ஓ இந்தியா!

அன்பினிய நண்பர்களுக்கு

ஜனவரி 11 அன்று இந்தியா வருகிறேன்- செல்கிறேன். நண்பர்கள் அவரவர் வசிப்பிடத்திற்கேற்ப இரண்டிலொரு வினைச்சொல்லை பயன்படுத்திக்கொள்ளலாம். இடையில் ஒருவாரம் மனைவியுடன் இந்தியத் தலைநகருக்குச்செல்கிறேன். நண்பர் நாயகரும் அவர் துணைவியாருடன் வருகிறார்கள். ஜனவரி 26ந்தேதி புதுச்சேரியில்’கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீடு. இதர நாட்கள் புதுச்சேரி, சென்னையென தங்க நேரிடும். அவ்வப்போது வலைத்தளத்திற்கு வந்தும்போவேன். கடந்த மூன்றுமாதமாக சிற்றிதழ்களுக்கென்று எழுதவில்லை. எழுதவேண்டும். சிறுகதைக் கங்குகள் ஒன்றிரண்டு உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்றன, காலச்சுவடுக்காக லெ.கிளேசியோவின் ‘விசாரணை’ என்ற நூலை மொழிப்பெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன், மார்ச்சுக்குள் முடிக்கவேண்டும். ஏப்ரலுக்குள் எனது நிறுவனத்தின் ஆண்டுகணக்கை முடித்து சமர்ப்பிக்க வேண்டும், ஆடிட்டரிடம் கொடுக்கும் அளவிற்கு பெரிய நிறுவனமுமல்ல. தவிர கடந்த இருபது ஆண்டுகளாவே கணக்கு வழக்குகளை நானே பார்க்கிறேன். நாமே கணக்குவழக்குகளைப் பார்க்கிறபோது, திட்டமிட்டு எதையும் செய்ய முடிகிறது. பகுத்தறியும் மனிதர்கள் அதிகம் புழங்கும் எழுத்துலக நிழலில் ஒதுங்க முடிந்தது எனக்குக் கிடைத்த வரம்.  தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்நன்றிக்கு முதற்காரணம் நீங்கள் என்னைவிட மேலானவர்களென்று மனம் சொல்கிறது, நம்புகிறது.

வணக்கத்துடன்
நா.கிருஷ்ணா

தமிழ் சினிமா பற்றி பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்

அண்மையிற் பிரபல பிரெஞ்சு சஞ்சிகை  இந்தியாவைப்பற்றிய சிறப்பு இதழொன்றை வெளியிட்டிருந்தது. அவ்விதழ் தயாரிப்புக்காக இந்தியா சென்றிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு பிரிவினர் கோலிவுட்டையும் எட்டிப்பார்த்துவிட்டு வந்தனர். அதை ஓளிநாடாவில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் சினிமாவை கேலிசெய்திருக்கிறார்களென நினைக்கவேண்டாம், கடைசியில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய முழுவதுமாக ஒளிநாடாவைப்பாருங்கள், அல்லது மொழிபெயர்ப்பின் கடைசி ஐந்துவரிகளை தவறாமற் படியுங்கள்.

http://www.lexpress.fr/actualite/monde/kollywood-l-autre-cinema-indien_1201939.html

“இந்தியா சினிமா என்றதும் பம்பாய் பற்றி பேசுகிறோம், உடனடியாக பாலிவுட் நமது நினைவுக்கு வருகிறது. நமது வாசகர்கள் அதிகம் அறிந்திராத இந்தியா சினிமா ஒன்றிருக்கிறது, பெயர் ‘கோலிவுட்’, அது குறித்தும் நாம் தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கோலிவுட்டைத் தெரிந்துகொள்ள இந்தியாவின் தென்கிழக்கிலுள்ள சென்னைக்குச் செல்லவேண்டும். பாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையானச் செய்பொருட்களைக்கொண்டே இவர்களும் திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். ‘மசாலா சினிமாக்கள்’ என்று பொதுவில் அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு கரண்டி காதல், ஒருகரண்டி சண்டை, ஒரு கரண்டி ஆட்டம், ஒரு கரண்டி பாட்டு, ஒரு சிட்டிகை  நகைச்சுவை எனப்போட்டுத் தயாரிக்கப்படும் ஒருவகையான கோக்டெய்ல் அனுபவம். தமிழ் சினிமா என்பது தொய்வின்றி இயங்கும் ஓர் வணிக சினிமா. போலிவுட் சினிமா தயாரிப்பிலுள்ள பரபரப்பும் வேகமும் தமிழ் சினிமாக்களிலும் இருக்கின்றன.  நாங்கள் அங்கு சென்றிருந்தபோது பத்திரிகையாளர் சந்திப்புகள், திரைப்படங்களைப்பற்றிய அறிமுகம், நடிகர் நடிகைகளின் பேட்டி ஆகியவற்றை காணமுடிந்தது. அவர்களுக்குத் திரையுலகம் தேவாலயம். ஒரு சில நடிகர் நடிகைகளுக்குக் கோவிலெழுப்பி வழிபடுகிறார்கள். வேறு சில நடிக நடிகையரிடம் வெறித்தனமான அபிமானமும் இருக்கிறது.  திரைப்படம் வெகுவிரைவாக நகர்கிறது, காட்சிகள் படுவேகமாக வந்துபோகின்றன. ‘Story Board’, ‘Script’ என்றெதுவுமில்லை. நடனங்கள் மிகமிக முக்கியம். குறைந்தபட்சம் ஐந்து பாட்டுகள், ஐந்து நடனங்கள் கட்டாயம் இருந்தாகவேண்டும். இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் நடிகர் நடிகைகள் ஓரிரு நிமிட ஒத்திகைக்குப்பிறகு, தொடர்ந்து அப்பியாசம் செய்துப்பார்க்க நேரமில்லாதபோதும் மிகத் துல்லியமாக சொல்லிக்கொடுப்பதை செய்கிறார்கள். நடிகர் நடிகைகளுக்குத் தங்கள் இருப்பைக் கட்டிக்காத்துக்கொள்ளும் உந்துதலிருப்பதால் வெகு எளிதாக ரசிகர்களிடம் கலக்கிறார்கள், சூழ் நிலை எதுவாயினும் படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அத்தகைய எளிமையான அணுகுமுறையை பிரான்சில் நாம் பார்க்கமுடியாது. தவிர சொற்ப வருமானத்தைக்கொண்ட தங்கள் ரசிகர்களுக்கு இருக்கிற சந்தோஷமும் பொழுதுபோக்கும் சினிமா மட்டுமே என்பதை நடிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். திரைப்படம் வெளிவர ஒருமாதம் இருக்கிறபொழுது அப்படத்தின் இசைக்கு பொது அறிமுகம் நடைபெறுகிறது, பத்திரிகையாளர்களை அழைத்து விழா எடுத்து பாடலை வெளியிடுகிறார்கள். அதனால் ரசிகர்கள் அப்பாடலை மனனம் செய்து பாடுகிறார்கள். வானொலிகள் திரும்பத் திரும்ப ஒலிபரப்புகின்றன. அப்பாடல்களின் வெற்றியைப்பொறுத்தே படத்தின் வெற்றியும் தீர்மானிக்கப்படுகிறது. பாடல் வெளியீடு நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு திரைப்படம் வருகிறது. முதற்காட்சி மிகவும் முக்கியம். நடிகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள்; திரைப்பட விளமபரங்களில் மஞ்சள் பூசுகிறார்கள். தியேட்டருக்குள்ளே மக்கள் முண்டியடித்துக்கொண்டு நுழைகிறார்கள். தங்கள் அபிமான நடிகர் திரையில் தோன்றியவுடன் ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் ஆடுகிறார்கள். நாணயங்களை திரையில் வீசுகிறார்கள். அடுத்தடுத்து இருபது முப்பதுமுறை படத்தைத் திரும்பத் திரும்பத் பார்க்கும் வழக்கமிருப்பதால், திரைப்படத்தில் கவனம் செலுத்தாமல் கேலி கிண்டலில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை வேறெங்கும் நாம் காணமுடியாது. அடுத்து நடிகர் நடிகைகளுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம்வரை ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மன்றத்திலும் இருபது இருபத்தைந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் அபிமான நடிகர் நடிகையரின் ஒவ்வொரு அசைவும் செயல்பாடும் முக்கியம், அதுபற்றி பேசுகின்றனர், விவாதிக்கின்றனர். சில ரசிகர் மன்றங்கள் சமூகப்பணிகளிலும் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு சில ரசிகர்களிடம் பேசினோம், “எங்கள் நடிகருக்காக நாங்கள் எதையும் செய்வோம்”, என அவர்கள் சொல்கிறார்கள். கடந்தகாலத்தில் அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. நடிகர்கள் அரசியலுக்கு வருகிறபொழுது அவருடைய ரசிகர்கள் அவ்வளவுபேரும் அடுத்தநொடி அவரை ஆதரித்து அரசியலுக்கு வருகின்றனர். உங்கள் அபிமான நடிகர் இறந்துவிட்டால்? என்ற கேள்வியை எழுப்பிய நேரத்தில் அவர்கள் முகத்தில் கவலை படர்வதை அவதானிக்க முடிந்தது. தங்கள் நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அம்மருத்துவ மனைவாசலில் ரசிகர்கள் உட்கார்ந்துவிடுகிறார்கள். அந்நடிகரின் கவனிப்பில் ஏதேனும் பிரச்சினைகளிருப்பின் மருத்துவமனையை துவம்சம் செய்துவிடுவார்கள். அந்நடிகரை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் ஆபத்து. பெரும்பாலான தமிழ்ப்படங்கள் ஏன் அவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த ரசிகர்களே காரணம். இத்தகைய தமிழ்த் திரைப்படங்கள் அசலான வாழ்க்கையிலிருந்து விலகியவை.

