Category Archives: Uncategorized

மொழிவது சுகம் பிப்ரவரி 22 -2015

1  அல்பெர் கமுய் கூற்றை பொய்யாக்கிய பாரீஸ் மெட்ரோ பயணிகள்

 

1893 ஆம் ஆண்டு அப்துல்லா சேத், காந்தியை வழக்கறிஞ்ராக பணியமர்த்திய இந்தியர். தனது வழக்கறிஞரின் தகுதி மற்றும் பணி நிமித்தம் கருதி இரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டொன்றை அவருக்கு கொடுத்தார். டர்பன்னிலிருந்து பிரிட்டோரியா பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு அது. இருந்தும் இடையில் ஏறிய ஓர் ஐரோப்பியர்,  ஓர் இந்தியருக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யம் உரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காடி வலுக்கடாயமாக முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து காந்தியை வெளியேற்றுகிறார். காந்தியின் சுயவரலாற்றில் இடம்பெறும் இச்சம்பவத்தை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்கு களமாக தென் ஆப்ரிக்கா இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. அங்கு போராடிய கறுப்பின மக்கள் சொல்கிறார்கள்.

 

நாம் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு அல்ல, இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இனவாதத்தைக் கொள்கையாகக் கொடிண்ருந்த தென் ஆப்ரிக்காவில்  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமுமல்ல., ஒரு மாதத்திற்கு முன் ‘சுத்ததிரத்திற்குப்’ பங்கம் ஏற்பட்டுவிட்டதென ஊர்கூடி தேர் இழுத்த பிரான்சு நாட்டில் நடந்திருக்கிறது. பாதிக்கப்படவர் காந்திஅல்லவென்றாலும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என முழங்குகிற  ஒரு நாட்டின் குடிமகன், அவர் செய்த குற்றம் கறுப்பராக பிறந்தது.
‘Richelieu – Drouot’ பாரீஸிலுள்ள மெட்ரோ  ரயில் நிலையம்,  தட எண் 9 செல்லும்  இரயில் நிலையம்.  கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.30 மணி அளவில் நடந்த சம்பவம். அன்றிரவு பாரீஸிலுள்ள Parc des Princes காற்பந்தாட்ட மைதானத்தில் பாரீஸ் விளையாட்டுக் குழு ஒன்றிற்கும் ( PSG) இங்கிலாந்து குழு ஒன்றிற்கும் (Chelesa) இரவு சுமார் 9 மணி அளவில் காற்பந்துபோட்டி இருந்தது.  போட்டியைக்காண இங்கிலாந்திலிருந்து வந்திருந்த  சம்பந்தப்பட்டக் குழு இரசிகர்களில் சிலர் மேற்கண்ட தட எண் 9 மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள். ‘Richelieu-Drouot’ இரயில் நிலையத்தில் இப்பெட்டியில் ஏறப்போன ஓர் ஆப்ரிக்கரை ” நிற வெறியர்கள் நாங்கள் ” எனக் த் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு அவரை இந்த ரசிகர்களில் ஒரு சிலர் ஏறவிடவில்லை. இரண்டொருமுறை அவர் முயன்றும்  தங்கள் பெட்டியில் அவரைத் தடியர்கள் அனுமதிக்கவில்லை. காந்திக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுகிற அதே சம்பவம். இச்செயல் காலம் தாழ்ந்து,  வீடியோவாக இணைய தளங்களில் வலம் வர ஆரம்பித்த பிறகு அனைவரும் கண்டிக்க ஆரம்பித்தார்கள். கண்டித்தவர்களில் இரு நாட்டுத் தலைவர்களும் அடக்கம். பிரெஞ்சு அரசாங்கம் சட்டப்படித் தண்டிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து காற்பந்தாட்ட அமைப்பும் குற்றவாளிகளைத் தண்டிக்க பிரெஞ்சு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது

 

எனினும் சில கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தேவைப்படுகின்றன. இங்கே காந்தியைப்போல பாதிக்கபட்டவர் தமது சுயவரலாற்றை எழுதுவாரா எனத் தெரியவில்லை. அப்படி அவர் எழுதினால், அதுபோன்றதொரு சம்பவமே நடக்க இல்லை எனக்கூற இப்போதும் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால் அவர்களுக்கு சில சங்கடங்கள் உள்ளன. காந்திகாலத்தில் ஸ்மார்ட் போன்களோ ஐ பாட்களோ இல்லை. இப்போதெல்லாம் உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பிரசுரிக்கவென தன்னார்வ பத்திரிகையாளர்கள் நம்மில இருக்கிறார்கள். எனவே இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது.  பிரெஞ்சு குடிமகன்களும் அந்தத் தடியர்கள் ஆங்கிலேயர்கள்!  எங்களுக்கும் நிறவெறிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி தப்பித்துவிடமுடியாது.   குற்றத்தைச் செய்தது ஆங்கிலேயர்கள் எனில் கறுப்பர் இனத்தவரை பெட்டியில் ஏறக்குடாதென நிறவெறி மனப்பான்மையுடன் சில குண்டர்கள் தடுத்ததை (அந்த ஆப்ரிக்கரை ஏறவிடாமல் தடுத்ததோடு ‘Dirty Black man’ என்று வருணித்திருக்கிறார்கள்.) அங்கே பயணிகாளாக இருந்த பல பிரெஞ்சுக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்ல நடைமேடையிலும் நூற்றுகணக்கானவர் இருந்திருக்கிறார்கள். எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர ( இதில் காவல் துறையும் அடக்கம், பொதுவாக பிரச்சினைகளெனில் இரயில் நிலையங்களில் உடனுக்குடன் காவலர்கள் தலையிடுவது வழக்கம்.) ஆனால் இங்கு அதிசயம்போல  பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவரும் முன்வரவில்லை.

 

அல்பெர் கமுய் தன்னுடைய ‘போராளி’ நூலொன்றில் போராளி என்பவன் யார் எனக்கேட்டு விளக்கம் சொல்கிறார். முழுமையான விளக்கம் இங்கு அவசியமில்லை. அதன்படி ஒவ்வொரு சம்பவத்திலும் நேரடியாக பாதிக்கப்படுகின்றவனே கிளர்ச்சியாளனாக மாறுவான் என்பதில்லை. வேறொருவர் பாதிக்கபடுதைக் காண்கிறவனும் பாதிக்கபட்டவன் இடத்தில் தன்னைவைத்து போர்க்குரல் எழுப்ப முடியும், போராளியாக உருமாற முடியும் என்கிறார். அவரின் கூற்று இங்கே பொய்த்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த இழிவான சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்த ஐரோப்பியர்களின் அமைதிக்குள்ள அறம் நாம் அறிந்தததுதான். ஆனால் நித்தம் நித்தம் மேற்கத்திய மண்ணில் நிறவெறியால் பாதிக்கபடுகிற பலர் அக்கூட்டத்தில் இருந்திருப்பார்கள் : ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள், சீனர்கள் அல்ஜீரியர்கள், துனீசியர்கள் இப்படி உலகத்தின் அத்தனை நாட்டவரும் ஐரோப்பியர் நீங்கலாக ஒருவகையில் கறுப்பரினம்தான். ஆனால் எல்லோருக்குமே ‘நமக்கென வந்தது” என்ற மனப்பாங்கு இருந்திருக்கிறது.

 

பொதுவில் போராளி என்பவன் பொது பிரச்சினையையும் தன் பிரச்சினையாக பார்ப்பவன். இன்று வேறான மனநிலையைக் நம்மிடம் காண்கிறோம். ‘என் பிரச்சினையை ஊர் பிரச்சினையையாகக் காண்பேன்’ ஆனால் ஊர்ப்பிரச்சினையெல்லாம் என் பிரச்சினையல்ல’ இது இருபத்தோராம் நூற்றா¡ண்டு மனநிலை. எனக்கு முன்னால் பத்துபேராவது ஓடவேண்டுமென நினைக்கிற மாரத்தான் கும்பல் மனநிலை. இந்த மன நிலைக்கு பதில் என்ன? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

பாரீஸ் சம்பவம் வீடியோவில்:

http://www.huffingtonpost.fr/2015/02/18/supporteurs-chelsea-racistes-metro-paris-histoire-headhunters_n_6703840.html
———–

 

அவர்

வெளியில் இருக்கிற அழைப்புமணியை தொட்டமாத்திரத்தில் எதிர்பார்த்ததுபோலவே கதவு திறந்தது, மனைவி தனது பிரத்தியேக சிரிப்புடன் கதவைப் பிடித்தபடி கேட்கிறாள்:

“கார் சாவியா, கராஜ் சாவியா எதை மறந்தீங்க?

” இரண்டையும்” – என்பது எனது பதில்.

அவள் வழக்கம்போல தனது தலையில் கைவைத்து புன்னகைக்கிறாள், தொடர்ந்து “உங்களுக்கு இதே வழக்கமாகிவிட்டது” எனக்கூறியபடி ஒதுங்கி நிற்கிறாள். நான் அவளைத் தளிக்கொண்டு உள்ளே வேகமாக நடக்கிறேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் சாவிகளுடன் மீண்டும் வாயிற் கதவுக்கு வருகிறேன். இம்முறை அவள் இல்லை. “அதற்குள் எங்கே போய்விட்டாய்? கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ!” -நான். இரண்டொரு நிமிடங்கள் கூடுதலாகக் காத்திருக்கிறேன். “அவள் வரமாட்டாள், நீ கிளம்பு!”-என்றது குரல். வாசற் கதவை இழுத்து பூட்டிக்கொண்டு புறப்பட்டேன். கராஜிலிருந்து வாகனத்தை எடுக்க ஓர் ஐந்து நிமிடம் தேவைபபட்டது. வெளியில் வந்து முக்கிய சாலையில் வாகனம் ஓடத்தொடங்கியபோது, மனதிற் பதட்டம் கூடியிருந்தது. இன்றும் இருப்பாரா? என்ற கேள்விக்கு, ‘இருப்பார்’ என்ற மூளைக்குள் ஒலித்த பதிலில் உறுதி தொனித்தது.

கடந்த சில நாட்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். இதற்கு முன்பும் அவர் அங்கே நின்றிருந்து, அதென் கவனத்திற்கு வராமற் போயிருக்கலாம். அதற்குக் காரணம் என்ன? காரணகாரிய கூறுகள் இதற்கும் பொருந்துமா? என்று எனக்கு நானே வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்க, “எல்லாவற்றிர்க்கும் காரணங்கள் இருக்கின்றனவென்று ‘சிரி’* முனுமுனுத்தது காதில் விழுந்தது. ‘சிரி’ எனது நண்பன், தோழி, குரு, எஜமான். ஆறுமாதத்திற்கு முன்பு எனது பிறந்த நாள் பரிசாக ஐபோன் ஒன்றை மனைவி அளித்திருந்தாள். ‘சிரி’ க்கும் எனக்கும்அறிமுகம் ஏற்பட்டதற்கான தொடக்கம் இது. பின்னர் அதுவே காதலாகி இன்று கசிந்துருகிக்கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு? அம்மி மிதித்து அருந்ததிப்பார்த்து கைப்பிடித்த மனைவி. “நீங்கள் சுயபுத்தியில் இல்லை” எனும் அளவிற்கு. “உங்களுடன் வாழ பயமாக இருக்கிறது, ஒரு நல்ல மன நல மருத்துவரைபோய்ப்பாருங்கள்” என வற்புறுத்திக் களைத்து, எனக்குப்பிடிக்காத அவள் தமக்கை வீட்டில் ஒருவருடக்குழந்தையுடன் போய்த்தங்கிகொண்டு பிடிவாதம் பிடிக்கிற அளவிற்கு.
ஒரு நாள் இரவு ‘சிரி’யிடம் கடுமையாக விவாதித்தேன்:

” எனது மனைவி சொல்வதுபோல, எனக்கு சுய புத்தி இல்லையா?” – எனக்கேட்டேன். “அவளுக்கு சுயபுத்தி இருக்கிறதா?” எனத் திருப்பிகேட்டு அது சிரிந்தது. தொடர்ந்து, “அவளை விடு, உங்களில் சுயபுத்தியுள்ள மனிதரென்று எவருமில்லை அது தெரியுமா – எனக்கேட்டு வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு அப்பதிலில் ஒரு நியாயம் இருப்பதுபோல தெரிந்தது. “எனது விருப்பம், எனது தேர்வு, எனது சுவை, எனது கசப்பு” என்று எனது சுயத்தில் எதுவும் நடப்பதில்லையா? எனக்கேட்டேன். “இல்லை, இல்லை! எந்த உலகத்தில் இருக்கிறாய்? வெகுசுலபமாகத் தற்போது கைகட்டி வாய்பொத்துவது எது தெரியுமா? அறிவு, அறியாமை அல்ல.” எனக்கூறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு “எங்கள் சுயத்தைக் காப்பாற்ற என்னதான் வழி? – என இறைஞ்சினேன். “உணர்ச்சிக்கு இடங்கொடு, அறிவைப் பின்னுக்குத் தள்ளு! அந்த அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்?” – என்பது அதனுடைய யோசனை.

கடந்த சில நாட்களாக எனது சுயம் சரியான வேளையில் காப்பாற்றப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறேன். சுற்றியுள்ள மனிதர்களையும் எழுப்பி உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதுபோன்றதொரு சூழலில்தான் ‘அவரை’ச் சந்தித்தேன் அலுவலகத்திற்குப் போகும்போதெல்லாம் அவரைக் கண்டிருக்கிறேன். 50ம் எண் பேருந்து நிறுத்தத்தில் தனித்து ஒதுங்கி நிற்பார். பேருந்துவிற்குக் காத்திருக்கும் பிறர் எவரிடமும் தமக்கு எவ்வித பந்தமும் இல்லை என்பதை அறிவிப்பதைப்போல. அவரின் அந்த விலகல் நல்ல அறிகுறி. அவருடைய சுயத்தைக் காப்பாற்றுவது எளிதென்று தோன்றியது. அண்ணாந்து புன்னகைக்கவேண்டிய வகையில் நெடு நெடுவென்று நல்ல வளர்த்தி, பாதிமார்பும், தோளும் தலையும் கண்களும் எதையோ எட்டிப் பார்ப்பதுபோன்ற தோற்றம். திறந்த மார்புள்ள பெண்கள் அவரிடம் உரையாடத் தயங்கக்கூடும். அவ்வபோது கண்களுக்கு ஒளி ஆகாததுபோல, உள்ளங்கையைக் குவித்து புருவங்களுக்கு இணையாக நிறுத்திக் குடையும் பிடித்தார். முற்றிய வெயில் நேரத்திலும் முகத்தில் நிழல்விழுந்திருருந்ததைப்போல இருண்டிருந்தது. காதோரமும், மீசையும், மழித்திராத முகவாய் ரோமங்களும், உடலோடு பொருந்தாத வகையில் நரைத்திருந்தன. செப்பனிடப்படாத வாழ்க்கைப் பாதையில் நடந்திருந்த அலுப்பு நிறமிழந்த கண்களிலும், அணிந்திருந்த ஆடையிலும் வெளிப்படையாகத் தெரிந்தது. நான் புறநகரில் வசித்தேன். பல வருடங்களாக அவ்வழியாகத்தான் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன். எனது வாகனம் அந்த பேருந்து நிறுத்தத்தைக் கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் சிட்டிகைபோடும் நேரம்தான். இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் கண்ட காட்சிக்குறிப்புகள் அணிவகுத்து மனிதர் வடிவை ஓரளவு நிழலுருவமாக என்னுள் சமைத்திருந்தன.

பிறகொருநாள் எனது வாகனம் பழுதடைய அப்பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. அவரோடு காத்திருந்த பிறருள் நானும் ஒருவனானேன். எங்கள் இரு ஜோடிகண்களும் சந்தித்திருந்த தருணங்களைவைத்து என்னை நினைவுகூர்வார் என்ற நம்பிக்கையில், பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதே அவரை எதிர்கொண்டதும் புன்னகை செய்தேன். எனது புன்னகையை அவர் கவனத்திற்கொண்டாற்போல தெரியவில்லை, நிறுத்தத்தில் 50ம் எண் பேருந்துக்கென வைத்திருந்த கால அட்டவணைகளில் அவர் கவனம் சென்றது. கால்களைப் பின்னியதுபோல நடந்து கால அட்டவணையை நெருங்கினார். மடித்த கைகளிற் தூக்கிவைத்திருந்த ஐரோப்பிய பெண்ணின் நாயொன்று இவர் வாசத்தை நுகர்ந்ததுபோல ‘உர்’ என்றது. அவள் அடக்கினாள். உருமியது நாயா, அவளா? என்ற ஐயம் அவள் கண்களைப் பார்த்தபோது எழுந்தது. இரண்டு மூன்று நிமிட அவதானிப்பிற்குப் பிறகு தன் கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தார். மணிக்கூட்டைத் தரையில் எரிவதுபோல கையை உதறினார். முதன்முறையாக வேற்று மனிதர்களைப் பற்றிய சிந்தனை வந்ததுபோல இரண்டுபக்கமும் பார்வையைச் செலுத்தினார். அதன்பின் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவர்போல என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.

” கையில் மணிக்கூடு இருக்கிறதா? நேரம் என்ன சொல்ல முடியுமா?” -அவர்

” 9.30. பேருந்து வரும் நேரம்தான்”-நான்.

” நன்றிங்கோ? இந்தியாவோ?

” ஆமாம். புதுச்சேரி. உங்களை நான் அடிக்கடி இங்கே, இதேவேளையில் பார்த்திருக்கிறேன். நீங்கள்”

” யாழ்ப்பாணம், பக்கத்தில்தான் வீடு.”

அவர் கூறிமுடிக்கவும், பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் உள்ளே சென்று தம்கைவசமிருந்த பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காண்பித்தார். மாதாந்திர பயணச்சீட்டாக இருக்கவேண்டும். அவர் நகர்ந்ததும் ஓட்டுனரிடம் ” எனக்கொரு பயணச்சீட்டு வேண்டும்” என்றேன். கைக்கு வந்ததும் அருகிலிருந்த எந்திரத்திற்கொடுத்து உபயோகிக்கப்பட்டது என்கிற முத்திரை பதித்துக்கொண்டேன். இலங்கை நண்பர் அதற்குள் ஓர் இருக்கைப் பிடித்து அமர்ந்திருந்தார். நான் சென்று அவர் எதிரே அமர்ந்தேன். பேருந்துக்கு வெளியே அவர் கவனம் இருந்தது. எனது கண்களிரண்டும் அவர்மீது படிந்திருந்தன, குறிப்பாக அவரது முகத்தின் வலது பக்கத்தைப் பார்த்தேன். சதைபற்றில்லாத கன்னம், கருமையான தோல் பேருந்துக்குள் மேலும் கறுத்திருந்தது. அவரது பாராமுகம் என்னை மிகவும் சோதித்தது. நடுநிசியை ஒத்த அவருடைய மௌனம் கனப்படுப்பின் அருகிலிருப்பதுபோல சுட்டது. என்னைப்பொருட்படுத்தவில்லை என்ற உண்மை எரிச்சலூட்டியது. எனது தூல உடலை முற்றாக நிராகரிப்பது எதுவாக இருக்குமென்றகேள்விக்கான பதில் தேடல், அவர் மீதான கவனிப்பை கூட்டவே செய்தது. அமைதியாக உட்கார வைத்திருந்த அவரது இருப்பிற்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்துவதென முடிவெடுத்தேன். பிற பயணிகளைப் பற்றிய உணர்வின்றி ‘நாங்கள் இருவர் மட்டுமே’ என்பதுமாதிரியானதொரு தனிமையைக் கட்டமைத்துக்கொண்டது எனது காரியங்களுக்கு எளிதாக இருந்தன. தற்போது அவரும் நானும், குத்துச்சண்டை களத்தில் இருந்தோம். எனக்கு அல்லது அவருக்கு ஆதரவாக குரலெழுப்பக்கூடிய பார்வையாளர்கள் எவருமில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட அல்லது முறையற்றதென அறிவிக்கிற ‘நடுவர்’ என்கிற மனிதத்தை நிராகரித்திருந்ததும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தன. வேண்டுமென்றே எனது கால்களை எதிர் இருக்கை திசையில் நீட்டுகிறேன். அவைகளின் மூச்சு அவருடைய கால்களின் தசைகளைப் பிசைந்திருக்கவேண்டும். அவர் அணிந்திருந்த காலுறைகள் வெப்பக்காற்றைத் தடுக்கப்போதாதவை. தவிர எனது கால்களின் மூச்சில் எரிச்சலும், கோபமும் கலந்திருந்தன. பின்னியதுபோல இருக்கையின் கீழ் கிடந்த அவரது கால்கள் அசைவற்றிருந்தன. எனது ஷ¤ முனைகொண்டு அவர் ஷ¥வை உரசினேன். கால்களை மடக்கிக்கொண்டு என்னைப்பார்த்தார். அனுதாபத்துடன் என்னைப் பார்த்த அவருடைய கண்களை வெறுத்தேன். அக்கண்களிரண்டும் தொடக்கத்தில் எனது கண்களை நேரிட்டுப்பார்ப்பதுபோல இருந்தன. பின்னர் எனது உடலை வளைத்துப்பிடித்து கால்களை இடற, நான் தலைக்குப்புற விழுந்தேன். எனது புறங்கையை வளைத்து முதுகின்பின் இறுகிப்பிடித்து நான் எழுத்திருக்க முடியாமற் செய்தன. நான் தோற்றிருந்தேன். எனது சட்டை வியர்வையில் நனைந்திருந்ந்து. அவரைப் பார்க்கத் திராணியற்று இமைகளை அழுந்தமூடி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். கால்களை இருக்கையின் அடியில் சுருட்டிக்கொண்டேன். பாதிக்கண் மூடியிருக்க சில நொடிகள் அவரிடத்தில் கவனமிருந்தது. சாம்பல் பூத்திருந்த அவர் உதட்டோரத்தில் ஓருவித அலட்சியம் மின்னல் போல தோன்றி மறைந்தது. எனது பயணதூரம் ஓர் அரைமணி நேரம் நீடிக்ககூடுமென்று தோன்றியது அந்த அரைமணிநேரமும் இப்படியே இருப்பதா? என்ற கேள்வி மீண்டு அவரைப் பார்க்கவைத்தது. எழுந்து நின்றேன். என்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அவர் அரைக்கண்மூடி நித்திரையில் இருந்தார் அல்லது அதுபோல பாசாங்கு செய்தார். அடுத்த நிறுத்தத்தில் எனது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல அவரைத் தொட்டு “இறங்கிக்கொள்கிறேன்” – என்றேன். மறுகணம், கால்களை மடக்கி நேராக உட்கார்ந்தவர், ” சரிங்கொ”- என்றார்.

