Category Archives: Uncategorized

மனதிற் பதிந்த கவிதை

சிறந்த பத்து
        – முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என…

நன்றி: தேவமைந்தன்

http://httpdevamaindhan.blogspot.fr/
———————————————————-

இரண்டு நிகழ்வுகள்

1. பாரீஸில் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில்  பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

நாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை
இடம்  L’Espace Associatif des Doucettes, Rue du Tiers, 95140- Garges Les Gonesse
————————————–

2. Salon du Livre sur L’Inde

பாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).

திரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர்.  பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.

துக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்

2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

Salon du Livre sur l’Inde
Nov.17-18- 2012
Mairie du 20e – 6, Place Gambetta-Paris
———————————————————————————————————

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்- குளிர்கால நேரம்

கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கும் பிரான்சுக்குமான நேர இடைவெளி மூன்றரை மணி நேரமாகவிருந்தது நேற்றைய தினத்திலிருந்து அது நான்கரை மணி நேரமாக கூடியிருக்கிறது. என்ன நடந்தது? பிரான்சு நாட்டில் நேற்று அதிகாலை மூன்றுமணி எனக்காட்டிக்கொண்டிருந்த முட்களைத் திருத்தி இரண்டு மணிக்குக் கொண்டு போனதால் இந்த மாற்றம்.

ஒவ்வொரு வருடமும் கோடையில் ஒரு மணிநேரத்தைக் கூட்டுவதும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பிரான்சு என்றில்லை உலகில் அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (ரஷ்யா நீங்கலாக). வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளில் இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது ஆப்ரிக்க நாடுகளில் மொராக்கோவிலுண்டு, இஸ்ரேல் ஈரான் நாடுகளிலுமுண்டு.

இந் நேரமாற்றத்திற்கு முக்கியமான காரணம் பகற்பொழுதைக் குறிப்பாக குளிர்காலத்தில் கூடுதலாகப்பெறவேண்டும். இலையிதிர் காலத்தில் ஆரம்பித்து குளிர்காலம்வரை பகற்பொழுதைக்காலை ஒன்பதுமணிக்கு புலர்ந்தும் புலராமலும் தொடங்குவதும் மாலை நான்குமணிக்கெல்லாம் இருட்டத்தொடங்குவதும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் அதிகம்பார்த்திராத சாம்பல் நிறவானத்தை இலையுதிர்காலம் தொடங்கி குளிர்காலம் முடியக் காணலாம்.

பகற்பொழுதைக்கூடுதலாகப் பெறும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  2ந்தேதி ஒரு மணி நேரத்தை கூட்டிவைத்து ஆரம்பித்துவைக்கிறார்கள் பிறகு அவ்வருடத்திலேயே அக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமணிநேரத்தை குறைத்து முடிக்கிறார்கள்.
——————————–

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்: SOLDES

 

தமிழ்நாட்டில் குறிப்பாக ஆடித்தள்ளுபடி, பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடி என விளம்பரங்களைப் பார்க்கிறேன். பிரான்சுநாட்டில் பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடியென்று எதுவுமில்லை. வருடத்தில் இரண்டுமுறை குளிர்காலத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி பிப்ரவரி இரண்டாவது வாரம்வரை அதிகபட்சம் மூன்று வாரங்களும், கோடையில் ஜூன் ஜூலை ஆகஸ்டுமாதங்களிலும் நடைபெறும். பிரதேசங்களைப் பொறுத்து தேதிகளில் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். வருடம் முழுக்க கடைகள் தங்கட் பொருட்களை விலைகுறைத்து விற்க சுதந்திரமுண்டு என்றபோதிலும் ‘SOLDES” என்ற சொல்லை விளம்பரப்படுத்தி விற்க ஏற்கனவே கூறியதுபோன்று வருடத்தில் இருமுறையே அனுமதியுண்டு. தேதியையும் விற்பனைகாலத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. மற்றகாலங்களில் விலையைக்குறைத்துவிற்க ஏன் அனுமதியில்லை. வால்மார்ட்டுகள் இந்தியாவிற்கு வந்தால் அண்ணாச்சிகடைகளுக்கு ஆபத்தாகிப்போகும் என்பதைப்போல இத்தள்ளுபடியை அனுமதித்தால் அதாவது SOLDES என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தால் சில்லறைகடைகளின் விற்பனை பாதிக்குமென்று அரசாங்கம் நம்புகிறது எனினும் திமிங்கலங்கள் வாய்க்குள் வருடத்திற்குப் பல ஆயிரம் கடைகள் சமாதிஆவது தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.

இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.

1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது.  இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.

இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி  Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.

‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய  யுத்தத்தில் மிகக்கடுமையாக  தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில்  அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.

தனிமனிதனாகட்டும்  ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

————————-

2.  மொ-யன் (Mo-Yan)

முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மொ-யன் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால்  அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம்  இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மொ-யன்’  பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச்  சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.

பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.

மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே!  என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென  இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom  2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.

 

நன்றி: C.I.D.F.  29-8-2012

————————————

 

 

 

 

 

கவனத்தைப்பெற்ற பதிவுகள் அக்டோபர்-10:

1. வெடிக்கு மருந்தாகும் மக்கள் – முத்துகிருஷ்ணன்

அணமையில் சிவகாசியில் நடைபெற்ற கோரவிபத்தையும் அதற்கான நதிமூலங்களையும் கட்டுரை விவரிக்கிறது. பிரச்சினகளின் வேர் தேடி எழுதுகிற முத்துகிருஷ்ணன் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களின் தள்ளாடும் உயிர்வாழ்க்கையையும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும்  கூட்டத்தையும், கண்டும் காணாததுபோல  இருக்கிற அரசாங்க எந்திரங்களின் கையாலாகாதத் தனத்தையும் பின்புலத்திலுள்ள அரசியலையும் பிட்டுவைத்திருக்கிறார். தமிழில் உருப்படியான படைப்புகள்  அபூர்வமாகவே வருகின்றன. ஆக்கபூர்வமான; சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

http://amuthukrishnan.com/

2. இடிந்தகரைXகூடங்குளம்: நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்- அ.ராமசாமி

இடிந்தகரை கூடங்குளம் சிக்கல்களில் ஊடங்களின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்கிறது கட்டுரை.  இரண்டுவிதமாக ஊடகங்கள் உண்டு. மக்கள் நலனில் அக்கறைகொண்டு இயங்கும் ஊடங்கங்கள், அதுபோல பாவலா செய்யும் ஊடகங்கள். உலக அளவில் ஊடக அறம், சுதந்திரமென்பது பெரும்பாலும் இதழின் உரிமையாளர்களுடைய நலனைக் கருத்திற்கொண்டது. கூடங்குளம் தொடர்பான செய்திகளை தினசரிகளில் வாசிக்கிறபோதே பத்திரிகைகளின் நிறமும் குணமும் சந்தி சிரிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் இடிந்தகரை போராட்டகாரர்ளை அரசாங்கத்திடம் மட்டுமல்ல நமது ஊடகங்களிடமுங்கூட. கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்: அரசியல்வாதிகளைப்போலவே பெரும்பான்மையான ஊடகங்கள் எப்போ மக்களின் உண்மையான நலன்களில் அக்கறைகொண்டவையல்ல என்பது அவரது வாதம்.

http://ramasamywritings.blogspot.fr/2012/10/x.html#more

3.காலச்சுவடு கண்ணன் பதில்கள்

தமிழ்நாடு படைப்புலகம் தமிழ்நாடு அரசியலுலகத்திற்கு நிகரானது. அரசியலிலுள்ள அவ்வளவு கயமைகளும்  போலிகளும், பசப்புகளும், பாசாங்குகளும், வியந்தோதும் கூட்டத்தை விலைக்கு வாங்கும் கூட்டமும் அங்குண்டு. பல நேரங்களில் சமூக அக்கறைகொண்டும், சிறுமை கண்டும் கொந்தளிப்பவர்கள், நடிப்பில் களைத்து அரிதாரத்தை வெகுசீக்கிரம் கலைத்துக்கொள்கிறார்கள். அசல் வாழ்க்கையில் வேறு மனிதர்கள் என்பதை புரியவைக்கிறார்கள். என் அனுபவத்தில் பத்தாண்டுகளில் கண்ணன் சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்று இயங்குபவர். ‘எதுவரை’ இணைய தளத்தில் அவருடைய பதில்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளவை ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ இரகமல்ல.  சு.ரா.வுக்கு பரிசளிக்கக்கூடாதென்ற அரசியல், பிள்ளைகொடுத்தாள்விளை சிறுகதை சர்ச்சையென பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். பதில்களில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம், அவர் எரிச்சலுற்றிருப்பது வெளிப்படை. செயல்பாடுகளில் நியாயமிருப்பின் உரத்த குரலைத் தவிர்ப்பது சாத்தியம்மல்ல. இப்பதில்களை முடிந்தால் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவரவேண்டுமென அவரிடம் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இவ்வருடமும் கண்ணனைச் சந்திக்கிறேன்.