கலைப்படங்கள்:

வணிக ரீதியில் இப்படங்களுக்கு ஏற்பட்ட தோல்வி 2012ல் மாற்றுத் திரைப்படங்களுக்கு காரணமாயின. இயக்குனர்கள், படைப்பாளிகள் திறனில் நம்பிக்கைவைத்து, நட்சத்திர நடிகர் நடிகைகளின்றி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்படும் புதிய அலை படங்கள் வரத்தொடங்கியுள்ளன.  வணிக ரீதியில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவேண்டிய நெருக்கடிளிருப்பதால் தற்போதைக்கு பிரான்சு கலைப்படங்களோடு இவற்றை ஒப்பிடமுடியாதென்கிறபோதும் இந்தியாவின் மாற்று வகைப்படங்களின் சோதனைக்களமாக கோலிவுட் இன்று மாறியுள்ளதெனச்சொல்லவேண்டும். புதியதொரு உத்வேகத்தை கோலிவுட் திரைப்படங்களிற் பார்க்க முடிகிறது. தமிழ்ப்பட தொழில் நுட்ப வல்லுனர்களையும் கலைஞர்களையும் போலிவுட் திரையுலகினர் இன்று தேடிவருகிறார்கள்.

—————————————–

புதுச்சேரியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா

அன்பினிய நண்பர்களுக்கு,

Na.krishna -New books3 001எனது புதிய நாவல் வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது.
கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், திருவாளர்கள் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள். பிற எழுத்தாளர் நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாராகிக்கொண்டிருக்கிறது. அழைப்பிதழ் கிடைக்கத் தவறினாலும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

பணிவுடன்
நா.கிருஷ்ணா

புதிய நூல்கள்

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – மொழிவது சுகம் – கதையல்ல வரலாறு

மேற்கண்ட மூன்று நூல்களும் முறையே சந்தியா பதிப்பகம், இராஜராஜேஸ்வரி பதிப்பகம், நற்றிணை பதிப்பகம் ஆகிய மூன்று அரங்குகளிலும் எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்கிற எனது நாவலிருந்து:

கிருஷ்ணபுரம், கி.பி 1598

Na.krishna -New books3 001ருட்டின் பௌருஷ¤தத்தை பிரமாண்டமான விருட்ஷங்கள் கூட்டியிருந்தன. பறவைகள், விலங்குகளின் நடமாட்டங்களற்றதொரு வெறுமை. இறையெடுத்த விலங்கைப்போல அரை மயக்கத்தில் இரவு துயில் கொண்டிருக்கக்  கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது.  இரவின் நித்திரையை தமது குறுக்கீடு கலைத்துவிடலாமென்று அஞ்சியவன்போல காலெடுத்து வைத்தான். நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் காவற்காட்டின் மரங்கள்  அசைந்து கொடுத்தன. மௌனமான அவ்வதிர்வை  சரீரம் உறிஞ்சிக்கொண்டது. உரோமங்கள் குத்திட்டுக்கொள்ள தசைகள் ஒரு முறை உதறி அடங்கின. காற்றிலுங்கூட மழையின் கசகசப்பு கலந்திருப்பதை தேகம் உணர்த்திற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்தது. தொடர்ந்து இடிச்சத்தமும் கேட்டது. கீழ்வானில் மூர்க்கத்துடன் வெட்டிய மின்னலிற் சிதறித் தெறித்த ஒளித்துணுக்குகள் ஈரம் உலராதிருந்த தோப்புக்குள் விழுந்தன.  இடி மலைச்சரிவுகளில் விழுந்து உருண்டது., கருவேலமரமொன்று தீப்பற்றி சடசடவென்று எறிந்தது. அந்த சில நொடிகளில் பெருமுழக்கத்துடன்கேட்ட இடி  காலடி அருகே நிலமதிர கடந்த போது உடல் வெடவெடத்தது. முதுக்குப்பின்னே வெகுதொலைவில் பாறாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி சிதறுவதுபோல இடி எதிரொலித்து அடங்கியது அருங்குழைமிளை புதரிலிருந்து சாம்பல் நிற காட்டுமுயலொன்று  பந்துபோல தாவிக்குதித்து மண்டிக்கிடந்த கருமிளை செடிகளுக்குள் மறையக்கண்டான்.

ஒருவழியாக காவற்காட்டைத் தாண்டியிருந்தான். பழகியவர்களன்றி அந்நியர்கள் எவரும் காவற்காட்டிற்குள் புகுந்து மீளமுடியாது. முட்புதர் காடுகளைப் பிரித்து நீண்ட ஒற்றையடிபாதையில் இறுதியாக குறுக்கிட்ட செடிகொடிகளை விலக்கியபோது  குறுங்கற்பபரவிய திறந்த வெளியில் நின்றிருந்தான். எதிரே மூன்றுமலைகளையும் இணைத்து எழும்பிய  அடையவளைந்தான்.  சில அடிதூரத்தில் அகழி. மதிற்சுவரின் மறைவான நிலைகளில்  காவல்வீரர்கள் இருக்கலாம். மழையில் நனைந்த சம்பங்கூடை கூடுதலாகக் கனத்தது. தலையைப் பின்பக்கம் இறக்கி மலையை அண்ணாந்துபார்க்க முடிந்தது. சிறுமேகக்கூட்டம் உடைந்த தாழியின் வெண்ணெய்போல இராயகிரி உச்சியில் வழுக்கி இறங்கக் கண்டான். நட்சத்திரங்கள் சீதளவானத்தில் அடக்கமாகவே பிரகாசித்தன. சாம்பல் வண்ணத்தில் ஒளி சன்னமான திரைத் துணிபோல காற்றில் அலைந்துகொண்டிருந்தது. சர்க்கரை பாகின் நிறத்தில் கம்பியாக இறங்கிய மழையூடாக அவ்வொளியில் அமிழ்ந்துகிடக்கும் மலைகளைப் பார்த்தான். மேற்பரப்பில் நொய்போலவும் கீழ்ப்பரப்பில் ஆழ்கடலின் அடர்த்தியுடனும் இருள் பரவிக்கிடந்தது. கிளைகளுடனிருந்த மரங்களை வேருடன் பிடுங்க எத்தனிப்பதுபோல திடீர் திடீரென்று பேரிரைச்சலுடன் காற்று சுழன்று அடித்தது. தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவளைகள் கொரகொரத்தன. மழையில் நனைந்த முள்கற்றாழையும், செடிகொடி மண்டிய ஈரப் புதர்களும், பாறாங்கற்களின் இண்டு இடுக்குகளிற் பதுங்கிக்கிடந்த வெக்கையும், விழுந்து சிதறியிருந்த இலுப்பைப் பழங்களும் முயங்கி ஓர் இறுக்கமான வாடையை சமைத்திருந்தன.

இரண்டாவது முறையாக மலைகளை ஒருசேர விழிகளால் அளந்தான். பொம்மலாட்டக் கலைஞர்கள் திரைக்குப்பின்னே யானைகளை நடத்திச்செல்வதுபோல மேகங்கள்  முன்னேறின, அவற்றிலிருந்து குட்டியானையொன்று விலகி மலைகளைத் தொட்டு, நிலத்திட்டை எதிர்கொண்ட நதிபோல பிரிந்து கடந்துபோனது. மூன்று மலைகளிலும் விழுந்த நிலவொளி மலைகளில் வழிந்து அடிவாரத்தில் விழுந்து மௌனமாக சலசலத்தது. அவைகளை இறுக்கிப்பிணைத்துக்கொண்டு வட கயிறுபோல கோட்டை சுவர். கிருஷ்ணகிரிக்கும் சந்திராயன் துர்க்கத்திற்கும் இடையில் கவிழ்த்துவைத்த தொப்பிபோல இராயகிரி. ஒட்டியிருந்த இமைமயிர்களை விலக்கி கண்மணிக்குள் ஒளியும் நிழலுமாக முதல் பிரவேசத்தை  நிகழ்த்திய நாள்முதல் அவற்றின் காலடியில் கிடந்திருக்கிறான். மனிதர் எழுப்பிய கோட்டையும் அரண்மணையும், கோவில்களும், பிறவும் மூப்படைந்திருக்க, மலைகளுக்கோ காலத்தை வென்ற திமிர்.

