரித்ததும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததா? கை நீட்டியது முதலிலும் சிரிப்பு இரண்டாவதுமாக நிகழ்ந்ததா? அல்லது சிரிப்புக்குப் பின் கையை எனக்காக நீட்டினாளா? என்ற கேள்விகள் எனக்குள் தேவையில்லாமல் ஒன்றன் பின்னொன்றாக தொடர்கின்றன. அவள் சிரிப்பினையும் நீண்டிருக்கிற அவள் கையையும் கவனியாதவன்போல நடந்துகொள்கிறேன். அதற்கான காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று  அப்பெண்ணை நான் அலட்சியம் செய்கிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றொன்று அதன் மூலம் அவளுடைய உடல்மொழியை நிராகரிப்பதும் வாய் திறந்து பேசவைப்பதுமென்ற எனது எதிர்பார்ப்பு. எனவே அவளுடை இவ்விளையாட்டில் எனக்குப் பற்றில்லை என்பதுபோல நடந்துகொள்கிறேன். எனது மனதைப் படித்தவைபோல ஸ்டியரிங்கில் விரல்கள் ஏற்ற இறக்கத்துடன் தாளமிட ஆரம்பிக்கின்றன. பெண்ணிடமிருந்த கொத்தாகப் பறித்த எனது பார்வையையை  வெப்பத்தில் நனைத்து சிக்னல் விளக்கின் மீதி பதியமிடுகிறேன். அவளிடம் நெருக்கடியொன்றை ஏற்படுத்திய குரூரத்துடன் மனம் குதூகலிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து பதட்டத்துடன், தற்காலிக மகிழ்ச்சியை ஒதுக்கியவன் ஜாடையாக அவளைப் பார்க்கிறேன். இப்போது பிரச்சினைகள் எனக்கு. விளையாட்டென்றாலும் ஆண் ஜெயிக்கவில்லையென்றால் எப்படி? என்னிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்பதை வாய் திறந்து சொல்லட்டுமே. வெள்ளந்தியாக ஒரு சிரிப்பினை உதிர்த்து சுலபமாக எதிரியை வீழ்த்திவிடலாமென்ற நாடோடிப்பெண்ணின் திட்டத்தை முறியடிக்கவேண்டும்.

அவளிடத்தில் தொடர்ந்து பதிலில்லை. மென்மையான சிரிப்பும், கை நீட்டலும் போதுமென்று நினைத்திருக்கவேண்டும். பொறுமையின்றி ஒரு நொடி திரும்பிப்பார்த்தபொழுது அவள் தலையைக் குனிந்துகொண்டாள். தாமதித்தால் வேறு வாகனங்களை, வேறு நபர்களைத் தேடி போய்விடுவாளோ என்றும் தேவையின்றி ஒரு அச்சம். பெண்ணின் ஊமை கெஞ்சுதலுக்கு மசிவதில்லையென்பதில் திட்டவட்டமாக இருக்கிறேன். நொடிகள் நிமிடங்களாகப் ஊதிப்பெருக்கின்றன. மௌனத்தின் நீட்சி என்னவாக முடியக்கூடும், என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. நிலவிய அமைதியை குலைத்துவிடக்கூடாது என்பதுபோல இருவரும் மௌனத்தை கையிலெடுக்கிறோம். அதனைக் கலைப்பதில் அவள் முந்திக்கொண்டால் எப்படி நடந்து கொள்ளலாம், என்ன கூறலாம் என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை இருவர் பார்வையும் ஓசையற்ற சூன்யத்தில் முட்டிக்கொள்கின்றன, ஒருசிலவிநாடிகள் அசைவின்மைக்குப்பிறகு அவை மேய்ச்சலில் இறங்குகின்றன. ஒருவர் மற்றவரின் பலவீனத்தை துகிலுரிந்துவிடுவதென்று செயல்படுகிறோம். “பிச்சைக்காசு அதற்கு போயிட்டு இப்படி யோசிக்கிறான்?”, என்று அவளும்; “எதற்காக இந்த கழுதை ஊமை நாடகமாடுகிறது? வாயைத் திறந்து கேட்கவேண்டியதுதானே?”  என்று நானுமாக இருக்கிறோம்.