http://eathuvarai.net/

4.. வால் பசங்க வராங்க- ஞானி

பிரதமர் மன்மோகன்சிங் தலமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின்மீது வேளைக்கு ஒன்று நாளைக்கு ஐந்து என ஊழல் குற்றசாட்டுகள். காங்கிரஸ்காரர்களுக்குப்பழகிவிட்டது. ”நல்லமாட்டுக்கு ஒரு அடி’ என்ற சொலவடை கிராமத்திலுண்டு. மழையில் எருமைமாடுகள் அதுபாட்டுக்கு நனைந்துகொண்டு அசைபோட்டபடி படுத்திருக்கும். தலைக்கு மேலே வெள்ளம், இதில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன? எரிகின்ற வைக்கோல்போரில் பிடுங்கினமட்டும் இலாபம் என்பதுபோல அவசர அவசரமாக அரசின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கூட்டணிகள் எதிர்கட்சிகள் என்றிருக்கிறவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் சாதுர்யமாக காய் நகர்த்த முடிகிறது.  குற்றத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதில் பங்குண்டு எனசொல்லவும் முடிகிறது. சில்லரைவணிகத்தின் பின்னிருக்கும் அரசியலை வழக்கமான பாணியில் விளாசியிருக்கிறார் ஞானி.

http://gnani.net/

—————————————-

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -செப்டம்பர்

பிரெஞ்சு உணவு விடுதிகளில் நுழையும் முன்பு சில அடிப்படை நுட்பங்களை தெரிந்துகொள்வது நலம். பொதுவாக மதியம், இரவு உணவுக்காக செல்கிறபோது, சர்வர் கொடுக்கிற மெனுகார்டிலிருந்து உணவைத் தேர்வுசெய்தல் நலம் இதைப்பொதுவாக ‘A la Carte’ வகைத் உணவுத் தேர்வு என்பார்கள். நம்ம ஊரில் பாம்பே மீல்ஸ், சென்னை மீல்ஸ் என்பதைப்போல. இத்தேர்வில் உள்ள சௌகரியம் நியாயமான விலைக்கு நிறைவாக உண்டுவிட்டு எழுந்திருக்கலாம்.

பிரான்சு நாட்டில் உணவு விடுதிகளில் முழுமையான உணவு என்பது பொதுவாக கீழ்க்கண்ட வரிசையில் பரிமாறப்படும்.

1. ஒரு அப்பெரித்திப் (aperitif- pre-dinner drink) சாப்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பாக அதாவது பசியைத் தூண்டுவதற்காக அருந்தும் பானம்: அது ஷாம்ப்பெய்ன் ஆகவோ;  மதுவகைகளில் ஒன்றாகவோ (மர்த்தினி (martini), பஸ்த்தி (pastis) ஆரஞ்சு அல்லது எலுமிச்சையைபோட்டு தயாரிக்கப்படும் ஒருவகை ஒயின், விஸ்கி இவற்றுள் ஒன்று) அல்லது பழச்சாறு ஆகவோ இருக்கலாம், கூடவே ஸ்நாக் வழங்குவார்கள் பிரெஞ்சில் இதை amuse-buche அல்லது amuse-guele என்பார்கள். அதாவது வாயின் சந்தோஷத்திற்கு என்ற பொருளில் தமிழில் கொறிக்க எனபொருள்கொள்ளலாம்

2. ஆங்கிலத்தில் starter or appetizer  என்கிற எளிய உணவுகள் மேலே குறிப்பிட்ட பானங்கள் பருகிய பின்பு மேசைக்கு வரும். முக்கிய உணவு பரிமாறப்படுவதற்கு முன்பாகச் உட்கொள்வது. பிரெஞ்சில் இதை ஆந்த்ரே (‘Entree’) என குறிப்படுகிறா¡ர்கள்.

3. ஒயின். இது ‘A la Carte’ல் அடங்காது நாம் விலைகொடுத்து வாங்கவேண்டும்.  ஆனால் சில உணவுவிடுதிகளில் ‘Offert’ என்ற பெயரில் இலவசமாகக் கிடைக்கலாம். உங்கள் உணவின் விலையைபொறுத்தது அது.