வெள்ளைவெளேரென அன்று நிலா இருந்ததாக நினைவு. உதறி விரித்த நீலக் கம்பளம்போலவிருந்த ஆகாயத்தில் கையளவு மேகங்கூட இல்லை. இரண்டாம் சாமம், உறக்கம் வராமல் புரண்டு படுத்தத் தகப்பன் ஓலையில் முடைந்த வெற்றிலைப்பெட்டியை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு இவனை எழுப்பினார், கதை சொல்லப்போகிறேன் என்றார். பழங்கலத்திலிருந்து விதை நெல்லை எடுப்பதுபோல சிந்தாமல் சொல்லப்பட்ட கதைகள். ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்க மனிதர் வாழ்க்கையில் கதைகளா இல்லை. தெற்கத்திய காற்றுபோல சிலகதைகள், புயலாக சிலகதைகள், தூறல்களாக சிலகதைகள், மழைபோல சிலகதைகள்.  ஒவ்வொருசமயம் பாலாற்றின் புதுவெள்ளம்போல சிலகதைகள் : ஆவேசத்துடன் நுரைத்துக்கொண்டு எறும்புக் கூட்டங்கள், நெளியும் பாம்புகள், வயிறு வீங்கிய ஆடுமாடுகள், முறிந்த கிளைகள், வைக்கோல் கட்டுகள், ஓலைவேய்ந்த குடிசைகள்  அவ்வளவையும் வாரிக்கொண்டுபோகும், ஒதுங்கி அவை அணுவாகி, பரமாணுவாகி பருப்பொருள் கடந்த மாயா ஆகும் என அப்பா கதையை முடிப்பார்.  உயிர் வாழ்க்கை அலுத்துபோனால் ஆன்மாவைப்பிரிந்த மனித உடலும் இற்று விழும், மக்கும் ; எலும்புகள் உதிர்ந்து காற்றில் நீந்தும். மலைகள் நிரந்தரம், உடைந்து சிதற நேர்ந்தாலும் கற்கூளமாய், கைப்பிடிமணலாய்  வாழ்ந்ததற்கு சாட்சியாக அறுத்தடிப்பு களமாகவேணும் மிஞ்சும்.

கார்மேகம் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டியிருந்தான். முதுகில் ஊசல் வாடைகொண்ட நான்கு முழத் துண்டொன்று முதுகெலும்பையும் மார்பெலும்பையும், ஏற்ற இறக்கங்களுடன் தோளின் இருபுறத்தையும் போர்த்த உதவிற்று. சற்று முன்பு கொடியிலிருந்து எடுத்த மொடமொடப்பு இல்லை. குளிர்காற்றும், நீர் சாட்டைபோல விழுந்த மழைத்துளியின் உடைந்த துணுக்குகளும் அதை ஈரமாக்கியிருந்தன. காற்று குளிர்ந்து அடித்தது. கால்களை அரக்கிவைத்து அகழியோரமாகவே நடந்தான். சம்பங்கூடை க்கு ஒரு கை போக, மற்றது நடையின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னுமாக அசைந்துகொடுத்தது. இருதினங்களாக்  கண்கொதியால்  அவதிப்படுகிறான். நோய்கண்ட நாளிலிருந்து வெதுவெதுப்பாக காலை மாலை இருவேளையும் ஆட்டுபாலை கண்களில் அவனே பீச்சிக்கொண்டு வருகிறான்.   பாறாங்கற்களும், பொடிக்கற்களுமாக நிறைந்திருந்த பூமி தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையில் இறுகிக் கிடந்தது. கால்களை ஊன்றி நடக்கிறபோது கூர்மையான கற்சில்லுகள் நெருஞ்சி முட்களைப்போல கால்களில் அப்பிக்கொள்கின்றன. நடப்பதற்குக் கடினமாக இருந்தது. கால்கள் கடுத்தன. சம்பங்கூடை வேண்டாமென்றுதான், காலெடுத்து வைத்தான். தலைகீழாகத் தொங்கவிட்டிருந்த  துருஞ்சில்களை கைத்தட்டி ஓட்டிவிட்டு அவன் தாய்தான் எடுத்துத் தந்தாள். இவன் கையில் வாங்கியபோது சிறுவண்டுகள் போல ஏதோ விரல்களில் ஊர்ந்ததைக்கண்டு கையை உதறினான். உதறியபின்னரும் விரலிடுக்கில் ஏதோ நச நசவென்று ஒட்டிக்கிடக்க தொட்டு நாசியில் வைத்தான் ஓக்காளம் வந்தது எலிபுழுக்கையோ துரிஞ்சல் புழுக்கையோ ஏதோவொன்று, தாயிடம், « வேண்டாம், தலைமேற் துண்டுடன்மலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திட  முடியும் », என்றான். அவள் வம்பு செய்து சம்பங்கூடை யைக் கொடுத்துவிட்டாள்.

மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது. ‘கமலக்கண்ணி  தயவு பண்ணுவாள்’ சக்கிலித் துர்க்கம் பக்கம் பார்த்துவா, அங்குதான்  வழியைத் தொலைத்துப்போட்டு படுத்துக்கிடக்கவேணும்”, ஜெகதாம்பாள் சம்பங்கூடையைப் கைகளில் பலவந்தமாகத் திணித்தபோது கூறியிருந்தாள். அவள் நெஞ்சில் ‘அகால வேளையிலே மகனை ஒண்டியாய் அனுப்பறோமே’, என்ற கவலை. அவர்களின் ஜீவனம் ஆடுகளை நம்பி இருந்தது. மொத்த குடும்பத்துக்கும் சகலமும் ஆடுகள். ‘நல்லது கெட்டது, கல்யாணம் காட்சிகள், வருடம் தவறாது பிள்ளை பெற்றுகொள்ள கீழ்பெண்ணாத்தூரிலிருந்து வரும் பெண்ணின் செலவு, செட்டி கடை நவதானிய செலவு, ஊர் ஏகாலி, நாவிதன், வரி கேட்டு நிற்கும் தண்டல்காரன்  அனைத்திற்கும் தீர்வு ஆடுகள். கிடைகட்ட நஞ்சை புஞ்சையென்று ஊர்மதிக்க ஐவேசியுடன் வாழும் மனிதர்கள் கூப்பிடுவார்கள். தெற்கே 20கல், வடக்கே 30 கல்லென்று தகப்பனும் மகனும் சித்திரைக்குப் போனார்களென்றால் நாட்டுக்குத் திரும்ப ஆனி மாதமாகிவிடும். மூன்று மாதமும் மோர்விட்டுக் கரைத்த கம்பங்கூழும், ஊறுகாய் பத்தையும் வயிற்றுக்கு ஆதாரம். பிறகு அந்திவரை துறட்டுக்கோலைத் தோளில் போட்டுக்கொண்டு ஆடுகள் பின்னால் சுற்றிவருவான்.

ஆடுகளை பட்டியிலிட்டு, படலை மூடும்போது கவனித்தான், சினைபட்டிருந்த கொம்பு முறுக்கிய மூக்கில் வெள்ளைபட்ட ஆடு மந்தையிலில்லை. தட்டியைத் திறந்ததும் ஆடுகள் தலையைத் தொங்கப்போட்டப்படி சோம்பலுடன் கால்களை வைத்து முன்னேறின. ஈச்சம் பழங்களை கொட்டி பரப்பியதுபோல கிடந்த புழுக்கைகளையும், ஆட்டு மூத்திரத்தையும் அடக்கி மேலெழும்பும் சினை ஆட்டின் மொப்பு இல்லையென்றானதும் மனம் கலவரப்பட்டது. “தம்பி மடி பேர்ந்திருக்கிறது, பொழுது சாய்வதற்குள்ளாக குட்டிபோடவேணும், மேய்ச்சலுக்கு இதை ஓட்டி போகாதே” என்று காலையில் எச்சரித்திருந்த தாய்க்கு என்ன பதில் சொல்வதெனக் கலக்கமுற்றான். அவளிடம் சொன்னால், சன்னதம் கண்டவள்போல ஊரைக்கூட்டிவிடுவாள். போன மாதம் பெருத்திருந்த வயிற்றைப் பார்த்து ‘இரட்டை குட்டி போடுமா?’ வயிறு இப்படி வண்ணான் சால்போல இருக்கிறதே”, என கண்கள் பிரகாசிக்கச் சொன்னாள். இரண்டுலே ஒன்று பெட்டையெனில் மகள் சிறுபாட்டுக்கென்று தவறாமல் கொடுத்திடவேணும், என்று அப்போதே ஆக்கினையும் பிறப்பித்தாள். தாயிடம் தொலைந்திருந்த ஆட்டைப்பற்றி வாய்திறவாமலேயே புறப்பட்டுப் போகலாமா என்றும் மனம் யோசித்தது. காலையில் ஒரு மிடறு கூழ் குடித்தது. பிறகு மலைச் சுணையில் அந்திவரை பசித்த நேரங்களில் கைநிறைய தண்ணீரை அள்ளிக் குடித்தது. வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.’அம்மா !  சினை ஆட்டை காண இல்லை, தேடிப்போகிறேன்’,  என்றான். கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்து தலையை உயர்த்தியவளின் கறுத்தமுகம் அந்திவெயிலில் மேலும் கறுத்துபோனது. கவிழ்த்துப்போட்ட அட்டைபோல  பொரிந்திருந்த உதடு வெடிப்புகளில் வெற்றிலைசாறு. வாயுடன் சேர்ந்து மூக்கும் உயர்ந்தது. வார்த்தைகள் வந்து விழுந்தன: ” சினை ஆட்டை விட்டுப்போட்டு போவென்று காலமே ஒருமுறைக்கு இரண்டுமுறையா கத்தினேன், உங்கப்பனுக்கும் உனக்கும் பெட்டைக் கழுதைப் பேச்சை எதற்காக கேக்கோணுங்கிற இளக்காரம்”.

— ஆரம்பித்தாயிற்றா?

—எங்கே போகிறாய்?

— சினை ஆட்டைத் தேடி. மலைக்குப் போகிறேனென்று கூறினேன். காதில் வாங்கினாயா இல்லையா? எத்தனை நாழிகை ஆனாலும் ஆடு கிடைத்தது என்கிற சந்தோஷ சேதியுடன் வருவேன், போதுமா?

