எழுத்தாளன் முகவரி-3

எழுத்தும் செயல்திறனும்

ஓர் எழுத்தாளர் ஓயாமல் இயங்குவதில் சங்கடங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளர் பலரும் செயல் திறனுடன் இருப்பார்களென்பது கட்டாயமில்லை. ஐசக் அசிமோவ் ரஷ்யராகப்பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். எழுதிக்குவித்த எழுத்தாளர்களென்று ஒரு வரிசையை உருவாக்குவோமெனில், ஐசக் அசிமோவிற்கு கட்டாயம் அதிலிடமுண்டு.

நன்றாக எழுதுவதென்பதுவேறு, வேகமாக எழுதிமுடிப்பதென்பது வேறு. இரண்டும் இணைவதென்பது அரிதாகவே நிகழ்கிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். நன்றாக எழுதவேண்டுமென்று நினைக்கிறபொழுது, அதிக நேரத்தைச் செலவிட்டாக வேண்டிய கட்டாயம். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர் ஒரு நாவலை முடிக்க குறைந்தது ஒருவருடமென்ற கணக்கில் இயங்குகிறார்கள். பிறதுறைகளைப்போலவே படைப்பிலக்கியத்திற்கும் பொதுவாக காலம், நேர்விகித்தில் உதவுகிறது. செலவிடும் நேரம் கூடுதலாக இருப்பின் படைப்பின் தரமும் நன்றாகவே அமையும். எங்கேயேனும் பிழைகள் நிகழலாம்.

படைப்பாற்றல் அல்லது ஒரு படைப்பாளியின் செயல் திறன் என்பதென்ன? பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா? போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை  தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’  என்று ஓரினம் இருக்கிறதா என்ன? .

1. எழுத உட்காரவேண்டுமென்ற விருப்பம்.

எழுத்தை நேசிப்பதாலும், அதிக வாசிப்பாலும் நூற்றில் ஐந்துவிழுக்காட்டினருக்கு எழுத்தின்மீது உருவாகும் பற்றுதல் முதலாவது. இவ்விருப்பம் இல்லையெனில் எழுதிக்குவிக்க சாத்தியமில்லை. உங்களுக்கான கதவு அடைபட்டுவிட்டதென்று பொருள்.  எந்த ஒன்றுக்கும் முதற்தேவை விருப்பம், அதுவன்றி எதுவும் அசையாது. படைப்புத் திறனுக்கும் அதுவே முதற்படி. ஐசக் அசிமோவ் கருத்தின்படி விருப்பமென்பது உந்துதலோ, மிகப்பெரிய கனவோ அல்ல. எழுத்தில் அக்கறைகொள்ள அல்லது எழுத உட்கார கனவும் உந்துதலும் அவர்வரையில் அத்தியாவசியமுமல்ல. எழுதவேண்டுமென்று நினைக்கிற நம்மில் பலரும் உந்துதலன்றி வேறு காரணங்களை முன்னிட்டு இத்துறையை தேர்வுசெய்திருக்க சாத்தியமில்லை. ஆனால் அந்த உந்துதலுக்கும், உங்கள் கற்பனை அல்லது சிந்தனை புத்தகமாக உருப்பெறுவதற்குமிடையில் ஆற்றவேண்டிய வினைகளுள்ளன. அவ்வினைகள் வெள்ளை காகிதத்தையும் எழுதுகோலையும் இணைக்கும் பணியாக இருக்கலாம், கணினியின் விசைப்பலகையைத் தொட்டு கற்பனை வடிவத்தை வார்த்தைகளில் உருமாற்றம் செய்வதாகவும் இருக்கலாம். வினையை விருப்பமின்றி, ஆர்வமில்லாது நிறைவேற்றுபவராக இருப்பின்; கதைசொல்லலில் உங்களுக்குள்ள அபார ஞானம் எத்தகைய பயன்பாட்டையும் அல்லது முன்னேற்றத்தையும் உங்கள் எழுத்தில் சேர்த்திடாது.

2. எழுதுவதைத்தவிர வேறெதையும் தேடுவதில்லை என்ற பிடிவாதம்

” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்/ கண்ணன்எம் பெருமான் என்றென்றே” என்பது திருவாய்மொழி. எழுத்தாளனுக்கும் எழுதுவதன்றி, பிறவற்றை நேசிப்பதில்லை என்ற பக்தியை எழுத்தின்மீது செலுத்த வேண்டியவராக இருக்கவேண்டும். எழுத்தாளனும் பிற மனிதர்களைப்போலவே எண்ணற்ற ஆசைகளால் இழுபடுகிறவன். இந்த இழுபறியிலும் எழுத்தை தேர்வுசெய்து இறுகப்பற்றி பக்தி செலுத்துவதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் எழுதிக்குவிக்கவும் நமக்கு முடியும். எழுதுவதன்றி வேறொன்றை விரும்புவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைத் திடப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. எழுத உட்காருகிறீர்கள், அச்சமயம். இயற்கையின் எல்லாகுணாம்சமும் இணைந்து,  ‘வாழ்க்கையில் இதைக்காட்டிலும் சுவாரஸ்யமானவை வேறு இருக்கின்றன, ‘எழுந்திரு’, என்கிறது. அதற்கென்ன நாளைக்கு உட்கார்ந்து எழுதுகிறேன்’, என நீங்கள் பதில் கூறிக்கொள்கிறீர்கள். அப்போதே செயல் திறனுள்ள எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நமது கனவு இடிந்து நொறுங்குகிறது.

3. சொந்த உழைப்பின் மீதான நம்பிக்கை.

உங்கள் எழுத்து இப்போதெல்லாம் உங்களை திருப்திபடுத்துவதில்லை. ஒரு முறைக்கு இருமுறை என்று ஆரம்பித்த பழக்கம் பத்து பன்னிரண்டுமுறை வளர்ந்திருக்கிறது. எழுத்தைத் திருத்துகிறீர்கள். ‘நான் அவனிடம் பேசினேன்’ என்ற வாக்கியத்தில் ‘நான்’ என்ற எழுவாயை அதிகப்பிரசங்கித்தனமாக உணருகிறீர்கள். ‘அவனிடம் பேசினேன்’ என்று மாற்றினாலும் சொல்ல வந்தது சொல்லப்படுகிறது என நினைக்கிறீர்கள் முன் வாக்கியத்திலும் ‘பேசினேன்’ என்று வருகிறது, எனவே அடுத்த வாக்கியத்தை ‘அவனிடம் உரைத்தேன்’ என மாற்றி, அமைக்கிறீர்கள். இப்படி அடித்து, திருத்தி சொற்கள், வாக்கியம், பத்தி பின்னர் மொத்த நூலையும் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அமைத்து … அவ்வாறு செய்தாலன்றி அமைதியாக தொடர்ந்து எழுத முடியாதெனில் இத்திருத்தமும், மாற்றமும் தேவை. சில நேரங்களில் முதலில் எழுதப்பட்ட வரியே மீண்டும் வந்தமரலாம். இருந்தாலும் மாற்றத்தை செய்தே ஆகவேண்டுமென்கிறார் ஐசக் அசிமோவ். இந்த வாக்கியத்தை இப்படியே அனுப்பினாலென்ன? இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள்? ‘லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும் என்று பதிப்பாளரும், பணம் கொடுத்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தி நம்மைப்புகழ்வதற்கு நான்கு பேரை திரட்டமுடியுமென்ற எண்ணமும் எழுத்தாளருக்கும் வருகிறபோது இதுபோன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் பெரிய எழுத்தாளனாகவரவேண்டுமென்ற கனவுகாண்போருக்கு இச்செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

4. நேரம்…நேரம்…நேரம்.

