தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

 

DSC_0250

கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்

கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com):

கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் என்றால் வியக்க என்ன இருக்கிறது? வள்ளுவன் காலத்தில் ‘திருவேறு, தெள்ளியராதல் வேறு” ஆக இருந்திருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்பதுபோல மையத்தின் புரவலர் மருத்துவர் நல்ல பழனிச்சாமியும் மருத்துவர் திருமதி பழனிச்சாமியும் மாநாடு நடைபெற்ற நாட்களில் ஒரு பெரிய மாநாட்டிற்கு முதுகெலும்பாக இருந்துவிட்டு எவ்வித ஆரவாரமுமின்றி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாகக்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மக்கள் வரிப்பணத்தில் மகேசன்களாக வலம் வருகிற தமிழனத் தலைவர்களுக்கு மத்தியில் இத்தம்பதிகள் விதிவிலக்கு.

கோவை மருத்துவ மையத்தின் தலைவரும்  டாக்டர் என்.ஜி.பி கல்விநிறுனங்களின் தலைவருமான  மருத்துவர் நல்ல பழனிசாபி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ எனும் இலக்கோடு கடந்த ஆண்டு தொடங்கிய தொண்டு நிறுவனம் ‘தமிழ் பண்பாண்பாட்டு மையம்’:  நிறுவனம் தமிழ் இலக்கியம், தமிழறிஞர்கள் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறது அறக்கட்டளை உறுப்பினர்களாகவும் டாக்டர் நல்ல பழனிச்சாமிக்கு வழிநடத்துகிறவர்களாக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும், முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களும் இருக்கிறார்கள். இம்மூவர் பேராதரவுடனும் திரு.மாலன் ஏற்பாடு செய்திருந்ததே ‘தாயகம் கடந்த தமிழ்’ கருத்தரங்கு. அன்பிற்குரிய ரெ.கா. ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருந்தது.

19ந்தேதியே சென்னை வந்துவிட்டேன். நண்பர்  கண்ணன், அண்மையில் காலச்சுவடு இதழோடு தொடர்புடைய படைப்பாளிகள் பெற்றிருந்த பரிசுகளுக்காக அவர்களைப் பாராட்டும் வகையில் ஒரு சிறிய விருந்தொன்றைக்கொடுத்தார். அதில் கலந்துகொண்டு சென்னையிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. பிரான்சு நாட்டிலிருந்து வருவதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்திடம் கோயம்புத்தூர் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்திருந்தார். 20ம் தேதி காலையில் நண்பர் க.பஞ்சாங்கம் தனது மகன் வீட்டிலிருந்து சொந்த வாகனத்தில் வந்திருந்தார். அவருடனே விமான நிலையத்திற்கு சென்றேன். மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த திருவாளர்கள் எஸ்.பொ., சேரன், பெருந்தேவி, மலேசியாவைச்சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன், முனைவர் சீதாலட்சுமி  ஆகியோரைக் காணமுடிந்தது. நண்பர் பஞ்சு, எஸ்.பொ. ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்பக்கமாகச் சென்ற ஒருவர், காலடியில் பாருங்கள் கண்ணாடி கிடக்கிறது என்றார். குனிந்து பார்த்தேன். எனது மூக்குக் கண்ணாடி இரண்டாக கிடந்தது, வலதுபக்க கண்ணாடி சில்லும் கழண்டுக்கிடந்தது. பிரச்சினை புரிந்தகணம் சோர்வு தட்டியது. கோயம்புத்தூர் சென்ற உடனேயே ஏதேனும் செய்தாக வேண்டும் என நினைத்தேன். நண்பர் பஞ்சும் இது பெரிய பிரச்சினை அல்ல கோயம்புத்தூரில் சரி செய்துவிடலாம் என்றார். அவர் பேச்சு தெம்பினை அளித்தபோதிலும் உற்சாகத்தை இழந்திருந்தேன். கோயம்புத்தூர் விமானத்தில் ஏறியதும் நண்பர் பஞ்சுவும் நானும் எங்கள் இருக்கையில் அமர்ந்தபோது பக்கத்து இருக்கையில் மலேசியாவிலிருந்து வந்திருந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன். “இலங்கையில் மணியனுடன் தங்கியிருந்தேன் இரவெல்லாம் சிரிந்து வயிறு புண்ணாகிவிட்டது”, என்றார் பஞ்சு. அவர் கூறியதைப்போலவே அடுத்தடுத்து டாக்டர் கிருஷ்ணன் மணியன் கூறிய சம்பவங்களைக் கேட்டுக்கேட்டு அப்படி சிரித்தோம்.  உடைந்த மூக்குக் கண்ணாடியை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றிருந்த கவலைகளையெல்லாம், மணியன் பேச்சினால் காணாமற் போயிருந்தன.