— சரி சரி இப்போது என்ன சொல்லிபோட்டேண்ணு  அந்தரப்படற, ஒரு வாய் சாப்பிட்டுபோ. மீன் குழம்புக்குத் தோதாக வரகரிசிசோறு. ஒரு மரக்கால் வரகை இடுப்பொடிய ஒருத்தியா அறைத்தேன் – கொசுவத்தை உதறி தோளில் போட்டவள், முகத்தை ஒடித்து திருப்பினாள்.

கண்களில் நீர் தளும்பி நின்ற தாய் ஜெகதாம்பாளின் முகத்தைப்பார்க்க பிள்ளைக்கு சங்கடமாக இருந்தது. தலையைக் குனிந்து வீட்டிற்குள் நுழைந்தான், நல்விளக்கின் தீபத்தில் சோறும் மீன்குழம்பும் ஒளிர்ந்தது. நாக்கில் நீர் புரண்டது. முகவாய்க்கட்டையை சொரிவதைப் பார்த்து, “கட்டையனிடத்தில் சவரம் செய்துகொண்டு வரவேண்டியதுதானே? என்றபடி தடுக்கொன்றை எடுத்துப் போட்டாள். கங்காளத்தை அதன் முன்னால் வைத்தாள். இவன் வாய் திறவாமல் செம்பொன்றை எடுத்து பானையிலிருந்த தண்ணீரை சேர்ந்துகொண்டு உட்கார்ந்தான். சோற்றைப்பிசைந்து விரலிடுக்குகளில் குழம்பொழுக கவளம் கவளமாக விழுங்கினான், அவள் முள்நீக்கி சதைப்பற்றைக் சோற்றுருண்டையில் வைத்தாள். மற்ற நாட்களெனில் ஜெகதாம்பாள் இதை அனுமதிக்கமாட்டாள். “எதற்காக இப்படி இறக்கைகட்டி பறக்கிறாய்” என்பாள். இன்றைக்கு அவளுக்கும் காணாமற்போன ஆட்டை பற்றிய கவலை. ஆடு கிடைத்தால் கன்னிசாமிக்கு சேவற் கோழி காணிக்கை செலுத்தறேனென மஞ்சள் துணியில் ஒரு பணத்தைவைத்து கங்கணம் கட்டிக்கொண்டாள். தாயும் மகனுமாக கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார்கள். தெற்கே பார்த்து அண்ணாந்து கும்பிடு போட்டாள். கும்பிட்டவள் கண்களில் இருண்டிருக்கும் வானம் கண்ணிற் பட்டிருக்கவேண்டும். உள்ளேசென்று சம்பங்கூடையுடன் திரும்பினாள். அதைக்குனிந்து தலையில் வாங்கிக்கொண்டான்.

மழையின் வேகம் தணிந்து தூறலாக உருமாறியிருந்தது. சந்திராயன் துர்க்கம் அடிவாரத்தை நெருங்கியிருந்தான். காலையில் ஆடுகளை அங்கு மேயவிட்டிருந்தான். மற்ற ஆடுகளெல்லாம் கால்களை ஊன்றிவைத்து மேலே செல்ல சினை ஆடுமட்டும் நடக்க சிரமப்பட்டது.  மெது மெதுவாய் குரங்குமலை திசைக்காய் இழுத்துச்சென்று  கொடுக்காப்புளி மரத்தடியில் வைத்து கிளைகளைத் துறட்டுக்கோலால் உடைத்துப்போட்டான். தலைக்குமேலே சூரியன் வந்தபோது ஆடு படுத்து அசைபோட்டது. மலைமேல் ஏறிய ஆடுகள் கண்ணிற்படவில்லை ஒன்றுமட்டும் வெண்திரவம்போல நிரம்பியிருந்த வெயிலில் நீர்அலைபோல தெரிந்தது. சினை ஆட்டை, மலையிலிருந்து இறங்கும்போது எழுப்பி ஓட்டிச்செல்லலாம் என்று தீர்மானித்தவனாய் மலை ஏறினான். ஆனால் அந்திச் சாய்ந்ததும் வீடு திரும்பும் அவசரத்தில்  மறந்துபோனான்.

குரங்கு மலைக்குத் திரும்ப இறங்கிவந்து பார்த்தபோது நினைத்ததுபோலவே ஆடு படுத்திருந்தது, சுற்றிலும் மஞ்சளும் சிவப்புமாய் திரவம், தேன் நிறத்தில் சதைபிண்டம் அதன் தொடையிடுக்கிற் கிடந்தது. குட்டிகளில் ஒன்று எழுந்திருப்பதும் குளிரில் வெடவெடத்து கீழே விழுவதுமாக இருந்தது. இவனுக்கு நேரெதிரே புதரொன்றிலிருந்து குள்ளநரியொன்று மெல்ல ஆட்டைக் குறிவைத்து நெருங்குவதைக்கண்டான். விபரீதத்தைப் உணர்ந்தவனாய் தலையிலிருந்த சம்பங்கூடையை தாமதமின்றி சுழட்டி வீசினான். இரண்டொரு கற்கள் உருண்டோடின. நரி இவன் மீது பாய்வதுகண்டு ஒதுங்கினான். அது எதிர் திசையில் ஓடி மறைந்தது.

நான்கைந்துபேர் பேசிக்கொண்டுவருவதுபோல குரல்கள் கேட்டன. அகால நேரத்தில் இதுபோன்ற குரல்களுக்கிங்கு அவசியமில்லையேயென யோசித்தான். கள்வர்களாக இருக்குமோ? தற்போது குரல்கள் வெகு அருகிற் கேட்டன. அவசர அவசரமாக மரத்தில் ஏறினான். மார்பில் மரச்செதிள்கள் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. தலையிலிருந்த துண்டை தவறவிட்டான். நல்லவேளை கிளை தடுத்தது. சுளுந்தொன்று தெரிந்தது. அசைகிறபோதெல்லாம் காற்றில் நன்றாகப்பிடித்து எரிந்தது, விளக்கெண்ணெயும் துணியும் சேர்ந்து எரிவதால் ஏற்படும் சிடுகு மணம் மூக்கை அடைத்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்தான். வந்தவர்கள் ஆட்டைப்பார்த்ததும் தயங்கி நின்றார்கள்.

—ம். ஆகட்டும் நடவுங்கள் கடிதிற் போய்ச்சேரவேணும்.

—பூசாரி ஐயாவுக்கு எதற்கெடுத்தாலும் அதிகாரம் – முன்னால் நடந்த தாடிக்கார ஆசாமியின் பதில்.

ஒருவன் தலையில் கலசம் ஓன்றை வைத்திருந்தான் மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள், நடுவில் தலைவிரி கோலமாக ஒர் இளம்பெண். தலையை ஒருமுறை அவள் சிலுப்பியபோது ஒதுங்கி விழுந்த கூந்தலுக்கிடையில் நிழல்போல தெரிந்த அந்த முகம் ஆச்சரியமாக இருந்தது. அவளாக இருக்குமா? இருக்காது. இங்கே எப்படி? சிதம்பரத்துப் பெண்ணுக்கு கிருஷ்ணபுரத்தில் என்ன வேலை? மார்பிலும் இடுப்பிலும் அவளுக்கு வேப்பிலை பிரியை சுற்றியிருந்தார்கள். இதென்ன அலங்கோலம் ? இறுக பிடித்தபடி காவலர் இருவர்.

— மந்தை தப்பிய ஆடு, குட்டிபோட தங்கியிருக்கோணும், வரும்போது ஞாபகமாக கொண்டுபோகவேணும்— கீழிருந்து ஒர் ஆண் குரல்.

இரண்டு மாதத்திற்குமுன்பு கோவிந்தராஜர் திருப்பணியை மேற்பார்வையிட மன்னர் கிருஷ்ணநாயக்கர் சிதம்பரத்திற்குச் சென்றபோது பந்தோபஸ்து படையில் இவனுமிருந்தான். எதிர் முகாமில் கொள்ளிட பாளையக்கார கிழவன் ஆட்களும் இருந்தார்கள், அவர்களில் ஒருவன்  கள்ளைக் குடித்துவிட்டு இரவு முழுக்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். இவன் சகாக்களில் ஒருவன் வெகுண்டெழுந்து கண்டிக்கச் சென்றான்,  பிறகு கைகலப்பில் முடிந்தது. அக் குடிகாரனின் குரல்போல இருந்தது, உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

— ஆமாம் நரி தின்னாமலிருந்தால் உன் ஆசை நிறைவேறும். தாசி செங்கமலம் இப்போதெல்லாம் ஆடு மாடுகளுக்குக்கூட கதவு திறக்கிறாளாம். — ஒருவன்.

—அவள் கதவு எல்லாவற்றிற்கும் திறக்கும்- மற்றவன்

எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சிரிப்பை அடக்கியே உதிர்த்தாலும், மரத்திலிருந்த இடையன் கார்மேகத்திற்கு  நெஞ்சை அடைத்தது, உடல் சிலிர்த்து அடங்கியது. கைகளை பெருக்கல் குறிபோல மார்பில் வைத்து தன்னை தைரியப்படுத்திக்கொண்டான்.

— எதற்கு வீண் பேச்சு, நடவுங்கள், — பூசாரியின் குரல் அதிகாரமாக ஒலித்தது தொடர்ந்து, ‘நமக்காக பெரியவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள்’. என்றார்.