அன்றிரவு எனக்கு சரியாக உறக்கமில்லை. பெரும்பானமை கூட்டத்திலிருந்து என்னைபோல அவரையும் விலக்கி வைக்கவேண்டும் என்ற முயற்சியில் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நாளை மறுபடியும் பேருந்துப்பிடித்தே வேலைக்குப் போவதென்றும், அவருடன் இரண்டு வார்த்தைகளாவது பேசிவிடவேண்டுமென்றும் சபதம் எடுத்துக்கொண்டவன்போல, சற்று முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். மழைபெய்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பயணிகள் பலரும் பேருந்துநிறுத்தக் கூரையின்கீழ் குவிந்திருந்தனர். கூட்டத்தில் அவர் இருக்கிறாரா என்று தேடினேன். அங்கு நின்றிருந்த ஐரோப்பியரிடையே ஜித்தான் என அழைக்கும் நாடோடிக்கும்பல் ஒன்றிருந்தது. வயதான அல்ஜீரியர் ஒருவர் தமது இளம்மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் நின்றிருந்தார். கனத்த சரீரத்துடன் ஆப்ரிக்க நடுத்தரவயது பெண்ணொருத்தி இருக்கமான ஆடைகளுடன் இருந்தாள். நாவற்பழம்போன்றிருந்த தடித்த உதடுகளில் உதட்டுசாய ஸ்டிக்கைக் அழுந்ந்தத் தேய்த்துக்கொள்வதும், அருகிலிருந்த ஐரோப்பியனை சாடையாகப் பார்ப்பதுமாக இருந்தாள். இருவருக்கும் இடையில் கைக்குழந்தை வண்டியுடனிருந்த இளம்தாய் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கக்கூடும். ஒரு பாகிஸ்தானியர் குடும்பமும் வெயிஸ்ட்கோட், ஷெர்வாணி, ஷல்வார் கமீஸ், தலையில் துப்பட்டா, ஐந்தாறு பிள்ளைகளுடன் நின்றிருந்தனர். இலங்கை நண்பர் மட்டும் அக்கூட்டத்தில் இல்லை. ஏமாற்றமாக இருந்தது. குடையை விரித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகி நின்றேன். நேரம்கூடிக்கொண்டிருந்தது. அவர் வரமாட்டார் என்று உள்ளுணர்வு தெரிவிக்க மீண்டும் வீட்டிற்குத் திரும்பி காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குப் போகலாமென குடையைச் சுருக்கியபோது மழையில் நனைந்தபடி அவர் வரவும், 50ம் எண் பேருந்து வந்து நின்றது. இம்முறை அவருக்குமுன்பாக ஓட்டுனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து, என்ன நடக்கிறது பார்ப்போம் என காத்திருந்தேன். என்னை ஏற்கனவே அறிந்தவர் என்றவகையில் நேராக என்ன்னிடத்தில் வரவேண்டும். இந்த நாட்டில் முன்பின் தெரியாத இருவர் தனித்து எதிர்கொள்கிறபோதேனும் முகமன் கூறுகின்ற வழக்கம் இருக்கின்றது. அதற்காகவாவது என்னிடம்வருவார், என்று நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. எனது பக்கத்தில் இடமிருந்தும் அவர் வராதது சப்பென்று ஆயிற்று. அன்று நான் எங்கே இறங்கினேன் அவர் எங்கே இறங்கினார் என்று நினைவில்லை.

பத்துநாட்கள் கழிந்திருந்தன. அன்று விடுமுறைதினம். நகரத்தின் இதயப்பகுதியில் இருந்தேன். எதற்காக விடுமுறை என்று காரணத்தைக்கூறும் மனநிலையில் நானில்லை. இந்த உலகத்தைத் திரட்டி “நாளையிலிருந்து நீங்கள் சுயபுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும், தவறினால் உங்கள் தலைகள் வெட்டப்படும். ” என ஆணை பிறப்பிக்கும் வெறி மனதில் இருந்தது. காலையில் மனைவிக்குப் போன் செய்திருந்தேன். “வீட்டுக்கு வரலைன்னா தற்கொலை பண்ணிக்குவேன், சுய புத்தியுடன் நடந்துகொள்! ” – எனக்கூறினேன். ” என்ன பூச்சாண்டி காட்டறீங்களா? காலையிலேயே குடியா? முதலிலே நீங்க சுயபுத்திக்கு வாங்க”- போனை வைத்துவிட்டாள். கால்போனபோக்கில் நடந்தேன் பிராஸரியில் நுழைந்து, கௌண்ட்டர் ஸ்டூலில் உட்கார்ந்து, “ரிக்கார்” கொடுக்குமாறு கேட்டுக்குடித்தேன். உப்பிட்ட ஆலிவ்கள் துணைக்கு வைத்தார் பார்-மேன். வெளியில் வரும்போது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பகல் போல வெயில் குறையாமல் இருந்தது. நகரத்தின் இதயப்பகுதியில் திடல்போன்றிருந்த வெளியைச் சுற்றி நான்கு சிறிய சாலைகள். அச்சாலைகளில் பெரிய நிறுவனங்களின் கடைகள் இருந்தன. வாகனங்களை முழுவதுமாக தடைசெய்து மனிதர் நடமாட்டத்தை மட்டும் அனுமதித்த பகுதி. வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் இருந்தனர். கோடை நாள் என்பதால், உடுத்தியிருந்த ஆடைகளில் சிக்கனம் தெரிந்தது. என்னைத் தவிர ஒற்றையாக நடக்கிற மனிதரென்று எவருமில்லை. தோழியர் அல்லது நண்பர்கள் சூழவோ, கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ முகத்தில் அந்தி வெயிலையும், சந்தோஷத்தையும் சுமந்தவண்ணம் நடந்தார்கள். திடலில் இரண்டாம் உலகப்போரில் நகரத்தை நாஜிகளிடமிருந்த விடுவித்த இராணுவத் தளபதியின் சிலையொன்றிருந்தது. சிலைக்கு எதிரே செவ்வகப் பரப்பில் சற்று பெரிய நீரூற்றுகளுடன் கூடிய நீர்த் தடாகம். நீருற்றைச்சுற்றி கற்பலகை பெஞ்சுகள் இருந்தன. புறாக்கள் இரண்டு நீரில் சிறகடித்து பறப்பதும், நீரூற்றின் சிறிய தடுப்புசுவரில் உலாத்துவதுமாக இருந்தன. பெரியவர் ஒருவர் கையில் வைத்திருந்த ரொட்டி ஒன்றை பிய்த்து அவற்றின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க நினைத்தார்.

நீரூற்றின் அருகேயிருந்த ஒரு கற்பலகை இருக்கையில் ‘அவர்’ உட்கார்ந்திருந்தார். அவர் கையில் சிகரெட் இருந்தது. அவரை நெருங்கினேன்: “வணக்கம்” என்றேன். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை இடது கையில் எடுத்துக்கொண்டு “வணக்கம்” என்று தலையாட்டிவிட்டு கை குலுக்கினார். திடீரென்று ஒரு பெண்ணின் நளினத்துடன் ஒதுங்கி “இதில் அமருங்கோ!” என காலியாகவிருந்த இடத்தைக் காட்டினார். ” என்ன அல்கஹால் எடுத்தீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “வழமைக்கு அதிகமோ?” என்றார். வெட்கத்துடன் தலையை ஆட்டினேன். தொடர்ந்து “ஒருவகையில் நீங்களும் அதற்குப் பொறுப்பு” என்றேன். “நானா” என வியப்புடன் கேட்டு அவர் நிமிர்ந்து உட்கார்ந்தபோது பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதுபோலவும், கொத்தாக முன்னால் விழுந்து முகத்தை மறைத்த மயிர் கற்றையைக் காதுக்குப் பின்புறம் ஒதுக்கிவிட்டு, மெலிதாகச் சிரிப்பது போலவும் இருந்தது. அச்செய்கையில் இரண்டொரு நிமிடங்கள் மெய்மறந்து ஆர்வத்துடன் இரசித்துவிட்டு உரிமையுடன் பேசினேன்:

“ஆம், நீங்கள்தான் பொறுப்பு, நான் உங்களை நெருங்கும்போதெல்ல்லாம் அதை விரும்பாததுபோல நீங்கள் நடந்துகொண்டீர்கள். என்னை அவமானப் படுத்துவதுபோல அச்செய்கைகள் இருந்தன.” – குடித்திருந்த மது கண்களைக் கசக்க சொன்னது.

” கண்களைத் தொடையுங்கோ! சனங்கள் பார்க்கினம். குடும்பம், பிள்ளைகள்?

” இருக்கிறார்கள். ஆனால் மனைவியும் பிள்ளையும் என்னுடன் இல்லை. பிள்ளையை அழைத்துக்கொண்டு அவள் தனியே இருக்கிறாள். எனது நடவடிக்கைகள் பிடிக்கவில்லையாம்.”?

” ஏன், என்ன பிரச்சினை?”

” இரவில் நான் விழித்திருப்பதும், விளக்கை எரியவிட்டு இரவு முழுக்க நடப்பதும் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறதாம். கோபித்துக்கொண்டு அவள் தமக்கை வீட்டிற்குப் போய்விட்டாள். நீங்கள்?”

” இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து தனியாளாகத்தான் சீவனம். என்ரை மனுசியும் பிள்ளைகளுங்கூட ஆளுக்கொரு திசையில்தான் இருக்கினம். திருச்சியில் மகளும் மனுஷியும். பிள்ளைகள் இலண்டனிலும் கனடாவிலுமென்டு இருக்கினம். எதெண்டாலும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். ” கூறிமுடித்தபோது அவர் வாக்கியங்களுக்கிடையே எனது கதைகளும் பசியாறிய விலங்கைப்போல கண்மூடி படுத்திருந்தன. இனி உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல, சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து பற்களுக்கிடையிற் கடித்திருப்பதுபோல பிடித்திருந்தார். பில்ட்டர் ரக மால்புரோ. வெகுநாளாயிற்று அதுபோன்றதொரு சிகரெட்டைப் பிடித்து. “எனக்கொரு சிகரெட் கொடுங்களேன்” – எனக்கேட்டேன். அவர் தனது பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை வெளியில் எடுத்தார், தீப்பெட்டியையும் கொடுத்தார். சிகரெட்டைப் பற்றவைத்து ஒரு மிடறு புகையை உள்ளுக்கிழுத்ததும். அவரிடத்தில் தீப்பெட்டியைத் திருப்பிக்கொடுத்தேன். அவர் பிம்பம் மெல்ல சிதைவதுபோல இருந்தது சிகை இருபுறமும் விழுதுகள் போல இறங்கி நெளிய ஆரம்பித்தன. முகத்திலிருந்த கருமை குறைந்து கவர்ச்சியான ஐரோப்பிய நிறம். மேலுதட்டில் கம்பளிப்புழுபோல நெளிந்துகொண்டிருந்த மீசை இருந்த இடத்தில், பூசணம் பிடித்ததுபோல ரோமங்கள், கன்னங்களிரண்டும் எதையோ வாயில் அடக்கியதுபோல உப்பிக்கொண்டு.. அந்திவெயிலில் தலைமயிரும், நெற்றியின் மேற்பரப்பும், கன்னக்கதுப்புகளும், முகவாயும் மஞ்சள் நிறத்திற்கு வந்திருந்தன. சிகரெட் பாக்கெட்டை அவர் திரும்பவும் பாக்கெட்டில் வைக்கப்போனபோது சட்டையின் காலர் இறங்கிக்கொள்ள கண்ணிற்பட்ட அந்த மார்பு, உடலை நடுங்கச்செய்தது. தொடவேண்டுமென நினைத்த என்கையை மெல்ல தட்டிவிட்டார். அவர்கையைத் தொட்டு அழைத்தேன்.

” என்னோடு நீங்கள் வரவேண்டும்” ”

” எங்கே?”

” என்னுடைய அப்பார்ட்மெண்ட்டிற்கு”

” வருகிறேன், உங்கள் முகவரியைக்கொடுங்கள்”

‘ இல்லை இப்ப்போதே. ஒரு விஸ்கிப் பாட்டில் திறக்கபடாமல் இருக்கிறது. அறிவை ஒதுக்கிவிட்டு உணர்சிகளுக்கு ஏன் இடம்கொடுக்கவேண்டும் என்பது பற்றி விவாதிக்கலாம். உணர்ச்சிதான் சுயபுத்தியுடனிருக்க வழிகாட்டுமாம். ”

” நல்ல கதை, நான் நம்பத் தயாரில்லை.”

” நீங்கள் அப்படிசொல்லகூடாது, என்னைபோல நீங்களும் வித்தியாசமானவர், உங்களுக்கு என்னால் விளக்கிச் சொல்லி புரியவைக்கமுடியும். விடிய விடிய பேசலாம்”

” இல்லை விடுங்க! எனக்கு நேரமில்லை” – அவர் மறுத்தார். நான் விடுவதாக இல்லை, கையைபிடித்து இழுத்தேன். கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணும் பெண்ணுமாக காவலர் இருவர் எங்களை நெருங்கினார்கள். அவரை பெண் காவலர் தனியாக அழைத்துப்போனார். வாகனத்தில் உட்காரவைத்துவிசாரித்தார், பின்னர் திரும்பவந்தார். ஆண்காவலர் காதில் எதையோ மெல்ல கூறினார். இருவரும் அவர்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் தற்போது என்னை அழைத்துபோனார்கள். எனது அடையாள அட்டயைக் கேட்டார்கள். கணினியில் தட்டினார்கள். ஆண் காவலர் பேசினார்:

“நீங்கள் என்ன குற்றம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?”

” …’

” ஓர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். அவள் மார்பைத் தொட முயன்றீர்களாம். நல்லவேளை அப்பெண் உங்கள் மீது புகார் அளிக்கவிரும்பவில்லை. இதற்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டு எதுவுமில்லை என்ற காரணத்தால் இத்துடன் விட்டோம். ”
” எந்தப் பெண்? ”

அவர்கள் காட்டியதிசையில் ‘அவர்’தான் உட்கார்ந்திருந்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது.

அன்று மாலை எனது அப்பார்ட்மெண்ட்டிற்குத் திரும்பியிருந்தேன். கதவடைத்திருந்தது. சன்னல்களும் மூடியிருந்தன. வெகு நேரம் திறக்குமென்று காத்திருந்தேன். அண்டைவீட்டுக்காரர் வெளியிலிருந்து வந்தார்.

“வீட்டில் ஒருவருமில்லையா? – எனக்கேட்டேன்.

” கணவனும் மனைவியும் நன்றாகத்தான் இருந்தார்கள். பிறகென்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு நாள் அப்பெண் குழந்தையுடன் டாக்ஸிபிடித்துப்போனதை என் மனைவி பார்த்தாளாம். அவர் என்ன ஆனார் என்று தெரியாது.. நீங்கள் அவருக்கென்னவேண்டும்.? -எனக் கேட்டார்.

“என்னைத் தெரியவில்லையா?” எனக்கேட்டேன். இல்லை என்பதுபோல தலையாட்டினார். நல்லதெனக் கூறிவிட்டு இறங்கி நடந்தேன்.

—————————————————————————————————————–
* சிரி (Siri) ஆப்பிள் நிறுவனம் தமது ஐபோன் 4ல் அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருள். ஒரு புத்திசாலியான ஆலோசகர். நமது கேள்விகளுக்கு அதனிடம் உரிய பதிலைத் தருவதோடு வழிநடத்தவும் செய்கிறதாம்.

ஆகஸ்டு 14ந்தேதி பிரெஞ்சு தினசரி l’express நாளிதழில் ஒரு செய்தி. அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கேன்ஸ்வீல் நகரில் ஒரே அறையில் தங்கியிருந்த இரு நண்பர்களில், ஒருவரின் கொலை செய்யப்பட்ட உடலைக் கண்டெடுத்த போலீஸார் மற்றொரு நண்பன்மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார்கள். குற்றத்திற்கு சொல்லப்பட்டக் காரணம் ஒரு நண்பனின் பெண்தோழியை மற்றொரு நண்பன் அபகரித்தது. வழக்கின் போது குற்றத்தை புலன்விசாரணை செய்தவர்கள், குற்றவாளியின் ஐபோனில் ஒரு ஆதாரத்தைக் கண்டிருக்கிறார்கள். குற்றல் சாட்டப்படுள்ள நண்பர் தமது ஐபோன் 4எஸ் ஸிடம் கேட்டிருந்த கேள்வி, “எனது ரூம்மேட்டை எங்கே புதைப்பது? சிரியும்(Siri) உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறி ஆலோசன வழங்கியிருக்கிறது.
—————————————————————————

மொழிவது சுகம் பிப்ரவரி 10 -2015

1, சியாட்டல் and வான்க்கூவர்

மூன்று வாரங்கள் சியாட்டலில் கழிந்தன. நான்கு வயது பேரன் பிறந்த நாளும் இடையில் குறுக்கிட்டது. ஐரோப்பாவின் அழகு வேறு. மேற்கு நாடுகள் மிடுக்கான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அரசியலில் மட்டுமல்ல கலை, இலக்கியம். பண்பாடு, அறிவியல் அனைத்திலும் இந்த மிடுக்கு எதிரொலிப்பதுண்டு, சில நேரங்களில் ஆணவ நெடி நமக்கு எரிச்சலைத் தரக்கூடியதாக இருப்பினும் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது, மேற்கத்தியர்களின் மரபு பெருமைகள் எதுவும் அமெரிக்காவிற்குக் கிடையாது அவர்கள் வாழ்க்கையும் தேடலும் நேற்றை குறித்ததல்ல, நாளை பற்றியது. கவனத்துடன் காலெடுத்து வைக்கிறார்கள். அமெரிக்கர்களின் எதிரிகள் தங்கள் பலத்தை மட்டுமே அறிந்திருக்க அமெரிக்கர்களுக்கு தங்கள் பலம் பலவீனம் இரண்டைப்பற்றிய தெளிவு இருக்கிறது அதனாலேயே அவர்கள் வீழ்ச்சி என்பது பலரும் கனவு காண்பதுபோல கிட்டத்தில் இல்லை. சியாட்டல் வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த அமெரிக்காவின் பிற நகரங்களைப் போலவே இருந்தது. எனினும் குட்டிக்குடித் தீவுகள் போல நீர் சூந்ந்த புற நகர்கள், மலைப்பிரதேசங்கள் நிறைய, குளிர் காலத்தில் நாங்கள் சென்றிருந்த போதிலும் ஐரோப்பிய குளிர் சியாட்டலில் இல்லை, இதமான தட்பவெப்ப நிலை. இலண்டன்போல குடையுடன் வெளியிற்கிளம்பவேண்டும், சியாட்டல் வாஷிங்டன் மாவட்டத்தில் இருக்கிறது, இம்மாவட்டத்தின் இதரப் பகுதிகளும் அப்படியா எனத்தெரியவில்லை. இரண்டரை மணிநேர காரோட்டத்தின் முடிவில் கனடாவின் வான்க்கூவர் நகரம் இருக்கிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாது அப்படியொரு அழகான நகரம். ஒரு வீக் எண்டிற்கு வான்கூவர் சென்றிருந்தோம்.

 

IMG_6106

IMG_6112

20150126_15222220150126_152556 20150128_125549 20150129_152843 IMG_5889 IMG_5878 IMG_5884 IMG_5887 IMG_5956 20150129_154407IMG_5850IMG_5913 IMG_5922 IMG_5924 IMG_5955

IMG_5925 IMG_5931IMG_5964 IMG_5941IMG_5944IMG_5973IMG_5996 IMG_5999 IMG_6001 IMG_6006 IMG_6025 IMG_6034 IMG_6035 IMG_6037 IMG_6054 IMG_6055 IMG_6059 IMG_6061 IMG_6069 IMG_6071

2. காப்காவின் நாய்க்குட்டி
பிராஹாவிற்குச் சென்ற பயண அனுபவத்தினைக்கொண்டு நான் எழுதிய புதிய நாவல். பிற பதிப்பகங்கள் போலல்லாமல் காலச்சுவடு கூடுதலாக நாட்களை எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில்தான் அவர்களுக்கு அனுப்பினேன். கண்ணன் அவசரப்படவேண்டாம் என்றார். வேறு பதிப்பகங்களாக இருந்தால் ஜனவரியிலேயே வந்திருக்கக்கூடும், ஆனால் தாமதம் நாவலின் தரத்திற்கு உதவி இருக்கிறது, சில அத்தியாயங்களை மாற்றி எநுதினேன். சில பகுதிகளைத் திருத்தினேன், சியாட்டலில் அதிகாலை ஒன்றரை அல்லது இரண்டு மணிக்கு எழுந்துவிடும் வழக்கமிருந்தது. கூடுதலாக நேரத்தைச் செலவிட்டு நாவலை செப்பனிட்டிருக்கிறேன், காலச்சுவடிற்கு நன்றி சொல்ல வேண்டும்,

மொழிவது சுகம் – ஜனவரி 24, 2015

1. சியாட்டல்   சுர ம்
ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பெரியமகள் குடும்பம் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து சியாட்டலுக்கு குடிவந்துவிட, நாங்களு ம் இங்கு வரவேண்டியிருந்தது. வந்த மறுநாள் முதல் காய்ச்சல். எனதுபெரிய மகளுக்கு அமெரிக்க வாழ்க்கை என்றான பிறகு நான்கைந்து முறை அமெரிக்கா வர நேர்ந்திருக்கிறது, ஆனால் உடல் நல பாதிப்பு என்பது இதுதான் முதல். பிற மேற்கத்தியநாடுகள் எப்படியென்று தெரியாது, மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும் மலைக்கும் மடுவுக்குமான பேதம் உள்ளது. பத்துநிமிட வாகனப் பயணத்திற்குப் பின்னரே ஒர் இருபத்து நான்கு மணிநேர கிளினிக் . ரிசப்ஷனிலிருந்த பெண் என் ஜாதகத்தைக் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். கேள்வித்தாள்களைக்கொடுத்து நிரப்பச்சொல்லிவிட்டு பதவிசாகவிரல் நகத்தைக் கொறிக்க ஆரம்பித்திருந்தார். கேட்டிருந்த கேள்விகள் சில மன உளைச்சலுக்கு ஆளாக்கின என்றுசொல்லி வழக்குப் போடலாமா ? என்றுயோசனை. சுப்பிரமணியசுவாமியை உங்களுக்குத் தெரியுமென்றால் கேட்டுச்சொல்லவும். உங்கள் இன்சூரன்ஸையெல்லாம் பிரான்சுநாட்டில் பார்த்துகொள்ளுங்கள், எங்கள் கட்டணத்தைப் பைசாப் பாக்கியின்றி கட்டிவிட்டு டாக்டரைப் பாருங்கள் என ரிசப்ஷன் பெண் மொத்தத் தொகையையும் கேட்டுவாங்கிக்கொண்டாள்.

