மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1

 Panjangakm.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும்-பாராட்டுதலும்என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது  பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில்  எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை.  மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம்.  ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால்.  இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு.  ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ஒருபாற் கோடாமை மனத்துடன் உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல்எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும்வீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.

(தொடரும்)  

புதிய நூல்

புதிய நூல்

 வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

கிளேசியொவின் Le Procès -Verbal என்ற பிரெஞ்சு நாவல்  குற்றவிசாரணை( என்ற பெயரில் காலச்சுவடு பெளியிடுகிறது. ஜனவரி 17ந்தேதி திருவாளர்கள் பிரபஞ்சன் வெளியிட நண்பர் நாயகர் முதல் பிரதியைப் பெற்றுகொள்கிறார்

 நிகழ்ச்சி இடம் மற்றும் நேரத்தை பின்னர் அறிவிக்கிறேன்.

 அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

 

தாயகம் கடந்த தமிழ் -2014

தாயகம் கடந்த தமிழ்   –2014

              ஜனவரி-20-22

 

புரவலர் டாக்டர் நல்ல பழனிச்சாமியை தலைவராகக்கொண்டும் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க. பொன்னுசாமியை ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் இயங்கும் கோவை தமிழ் பண்பாட்டு மையம் ஆதரவில் ஜனவரி-20-22 தேதிகளில் தாயகம் கடந்த தமிழ்என்ற பெயரில் ஓர் கருத்தரங்கை ஏற்பாடுசெய்யப்படுள்ளது. திரு.மாலன். விழாக்குழுவின் தலைவர். வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் அ.முத்துலிங்கம், எஸ்.பொ. சேரன், ரெ.கார்த்திகேசு போன்ற படைப்பாளிகளோடு கல்விமான்களும், நவீன தமிழின் கணினி மேம்பாட்டிற்கு பெரும்பங்கினை அளித்துவரும் திரு முத்து நெடுமாறன் போன்றோர் கலந்துகொள்வதும் நிகழ்ச்சியின் சிறப்பு.

 பிற தகவல்களுக்கு தாயகம் கடந்த தமிழ் ‘2014, அதிகார பூர்வமான வலைத் தளத்திற்குச் செல்லவும்

http://www.webdesignersblog.net/tamil/amaippukkulu.php

உலக எழுத்தாளர் வரிசை -7: ரஸ்ஸல் பாங்க் (Russell Banks)

“வீடுமுறவும் வெறுத்தாலும் என்னருமை 220px-Russell_banks_2011
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே” (பாரதியார்)

முதலாளித்துவமும் நவீன சமூக அமைப்பும் மென்று உமிழ்ந்த மனிதர்களிடத்தில் அக்கறைகொள்கிற படைப்பிலக்கியவாதி ஒருவர் அமெரிக்காவில் இருக்கமுடியுமெனில் அது அநேகமாக ரஸ்ஸல் பாங்க் ஆக மட்டுமே இருக்க முடியும். சொந்தநாடுகளைக் கடந்து பிறநாடுளின் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுகொள்ளபட்டவர்களையே உலக எழுத்தாளர்கள் என அழைக்கிறோம்.  இவர்கள் அனைவருமே கைவசப்பட்ட மொழியைக்கொண்டு  தங்கள்  எடுத்துரைப்பில் உலக நடப்புகள் சிலவற்றுள் தங்களுக்குள்ள உடன்பாடின்மையைப் பதிவுசெய்கிறார்கள்.  ஆண்குறி பெண்குறி, உடல் உறவுகளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது போன்ற திட்டமிடல்கள் உலக எழுத்தாளர் தகுதியை நிர்ணயித்து விடாது. படைப்பு மானுடத்தின்மீது அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும். தமது அனுபவங்களுக்கு கலைவடிவம் கொடுப்பது மட்டுமல்ல, அக்கலை வடிவங்கள் ஊடாக உற்ற அனுபவத்தினைப்பற்றிய கருத்தையும் சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும். மகிழ்ச்சியை தெரிவிக்கத் தவறினாலும் ஏமாற்றம், நிராசை, அவநம்பிக்கை, சிறுமையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அறச்சீற்றத்தைப் பதிவுசெய்யும் பொறுப்பு வேண்டும்.

அமெரிக்காவை வல்லரசு என்றோ, பணக்கார நாடு என்றோ ரஸ்ஸல் பாங்க் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரது புனகதைகள் பலவும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப அக்கருத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவளிப்பதே தமது எழுத்தின் குறிக்கோளென்று ரஸ்ஸல் செயல்படுகிறார். திக்கற்ற மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். கடைநிலைமனிதர்களின் தலைவிதியை எழுத்திலேனும் திருத்திவிடலாம் என்ற கனவுகளுடன் எழுதிக்கொண்டிருப்பவர். இரந்தும், கேட்பாரற்றும், வீதிகள் பாலங்களின் கீழ் உயிர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய வக்கற்று நடைபிணமாகித் திரிந்தலையும் மனிதர்களைப்பற்றியதாக அவர் புனைகதைகள் இருக்கின்றன.  ஒரு தொண்டு நிறுவனமாக தம்மை உருமாற்றிக்கொண்டு செயல்படும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. வன்முறை, வன்புணர்ச்சி, கொலை, களவு, களவாணித்தனம் ஆகிய குற்றப் பண்புகளைக் காட்டிலும் அக்குற்றத்திற்குக் காரணமான சமூகத்தைத் தண்டிப்பதில் அவருக்கு ஆர்வம்.  அவரைப் பொறுத்தவரை உணர்ச்சிக்குப் பலியாகி குற்றமிழைக்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களல்ல மன்னிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் நோயாளிகள்: உரிய சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள். சமூகத்தின் கயமைக்கு யார் பொறுப்பு, எப்படி நிகழ்கிறது, அதனை அளவிடுவதால் கிடைக்கும் நன்மை தீமையென்ன என்ற ஆய்வு நோக்கில் அவர் படைப்புகளை அணுகவேண்டும். சட்டமும் நீதியும் குற்றவாளிகளை தண்டிக்கமட்டுமே செய்கின்றன. பலியாடுகளுக்கு தங்கள் பாதுகாப்புகுறித்த பிரக்ஞயை உணர்த்தும் பொறுப்பு சமூகத்தின் பங்குதாரனான தனக்குமுண்டு என்றுணர்ந்து ரஸ்ஸல் வினையாற்றுகிறார்.

தண்ணீர் குழாய்ப் பழுதுபார்க்கும் தொழிலாளியான ரஸ்ஸலின் தந்தைக்குக் குடிபழக்கமும் உண்டு. சகோதரன் வியட்நாம் யுத்தத்தால் சீரழிந்து போனவன், மற்றொரு சகோதரன் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்ப மரபுப்படி, காணாமற் போகிறான். குடிகாரத் தந்தை, வறுமை, திக்கு தெரியாமல் பயணித்த பெற்றோர்கள், அவர்கள் இழைத்த கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்ப நினைத்த ரஸ்ஸலுக்கு  வார்த்தைகள் ஒளிகீற்றாக அவர் சிறைவாழ்க்கைக்குள் நுழைந்தன. அக்காலங்களில், சிறுவன் ரஸ்ஸல்,   ஒத்த வயதினரிடம்  தேடிச்சென்று  அளந்த கதைசொல்லலுக்குக் கிடைத்த வரவேற்பு அவனை உறசாகமூட்டியது, குடும்ப நரகத்திலிருந்து விடுவிக்கும் பிராணவாயுவாகவும் அமைந்தது தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டான். பின்னாளில் ரஸ்ஸல் சிறந்த படைப்பாளியாக உருவானதின் பூர்வாங்கக் காரணமிது. அவர் வரையில், “வார்த்தைகள் என்பது அர்த்தமற்றவைகளுக்குப் பொருள் தேடும் முயற்சி, நிஜத்தை  எட்ட நம்மை வழி நடத்தும் ஓர் அரூப சக்தி” தவிர “எழுத்திடம் அடைக்கலம் வேண்டுவது  சிறுமைகளிடமிருந்து தப்புவதற்கு அல்ல மாறாக அதனை அடக்கி ஆளவும், நெறிபடுத்தவும், நடந்த வற்றைச் சாட்சிப்படுத்தவும், இறுதியாக படைப்பாளி தனது மனதிற்கு உகந்த மாற்றுலகை கட்டி எழுப்புவதுமாகும் (1). பதினாறு வயதிலேயே தனக்கு மனதளவில் சிகிச்சை தேவைப்பட்டதெனவும் அதன் பொருட்டே சொற்களின் உதவியை நாடியாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் அப்போதைக்கு அவரது முயற்சிகள் இலக்கியம் என்பதைக் காட்டிலும் ஒருவகை சுயதேடல்களாகவே இருந்திருக்கிறது. எழுத்தை கையிலெடுக்கிற பெரும்பான்மையோர்  சிறைவாழ்க்கையை தேர்வுசெய்து கதவை அடைத்து வாழ்கிற இந்நாளில், ரஸ்ஸல் எழுத்துகளென்ற சிறகை விரித்து விசும்பைத் தொட விரும்பினாராம் (1)

ரஸ்ஸல் பாங்க்கின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்கள். சமூகம் விலக்கிவைத்த கடை நிலை மனிதர்கள். இரந்தும், குற்றம் புரிந்தும் வீதியோரங்களிலும் பாலத்தின் அடியிலும் ஆதரவு கரம் தேடி வாழும் உயிர்களாகவே அவர்களைச் சந்திக்கிறோம். தங்கள் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருக்கிற வாழ்க்கை முறை, வரையரைகளுடன் கூடிய கனவுகள், எதிர்கொள்ள முடியாத சக்திகள் தரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றிய புரிதலெல்லாம் அவர்களுக்கு நிறையவே உண்டு. இம்மனிதர்களின் தலைகளின் சுமையாக இருப்பது, அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் பூர்வீகம் அதாவது அவர்களை இன்னார் வழிவந்தவர்கள் என அறிமுகப்படுத்தும் ‘இன்னார்கள்’ இவர்கள் மீது பெரும் பாரத்தை இறக்கியிருக்கிறார்கள். என்னதான் உழைத்தாலும், சோபித்தாலும் ‘இன்னார்’ என்ற சொல் அவர்கள் தலை விதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இதனுடன் சமூகத்துடனான அவனுடைய கொடுக்கல் வாங்கல்கள், இயற்கையை எதிர்கொள்ள முடியாத பலவீனம், மூலதன உலகின் அமைப்புமுறையென வேறு பல காரணிகளும் கால்களைப் பிணைக்கின்றன.  எனினும் சிறிதுகூட இரக்கமற்ற சமூகப்பாட்டையில் தட்டுத் தடுமாறியோ, நொண்டிக்கொண்டோ, அவ்வப்போது விழுந்தெழுந்தும் மெல்ல என்றாலும் தொடர்ந்து நடக்கவே செய்கிறான். நீந்தத் தெரியாதவனைக் காப்பாற்ற முனைவதிலுள்ள சங்கடம் வாசிக்கிறபோது  ஏற்படுகிறது. அவன் மூழ்குகிறபோது அவனுடன் சேர்ந்து  மூழ்குகிறோம், அவன் நீர்மட்டத்திற்கு மேல் வந்து மூச்சுவிடும்போது,  வாய்கொள்ள காற்றை உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். “நவீன உலகு ஆக்ரமித்துள்ள மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் ஊடாகவே பிரபஞ்ச உண்மைகளை நாவலாசிரியர்கள் நிலைநிறுத்த விரும்புகிறோம், அவற்றை தொடர்ந்து உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்”(2) என்று கூறும் ரஸ்ஸல் அம்மனிதர்களை தனது கதையாடலைக்கொண்டு தொடர்ந்து இயங்கச் செய்கிறார்.