ஆடு மீது கண்வைத்தவன் ஓரிரு நொடிகள் தயங்கி நின்றான். மேலே பார்த்தான். பின்னாலிருந்தவர்கள் அவனைத் தள்ள பெண்ணை இழுத்துக்கொண்டு ஆறுபேரும்  மரத்தைக் கடந்து சென்றார்கள். இப்போது அவர்கள் நடையில் வேகம். அடுத்த சரிவில் இறங்கி அவர்கள் மறைந்ததும் காத்திருந்தவன்போல கீழே குதித்தான். உடல் இலேசாக நடுங்கியது. கிளையிற்  தொங்கிய துண்டை எடுத்து தலையிற் கட்டிக்கொண்டான். ஆட்டை நெருங்கினான். அருகிலிருந்த  ஆடுதின்னாபாளை இலைகளை வேண்டியமட்டும் பறித்து முதலில் குட்டிகளின் உடலிலும் பின்னர் ஆட்டின் பின்புறத்திலும் வழியும் கோழைகளைத் துடைத்தான். நாளை ஏரியில் வைத்து கழுவிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தான். மீண்டும் புதர்பக்கம் சென்று கொப்பும் தழைகளுமாகக் கொண்டுவந்து அதிற் கழிவுகளை வாரி எடுத்து கொடிகொண்டு சுற்றி கக்கத்தில் வைத்தான். அதே கையில் குட்டிகளையும் ஏந்திக்கொண்டான், மற்றொரு கையினால் ஆட்டை இழுத்துக்கொண்டு நடந்தான். சந்திராயன் துர்க்கத்திலிருந்து கிருஷ்ணகிரி இடைக்குடிகள் திசைக்காய் ஆடும் இவனுமாய் நடந்தபொழுது, தூறல் சுத்தமாக நின்றிருந்தது. ஆறுகணத்தில் குடிசை வந்துவிடும். தாயிடம் சற்றுமுன்பு கண்ட காட்சியைக் கூறலாமா எனநினைத்தான். அவள் வாயில் நிற்காது. ஊர்முழுக்க தண்டோரா போடுவாள். எதற்கு வம்பு என நினைத்தான். ஜெகதாம்பாள் இவனை எதிர்பார்த்து குடிசை வாசலில் காத்திருப்பாள். அவளுக்கு ஆட்டைப்பார்க்காமல் சோறுதண்ணிகூட இறங்காது, தாண்டுகால் வைத்தான்.

எதுவோ மிதிப்பட்டதுபோலிருந்தது. கணத்தில் காலை உயர்த்தி கீழே குனிந்து பார்த்தான். தவளையொன்று வயிறு கிழிந்து செத்துக்கிடந்தது. ஒதுங்கி காலைத் தூக்கிவைக்க முனைந்தபோது அங்கே இன்னொரு தவளை, கவனமாய் ஒதுங்கிக்கொண்டான். சற்றுமுன் கண்டகாட்சியையும் இதனையும் முடிச்சுப்போட்டு சஞ்சலப்பட்டான். ஆட்டை மீண்டும் இழுத்துக்கொண்டு நடந்தபோது கவனித்தான் சாரி சாரியாக ஆயிரக்கணக்கில் தவளைகள் குதித்து குதித்து வடக்கிலிருந்து தெற்காக போகின்றன. இவ்வளவு தவளைகளை சேர்ந்தாற்போல வாழ் நாளில் அன்றுதான் கண்டான்.

——————————————————–

 

 

புதுவருட நல்வாழ்த்துகள்

Je vous souhaite à tous une excellente Année 2013 !

நண்பர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துகள்

– Nagarathinam krishna

பிரெஞ்சு புதுவருடம்:

reveillonபிரெஞ்சு மரபுப்படி ‘டிசம்பர் 31’ஐ – Saint Sylvestre’ என்று அழைப்பார்கள். நண்பர்களும் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டாடுகிற இரவு விருந்துக்கு ‘La Réveillon de Saint-Sylvestre’ என்று பெயர். எனது பெற்றோருடன் இருந்தவரை அதிரசமில்லாமல் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. (பிரான்சுக்கு வந்த பிறகு ஞாபகப்படுத்தினால், பாகு பதம் வரவில்லையென்று அரிசிமாவையும் வெல்லத்தையும் கையிற்கொடுக்கிறாள் மனைவி) தமிழ்நாட்டைப் பொருத்தவரை திபாவளிக்கு அதிரசம் முக்கியம் அதுபோல பிரெஞ்சுக்காரர்களுக்கு டிசம்பர் 31 இரவு விருந்து சாப்பாட்டிற்கு ஷாம்பெய்னும் – வாத்து ஈறலும் ( Foie -gras), தவிர்க்க முடியாதவை. Foie grasஅவவருடத்திலேயே ஆடம்பரமான விருந்தை குடும்பத்துடன் சாப்பிடுவதில் ஆரம்பித்து – நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நடனம் ஆடுவதென்பது வரையிலான சடங்குகள் அதிலுண்டு. டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12மணிக்கு விருந்தினர்கள், உறவுகள், நண்பர்கள் ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதென்பது பிரெஞ்சு மரபு. புதுவருடத்தின் முதல்நாள் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வார்கள். ஜனவரி 6வரை பொதுவில் நீடிக்கும் இக்காலத்தை ‘Épiphanie’ என அழைக்கிறார்கள். la galette de roisஅதன் முடிவில் ‘ La Galette des rois’ என்ற இனியப்பம் வாங்கிச் சாப்பிடுவார்கள்.

 

 

————————————————————-

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: ஸ்ட்ராஸ்பூர்

பிரெஞ்சு மொழியில் Strasbourg என்று எழுதுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரம். பிரான்சுநாட்டின் கிழக்கெல்லையில் ஜெர்மனை ஒட்டியுள்ள நகரம். ஜெர்மன்நாட்டின் கேல் (Khel) நகரத்தை ஸ்ட்ராஸ்பூர் நகரத்திலிருந்து பிரிப்பது ரைன்(Rhin) நதி. 1949ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய அவையின் தலைமையகமாகவும், 1992ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தின் செயலகமாகவும் இருந்துவருகிறது. நமது முன்னாள் அதிபர் அப்துல் கலாம் தமது ஐரோப்பிய பாராளுமன்ற உரைக்கு முன்னால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என தமிழ்க்கவிஞரை நினைவுகூர்ந்த இடம். ஐரோப்பிய மனித உரிமை அமைப்பின் தலைமை நீதிமன்றமும் இங்குதான் உள்ளது. Notre dame de Strasbourg புகழ்வாய்ந்தது. உலகில் கிருஸ்துமஸை கழிக்கவேண்டிய முக்கியமான நகரங்களில் ஸ்ட்ராஸ்பூருமொன்று.  இணைய தளத்த்தில் தேடினீர்களெனில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.

அண்மையில் எடுத்த சில படங்களை நண்பர்களின் பார்வைக்கு இட்டிருக்கிறேன்.
——————————–IMG_1882IMG_1884IMG_1913IMG_1929IMG_1932

மொழிவது சுகம் Dec. 27-2012

தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

dgressieux உலகின் பிறபகுதிகளைப் போலவே பிரான்சு நாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து  வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி பொதுநலனுக்கென தங்கள் நேரத்தை செலவிடுவதைப் போற்றத்தான் வேண்டும்.

ஏனைய இந்தியச்  சங்கங்களைக் காட்டிலும் இந்தியத் தமிழர்களை அடையாளப்படுத்துகிற புதுச்சேரி தமிழர்களின் சங்கங்கள் நீங்கள் நினைப்பதுபோலவே எண்ணிக்கையில் அதிகம். இத்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்கள் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரமுகர்களை வரவேற்று அவர்களுக்குக் கரசேவை செய்து ஊருக்கு அனுப்பிவைப்பார்கள். அதற்கு பிரதியுபகாரமாக அப்பிரமுகர்களும் இவர்களிடம் காசு வசூலித்து நன்றிக்கடனாகப் பாராட்டுவிழா நடத்துவார்கள். இன்று உலகத் தமிழிலக்கிய மாநாடு, அருந்தமிழ் விருது என்றெல்லாம் கூத்துகள் அரங்கேறுகின்றன. இவற்றை நடத்த எத்தகுதியும் வேண்டாம் ‘குப்பனும் கடைக்குப் போனான் கூடவே அவளும்போனாள்’ என்றெழுதவோ, பேசவோ, அப்படி பேசுவதைக்கேட்டு புளகாங்கிதம் அடைவதற்குண்டான சொற்ப அறிவோ போதுமானதென்பதுதான் இதிலுள்ள விபரீதம். பிரான்சு நாட்டின் தொடர்பால் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறவர்கள் இல்லாமலில்லை. ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல்’ தொல்லிலக்கியங்களைப் பிரெஞ்சுக்குக்கொண்டுசேர்த்த பெருமகன்களின் பட்டியல் பெரிது, அவர்களை இவர்களுக்குத் தெரியவும் தெரியாது:  உதாரணத்திற்கு தாவிது அன்னுசாமியையும், பிரான்சுவா குரோவின் உழைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. பிரெஞ்சு தமிழிலக்கியம் பற்றிய குறைந்த பட்ச ஞானமுள்ளவர்களுக்குக்கூட இவ்வுண்மை விளங்கும்.

