தற்கொலைகள் (அம்ருதா பிப்ரவரி 2023)

                                                              கி தெ மொப்பசான்

                                                                          தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

                                                             —–

                                                                                                  ….. ஜார்ஜ் லெக்ராண்டிற்கு

ஒரு சில செய்தித்தாள்களில், இதரச்செய்திகள் என்கிற பிரிவின்கீழ்    ஒவ்வொருநாளும் இதுபோன்றதொரு செய்தி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்:

“கடந்த புதன் கிழமை இரவு, ……வீதியில், கதவெண் 40ல் குடியிருப்புவாசிகள் நள்ளிரவில்  அடுத்தடுத்து இரண்டுமுறை வெடித்த  துப்பாக்கிச் சத்தம் கேட்டு விழித்திருக்கிறார்கள்.  சத்தம் மிஸ்டர் எக்ஸ் என்பவர்  குடியிருப்பில் இருந்து வந்திருக்கிறது… பின்னர் கதவு திறக்கப்பட்டுப் பார்த்தபோது, அந்த  அடுக்குமாடி குடியிருப்புவாசி ரத்தவெள்ளத்தில் கிடக்க, அவர் கைப்பிடியில் தற்கொலைக்கு உபயோகித்த கைத்துப்பாக்கி ».  

« “திருவாளர் Xக்கு  வயது ஐம்பத்தேழு,  வசதியான வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் இருந்துள்ளது, எனவே குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. இந்நிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுத்தக் காரணமென்ன, எனபது விளங்காதப் புதிர்.  »

கடுமையான துயரங்கள், நெஞ்சில் ஏற்பட்டக் காயம், ஒளித்துவைத்த  ஏமாற்றங்கள்,  வாட்டிய கவலைகள் இவற்றில் எவை அல்லது எது,  சந்தோஷமான வாழ்க்கைக்குரிய வருவாயிருந்தும் இதுபோன்ற மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கக்கூடும்?  என்ற கேள்வி எழுகிறது. பதிலைத் தேடுகிறோம் : காதல் தோல்வியாக இருக்கலாமென கற்பனை செய்ய முடிகிறது, பின்னர் பணம் ஒரு பிரச்சனையாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது, இறுதியில் திட்டவட்டமாக எதையும் அறியமுடியாதபோது,     இப்படியான மரணங்களுக்கென்று நம்மிடம் இருக்கவே இருக்கின்றன  “மர்மம்” என்ற வார்த்தை.

  இப்படி காரணமின்றி தற்கொலைசெய்துகொண்ட ஒருவரின் மேசையிலிருந்து கடிதமொன்று கிடைத்தது. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி அருகே கைக்குக் கிடைத்த, கடைசியாக எழுதப்பட்ட அக்கடிதம், சுவாரஸ்யமாக இருக்குமென்றும் தோன்றியது. மனிதரின் விரக்தியான இகாரியத்திற்குப் பின்னே ஏதேனும்  பெரும் விபரீதமான காரணங்கள் ஒளிந்திருக்குமோ என நினைக்க, அப்படி எதுவும் தகவலில்லை; பதிலாக அக்கடிதம்  வாழ்க்கையில் ஓயாமல் படும்  சிறு சிறு கஷ்டங்களை,  கனவுகளத் தொலைத்து துணையின்றி காலம்தள்ளிய ஒரு மானுட உயிருக்கு நேர்ந்த சேதங்களைச் சொல்வதாக இருந்தது. மேலும்  இப்படியொரு சோகமான முடிவுக்கு அக்கடிதம் கூறும் காரணத்தை புரிந்துகொள்ள நெஞ்சில் பதற்றமும்  எளிதில் உணர்ச்சிவசப்படும் மனநிலையும்  அவசியம்.     

கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான் :

  «  நள்ளிரவு. இக்கடிதத்தை  எழுதிமுடித்ததும், என்னுடலில் உயிர் தங்காது. ஏன் ? அதற்குரிய காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன். இவரிகளை எனது மரணத்திற்குப்பிறகு பிறகு படிக்கின்றவர்களுக்காக அல்ல, எனக்காக. எனது பலவீனமான தைரியத்திற்குத் தெம்பூட்டிக்கொள்ளவும், தள்ளிப்போடலாம் ஆனால்  தவிர்க்கவியலாது என்கிற அபாயகரமான இதன் தேவைக்கு என் மனதைத் திடப்படுத்திக்கொள்வதற்கும் என வைத்துக்கொள்ளலாம்.

எந்தஒன்றையும் எளிதாக நம்புகிற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் நானும் அப்படிபட்டவனாக இருந்தேன். வெகுகாலம் உயிர்வாழ்ந்த அந்நம்பிக்கைக் கனவு அண்மையில்தான் தனது கடைசி முகத்திரையைக்  கிழித்துக்கொண்டது.

டந்த சிலஆண்டுகளாக ஏதோவொரு வினோதம் எனக்குள் நிகழ்வதுபோன்றதொரு அனுபவம். வைகறை சூரியனைப்போல பிரகாசித்த  கடந்தகால சம்பவங்கள் இன்றெனக்கு மங்கியவைப்போலத் தோற்றமளிக்கின்றன.  அவற்றின் முக்கியத்துவத்தில்  இன்றுநான் காண்பதென்னவோ  கசப்பான சில உண்மைகள்.  அன்பிற்குப் பின்புலத்திலிருந்த உண்மையான காரணம் எனக்கு வெறுப்பினைத் தந்தது,  விளைவாக கவிநயமிக்க மென்மையான உணர்வுகள் விஷயத்திலும் கசப்பினை உணர்ந்தேன்.  

உண்மையில் நாம், தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொள்ளும்   முட்டாள்தனமும் கவர்ச்சியும் மிக்க மாயைகளின் நிரந்தர கைப்பொம்மைகள். ஆகையால் வயது கூடக்கூட கடும் பிரச்சனைகள், பயனற்றமுயற்சிகள், அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள் ஆகியவற்றோடு இணக்கமாகவிருக்க சம்மதித்தேன், இந்நிலையில்தான் இன்று மாலை, இரவு உணவிற்குப்பிறகு அனைத்து இன்மையின்மீதும் ஒருபுதிய வெளிச்சத்தினைக் காணமுடிந்தது.

முன்பெல்லாம் சந்தோஷமாக இருந்தேன். என்னைக் கடந்து செல்லும் பெண்கள், வீதிகளின் தோற்றம், எனது குடியிருப்பு இருக்கும் பகுதி என அனைத்தும் என்னைக் கவர்ந்தன. ஆனால் திரும்பத் திரும்பக் அக்காட்சிகளை காணநேரிட்டதால்,  எனது இதயத்தில் அயற்சியும், எரிச்சலும் நிரம்பி வழிந்தன, அதாவது  நாடகத்திற்குச் செல்லும் ஒரு பார்வையாளனக்கு ஒவ்வொரு மாலையும் ஒரேவிதமான நாடகத்தைக் காண நேர்ந்தால் என்ன நேருமோ அத்தகைய அனுபவம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் படுக்கையிலிருந்து எழும் நேரம் மாறியதா என்றால், இல்லை. பிறகு கடந்த முப்பது வருடங்களாக நான் செல்லும் உணவு விடுதியையும் மாற்றிக் கொள்ளாமலிருக்கிறேன். அங்கு உணவு கொண்டுவரும் பரிசாரகர்களில் மாறியிருக்கிறார்கள், மற்றபடி  உண்ணும்  நேரத்திலும் உணவிலும்  மாற்றங்கள்  இல்லை.

பயணத்தை முயற்சித்ததுண்டா ? உண்டு. ஆனால் புதிய இடங்களில்  தனிமை எனக்குப் பயத்தை அளித்தது. இந்த உலகில், சின்ஞ்னசிறிய ஜீவனாக என்னை உணர்ந்த கணத்தில்,  தனிமை படுத்தப்பட்டதுபோன்ற உணர்விற்கு ஆளாகி, வீட்டிற்குத் திரும்பிவிடுவேன்.  

பிறகு வாங்கிய நாளில் எப்படிப்பார்த்தேனோ அதுபோலவே கடந்த முப்பது ஆண்டுகளாக போட்டது போட்டபடி ஒரே இடத்தில் இருக்கிற வீட்டுத் தளவாடங்களும்,  புதிதாக வாங்கிவந்த மெத்தை இருக்கைளின் தேய்மானங்களும், பொதுவாக ஒவ்வொரு குடியிருப்பும் காலப்போக்கில் ஒருவாசத்தைப் பெற்றுவிடும் என்பதற்கிணங்க குடியிருப்பிலிருந்து  வருகிற  ஒருவித வாசமும், ஒவ்வொரு இரவும், இப்படியொரு வாழ்க்கைமீது மாறாததொரு குமட்டலையும், விளங்கிக்கொள்ளவியலாத ஒருவித துன்பத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன.   