அண்மையில் (2012) பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரஸ்ஸல் பாங்க்கின் நாவல் Lointain souvenir de la peau (3) (Lost memory of skin). இநாவலில் ரஸ்ஸலின் கவனம் பாலியல் குற்றவாளிகள் பக்கம் சென்றிருக்கிறது.  ரஸ்ஸலை பொறுத்தவரை குற்றவாளிகளைக்கொண்டே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அளக்க முடியும். வெப்பமானி, பால் மானிபோல சமூகத்தின் நோயை அளக்க உதவுபவர்கள் அவர்கள். இப்பாலியல் குற்றவாளிகளைத் தங்களின் ஒரு பிரிவினர் என்பதை பெரும்பாலோர் ஏற்பதில்லை. அந்தப் பிறருக்கு இவர்களெல்லாம் சமூகத்தை சீரழிக்கும் புல்லுருவிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழவேண்டியவர்கள். நடுத்தர அல்லது பணக்கார குடும்பங்களின் வம்சாவளியில் வந்தவர்களாக இருப்பின் அவர்களை அமெரிக்க்காவின் முதுகெலும்பென கொண்டாடுவர், அரசும் அவர்கள் வாழ்வில் அக்கற்றை கொண்டிருக்கும். இவர்கள் அருவருப்பான சாக்கடை புழுக்கள் என்ற எண்ணத்துடன் பாலியியல் குற்றவாளிகளுக்கென ஒரு காலனியை (ரஸ்ஸல் கற்பனையின்படி)உருவாக்குகிறது, தவிர அவர்கள் கண்ணிற்படும் சிறுவர் சிறுமியர்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன்  மக்கள்  குடியிருப்புகளிலிருந்து காலனியை குறைந்தது 760 மீட்டர் தள்ளி அமைக்கவேண்டும் என்ற நியதிப்படி உருவான காலனி அது. அங்கு குற்றவாளிகளைக் கண்காணிக்க மின்னணு காப்புகள் இல்லை. பதிலாக உலோக குண்டுகளுடன் கூடிய சங்கிலியாலான தளை.

கதை நாயகன் லெ கிட் இருபத்திரண்டு வயது இளைஞன். செய்த குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு  காலனி வாழ்க்கைக்கு வருகிறான். அவன்செய்தகுற்றம் வலைத்தளத்தில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது,.  போலீஸார் விரித்த வலையில் வெகு எளிதாகச் சிக்கப் போதுமானதாக இருக்கிறது. தந்தையை இழந்தவன், தாய்க்கு மகனைக் காட்டிலும் வேறுவகையான தேவைகள் இருக்கின்றன.புறக்கணிக்கப்ட்ட  ‘கிட்’ போர்னோ போதைக்கு அடிமையாக நேர்ந்தது அவ்வகையில் தான். தண்டனைப்பெற்று திரும்பும் மகனை தாய் வெறுத்த நிலையில் அவனுக்கென்று கிடைத்த ஒரே ஆதரவு அவன் வளர்க்கிற பச்சோந்தி., அதனுடன்தான் அவன் வளர்ந்தான். பாலத்தின் கீழிருக்கும் குற்றவாளிகள் சேரியில் இவனைப்போல சங்கிலிக்குண்டை சுமந்து அரசுக் கண்காணிப்பின்கீழிருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், பொழுதும் போகிறது. அங்குதான் ஒருநாள் மாமிச மலைபோன்ற ஒரு சமூகவியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். பேராசிரியருக்கு நடுத்தெரு நாராயணர்களிடம் அக்கறை கொள்ள காரணம் இருக்கிறது, அவர் செய்யும் ஆய்வுக்கு அவர்கள்தான் பொருள். ஆக லெ கிட் அவருடைய ஆய்வுக்கு உதவமுடியுமென நம்புகிறார். இவர்கள் இருவரையும் கொண்டு எஜமானரான ரஸ்ஸல் தனது வேட்டையைத் தொடங்குகிறார். அவருக்கு குறி அமெரிக்காவின் அரசியல். ஒரு பக்கம் பாலியல் தொடர்பான வங்கிரங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் ஏமாந்த மனிதர்களைத் தண்டிக்கும் சொந்த நாட்டின் அரசியலை வழக்கம்போல மிகக் கடுமையாக ரஸ்ஸல் விமர்சிக்கிறார்.

குறைந்த பட்ச அன்பைக்கூட அறிந்திராத  ரஸ்ஸல் பான்க்கின் கதைமாந்தர்கள்  நிராதரவான நிலையில் நாவலெங்கும் அன்பிற்கு ஏங்குவதை உணரமுடிகிறது. மனம் இளகுகிறது. விழியோரங்களில் நீர்கசிவதை தடுக்க இயலவில்ல. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை? அவர்கள் செய்த குற்றமென்ன?  இச்சமூகத்திற்கு அதில் பங்கில்லையா? ரஸ்ஸல் மட்டும் கேட்கவில்லை நமக்குள்ளூம் கேட்டு அழுது புரளுகிறோம். அதுதான் எழுத்தின் வெற்றி.

வெளிவந்துள்ள படைப்புகள்:

பன்னிரண்டு நாவல்கள்

Family Life (1975)
The Sweet Hereafter(1991)
The Rule pf the Bone (1005)
Affliction(1989)
Lost Memory of Skin (2011)
அவற்றுள் முக்கியமானவை.

சிறுகததைகள் 6 தொகுப்புகள் வந்துள்ளன
Searching for survivors (1975)
The Angel on the Roof (2000)

இரண்டு கவிதை தொகுப்புகள்

இவற்றை தவிர அவரது படைப்புகள் திரைவடிவமும் பெற்றுள்ளன. ‘Affliction’ முக்கியமான திரைப்படம்

——————————————————-

1. Transfugeஇதழுக்கு (Sep.2005) அளித்த செவ்வி  ஒன்றில்

2. Le Magazine Littéraire, page 16 (août 2012)

3. Lointain souvenir de la peau, Russel Banks, Traduit de l’anglais (Etats-unis) par Pierre Furlan -Edition Actes Sud

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நூல்கள்

inviஎதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில்  நண்பர்  எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013.

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

4. கடைசி நாள் : 31.12.2013.

5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
மின்னஞ்சல் (e-mail),
அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)

பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com

www.naalaividiyum.blogspot.com

www.periyaariyal.blogspot.com

www.ambethkariyam.blogspot.com

www.penniyakkural.blogspot.com

www.aravaanigal.blogspot.com

www.jothidamosadi.blogspot.com

www.saibabamosadigal.blogspot.com

www.thamizhpeyargal.blogspot.com

www.anuulaiethirppu.blogspot.com

புலம்பெயரியத் தமிழிலக்கியம் : சில உட்பொருண்மைகள் – தமிழவன்

Tamizavan(எதிர்வரும் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் மூன்று நாட்கள்கோயம்புத்தூரில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு என்று கலந்துகொள்ளும் நிகழ்வு. அதுபற்றிய  விபரத்தினை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு இங்கு வெளியிடுகிறேன். இந்த ஆய்வுக் கட்டுரை  சிங்கப்பூரில் நவம்பர் 2011ல் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்னாள் ஆந்திர திராவிடப் பல்கலைகழக தமிழ் துறை தலைவரும், இலக்கிய விமர்சகரும், அமைப்பியல்வாதியும், பின் நவீனத்துவத்துவ முதன்மை படைப்பிலக்கியவாதியுமான முனைவர் தமிழவன் வாசித்தது, அவர் ஓப்புதலுடன் இங்கே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. )

 அறிமுகம்

தேச அமைப்புகள் உருவாகி அதன் பல்வேறு  பரிமாணங்களையும் பெறும்போது புலம்பெயர்தல் தேச அமைப்பை ஏதோ ஒருவகையில் மீறுவதாகும். உள்நாட்டுபோர், பஞ்சம் பட்டினி, அல்லது வேலையின் பொருட்டு , அல்லது சரித்திரக் காரணங்களின் (இதில் நாடுகள் சுதந்திரம் பெறுவதும் புதிய ஆட்சி ஏற்படுவதும் கூட அடங்கும்) பொருட்டுத் தேசத்தையும் பிறந்த மண்ணையும்விட்டுப் பெயர்தல் ஏற்படுகிறது.  இவ்வாறு நிலம் பெயர்ந்து வாழ்தல் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு புதிய உண்மைகளையும் உருவாக்குகிறது. இப்படி பெயர்பவர்கள் புதிய மண்ணில் வாழ்க்கையை, தமது குடும்பத்தை நிலைநாட்டும்போது புதுப்புது உணர்வுகள், மனநிலைகள், வரலாறுகள்? ஞாபகங்கள்? உலகப் போக்குகள் படைக்கப்படுகின்றன. (இவற்றை ஆங்கிலச் சொற்களாம் தங்களுக்குள் Diaspora, International, Expatriate, Exile என்று எல்லாம் பறிமாறிக்கொள்கிறார்கள் ஆய்வாளர்கள்.)

இத்தகைய புலம்பெயர் நிலைமை பற்றிய ஆய்வுகள் தமிழில் இல்லை. சமீபகால பல்கலைக் கழக ஆய்வாக மானுடவியல், அரசியல், வரலாறு, இலக்கியவியல் துறைகளில் இது மேற்கில் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்பெறுகின்றது. எனினும் புலம்பெயர் நிலைமைக்குத் தமிழ்ச்சமூகம் பல காலமாக ஆளானது என்பது உண்மை. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கும் தென் ஆப்ரிக்கா, பிஜி, மேற்கிந்திய தீவுகள், பர்மா, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதுபோல அடுத்தகட்டமாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று தென்னிந்தியாவிலிருந்தும் தமிழீழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தார்கள்.

இந்தப் புலம்பெயர் நிலைமை பற்றிய இலக்கியங்கள் இன்று போதிய அளவில் எழுதப்பட்டுள்ளன அவற்றைப் பற்றிய இந்த ஆய்வில் ஈடுபடுமுன்பு நாம் சில கருத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும். வலைப் பின்னல்களில் பொதுவாய்ப் பலராலும் பலவிதமான புரிதல்களுடன் புலம்பெயர் நிலமைசார்ந்த கருத்தாடல்கள், விவாதங்கள், வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இக்கட்டுரை இவற்றில் வெகுசில வரையறைககளையே பயன்படுத்தித் தன்கருத்தியல் உலகை முன்வைக்கிறது. பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய சர்ச்சைகள் கீழ்வரும் கருத்தாடல்களை முன்வைப்பதுண்டு.

புலம் பெயரியம் பற்றிய சர்ச்சைகள்

குவலயமாக்கம் (Globalsation) வேறு; புலம்பெயர்தல் வேறு. குவலமயமாக்கத்தில் பொருளாதார அலகுகள் (economic units) மற்றும் தொழில் நுட்பக்கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது புலம் பெயரியத்தில்ஒரு வாழ்வியக்கம் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்ற வரைவிலக்கணம் பயனுள்ளது. அதாவது ஒரு நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஞாபகம், கனவு, மீள்நினைவு (Nostalgia) பிரிவால்  மன உளைச்சல், புதிய நாடுகள் தரும் ஆசைகள், புதிய அனுபங்கள் இப்படி ஒரு கலப்பான மன எதார்த்தம் தோன்றுகிறது.

இதுபோல வேறொரு அம்சமும் தொழில்படுகிறது புதிய உலகம்  அல்லது புதிய நாடு  தனது அல்லது தனது குடும்பத்தின் எதிர்காலத்தோடு இணைக்கப்படும்போது அங்கு ஒரு மேல்-கீழ்  என்ற தாரதம்மியம் (Hierarchy) ஏற்படுகிறது. அதில் தனது புதியநாடு ஒளியாகவும் தன் பழைய நாடு அல்லது பிறப்பிடம் ஓரளவு இருளாகவும் மனதில் பதிவுறுகின்றன. தனது குழந்தைகள் ஒளிரும் நாட்டிலும் தனது தாய் தந்தை மற்றும் உறவுகள் தன் இருள் சூழ் நாட்டிலும் வாழ்வது தெரிகிறது. ஆகப் பிறப்பிடம் கடந்து போனதாகவும் வாழ்விடம் நிகழ்காலமாகவும் ஆகிறது. அதாவது காலம் தனது பரிமாணத்தைப் பழையது/புதியது என்று பிரித்து எதிரிணையைப் படைக்கிறது. நாடு இரண்டுபடுகிறது. எனவே இந்தப் புலம்பெயரியல் ஆய்வு எப்போதும் தவிர்க்கவியலாமல் இரண்டு நாடுகளின் குடிமகனைப் (Dual Citizenship) பற்றிப் பேசும் புது சிந்தனையாகிறது. இவ்வித ஆய்வு அர்ஜுன் அப்பாத்துரை போன்ற ஆய்வாளர்களுக்குக் கற்பனை (imagination)யிலிருந்து மிகவும் வேறுபாடுள்ளதல்ல. (1)

 பல சிந்தனையாளர்கள் புலம்பெயரியம் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு முன்னாலும் பின்னாலும் முகங்கொண்டு பார்க்கிற கிரேக்கத் தேவதையான ஜேனஸ் பற்றிப் பேசுவதை இங்கு நாம் நினைவுகொள்வது நம் சிந்தனைக்கு ஓர் அகில உலக முக்கியத்துவத்தைத் தரும். இந்த உருவகம் (Metaphor) ஒற்றைமுக கருத்தாக்கங்களால் நாடு கடந்த உண்மைகளைப் பேசுவதில் உள்ள கஷ்டத்தைச் சுட்டிக்காட்டும். எனவே இந்தத் துறையில் ஆய்வுகளின் முறையியல் (Methodology) கூட புதியதாக இருக்க வேண்டுமென்பது முக்கியமாகிறது.

