Category Archives: Uncategorized

பிரெஞ்சு புதுவருடம்:

reveillonபிரெஞ்சு மரபுப்படி ‘டிசம்பர் 31’ஐ – Saint Sylvestre’ என்று அழைப்பார்கள். நண்பர்களும் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டாடுகிற இரவு விருந்துக்கு ‘La Réveillon de Saint-Sylvestre’ என்று பெயர். எனது பெற்றோருடன் இருந்தவரை அதிரசமில்லாமல் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. (பிரான்சுக்கு வந்த பிறகு ஞாபகப்படுத்தினால், பாகு பதம் வரவில்லையென்று அரிசிமாவையும் வெல்லத்தையும் கையிற்கொடுக்கிறாள் மனைவி) தமிழ்நாட்டைப் பொருத்தவரை திபாவளிக்கு அதிரசம் முக்கியம் அதுபோல பிரெஞ்சுக்காரர்களுக்கு டிசம்பர் 31 இரவு விருந்து சாப்பாட்டிற்கு ஷாம்பெய்னும் – வாத்து ஈறலும் ( Foie -gras), தவிர்க்க முடியாதவை. Foie grasஅவவருடத்திலேயே ஆடம்பரமான விருந்தை குடும்பத்துடன் சாப்பிடுவதில் ஆரம்பித்து – நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நடனம் ஆடுவதென்பது வரையிலான சடங்குகள் அதிலுண்டு. டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12மணிக்கு விருந்தினர்கள், உறவுகள், நண்பர்கள் ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதென்பது பிரெஞ்சு மரபு. புதுவருடத்தின் முதல்நாள் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வார்கள். ஜனவரி 6வரை பொதுவில் நீடிக்கும் இக்காலத்தை ‘Épiphanie’ என அழைக்கிறார்கள். la galette de roisஅதன் முடிவில் ‘ La Galette des rois’ என்ற இனியப்பம் வாங்கிச் சாப்பிடுவார்கள்.

 

 

————————————————————-

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: ஸ்ட்ராஸ்பூர்

பிரெஞ்சு மொழியில் Strasbourg என்று எழுதுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரம். பிரான்சுநாட்டின் கிழக்கெல்லையில் ஜெர்மனை ஒட்டியுள்ள நகரம். ஜெர்மன்நாட்டின் கேல் (Khel) நகரத்தை ஸ்ட்ராஸ்பூர் நகரத்திலிருந்து பிரிப்பது ரைன்(Rhin) நதி. 1949ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய அவையின் தலைமையகமாகவும், 1992ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தின் செயலகமாகவும் இருந்துவருகிறது. நமது முன்னாள் அதிபர் அப்துல் கலாம் தமது ஐரோப்பிய பாராளுமன்ற உரைக்கு முன்னால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என தமிழ்க்கவிஞரை நினைவுகூர்ந்த இடம். ஐரோப்பிய மனித உரிமை அமைப்பின் தலைமை நீதிமன்றமும் இங்குதான் உள்ளது. Notre dame de Strasbourg புகழ்வாய்ந்தது. உலகில் கிருஸ்துமஸை கழிக்கவேண்டிய முக்கியமான நகரங்களில் ஸ்ட்ராஸ்பூருமொன்று.  இணைய தளத்த்தில் தேடினீர்களெனில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.

அண்மையில் எடுத்த சில படங்களை நண்பர்களின் பார்வைக்கு இட்டிருக்கிறேன்.
——————————–IMG_1882IMG_1884IMG_1913IMG_1929IMG_1932

பிரெஞ்சு தமிழிலக்கியம்

மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது.

– மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக் கூடியதும் இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம், ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, அக்களத்தைப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக் கொண்டிருக்கின்றன.

“அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் – என்கிறார்  முனைவர் கா. சிவத்தம்பி.

பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.

அரசியல் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இருபதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் புலம்பெயர்ந்த எழுத்துகளென்ற அடையாளம்பெற்றன. அதனைப் புகலிட எழுத்துக்கள், புலம்பெயர்ந்த எழுத்துக்களாகப் பிரித்துணரவேண்டுமென தர்கித்து தற்போது பிரெஞ்சு தமிழிலக்கியம் என்கிற குடை விரிக்கப்படுள்ளது. எதிரில் நோர்வே தமிழிலக்கியம், சுவிஸ் தமிலக்கியம் குடைகளெல்லாம் கண்ணிற்படுகின்றன. புலம்பெயர்ந்த அல்லது புகலிட நாடுகள் தமிழர்களின் பிற்பாதி வாழ்க்கைக்குத் தரும் நம்பிக்கையைப் பொறுத்தது, இக்குடைகளின் எதிர்காலம்.

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு, புலம்பெயர்ந்தோ பெயராமலோ; மொழி, அரசியல், பண்பாடு போன்ற காரணிகளால் பிரான்சு நாட்டோடு, பிரெஞ்சு மண்ணோடு, தங்கள் வாழ்க்கையைப் பதியமிட்டு வளர்ந்த மக்களின் படைப்புகளைப் பிரெஞ்சு தமிழிலக்கியமென்று வரையறுத்துக்கொள்ளலாம். 17ம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைத்த காலனி ஆதிக்கமும், இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் இவற்றுக்கான நதிமூலங்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள்,புகலிடத் தமிழர்கள் என்ற புதிய சொல்லாடல்களில் நுழைவது பிரெஞ்சு தமிழிலக்கியமென்ற தலைப்பிலிருந்து திசை பிறழ நேருமென்பதால் அதனைத் தவிர்க்கிறேன். இரண்டிற்கும் நதிமூலங்கள் அரசியலும் பொருளாதாரமும். சொந்த மண்ணில் நிகழ்ந்த அரசியல் வாணலுக்குத் தப்பி, அடைக்கலம் தந்த நாடுகளின் பொருளாதார சுகபோகங்களென்ற தீயிற் கருகிக்கொண்டிருப்பவர்களின் முனகல்களாகப் (பெரும்பாலான)பிரெஞ்சு தமிழிலக்கியத்தை பார்க்கிறேன்.

தென்திசையிலுள்ள குமரியில் நீராடி, வடக்கிலுள்ள காவிரியில் நீராடச்செல்லும் செங்கால் நாரையிடம் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்ட சத்திமுற்ற புலவரின் தூதுமுயற்சிகள் பிரெஞ்சு தமிழிலக்கியத்திலுமுண்டு ஆனால் வலிகளை – தமது வரலாற்றின் ஊடாக, இழப்புகளையும் அடையாள அழிப்புக்களையும் இலக்கியமாக முன்வைத்தவர்கள் நான் அறிந்த வகையில் உரைநடையில் சி.புஸ்பராஜா, கவிதையில் கி.பி. அரவிந்தன்.

பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை படைப்பிலக்கியங்களை இருவகைபடுத்தலாம் ஒன்று பிரெஞ்சுமொழியில் எழுதப்படுபவை மற்றது பிரெஞ்சு அல்லாத மொழிகளில் எழுதப்படுபவை. இரண்டாவதுவகைக் குறித்து பிரான்சுநாட்டின் படைப்புலகமோ, அரசாங்கமோ எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. பிரெஞ்சு மொழிகளில் எழுதப்படும் படைப்பிலக்கியங்களை ‘Francophonie littéraire’என அழைக்கிறார்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகவோ, அல்லது இரண்டாவது மொழியாகவோக் கொண்டு பிரான்சு நாட்டிலும் பிற நாடுகளிலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்படுகிற படைப்புகள் ‘Francophonie littéraire’. பிரான்சுநாட்டின் முன்னாள் காலனி நாடுகள் அனைத்தும் இதன்கீழ் வருகின்றன. இது தவிர பிரெஞ்சுமொழியை அரசுமொழியாக ஏற்றுக்கொண்ட கனடா, பெல்ஜியம், சுவிஸ் நாட்டின் சில பகுதிகளுமிருக்கின்றன. Phonie என்ற சொல்லுக்குக் ‘குரல்’ என்பதுதான் சரியான பொருள், எனவே ‘Francophonie என்பது பிரெஞ்சு மொழியில் எழுதுவதல்ல பிரெஞ்சில் குரல்கொடுப்பது எனப்பொருள்கொண்டு பிரெஞ்சு மொழி படைப்புகளை அலசி ஆய்கிறவர்களுமுண்டு. பின் காலனியத்துவ மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்கள் பலவும் இவ்வகமைக்குள் அடைக்கப்பட்டு, அசலான பிரெஞ்சு படைப்பாளிகளின் நலனுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அல்ஜீரிய, மொராக்கோ, ஆப்ரிக்க காலனி நாடுகளில் பிரெஞ்சு மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலரும் பிரான்சுநாட்டின் நிழலில் உரிய அங்கீகாரமின்றி மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் நாடுகளின் எழுத்தாளர்களுண்டு. ஆனால் செனெகெல் நாட்டின் செங்கோர் (Léopold Sédar Senghor), பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட மர்த்தினிக் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் எமெ செசேர் (Aimé CESAIRE) ஆகியோருக்குக்கிடைக்கவேண்டிய மரியாதை இங்கே கிடைத்ததில்லை.

மேற்சொன்ன பிரிவில் மற்றுமொரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் நெருக்கடிகள், வாழ்வாதாரச் சிக்கல்கள்  பிரச்சினை காரணமாக தொடக்ககாலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பிற்காலத்தில் காலனிகளிலிருந்தும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் பிரான்சு நாட்டிற்குக் குடியேறியவர்கள். இவர்களுக்கு பிரெஞ்சுமொழி சொந்த நாட்டில் அரசாங்க மொழியோ, தாய்மொழியோ அல்ல. பிரான்சுநாட்டில் குடியமர்ந்தபின்னர் தொடக்கத்தில் தாய்மொழியிலும்,பிற்காலத்தில் பிரெஞ்சு மொழியிலும்  (ஒருவேளை பெரும் எண்ணிக்கையில் புலம்பெயராததும், தேசிய அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அவசியமெதுவும் அவர்களுக்கு இல்லையென்பதும் காரணமாக இருக்கலாம்) இலக்கியம் படைத்தனர். அவ்வரிசையில் அயர்காந்தைச்சேர்ந்த சாமுவெல் பெக்கெட், செக்நாட்டைச் சேர்ந்த மிலென் குந்தெரா, ருமேனியாவைச்சேர்ந்த எமில் சியோரான், ரஷ்யரான ஆந்தரே மக்கின், சீனரான தாய் சீஜி, அண்மைக்காலத்தில் புகழ்பெற்ற ஆப்கானியர் அத்திக் ரயிமி என்றதொரு நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. சியோரான் ( Cioran), “அந்நிய மொழியொன்றில் படைப்பது விடுதலைக்கு நிகரானது”, என்றார். எனினும் “அவ்விடுதலையை வலிகள் கொண்டது”, எனக் கூறியவர் மிலென் குந்தெரா. அதனாற்தானோ என்னவோ பிரான்சுக்குத் தஞ்சமடைந்து வெகுகாலம் கழித்தே பிரெஞ்சு மொழியில் அவர் எழுத ஆரம்பித்தார். மிலென் குந்தெராவின் எழுத்துகள் கடந்த காலத்திய நெருக்கடிகளையும்; புதிய மொழி, புதிய வாழ்க்கையென குடியேறிய நாட்டில் தனக்கேற்பட்ட சிக்கலையும் பொதுவில் பேசுபவை.

பிரான்சு நாட்டில் பிரெஞ்சு அல்லாத பிறமொழிகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களென்ற பிரிவுக்குள் பிரெஞ்சு தமிழிலக்கிய படைப்பாளிகளைக் கருதலாம். ஒரு பிரிவினர் பிரெஞ்சு காலனியாகவிருந்த புதுச்சேரி (இந்தியா)யுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புகொண்டவர்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களும் இவர்களுள் அடங்குவர்: பிரெஞ்சு- தமிழ் உறவுக்கும், பிரெஞ்சு-இலக்கியத்தைத் தமிழுக்கும், தமிழிலக்கியத்தைப் பிரெஞ்சுக்கும் கொண்டுபோய் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பில் தொல்லிலக்கியங்கள் பெரும் பங்கு வகித்தன.

தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு:

லமாரெஸ் – திருக்குறள்

பெருமாள் ஐயங்கார் – திருவரங்கக் கலம்பகம், தேவதாசிபாட்டு, தெருப்பாடு

ஜூலியன் வேன்சோன் – சிந்தாமணி, ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பு

தெவெஷ் – அருணாசல புராணம்

அதாம் – ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நால்வழி, நன்னெறி, ஆசாரக்கோவை, கம்ப புராணத்தில் சில பகுதிகள், அறநெறிசாரம்.