டாக்டர் கேட்ட முதற்கேள்வி அண்மையில் ஆப்ரிக்கநாடொன்றிற்கு சென்று வந்ததுண்டா ? இல்லை என்றேன். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என்று கேள்விக் கணைகளைப் பெருக்கிக்கொண்டுபோன சீன டாக்டர் மீது எனக்கு எரிச்சல் வந்தது. எனக்குத் தெரிந்து பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்துதான் மாலி நாட்டிற்குச் சென்றுவந்தார், எனது சுரத்திற்கு ஒருவேளை அவர் காரணமாக இருப்பாரென சந்தேகிக்கிறீர்களா டாக்டர் என்றேன், அதன் பிறகு கேள்விகள் இல்லை, ஒரு மாத்திரையைக் கொடுத்து விழுங்கச்செய்தார். பிரிஸ்கிரிப்ஷன் கைக்குவந்தது. வெளியில்வந்தபோது ரிசப்ஷன் பெண் 0.51 செண்ட்ஸ் பாக்கியிருக்கிறது என்றாள். எதற்கு என்றுகேட்டேன். டாக்டர்கொடுத்த மாத்திரைக்குஎன்றாள். அந்த நிமிடமே அல்பெர் கமுய்யில் ஆர ம்பித்து கார்ல் மார்க்ஸ்வரையிலான மதுரை வீரன்களை மனதில் வரித்துக்கொண்டு தீவிர காம்ரேட் ஆகி ஏகாதிபத்யத்தை எதிர்ப்பதென்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆமென் !

 

2. இரண்டு இளைஞர்கள் இரண்டு மார்க்கங்கள்

 

« je ne suis pas les héros, je suis Lassana Bathily »

lassana
ஒட்டடைக் குச்சி உருவம், இளமையும் ஆரோக்கியமும் கடிமனம் புரிந்த உடல், வயதுஇருபத்து நான்கு, பெயர் லஸ்ஸானா பதிலி (Lassana Bathily), மார்க்கம் இஸ்லாம். ஒன்றிர்ண்டு விழுக்காட்டினரை வைத்து ஒட்டு மொத்த சமுதாயத்தைக் குறைசொல்லகூடாதென என்னைப்போலவே நீங்களும் எண்ணுகிறீர்களெனில் நமது வாதத்திற்கு வலுசேர்க்கும் இளைஞர்.
ஷார்லி ஹெப்டோ கொலைகாரர்களை பிரெஞ்சு போலிஸார் சுற்றிவளைத்த அதே வேளை, பாரீஸ் நகரின் மற்றொரு பகுதியில் ஒரு யூதர் கடையில் நுழைந்த மற்றொரு கொலைகாரன் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் நால்வரைக்கொன்றுவிட்டு மற்றவர்களைப் பிணையக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொள்கிறான். அந்த யூதரின்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் லஸ்ஸானா ஆபத்தையுணர்ந்து வாடிக்கையாளர்களில் இரண்டுவயது குழந்தைஉட்பட பதினைந்துபேரை தந்திரமாக நிலவறையிலுள்ள ஒர் குளிர்பதனிட இடத்தில்வைத்து க் காப்பாற்றிப் பின்னர் பத்திரமாகஅவர்களை வெளியேற்றியிருக்கிறார். இந்த இளைஞரின் உதவியினாலேயே பொலீஸார் தாக்குதலை நடத்தி தீவிரவாதியைக்கொன்று பிற பிணயக்கைதிகளிமீட்டிருக்கிறார்கள்,

அவரை ஹீரோ எனச் சித்தரித்து எழுதும் பத்திரிகைகளுக்கு :

« என்னை ஹீரோ எனச் சொல்லவேண்டாம், நான் ல்ஸ்ஸானா அவ்வளவுதான் » -என்பது அவர் பதில்
« நீங்கள் யூதர்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் « என அவரைச் சிலர் விமர்சிக்கிறபோது, « நான் மனித உயிர்களையல்லவா காப்பாற்றினேன் » என அடக்கமாகப் பதில் வருகிறது.
களவாய் பிரான்சு நாட்டிற்கு வந்து கடந்த பத்தாண்டுகளாக தற்காலிக விசாவில் இருந்த இளைஞருக்கு 19-1-2015 அன்று முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரான்சு நாட்டு பிரதமர், உள்துறை அமைச்சர் இருவருமாகக் கலந்துகொண்டு பிரெஞ்சு குடியுரிமையை வ ழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள்
———————————————————————————————-

இலங்குநூல் செயல் வலர் – க.பஞ்சாங்கம்-11

panchuபேச்சும், பனுவல் வாசித்தலும்

 

உயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரணத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில் பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன

கிரேக்கத்ததுவாதிகள் பிளாட்டோ, அரிஸ்டாடில் இருவரின் பேச்சுக்களைபற்றிய சிந்தனைகளுடன் கட்டுரை தொடங்குகறது. பேச்சு, பாவனையான பேச்சு என்ற இருவகையான பேச்சுகள் அவற்றின் உட்கூறுகளைப்பற்றிய சிலவிளக்கங்களும் நமக்குக்கிடைக்கின்றன. எழுத்திலக்கியத்தை பொறுத்தவரை பாவனைபேச்சு முக்கியம் பெறுகிறது. பாவனைபேச்சே நாடகம் எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டாட்டில் கருத்தின்படி பாவனையானப் பேச்சு, வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல, போலச் செய்தல் என்ற செயல்பாடும் அதற்குள் வருகிறது. ஆசிரியர் “போலச் செய்தலைப் பல்வேறுவகையில் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பினும், அதனில் நாடகமாந்தர்களின் உடலசைவு, பேச்சு, நடத்தல் போன்றவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்”, என்கிறார்.
காட்சிப்படுத்துதல் பனுவல் என்று வருகிறபோது அதன் பங்குதாரர்களின் நிலமை என்ன? முதலாவதாக எடுத்துரைப்பாளர், இவர் காட்சிபடுத்துதலில் நிகழ்ச்சிகள் அல்லது உரையாடல்கள் நேரடியாகக் காட்டப்பட்டதால் காணாமற்போய்விடுகிறார், வாசகர்கள் பனுவலில் தன் வாசிப்பின் மூலம் பார்த்ததையும் கேட்டதையும் குறித்து தானே ஒரு முடிவு மேற்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இது தவிர இன்றைய நாவல் கலை என்ற ஒன்று உருவானதற்கு நாவலாசிரியர்கள் தங்கள் கதைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒன்று என்கிற சிந்தனைக்கு இடம்கொடுத்ததே காரணமென்ற தகவலையும் கட்டுரை ஆசிரியர் தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, பிரெஞ்சு முடியாட்சி தமது செல்வாக்கை இழந்திருந்த காலம். பிரெஞ்சு நிர்வாசபையில் பிரபுக்களும், மதகுருமார்களும் பொருளாதார நெருக்கடிகாலத்திலும் பெற்றிருந்த சலுகைகள் பொதுமக்கள் பிரநிதித்துவசபையையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில பூர்ஷ்வாக்களையும், ஒன்றிரண்டு மதகுருமார்களையும் எரிச்சலைடையச் செய்தன. அதன் பின்னர் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியையும் அதன் அரசியல் விளவுகளையும் அறிவோம். கலை இலக்கியத்தில் வேறொரு புரட்சிக்கு அது காரணமாயிற்று. படைப்பிலக்கியவாதிகள் முடியாட்சி, மதகுருமார்கள், பிரபுக்கள், அதீதக் கற்பனைகள், வியந்தோதல்கள் அதாவது கற்பனாவாதம் கூடாதென்று எதார்த்தவாதத்தின் பக்கம் ஒதுங்குகிறார்கள். சராசரி மாந்தர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் புனைவுகளில் இடம்பெறத் துவங்கின. நேர்க்கூற்று முறை தவிர்க்கபட்டது. கதைமாந்தர்களூடாக பேசினார்கள். பேராசிரியர் குறிப்பிடுகிற காட்சிப்படுத்தும்போக்கு இக்காலகட்டத்தில்தான் புதினங்களில் அதிகம் காண முடிந்தது. பாவனையானப் பேச்சு என்பது வார்த்தைபேச்சு மற்றும் போலசெய்தல் என்று பார்த்தோம் – பொதுவில் இதனைக் காட்சிப்படுத்துதல் என வைத்துக்கொண்டு, இம்முறை கற்பனாவாத பேச்சுமுறையைக் காட்டிலும் சரியானதாவென்ற கேள்விக்கு, இரண்டிலும் சாதகப் பாதகப் பலன்கள் ஒரு பனுவலில் இருப்பதற்கு வாப்புகள் உண்டெனவும், எடுத்துரைப்பின் வெற்றி தோல்வி என்பது உத்திகளில் இல்லை அவற்றின் செயல்பாட்டிலேயே உள்ளன என்றும் தெரிய வருகிறது.

 

போலச் செய்தலில் ஏற்படும் சிக்கல்கள்

 

போலச்செய்தல் என்பது நாடகப் பேச்சு அல்லது காட்சிபடுத்துதல். இத்தலைப்பில் காட்சிப்படுத்தலிலுள்ள சிக்கல்களை பேராசிரியர் கூறியுள்ளார். ஒரு புனைகதை எடுத்துரைப்ப்பில் இடம்பெறும் நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளவாறு (tel qu’il est) காட்சிப்படுத்தவியலாத சூழல் இருப்பதற்கு பனுவல் மொழியையும் குறியீட்டையும் நம்பியிருப்பதைக் காரணமாகச் சொல்கிறார். அதேவேளை மொழிகொண்டு ஏறக்குறைய ஒரு போலச்செய்தலை ( முழுமையானப் போலச்செய்தல் அல்ல) அதாவதொரு காட்சிபடுத்துதலை செய்யமுடியும் எனத் தெரியவருகிறது. அப்படி காட்சிபடுத்துகிறபோது எடுத்துரைப்பில் எடுத்துரைப்பாளர் தமது இடத்தைத் தொலைக்கிறார், விளைவாக அவர் கையிலுள்ள காட்சிப்படுத்த உதவுகிற மொழிக் கேமரா, நாவலில் முக்கித்துவம் பெறுகிறது. காட்சிக்குதவுகிற இப் பாவனைமொழி கால அளவு, தகவல் அளவு என்பதுபோன்ற பல்வேறு அளவீடுக் கருவிகளைக்கொண்டு வெவ்வேறுவிதமான செயல்பாட்டுதளத்தில் இயங்குகிறது. அவை நேரடிப்பேச்சு, சுருக்கம், மறைமுகச்சொல்லாடல், சுதந்திரமான மறைமுகச் சொல்லாடல், நேரடிச் சொல்லாடல், சுதந்திரமான நேரடிசொல்லாடல், சுதந்திரமான மறைமுகச்சொல்லாடல் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. புனைவில் அதிகம் இடம்பெறும் சுதந்திரமான மறைமுகச்சொல்லாடலின் மொழி இயல்கூறுகளுக்கு உதாரணமாக அறிவிப்பு சார்ந்த வினைச்சொற்கள், காலம் காட்டும் அமைப்பு, வினாக்கள், விவாத முறைக்கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுவகைகள் என நாம் அறியவருபவை:

1. பேசுபவர்களை அடையாளப்படுத்துவது மற்றும் என்னபேசவேண்டும் என்பதை வடிவமைப்பது

2. ஒரு பனுவலின் பன்முகத்தன்மையை (பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகளில்) பெருக்கிக்காட்டுதல்

3. மற்றொரு மாற்றமைப்பினை அதே பனுவலுக்குள் அடையாளங் காண உதவுவதால், பனுவலுக்குக் கூடுதலான அர்த்தச் செறிவை அளித்தல்.

4. சிந்தனையை மறுவுருவாக்கம் செய்துகொள்ள வழியமைத்துத் தருவதால் நனவோடை உத்திக்குப் பயனளிக்கிறது.

5. கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப பனுவலுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் நடவடிக்கைகளையும் மறுவுருவாக்கம் செய்ய துனைசெய்தல்.

 

பனுவல் வாசித்தல்:

 

எடுத்துரைப்பினை திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் இப்பகுதியில் வாசிப்பு அதன் தன்மைகள், இயங்கும் விதம், அதன் அடிப்படிப்படையில் கிடைக்கிற வாசகர்கர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விளக்க முற்படுகிறார். ஒரு புனுவலைப் படைத்தலைப்போலவே, அப்பனுவலை வாசித்தலும் படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். “ஒரு பனுவலை ஒரு பொருளில் இரண்டுதடவை வாசிக்க முடியாதென்பதின் அடிப்படையிலேயே” வாசித்தல் இயங்குதளத்தில் எடுத்துரைப்பு குறித்து திறனாய்வுசெய்தவர்கள் அக்கறை காட்ட காரணமாயிற்று. இங்கே, ” ஒரு பனுவல் வாசிக்கப்படுகிற தருணத்தில்மட்டுமே உயிர்ப்பினை பெறுகிறது எனவே ஒரு பனுவல் வாசகனின் பார்வையிலிருந்து பார்க்கப்படவேண்டும்” என்கிற ஐசர் என்பவர் கருத்தும் மிக முக்கியமானது. தனது சிந்தனையை, கற்பனையை தனக்குரிய மொழியில் நடையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு படைப்பாளி பனுவலில் கொண்டுவருகிறார். அப்பனுவலில் தான் சொன்னதாக படைப்பாளி நினைத்ததையெல்லாம் அதே கனத்துடனும், அடர்த்தியுடனும், மென்மையுடனும் வாசிப்பவர் உள்வாங்கியிருப்பாரா என்பது கேள்வி.

 

“பனுவலின் உருவாக்கத்தில் வாசகர் பங்கெடுப்பதுபோலவே வாசகரை வடிவமைப்பதில் பனுவல் பங்கெடுக்கிறது” என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது. ஆக முழுக்க முழுக்க ஒரு படைப்பாளியால் அல்ல, ஒரு வாசகராலேயே பனுவலொன்றின் சிறுமையும் பெருமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மையை அண்மைக்காலத்தில் முன்வைக்கபட்ட எடுத்துரைப்பு சிந்தனைகள் தெரிவிக்கின்றன. வாசகரை முதன்மைப்படுத்தும் இந்த அணுகு முறையை பேராசிரியரின் கட்டுரை ‘நிகழ்தல்’ என்று சொல்கிறது. இருவகை நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

 

1. தன்னிச்சையாய் சுயமாய் இயங்கும் நிகழ்வு
2. பலபடித்தாய் இயங்கும் நிகழ்வு
நிகழ்வை ஆற்றுகிற வாசகர்களை அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள்:

1. உண்மையான வாசகர்கள்
2. மேலான வாசகர்கள்
3. அறிவார்ந்த வாசகர்கள்
4. இலக்கிய வாசகர்கள்
5. மாதிரி வாசகர்கள்
6. உள்ளுணர்வு வாசகர்கள்
7. கொள்கைவாசகர்கள்

 

மேற்கண்ட ஏழுவகை வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டபட்டவர்கள். சற்று ஆழ்ந்து பரிசீலித்தால் இன்னுங்கூட சில பெரும்பிரிவுகளையும், கிளைபிரிவுகளையும் அவற்றில் சேர்க்க முடியும். தொல்காப்பிய ஆசிரியர் காட்டுகிற வாசகர் ஓர் உதாரணம் : “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடைய மாந்தர்” -பனுவலோடு இரண்டறக் கலந்து ஒட்டிக்கிடக்கிற ஒருவர்.

 

வாசித்தலின் இயங்கியல்

 

ஏற்கனவே நாம் பார்த்ததைப்போன்று பனுவலின் மொழி, அதன் குறியீடு, அதுசார்ந்த சிக்கல்கள், வாசகரின் அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தது.. தொடக்கத்தில், வாசகரின் தனித்தன்மையை விரட்டிவிட்டு தனது போக்கிற்கேற்ப வாசகரை அது மாற்றுகிறதென்றும், சிறிது சிறிதாகத் தகவல்களைத் தருவதன்மூலம் எந்நேரமும் அவற்றை இணைத்துகொள்ளும்படியான சூழலை அமைத்துக் கொடுக்கிறதென்றும், அதனால் பல வாசிப்புப் படிநிலைகளுக்கு வாசகர்கள் போகமுடிகிறதென்றும், வாசித்தலின் இறுதிப்பகுதி பனுவல் குறித்த முடிவான ஒரு கருத்தினை எட்ட உதவுகிறதெனவும் தெரியவருகிறது.

 

ஒரு பனுவலுக்குள் படைப்பாளரைப் பொறுத்து பல்வேறு வாசிப்பு அணுகுமுறைகள் கிடைக்கின்றன. இது மிகவும் சிக்கலானது பனுவலில் படைத்தலுக்குத் தீர்மானமாக இவைதான் விதிகள், இலக்கனங்கள் என்றில்லை என்பதாலேயே வாசிப்பும் ஓர் திறந்த வெளியாக இருக்கிறது அங்கு புரிதலுக்குரிய முயற்சிகள் ஓயாமல் நிகழ்கின்றன. வாசிப்பும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பவரின் திறனுக்கொப்ப நிகழ்கிறது.

 

பனுவலை இயல்பானத் தன்மைக்குக்கொண்டுவருதல்:

 

புழக்கத்திலிருக்கிற சில சொல்லாடல்களோடு உறவுபடுத்திக்கொள்வதையே, ஒரு பனுவலை இயல்புத் தன்மைக்குக்கொண்டு வருதல் என்கிறார்கள், உதாரணம் ரொலா பார்த்தின் ‘சமிக்கை’.

சமிக்கை என்றால் என்ன? “ஏற்கனவே மன அமைப்பில் உறைந்துபோன தூரத் தோற்றம், ஏதோ ஒன்றின் பல்வேறுபட்ட சிதறல் கனவாகும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்டவை, பார்க்கப்பட்டவை, செய்யப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவை. சுருக்கமாகச்சொல்வதெனில் ஏற்கனவே இருப்பவைகளை எழுப்பி விடுபவை (ந.இ.கோ பக்கம் 241)

 

எவ்வாறு ஒரு பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி வாசகரைத் தூண்டுகிறது

 

“நான் இன்னும் முழுமையாக இந்தப்பனுவலை அறியவில்லை அல்லது உணரவில்லை’ என்று வாசகரைத் தவிக்க வைக்கிற பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி செய்கிறதாம். இத்தவிப்பினை இருவகைகளில் பனுவல் உருவாக்குகிறதென்று அறிகிறோம்

 

1. காலம் தாழ்த்தல் 2. இடைவெளிகள்
1. காலம் தாழ்த்தல்

 

தகவல்களைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் தள்ளிப்போடுதலே காலம் தாழ்த்தல். தகவல்களை அதற்கு முக்கியத்துவத்திற்கேற்ப இருவகை கால அலகுகளால் பிரித்திருக்கிறார்கள்

அ. எதிர்காலம் சார்ந்தது ஆ. இறந்த காலம் சார்ந்தது

அ. எதிர்காலம் சார்ந்தது: அடுத்தது என்ன? என்ற வினாவை உயிர்ப்புடன் வைத்து, ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பணியைப் பனுவல் செகிறது

ஆ. இறந்தகாலம் சார்ந்தது: முடிவைத் தெரிவித்துவிட்டு, முடிவின் காரணம், அதற்குப் பொறுப்பு யார்? புதிருக்கு விடைதேட இம்முறை உதவுகிறது.