அடுத்ததாக இடம் பற்றிய பெயர்ப்புப் (Dislocation of site) பற்றி யோசிக்கவேண்டும். அதாவது இடம், தனது முந்தைய காலத்தோடும் அதுபோல் தனது இன்றைய காலத்தோடும் முதன்முதலாகத் தொடர்கிறது. அதனால் மனித உணர்வு, அதன் வரலாறு அதன் ஞாபகம், கற்பனை முதலியன எந்த முன்மாதிரியும் அற்றதாகிறது. அதாவது முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் நாடு பெயர்ந்தவன். இது புரிதலுக்கு ஓர் இருண்மையையும் வளைவு நெளிவுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. ஒன்று இன்னொன்றோடு சதா முரண்பட்டுக்கொண்டே (perpetual contestation) இருக்கிறது. இறுகிப்போன கருத்தாங்களாய் எதையும் பார்க்கக்கூடாது.

நம் கவனத்திலிருந்து தப்பக் கூடாத இன்னொரு சிந்தனை தன்னிலைகள் (Subjectivities) பற்றியது. தன்னிலை என்பது மனித ஆன்மா அல்ல. மனிதனின்/ மனுஷியின் உள் ஆளுமை அது. அது முக்கியமாக, பொருள்மயமானதென்றனர் அமைப்பியல் சிந்தனையாளர்கள். நாம் பேசுகின்ற மொழிகளின் பொது அமைப்பால் உருவானது தன்னிலை. இந்தத் தன்னிலை எழுதப்படுகிற பிரதியில் (text) அமைந்திருக்கின்ற விதம் பற்றிய ஆய்வு புதிய உண்மைகளைப் பிரதிகளிலிருந்து நமக்குக் கொண்டுவந்து தருகின்றது.

பியர் மாஷெரி (Pierre Machery) போன்ற பிரெஞ்சு நாட்டு சிந்தனையாளர்கள் எழுத்தை ஒருவித உற்பத்தியாகப் பார்த்தனர். அதுபோல புலம்பெயர்வியல் ஆய்வாளர்கள் புலத்தில் உள்ள வாழ்வு என்பதை ஒரு கலாசார உற்பத்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது பெயர்ந்து வாழ்வது என்பது ஒரு கலாசாரத்தைவிட்டு இன்னொரு கலாசாரத்தைத் தழுவுதல் அல்ல. இரண்டு கலாசாரங்களும் முடிந்து போனவையோ, கல் போன்று இறுக்கமானவையோ அல்ல. மனிதர்கள் அந்தக் கலாசாரத்தில் உயிர்வாழும்போது அவ்விரு கலாசாரங்களும் தம்மை உற்பத்தி செய்கின்றன. அவை ஒரு செயலில் இருக்கின்றன. இது முக்கியமான காரியமாகும். இதனை நாம் புலம்பெயர்ந்தவன் எழுதும் எழுத்தில் எதிர்கொள்கிறோம். கலாசாரம் எப்படி உற்பத்தியாகிறதென்று அறிகிறோம்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள பண்புகளைப் பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய கருத்தாக்கங்களாக இன்றைய அகில உலகச் சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்தப் பின்புலப் பரிச்சயத்துடன் தமிழ்மொழியில் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம் எப்படி வடிவமைப்புக்கொண்டு  வருகிறதென்பதைப் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம்.

இக்கட்டுரை புலம் பெயர்ந்த எழுத்தாளர்களாக எஸ். பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி, மெலிஞ்சி முத்தன் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களையும் அதுபோல் காஞ்சனா தாமோதரன் என்ற அமெரிக்கா வாழ் எழுத்தாளரையும் நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பாரீஸ் வாழ் எழுத்தாளரையும் அணுக விழைகிறது. இவர்கள் அத்தனைபேரும் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய உரைநடை வடிவங்களைப் பயன்படுத்தி எழுதக்கூடியவர்கள். எனவே மிகக் குறுகிய இரண்டு இலக்கிய வடிவங்களைக் கையாளும் எழுத்தாளர்கள் – அதுவும் பரிமாணம் கொண்ட ஒரு புதிய வாழ்முறைத் தன்மையை எப்படி உருவம் பெற வைக்கிறார்கள் என்ற நோக்கில் இக்கட்டுரை ஆய்கிறது.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருநாடுகளுக்கிடையில் நடத்தும் ஒரு இருதலைக் கொள்ளிவாழ்க்கை நிலை ஏற்பட்டிருப்பது மிக மேம்போக்காக்கப் பார்ப்பவர்களுக்கே தெளிவாகும். இந்த இருவகைநாடுகளும் ஒரே தரத்தனவாக எழுத்தாளர்களிடம் இல்லை. பிறந்த நாடு என்பது ஒருவகை விதைபோல் இவர்களிடம் செயல்படுகின்றது. இங்குக் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் ஈழமும்  அதுபோல இந்தியாவின் பகுதியான தமிழ்நாடு என்ற மாநிலமும் (காஞ்சனா தாமோதரன்) பாண்டிச்சேரி மாநிலமும் (நாகரத்தினம் கிருஷ்ணா) இந்தத் தாய்பூமி (Home land) எனும் விதை நிலமாகின்றன. ஒரேவிதை இருவித நிலங்களில் வேறுபட்டு வளர்வதுபோல தாய் நிலத்தின் உறவும் ஞாபகமும் பிள்ளைப் பருவமும் சரித்திரமும் எதார்த்தமும் அது பற்றிய கனவும் அது பற்றிய படிப்பறிவும் அங்கு நடக்கும் தற்கால வாழ்வும் போராட்டமும் சமாதானமும் இன்னொரு நாட்டின் தற்சமயத்துடன் பின்னிப்பிணைகின்றன. இரு நாடுகளின் உறவும் சரளமானதோ, கொள்வினை கொடுப்பினை உறவோ, பயணி ஒருவரின் உறவோ இல்லை. ஆங்கிலத்தில் இன்று பலர் எழுதுவதுபோல (ஸல்மான் ருஷ்டி, ஷ்யாம் செல்லதுரை, நைப்பால், சிவானந்தன், ரோஹிண்டன் மிஸ்ரி முதலியோர்) அமையாமல் இரு தேசங்களில் காலூன்றி இதயத்தின் மொழியான தாய்மொழியில் எழுதும் எழுத்து  அகில உலக முக்கியத்துவமுள்ள புது மனோநிலைகளைக் கண்டுபிடிக்கும் காரியமாகும். தமிழர்கள் என்ற பழம் பெருமைகொண்டு காலம் காலமாகத் தனது பிறந்த பூமியை மறக்கமால்  அப்பூமியின் நினைவிலிருந்து தன் வாழ்வுக்கு ஒரு புது உந்துதலையும் புதுப்பொருளையும் காணும் இனம் ஒன்று நிலம் பெயர்ந்து வாழ்வில் அடையும் அனுபவம் வெறும் இலக்கியத்துறை ஆய்வுப் பொருண்மை மட்டுமல்ல. இவ்வெழுத்தாளர்கள் சென்று வாழும் நாடுகள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்றவையாதலால் இது அனைத்துலகப் பண்பு மாற்றம் பற்றிய ஆய்வில் முக்கியமான தரவாகவும் அமைகிறது. எனவே இலக்கிய வரையறைகளை மட்டும் கருத்தில் கொண்டு அத்துறையின் குணவியல்புகளுக்கு ஏற்ப மாற்றம் பற்றிய ஓர் ஆழமானதும் பொருள் பொதிந்ததுமான ஆய்வாகவே அது அமையும்.

இங்குப் பெருவாரி எழுத்தாளர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களாக இருந்தாலும் அமெரிக்காவிற்குப் பணியின் பொருட்டுப் புமபெயர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் புது இலக்கிய பரப்பும் ஆழமும் இவரை ஒரு அனைத்துலகப் புலம் பெயரிய எழுத்தாளராக (ஆனால் எழுதுவது தமிழில்) அடையாளம் காணத் தூண்டுகிறது. அதுபோலவே நாகரத்தினம் கிருஷ்ணாவும் பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சுநாட்டுக் காலனி ஒன்றின் தமிழ் எழுத்தாளராய் இன்றைய அனைத்துலகப் பரிமாணம் கொண்டு விளங்குகிறார். அனைத்துலக இலக்கிய அடையாள அள்வுகோலால் அவரை அளக்க வேண்டியதன் தேவையைத் தமிழரங்குக்குக் கொண்டு வருபவராய் தனித்து விளங்குகிறார். இவ்விருவரில் எழுத்துகள் பற்றிய சர்ச்சையோ முக்கியத்துவமோ இன்றைய தமிழிலக்கிய சூழலில் இல்லாதது இவ்விருவரின் எழுத்தின் கோட்பாட்டு அறிவு தமிழிலக்கிய சூழலில் இல்லாததால் என்றும் கூறலாம். எனவே “தமிழ்ப் புலம்பெயரியம்” ஒரு கோட்பாடாய் வடிவப்படுத்தப்படவும் அதை ஒரு பொது இலக்கிய விவாதத்திற்குக் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்துவதும் இன்றைய தமிழின் நிலையை அனைத்துலக மட்டத்திற்குக் கொண்டுவருவதும் ஒன்று இன்னொன்றோடு பிணைந்ததாகும். இவ்விரு படைப்பாளிகளில் காஞ்சனா அவர்கள்(2) எதார்த்த இலக்கிய நடை மூலம் உச்சமான இடங்களைத் தொடுவதும் கிருஷ்ணா பன்மைக் கதையாடல் ( Multilevel Narration) மூலம் தன் நாவலைத் தொடங்கி மேலெடுத்துச் செல்வதும் காணக்கூடியதாகும்(3). அ. முத்துலிங்கம்(கனடா) நாவல் (பார்க்க முன்னுரை) என்று அழைத்து ஒருவித கதைக் கோர்வையை உண்மைகலந்த நாட்குறிப்புகள்  என்ற பெயரில் தந்துள்ளார்(4). எஸ்பொ. அவர்கள் (ஆஸ்திரேலியா) மாயினி என்ற நாவலாய் ஒரு இலங்கை சரித்திரத்தை மறுவரைவு செய்கிறார்(5). ஷோபாசக்தி தனது நாவல் மூலம் இலங்கையின் தமிழ்ப்போரை உள்ளடக்கமாக்குகிறார்(6) கருணாமூர்த்தி பல்வித வடிவங்களில் ஈழத்தையும் தமிழகத்தையும் பெருவாரியாய் எழுதுகிறார்(7) மெலிஞ்சிமுத்தன் என்ற எழுத்தாளர் தான் கண்ட புது உலகையும் ஈழத்தையும் கதை என்னும் புது அறிதலாய் மாற்றுகிறார்(8). இங்கு குறிப்பிட்ட இவர்களின் எழுத்துகள் இக்கட்டுரையில் பல்வேறு உட்பொருண்மைகளாய் ஆயப்படுகின்றன.