உரியநேரத்தில் கோவைக்கு வந்துவிட்டோம். விமானநிலையத்திற்கு டாக்டர் நல்ல பழனிச்சாமி, சிற்பி, பொன்னுசாமி மூவருமே வந்திருந்தது எதிபாராத இன்ப அதிர்ச்சி. கவிஞர் சிற்பியை முதன் முதலாகச் சந்திக்கிறேன்.  திரு பொன்னுசாமி ஒழுங்குகளுக்கு பழகிக்கொண்டிருக்கவேண்டும், சிரிப்பதாகட்டும், கை குலுக்குவதாகட்டும் உரையாடுவதிலாகட்டும் கச்சிதமும் ஒழுங்கும் கைகோர்க்கின்றன. சிற்பி வேறு மாதிரியான மனிதர் முதல் நாள் சந்திப்பிலேயே ஏதோ வெகு நாட்களாக நம்மை தெரிந்து வைத்திருப்பபவர்போல கைகுலுக்கலில் ஒரு நெருக்கம்மும் அக்கறையும் இருந்தது. முகத்தில் நகைக்கடைவெள்ளிபோல வசீகரமான ஒரு சிரிப்பு. முகத்துடன் சிரிப்பா, சிரிப்புடன் முகமா? என்பதான குழப்பம் நமக்கு வருகிறது. பசி வேளையிலும்,  உண்டுமுடித்து பிறருடன் அவர் உரையாடுகிறபோதும் கவனித்தேன். நிறைகுடத்தில் நீர் தளும்பி சிந்துவதுபோல சிரிப்பை சிந்திக்கொண்டிருக்கும் முகம். கருத்தரங்கு முடித்து புதுவை திரும்பி நான்கைந்து நாட்கள் ஆனபிறகு ஒரு நாள் தொலைபேசியில் அவரிடம் பேசினேன், அப்போதும் சிரிப்புடன்கூடிய  அதே முகம் மறு முனையில். கோயம்புத்தூரில் இருந்த மூன்று நாட்களும் மறக்கமுடியாத இன்னொருவர் ஓர் இளைஞர். நண்பர் மாலன் மின் அஞ்சலில் அவரைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். தொலைபேசியில் முதன் முறையாக தொடர்புகொண்டேன். கோயம்புத்தூர்காரர்போலத்தான் பேசினார்( அவர் கோயம்புத்தூர்காரர் இல்லை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன்).  பயண ஏற்பாடுகள், பிற தகவல்களுக்கென தொடர்பிலிருந்த கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர்தான் அந்த இளைஞர். சுறுசுறுப்பானவர், பெயர் மணிகண்டன். அவர் பேச பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். கருந்தரங்கு ஏற்பாடுகளுக்கு முன்பாக, கருத்தரங்கு முடிந்தபின்னர் சற்று கணயர்ந்திருக்கலாம். விழா நாட்களில் அவர் உறங்கியிருக்க வாய்ப்பே இல்லை. கருத்தரங்கின் வெற்றியில் மணிகண்டனுக்கும் பெரும்பங்குண்டு.

ஓட்டலில் எங்கள் அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்தபிறகு மணிகண்டன் நண்பர்களிடம் எனது மூக்குக் கண்ணாடியை பழுதுபார்க்கும் பொறுப்பை அளித்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் சரிசெய்யப்பட்ட கண்ணாடியுடன் மணிகண்டன் நண்பர்கள் வந்தார்கள். மாலை நான்கு மணிக்கு தொடக்க விழா¡ ஏற்பாடு செய்திருந்த அரங்கிற்கு சின்னங்சிறு பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டோம்.  முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு ராமசுப்பிரமணியன் கருதரங்கைத் தொடங்கிவைத்தார். சிலம்பொலி செல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கு கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளிப்பட்டது. மாலன் தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு குறித்து ஓர் அறிமுக உரையை நிகழ்த்தினார். ரெ.கார்த்திகேசுவை முதன்முதலாக பார்க்கிறேன். மெலிந்த உருவம் கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு. இந்திரனை எங்கே காணவில்லை என நினைத்தேன். அவர் அறிவித்தபொழுது அவர் கையை உயர்த்த அவர், வந்திருப்பது தெரியவந்தது. நலன் விசார்த்துக்கொண்டோம். நாஞ்சில் நாடன் மூன்று வரிசை தள்ளி அமர்ந்திருந்தார். தொடக்கவிழா நிகழ்ச்சி முடிந்தபின்னர் பார்க்கலாம் என நினைத்த போது அவர் இல்லை. .

DSC_0316
21ந்தேதி காலையில் புதுச்சேரியிலிருந்து வெங்கட சுப்புராய நாயக்கரும்,  இலக்கியம் சீனு தமிழ்மணியும் வந்திருந்தார்கள்  தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம் என்ற அமர்வில் ரெ.கார்த்திகேசுவின்கீழ் கட்டுரை வாசித்தனுபவம் மறக்க முடியாது. முதல் அமர்வு தேநீர் இடைவேளையின்போது நாஞ்சில் நாடன் அவ்ர்களிடம் பேசினேன். நான் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் இவர்கள் எழுத்தில் தலைகாட்டும் அறச்சீற்றத்தை சமூக அக்கறைகொண்ட எவரும் விரும்பவே செய்வோம். அவர்கள் எழுத்தின் தனித்தன்மைக்கு அக்கோபமும் ஒரு காரணம். என் வாழ்நாளில் தேடிப்போய்பார்த்த படைப்பாளிகள் சொற்பம். அந்த சொற்ப எண்ணிக்கைக்குள் நாஞ்சில் நாடனையும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். கோயம்புத்தூர் அருகே நாஞ்சிலார் வசிக்கிறார் என்பதை அவர் கூறியபோதுதான் தெரியவந்தது. முன்னதாகச் தெரிந்திருந்தால் ஒரு நாள் கோவையில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் என நினைத்தேன். நாஞ்சிலாரையும் சென்று பார்த்திருக்கலாம். நாஞ்சிலார் தவிர, அ. ராமசாமி, இமையம், சுப்ரபாரதிமணியன், கவிஞர் குடியரசு ஆகியோரையும் சந்தித்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் நாளில் சந்திக்க நேர்ந்தவர்களில் இலங்கையிலிருந்து வந்த கவிஞர் சகோதரி அனார்.  அவரது கவிதைதத்தொகுப்புகள் சிலவற்றை அன்போடு அளித்தார். அக்கவிதைகள் குறித்து எழுதவேண்டும் நன்கு அறியப்படவேண்டிய படைப்புகள் அவை. அவரது கவிதை ஒன்றை பல மாதங்களுக்கு முன்பு எனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கணவர் குழந்தை சகிதம் இலங்கையிலிருந்து வந்திருந்தார். ரெ.காவிற்கு பிறகு மலேசியாவலிருந்து வந்திருந்த டாக்டர் ஷண்முகம் சிவாவும் மறக்கமுடியாத இன்னொரு நபர். நண்பர் பஞ்சாங்கம் அவருடைய சிறுகதையை வாசித்துவிட்டு, மகனைப் பார்க்க சிங்கப்பூர் சென்றபோது அவரைச் சந்திக்க வேண்டும் என நினைத்தாராம். அக் கனவு கோயம்புத்தூரில் நிறைவேறியதாகத் தெரிவித்து மகிழ்ந்தார். நாயகரும், தமிழ்மணியும் இரவு உணவிற்கு பிறகு புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்கள்.

