Category Archives: மொழிவது சுகம்

தமிழரும் பெருமையும்…

இந்து பத்திரிகை, ஊழலைக்குறித்து CNN-IBN & CNBC-TV18 நடத்திய கருத்துகணிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவிலே இன்றைய தேதியிலே பாரத தேசத்தின் ஊழல் பெருமக்களாக நான்கு பெயர்களை சுட்டியிருக்கிறது அவர்களில் மூன்று பெயர்கள் தமிழினத்திற்குச் சொந்தமானவை. தமிழினத்திற்கு தி.மு.க கொண்டு சேர்த்திருக்கிற மகத்தான பெருமை, இனி இந்தியக் துணைக்கண்டத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பேசப்படும். மக்களால் அதிகம் அறியப்பட்டவர் ஷீலா தீட்சத்தின் கல்மாடியா, கருணாநிதியின் ராஜாவா என்று சன் டி.வியில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்யலாம். குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பன்று அரங்கேற்றினால் மிகப்பொருத்தமாக இருக்கும். தி.மு.க பெயரில் ஊழலுக்கென்று ஒரு விருதை உருவாக்கி முதல் விருதை கலைஞருக்கே கூட அவரது அபிமானிகள் சூட்டி மகிழலாம், அல்லது கவிதை தாசர்களால் ஒரு கவி அரங்கம் ஏற்பாடு செய்யலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு தினமணி வெளியிட்டிருந்த தலையங்கம் கலைஞர் புலம்பல் குறித்து நன்றாகவே சாடியிருந்தது. பிற அரசியல் கட்சிகளையும் தினமணி குட்டத்தவறவில்லை. உண்மைதான் இந்தியாவில் ஊழலில்லாத ஓர் அரசியல் கட்சி, ஓர் அரசியல் வாதி இருக்க முடியுமா? செய்தித்தாள்களில் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் முகங்களைப் பாருங்கள். உத்தமத்தின் சாயலில் ஒரு துணுக்கைக்கூட நாம் அவற்றில் பார்ப்பதரிது.

நண்பர்கள் கேட்கலாம் பிரான்சில் இல்லையா அமெரிக்காவில் இல்லையா? ஏனில்லை இங்கேயும் ஜேப்படி உண்டு, வழிப்பறியுண்டு, கொள்ளையுண்டு, கொலையுண்டு அதாவது சமூகத்தின் அமைதிக்கு கேடினை விளைவிக்ககூடிய எல்லா செயல்பாடுகளுமுண்டு. விழுக்காடுகளில்தான் ஏற்ற தாழ்வுகள். சமூகத்தை அரிக்கும் கரையான்படைத் தாக்குதல்கள் இந்தியாவில் அதிகம். நம்மிடம் ஆகக் கூடுதல். நம்மைப்பற்றிய ஒரு சுய பார்வை தேவை. மும்பையிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் திருவனந்தபுரத்திலும் பல நேரங்களில் தமிழரெனில் முகம் சுளிக்கும் போக்கு இருக்கிறது. இந்தப் பார்த்தினீயத்திற்கான வேரெங்கே இருக்கிறது என்பதைக் கண்டாக வேண்டும். கல்தோன்றி மண்தோன்றா காலத்து என ஆரம்பித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டது போதும்.
——————————

அல்பெர் கமுய் இறப்புக்கு KGB காரணமா?