ஐசக் அசிமோவ் நான்காவதாக அறிவுறுத்துவது நம்மில் பலரும் அறிந்த விஷயத்தை அதாவது: காலம் பொன்போன்றது- கறந்தபால் முலைக்குத் திரும்பாதது என்பதுபோல கழிந்த விநாடியை திரும்ப ஈட்ட முடியாது. அசிமோவ் கூறுகிறார்: உலகில் பல இழப்புகளை ஈடு செய்யலாம். நேரத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது இருபது வயதில் ஒருவனுக்குக்கிடைக்கும் ‘ஒரு நிமிடத்திற்கும்’ அறுபது வயதில் அவனுக்கு கிடைக்கும் ‘ஒருநிமிடத்திற்கும்’ வேற்பாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்கு அமையும் நிமிடம் அவனைப்போலவே ஆரோக்கியமானது, ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் ஒருவனுக்கு அமையும் நிமிடம்: தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சுவாங்கும், பலருக்கு அது பல்போன நிமிடமாகக்கூட இருக்கலாம். செயல் திறன்மிக்க எழுத்தாளனுக்கு நேரத்தை மிச்சப்படுத்த அனேகவழிகளிருக்கின்றன. அது அவரவர் திறன் சார்ந்தது. சிலர் கதவை அடைத்துக்கொள்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் கூட பார்ப்பதில்லை என்கிறார்கள். ஐசக் அசிமோவ் பணியாளர், செயலாளர், முகவர் என எவரையும் அவர் நியமித்ததுகொண்டதில்லையாம். தனது காரியங்களை தானே பார்த்துக்கொண்டதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததென்கிறார். இது அவரவர் தேவையையும் சூழலையும் பொறுத்தது.

செயல் திறன்கொண்ட எழுத்தாளராக  வரவேண்டுமா? மனத்தை அலையவிடாதீர்கள், ஓயாமல் செயல்படுங்கள்.

————————————-

மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts

பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை.  Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று..  பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு பாலத்தை அமைத்தார்கள். பின்னர் சுங்கக்கடவு பாலமாகவும் இருந்து வந்திருக்கிறது. பல்சாக்கின் La Rabouilleuse நாவலை படித்தவர்களுக்கு, அகதாவின் மூத்தமகன் பிலிப் பிதோ பாலத்திற்கு தண்டம் கட்ட ஷ¥க்களைத் துடைப்பது ஞாபகத்திற்கு வரலாம். முதல் இரண்டு உலகயுத்தங்களின் காரணமாக இப்பாலம் கலகலத்துப்போக பிரெஞ்சு அரசு சில ஆண்டுகள் போக்குவரத்தை தடைசெய்தும் வைத்திருந்தது. தற்போதுள்ள பாலம் 1981ம் ஆண்டு உருவானது.

இவ்வளவு புராணமும் எதற்கென்று கேட்கறீர்களா? ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச்சொல்ல இப்படி சுற்றிவளைத்து பாட்டிகதை சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக காதலர்களின் பிரார்த்தனைக் கூடமாக மாறிவருகிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கலாம். விளைவு பாலத்தருகே இருக்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தைப் பார்க்க மறந்தாலும் Ponts des arts பாலத்தை பார்க்காத சுற்றுலாவாசிகள் இல்லையென்கிறார்கள். அதிலும் நீங்கள் ஆணாக இருந்து சஹானாவின் உத்தரவாதத்தை நம்பி திருமணமும் செய்து, அவளுக்காக கால்கடுக்க காத்திருந்து, சென்னை காவல் துறை ஆணையகத்திற்குள் நுழைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து பொருமிக்கொண்டிருப்பவரெனில், கடனோடு கடனாக பாரீஸ¤க்கு ஒரு முறை வந்து அம்பாள் Ponts des arts பாலத்தை ஒரு சுபயோல சுபதினத்தில் தரிசித்துவிட்டுபோவது நல்லது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும், ஒற்றையாகவோ, ஜோடியாகவோ ஒரு பூட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவர் அல்லது அன்புக்குறியவள் பெயரையும் எழுதி பூட்டிவிட்டு போனீர்களெனில் உங்கள் காதல் ஆசீர்வதிக்கப்படும், ஆமென்.

 

2. அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம்: Après lui.

 ‘அவன் பின்னால்’ என மொழிபெயர்க்கவேண்டும்.  சுவாரஸ்யத்திற்காக ‘சுற்றி சுற்றி வந்தீக’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவன் அல்லது ஒருத்தி பின்னால் அலைவதற்கான கிரியாஊக்கி எது?

படத்தின் ஆரம்ப காட்சியில் மாத்யூ கிட்டார் வாசிக்க அவன் நண்பன் பெண்ணுடையில் ஆடுகிறான். நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்க கிடார் வாசிப்பவனும் பெண்ணுடை தரித்துக்கொள்ள இருவரும் ஓரிரு நிமிடங்கள் சேர்ந்தே ஆட்டம் போடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டுகிறார். அதேக் காட்சியில் எதிர்பாராமல் மகனைப்பார்க்க வரும் தாய் மகனும் அவன் சினேகிதனும் உடுத்தியுள்ள ஆடைகளைக் கண்டு அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக மகனை பெண்ணொருத்தியை சிங்காரிப்பதுபோல, முகமாவு இட்டு, கண்மை தீட்டி உதட்டுச்சாயம் பூசி பூரித்து போகிறார். அடுத்து வரும் காட்சிகளை நியாயப்படுத்துவதற்காக இக்காட்சியை அமைத்திருக்கவேண்டும். அடுத்த காட்சியில் கேமரா சாலைவிபத்தை காட்சிபடுத்துகிறது. முழுத்திரைக்கதையும் பிரெஞ்சுத் திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான காதரின் தெனெவ் (Catherine Deneuve )என்பவரையும் மற்றொரு இளைஞரையும் நம்பிச் சொல்லப்ட்டிருக்கிறது. கதாநாயகி என்றால் மும்பை வரவு, இருபது வயசு என்றபிம்பங்கள் நம்மிடத்திலிருக்கின்றன. இப்படத்தில் அறுபது வயது காதரீன் கதை நாயகி,  பிலிம் சுருள்கள் மொத்தமும் அவருக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய மகன் மாத்யூவின் இறப்பிற்குப் பிறகு கமி(காதரீன் தெனெவ்) பிராங்க் மீது பாசத்தைப் பொழிகிறாள். பிராங்க் மாத்யூவின் நெருங்கிய ஆண் சினேகிதனென்று இதற்கு முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கமியின் கணவன், அவள் மகள் அனைவரும் பிராங்க்கை வெறுக்கிறார்கள். அவன் தன்பாலின விரும்பி என்பதால் மட்டுமல்ல, விபத்து நடந்தபோது வாகனத்தை ஓட்டியவன். மாத்யூவின் மரணத்திற்கு ஒருவகையில் அவனும் பொறுப்பு. மகனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பிராங்க் மீது கமி அன்பை பொழிகிறாள். அந்த அன்பு படிப்படியாக எல்லை மீறுகிறது.

போர்ச்சுகீசுய நாட்டைச் சேர்ந்தவனான பிராங்க் ஏழைப்பெற்றோருடன் வாழ்பவன். அவனுடைய தகப்பனார் கட்டடத் தொழிலாளி. பிராங்க்குடைய பல்கலைக்கழக படிப்பு இதுவரை மாத்யுவின் ஆதரவில் இருந்தது. படிப்பைத் தொடரமுடியாதென்ற நிலையில் தந்தையுடன் கட்டட வேலைக்குப்போகும் பிராங்க்கை மீண்டும் படிப்பைத் தொடரச் செய்கிறாள் கமி. அவன் வீட்டில் நிதிநிலமை சங்கடத்தைத் தருகிறபோது, இவளுடைய புத்தகக்கடையில் வேலைபோட்டுக்கொடுக்கிறாள். அவன் போகும் இரவு விடுதிகளைத்தேடி இவளும் போகிறாள். அவன் விரும்பும் பாடல்களை இவளும் கேட்கிறாள். அவன் கதைக்கும் இளைஞர்களை இவளும் தேடிச்சென்று கதைக்கிறாள். அவன் நடப்பதை பொறுக்காது ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கிறாள். (பிராங்க்கின் பெற்றோர் தங்கள் ஏழ்மையை அவள் அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு நாள் அந்த ஸ்கூட்டரைத் தள்ளிவந்து  கமியின் கடைவாசலில் போட்டுவிட்டுப்போகிறார்கள்). கமிக்கு பிராங்க் மீதூறும் அன்பை இனம்காணமுடியாமல் குழம்புகிறாள்.  அன்பு முற்றி நோயாக அவளுக்குள் வளர்ந்து சீழ்பிடிக்கிறது, அது புரையோடுவதற்கு முன்பாக அவள் கணவனும் பிள்ளைகளும் அவளுடைய ஊத்தை அன்பை வெட்டி எறிய நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞனே கமியில் தொல்லை தாங்காது சொந்த நாட்டிற்கு ஓடுகிறான். இவள் விடுவதில்லை லிஸ்பனுக்குச்சென்று அவன் தங்கிய அறையை தன்னுடயதாக பாவிக்க கதை முடிகிறது.