பரிதாபத்திற்குரிய அவளது செயல்பாடு, வாய் திறந்தால் வரவிருக்கிற சொற்கள் ஆக எதுவென்றாலும் அவற்றை சந்திப்பதென்ற முடிவோடுதான் இருக்கிறேன். என்னை அணுகிய விதமும், காட்டிய பணிவும், நீட்டிய கையும் கடந்த ஒரு சில நொடிகளில் அவளை ஓர் அடிமையாகவும், என்னை எஜமானாகவும் கற்பித்துக்கொள்ள தூண்டுகின்றன. அவள் இருப்பின் மீது ஒரு தற்காலிக உரிமையை ஏற்படுத்திக்கொள்கிறேன். பெண்ணின் உடல்மொழிக்குப் பொருத்தமான வகையில், சரியான தருணத்தில், எனது பின்னூட்டம் அமையவேண்டும். சிக்னல் வழக்கமான நேரத்தைத்தான் எடுத்துக்கொள்கிறதென்ற போதிலும் எனக்கு முடிவுறாமல் நீள்வதாகத் தோன்றுகிறது. அவ்வப்போது அவளைப் பார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. மீண்டும் அடுத்தடுத்து கேள்விகள், வரிசையாக கரும்பலகையில் எழுதபட்டு கையில் பிரம்புடன் முகமற்ற ஒருவர் வாசிக்க சொல்லி அவளைக் கேட்கிறார்: பிறந்தநாடு, நாடோடி வாழ்க்கை, யாசிக்கும் குணம், மௌனம், முகம், சமிக்கைகள்- வாய் திறந்தால் பிரெஞ்சில் அவள் உபயோகப்படுத்தவிருக்கிற சொற்கள்?  இதுபோன்ற பலவும் மின்னணு தகவற் பலகையில் வருவதுபோல கோர்வையாய் தொடர்கின்றன. அவள் வாய்திறந்தால் வரக்கூடிய சொற்களெல்லாம் ஏற்கனவே வேறொரு சாலையில், வோறொரு சிக்னலில் வாகனத்தை நிறுத்திய பொழுது கேட்டதுதான். எனினும் திரும்பவும் கைநீட்டும் குறியீட்டிற்கான பொருளை அவள் தெளிவுபடுத்திட வேண்டுமென்பதில் கறாராக இருக்கிறேன். .

காத்திருப்பது அநாவசியமாகப்பட்டது. ஏதோ அவளுக்காகவே சிக்னலும் அதற்கான விதிமுறைகளும், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் இயங்குவதுபோன்ற எண்ணம் மனதில் சிலுசிலுவென்ற பரவ, உடலொருமுறை அதிர்ந்து மீள்கிறது. சென்னையில் ஒரு எழுத்தாள நண்பரைபார்க்கப்போக, மதிய உணவுக்கு முதலமைச்சர் வீடு திரும்புகிறார் எனக்கூறி வாகனங்கள்  நிறுத்தபட்டதும், மற்றொரு ஆட்டோகாரர் (எதிர்கட்சி அனுதாபி) ஏக வசனத்தில்  பிறர்காதுபட அந்த முதலமைச்சரை திட்டிதீர்த்ததும் நினைவுக்கு வந்தது. எனது தரப்பில் அவளாக வாய்திறக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்த்திருந்த நியாயங்கள் பாலினத்தில் எனக்கு எதிர்த்திசையிலிருக்கிறவள் என்ற அடிப்படையிலும், அவள் வயது காரணமாகவும் குலையத் தொடங்கிய அதேவேளையில் உலகெங்கும் ஏதோஒருவகையில்  பிறரை எதிர்பார்க்கும் கைநீட்டல்கள் அதாவது கொடுக்கின்ற கைகள் மேலேயும் வாங்குகின்ற கைகள் கீழேயுமென காட்சிகள் ஒன்று இரண்டு, நூறு ஆயிரம்  லட்சமென என்னை சுற்றிலும் வலைப்பின்னல்களாக தொடர்கின்றன.

