Category Archives: Uncategorized

இசைவானதொரு இந்தியப் பயணம்: 4

பிப்ரவரி -4.

அதிகாலை நான்கு மணி எங்கள் வாகனம் புதுச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.  பிரெஞ்சு நண்பர்கள் மூவரும், உலக அளவில் பணியாற்றி வருகிற தொண்டு நிறுவனமொன்றின் சென்னைக் கிளையின் நிர்வாகி ‘ஆரோக்கி’ என்ற பெயரில் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான் ஆரோக்கிய ராஜும், என்னோடு வாகனத்தில் பயணித்தவர்கள். நண்பர் நந்திவர்மனை தொலைபேசியில் பிடித்தாகவேண்டும். அவர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழித்திருப்பேனென உத்தரவாதமளித்தும் எனக்குள் அச்சமிருந்தது.

நண்பர் நந்தி வர்மன் குறித்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும். உங்களில் பலரையும் போன்று ‘அரசியல்’ செய்யும் எவரும் எனக்கு பூச்சாண்டிகள். அரசியலை தொழிற்படுத்துபவர்களை இருவகையாகப்பிரிக்கலாம் முதலாவது தரப்பினர் முழு நேர அரசியல்வாதிகள், இரண்டாவது தரப்பினர்  தொழில்முறை அரசியல்வாதிகளல்ல அப்படி கூறிகொள்ளவும் மாட்டார்கள் ஆனால் ஓர் தேர்ந்த அரசியல்வாதிக்குரிய அத்தனை இலக்கணங்களுக்கும் பொருந்தக்கூடியவர்கள். நண்பர் நந்திவர்மன் இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவர். இன்றைய தேதியில் எனது அனுபவத்தில் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் செயல்பாட்டினையும் வைத்து ஒரு சிலரைக் கொண்டாடவேண்டுமெனில் திருவாளர்கள் தமிழருவி மணியன், நல்லக்கண்ணும் நமது கவனத்திற்குரியவர்கள். அவ்வரிசையிலே நண்பர் நந்திவர்மனையும்  வைக்கலாம்.

லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அவர் காத்திருந்தார். ஏனாம் வெங்கிடாசலபதி சாலையில் எண் 22ல் எங்களுக்கு அறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. அறைக்கு 600ரூபாய் வாடகைக் கொடுத்தோம். நண்பர்கள் எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டிய இடம். பிரெஞ்சுக்காரர்கள் அங்கே அதிகமாக வந்து தங்குவதையும் பார்த்தேன். அவர்கள் தேர்வுக்கு வேறுகாரணங்கள் இருக்கலாம். எனக்கு நிறைவாக இல்லை.

காலையில் ஐந்து மணிக்கு படுக்கச்சென்றபோது பள்ளிவாசல் அழைப்பு. நண்பர் ஆபிதின் கதையிலா அல்லது நகைச்சுவையாக சொல்லப்பட்ட அவரது எழுத்துகளிலா அல்லது வேறு எங்கேயுமா என்று தெரியவில்லை. அக்கதையில் சொல்லப்படிருப்பதைபோன்றுதான் அந்தப் பாங்கு இருந்தது. அதன்பிறகு உறக்கம் வரவில்லை. குளித்துவிட்டு நண்பர்களுடன் காலை உணவிற்காக நேருவீதிக்கருகிலிருந்த ‘ஹாட் பிரெட்’டிற்குச் சென்றோம். ஐரோப்பிய காலை உணவிற்குப் பழக்கப்பட்டவர்களுக்கு உகந்த இடம். அது Brunch ஆக முடிந்தது. மதியம் அறைக்குச்சென்று ஓய்வு. இரண்டு அல்லது இரண்டரைக்கு நாயகர் எங்களை சந்திக்க வந்தார். மாலை நந்திவர்மனுடன் நாளைய நிகழ்ச்சி குறித்து விவாதிக்க இருந்து தவறி விட்டது. அவர் அவசரமாக சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததென்றார். மாலை நாயகர், பிரெஞ்சுநண்பர்கள் என நால்வருமாக கன்பத் ராம் சென்றோம். பிரெஞ்சு நண்பர்களுக்கு அந்தச்சூழல் பிடித்திருந்தது. காபி வடையெனச் சாப்பிட்டுவிட்டு திரு தாவீது அன்னுசாமியைப் பார்க்கச்சென்றோம். முன்னதாக அவருக்கு தொலைபேசியில் எங்கள் வருகையை நினைவூட்டியிருந்தோம்.

நண்பர் சவியே அவரிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். சிலர் எதுபற்றியும் எவர் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதே வேகத்தில் அம்முடிவை எளிதாக மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள். நண்பர் சவியே என்றழைக்கப்படும் தெபெல் அந்த ரகம். அவரை இருபது ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. அதாவது பிரான்சுக்கு வந்த புதிதில். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் அரசாங்க ஆவணங்களுடனும், கோப்புகளுடனும் சேவகம் செய்து மாமியார்வீட்டு நிழலில் சுகமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த காலத்தில் மனைவிமூலம் கிடைத்த பிரெஞ்சு குடியுரிமை எனது தூக்கத்தைக்கெடுத்தது. அது துருபிடித்து இற்றுப்போகாமலிருக்க பிரான்சுக்குப்போயே ஆகவேண்டுமென்ற விண்ணப்பத்தை அவ்வப்போது போட்டுவந்தேன்.  ஜூலை ஆகஸ்டுமாதங்களில் உதட்டிலும் உடையிலும் ஜிகினா மினுப்புடன் புதுச்சேரி வெள்ளித் திரைக்குவரும் சொல்தா குடும்பங்களின் துர் நாற்றம் பிடித்த ·பர்ப்யூம் வாசனையை வளப்பமாக நினைத்து எனக்கும் பிரான்சு கனவுகள் வந்தன. இந்த சொல்தாக்களும் இன்னபிற புதுச்சேரி பிரான்சுவாசிகளில் பலரும் துபாய் வடிவேலுக்கள் என்பதை புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. எனது படிப்புக்கு உகந்த மாடுகளைப் மேய்க்க பிரெஞ்சுமண்ணில் ஆகாதென்பதை புரிந்துகொண்டு தொழில் தொடங்க எத்தனித்தபோது நம்ம ஊர்போல பிரெஞ்சு மண்ணிலும் சிலகாரியங்களை தெரிந்தவர்கள் உதவியால் சாதிக்க முடிந்தது, முடிகிறது. நண்பர் சவியே உதவி இன்று வரை தொடங்குகிறது.  வாடகைக்கு இடம்பிடித்து கடை வைப்பதைவிட சொந்தமாக இடத்தைவாங்கி அங்கே கடையைத் திறப்பதென்ற யோசனையையும் கூறி இடத்துக்குச்சொந்தக்காரரிடம் பேரம்பேசி அதை பதிவு செய்யும்வரை வரை உடனிருந்தான். கடந்த நவம்பரில் என்மகளுக்கு சுவிஸ் அருகில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைகிடைத்தபொழுது அவள் தங்க ஒரு பெட் ரூம் கொண்ட இடத்தை வாடகைக்கு அவசரமாக பிடிக்கவேண்டியிருந்தது. அவனுடைய உதவியில்லையேல் கூடுதலாக ஒருவாரம் அலைந்திருப்போம். எனவே இந்த நன்றிக்கடனுக்காக அல்லது சுய நலத்திற்காக அவனோடு நட்பு பாராட்டவேண்டியிருக்கிறது.

திரு தாவீது அன்னுசாமிக்கு தம்மைப்பற்றிய சில விவரங்களை அளித்து அவரிடம் நட்பினை எதிர்பார்த்திருந்தான். அவ்விவரங்கள் அடங்கிய மடல் என்னிடம் வந்தபோது எனக்கென்னவோ அவை அதிகமாகத் தெரிந்தன. ஒருவரைப்பற்றிய அக்கறைகளை கசப்புகளை புரிந்துகொள்ளாமல் நம்மைப் பற்றிய தகவல்களை நானென்றால் அத்தனை எளிதாக பகிர்ந்துகொள்ளமாட்டேன். திரு தாவீது அன்னுசாமி அவர்களுடனான சந்திப்பு என் வரையில் ஒரு நீதிபதி, கல்விமான் என்ற தகுமைகளுக்கு பொருந்துபவர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறுதான் அவர் எங்களைவரவேற்றார். அளவளாவினார். செலவிட்ட மணித்துளிகளில் அவரது நுண்மான் நுழைபுலத்தை அறியமுடிந்தது. பிரான்சு நாட்டைப்பற்றிய பூகோள அறிவும், பிரான்சில் வாழும் புதுச்சேரி மனிதர்களைப்பற்றிய கேள்வி ஞானமும் தமிழிலக்கியத்தின் மீதும் குறிப்பாக மொழிபெயர்ப்புகள் விடயத்தில் அவருக்கிருந்த அக்கறையும் வியக்கவைத்தன.