மிகவும் சிக்கலான கதை.  திரைக்கதை மட்டுமல்லை, காதரீனும் பிராங்க்காக நடிக்கும் இளைஞனும் கத்திமீது நடக்கிறார்கள். பிராங்க்கைத்தவிர பிறமனிதர்கள் இயங்கும் உலகம் அவளுக்கு வனாந்தரம். மனிதர்கள் விலங்குகள். மகனை இழந்து விரக்தியின் உச்சத்திலிருக்கும் தாயென்ற பிரதிமைக்குள் உறைந்திருக்கும்  பெண்ணுடலின் கட்டளையை மறுக்கப்போதாது தவிக்கும் ஒருபெண்மணியை நன்றாகவே உணர்ந்து சித்தரிக்கிறார் காதரீன் தெனெவ். கேயெல் மொரெல் (Gaël Morel) படத்தின் இயக்குனர். இவருடைய வேறெந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. இப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. பட உபயம் பிரெஞ்சு ARTE தொலைக்காட்சி. பிரெஞ்சோ ஜெர்மனோ தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.

http://videos.arte.tv/fr/videos/apres_lui-6870156.html

—————————

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-3

 மொரீஷியஸ் கண்ணகி:

கதை பிறந்த கதை: இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு வந்த புதிதில் ‘அவர்களைக் கண்டதும் எனது அண்டை மனிதர்கள் என நினைத்தேன். நெருங்கிப்போனால் விலகிப்போவார்கள்.  ரொம்பவும் சீரியஸாக தேடித் தேடி தமிழ் பெயர் வைத்திருப்பார்கள். தீவிரமாக விரதமிருந்து காவடி எடுப்பார்கள். கோவிந்தன் பூஜை என்பார்கள். விசேட நாட்களில் பபளபள சாரிகளைத் தேடிபிடித்து உடுத்துவார்கள் ஆனால் 200% மேற்கத்தியர்கள். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. மொரீஷிய தமிழர்கள் எதிர்கால தமிழர் வரலாற்றின் கல்வெட்டுகள்.

இன்றைக்கு உலகெங்கும் பரவிக்கிடக்கிற இந்தியத் தமிழர்களோ இலங்கைத்தமிழர்களோ (வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்களைச் சொல்லவில்லை, வருங்கால சந்ததியை சொல்கிறேன்) எப்படி இருப்பார்களென நினைக்கிறீர்கள். இன்றிருக்கிற மொரீஷியஸ் மக்களாக பெருகியிருப்பார்கள்: அதாவது காவடி எடுப்பார்கள், மாலைபோட்டுக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குப்போவார்கள், தேர் இழுப்பார்கள். விசேட நாட்களில் புடவை கட்டுவார்கள். ரஜனி, கமல்,அஜித் விஜெய் வாரிசுகளின் படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்வார்கள். மேற்கத்தியர்களினும் மேற்கத்தியர்களாக வாழ்க்கையை முடித்து செத்தவுடன் திருவாசகம் படிப்பார்கள். மொரீஷியஸ் கண்ணகி என்ற சிறுகதை 2002ல் குங்குமத்திலும், 2003 அக்டோபரில் திண்ணையிலும் வெளிவந்தது

 மொரீஷியஸ் கண்ணகி

அவளுக்கு வயது 28. பிறந்தது போர்ட்லூயிஸ், மொரீஷியஸ். வளர்ந்தது, படித்தது, செக்ஸை அறிய நேர்ந்தது சர்சல், பாரீஸ். அதிநவீனமும் சம்பிரதாயமும் ஐம்பது ஐம்பது விகிதத்திற் கலந்த சராசரி மொரீஷியஸ் மத்மசல். ஆண்களோடு கலந்து கூச்சமின்றி ஆடவும் தெரியும், பிப்ரவரி மாதக் குளிரில் பித்துக்குளி முருகதாஸ் பாடலைப் பாடிக் கொண்டு காவடியெடுக்கவும் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் அனந்தாசாமி சர்மா என்கின்ற அனந்தசாமி சர்மா மந்திரம் சொல்ல மொரீஷியஸ் தமிழர்கள் முறைப்படி இந்தியன் ஒருவனை ‘மரியாழ் ‘ செய்திருந்தாள். பிறகு அந்தத் திருமணம்- நகர சபையில் நண்பர்கள் முன்னிலையில் முறையாக பதிவுச் செய்யப்பட்டது. இன்றைய தேதியில் இருவருமே பிரெஞ்சுக்காரர்கள், குடியுரிமைச் சட்டப்படி மட்டுமல்ல வாழ்க்கை முறையிலும் கூட.

2003ல் ஒரு பிப்ரவரிமாதம் காலை மணி 6.00

படுக்கையைச் சரி செய்துவிட்டு எழுந்தபோதே மனம் வலித்தது. அவளது நண்பன்- கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையைப் பகிர்ந்துகொண்ட, பரஸ்பர அக்கறைக் காட்டிய இந்திய நண்பன்- சில நாட்களில் சற்று நேரம் கழித்தேனும் வரப் பழகிய நண்பன், இப்போது இரவுகளையும் தவிர்க்கிறான். மனதிற் மெல்லப் பயம் ஒட்டிக்கொண்டது. முதன் முறையாக அளவாக அழுதாள். கட்டில் விரிப்பின் முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு. குளிக்கும் அறைக்குள் நுழைந்து கதவினை அடைத்தாள்.

இரவு மணி 9.20:

தயக்கமின்றி ‘பார் ‘ ன் கதவினைத் தள்ளிக்கொண்டு அவள் நுழைந்தபோது, மழை அங்கியையும் மீறி ஈரப்பட்டிருந்த உடலில் இலேசாக நடுக்கம். கைக்கடிகாரத்தை பார்த்து கொண்டாள் இரவு 9மணி 20 நமிடங்கள். சுவாரஸ்யமாக குடித்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் இனத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தியின் திடார்ப் பிரவேசத்தை, ஆச்சரியத்தோடு பார்வையில் ஏற்று, பின்னர் அலட்சியம் செய்து உரையாடலைத் தொடர்ந்தனர். வாய்ப்புக் கிடைத்தவர்கள் மழையில் நனைந்திருந்த தலையை அவள் துடைக்க, தெரிந்த மார்பை தெரியாமற் பார்த்து மதுக்கோப்பையோடு ஒப்பிட்டு வாய் பிளந்ததனர். பார் வாசலிற் போடப்பட்டிருந்த விரிப்பில் சற்றே நின்று, மழையங்கியின் நீர்வடியட்டுமெனக் காத்திருந்து, அதனைக் கழற்றி பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘தாங்கி ‘யில் மாட்டினாள். குடையைச் சுருக்கிக் கீழுள்ள அதற்கான இடத்தில் வைத்தாள். இப்பொழுது தன்னைச் சுதாரித்துக்கொண்டவளாய், மெள்ள மறுபடியும் பார்வையை ஓட்டினாள்.

காலை மணி 6.30:

கோல்கேட் மெளத்வாஷால் வாயைக் கொப்பளித்தாள். குளிர்ந்த நீரை வாரி முகத்திலறைந்து கொண்டாள். நிவியா ஐ லோஷனால் கண்களை அலம்பி பின்னர் டர்க்கி டவலால் அழுந்தத் துடைத்த முகத்திற்கு டஸ்டி ரோஸ் ஒத்தினாள். புருவங்களை ஒதுக்கி ட்ரிம் செய்து பென்சிலிட்டாள். கண்களை அகலத்திறந்து மஸ்க்கராவால் வருடிமுடித்து, கண்ணிரப்பைகளுக்கு ஐ ஷேடிட்டு, அதரங்களில் ப்ளூ ரோஸ் லிப்ஸ்டிகை தடவி முடித்து மீண்டும் கண்ணாடியைப் பார்த்தபோது இரப்பைகளில் கண்ணீர். காகிதக் கைக்குட்டையை நான்காக மடித்து அதன் முனையால் ஒற்றியெடுத்து மூக்கை உறிஞ்சினாள்.