ஆக அனைத்துமே ஓயாமல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. பூட்டிய பூட்டை எப்படி திறக்கிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னுடையை தீப்பெட்டியை எந்த இடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் எடுக்கிறேன், தீக்குச்சியின் பாஸ்பரஸ் பற்றி எரிகிறபோது எனது அறையில் கண்ணிற்படும் முதற்காட்சிவரை அனைத்தும் தப்பிக்கவியலாத சலிப்பூட்டுகிற நிகழ்வுகள் என்பதால் சனலுக்கு வெளியே குதித்து இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டலாமா என்று கூஎட நினைப்பதுண்டு.  

ஒவ்வொருநாளும் முகச்சவரம் செய்துகொள்ளும்போது என்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்ளலாம் என்கிற வெறித்தனமான எண்ணம் வரும், பிறகு கண்ணாடியில்  எப்போதும்போல தெரிகிற எனது முகத்தையும் சோப்பு நுரையோடு அக்கன்னங்களையும் பார்க்கிற்போது அனேக தடவை துக்கம் தாங்காது அழுதிருக்கிறேன்.

முன்பெல்லாம் எந்தெந்த மனிதர்களை மகிழ்ச்சியுடன் சந்திப்பேனோ அவர்களைக்கூட தற்போது சந்திப்பதில்லை. அவர்களை நன்கறிந்தவன், அதாவது  அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு என்னுடைய பதில் என்னவாக இருக்கும், எப்போதும் ஒரே மாதிரியாக  இருக்கிற அவர்களுடையை சிந்தனையை வார்த்தெடுக்கும் கலன் எது, அவர்கள் முன்வைக்கும் நியாயங்களின் நெளிவு சுளிவுகள் எவை ? என்று அனைத்தையும்  அப்போது தெரிந்துவைத்திருந்தேன்.    

 மனிதர் மூளைகள் ஒவ்வொன்றும் ஒரு சர்க்கஸ் கூடாரம், அங்கே தப்பவழியின்றி சுற்றிவரும் விலங்காக இருப்பது ஒரேஒரு குதிரை. முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகளென்று அணுகுமுறைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், வரைமுறைக்கு உட்பட்டே செயல்படமுடியும், பிறகு திரும்பவும் பழைய நிலமைக்குத் திரும்பவேண்டும். முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகள் என அணுகுமுறைகளில் சில வழிமுறைகளை கையாண்டாலும் ஓரள்விற்கே சாத்தியமாகும், பிறகு எப்போதும்போல பழைய பாதையில்   ஓயாமல்  ஒரேவிதமான   கருத்துக்களை, மனமகிழ்ச்சியை, கேலி பேச்சுக்களை, மரபுகளை, நம்பிக்கைகளை, ஒவ்வாமைகளை சுமந்தபடி உழலவேண்டும்.

கடுமையான பனிமூட்டம். அகன்ற வீதிகளையும் அவை மூடியிருக்க, புகை மூடிய மெழுகுவர்த்திகள்போல தெருவிளக்குகள்  எரிந்துகொண்டிருந்தன.  தோள்களில் இதுவரை அறிந்திராத பாரம், உண்டது செரிமானம் ஆகாமல் இருந்திருக்கலாம்.  

உண்பது ஒழுங்காக செரிமானம் ஆக கொடுப்பினை வேண்டும், வாழ்க்கையில் அனைத்துமே அதைச் சார்ந்தே இருக்கின்றன. கலைஞனுக்கு உத்வேகமும், இளம் வயதினருக்கு காதல் ஆசைகளும், சிந்தனையாளருக்குத் தெளிவான எண்ணங்களும்,  அனைவருக்கும் வாழ்க்கைக்கான சந்தோஷமும் நல்ல செரிமானத்தினால் மனிதருக்கு கிடைக்கும் நன்மைகள்.  தவிர நன்றாகச் சாப்பிடவும் மனிதர்க்கு அது உதவுகிறது (இதற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்). நோய்பட்ட வயிறு சந்தேகிக்கவும், நம்பிக்கையின்மைக்கும், கொடுங்கனவுகளுக்கும், மரணத்தின் மீதான விருப்பத்திற்கும் காரணமாகிறது  என்பதை நான் நன்குணர்ந்திருக்கிறேன். இன்று மட்டும் நான் உண்டது  ஜீரணமாகியிருக்குமெனில், ஒருவேளை எனது தற்கொலை எண்ணம் தவிர்க்கபட்டிருக்கக் கூடும்.  

கடந்த முப்பது வருடங்களாக நாள்தோறும் மெத்தை நாற்காலியில் உட்காருவது வழக்கம், அவ்வாறு உட்கார்ந்திருக்கும் நேரத்தில்  பார்வையை என்னைச் சுற்றிலும் ஓடவிடுவதுண்டு, அப்படிச் செய்கிறபோது மிக கடுமையானதொரு வேதனைக்கு ஆளாகி, கிட்டத்தட்ட பைத்திய நிலைக்குப் போவதுண்டு

என்னிடமிருந்தே நான் தப்பினால் போதுமென்றொரு நிலமையில்  அதற்கான யோசனைகளில் இறங்கியதுண்டு. நான் எதையும்செய்யாமல் சும்மா இருந்திருக்கலாம், எதையாவது செய்யலாம் எனப்போக  மிகப் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். மேசை இழுப்பறைகளில் குவிந்துகிடக்கும் காகிதங்களை ஒழுங்குபடுத்த நினைத்தேன்.

எப்போதிருந்து என்பது நினைவில்லை, ஆனால் நீண்ட நாட்களாகவே என்னுடைய மேசையின் இழுப்பறைகளை சுத்தம் செய்ய நினைப்பதுண்டு ; காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த மேசையில் கடிதங்களையும் ரசீதுகளையும் கலந்து கட்டி போட்டுவர, அந்த  ஒழுங்கின்மை அவ்வப்போது எனக்கு கணிசமான மனக்கலக்கத்தை  அளித்து வந்தது. ஆனால் பொதுவாகவே எதையாவது ஒழுங்கு படுத்தவேண்டும் என எண்ணினால் போதும் மறுகணமே எனது உள்ளம், உடல் இரண்டுமே சோர்வுக்கு ஆளாகும், விளைவாக இக்கடினமான பணியைச் செய்ய ஒருபோதும் துணிவதில்லை.

ஆனால் இம்முறை துணிந்து மேசைக்கு முன்பாக  அமர்ந்து இழுப்பறையைத் திறந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றை அழித்துவிடும் நோக்கில், அதற்குரியவற்றை தெரிவு செய்தேன். என்முன்பாக ஆண்டுகள் பலவாக சீண்டப்படாமல் பழுப்பு நிறத்தில் குவிந்திருந்த காகிதங்களைக் கண்டு சில கணங்கள் தடுமாறி, பின்னர் ஒன்றை கையில் எடுத்தேன்.


     நண்பர்களே ! உயிர்வாழ்க்கை மீது நல்ல அபிப்ராயம் உங்களுக்கு இருக்குமெனில் பழைய கடிதங்களின் புதைகுழிகயை ஒருபோதும்  தோண்டாதீர்கள் ! தப்பித் தவறி அப்படியொரு தவறைச் செய்ய நேர்ந்தால்   அவற்றைக் கைநிறைய எடுங்கள் ! எடுத்த மறுகணம் கண்களை இறுக  மூடுங்கள், ஏனென்றால் சட்டென்று பழைய நினைவுகளின் சமுத்திரத்தில் உங்களைத் தள்ள வாய்ப்புள்ள ஒரே ஒரு வார்த்தை, மறந்துபோன  அல்லது பரிச்சயமான சில வரிகள் உங்கள் கண்களில் பட்டுவிடக்கூடும், அதற்காக. அடுத்து நீங்கள் செய்யவேண்டியது, இந்த நச்சுக் காகிதங்களை தீயிலிடுதல், கவனமுடன் செய்யவேண்டும்,எரித்த சாம்பலில் துண்டு துணுக்குக்கூட மிஞ்சக்கூடாது, அவ்வளவும் கண்களுக்கு எளிதில்  புலனாகாத தூசாக மாற்றப்படவேண்டும், தவறினால்  நீங்கள் தொலைந்தீர்கள், என்னைப் போல ! கடந்த ஒரு மணிநேரத்திற்கு முன்பிருந்து என்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்.