1960ம் ஆண்டு நடந்த கார் விபத்தொன்றில் அல்பெர் கமுய் இறந்தாரென்பதை நம்மில் பலரும் அறிவோம். அக் கார்விபத்துக்குக் காரணம் முன்னாள் சோவியத் யூனியனின் உளவுபடை என்றால் நம்புவீர்களா? நம்பவேண்டும் என்கிறார் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கல்வியாளர் Giovanni Catelli. கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களை கரைத்துக்குடித்தவர் என்பதால், இத்தாலி நாட்டின் தினசரியான Il Corriere Della Sara பிரசரித்துள்ள இவருடைய செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Giovanni Catelliயின் தகவலுக்கு ஆதாரம் செக் நாட்டுக் கவிஞர் Jan Zabranna, இவர் தமது Lifetime நூலில் KGBக்கு நெருக்கமான ரஷ்ய நண்பரைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆக இந்த ரஷ்யரின் தகவற்படி அப்போதைய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Chepilov சொந்தத் தலையீட்டில், அல்பெர் கமுய் பயணம்செய்யவிருந்த வாகனத்தின் டயர் சேதப்படுத்தப்பட்டதெனவும், பின்னர் அதிவேகமாக செல்லுத்தப்பட்ட அக்கார் சதிகாரர்களின் திட்டபடி விபத்துக்குள்ளானதென்றும் கூறுகிறார்கள். ரஷ்ய அமைச்சருக்கும் அல்பெர் கமுய்க்கும் அப்படியென்ன பெரிய பகை? பம்பாய் தாதாக்களுக்கும் அண்மையில் கொலையுண்ட பத்திரிகையாளருக்கும் என்ன பகையோ அதுவேதான். 1957ம் ஆண்டு Franc-Tireurs என்ற பிரெஞ்சு தினசரியில் கமுய் 1956ம் ஆண்டு ஹங்கேரி எழுச்சியை சோவியத் படை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதற்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டி எழுதியிருந்ததாகவும், அப்பிரச்சினையே ரஷ்ய அமைச்சரின் கோபத்தைத் தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அண்மையில் அல்பெர் கமுய்யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய பிரெஞ்சு தத்துவவாதி Michel Onfray இச்செய்தியை மறுக்கிறார். ரஷ்யர்கள் அல்பெர் கமுய் மீது கோபம் கொண்டிருந்ததென்னவோ உண்மைதான் என்றாலும் அவர்கள்தான் விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதை தான் நம்பமாட்டேன் என்கிறார். தமது மறுப்புக்கு அவர் சொல்லும் காரணம், அன்றைய தினம் கமுய் இரயிலில் பயணம் செய்யத் தீர்மானித்து பயணச்சீட்டை வாங்கிவைத்திருந்தாரென்றும், கடைசி நிமிடத்தில் இரயிற் பயணத்தை ரத்து செய்து தம்முடைய பதிப்பாளர் சகோதரர் மகனுடன் தற்செயலாக பயணம் செய்ய நேரிட்டது என்கிறார். தவிர பயணம் செய்த வாகனம் அல்பெர் கமுய் உடையது அல்லவென்றும், அவரது சொந்த வாகனத்தை அன்றைக்குத் தொடும் எண்ணம் அவருக்கு துளியுமில்லை என்கிறார்.

ஆக அல்பெர் கமுய்யின் அகால மரணத்தின் புதிர் நீடிக்கவே செய்கிறது. அவர் புனைவுகள் அனைத்துமே மரணத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பவை. அடுத்து ரஷ்யாவுடனான பகை திடீரென்று முளைத்ததல்ல. கிழக்கு பெர்லினில் -(1953) ஆரம்பித்த காம்ப்ரேட்டுகளுடனான பகை புதாபெஸ்டுவரை (1956) தொடர்ந்தது. இருவருமே – டெத்திஸமும் கம்யூனிஸமும் கமுய்க்கு எதிராக காய் நகர்த்தியிருக்கக்கூடும் என்பதுங்கூட ஓர் அபத்தமான உண்மைதான்.

ஒரு கவிஞனின் பிறப்பும் இறப்பும்

கவிதை மூலமாக இலக்கிய பிரவேசத்தினை தொடங்குவது அநேகமாக தமிழில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். வெகு சன புத்தியில் குறிப்பாக எழுபதுகளில் இலக்கியமென்பது கவிதைதான் என்ற பார்வை இருந்தது. கதை -தொடர்கதை எழுதுவது என்பது சினிமாவின் நீட்சியாக பார்க்கப்பட்டது. திருமணங்களில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எவர்சில்வரில் கிடைக்கும் தட்டுகள் டம்ளர்களை வரிசை வைப்பவர்களிடையே, மாப்பிள்ளையின் ரசிகத்தன்மைக்கேற்ப (இதில் மணப்பெண்ணையெல்லாம் கணக்கிற்கொள்ள மாட்டார்கள்) எம்ஜியார் படத்தையோ சிவாஜிபடத்தையோ போட்டு வாழ்த்துமடல் தயாரித்து, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ சொல்லிமுடித்தாரோ இல்லையோ மைக்கை வாங்கி வாழ்த்து மடலை வாசிக்கும் வழக்கம் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அநேகருக்கு பள்ளியில் படித்த கவிஞர்கள் மறந்துபோகும், எதுகை மோனையைமட்டுமே இலக்கணமாகக்கொண்டு உள்ளூர் பெண்ணுக்கு காதல் கவிதை எழுத ஆரம்பித்த பயிற்சியில் திருமணங்களில் ஒரு பெரிய வாழ்ந்து மடலையே எழுதி சட்டமிட்டு மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, அச்சடித்த மடலை கல்யாண மண்டபத்தில் சுண்டல்போல விநியோகிப்பதுண்டு. மணப்பெண்ணின் தோழிகளுக்குப் போய்ச்செரவேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள். விநியோகித்து முடித்து ஆண்கள் கும்பலில் உட்கார்ந்தபடி பெண்கள் கூட்டத்தில் அதற்கு வரவேற்பு எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அவ்வப்போது தீனி தேடும் கோழிபோல தலையைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். இவனுகளுக்கு வேற வேலை என்ன? என்று காதுபட முனுமுனுக்கும் பெருசுகளும் உண்டு.
என் நண்பன் ஒருவன் இருந்தான். மஞ்சள் நீர், திருமணம், தேர்திருவிழா நாட்களில் அம்மனுக்கு, இறப்பு நாட்களில் அஞ்சலி யென ஆசிரியப்பாவில் கவிதை எழுதியிருப்பான். ஒரு நாள் ரொம்ப வருத்தப்பட்டான். என்னம்மா ‘இத்தனை கவிதை எழுதிக்கொடுத்துட்டேன்’ என்னன்னுகூட கேட்கமாட்டேங்கிறா? என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழுதிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும்.  என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும்? கல்லூரி மலரிலும், சில வார சஞ்சிகைகளிலும் பார்த்து பரவசப்பட்டதுண்டு.  பின்னர் காலப்போக்கில் சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளின் தரத்தைப் பார்த்து வேண்டாமென்று ஒதுங்கிக்கொண்டேன். அவற்றில் பரவாயில்லை சாதியைச் சேர்ந்தவற்றில் ஒரு சிலதை தளைத்தில் இட்டிருக்கிறேன், அதிலொன்று இங்கே இருக்கிறது, சகிக்க முடிந்தால் மற்றவற்றை வாசியுங்கள்:

ஞாபக அம்மா ‘(1990)

வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்

இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும்
பசிக்கும் வாழ்க்கையில்
பழைய அமுது

நினைவு பதிப்பில்
பிழைதிருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை

சுட்டதும் சுடாததும்
ஞாபகத்தில் உண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அ(வ்)வைக்களிப்பது

ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவிரவாய் அலைந்து
நாய்குட்டி தோழனை
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்

இப்போதும் எனக்குள்
நாய்குட்டிகள் உண்டு
அம்மா?

——-

மோசமான எழுத்தாளர்?

” Cheryl’s mind turned like the vanes of a wind-powered turbine, chopping her sparrow-like thoughts into bloody pieces that fell onto a growing pile of forgotten memories”.

இருபத்தாறு வார்தைகள் ஒர் அரைப்புள்ளி, ஒரு புள்ளி என்ற மூன்று தகுதிகளின் அடிப்படையில் எழுத்தாளர் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் பெயர் சூ ·போண்டரி அமெரிக்காவின் விஸ்லான்சின் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை.

கழகங்கள் அரசியலுக்கு வந்த பிறகு பேராசிரியர்கள் என்ற பெயரைக்கேட்டாலே சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அசலான பேராசிரியர்கள் மன்னிக்கவேண்டும். சூ ·போண்டரி கதைக்கு வருகிறேன். இந்தப் பெண்மணிஓர் எழுத்தாளருங்கூட, அவர் எழுத்தைப் பாராட்டி Bulwer-Lytten 2011பரிசினைத் தந்திருக்கிறார்கள். எல்லா பரிசுகளையும்போலவே இப்பரிசினைத் தீர்மானிக்கும் தேர்வுகுழுவினரும் – கலிபோர்னிய மாநிலத்தைசேர்ந்த சான் ஜொசே பல்கலைகழகத்தைசேர்ந்தவர்கள்-  தங்கள் பரிசுக்கென்று சில தகுதியை வைத்திருக்கிறார்கள்.

அதென்ன தகுதி?

புரிந்துகொள்ள Edward Bulwer-Lytton என்ற எழுத்தாளரை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் பல நாவல்களுக்குச் சொந்தக்காரர், அதிலொன்று ‘The Last days of Pompei’. ‘it was dark and stormy night” என ஆரம்பிக்கும் நாவலின் முதல்வரி வாசகர்களுக்குச் மிகுந்த சோர்வினைத் தரக்கூடிய மோசமான வரியாம். மிக மோசமான எழுத்து என தீர்மானிக்கப்பட்டு 1982ம் ஆண்டு புல்வெர்-லிட்டன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டக் கணக்கு, இப்பொழுது பரவலாக்கப்பட்டுள்ளது. மோசமான வரியை எழுதியவர் என்றவகையில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு இப்பரிசினை வென்றிருப்பவர்தான்  சூ ·போண்டரி. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாக்கியத்தைப் படித்துபாருங்கள். தேர்வுக்குழுவினர் காணும் குறை, ‘புனைவில் வரும் நாயகியின் மனதை காற்றாலையாகவும், நினைவுகளை அவற்றில் அடிபட்டு சிதறும் மைனாக்களோடு’ ஒப்பிட்டிருப்பது. பரிசுகொடுக்க நேர்ந்ததில் பொருத்தப்பாடிருப்பதாகச் சாதிக்கும் சூ இலக்கியம் போதிக்கும் பெண்மணிக்கு இப்படியான தகுதியும் ஒருவகையில் அவசியம் என்கிறார். சூ ·போண்டரி மனத்திடம் கொண்டவராக இருக்கவேண்டும், வேடிக்கையாக இம்முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

————————————————————————-