லெயோன் சென் ழான் – மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம்.

இரா. தேசிகம் பிள்ளை – திருப்பாவை, சகலகலா வள்ளி மாலை, திருவிளையாடற் புராணம், காஞ்சி புராணம்

லெயோன்ஸ் கடெலி – பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, ரங்கோன் ராதா

துரைசாமி நாய்க்கர் – பாரதியார் பாடல்கள்

பிரான்சுவா குரோ – பரிபாடல் , காரைக்கால் அம்மையார்

ழான் லுய்க் ஷெவிய்யார் – தொல்காப்பியம் , தேவாரத்திலிருந்து சில பகுதிகள்

எம் கோபாலகிருஷ்ணன் – பட்டினப்பாலை

அலென் தனியெலூ, ஆர். எஸ். தேசிகன் – சிலப்பதிகாரம்

எஸ்.எ.வெங்கட சுப்ராய நாயக்கர் – குறுந்தொகை

மதனகல்யாணி – கரையெல்லாம் செண்பகப்பூ

கிருஷ்ணமூர்த்தி, மதனகல்யாணி – தமிழ்ச் சிறுகதைகள்

கிருஷ்ணமூர்த்தி – பெரியார் சிந்தனைகள், சித்ர சுதிர்

பிரான்சுவா குரோ – தமிழ்ச் சிறுகதைகள்

அம்பையின் சிறுகதை தொகுப்பொன்றை பிரெஞ்சு பதிப்பகமொன்று வெளியிட இருக்கிறது. வெ.சுப. நாயகரும் நானும் (நாகரத்தினம் கிருஷ்ணா) பிரெஞ்சு மொழியில் வலைத்தளமொன்றை நடத்தி வருகிறோம். அதில் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம், அவற்றைப் பிரெஞ்சு பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு வெளியிடத் திட்டம்.

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு:

இந்தியா உபகண்ட அளவில் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்ம இலக்கியங்கள் குறிப்பிடத் தகுந்த வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, அவ்வாறே நவீன இலக்கியங்களின் வரவும் இந்தியமொழிகளில் தமிழில் கூடுதலாக உள்ளன. தமிழ் படைப்புலகிற்கு பிரெஞ்சுக் காலனியத்துவத்தினாற்கிடைத்த நன்மை பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க முடிவது.  பாரதியார் பிரெஞ்சு தேசியகீதத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஸ்ரீனிவாச ஐயர், இரா. தேசிகம்பிள்ளை, சுத்தானந்த பாரதி, கோதண்டராமன், ஸ்ரீனிவாஸ சாஸ்திரி, சுவாமிநாதப்பிள்ளை, முத்துக்கண்ணன் ஆகியோர் கடந்த காலத்தில் பிரெஞ்சில் புகழ்பெற்ற படைப்புகளைத் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். நவீன பிரெஞ்சு இலக்கியங்களை தமிழுக்குக் கொணர்ந்து பாரியதாக்கமொன்றை ஏற்படுத்திய ‘ஸ்ரீராமையும்’ அவருடைய ‘அந்நியனையும்’ என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். குட்டி இளவரசனை மொழிபெயர்த்த மதனகல்யாணியின் உழைப்பும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இவர்களைத் தவிர புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி பேராசியர்கள்: ஆர் நடராஜனின் ‘புத்த ஜாதகக் கதைகள், கிருஷ்ணமூர்த்தியின் பிரெஞ்சுக்கதைகள், அண்மையில் வெளிவந்த வெங்கட சுப்ராய நாயகரின், ‘கலகம் செய்யும் இடது கை’, தனியல் ஜெயராஜின் ‘தோப்பாஸ்’ ; க.சச்சிதானந்தத்தின் பிரெஞ்சு பக்கங்கள்; வி. ராஜகோபாலனின் சார்த்த்ருவின் படைப்புகள்; நாகரத்தினம் கிருஷ்ணாவின் வணக்கம் துயரமே, காதலன், ஆகிய புனைவுகள்; உயிர்க்கொல்லி, போர் அறிவித்தாகிவிட்டது சிறுகதைதொகுப்புகள், மார்க்ஸின் கொடுங்கனவு ஆகியவை முக்கியமானவை.

நவீன தமிழ் இலக்கியம்:

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை, புதுச்சேரி பின்புலத்தைக்கொண்ட பிரெஞ்சுத் தமிழர்களின் பங்கு பிரான்சுநாட்டில் குறைவென்றே சொல்லவேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழிலிருந்து ஒதுங்கியவர்கள்,அவர்கள். நிலா என்றதொரு சிற்றிதழைத் தொடங்கி, அதன் பசிக்கு என்னை இரையாக்க விரும்பாமல் தப்பிப் பிழைத்தேன். கலைச்செல்வன் மறைவிற்குப் பிறகும் மன உறுதியுடனும் அயராத உழைப்புடனும் உயிர் நிழல் இதழைத் தொடர்ந்து நடத்தும் சகோதரி லட்சுமியின் துணிச்சல் எனக்கில்லை. பிரான்சு நாட்டில் வெளிவந்த சிற்றிதழ்கள் உலகின் பிறவிடங்களில் நிகழ்ந்ததைப்போலவே  குழுமனப்பான்மையுடன், தங்கள் ‘இருத்தலை’ முன்னிறுத்தும்பொருட்டுத் தோன்றியவை. இலங்கை இந்தியக் குழுசார்ந்த பிரிவினைகள் இவ்விதழ்களிலும் எதிரொலித்தன. மிகக் காத்திரமான இலக்கிய படைப்புகளை முன்வைத்த அச்சிற்றிதழ்களில் மாற்றணியினரைக்குறித்த  ஏச்சுக்களும் பேச்சுகளுமிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. சில இதழ்கள் அதற்காகவே தொடங்கப்பட்டதுபோன்ற எண்ணத்தையும் கட்டமைத்தன. சமர், அம்மா, பள்ளம், ஓசை, கண், தேடல், சிந்து, எக்சில், உயிர் நிழல், நண்பன், அசை, மௌனம், தாய் நிலம், தாயகம், மத்தாப்பு, கதலி, மத்தாப்பு, வடு, விழுது என பெரும் எண்ணிக்கையில் உயிர்ப்பதும் உயிர்த்தவேகத்தில் மரிப்பதுமாக அவை இருந்திருக்கின்றன. அரசியல், இலக்கியம், அரசியலும் இலக்கியமும் என்ற சூத்திரத்தைப் பின்பற்றிய இவ்விதழ்களில் அவரவர் கொள்கைசார்ந்து முடிபுகள் சார்ந்து  தாய் நாட்டின் பிரச்சினைகள், உள்ளூர் அரசியல், படைப்பிலக்கியம் குறித்த விமர்சனங்கள், விவாதங்களை வைத்தனர். எஸ். மனோகரனை ஆசிரியராகக்கொண்ட அம்மா; கலைச்செல்வனை ஆசிரியராகக்கொண்ட ‘எக்சில்’, ‘உயிர்நிழல்’; இடதுசாரி சிந்தனைகளை முன்வைத்த ‘சமர்’, கி.பி. அரவிந்தனை ஆசிரியாகக்கொண்ட ‘மௌனம்’ கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. இன்றும், பல நெருக்கடிகளுக்கிடையிலும் லட்சுமி உயிர் நிழலைத் தொடர்ந்து நடத்திவருகிறார் என அறிகிறேன்.