அவளுக்கும் எனக்குமிடையில் இடைவெளியென்று ஒன்றுமில்லை.  என்னை அவளிடத்தில் நிறுத்தி அவள் நடவடிக்கைகளை எனது சரீரத்தின் செயல்பாடாக முன்னிறுத்தி யோசித்தபோது அது உண்மைதானென்று புரிந்தது. அவ்வுண்மை அவளுக்கு முன்பே எனது மௌனத்தை கலைத்துக்கொள்வதிலுள்ள நியாயத்தை தெளிவுபடுத்தியது. முடிவுகள் காரண காரியங்களை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுக்கவா முடியும். நாடோடிப்பெண்ணுக்கும் எனக்கும் இடையில் விழுந்த திரையை விலக்குவதில் அவளுக்குள்ள பொறுப்பு எனக்கு முண்டு. இப்படி இருவருமாக பார்வைகளை சாதனங்களாகப் பாவித்து எவ்வளவு நிமிடங்கள் உரையாடமுடியும். முன்பின் அறிந்திறாத இரு மனிதப்பிறவிகளுக்கிடையேயான சங்கடங்களுள் தொடக்க உரையாடலுமொன்று என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையென்பதை நினைக்க வெட்கமாக இருந்தது. தவிர இதை நான்தான் தொடங்க வேண்டும். தராசு முள் சமூகத்தில் ஓரவஞ்சனையாக என்தரப்பை சார்ந்திருக்கிறது. அதை நிரூபிக்க எனக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறபொழுது எதற்காக விட்டுகொடுப்பானேன்? நாடோடிப்பெண்ணின் நீட்டிய கைக்கும் எனது உடலுக்குமுள்ள இடைவெளி ஒரு சில அங்குலங்கள் இருக்கலாம் அல்லது தோராயமாக ஓர் அளவினைக் குறிப்பிடவேண்டுமானால், அவள் சுவாசம் என்னைத் தொடும் தூரத்தில் என்று வைத்துக்கொள்ளலாம். இக் குறுகிய இடைவெளியைவைத்துக்கொண்டு இத்தனை நேரம் அமைதியாக இருந்தததே ஆச்சரியம், வியப்புக்குரிய விடயம். யோசித்துப்பாருங்கள். கைநீட்டுகிற நபரை கூடுமானவரை தவிர்க்க  எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் நமது பார்வையிலிருந்து தவிர்க்க நினைக்கிறோமா இல்லையா? எனக்கும் அது உரைத்திருக்கவேண்டும் எனது சட்டைப் பையை துழாவி முடித்து பர்ஸ் எடுப்பதுபோல பாவனை செய்கிறேன். எனது தேடலுக்கிடையிலும், அவள் வாய்திறந்து என்னிடம் பிச்சை கேட்கவேண்டுமென்கிற இளக்காரமான எதிர்பார்ப்பு. எனது தேடல் அவளுக்கு தெம்பூட்டியிருக்கவேண்டும், வாய் திறப்பதுபோலிருந்தது, குரல் வெளிவரவில்லை, கட்டைவிரலால் ஆட்காட்டிவிரலைத் தொட்டு சுண்டியவளாய், அவளுக்குத்தேவை ஒன்றிரண்டு நாணயமென குறிப்பால் உணர்த்துகிறாள்.

நாடோடி பெண்ணிடம் தோற்றுவிட்டேன் என்பது புரிந்தது.  என்ன நடக்கவிருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டவள்போல இப்போது மெல்ல சிரிக்கிறாள். விரும்பினால் கொடு, விருப்பம் இல்லையென்றால் இல்லையென்று சொல்லு, அடுத்த வாகனத்தைப்பார்க்கிறேன் என்பது போலத்தான் அவளது அடுத்த பார்வையும் இருக்கிறது. எனது பொல்லாத நேரம் சில்லறை நாணயங்களென்று எதுவுமில்லை. சட்டைப்பை சுத்தமாகத் துடைக்கபட்டிருந்தது. என்னிடம் காசில்லை, போவென்று சொல்லிவிடலாமா? போயும் போயும் ஓர் இந்தியனிடம் கேட்டேன் பார் என அவள் நினைத்திடக்கூடாது. ஏதோ ஒட்டுமொத்த இந்தியர்களின் மரியாதைக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று நினைப்பு. சபித்தபடி  ஐந்து யூரோ தாளை அவள் கையில் வைத்தேன். புறப்பட இருந்தவளிடம், “கொஞ்சம் பொறு நாமெல்லால் ஒர் இனம் தெரியுமா?”, என்றேன். அவள் விழித்தபடி நிற்கிறாள். தொடர்ந்து பேசினேன்: “அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.”. காதில் வாங்கினாளா என்று தெரியவில்லை. அவளது முழுக்கவனமும் அடுத்த வாகனத்தின் மீதிருந்தது.

————————————————–

வணக்கம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.

ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-

2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

—————————————————————–

எனது மூன்று நூல்கள்:

இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————

மொழிவது சுகம்: ஜனவரி 5

லெ. கிளேசியோவும் இந்தியாவும்

 இந்திய தேசம் புதிர்களால் ஜ்வலிக்கிற கனவுதேவதையாக ஆதிங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள் வெவ்வேறுகாரணங்களின் அடிப்படையில் இந்தியாவைத் தேடி வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர், மெகஸ்தனிஸ் ஆகியோர் முன்னோடிகள். சந்திர குப்த மௌரியர் காலத்தில் பாடலிபுத்திரம் வரை (பாட்னா)வந்த மெகஸ்தனிஸ் சுமார் பத்தாண்டுகாலம்  தங்கி எழுதிய இண்டிகாவில்,  முதன் முதலாக ஒரு மேற்கத்தியர் பதிவு செய்த இந்தியாவைக் காண்கிறோம். அதன் பின்னர் உரோமானியரான பிளினி (Pliny the Elder) எழுதிய நூல் Naturalis Historia. கி.பி.முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவை விசித்திர மிருகமென்று சித்தரிக்கிறது.  மேற்கத்திய படைப்பாளிகளை பொருத்தவரை தங்கள் எழுத்துப்பாதையில் என்றேனுமொரு நாள் இந்தியத்தைச் சந்திக்கவேண்டுமென்பது படைப்பிலக்கிய விதி. குறிப்பாக பின் நவீனத்துவத்தில் களைத்திருக்கும் அவர்களுக்கு இந்தியத்துவம் என்ன மாய்மாலம் செய்கிறதோ? இந்தியா என்று பேசும்போதெல்லாம் அவர்கள் எழுத்து எருவைத்த பயிர்போல கரும்பச்சையில் நெளிகிறது. அதிலும் கிளேஸியோ போன்ற நாடோடிகளுக்கு எங்கேனும் ஓரிடத்தில் ஒன்றிரண்டு வரிகளிலாவது இந்தியாவை சிலாகித்து  அந்நாடுபற்றிய தங்கள் கேள்விஞானத்தைக் கோடிட்டுக் காட்டிவிடவேண்டும். உலகத்தின் இருப்பை அதன் உயிர்வாழ்க்கையை, அதன் சீர்மையையை சொல்லவருகிறபோது இந்தியா என்ற சொல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, இல்லை யெனில் தமது படைப்பறிவு கேள்விக்குறியதாகிவிடுமென்ற அச்சம் மேற்கத்திய படைப்பாளிகளுக்கு நிறையவே உண்டு. மிளகு, ஏலக்காயென்று வாசனாதி திரவியங்களைத் தேடி தங்கள் புறவளத்தை பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது ஒரு கூட்டமெனில்; சிந்தனைகள், கலைகள், இலக்கியமென்று தங்கள் அகவளத்தைப் பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது மற்றொரு கூட்டம். முதல் வளத்தை தேடிவந்தவர்கள் நம்மை அடிமைபடுத்தினார்கள், இரண்டாவது வளத்தைத் தேடிவந்தவர்கள் நமக்கு அடிமையானார்கள். எனது சிற்றறிவுக்கு சட்டென்று நினைவுக்கு வருகிற இரண்டாம் வகையினருக்கு நேற்றைய உதாரணம் ஆங்கிலேயரான இ.எம் பார்ஸ்ட்டர்.  இன்றைய உதாரணம் பிரெஞ்சுக்காரரான லெ கிளேஸியோ. La quarantaine என்ற நாவலில் எழுத ஆரம்பித்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தla Ritournelledela Faimவரை தொடர்ந்தது. இனியும் தொடரக்கூடும். மொரீஷியஸில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்ததாலோ என்னவோ இந்தியாவைப்பற்றியும் தவறாமல் எழுதுகிறார்.

 இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்?