இதற்கிடையில் நந்திவர்மனிடமிருந்து தொலைபேசி. எங்கள் அறை தண்ணீர் குழாயைத் திறந்துவைத்துவிட்டு போய்விட்டோம் என்ற குற்றச்சாட்டுடனான தொலைபேசி அழைப்பு. எனக்கென்னவோ அது நாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்திற்கு உரிமையானவரின் அநாவசிய பதற்றமாகத் தெரிந்தது. நாங்கள் சாவாதானமாக திரும்புவதென தீர்மானித்தாலும், நெஞ்சத்தில் ஓர் ஓரத்தில் அந்த அழைப்பு பதற்றத்தை உட்காரவைத்திருந்தது. அதற்குப் பிறகு திரு தாவிது அன்னுசாமியுடனான உரையாடலில் ஒட்டுதலில்ல. விடை பெற்றுகொண்டு அறைக்குத் திரும்பியபொழுது நான் நினைத்ததுப்பொல அதொரு பொருளற்ற அழைப்பாக இருந்தது. மறுநாள் வீட்டுக்கு உடையவரை சந்தித்தபோது எப்போதோ ஒரு முறை அப்படி நடந்ததாம். வெளியில் தண்ணீர் ஒழுகவே எங்கள் அறையிலிருந்து வந்திருக்குமோவென சந்தேகித்தாராம். ‘நல்ல ஆசாமியென நினைத்துக்கொண்டேன்.’

இரவு சைவ விடுதியொன்றில் சப்பாதி பூரி யென்று சாப்பிட்டுவிட்டு, புதுச்சேரி கடற்கரையில் காலார நடந்தோம். எந்த மாற்றமுமின்றி புதுச்சேரி கடற்கரை இருந்தது. ஆதாவது ஆங்காங்கே தோண்டிவைத்திருந்தார்கள். கடற்கரைக்கு வந்தவர்கள் தின்று தீர்த்த பொட்டலங்கள் பொதிகள் காற்றில் பறந்தன. வழக்கம்போல நொறுக்குத் தீனிகளுக்கான கடைகள். அந்நியர்கள் மீது படையெடுக்கத்தெரிந்த தொண்டைமண்டல பிச்சைக்காரர்கள். மெர்க்குரி லைட்டுகள், விட்டில் பூச்சிகள், வாலை உயர்த்தி விசுக்கென ஓடும் நாய்கள். தொப்பைபோட்ட மனிதர்கள், கணவருடன் தலைவிதியே என்று நடக்கும் பெண்மணி, குழந்தையை முன்னால் நடக்கவிட்டு பூரிக்கும் பெற்றோர் etc.. etc..

தொடரும்…

கதையல்ல வரலாறு 3-2:ஸ்டாலின் மரணத்தின் பின்னே..

எதிர்பார்த்தைதைப்  போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு முன்பாக அழைக்கவேண்டியவர்களை அழைத்த பின்புதான் இவரைத் தேடியிருப்பார்கள். எனினும் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்கிற அடையாளம் இருக்கிறது, எனவே ஸ்டாலின் அழைத்திருக்கிறார். அவர் வா என்றால் வந்து அடிமைபோல நிற்கவேண்டிய தலைவர். அவ்வகையில் ஸ்டாலினிடத்தில் எல்லோருக்கும் ஒரே மரியாதைதான் என்பதும் குருஷ் சேவுக்குத்தெரியும். தனியே வந்திருந்தால் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்குமா என்ற சஞ்சலமிருக்கும், இப்போது இவருக்கு முன்னால் ஐந்தாறுதலைகள் இருக்கின்றன. நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஓர்லோ·ப் மன்னர் (Orloff) பரம்பரைக்குச் சொந்தமான சிறியதொரு அரன்மணை அது. சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர். மின்சாரம்பாய்ச்சிய இரட்டிப்பு முட்கம்பிகளின் பாதுகாப்பில் அச்சுவர்கள் இருந்தன. மிகப்பிரகாசமான ஒளிவெள்ளம் அவ்வப்போது சுவர்களைக் கண்காணித்தன. பல்லி ஊர்ந்தாலும் தெரிந்துவிடும். தப்ப முடியாது. காரிலிருந்து இறங்கியவுடனே யார் யாரெல்லாம் அழைக்கப்ட்டிருந்தார்கள் என்பதை குருஷ்சேவ் விளங்கிக்கொண்டார். பேரியா, மொல்ட்டோவ், வொர்ஷிலோவ், பூல்கானின், மாலென்க்கோவ், ககனோவிச் என்று சகாக்கள் வந்திருந்தனர். எந்திரதுப்பாக்கிகளுடன் கொக்காசிய (Caucasiens) வீரர்களின் சிறப்பு காவற்படை ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழையும் தலைவர்கள்கூட அவர்கள் தலைவனின் சோதனைக்கு உட்பட்டே கோட்டைக்குள் நுழைய முடியும். ஸ்டாலின் தமது காவலுக்கு அவர்களைத்தவிர வேறு படையினரை நம்புவதில்லை.

” ஸ்டாலின் நண்பர்களைக்கூட சந்தேகப்படுவார். எங்களில் யாராவது ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்து அவரைக்கொல்லக்கூடும் என்ற சந்தேகம் அவரிடம்இருந்தது, எங்கே அவரால் என்ன ஆபத்தை சந்திக்கப்போகிறோமோ என நாங்கள் அச்சத்தில் வாழ்ந்ததுபோக வாழ்வின் கடைசிநாட்களில் அவரே அவரது வாழ்க்கைமுறைக்கு பலியானதுதான் விந்தையிலும் விந்தை…எங்கள் தோழர் ஸ்டாலின் பயமென்றால் என்னவென்று அறியாதவராகத்தான் இருந்தார், அதை அவருக்குக் கிடைத்த கொடை. எதையும் கூர்மையாகவும் துல்லியமாகவும் கணிக்கும் அவர் திறன் கண்டு மெச்சியுள்ளோம். ஐந்தாண்டு திட்டங்களைக்கொண்டு சோவியத் யூனியனை காப்பாற்றியதும், யுத்தங்களும் மக்களை அவர்மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்க காரணமாயின. ஆனால் மெல்ல மெல்ல மற்றவர்களை நம்ப மறுத்தார். இறுதியில் ஒருவருமே நம்பக்கூடியவர்களல்ல என்பது அவரது முடிவு. அவரது அரசியல் குருவாகக் கருதப்பட்ட கிரோவ் (Sergueஞ் Mironovitch Kostrikov) கொலையுண்டது ஸ்டாலின் மனநிலையை வெகுவாக பாதித்ததென்று அவர் மகள் ஸ்வெட்லானா எனக்கு எழுதினாள். எனக்கென்ன தெரியும், நானென்ன உளவியல் மருத்துவரா என்ன. ஆனால் மெல்ல மெல்ல தனித்து வாழப் பழகிக்கொண்டதும், அச்சமென்ற சிறையில் தம்மை அடைத்துக்கொண்டதும் உண்மை” என்கிறார் குருஷ்சேவ்.

ஸ்டாலின் இருந்த குடியிருப்பை பார்த்தவர்கள் வியக்கிறார்கள் அலங்காரங்கள் அற்றவை. ஒவ்வொன்றிலும்  ஒரே மாதிரியான மேசை நாற்காலியையும் கட்டிலையும் உபயோகித்திருக்கிறார். பிறகு பெரிய அறை, அந்த அறையில் சீருடைகள் சீருடைகள்.. நிறம், அளவு, பதக்கங்கள் என டஜன் கணக்கிலிருந்த அவற்றைத் தவிர வேறு உடைகளை அவர் வாழ் நாளில் அணிந்ததில்லை போன்றதொரு தோற்றம். ஓர்லோ·ப் அரன்மணையில் ஸ்டாலினுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. புதிதாக ஓர் அறை கட்டப்பட்டது. அக்கதவும் சன்னல்களும் மிகுந்த பாதுகாப்புகொண்டவையாக இருந்தன. அங்குதான் ஸ்டாலில் இரவுவேளைகளில் உறங்குவது வழக்கம். குட்டித்தூக்கம் போடுவதென்றாலும் அந்த அறைதான் வேண்டும். அந்த அறைக்குச் செல்ல இருப்பது நான்குமணிநேரமும் காவலில் இருக்கும் கொக்காசிய படைவீரர்களைக் கொண்ட மற்றொரு அறையைக் கடந்து செல்லவேண்டும். அவர் அங்கு தங்கும் நாட்களில் நான்கு முறை ஸ்டாலினிடமிருந்து காவற்படைதலைவனுக்கு அழைப்பு வரும். காலை ஒன்பது மணிக்கு தேநீர் அருந்தும் நேரம். பிற்பகல் ஒருமணிக்கு மதிய உணவு, இரவு ஏழுமணிக்கு இரவு உணவு, இரவு பத்துமணிக்கு மீண்டும் தேநீர்.