படைப்பிலக்கியத்தில் கவிதைகளைப் பொறுத்தவரை கி.பி. அரவிந்தன் முக்கியத்துவம் பெறுகிறார். அவர் எழுத்தில் இன்று சோர்வுகளிருப்பினும், கவிதைத் தொகுப்புகள் ஆவணப்படுத்த வேண்டியவை. போரின் அவலத்தையும் போர் ஓய்ந்தும் உலராத வடுக்களின் உபாதைகளையும் விம்மலும் வெடிப்புமாக வார்த்தைகளில் அநிச்சையாக உருமாற்றத் தெரிந்தவர். ‘ வயல்களுக்குத் தீ வைத்து வரப்பினில் தானிய மணிகளைப் பொறுக்கினான்” என் நெஞ்சத்தை இன்றும் முட்டும் வரிகள்.  ‘இனியொருவைகை’, ‘கனவின் மீதி’, ‘முகம்கொள்’ ஆகியவை அவரது கவிதைத் தொகுப்புகள். புனைவிலக்கியத்தில் சோபாசக்தி தனித்து நிற்கிறார். எதிராளிகூட அவரது மூர்க்கத்தின் நியாயத்தை ஏற்பான். எள்ளலும்,எழுத்தில் கடைபிடிக்கும் தான் தோன்றித்தனமான சுதந்திரமும், கலகக்குரலும், வேகமும் அவர் எழுத்தின் அடையாளங்கள்:  ‘கொரில்லா’,  ‘ம்’ ஆகிய புனைவுகளும்; எம்.ஜி.ஆர் கொலைவழக்கு, தேசத்துரோகி ஆகிய சிறுகதைதொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை.

பிரெஞ்சிலும் தமிழிலும் எழுதிவருவதாகச்சொல்லப்படும் கலாமோகனின் படைப்புகளை வாசித்ததில்லை. ‘நிஷ்டை’, ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்று இரண்டு தொகுப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் Et demain’ (நாளையும்) கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளனவாம். புதுச்சேரிக்கும் பிரான்சுக்குமான தொங்கல் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே எனது புனைவுகளும் (நாகரத்தினம் கிருஷ்ணா) அமைந்துள்ளன: நீலக்கடல்’, ‘மாத்தாஹரி’, வரவிருக்கிற  ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ ஆகியவை நாவல்கள்; ‘நந்தகுமாரா நந்தகுமாரா’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’ சிறுகதை தொகுப்புகளில் முக்கியமானவை; பிரெஞ்சு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும்: பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன், எழுத்தின் தேடுதல்வேட்டை, சிமொன் தெ பொவ்வா ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் இருக்கின்றன. புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த அப்பாதுரை, வண்ணை தெய்வம், சிவரூபன், சரீஸ், வி.ரி. இளங்கோவன், ஆகியோர் பிரெஞ்சு தமிழிலக்கிய உலகில் உத்வேகத்துடன் செயல்படுகிறவர்கள் என அறிய வருகிறேன். மரபுக் கவிதையில் தோய்ந்த கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசனையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம், எனது கவனத்திற்கு வந்தவைகளை இட்டிருக்கிறேன். கட்டுரையில் இடம்பெறாதவர்கள் உழைப்பைக் குறைத்து மதிப்பிட இல்லை. அயராத உழைப்பும் எழுத்தில் நேர்மையும் இருப்பின், காலம் நிச்சயம் அவர்களைக் கவனத்திற்கொள்ளும்.

நன்றி: பதிவுகள்

———————————

————————————————————

புதிய நூல்கள்

 1. கதையல்ல வரலாறு -கட்டுரைகள்

N.K.2

வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாகவிருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்படைவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டுமல்லாமல் உலகச் சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.

 கதையல்ல வரலாறு

ஆசிரியர் – நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ.80

நற்றிணை பதிப்பகம்

பழைய எண் 123 A, புதிய எண்243A

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

சென்னை -600005

தொலைபேசி: 94861 77208/044 43587070

2.  மொழிவது சுகம்: கட்டுரைகள்

Na.krishna -New books 001

அரசியல் இலக்கியம் சார்ந்து முன்வைத்த மனப்பதிவுகள். உயிரோசை, யுகமாயினி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

மொழிவது சுகம்: கட்டுரைகள்

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ 90

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

41. கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்

சென்னை -600 011

தொலைபேசி: 25582552/0444640986

3. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்

Na.krishna -New books3 001உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவைக் காலம் வேறாக தீர்மானித்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப்பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிர்க்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிபடுத்தியிருக்கிறேன்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்

ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா

விலை -ரூ 160

சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53வது தெரு  9வது அவென்யு, அசோக் நகர்

சென்னை -600 083

தொலைபேசி  044: 24896979

———————————

 

 

 

கவனம் பெற்ற பதிவுகள் டிசம்பர் 2012

1. மனதிற் பதிந்த கவிதை

வாப்பாவின் மடி – ஹெச்.ஜி.ரசூல்

எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.