4. Entrée’ முடிந்ததும் le plat principal அதாவது ஆங்கிலத்தில் main course எனச்சொல்லப்படுவது, வழங்கப்படும்.

5. ·ப்ரோமாழ் (Fromage- cheese) எனச்சொல்லப்படுகிற பாற்கட்டி ஐந்தாவதாக மேசைக்கு வரும்.

6. தெஸெர் (Déssert ) இது இனிப்பாகவோ, ஐஸ்-கிரீம் ஆகவோ, பழங்களாகவோ ஒருக்கலாம்.

7. காப்பி பொதுவாக பால்கலவாத காப்பி பிரெஞ்சில் கபே (Café)

8. டிழெஸ்டி·ப் (Digestif) இறுதியாக உணவைமுடித்ததும் செரிமானத்திற்காக உட்கொள்ளும் மது.
பொதுவாக இவ்வகை மதுபானங்கள் 35% குறையாத வீரியம் மிக்கவை. லிக்கர் (Liqueur), பிராந்தி எனச் சொல்லபடுபவை அனைத்துமே சாப்பிட்டுமுடித்து செரிப்பதற்காக சாப்பிடும் மதுவாகும். விஸ்கியில் ஐஸ், அல்லது சோடா எனகலப்பதுபோல பொதுவாக இதில் எதையும் கலந்து அருந்துவதில்லை.

9. சாப்பாடுக்கான பில் – இது கட்டாயம் வரும். நீங்கள் கேட்கவில்லையென்றாலுங்கூட. பொதுவாக பிரெஞ்சு உணவுவிடுதிகளில் டிப்ஸ் வழங்கப்படுவதில்லை.
———————-

கவனத்தைப் பெற்ற கவிதையும் பதிவுகளும் செப்டம்பர் -21

1. கவனத்தைப் பெற்றக் கவிதை

விழி பேசிய வார்த்தைகள்
-கணியன் செல்வராஜ்

விடுமுறை நாட்களில்
வீட்டுக்குவந்தால்
அக்காவைப் பார்க்க
அம்மா
அனுப்புவது வழக்கம்

நல்ல நாளுக்குக் காய்ச்ச
நாலுபடி
நல்ல அரிசி

கடை மசாலாவுக்கு ருசிகுறைவு என
அரைத்ததில் பாதியும்
ஐந்நூறு ரூபாயும்

கூடவே பேத்திக்குத்
தெருவில் விற்க வந்தவனிடம்
பார்த்துப் பார்த்து பேரம் பேசி எடுத்த
புத்தாடையையும்
கொடுத்தனுப்புவாள்

அக்கா வரவேற்கும் முன்பே
ரேஷன் கடை
இலவச சேலையும்
கரும்பு வெட்டி
காய்ந்த கையும்
அவள்
கஷ்ட்டத்தைச் சொல்லி
வரவேற்கிறது

அம்மா, அப்பா
எதிர்வீட்டுத் தோழியையும்
விசாரித்தபடி

அம்மா பாப்பாவுக்கு
எடுத்துப்போட்ட
கொடியும் கொலுசும்
விளையாடப்போகும்போது  தொலைச்சிடுவானு
அவுத்துட்டேன்

கழுத்துல கெடந்த செயினு
கொக்கி போடக்
கடையில கொடுத்திருக்கு

மாமா இப்ப எல்லாம்
குடிச்சுட்டு அடிக்கிறதில்லை
இந்தக் காயம் தண்ணீர்க் குழாயில்
தவறி விழுந்தது

கேட்கும் முன்பே
காரணம் சொல்வாள்
விடைபெறும்போது மட்டும்
இதுவரை பேசிய உதடுகள்
மௌனம் சாதிக்க
கண்கள் மட்டும்
கைக்கூப்பிக் கெஞ்சும்
“அம்மாவிடம் எதையும் சொல்லாதே!”

– நன்றி – ஆனந்தவிகடன்

——————————————-

2. கவனத்தைப்பெற்ற பதிவுகள்

அ. அண்ணா சிறுகதைகள் – பெருமாள் முருகன்

அண்ணாவின் சிறுகதைகளைத் தொகுத்துள்ள பெருமாள் முருகன் அத்தொகுப்புக்கென எடுத்த முயற்சிகளையும், தொகுப்பிற்கான காரணத்தையும் தெரிவிக்கிறார்.

“சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியிருக்கிறார் (அண்ணா). எல்லாவற்றையும் ஒருசேரத் தீவிரமாக வாசித்தவன் அல்ல நான். ஆனால் அவருடைய சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்தேன். அக்கதைகளின் வடிவ வேறுபாடுகள் என் மனத்தில் பதிந்தன. தொலைபேசி உரையாடல் தொகுப்பு ஒன்றையே ஒரு கதையாக்கி இருப்பார். இன்னொரு கதை வரவு செலவு  அறிக்கையாக இருக்கும். உரையாடலே இல்லாமல் ஒரு கதை உருவாகியிருக்கும். விதவிதமான வடிவ வேறுபாடுகளைக் கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றால் சிறுகதை வடிவம் பற்றிய உணர்வு அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படியான உணர்வு உடையவர் நிச்சயம் சில நல்ல கதைகளையாவது எழுதியிருப்பார் என்பது என் நம்பிக்கை. அந்த எண்ணத்தில்தான் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுதி ஒன்றை உருவாக்க விழைந்தேன்” என்கிறார் தொகுப்பாசிரியர்.

அண்ணாவின் கதைகள் பற்றிய தொகுப்பாளரின் ஓர்மையும் புறம் தள்ளக்கூடியதல்ல.

http://www.perumalmurugan.com/

2. அற்றகுளத்து அற்புத மீன்கள்

தேவிபாரதியால் தொடர்ந்து காலச்சுவடில் எழுதப்பட்ட  அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு “அற்ற குளத்து அற்புதமீன்கள்” கடந்தமாதம் நான்காம் தேதி ஈரோட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலை பிரபஞ்சனுக்கும், பா. செயபிரகாசத்திற்கும் சமர்ப்பித்திருக்கும் தேவிபாரதி தொடக்ககாலத்தில் அவர்களைத் ( அவர்களை மட்டுமல்ல வண்ண நிலவன், பூமணியும் கூட வருகிறார்கள்) தேடி அலைந்ததை பகிர்ந்துகொள்கிறார். எழுதப்பட்ட கட்டுரையின் சொற்களும் வாக்கியமும் ஒப்பற்றத் அத்தருணத்தை புத்துணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.

தேவிபாரதியின் கட்டுரைகளை வாசித்திருக்கும் எனக்கு அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அதிகம் வாசித்திராத நிலையில் அண்மையில் சுவிஸ் வந்திருந்த நண்பரைச் சந்திக்க தயங்கினேன். இந்திரன் தேவிபாரதி, தளவாய் சுந்தரம் போன்றவர்களின் எழுத்துக்களை என்னிடத்தில் தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் மாச்சரியங்கிளின்றி பாராட்டுவார்.

இக்கட்டுரையை நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்

http://devibharathi.blogspot.fr/

இ. கவாத்துக்குத் தப்பிய செடிகள்

தமிழ் மகன் இலங்கைக்குச் சென்றுவந்ததைத் தெரிவிக்கும் கட்டுரை.

இலங்கையில் பலகாலமாக உயிர்வாழ்ந்தும் சகத் தமிழர்களாலேயே அந்நியர்களாக நடத்தப்படுகிற தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை. அவர்களைப் பற்றிய விரிவான தகவலைக் கட்டுரை தரவில்லை.  ஈழம் குறித்து எவ்வளவு கட்டுரைகள் கவிதைகள், இரங்கற்பாடல்கள், அனற்பறக்கும் விவாதங்கள் இவர்களின்(தோட்டத்தொழிலாளர்கள்) நிலைகுறித்து ஏன் இரண்டொருவரிகள், நலன் விசாரிப்புகள் நம் கண்ணிற்படவில்லை என்பது புரியாதபுதிர்.

தமிழில் ஒரு முதுமொழியுண்டு, ” எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்”

http://www.tamilmagan.in/
———————–

எழுத்தாளன் முகவரி -4: படைப்புக் கூட்டணி

படைப்பிலக்கிய பிரபஞ்சம்: ‘எழுத்தாளன்- வாசகனென்ற’ இருகோள்கள் இயங்கும் வெளி. எழுத்தாளன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வாசனையும் சுற்றிவருகிறான்.  வாசகன் எழுத்தாளனன்றி வேறுகோள்களையும் சுற்றவேண்டியவனாக இருக்கிறானென்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.  எனினும் இருவரும் வாசிப்பு, கலை, இலக்கியமென்ற ஈர்ப்புவிசையாற் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