வந்திருந்த தலைவர்களை, காவற்படைதலைவன் முதற் தளத்திருந்த அலுவலக அறைக்குச் சென்றான். முதலிற் சொல்ல தயங்கினான். பிறகு கடகடவென்று வார்ந்த்தைகள் வெளிப்பட்டன.

– ஐயா சொல்லவில்லை. தொலைபேசியில் உங்களை அழைபதென்ற முடிவை எடுத்தது நான் தான். தோழர் ஸ்டாலின் அறைக்குள் இருக்கிறார். இரவு ஏழுமணிக்குப்பிறகு எவ்வித அழைப்பும் அவரிடமிருந்து வரவில்லை.

வழக்கம்போல ஏழுமணிக்கு இரவு உணவைக் கொண்டு வரும்படி பணித்தார். ஆனால் பத்து மணிக்கு தேநீருக்கான அழைப்பு வரவில்லை.. இரண்டு மணிநேரம் பொறுமையாக அந்தக் கொக்காசிய வீரர் காத்திருந்திருக்கிறார். எந்த அறிகுறிகளுமில்லை. இதற்கு முன்பு அவருக்கு இதுபோன்ற அனுவங்கள் ஏற்பட்டதில்லை. நள்ளிரவு நெருங்கியது. ஏதாவது செய்தாகவேண்டும் இப்படியே எவ்வளவு நிமிடங்கள் காத்திருப்பது? முதல் அழைப்பு பொதுச்சபை அலுவலகத்திற்குச் சென்றது. ஒருவரும் மறுமுனையிலில்லை. வேறு வழியில்லை என்ற கட்டத்தில் ஏழு தலைவர்களையும் அழைப்பதென்று முடிவு செய்து வரவழைத்திருக்கிறார்.

தலைவர்கள் முகத்தில் குழப்பம். அவர்களுக்கும் இது முதல் அனுபவம் தவறான நடவடிக்கைகள் அவர்கள் தலைக்கே ஆபத்தாக முடியலாம். வரிசைப்படி மொலொத்தெவ்  முடிவினை எடுக்கவேண்டியவராக இருந்தார். கதவை உடைக்கலாமென்றார். துப்பாக்கிக்குண்டுகளும் துளைக்கக்கூடியடல்ல. வாகனங்கள் சக்கரங்களை கழற்ற உதவும் ஆயுதங்களும் பிற்வும் கொண்டுவரப்பட்டன. கொக்காசிய வீர்கள் தங்கள் பலம் முழுவதையும் உபயோகித்தார்கள். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகுஸ்டாலின் அறைக்கதவு நெக்குவிட்டது, திறக்க முடிந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஒருவர்பபின் ஒருவராக நுழைந்தார்கள்.

அமைதி. பெரும் அமைதி. மீண்டுமொரு கதவை உடைக்கவேண்டியிருந்தது. மெல்ல அதையும் உடைத்துக்கொண்டு நுழைந்தார்கள். முதலில் பார்த்தவர் குருஷ்சேவ். சீருடையை அவிழ்க்காமல் தரையில் கிடந்த ஸ்டாலினை தலைவர்கூட்டம் நெருங்கியது. பேரியாவின் குரல்தான் முதலிற் கேட்டது.

– கொடுங்கோலன் இறந்தான்

அங்கிருந்த மற்றவர்கள் அமைதியாக அபிப்ராயங்களை சொல்லவிரும்பாதவர்கள்போல அமைதிகாக்க பேரியா மகிழ்ச்சியில் திளைப்பது வெளிப்படையாக தெரிந்தது; குருஷ்சேவ் குனிந்து தரையிற் கிடந்த உடலைப் பார்த்தார்.

பிற்காலத்தில் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த குருஷ்சேவ் மறக்கமுடியாத அனுபவமென்றார். “எனது முதுகுத்தண்டில் அதன் சிலிர்ப்பை உணர்ந்தேன். பிறகு விலகிக்கொண்டேன். என் பின்னாலிருந்த மற்றவர்கள் அதை புருந்துகொண்டார்கள், பிறகு அவ்விடத்தைவிட்டு துரிதமாக நடந்து நடைகூடத்திற்கு வந்தோம்” என பின்னர் குருஷ் சேவ் எழுதினாராம். அவரது இந்த விவரிப்பில் முரண் இருக்கிறதென்று அவரது அனுபவத்தை வாசிக்க நேர்ந்தவ்ர்களின் கணிப்பு. ஸ்டாலின் உடல்நிலைகுறித்து அக்கறைக்கொள்ளாமல் தலைவர்கள் வெளியேறினர் என்றபொருளில் குருஷ் சேவின் முதல் விவரிப்பு இருக்க, மற்றொன்று மருத்துவரை அழைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தையும் மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்த கசிவினை அறிந்துகொள்ள முடிந்ததையும் கூறுவதாக உள்ளது. இவ்விரண்டையும் தவிர்த்து புகழஞ்சலி போன்றதொரு வேறொரு தகவலும் உள்ளது. அது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு கை, கால், பேச்சு இவற்றை மட்டுமே பாதித்திருந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டதற்கும்,  குருஷ் சேவ் பின்னர் அளித்த விளக்கமும் வேறுபட்டிருந்தன: ” நினைவு திரும்பாமல் மூன்றுநாட்கள் இருந்தார், நாங்களும் அருகிலேயே இருந்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு பிரக்ஞைவர அறைக்குள் சென்றோம். தாதியொருத்தி, தேநீரை ஒரு சிறுசிறுகரண்டிகளாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எங்கள் கைகளைத் தொட்டு அங்கிருந்த ஆட்டுக்குட்டிக்கு கரண்டிகொண்டு பாலூட்டிக்கொண்டிருந்த சிறுமியின் படத்தைக்காட்டி புன்னகைக்க முயன்றார். அப்படத்தைச் சுட்டிக்காட்டியதன்மூலம் தான் ஆட்டுக்குட்டியைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவர் இறந்தார்.. நான் அழுதேன்.  நாங்கள் அனைவரும் அவர் மாணவர்கள், அவருக்கு கடமைப்பட்டவர்கள். அவரும் மகா பீட்டருக்கு வேறுபாடுகளில்லை, அராஜகத்தை அராஜகத்தாலேயே வீழ்த்தினார் வேறென்ன சொல்வது.- ஆனால் மா மனிதர்”(1)

இதுபோன்ற பல முரண்பட்ட தகவல்கள் ஒருபுறமிருக்க, இறுதிக் காட்சியை குருஷ்சேவ் கீழ்க்கண்ட வகையில் விவரிக்கிறார்:

“மருத்துவர்கள் அதிகாலை 2மணி அளவில் ‘தாட்ச்சாவுக்கு’ வந்தார்கள். ஸ்டாலின் அறையைவிட்டு வெளியேறியதும் அவர்களில் மூத்தவர், “இரவும் இத்தனை கடுமையாக இல்லாமலிருந்து, தக்க தருணத்தில் தகவலும் கிடைத்து, நாங்களும் உரிய நேரத்தில் வந்திருப்போமெனில் ஒருவேளை தலைவர் ஸ்டாலினை காப்பாற்றியிருக்கலாம். செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கண்களிரண்டையும் சற்று முன்புதான் மூடினேன் என ஸ்டாலின் மரணத்தை உறுதிபடுத்தியதும், தானும், மொமொட்டோவ், மலென்க்கோவ் மற்றும் அங்கிருந்த பிற தலைவர்களும் தங்கள் மூத்த தலைவருக்காக அழுததாகவும் மாறாக பேரியா அழாததோடு, மூத்த  மருத்துவரிடம்:

– இறப்புக்கு என்ன காரணம்? என்று கேட்டதாகவும்

– மூளையில் இரத்தகசிவு, பக்கவாதம், மாரடைப்பு. என மருத்துவர் அதற்கு பதிலிறுத்ததாகவும் குருஷ் சேவ் குறிப்பிடுகிறார்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி இரவு சோவியத் பூமியில் நிகழ்ந்த பூகம்பத்தைப்பற்றி குருஷ் சேவ் மூலமாக நாம் அறிய வரும் தகவல்.