இவளது பார்வை.. சுவர்களிற் சென்று படியும் எல்லைவரை முடிச்சு முடிச்சாக மேசை நாற்காலிகள். அவற்றை நிரப்பியிருந்த அரைமயக்க மானுடர்கள். புகையும் மதுவும் அனுமதித்த மட்டரக விமர்சனங்கள், கேலிகள் கிண்டல்கள், புரிதலற்ற சிரிப்புகள். பிறகு இறுதியாக சில நிமிடத் தேடலுக்குப் பிறகு அவள் தேடிய மாதவி..

இவளையொத்த வயது, அளவாக வெட்டபட்டு, தோளிற் பதுங்கியும் பதுங்காமலும் தெரிந்த செம்பட்டை முடி. இறுக்கமாக ஒரு ஜம்பர். தடித்த உதட்டில் இரத்தம் குடித்த காட்டேரியாக ஈவ்ரொஷே சிவப்பு உதட்டுச் சாயம், கன்னங்களிற் தேவையின்றிக் கூடுதலாக ‘ரூழ் ‘. சற்றே பெரிய கண்கள்.

அந்தப் பெண்ணின் இருக்கை ‘பார் ‘ ன் வாசற்கதவைப் பார்க்கின்ற வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அக்கதவு திறந்து மூடப்படும்போதெல்லாம் அவள் இயல்பாய் நிமிர்ந்து நுழைகின்ற நபரைச் சரிபார்த்தபின் கைக்கடியாரத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்- யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கெதிரேவிருந்த நாற்காலியும் அதனை உறுதி செய்தது. இவள் அவளைக் குறி வைத்து நடந்து எதிரே போய் நின்றாள்.

காலை மணி 7.30:

கீழே டெனிம் ஸ்கர்ட் மேலே 3/4 ஸ்லீவ்ஸ் போலோ, ·பெதர்ட் §?ர்ஸ்டைல், கால்களிற் குதியுயர்ந்த கீழ்த்திசை மாடல் ஷ¥. இடது கரத்தில் ஸ்வாட்ச். வலது கரத்தில் கால்ப் லெதர் வேனிட்டி பாக். வீட்டிலிருந்து கிளம்பி பாரீஸின் கிழக்கு ·பெரிபெரிக் பிடித்து வெளியே வந்தபோது, அதி வேகப்பாதை சாலைகளில், ஆமைவேகத்தில் கார்கள் ஊர்ந்து செல்ல ‘மெர்து ‘ (ஷிட்)! சலித்துக் கொண்டாள். அலுவலகத்தை அடைந்து பிரதான கதவிற் தனக்கான அட்டையை உள்வாங்கிய இயந்திரத்திடம் வலது கட்டைவிரலை பதிப்பித்து அனுமதிகேட்க அது ‘க்வாக் ‘ கென்றது. போகின்றபோதே தனது மத்திய ஆப்ரிக்க தோழி ‘மர்லேன் ‘ க்கு ஒரு ‘சலுய் ‘(?¡ய்) சொல்லிவிட்டு இவளது கேபினில் நுழைந்தபோது, பக்கத்து கேபினில் நாற்பதுவயது மார்க்கெட்டிங் மேனேஜர் ·பிரான்சிஸ் தனது மனைவி-கம்-செகரட்ரிக்கு வழக்கம்போல முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களிருவர்க்கும் சேர்ந்தாற்போல ஒரு போன்ழூர் சொல்லிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்

இரவு 9.25

‘மன்னிக்கணும்… யாருக்காகவோ காத்திருக்கீங்கன்னு நினக்கிறேன் ? ‘ -இவள்.

‘ ம் ..என் நண்பனுக்காகக் காத்திருக்கிறேன் ‘ – அவள்.

‘ உங்கள் நண்பர் வரும்வரை இந்த நாற்காலியில் உட்காரலாமா ? ‘

அந்தப் பெண்ணிடம் தயக்கமிருந்தது. இவளும் அவளது அனுமதி வேண்டி, கேள்வியைக் கேட்கவில்லை. நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு எதிரே இருந்தவள் அவளாகவே முன்வந்து இவளிடம் பேசினாள்.

‘நீங்க.. ? ‘

‘கண்ணகி ‘

‘இந்தியாவா ?

‘இல்லை மொரீஷியஸ். மொரீஷியஸ் கண்ணகி ‘ சிரித்துக் கொண்டாள்

‘நான் சோ·பி ‘

‘எனக்குக் காப்பிகுடிக்கணும். உங்களுக்கு .. ? ‘

‘நோ..மெர்சி (நன்றி). இப்போதுதான் குடித்தேன் ‘

‘காத்திருக்கும்போது நிறையக் காப்பியைக் குடிக்கவேண்டியிருக்கும் ‘ என்று சொன்னவள் இவளுக்கான காபியைக் கொண்டுவருமாறு பணித்துவிட்டு எதிரே இருந்தவளிடம் கேட்டாள்:

‘நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ? ‘

‘அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனால் வருவதுண்டு. நீங்க என்ன பேரு சொன்னீங்க.. காண்ணகி ? ‘

‘இல்லை கண்ணகி. ‘ நிதானித்து அழுந்தச் சொன்னாள்.

‘ம்.. கண்ணகி. .. இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்தமாதிரி தெரியலையே ? ‘

உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து கண்களை இறுக மூடி பதில் சொல்ல யோசித்து, முகத்தைத் திருப்பி மீண்டும் எதிர்கொண்டவள்,

‘உண்மை. இப்போதுதான் இங்கே முதன் முறையாக வறேன். வரக்கூடாதுதான் ? ‘

‘பின்னே எதற்காக ? ‘ கேள்வியைக் கேட்டுவிட்டு, இவள் பதிலுக்குக் காத்திருந்தாள்.

கேட்டிருந்த காப்பி வந்து சேர்ந்தது. கூடவே சர்க்கரைக் கட்டிகளும் பாலும் தனித் தனியாக வைக்கப்பட்டன. குனிந்து கோப்பையைப் பார்த்தாள். சர்க்கரைத் துண்டங்களை எடுத்தவள், எதிரே இருந்தவளிடம் பேசினாள்.

‘இது என்ன ? சர்க்கரை. இந்த நேரம்வரை அதற்கெதுவும் நேர்ந்துவிடவில்லை. அதன் புனிதத்திற்கு எந்த பங்கமுமில்லை. இந்தப் பாழாய்ப் போன காப்பியை பிடிக்கவில்லை என்பதற்காக சர்க்கரையால் தப்பிக்க முடியுமா என்ன ? காபி சூடாக இருப்பதும் அதில் குதித்தால் தான் கரைந்துவிடக்கூடும் என்பதையும் சர்க்கரை அறிந்தே உள்ளது. ‘

இவளது தத்துவம் அவளுக்குக் குழப்பத்தைத் தந்திருக்கவேண்டும். தப்புவிக்க, ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்றவைத்து, நுரையீரல் கொள்ள புகையினைத் வாங்கி, பின்னர் தவணைமுறையில் நாசிகள் மற்றும் வாய் வழியாக விருப்பமின்றி வெளியேற்றினாள். முழங்கைகளை மேசையில் ஊன்றி, மடித்திருந்த கைகளிற் தலையை இறக்கி நம்ம கண்ணகியை நேரிட்டு பார்த்தாள்.

‘ஆனா விருப்பப் படாத சர்க்கரையை, இந்தக் கோப்பையிலிருக்கின்றக் காப்பியில் இறக்கியே ஆகணும்னு ஏதோவொரு சக்தி தீர்மானிச்சாச்சு. அதை சர்க்கரை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைத்தான் நாங்க விதின்னு சொல்லுறோம் ‘..

மாலை மணி 5.30

கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுச் வெகு நேரமாக சோர்ந்து உட்கார்ந்திருந்த இவளை எழுப்பியவள் ஆப்ரிக்கத் தோழி மெர்லன் .

‘என்ன செய்யற ? வீட்டுக்குக் கிளம்பலையா ? ‘ எனக் கேட்டவள் சோர்ந்திருந்த இவளது முகத்தைப் பார்த்து, பாந்தமாக அணைத்துக் கொண்டாள்.

என்ன இன்றைக்கும் அவன் வரவேயில்லையா ? ‘

‘இல்லை ‘ சொன்னவள் வெடித்து அழுதாள் ‘ இவள் அழுது முடிக்கும்வரை மெர்லன் காத்திருந்தாள்.