“வாசகன் விரும்பிய வகையில் – அவன் கற்பனைக்கொப்ப-  சித்திரங்களை வடித்துக்கொள்ள உதவும் பொருட்களைக் கையளிப்பவன்  படைப்பிலக்கியவாதி. எழுத்தாளன் கொடுத்த கையேட்டின் துணைகொண்டு சித்திரத்தை முடிப்பவனாக வாசகன் இருக்கிறான்”- என்கிறார் ஜான் மக்டொனால்டு. குற்றவியல் மற்றும் மர்ம புனைவுகளில் எழுதிக்குவித்து புகழ் பெற்றவர். விக்கிபீடியாவில் இரண்டு ஜான் மக்டொனால்டுகள் வருகிறார்கள்: ஒருவர் ஜான் ஏ மக்டொனால்டு அரசியல்வாதி, கனடா நாட்டைச்சேர்ந்தவர். இரண்டாவது ஆசாமி ஜான் டி.மக்டொனால்டு எழுத்தாளர் அமெரிக்கர். இந்த இரண்டாவது ஆசாமியும் அவரது ‘Creative Trust’ என்ற கட்டுரையும் நமக்கு வேண்டியவை. ‘படைப்புக் கூட்டணி என்பது அக்கட்டுரைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் எழுத்தாளன் வாசகனென்ற இருவரின் உறவையும் படைப்பூடாக மேம்படுத்துவதற்குரிய வழிகளை மக்டொனால்டு விவரிக்கிறார்.

‘இயக்குனரும் நடிகரும் இணைந்து ஒரு காட்சிக்கு உயிரூட்டுவதைப்போல’ என்று இதனைச்சொல்லலாம்.  ஒரு நாவலின் வெற்றியென்பது, அதனைச் சமைத்த படைப்பாளியிடமில்லை, அதைச்சுவைக்க காத்திருக்கும் விருந்தினரிடமிருக்கிறது. காட்சிக்கான மேடை, வெளி, சூழல்; ஒலி ஒளி; ஆடைகள்; நடிகர்கள்; நடிப்பு; வசனம் என அனைத்தையும் இயக்கும் மையபொருள் இயக்குனர். காமிரா, கோணம், வசனம், ஒளி. ஒத்திகை என எல்லாம் முடிந்து,  அவரது அவ்வளவு உழைப்பையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு கூடுதலாக மெருகூட்டும் நடிகர்கள் அமைந்தால், திரைப்படம் வெற்றி பெறுகிறது. உதாரணம் கிளவுஸ் கின்ஸ்கி(Klaus Kinski)- வெர்னெர் ஹெர்ஸோக் (Werner Herzog); பீம்சிங் – சிவாஜிகணேசன் கூட்டணியில் உருவானத் திரைப்படங்கள்.

இனி ஜான் மக்டொனால்டு முன்வைக்கிற உதாரணத்தைப்பார்ப்போம். நம்மெதிரே ஒரு குழந்தை இருக்கிறது. அக்குழந்தையை மகிழ்வூட்டவேண்டும். என்ன செய்யலாம்? நம்மிடம் ஒர் அட்டை, காகிதம், கத்திரிக்கோல், பசை, சில வண்ணப்பென்சில்கள் இருக்கின்றன. காகிதத்தைப் போதிய அளவில் கத்திரித்தெடுத்து கோழி ஒன்றைச் செய்து குழந்தையிடம், “இது கோழி” என்கிறோம். அடுத்து வண்ணபென்சில் கொண்டு வரைந்து கத்தரித்தெடுத்த மற்றொரு காகிதத்தை  ”இதுதான் தானியக் களஞ்சியம்”, என்கிறோம். பின்னர் மஞ்சள் பென்சில் கொண்டு வரைந்த வாகனமொன்றை வெட்டியெடுக்து குழந்தையிடம், “இதோபார் வாகனம் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, இனி கோழி வாகனச் சக்கரத்திற் சிக்காமல் தப்பிக்கவைப்பதோடு படத்தையும் உன் கற்பனைக்கேற்ப முடிக்கலாம் எனக்கூறி நாம் ஒதுங்கிக்கொள்கிறோம். அளித்திருந்த பொருட்கள் ஆர்வத்தை தூண்டுகிறதென வைத்துக்கொண்டால், குழந்தை தனது கற்பனைக்குகந்த மரங்களைச் சேர்க்கலாம், ஒரு வீட்டைத் தீட்டலாம், அவ்வீட்டிற்கு வேலி போடலாம், சுவர் எழுப்பலாம், கிராமத்துக் குழந்தையெனில் கூரைவேயலாம். நகரத்துக்குழந்தையெனில் எங்காவதொரு தீம் பார்க்கிற் கண்ட காட்சி நினவுக்கு வர மாடுகளையோ வேறுகாட்சிகளையோ பென்சிலால் வரைய முயற்சிக்கலாம். கிராமத்துக்குழந்தையின் கற்பனையில் உதித்தவையும் சரி நகரத்துக் குழந்தை தமது மனதிற் தீட்டியதை வெளிப்படுத்தியவையும் சரி, நாம் சொல்லி உருவானவை அல்ல. நம்மால் ஆரம்பிக்கப்பட்ட படைப்புப்பணியில் குழந்தையும் தன் பங்கிற்கு இணைந்துகொண்டிருக்கிறதென்பது தெரியவரும் உண்மை.  நாம் கோழி, தானியக்களஞ்சியம், டிராக்டரென்று வரைந்துக்காட்ட நகரம் மற்றும் கிராமக் குழந்தைகள் அதனதன் கற்பனைக்கொப்ப நாம் படைத்திருந்த மூன்றோடு பொருந்தக்கூடிய பிறவற்றை வரைந்து நிரப்புகின்றன.