நன்றி: ஆபிதீன் பக்கங்கள்
http://abedheen.blogspot.fr/

2. மலைகள். காம்

மலைகள்.காம் இணைய இதழில் பார்ஸ்க்கர் இலட்சுமணனின் ‘எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய கட்டுரை, ‘நிழல்’ என்ற தலைப்பில் அறிமுகப்படைப்பாளி சு.சந்தோஷ்குமார் கட்டுரை;அறிமுக படைப்பாளி செந்தமிழன், சின்னப்பயல், குமார நந்தன் கவிதகள்; சொ.பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன் சிறுகதைககளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இதழிலும் பதிப்பக அலமாரி என்கிற தலைப்பில் புதிய நூல்களின் அறிமுகமும் இருக்கிறது. ‘வைத்தியம்’ என்ற சிறுகதை மனித வாழ்க்கையின் நவீன தேடல்கள் குறித்து வினா எழுப்புகிறது. மனித மூளைகள் தமது வாழ்விடத்தைத் தலைக்குப் பதில் கால்கள் எனத் தேர்வு செய்திருக்குமோ என்ற ஐயம் எனக்கும் அவ்வப்போது எழுவதுண்டு, அதை உறுதிபடுத்தும் கதை. ‘வெள்ளை நிறப்பாம்பு’  என்கிற சிறுகதையை விஷ்ணுபுரம் சரவணன் எழுதியிருக்கிறார். மனச்சிதைவுக்குள்ளானவன் ஒருவனுடைய மன ஓட்டங்களை கதைப்படுத்தியிருக்கிறார். விஷ்ணுபுரம் என்ற பெயரை ஒட்டிக்கொண்டிருப்பதாலோ என்னவோ விரும்பி வாசிக்கும் படி எழுதியிருந்தார். இவர் எழுத்துகள் கவனம் பெறும்.
http://malaigal.wordpress.com/

3. அசதா: தாகூர் சிறுகதைகள்

த.நா. குமாரஸ்வாமி வங்கமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பு. சா. கந்தசாமி தேர்வுசெய்த கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது அத்தொகுப்பைக்குறித்த மதிப்புரை இது. ‘புதிய புத்தகம் பேசுகிறது’ ஜூன் 2012ல் வெளிவந்த கட்டுரையை தமது தளத்தில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார். கதைகள் குறித்த சிறு விவரிப்பும், கதை மீதான கட்டுரையாளர் கருத்தும், வாசிப்பவர்க்கு கதைகள் குறித்த நல்லெண்ணத்தை உயிர்ப்பிக்கின்றன.

http://mugaiyurasadha.blogspot.fr/

4. அழகிய சிங்கர்: எதையாவது சொல்லட்டுமா?

போகிற இடங்களிலெல்லாம் வாசிப்பதற்கென அவ்வபோது ஒன்றிரண்டு புத்தகங்களை (‘பலபுத்தகங்கள் புரட்டிப்பார்க்காமலேயே இருக்கின்றன) வாங்குவது எனக்கும் பழகிவிட்டது. எதிர்காலத்தில் எனக்கும் பயனளிக்கக்கூடிய கட்டுரை. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. வணக்கத்திற்குரிய கி.அ. சச்சிதானந்தன் வீட்டிலும் எப்படி ஏராளமான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றனவென்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். கட்டுரையைப் படித்தபோது அவர் ஞாபகமே வந்தது. அம்ருதா டிசம்பர் மாத இதழில் வந்த கட்டுரையை, அழகியசிங்கர் பதிவு செய்திருக்கிறார்.

http://navinavirutcham.blogspot.fr/

5. எம்.டி. முத்துகுமாரசுவாமி: பாகேஸ்வரி ராகம்.

நண்பர் எம்.டி.முத்துகுமாரசுவாமியின் இசைகுறித்த கட்டுரைகளை அண்மைக்காலங்களில் விரும்பி வாசிக்கிறேன். பாகேஸ்வரி காலம், தருணம், உகந்த மனநிலை என அவ்வளவையும் ஒரு காதலின் மனோ நிலையில் எழுதியிருக்கிறார். கட்டுரையை படித்திர்களெனில் நீங்களும் காதலுக்கு ஏங்கக்கூடும்.

http://mdmuthukumaraswamy.blogspot.

——————————————————

எழுத்தாளன் முகவரி -9: அலுப்பும் நூல்களும்

Ken Folletபுத்தகத்தைப் பிரித்தால் கொட்டாவி வருகிறதா? அதுதான் இலக்கியம் எனச்சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். நேற்று வர்ஜீனியா உல்பும், இன்று கிளேஸியோவும் எனக்கு சில நேரங்களில் வாசிப்பு அலுப்பைத் தருகிறார்கள், இருந்தாலும் சில காரணங்களுக்காக வாசிக்கிறேன். தாலிகட்டிய மனைவியை வேடிக்கை பார்க்கவா முடியும். வாசகர்களிடத்தில் இவர்களைப்போன்றவர்களுக்குக் கொஞ்சம் பரிவும் இரக்கமும் இருந்திருக்குமென்றால் கூடுதலாகக் கொண்டாடப்பட்டிருப்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பார்க்க வேறொரு கேள்வியையும் எழுப்பவேண்டியவர்களாக இருக்கிறோம். உண்மையிலேயே நல்ல நூல்கள் அனைத்துமே அலுப்பைத் தருகின்றனவா? இல்லை, என்கிறார் கென் ·போலெட்.

கென் போலெட் (Ken Follet)ஆங்கில நாவலாசிரியர். வரலாற்று புனைவுகளை விறுவிறுப்பான மொழியில் எழுதக்கூடியவர். கென் போலெட் நூல்களின் விற்பனை சாதனையை விக்கிபீடியாவில் வாசித்த போது தலைச் சுற்றியது; இதுவரை 100 மில்லியன்கள் விற்று தீர்ந்திருக்கிறதாம். அவருடைய நான்கு நூல்கள் நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிகம் விற்பனையாகும் நூல்கள் வரிசையில் முதலிடம் பிடித்தனவாம். எனக்கு இன்னமும் ஆர். எல். ஸ்டீவன்சனின் The Black Arrow அவ்வகையில் மிகப் பிடித்தமான நாவல். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, ஆங்கில துணைப்பாடத்தில் எங்களுக்கிருந்தது. அந்நாவலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு பின்நாளில் நாவல்கள் வாங்கி படிக்க ஆரம்பித்த பொழுது, கல்லூரி நாட்களில் விரும்பிப்படித்த அலிஸ்ட்டெர் மக்லின் போன்றவர்கள்கூட திருப்தி அளிக்கவில்லை.