‘மனதிற் தேக்கி வைக்காதே. நன்றாக அழுதிடு! விட்டது சனியன்னு தலை முழுகு. டிவோர்ஸ் செய்!. உனக்காக எத்தனை பேரு வரிசையில் நிற்கிறாங்க தெரியுமா ? மிஷல் இப்போதே அரைப் பைத்தியமா அலையறான். நேற்றுபாரு, ? எங்கூடபடுத்துக்கிட்டு உன்னைப்பற்றியே பேசறான் ‘

‘இல்லை. தீர்மானிச்சுட்டேன் ‘

‘என்னன்னு ? ‘

‘நாளைக்குச் சொல்றேன் ‘ என்று கிளம்பியவைளை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த மெர்லன், உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்

இரவு மணி 9.30

தன் கைக்கடியாரத்தைப் இந்தமுறைப் பார்த்துக் கொண்டவள் சோ·பி.

‘ அப்போ நீங்க கண்ணகி இல்லை. சர்க்கரைன்னு சொல்லுங்க. ஆக இந்தச் சர்க்கரை இங்கே வந்ததற்கானக் காரணத்தைச் தெரிஞ்சுக்கலாமா ?

‘ தாராளாமா.. இவள் சிரித்தவாறே எழுந்தாள். அந்தச் சிரிப்பில், ஒரு எச்சரிக்கை இருந்தது. வெற்றியின் எக்காளமிருந்தது.

சோ·பிக்குப் புரிந்திருக்க வேண்டும். அவசரமாக கையில் வைத்திருந்த சிகரட்டை அணைத்தாள். ஏதோ ஒருவித பயம். இவளிடம் பயம். எழுந்து கொண்டாள்.

திரும்பியபோது அவன் பாருக்குள் நுழைந்து கொண்டிருந்தான்: 30லிருந்து 35 வயதிருக்கலாம், தமிழர்களின் சராரி உயரம், மானிறம், பழுப்பு நிறத்தில் லெதர் ஜாக்கெட். கருப்பு பாண்ட், புள்ளியிட்ட வெள்ளை முழுக்கைச் சட்டை. கழுத்தில் மப்ளர்.

சோ·பிக்கு வேண்டியவன். இரண்டுவருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய ரெஸ்டரெண்டில் அறிமுகமாகி, வாலைக் குழைத்துக் கொண்டு விரட்ட விரட்ட அவளிடமே ஓடி வருபவன் – இந்தியத் தமிழன்.

‘குமார்.. ‘ கூப்பிட்டவள் சோ·பி.

அவைளைப் பார்த்துக் சந்தோஷமாகக் கையைசைத்தவன் பக்கத்திலுருந்த கண்ணகியைப் பார்த்ததும் பேயறைந்தவன் போலானான்.

தயக்கத்துக்கிடையே, மெல்ல இரு பெண்கைளையும் நெருங்கினான்.

‘கண்ணகி! நீ.. நீ இங்க என்ன செய்யற ? ‘ அவனுக்கு நா குழறியது.

சோ·பிக்கு இவன் என்ன சொல்கிறான் என்பது புரியலை. ‘குமார் என்ன நடக்குது இங்கே ? ‘

‘ம்.. அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். நீ மாதவி அவன் கோவலன்னு சொல்றேன். உனக்குப் புரியாது. அவனுக்குப் புரியும். கொஞ்ச நேர முன்னாடி நான் இங்கே வந்ததுக்குக் காரணம் கேட்டியே ? பெக்க பெக்கன்னு நிக்கிறானே இவனைக் கேளு. காரணம் சொல்வான் ‘

‘.கண்ணகி.. அவசரப்படாதே…………. ‘ பயத்தில் அவனுக்குப் பேண்ட் நனைந்துவிட்டது.

சோ·பிக்கு நடக்கவிருக்கின்ற விபரீதம் புரிந்திருக்கவேண்டும்.

‘ கண்ணகி… உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்

‘ இல்லை. நான் சர்க்கரைகட்டி இல்லை. கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷீயஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை கோவலனை எரிக்கும் ரகம் ‘.

கைப்பையிலிருந்த அந்தச் சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்.

———————————–

எழுத்தாளனென்ற முகவரி-2

மூன்று காரணிகள்

மிகபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறபோது, அவர்களின் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள், தேர்வு செய்யும் சொற்களை அவதானியுங்கள். ஒரு காட்சியை அல்லது சம்பவ விவரணையை அளிப்பதில் நம்மிடமிருந்து அவர்கள் எங்கனம் வேறுபடுகிறார்கள் என்பதை அவர்களுடைய படைப்பை வாசிக்கிறபோது கண்டுணர முடியுமெனில் எழுத்து நமக்கு வசப்படக்கூடுமென நம்பலாம். இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த இடத்தைப்பெறுவதற்கு அவர்கள் கொடுத்த விலையென்ன என்று நாம் பார்க்கவேண்டும். அது மந்திரத்தால் விழுந்த மாங்காய் அல்ல, கடின உழைப்பால் பெற்றது.

எவராவது வட்ட செயலாளரைப்பிடித்து கலைமாமணி வாங்கிவிடலாம், உரையில் வைத்து பணம்கொடுத்தால் சில தினசரி செய்திகளில் இடம் பெற்றுவிடலாம், அவரை இவரை பார்த்து தொலைகாட்சியில் பத்து நிமிடம் வந்து போகலாம், சாகித்ய அகாடமியில் யாரையாவது பிடித்து ஏதாவது செய்து ஒரு பரிசைவாங்கிவிடலாம் என்பது போன்ற ‘லாம்’கள் ஒரு நாள் அலுத்துபோகும். உண்மையான எழுத்தாளனைக்கண்டதும் பதற்றத்துடன் இந்த லாம்களையெல்லாம் உதறிவிட்டு எழுந்து நிற்கவேண்டிவரும்  இப்பணிவுக்கு அசலான படைப்பாளியிடம் நமக்குள்ள மரியாதையைக்காட்டிலும் விலைகொடுத்துவாங்கிய புகழ்தரும் கூச்சமே காரணம்.

எந்த மொழியாக இருப்பினும் மூத்த எழுத்தாளர்களெனச் சொல்லப்படுகிறவர்களின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக ஜான் ஜேக்ஸ் (John Jakes) என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார். அவர் கூறும் மூன்று கர்த்தாக்கள்: Practice, Persistence Professionalism.

1. Practice: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என தமிழில் சொலவடை இல்லையா அதையே Practice எனபெயரிட்டு ஜேக்ஸ் இன்றியமையாதது என்கிறார். எழுத்திற்கு புதியவராக இருந்தாலும், பதிப்பித்தவுடனே விற்பனையில் சூடுபிடிக்கும் எழுத்தாளர் என்ற தகுதியை எட்டிப்பிடித்தவரென்றாலும் காலக்கெடுவினை வரையரை செய்து எழுதுவது நம்மை வளர்க்க உதவுமாம். அக்காலவரையரை நாளாக இருக்கலாம், வாரமாக இருக்கலாம் அல்லது மாதமாக இருக்கலாம். ஒரு முறை காலக்கெடுவைத் தீர்மானித்தபிறகு செயலில் இறங்குவது பயிற்சியில் அடுத்த கட்டம். திட்டமிட்டபடி எழுதி முடிக்கவேண்டும். வள்ளுவன் கூறுவதைப்போல எண்ணியது கைகூட திண்ணியராகவும் இருக்கவேண்டும். எழுதும் வரம் பிறவியில் ஒரு சிலருக்கு அமைந்திருக்கலாம், உழைத்தால் பெறமுடியுமென்பது ஜேக்ஸ் தரும் உத்தரவாதம்.