22ந்தேதி எனது அமர்வில் கல்ந்துகொண்ட கலைமகள் என்ற சீனப்பெண்தான் மொத்த விழாவிற்கும் நட்சத்திரம் போல வலம்வந்தார். பத்திரிகைகாரர்களும் அவரை விடவில்லை. நல்லவேளை அவர் கட்டுரையை வாசிக்காமல் தன்னோடு கொண்டுவந்திருந்த ஆல்பத்தை காட்டி சமாளித்ததால் தப்பித்தோம். இரவு வெகு நேரம் உண்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்ததால் எங்களைச் சந்திக்கவந்த கவிஞர் சிற்பியையும், திரு. பொன்னுச்சாமியையும் தவறவிட்டிருந்தோம். இரண்டாம் நாள் அமர்வில் தொழில் நுட்ப அமர்வு முக்கியமானது. மறுநாள் கால உணவிற்குப்பிறகு  நண்பர். பஞ்சாங்கம் ஈரோட்டில் ஒரு கருந்தரங்கில் கலந்துகொள்ள கிளம்பிப்போனார். மொத்தத்தில் கோயம்புத்தூர் அனுபவம் என்றும் நினைவு கூறத்தக்கது.

மீண்டும் ஒருமுறை விருந்தோம்பலுக்கு இலக்கணம்படைத்த தமிழ் பண்பாட்டு மையம் தலைவர் நல்லபழனிச்சாமி, அறங்காவலர்கள் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க.பொன்னுசாமி, நண்பர் மாலன், ரெ.கார்த்திகேசு, பம்பரம்போல் சுழன்று வந்திருந்த விருந்தினர்களைக் குறையின்றி கவனித்துக்கொண்ட திரு.மணிகண்டன் குழுவினர்,  அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

————————–

வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

இரு நிகழ்வுகள்

1. எனது புதிய மொழி பெயர்ப்பு நூல்

2008ல் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோவின் (Le Clézio)KUTRA VISAARANAI-print

தேதி 17-1-2014, புக்தக கண்காட்சி அரங்கம் மாலை சுமார் 4மணி அளவில்

குற்ற விசாரணை‘ (Le Procès Verbal) என்ற பெயரில் தமிழில் காலச்சுவடு வெளியீடாக வருகிறது

முதற் படியை  திரு பிரபஞ்சன் வெளியிடுகிறார்

முனைவர் வெ.சுப. நாயகர், பிரெஞ்சு பேராசிரியர், காஞ்சி மாமுனி பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி, பெற்றுகொள்கிறார்.

2. எதிர் வரும் ஜனவரிமாதம் 20,21, 22 தேதிகளில்

கோவை தமிழ் பண்பாட்டு மைய ஆதரவில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கான தொடக்க விழா அழைப்பு இது Tamil Invite

நிகழ்ச்சி நிரல்களை கீழ்க்கண்ட இணைய முவரியில் பெறலாம். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

http://www.centerfortamilculture.com/

இவ்விரு நிகழ்வுகளுக்கும் முடிந்தால் நேர்ல் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

அழுகுரல்

அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு செம்மறி கிடாவென நெஞ்சை முட்ட பதட்டத்துடன் விழித்தேன். சுற்றிலும் ஆழ்கிணற்றின் நீர்போல இரவு உறைந்துக் கிடந்தது. கண்கள் தங்கள் இயல்புக்கு வந்ததன் அடையாளமாக இருள் பூசிய சுவர்; நாற்காலி, மேசையும் அதில் இறைந்துகிடந்த புத்தகங்களும் பிறவும் மெல்ல மெல்ல பார்வையை நிரப்புகின்றன. இழுத்து மூடப்படாத சன்னல் திரையின் நெளிவுகளில் விழுந்து கட்டிலில் தெறித்த நிலவொளி கொஞ்சம் தரை, கொஞ்சம் சுவரென சிந்திக்கிடந்தது. நிசப்தத்தின் அவ்வளவு குரல்களையும் முந்திக்கொண்டு குழந்தையின் அழுகுரலில் இரவின் சுதியாகவும் தாளம்போலவும்  வழமையாக ஒலிக்கிற மனவியின் குறட்டையும்  சுவர்க்கடிகாரத்தின் இயக்கமும் தமது முக்கியத்துவத்தை இழந்திருந்தன.

ஒருவாரமாக தொடரும் அனுபவம். குழந்தையின் அழுகைக் கேட்டுப் பழகியதென்றாலும் அடர்த்தியான இரவுதோப்பில் ஒற்றையாக அழுகுரலை கேட்கிறபோது இதய துடிப்பு அதிகரிக்கிறது, மூச்சை அடைக்கிறது, அறையின் குளுமை வெப்பமாக உடலைக் கவ்வுகிறது. உறக்கத்தை தொடரமுடியாத எரிச்சலில் கண்கள். மிச்சமிருந்த உறக்கத்தின் சுமையை இறக்கிவைக்க கண் இரப்பைகள் தோளை உயர்த்தின. மூடிய அறைக்கதவிற்கும் தரைக்குமான இடைவெளியை எதிர் அறையிலிருந்த வந்த மின்சார ஒளி நிரப்புகிறது.  இரு கைகளையும் தலைக்குப் பின்புறம் கொண்டுசென்று கைவிரல்களை பிணைத்து நெட்டைமுறித்து, போர்வையை விலக்கி வலது காலை தரையில்வைத்து கட்டிலைவிட்டு இறங்கினேன். மின்சாரவிளக்கைப் போடவேண்டுமென்ற அவசியங்களில்லை. கண்களிரண்டும் மென்மையான இருளுக்குப் பழகிக்கொண்டிருந்தன. தலைகீழாக உள்வாங்கப்படும் நிழல்பிம்பங்களை நேராக நிறுத்தி அடையாளப்படுத்த பார்வைக்கு முடிந்தது. இறங்கி கதவை நோக்கி நடந்தேன்.