கென் போலெட்டை பொறுத்தவரை “நல்ல நால்களென்றாலே வாசகனுடைய பொறுமையைச் சோதிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை”. உயர் நிலைப்பள்ளியில் படித்தபோதும் சரி, பின்னர் கல்லூரில் சேர்ந்துபடித்தபோதும் சரி ஒரு சில ஆசிரியர்களை விரும்பியிருக்கிறேன், ஒரு சில ஆசிரியர்களை விரும்பாமலிருந்திருக்கிறேன். காரணம் அந்த ஆசிரியர்களேயன்றி நானில்லை. மிகக்கடினமான பாடங்களையும் எளிதாய்ப் புரியவைத்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள். மிக எளிதானப்பாடங்களையும் விளக்கெண்ணெய் வைத்தியர்களாக அவதாரமெடுத்து வகுப்பைத் தூங்க வைப்பவர்களும் இருக்கிறார்கள். கென்போலெட் இளைஞராக இருந்தகாலத்தில் ஆலிவர் ட்விஸ்ட் தொடராக வந்திருக்கிறது. பில் சைக்ஸ் நான்சியைத் துன்புறுத்துவதாக ஒரு அத்தியாத்தில் முடிந்தது. மறு அத்தியாயத்துடன் அத்தொடர்வந்த இதழ்கள் நியூயார்க் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கியபோது நான்சியின் தலையெழுத்தை அறியவதற்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருந்ததாம். ஆலிவர் ட்விஸ்டு அதன் பெயருக்கேற்ப பல திருப்பங்களை கொண்டதாகச் சொல்லப்பட்டிருப்பினும், அந்நூல் தெரிவிக்கும் உண்மையை மறுக்க முடியாதென்கிறார் கென் போலெட். உலகின் மிகப்பெரிய நாவலாசிரியர்களென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறவர்கள் அனவருமே மனநெகிழ்வைத் தரும் சம்பவங்களை வாசகர்களுக்கு ஏற்படுத்தித் தருவதை ஒரு விதியாகக் தங்கள் எழுத்துக்களில் கொண்டிருந்திருக்கிறார்கள். உலகில் எந்த எழுத்திற்கும் இது பொருந்தும்.

ஆங்கிலத்தில் Soap Opéra என்ற சொல்லுண்டு. ஒப்பேரா என்கிற இசை நாடகங்களில் அக்காலங்களில் இடையில் சோப்பு விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டாம். அம்மாதரியான ஒப்பேராக்கள் அதிகம் மெலொடிராமாக்களாக இருப்பதுண்டு. தமிழ் தொலைகாட்சிகளில் வரும் தொடர்களைப்போல. எனவே Soap Opéra க்களெனில் பெண்களை மூக்கைச் சிந்தவைக்கிற வகையில் கதைசொல்லப்படுவது. நளதமயந்தி, அரிச்சந்திரன் கதை, நல்லதங்காளென நமக்கும் அனுபவங்கள் உண்டு. இராமயணத்தையும் மகாபாரதத்தையும் இத்தனை காலம்கடந்தும் வாசிப்பதற்கும், வடிவங்கள் எதுவாயினும் அது வெற்றிபெறுவதற்கு இச் சூத்திரமே  அடிப்படை.

இது எப்படி நிகழ்ந்தது, எதனால் மெலொடிராமாக்கள் வெகு சனமெனப்படுகிற பெருவாரியான மக்களை ஈர்க்கின்றன? இங்கிலாந்து அரசாங்கம் எல்லோருக்கும் கல்வியென 1870ல் ஒரு சட்டத்தைக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட அதுமாதரியான சட்டம் அமெரிக்காவிலும் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. இவற்றின் விளைவாக நாட்டில் கல்விகற்றோர் எண்ணிக்கை பெருக, புனைவுகளுக்குப் பெரும் எண்ணிக்கையினாலான வாசகச் சந்தை திறக்கிறது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்ற பங்குதார்களைக்கொண்ட வாசிப்புலகம் இப்புதிய தாக்கத்தால் இரண்டாகப் பிளவுபடுகிறது: பழைய வாசகர்கள் ( மேட்டுக்குடி வாசகர்கள்) தங்களை அறிவார்ந்த வாசகர்களென அழைத்துக்கொண்டு கனத்தப் புத்தகங்களைத் தேடி வாசித்தார்கள். புதிதாகக் கல்விபெற்ற பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள், பரபரப்பூட்டுகிற  கிளர்ச்சியூட்டக்கூடியவற்றை தேர்வு செய்தார்கள். முதல் வகையினர் தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, தாங்கள் மேன்மக்கள் என்று சொல்லிக்கொள்ளவும் பெரும் எண்ணிக்கையான மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளவும் சில நூல்களை தேர்வுசெய்துவாசித்தனர். இப்பிரிவினால் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டார்கள் என்கிறார் கென் பொலெட்.

இதன் விளைவாக புனைவுகளில் கதைமாந்தர்கள் இடத்தை கதை பொருட்கள் அபகரிக்கின்றன. ராபின்சன் குரூசோ இடத்தில் உதாரணத்திற்கு டைட்டானிக் கப்பல். ஜேம்ஸ் ஜாய்ஸின் உல்லிசெஸ¤க்குபிறகு, புற உலகு, சமூகம் எனற அக்கறைகள் வலுவிழந்து, நுணுகி ஆயும் தன்மையும், உண்முக நோக்கும் கவனம் பெறுகின்றன. இது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இலக்கியமெனச் சொல்லப்படுபவை எளிய மனிதனின் வாழ்க்கைப்போராட்டங்கள், நெருக்கடிகள், சிக்கல்கள் இவற்றைக் கணக்கில்கொள்ளாது தள்ளி வெகுதூரத்தில் நிற்கின்றன. ஒருநல்ல இலக்கியம் இரண்டிலும் கால் ஊன்ற தெரிந்திருக்கவேண்டும். பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களிடமும் போய்ச்சேரவேண்டும். நன்றாகவும் எழுதப்படவேண்டும். நல்ல எழுத்துக்கள் நடுத்தர எளிய மக்களை சென்றடையவேண்டாமா? வேண்டும். அவ்வாறே புத்திஜீவிகளுக்குமட்டுமே எனச்சொல்லிக்கொள்கிற எழுத்துக்களிலும் சிறிது கவனமெடுத்து கதைக்களன், கதை சொல்லல்,  சிறிதளவு கிளர்ச்சி, கொஞ்சம் பரபரப்பு என்றமைத்துக்கொள்வதால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? சாலமன் ருஷ்டி, குந்தர் கிராஸ், உப்பர்ட்டோ எக்கோ போன்றோர் சாதிக்கவில்லையா? தமிழிலும் உதாரணங்களுண்டு.