தொடர்ந்து எழுதிப்பழகுவது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான கடவு சீட்டு. எத்துறையில் கடுமையான பயிற்சியைக் கைகொள்ளுகிறோமோ அத்துறையில் நம்மை அறியாமலே மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருப்போம் என்கிறார். அவ்வாறான பயிற்சி எளிதானதல்ல என்பதையும் ஜேக்ஸ் மறுப்பதில்லை. சொந்த அனுபவத்தை சாட்சியம் அளிக்கிறார். அவர் பிள்ளைகள் வளரும் பருவத்தில், ஓர் இரவிற்கு இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்று மணி நேரம் எனவைத்து வாரத்திற்கு மூன்று இரவுகள் எழுதுவாராம். ஒரு பக்கம் விளம்பரத்தொழில், இன்னொருபக்கம் குடும்பத் தலைவன் இரண்டிற்கும் தாம் தலைவன் என்ற வகையில் நிறைவேற்ற பணிகள் இருந்தன, எனினும் தவறாமல் எழுதுவாராம். திடீரென்று வீட்டில் யாரேனும் சுகவீனமுற்றாலோ, அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருந்தாலோ அன்றிரவு திட்டமிட்டபடி எழுத முடியாதுபோனாலுங்கூட வேறொரு இரவில் உட்கார்ந்து அவ்வாரத்திற்கென திட்டமிட்டிருந்த பணியை முடிக்கும் வழக்கத்தினை ஜேக்ஸ் கொண்டிருந்தேன் என்கிறார்.  தினந்தோறும் எழுதுவதென்று தீர்மானம் செய்து அத்தீர்மானத்தை விடாது நிறைவேற்றினாலொழிய ஓர் வெற்றிகரமான எழுத்தாளனாக நம்மால் வலம் வர முடியாதென்பது அவரின் கருத்து. எழுத்தாளனென்று பெயரெடுத்தால் போதும் என்கிற நினைப்பிற்கும், வெற்றிகரமான எழுத்தாளனாக வரவேண்டுமென்ற ஆசைக்குமுள்ள பேதம் ஜேக்ஸை பொறுத்தவரை, பின்னதற்கு நிறைய எழுதிப்பழகவேண்டும்.

2. Persistense: ஜேக்ஸின் செயல்முறை திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது சோர்விலனாக இருத்தல். இன்றைக்கு வாசகர்களின் தேர்வுக்கொப்ப தினசரிகள்,  சஞ்சிகைகள் இருக்கின்றன. இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தை சுதந்திரமாக பதிவுசெய்யவும் கூடுதலாக கவனம் பெறவும் விரும்பினீர்களெனில் இருக்கவே இருக்கின்றன இணையதளங்கள். எழுதும் உத்வேகத்திற்கும், அயர்வுறாது தொடர்ந்து இயங்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கவும் இவை உதவுகின்றன.  ஆனால் அறுபது எழுபதுகளில் எழுதவந்த  படைப்பாளிகளை யோசித்துப்பாருங்கள்.  எந்தப்பின்புலமும் இல்லாது வெற்றிபெற்ற எழுத்தாளர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வெற்றிக்குப்பின்னே ஜேக்ஸ் கூறுவதுபோல அயராத உழைப்பு இருந்தது. முன்பெல்லாம் வாரசஞ்சிகைகளுக்கு வெள்ளைதாள்களை வாங்கி, பிறருக்கு படிக்க ஏதுவாக பொறுமையுடன் எழுதியதை நகலெடுத்து, திரும்பப்பெறுவதற்கும் போதிய தபால் தலைகளுடன் கூடிய உறையைவைத்து, சில சஞ்சிகைகள் நமக்கல்ல என்பதை புரிந்து, எங்கே நம்முடைய ஜம்பம் பலிக்குமென யோசித்து அனுப்பிவிட்டுக் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பெண்கள் எனில் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாக பாவப்பட்ட ஜென்மங்கள். முதலில் அவர்கள் எழுத உட்காரவே இருட்டறைக்குள் ஒதுங்கவேண்டும். இவைகளெல்லாம் ஓரளவு வசதிபடைத்த நடுத்தர மற்றும் முன்னேறிய சமூகத்திற்கு வாய்த்தது. சாமான்யனென்றால் அதுகூட இல்லை. உங்கள் படைப்பு எடுபடாமல் போனதற்குக் பல காரணங்கள் இருக்கலாம். அறிமுகமில்லாத பெயரெனில் அக்கறை கொள்ளமாட்டார்கள்; அதிட்டமிருந்து படிக்கப்படநேர்ந்தாலும் அன்றைக்கு அந்த உதவி ஆசிரியனின் மன நிலையைப்பொறுத்தும் உங்கள் தலைவிதி அமையலாம். படைப்பு நிராகரிக்கப்பட பெரும்பாலும் எழுத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதுதான் உண்மை. சார்த்ரு தொடங்கி நம்ம ஊர் எழுத்தாளர்வரை இப்படி ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் உலகிலுண்டு. மேற்கத்திய உலகில் உங்கள் சரக்கு அசலான சரக்கு எனில் நிச்சயமாக விலைபோகும். தமிழில் இரண்டும் நடக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்தே விலைபோகும். தமிழ்நாட்டில் இலக்கியத்திலுங்கூட அரசியலுண்டு. சிபாரிசு முன்நிற்கிறது. பணத்தாலும் நைச்சியம் செய்தும் பெற்றவை நம்மை அதிக நாட்கள் தாங்கி நிற்காது. சிலர் என்னிடம் பேசும்பொழுது கூசாமல் தங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சுயபுராணங்கள் அதிகரிக்கிறபோது எனக்கு குமட்டிக்கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் இதழியல், பதிப்பாளர்கள் அனைவருமே பொய்யைக் கூவி விற்பவர்கள் அல்ல, எனது பத்தாண்டுகால எழுத்து அனுபவத்தில் அறியவந்த உண்மை, நல்ல எழுத்துக்கு ஆதரவு எப்போதுமுண்டு, கௌரவர்கள் கும்பலில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு நமது எழுத்தைக்கொண்டுபோகவேண்டும், நீங்களும் நேர்மையாளராக இருந்தால்.

3. Professionalism இதைத் தமிழில் தொழிற் திறம் அல்லது துறைமைத் திறம் எனக் கொள்ளலாம். தொழிற்திறம் என்பதென்ன? தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா? சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா? தொழிற்திறமென்பது இதைச் செய், அதைச் செய்யாதே (Do or Don’t) என்பதால் ஈட்டுவதல்ல.

ஜேக்ஸிற்கு படைப்பாளிக்குரிய தொழில்திறமென்பது ஒரு நாடக ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்வது. எழுதிய நாடகத்தை ஒத்திகை பார்ப்பது தேவையெனில் சிலகாட்சிகளை நீக்கவும், வசனங்களை துண்டிக்கவும், பாத்திரங்களை அகற்றவும் ஏன் அறவே நாடகத்தை கிழித்துப்போட்டுவிட்டு முற்றிலுமாக புதியதொன்றை எழுதவதற்காகவுமென நினைக்கவேண்டும்.  நாடக ஆசிரியனுக்கு நண்பர்களாக வந்திருக்கிற பார்வையாளர்களை முன்வைத்து மேற்கண்ட மாற்றங்களை கொண்டுவர இயலும். இவ்வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லை. அவனுடைய பார்வையாளர்கள் (வாசகர்கள்) முகமற்றவர்கள். தூரத்திலிருந்து படைப்பு, கைத்தட்டலை ஏன் இழந்ததென யோசிக்கக் கடமை பட்டவன். மெய்பார்ப்பில் தவறா, பதிப்பாசிரியரின் தவறா, நாவலுக்கு பெயரிட்டதில் குறையா என்பதுபோன்ற இரண்டாம் தர  ஐயங்களை அறவே ஒழித்துவிட்டு எழுத்தில் நாம் என்னகுறை வைத்தோம் என்ற தெளிவு வேண்டும். நாடக ஆசிரியனுக்கு கிடைக்கும் ‘ஒத்திகை நேர பார்வையாளன்’ எழுத்தாளனுக்கு பதிப்பாளர் மூலமாகக் கிடைக்கிறது.  ரசனையுள்ள பதிப்பாளர்களை தேர்வு செய்தல் நலம் அவர்கள் சுயநலத்தின் அடிப்படையில் சில குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ளுதல் அவசியம். பொதுவாக வளர்ந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் வெள்ளைத் தாள்களைக்கொடுத்தாலும், பிரசுரிக்கவும் அதைவாசித்து பின் நவீனத்துவம் எனவும் ஆட்களுண்டு. ஆனால் வளரும் நிலையில் இருக்கிற நம்மைப்போன்றவர்கள், பாரபட்சமற்ற விமரிசினங்கள் வரின் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே விமர்சகனாக இருந்தும் எழுத்தில் குறைகண்டு திருத்தி எழுதலாம். இந்த அனுபவம் எனது முந்தைய இரண்டு நாவல்களுக்கு ஏற்படவில்லை. திண்ணையில் வெளிவரும் எனது மலைபேச்சு நாவலுக்கும் கைவசம் சந்திதியா பதிப்பகம் அனுப்பவிருக்கும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன. பிறர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எழுத்தாளன் தமது படைப்பின் முதல்வாசகனாக இருந்து திருப்தியுற்றால் அப்படைப்பு வெற்றிபெறுமென மனதார நம்புகிறேன்.