தனக்காக அழும் எந்தக்குரலையும் வெறுக்கும் மனநிலைக்கு வந்திருந்தேன். அதில் யாசிக்கும் மனோபாவம் இருக்கிறதென்பது காரணம். அதற்காக மற்றவர்களுக்காக அழுகிறவன் என்பதெல்லாமில்லை. அழுது மட்டுமே தனது தேவையை பூர்த்திசெய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்த குழந்தையின் பின்னிரவு அழுகை ஓர் அதிர்வாக என்னுள் இறங்ககாரணமென்ன என்பதை கடந்த ஒரு கிழமையாக பால்கணியின் நின்று மௌனத்தில் ஆழ்ந்திருக்கிற மரங்களைப் பார்க்கிறபோதும், உரக்கமற்ற முன்னிரவுகளிலும், குளித்து முடித்து துவட்டிக்கொள்ளும்போதும் யோசிக்கிறேன். பதில்களின் இருப்பு அடிவானம்போல காட்சிக்குக் கிடைத்தது. அருகாமையில் இருப்பதுபோல தோற்றம் தரினும் நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது. அழுகையை ஊரில் பெய்யும் மழையோடு ஒப்பிட்டிருந்த கவிஞன் போல் வெர்லன் நினைவுக்கு வந்தான். குழந்தையின் அழுகுரல் மழையா சாரலா?

எங்கள் அறைக்கு எதிர்பக்கத்தில்தான் மாப்பிள்ளையும் மகளும் அவள் குழந்தையும் இருக்கிறார்கள். ஏற்கனவே நான்கு முறை குழந்தை அழுதிருக்கிறான். அப்போதெல்லாம் திடுக்கிட்டு எழுந்திருப்பதும், குரல் ஓயும் வரை அமைதியின்றி உட்கார்ந்திருப்பதும், சிற்சில நேரங்களில் எழுந்து இரு சுவர்களுக்கான இடைவெளிகளை தன்னிசையாக அளப்பதுமென்று கழிந்திருக்கிறது. அழுகையைத் தொடர்ந்து அவ்வழுகைக்கான காரணத்திற்கேற்ற காரியங்களை அவனைப்பெற்றவள் செய்கிறாள். கைகால்களை உதைத்து, கண்களை சுருக்கி, நெற்றி தசைகள் நெளிய அழுகிறபோது திறந்திருக்கும் குழந்தையின் வாயைப்பார்க்க சூல்தண்டுதெரிய இதழ்விரித்த பூப்போல இருப்பான். அண்மை தொடும் மனிதர் நடமாட்டத்தையும், சமாதான வார்த்தைகளின் தராதரமறிந்தும் குழந்தையின் குரல் குறையவோ கூடவோ செய்யும். அர்ச்சகர் தரும் புஷ்பங்களை கைகளில் வாங்கிக்கொள்வதுபோல குழந்தையை எனது மனைவியும் மகளும் கையாளுவார்கள். குழந்தையின் இமைமயிர் முனைகளில் கோர்த்திருக்கும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் அப்புஷ்பங்களில் சொட்டும் தீர்த்தம்போல.

ஊரிலிருந்த வந்த முதல் நாள் இப்படித்தான் பின்னிரவில் திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. பதறிக்கொண்டு கண்விழித்தேன். எழுந்தவன் மின்சாரவிளக்கைப்போட்டுவிட்டு அடுத்த அறைக்கதவைத் தட்டி மகளை எழுப்பலாமா? என்று யோசித்தேன். நள்ளிரவில் எதற்காக அழுகிறான்பசியாக இருக்கலாமா? குழந்தை அடிக்கடி பாலெடுக்கிறான், ஒழுங்காய் பாலைக்குடிப்பதில்லையென்று மகள் கூறியிருந்தாள். ஒரு முறை இந்திய ரயிலில் பயணித்த பொழுது இரவு முழுக்க குழந்தையொன்று வீறிட்டு அழுததும், பயணத்தொடக்கத்தில் குழந்தையை எடுத்துக்கொஞ்சிய நானே பின்னர் எரிச்சலுற்றதும் நினைவுக்கு வந்தது. மனித இயல்புப்படி அவ்வாறான மனப்பிடுங்கல்கள் இப்போதில்லை. ஒரு குழந்தை அழ ஆயிரத்தெட்டு காரணங்கள், நாம்தான் ஊகித்தறியவேண்டும்: பசியாக இருக்கலாம், அறையில் நிலவும் வெப்பம் அல்லது குளிர் காரணமாக இருக்கலாம், டையப்ப்பர் மாற்ற வேண்டியதாக இருக்கலாம் அல்லது இத்தனைபேர் என்னைச் சுற்றி நிற்கிறீர்களே? என்னைத் தூக்கக்கூடாதா? என்பதுகூட காரணமாக  இருக்கலாம். உடல்நலத்தில் பிரச்சினையா? கிரைப் வாட்டர் கைவசமிருக்குமா? பிரான்சுநாட்டில் நேரங்காலம் பார்க்காது தவிர்க்கமுடியாத அவசரமெனில் வீட்டிற்கு மருத்துவர் வருவார் அமெரிக்காவில் எப்படி? நாம்தான் மருத்துவமனைக்கு போகவேண்டுமாநிறைய எனக்குள் கேள்விகள். வழக்கம்போல பதில்களின்றி  மேலும் மேலும் கேள்விகளின் எண்ணிக்கையை மனதிற் பெருக்கிக்கொண்டிருந்தேன். எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் ஏதேனும் ஒரு பதிலை தயாராக வைத்திருக்கும் என் மனைவி அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறாள். அவளுடைய நிம்மதியான உறக்கம் என்னை எரிச்சலடைய செய்தது.

ஏம்மா.. குழந்தை அழறானே?

– —

உன்னைத்தான். ச்சே இப்படியா தூங்கறது. குழந்தை அழறான். என்னண்ணு போய்ப் பாரு?

கொஞ்சம் மெதுவாப் பேசுங்க. எல்லோரையும் எழுப்பிடுவீங்க போலவிருக்கு.

எழுந்திருக்கட்டும். குழந்தை இப்படி அழவிட்டு உங்களுக்கு என்ன அப்படித்தூக்கம் வேண்டிகிடக்குது.

சும்மா படுங்க, பெற்றவங்களுக்குத் தெரியும் குழந்தையோட அருமை. நாள்பூரா ஏதோ நீங்கதான் குழந்தையை சுமக்கிறமாதிரி..