——————————————

வெ.சுப.நாயகரின் நூல்வெளியீடு விழாப்படங்கள்

நண்பர் வெ.சுப. நாயகரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றதென நண்பர்கள் சொல்லக் கேட்டேன். வாழ்த்துகள்.

விழாவில் எடுத்த படங்களை இங்கே நண்பர்களுக்காக நாயகரின் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறேன்.

IMGP0267 IMGP0277  IMGP0261 IMGP0272 IMGP0268

மொழிவது சுகம் டிசம்பர் 2 -2012

மின்னுவதெல்லாம் பெண்ணல்ல

அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன்.

இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் -பெல்ஜிய மக்களை முட்டாள்களாகச் சித்தரிக்கும் – ‘Histoire Belge’. அண்மையில் பிரெஞ்சுத் தினசரியில் வந்திருக்கும் செய்தி பிரெஞ்சு பேசும் பெல்ஜியமக்களைப் பற்றிய கருத்திற்கு வலுவூட்டியிருக்கிறது.  நமது பெல்ஜியக்கதை நாயகருக்கு தற்போது 64 வயது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்தவளைக் காந்தர்வ மணம்புரிந்து 19 ஆண்டுகாலம் இல்லறவாழ்க்கை அவருக்கு அமைதியாகவேக் கழிந்திருக்கிறது. ஜான், களவு வாழ்க்கையிலும் களவுக்குப்பின் தொடர்ந்த கற்பு வாழ்க்கையிலும் எவ்வித குறையுமில்லை என்கிறார். கடந்த வாரத்தில் அவர் சகபாலினத்தைச்சேர்ந்த ஒருவருடன் தாம் பல ஆண்டுகள் இல்லறம் நடத்தியிருக்கிற உண்மை தெரியவந்ததிலிருந்து மனிதர் பேயறைந்தவர் போலிருக்கிறார்.

இரண்டுமுறை விவாகரத்து செய்த மனிதருக்குக் கணக்கை நேர் செய்ய மூன்றாவதாக ஒன்று தேவைபட்டிருக்கிறது. 1993ம் ஆண்டு மோனிக்கா என்பவளைச் சந்தித்திருக்கிறார். மோனிக்காவிற்கு இந்தொனேசியா சொந்த நாடு. பெல்ஜியத்திற்குப் புலம்பெயர்ந்திருந்தாள். ஜான் உடைய சகோதரிவீட்டில் பணி. வழக்கம்போலவே சகோதரி இல்லத்திற்கு அன்றைய தினம் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த மோனிக்காவின் முதற்பார்வையே மோகம் கொள்ளும் வகையில் இருந்ததாம். அவள் அழகும், நடத்தையும் ஜானிடத்தில் காதலை விதைத்திருக்கிறது. சந்திப்பும் அதனைத் தொடர்ந்து காதலும் இருவருக்கிடையில் முகிழ்ந்தபோது இவருக்கு 44 அவளுக்கு இருபத்தேழு வயது. இருதரப்பிலும் குறுக்கீடுகளில்லை. நெருங்கிவந்தார்கள். உறவுக்கும் தடையில்லை. ஜானுக்குச் சின்னதாக ஒரு நெருடல். ‘ உனக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணமேதுமில்லையே?’ எனக்கேட்டிருக்கிறார். “சீச்சி அப்படியேதுமில்லை. சந்தோஷமாக இருக்கவேண்டிய வயதில், எதற்குப் பிக்கல் பிடுங்கல்”, என்றிருக்கிறாள். 44 வயதில் 4 பிள்ளைகளுக்குத் தந்தை என்ற நிலையிலிருந்த ஜானுக்கு, இருபத்தேழு வயது மோனிக்காவின் குடும்ப வாழ்க்கையைக்குறித்த கருத்தியம் மகிழ்ச்சியை அளித்தது.

ஏறக்குறைய இருபதாண்டுகால மணவாழ்க்கை.  மணவாழ்க்கையிலும்  அதன்பாற்பட்ட உறவுகளிலும் தம்பதிகளுக்கிடையே விரிசல்களில்லை.  வாழ்க்கைத் துணையின் பாலினம் குறித்து அவருக்கு ஐயங்கள் எழுந்ததில்லை. “உறவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வாள். ஆனால் என்னிடம் உண்மையை மறைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளைவையும் செய்திருக்கிறாள்”, என்கிறார். “பாலியல் உறவில் அது சாத்தியம் என்கிறார்கள், அத்துறைசார்ந்த வல்லுனர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. மோனிக்கா பின்னிரவுகளில் வெளியில் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது உடுத்திக்கொண்டவிதம் சந்தேகங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. அரசல் புரசலாக வதந்திகள் பரவ ஆரம்பித்து, கடைசியில் இவர் காதையும் எட்டின. மோனிக்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் இந்தோனேசியாவிலிருந்து வர, உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறான். ‘ஒரு சில நொடிகளில் எனதுலகம் இருண்டுபோய்விட்டது’ இருபதாண்டுகாலம் என்னை வன்புணர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டதாக நினைக்கிறேன், ‘ என அழுகிறார். அவரைச்சேர்ந்தவர்கள் பலருக்கும் உண்மை தெரியுமென்றபோதிலும் இவரிடத்தில் சொல்லாமல் மறைத்தது,  மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. மோனிக்காவுடனான தமது திருமணத்தைச் செல்லாதென அறிவிக்கக்கோரி ஜான் வழக்குத் தொடுத்திருக்கிறார். மோனிக்கா ஜானை மட்டுமல்ல பொய்யான ஆவனங்களை அரசுக்கு அளித்ததன்மூலம் பெல்ஜிய அரசாங்கத்தையே ஏமாற்றி இருக்கிறாள்(ர்) என்கிறார் ஜானுடைய வழக்குரைஞர்.

ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து விரைவில் பிரான்சுநாட்டில் சட்டவரைவு கொண்டுவர இருக்கிறார்கள்; இம் முடிவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கடந்த சில கிழமைகளாக ஊர்வலம் ஆர்ப்பாட்டமென இறங்கியிருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் இடதுசாரிகள், பெண்ணியம் பேசுகிறவர்கள், புத்திஜீவிகள். எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள், தீர மதச்சார்பு சிந்தனையாளர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரேன் நாட்டைச்சேர்ந்த ‘திறந்த மார்பு’ பெண்ணியக்கத்தினர் கணிசமாக ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கொண்டிருக்க அவர்களும் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக கொடிபிடித்துக்கொண்டு பாரீஸ் வீதிகளில் ஊர்வலம்போகின்றனர். ஒருபாலின எதிர்ப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் நடக்கும் அடிதடிச் சண்டைகள், காவற்து¨றையினர் தலையீட்டுடன் பார்க்க விறுவிறுப்பாக இருக்கின்றன.