மக்டொனால்டு கூற்றின்படி இம்மூன்று சித்திரங்களோடு, குழந்தையின் கற்பனையில் உதித்த வீடு, வேலி, கூரைபோன்ற பிறவற்றையும் நாமே வரைந்து குழந்தையிடம் கொடுத்து, “இது கோழி, இது வேலி, இது மரம், இது டிராக்டர்” என சொல்லியிருப்போமென்றால் குழந்தை அடப் போய்யா நீயும் கெட்டது உன் சித்திரமும் கெட்டது எனக்கூறுகின்ற வகையில், கொட்டாவி விடலாம். அதைப்போலவே கோழிச்சித்திரத்தை மட்டும் போட்டுக் காட்டிவிட்டு மற்றதை நீப்போடு என சொல்லியிருந்தாலும், குழந்தைக்கு அழுகை முட்டிக்கொண்டு வரலாம். குழந்தையின் கற்பனையை வளர்க்கவேண்டுமெனில்  ஆர்வத்தோடு நாம் வரைந்த ஓவியத்தில் குழந்தையும் தம் கைப்பட சில சித்திரங்களை கிறுக்க வேண்டுமெனில் எல்லாவற்றையும் நாமே தீட்டிவிட்டுக் குழந்தையை அழைக்க கூடாது அல்லது ஒன்றை மட்டும் தீட்டி இனி உன்பாடென ஒதுங்கிக்கொள்ளவும் கூடாது. சித்திரம், குழந்தை உதாரணத்தைத் தருகிற மக்டொனால்டு வேறொன்றிலும் எச்சரிக்கை வேண்டுமென்கிறார். கோழி, தானியக் களஞ்சியம், டிராக்டர் ஆகியவற்றை வரைந்து பிறவற்றை நீ தீட்டு எனக்குழந்தையிடம் கொடுக்கிறபோது அவ் ஓவியங்களைப்பற்றிய கூடுதற் தகவல்களும் குழந்தையின் கற்பனையைப் பாதிக்கலாம் என்கிறார். உதாரணமாக படத்திலுள்ளது கோழி அல்ல, பதினோருமாத சேவல், பெயர் மெல்வின், சிறகுகள் ஒளிர சூரிய ஒளியில் நிற்பது அதற்குப் பெருமை, பிற சேவல்கள்போலன்றி நீண்ட கால்களென மூச்சு திணறும் அளவிற்குத் தகவல்களைத் திணிப்பதும் குழந்தைக்கு அயற்சியைத் தரலாம், இதில் நாம் செய்ய ஒன்றுமில்லை எனக்குழந்தை ஓடக்கூடும். இங்கே சித்திரமும் குழந்தையும்:படைப்பும் வாசகனும்.