ச்சே.. என்று சலுத்துக்கொண்டேன்.. எத்தனை நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தேனோ நினைவில்லை. எதிர் அறையில் மின்சாரவிளக்கின் ஒளியும், தொடர்ந்து மகளின் நடமாட்டமும் குழந்தையை சமாதானப்படுத்தும் அவள் குரலையும் கேட்ட பின்பு படுத்திருப்பேனென நினைக்கிறேன்.

இன்றும் மனைவியை எழுப்பினால் என்ன பதில் வருமெனதெரியும். எழுந்துசென்று எதிர் அறை கதவைத் தட்டலாமா என நினைத்து நெருங்கியபொழுது, வெளிச்சம் தெரிந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்வதும் கேட்டன. கதவிடுக்கு ஒளியில் நிழல்கள் வந்துபோகின்றன.

ஒன்றிரண்டு நொடிகள் தயங்கிய பிறகு கதவைத் தட்டினேன்.

கதவு திறந்தது. எதிரே மகள். பால் மாவைக் கலப்பதற்காக மேசைமீது பாட்டில்-வார்மரில் தண்ணீர் சுட்டுக்கொண்டிருந்தது.

என்னப்பா?

குழந்தை வெகுநேரம் அழுதிருப்பான் போலிருக்கிறதே?

இருக்காதே! உடனே எழுந்துட்டேனே.

அம்மாவை வேண்டுமானா எழுப்பட்டுமா.

வேண்டாம்பா நான் பார்த்துப்பேன். அம்மா தூங்கட்டும். பகலெல்லாம் அவங்கதானே பார்த்துக்கிறாங்க. இராத்திரியிலே நான்கைந்து தடவை எழுந்திருக்கவேண்டியிருந்தது. அதனாலே கொஞ்சம் அசந்து தூங்கிட்டிருக்கேன்.

முகத்தைப் பார்த்தேன். கண்களைச் சுற்றி மையில்போட்டதுபோல வளையம், வெண்படலம் சிவந்திருந்தது. கண்களில் அரிப்பு இருக்கவேண்டும் புறங்கை ஆட்காட்டிவிரலை பூமொக்குபோல மடித்து ஒருமுறைக்கு இருமுறையாக வலது கண்ணைத் தேய்த்தாள். எனக்கும் நெஞ்சில் எவரோ பாரத்தை இறக்கியதுபோல இருந்தது. கண்களில் நீர்கோர்த்தது, அதைக்காட்டிக்கொள்ள மனமின்றி திரும்பினேன். எனக்குப் பின்புறம் கதவு மூடப்படும் சத்தம்.

விளக்கைப்போடாமல் தட்டுதடுமாறி நடந்தேன். அறைகளுக்கான நடைபாதை தரை விரிப்பில் பைய கால்  புதைய நடந்து வரவேற்பறை சோபாவை நெருங்கி கால் நீட்டி உட்கார்ந்தேன். நெஞ்சத்தில் இதுவரை காணாத இறுக்கம். மூச்சுமுட்டியது. நீராவிபோல சுவாசத்தை உணர்ந்தேன். உடல்கொள்ள குளிர்காற்றை இட்டு நிரப்பவேண்டும்போலிருந்தது. வரபேற்பறையை பால்கணியுடன் பிரித்திருந்த தள்ளு கதவை உபயோகித்து பால்கணிக்கு வந்ததும் அங்கே நிரந்தரமாக விரித்திருந்த நிழற்குடையின் கீழ் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருள்பிரியாத வெளியில் மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் படித்த இறுமாப்புடன் ஆனைக்கூட்டம்போல மரங்கள். தலைக்கெதிரே கட்டிடங்கள் தொடுவானத்தில் பசைபோட்டு ஒட்டப்பட்டதுபோல தெரிந்தன. எனது மனநிலைக்கு முரண்பட்டவைபோல மேகக்கூந்தலில் பிறை நிலா. மல்லிகைச்சரம்போல நட்சத்திரங்கள். இரவு பறவைகள் ஓய்வெடுத்திருக்கவேண்டும், இல்லையெனில் அப்படியொரு நிசப்த அனுபவத்தை காண நேர்ந்திருக்காது. நாள் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டதன் சாட்சியாக வாகனங்களின் ஓட்டம். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் ஒலி, கொடிய வனவிலங்கிடமிருந்து தப்பியோடும் அப்பிராணிபோல அபயக்குரலெழுப்பிக்கொண்டு பாய்ச்சலிடுகிறது. ஆம்புலன்ஸைத் தொடர்ந்தும் அழுகை ஒரு கேவலாகவோ, விசும்பலாகவோ பின் தொடரக்கூடும்.  குழந்தையின் அழுகையில் சுயநலம்? குழந்தையை பெற்றவள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும் எனக்குள் அடைபோல ஊமுட்கள். ட்விக் ட்விக்கென்று சத்தமிட்டுக்கொண்டு சடசடவென்று  பறந்து அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே இடம் தேடும் இரவு பட்சி. சட்டென்று எனது முதுகு மனிதர் சுவாசத்தின் வெப்பத்தை உணர்ந்தது.    திரும்பினேன் -மனைவி.

என்னது? எதற்காக பனியில் நிற்கறீங்க, தூக்கம் வரலையா?

இல்லை. என்ன ஜென்மம் நீ? கண்ட கண்ட நேரத்திலெல்லாம் குழந்தை விழித்துக்கொண்டு அழறான். நீ என்னடான்னா தூக்கத்தையே காணாதவ மாதிரி தூங்கற.

ஒன்றிரண்டு நொடிகள் தலையை நேரிட்டு என்கண்களப் பார்த்தாள்:

ம். உங்க கவலை எதைப் பத்தினது? உங்கப் பெண்ணும் குழந்தையாய் இருந்தப்போ இப்படி அர்த்தராத்திரியில் அழுதவள்தான், அப்போதெல்லாம் நீங்கள் இதுபோல விழித்துக்கொண்டதில்லை.

———————————————————————–

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1

 Panjangakm.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும்-பாராட்டுதலும்என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது  பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில்  எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை.  மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம்.  ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால்.  இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு.  ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ஒருபாற் கோடாமை மனத்துடன் உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல்எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும்வீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.