இதுபோன்ற கூத்துகளில் நாட்டமின்றி இந்திய விழுமியங்களை மேம்படுத்துவதே, விளம்பரமின்றி பிரெஞ்சுக்காரர்களிடம் அவற்றைக் கொண்டுசெல்வதே எனது மூச்சு என செயல்படுகிறவர்களில் ஒருவரை அண்மைக்காலத்தில் சந்தித்தேன்: பெயர் தூக்ளாஸ் கிரெஸ்ஸியே, ‘Les Comptoirs de l’Inde’ (1) என்றொரு அமைப்பை நடத்திவருகிறார். தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஒரு பிரெஞ்சுக்காரர்.  ஆனால் பிறந்ததும் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியைப் புதுச்சேரியில் கழித்ததும், பிரான்சு நாட்டினைக் காட்டிலும் கூடுதலாக இந்தியா மீது நாட்டம்கொள்ளவைத்திருக்கிறது.  ‘இந்தியாவின் நிறைகளை மட்டுமே கவனத்திற்கொண்டு, அதன் பெருமைகளைப் பிரெஞ்சு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி’ என தன்னடக்கத்தோடு கூறுகிறார்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு பேராசிரியராக பணிபுரியும் வெங்கட சுப்பராயநாயக்கர் என்பரும் நானுமாக இணைந்து ‘Chassé-Croisé -France Inde’ என்றொரு வலைத்தளத்தைத் தொடங்கி நடத்திவருகிறோம். அதைப்பார்த்த தூக்ளாஸ் கிரெஸ்ஸியே என்னைச் சந்திக்க விரும்புவதாக மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அவர் இருப்பது பாரீஸ் நகரில், நான் வசிப்பது பிரான்சுநாட்டின் தென்கிழக்கிலுள்ள அல்ஸாஸ் பிரதேச தலைநகரான ஸ்ட்ராஸ்பூர் நகரத்தில். பாரீஸ¤க்கும் எனது நகருக்கும் கிட்டத்தட்ட 500 கி.மீ தூரம். அடிக்கடி பாரீஸ் செல்கின்ற வழக்கமுமில்லை. வியாபார நிமித்தமாகப் பாரீஸ் வருகிறபோது அவசியம் சந்திக்கிறேனென்று தொலைபேசியில் அவரிடம் தெரிவித்தேன். ஒரு மழைநாளில் அவரைத் தேடிச்சென்றேன். அவருடைய அமைப்பு இயங்கும் இடத்தைப் பார்க்க வியப்பாக இருந்தது. பாரீஸில் வேறொருச்சங்கம் நானறிந்து முறையாக அத்தனை பெரிய இடத்தில் இயங்கி பார்த்த ஞாபகமில்லை.

Indian-soldiers-exhbn-070“Les comptoirs de l’Inde என்ற இவ்வமைப்பை பிரெஞ்சு குடியுரிமைப்பெற்ற புதுச்சேரி நண்பர்களும், இந்திய பூமியை நேசிக்கும் பிரெஞ்சு நண்பர்களும் இணைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார்கள். இச்சங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு புதுச்சேரி மக்கள் ‘இந்தியா’, ‘பிரான்சு’ என்ற இரட்டை பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள். புதுச்சேரி மக்களின் இவ்வபூர்வ அடையாளத்தைப் பேணுவதும்  பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழிருந்த புதுச்சேரியின் பழைய நினைவுகளை நினைவுகூர்வதும் தங்கள் குறிக்கோள் என்றார் கெரெஸ்ஸியெ. சங்கத்தின் பெயர் கடந்தகாலத்தை நினைவூட்டிய போதிலும் தங்கள் கவனம் முழுக்க முழுக்க எதிர்காலம் பற்றியதென்றும், அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த பிரக்ஞையை பிரெஞ்சு மக்களுக்கு (இந்தியாவைக்குறித்து சரியானப் புரிதலற்ற)  தெரிவிப்பது தங்கள் நோக்கமென்றும், அப்பபணியை மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் கூறினார்.

9782849100721இந்தியா மற்றும்

புதுச்சேரி பற்றிய ஆவணக் காப்பக மையம் ஒன்றை 1997ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து  தொடங்கி நடத்திவருகிறார்கள். மூவாயிரத்திற்குக் குறையாத ஆவணங்களும், நூல்களும் இம்மையத்தில் வாசிப்பிற்கும், தகவல் சேகரிப்பிற்கும் கிடைக்கின்றன. புதுச்சேரி மற்றும் இந்தியா குறித்து ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடியவை. புதுச்சேரி மற்றும் இந்தியா பற்றிய கருத்தரங்குகள் பலவற்றை பல்கலைகழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். இந்தியாவைக்குறித்த நான்கு ஆய்வு நூல்களை வெளியிட்டிருப்பது மிகப்பெரிய சாதனை. இந்தியப் பதிப்பகங்களுடன் தொடர்புகொண்டு படைப்பாளிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் பிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிற பணியையும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர் செய்துவருகிறார். வருடத்தோறும் சங்கத்தின் அரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தொடர்ந்து இந்தியா, புதுச்சேரி, பிரெஞ்சு பண்பாட்டோடு தொடர்புடைய தமிழர்களைப்பற்றிய புகைப்படங்கள், ஓவியங்கள் கண்காட்சியையும் நடத்திவருகிறார்கள். பிரெஞ்சு தமிழர்களைப்பற்றிய பாரிய ஆய்வொன்றை (இவ்வாய்வு மொரீஷியஸ், மர்த்தினிக், குவாதுலூப், ரெயுனியோன் போன்ற கடந்தகாலத்திலும், இன்றும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்புடைய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது) கிரெஸ்ஸியெ சங்கம் நடத்தி, ஆவணப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு பலகலைகழகத்தைச்சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தேடலுடன் இங்கே வருகிறார்கள்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்திலிருந்து 9782849105047பணிஓய்வுபெற்றுள்ள தூக்ளாஸ் கிளெஸ்ஸியெ தமிழை வாசிக்கவும், பேசவும் செய்கிறார். படைப்பிலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது: மொழிபெயர்ப்பாளர்,  எழுத்தாளர். புதுச்சேரி வரலாறோடு தொடர்புடைய இரு நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தமிழில் கொண்டுவருவது அவசியமென நினைக்கிறேன்.  இந்தியப் படைப்பிலக்கியங்களை பிரெஞ்சுக்கு அறிமுகப்படுத்தும் ஆர்வம் அவரிடம்  நிறைய இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். 2011ல்இருந்து இந்திய புத்தகக் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார். அண்மையில் நவம்பர் 17 18 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நியூயார்க்கில் வசிக்கும் Abha Dawesar என்ற பெண் எழுத்தாளர் கலந்துகொண்டார்.

மேலும் தகவல்கள் அறிய:

http://www.comptoirsinde.org

——————————————

 

 

1. Les comptoirs de l’Inde, என்பதற்கு ‘இந்திய வணிகத் தளங்கள்’ என மொழிபெயர்க்கலாம். காலனிய ஆதிக்கத்தின்போது பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த இந்தியப் பிரதேசங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் இவை நான்கும் பிரெஞ்சு நிர்வாகத்தினரால் ‘Les comptoirs de l’Inde’ என அழைக்கப்பட்டன.

பிரெஞ்சு தமிழிலக்கியம்

மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது.

– மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக் கூடியதும் இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம், ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, அக்களத்தைப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக் கொண்டிருக்கின்றன.

“அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் – என்கிறார்  முனைவர் கா. சிவத்தம்பி.

பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.

அரசியல் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இருபதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் புலம்பெயர்ந்த எழுத்துகளென்ற அடையாளம்பெற்றன. அதனைப் புகலிட எழுத்துக்கள், புலம்பெயர்ந்த எழுத்துக்களாகப் பிரித்துணரவேண்டுமென தர்கித்து தற்போது பிரெஞ்சு தமிழிலக்கியம் என்கிற குடை விரிக்கப்படுள்ளது. எதிரில் நோர்வே தமிழிலக்கியம், சுவிஸ் தமிலக்கியம் குடைகளெல்லாம் கண்ணிற்படுகின்றன. புலம்பெயர்ந்த அல்லது புகலிட நாடுகள் தமிழர்களின் பிற்பாதி வாழ்க்கைக்குத் தரும் நம்பிக்கையைப் பொறுத்தது, இக்குடைகளின் எதிர்காலம்.

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு, புலம்பெயர்ந்தோ பெயராமலோ; மொழி, அரசியல், பண்பாடு போன்ற காரணிகளால் பிரான்சு நாட்டோடு, பிரெஞ்சு மண்ணோடு, தங்கள் வாழ்க்கையைப் பதியமிட்டு வளர்ந்த மக்களின் படைப்புகளைப் பிரெஞ்சு தமிழிலக்கியமென்று வரையறுத்துக்கொள்ளலாம். 17ம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைத்த காலனி ஆதிக்கமும், இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் இவற்றுக்கான நதிமூலங்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள்,புகலிடத் தமிழர்கள் என்ற புதிய சொல்லாடல்களில் நுழைவது பிரெஞ்சு தமிழிலக்கியமென்ற தலைப்பிலிருந்து திசை பிறழ நேருமென்பதால் அதனைத் தவிர்க்கிறேன். இரண்டிற்கும் நதிமூலங்கள் அரசியலும் பொருளாதாரமும். சொந்த மண்ணில் நிகழ்ந்த அரசியல் வாணலுக்குத் தப்பி, அடைக்கலம் தந்த நாடுகளின் பொருளாதார சுகபோகங்களென்ற தீயிற் கருகிக்கொண்டிருப்பவர்களின் முனகல்களாகப் (பெரும்பாலான)பிரெஞ்சு தமிழிலக்கியத்தை பார்க்கிறேன்.