சொல்லப்படும் பொருளின் தனித்தன்மை

நடை, செறிவு, வாசிப்புத்தன்மை ஆகியகூறுகள் வாசகன் புரிதலைத் தீர்மானிக்கின்றன. இரண்டுகுழந்தைகளிடம் ஓவியங்களைக்கொடுப்பின் அவரவர் கற்பனைக்கொப்ப அவற்றை முடிப்பதுபோல ஒரு புனைவை வாசிக்கிற இரு வாசகர்களுக்கும் வெவ்வேறு கற்பனைகளிருக்கக்கூடும். அவர்கள் கற்பனைகளைக் குறுக்குவதற்கான முயற்சியில் ஓர் எழுத்தாளன் இறங்கக்கூடாதென்கிறார் மக்டொனால்டு. எக்மோர் ஸ்டேஷனை பலரும் சொல்லியிருக்கலாம். நம்முடைய  பங்கிற்கு: டிக்கெடுக்கும் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர் இரயில்கள் புறப்பட தயாராக இருந்தன என்றெழுவதைத் தவிர்த்து பிறர் சொல்லாத எக்மோர் கண்ணிற்படுகிறதா எனப்பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். புனைவின் நம்பகத்தனமையைக் கூட்ட அது உதவும். உதராணமாக கடந்த பத்தாண்டுகளாக திருத்தப்படாத பழுதடைந்த கடிகாரம். 2012லும் எக்மோர் சந்திப்பில் காணநேர்ந்த நீராவி எஞ்சின், இடுப்புக்குழந்தையுடன் போர்ட்டர்வேலைபார்க்கும் பெண்மணி..

” ‘டிக்கெட் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்தார்கள்”- என குறைவானத் தகவல்களைக்கொண்டு எக்மோர் இரயில் நிலையத்தின் பிம்பத்தை எழுதி முடித்துக்கொள்ளலாமென்ற முயற்சியும் மெக்டொனால்டிற்கு கூடாதவேலை. பல்வேறு சேர்மங்களின் பங்களிப்பில் உருவான காட்சியொன்றை எழுத்தாளன் குறைத்து மதிப்பிட்டு வாசகனுக்கு அளிக்கிறபோது, அக்காட்சி நம்பகத்தன்மையை இழப்பதோடு, வாசகனுடைய ஆர்வத்தை குறைக்கக்கூடுமென்கிறார்.

நாம் சொல்ல விழையும் பொருள் தனித்துவமானது என்ற எண்ணத்தை வாசகன் மனதில் உருவாக்கவேண்டும். அதற்கு உதவுபவை என்ற பட்டியலில் அதிக எண்ணிக்கையில் ‘சொற்களை’ தெரிந்து வைத்திருப்பது முதலாவது. சொற்களை அறிய தொடர்ந்தும்; நேரமிருப்பின் கண்டதையும், நேரம் போதாதெனில் தேர்வு செய்தும் வாசிப்பதும் நல்லதென்கிறார். அடுத்து அவதானிப்பு. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். எங்கே இருந்தாலும், எதைசெய்தாலும் ஐம்புலன்களையும் திறந்துவைத்துக்கொண்டு செயல்படுங்கள் உங்கள் எழுத்துக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடுமென்பது மக்டொனால்டு தரும் உத்தரவாதம். நம்மைச்சுற்றியிருக்கும் உலகின் இழைநயம் அதாவது கட்டமைப்பு, வடிவம், பாணி, நிறம், அமைவு, இயக்கமென எல்லாவற்றையும் அவதானிக்கவேண்டும். நிறம், ருசி, ஓசையென நம் கண்ணிற்படுகின்ற பொருட்களின் பண்புகளை மட்டுமின்றி அப்பொருட்களோடு மனிதர்கள்கொண்டிருக்கிற பல்வேறுவிதமான உறவுகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் கட்டாயம்.

 மனிதர்கள் இருவகை

கண்களிருந்தும் அவறை உபயோகிப்பதில்லையென வாழும் மனிதர்களும் இவ்வுலகிலுண்டு என்கிறார் மக்டொனால்டு. பிரெஞ்சு உளவியல்வாதியான ‘யுங்’ வகைப்படுத்தும் மனிதர்களில் ‘ நானற்ற’ (Not I) மனிதர்களாக எழுத்தாளர்கள் இருக்கவேண்டுமாம். ‘நான்’ (I) வகை மனிதர்கள் எப்போதும் தம்மைப்பற்றியே சிந்திப்பவர்கள், தன்னைச் சுற்றி உலகம் இயங்கவேண்டுமென்ற எண்ணுபவர்கள். எனவே பிறரை அவதானிக்க, தானற்ற மற்றமைகளில் இவர்களுக்கு அக்கறை உருவாவதில்லை என்பது அவரது கணிப்பு.

வாசிப்பாலும் பிற முயற்சிகளாலும் பெற்ற சொற்திறன், புற உலக அவதானிப்பு, சொல்லும் வகை என்று எழுத்தாளன் வளர்கிறபோது, தனக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார், மக்டொனால்டு.

————————————————————___________________________________________________________________________________________