இங்கே குறிப்பிட்ட ஆசிரியர்களை மையமாக்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு மேலே சென்று கற்றல்(study) மேற்கொள்வதும் தேவை இல்லை. எஸ்.பொ. அவர்கள் பிறந்து தன்னாளுமையை உருவாக்கிய நாட்டில் இருக்கும்போதே பல படைப்பாக்கங்களுக்கு ஆசிரியர். அவரே பிற்காலத்தில் வேறொருநாடு சென்று எழுதும்போது அப்படைப்பு எவ்வாறு புலம்பெயரிய படைப்பாகுமென்று சிலர் கேட்கலாம். இங்கு மாயினி நாவலின் சிறப்பு ஒன்றைச் சுட்டலாம். மிகை எளிமைக்குட்பட்ட கதைசொல்லல் முறை இருந்தாலும் இன்றைய பின் நவீனத்துவ அகில உலகக் கதை உத்தியைத் தமிழில் உள்ளிருந்தே மாயினி என்ற பிரதி பெற்றுள்ளது. அதாவது வெளியில் இப்படியொரு உத்தி இருக்கிறதென்று தேடிச்சென்று அதைக் கற்காமலேயே தன் புலம்பெயர் ஆதங்கத்திலிருந்து (Expatriate anxiety) உள்முகமாகத் தன் கதைச்சொல்லல் உத்தியை நிறுவியுள்ளது இந்த நாவல். இலங்கையின் சிங்கள ஆட்சி குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் கதையைப் பிரதியாக்கம் (textualize) செய்கிறது மாயினி. இது போலவே ஏற்கனவே தமிழ் எழுத்தாளராய் ஈழத்தில் வாழ்ந்த அ.முத்துலிங்கம் உண்மை கலந்த நாட்குறிப்புகள்மேற்கொள்ளும் பிரதியாக்க முறை அதனைப் புலம்பெயர் நுட்ப உணர்வுகளை உள்வாங்கிய ஒரு பிரதியாய்க் கருத வைக்கிறது. அந்நாவல் வேறு நாவல்கள் போன்று எழுதப்பட்டதல்ல . நாற்பத்தாறு இயல்களும் நாற்பத்தாறு அனுபவங்கள்போல தொகுக்கப்பட்டவையாகும். நாற்பத்தாறு இயல்களும் ஒரு நபர் (அதாவது அது முத்துலிங்கமா?) அனுபவமாய் வருகின்றன. நாவலில் கதைசொல்லியின் அனுபவம் வேறு; எழ்துபவரின் அனுபவம் வேறு. நாவல் என்று அழைக்கப்படும் இந்த நூலும் சுய அனுபவங்களைத் தாண்டி இன்னொருவராய் எழுதுபவரைக் காட்டக்கூடிய தொனிகளுடன் பல இயல்களை அமைத்திருக்கிறது. உதாரணமாய் இயல் 41இல் அமைந்துள்ள கதையில் கதைசொல்லி (ஆசிரியனல்ல) ஒரு பாலஸ்தீனியரை முதன்முதலாய் சந்திக்கும் செய்தி வருகிறது. கற்பனையும் உண்மையும் சேர்ந்து எழுதப்பட்ட நாட்க்குறிப்புபோன்ற  இந்த நூல்  பாலஸ்தீனியரை ஒரு கற்பனையாகவும் படைக்கமுடியும். இந்தச் சாத்தியப்பாடு நாட்குறிப்புபோன்று கட்டமைக்கப்பட்ட பிரதியை நாட்குறிப்பின் உண்மைத்துவத்திலிருந்து நாவலின் கற்பனைக்குள் கொண்டு செலுத்துகிறது. இந்த உண்மை/ கற்பனைதான்  தேசக்கற்பனையின் தோற்றுவாய் என்கின்றனர் பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றோர்(9).

மற்ற எழுத்தாளர்களின் உந்துதல் நிலம் பெயர்ந்த வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்கனவே எதுவாக இருந்தார்களோ அதற்குமான முரணினிலிருந்து தோன்றியவை எனலாம். எழுத்தாளுமை நிலம் பெயரியக்கத்திலிருந்து  இங்கு முகிழ்க்கிறது. இதில் பல்வேறுவகை மாதிரிகளை ஒவ்வொரு எழுத்தாளரும் முன் வைக்கிறார்கள்.

 எழுத்தாளுமை – பல்வேறுவகை மாதிரிகள்

பொ.கருணாகரமூர்த்தி, மெலிஞ்சி முத்தன், ஷோபா சக்தி போன்றோரிடத்தில் தாங்கள் பிறந்த நாடுகள் பற்றிய கதைகளே தங்கள் கதைகளாக வெளிப்படுகின்றன. கருணாகரமூர்த்தியின் கதையாகிய சிநேகிதனைத் தொலைத்தவன்என்ற கதையில் பாலசந்திரன் என்ற பழைய நண்பனைத் தேடிக்கொண்டுவரும் கதைசொல்லி தனது பள்ளிக்கால நண்பனைக் கண்டு பிடிக்கறதில் பெரிய மகிழ்ச்சி அடைகிறான். கடைசியாகப் பாலச்ந்திரனைக் கண்டு இளம்வயதில் இருவரும் கழித்த நாட்களை நினைவூட்டும் கதைசொல்லியை நோக்கிப் பாலசந்திரன் தனக்கு யுத்தத்தில் இடப்பெயர்வு ஏற்பட்டதாலும் யுத்தத்தின் விளைவாலும் ஞாபகமறதி அடிக்கடி ஏற்படுவதைக் கூறி தன் வாழ்வின் துயரை மறைமுகமாய் தெரிவிக்கிறான். கதைசொல்லி ஜெர்மனியிலிருந்து வந்து தனது நாட்களைப் பழைய ஞாபகத்தில் திளைக்கவிட்டுத் திரும்ப நினைக்கயில் யார் மச்சான் நீஎன ஒரு கேள்வியைப் போடுகிறான் பாலசந்திரன்.

மெலிஞ்சி முத்தனின் ஒரு கதையின் பெயர் பனி மூடிய நதி‘  என்பது. வெளிநாட்டில் நடந்து திரிகிற கதைச்சொல்லி தான் எதற்கு வீட்டிற்குப் போகவேண்டும் என்று யோசிக்கிறான். நிலம் முழுக்க பனி கொட்டி வெள்ளை வெளீரெண்டு கிடக்கேக்க ஏதோ ஒரு பிரச்சினையுமில்லாத வெள்ளை உலகத்தில் நடந்து திரிகிற உணர்வு தான் எனக்குள வருதுஎன்று கூறும் கதைச்சொல்லி தன் கிராமத்தை நினைக்கிறான். பள்ளிக்கூட நாட்களில் அவனும் அம்மய்யாவும் சேர்ந்து காணி துப்புரவாக்கியதும் அவர் ஆசீர்வதித்துத் தந்த உப்பை மோட்டுவளையில் கட்டியதும் ஞாபகம் வருகிறது. சிவன் கோயிலடியில் ஆமிஇறங்கி வாறான் என்று கேட்டு இடம் பெயர்கிறார்கள். கடைசியில் அம்மய்யாவின் மனப்பிறழ்வுடன் தன் வாழ்க்கையும் ஒரு மனப்பிறழ்வுதான் என ஞாபகம் கொண்டு கதை முடிகிறது.

ஷோபாசக்தியின் லைலாஎன்ற கதையும் தனது நாட்டைப்பற்றிய ஞாபகத்தில் புனையப்பட்ட ஒரு கதைதான். இந்தக் கதையானது கதைசொல்லியின் புலம் பெயர் வாழ்க்கையைப் பற்றிக்கூறிவிட்டு ஈழ போராட்ட குழுக்களில் இருந்த ஒரு பெண் பற்றிய கதையைச் சொல்கிறது. “பிரான்சில் ஆப்ரிக்கர்களும் அரபுக்களும் சிந்திரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்துவாழும் பகுதியில் ” கதைச்சொல்லி பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி சுத்திகரிக்க ஆசைப்படும்பொரு நபராய் வாழ்கிறான். அவன் வாழ்வது பதின்மூன்று மாடிகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. கதைசொல்லி ஒருநாள் வெள்ளை நாயுடன் ஒரு பெண்னை லிப்டில் பார்க்கிறான். பின்பு அவள் முன்பு ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவள் என்று கதை விரிவடைகிறது. கதை முடியும்போது இறந்து இரண்டு மூன்று நாள் ஆன பிணத்தைப் போலீஸ்வந்து எடுத்து செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு பாரிஸில் நடக்கும் ஒரு போராட்டத்தில் பிரபாகரன் படத்துடன் பிரஞ்சு மொழியில் உரக்க முழங்குகிறாள் அப்பெண். போராட்ட இயக்கம் பற்றிய கதாசிரியனின் நுட்பமான கிண்டல் வெளிப்பட எழுதப்பட்ட கதை இது. இக்கதை புலம்பெயர் எழுத்துகள் ஒரு பார்வை உடையன அல்ல என்பதை விளக்குவதுபோல் எழுதப்பட்டுள்ளது(10).

இதுபோன்று பல கதைகளாகக் கொண்டு வந்து பல மலர்களால் கட்டப்பட்ட மாலைபோல் அமைக்கப்பட்ட புத்தகமான உண்மை கலந்த நாட்குறிப்பில்ஒரு கதை எழுத்தாளரின் / கதை சொல்லியின் தந்தை சொன்ன ஒரு வாசகத்தை மையமாக்குகிறது. இலங்கையில் மவுண்லவினியா என்ற, கொழும்புவிற்குச் சற்று தூரத்தில் இருந்த ஊரில் 1958ம் ஆம் ஆண்டு மே மாதம் பண்டாரா நாயக்கா தனிச் சிங்களம் சட்டத்தைக் கொண்டு வந்ததால் அதனைத் தமிழர்கள் எதிர்த்த போது நடந்த கலவரத்தில் கதை சொல்லியின் குடும்பத்தை ஒரு சிங்கள்வர் பாதுகாக்கிறார். பின்பு கதைசொல்லியின் குடும்பம் அகதி முகாமுக்குப் போகிறது. சிறுவனான கதைசொல்லிக்குக் கிடைத்த நான்குபேர் நுழையக்கூடிய பெரிய சட்டையுடன் முகாமில் தஞ்சமடைகிறான். பின்பு நாலுநாள் கப்பல் பயணம் செய்து “தங்கள் தேசத்துக்குச்” (யாழ்ப்பாணம்) செல்கிறார்கள். கதை சொல்லி தான் அகதிமுகாமுக்கு விரட்டப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட ராபின்சன் குருசோ நாவலைக் கப்பல் சத்தத்துக்கிடையே படித்தபடி இருக்கிறான். குருசோ தனியாய் தாஅள் இல்லாத தீவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவன். மீண்டும் கதை சொல்லி கொழும்புபோகப் புறப்படுகையில் அவரது தந்தை ஒருதடவை அடித்து ருசிகண்டவன் திரும்பவும் அடிப்பான். இது பாதுகாப்பான நாடு இதை யாரும் பறிக்கமுடியாது என்கிறார் யாழ்ப்பாணம் பற்றி.  கதை கேர்ணல் கிட்டு விளக்கத்துடன் முடிகிறது. கதையின் தலைப்பு “ஐயா சொன்னது” .