இதுதான் உண்மை. அன்றைய சோவியத் நாடு அதிகாரபூர்வமாக தெரிவித்தவை. ஆனால் இதுதான் உண்மையா? இந்த உண்மையில் உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என்கிற கேள்விகள் இருக்கின்றன.

(தொடரும்)

 

———————————————-

 

1. பிரான்சுநாட்டைச்சேர்ந்த பத்திரிகையாளரு இடசுசாரி சிந்தனையாளருமான இம்மானுவெல் அஸ்த்தியே என்பவருக்கு (Emmanuel d’Astier, op.citt – Dossier secrets page 364.) அளித்திருந்த பேட்டி.

மொழிவது சுகம்- பிப்ரவரி 2012

தனிமை:

அண்மையில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்முடிவு ஏழு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒருவர் தனிமையில் வாழ்வதாகத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தனிமை வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இன்னார்தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நிலை. இந்நோய்க்கு இதுதான் உகந்த காலம், இவர்கள்தான் பொருத்தமானவர்கள், இப்பிரிவினரைக் இலக்குவைத்தே தாக்குகின்றது எனகணிக்கமுடியாத சூழலில் சமூக வியல் அறிஞர்களை குழப்பத்தில் இத்தனிமை நோய் வைத்திருக்கிறதென்று சொல்லவேண்டும். காரணம் கீழைநாடுகள்போலன்றி மாணவர்கள், மணவாழ்க்கையை விரும்பாதவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் என பலரும் இந்நோயின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

இப்போதும் எங்கள் கிராமத்தில் கூட்டுக்குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நல்லது கெட்டது நடக்கின்றபோது பார்க்கவேண்டும் ஒருவர் வண்டியை பூட்டிக்கொண்டிருப்பார், இன்னொருவர் வெள்ளைவேட்டி சட்டை சகிதம் பக்கத்து டவுனுக்கு புறப்பட்டுப்போவார், கிழவி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கும், மருமகள் வாயிலிருந்து சலித்துக்கொண்டு பதில் வரும். அடுத்தமாதத்தில் விசேடமிருக்க அப்போதே கெட்டிமேளமும் நாதஸ்வரமும் அந்த வீட்டில் ஒலிக்க ஆரம்பிக்கும், வீட்டிற்கு போனால் யாரு மணியக்காரர் வீட்டு சின்னத்தம்பியா? உட்காருங்க, அடியே இரண்டு முறுக்கும் ஒரு லட்டும் வச்சு பிள்ளைகிட்டே கொடு என்று அன்புகலந்த உபசரிப்பு தவறாமல் வரவேற்கும்.  விவசாயக்குடும்பங்களைத் தவிர்த்து வியாபாரக் குடும்பங்களும் (இதில் அரசியலும் அடக்கம்) கூட்டுக்குடும்பங்களாக வாழும் பேற்றினை பெற்றிருக்கிறார்கள். இவ்விரண்டு பிரிவினரைத் தவிர்த்து நமது இந்தியச் சமூகத்தை அனுகினால் குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினருக்கு விரும்பியோ விரும்பாமலோ உயிர்வாழ்க்கையின் ஒரு பகுதி தனிமைக்கு என்றாகிவிடுகிறது. மேற்கத்திய நாடுகளைப்போன்றே இந்திய நகரங்களிலும் பிள்ளைகளை தொலைதூர நகரங்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் பெற்றோர்களை பார்க்கிறோம். ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கிறார்கள், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சொந்தமண்ணில் தனிமைதான் துணை: நினைவுகளைத் தின்று , ஏக்கங்களைக் குடித்து அவர்கள் பசியாறவேண்டியிருக்கிறது. பிறர்பார்வாவையில் அவன் அல்லது அவள் தனிமையில் வாழ்வதில்லை, தனிமையில் வாடுகிறான் அல்லது வாடுகிறாள்

மனிதன் தனித்திருக்கப் படைக்கப்பட்டவல்ல தன் இனத்தைத் தேடி, (இங்கே -அவனை அடையாளப்படுத்தக்கூடிய எதுவும்) உரையாடவும், உறவாடவும் படைக்கபட்டவன். இயல்பிலே மனிதவாழ்க்கை பிறர் சார்ந்தது. ஒற்றைக்குரியதல்ல. அவன் இருப்பு பிறால் தீர்மானிக்கப்படுவது. தந்தை, தாய், அக்காள், தங்கை, முதலாளி, தொழிலாளியெனத் தனிமனிதனை அடையாளப்படுத்தும் எந்தச் சொல்லையும் எடுத்துக்கொள்ளுங்கள்: இன்னாரின் தந்தை, அவளுக்குத் தாய், அவனுக்குச் சகோதரன், அவர்களுக்கு முதலாளி என்ற உறவுகளால் உருவானவை. இந்த மற்றமைகளிடத்தில் வெறுமைகளையிட்டு நிரப்பினால் தனிமை. இன்றையச்சூழலில் தனிமையைத் தவிர்க்கமுடியுமா, விலக்குவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? இந்த நூற்றாண்டின் கொடிய கொள்ளை நோயென்று சொன்னாலும் மிகையில்லை. இருந்தாலும் அதற்காக நாம் மனம் சோர்ந்துவிடமுடியாது. நாம்மை நாமே புரிந்து கொள்வதற்கு தனிமையைக்காட்டிலும் வேறு சந்தர்ப்பம் வாய்க்குமா சொல்லுங்கள் என்கிறவர்களும் இல்லாமலில்லை. அப்படியான சந்தர்ப்பம் அறுபதில் வாய்ப்பதால் என்ன இலாபமென்று அவர்கள் கொஞ்சம் விளக்கினால், தேவலாம். .

 ஜேன் ஏர்

ஜேன் ஏர் (Jane Eyre) என்ற நாவலை நம்மில் பலர் வாசித்திருக்ககூடும். நம்மில் பலர் என்ன இருந்தாலும் ஷேக்ஸ்பியர் போல் ஆகுமா என்பார்கள். எனக்கு ஜேன் ஏர் நாவலையும் அதன் ஆசிரியர் சார்லத் ப்ரோண்ட்ட (Charlotte Bronte) என்கிற பெண் எழுத்தாளரையும் கொண்டாடவேண்டும். நமது தமிழ் பேராசிரியர்கள் கம்பனைப்போல் ஆகுமா, சங்க இலக்கியங்களைப்போல ஆகுமா என குரல்கொடுப்பதுபோலவே ஆங்கிலபேராசிரியர்கள் ஷேக்ஸ்பியருக்கு ஈடாக ஒருவர் பிறக்கவில்லை என்கிறார்கள். எனக்கு முதலில் இலக்கியம் என்பதே ஒப்பிடுசெய்வதல்ல. நளவெண்பாவிற்கு ஒரு புகழேந்தியெனில் வானம் வசப்படும் நாவலுக்கு ஒரு பிரபஞ்சன். இருவரும் அவரவர் காலத்தில் சாதித்தவர்களே. கம்பனே இன்றிருந்தாலுங்கூட அவரது படைபாற்றல் ஒர் உரைநடை இலக்கியத்தை தருவதற்கே உதவியிருக்கும். கணினியின் உதவியால் நாம் ஆயிரம் பக்கங்களில் படைப்புகளை கொண்டுவருகிறபொழுது, எழுத்தாணிகொண்டு பழகியவரென்பதால் பத்தாயிரம் பக்களில் நாவல் எழுதியிருப்பார் அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும் இராமயணம்போல வருமா என்றெல்லாம்  அவரை விமர்சிக்க முடியாது. அந்தக் கம்பன் காலம் வேறு. இந்தக் கம்பன் காலம் வேறு. மீண்டும் ஜேன் ஏர் நாவலுக்கு வருகிறேன். சொந்த வாழ்க்கை முழுவதையும் படைப்பில் பேசிய முதல் நாவல் ஆசிரியர் அநேகமாக இவராகத்தான் இருக்கக்கூடும். 1847ம் ஆண்டு பதிப்பிக்கபட்ட இந்நாவல் பல பதிப்புகளை கண்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் ஆசியரின் முதல் நாவல்(The Professor) பல பதிப்பாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டது. நவலுக்குகிடைத்த வரவேற்பு திரைப்படத் துறையினரின் கவனத்தைப்பெற்றது 1915ம் ஆண்டிலிருந்து நாவல் பலரின் திரைக்கதைகளில் வெள்ளித் திரையை ஏற்கனவே கண்டிருக்கிறது. இந்நிலையில் பத்தாவது முறையாக நாவல் திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. படத்தின் இயக்குனர் காரி ·புக்குனாகா (Cary Fukunaga).. தொலைக்காட்சியில் ஜோன்போன்ஸ்டெய்ன்(Joan Fontaine) ஜேர் ஏர் ஆக நடித்த பழைய திரப்படத்தைப் பார்த்திருக்கிறேன். புதுப்படம் எப்படி இருக்கிரதென்று பார்க்கவேண்டும். நாவலை படிக்கப் பொறுமையில்லாதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம். இளம்வயதில் தாயைப்பறிகொடுத்து பின்னர் தந்தையையும் இழந்து சித்தியின் ஆதரவில் வளரும் பெண்ணுக்கு ஏற்படும் சோதனைகளென்ற உலகமறிந்த கதை எப்படி அலுக்காமல் இத்தனை வருடங்களுக்குப்பிறகும் சினிமாவாக மீண்டும் மீண்டும் அவதாரமெடுத்து வெற்றிபெறுகிறதென்பதை அவசியம் இலக்கியத்தை முழம்போடுகிறவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அழகான ராட்சசன்