என்ன சொல்ல!  முதலில் படிக்க நேர்ந்த கடிதங்களில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை, தவிர அவை அண்மையில் எழுதப்பட்டவை. எழுதியவர்களும் உயிரோடிருக்கிறார்கள், அடிக்கடி அவர்களைச்  சந்திக்கவும் செய்கிறேன், என்பதால் அவற்றை அலட்சியம் செய்தேன். திடீரென கண்ணிற்பட்ட உறையொன்று மெலிதானதொரு நடுக்கத்தைத் தந்ததது. உறைமீது  மிகப்பெரிய எழுத்துகளில் இருந்த எனது பெயரைக் கண்டதும் என் விழிகளில் நீர் கோர்த்தது. என்னுடைய ஆருயிர் சினேகிதன், இளமைக்கால தோழன்,  நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். என்ன ஆச்சரியம், கண்முன்னே அவன் தெளிவான வடிவில் நிற்கிறான்.  எப்போதும்  காணும் இயல்பான புன்னகையை முகத்தில் தேக்கி, கைகள் இரண்டும் என்னை  நோக்கி நீட்டியபடி இருக்கும், அவனைக் கண்டதும்  எனது முதுகுத்தண்டு சிலிர்த்தது. நான் நேரில் அவனைத் திரும்பவும் பார்த்தேன்,  இறந்தவர்கள் திரும்ப வருவார்கள், பொய்யில்லை, உண்மை ! பிரபஞ்சத்தைக் காட்டிலும் நம்முடைய நினைவுகள் ஒரு பரிபூரண உலகம், மரித்த மனிதர்களையும் உயிர்ப்பிக்கக் கூடியது அதொன்றுதான்.

எனதுகை நடுங்கிக் கொண்டிருக்க, கண்ணீர் திரையிட்டக் கண்களுடன் அவன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த அனைத்தையும் வாசித்தேன், விம்மி அழுதுக்கொண்டிருந்த எனது இதயம் காயமுற்றிருக்க,  கைகால்கள் முறிக்கபடும் மனிதரொருவர் வலிபொறுக்கமுடியாமல் தனது வேதைனையை வெளிபடுத்துவதுபோல நானும் புலம்பினேன்.   

நதிமூலத்தைத் தேடி ஒருவர் பயணிப்பதுபோல, எனது கடந்தகால வாழ்க்கையில் பிரவேசித்தேன். பல வருட காலமாக நான் மறந்திருந்த மனிதர்களை அடையாளம் காண முடிந்தது, ஆனால் பெயர்கள் நினைவில் இல்லை. அவர்கள் முகங்கள் மாத்திரம் என்னுள உயிர்பெற்றன. எனது தாயின் கடிதங்களில் அக்காலத்தில் எங்கள் வீட்டில் பணியாற்றிய ஊழியர்களைத் திரும்பக் கண்டேன்.  எங்கள் வீட்டின் வடிவமும் வந்துபோனது, சிறுவயது பிள்ளைகளுக்கென்று ஒருவகை குணமுண்டு, அர்த்தமற்ற சம்பவங்கள் என்கிறபோதும் அவர்களுக்கு அதில் ஒருவகையான ஒட்டுதலிருக்கும், அன்று அத்தகையவற்றையும் நினைவுகூர்ந்தேன்.

அதுமட்டுமல்ல என்னுடைய தாய் அன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப  உடுத்திய ஆடைகளும், அவைதரும் வகைவகையான தோற்றங்களும், அவற்றுக்குப் பொருத்தமாக அடிக்கடி அவள் கையாளுகிற  சிகை அலங்காரங்களும் திரும்பவும் நினைவுகூர முடிந்தது. இறகுபோன்ற மெல்லிய பின்னல் வேலைப்பாடுகொண்ட கவுன் ஒன்றை அவள் சில நேரங்களில் அணிவதுண்டு, அக்காட்சி என் நினைவில்  வந்துபோனது. அதிலும் அந்த ஆடையை அணிந்திருந்த  ஒரு நாள் « மகனே  ரொபெர் !  நீ நேராக நிற்க பழகிக்கொள்ளவேண்டும், தவறினால் கூன்முதுகோடு வாழ்க்கை முழுதும் இருப்பாய் ! »- என எச்சரித்தது, நினைவுக்கு வந்தது.

பிறகு மேசையின் மற்றொரு இழுப்பறையைத் திறந்தேன். எதிரே எனது இளமைக்கால காதல்அனுபவங்களை நினைவூட்டுவதுபோல பாலே நடனத்திற்குரிய ஒரு ஷூ, கிழிந்த ஒரு கைக்குட்டை, ஒரு கணுக்காலுறை, தலைமுடிகள், உலந்த பூக்களென்று வரிசையாக இருந்தன.  என்னுடைய வாழ்க்கையில் இரண்டு காதல்கதைகள், அவற்றின் கதாநாயகிகள் தலை முழுவதுமாக நரைத்து இன்றும் உயிர்வாழ்கிறார்கள், அவற்றை எண்ணிப் பார்த்தபோது, ஒருபோதும் முடிவுறாத கசப்பான துன்பத்தில் மூழ்கினேன். தங்கச்சரிகைபோன்ற கேசங்கள் ஒட்டி உறவாடும் இளம் நெற்றிகள், கைகளின் தீண்டல்கள், உரையாடும் பார்வை. துடிக்கும் இதயங்கள், உதடுகளுக்கு உத்தரவாதம், தரும் புன்சிரிப்பு, தழுவலுக்கு அழைத்துச்செலும் உதடுகள்… முதல் முதல்…., முடியாமல் நீளும் அம்முத்தம் கண்களை மூடச் செய்து, கூடியவிரைவில் உடமையாக்கிக்கொள்ள இருக்கிறோம் என்கிற அளவிடமுடியாத இன்பத்தில், அனைத்து சிந்தனைகளையும்  மூழ்கடித்துவிடும்.

முன்னாள் காதலின் இப்பழைய பிணையப்பொருட்களை கைகொள்ள எடுத்து, அவற்றை  வெறித்தனமான தழுவல்களைக் கொண்டு மூடினேன்.  நினைவுகளால் சிதைக்கபட்டிருந்த என் ஆன்மாவில் அவை ஒவ்வொன்ன்றையும்  அனாதையாகப்பட்ட நேரத்தில் எப்படி இருந்தனவோ அப்படித் திரும்பப் பார்த்தேன்; நரகத்தை விவரிக்க அனைத்து கட்டுகதைகளிலும் சந்திக்கிற, இட்டுக்கட்டிய வதைகளுக்கும் மேலானதொரு கொடுமையான சித்திரவதையை அன்று நான் அனுபவித்தேன்.

இன்னுமொன்று வாசிக்க இருக்கிறது. அது என்னுடையது, ஐமபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய  ஆசிரியர்  சொலவது எழுதுதல் என்ற பெயரில் எனக்கு கொடுத்தது :

« அன்பினிய எனது அம்மாவிற்கு,

இன்றெனக்கு ஏழு வயது. பகுத்தரியும் வயது, எனவே இவ்வுலகிற்கு என்னை நீ கொண்டுவந்தவள் என்கிற வகையில் உனக்கு நன்றி கூற இது உகந்த தருணம்.

உங்களை மிகவும் நேசிக்கும் மகன்  »

                                                                ரொபெர்

எல்லாம் முடிந்தது.  ஒருவழியாக நதி மூலத்தை அடைந்தது போல, எனது ஆரம்பத்திற்கு வந்தாயிற்று. என்னுடைய வாழ்க்கையில்  எஞ்சியிருப்பதை அறிய முற்பட்டதுபோல எனது பார்வையைச் சட்டென்று திருப்பினேன்.  குரூரமான தோற்றத்துடன் ஒற்றை மரமாக முதுமை, அடுத்து காத்திருப்பது தள்ளாமையும், பலவீனமும். ஆக அனைத்தும் முடிந்தது, இன்று நான் யாருமற்ற அநாதை.

என்னுடைய கைத்துபாக்கி மேசைமீது, கைக்கெட்டும் தூரத்தில். தோட்டாக்களை நிரப்புகிறேன்….. ஒரு போதும் உங்கள் பழைய கடிதங்களை  திரும்ப வாசிக வேண்டாம்.,,, »

      ஆக அனேக மனிதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வது, இதுபோன்ற காரணங்களுக்காக. நாமோ  இவ்வாறான முடிவுகளுக்கு   மிகப்பெரிய துன்பங்கள் காரணமாக இருக்கவேண்டுமென நினைத்து வீணில்  நேரத்தை செலவிடுகிறோம்.  