இங்குக் குறிப்பிடப்பட்ட நான்குவித கதையுண்மைகளிலும் பல்விதமான கருத்தம்சங்கள் பின்னியுள்ளன. “சிநேகிதனைத் தொலைத்தவன் கதையில் ஞாபகம் பற்றிய உள்ளடக்கத்தோடு புலம்/பிறப்பிடம் என்ற எதிரிணை தொடர்பு கொள்கிறது பிறப்பிடத்தின் யுத்தம் பின்னணிக் கரு ஆகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை புலத்தில் ஏற்படும் நினைவுப்பிறழ்வுடன் பிறப்பிடத்தின் கொடூர யுத்தத்தால் ஏற்படும் அம்மபய்யனின் நினைவுப் பிறழ்வுடன் சம்பந்தப்படுகிறது. “லைலா” கதை இன்னும் சுவாரஸ்யமாய் யுத்தத்தில் (ஓர் இயக்க செயல் பாட்டாளியாய் இருந்ததால்) இலங்கை நாயகி தன் அழிவை உள்ளேற்று ஒரு நாள் பாரிஸின் ஒரு மூலையில் கதைசொல்லியின் கேலிக்குள்ளாகிப் பிணமாய் நாறுகிறாள். முத்துலிங்கம் கதையில் கதைசொல்லியின் ஞாபகத்தில் ஐயா சொன்ன வாக்கியம் அடிப்பதில் ருசிகண்டவன் நிறுத்தமாட்டான் என்பது தனது தாயக நினைவாகிறது. எல்லா கதைகளிலும் (ஜெர்மனி-ஈழம்; கனடா-ஈழம்; பிரான்சு-ஈழம்) இரு நாடுகளுக்கு மத்தியில் அலைபடும் நினைவு-நினைவினமை, உடல்(புலத்தில்) – உயிர் (ஈழத்தில்) என்ற இரு முக மன முரணில் (Tension) ஏற்படும் பலவித இழைகள் கதையாடலாகின்றன. கோட்பாட்டளவில் அறிஞர்கள் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் மனமுறுகல், உரையாடல் தீர்வுகள் (Negotiation) என்று விவரணப் படுத்தப்படும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களில் எவ்வாறு இன்னும் ஆழம் பெறுகின்றன என்பதை இந்த நான்கு கதைகளை உதாரணமாய் வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

வேறுபட்ட புலம் பெயரியம்

புலம்பெயரிய இலக்கியம் (Diaspora or Transnational Literature) என்று தமிழ்ச்சூழலில் வழக்கமாய் பேசும்போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்துக்களை மட்டுமே மனத்தில்வைத்து எழுதுகிறார்கள். இன்றைய தமிழ் எழுத்துச் சூழல் மிகவும் ஆழமானதாகவும் அகலமானதாகவும் உள்ளது. தமிழ்த்துறைகள் பழைய இலக்கியங்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்தும் தற்கால இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து செயல்படுவதால் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் பற்றிய அறிமுகம் இல்லாதிருக்கும் சூழலில் இரண்டு முக்கியமான புலம்பெயர் எழுத்தாளர்கள் காஞ்சனா தாமோதரன் மற்றும் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவர்.

இவ்விருவரும் முற்றிலும் வேறுபட்ட புலம்பெயர் அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தின் கலாசார மற்றும் எழுத்துச்சூழலைப் பெரும்பாலும் உள்வாங்காமல் புலம்பெயர்ந்தபின்பு ஏற்பட்ட பன்முக உந்துதலில் இருந்து இலக்கியத்தை ஒரு வாழ்நிலைச் சட்டகமாய் (Life Paradigm) இயல்பில் கண்டிருப்பவர்கள். இது இவர்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்று தருகிறது. ஈழத்தவர்களின் புலம்பெயரியம் வேறு, இவர்களின் புலம்பெயரியம் வேறு என்று சொல்லுமளவிற்கு இவர்களின் எழுத்துக்களின் தத்துவ பின்னணி மாறுபட்டதாகவுள்ளது.

முதலில் இவ்விருவரின் புனைகதைகளின் ஒட்டுமொத்த வடிவமைப்பே வித்தியாசமாகவுள்ளது. காஞ்சனா அவர்களின் “மரகதத்தீவு” என்ற கதைத் தொகுப்பும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஒரு நாவலும் (மாத்தா ஹரி) இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்களின் புலம்பெயர்க் காரணமும் வேறு. தாயகத்தில் எந்த இனயுத்தமுமில்லை. இவ்வாறு முற்றிலும் வேறான புலம்பெயரியம் இவர்களின் வாழ்விலும் எழுத்திலும் காணப்படுவதை மறக்காமல் இவர்கள் எழுத்துக்களைப் பார்க்கவேண்டும். இலக்கியம் என்பது எழுதப்பட்ட பிரதி(written text) மாத்திரமே என்ற நிலைபாட்டை புலம்பெயரிய ஆய்வாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும். இலக்கியத்தையும் வாழ்வையும் சேர்த்து ஒரு பிரதியாகக் கருதி அணுக வேண்டும். இலக்கியம் எழுத்துக்கு வெளியில் வந்து பரவுகிறது. வாழ்வால் அது ஒரு புதுத் தன்மை அடைகிறது. அது ஒரு நிகழ்த்தலாகிறது.

மரகதத்தீவு” தொகுப்பில் புலம் எவ்வாறு கட்டமைக்கபடுகிறது? அத்தொகுப்பின் ஐந்து நீண்ட கதைகளும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்து ஆவணமாகத் தெரிகின்றன. “மரகதத் தீவு” என்ற 42 பக்கக் கதையும் ஒரு மிக வித்தியாசமான கதைசொல்லலை அறிமுகப்படுத்துகின்றன. கெல்லி என்ற இளம்பெண் அமெரிக்காவுக்கு அயர்லாந்திலிருந்து  வந்து குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்து பிறந்தவள். அவள் கீழ்நிலைப் படிப்பை முடித்துவிட்டுப் பல்கலைக்கழகத்துக்குப் போகையில் தந்தை வாங்கிக்கொடுத்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி அயர்லாந்து செல்கிறாள். அந்த  மண்ணையும் தன் தந்தையின் குடும்பத்தையும் முதன்முதலில் பார்க்கும் பரவசய்த்தையும் அங்கு அவள் கண்டு லேசாகக் காதல் கொண்ட இளைஞனை மீண்டும் அமெரிக்காவில் காண்பதையும் கதை கூறுகிறது.

அடுத்த கதையான கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியில் வாழ்ந்த க்யூபர்களைப் பற்றியது. ஒபாமாவுக்கு ஓட்டுப்போடும் தலைமுறையைச் சார்ந்த கூப இளைஞர்களும் இளம்பெண்களும் பிறந்த பிறகு மீண்டும் புரத்ட்சிகர க்யூபாவைத் தேடிச்செல்லும் க்யூபர்களையும் படம் பிடிக்கிறது கதை. அவர்களின் பழக்க வழக்கங்கள், சாப்பாடு; நம்பிக்கை, ஆட்டம் பாத்தம் என எல்லாம் மிகத் துல்லியமாய்ச் சொல்லுகிற கதை.

 இந்த இரு கதைகளையும் சொல்வதற்குக் காஞ்சனா இரு புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் கதை வேறொரு களத்தில் புலம்பெயர்த் தத்துவத்தோடு பயணிக்கிறது. தமிழிலக்கியத்தில் ஒரு புது -இதுவரை இல்லாத அம்சத்தைத் தொட்டு ஒரு உயரத்தை எட்டுகிறது. கதை சொல்லிகளான இந்தப் பிரத்தியேகமான பாத்திரங்கள் மூலம் காஞ்சனாவும் தமிழ்க் கலாசாரத்தின் புலம்பெயர் அம்சம் பற்றிய வேறொரு விஷயத்தை நம் முன் வைக்கிறார். ஒரு எழுத்தாளர் தன் வாழ்விலிருந்து தன் மொழிக்குள் ஒரு பிரத்திதேக வழிப்பயனத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் புலன் அனுபவத்திற்குள் தன்னைப்போன்று இன்னும் சிலகாலத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்தவர்களின் உகலத்துக்குள் அவர்களிடமிருந்து வந்த ஒரு கதைசொல்லியின் மூலம் புகுகிறார். தமிழ் என்பது ஓர் உலகளாவியப் பரந்த வேர்ப்பற்றைக்கொண்டதென  சொல்லாமல் சொல்லும் கதைசொல்லலாகிறது. வெறும் எதார்த்த நடையில் புனையப்ட்ட இக்கதைகள் கண்ணுகுத் தெரியாத ஆழமான அர்த்தங்களைப் படைக்க வல்லனாவாகின்றன. இவ்விரு வந்தேறி சமூக இளஞர்களாய், காஞ்சனாவின் உள்ளே இருக்கும் தமிழ்க்குணம் பரிவர்த்தனை அடைகிறது. தமிழ் என்பது குறுகியதல்ல. அகில உலகத்தின் மூலை முடுக்குகளிலுள்ள தாய் நிலத்துக்குத் தமிழனின் தாய்நிலைப்பற்று இட்டுச்செல்லும்  என்று கதையமைப்பு மூலம் புரியவைக்கிறார். இதில் உள்ள ஆச்சரியம் கதை எந்தக் கருத்தையும் வலியுறுத்தவில்லை. கதையின் அமைப்பே வாசகனுடன் பேசுகிறது.

மாத்தா ஹரி” என்ற நாவலின் புனைவும் ஒரு முக கதைச்சொல்லலைப் பல்வேறு தளங்களில் நகர்த்துகிறது. ஒரு தளத்தில் மாத்தா ஹரி என்ற பெயரில் அக்காலத்தில் பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளில் பேசப்பட்ட ஒரு பெண்ணைப்பற்றி விளக்குவதும் இந்த நாவலின் கதாநாயகியான பவானி என்ற வழக்கறிஞர் பெண்மணியை மாத்தா ஹரியுடன் இன்னொரு தளத்தில் ஒப்பிடுவதும் நாவல் கதைக்கு வேறு பொருள்களைத் தருகின்றன.

இந்த நாவலின் புனைவுவழியாக பல நபர்கள் பேசுகிறார்கள்; கிழக்கத்தியர் பேசுகிறார்கள்; மேற்கத்தியர்கள் பேசுகிறார்கள்; மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் பேசுகிறார்கள்; பல்வேறு காலங்கள் பிரதிக்குள் நுழைந்து பேசுகின்றன. புலம் என்பது ஒரு பெரிய வாசல்போல் திறக்கப் பல அறைகள் உள்ளே இருப்பது தெரிகிறது. ஓரிடத்தில் நாவலாசிரியனும் ஒரு பாத்திரம்போல் நாவலின் பிரதியியல் வெளியில் (textual space) நுழைந்து இப்படி சொல்கிறான்.

பவானி நீ இன்னுமா இங்கே இருக்கிறாய்? போகவில்லை?

….இது நான் கேட்கவேண்டிய கேள்வி. அகால நேரத்தில் இப்படி எழுந்து உட்கார்ந்துகொண்டு..

வேண்டுமானால் இன்னொருமுறை படித்துபார்க்கிறாயா? நீ நினைக்கிறமாதிரிதான் மாத்தா ஹரியைப் பத்தி சொல்றதான்னு குழம்பிப்போறேன்.”

இந்த இடத்தில் இருநாடுகளின் சரித்திரங்கள், கதை சொல்முறைகள், ஒரு நாட்டின் காலனியம், அதுபோல் காலனியத்திலிருந்து விடுபட்டாலும் அதன் ஞாபகத்திலிருந்து விடுபடாமை, காலனியத்தின் ஆச்சரியங்கள் , ஏமாற்றங்கள், குற்றங்கள், மன்னிப்புகள் எல்லாம் கதையின் இழைகளாய் ஆகின்றன. இரண்டு தேசங்கள் வெறு வரை படங்களல்ல. அடுத்த தலைமுறையான ஹரிணி (பவானியின் மகள்) கதையை இழுத்துக்கொண்டு பல்வேறுநபர்களை ஒருமுனைபடுத்தியபடி பாரீஸில் அலைகிறாள். நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் மாறுபட்ட புலம்பெயர் இலக்கியம் உருவாவதை இங்கு அறிகிறோம். புனைவை ஒரு அந்நியப்பெண்ணின் பெயரில் மையப்படுத்தி நாவல் அவள் பெயரான மாத்தா ஹரியைத் தலிழுலகுக்குப் பறை சாற்றுகிறது. காஞ்சனாவின் புலம்பெயரியம் ஒருவிதமென்றால் இருநாடுகளை ஊடாடவிட்டுக் கதையமைப்பைக்கொண்டு வந்த நா.கிருஷ்ணா இன்றும் ஒரு காலை பாரீஸிலும் இன்னொரு காலை புதுச்சேரியிலும் ஊன்றியுள்ள தமிழினக் கதையாடலைத் தருகிறார்.