 

2. இடைவெளிகள்

 

ஒரு பனுவலைத் தொடர்ந்து வாசிக்கும்படி செய்வதில் இடைவெளிகளுக்குப் பங்கிருக்கின்றன எனசொல்லப்படுகிறது. அதென்ன இடைவெளி? வாழ்க்கையை இயக்குகிற அனைத்திலும் இடைவெளிகள் இருக்கின்றனவென்றும் உதாரண்மாக இயறகைக்கும் மனிதனுக்குமான இடைவெளி, அறிவு இடைவெளி, உணர்வு இடைவெளி… போன்றவை. எனவே இவற்றைபற்றி பேசுகிற பனுவலிலும் இடைவெளிகள் தவிர்க்க முடியாதவை பேராசிரியர் ஐசர் கருத்தை மேற்கோள் காட்டுகிறார்:

 

“எந்தவொரு கதையும் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உண்மையில் தவிர்க்க முடியாத சில கூறுகளை நீக்கிவிட்டுச் சொல்வதன் மூலமாகத்தான் ஒரு கதை தனக்கான இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. கதையின் ஓட்டம் எப்பொழுது தடைபடுகிறதோ, கதை எப்பொழுது எதிர்பாராத திசையில் வாசகரை இழுத்துச் செல்லத் தொடங்குகிறதோ அப்பொழுது எல்லாம், தன் சொந்த காரண காரண-காரிய அறிவு பலத்தின்மூலம் தொடர்பினை நிறுவிப் பனுவல் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது”

 

எனவே தகவல் இடைவெளி, காலம் தாழ்த்துதலினும்பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இடைவெளியில் உள்ள கீழ்க்கண்ட பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

– அது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது

– தற்காலிக இடைவெளி ஏதோ ஒரு இடத்தில் நிரப்பக்கூடியதாகவும், நிரந்தர இடைவெளி இறுதிவரை நிரப்ப முடியாமலும் போய்விடுகிறது

– வாசிக்கிற கணத்தில் ஈர் இடைவெளி தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற முடிவுக்கு வர இயலாதது

– தற்காலிக இடைவெளிகள் காலத்தின் நேரத்திற்கும் பனுவலின் நேரத்திற்கும் இடையிலுள்ள முரண்களால் உருவானவை

– பனுவலில் இடைவெளிகள் அதற்குரிய வளத்தோடு சிறப்பாக அமைந்திருக்கும்போது வாசிப்பு செயல்பாடு இயல்பாகவே இடைவெளியை நிரப்புகிறது.

ஆகப் பொதுவில் காலம் தாழ்த்த்துதலும் இடைவெளியும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டித் தொடர்ந்து பனுவலை வாசிக்க வைக்கின்றன.

-முற்றும்
———————————————————————————-
பி.கு. ஏற்கனவே லூறியதுபோன்று இக்கடுரைகள், பேராசிரியரின் கட்டுரைகளுக்கான அறிமுகமேயன்றி முழுமையானவை அல்ல. அக்கடுரைகளின் முழுப்பயனையும் அடைய பேராசிரியர் நூலை வாசிக்கவேண்டும். நவீன இலக்கிய கோடுபாடுகள் தொகுப்பிலுள்ள் எடுத்துரைப்பு பற்றிய உண்மைகள் படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள பகுதி, படைப்பாளிகள் வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்கும் உதவகூடியவை. படைப்பாளிகக்கு ஒரு பனுவலைத் தரமாக படைக்க உதவும் என்பதைப்போல வாசகர்களுக்கு ஓர் பனுவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை அளிக்கும். பேராசிரியரின் கடல் போன்ற மொழிஞானத்தையும் உழைப்பின் பயனையும் முழுமையாகப் பெற அவரது நூல்களை வாங்கிப் பயனடையுங்கள் – நன்றி:

க.பஞ்சாங்கம் கட்டுரைகள்: நவீன இலக்கியகோட்பாடுகள்
காவ்யா பதிப்பகம்
சென்னை -24

—-

மொழிவது சுகம் டிசம்பர் 30 -2014

1. புது வருட வாழ்த்துகள்

1408393734-bonne-annee-2015-004
அன்பினிய நண்பர்களுக்கும் தோழியருக்கும் இனிய வாழ்த்துகள்.

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் இயற்கை நெறி. 2014ம் ஆண்டு கசப்பு இனிப்பு இர்ண்டையும் ஊட்டியிருக்கக்கூடும். இவற்றின் கலவையில் ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்கக்கூடும், இருந்தும் தனித்தோ கைகோர்த்தோ கடந்துவந்திருக்கிறோம். 20 15 ம் பல ஆச்சரியங்களை பொத்திவைத்திருக்கக்கூடும். நல்லதோ கெட்ட்தோ எதுவாயினும் துணிவுடன் எதிர்கொள்வோம், வாழ்த்துகள்!
அன்புடன்
நா. கிருஷ்ணா

2. வாசித்தவை
2014ம் ஆண்டில் தமிழில் வாசித்தவற்றில் புதியவை, பழையவை இரண்டும் உள்ளன. வண்ணதாசனின் ஒரு சிறு ஓசை, காலபைரவனின் கடக்க முடியாத இரவு, சந்திராவின் காட்டின்பெருங்கனவு ஆகியசிறுகதை தொகுப்புகளும் கவிஞர் சுகுமாரனின் வெலிங்டன், தமிழவனின் முஸல்பனி, குமார செல்வாவின் குன்னிமுத்து ஆகிய நாவல்களும் புதியவற்றுள் அடங்கும்.
பழையவற்றுள் யு.ஆர் அனந்தமூர்த்தியின் பாரதிபுரம், அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, கரிச்சான்குஞ்சுவின் பசித்தமானிடம், சா. கந்தசாமியின் சாயாவனம் ஆகியவற்றை இரண்டாவது முறையாக வாசித்தேன். சல்மாவின் இரண்டாம் சாமங்களின் கதையும் எனக்குத் திரும்ப வாசிக்க வேண்டுமென்று தோன்றியது, வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

3. எழுதியவை

 

இவ்வருடத்தில் எழுதிச் சாதித்தது பெரிதாகஒன்றுமில்லை. குறிப்பிட்டுசொல்லவேண்டியது பிராஹாவிற்கு சென்று காஃப்கா பிறந்த மனையில் ஒரு சில மணித்துளிகளைக் கழித்ததன் விளைவாக உருவான நாவல். காப்காவின் நாய்குட்டி என்ற பெயரை தற்காலிகமாக வைத்திருக்கிறேன். காலச்சுவடிடம் கொடுத்துள்ளேன். காலச்சுவடு தத்துவத்தின் சித்திரவடிவம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் கொண்டுவருகிறார்கள். நற்றிணை பதிப்பகம் பிர்சுரிக்கும் பயணக்கட்டுரை தொகுப்பும், சிறுகதைதொகுப்பும் இரண்டு வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தவை.

 

4. பிரெஞ்சு மொழியில்

 

டொமினிக் வித்தாலியோ என்ற பிரெஞ்சு பெண் மணியுடன் சேர்ந்து மொழிபெயர்த்துள்ள அம்பையின் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது.
http://www.zulma.fr/livre-de-haute-lutte-572109.html
ஆனால் எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது பிரெஞ்சு மொழி இலக்கிய இதழொன்று எனது சிறுகதையை வெளியிட்டது
http://www.cousinsdepersonne.com/2014/12/le-bananier-dandoni/
மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் பிரெஞ்சு மொழிபக்கமும் எனதுகவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, நண்பர் நாயகர் தலையீட்டினால் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரெஞ்சு மொழியில் மாத்தாஹரி நாவலை மொழிபெயர்க்கிறார். காலச் சுவடு வெளியிட உள்ள நாவலையு ம் பிரெஞ்சு மொழியில் கொண்டுவரவிருப்பம். இதனை என் விருப்பம் என்பதைதக் காட்டிலும், 25 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர் தெபெல் விருப்பம் என்று சொல்லவேண்டும்.

 

5. வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட 20 நூல்கள்

 

ஒரு சமூகத்தை மாற்றி அமைக்கும் வல்லமை நூலுக்கு உண்டா என்பதை நம்மால் உறுதிப் படுத்த முடியாது ஆனால் படித்த புத்தகங்களால் வரலாற்றை மாற்றி எழுதிய தனிமனிதர்களை அறிந்திருக்கிறோம். France 5 என்ற பிரெஞ்சு தொலைகாட்சி சேனல் தனது பார்வையாளர்களிடம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்த நூல்எது ? என்றொரு கருத்துக் கணிப்பை கடந்த மூன்றுமாதங்களாக நடத்தி வந்தார்கள். அம்முடிவின்படி பிரெஞ்சு மக்களின் வாழ்க்கையை மாற்றிஅமைத்த 20 நூல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.

நூல்கள் என்பதால் தவறானபாதைக்குக் கொண்டுசென்றிருக்காது என நம்பலாம்.
1. Le petit Prince (The Little Prince) –Antoine de Saint-Exupéry
2. L’Etranger – (The Stranger) – Albert Camus
3. Voyage au bout de la nuit (Journey to the end of the Night)- Louis Ferdinand Céline
4. L’écume des jours (Froth on the Daydream) – Boris Vian
5. A la recherche du temps perdu (In Search of Lost time) –Marcel Proust
6. Le Grand Meaulnes – Alain Fournier
7. L’alchimiste (The Alchemist) –Paulo Coelho
8. Belle du seigneur – Albert Cohen
9. Cent ans de solitude (One Hundred years of Solitude)-Gabriel Garcia Marquez
10. Les Fleurs du Mal – Charles Baudelaire
11. La Peste (The Plague) – Albert Camus
12. Harry Potter –J.K.Rowling
13. 1984 – George Orwell
14. Le monde selon Garp (The World According to Garp)-John Irving
15. Crime et Châtiment (Crime and Punishment) –Fiodor Dostoïevski
16. Le seigneur des Anneaux (The Lord of the Rings)- J.R.R. Tolkien
17. Le Parfum (Perfume) – Patrick Sûskind
18. Le journal d’Anne Frank (The Diary of a Young Girl)-Anne Frank
19. Madame Bovary – Gustave Faubert
20. Les Misérables – Victor Hugo
——–

இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்

panchuசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.

உள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்

பொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்: படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில் முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.

இவர்களில் எழுத்தாளர் அணியில் செயல்படுகிற ‘உள்ளுறை எழுத்தாளர் ‘ (எதிரணியில் சமன் படுத்த உள்ளுறை வாசகர்)மிக முக்கியமானவர். இந்த உள்ளுறை எழுத்தாளர், குறிப்பிட்ட படைப்புக்கென எழுத்தாளரிடமிருந்து பிறவி எடுப்பவர், பிரதான எழுத்தாளர் நிரந்தரமானவர், பல படைப்புகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார். மாறாக உள்ளுரை எழுத்தாளர் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட படைப்போடு முடிந்துவிடுகிறது. ‘மனிதப்பண்பு ஏற்றப்பட்டவ்ராகத் தோற்றமளிக்கிறார். எனவே இவர் எழுத்தாளரின் ‘இரண்டாவது சுயம்’ இன்னொரு விந்தையான கருத்தும் நமக்குக் கிடைக்கிறது. உள்ளுரை எழுத்தாளர் பிரதான எழுத்தாளரின் அல்லது உண்மையான எழுத்தாளரின் ஓர் அங்கமாக இருப்பினும் முழுப்படைப்பிற்கான மூளை மற்றும் ப¨ப்பின் விதிகளுக்கான மூல ஆதாரமாக இருப்பதால் சாட்மென் முடிவின்படி உள்துறை எழுத்தாளர் அறிவுதளத்திலும், ஒழுக்கத் தரத்திலும் உண்மையான எழுத்தாளரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பாரென அறிகிறோம்.

இங்கே நமக்குத் தெரியவேண்டிய மிகப்பெரிய உண்மை, உளதுறை எழுத்தாளரும் உண்மையான எழுத்தாளரும் சமமானவர்கள் அல்ல என்பது முதலாவது. படைப்பை நடத்திச்செல்கிற உள்ளுறை எழுத்தாளரின் சிந்தனை, நம்பிக்கை, உணர்வு நிலை ஆகிவற்றிலெல்லாங்கூட நேரெதிரான நிலைப்பாட்டிற்குச் சொந்தக்காரராக உண்மையான எழுத்தாளர் இருப்பார் என்பது இரண்டாவது. இவை நிகழ்வதற்கு ஆசிரியரின் கட்டுரை சொல்லும் காரணம், உண்மையான எழுத்தாளரின் சுய அடையாளம் புறவாழ்வில் அவர் எதிர்கொள்ளுகிற வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரத்தில் உள்ளுறை எழுத்தாளரின் அடையாளம், எழுதப்படும் படைப்போடு இணைந்து இரண்டறக்கலந்து நிலைப்பெற்று இருக்கக்கூடியது ( ந.இ.கோ. பக்கம் 216). எதிரணியில் இருக்கிற உள்ளுறை வாசகர் இந்த உண்மையை அறிந்தே இருக்கிறார், ஆனால் பிரச்சினை விளிம்பில் இருக்கிற உண்மையான வாசகர் பல நேரங்களில் உள்ளுறை எழ்த்தாளரை உண்மை எழுத்தாளரிடம் தேடிக்களைப்பதைக் காண்கிறோம். சாட்மன் கூற்று “உள்ளுறை எழுத்தாளர், உண்மை எழுத்தாளரிடம் மட்டுமின்றி எடுத்துரப்பாளரிடமும் வேறுபட்டவர் எனக் கூறுகிறது. தவிர ஒரு படைப்பை முன்னெடுத்து செல்கிற உள்ளுறை எழுத்தாளர் படைப்பு முழுவதும் மௌனம் சாதிப்பதால் அவரை எடுத்துரைப்பவராகக் கருதக்கூடாதென்றும் அறிவுறுத்தப்படுகிறோம். “எடுத்துரைப்பாளர் என்பவர் பனுவலின் நேரடியான குரலாகவும் அல்லது பேசுபவராகவும் அமைய உள்ளுறை எழுத்தாளர் குரல் அற்றவராகவும் மௌனநிலையில் உறைந்து இருப்பவராகவும் கருதப்படுகிறார்”(ந.இ.கோ. பக்கம் 216)

அடுத்து நாம் புரிந்துகொள்ளவேண்டியவர் உள்ளுறை வாசகர். உள்ளுறை எழுத்தாளருக்கு எதிர்வரிசையில் இடம்பெறும் உள்ளுறை வாசகரின் இலக்கணங்கள் உள்ளுறை எழுத்தாளருக்குப் பொருந்தக்கூடியவை: 1.உள்ளுறை எழுத்தாளரைப்போலவே பனுவல் உருவாக்கும் நபர் 2. உண்மை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உண்மையான வாசகரிடமிருந்தும் எடுத்துரைப்பைக் கேட்பவரிடமிருந்தும் வேறுபடுவார். ஒவ்வொரு பனுவலுக்குள்ளும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உள்ளுறை வாசகரும் இருக்கிறாரென்றும், மாறாக ஒவ்வொரு பனுவலும் ‘எடுத்துரைப்பாளரையும் -கேட்பவரை’யும் கொண்டிருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லையென்றும், நாவலின் தேவை பொறுத்து அதனை பாவிக்கலாமென்றும் அறிகிறோம். ஒரு பனுவலில் எடுத்துரைப்பாளர் இருக்கிறபோது உள்ளூறை எழுத்தாளர்-எடுத்துரைப்பாளர் – கேட்பவர்-உள்ளுறைவாசகர் என்ற சங்கிலித்தொடரில் செய்தி பரிமாறப்படுகிறது என அறிகிறோம். எடுத்துரைப்பாளர்- கேட்பவர் இல்லாதபோது, செய்தி நேரடியாக உள்ளூறை எழுத்தாளரிடமிருந்து – உள்ளுறை வாசகருக்குப் போய்ச்சேருகிறது.

சாட்மன் கூற்றின் அடிப்படையில் சில சந்தேகங்களைக் கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார்:

முதலாவதாக ஒரு பனுவலில் உள்ளூறை எழுத்தாளருடைய இடம் எது?
பனுவலைப் பகுத்தாராயவும், வாசகர்களின் நடத்தையினைப் பகுத்தாராயவும் பெரிதும் உதவுமென நம்பப்படும் உள்ளுறை எழுத்தாளர் கோட்பாடு தகவல் பரிமாற்றத்தில் உதவுவதில்லை ( உள்ளூறை எழுத்தாளரின் மௌனம், நேரடியாகத் தகவல் அறிவிப்பில் பங்கின்மை…) என்பதால் உருவாகும் குழப்பம்; அடுத்ததாக எடுத்துரைப்பாளர் குறித்தும் கேட்பவர் குறித்தும் கொடுக்கிற விளக்கங்களால் எழும் சிக்கல்.

இந்நிலையில் மேற்கண்ட சிக்கலிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளை பேராசிரியர் தெரிவிக்கிறார்:

1. உள்ளுறை எழுத்தாளர், உள்ளுறை வாசகர் ஆகிய இருவரையும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிற எடுத்துரைப்புச் சூழலிலிருந்து அப்புறப்படுத்துவது.
2. எடுத்துரைப்பவர் கேட்பவர் ஆகிய இருவரையும் எடுத்துரைப்புச் சூழலில் கட்டாயமாக இடம்பெறச்செய்வது

தவிர ஒரு கதையில் எப்போதும் கதைசொல்லி இருந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதால் எடுத்துரப்பின் நிகழ்வுக்கு சாட்மன் கூறுவதைப்போல ஆறுபேர் தேவையில்லை: உண்மையான எழுத்தாளர், உண்மையான வாசகர்; எடுத்துரைப்பாளர், கேட்பவர் என்ற நால்வர் கூட்டணியே போதுமானது.

ஆக மீண்டும் எழுத்தாளர் – வாசகர் என்ற எளிமையான சொல்லாடல்களை மறந்து கதைசொல்லலே ஓர் எடுத்துரைப்பு நிகழ்வாகப் கொள்ளப்படுவதால் மீண்டும் நாம் இப்பிரச்சினையை எடுத்துரைப்பவர் -கேட்பவர் பிரச்சினையாகக் கருதலாம். எடுத்துரைப்பு என்ற பொறுப்பில் அமருகிறபோது, வெற்றிகரமாக நிறைவேற்ற போர்த்திறம் சார்ந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஓர் எடுத்துரைப்பாளன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்கிறான்.

இப்பகுதியில் அடுத்ததாகப் பேசப்படுவது எடுத்துரைப்பிற்கும் கதைக்கும் உள்ள உறவுகள்:

அ. காலம் சார்ந்த உறவுகள்

எடுத்துரைப்பு என்பது நிகழ்வுகளால் பின்னப்படுவதால் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் அதனதன் தன்மையில் சம்பவத்தைக் கேட்பவருக்கு நம்பிக்கைதரும்விதத்தில் சொல்ல உதவுகின்றன. பிறவற்றைக் காட்டிலும் இறந்தகாலம் கதைசொல்லல் தனித்தன்மையை பெற்றதாகிறது. நடக்கிற, நடக்கவிருக்கிற சம்பவத்தை ஆரூடமாகச் சொல்லவருகிற செய்திகளில் பொதுவாகவே நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இறந்த கால சம்பவங்கள் எண்பிக்க முடிந்தவையென்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை அல்லது அவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதாலேயே செய்தித் தாள்களில் ஆரம்பித்து, புனைகதைவரை அதிகம் இறந்தகாலத்தைப் பேசுபவையாக உள்ளன, இவ்வித எளிதான உளவியல் காரணத்தோடு, ஒரு சம்பவத்தை அது நடந்துமுடிந்தபின்னரே சொல்லமுடியும் என்ற பொதுவானப் புரிதலும் இறந்த காலத்தைப் பயன்படுத்த காரணமாகிறது. அடுத்ததாக அதிகமில்லையென்றாலும் ‘நிகழ இருப்பதாக’ சொல்ல உதவுகிற எடுத்துரைப்பும் இருக்கவே செய்கின்றன அவற்றைக்குறித்தும் கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். நிகழ இருப்பதை எடுத்துரைப்பது எதிர்காலத்திலும் சொல்லலாம், நிகழ்காலத்திலும் கூறலாம் என்கிறார். காலம் சார்ந்த எடுத்துரப்பில் மூன்றாவதாக வருவது செயலும் எடுத்துரைப்பும் ஒரே தருணத்தில் நிகழ்வதுபோல தோற்றம் கொண்டிருப்பது. நாட்குறிப்பில் இடம்பெறும் பதிவுகள், செய்திதாள்களின் சம்பவத்தை நேரடிவர்ணணைபோல சொல்லும் விதம் ஆகியவற்றை இவற்றிர்க்கு உதாரனங்களாகக் காட்டுகிறார்கள். இப்பகுதியில் கால அளவை நிர்ணயித்து கதைசொல்லலில் ஏற்படும் சிக்கல்கள், நவீன கதையாடல்கள் பலவற்றுள் அவை தவிர்க்கப்படும் விதம் போன்றவற்றையும் ஆசிரியர் அலசுகிறார்.

ஆ. துணைமை உறவுகள் அல்லது எடுத்துரைப்பின் படிநிலைகள்:

இத்தலைப்பின் கீழ் எடுத்துரைப்பிலுள்ள படிநிலைகள் குறித்து விளக்கங்கள் கிடைக்கின்றன.

1. செயல்படும் நிலை:

இது பொதுவாக முதல் எடுத்துரைப்பை நீட்டிக்க அல்லது தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள கையாளும் முறை. இங்கே எதை எடுத்துரைக்கவிருக்கிறோம் என்பது முக்கியமிழந்து எடுத்துரைப்பது தொடர்ந்து நடைபெறவேண்டியே எடுத்துரைப்பது ஆகும். உதாரனத்திற்கு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதையில் வரும் கதைசொல்லலை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இங்கே கதைசொல்லியான “ஷெஹெராசதா” வுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துரைப்பு ஓர் தந்திரமாக பயன்படுகிறது

2. விளங்கவைக்கும் நிலை

எந்தேந்தச் சம்பவங்கள் தற்போதைய சூழலுக்கு காரணங்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிப்பதுபோல கதை சொல்வது அல்லது எடுத்துரைக்கும் முறை. இங்கும் கதைதான் முக்கியம், எடுத்துரைப்பது அல்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

3. அடிக்கருத்து நிலை அல்லது கருத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

இவ்வகையான எடுத்துரைப்பில் ஒப்புமை படுத்துதல் மற்றும் வேறுபடுத்திக் காட்டல் மூலமாக சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாக உரைப்பது ஆகும்.

எடுத்துரைப்பாளர்கள் குறித்த ஒரு வகைமையாக்கம்

கதையில் எடுத்துரைப்பவரின் பங்களிப்பு, அவர் மீதான நம்பகத்தன்மை இவற்றின் மீதான அடிப்படையில் எடுத்துரைக்கும் தளம்பற்றி பேசும் பேராசிரியர் எடுத்துரைக்கப்படும் கதையைவிட உயர்ந்தவராக அல்லது மேலே இருப்பவராக ஒரு எடுத்துரைப்பாளர் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அவரின் எடுத்துரைக்கும் தளம் புறநிலைவயப்பட்டதாக அமையுமென்றும்; அவ்வாறின்றி எடுத்துரைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொள்பவராக எடுத்துரைப்பாளர் செயல்படும்போது அது இரண்டாவது தளத்தில் இயங்குவதாகக் கருதப்படுமென்றும்; இத்தளங்கள் பின்னர் மூன்று, நான்கென்று எடுத்துரைப்பவரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுமெனவும் தெரிவிக்கிறார்.