17 avril 1883

அதிரியன் நினைவுகள் (Mémoires d’Hadrien)

ஒரு பிரெஞ்சுப் புதினம். ஆசிரியர் மார்க்கெரித் யூர்செனார். எழுதபட்ட ஆண்டு 1952.

தமிழில் நல்லபடைப்புகளை வரிசைபடுத்துகிறேன் என ஒருசிலர் முன் வருவதை பார்க்கிறோம், அத் தேவ இரகசியம் ஊரறிந்தது, மேற்குலக எழுத்தாளர்கள் இம்மாதியான வம்பு தும்புகளுக்குப் போவதில்லை. அவர்களுக்கு பிற எழுத்துக்களை விமர்சிப்பது வேண்டாத வேலை, காரணம் இங்கே அதற்கென மனிதர்கள் இருக்கின்றனர். படைப்பிலிருந்து விலகி, ஒரு நல்ல படைபினை 99 விழுக்காடு நடுநிலையோடு உள்வாங்கி கனியெது, காயெது என்பதில் தேர்ந்த பத்திரிகையாளர்கள், இலக்கிய அபிமானிகள் அடங்கிய கூட்டம் அது. நார்வே இலக்கியவட்டம் அப்படிபட்ட ஓர் அமைப்பு.

எந்நாளும் உலகில் வாசிக்கபடவேண்டிவையென 100 நூல்களை இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்திய நூல்களில் ராமாயணம், மகாபாரதம், சாகுந்தலம் பட்டியலில் இருக்கிறது. நோபெல் பரிசு பெற்ற தாகூர் பெயரில்லை, ஆனால் சாலமன் ருஷ்டியின் The Midnight children இடம் பெற்றுள்ளது.

பிரெஞ்சு மொழி படைப்புகள் 12 இடம் பெற்றுள்ளன. அவற்றில் தமிழறிந்த ‘அந்நியன்’ -அல்பெர் கமுய் -நாவலும் அடக்கம். எஞ்சியுள்ள 11 நாவல்களில் அதிரியன் நினைவுகள்’ நாவலுமொன்று.

இந்நாவல் ஒரு வரலாற்று நாவல், ஒரு வரலாற்று நாவலை இப்படியும் எழுதமுடியுமாவென எனக்கு பிரம்பிப்பை இன்றைக்கும் தரும் நாவல். அண்மையில் நோபெல் பரிசுபெற்ற அன்னி எர்னோ, மார்கெரித் யூர்செனார் பெயரால் பெற்ற பரிசுக்குப் பின்பே இலக்கிய உலகிற்கு நன்கு அறியப்பட்டார்.

இந்நாவலை கடந்த இரண்டு மாதமாக சொல்வனம் இலக்கிய இதழுக்கென மொழிபெயர்த்து தொடராக வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

தன் வலியும் மாற்றான் வலியும்

                          உலகமக்களில் குறிப்பாக இந்தியர்களை அண்மைக் காலத்தில் வியப்பில் ஆழ்த்திய செய்திகள் இரண்டு: முதலாவது கமலா ஹாரீஸ் என்ற பெண்மணி ஐக்கிய அமெரிக்க நாட்டின் துணை அதிபராக  இரண்டாண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற வரலாற்று நிகழ்வு, அடுத்தது, அண்மையில் ரிஷி சுனக் என்பவர் இங்கிலாந்து பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம்.  இருவரும் இந்தியர்கள் என்கிற அடையாளத்தைக்காட்டிலும் இந்நிகழ்வின் பின்புலத்தில் ஒளிந்துள்ள பொதுவான ஒற்றுமைகள் கூடுதல் கவனத்தைப் பெற்று அரசியல் விற்பன்னர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. காரணம் இருவருடைய மூதாதையர்களுமே இந்தியர்கள், தங்கள் சந்ததிகளுக்கு மகுடம் சூட்டிய மண்ணுக்கு, தேசியம் பேசுகிறவர்களின் மொழியில் சொல்வதெனில் அந்நியர்கள்; இனத்தால், நிறத்தால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருந்தபோதிலும் இவ்விருவரும் இப்படியொரு உயரத்தை எட்டமுடிந்tதது எப்படி?  ஐக்கிய அமெரிக்காவிலாவது அதிபராக ஒர் ஒபாமாவை காணமுடிந்தது, ஆனால் ஐரோப்பா என்றதும், வரலாற்றாசிரியர்கள் முதன்மைபடுத்துகிற, காலனி ஆதிக்கவரிசையில் முன் நிறுத்தப்படுகிற பிரிட்டிஷ் ராச்சியத்தின் பிரதமராக  சர்ச்சில், கல்லகன், தாட்சர், அமர்ந்த அரியாசனத்தில் இன்று அக்காலனிநாட்டிலிருந்து பிழைக்கவந்த குடிமகனின் வாரிசு பிரதமரானது எப்படி ?

       கமலாஹாரீஸ் : தந்தை ஜெமைக்கா நாட்டவர், தாய் இந்தியர். இருவருமே மேற்கல்விக்காக அறுபதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள். பெற்றோர் இருவரும் பிரிந்துவாழத் தொடங்கியதும் இளமைக்காலத்தைக் கனடாவில் கழித்தபின்னர் உயர்கல்விக்கு மீண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்பினார். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்னர் மாவட்ட அரசு வழக்கறிஞர், மாநில அரசு வழக்கறிஞர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.  பின்னர் அரசியலுக்குள் நுழைந்து, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆனார், அமெரிக்க மக்கள் மன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2021 ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், மற்றும் மேலவைத் தலைவர்.

ரிஷி சுணக் : இவருடைய பெற்றோர்களும் கமலா ஹாரீஸ் பெற்றோர்களைப்போலவே அறுபதுகளில் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். தத்துவம், அரசியலில் பட்டம்பெற்றவர். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம், அப்போது தமது வருங்கால மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. மனைவி கணிணித் துறையில் நன்கறியபட்ட இன்போசிஸ் நிறுவனரின் வாரிசு. அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர், மக்களவை உறுப்பினர், உள்துறை அமைச்சர், நிதித்துறை செயலர், நிதித்துறை அமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்.

       இவர்கள் என்றில்லை, மனிதர்களில் ஒருசிலர் மட்டும் அரசியல் அல்லாத பிறதுறைளிலுங்கூட ஆயிரமாயிரம் நட்சத்திர கூட்டத்திடையில் நிலவாக ஒளிர்வதற்குக் காரணங்களென்ன ?

       முயலோ, மானோ அதனதன் இனத்திடையே தனது பலத்தை நிரூபிப்பது, திறனை முன்நிறுத்துவது அதிசயமோ, அபூர்வமோ அல்ல மாறாக ஓர் ஆமை முயலை வெல்வதும், முயல் சிங்கத்தைக் கிணற்றில் குதிக்கச்செய்து வீழ்ழ்த்துவதும் அதிசயமாகிறது, காலங்காலமாக நினைவுகூரப்படும் கதையாகிறது. வரலாறு என்பது சராசரி நிகழ்வல்ல, அரிய செயல். « செயற்கரிய செய்வார் பெரியர் » . கமலா ஹாரீஸும், ரிஷி சுணக்கும் அதைத்தான் செய்திருக்கிறார்கள் தன் வலியையும் மாற்றான் வலியையும் புரிந்து செயற்கரிய செயலைச் செய்து அரியாசனத்தில் அமர்ந்தவர்கள். இவர்களுடையது  ஊமையாக எதிர் தரப்பில் அமர்ந்திருக்கும் பாமர பார்வையாளர்களுடன், தனிமனிதனாக உரையாடலை நடத்த உபயோகிக்கும் அலங்கார அரியாசனமல்ல, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தி, காணவரும் உலகத் தலைவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடக் கிடைத்த அரியாசனம்.

       இதுபோன்ற வெற்றிக்கு இருபடிநிலைகள் தேவைப்படுகின்றன. முதலாவது தன்பலத்தை உணருதல், அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பலத்தை அறிதல்.

« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல் »  என்கிறது குறள்.  இதனைத்தான் சுருக்கமாக ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்கிறது தமிழின் திருமந்திரம். இதனையே சாக்ரடீஸ் ” உன்னையே நீ அறிவாய்” என்கிறார்.

       தன்வலியை உணருதலோ, தன்னை அறிதலோ, உன்னையே நீ அறிவாய் என சாக்ரடீஸ் போதிப்பதோ அனைத்துமே தனிமனிதனின் சுயமுன்னேற்றத்திற்குச்  சொல்லப்பட்டவை, பொருள் அளவில் வேறுபாடுகளற்றவை.