(தொடரும்)  

புதிய நூல்

புதிய நூல்

 வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

கிளேசியொவின் Le Procès -Verbal என்ற பிரெஞ்சு நாவல்  குற்றவிசாரணை( என்ற பெயரில் காலச்சுவடு பெளியிடுகிறது. ஜனவரி 17ந்தேதி திருவாளர்கள் பிரபஞ்சன் வெளியிட நண்பர் நாயகர் முதல் பிரதியைப் பெற்றுகொள்கிறார்

 நிகழ்ச்சி இடம் மற்றும் நேரத்தை பின்னர் அறிவிக்கிறேன்.

 அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

 

தாயகம் கடந்த தமிழ் -2014

தாயகம் கடந்த தமிழ்   –2014

              ஜனவரி-20-22

 

புரவலர் டாக்டர் நல்ல பழனிச்சாமியை தலைவராகக்கொண்டும் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க. பொன்னுசாமியை ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் இயங்கும் கோவை தமிழ் பண்பாட்டு மையம் ஆதரவில் ஜனவரி-20-22 தேதிகளில் தாயகம் கடந்த தமிழ்என்ற பெயரில் ஓர் கருத்தரங்கை ஏற்பாடுசெய்யப்படுள்ளது. திரு.மாலன். விழாக்குழுவின் தலைவர். வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் அ.முத்துலிங்கம், எஸ்.பொ. சேரன், ரெ.கார்த்திகேசு போன்ற படைப்பாளிகளோடு கல்விமான்களும், நவீன தமிழின் கணினி மேம்பாட்டிற்கு பெரும்பங்கினை அளித்துவரும் திரு முத்து நெடுமாறன் போன்றோர் கலந்துகொள்வதும் நிகழ்ச்சியின் சிறப்பு.

 பிற தகவல்களுக்கு தாயகம் கடந்த தமிழ் ‘2014, அதிகார பூர்வமான வலைத் தளத்திற்குச் செல்லவும்

http://www.webdesignersblog.net/tamil/amaippukkulu.php

உலக எழுத்தாளர் வரிசை -7: ரஸ்ஸல் பாங்க் (Russell Banks)

“வீடுமுறவும் வெறுத்தாலும் என்னருமை 220px-Russell_banks_2011
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே” (பாரதியார்)

முதலாளித்துவமும் நவீன சமூக அமைப்பும் மென்று உமிழ்ந்த மனிதர்களிடத்தில் அக்கறைகொள்கிற படைப்பிலக்கியவாதி ஒருவர் அமெரிக்காவில் இருக்கமுடியுமெனில் அது அநேகமாக ரஸ்ஸல் பாங்க் ஆக மட்டுமே இருக்க முடியும். சொந்தநாடுகளைக் கடந்து பிறநாடுளின் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுகொள்ளபட்டவர்களையே உலக எழுத்தாளர்கள் என அழைக்கிறோம்.  இவர்கள் அனைவருமே கைவசப்பட்ட மொழியைக்கொண்டு  தங்கள்  எடுத்துரைப்பில் உலக நடப்புகள் சிலவற்றுள் தங்களுக்குள்ள உடன்பாடின்மையைப் பதிவுசெய்கிறார்கள்.  ஆண்குறி பெண்குறி, உடல் உறவுகளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது போன்ற திட்டமிடல்கள் உலக எழுத்தாளர் தகுதியை நிர்ணயித்து விடாது. படைப்பு மானுடத்தின்மீது அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும். தமது அனுபவங்களுக்கு கலைவடிவம் கொடுப்பது மட்டுமல்ல, அக்கலை வடிவங்கள் ஊடாக உற்ற அனுபவத்தினைப்பற்றிய கருத்தையும் சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும். மகிழ்ச்சியை தெரிவிக்கத் தவறினாலும் ஏமாற்றம், நிராசை, அவநம்பிக்கை, சிறுமையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அறச்சீற்றத்தைப் பதிவுசெய்யும் பொறுப்பு வேண்டும்.

அமெரிக்காவை வல்லரசு என்றோ, பணக்கார நாடு என்றோ ரஸ்ஸல் பாங்க் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரது புனகதைகள் பலவும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப அக்கருத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவளிப்பதே தமது எழுத்தின் குறிக்கோளென்று ரஸ்ஸல் செயல்படுகிறார். திக்கற்ற மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். கடைநிலைமனிதர்களின் தலைவிதியை எழுத்திலேனும் திருத்திவிடலாம் என்ற கனவுகளுடன் எழுதிக்கொண்டிருப்பவர். இரந்தும், கேட்பாரற்றும், வீதிகள் பாலங்களின் கீழ் உயிர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய வக்கற்று நடைபிணமாகித் திரிந்தலையும் மனிதர்களைப்பற்றியதாக அவர் புனைகதைகள் இருக்கின்றன.  ஒரு தொண்டு நிறுவனமாக தம்மை உருமாற்றிக்கொண்டு செயல்படும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. வன்முறை, வன்புணர்ச்சி, கொலை, களவு, களவாணித்தனம் ஆகிய குற்றப் பண்புகளைக் காட்டிலும் அக்குற்றத்திற்குக் காரணமான சமூகத்தைத் தண்டிப்பதில் அவருக்கு ஆர்வம்.  அவரைப் பொறுத்தவரை உணர்ச்சிக்குப் பலியாகி குற்றமிழைக்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களல்ல மன்னிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் நோயாளிகள்: உரிய சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள். சமூகத்தின் கயமைக்கு யார் பொறுப்பு, எப்படி நிகழ்கிறது, அதனை அளவிடுவதால் கிடைக்கும் நன்மை தீமையென்ன என்ற ஆய்வு நோக்கில் அவர் படைப்புகளை அணுகவேண்டும். சட்டமும் நீதியும் குற்றவாளிகளை தண்டிக்கமட்டுமே செய்கின்றன. பலியாடுகளுக்கு தங்கள் பாதுகாப்புகுறித்த பிரக்ஞயை உணர்த்தும் பொறுப்பு சமூகத்தின் பங்குதாரனான தனக்குமுண்டு என்றுணர்ந்து ரஸ்ஸல் வினையாற்றுகிறார்.