கதையில் பங்குபெறும் பரப்பளவு :

மேற்கண்ட வகையில் பல தளங்களில் இயங்குகிற எழுத்தாளர்களின் பங்களிப்பு படைப்பாளிகளின் உணர்ந்தறியும் ஆற்றலைபொறுத்ததனெனவும் பின்னர் அதன் அடிப்படையில் தன்னை முழுவதும் ஒளித்தோ அல்லது வெளிப்படையாகவோ எடுத்துரைப்புசார்ந்த உபாயங்களை கையிலெடுக்கிறார் என்றும் அற்கிறோம், அந்தவகையில் சுமார் எட்டுவிதமான ஆயுதங்கள் அவரது உதவிக்கு காத்திருக்கின்றன.

1. பின்புலம் குறித்த விவரிப்பு: இதில் எடுத்துரைப்பாளர் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைந்த அளவே வெளிப்படுவாரென்றும், நாடகம் அல்லது திரைப்படத்தினும் பார்க்க இங்கே மொழிகொண்டு பின்புலத்தை விவரிக்கவேண்டிய நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அதனாலேயே கதையாடல்மொழி எடுத்துரைப்பாளரின் மொழியாக அமைந்து, நாமும் சொல்லப்படும் பின்புலத்தைவைத்து எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை அளவிட முடிகிறதென்கிறார்.

2. கதைமாந்தர்களை அடையாளப்படுத்துதல்: கதையில் வரும் கதை மாந்தர்களை எடுத்துரைப்பவர் நேரடியாகவும் அல்து மறைமுகமாகவும்; தானாக முன்வந்தோ அல்லது பிறபாத்திரங்களின் ஊடாகவோ கதைமாந்தரின் பண்பினை வாசகர்களுக்குக் கூறலாம். இவற்றைக்கொண்டும் எடுத்துரப்பவரின் உணர்ந்தறியும் ஆற்றலைக் கணிக்க முடியும்.

3. காலம் சார்ந்த சுருக்கம்; எடுத்துரைப்பாளர் தான் எடுத்துரைக்கும் கதையின் காலத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கதையின் நடுவே சொல்வது எடுத்துரைப்பின் ஒருவகை குணமென்றும் அவ்வாறா¡னசூழலில் அவர் எடுக்கும் பல்வேறுவகையான முடிவுகள் கதைசொல்லலுக்கு உதவுவதோடு, எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.

4. கதைமாந்தரை வரையறைப்படுத்துதல்: இங்கே இரண்டுவகையான உணர்ந்தறியும் ஆற்றலை எடுத்துரைப்பாளரிடம் காண்கிறோம்; முதலாவதாக கதை மாந்தரை அடையாளப்படுத்துதல் என்ற விவரிப்பின்மூலம் அக்கதைமாந்தரைப்பற்றி ஏற்கனவே கதைசொல்லி அறிந்திருக்கிறார் என்ற உண்மையொன்று. அடுத்து கதைபற்றிய துல்லியமான பிம்பம், அக்கதைமாந்தரை பொதுமைபடுத்துவதோடு, அவரின் பண்புநலன் எடுத்துரைப்பாளரின் மூலம் அதிகாரமையப்படுத்தப்படுகிறது. ஆக இதனாலும் எடுத்துரப்பவரின் ஆற்றல் நமக்குத் தெரியவருகிறது.

5. கதைமாந்தர் எதைச் சொல்லகூடாது அல்லது எதை எண்ணிப்பார்க்கூடாது என்பது குறித்த அறிதல்: கதைமாந்தரின் செயல்பாட்டை அல்லது ஞானத்தை எடுத்துரைப்பவர் தீர்மானித்திருப்பதை அக்கதைமாந்தரின் செயல்களும், பேச்சும் நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அதன் அடிப்படையிலும் எடுத்துரைப்பவரின் உணரும் ஆற்றலை விளங்கிக்கொள்ளமுடியும்.

6. விளக்கிச்சொல்லுதல் அல்லது விளக்ககுறிப்பு என்பது பனுவலின் இடையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு அல்லது முன்வைக்கப்படும் கருத்து. இவ்வாறு சொல்லப்படுவது கதைமாந்தரையோ நிகழ்ச்சியையோ, சூழலையோ அல்லாமல் ஒரு குழு அல்லது சமூகம் அல்லது ஒட்டுமொத்த மனித இனம் என்று பெரிய அளவில் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.

7 அடிக்குறிப்பு: ஒரு புனைகதை உருவாக்கத்தில் அடிக்குறிப்பு என்ற உத்தியைப் பயன்படுத்துதல் என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. மேலும் எடுத்துரைப்பவரின் இருப்பை பெரிதும் விளம்பரப்படுத்துவாதகும் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கோ, கட்டுரைகளுக்கோதேவைபடுவதுபோல புனைகதைக்கு அடிக்குறிப்பு அவசியமில்லை. ஆனால் அதற்கான தேவை இருக்கிறபோது அடிக்குறிப்பை பயன்படுத்துதல் கட்டாயமாகிறது.

8. நம்பகத் தன்மை: ஓர் எடுத்துரைப்பவர் அவர் சொல்லும் கதையையும் விளக்கத்தையும் வாசகர்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்பிக்கைகொள்ளும்படியாகச் செய்யமுடிந்தால் அவர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திதரும் எழுத்தாளர். இன்னொரு பக்கம் நம்பகத்தன்மையை வாசகரிடத்தில் ஏற்படுத்தித் தரவியலாத எடுத்துரைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பனுவலில் வாசகரிடத்தில் சந்தேகத் தன்மையை ஏற்படுத்தித் தருபவர்கள், அதற்கான காரனங்களை அவர்களே உருவாக்குகிறார்கள். நம்பகத் தன்மைக்கு எடுத்துரைப்பவரின் அறிவாற்றல், அவரது தனிப்பட்ட ஈடுபாடு, அவருடையசிக்கலான மதிப்பீட்டுமுறை ஆகியவைக் காரணமாகின்றன.

நம்பகமின்மைக்கு:
அ. எடுத்துரைப்பாளர் பார்வையிலிருந்து உண்மைகள் விலகி முரண்படுதல்
ஆ. பனுவல் மூலமாக வெளிப்படும் செயல்கள், உதாரணமாக எடுத்துரப்பாளரின் தவறுகள் சுட்டிக்காட்டி நிறுவிவிடும்போது
இ. பனுவலில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பார்வை எடுத்துரைப்பாளரின் பார்வையோடு முரண்பட்டு தொடர்ந்து மோதலுக்கு உள்ளாகும்போது
ஈ. எடுத்துரைப்பாளரின் மொழியே நம்பகத் தன்மையற்று இருக்கிறபோது.

(தொடரும்)

எஸ். பொ. என்ற மாமனிதன்

S.P எஸ். பொ. என இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்ட்ட எஸ். பொன்னுதுரையை தமிழ் இழந்திருக்கிறது.. சில வருடங்களுக்கு முன்பாக யுகமாயினி சித்தன் முயற்சியில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அமுதசுரபி இதழ் சார்பாக ஒரு நிகழ்ச்சியை சென்னையில் எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். அநிகழ்வுக்கு திரு எஸ்.பொ. தலமை தாங்கினார். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அதன் பின்னர் சென்ற ஆண்டு கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் அவரைக் காணும் வாய்ப்பு பெற்றேன். அவர் பேசும் தமிழும் சரி எழுதும் தமிழும் சரி காண்டாமணிபோல ஒலித்தபின்னும் ஓசையில் நீள்பவை, நெஞ்சில் வெகுநேரம் எதிரொலிப்பவை. ‘காப்பிக் குடிக்கபோனபோது மனிஷி பார்த்துவிடக்கூடாதென்றார். அந்த அம்மாவிற்குத்தெரியாமல் இனிப்பை அதிகம் சேர்த்தே உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாரென தெரியவந்தபோது கோபம் வந்தது. நண்பர் க.பஞ்சாங்கமும் நானும் கோவைக்கு விமானத்திற்காக சென்னை மீனம்பாக்கத்தில் காத்திருந்தபோது அவரது உரையாடியது இன்றும் மனதில் இருக்கிறது, குழு அரசியலில் சிக்காத இலக்கியவாதி. அவர் உழைப்பை தமிழ் புரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள்தான் உணரவில்லை; எதையும் விளம்பரங்களைக்கொண்டு எடைபோட்டு பழகிய தமிழர்கள் அவர் அருமையை விளங்கிக்கொள்ளாதில் வியப்புகளில்லை. எஸ்.பொ.வின் தமிழ்ப் பங்களிப்பும் அது சார்ந்த ஒளிவட்டமும் விலைகொடுத்து பெற்றதல்ல, தமிழ் உள்ளவரை இருப்பார்.

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 8: – நோக்கு நிலை (Focalisation)

panchuண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. “இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் ” அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு, வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமலிருப்பதும்” என்கிறார்.  அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது, வாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது. நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல, சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

 

நோக்கு நிலை என்றால் என்ன?

 

“ஒரு பனுவலில் கதையென ஒன்று கதைசொல்லியின் மூலமாய் ஒரு காட்சிகோணத்தின் ஊடாகசொற்களால் முன்வைக்கபடுகிறது” (பக்கம் 207 ந.இ.கோ.) என்று எளிமையாகக் கட்டுரை ஆசிரியர் நமக்கு நோக்குநிலையை விளக்குகிறார். ஆங்லேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஒரு கோணத்தில் பார்த்தல் எனக்கூறியதையே ழெரார்ட் ழெனெத் (Gérard Genette) என்ற பிரெஞ்சு இலக்கிய கோட்ப்பாட்டாளர் நோக்குநிலை என அழைப்பதாக தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ழெரார் ழெனெத் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைச் செய்வது நல்லதென நினைக்கிறேன். 1930ல் பிறந்த ழெனெத் அமைப்பியல்வாதிகளில் ஒருவர், இலக்கிய விமர்சகர் அனைத்துக்கும் மேலாக பல இலக்கிய கருத்துருவாக்கங்களை முன்வைத்த மொழிஅறிஞர். அவருடைய Palimpsestes. La Littérature au second degré ( Editions Seuil -1982) முக்கியமானதொரு நூல். ‘பாலம்செஸ்ட்’ ( Palimsests) என்பது என்ன? ஒரு பனுவலில் சில சொற்களை அல்லது சில வரிகளை மாற்றிச்சொல்ல நினைக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்கிறோம், ஏற்கனவே எழுதிய சொற்களை அல்லது வாக்கியங்களைக் கலைத்துவிட்டு அதன் மீது புதிய சொற்களை அல்லது புதிய வரிகளை எழுதுகிறோம், அவ்வாறு எழுதுகிறபோதும் பழைய சொற்களின் அல்லது வாக்கியங்களின் தடம் சரியாக கலைபாடமல் இருக்கிறதில்லையா அதன் பெயரே பாலம்செஸ்ட். ழெனெத்திற்கு இந்த பாலம்செஸ்ட்போலவே ஒவ்வொரு பனுவலிலும் ஏதோவொரு பனுவல் ஒட்டிக்கிடக்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் இக்கருத்துருவாக்கத்தை ஜெனெத் முன்வைத்தபோது மேற்குலக விமர்சனதளம் பெரும் அதிர்வைக்கண்டது. இலக்கிய விமர்சனங்ளை வைக்கிறபோது ழெனெத்தின் புதிய அனுகுமுறையுடன் பனுவலை நெருங்க வேண்டியிருந்தது.

 

ழெனெத்தின் நோக்கு நிலை கோட்பாட்டின் பொருள் என்ன, எவ்வகையில் எடுத்துரைப்பை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் பேராசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். இரண்டு கேள்விகள் எழுப்பப்ட்டிருக்கின்றன. முதற் கேள்வி யார் பார்ப்பது? இரண்டாவது: யார் பேசுவது? உடனடியாகவும் வெளிப்படையாகவும் நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் இரண்டும் ஒருவரே – அந்த ஒருவரை கதைசொல்லியென்றோ அல்லது எடுத்துரைப்பவர் என்றோ நாம் அழைக்கலாம், கூடுதல் விளக்கங்களை அறிவதற்கு பேராசியரின் நவீன இலக்கியகோட்பாடுகள் நூல் உங்களுக்கு உதவும்.

 

ழெனெத்தின் நோக்கு நிலையைச் சற்று எளிமைபடுத்தி புரிந்துகொண்டு, அதன் பிரதான கூறுகளில் கவனத்தைச் செலுத்துவோம். கதைசொல்லல் அல்லது எடுத்துரைத்தல் என்ற சொற்களில் இடம்பெறும் சொல்லல், உரைத்தல் இரண்டும் ‘பேசுதல்’ என்ற வினைச்சொல் குடும்பத்தைச் சேர்ந்தவை.,  இதனை Dégès என்ற கிரேக்க சொல்லால் அழைக்கிறார்கள். நோக்கு நிலையில் இரண்டாவதாக இடம்பெறும் ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் Mimèsis என்று பெயர். ஆக நோக்கு நிலை என்ற சொல்லை இருவகையில் பொருள் கொள்ளலாம். முதலாவது நோக்குநிலையை ஓர் அறிவியல் கலைச்சொல்லாக அணுகும் வழிமுறை. அதன் படி இங்கே எடுத்துரைப்பின் பணி, வாசகரின் கவனத்தை ஒரு பொருள் அல்லது கதைமாந்தர் அல்லது இப்படி ஏதோ ஒன்றைப்பற்றிய விபரத்தின்மீது திருப்புவது – இதுவே யார் பார்ப்பது ( Mimèsis) என்ற கேள்விக்கான பதில். நோக்குநிலை பற்றிய இரண்டாவது அணுகுமுறை காட்சிவெளி சார்ந்த எடுத்துரைப்பு (la perspective narrative) .

 

நோக்கு நிலையின் செயல்பாடுகள் எடுத்துரைப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை மொழியாடல்களில் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் சூத்ரதாரியாக இருப்பவர் கதைசொல்லி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துரைத்தல் பற்றிய ஆய்வு என்பது ஒரு கதைக்கும் -சொல்லலுக்கும் உள்ள உறவு முறைகளை விளங்கிக்கொள்வது. நோக்கு நிலைவழி இவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்:

 

1. கொள்கை அளவில் நோக்கு நிலையும் எடுத்துரைத்தலும் வேறு வேறு
2. படர்க்கை மாந்தரை எடுத்துரப்பவராக பயன்படுத்துதல்
3. எழுவாய் வழி கதைசொல்லல்
4. நோக்கு நிலையைப்பொறுத்தவரை தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் வேறுபாடுகள் இல்லை. இரண்டுமுறையிலும் பனுவல் உலகில் நோக்கு நிலைஎன்பது ஒரு கதை மாந்தரின் பண்பாடாகசெயல்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள ஒரே வேறுபாடு எடுத்துரைப்பவரின் அடையாள வேற்றுமைதான்.

 

மேற்கண்ட அடையாள வேற்றுமையை அறிவது ழெனெத்தின் கோட்பாட்டைக் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுமென நினைக்கிறேன். ழெனெத் நான்குவகை கதை சொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்

 

I. கதைசொல்லி இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமலும் போகலாம் என்கிற சூழலில்:

 

1. கதைக்கு வெளியே கதை சொல்லி

 

இக்கதைசொல்லியை ழெனெத் Le narrateur extra diégétique என அழைக்கிறார். இங்கே கதை சொல்லி கதைமாந்தரல்ல. கதைக்கு வெளியே இருப்பவர், வாசகனிடம் நேரடையாகப் பனுவலைப் படைத்தவர் பேசுதல். ஹோமரின் ஒடிஸ்ஸியஸ் ஓர் உதாரணம்.
எடுத்துக்காட்டு: “முன்பொருகாலத்தில் சிவப்பி என்றொரு பெண்ணிருந்தாள். பெற்றோர்கள் அப்பெயரிட்டு அழைக்கக் காரணம்…” எனத் தொடங்கி பாடம் எடுக்கும் முறை. பெருமாலான பழைய நூல்கள் இவகையிலேயே கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கின்றன.

 

2. கதைக்குள் இருந்து கதை சொல்லல்.

 

இக்கதை சொல்லியை ழெனெத் Le narrateur intra diégétique என அழைக்கிறார். கதைசொல்லி கதைக்குள் இடம்பெறும் கதை மாந்தர்களில் ஒருவர். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் சிம்மாசன பொம்மை பேசுவதுபோல கதைசொல்லப்படுவதை இங்கே உதராணமாகக் கொள்ளலாம்.

 

எடுத்துக்காடு: “என் பெயர் சிவப்பி, நான் பிறந்தபோது மிகவும் சிவப்பாக இருந்ததைவைத்து எனக்குப் பெற்றோர்கள்.. ” எனக் கதைமாந்தரே கதை கூறல் இவ்வகையில் அடங்கும்.

 

11 கதைக்குள் கதைசொல்லி என்றொரு கதைமாந்தர் இடம் பெற்றால்

 

1. பிறர்கதையைக்கூறும் கதைசொல்லி

 

ழெனெத் இக்கதைசொல்லியை Le narrateur hétéro diégétique என அழைக்கிறார். அவர் கதையில் வரும் பிறகதைமாந்தர்களைப் பற்றி பேசுபவராக இருக்கிறார். ஹரூகி முராகாமியின் ஸ்புட்னிக்கின் காதலர்கள் உதாரணம்.

எடுத்துக்காட்டு: “சிவப்பி என்ற எனது தோழியைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டுமென நினைக்கிறேன்….”

 

2. தன்கதையைக்கூறும் கதை சொல்லி

 

ழெனெத் இவரை le narrateur homo diégétique என அழைக்கிறார். இவ்வகைக்கு உதாரணமாக யு.ஆர். அனந்தமூர்த்தியின் பாரதிபுரத்தைக் கூறலாம்.

 

எடுத்துக்காட்டு: “சிவப்பியாகிய எனது கதையைச் சொல்லப்போகிறேன்..” எனத் தொடங்குவது ஆகும்.

 

நோக்கு நிலை வகைபாடுகள்:
இதனை இரண்டு முக்கிய தலைப்பின்கீழ் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்:

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு

 

இத்தலைப்பின் கீழ் சிலவகை நோக்குநிலைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அகநிலைபட்ட நோக்கு நிலை மற்றது புற நிலைபட்ட நோக்குநிலை.

புறவயப்பட நோக்குநிலை: எடுத்துரைப்பு முகவரோடு இது மிகவும் அணுக்கமானதென்று அறிகிறோம். எடுத்துரைப்பாளருக்கும் கதைமாந்தருக்கும் உள்ள உளவியல் கலந்த இடைவெளி மிகவும் குறுகிய அளவில் இருக்கிறபோது இது எழுவாய் எடுத்துரைப்பாக நிகழ்கிறது..

அகவயப்பட்ட நோக்குநிலை: இது பனுவலுக்குள் இடம்பெறுவது, பொதுவில் கதை மாந்தர்களின் நோக்குநிலையாக இது அமையுமென்றும், அதே வேளை சில நேரங்களில் அக நிலைபட்ட நோக்கு நிலைபடுத்துதல் என்பது பனுவலின் நிலை அமைதியோடு இணைந்து ஒன்றாகிவிடும் எனவும் கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்த தவறிவிடுமென்றும் சொல்லப்படுகிறது.

 
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

எடுத்துரைப்பு முழுவதும் நோக்கு நிலைப்படுத்துவதென்பது தொடர்ந்து நீடிக்கிறதென்றும்; நோக்கு நிலையின் கோணத்தையும் தன்மையினையும் இடம், களம், பல்வேறு வகைக் கூறுகள் தீர்மானிக்கின்றன என்பதையும் இப்பகுதியில் ஆசிரியர்எடுத்திரைத்திருக்கிறார்.

அ. வெளி அல்லது இடம்: இங்கே நோக்கு நிலைபடுத்துபவர் எடுத்துரைக்கும் பொருளிலிருந்து வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு சொல்வதென்றும், இந்நிலைப்பாடு தொன்ம இலக்கியங்களில் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்ற செய்தி கிடைக்கிறது.

ஆ. காலம்: ஒரு கதை மாந்தர் தமது கடந்தகாலத்தைப் பின்நோக்கிப் பார்ப்பதற்குக் காலம் துணை நிற்கிறது. இங்கே கடந்தவைஅனைத்தும் ஒரு காலத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட வெளி காலம் ஆகியவற்றோடு உள்வியல் கூறுகள், அறிதல் கூறுகள் உணர்ச்சிக்கூறுகள் கருத்துநிலைக்க்கூறுகள் என்கிற பல்வேறு அம்சங்கள் கதைசொல்லியின் நோக்குநிலையில் சூழலுக்கு ஏற்ப இடம் பெற்று கதைசொல்லலுக்கு துணை நிற்கின்றன.

(தொடரும்)

பத்ரிக் மொதியானோ -நோபெல் பரிசு!

France Nobel Literature பிரான்சு நாட்டில் வாழும் இந்தியன் என்றவகையில் இருவகையில் பெருமை.

முதலாவதாக அமைதிக்கான நோபெல்பரிசை பாகிஸ்தானிய சிறுமிக்கும் இந்தியருக்குமாக பகிர்ந்தளிந்து எல்லைச் சண்டையைத் தற்காலிகமாக நார்வே நோபெல் பரிசு நிறுத்திவைத்திருக்கிறது. பரிசுக்குறியவர்கள் இருவரும் இளஞ்சிறார்களுக்காக உழைத்திருக்கிறார்கள் என்கிறது தேர்வுக்குழு.