        சாக்ரடீஸ் மேற்குலகின் முதமைத் தத்துவவாதி, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னும் பின்னும் மேற்குலகு பல தத்துவவாதிகளைக் கண்டிருக்கிறது என்கிறபோதும் சாக்ரடீஸ் முக்கியமானவர். «  பல கடவுள்கொள்கைக்கு(Polytheism) மாறாக ஒரு கடவுள்(Monotheism) கொள்கையை முன் வைtக்கிறார், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் » என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர். தமது சிந்தனைக்காக அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டு பலியான மனிதர், சொந்த உயிர்வாழ்க்கையின் முடிவைக்கூட தமது மெய்ஞானத்தின் வழிமுறையில் தேடிக்கொண்டவர். சாக்ரடீஸ் தமது கருத்துக்களை, எண்ணங்களை எழுதிவைத்தவர் அல்லர். வாய் வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டவர், தானறிந்த உண்மைகளை பிறர் கருத்துக்கு உட்படுத்தி தமது சிந்தனையை தெளிவுப் படுத்திக்கொண்ட சிந்தனாவாதி. வள்ளுவன் கூறுகிற « தன்வலியும் மாற்றான்வலியும் » அறிந்து தெளிதலை சாக்ரடீஸ் மெய்ப்பொருள் கூடுதலாக நமக்கு விளக்குகிறது. சாக்ரடீஸ் கண்ட தத்துவம் அல்லது மெய்ப் பொருளுக்கு கிரேக்க மொழியில் மையேத்திக் (Maieutic) என்று பெயர். கிரேக்க தொன்மவியலின்படி மாய்ய(Maïa) என்ற சொல்லுக்கு மருத்துவ தாதியர் என்று பொருள். மகப்பேறின்போது உடனிருந்து உதவிசெய்பவர்கள். சாக்ரடீஸ் தத்துவத்தின்படி கேள்விகள் என்ற மருத்துவச்சி ஞானமென்ற குழந்தையைச் சுகமாகப் பிரசவிக்க-வெளிக் கொணர மனிதனுக்கு உதவுகிறாள். Maieutics என்பது  உள்ளத்திலிருந்து ஞானத்தை பிரசவிக்க உதவும் முயற்சி. ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குள் ஒளிந்துள்ள அறிவை அல்லது ஞானத்தைக் கண்டெடுக்கும் நோக்கத்தை அடிடிப்படையாகக் கொண்டது. மனிதன் தனக்குள் கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு உரியபதிலைத் தேடுதல். தன்னை அறியாமையிலிருந்து விடுவிக்கிற ஒரு படி நிலை. « தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை » என்கிற திருமூலர் வாக்கு அது: தன் பலத்தை, தனக்குள் புதைந்துள்ள அறிவைத் தோண்டி எடுத்தல்.

       சிந்தனையும் உண்மையும்

        சாக்ரடீஸை பொறுத்தவரைசிந்தனையின்(Thought) நோக்கு, உண்மையை அடைதல். சிந்தித்தல், அவருக்கு ஓய்ந்திருப்பதல்ல,தொழிற்படுதல்; எண்ணத்தை வினையாக்கும் வழிமுறை. அவர் கருத்தின்படி அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நேரடிப் பேருந்து இல்லை, பல நிறுத்தங்களில் இறங்கி ஏறவேண்டும், அதற்கு நேரமும் காலமும் பிடிக்கும். சிந்தனையென்பது சரியான விடையைத் தேடிப் போடும் கணக்கு ; படிப்படியாக ஏறி மேற் தளத்தை அடையும் செயல். சிந்தனைக்கு உரையாடலைச் சிபாரிசு செய்கிறார் சாக்ரடீஸ். அதாவது சிந்தனையின் ஆரோக்கியம் உரையாடலைச் சார்ந்தது. சாகரடீஸுக்கு உரையாடல் முதன்மையானது, உரையாடலே உண்மைக்கு வித்திடுகிறது. அவ்வுண்மை கண்மூடித்தனமான நம்பிக்கையை விலக்கி அறிவுடைநிலையை இட்டு நிரப்ப நமக்கு உதவுகிறது.  உண்மை என்பது என்ன ? ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர் வளர்ப்பு, கற்றகல்வி, உற்ற அனுபவம், சமூகச்சூழல், அதன் மரபு, பண்பாடு இவற்றின் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கக்கூடும். அவ்வுண்மை அவரவர் பார்வை சார்ந்த உண்மை. பார்வைக்குத் தெரிந்தது தெரியாதது என இரு பக்கங்கள் உண்டு, எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. அவரவர் கண்பார்வை சக்தியைப் பொறுத்தும் அதுவேறுபடும். பார்வைகுறைபாடு உடைவருக்கு எதிரிலுள்ள பொருள் தெரியவில்லை என்பதால் அப்பொருள் அங்கில்லை என்று பொருளல்ல. கண்ணாடி அணிந்தோ, தொட்டுணர்ந்தோ அப்பொருளை அவரால் அறியமுடியும். உண்மைக்கும் இத்த்கைய எத்தனங்கள் அவசியமாகின்றன. தவிர தனிமனிதர் உண்மை,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கான உண்மை அல்ல. பிரபஞ்ச உண்மை என்பது, எண்ணற்ற மனிதரிகளிடம் பெறப்பட்ட உண்மைகளின் ஒன்றிணைப்பு. ஒவ்வொரு மனிதனிடமும் அடிமனதில் சரியான உண்மை ஒளிந்துள்ளது, காலம்காலமாக மானுடத்தோடு பயணிக்கும் உண்மை அது, உள்ளத்திலிருந்து ஆய்ந்து அதனை அறிதல் வேண்டும், அப்படி அறிந்த உண்மையை உறுதிப்படுத்த உரையாடலும், விவாதமும் அவசியமாகிறது. நமக்குள் உணரும் உண்மையை மேம்படுத்த பிறருடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பூமி உருண்டை, கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை, எல்லாவற்றிர்க்கும் பதிலைத் தேடவேண்டியது நம்மிடம், ஆனால் அப்பதிலை  அவ்வுண்மையைப் பேருண்மையாக்க அல்லது பிரபஞ்ச உண்மையாக புணரமைக்க பிறர் கருத்துக்கு உடபடுத்தவேண்டும். ஒரு பிரச்சனைக்கு பிறர் யோசனையை நாடுவதோ அல்லது பிறர் கருத்தைக் கேட்பதோ நமது இடத்தில் அல்லது நமக்குப் பதிலாக அவரைச் செயல்பட அனுமதிக்கிறோம் என்று பொருளல்ல.  ஒரு பிரச்சனையில் நாம் கண்ட தீர்வு சரியா தவறா  அதில் உண்மையின் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய பிறர்  கருத்து உதவக்கூடும். நாம் தெளிந்தறிந்த உண்மையத் திருத்தி எழுதவும் வலுவூட்டவும் பிறமனிதருடனான உரையாடல்கள் உதவலாம். நாம் எடுக்கின்ற எந்த முடிவும் அதுசார்ந்த உண்மைக்கூறுகளும் எதிர்வினை இல்லாதபோது, நூறு விழுக்காடு சரியானதென்று சொல்வதற்கில்லை. நம் சிந்தனையில் உருவான கலையோ, படைப்போ பூரணம் பெறுவது மறுபக்கம் அதனைக் கையிலெடுத்துக் கொண்டாடும் பிற மனிதர்களின் ஆதரவால், ரசனையால்.                                     