தென்திசையிலுள்ள குமரியில் நீராடி, வடக்கிலுள்ள காவிரியில் நீராடச்செல்லும் செங்கால் நாரையிடம் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்ட சத்திமுற்ற புலவரின் தூதுமுயற்சிகள் பிரெஞ்சு தமிழிலக்கியத்திலுமுண்டு ஆனால் வலிகளை – தமது வரலாற்றின் ஊடாக, இழப்புகளையும் அடையாள அழிப்புக்களையும் இலக்கியமாக முன்வைத்தவர்கள் நான் அறிந்த வகையில் உரைநடையில் சி.புஸ்பராஜா, கவிதையில் கி.பி. அரவிந்தன்.

பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை படைப்பிலக்கியங்களை இருவகைபடுத்தலாம் ஒன்று பிரெஞ்சுமொழியில் எழுதப்படுபவை மற்றது பிரெஞ்சு அல்லாத மொழிகளில் எழுதப்படுபவை. இரண்டாவதுவகைக் குறித்து பிரான்சுநாட்டின் படைப்புலகமோ, அரசாங்கமோ எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. பிரெஞ்சு மொழிகளில் எழுதப்படும் படைப்பிலக்கியங்களை ‘Francophonie littéraire’என அழைக்கிறார்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகவோ, அல்லது இரண்டாவது மொழியாகவோக் கொண்டு பிரான்சு நாட்டிலும் பிற நாடுகளிலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்படுகிற படைப்புகள் ‘Francophonie littéraire’. பிரான்சுநாட்டின் முன்னாள் காலனி நாடுகள் அனைத்தும் இதன்கீழ் வருகின்றன. இது தவிர பிரெஞ்சுமொழியை அரசுமொழியாக ஏற்றுக்கொண்ட கனடா, பெல்ஜியம், சுவிஸ் நாட்டின் சில பகுதிகளுமிருக்கின்றன. Phonie என்ற சொல்லுக்குக் ‘குரல்’ என்பதுதான் சரியான பொருள், எனவே ‘Francophonie என்பது பிரெஞ்சு மொழியில் எழுதுவதல்ல பிரெஞ்சில் குரல்கொடுப்பது எனப்பொருள்கொண்டு பிரெஞ்சு மொழி படைப்புகளை அலசி ஆய்கிறவர்களுமுண்டு. பின் காலனியத்துவ மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்கள் பலவும் இவ்வகமைக்குள் அடைக்கப்பட்டு, அசலான பிரெஞ்சு படைப்பாளிகளின் நலனுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அல்ஜீரிய, மொராக்கோ, ஆப்ரிக்க காலனி நாடுகளில் பிரெஞ்சு மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலரும் பிரான்சுநாட்டின் நிழலில் உரிய அங்கீகாரமின்றி மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் நாடுகளின் எழுத்தாளர்களுண்டு. ஆனால் செனெகெல் நாட்டின் செங்கோர் (Léopold Sédar Senghor), பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட மர்த்தினிக் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் எமெ செசேர் (Aimé CESAIRE) ஆகியோருக்குக்கிடைக்கவேண்டிய மரியாதை இங்கே கிடைத்ததில்லை.

மேற்சொன்ன பிரிவில் மற்றுமொரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் நெருக்கடிகள், வாழ்வாதாரச் சிக்கல்கள்  பிரச்சினை காரணமாக தொடக்ககாலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பிற்காலத்தில் காலனிகளிலிருந்தும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் பிரான்சு நாட்டிற்குக் குடியேறியவர்கள். இவர்களுக்கு பிரெஞ்சுமொழி சொந்த நாட்டில் அரசாங்க மொழியோ, தாய்மொழியோ அல்ல. பிரான்சுநாட்டில் குடியமர்ந்தபின்னர் தொடக்கத்தில் தாய்மொழியிலும்,பிற்காலத்தில் பிரெஞ்சு மொழியிலும்  (ஒருவேளை பெரும் எண்ணிக்கையில் புலம்பெயராததும், தேசிய அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அவசியமெதுவும் அவர்களுக்கு இல்லையென்பதும் காரணமாக இருக்கலாம்) இலக்கியம் படைத்தனர். அவ்வரிசையில் அயர்காந்தைச்சேர்ந்த சாமுவெல் பெக்கெட், செக்நாட்டைச் சேர்ந்த மிலென் குந்தெரா, ருமேனியாவைச்சேர்ந்த எமில் சியோரான், ரஷ்யரான ஆந்தரே மக்கின், சீனரான தாய் சீஜி, அண்மைக்காலத்தில் புகழ்பெற்ற ஆப்கானியர் அத்திக் ரயிமி என்றதொரு நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. சியோரான் ( Cioran), “அந்நிய மொழியொன்றில் படைப்பது விடுதலைக்கு நிகரானது”, என்றார். எனினும் “அவ்விடுதலையை வலிகள் கொண்டது”, எனக் கூறியவர் மிலென் குந்தெரா. அதனாற்தானோ என்னவோ பிரான்சுக்குத் தஞ்சமடைந்து வெகுகாலம் கழித்தே பிரெஞ்சு மொழியில் அவர் எழுத ஆரம்பித்தார். மிலென் குந்தெராவின் எழுத்துகள் கடந்த காலத்திய நெருக்கடிகளையும்; புதிய மொழி, புதிய வாழ்க்கையென குடியேறிய நாட்டில் தனக்கேற்பட்ட சிக்கலையும் பொதுவில் பேசுபவை.

பிரான்சு நாட்டில் பிரெஞ்சு அல்லாத பிறமொழிகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களென்ற பிரிவுக்குள் பிரெஞ்சு தமிழிலக்கிய படைப்பாளிகளைக் கருதலாம். ஒரு பிரிவினர் பிரெஞ்சு காலனியாகவிருந்த புதுச்சேரி (இந்தியா)யுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புகொண்டவர்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களும் இவர்களுள் அடங்குவர்: பிரெஞ்சு- தமிழ் உறவுக்கும், பிரெஞ்சு-இலக்கியத்தைத் தமிழுக்கும், தமிழிலக்கியத்தைப் பிரெஞ்சுக்கும் கொண்டுபோய் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பில் தொல்லிலக்கியங்கள் பெரும் பங்கு வகித்தன.

தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு:

லமாரெஸ் – திருக்குறள்

பெருமாள் ஐயங்கார் – திருவரங்கக் கலம்பகம், தேவதாசிபாட்டு, தெருப்பாடு

ஜூலியன் வேன்சோன் – சிந்தாமணி, ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பு

தெவெஷ் – அருணாசல புராணம்

அதாம் – ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நால்வழி, நன்னெறி, ஆசாரக்கோவை, கம்ப புராணத்தில் சில பகுதிகள், அறநெறிசாரம்.

லெயோன் சென் ழான் – மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம்.

இரா. தேசிகம் பிள்ளை – திருப்பாவை, சகலகலா வள்ளி மாலை, திருவிளையாடற் புராணம், காஞ்சி புராணம்

லெயோன்ஸ் கடெலி – பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, ரங்கோன் ராதா

துரைசாமி நாய்க்கர் – பாரதியார் பாடல்கள்

பிரான்சுவா குரோ – பரிபாடல் , காரைக்கால் அம்மையார்

ழான் லுய்க் ஷெவிய்யார் – தொல்காப்பியம் , தேவாரத்திலிருந்து சில பகுதிகள்

எம் கோபாலகிருஷ்ணன் – பட்டினப்பாலை

அலென் தனியெலூ, ஆர். எஸ். தேசிகன் – சிலப்பதிகாரம்

எஸ்.எ.வெங்கட சுப்ராய நாயக்கர் – குறுந்தொகை

மதனகல்யாணி – கரையெல்லாம் செண்பகப்பூ

கிருஷ்ணமூர்த்தி, மதனகல்யாணி – தமிழ்ச் சிறுகதைகள்

கிருஷ்ணமூர்த்தி – பெரியார் சிந்தனைகள், சித்ர சுதிர்

பிரான்சுவா குரோ – தமிழ்ச் சிறுகதைகள்

அம்பையின் சிறுகதை தொகுப்பொன்றை பிரெஞ்சு பதிப்பகமொன்று வெளியிட இருக்கிறது. வெ.சுப. நாயகரும் நானும் (நாகரத்தினம் கிருஷ்ணா) பிரெஞ்சு மொழியில் வலைத்தளமொன்றை நடத்தி வருகிறோம். அதில் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம், அவற்றைப் பிரெஞ்சு பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு வெளியிடத் திட்டம்.