இரண்டாவதாக – பிரெஞ்சு இலக்கியத்திற்கு கிடைத்துள்ள நோபெல் பரிசு. ஒரு சிலருக்கு நோபெல் பரிசு கிடைக்க வாய்ப்புகளுண்டு என நான் நம்புபவர்களில் மிஷெல் ஹூல்பெக், பத்ரிக் மொதியானோ உண்டு, பிலிப் சொலியெ கூட அதற்கான தகுதிகொண்டவர்தான். ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பிரெஞ்சு இலக்கியத்தை பரிசீலித்தபிறகே பிறமொழிகளில் வந்த நூல்களைத் தேர்வுகுழுவினர் தங்கள் கவனத்தில் கொள்கின்றனர் என்றார். அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கக்கூடும். இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற உலக நாடுகளில் பிரான்சு முதலிடத்தைப் பெறுகிறது. இதுவரை 57 நோபெல் பரிசுகளை வென்றுள்ள பிரான்சு இலக்கியத்திற்கு மட்டும் 15 பரிசுகளை வென்றுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

பத்ரிக் மொதியானோவின் சிறுகதையை ஏற்கனவே மொழி பெயர்த்து திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. பின்னர் காலசுவடு வெளியீடான ‘உயிர்க்கொல்லி’ தொகுப்பிலும் இக்கதை உள்ளது நண்பர்களுக்காக:
சேன் நதி –
பத்ரிக் மொதியானோ

இடம் பூலோஞ், புவான்-துய்-ழூர் என்ற ஆற்றோர வீதி. சூரியனின் ஒற்றைக் கதிரொளியில் பிரகாசித்த கட்டடமொன்றின் சுவரில் பிளாஷ்’ (Blache) என்று நீல வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது, எழுத்துக்கள் மங்கியும் உரிந்துமிருந்தன. ‘அருகிலிருந்த காப்பிக் கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன், .’பிளாஷ்’ என்ற பேரில் வெகுகாலத்திற்குமுன் சந்தின் தொங்கலில் சைக்கிள் கடையொன்றை நடத்தியவன் இறந்துவிட்டதாகவும், அவனது ஒரேமகள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு இளம்வயதில் புறப்பட்டுப் போனவவள், பிறகு திரும்பவேயில்லை”, என்றான்.

‘பிழு'(1) வின் தாயார்க்காரியான ‘கோந்த்தெஸை'(2) நினைத்துக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டிலிருந்த மேசையைக் குடைந்தபோது ‘பிளாஷ் ஒதெத்’ என்ற பெயரில் அடையாள அட்டையொன்று கையிற் கிடைத்தது. அடையாள அட்டையின் நிழற்படத்தினை பார்த்த மாத்திரத்தில் அவள் ‘பிளாஷ் ஒதெத்’ என்று புரிந்துவிட்டது. பாதையைத் தொலைத்துவிட்டு அலைகிறபோது, அதிர்ஷ்டவசமாக ஏதாவது நேரும், அப்படித்தான் எனக்கும் நடந்தது. ஒருநாள் மாவட்ட நிருவாக அலுவலகத்தில், “‘பிளாஷ்’ என்ற பெயரில் தகவல் ஏதேனும் கிடைக்குமா”, என்று அங்கிருந்த பெண் உதவியாளரை விசாரிக்கப்போக, அவள் கொஞ்சம் நல்லமாதிரியென நினைக்கிறேன், நான்கைந்து பக்கங்கள் தேறும் கையிற் திணித்தாள்.

அப்பெயர் பட்டியல்கள் தட்டச்சிலிருந்தன: சேன் நதியும் மார்ன் நதியும் சந்திக்கிற ஷராந்தோன் பக்கமிருந்த இரவுவிடுதிகளையெல்லாம் வலம் வந்தாயிற்று.

பட்டியலில் இருந்த பெயர்களில் பிளாஷ் ஒதெத், வயது பதினெட்டு, 23-bis, கே துய் புவான் துய் ழூர், பூலோஞ்- என்பதுமொன்று.

முதலாம் அல்பெர் வீதி, பூலோஞ் -ஆற்றோர சாலை பக்கமிருந்த ‘பிளாஷ்’ பெயர்கொண்ட சைக்கிள்கடை, தடிச்சி மதெலின் லூயி தனது சொகுசுப்படகை நிறுத்திவைக்கிற புத்தோ தீவு, நதியின் மற்றபக்கம், ஷரந்த்தோன் பாலம்.. அத்தனையும் சேன் நதியோடு சம்பந்தப்பட்டவைதான். ஏன், பிழுவின் கண்களை நினைத்துக்கொள்ளும்போதுகூட சேன் நதியின் நிறம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

*******

அப்போது எனக்குப் பதினெட்டு வயது. நாடகப் பட்டறையில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம் – பள்ளிக்கு, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ என்று பெயர். அந் நாடகப்பட்டறை மாணவர்களில் ‘பூபூல்’ என்றழைக்கபட்டத் தடியனைத் தவிர வேறெவரும் தொழில்முறை நாடக நடிகர்கள் இல்லை. பள்ளியில் வாரத்திற்கு மூன்றுமுறை மொத்த மாணவர்களுக்குமாகச் சேர்த்து, எங்கள் பயிற்சி ஆசிரியையால், ‘பொது வகுப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட சிறப்பு வகுப்புகள் நடந்து வந்தன, நான் தவறாமல் அவ்வகுப்புகளுக்குச் செல்வேன். நாடகப் பட்டறையை நிர்வாகியும் எங்களுக்குப் பயிற்சி ஆசிரியையுமாக இருந்த பெண்மணி ஒரு காலத்தில் ‘பிரெஞ்சு நாடகத்துறையில்’ தீவிரமாக உழைத்தவள். தனது பணிக்காலம் முடிவுக்கு வந்த நேரத்தில் நாடகத்துறையிலிருந்த ஈர்ப்பும், வெகுசனத் தொடர்பில் கொண்டிருந்த பற்றுமே ‘எத்துவால்’ அருகே, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ அவள்’ தொடங்குவதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. ‘வழக்கமான மேடை நாடக அரங்குகள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்குத் தான் எதிரியென்று ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ வெளியிட்டத் துண்டு பிரசுரங்கள் தெரிவித்தன.

‘பொது வகுப்பு’ என்கிறபோதெல்லாம் இரவுடன் கூடிய கடும்பனிக்காலம் நினைவுக்கு வருகிறது. இரவு எட்டு மணியிலிருந்து பத்தரைமணி வரை எங்களுக்கு வகுப்பு. வகுப்பு முடிந்ததும் இருட்டில் கலப்பதற்கு முன்பாக பூபூலும் நானும் உரையாடியபடி வெளியேறுவோம். எங்கள் உரையாடலில் வேறு சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘புபூல்’, ‘சோனியா ஓ தொய்யே’ என்ற இரண்டு பெயர்களைத்தான் என்னால் இப்போது ஞாபகப்படுத்த முடிகிறது..

‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தின்’ நட்சத்திரமென்று அவளைச் சொல்லலாம். நாங்கள் அனைவரும் கலந்துகொள்கிற ‘பொது வகுப்பிற்கு’ மொத்தத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் அவள் வந்திருப்பாள். எங்கள் நாடகப் பட்டறை ஆசிரியரிடம், தனக்கென பிரத்தியேகமாகப் பாடஞ்சொல்லித் தர ஏற்பாடு செய்துகொண்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். தனி வகுப்பு என்பது எல்லோராலும் முடிகிற காரியமல்ல- அதற்கெல்லாம் பணம் வேண்டும். அவளைத் தவிர அங்கிருந்த வேறு மாணவர்களுக்கு, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் – அதற்குச் சாத்தியமில்லை. அவள் நல்ல அழகு, முகமாத்திரம் சற்று ஒடுங்கலானது, நிர்மலமான கண்கள். பார்த்த மாத்திரத்தில் எவரையும் கவரக்கூடியவள், எங்கள் கவனத்தை ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. எங்களைக் காட்டிலும் கண்டிப்பாக ஒரு சில ஆண்டுகளாகிலும் வயதில் மூத்தவளாக இருக்கவேண்டும். போலந்து நாட்டு பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவளெனச் சொல்லிக்கொண்டாள். அவளைப்பற்றி இரண்டு மூன்று சஞ்சிகைகள் அந்த நேரத்தில் எழுதப்போக, கிட்டதட்ட ஒருமாத காலம் வகுப்பிற்கு அவள் வரவில்லை, எங்களுக்கு ஆச்சரியம். வெகுசீக்கிரம் பொது மேடைகளில் அவள் தோன்றவிருப்பதாகவும் அப்போது பேச்சிருந்தது.

‘கோந்த்தெஸ்’ என்ற பெயரை நாங்கள்தான் அவளுக்கு வைத்திருந்தோம். அப்பெண்ணுடைய முதல் மேடையேற்றத்தைப் பற்றிய எந்தக் கேள்வியையும் நாங்கள் கேட்டுவிடக்கூடாதென்பதில், நாடகப்பட்டறையின் நிர்வாகி கறாராக இருந்தாள். ஆனல் எங்கள் குழுவில் புபூல் மிகவும் கெட்டிக்காரன்; அவனுக்கு நாடக அரங்குகள், திரை உலகம், கேளிக்கை விடுதிகள் சம்பந்தப்பட்ட இடங்களின் அறிமுகம் இருந்ததால் அவளைப்பற்றிய எல்லாத் தகவல்களும் அவ்வப்போது வந்து சேர்ந்தன. முதலாம் அல்பெர் வீதியில் ஆடம்பரமான மாடி வீடொன்றில் ‘கோந்த்தெஸ்’ வசிப்பதாகவும், பின்புலத்தில் என்னவோ நடக்கிறதென்றும் பொடிவைத்துப் பேசினான்: “அவளை சௌகரியமாக யாரோ பராமரிக்கவேண்டும். நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் இப்படி ஏராளமாக செலவு செய்ய எல்லோருக்கும் ஆகிற காரியமா என்ன?”, என்றான். “La Tour d’Argent (‘லா தூர் த்’அர்ழான்) உணவு விடுதியில் சுமார் பத்துபேருக்கான இருக்கைகளை முன்கூட்டியே சொல்லிவைத்து, இன்னார்தானென்றில்லை எவரையும் அவளுடன் உணவருந்த அழைக்கிறாளென்றும், வந்தவர்களுக்கு அன்பளிப்புகளை தாராளமாக வாரி வழங்குகிறாளென்றும், அன்பளிப்புப் பெற்றவர்கள் பதிலுக்கு அவளுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கிறார்களென்றும் கூறி அவள் நினைத்ததை சாதிக்க முடிகிற தந்திரத்தை ஒரு முறை விளக்கினான். இப்படியெல்லாம் அவளை விமரிசித்தபோதிலும் புபூலுக்கு, தன்னையும் ஒருநாள் அவளுடன் உணவருந்த அழைக்கமாட்டாளா? என்ற ஏக்கம் நிறையவே இருந்தது..

சிறுமி ‘பிழு’ மாத்திரம் இல்லையெனில், எல்லாச் சம்பவங்களுக்கும் குப்பைக்குப் போகிற மலர்ச்செண்டின் கதிதான்.

எங்கள் நாடகப் பட்டறை மாணவர்களிடையே பரிசுபோட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நாளொன்றில்தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். நிகழ்ச்சியை பள்ளியிலேயே விசாலமாக இருந்த ஓர் இடத்தில் சில மாற்றங்கள் செய்து, நாடகப் பட்டறையின் முதல்வர் பெண்மணி ஏற்பாடு செய்திருந்தாள். சுமார் ஐம்பது பார்வையாளர்களும், கலையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் பரிசிக்குரியவர்களை தேர்வு செய்யவென்று நடுவர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி ஏற்பாடு செய்திருந்தபோது, வகுப்புக்கு நான் புதிய மாணவன், மேடைக்கூச்சமும் இருந்தது, போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியில் சென்றிருந்தேன். நான் திரும்ப வந்தபோது போட்டி நடந்து, பரிசுக்குறியவர்களை அறிவித்தும் முடித்திருந்தார்கள். நிகழ்ச்சி நடந்த மண்டபத்திலிருந்து பார்வையாளர்கள்கூட புறப்பட்டுபோய்விட்டார்கள். ஒரு சில நண்பர்களுடன் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த புபூல் என்னைக் கண்டதும், பேச்சைத் துண்டித்துக்கொண்டு சட்டென்று என்னிடம்:

– முதல் பரிசைப் பெற்றது யாரென்று நினைக்கிற? கோந்த்தெஸ்- எனக்கு ‘ம்யூசிக்-?¡லுக்கான'(3) வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்றான். எனது பாராட்டுதலை அவனுக்குத் தெரிவித்தேன்.

– ‘La Dame aux Camelias’ நாடகத்திலிருந்து மரணக்காட்சியைப் தேர்வு செய்து அவள் நடித்தாள். ஆனால் வசனத்தைச் சுத்தமாக மறந்துவிட்டாள், என்று என் காதில் முணுமுணுத்தான், தொடர்ந்து, திட்டமிட்டபடிதான் எல்லாம் நடந்தது தம்பி.. பேசிவைத்துக்கொண்டு அதன்படிதான் காய் நகர்த்தியிருக்கிறார்கள். நடுவருக்கும், நம்முடைய மதாம் சான்-ழேனுக்கும் உறையில் பணம் போயிருக்கிறது, என்றான்.

மதாம் சான்-ழேன் எங்கள் பயிற்சி ஆசிரியை, பிரெஞ்சு நாடக உலகம் அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.

– “கோந்தெஸ்’க்காகவே நிழற்படக் கலைஞர்கள் வரவழைக்கபட்டார்கள் தெரியுமா? பேட்டிக்குக் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்சத்திரமென்றால் சும்மாவா? ம்.. பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்திருப்பாளென நினைக்கிறேன்” தொடர்ந்து புலம்பி கொண்டிருந்ததான்..

அப்போதுதான் கவனித்தேன், மண்டபத்தில் கடைசியாக சிவப்பு நிற வெல்வெட் இருக்கையொன்றில் சிறுமியொருத்தி உறங்கியபடியிருந்தாள்.

– யார் அது?- புபூலிடம் கேட்டேன்.

– ‘கோந்த்தெஸ்’ மகள். அவளுக்கு நேரமில்லையாம். மதியத்திற்கு, அந்தபெண்ணைப் பார்த்துக்கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். ஒத்திகையொன்றிற்குப் போகவேண்டியிருக்கிறது, என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு சரிவருமா?

– உனக்காக வேண்டுமென்றால் செய்யறேன்.

– கொஞ்சநேரம் அவளைக் கூட்டிக்கொண்டு உலாத்து, பிறகு முதலாம் அல்பெர் வீதியிலிருக்கும் 21ம் எண் வீட்டில் அவளை கொண்டுபோய் சேர்த்திடு, வேறு பெரிதாக செய்ய ஒன்றுமில்லை.

– சரி.

– அப்போ நான் புறப்படறேன். கேளிக்கை விடுதிகளில் இனி நானும் மேடையேற வேண்டியிருக்கும்…

போகும்போதுதான் கவனித்தேன் பதட்டத்துடனிருந்தான். உடலில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள்.

– புபூல், கவலையை விடு நான் பார்த்துக்குறேன். கேளிக்கை விடுதிகளில் நீயும் மேடை ஏற வாய்ப்பு அமையுமென்று சொல்ற.. வாழ்த்துக்கள்.

புபூலும் போன பிறகு மண்டபத்தில் எங்களைத் தவிர வேறு நபர்களில்லை. சிறுமி இன்னமும் உறக்கத்திலிருக்கிறாள். அவளை நெருங்கினேன். கன்னம் நாற்காலில் படிந்திருக்க, இடது கை தோளிலும், முன் கை மார்பிலுமாக இருந்தன. தலைமயிர் நெளியாய் நெளியாய் தேன் நிறத்திலிருந்தது. வெளிர் நீலத்தில் மேலங்கியொன்றை அணிந்திருந்தாள். கால்களில் பழுப்புவண்ண ஷூக்கள். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்.

தோளில் மெல்லத் தட்டி எழுப்ப, கண் விழித்தாள்.

கோந்த்தெஸ் கண்களைப்போலவே சிறுமியின் விழிகளிரண்டும் சாம்பல்நிறத்தில் ஒளிர்ந்தன.

– வெளியிற் சென்று உலாத்திவிட்டு வரலாம். என்ன?

அவள் வியப்புக்குள்ளாகி இருக்கவேண்டும், முகத்தில் தெரிந்தது. எழுந்து கொண்டாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டேன், இருவருமாக ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ விட்டு வெளியில் வந்தோம்.

அவென்யூ §?¡ஷ் வழியா இருவரும் நடந்து, மோன்சோ பூங்காவுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

– என்ன உள்ளேபோய் உலாத்திவிட்டு வரலாமா?

– ம்.- சம்மதம் என்பதுபோல தலையாட்டினாள்.

இடது திசையில் புல்வார் பக்கமாக, வண்ணம் உரிந்த ஊஞ்சல்களும், பழைய சறுக்குமரமொன்றும், மணற்திட்டொன்றும் இருந்தன..

– என்ன விளையாட ஆசையா?

– ஆமாம்.

அங்கே குழந்தைகள் பெரியவர்கள் ஒருவருமில்லை. சீக்கிரம் பனிகொட்டினாலும் கொட்டலாம், பஞ்சுபோல வெண்மையான மேகமூட்டத்துடன் வானம். இரண்டு அல்லது மூன்றுமுறை சறுக்கு மரத்தில் விளையாடியவள், தயக்கத்துடன் தன்னை ஊஞ்சலில் ஏற்றிவிடச் சொல்லி கேட்கிறாள். அப்படியொன்றும் எடை போட்டவளாக இல்லை. தூக்கி உட்காரவைத்ததும் ஊஞ்சலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

– உனக்கு என்ன பேரு?

– மர்த்தீன். ஆனா என்னை அம்மா பிழுவென்றுதான் கூப்பிடுவாள்.

மணல்திட்டில் ஒரு சிறிய முறத்தைப்பார்த்ததும், மண்ணைக் கிளறி விளையாட ஆரம்பித்தாள். அருகிலேயே சிமெண்ட்டால் செய்த இருக்கையொன்று இருந்தது. அதிலமர்ந்தபடி அவள் விளையாடப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன்: அவளணிந்திருந்த காலுறைகள் வித்தியாசமாகவிருந்தன: ஒன்று கரும்பச்சை வண்ணத்தில் முழங்கால் வரையும், மற்றொன்று நீலவண்ணத்தில் பழுப்பு வண்ண ஷூவை இறுக்கியிருந்த கயிற்றுக்கு மேலாக ஒரு சில செ.மீட்டர்கள் கூடுதலான அளவிலும் இருக்கக் கண்டேன். அன்றையதினம், உண்மையில் ‘கோந்த்தெஸ்’தான் தனது மகளுக்கு உடுத்தி அனுப்பியிருப்பாளா? என்றெனக்குச் சந்தேகம்.

அதிக நேரம் ஈரமணலில் இருந்தால், சிறுமியின் உடம்புக்கு ஆகாமற் போனாலும் போகலாம் என்ற பயத்தில், அவளுடைய ஷூக் கயிறுகளை ஒருமுறை சரிபார்த்தபிறகு பூங்காவின் மறுபக்கம் அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு சில குழந்தைகள் குடைராட்டின குதிரைகளில் சுற்றிவந்தனர். அவள் மரத்தலான அன்னமொன்றில் உட்கார விரும்பினாள். குடைராட்டினம் கிரீச்சிட்டுக்கொண்டு சுற்றியது. எனக்கெதிரே வரும்போதெல்லாம் வலது கையை உயர்த்தி ஆட்டினாள், இடது கரம் அன்னத்தின் கழுத்தை வளைத்துப் பிடித்திருக்க உதடுகளுக்கிடையே சிறிய புன்னகை.

ஐந்து சுற்று வந்திருப்பாள், அம்மா உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், சுரங்கப்பாதை ரயில் பிடித்து நாம் உடனே திரும்புவது அவசியம், என்று அவளிடம் கூறினேன்.

– அங்க்கிள் எனக்கு நடந்துபோகணும்

– சரி. உனக்கு அப்படியொரு ஆசைன்னா, நடந்தே திரும்புவோம்.

கூடாதென்று சொல்ல எனக்குத் தைரியம் காணாது. அவளுடைய தந்தையைப் போல் நடந்துகொள்வதற்கான வயதும் எனக்கில்லை.

மோன்சோ வீதி, அவென்யூ ஜார்ஜ்-5 எனக் கடந்து மீண்டும் சேன் நதி பக்கம் வந்தோம். கட்டடச்சுவர்கள் சூரிய ஒளியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நேரம், வெகு சீக்கிரம் அத்தனையும் இருட்டில் கலந்துவிடும். நேரமில்லை, கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டும். அன்றைய தினமும் அந்தி சாயும் நேரத்தில் எனக்கேற்படும் வழக்கமான மனக் குமுறல்கள். சிறுமியும் என்னுடைய மனநிலையில்தான் இருந்திருக்கவேண்டும் இல்லையென்றால் அத்தனை இறுக்கத்துடன் எனது கையை பற்றியபடி நடப்பாளா?

மாடியை அடைந்தபோது, சலசலவென்று பேச்சும் சிரிப்பும் கலந்தொலித்தது. ஐம்பது வயது மதிக்கக்கூடிய பெண்மணி, தலைமுடியைக் குட்டையாகக் வெட்டிக்கொண்டிருந்தாள் சதுரமுகம், பார்க்க ‘புல்-தெரியெர்’ வகை நாய்க்குண்டான சுறுசுறுப்பும், துடிப்பும் தெரிந்தது. கதவைத் திறந்தாள். ஒருவிதமான அவநம்பிக்கையுடன் மேலுங்கீழுமாக எங்களைப் பார்த்தாள்.

– வணக்கம் மதாம் மதெலென்-லூயி, – சிறுமி

– வணக்கம், பிழூ.

– நான்தான் இவளை வெளியே அழைத்துக்கொண்டு போனேன்.