« உன்னையே நீ அறிவாய் ! உன்னிடத்திலுள்ள உண்மையை அறிந்து அவ்வுண்மையை உறுதிசெய்துகொள்ள அண்டையிலுள்ள மனிதர்களிடம் உரையாடலையும் நிகழ்த்து ! » என்பது சாக்ரடீஸ் எழுதிய மனிதர் வெற்றிக்கான சூத்திரம். கிட்டத் தட்ட பூமிப்பந்தின் வேறொரு திசையில் வாழ்ந்து மறைந்த நமது வள்ளுவரும் « தன்வலி, மாற்றான் வலி » என உரைப்பதை இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியக் காலனி ஆட்சியின்போது ஆயிரமாயிரம் காந்திகள் இந்தியாவில் இருந்தார்கள், மோகன்தாஸ் கரம்சந்த் மட்டுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலமை ஏறக முடிந்தது, தன் வலியை, தமது பலத்தை உணர்ந்ததோடு தென்னாப்ரிக்காவில் தன்னிடம் தேடிய உண்மையை அது சார்ந்த உரையாடலை சொல் செயல் இரண்டு வடிவிலும் இந்திய தேசத்திலும், பிட்டிஷ் முடியாட்சியோடும் தொடர்ந்ததன் பயனை பின்னர் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பராக் ஒபாமா என உலகறிந்த மனிதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், இங்கிலாந்து பிரதமர்  ரிஷி சுணக் இருவரும் இனத்தால் நிறந்த்தால் சிறுபான்மையிராக இருந்தும் பிழைக்கச் சென்ற தேசத்தின் பெருமகனாகத் தங்களை அடையாளப் படுத்த முடிந்ததற்கு தன்பலத்தையும்    பிறர் பலத்தையும் அவர்கள் அறியமுடிந்ததே காரணம்.  பெரும்பானமையினரிடமிருந்து அந்நியபட்ட ஒருவரை தமது அரசியல் சட்டம் வகுத்துக்கொண்ட நெறிமுறையின் அடிப்படையில், தலமைக்கு அழைத்துச்சென்ற  பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் அரசியல் நாகரீகத்தை பாராட்டவேண்டும். அமெரிக்க  நாட்டின்  துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் இருவரும் இப்பதவியைச் சம்பந்தப் பட்ட நாட்டின் குடிமக்கள், கட்சிகள், அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்களின் தயவினால், கருணையினால் பெற்றவர்களில்லை கடுமையானப் போட்டியில் தங்கள் திறனை, வல்லமையை எண்பித்து வெற்றிபெற்றவர்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.                                                                                                                                                                       

       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பெருமைப் பட்டுக்கொகிற இந்தியாவிலும் நாளை இப்படியொரு அதிசயம் சாத்தியமா ? இங்கே காலங்கலமாய் ஆதிக்க சக்திகளிடம் அடிமைப் பட்டுக்கிடக்கிற மக்களை விடுவிக்க, அந்நய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட  ஓர் இந்தியப் பிரஜை அல்லது  சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்த அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஓர் இந்தியர் அல்லது மக்கள் எண்ணிக்கையில் பெரும்பானமையினராக இருந்தும்  ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே செத்துமடிகிற கூட்டத்திலிருந்து ஒருவர் அதிகார பலத்துடன்  இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவோ, குறைந்தபட்சம் குக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ;  தேர்வு செய்யும் கண்ணியம்  அல்லது பெருந்தன்மை ( ஒதுக்கீடுகளின் தயவின்றி ) நமக்குண்டா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும் ; இங்குள்ள சிறுபான்மை மக்களிடை அல்லது ஒடுக்கபட்ட சமுதாயத்தின் தலைவர்களிடையில் தங்கள் பலத்தை அறியும் ஆர்வமும், அறிந்த பின் பிறர்வலியறிந்து தங்கள் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பும் இருக்கிறதா என்பதுங்கூட இங்கு கேள்விக்குறி.  « எனக்கு ஒரு எம்.பி சீட் போதும், மத்திய அரசில் ஓர் அமைச்சர், கட்சிக்கு  பத்து எம். எல். ஏ. சீட்டுகள், சிறுபானமை வாரியத்துக்கு ஒரு தலைவர்பதவியென வாய்க்கரிசி போட்டால் போதும் தங்கள் சன்னதிக்குவந்து மொட்டைபோட்டுக்கொள்ள தயார் » என்கிற கொள்கைப் பிடிப்பாளர்களுக்கு, அதிகார வர்க்கம் கருணைவைத்தால் கவர்னர் ஆகலாம், ஜனாதிபதியாக கூட ஆகலாம் என்கிற கனவுடன் அரசியல் செய்பவர்களுக்கு « தன்வலியும் மாற்றான் வலியும் » நூறுவருடம் ஆனாலும் தெரியவர வாய்ப்பில்லை.

நன்றி : காற்றுவெளி மார்கழி 2022


மொழிவது சுகம் : அவ்வை நடராசன்

« அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.  மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு…….. »

மேற்கண்டவை மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரில் « அதிரியன் நினைவுகள் நாவலில் வரும் சிலவரிகள் (சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம்)

Xavier Debell என்கிற 35 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர், சர்க்கரை நோயினை அலட்சியம் செய்ததின் விளைவாக கடந்த ஒரு மாதகாலமாக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து, நலமுடன் வீடு திரும்பிவிடுவார் என்ற நிலையில், நவம்பர் 11 அன்று இறந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் இறுதிச் சடங்கு நடந்துமுடிந்தது. அவர் இழப்பு எனக்குப் பேரிழப்பு, இன்றுவரை அதிலிருந்து மீளவில்லை. வாரத்தில் ஒரு முறையேனும் சந்திப்போம். முரண்பாடுகள் நிறைய, இருந்தும் ஆழமான நட்பு. இந்திய நண்பர்கள் ஒரு சிலரும் அவரை அறிவார்கள்.

இந்நிலையில் நேற்று அவ்வை நடராசன் மரண செய்தி, நண்பர் பஞ்சுமூலம் கிடைத்தது. என்னுடைய ஆரம்பகால கவிதைநூல்கள் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு முதன்முதலில் தலைமையேற்று வெளியிட்டவர் அவர். புதுச்சேரியிலும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமை தாங்கி வெளியிட்டிருக்கிறார். அவ்வை அறிமுகம் புதுவை வருமானவரித்துறை மேனாள் இயக்குனர் இராமதாசு அவர்களால் வாய்த்தது. ஈரோடு தமிழன்பன், சு. சமுத்திரம், கலந்துகொள்ள அவர் தலைமையேற்ற ஒரு நிகழ்வு சென்னை ஒய்.எம்.சி.எ. அரங்கில் நடந்தபோது, “அம்மா உன் சிறுகதை குறித்து இரண்டொடு வார்த்தைகள் பேசவேண்டுமாம் ” என்றவர் « இதுபோன்ற மேடைகளில் அவர் பேசியதில்லை, இருந்தும் உன்னுடைய சிறுகதைகள் பற்றி வரும்போதுகூட பேசிக்கொண்டுவந்தார் » என்று குறிப்பிட்டு மருத்துவரான அவர் துணைவியார் தாரா அவர்களையும் மேடையேற்றினார். அண்மையில்கூட நண்பர் பஞ்சாங்கத்துடனும் பிற நண்பர்களுடனும் அவ்வை அவர்களை ‘தாரா இல்லத்தில்’ சந்தித்தோம். அவ்வை நல்ல சுவைஞர், கடல்போல தமிழறிவு இருந்தும் தந்தையைப்போல தமது அறிவு நலத்தைப் அச்சிலேற்ற தவறிவிட்டார், பண்பும் அன்பும் ஒருசேரப்பெற்ற தமிழறிஞர்.

உண்மை இல்லாதை புனைவு ஏது – 2: புதுச்சேரி முதல் தூத்துக்குடிவரை – துப்பாக்கிச் சூடுகள்

உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் காணாதவகையில் இங்கே துப்பாக்கியை அதிகாரம் கூடுதலாகக் கையிலெடுப்பதன் காரணத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக என ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்த கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவகையில் இவையும் Encounter Killings அல்லது Extrajudicial killings வகைமை சார்ந்தவைதான். துப்பாக்கிச்சூடுகள் மட்டுமல்ல, 1970களில் அறிவு ஜீவிகளின் அசீர்வாத த்துடன் நடந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக உதயகுமார் வகை மரணமும் அதிகாரத்தின் அத்துமீறலுக்கு உதாரணமாகச் சொல்லப் படவேண்டியவைதான்.

லா போயெஸி ( La Boétie) பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவாதி அவர் ஒரு பக்கம் முழுமையான அதிகாரத்தையும்( le pouvoir absolu)மறுபக்கம் அடிமைத்தனத்தையும்(La servitude) நிறுத்தி தனது கருத்தியலை முன்வைக்கிறார். அவரைபொறுத்தவரை மனிதர்களிடமுள்ள இயல்பான அடிமைப் பண்பே முழுமையான அதிகாரத்தை தமது எஜமானர்களுக்கு கையளிக்கிறது. அதற்கு கைமாற்றாக , கையூட்டாக அது அதிகாரத்திடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறது. பசிக்குச் சோறு, உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதம், ஊதியம், சலுகைகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தும் அவர் கருத்துப்படி கைக்கட்டி வாய்புதைப்பதற்கு கிடைக்கும் கூலிகள், கடைசியாக நமக்கேன் வம்பு என்கிற கூட்டமும் இதற்குள் வருகிறது. கிடைக்கும் எலும்புத் துண்டுக்கு வாலைச் சுருட்டிக்கொண்டுஅதிகாரத்தின் காலடியில் சுருண்டுகிடக்க அடிமைகள் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காத்திருப்பதுதான் பிரச்சனை.

இறந்த காலம் நாவலிலிருந்து…..