காஞ்சனா தன் கதையாடலை ஓர் உலகப் பொது ஓர்மையோடு (எல்லோரும் வந்தேறிகள்) இணைக்கிறார். தன்னதிலிருந்து பிறத்தியாரை நோக்கிய அக்கறை அங்கு முகிழ்க்கிறது ஆனால் நா.கிருஷ்ணாவிடம் தனதும் பிறரதும் பின்னிப் பிணைந்திருக்கும்  எதார்த்தத்தின் பல்வேறு கண்ணிகள் முடிச்சவிழ்ப்பதற்காய் வேண்டுகோள் விடுக்கின்றன. புலம்பெயரியம் எவ்வளவு வேறுபட்ட உலகத்தையெல்லாம் திறந்து விடுகின்றது என்று ஆச்சரியப்படுகிறோம்.

புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளனின் கதைகளில் தன் தாய் நாடு பற்றிய தேட்டம் அவனை முதுகுக்குப் பின்னாலிருந்து தள்ளி உந்துவதுபோல இன்னொரு அம்சமும் அவனை விரட்டுகிறது. தனது அன்றைய வாழ்நிலையோடு பிணைந்திருக்கிறது எதிர்காலம், எனவே சென்ற நாட்டை அறிந்துகொள்ளவும் தனது வாழ்வை வளமாக்கவும் விரும்பும்போது அந்த மண்ணில் காலை ஊன்ற விரும்புகிறான். அதனால் ஒன்று சேர்ந்த மண்ணையும் அவனால்/ அவளால் விட்டுவிட முடியவில்லை. பொ. கருணாகரமூர்த்தியின்  “ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்” என்றொரு கதையும் “முட்டர்பாஸ்”  என்ற ஜெர்மன் மொழித் தலைப்பைக்கொண்ட கதையும் ஜெர்மன் நிலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கதையாக வனைகின்றன. முதல் கதை ஒரு நகைச்சுவைக்குரிய வெளியைத் (space)  தன் எழுத்தில் ஏற்படுத்துகிறது. இது தன் தாயகத்தைத் தவிர எதுவும் தெரியாமல் புலத்தில் வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை  மறுக்கிறது. கஞ்சத் தனத்துடன் வாழும் ஜெர்மன் வகுப்புத் தோழி பற்றி ஒரு ஈழ மாணவி (காருண்யா) ஞாபகப்படுத்துவதுபோல கதை அமைந்திருக்கிறது. காருண்யா ஈழக்குடியேறியின் மகளாய் ஜெர்மன் மாணவியைக் கஞ்சத்தனமானவள் என்பது புலம்பெயர்ந்தவர்கள் தமக்கான ஒரு வெளியை (நகைச்சுவை உணர்வுடன்) உருவாக்குகிறார்கள் எனக் காட்டுகிறது. மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” என்ற கதை “எனது ஆடைகளைக் களைந்தார்கள்; நாக்கை உயர்த்தி ஆவெனும்படிக் கட்டளையிட்டார்கள்…” என்று தொடங்கி, ஐரோப்பாவில் தான் எப்படி அலைய நேரிட்டது எனக்கூறும் பாத்திரத்தை மையமாகக்கொண்டு விளக்குகிறது. பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ என்று அலைகிற புலம்பெயர்ந்த அகதி வாழ்க்கையைக் கூறுகிறது. நான் படுத்து கிடக்கிறேன் எனது மார்பகங்கள் வீங்கிக்கொண்டே வருகின்றன. எனது ஆண்குறியின் கீழே ஒரு பெண்குறியும் முளை விடுகிறது..என்று கதைசொல்லி பாலின அடையாளமற்றவனாக மாறுகிறான்.

புலம் பெயர்ந்தவன் தன் தாயை நினைப்பதுபோல் தாய் மண்ணை நினைக்கிறான். அப்படி புலம்பெயர்ந்தும் தன் தாய் மண்ணைப்பற்றி எழுதாத எழுத்துகளில் ஒன்றில் நகைச்சுவை தோன்றுகிறது. அல்லது கதை சொல்பவனின் உடல் ஆணாகவும் பெண்ணாகவுமின்றி மாற்றமடைகிறது.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலை பயணம்” என்றொரு கதையைக் காஞ்சனா தாமோதரன் எழுதுயுள்ளார். இக்கதையையும் ஆசிரியரின் உள்ளடக்கக் கவனம் பிற கதைகள் போல் ஐயர்லாந்து என்றோ க்யூபா என்றோ இல்லை. இக்கதைஆசிரியர் வாழும் அமெரிக்கா பற்றிய கதை. சுமார் 50 பக்கங்களுள்ள இக்கதை நியுயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துபோன மணி என்பவனின் காதலி மனைவியின் அனுபவமாய் விரிகிறது. அவள் ஓவியம் வரைபவள். அவள் அமெரிக்காவின் உடப்பரப்பையும் காலத்தின் நீட்சியை அளந்து அதன் ஆதிவாசிகள் மூகம் அம்மண்ணின் ஆதியையும் தொடுகிறார். பழையனவும் புதியனவுமாய் எல்லாரின் கடவுள்களும் கை கோர்த்து உலாவுகிற அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 11 மீண்டும் வருகிறது. இந்தியப் பெண் தனது அமெரிக்கா வாழ் புலம்பெயர் வாழ்வில் ஓரளவு அமெரிக்கனாகி விடுவதாய்  நம்மைப்போன்ற  இந்தியர்களுக்குப் படும்போது கதை முடிகிறது. அல்லது அயர்லாந்து கதைசொல்லியாக மாறும் தமிழ் மனம் அமெரிக்கனாக/ளாக மாறுவதில் முரண் ஏதும் இல்லை என்று கூறலாமா? ஆனால் கதை எழுத்து அசாத்தியமான வலுவுடன் அமைந்து நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

முட்டர்பாஸ்என்ற கதையில் மகிமாவும் ஆனந்த சிவனும் கணவன் மனைவியாய் வாழமுடியாமல் பிரிகிறார்கள். அவர்களின் இருபெண்குழந்தைகள் தந்தையோடு ஒரு கார் சவாரி செய்கின்றனர். குழந்தைகள் பிங்கலையும்  சாதனாவும் வழியில் போகிற அதியுல்லாச டிரக் வண்டியை ஜெர்மன் மொழியில் திட்டுகின்றன, பிரிந்துபோன அம்மா கொடுக்கும் இட்லியைச் சாப்பிட்டுவிட்டுப்போகலாமா எனத் தொலைபேசியில் பிங்கலை கேட்கிறாள். ஆனந்தகுமார் சரி என்ற பின் புறப்பட்டு பயணம் வரும் வழியில் குழந்தைகளிடம் ஒரு ஆண்ட்டியுடன் பேசிவிட்டுவருகிறேன் என்று கூறி அவன் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கிறான். அவள் இவன் பெயரின் அர்த்தம் பற்றிக் கேட்டபோது சதா உல்லாசமாக இருப்பவன் என்று கூறி அவள் உடலைச் சேர்த்து இறுக்குகிறான். பின்பு அவனது மகள் தாய்க்கு இவன் மூலம் பிறக்கப்போகும் மூன்றாவது குழந்தைக்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கேட்கச்சொல்கிறாள் என்கிறாள்.. அதற்குப் பார்க்கலாம் என்கிறான் ஆனந்த சிவன்.

இங்குப் புதிய நாட்டின் மூலம் தமிழ் பண்பாட்டில் வந்துசேரும் முற்றிலும் புதிதான வாழ்க்கைமுறையும் ஆனந்த சிவனின் குழந்தைகளிடம் அவன் காட்டும் சாவகாசமும் பொ.கருணாகர மூர்த்தியால் எழுதப்படுகின்றன. மொத்தத்தில் இந்த கதை உலகத்தில் ஜெர்மன் மாணவியின் கஞ்சத்தனம், ‘வேருலகுகதையின் ஆண்-பெண் பாலின மாற்றமாய் விளக்கப்படும் அலைதல், ‘முட்டர்பாஸ்கதையில் வெளிப்படும் புதிய தாம்பத்தியம், நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்த கணவைன் துக்கம் தாளாமல் அமெரிக்காவை அதன் ஆதிக்குடிகளின் வழி தன் ஓவிய மனத்தில் பதிவு செய்யும் தமிழ்ப்பெண் – இவர்கள் எல்லோரும் தங்கள் பிறந்த இடத்திலிருந்து கொண்டுசென்றவற்றை(பழக்கமாகவோ, நியதியாகவோ, விழுமியங்களாகவோ, நாகரிகமோ இருக்கலாம்) மட்டும் மீண்டும் வாழவில்லை. இவர்கள் சென்ற இடத்தில் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறார்கள். ஏதோ ஒரு புது அம்சத்தை தம்முடையதாகப் படைத்திருக்கிறார்கள். தாம் கொண்டுவந்ததும் அங்கு பெற்றதும் ஓர் உற்பத்திப் பண்பை பெற்றுள்ளன. பழைய உலகமும் புதிய உலகமும் இங்கு ஓர் உரையாடலை மேற்கொள்கின்றன. 21ம் நூற்றாண்டில் தமிழுலகம் விரிவடைந்து  அகில உலக நாகரிகத்தில் தனக்கும் ஒருபங்கு இருக்கிறதென காட்டுகிறது. யாப்பு உடையாக் கவிதையைக் கைவிட்டு புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டதுபோல் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பேசிய சமூகம் உலகின் எல்லா தலை நகர்களிலும் தன் காலைவைத்து நடமிட ஆரம்பித்துள்ள போது அதுவரை நினைத்து பார்க்காத வாழ்வை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. இச்சமூகம் அதற்குத் தயார் என்று கூறுகிறது.

இத்தகைய புலம்பெயர் எழுத்தாளர்கள் தம் தாய்மண்ணைப் பற்றி எழுதாதபோது வாழ இடம் கொடுத்த நாட்டைப்பற்றி எழுதுகிறார்கள். முட்டர்பாஸ்கதையில் நிறைய ஜெர்மன் மொழி சொற்களும் வாக்கியங்களும் வருகின்றன. அதுபோல் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் நிறைய பிரெஞ்சு மொழி சொற்களும் வாக்கியங்களும் உள்ளன. இது தமிழ் மொழி அமைப்பையும் அதன் உலகப்ப்ரவலின் போது ஏற்படும் உலகமொழிப் பாதிப்பையும் காட்டுகின்றது. இப்படி மெதுமெதுவாகத் தமிழ் பேசப்படும் மனங்களில் புதிய உலக, மொழிஅனுபவக் கூறுகள் நுழைவது ஆய்வுக்குறியதாகும். அதுவும் சமஸ்கிருதம், பர்ஷியன், அராபிக், ஆங்கிலம் என்ற வரிசையில் இப்போது ஜெர்மனும் பிரஞ்சும் சேர்ந்துகொள்கின்றன. அமெரிக்கா வாழ் காஞ்சனா கதையில் ஆங்கில மொழி எழுத்துக்கள் கதைக்குள் வருவதற்குப் பதில் கதையாடலில் உடலுக்குள் கதைவித்தை மூலம் அமெரிக்கா மனத்துள் நடத்தும் பாய்ச்சல் கவனிப்புக்குரியதாகும்.