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு:

இந்தியா உபகண்ட அளவில் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்ம இலக்கியங்கள் குறிப்பிடத் தகுந்த வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, அவ்வாறே நவீன இலக்கியங்களின் வரவும் இந்தியமொழிகளில் தமிழில் கூடுதலாக உள்ளன. தமிழ் படைப்புலகிற்கு பிரெஞ்சுக் காலனியத்துவத்தினாற்கிடைத்த நன்மை பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க முடிவது.  பாரதியார் பிரெஞ்சு தேசியகீதத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஸ்ரீனிவாச ஐயர், இரா. தேசிகம்பிள்ளை, சுத்தானந்த பாரதி, கோதண்டராமன், ஸ்ரீனிவாஸ சாஸ்திரி, சுவாமிநாதப்பிள்ளை, முத்துக்கண்ணன் ஆகியோர் கடந்த காலத்தில் பிரெஞ்சில் புகழ்பெற்ற படைப்புகளைத் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். நவீன பிரெஞ்சு இலக்கியங்களை தமிழுக்குக் கொணர்ந்து பாரியதாக்கமொன்றை ஏற்படுத்திய ‘ஸ்ரீராமையும்’ அவருடைய ‘அந்நியனையும்’ என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். குட்டி இளவரசனை மொழிபெயர்த்த மதனகல்யாணியின் உழைப்பும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இவர்களைத் தவிர புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி பேராசியர்கள்: ஆர் நடராஜனின் ‘புத்த ஜாதகக் கதைகள், கிருஷ்ணமூர்த்தியின் பிரெஞ்சுக்கதைகள், அண்மையில் வெளிவந்த வெங்கட சுப்ராய நாயகரின், ‘கலகம் செய்யும் இடது கை’, தனியல் ஜெயராஜின் ‘தோப்பாஸ்’ ; க.சச்சிதானந்தத்தின் பிரெஞ்சு பக்கங்கள்; வி. ராஜகோபாலனின் சார்த்த்ருவின் படைப்புகள்; நாகரத்தினம் கிருஷ்ணாவின் வணக்கம் துயரமே, காதலன், ஆகிய புனைவுகள்; உயிர்க்கொல்லி, போர் அறிவித்தாகிவிட்டது சிறுகதைதொகுப்புகள், மார்க்ஸின் கொடுங்கனவு ஆகியவை முக்கியமானவை.

நவீன தமிழ் இலக்கியம்:

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை, புதுச்சேரி பின்புலத்தைக்கொண்ட பிரெஞ்சுத் தமிழர்களின் பங்கு பிரான்சுநாட்டில் குறைவென்றே சொல்லவேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழிலிருந்து ஒதுங்கியவர்கள்,அவர்கள். நிலா என்றதொரு சிற்றிதழைத் தொடங்கி, அதன் பசிக்கு என்னை இரையாக்க விரும்பாமல் தப்பிப் பிழைத்தேன். கலைச்செல்வன் மறைவிற்குப் பிறகும் மன உறுதியுடனும் அயராத உழைப்புடனும் உயிர் நிழல் இதழைத் தொடர்ந்து நடத்தும் சகோதரி லட்சுமியின் துணிச்சல் எனக்கில்லை. பிரான்சு நாட்டில் வெளிவந்த சிற்றிதழ்கள் உலகின் பிறவிடங்களில் நிகழ்ந்ததைப்போலவே  குழுமனப்பான்மையுடன், தங்கள் ‘இருத்தலை’ முன்னிறுத்தும்பொருட்டுத் தோன்றியவை. இலங்கை இந்தியக் குழுசார்ந்த பிரிவினைகள் இவ்விதழ்களிலும் எதிரொலித்தன. மிகக் காத்திரமான இலக்கிய படைப்புகளை முன்வைத்த அச்சிற்றிதழ்களில் மாற்றணியினரைக்குறித்த  ஏச்சுக்களும் பேச்சுகளுமிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. சில இதழ்கள் அதற்காகவே தொடங்கப்பட்டதுபோன்ற எண்ணத்தையும் கட்டமைத்தன. சமர், அம்மா, பள்ளம், ஓசை, கண், தேடல், சிந்து, எக்சில், உயிர் நிழல், நண்பன், அசை, மௌனம், தாய் நிலம், தாயகம், மத்தாப்பு, கதலி, மத்தாப்பு, வடு, விழுது என பெரும் எண்ணிக்கையில் உயிர்ப்பதும் உயிர்த்தவேகத்தில் மரிப்பதுமாக அவை இருந்திருக்கின்றன. அரசியல், இலக்கியம், அரசியலும் இலக்கியமும் என்ற சூத்திரத்தைப் பின்பற்றிய இவ்விதழ்களில் அவரவர் கொள்கைசார்ந்து முடிபுகள் சார்ந்து  தாய் நாட்டின் பிரச்சினைகள், உள்ளூர் அரசியல், படைப்பிலக்கியம் குறித்த விமர்சனங்கள், விவாதங்களை வைத்தனர். எஸ். மனோகரனை ஆசிரியராகக்கொண்ட அம்மா; கலைச்செல்வனை ஆசிரியராகக்கொண்ட ‘எக்சில்’, ‘உயிர்நிழல்’; இடதுசாரி சிந்தனைகளை முன்வைத்த ‘சமர்’, கி.பி. அரவிந்தனை ஆசிரியாகக்கொண்ட ‘மௌனம்’ கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. இன்றும், பல நெருக்கடிகளுக்கிடையிலும் லட்சுமி உயிர் நிழலைத் தொடர்ந்து நடத்திவருகிறார் என அறிகிறேன்.

படைப்பிலக்கியத்தில் கவிதைகளைப் பொறுத்தவரை கி.பி. அரவிந்தன் முக்கியத்துவம் பெறுகிறார். அவர் எழுத்தில் இன்று சோர்வுகளிருப்பினும், கவிதைத் தொகுப்புகள் ஆவணப்படுத்த வேண்டியவை. போரின் அவலத்தையும் போர் ஓய்ந்தும் உலராத வடுக்களின் உபாதைகளையும் விம்மலும் வெடிப்புமாக வார்த்தைகளில் அநிச்சையாக உருமாற்றத் தெரிந்தவர். ‘ வயல்களுக்குத் தீ வைத்து வரப்பினில் தானிய மணிகளைப் பொறுக்கினான்” என் நெஞ்சத்தை இன்றும் முட்டும் வரிகள்.  ‘இனியொருவைகை’, ‘கனவின் மீதி’, ‘முகம்கொள்’ ஆகியவை அவரது கவிதைத் தொகுப்புகள். புனைவிலக்கியத்தில் சோபாசக்தி தனித்து நிற்கிறார். எதிராளிகூட அவரது மூர்க்கத்தின் நியாயத்தை ஏற்பான். எள்ளலும்,எழுத்தில் கடைபிடிக்கும் தான் தோன்றித்தனமான சுதந்திரமும், கலகக்குரலும், வேகமும் அவர் எழுத்தின் அடையாளங்கள்:  ‘கொரில்லா’,  ‘ம்’ ஆகிய புனைவுகளும்; எம்.ஜி.ஆர் கொலைவழக்கு, தேசத்துரோகி ஆகிய சிறுகதைதொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை.

பிரெஞ்சிலும் தமிழிலும் எழுதிவருவதாகச்சொல்லப்படும் கலாமோகனின் படைப்புகளை வாசித்ததில்லை. ‘நிஷ்டை’, ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்று இரண்டு தொகுப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் Et demain’ (நாளையும்) கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளனவாம். புதுச்சேரிக்கும் பிரான்சுக்குமான தொங்கல் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே எனது புனைவுகளும் (நாகரத்தினம் கிருஷ்ணா) அமைந்துள்ளன: நீலக்கடல்’, ‘மாத்தாஹரி’, வரவிருக்கிற  ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ ஆகியவை நாவல்கள்; ‘நந்தகுமாரா நந்தகுமாரா’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’ சிறுகதை தொகுப்புகளில் முக்கியமானவை; பிரெஞ்சு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும்: பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன், எழுத்தின் தேடுதல்வேட்டை, சிமொன் தெ பொவ்வா ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் இருக்கின்றன. புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த அப்பாதுரை, வண்ணை தெய்வம், சிவரூபன், சரீஸ், வி.ரி. இளங்கோவன், ஆகியோர் பிரெஞ்சு தமிழிலக்கிய உலகில் உத்வேகத்துடன் செயல்படுகிறவர்கள் என அறிய வருகிறேன். மரபுக் கவிதையில் தோய்ந்த கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசனையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம், எனது கவனத்திற்கு வந்தவைகளை இட்டிருக்கிறேன். கட்டுரையில் இடம்பெறாதவர்கள் உழைப்பைக் குறைத்து மதிப்பிட இல்லை. அயராத உழைப்பும் எழுத்தில் நேர்மையும் இருப்பின், காலம் நிச்சயம் அவர்களைக் கவனத்திற்கொள்ளும்.

நன்றி: பதிவுகள்

———————————

————————————————————

புதிய நூல்கள்

 1. கதையல்ல வரலாறு -கட்டுரைகள்

N.K.2

வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாகவிருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்படைவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டுமல்லாமல் உலகச் சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.

 கதையல்ல வரலாறு

ஆசிரியர் – நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ.80

நற்றிணை பதிப்பகம்

பழைய எண் 123 A, புதிய எண்243A

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

சென்னை -600005

தொலைபேசி: 94861 77208/044 43587070

2.  மொழிவது சுகம்: கட்டுரைகள்

Na.krishna -New books 001

அரசியல் இலக்கியம் சார்ந்து முன்வைத்த மனப்பதிவுகள். உயிரோசை, யுகமாயினி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

மொழிவது சுகம்: கட்டுரைகள்

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ 90

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

41. கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்

சென்னை -600 011

தொலைபேசி: 25582552/0444640986

3. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்

Na.krishna -New books3 001உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவைக் காலம் வேறாக தீர்மானித்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப்பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிர்க்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிபடுத்தியிருக்கிறேன்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்

ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ 160

சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53வது தெரு  9வது அவென்யு, அசோக் நகர்

சென்னை -600 083

தொலைபேசி  044: 24896979

———————————