புதுச்சேரி, ஈஸ்வர வருடம் சித்திரைமாதம் 23ந்தேதி (1937 ஆம் வருடம் மேமாதம்  5ந்தேதி)

அன்பிற்கும் பாசத்திற்குரிய அக்காளுக்கு தம்பி சதாசிவம் வணக்கத்துடனும் அன்புடனும் எழுதிக்கொண்டது.

இங்கு நம்முடைய அப்பா, அம்மா, நான் எனது சம்சாரம், பிள்ளை வெங்கட்ராமன் பாகூர் சித்தப்பா சித்தி, மற்றும் யாவரும் ஷேமம். அதுபோல உன்னுடைய நலனையும், மாமா, பிள்ளைகள் ஷேமத்தையும் அறிய ஆவல். இக்கடித த்தை மிகவும் தாமதமாக எழுதுகிறேன் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன

தம்பி சிங்காரவேலுவை நீ பார்த்த தகவல் தெரியவந்த பின் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. யாரையாவது அவன் திருமணம் செய்துகொள்ளட்டும், நல்லபடியாக ஊர்வந்து சேர்ந்தால் சரி. ஒரு சில தமிழர்கள் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நம்ம தேசத்துக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள் என்று, கடித த்தில் இருந்த வரிகளைப் படிக்க கஷ்டமாக இருந்தது. அப்படி எதுவும் சிங்காரவேலு விஷயத்தில் நடந்துவிடக்கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை. அம்மா சிங்காரவேலு பெண்டாட்டியின் கழுத்தில் மாங்கல்யம் இருக்கிறதா? நம் குலவழக்கப்படி செய்துகொடுக்க தட்டார்கள் இருக்கின்றார்களா, இல்லையெனில் யாராவது வந்தால் செய்துகொடுத்தனுப்பலாமா, ஒழுங்காய் வந்து சேருமா என்றெல்லாம் கேட்டாள்.  மாரி அம்ம்மன் கோவிலுக்கு அவர்களை வரவழைத்து அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டும்படி நீ வற்புறுத்தவேண்டும் என்பதும் அம்மாவின் விருப்பம். அவள் கூறியதை அப்படியே எழுதிவிட்டேன்.

 இதற்கிடையில் ஒர் அமங்கலச் செய்தியையும் உனக்குச் சொல்லவேண்டியக் கட்டாயம்.  உன்கடிதம் கிடைத்த பிறகு புதுச்சேரியில் பல அசம்பாவிதச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறிவிட்டன. எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசிக்கிறேன். அப்பா பின்வாசல் கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டார், புத்தூருக்கு அழைத்துச் சென்று கட்டுகட்டவேண்டியிருந்தது. வாயதாகிவிட்டதால் எலும்பு கூடுவதற்கு நாளாகும் என்று வைத்தியர் சொல்கிறார். அப்பா தைரியமாக இருக்கிறார்.  அம்மா வழக்கம்போல மூக்கைச்சிந்திக் கொண்டிருக்கிறது. அம்மாவின் குணம் உனக்குத் தெரியாதா. தன் கவலைகளையெல்லாம் மருமகள் மீது காட்ட, அவள் என்னிடம் புலம்புகிறாள். அம்மா உனக்கு மட்டுமே பயப்படுவாள். நீ இங்கில்லை என்றானது அவளுக்கு மிகவும் சௌகரியமாகி விட்டது.

     இரண்டாவது, சித்தப்பா பெண், வடிவு குடும்பச் செய்தி. அவள் புருஷன் கெபெலே ஆலையில் தறி ஓட்டுபவராக வேலைசெய்கிறார் என்றும் குடும்பம் சாரத்தில் இருப்பதாகவும் உனக்கு எழுதியிருந்த ஞாபகம். அந்த மனுஷன் ஆலைத் தொழிலாளர்கள் நட த்திய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார். அது பெரும் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை அடக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் அவரும் ஒருவர். இளம் வயது, உழைப்பாளி. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாடார். வெத்திலைப்பாக்கு பீடி புகையிலை லாகிரிவஸ்துகள் என்று எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  ஆடிமாதம் வந்தால் ஒரு வருடம் ஆகபோகிறது. அவன் போனது ஒரு பக்கம் எனில் அந்தப் பெண்ணின் முடிவை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.  புருஷன் செத்த மூன்றாம் நாள் பாகூர் சென்றிருந்தேன். இளம்வயதில் தாலியைப் பறிகொடுத்துவிட்டு, கையில ஒண்ணு வயிற்றில ஒண்ணுன்னு, பாக்க சகிக்காம திண்ணையில வந்து உட்கார்ந்துட்டேன்.  ஆனால் அதற்கடுத்த மூன்றாம் நாள் கைக்குழந்தையோடு கிணற்றில் குதித்து விட்டாள், பாதகி. முடிந்தவரை அழுதிருக்கிறாள், இனி தனால் முடியாது என்று நினைத்தாளோ என்னவோ.

புதுசேரியில் அந்தக் காலந்தொட்டு நடந்த மிகப்பெரிய தொழில் நெசவுதான். சிலருக்குக் குலத்தொழிலும் அதுதான். பரம்பரை பரம்பரையாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் ஏராளம். நம்ம குடும்பத்தில்தான் இந்தத் தலைமுறையில் அதை மறந்துட்டோம். நம்முடைய உறவினர்கள் பலருக்கும் அதுதான் தொழில்: சாயம் போடுதல், பாவு, இழைகளில் சிக்கெடுத்தல், கஞ்சிபோடுதல், என்று நாள்முழுக்க வேலை இருக்கும். புருஷன் பொண்டாட்டி பிள்ளைகளென ஒரு குடும்பத்தில் இருக்கிற அத்தனைபேருக்கும் வேலை இருந்தது.  ஐரோப்பாவில் நம்முடைய நுணுக்கமான நெசவு ஆற்றலைப்பார்த்து அப்படி வியப்பார்களாம். கட்டுகட்டாக ஏற்றுமதி ஆயின. இந்த நிலமையில்தான் எங்கெல்லாம் கைத்தறி அதிகமோ அப்பகுதியில் நெசவாலைகளைக் கட்டினார்கள்.  பிரிட்டிஷார் அகமதாபாத்திலும், பம்பாயிலும் ஆலைகளைக் கட்ட, பிரெஞ்சுக்காரன் எங்கே போவான் ஒன்றுக்கு மூன்றாக ஆலைகளைப் புதுச்சேரியில் கட்டினான். உழைப்பதற்கு ஏழை சனங்கள் மலிவாகக் கிடைத்தார்கள்.  ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை, மாதத்திற்கு 24 நாட்கள் உழைக்கவேண்டும். இந்த நிலமையில்தான் உலகில் எங்கோ ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இங்கிருந்த சென்ற துணிகளின் விற்பனையைப் பாதித்ததாம். அந்த நட்டத்தை சரிகட்ட நம்முடைய தொழிலாளர் ஊதியத்தைக் குறைத்தனர்.

30 களின் தொடக்கத்தில் பிரான்சு நாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட பின்னர் பிரான்சு அரசாங்கம் முதலாளிகள் தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதன் அடிப்படையில் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி சில சலுகைகளை வழங்க இருந்தது. அதேவேளை பிரிட்டிஷ் இந்தியா ஆலைத் தொழிலாளிகளுக்கும் வேலை நேரம், பணி ஓய்வுக்காலம் ஆகியவற்றில் சில சலுகைகள் கிடைத்திருக்க, புதுச்சேரியும் பிரான்சு தேச காலனி நாடுதானே குறைந்தபட்சம், சமீபத்திய ஒப்பந்தப்படியேனும் கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்கும் எனப் புதுச்சேரி ஆலைத் தொழிலாளிகள் எதிர்பார்த்தனர்.  கிடைக்காதெனத் தெரியவந்ததும் ரோடியர் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையில் ஒரு தொழிலாளிக் கொல்லப்பட அதன் எதிரொலியாக சவானா ஆலையிலும் கெபெலே ஆலையிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் தொடங்கியது. நிர்ப்பந்தம் காரணமாக ரோடியர் மில் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து ஆலைகளுக்குள் மறியலில் ஈடுபட்டும் அரசாங்கமோ, நிர்வாகமோ பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற கோபம் தொழிலாளர்களுக்கு, அதிகாரத்தின் சக்தியை தொழிலாளர்கள் உணரவில்லையென அரசுக்குக் கோபம், இந்நிலையில் ஆலைக்குள் நடந்த சில அசம்பாவிதங்களை சாக்காக வைத்து, உள்ளூர் போலீசாரும், இதற்கென தருவிக்கபட்டிருந்த பிரெஞ்சுகாலனி பிறபகுதி போலீசாரும் ஜூலை 30 1936 காலை எட்டுமணிக்கு போராடிய தொழிலாளிகள் மீது நடத்திய துப்பாகி சூட்டில் ஒருத்தன் ரென்டு பேரில்லை பன்னிரண்டு பேரை சுட்டுக்கொன்றார்கள். ஏதோ காக்கா குருவியைச் சுடுவதைப்போல.