தண்ணீர் குழாய்ப் பழுதுபார்க்கும் தொழிலாளியான ரஸ்ஸலின் தந்தைக்குக் குடிபழக்கமும் உண்டு. சகோதரன் வியட்நாம் யுத்தத்தால் சீரழிந்து போனவன், மற்றொரு சகோதரன் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்ப மரபுப்படி, காணாமற் போகிறான். குடிகாரத் தந்தை, வறுமை, திக்கு தெரியாமல் பயணித்த பெற்றோர்கள், அவர்கள் இழைத்த கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்ப நினைத்த ரஸ்ஸலுக்கு  வார்த்தைகள் ஒளிகீற்றாக அவர் சிறைவாழ்க்கைக்குள் நுழைந்தன. அக்காலங்களில், சிறுவன் ரஸ்ஸல்,   ஒத்த வயதினரிடம்  தேடிச்சென்று  அளந்த கதைசொல்லலுக்குக் கிடைத்த வரவேற்பு அவனை உறசாகமூட்டியது, குடும்ப நரகத்திலிருந்து விடுவிக்கும் பிராணவாயுவாகவும் அமைந்தது தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டான். பின்னாளில் ரஸ்ஸல் சிறந்த படைப்பாளியாக உருவானதின் பூர்வாங்கக் காரணமிது. அவர் வரையில், “வார்த்தைகள் என்பது அர்த்தமற்றவைகளுக்குப் பொருள் தேடும் முயற்சி, நிஜத்தை  எட்ட நம்மை வழி நடத்தும் ஓர் அரூப சக்தி” தவிர “எழுத்திடம் அடைக்கலம் வேண்டுவது  சிறுமைகளிடமிருந்து தப்புவதற்கு அல்ல மாறாக அதனை அடக்கி ஆளவும், நெறிபடுத்தவும், நடந்த வற்றைச் சாட்சிப்படுத்தவும், இறுதியாக படைப்பாளி தனது மனதிற்கு உகந்த மாற்றுலகை கட்டி எழுப்புவதுமாகும் (1). பதினாறு வயதிலேயே தனக்கு மனதளவில் சிகிச்சை தேவைப்பட்டதெனவும் அதன் பொருட்டே சொற்களின் உதவியை நாடியாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் அப்போதைக்கு அவரது முயற்சிகள் இலக்கியம் என்பதைக் காட்டிலும் ஒருவகை சுயதேடல்களாகவே இருந்திருக்கிறது. எழுத்தை கையிலெடுக்கிற பெரும்பான்மையோர்  சிறைவாழ்க்கையை தேர்வுசெய்து கதவை அடைத்து வாழ்கிற இந்நாளில், ரஸ்ஸல் எழுத்துகளென்ற சிறகை விரித்து விசும்பைத் தொட விரும்பினாராம் (1)

ரஸ்ஸல் பாங்க்கின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்கள். சமூகம் விலக்கிவைத்த கடை நிலை மனிதர்கள். இரந்தும், குற்றம் புரிந்தும் வீதியோரங்களிலும் பாலத்தின் அடியிலும் ஆதரவு கரம் தேடி வாழும் உயிர்களாகவே அவர்களைச் சந்திக்கிறோம். தங்கள் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருக்கிற வாழ்க்கை முறை, வரையரைகளுடன் கூடிய கனவுகள், எதிர்கொள்ள முடியாத சக்திகள் தரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றிய புரிதலெல்லாம் அவர்களுக்கு நிறையவே உண்டு. இம்மனிதர்களின் தலைகளின் சுமையாக இருப்பது, அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் பூர்வீகம் அதாவது அவர்களை இன்னார் வழிவந்தவர்கள் என அறிமுகப்படுத்தும் ‘இன்னார்கள்’ இவர்கள் மீது பெரும் பாரத்தை இறக்கியிருக்கிறார்கள். என்னதான் உழைத்தாலும், சோபித்தாலும் ‘இன்னார்’ என்ற சொல் அவர்கள் தலை விதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இதனுடன் சமூகத்துடனான அவனுடைய கொடுக்கல் வாங்கல்கள், இயற்கையை எதிர்கொள்ள முடியாத பலவீனம், மூலதன உலகின் அமைப்புமுறையென வேறு பல காரணிகளும் கால்களைப் பிணைக்கின்றன.  எனினும் சிறிதுகூட இரக்கமற்ற சமூகப்பாட்டையில் தட்டுத் தடுமாறியோ, நொண்டிக்கொண்டோ, அவ்வப்போது விழுந்தெழுந்தும் மெல்ல என்றாலும் தொடர்ந்து நடக்கவே செய்கிறான். நீந்தத் தெரியாதவனைக் காப்பாற்ற முனைவதிலுள்ள சங்கடம் வாசிக்கிறபோது  ஏற்படுகிறது. அவன் மூழ்குகிறபோது அவனுடன் சேர்ந்து  மூழ்குகிறோம், அவன் நீர்மட்டத்திற்கு மேல் வந்து மூச்சுவிடும்போது,  வாய்கொள்ள காற்றை உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். “நவீன உலகு ஆக்ரமித்துள்ள மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் ஊடாகவே பிரபஞ்ச உண்மைகளை நாவலாசிரியர்கள் நிலைநிறுத்த விரும்புகிறோம், அவற்றை தொடர்ந்து உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்”(2) என்று கூறும் ரஸ்ஸல் அம்மனிதர்களை தனது கதையாடலைக்கொண்டு தொடர்ந்து இயங்கச் செய்கிறார்.