——

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -ஆகஸ்டு -17

பிரெஞ்சுக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள்:  என்பது பொதுவில் பலரின் கருத்து. குறிப்பாக ஆங்கிலேயர்களும் அவர்களைச் சார்ந்தோரும் கூறுவது. எந்த குணமும் எந்த நாட்டிற்கு சொந்தமில்லையென்பதுதான் உண்மை. திமிர் பிடித்தவர்கள் எங்கேயில்லை. எந்த இடமாக இருக்கட்டும், எதிர் தரப்பில் இருக்கின்ற ஆசாமி போதி மரத்தடியிலிருந்து எழுந்தவவனென்றே வைத்துக்கொள்வோம் நமது வினைக்கேற்ப எதிர் வினை அமையும். கொடுத்ததை பெறுவோம். பிரான்சு நாடும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு பண்பாடு அல்லது சமூகம் அகம்பாவத்தை அடிப்படையாகக்கொண்டது எனவே பிரெஞ்சுக்காரர்கள் அகம்பாவம் கொண்டவர்கள் என முடிவெடுக்கவியலாது. தவிர மனிதரின் அகம்பாவ நடத்தைகள் என்பது பண்பாடு அல்லது மண் சார்ந்தது அல்ல.

ரோம் நகரில் இருக்கிறபோது ரோமானியர்களைப்போல நடந்துகொள்ளவேண்டுமென்பது ஒரு சொலவடை. இங்கே பக்கத்தில் எங்கேயேனும் மசாலா தோசை கிடைக்குமாவென புதுதில்லியில் வைத்து ஒரு சப்பாத்தி சுடும் சர்தார்ஜியிடம் கேட்டால் அவருக்கு கோபம் வருமெனில் ஒரு பிரெஞ்சுக்காரனுக்கும் அதுபோன்ற காரணத்தை முன்வைத்து கோபம்வரும். அவனிடம் உரையாடுவதற்கு ஒன்றிரண்டு பிரெஞ்சு சொற்களையாவது நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். உலகமெங்கும் ஆங்கிலம் பேசலாம். ஆனால் இரண்டொரு வார்த்தைகளாவது நீங்கள் பிரான்சுக்குள் பிரெஞ்சில் பேசினால் அவன் சந்தோஷப்படுவான். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் பிரெஞ்சுக்கார்களில் பெரும்பாலோர் வாய் திறக்கமாட்டார்கள். சுற்றுலா துறை அலுவலகத்தின் திசையைக்கைகாட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இதைத் திமிரென்று நீங்கள் நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.

——————–

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’

The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.

1. Nightwood – Djuna Barnes.
2. A tale of a Tub – Jonathan swift
3. The Phenomenology of the sprit -G.F. Hegel
4. to The light house -Virginia Woolf
5. Clarissa, or the History of a Younglady – Samuel Richardson
6. Finnegans Wke – James Joyce

7. Being and Time Martin Heidegger
8. The Faerie Queen – Edmund Spenser
9. The Making of Americans -Gertrude Stein
10.Women and Men -joseph McElroy

இப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.

பிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு  நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:

இந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள்  நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.

இறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:

உங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.

http://www.publishersweekly.com/pw/by-topic/book-news/tip-sheet/article/53409-the-top-10-most-difficult-books.html

—————————

2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.

இரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா? எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை  கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோது கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.

உலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள்,  எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை(?) மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ?

ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலாது. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம்.  நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.

1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும்.  தங்கம் நிச்சயம் உண்டு

2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.

3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.

4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம்  விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.

5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.

————————————————-

ரெ. கார்த்திகேசுவின் இரண்டு நூல்கள்:

1. நீர்மேல் எழுத்து சிறுகதைகள்

வணக்கத்திற்குரிய ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகளின் மீது எனக்கு எப்போதுமே மரியாதையுண்டு. அவருடைய சிறுகதைகளை மனம் ஒன்றி வாசிப்பேன். இச்சிறுகதை தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. மல்லி என்ற சிறுமியை மையமாக வைத்து நான்கு கதைகள். மூன்று அறிவியல் புனைகதைகள், பிற கதைகள் 7. இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையாக கதைகள், ரெ. கார்த்திகேசுவின்  சிறுகதை எழுதும் திறனை உறுதிசெய்பவை. கதையின் முன்னுரையில் எழுத்திடமிருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்ய முயன்று அது முடியாமற்போனதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுவாரென நம்புவோம்.

2. விமர்சன முகம் -2.

ரெ.கார்த்திகேசு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்கருங்கூட என்பதை நாம் அறிவோம். 2004ல் மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் விமர்சன முகம் 1 என்ற நூல் வந்தது இது இரண்டாவது.  தமிழில் சார்பற்று, சொல்லவந்ததைத் தெளிவாக விமரிசன நோக்கில் முன் வைப்பவர்கள் குறைவு. ரெ.கார்த்திகேசு அவர்களில் ஒருவர். முதல் நூலில் இரண்டு பாகங்களுண்டு. முதல்பாகத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் 15க்கு மேற்பட்ட கட்டுரைகளிருந்தன. இரண்டாம் பாகத்தில் ஈழம், மற்றும் தமிழக எழுத்தா¡ளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வந்திருக்கும் விமர்சன முகம் -2ல் ஆசிரியர் இரா.முருகன், சை.பீர்முகம்மது, கழனியூரான், ஆ.ரெங்கசாமி, சீ.முத்துசாமி, காஞ்சனா தாமோதரன், திவாகர், இளஞ்செல்வன், ந.கோவிந்தசாமி, ப. சிங்காரம் என்று பத்து எழுத்தாளர்களின் நூல்களைக்குறித்த விமரிசனங்கள் இருக்கின்றன.  இவற்றைத் தவிர ஆசியர் எழுத்தாள நண்பர்களின் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் என்ற வகையில்  ஏழும், நண்பர்களுடனான கடித பரிமாற்றங்கள், நேர்காணல்கள் என பலவும் உள்ளன. இத்தொகுப்பை வாசித்து முடிந்தால் தமிழ் எழுத்துலகையே வலம் வந்த மன நிறைவு ஏற்படுகிறது. ரெ.கா.   மலேசியாவின் பன்முகத்தன்மைகுறித்து அடிக்கடி எழுதிவந்ததை படித்துவந்திருக்கிறோம். இந்நூலிலும் அவ்வகையில் சில கட்டுரைகள் உள்ளன.

மேற்கண்ட ஒரு நூல்களையும் கோலாலம்பூர் உமாபதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு ப்திப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழர்வீட்டிலேயும் இருக்கவேண்டிய நூல்.

ஆசிரியரின் இரு நூல்களும் கிடைக்குமிடம்

உமா பதிப்பகம்

85 CP Jalan Perhention, Sentul,

51100 KulaLumpur, Malaysia.

Tel.: 03- 40411617

Fax: 03-4044 0441

e.mail:umapublications@gmail.com

எழுத்தாளனென்ற முகவரி -1:

கற்பனை வளர்தல்வேண்டும்

கவிநயம் பிறப்பில்வேண்டும்

சொற்பொருள் அறிவும் வேண்டும்

சுவைபட உரைத்தல் வேண்டும்.

– கண்ணதாசன்

“A Poet who could only sit on chair and write verses would never write any verses worth reading” -Thomas Carlyle

சிறந்த எழுத்தாளனாக வருவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? எழுத்தாளர்களென்று ஒரு சிலரைமட்டுமே இந்த உலகம் அறிந்திருக்கிறது, எதனால்? ஏன்? அண்மையில் உள்ளூர் நூலகமொன்றில் பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்களின் தொகுப்பை வாசித்தேன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அநேகமாக  உங்களில் சிலருக்கு உதவலாம்.