பிராசுவாஸ் சகாங் (Françoise sagan) என்ற பிரெஞ்சு பெண் நாவலாசிரியைக்கு அழகான ராட்சசி என்ற பட்டப்பெயருண்டு. அவரது ‘வணக்கம் துயரமே’ நாவலைப்படித்துவிட்டு மொரியாக் என்கிற இலக்கிய விமர்சகர் அவருக்கு சூட்டிய பெயர். பெண்ணுக்கு சரி குழந்தைக்கு வைப்பார்களா? அதுவும் அக்குழந்தையின் பெற்றோர்கள்! பிரான்சு நாட்டின் வடபகுதி மாகாணமொன்றில் நடந்த அதிசயமிது. உள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்குச்சென்ற பெற்றோர்கள்  பிறப்பு இறப்பு அலுவலகத்தில் தங்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது, ஊழியர் குழந்தையின் பெயரைக்கேட்க அவர்கள் ‘ராட்சசன் (Démon) எனக்கூறியிருக்கிறார்கள். ஊழியர் பெற்றோரிடம் இப்பெயர் நன்றாக இல்லையே, நாளை குழந்தையைப் பாதிக்காதா என்றிருக்கிறார். பெற்றோர்கள் உறுதியாக இருக்கவே வேறுவழியின்றி குழந்தையின் பெயரை ‘ராட்சசன்’ என்று பதிவு செய்துவிட்டார். ஆனாலும் அரசு ஆட்சேபனை தெரிவித்தது. தனது கடிதத்தில் “நாளை குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும்” எனவே வேறு பெயரை தேர்வுசெய்யவேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் பெற்றோர்கள் விடுவதாக இல்லை. தற்போதைய சூழலில் பெற்றோர்கள் என்ற தகுதியில், குழந்தையைத் தவிர வேரெவரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதென்ற நிலையில் தங்களுக்கு எந்தப்பெயரையும் குழந்தைக்கிட உரிமையுண்டு என்று வழக்குபோட்டு குடும்ப நீதிமன்றத்தில் தங்களுக்கு ச் சாதமாகத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்;கீழ் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யப்போவதில்லையாம். ஆகப்பையன் வளர்ந்து ஆட்சேபம் தெரிவிக்கும்வரை ‘ராட்சசன்’. எனக்குள்ள சந்தேகம் ஒருவேளை இது குழந்தையின் தாய் செய்த தந்திரமாக இருக்கலாம். மகனைக் கொஞ்சும் சாக்கில் கணவனை திட்டுவதற்கு அவர் தீட்டிய தந்திரமோ என்னவோ?  இதுபோன்ற விஷயங்களில் பெண்கள்கெட்டிக்காரர்கள்.  ராட்சசன் என்ற பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்த பிரெஞ்சு அரசாங்கம்தான் இந்தோசீனா யுத்தத்தின்போதும் இரண்டாம் உலகப்போரின் போதும் பிரெஞ்சு ராணுவத்தில் சேரவந்த தமிழர்களின் பெயர்கள் நீளமாக இருக்க திங்கள், செவ்வாய், புதன் என்று வார நாட்கள் பெயர்வைத்தது.  தரை, வானம், திராட்சை, கறுப்பு வெள்ளை, பச்சை, நாய், கழுதை என்றெல்லாம் புதுச்சேரி தமிழர்களுக்குப் பெயர் விநோதங்களுண்டு. யாரேனும் புதுச்சேரிதமிழரை பெயரைக்கேட்க அவர் ‘இல்லை’ (Rien) எனலாம். உண்மையில் அது அவர் பெயர், கனவான் பிரெஞ்சுக்காரன் சூட்டியது.

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
———————————————-

நன்றி: அம்ருதா பிப்ரவரி 2012

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -15

Mademoiselle சொல் இனி இல்லை:

ஆங்கிலத்தில் Miss அல்லது My young lady என்ற பொருள்கொண்ட மத்மசல் (Mademoiselle )

என்ற பிரெஞ்சு சொல்  இளம்பெண்களையும், திருமணம் ஆகாத பெண்களையும் குறிப்பிடும் சொல்லாக வழக்கிலிருந்தது. நீங்கள் ஆண்களெனில் Bonjour Monsieur என்றோ, பெண்களெனில் உங்கள் தோற்றம் வயதைப்பொறுத்து Bonjour Mademoiselle என்றோ Bonjour Madame என்றோ பொதுவிடங்களிலும், அலுவலகங்களிலும் (பிரான்சு நாட்டில்) முகமன்கூற கேட்டிருப்பீர்கள்.

பல காரணங்களை முன்னிட்டு  Mademoiselle (Miss- குமரி அல்லது யுவதி) என்ற சொல் பெண்களைப் புண்படுத்துவதாகவும், அதன் தேவை பொருளற்றதெனவும் கொள்ளப்பட்டு ஜனவரி 1- 2012லிருந்து Cesson-Sévigné நகரசபை (Ille-et-Vilaine, Bretagne)  தமது அலுவலக நடவடிக்கைகளிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்தது. இம்மாதம் 21ந்தேதியிலிருந்து பிரான்சுநாட்டின் பிரதமர் பிரான்சுவா ·பிய்யோன்(François Fillon) இச்சொல்லை நாடு முழுவதும் அரசு அலுவலக உபயோகத்திலிருந்து அதிகாரபூர்வமாக  நீக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆக பிரான்சு நாட்டில் Mademoiselle என்ற சொல் உத்தியோகபூர்வமாக இனியில்லை. பெண்கள் அனைவரும் வயது வேறுபாடின்றி அவர்களுடைய மணவாழ்க்கையைக் கணக்கில் கொள்ளாது இனிமேல் Madame (மதாம்) என்றே அழைக்கப்படுவார்கள். அவ்வாறே இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற சொற்களும் அரசாங்க ஆவனங்களில் இனி தொடராது.

அண்மையில் பிரெஞ்சு பெண்ணுரிமை அமைப்புகள் எழுப்பிய உரிமைக்குரலுக்கு அரசு அளித்திருக்கும் அனுகூலமான பதிலிது. இரண்டொரு மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது காரணமாக இருக்கலாம். இங்கே வேறொரு செய்தியையும் குறிப்பிட்டாகவேண்டும். தொடக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு Mademoiselle, Madame என பெண்களுக்கு இருந்ததைப் போலவே ஆண்களுக்கும் Demoiselle என்ற சொல்லுக்கு ஈடான Damoiseau, Monsieur சொற்கள் இடைக்காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் Damoiseau என்ற சொல்லை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு Monsieur என்ற சொல்லை மட்டும் உபயோகிப்பதென தீர்மானித்திருக்கிறார்கள். ஆக பெண்களுக்கு காலம் கடந்து நீதிவழங்கியிருக்கிறார்கள்.