அண்மையில் (2012) பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரஸ்ஸல் பாங்க்கின் நாவல் Lointain souvenir de la peau (3) (Lost memory of skin). இநாவலில் ரஸ்ஸலின் கவனம் பாலியல் குற்றவாளிகள் பக்கம் சென்றிருக்கிறது.  ரஸ்ஸலை பொறுத்தவரை குற்றவாளிகளைக்கொண்டே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அளக்க முடியும். வெப்பமானி, பால் மானிபோல சமூகத்தின் நோயை அளக்க உதவுபவர்கள் அவர்கள். இப்பாலியல் குற்றவாளிகளைத் தங்களின் ஒரு பிரிவினர் என்பதை பெரும்பாலோர் ஏற்பதில்லை. அந்தப் பிறருக்கு இவர்களெல்லாம் சமூகத்தை சீரழிக்கும் புல்லுருவிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழவேண்டியவர்கள். நடுத்தர அல்லது பணக்கார குடும்பங்களின் வம்சாவளியில் வந்தவர்களாக இருப்பின் அவர்களை அமெரிக்க்காவின் முதுகெலும்பென கொண்டாடுவர், அரசும் அவர்கள் வாழ்வில் அக்கற்றை கொண்டிருக்கும். இவர்கள் அருவருப்பான சாக்கடை புழுக்கள் என்ற எண்ணத்துடன் பாலியியல் குற்றவாளிகளுக்கென ஒரு காலனியை (ரஸ்ஸல் கற்பனையின்படி)உருவாக்குகிறது, தவிர அவர்கள் கண்ணிற்படும் சிறுவர் சிறுமியர்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன்  மக்கள்  குடியிருப்புகளிலிருந்து காலனியை குறைந்தது 760 மீட்டர் தள்ளி அமைக்கவேண்டும் என்ற நியதிப்படி உருவான காலனி அது. அங்கு குற்றவாளிகளைக் கண்காணிக்க மின்னணு காப்புகள் இல்லை. பதிலாக உலோக குண்டுகளுடன் கூடிய சங்கிலியாலான தளை.

கதை நாயகன் லெ கிட் இருபத்திரண்டு வயது இளைஞன். செய்த குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு  காலனி வாழ்க்கைக்கு வருகிறான். அவன்செய்தகுற்றம் வலைத்தளத்தில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது,.  போலீஸார் விரித்த வலையில் வெகு எளிதாகச் சிக்கப் போதுமானதாக இருக்கிறது. தந்தையை இழந்தவன், தாய்க்கு மகனைக் காட்டிலும் வேறுவகையான தேவைகள் இருக்கின்றன.புறக்கணிக்கப்ட்ட  ‘கிட்’ போர்னோ போதைக்கு அடிமையாக நேர்ந்தது அவ்வகையில் தான். தண்டனைப்பெற்று திரும்பும் மகனை தாய் வெறுத்த நிலையில் அவனுக்கென்று கிடைத்த ஒரே ஆதரவு அவன் வளர்க்கிற பச்சோந்தி., அதனுடன்தான் அவன் வளர்ந்தான். பாலத்தின் கீழிருக்கும் குற்றவாளிகள் சேரியில் இவனைப்போல சங்கிலிக்குண்டை சுமந்து அரசுக் கண்காணிப்பின்கீழிருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், பொழுதும் போகிறது. அங்குதான் ஒருநாள் மாமிச மலைபோன்ற ஒரு சமூகவியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். பேராசிரியருக்கு நடுத்தெரு நாராயணர்களிடம் அக்கறை கொள்ள காரணம் இருக்கிறது, அவர் செய்யும் ஆய்வுக்கு அவர்கள்தான் பொருள். ஆக லெ கிட் அவருடைய ஆய்வுக்கு உதவமுடியுமென நம்புகிறார். இவர்கள் இருவரையும் கொண்டு எஜமானரான ரஸ்ஸல் தனது வேட்டையைத் தொடங்குகிறார். அவருக்கு குறி அமெரிக்காவின் அரசியல். ஒரு பக்கம் பாலியல் தொடர்பான வங்கிரங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் ஏமாந்த மனிதர்களைத் தண்டிக்கும் சொந்த நாட்டின் அரசியலை வழக்கம்போல மிகக் கடுமையாக ரஸ்ஸல் விமர்சிக்கிறார்.

குறைந்த பட்ச அன்பைக்கூட அறிந்திராத  ரஸ்ஸல் பான்க்கின் கதைமாந்தர்கள்  நிராதரவான நிலையில் நாவலெங்கும் அன்பிற்கு ஏங்குவதை உணரமுடிகிறது. மனம் இளகுகிறது. விழியோரங்களில் நீர்கசிவதை தடுக்க இயலவில்ல. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை? அவர்கள் செய்த குற்றமென்ன?  இச்சமூகத்திற்கு அதில் பங்கில்லையா? ரஸ்ஸல் மட்டும் கேட்கவில்லை நமக்குள்ளூம் கேட்டு அழுது புரளுகிறோம். அதுதான் எழுத்தின் வெற்றி.

வெளிவந்துள்ள படைப்புகள்:

பன்னிரண்டு நாவல்கள்

Family Life (1975)
The Sweet Hereafter(1991)
The Rule pf the Bone (1005)
Affliction(1989)
Lost Memory of Skin (2011)
அவற்றுள் முக்கியமானவை.

சிறுகததைகள் 6 தொகுப்புகள் வந்துள்ளன
Searching for survivors (1975)
The Angel on the Roof (2000)

இரண்டு கவிதை தொகுப்புகள்

இவற்றை தவிர அவரது படைப்புகள் திரைவடிவமும் பெற்றுள்ளன. ‘Affliction’ முக்கியமான திரைப்படம்

——————————————————-

1. Transfugeஇதழுக்கு (Sep.2005) அளித்த செவ்வி  ஒன்றில்

2. Le Magazine Littéraire, page 16 (août 2012)

3. Lointain souvenir de la peau, Russel Banks, Traduit de l’anglais (Etats-unis) par Pierre Furlan -Edition Actes Sud

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நூல்கள்

inviஎதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில்  நண்பர்  எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013.

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

4. கடைசி நாள் : 31.12.2013.

5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
மின்னஞ்சல் (e-mail),
அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)

பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com

www.naalaividiyum.blogspot.com

www.periyaariyal.blogspot.com

www.ambethkariyam.blogspot.com

www.penniyakkural.blogspot.com

www.aravaanigal.blogspot.com

www.jothidamosadi.blogspot.com

www.saibabamosadigal.blogspot.com

www.thamizhpeyargal.blogspot.com

www.anuulaiethirppu.blogspot.com