இன்னொரு சிந்தனையாகப் புலம் பெயர் எழுத்துக்களில் காணப்படும் தாய் நாட்டின் அழிவு என்னும் ஒருவகை பேரழிவு சார் உருவகம் (Holocauste Trope) பற்றிக் குறிப்பிடவேண்டும்^. இது பொ.கருணாகரமூர்த்தியின் பதுங்கு குழி‘  என்ற கதையில் வெளிப்படுகிறது. சிங்களப்படைகள் பதுங்கு குழியில் யுத்தத்திற்குப் பயந்து ஒளிந்த மக்களை மண்போட்டு புல்டோசரால்மூடி நிரவிவிட்டு அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடியது என்ற வாக்கியத்தில் கதை முடிகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை (“பேர்த்தோக்கள் எப்போதாவது வருகிறார்கள்”) பிரேதங்களுக்கு வாழ்வுபற்றிய பயம் இருக்காதென்னும் நினைப்பு எனக்குள்ளிருந்து எழுவதால் நான் இன்னமும்  பிரேதமாகவில்லையென நினைக்கிறேன்என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது.  அதிகமும் கதை அம்சம் இல்லாத கதை இந்த ஈழ எழுத்தாளரின் மன நெருக்கடிபோல்  பசி மற்றும் பிணங்கள்  என்ற இரண்டு நினைவுகளையே சுற்றிசுற்றி வருகிறது. நான் மரணித்த பின்னர்என்னுடலைத் தின்பீர்களா? என்று கேட்கும் கதை சொல்லியின் குரல் தெளிவடையும்போது புலத்திலிருந்து இங்கே இப்பொ பத்து மணியாக இருக்கலாம் ஈழத்தில் இரவாக இருக்கும்என்று பிறந்த மண்ணின் காலத்தைத் தன் ஆன்மாவிலிருந்து மறக்க முடியாமல் நினைக்கிறது. கடைசியாக யுத்தங்களை நிறுத்துங்கள்‘  என் குரலை தயவு செய்து மொழி பெயருங்கள், மனித இனம் பிரபஞ்ச பேரியக்க பெருவட்டத்தின் சத்திய ஞான தளத்தில் பரிணமிக்க வேண்டியிருக்கிறதுஎன்ர விண்ணப்பத்தை முன்வைத்து கதை முடிவடைகிறது. இது கதையா கதைபோன்ற மனதின் கூக்குரலா என்று கூறமுடியவில்லை. அதாவது மெலிஞ்சி முத்தனின் சிறுகதை வடிவம் உணர்ச்சிக்கொந்தளிப்பால் வடிவ ஞாபகத்தை மீறியே செல்கிறது. இதுபோல் ஊரின் யுத்தத்தைப் புராண படிமங்கள், பேய்கள், ராட்சசர்களை ஞாபகங்களாகப் பார்க்கிர வேறு கதைகளையும் இவர் எழுதுயுள்ளார். (பார்க்க: கூட்டிச் செல்லும் குரல்‘(11) . பேய்களுக்கும் யுத்தத்துக்கும் உள்ள உறவு புறநானூற்றிலிருந்தும், கலிங்கத்துப் பரணியிலிருந்தும் தொடர்கிறது. இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் காஞ்சனாவின் ஒரு கதை ஏற்கனவே பார்த்ததுபோல் தாய்நாடுபற்றிய விபரீதத்தை ஈழத்திலிருந்து சென்றவர்கள் பேசுவதுபோல் புகலிட நாட்டின் இரட்டைக் கோபுரத் துயரத்தை கதை வடிவமாக்கியிருப்பதாகும். அதாவது புகலிட ஞானத்தில் (Expatriote Memory) இந்த பேரழிவு உருவகம் தவிர்க்கவியலாததாக இருக்கிறது.

இலக்கிய கதையாடல் வழி உணர்வுருவங்கள்

இனி இத்தகைய இலக்கிய கதையாடல்கள் (Literary Narratives) வழியாக ஊடி பரவிச் செல்லும் உணர்வுருவங்கள் பற்றிய விளக்கத்துக்குப் போகவேண்டும். பல இலக்கிய பிரதிகளில் ஒருவிதமான தோற்றம் தேடுதல் (search for the origin) உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் வரும் ஹரிணி பாரிஸில் இயற்கையாய் தன்னை இடம் பெயர்த்து வைக்கிறாள். அவளுக்கான தோற்றம் புதுச்சேரியில் உள்ளது. தன் தாயையும் அவளது வரலாற்றையும் மாத்தா ஹரியைப் பற்றி ஐரோப்பா தேடுவதுபோல் தேடுகிறாள். கடைசியில் கிருஷ்ணாவின் கதையாடல்தான் அதன் மூலம்-தோற்றம் என்று வாசகர்கள் நம்பும்படி கதை முடிகிறது. ஹரிணி தேடுகிறவளும் தேடப்படுகிரவளுமாகிறாள். அ. முத்துலிங்கத்தின் கதைசொல்லி தனது தன்மையை (அகம்-நான்) மீண்டும் மறு கட்டமைப்பு(Reconstitue) செய்ய முடியாமல் அமைவதால் வெறும் உதிரி நாட்குறிப்புகளாகவே முடிக்கிறார். தன் தோற்றம் (நாடு) பற்றிய கண்டுபிடிப்புத் தனது நாவலெழுத்தாய் மாறுகிறது. எஸ்.பொ.வின் எதிர்வரலாறு (Anti-history)  அதீத சக்தி படைத்த மருந்து ஒன்றால் வரலாறு கடந்து எப்போதோ இறந்துபோன மனிதர்களோடு உரையாடல் மேற்கொண்டு மனம் மகிழ்கிறது.  அதாவது எதார்த்தமும் புனைவும் மீண்டும் மீண்டும் வித்தியாசமில்லாமல் இணைகின்றன. இந்த இடத்தில் காஞ்சனாவின் இதுவரைக் குறிப்பிடாதக் கதையைக் கொண்டுவரவேண்டும். “சியர்ரா நெவாடா”  என்ற தலைப்பு கொண்ட கதையில் பனிமலையேறும் உள்ளடக்கம் வருகிறது. பல நூறுவருடங்களுக்கு முன்பு மலையேறிய ஒரு பெண்ணின் உடல் பனிக்கிடையில் கண்டுபிடிக்கப்டுவது கதையாகிறது. நவீனகாலத்தைச் சேர்ந்த ஒருவன் கடைசியாய் வந்து பார்க்கும்போது குகைக்குள் பெண்ணுடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட பைக்குள் ஒரு காகிதப் புத்தகத்தில் பழைய ஆங்கில எழுத்துரு காணப்படுகிறது. அங்குக் கிடப்பவள் பனிக்கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண். இந்தக் குறிப்பிட்ட மலையுச்சியில் நீர் வீழ்ச்சி இருந்திராத காலத்தைச் சார்ந்த பெண் அவள். நிலம் கண்டங்களாய் பிரிந்து கிடந்த காலத்தைச் சார்ந்த பெண். அதாவது இக்கதையின் முக்கியத்துவம் ஒரு மிகப்பழைய பெண்ணின் கோணத்தில் கதைச்சொல்லி கதையை அமைத்ததாகும். புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் தன் நாட்டின்  மொழியின் பழமையைத் தன் கதையின் கதைசொல்லிக்கு மறு அடையாளமாய் (Made-up Identity) வழங்கியுள்ளார். தோற்றத்தைத் தேடுதல் என்பது புனைவு தந்திரோபாயமாகிறது.

முடிவுரை

இதுவரை பார்த்தக் கருத்துகளிலிருந்து அகில உலகச் சிக்கல்கள், நாகரிகப் போக்குகள், மனோநிலைகள் போன்றவை சார்ந்த அளவைகள் தமிழின் வழியும் செல்லக்கூடியனவாக உள்ளன என்றறிகிறோம். தமிழ்ச் சமூகம் எங்கோ தென்னாசியாவின் ஒரு மூலையில் தன் பழமை என்னும் ஓட்டுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உள் சுருங்கி தனக்குள் மட்டும் பார்த்துக்கொண்டு முடங்கிப்போன சமூகமல்ல என்றறிகிறோம். ஐயர்லாந்தின் பிரச்சினையும் பிரான்சின் பிரச்சினையும் க்யூபாவின் பிரச்சினையும் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் கொண்டிருப்பதுபோல் தமிழ் பேசுவோரின் பிரச்சினையும் இவற்றோடு இணைகின்றன. தன் சமூக அழிவு விபரீதத்தை மறக்க முடியாவிட்டாலும் புதிய -தனது கலாசாரத்துக்குச் சம்பந்தமே இல்லாத – சமூகங்களோடு உரையாடத் தமிழ் சமூகம் கற்றுள்ளது என்பதை அறிகிறோம். பிறரைக் கேலிசெய்வதுபோல் தன்னையும் கேலிசெய்யக் கற்றுகொண்டுவருகிறது இச்சமூகம் அந்த வகையில் முட்டர்பாஸ்காதை பல பிரச்சினைகளோடு முகம் கொடுக்கிற கதையாகிறது.

தனது பழமையான மொழியைவைத்துக்கொண்டே மிக நவீனமான சமூகங்களில் கண்டுகொண்ட மொழிச்சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமல்லாமல் நினைவுகளையும் விழுமியங்களையும் அறிய முயல்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தமிழிலக்கிய உலகில் அதிக பிராபல்யம் பெறாததும் நம் விவாதத்துக்கு உட்படவேண்டும். தமிழ் சினிமா அளவு இன்னொரு கலை வெளிப்பாடான தற்கால இலக்கியம் தமிழர்களிடம் கால் கொள்ளாததோடு  அனைத்துலக அடையாளங்களையும்  சிக்கல்களையும் பற்றிப் பேசும் உலக மட்டத்தில் அமைந்துள்ள காஞ்சனா மற்றும் நாகரத்தினம் எழுத்துக்கள் தமிழர்களாலேயே கண்டுகொள்ளபடாதிருப்பது நமக்கு வியப்பைத் தரலாம். முத்துலிங்கம் மற்றும் எஸ்.பொ. எழுத்துக்கள் ஈழ வாசகர்களிடமின்னும் அதிக பிராபல்யம் பெற்றிருக்கின்றன என்ற கூற்று உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதாகும்.

இன்று அகில உலகமும் வர்த்தக அடிப்படைகளை அடையாள அடிப்படைகளாக மடைமாற்றிச் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆஸ்லோவில் நடந்த ஓர் இளைஞனின் செயல் உலகைத் திகைக்க வைத்துள்ளது. மரபான சமூகங்கள் இருக்கக்கூடிய நாடுகளில் இனங்கள், மதங்கள், மொழிகள் எவ்வாறு ஒன்று இன்னொன்றோடு இணைந்தும் பிணக்குண்டும் செயல்படுகின்றன எனவும் இவற்றிற்கிடையேயுள்ள இயக்கியலும் ஆயப்படுகின்றன. இந்த ஆய்வும் அத்தகையதே.

குறிப்புகள்

 1. Appadurai, arjun Ed. Globalization, Duke University  Press 2001

2. தாமோதரன், காஞ்சனா, மரகதத்தீவு, உயிர்மை, 2009

3. கிருஷ்ணா, நாகரத்தினம், மாத்தாஹரி, எனி இந்தியன் பதிப்பகம் 2008

4. முத்துலிங்கம்.அ. உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை 2008

5. பொன்னுதுரை எஸ். மாயினி, அர்ச்சுனா பதிப்பகம் 2007

6. ஷோபா சக்தி லைலா காலம் 36 2010

7. கருணாமூர்த்தி பொ. பதுங்குகுழி, உயிர்மை 2009

8. முத்தன், மெலிஞ்சி வேருலகு, உயிர்மை 2009

9. Anderson, Benedict Imagined communities, Verso

10. ஷோபா சக்தி லைலா காலம் 34 2010

11. காலம் 34, 2010

————————————————————

 

 

 

முனைவர் க.பஞ்சாங்கம்

 Senji -5 JPGமுனைவர் க.பஞ்சாங்கம்:

நண்பர் முனைவர் வெ.சுப்புராயநாயக்கரின் அறிமுகத்தால் வாய்த்த பேறு. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன்.  அறுபது வயதில் உறவுகள், நண்பர்கள்  கடந்தும் மறந்தும் வந்திருக்கிற பாதையைப் பார்க்கிறேன். இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. திராவிடக் கட்சிகளின் வேடதாரிகள் அதிகரித்த நிலையில் துக்ளக் சோ, ஸ்தாபன காங்கிரஸ் என்று ஒதுங்கினேன். இன்றைக்கு எந்த அரசியலும் உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி  எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் க.பஞ்சாங்கம். அவரது எழுத்துக்களை ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா  என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை.  நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளும், திறனாய்வு கட்டுரைகளும் கைக்கு கிடைத்துள்ளன வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு, அவை அடக்கமல்ல உண்மையும் அதுதான் என்பதால் அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் (நாவல், கவிதைகள்) பஞ்சாங்கமென்ற பிரபஞ்சம் என்றொரு தொடரை ஜனவரியிலிருந்து எழுத இருக்கிறேன். வேறு நல்ல தலைப்பு கிடைத்தால் அது மாறவும் கூடும்.

—————————-

மொழிவது சுகம் நவம்பர் 22 – 2013

கடந்த வாரம்?