——————————

 

இசைவானதொரு இந்தியப் பயணம் -2

பிப்ரவரி- 2

சென்னை சூளைமேட்டிலிருந்த இந்தியன் வங்கி விடுதியில் விழித்தபோது காலை 7 மணி. நண்பர் சவியே கிடைத்த நேரத்தைச் சிக்கெனப் பிடித்து பராபரமேயென குறட்டைக்குள் உறங்கினார். உறங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். எனக்கும் படுத்தால் உடனே உறங்கிவிடும் பழக்கமுண்டு. சென்னையில் அன்றைக்கு வாய்க்கவில்லை. ஆக விழித்தும் விழியாமலும் படுத்திருந்தேன். நண்பர் எழுந்து உட்கார்ந்தார். ஏற்கனவே மேசையில் திறந்து வைத்திருந்த மடிக் கணினி முன்பாக அமர்ந்தார். அதை ஒரு வேடிக்கைபோல பார்த்துக்கொண்டிருந்தேன். கணினிக்கு உயிர்ப்பூட்டி இணைப்புக்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றதை வெளிச்சம் பூசிய அரையிருட்டில் தெரிந்த முகத்தில் காணமுடிந்தது. ஆனால் அடுத்த கணம் ஓ Merde! என்றார். அதனை இங்கே மொழி பெயர்த்து ஆகப்போவதொன்றுமில்லை. என்னதான் புற உலகுக்கென நமது நடை உடை பாவனைகளுக்கு முலாம் பூசினாலும், இப்படி இயல்பு குணங்கள் சொற்களூடாக திடீரென்று பல்லை இளிக்கும். சாயம் வெளுத்துவிடும். மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. பொதுவிடங்களில் கவனத்துடன் காப்பாற்றப்படும் இயற்கைக்குணம் தனித்திருக்கும்பொழுதும், நெருங்கியவர்களுடன் உரையாடும்பொழுதும் வெளிப்பட்டு நாம் இன்னாரென்று காட்டிக்கொடுத்துவிடும்.

கணினியை மடித்து ஒதுக்கிவிட்டு என்னைப்பார்த்தார். அவருடைய கணினி எதிர்பாராமல் கிடைத்த இணைப்புகாரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அப்பிரச்சினையைத் தொடவில்லை. புரிந்து கொண்டவிதமாக தலையாட்டினேன். இருவருமாக ஒருவர் பின் ஒருவராக காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு விடுதிக் காவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காப்பிவரவழைத்து குடித்தோம். நண்பர் சவியேக்குள்ள பிரச்சினை, கறுப்புக் காப்பி குடிப்பது. இந்தியாவில் பால் கலந்த காப்பி நன்றாக இருக்கிறது. கறுப்புக் காப்பியை தயாரிக்க நமக்குப் போதாதென்பது நண்பரின் அபிப்ராயம். மேலை நாடுகளில் எஸ்ப்ரெஸ்ஸோ காப்பிகளை குடித்துப்பழகியவர்களுக்கு நிலமை சங்கடந்தான். நட்சத்திர ஓட்டல்களில் அப்படியான சங்கடங்கள் இருக்காதென நினைக்கிறேன். வயிற்றில் பசி தலைகாட்டியது. விடுதிக் காவலரை அழைத்து நண்பருக்கு பிரெட் பட்டரென்றும், எனக்குப் பொங்கல் வடையென்றும் தீர்மானித்து வாங்கிவரும்படி அனுப்பினேன். எனது தொலைபேசிக்கு சிம் கார்டும் தேவைபட்டது. அதிலுள்ள சிக்கல்களை கூறிய விடுதிக்காவலர் கடவுச்சீட்டு அல்லது வேறு ஆதாரங்கள் வேண்டுமென்றார். என்னிடத்தில் OCI (Overseas Citizen of India) இருந்தது கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல பசி சீக்கிரம்வந்தால் நல்லதென்று கூறி அனுப்பினேன். அவர் தலையாட்டியவிதம், அற்புதவிளக்கு பூதம்போலிருக்க அறைக்கதவை தாழ்ப்பாள்கூட போடாமல் விட்டுவைத்திருந்தேன். முதல் நாள் இரவு உணவென்ற பேரில் லூப்தான்ஸா எங்களைப் பழிவாங்கியிருந்தது. விமானம் இறங்க ஒரு மணிநேரமிருக்க  அவசர அவசரமாக ஒரு சாண்ட்விச். பின்னர் கொடுத்த தட்டை திரும்ப வாங்கும்போது கெச்சப்பும், டிஸ்யூவும் விநியோகித்தார்கள். நண்பருக்கு அதுபோல நான்கு சாண்ட்விச் வேண்டும்.

காலை மணி எட்டு. விடுதிக் காவலர் வரவில்லை. 8.30 ஆயிற்று வரவில்லை. சென்னையில் வந்திறங்கி ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. இந்திரனுக்கும், பதிப்பாள நண்பர் நடராஜனுக்கும் வருகையைத் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக நண்பர் இந்திரனுடன் பிப்ரவரி 5ந்தேதி புதுவையில் நடபெறவிருந்த கவிதை வாசிப்புக்காக தயாரிக்கவிருக்கும் ஒரு சிறிய கையடக்கமான புத்தகம் தொடர்பாக பேசவேண்டியிருந்தது. மறுமுனையில் கிடைத்தார். காலையில் என்ன திட்டமென்றார். எங்கள் அட்டவணையில் உங்களைச் சந்திப்பதென்று இருக்கிறது,  தொந்தரவுகளேதுமில்லையெனில் சந்திக்கலாமே என்றேன். அவரும் உங்களௌக்குக்காகத்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் பேசலாமென்றார். அவர் வீட்டிற்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் முகவரி தேவைபட்டது. ஆட்டோகாரருக்குச் சொல்லவேண்டிய அடையாளத்தையும் தெளிவுபடுத்திக்கொண்டு காலை பத்து மணிக்கு வந்துவிடுவோமென தெரிவித்தேன்.

காலை 9மணி. உணவுடன் வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்ற காவலர் வரவில்லை:

சார்லி சாப்ளின் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படமொன்றுண்டு. அதில் சாப்ளின் பனிமலையொன்றில் கடும் பனிப்பொழிவால் கிடைத்த சிறுகுடிலொன்றில் தங்க நேரும். அக்குடிலில் வேறொரு மனிதரும் இவரைப்போலவே பனியிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருப்பார். இருவரும் கொடூரப்பசிக்கு ஆளாகி எதையும் தின்னலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். எதிராளியின் பார்வையில் சாப்ளின் கோழியாகத் தோற்றம் தருவார். நண்பர் சவியே என்னைப் பார்த்தபோது சாப்ளின்போலவே எனக்கும் இறக்கை முளைத்திருக்க தப்பிக்க வேண்டியிருந்தது.

விடுதியின் கீழே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் பிரிந்து கிடந்தன. கதவைத் தட்டினேன், எட்டிப் பார்த்த நபரிடம்:

– விடுதிக்காவலரின் பெயரைத்சொல்லி தேடுவதாகக் குறிப்பிட்டேன்.

– வெளியே போயிருக்கிறார் வந்துவிடுவார்- என்றார்.

அந்த வந்துவிடுவார் என்கிற சொல் தந்த உத்தரவாதத்தில் மயங்கி தெருவைப்பார்த்தேன். இந்தியப் பெரு நகரங்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்புக்குட்படாமல் தமது ரகசிய குணங்களை போற்றிக் காக்கும் இலட்சோப இலட்ச தெருக்களில் அதுவுமொன்று. போடிகோவும் வண்ணப்பூச்சுமாக நிற்கிற கவர்ச்சிகரமான ஒற்றை வீடுகள், சோகையான நிறத்திற்கு வாழ்க்கைப்பட்டு மூக்கைச் சிந்தும் குடியிருப்புத் தொகுதிகள், முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கும் ஒண்டிக் குடித்தனங்களை உள்ளடக்கிய வீடுகள், அண்ணாச்சி கடை, நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிக்கு இஸ்திரிபோடும் மனிதர், குப்பையை வாரலாமா விடலாமா என யோசித்து யோசித்து பதுகாப்பு எதுவுமின்றி குப்பைகளை சைக்கிள் வண்டியில் நிறுத்திய பிளாஸ்டிக் கூடைகளில் நிரப்பிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் இருபக்கமும் தலையை திருப்பியவண்ணம் தமது வாகனத்தை முட்டி இழுத்து செல்லும் நடுத்தரவயது பெண்மணி. அரசு பெண்கள் விடுதியென்று எழுதியிருந்த ஒரு மாடி வீட்டின் தெருக்கதவு விசுக்கென்று திறக்கப்பட வெளிப்பட்ட இளம்பெண் ஒருத்தி தோளில் தொங்கியிருந்த பையை அவ்வப்போது முன்னால் தள்ளி பிடித்தபடி இடது கை கைக்குட்டையால் முகத்தில் அரும்பிய வியர்வையை ஒத்தியபடி நடந்துபோனார். இரண்டு ஆட்டோகாரர்கள் அருகருகே வண்டியை நிறுத்தியபடி உரையாடுகிறார்கள்.  சென்னை மொழியில் திட்டியபடி சிறுவனொருவனை திட்டிக்கொண்டு ஓடினான். சுவரொட்டியில் கண்ணீர் அஞ்சலி.