 திராவிடக் கட்சி தலைவர்கள் அறுபதுகளில் இளிச்சவாய் தமிழர்களுக்கெனவே கண்டுபிடித்த மேடை வசனம். இன்றைக்குத் சிரியாவில் தினசரி அரங்கேறுகிறது. ஐநாவின் மனித உரிமை ஆனையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிரிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு அதிபரெடுத்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஐந்தாயிரத்திற்குக் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று சிகிச்சையின்றி வீட்டில் பதுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகிறவர்களை மருத்துவமனையில் அதிபரின் கூலிப்படை கொல்கிறது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கமுன் வரும் மருத்துவர்களுக்கும் அதுவே முடிவு. வழக்கம்போல சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டொ அதிகாரத்தின்மூலம் பாதுகாப்புசபையின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு இக்கொடுமைகளுக்குத் துணைபோகின்றன. சிரியமக்கள் சபிக்கப்பட்டவர்கள். மேற்கத்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் சிரியா நாட்டினால் லிபியா போன்றோ ஈராக்போன்றோ பெரிய இலாபங்களில்லை. எதற்காக ரஷ்யாவும் சீனாவும் சிரியாமக்களை எதிர்க்கவேண்டும்?. மேற்கத்திய நாடுகளின் குரல்கள் சிரியாவுக்கு ஆதரவாக ஒலிக்கின்றனவே அது போதாதா? உலகில் இன்னமும் சுதந்திரமென்ற சொல் ஒலிக்ககூடாத நாடொன்று உண்டெனில் அது சீனாவகாத்தான் இருக்க முடியும். இவ்விஷயத்தில் இந்தியாவை நினைக்க நமக்கு எவ்வளவோ பெருமையாக இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகளென ஆதரிக்கவும் எதிர்க்கவும் இங்கு எவ்வளவோ உள்ளன. உண்மையில் இந்தியர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இதை நான் சொல்லவில்லை ஒரு சீன நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் வாயால் சொல்லக்கேட்டது. அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் சுதந்திரமும், ஜனநாயகமும் பல நேரங்களில் கேலிக்குறியதாக இருப்பதும், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்மைதான். எனினும் கலகக்குரல்கள் எதிர்பார்க்கும் நீதிக்கு (‘பல நேரங்களில் பொய்த்தாலுங்கூட) அங்கே வாய்ப்புகளுண்டு.

 தாய் சீஜி (Dai Sijie)பிறப்பால் சீனர். வாழ்க்கையின் முற்பகுதி சீனாவில் கழிந்திருக்கிறது. பிறந்ததும் வளர்ந்ததும் பூர்ஷ்வா சூழலில். காம்ரேடுகள் சீனாவுக்கு அவர் எதிரி வர்க்கம். மாவோ சீனா புரட்சிபோதையில் அட்டூழியம் செய்த நேரம் தோழர்களுக்கு நிலவுடமையாளர்களும், பிற உரிமையாளர்களும் கொடுங்கோலர்கள். நடுத்தர மக்களும் மெத்த படித்தவர்களூம் முதலாளியியத்தின் கைக்கூலிகளென்ற மார்க்ஸிய பார்வையின்படி மூன்றாண்டுகாலம்  புணர்வாழ்வுபணிக்கு சிக்சூவான் மலைபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டவர் தாய் சீஜி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார். “சீனாவில் எனது விருப்பப்படி திரைப்படங்கள் எடுப்பதற்கான சூழ்நிலைகள் நிலவாததால் பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக சீனப்பின்புலக் கதைக்கு வியட்நாம் நாட்டில் தங்கி இரண்டுபடங்களை எடுக்கவேண்டியிருந்தது”, என்கிறார் அவர்.

 சீனாவுக்கு ஒரு தாய்சீஜியெனில் ஈரானுக்கு ஒரு ஜா·பர் பனாயி( Jafar Panahi ). ஜாபர் உலகம்முழுக்கக் கொண்டாடப்படுபவர் அவரது திரைப்படமொன்றிற்கு தங்கக் காமிராவை 1995ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் பரிசாகப்பெற்ரார். அவ்வாறே வெனிஸ் திரைப்படவிழாவிலும் பர்சினை வென்றவர். ஸ்பீல் பெர்க் இவரது பரம ரசிகர். இவருக்கு ஈரானிய உச்சநீதிமன்றம், அண்மையில் கீழ் நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த ஆறாண்டுகால சிறைதண்டனையை உறுதிசெய்திருப்பதோடு இருபதாண்டுகாலம் திரைப்படத் தொழிலிலிருந்து அவரை விலக்கி வைத்துள்ளது. இது தவிர அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரானக் கருத்துக்களை திரைபடங்களில் தெரிவித்தாரென்பது அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டு. உண்மையில் 2009 அதிபர் தேர்தலில் இயக்குனர் தற்போதைய அதிபருக்கு எதிராக நின்ற வேட்பாளரை (முசாவி) ஆதரித்தது மிகப்பெரிய குற்றம். பிரச்சினைக்குப்பின்பு 2010 மார்ச் மாதம் ஜா·பர் பனாயி அவரது மனைவி, மகள் மூவரும் கைது செய்யப்பட்டனர், 88 நாட்கள் சிறையிலிருந்த இயக்குனர் உண்ணாவிரதமிருக்கவே வேறுவழியின்றி விடுதலை செய்து ஈரான் அரசு வழக்குத் தொடர்ந்தது வழக்கின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். 