கடந்த 3  ஆண்டுகளாக பாரீஸிலுள்ள ‘les comptoirs de l’Inde’  சங்கத்தினர் இந்திய புத்தக விழா என்ற ஒன்றை நடத்திவருகிறார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி. சனிக்கிழமை (16 நவம்பர்)அதில் கழிந்தது. மகன், மருமகள், பேரன் இளையமகள் என்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி பாரீஸில் இருக்கிறது.  நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் மூவருக்குப் பிறந்த நாள்  அதில் இருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதனை விமரிசையாக கடந்த ஞாயிறன்று பாரீஸில் கொண்டாடினோம். பேரன் உடல் நலம் சரியில்லாததால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது. எதிர்வரும் ஜனவரி 20, 21,22 தேதியில் கோவையில் தாயகம் கடந்த தமிழ் என் பெயரில் மாநாடொன்றை நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சிக் குழுவில் எனக்கும் இடம் அளித்திருக்கிறார்கள், கட்டுரை ஒன்றும் வாசிக்கிறேன். முதலில் எனக்கு தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும் ” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்க  கூறினார்கள், ஆனால் அமெரிக்க ஐரோப்பிய தமிழிலக்கியம் குறித்து கட்டுரை வாசிக்க இருந்த நண்பர் அதனைத் தவிர்த்ததால், அத் தலைப்பில் எனக்கு வாசிக்க சாத்தியமாவென நண்பர் மாலன் கேட்க சம்மதித்துவிட்டேன். சிறுகதைகளின் அடிப்படையில் ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களை அணுகுவது படைப்பாளிகளின் ஆளுமையை கூடுதலாக புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன். நாவல்களை வாசிக்கிறபோது எல்லோருடைய படைப்புகளும் உரிய நேரத்தில்கிடைப்பதில்லை பல எழுத்தாளர்களை தவறவிட சாத்தியமிருக்கிறது. இணையத்தில் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைப்பது மற்றொரு அனுகூலம்.

—————————————————

The Lunch Box

Lunch box

ஏறக்குறைய ஐந்து நாட்களை முழுவதுமாக வீணடித்துவிட்டு (எழுதாமல்) செவ்வாய் இரவு கிட்டட்ட ஐந்து நாட்களும் 1000 கி.மீட்டருக்கு மேல் காரோட்டிய களைப்பில் படுக்கசென்றவனின் மறுநாளும் சோர்வில் கழிந்ததென்று சொல்ல வேண்டும், கடுமையான காய்ச்சல் மனைவியை காலையில் கடையில் விட்டுவிட்டு வீட்டுக்குத்திரும்பிய பிறகு, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. வாடிக்கையாளர் ஒருவர்  The Lunch Box திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு இரண்டு அனுமதி சீட்டுகள் இருக்கிறதென்கிறார், வேண்டுமா என்று கேட்டார். திரைப்பட அரங்கில் படம் பார்த்து ஒரு மாமாங்கம் இருக்கும். எனினும் பெயரைக்கேட்டவுடனேயே காய்ச்சல், களைப்பு போயே போய்விட்டது. 2013 கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்டு தீவிர விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுதலைப் பெற்றிருந்த படம். எனவே படத்தைப் பார்த்தே ஆகவேண்டும், அழைப்பிதழைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கச் சொல் என்றேன். நேற்று மாலை ஏழுமணிக்கு எங்கள் கடைக்குசென்று அழைப்பிதழை  பார்த்தபோதுதான் டிசம்பர் 12ல் ஐரோப்பாவெங்கும் திரையிட இருக்கும் படத்தின் பிரத்தியேக காட்சி என்று புரிந்தது. படம் துவக்குவதற்கு முன்பாக படத்தின் மகாத்மியங்களை மிகையின்றி தெரிவித்த அறிவிப்பாளர் பெண்மணி, திரையிட்டு முடிந்ததும் படக் குழுவினருடன் உரையாடலாம் எனத் தெரிவித்தார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. கையில் புகைப்பட கருவி இல்லாதது ஏமாற்றத்தை தந்தது ஒரு பக்க மெனில், கைத்தோலைபேசி காமெராவை சோதித்து பார்த்தபோது பாட்டரி காலி என்றது. நொடிந்து போய்விட்டேன்.

இனி படத்திற்கு வருகிறேன்:

பம்பாய் என்றவுடன்  எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ டப்பா வாலாக்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்களைப்பற்றி முழுமையாக தெரியவந்தது, ஓர் பிரெஞ்சுக்காரர் தயாரித்திருந்த குறும்படத்தின் மூலமாக. ஒரு தேர்ந்த ராணுவப் படையைப்போல காலம் மற்றும் ஒழுங்கில் இம்மியும் பிசகாமல் இயங்கும் அம்மனித ரொபோக்களின் வினைத்திறன் கண்டு பிரம்மித்திருக்கிறேன். பம்பாய் நகரின் எஸ்தெட்டிக்கில் நீளமான சுமைகூடைகளில் பயணிக்கும் Lunch Box களும் ஓர் அங்கம். ஆனாலும் அதனை முதன் முறையாக ரித்தேஷ் பத்ரா என்ற இளைஞர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தானொரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். வாழ்க்கை என்பது எதிர்பாராத சம்பவங்களால் முன் நகர்த்தப்படுவது. ஒழுங்குடனும் தவறுதலுக்கு வாய்ப்பே இல்லை என நம்பப்படுகிற டப்பாவாலாக்களின் செயல்பாட்டில் எங்கோ ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அப்படியான தவறு நிழ்வதற்கான சாத்தியத்தையும் நடந்தால் விளைவு என்னவாக இருக்குமெனவும் இளஞர் ரித்தேஷ் மித்ரா யோசித்ததின் பலன் இத்திரைப்படம். நல்ல சிறுகதைகளில் இடையில் திடீரென்று கதையோட்டத்திற்கு முரண்படுவதுபோல ஒரு பத்தி வரும், வாசகனுக்கு அவகாசம் கொடுக்க கதையாசிரியர் இந்த உத்தியைக் கையாண்டிருப்பதுபோல தோன்றினாலும், அச்சிறுகதைக்கான பொறியே அந்த விதிவிலக்கான பத்தியில் இருக்கிறதென்பது தெரியவரும். இந்தியாவின் கோடானுகோடி மத்திய வர்க்கப் பிரிவுக்குள் ஒர் இளம் பெண் – ‘இலா சிங்'(நிம்ரத் கௌர்)கிற்கு ஏழெட்டு வயதில் ஒரு மகளும் உண்டு. அவள் குடியிருப்புக்கு மேலே வசிக்கும் ஓர் வயதான ஆண்ட்டியின் சமையல் ஆலோசனையின்படி கணவனுக்கு அலுவலகத்திற்குக் கொடுத்தனுப்ப மதிய உணவு தயார் செய்கிறாள், டப்பாவாலா வருகிறார் ஒரு பெரிய சங்கிலித்தொடர்போல பயணித்த அந்த லன்ச் பாக்ஸ் அரசாங்க அலுவலகமொன்றை அடைகிறது, மனைவியை இழந்த வயதான அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சாப்பாட்டு அடுக்கைப் பிரித்து ருசித்து சாப்பிடுவதாக அடுத்த காட்சி. வீட்டிற்கு லன்ச் பாக்ஸ் மாலை திரும்ப வருகிறது. அது காலியாக இருப்பதைப்பார்த்து அவளுக்கு சந்தோஷம். முன்னிரவு அழைப்பு மணி கேட்டு, இளம்மனைவி கதவைத் திறக்கிறாள். உள்ளே நுழைய இருப்பவன் வயதான அரசு அலுவலன் என நாம் நினைக்க அவள் கணவனாக வேறொருவனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இவள் தயாரித்து அனுப்பிய மதிய உணவை சாப்பிட்ட ஆசாமி (Irrfan Khan) வேறு ஆள் என நமக்குப் புரிகிறது. பிறழ்வதற்கு வாய்ப்பே இல்லையென நம்பப்படுகிற டப்பாவாலாக்கள் செயல்பாட்டில் தவறு நிகழ்ந்திருப்பதும் கணவனுக்குப் போகவேண்டிய லன்ச் பாக்ஸ் வேறொருவருக்குப் போய் சேர்ந்ததையும் எப்பொது அறிய வருகிறோமோ அப்போதே திரைப்படம் நம்மை அணைத்துக்கொள்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் மாடிவீட்டு ஆண்ட்டியின் யோசனையின்படி செய்த சமையல் நன்றாக இருந்ததா? எனகேட்கிறாள் அவள் செய்தனுப்பாத காய்கறியின் பெயரைக் கூறி நன்றக இருந்தது என போகிற போக்கில் கணவன் கூறுகிறான். இளம் மனவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது விளங்குகிறது. மறுநாளும் மேல் மாடி ஆண்ட்டியிடம் யோசனை. ஆண்ட்டி தனது சமையற் குறிப்பின் பலாபலனை தெரிந்துகொள்ளும் ஆவலில்,  லன்ச் பாக்ஸைப் பிரித்து உணவைச் சாப்பிட்டவனைத் துண்டுக் காகிதம் எழுதி விசாரிக்கத் தூண்டுகிறாள். முகம் தெரியாத ஆசாமியுடனான கடித உறவு லன்ச் பாக்ஸ் மூலமாக தொடருகிறது. தொடக்கத்தில் மேல் மாடி ஆண்ட்டி தூண்டுதலில் கடிதம் எழுதினாலும், பின்னர் இளம்பெண்ணுக்கும் சரி வயதான அலுவக ஊழியருக்கும் சரி அதைத் தொடர்வதற்குக் காரணங்கள் உள்ளன. மெல்ல இரு தரப்பிலும் காதற்கோட்டைவகையினாலான காதல் அரும்புகிறது. டப்பாவாலாக்கள் தவறை இருவருமே சுட்டிக்காட்டுவதில்லை. எத்தனை நாளைக்கு இப்படி எழுதிக்கொண்டிருப்பது சந்திக்கலாமே என்கிறாள். வயதான ஊழியரும் சம்மதிக்கிறார், சந்திக்க வந்த அரசு ஊழியர் தனது வயது உறைக்க, இளம்பெண்ணை சந்திக்காமலேயே, மாற்றல் கேட்டு பெற்று நாசிக் போய்விடுகிறார்

தமிழில் அடிக்கடி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். அப்படித்தான் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இர்பான் கான், நிம்ரத் கௌர், இர்பான் கானிடம் பயிற்சி பெற வரும் சித்திக் என்ற நடிகர் எவரையும் நடிகர்களாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. லன்ச் பாக்ஸ்யையும் நடிகர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேல் மாடி ஆண்ட்டியின் முகத்தை கடைசிவரை இயக்குனர் காட்டவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலில் ஆண்ட்டியாக நடித்தவரை ஏன் கடைசிவரை காட்டவில்லை எனக்கேட்டதற்கு. இயக்குனர், “பெண்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள் (மேல் மாடி ஆண்ட்டியின் கணவன் கோமாவில் இருக்கிறான், அவனைப் பராமரிப்பதன்றி அவருக்கு வேறுவேலைகள் இல்லை என இடையில் வசனம் வருகிறது)  பக்கத்து சிறைவாசியுடன் பேசுகிறபொழுது ஒரு முகம் போதும்”, என்றார். இன்னொரு ரசிகர் டப்பாவாலாக்கள் மெல்ல எண்ணிக்கையில் குறைத்துவருவதாகக் கேள்விபட்டேன், அதுவும் தவிர நவீனமயமாகிறது என நம்பப்படும் நகரத்தில் டப்பாவாலாக்கள் தொழில் நீடிக்க முடியுமா எனக்கேட்டதற்கு, இயக்குனர் கூறிய பதில்: “டப்பா வாலாக்கள் பம்பாய் வாழ்க்கையின் ஓர் அங்கம், மரபாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்குப் பழகிவிட்டது, இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார். படம் முடிந்த போது பார்வையாளர்கள் வெகு நேரம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நடிகை படத்தில் தோன்றியதைவிட மிகவும் இளபெண்ணாக இருந்தார். நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். முதல் நாள்  சென்ற லியொன் (Lyon) நகரைவிட இந்த நகரில் (Strasbourg) குளிர் அதிகம் நல்ல வேளை ஒயின் என்னைக் காப்பாற்றியது எனச்சொல்லி சிரித்தார்.

—————————————————————-