காலை மணி 10. விடுதிக்காவலர் வருவதாக இல்லை. பொறுமை இழந்து தொலைபேசியில் பிடித்தேன்.

– என்னங்க ஏதாச்சும் கிடைச்சுதா? நாங்க இன்றைக்கு காலமைதான் ஏதாவது சாப்பிடவேண்டுமென்று உங்களிடம் சொன்னது, நாளைகில்லை.

– அஞ்சு நிமிடத்திலே வந்துவிடுவேன் சார்.

ஐந்து நிமிடத்தில் வரவும் செய்தார். ஆனால் கைகளை வீசிக்கொண்டு 2G ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு முந்தைய ராஜா போல நடந்துவந்தார்.

– என்னங்க சும்மா வறீங்க..

– கோபிச்சுக்காதீங்க சார். ஒரு வேலையா போயிட்டேன். நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேன். பத்து நிமிடம் பொறுக்கமுடியுமா?

மிஸ்டு காலையோ கையையோ கொடுக்கவிருப்பமில்லாததால்

– இல்லைங்க பரவாயில்லை. நாங்கள் போகிற வழியில் பார்த்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டு கீழிருந்தபடியே நண்பரை அழைத்தேன். பிரெஞ்சு நண்பர் இறங்கிவந்தார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து, நண்பர் இந்திரன் முகவரியைக் கூறினேன். ஆட்டோகாரர் புரிந்துகொண்டார் ஐம்பது ரூபாய் கேட்டார். நண்பரும் நானுமாக ஏறிக்கொண்டோம். வழியில் ஐரோப்பிய மற்றும் இந்திய உணவுகள் சேர்ந்தாற்போல கிடைக்கும் உணவு விடுதி தென்படுகிறதா எனபார்த்தோம். எதுவுமில்லையென்றானது. நண்பர் இந்திரன் வீட்டிற்கு பத்து நாற்பதுக்கெல்லாம் வந்தாயிற்று. எதிர்பார்த்ததுபோலவே காலை உணவு ஆயிற்றா என்றார். இல்லையென்றேன். இங்கேயே சாப்பிடலாமே, தோசை இருக்கிறதென்றார். தோசையுடன் பூரியும் வந்தது. பிரெஞ்சு நண்பர் விருப்பமாக சாப்பிட்டார், நானுந்தான்.

மூவருமாக காலை உணவுக்குப்பிறகு ஏற்கனவே கூறியதுபோல கவிதைக் கையேடு தொடர்பாக நண்பர் இந்திரனுக்குத் தெரிந்த கணினி அலுவலகத்துக்குச் சென்றோம். காலை பதினோரு மணிக்கே வெயிலின் கடுமை தெரிந்தது. சில பிழைகளை திருத்தியதோடு எங்கள் பணி முடிந்தது.  சிறிய கலைபெட்டகமாக வடிவமைக்கப்பட்ட அப்புத்தகத்தின் வெற்றிக்குரியவர் இந்திரனென்று சொல்லலாம்.  இந்திரனுக்குள் ஒரு பிரம்மனும் உடன்வாழ்ந்ததை அன்றுதான் கண்டேன். மனதில் நிறைவுடன் மதிய உணவுக்கு ஒரு மலேசியன் அசைவ விடுதிக்குச் சென்றோம்.  விலை, தரம், அமைதி நன்றாக இருந்தன. மீண்டும் கணினி  கூடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இறுதியாக ஒருமுறை படிவத்தைப் பார்த்து மனதுக்கு நிறைவு ஏற்பட்டவுடன் திரும்பினோம். திரும்பியபோது மாலை மணி ஏழு. அன்று நண்பர் எஸ்.ராவுக்கு இயல்விருது பெற்றமைக்காக ரஜனியின் தலமையில் பாராட்டுவிழா இருந்தது. நேரம் இணக்கமாக இல்லாததாலும், சுதா ராமலிங்கம் கிரீன் பார்க் ஓட்டலில் எங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்ததாலும் செல்ல முடியவில்லையென்கிற வருத்தம்.

மாலை வெகுநேரம் இந்திரனுடன் ச¨ளைக்காது இலக்கியம் பேசினோம். நண்பர் சவியே தமது Philomensurable குறித்து இந்திரனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். இடையில் நான் மொழி பெயர்க்கவேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இருவருக்கும் தெரிந்த மொழியில் இடைமனிதரின்றி உறவாடுவதிலுள்ள புரிதல் சாத்தியம் மொழிபெயர்ப்பில் கிடைக்காதென்பது நிச்சயம். நேற்றைய இன்றைய இலக்கிய ஆளுமைகள் சிற்பக் கலைஞர்கள் ஓவியர்களென்று பேச்சு நீண்டது. இடைக்கிடை நண்பர் இந்திரன் யாளிப்பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பிரான்சிலிருந்து புறப்படும்போதே காய்ச்சலுடன் புறப்பட்டிருந்தேன். காய்ச்சல் தோள்வலியையும் சேர்த்திருந்தது. அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நண்பர் இந்திரன் அழைத்துப்போனார். அவர் நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுகிற மருத்துவரென்று விளங்கிக்கொண்டேன். அபூர்வமான மனிதர். நண்பர் இந்திரன் அவரைப்பற்றி முன்னதாகக் கூறியிருந்த வார்த்தைகளுக்குப் பழுதின்றி நடந்துகொண்டார்.

இரவு எட்டு மணிக்கு நண்பர் இந்திரனின் சகோதரர் வாகனத்தில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச்சென்றோம். சுதாராமலிங்கம் அவர் துணைவர் ராமலிங்கம் அடுத்தவாரம் மணமுடிக்கவிருந்த அவர்கள் பிள்ளை, பெங்களூர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அவர் மகளென்று அனைவரும் வந்திருந்தனர். பெரிதாக வயிற்றுக்கு ஈயப்படுவதற்கு முன்பாக சிறிதாக செவியையும் கவனிக்க நினைத்ததால் அரசியல், இலக்கியம், பெண்ணுரிமை, உளப்பகுப்பாய்வு, கீழைநாடுகளைப்பற்றிய ஐரோப்பிய பார்வையென உரையாடல் நீண்டது.

தொடரும்…

இசைவானதொரு இந்தியப்பயணம் -1

பிப்ரவரி 1.

முதல்நாள் எனது துணைவி, தனது மகள் வயிற்று பேரனுடைய முதல் ஆண்டு பிறந்த நாளைக்கொண்டாட அமெரிக்கா சென்றாள். தனித்து அவ்வளவுதூரம் பயணிக்க தயக்கம் காட்டினாள் நான் நவீன பெண்கள்  அவதாரத்தையெல்லாம் விளக்கி, ஊக்கப்படுத்தினேன். இங்கே பார், உண்மையில் நீ இல்லாமல் இந்தியா செல்ல எனக்குங்கூட பயமென்றேன்.  பொய் சொல்லாதப்பா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்ற கண்களைச் சமாதானபடுத்த வேண்டியிருந்தது. ஊடியவளை உணராமல் போனால் எழுத்தாளானாக இருந்து என்ன பயன் சொல்லுங்கள்.