 கடின உழைப்பும் – எழுதவேண்டுமென்ற விருப்பமும்

தேடிவந்த இளம் எழுத்தாளர் ஒருவருக்கு செக்கோவ் கூறிய யோசனை.”இரவுபகல் பாராது தொடர்ந்து எழுது, படி; இரண்டையும் ஒரு வெறியொடு செய்”. இளைஞர், தனது குருவின் வார்த்தைகளை செயல்படுத்தினாரா, வெற்றிபெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. பல நேரங்களில் உபதேசங்களைக் கேட்பதோடு சரி, நாம் பின்பற்றுவதில்லை. அவற்றைச் செயல்படுத்துவதற்கும் செக்கோவ் கூறியதுபோல விருப்பம் வேண்டும். ‘எனக்கு எழுதவேண்டுமென்று ஆசை’ ஆனால் நேரமில்லையென பதினைந்து ஆண்டுகளாக நண்பரொருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். வேறு சிலர், தமிழை முறையாகப்படித்திருக்கிறேன், எனக்கு எழுத்து வசப்படாமல் போய்விடுமா என எழுத உட்காருவார்கள், வேர்த்து விறுவிறுத்து அதை முடித்தும் இருப்பார்கள், பலன் என்ன வென்று சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைதான் சொல்லமுடியும். சைவ சமயத்தில் ஸத்காரியவாதம் என்ற சொல் உள்ளது. அதற்கு உள்ளது போகாது, இல்லது வாராது என்பது பொருள். ஆக எழுத்துக்கு உழைப்பு மட்டும் போதாது, உழைப்பு அல்லாத ஒரு ஜீன் தேவைப்படுகிறது.

இரவுபகலென்று பாராமல் உழைக்கவேண்டுமென செக்கோவ் கொடுத்த யோசனை கடின உழைப்பின் தேவையை வற்புறுத்துகிறது. ஒரு வெற்றிக்கு கடின உழைப்பு தேவைதான். மாதத்தில் நிலையாக ஒரு வருமானம் இருந்தால் போதுமென்று நினைப்பவன் அவனுக்கு விதிக்கப்பட்ட நேரம்வரை உழைக்கிறான். கூடுதலாக இரண்டு மணி நேரம் உழைத்தால் அக்கூடுதல் பணமாக அவனுடைய வங்கிக்கனக்கில் உருமாற்றம் பெறுகிறது. கடின உழைப்பு அவன் எதிர்பார்க்கிற பணத்தைக்கொடுக்கிறபோது திருப்தியுறுகிறான்.

ரூமெர் காடென் (Rumer Gooden) என்ற பெண்மணியை நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் வாழ்ந்த சிறந்த எழுத்தாளர்.   புனைவுகள், அபுனைவுகளென்று எழுதிக் குவித்தவர். செக்கோவ் ஓர் எழுத்தாளனுக்குத் தேவையென வற்புறுத்துகிற கடின உழைப்பு ரூமர் காடோனை பொறுத்தவரை எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையும், நோக்கத்தில் உறுதியும், அதை முடித்தே தீருவதென்ற சிந்தையும்’ ஆகும். கடினமாக உழைப்பது பிற காரியங்களுக்கு உதவலாம். ஒரு கலைஞனுக்கு உதவுமா? பற்றுதலின்றி  மாடுபோல உழைக்க படைப்பாளிக்கு ஆகுமா? எந்தத் துறையிலும் வெற்றியென்பது பக்தியுடன் அளிக்கும் உழைப்பினாற் கிடைப்பது. எழுத்தை படைப்பாக மாற்ற, மிகக்கூடிய பற்றுதலும் ஆர்வமும்  தேவைபடுகிறது.

ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடின உழைப்பு,  என்வரையில் கீழ்க்கண்டவகையில் தொடங்குகிறது:

– முதலில் நாம் பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை, உள்வாங்கிக்கொண்டதை பிறறிடம் சொல்ல கற்றிருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அமைதியாக இருக்கிறபோது யோசித்துபார்ப்பது நல்லது, எழுதி வரிசைபடுத்துவது அதைவிட நல்லது. உங்கள் கற்பனைகளை கலக்காமல் உண்மையைமட்டும் பிற நண்பர்களிடம் முழுமையாகச் சொல்ல முடிகிறதா என முயன்றுபாருங்கள். எவையேனும் விடுபட்டிருந்தால் சொல்லலில் அவை விடுபட்டதற்கான காரணங்களை யோசியுங்கள்.

நீங்கள் நடந்ததனைத்தையும் அல்லது சொல்லவந்தது முழுவதையும் ஒருவரிடம் தெரிவித்திருந்தும் அவர் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை என்பதற்கான மூலத்தையும் கண்டுபிடியுங்கள். அதற்கு அவர் காரணமா நீங்கள் காரணமா எனத் தீர்மானியுங்கள், நீங்கள் காரணமெனில் எப்படிக்கூறினால் அவர் புரிந்துகொள்வார் என யோசியுங்கள்.சொல்லலை எழுத்தில் வடிக்கிறபோது வேறு கவனங்கள் தேவை. ஒரு சமையல் செய்முறையை நடமுறைபடுத்துவதுபோல. அது அவர்போலவோ இவர்போலவோ என்பதைத் தவிர்த்து உங்கள் எழுத்து என்பதை நிறுவும் முயற்சி. உலகில் எத்தனை மில்லியன் மனிதர்கள், எனினும் ஒருவரைப்போல மற்றொருவர் நூறு விழுக்காடு ஒற்றுமையுடன் உருவத்தில், குணத்தில் இருக்க வாய்ப்பே இல்லை மயிரிழை வேறுபாடேனும் இருக்கத்தான் செய்யும் அந்தப்பேனை பெருமாளாக்க முடிந்தால் உங்களுக்குள் எழுத்தாளர் இருக்கிறார்.

ரெபெக்கா வெஸ்ட் ஒவ்வொரு முறையும் எழுதத் தொடங்குகிறபோது எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டுபோவதென்பதை யோசிப்பதற்கே பல மணி நேரங்கள் செலவிடுவாராம்; நாவலுக்கான அத்தியாயமொன்றை  ஒரு முறை இருபத்தாறு தடவை சளைக்காமல் எழுதிப்பார்த்திருக்கிறார். பிறரிடமிருந்து நமது எழுத்து நமது குழந்தை வேறுபட்டதென சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு கதையை எழுதவேண்டுமென தீர்மானிக்கிறீர்கள். அக்கதை நடபெறும் இடம் நீங்கள் முன்பின் அறிந்திராத இடம் என வைத்துக்கொள்ளுங்கள் என்ன செய்வீர்கள். ரூமெர் காடென் பின்பற்றும் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளோடு இசைகிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்லவிருக்கிற கதை என்ன என்பதை முதலில் தீர்மானிக்கிறார். “அக்கதையை எந்தப் பின்புலத்தில் சொல்லலாமென முடிவுசெய்வதும், அவ் வாழ்க்கைமுறையை எழுத்தில் கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அடுத்து வருபவை”, என்கிறார். “நிச்சயம் அங்கு ஏற்படும் வெற்றிடங்களை கற்பனைகளால் நிரப்புவது அவசியம் ஏனெனில் எழுதுவது ஆவணமல்ல, புனைவு. எனது பாத்திரங்களை உயிருள்ள பாத்திரங்களென எனது வாசகர்கள் நம்புகிறார்கள்”. என்கிறார். பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களும் அவருக்கு முக்கியமாம். பெயரிடாத கதைமாந்தர்களின் அதன் குணங்களை கட்டமைக்க அவருக்கு ஆவதில்லையாம்.

கதையைத் தீர்மானியுங்கள், கதைமாந்தர்களை தேர்வுசெய்யுங்கள், பெயர்சூட்டுங்கள்; எழுத உட்காருங்கள் பிற எழுத்திடமிருந்து உங்கள் எழுத்து வேறுபடுத்திக்காட்ட எத்தனைமணி நேரம் செலவிடவேண்டியிருந்தாலும், சோர்வுறாதீர்கள்.

(தொடரும்)

மொழிவது சுகம்-ஜூலை 29

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.

மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)

1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

3. அண்மையில் வாசித்த பதிவுகள்

அ. மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது.  இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.

பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.

இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.

http://malaigal.wordpress.com/

ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது.  இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.

நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்

இறைவா!
இருட்டும்  வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!

அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!

வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!

வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்

“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!

ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?

***
http://abedheen.wordpress.com

—————————————————–

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கிய வேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

(மல்லியும் மழையும்)

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைகள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப் பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

– வேஸ்ட் ஓ·ப் டைம்

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441

e.mail: umapublications@gmail.com

———————————-