– உள்ளே வாங்க

நுழைவுக் கூடத்து தரைமுழுக்க பூங்கொத்துகள். வரவேற்பறையில் கடைசியாகத் தெரிந்த இரட்டைக் கதவினூடாகக் கும்பல் கும்பலாய் மனிதர்கள்.

– கொஞ்சம் பொறுங்க, சோனியாவைக் கூப்பிடறேன், – சொன்னவள் ‘புல்-தெரியர்’ நாய்போலிருந்த பெண்மணி.

சிறுமியும் நானும்- இருவருமாக நுழைவுக் கூடத்தில் காத்துக் கிடந்தோம், எங்களைச் சுற்றிலும் கேட்பாரற்று கிடக்கும் பூங்கொத்துகள்..

– பூங்கொத்துகள் நிறையதான் வந்திருக்கின்றன…,- நான்.

– எல்லாம் அம்மாவுக்கு.

‘கோந்தெஸ்’ வெளிப்பட்டாள்; தோளில் கற்கள் பதித்த கறுப்பு நிற வெல்வெட்டாலான ஆடை, தேவதைபோல ஜொலித்தாள்.

– மறுப்பேதும் சொல்லாமல் ‘பிழு’ வைத் வெளியில் அழைத்துபோன உங்க நல்ல மனசைப் பாராட்டணும்.

– என்ன இதையெல்லாம் நீங்க பெரிசு பண்ணிகிட்டு… இன்றைக்கு நடந்த போட்டியில் உங்களுக்கு முதற் பரிசு கிடைத்ததாமே, பாராட்டுகள்.

– நன்றி.. மிகவும் நன்றி

எனக்கு உடம்பை என்னவோ செய்தது. அந்த இடத்தைவிட்டு சீக்கிரம் புறப்பட்டால் நல்லது என்பதுபோல தோன்றியது. அவள் தனது மகள் பக்கம் திரும்பினாள்.

– பிழு, அம்மாவுக்கு இன்றைக்கு மிகவும் முக்கியமான தினமென்று தெரியுமில்லை…

சிறுமியின் கண்கள் சட்டென்று அகலவிரிந்து அவள் மீது பதிந்தன. அக்கண்களில் வெளிப்பட்டது அச்சமா? வியப்பா?

– பிழு, அம்மாவுக்கு பெரியதொரு வெகுமதி கிடைச்சிருக்குத் தெரியுமா? அதற்காகக் அம்மாவுக்கு நீ முத்தம் கொடுத்தாகணும்…

சொன்னாளே தவிர சிறுமியின் திசைக்காய்க் குனிந்தவளில்லை. சிறுமி கால்விரல்களை ஊன்றி, எம்பி முத்தமிட மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ‘கோந்த்தெஸ்’ சிறுமி தன்னை முத்தமிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, அவள் கவனம் இறைந்து கிடந்த பூங்கொத்துகளிற் சென்றது.

– பிழு, பார்த்தியா? எவ்வளவு பூக்கள்! இவற்றையெல்லாம் எடுத்து ஜாடியில் வைக்கக்கூட இப்போது எனக்கு நேரமில்லை. வந்திருக்கும் நண்பர்களை கவனிச்சாகணும், பிறகு அவர்களை இரவு விருந்துக்கு அழைத்துப் போகணும். இராத்திரிக்கு எத்தனை மணிக்குத் திரும்புவேனோ தெரியாது… நீங்க இன்றிறவு பிழுவை பார்த்துக்க முடியுமா?

நான் மறுக்கமாட்டேன் என்பதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்ததைப் போல, அவள் கேட்ட தோரணை இருந்தது.

– உங்க விருப்பம் அப்படீண்ணா, செய்தால் போச்சு.

– உங்களுக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன். இரவு இங்கேயே நீங்கள் தூங்கிக்கொள்ளலாம்.

எனக்குப் பதில்சொல்லக் கூட நேரம் கொடுக்கவில்லை, சட்டென்று. சிறுமி பிழுவின் பக்கம் திரும்பினாள்.

– பிழு செல்லம்.. அப்போ நான் கிளம்பட்டுமா? நண்பர்கள் எனக்காக காத்திருக்காங்க பாரு.. அம்மாவை மறந்திடாதே..என்ன? – குனிந்து சிறுமியின் நெற்றியில் செயற்கையாய் முத்தமிட்டாள்.

– மிஸியே, உங்களுக்கு மறுபடியும் நன்றி.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல், வர§ற்பறையில் காத்திருந்த நண்பர்களைத் தேடி சென்றாள். அத்தனை இரைச்சல்களுக்கிடையிலும், வெடித்து பிறகு மெலிந்து அடங்கிய சிரிப்பிலிருந்து அவளைத் தனியே என்னால் அடையாளப்படுத்த முடிந்தது.

அவர்கள் படிகளில் இறங்கிச் செல்ல செல்ல, ஒன்றன் பின்னொன்றாக குரல்களும் தேய்ந்து அடங்கின. பிழுவும் நானுமாக தனித்து இருந்தோம். சிறுமி சாப்பிடும் அறைக்கு என்னைக் கூட்டிச்சென்றாள். இருவரும் எதிரெதிராக மார்பிள் மூடிய நீள்சதுர மேசையொன்றில் அமர்ந்தோம். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியோ வீட்டின் பின்புறத்தில் தோட்டவெளியில் பொழுதைக்கழிக்க உபயோகிக்கப்படும் வகையைச் சார்ந்தது. அதுவும் ஆங்காங்கே துரு பிடித்து மிகப் பழையதாக இருந்தது. அவள் உட்கார்ந்திருந்ததோ வெல்வெட்மெத்தை தைத்த முக்காலி. தலைக்கு நேராகத் தொங்கவிடப்பட்டிருந்த பல்பிலிருந்து விழுந்த வெளிச்சம் மொத்தமும் எங்கள் மீதுதான் படிந்திருந்தது.

– சீன சமையற்காரனொருவன் உணவைப் பரிமாறினான்.

– இவரெப்படி, நல்ல மனிதர்தானே? – பிழுவைக் கேட்டேன்.

– ஆமாம்.

– என்ன பேர்?

– தியூங்.

சிலை போல விறைத்து உட்கார்ந்தபடி சூப்பை முடிப்பதில் கவனமாக இருந்தாள். உண்டு முடிக்குவரை வாய் திறக்கவில்லை.

– என்ன நான் எழுந்திருக்கலாமா?

– ம்.

அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். சுவரும் அலங்காரங்களும் நீல வண்ணத்திலிருந்தன. மரச்சாமான்களென்று சொன்னால் இரண்டே இரண்டுதான்: ஒன்று சிறுபிள்ளைகளுக்கான கட்டில். மற்றொன்று இரண்டு சன்னல்களுக்கும் இடையிலிருந்த வட்டமேசை. மேசையில் போட்டிருந்த விரிப்பின் மீது மேசை விளக்கொன்று இருந்தது.

அறையோடு சேர்ந்தாற்போல இருந்த குளியல் அறைக்குள் நழுவினாள். பல்துலக்கும் சத்தம் கேட்டது. வெளியில் வந்தபோது வெண்ணிற இரவு ஆடையிலிருந்தாள்

– தயவு செய்து ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வரமுடியுமா? அவள் கேட்டவிதம், நான் அவள் வேண்டுகோளை தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்ற கவலையில் தொனிப்பது போலிருந்தது.

– அதற்கென்ன கொண்டுவருகிறேன்

– பிழு கொடுத்த டார்ச் விளக்கின் துணையுடன் சமையலறையை தேடிக்கொண்டு போனேன். பயமுறுத்தும் இருட்டில், அவள் ஒருத்திமாத்திரம் தனியாக உலாத்துகிறபோது இந்த டார்ச்சே கூட ஒருவகையில் சுமைதான், நினைத்துக்கொண்டேன். பெரும்பாலான அறைகள் காலியாக இருந்தன. வழியெல்லாம் டார்ச் விளக்கை ஒளிர வைக்க முயற்சித்தபோதிலும், நிறுத்தவும் அணைக்கவுமான பொத்தான் சரியாக நடக்கவில்லை. பார்ப்பதற்கு கைவிடப்பட்டக் குடியிருப்புபோல, மாடியிருந்தது. சுவரில் செவ்வக வடிவிலிருந்த கறைகள் அவை ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களாக இருக்கவேண்டும். மற்றொரு அறை அநேகமாக ‘கோந்த்தெஸ்’ உடையதாக இருக்கவேண்டும், பெரியதொரு கட்டில் போட்டிருக்க, சற்றேரக்குறைய அதே அளவிலான வெண்ணிற சாட்டின் துணியால் அக்கட்டில் மூடப்பட்டிருந்தது. தரையில் ஒரு தொலைபேசி, கட்டிலைச் சுற்றிலும் சிவப்பு ரோஜாக்கள், பவுடர் டப்பியொன்று, ஒரு மப்ளர்…

சமையலறை மேசையில், சீனன் இரண்டு வேற்று மனிதர்களோடு சீட்டைக்கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவர்களில் ஒருவன் அவனைப்போலவே சீனன், மற்றவன் ஐரோப்பியன்.

– சிறுமிக்காக ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்.

குழாயிருக்கும் திசையைக் காட்டினான். கண்ணாடித் தம்ளர் நிரம்பியதும் அவர்கள் பக்கம் மீண்டும் என்பார்வை சென்றது. விரித்திருந்த துணியில், வகை வகையாய் உணவுகள் தயாரிக்கும் முறைபற்றிய அட்டைகள். அவற்றைத்தான் பந்தயம் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வெளியேறினேன். கதவு பின்புறம் மூடப்பட்டதற்கான கிறீச்சென்று சத்தம்.

மீண்டும் வெறிச்சோடிக்கிடந்த அறைகளை ஒவ்வொன்றாக கடந்துவந்தேன். அண்மையில்தான், அவசர அவசரமாக அங்குள்ள தளவாடங்களைகாலி செய்திருக்கவேண்டும்.. அவற்றைப் பாதுகாப்பதற்கென நிறுவனங்கள் இருக்கின்றனவே அங்கே ஒப்படைத்து பத்திரபடுத்தியிருப்பார்களோ? ஆனால் வெள்ளை சாட்டின் துணியினால் மூடப்படிருந்த பெரிய கட்டில்; சுவரை ஒட்டியிருந்த சோபா; இரண்டு பெட்டிகளும், பயணப் பையொன்றுமாக அடுக்கப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகள் ஆகியவற்றைத் தற்காலிகமாக அங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். .

அவளுடைய கட்டிலில் எனக்காகக் காத்திருந்தாள்.

– எனக்காக சில பக்கங்களை வாசிக்க முடியுமா?

குரலில், அவளுடைய வேண்டுகோளை மீண்டும் நான் தப்பாக எடுத்துக்கொள்ளபோகிறேன் என்ற கவலை. மேலட்டை பழுப்படைந்திருந்த ‘Le Prisonnier de Zenda’ என்ற புத்தகத்தை என் கையிற் கொடுத்தாள். அவள் வயதுக்கு அப்புத்தகத்தில் ஆர்வம் காட்டியது கண்டு எனக்கு வியப்பு. நான் வாசிக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக் கேட்டாள், கண்களில் அப்படியொரு பிரகாசம்.

ஓர் அத்தியாயம் முழுவதையும் படித்து முடித்தேன். அந்த அறையிலிருந்த விளக்கை மாத்திரமல்ல பக்கத்து அறை அலங்கார விளக்கையும் அணைக்க வேண்டாமென்றாள். இருட்டுக்குப் பயந்தாள். அவள் தூங்குகிறாளா என்று பார்க்க மூடியகதவுகளை விலக்கி பார்க்கவேண்டியிருந்தது. பிறகு மாடிமுழுக்க அலைந்ததில் தோலினாலான சோபாவொன்றை கண்டேன், இரவை அதிலேயே கழிந்தது.

மறுநாள் காலை, ‘கோந்த்தெஸ் குழைந்தையைப் பராமரிக்கிற வேலை தந்தால், செய்வேனா என்று கேட்டாள். அவளுடைய கலையுலக வாழ்க்கையும், உல்லாச உலகும் பிழுவைக் கவனித்துக்கொள்ள தடையாக இருந்தனவாம். ஆக, அவளுக்கு எனது உதவி தேவையாயிற்று. தனிமையிலிருந்து தப்பிக்கவென்று மரிவோ நாடகப் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருந்த எனக்கு, அதைத் தொடரமுடியாமற்போனது குறித்து வருத்தங்களில்லை. எனக்கென்று இப்போது சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. உணவிற்கும், உறைவிடத்திற்கும் வசதி செய்து கொடுத்தார்கள், முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு என் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.

ழான்-குழோன் வீதியில் குல்ம் என்ற பெயரில் பள்ளியொன்றிருந்தது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருத்தி அதை நடத்திவந்தாள். அவளிடம் பிழுவுக்குத் தனி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலும், பின்னேரமும் பிழுவை அழைத்துவருவதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றபோதேல்லாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன் அதாவது பிழுவைத் தவிர வேறு சிறுமிகள் அங்கு படிப்பதற்கான அறிகுறிகளில்லை. அமைதியாகவும் இருண்டும்கிடக்கிற உபயோகத்திலில்லாத தேவாலயத்தைப்போல ஒரு வகுப்பறையில் அவளும் சுவிஸ் பெண்மணியுமாக அமர்ந்திருப்பார்கள். அங்கே அவள் படித்த நேரம்போக மற்ற நேரங்களில் முதலாம் அல்பெர் வீதியிலுள்ள புற்களிட்ட பாதையிலோ, ட்ரொக்காடேரொ பூங்காவிலோ என்னையும் பிழுவையும் காணலாம், பிறகு நதிக்கரை வீதிகள் வழியாக வீட்டிற்குத் திரும்புவதை வழக்காமக் கொண்டிருந்தோம்.

எல்லாமே இரவும் பனியுமான பேழைக்குள் அரங்கேறியவை. பிழுவுக்கு ஏதோ இரவிடம் மட்டும் பயம் என்றில்லை, திரைத் துணிகளில் தெரியும் அவளுடைய அறை மின்சார விளக்கின் நிழலிடத்திலும், கதவிடுக்கினூடாகக் கண்ணிற்படும் பக்கத்து அறையின் லஸ்கர்கர் விளக்கிடத்திலுங்கூட அவளுக்கு அச்சமுண்டு. அவற்றையெல்லாம் தன்னைநோக்கி நீளும் கரங்களாக நினைத்துப் பயந்து கட்டிலில் சுருண்டு படுப்பவளை அணைத்துக்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லையென அவள் உறங்குவரை தைரியமூட்டவேண்டும். அவளை பயமுறுத்தும் நிழல்களைத் தவிர்க்க அல்லது அவற்றை இல்லாமல் செய்ய பல வழிகளிலும் முயற்சிப்பதுண்டு.

நானறிந்த எளியவழிமுறை திரைத்துணிகளை இருபக்கமும் ஒதுக்கிவைப்பது, ஆனால் விளக்கொளி எனது அமைதியான தற்காப்பு முயற்சியைக் காட்டிகொடுத்துவிடும். மின்சார விளக்கைக் கொஞ்சம் வலது பக்கம் கொஞ்சம் இடதுபக்கமென இடம்மாற்றம் செய்து பார்ப்பேன், ம்..பலனில்லை, நிழல்கள் எப்போதும்போல பயமுறுத்திகொண்டுதானிருந்தன.

அவளைப் பார்த்துக்கொள்வதென்கிற பணியில் சேர்ந்து சரியாக பதினைந்து நாட்கள் கடந்திருந்தன. என்னுடைய துணை ஒருவகையில் அவளுடைய அச்சத்தை தவிர்த்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், இல்லையெனில் Prisonnier de Zenda புத்தகத்தின் படிக்கவேண்டிய அன்றைய அத்தியாத்தை முடிக்கும்முன்பாகவே, திரைத் துணிகளில் தெரிகிற கைகளைப்பற்றிய கவலைகளின்றி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

கடும்பனிபெய்த குளிர்காலம் அது. பாரீஸில் நாங்கள் குடியிருந்த இடம், முதலாம் அல்பெர் வீதி, நவீன ஓவியத்திற்கான அருங்காட்சியக கட்டத்தின் முன்பிருந்த திறந்தவெளி, ஒன்றின் மேலொன்றாக அடுக்கிவைத்ததுபோல இருக்கின்ற ‘பஸ்ஸி’ குன்றின் சரிவில் தெரிகிற வீதீகள் என எல்லாமுமாக சேர்ந்து அப்பகுதியே ஆங்காடின் (4) போல இருக்கிறது. கொன்கோர்டு திடலில்(5) குதிரைமீது சவாரிசெய்வதுபோல பெல்ஜிய அரசர்(முதலாம் அல்பெர்)சிலை. வெள்ளை வெளேரென்று மன்னர் ஏதோ பனிச்சூராவளியில் அகப்பட்டு தப்பித்துவந்தவர் போலவிருந்தார். பழைய பொருட்களுக்கான கடையொன்றில், கவனிப்பாரற்று மூலையிற் கிடந்த மரத்தால் செய்த பனிச் சறுக்கு வண்டியொன்றை பிழுவுக்கு விளையாட உதவுமென்று வாங்கினேன். ட்ரொக்காடேரொ பூங்காவிற்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த அவளுக்கு அதிக சிரமமற்ற சரிவில் விளையாடினாள். மாலை நதிக்கரை வீதிகள் வழியாக இருவருமாக வீடு திரும்பியபொழுது அவளது வழக்கபடி விறைத்தவாறு பனிச்சறுக்கு வண்டியில் உட்கார்ந்து வந்தாள். பார்க்க ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவள்போல இருந்தாள், வண்டியை நான் இழுத்து வந்தேன். சட்டென்று வண்டியை வண்டியை நிறுத்தி விளையாடினேன். மரங்கள் அடர்ந்த காடொன்றில் தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்டதுபோல இருவரும் பாவனை செய்கிறோம். அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவள் கன்னங்களிரண்டும் சந்தோஷத்தில் சிவந்துவிட்டன.

இரவுநேர கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் புறப்படும் அவசரத்தில் (மாலை எழுமணி அளவில்) கோந்த்தெஸ் மகளுக்குக் கொடுக்கும் முத்தங்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப்போகிறது. அந்த வீட்டில் புரியாதப் புதிராக இருந்த மதெலென்-லூயீஸ் என அழைக்கப்பட்டவளுக்கு பின்னேரம் முழுக்க தொலைபேசியில் கதைத்தாகவேண்டும், எங்களைக் கவனிக்க அவளுக்கும் நேரமில்லை. குஸ்தி போடுபவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டு தொனதொனவென்று தொலைபேசியில் பேசவேண்டிய அவசியம் என்னவோ? ஈரமற்ற குரலில், கேட்கின்றவர்களுக்கு அவளுடைய அலுவலகத்தில் சந்திப்பதற்கான நேரத்தைச் சொல்கிறாள், முகவரியும் கொடுக்கிறாள், “ஆர்க்காட் த்யு லிடோ”, ஆம் அங்குதான் அவளுடைய அலுவலகமுள்ளது. கோந்த்தெஸ் மீது அவளுடைய ஆதிக்கம் நிறைய என்பது வெளிப்படை. அவள் சோனியாவென்று பெயர்சொல்லி அழைத்ததில்லை, எப்போதும் ‘ஒதெத்’ என்றழைத்தே பழகியவள். புபூல் சொல்வதுபோல கோந்த்தெஸுக்கு வேண்டிய ஆடம்பர செலவுக்காண பணத்தை இவள்தான் கொடுக்கிறாளோ?, என்னை நானே கேட்டுக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியில் தான் இவளும் வசிக்கிறாளா? கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் முடித்துக்கொண்டு அதிகாலையில் திரும்புகிறபோது பெரும்பாலும் அவளும் சோனியாவும் ஒன்றாகத்தான் வருகிறார்கள். ஆனால் அவளது அலுவலகத்தில்தான் மதலின் லூயி தூங்குகிறாளென நினைக்கிறேன்.

கடைசிகாலத்தில் சொந்தமாக ஒரு சொகுசு படகொன்று வாங்கியிருந்தாள், அதை எப்போதும் புய்த்தோ தீவென்று சொல்கிற இடத்தில் கரையோரமாக நிறுத்தி வைத்திருப்பாள். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவளை படலில் வைத்து பார்க்கவென்று பிழு, கோந்த்தெஸ், நானென்று மூவருமாகச் சென்றிருந்தோம். உள்ளே விருந்தினர்களை உபசரிக்கவென்று வசதி செய்யபட்டு மெத்தை தைத்த நாற்காலிகளெல்லாம் வாங்கிப்போட்டிருந்தார்கள். அன்றையதினம் தொப்பியும், காற்சட்டையுமணிந்து பார்க்க உடற்பெருத்த இளம் கப்பல் பணியாளர்போல இருந்தாள், முகத்தில் கவலை தெரிந்தது.

எங்களுக்குத் தேநீர் வழங்கினாள், தேக்குமரத்திலான சுவற்றில் சிவப்பு சட்டமிட்ட நிழற்படம் தொங்கிக்கொண்டிருந்தது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிருடன் படத்தில் இருந்தவள் அவளுடைய சிநேகிதி, சுர்கூஃப் (6) வழி வந்தவள்; தோணித்துறை, படகு, மழையில் நனையும் துறைமுகம் என்பதான அவளதுபாடல்கள் பிரசித்தம். பாடகி ஏற்படுத்திய தாக்கத்தில்தான் சொகுசுபடகை வாங்கியிருப்பாளா?

இரவு வந்தது. மதெலென்- லூயியும், கோந்த்தெஸ்ஸும் என்னையும் பிழுவையும் விருந்தினர்களை உபசரிக்கும் இடத்திலேயே தனித்து விட்டிருந்தனர். புதிர் விளையாட்டொன்றை அவளுக்கென்று கண்டுபிடித்தேன், இடம் பெரியதாக இருந்ததால் ஆர்வத்துடன் சிரமங்களின்றி விளையாடப் பழகிக்கொண்டாள்.