அமெரிக்கா புறப்படும் முன்னரேயே எனது பெட்டிபடுக்கைகளையும் பதினைந்து நாளுக்காக துணிமணிகளையும் வேண்டிய பணத்தையும் கொடுத்து, எனது பயணத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள். என்னை ஊருக்குத் தயார்படுத்திய பட்டியலில் மூன்றாவதாகக் கைசெலவுக்கான பனத்தையும் சேர்த்திருக்கிறேன் கவனித்தீர்களா? ஏதோ வியாபாரம், கடை, எழுத்தென்று அலைந்துகொண்டிருக்கிறேனே தவிர, உண்மையில் நிதிமந்திரி அவள்தான். எழுத்தாளனாக இருக்கிறோமில்லையா? எனது புனைவு பிற இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ அவளிடத்தில் ஜெயிப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி. வழக்கம்போல நான்கு மணிக்கு எழுந்தேன். கடந்த சில நாட்களாக Strasbourg நகரில் நல்ல குளிர். கவனமாக உடுத்திக்கொண்டு மனைவி குறித்துவைத்திருந்த கட்டளைகளின் படி வீட்டை இருத்திவிட்டு காரில் இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து எனது பிரெஞ்சு நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, இரயில் நிலையம் அருகிலிருக்கும் எனது கடைக்கருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க பெட்டிகளை நண்பரும் நானுமாக இழுத்துக்கொண்டு ஓடி, இரயில் நிலையத்துக்கருகிலுள்ள லூப்தான்ஸாவின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி பத்து நிமிடம் இருக்கலாம். பேருந்தில் எங்களைப்போலவே பிராங்க்பர்ட் விமானதளத்திற்குச் செல்லவிருந்த சக பயணிகள் வரிசையில் குளிரும் பெட்டியுமாகக்  காத்திருந்தார்கள். பேருந்து ஓட்டுனருக்கு குளிரைப்பற்றிய கவலை இல்லையென நினைக்கிறேன். நான்கு மணி பதினைந்து நிமிடத்திற்கு முன்பாக கதவைத் திறக்கமாட்டேன் என்பதுபோல நிதானமாகத் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஏதோ தயவு பண்ணவிரும்பியவர்போல ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சொர்க்கவாசலைத் திறந்துவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து 250 கி.மீட்டரிலுள்ள பிராங்பர்ட் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. பேருந்தில் ஒரு குட்டித் தூக்கம். ஏழேகால், ஏழரைக்கெல்லாம் பிராங்பர்ட்டை அடைந்துவிட்டோம். நுழைவாயிலில் பிரெஞ்சு நண்பருக்கல்ல எனக்குச் சோதனை. அந்நியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கறுப்பர்கள் (இந்தியர்களும் அதிலடக்கம்) என்றால் கையில் குண்டினை வைத்துக்கொண்டு அலைகிறார்களென்ற பார்வை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. வேண்டா வெறுப்பாக அவனிடம் எனது கடவுசீட்டையும் மற்ற அத்தாட்சிகளையும் காண்பித்துவிட்டு ‘புறப்பாடு’ வரிசைக்கு வந்தோம். கையில் மிண்ணனு பதிவுச்சீட்டு அதை எந்திரத்தில் கொடுத்து பயணத்தைப் பதிவு செய்து அதற்கான அட்டையை எடுக்கவேண்டும். எந்திரத்திற்குக்கூட நான் கறுப்பனென தெரிந்திருக்கவேண்டும் அடம் பிடித்தது. அதைச் சமாதானப்டுத்துவதற்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. ஒருவழியாகச் சமாளித்து பெட்டிகளை பதிவு செய்துவிட்டு, சுங்க அதிகாரிகளையும் கடந்து பாதுகாப்புசோதனையை முடித்துக்கொண்டு, கை பைக்காக காத்திருந்தோம். நண்பரின் பை வந்தது. எனனுடையதில்லை. ஓர் ஆரியப்பெண் -இடலரின் தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். கையை அசைத்தாள். பின்னாலிருந்த நண்பரைப் பார்த்தேன், அவர் வேறு திசையில் கைகாட்டினார். எனது கைப்பையை திறந்துவைத்துக்கொண்டு ஏதோ இரணிய கசிபுவின் வயிற்றைக் கிழித்த நரசிம்ம அவதாரம்போல மற்றொருத்தி. அருகிற் சென்றேன். விஸ்கி போத்தல் கைப்பையிற்கூடாதென்றாள். பத்துவருடங்களுக்கு மேலாக ஒரு விஸ்கி போத்தல் எங்கள் வீட்டில் சீண்டுவாரின்றி இருந்ததென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களாவென்று தெரியாது. சிகரேட், மது, இத்யாதிகளை தொட்டது கிடையாதென சத்தியமெல்லாம் செய்யமாட்டேன். ஆனாலும் எனக்கு விருப்பமானவை பட்டியலில் அவைகளெல்லாம் இல்லை. எப்போதாவது இந்த எப்போதாவதிற்கு இரண்டு மாத இடைவெளியிளியிலிருந்து ஆறுமாதம்வரை பொருள் கொள்ளலாம். ஆகப் பாட்டிலுக்காக கைப்பையை பதிவு  செய்து விமானத்தில் அனுப்பிவிட்டு பறந்து, ஓடி, நடந்து, நீந்தி எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் கடந்து விமானத்தின் நுழைவாயிலைக் கடந்தபோது காத்திருந்த  கொத்தவரங்காய் பணிப்பெண் களின் குட்டன் மோர்கனை ஏற்றுக்கொண்டு நொண்டி நடந்து கபினுக்குள் கையிருப்பை துருத்திவிட்டு நாற்காலிக்குள் அடைபட்டபோது காலை பத்து. மிக மோசமான சேவை. சென்னையில் எங்களை வரவேற்க தோழி சுதாராமலிங்கம் வந்திருந்தார். அதிகாலை சென்னையை தரிசித்துக்கொண்டு இந்தியன் வங்கி விருந்தினர் விடுதியில் படுத்தபோது விடிந்துவிட்டிருந்தது.

தொடரும்…

பண்பாட்டு சந்திப்பு

அன்புடையீர்

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

நா.கிருஷ்ணா

மூன்று மொழிபெயர்ப்புகள்

வணக்கம் நண்பர்களே

அண்மையில் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்கு:

1. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்

மேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகைமையுண்டு. பின்னர் கவிதைகளிலும் எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேகச் சிறப்பு. அவற்றை வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இக்கதையில் இழையோடும் அதிர்வு அசப்பில் சீரான ஓட்டத்தையும் ஆழ்ந்துணர்கிறபோது இதயத் துடிப்பில் ஒரு சுனாமியையும் ஏற்படுத்தும் வல்லமை கண்டு அதிர்ந்தது உண்மை.

உலகங்கள் விற்பனைக்கு
அதிர்வுக்கதைகள்
விலை-90ரூபாய்
சந்தியா பதிப்பகம் 57, 53rd street
சென்னை -600083, இந்தியா

2. உயிர்க்கொல்லி
ஐந்து பிரெஞ்சுக் கதைகளின் தொகுப்பு.
விலை -100ரூபாய்

இதற்கு முன்பு செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்கர்களுக்கு இந்தக்கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகுகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. எல்லாக்கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக் குலைக்கும் ‘புனிதச் சடங்கு’ என்பதை நிறுவும் தொகுப்பு இது.

3. மார்க்ஸின் கொடுங்கனவு
டெனிஸ்கோலன் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
விலை 200ரூபாய்
மார்க்ஸிய சித்தாந்தத்தை பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவ பேராசிரிஅய்ருமான டெனிஸ்கோலன் பிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல்மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்ரங்களைக்கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மஏஏஒரு பரில்மாணத்தை துலக்கமாக்குகிறது.

மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்துப் பிறவற்றைப் புறந்தள்ளிவிடுவதும் முழுமுயற்சியில் முதலாளித்துவம் இறங்கியுள்ள இன்றையச் சமுதாயச் சூழல் குறித்தும் மார்க்ஸிய சிந்தனைகள் மறுவாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள்  பயனுள்ளவகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்ககூடியவை.

மேற்கண்ட இருநூல்களும்
காலச்சுவடு பதிப்பகம்
பழைய எண்130, புதிய எண்257
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை-600005

கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் விஷ்ணுபுர அறக்கட்டளை பூமணியை விருதுகொடுத்து கொண்டாடியிருக்கிறது. நண்பர் ஜெயமோகனுக்கு முகம் விருது, நண்பர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது. எழுத்தாளனை வாழுங்காலத்தில் கொண்டாட மனம் வேண்டும். வேருக்கு நீர்போல அது இன்றிமையாதது. அது எழுத்தாளருக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட மனைவி, மக்கள் மகிழ்ச்சிகொள்ளும் தருணம். நமது கடந்தகால இலக்கிய வரலாற்றில் இப்படியொரு வாய்ப்பில்லை. இன்று அதைக் கருத்தில்கொண்டு இயங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. பரிசுபெற்ற நண்பர்களை பாராட்டும் நேரத்தில், உரியவர்களை தேர்வுசெய்து பாராட்டும் பரிசுக்குழுவினருக்கு மீண்டும் நன்றிகள்.

—————————————–

வணக்கம் நண்பர்களே!

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.

ஒரே சமயத்தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.
————————————————-

2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

—————————————————————–

எனது மூன்று நூல்கள்:

இவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.
——————————————