நாகரத்தினம் கிருஷ்ணா
நண்பர் க.பஞ்சாங்கம் இன்றொரு முதுமகன் ; 75 ஆண்டுகள் அகவையார். எனக்கது வயது சார்ந்தது அல்ல அறிவில், அனுபவத் தெளிவில், மொழியின் தேர்ச்சியில், கலை இலக்கியத்தின் மீதுள்ள காதலில், நித்தம் நித்தம் மொழித் திடலில் அவர் முயற்சிக்கும் சொல்லேறு தழுவலில், இதுவன்றி இங்கு விடுபட்ட பலபண்புகளில் அவர் முதுமகன். இப்பெருமகனாருக்குப் பலமுகங்கள் உண்டு. இல்வாழ்வில் நல்வழி நிலைபெற்ற துணைவன், பெருமிதத்திற்குரிய தந்தை, பெருமைக்குரிய தலை மாணாக்கர்களை பெற்ற பேராசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், தேர்ந்த திறனாய்வாளர், அசலான இடது சாரி சிந்தனையாளர், பாசாங்கற்ற பகுத்தறிவுவாதி, அனைத்திற்கும் மேலாக இனிய நண்பர்.
எனக்கும் அவருக்குமான நட்பும் ஒரு நாயக்கர் வறலாறுதான். கி.ரா என தமிழ் படைப்புகலம் கொண்டாடும் கரிசல் காட்டு நாயக்கரின் தீவிர அனுதாபியான பேராசிரியர் பஞ்சுவின் அறிமுகம், வெங்கிட சுப்புராய நாயக்கர் எனும் பிரெஞ்சு பேராசிய நண்பரால், என்னுடைய கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனும் வரலாற்று புதினத்தால் வாய்த்தது. இப்புதினம் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர், தற்போது காஞ்சிபுரம் கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெ. இராதாகிருஷ்ணன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன் ; அன்று எனக்கு அறுபது வயது. இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. இன்றைக்கு எந்த அரசியலும் எனக்கு உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் பேராசிரியர் க.பஞ்சாங்கம். அவரை, அவரது எழுத்துக்கள் ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை. நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளையும், திறனாய்வு கட்டுரைகளையும் வாசித்து வியந்தவன் ; இன்றும் வியப்பவன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு ; ‘அவை’ அடக்கமல்ல உண்மையும் அதுதான் ; அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் இன்றளவும் ஆச்சர்யங்கள் தொடருகின்றன.
பார்வைக்கு எளியவராகவும், பழகுவதற்கு இனியவராகவும், பண்பிற் சிறந்தவராகவும், படைப்புக் கலைஞராகவும் திகழ்கிற பேராசிரிய நண்பர் தொல் இலக்கியம் நவீன இலக்கியம் இரண்டிலும் தோய்ந்தவர்; இப்படி தமிழில் இருமுனைகளிலும் கரைகண்டவர்களைக் காண்பது அரிது, எனவேதான் திறனாய்வு துறையில் பேராசிரியர் பஞ்சு தனித்துவமானதோர் அடையாளத்தைப் பெறமுடிந்துள்ளது.
கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும் ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவர் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அம்மனிதர் வாசகர் மட்டுமல்ல வாசகருக்கும் மேலானவர், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவர் – ஒரு தேர்ந்த திறனாய்வாளர். ஒரு நல்ல தலைவிக்கு உரிய தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.
இலக்கிய திறனாய்வு என்பது தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள். தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார். பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்தது அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. இன்று நவீன தமிழிலக்கியத்தில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களில் ஆரம்பித்து புதிதாக எழுதத் தொடங்கும் படைப்பாளிவரை, பேராசிரியர் பஞ்சுவின் பார்வை தங்கள் எழுத்தில் மீது விழாதா எனக் காத்திருப்பது, ஏங்குவது பஞ்சுவின் திறனாய்வுகளுக்குள்ள பெருமையை பறைசாற்றும்.
தமிழே வாழ்க தாயே வாழ்க !
அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க !
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க !
என எங்கள் இனிய நண்பரை பாரதிதாசன் தமிழால் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
———————————————————————————————————————