எதிர்பாலினத்தைச்சேர்தவர்களை மணப்பதென்பது இயற்கையின்பாற்பட்டது. ஒருபாலினப் புணர்ச்சி, உலகம் தோன்றிய நாளிலிருந்து இருந்திருக்கலாம் எனினும் சமூகம் அதனை ஒதுக்கிவைத்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் ஓர் ஆண் மற்றொரு ஆனை அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை மணப்பது தனி மனிதச் சுதந்திரத்தின் பேரால் நியாயப்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆலந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றைத் தவிர வேறு சில ஐரோப்பியநாடுகளில் திருமணச் சடங்கின்றி ஒரு பாலின மக்கள் சேர்ந்துவாழலாம் என்கிற வகையில் சட்டப் பாதுகாப்புகளை வழங்குகின்றன. அவைகளில் பிரான்சுமொன்று. பிரான்சுநாடு கூடிய விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமென அறிவிக்க இருக்கிறது. பிரான்சைச்சேர்ந்த ஒருபாலின விரும்பிகள் பலரும் அண்டைநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஐரோப்பியரிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கே மணம் செய்துகொண்டாலும் அது சட்டப்படி செல்லும் என்பதால் இந்நடைமுறை அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்கவும், எல்லோருக்கும் திருமணம் என்பதை ஒரு சமூகத் தேவையாகவும் உணர்ந்து ஒரு பாலின திருமணச் சட்டத்தைக்கொண்டுவரவிருப்பதாக அரசு காரணம் சொல்கிறது. ஆனால் பிரச்சினை அதுமாத்திரமல்ல. இப்போது ஒரு பாலினத் தம்பதியினர் குழந்தைகளைக் தத்தெடுக்கவும் சட்டபடி அனுமதிவேண்டும் என்கின்றனர். சில நாடுகள் அதனை அனுமதிக்கவும் செய்கின்றன.

ஒரு பாலினமக்கள் திருமண உரிமைகோருவது ஒருபக்கமெனில் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பது எந்தத் தனிமனிதத் சுதந்திரத்தின் பாற்பட்டதென விளங்கவில்லை. நாய்போல பூனைபோல பிள்ளைகளை வளர்க்க நினைக்கிறார்கள். என் பிள்ளைக்கு இரண்டு தந்தை அல்லது இரண்டுதாய் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். மனதளவில் பிள்ளைகளுறும் சேதத்தை இவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

இருபதாம் நூற்றாண்டிற்கான பிரச்சினையே தனிமனிதச் சுதந்திரமென்று சொல்லவேண்டும். நான்குபேர், அண்டைவீடு, தெரு, சமூகம் இவர்களுக்காகவும் நாமிருக்கிறோம் என்றிருந்த வாழ்க்கையை நமக்கே நமக்கென்று அமைத்துக்கொள்வதே இன்றுள்ள பிரச்சினை. குடும்பத்திற்குள்ளும் சரி, புறமும் சரி தன்னலவாழ்க்கை அமைந்தால் போதும். இனி மரங்களுக்குக் கிளைகள் வேண்டாம். அது எனது சுவற்றைக்கடந்து நீளலாம் துளிர்க்கலாம், பூ பூக்கலாம். காயாகாலாம் கனியாகலாம் நிழல்தரலாம் ஆகவே கூடவே கூடாது. எனது மரம் நான் வெட்டுவேன், விறகாக்குவேன் கேள்விகேட்க அந்நியருக்கு உரிமையில்லை. எப்படியும் வாழ்வேன். உனக்குக் பிடிக்காதென்றால் கண்ணைமூடிக்கொள். நான் எனது, எனது உணர்வுகள், ஆசைகள், உந்துதல்கள் முக்கியம்.  இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து நாய் பூனையைக்கூட மணம் செய்துகொள்வேன்! புத்தி சுவாதீனத்துடன்து நாற்பது பேராகி நாற்பது இலட்சம்பேராகி நான்குகோடிபேராகி நாய் பூனையுடன் திருமணம் செய்துகொள்ள நினைத்தால்  தவறேஇல்லை, தனிமனிதச்சுதந்திரத்தின் பேரால் நீங்கள் ஆதரிக்கவேண்டும். நான் அறிவுஜீவி. எனவே செய்வது சரி. கேட்பார் கூடாது.

பர்மெனிட் (Parménide) கிரேக்கத் தத்துவவாதி. பிறப்பு, இறப்பு, ‘இருத்தல்’ ஆகியவற்றை விவாதித்தவர் அவர் உயிர்வாழ்க்கை நெறியை இருவகைபடுத்துகிறார். ஒன்று உண்மை மற்றது அபிப்ராயம் அவற்றின் தொடர்ச்சியாக. இருத்தல் மற்றது இருத்தலின்மை என்ற இரு சொற்களை உபயோகித்தவர். இருத்தலின் பணி உறபத்தியில் ஈடுவது, உற்பத்தி முடிவுக்கு வருகிறபோது இருத்தலின்மையாகிறது. ‘இருத்தலை’யும் (être) ‘இருத்தலின்மையையும் (Non-être) உயிரி, பிணம் என்றும் எழுதலாம். பர்மெனிட்டின் சிந்தனைப்படி செயல்பாடற்ற, உற்பத்தியில் ஈடுபடாதவை பிணம்.

———————————————

 

.

நூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’

நண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.

இடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம்,   எண் 2, தமிழ்ச்சங்க வீதி,    வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011

நாள்: 2012 -ஞாயிறு மாலை

மேலும் தகவல்களை அறிய:http://muelangovan.blogspot.in/

 

கவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012

1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்

நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.

எதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது.  தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.

இடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.

கட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.

Home-2

———————————-
2.  மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்

நாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.

“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன்,   அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்கிறார்.

ஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.

நண்பர்கள் வாசிக்க:
http://puthu.thinnai.com/?p=15672
____________________

3.  நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்
            அ.ராமசாமி

” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”

ஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை.  இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.

http://ramasamywritings.blogspot.fr/
—————————–