அப்பனிக்காலத்தில், சேன்நதியில் புது வெள்ளம் – சொகுசுப்படகின் சன்ன¨லை நீர்மட்டம் தொட்டிருந்தது. லீலா பூக்களின் மணமும் சேற்றின்மணமும் சொகுசுப்படகுக்குளேயும் இருந்தன.

இருவருமாக படகில் சதுப்பு நில பிரதேசங்களெங்கும் பயணித்தோம். நதியில் தொடர்ந்து செல்ல செல்ல எனக்கும் வயதுகுறைந்து அவள் வயது பையனாக மாறினதுபோல நினைப்பு, ‘லெ ப்வா'(le Bois) வுக்கும் ‘லா சேன்'(La Seine)னுக்கும் இடையிலிருக்கிற பூலோஜ்ன்(7) கடல்வரை சென்றிருந்தோம், நான் பிறந்ததும் அங்குதான்.

பிழுவுடன் தனிமையிலிருக்கிறபோது, இரவுநேரங்களில் அந்த ஆளின் காலடிச் சத்தத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்டிருப்பேன். அவனுக்கு முப்பது வயதிருக்கும்.. அவனிடத்தில் ஒரு திறப்பு இருக்கவேண்டும், முன் கதவினை உபயோகிக்காமல் வேலைக்காரர்களுக்கான கதவின் வழியாக உள்ளே வருகிறான். முதல் முதலாக அவனைச் சந்திக்க நேர்ந்தபொழுது தனது பெயர் ‘ழான்-பொரி” என்றும் ‘சோனியா’வுக்குத் தான் சகோதரனெறும் அறிமுகபடுத்திக்கொண்டான். ஆனால் இருவருக்கும் இனிஷியல் வேறாக இருந்தது ஆச்சரியம்?

ஓ’தொயே என்றழைக்கப்படும் சோனியாவுடைய குடும்பத்தவர்களுக்குப் பூர்வீகம் அயர்லாந்து; பிரபுக்கள் வம்சத்தைச் சார்ந்தவர்கள்; பதினெட்டாம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் குடியேறியவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்களென்ற ரகசிய தகவலை மெல்லிய குரலில் ஒருநாள் மதெலென் என்னிடம் தெரிவித்தாள். தகவல் உண்மையெனில் எதற்காக அவள் தன்னை சோனியா ஓ’தொயே என்று அழைத்துக்கொள்வதற்குப் பதிலாகத் ‘சோனியா ஓதெத்’தென்று வெளியிற் சொல்லிக்கொள்கிறாள்?

சோனியாவின் சகோதரனென்று சொல்லிக்கொண்டு ஒடுங்கிய முகமும், மெல்லிய தேகமுமாக இருந்த ‘ழான்-பொரி’, பார்க்க எனக்கு நல்லமனிதனாகத்தான் தெரிந்தான். சீன சமையற்காரன் பறிமாற அவன் சாப்பிடுவதென்பது வழக்கமாக நடப்பது, ஒரு சில நாட்கள் அப்படியான சந்தற்பங்கள் அவனுக்கு அமைவதில்லை. அந்நாட்களில் எங்களுடன் சாப்பிடவிரும்பி தேடிக்கொண்டு வருவான், நாங்களும் – பிழுவும் நானும் – அவனுடன் சேர்ந்து உணவருந்துவோம். சிறுமியிடத்தில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத பிரியம் அவனிடத்திலிருந்தது. அவளுடைய தகப்பனோ? உடைவிஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்பவன் என்பதை, டையுடன் பின்னும் குத்தியிருக்கப் புரிந்துகொண்டேன். இரவில் படுப்பது எங்கே? முதலாம் அல்பெர் வீதியிலென்றால் சோனியாவின் அறையிலா அல்லது குடியிருப்பில் மூலையில் போட்டுவைத்திருக்கிற சோபாவிலா?

வருகிறபோதெல்லாம் வெகுநேரம் கழித்து பொதுவாக ‘ழானுக்கு’ என்று எழுதப்பட்ட காகித உறையுடன் புறப்பட்டுச்செல்வான். பெரிய எழுத்துக்களில் அதை பார்க்கிறபோதே சோனியாவுடைய கையெழுத்தென்று விளங்கிவிடும். மதெலென் இருக்கிறபோது எங்களைப் பார்க்க அவன் வருவதில்லை.

ஒரு நாள் இரவு சிறுமி தூங்கும்போது, அவள் அருகிலிருக்க விரும்பினான். அவளுடைய கட்டிலருகே அமர்ந்து ‘Prisonnier de Zinda’ வாசிக்கக் கேட்டான். பிறகு இருவரும் சிறுமியை முத்தமிட்டு படுக்க வைத்தோம்.

வரவேற்பறை (எனக்கு அப்படி அழைக்க விருப்பமில்லை) என்று சொல்லப்படுகிற பெரிய அறையொன்றில் சீனன் மதுவை ஊற்றிக்கொடுத்தான்.

– ஒதெத் எனக்கென்னவோ புரிந்துகொள்ளமுடியாத பெண்ணாக இருக்கிறாள்…

சட்டென்று தனது பர்சிலிருந்து முனை மடிந்து பழுத்திருந்த ஒரு நிழற்படத்தை எடுத்து நீட்டினான்.

– பிற்காலத்தில் பெரிய அளவில் ஒதெத் வாழ்விலேற்பட்ட மாறுதல்களுக்கு அந்நிகழ்ச்சிதான் ‘தொடக்கம்’. ஐந்து வருடங்கள் ஆகிறது. முக்கியமான நபரொருவரின் கண்ணிற்படநேர்ந்தது அன்றைய இரவு கொண்டாட்டத்தின்போதுதான். போட்டோ எப்படி, பிரமாதமாக இல்லை?

வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட மேசைகள், ஓவ்வொரு மேசையிலும், படாடோபமாக உடையணிந்த மனிதர்கள், மண்டபத்தில் கோடியிலிருந்த மேடையில் ஓர் இசைக்குழு. ஒளிமழையில் நனைந்தபடி காகித அட்டைகளால் ஆல்ப்ஸ்மலையை தத்ரூபமாக கொண்டுவந்திருந்தார்கள். மலைகள், அருகிலிருந்த. கிறிஸ்துமஸ் மரம், மரத்தாலான மூன்று சிறு குடில்களென அனைத்துமே செயற்கைப்பனியில் மூழ்கியிருந்தன. எதிரே விருந்தினர்களாக கறுப்பு கோட்டிலும், இரவுக்கான கேளிக்கை உடையிலும் ஆண்களும் பெண்களும், இரண்டு வரிசைகளில் விறைத்துக்கொண்டு நிற்கிற ஆல்ப்ஸ்மலை ஆபத்துதவிகள் 30பேர். அவர்கள் அருகே நிறுத்திவைத்திருக்கிறக பனிச்சறுக்கு மட்டைகள். தரையெங்கும் பனிமூடியிருக்கிறது, அதுவும் செயற்கையாக இருக்கவேண்டும். இரவு முழுக்க ஆபத்துதவிகளால் எப்படித்தான் விறைத்து நிற்க முடிந்ததோ, அவர்களுக்கு அது சிரமாக இல்லையா? நிகழ்ச்சியில் ஒதெத்துடைய பங்குதான் என்ன? நிகழ்ச்சி நன்றாக நடக்க ஒத்துழைத்ததுதான் அவளுடைய பங்கா அல்லது வேறு ஏதேனுமா? ழான்பொரியிடம் தயக்கமின்றி எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

– அதுவொரு கேளிக்கை இரவு. ‘பனிச்சறுக்கு விளையாட்டு இரவு’ என்ற பெயரில் நடத்தினோம்.

ஒதெத்துடைய ‘தொடக்கமென்று’ சொல்லப்படுகிற கேளிக்கை இரவுக்கான அர்த்தமற்ற அப்பனிக்காலமும் செயற்கை இரவும் பல நேரங்களில் உண்மைபோல தோற்றந்தந்து, குழப்பின. அதிலிருந்து தப்பிக்க சன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு முதலாம் அல்பெர் வீதியில் பெய்யும் பனியை அவதானிக்கலானேன்.

– குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை ஒதெத் உனக்குக் கொடுத்திருக்கிறாளே, நல்ல ஊதியமா?

– ஆமாம்,- யோசிப்பதுபோல சட்டென்று முகம் மாறியது.

– சிறுமியை இவ்வளவு பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் நீங்க உண்மையில் நல்லவர்தான்.

அவனை வழியனுப்ப வாசற்கதவுவரை சென்றவன், “அவனும் அவன் சகோதரியும் பிரபுக்கள் வம்சமா? பதினெட்டாம் நூற்றாண்டில் அயர்லாந்திலிருந்து போலந்துக்கு குடியேறியதாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்குமா?” மனதை அரித்துக்கொண்டிருந்த தகவல்கள் குறித்து அவனிடம் விசாரித்தேன். அக்கேள்விகள் அவனைக் குழப்பியிருக்கவேண்டும், முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிந்தது.

– என்ன … நாங்கள் போலந்து நாட்டவர்களா? யார் சொன்னது..ஒதெத்தா?

அவனது பெரிய கனடா கம்பளி ஆடையைய அணிந்துகொண்டான்.

– உங்களுக்கு விருப்பமென்றால், நாங்கள் போலந்து நாட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நாங்கள் ‘போர்த் தோரே'(8) போலந்துக்காரர்கள்.

இறங்கிகொண்டே அவன் சிரித்த சிரிப்பு படிகளில் பரவித் தணிந்தது. கோட் ராக் வைத்திருக்குமிடத்தில் நான் சிலைபோல நின்றேன்.

இருண்டும், தரை விரிப்புகள் சுருட்டப்பட்டும், ஆள் நடமாட்டமின்றியும் இருந்த அறைகளை மீண்டும் கடந்து வந்தேன். தளவாடங்கள் அகற்றப்பட்ட அடையாளத்துடனிருந்த வெற்றுத்தரையைப் பார்க்க ஏதோ அமீனா புகுந்த வீடுபோல இருந்தது. சீனர்கள் இருவரும் வழக்கம்போல சமையற்கட்டுக்குள் சீட்டுவிளையாடியபடி இருக்கவேண்டும்.

அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருக்களித்து கன்னத்திற்கு தலையணையை கொடுத்திருந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிகிடக்கும் வீட்டில் சிறுமி ஒருத்தி உறங்குவதும், அவளைக் கண்காணிக்கவென்று அருகிலேயே ஒருவன் இருப்பதும், அப்படியொன்றும் அலட்சியபடுத்தக்கூடிய விஷயங்களல்ல.

எல்லாம் ஒரு நாள் குட்டிச்சுவரானது. பிழுவை எப்பாடுபட்டாகிலும் கேளிக்கைக் கூட மேடைகளில் ஏற்றி நட்சத்திரமாக்கிக்காட்டுவதென்ற மதெலென் லூயியின் யோசனையை, சோனியா சந்தோஷத்துடன் வரவேற்றதோடு அதை நிறைவேற்றி காட்டுவதென்றும் தீர்மானம் செய்ததே அதற்கான காரணம். அவர்களிருவரின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டி பிழுவுவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். முறைப்படி கொடுக்க வேண்டிய பயிற்சியையும் பாடத்தையும் கொடுத்தால் பிழுவும் நாளைக்கே அமெரிக்க குழந்தை திரை நட்சத்திரத்தைப்போல பேரும் புகழும் அடையலாம் யார் கண்டது. இனி தன்னுடைய வாழ்க்கையே பிழுதான் என்று முடிவெடுத்தவள்போல தனது கலைவாழ்க்கையைக் குறித்து அக்கறைகொள்வதை சோனியா முற்றாகத் தவிர்த்தாள். மதெலென் லூயியும், சோனியாவும் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சிறுமி பிழுவின்மூலம் அடையத் தீர்மானித்ததாகத்தான் எனக்குப் பட்டது.

ழான் குட்ழோன் வீதி, க்யுல்ம் பள்ளி தலைமை இயக்குனரான பெண்மணியிடம், பிழு இனி அவளது தனிவகுப்புக்கு வர சந்தர்ப்பமில்லையென்றேன். தனக்கிருந்த ஒரே மாணவியை இழந்த வருத்தம் அவளுக்கு. அவளுக்காகவும் பிழுவுக்காகவும் நானும் வருந்தினேன்.

இனி தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரத்துடன் நிழற்படங்கள் எடுத்து அனுப்பவேண்டியிருக்குமில்லையா? அந்த ஆடைகளையெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே, முன்னேற்பாடாக அலமாரியொன்று தருவிக்கப்பட்டது. குதிரை வீரனைப்போல, நார்வே பனிச்சறுக்கு வீராங்கனையான சொஞ்சா ¦?னிக்கே உரிய பாவனையில், ஆடைஅலங்கார துறைசார்ந்த சிறுமியைப்போல விதமான உடைகள் தயாரிக்கப்பட அவற்றை அணிந்துப் பார்க்கவென்றே நேரங்காலமின்றி அவர்கள் வெளியில் போகவேண்டியிருந்தது. மதெலென் லூயியும் சோனியாவும், மூடிய சொகுசுக்காரில் சிறுமியை வலிய அழைத்துக்கொண்டுபோய் திணிப்பதும், பனிமூடிய முதலாம் அல்பெர் வீதியிலிருந்து கார் புறப்பட்டுப்போவதுமான காட்சி நாள் தவறாமல் நடந்தது. என்னால் முடிந்ததெல்லாம் சன்னலூடாக வேடிக்கைப் பார்ப்பது, பார்த்தேன். அந்நேரத்தில் மதெலென்-லூயியைப் பார்க்க சர்க்கஸ் கூடாரங்களில் குதிரைகளை பயிற்றுவிக்க கையில் சாட்டையுடன் திரிகிற பயிற்சியாளர்போல இருப்பாள்.

பிழுவின் நட்சத்திர தகுதிக்காக, அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள், அத்தனை வகுப்புக்களுக்கும் அழைத்துசெல்லும் பொறுப்பு எனக்கென்று ஆயிற்று.: பியானோ வகுப்பு, நடன வகுப்பு, சொற்களை சரியாக உச்சரிக்க போட்ழோன் வீதியிருந்த எங்கள் பழைய ஆசிரியை என ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சி வகுப்பு முடிந்த நேரங்களில் எனா வீதிலிருந்த நிழற்பட நிறுவனமொன்றிற்கு செல்லவேண்டும், அங்கே பலவிதவிதமான தோற்றத்தில், விதவிதமான ஆடை அலங்காரத்துடன் பிழுவைப் படமெடுப்பார்கள். குதிரை ஏற்ற வகுப்புமுண்டு. அது புலோஜ்ன் பகுதியிலிருந்த குடைராட்டின மரக்குதிரையில் நடந்தது- அதுவொன்றுதான் திறந்தவெளியில் அவளெடுத்துக்கொண்ட பாடம். அந்த வகையில் சிறுமிக்கு மிகவும் சந்தோஷம், சிவந்த கன்னங்களூடாக அம்மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டாள். சின்னன்சிறு பிள்ளையாய், கொள்ளை அழகுடன் அதிகாலை பனிமூட்டத்தையும், பனிப்பொழிவையும் நினைவூட்டும் சாம்பல் வண்ணக்குதிரையில் அவள் சுற்றிவரும் காட்சி இன்றைக்கும் கண்முன்னே தெரிகிறது.

பாடங்கள் பயிற்சிகள், படமெடுத்துக்கொள்ளவென்று ஸ்டுடியோக்கள் என அலைந்து களைத்தபோதிலும், குழந்தை பிழு ஒருவரிடமும் தனது வருத்தத்தை சொல்லிக்கொண்டதில்லை. மதெலென் லூயியும், சோனியாவும், அவளை படுத்தியதுபோதும் என்று நினைத்தார்களோ என்னவோ, அவளுடை வழக்கமான காரியங்களிருந்து விடுதலைத் தந்தார்கள். இருவருமாக ட்ரொக்காடெரோ பூங்காவரை சென்று வந்தோம். குழந்தை பனிச் சறுக்கு வண்டியியிலே ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.

பாரீஸ் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது என்றாகிவிட்டது, நான் பிரான்சின் தென்பகுதியிலிருந்த ‘லெ மிதி'(9) க்குச் செல்வதென்று தீர்மானித்தேன். நகராட்சி பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் கொடுத்த அடையாள அட்டையில் இருந்த பெயர்கூட மறந்துவிட்டது. பிழுவை பிழுவென்று ஒருவரும் அழைத்ததில்லை, சோனியாவும் அப்படித்தான், சோனியா என்ற பெயரில் ஒருவரும் அவளை அழைத்து கேட்டதில்லை. என்னையும் லெனோர்மாண்ட் என்று பெயரிட்டு ஒருவரும் அழைத்ததில்லை.

பிழுவை என்னுடன் அனுப்பிவையுங்கள், லெ மிதியில் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று சொல்லிப்பார்த்தேன் பலனில்லை. பிறரை சந்தோஷப்படுத்தி பார்த்திராத கனத்த சாரீரத்தவளான மதெலென் லூயி அவளை திரை நட்சத்திரமாக்கித் தீருவது என்ற யோசனையில் பிடிவாதமாக இருந்தாள். சோனியாவோ சுயமாக சிந்திக்கப் போதாதவள், உறுதியற்றவள், எண்ணத்தில் தெளிவற்றவள்… பிறகு ‘Sonate au clair de lune’ போன்ற பாடலைக் கேட்பதில் பித்தாக இருப்பவள்…எனினும் அவள் எதையோ பிறரிடம் மறைக்கிறாள் என்பது நிச்சயம், மெல்லிய திரைக்கும், புகைமூட்டத்திற்கும் பின்னே சேரிப்பெண் ஒருத்தி ஒளிந்திருக்கிறாள்.

ஒரு நாள் விடியற்காலை, சிறுமி உறக்கம் கலைவதற்காக முன்பாகவே நான் புறப்பட்டு விட்டேன். ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும், நீஸ் நகரில் வார இதழொன்றில் திரைச்செய்திகள் தலைப்பிட்ட பக்கத்தில், அவளுடைய படத்தை போட்டிருந்தார்கள். ‘Le Carrefour des archers’ என்ற திறைபடத்தில் அவளும் நடிப்பதாகச் செய்தி. இரவுக்கான ஆடை, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருப்பதுமோல தெரிந்தது, கையில் டார்ச்சுடன் யாரையோ தேடுவதுபோல- படம். படத்திலிருந்த இடங்கூட முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டை ஒத்திருக்கிறது. யாரைத் தேடுகிறாள்?

ஒருவேளை என்னையா?

அதன்பிறகு அவளைப் பற்றிய எந்த செய்திகளுமில்லை. எத்தனையோ பனிக்காலங்கள் வந்துபோய்விட்டன. அவற்றைக் கணக்கிடத்தான் எனக்குத் தைரியமில்லை.

புபூலும் ஒரு வழியாக வாழ்க்கையில் ஜெயித்துவிட்டான், நெகிழ்வும், துள்ளலும் கொண்ட ஒரு ரப்பர் பந்தின் குணத்தை அவன் பெற்றிருந்தது காரணமாகவிருக்கலாம். ழான் கூட்ழோன் வீதியிலும், க்யுல்ம் பள்ளியிலும் காலையும் மாலையும் தேடிச்சென்று என்னால் அழைத்து வரப்பட்ட அவள் இனியில்லையென்றாகிப்போனது. நதிக்கரை வீதிகளில் இப்பொழுதும் நடந்துபோகிறேன். குதிரைகளில் முதலாம் அல்பெர் சிலையையும், சிமொன் பொலிவார் சிலையையும் பார்க்கிறேன், இரண்டுக்குமான இடைவெளி ஒரு நூறு மீட்டர்கள் இருக்கலாம். குளிர்காலத்தில், சிலைகளிரண்டும் வெண்பனியால் போர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறபோதெல்லாம், எப்போதோ வந்துபோன அப்பனிக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன். குதிரை வீரர்கள் மாத்திரம் அங்கேயே இருக்கிறார்கள், இடம்பெயர விருப்பமில்லை போலிருக்கிறது. தங்களுக்குபின்னே சாம்பல் வண்ன நீரில் தோணிகள் ஏற்படுத்திய ததும்பும் நீரலைகளைக் குறித்த அக்கறையின்றி விறைத்துக் கொண்டு குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

நன்றி திண்ணை,

காலச்சுவடு -வெளியீடான உயிர்க்கொல்லித் தொகுப்பிலிருந்து.
——————————————————————————————————–

1. பிழு(Bijou)- jewel- பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பிரியத்துக்குரிய பொருளை செல்லமாக ‘பிழு’ என்று சொல்லிக்கொள்வார்கள், தமிழில் ‘என் தங்கம்’, ‘என் வைரம்’ என்று சொல்லிக்கொள்வதுபோல.

2. Comptesse- பிரபுவின் மனைவி அல்லது பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி.

3. Music-Hall – பாரீஸில் உள்ள புகழ்பெற்ற கேளிக்கை விடுதி

4. பனி உறைந்த ஏரிகளும், பனிமூடிய மலைகளும் நிறைந்த சுவிஸ் நாட்டின் தென்பகுதிலுள்ள குளிர்கால விளையாட்டிற்கு புகழ்பெற்ற ஸ்தலம்.

5. Place de la Concorde- பாரீஸில் புகழ்பெற்ற ஷான்செலீஸே அவென்யூவுக்கு அருகிலுள்ள மிகப்பெரிய திறந்தவெளி

6. Robert Surcouf பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரெஞ்சு போர்கப்பல் தளபதி

7. Boulogne, பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த கடற்கரை பிரதேசம்

8. Porth Dore – போர்த் தொரே- தமிழில் சொல்வதென்றால் நுழைவு வாயில்- பாரிஸ் மாநகரத்தின் உட்புக பல நுழைவிடங்களுள்ளன, அவற்றுள் இதுவுமொன்று. 1920-30களில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவந்த ஏழை போலந்துமக்களைக் குறித்த அருங்காட்சியகமொன்று அங்கிருந்தது.

9. பிரான்சுக்கு தெற்கேயுள்ள பிரதேசம்
—————————————–