 குற்றவாளிகள்?

 மாக்சிம் ப்ருனெரி பிரான்சுநாட்டைச்சேர்ந்த 37வயது இளைஞர். லொரான்ஸ் பியாவா(Laurence Biava) என்ற எழுத்தாளர் உருவாக்கியுள்ள Le Savoir et dela Rechercheஎன்கிற இலக்கிய பரிசு அமைப்புத் தேர்வுக் குழு ஜூரிகளுள் இந்த இளைஞரும் ஒருவர். தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள வேறு இருவர் இவரை உடனடியாகத் தேர்வுக்குழுவிலிருந்து நீக்கப்படவேண்டுமென்கிறார்கள். காரணம் அவர் வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் அவருக்கிருந்த தொடர்பு. அதுமட்டுமல்ல 2002ம் ஆண்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றத்திற்கு ஆளாகி வழக்கின் முடிவில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு சிறைதண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து நன்னடத்தையின் காரணமாக அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யமுயன்ற நபர் யாரோ எவரோ அல்ல, பிரெஞ்சு ஜனாதிபதி. சம்பவம் நடந்த தினம் பிரான்சு நாட்டில் பஸ்தி விடுதலை நாளான தேசிய தினம். அதாவது ஜூலை 14. அன்றைய தினம் கொடியேற்றிவிட்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட பிறகு அதிபர் திறந்த வாகனத்தில் முப்படை தளபதிகள் சூழ மெதுவாக வந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. மெய்க்காப்பாளர்களின் முன்னெச்சரிக்கையால் அதிபரைக் காப்பற்றவும் முடிந்தது. குற்றவாளியையும் வளைத்துப்பிடித்தார்கள். இத்தகைய குற்றத்துக்குக் காரணமானவரை ஓர் இலக்கிய பரிசு தேர்வுக்க்குழுவில் இடபெறச்செய்யலாமா? என்பது பரிசுக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற இலக்கியவாதிகளின் கேள்வி. அவரை தேர்க்குழுவில் இடம்பெறச்செய்தவர்கள் அவரது படைப்புத் திறனின் அடிப்படையில் இடம்பெறச்செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது படைப்புத் திறனுக்கு சாட்சியென்று இருப்பது ஒரே ஒரு நூல். பெயர்: Une vie ordinaire : je voulais tuer Jacques Chirac தமிழில் மொழிபெயர்ப்பதெனில்: அதிபரை (ழாக் சிராக்) கொலைசெய்ய விரும்பினேன் காரணம் எனது உப்புசப்பில்லாத வாழ்க்கை. 

 அதிபர் ழாக் சிராக்கை கொலை செய்ய முயன்று 2009ல் விடுதலையாகி தற்போது ஓர் இலக்கியப்பரிசு குழு தேர்விலும் இளைஞர் மாக்சிம் ப்ருனெரி இடம்பெற்றிருக்க சம்பந்தப்பட்ட அதிபருக்கோ அண்மையில் இரண்டாண்டுகால சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவர் செய்தகுற்றம் பாரீஸ் நகரத்தின் மேயராக இருந்தகாலத்தில் செய்த ஊழல். குற்றம் பதிவுசெய்யப்பட்டும் அதிபருக்கேயுரிய பிரத்தியேக சலுகையின்கீழ் வழக்குத் தொடரமுடியாதவராக சட்டவிலக்குப் பெற்றிருந்தார். இரண்டு முறை அதிபராக இருந்த பின் மூன்றாவது முறையாக போட்டியிட பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் வாய்ப்பில்லாத நிலையில் காத்திருந்த நீதித்துறை வழக்குத் தொடர்ந்து தண்டனையும் வாங்கித்தந்தது. மேல் முறையீடு செய்யப்போவதாக அதிபரின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். எனினும் பிரான்சு நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை. சட்டத்தின் பார்வையில் இருவேறு மனிதர்கள் இருக்கமுடியாது இருக்கவும் கூடாது. இக்காரணங்களினாலேயே லோக்பால் மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.

நன்றி: அம்ருதா- ஜனவரி

————————————–