 அன்றைய தினம் புதுச்சேரியே அல்லோலகல்லோலப்பட்ட து.   வீல் நுவார் என்று சொல்லப்படும் புதுச்சேரியின் மேற்கு பகுதியில் அதிகம் இந்த ஆலை சனங்கள்தானே. எங்கு பார்த்தாலும் அழுகுரல். பலர் அதிகாரத்திற்கு பயந்து கதவை அடைத்துக்கொண்டு வீட்டில் கிடந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ஏன் சுட்டார்கள் எதற்காகச் சுட்டார்கள் என்று கேள்வி.  

சுட்டவனும் மனுஷன் சுடப்பட்டவனும் மனுஷன். சீதையை இராவணன் கொண்டுபோனான், நியாயமா பார்த்தா அது இராமன் இராவணன் சண்டை.   இராவணனிடத்தில் ஆரம்பத்திலேயே இராமன் ஒற்றைக்கு ஒற்றையா நின்றிருக்கனும். சண்டை போட்டிருக்கனும் அத்தனை சக்தியும் இருக்கிற மனுஷன் எதற்காக வானர சேனையையெல்லாம் மடிய விட்டார், அந்தப்பக்கம் இராவணன் செய்த தப்புக்கு எதற்காக இந்திரஜித், கும்பகர்ணனெல்லாம் மடியனும். பாரதத்திலேயும் அதுதானே நடந்தது பங்காளிச் சண்டைக்கு சம்பந்தமில்லாத சனங்கள் இரு தரப்பிலும் வெட்டி மடிந்தார்கள். இவர்களை இப்படித்தான் பார்க்கனும்: இராமன் இராவணன் துரியோதனன் தருமன் இவர்களெல்லாம் அதிகார சாதி, இவர்களுக்காக ஏதேதோ காரணங்களால் தன் பெண்டாட்டிப் பிள்ளைகளை மறந்து வீரமரணமென்ற பெயரில் செத்து மடிந்த பைத்தியக்கார மந்தையெல்லாம் சேவக சாதி.

 கோவலனைச் சிரச்சேதம் செய்த கொலையாளிக்கும் கொலையுண்ட கோவலனுக்கும் வரப்பு சண்டையா வாய்க்கால் சண்டையா.  பிரான்சு தேசத்துல அனத்தோல் தெய்பிளெர் என்று ஒரு கொலையாளி இருக்கானாம். அவன் வேலை, கொலைதண்டனை பெற்றவர்களின் தலையை கில்லெட்டினால் சீவுதல். ஒருத்தர் இரண்டுபேரில்லை, இதுவரை நானூறு மனிதர்களின் தலைகளைத் துண்டித்திருப்பதாகக் கேள்வி.  அவனால் கொல்லபட்டவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள் இல்லை. அவனைக்கொல்லச் சொல்லி ஆணையிட்ட அதிகாரத்தின் எதிரிகள். அதை நிறைவேற்றினால்தான் கொலையாளியின் ஜீவனம் நடக்கும். அய்ய்யோ என பரிதாபப்பட்டால், கொலையாளி தலை மறுநாள் உருளும். அதிகாரம் உத்தரவு இடுகிறபோது அதனை நிறைவேற்ற அன்றைக்கு கத்தி, இன்றைக்குத் துப்பாக்கி. நீ வெட்டு, நானிருக்கிறேன் என்றது முடியாட்சி.  நீ சுடு நானிருக்கிறேன் என்கிறது இன்றைய அரசு. நான் பார்த்துகொள்கிறேன், உனக்கு எந்தச்சிக்கலும் வராமல் நான் பாதுகாக்கிறேன் என்கிற உத்தரவாதத்தை அதிகாரம் தருகிறபோது, 12 பேரைஎன்ன 12000 பேரைக்கூட கூலிப்படைகள் சுடும்.  

அண்ணனாவது தம்பியாவது, குருவாவது, குருகுலவாச சினேகிதனாவது, பாணத்தைவிடு நான் இருக்கிறேன், என்று அதிகாரத்தின் அவதாரமாக கண்ணன் சொல்லலையா? தம்பி சிங்காரவேலு, தனக்கு வாழ்க்கைக் கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இரத்தவரி செலுத்துகிறேன் என்ற பெயரில் துப்பாக்கி எடுத்தான். கர்ணன், துரியோதனன் எதிரிகளைக் குறிவைத்த அதே காரணம்.  சிங்காரவேலுவால் போரிலே சுட்டுக்கொல்ல இருக்கும் மனிதர்களுக்கும் அல்லது இவனை சுடுவதற்கு போர்முனைகளில் காத்திருக்கும் மனிதர்களுக்கும் பகையா என்ன? அதிகாரம் தனது எல்லைகுறித்த பிரச்சனைகளில் ஏவலர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.  அடிமைகளை மோதவிட்டு அதிகாரம் பாதுகாப்பாக வாழக் கற்றிருக்கிறது. கொல்லப்பட்டசேவகத்தின் பெண்டாட்டிப்பிள்ளைகள் திக்கின்றித் தவிக்க, அதிகாரம் தன் மனைவி மக்களுடன் சொகுசாக வாழ்கிறது.  உன் சித்தி மகள்கூட நடு வீதியில், தலை விரிகோலமாக மண்ணை வாரி இறைத்து சபித்தாளாம். அழுதழுது தொண்டைகட்டியிருந்ததால் வார்த்தைகள் இல்லை. வாயிலிருந்து வெறும் காற்று மட்டுமே. “எந்தச் சாமியும் இறங்கிவந்து கேட்காது, அவளை வீட்டுக்குள்ளே இழுத்து போங்க”, என்றாராம் கூடியிருந்த கும்பலில் ஒரு நபர்.  அடிமைகளைக் காப்பாற்றக் கடவுள் வர வேண்டாம், ஆனால் அதிகாரத்தைத் தண்டிக்க கடவுள் வரவேண்டும். சில நாட்களாக அப்படிப்பட்ட மனநிலையில்தான் நான் இருக்கிறேன்.

அந்தக் காலத்திலாவது அதிகாரமும் ஒரு கட்ட த்தில் ஆயுதம் எடுத்து தனது எதிரியோடு நேருக்கு மோதியதைக் காப்பியங்களிலும் வரலாற்றிலும் படித்திருக்கிறோம்.  இராமயணத்திலும், மகா பாரதத்திலும் அதுதானே நடந்தது. அப்படியொரு நெருக்கடி, மாற்றம் இன்றைய அதிகாரத்திற்குள்ளும் நிகழவேண்டும். இறந்தால் நாட்டைக் கவனித்துக்கோள்ள துணை அதிபரோ துணை பிரதமரோ இருக்கிறார் என்பதால் (நடப்பதுதானே?) போர்முனையில் ஆயுதம்  ஏந்தி  எதிரிநாட்டு  பிரதமர் அல்லது  அதிபரோடு, ஒரு நாட்டின்  பிரதமர் அல்லது அதிபர் மோதவேண்டுமென அரசியல் சட்டத்தை திருத்தட்டும்,  உலகில்  யுத்தங்கள் இல்லாதொழிந்துவிடும்.  

கடித த்தின் தொடக்கத்தில் எழுதியிருந்த ஷேமங்களின் பின்னே இவ்வளவு விவகாரம் இருக்கிறது. சில சமயம் கடிதங்களே எழுதிக்கொள்ளாமல் இருப்பதும் நல்லதென்று படுகிறது. பிழைக்கப்போன நாட்டில் சொந்த மண்ணைக்காட்டிலும் கூடுதல் பிரச்சினைகள் இருக்கலாம். இந்தோ- சீனா மக்களுக்கும் நீங்கள் அந்நியர்கள். ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் நீங்கள் அந்நியர்கள். அந்த வாழ்க்கை மனதைப் பாதிக்கக் கூடும். ஆறுதல் அளிப்பதைப்போல சிங்காரவேலு குடும்பம் இருக்கிறது. நீ அவனுக்கும், அவன் உனக்கும் துணை அதற்குப்பிறகுதான் மாரியம்மன் துணையெல்லாம்.  மாமாவையும் விசாரித்த தாகச் சொல்.

இப்படிக்கு

தம்பி சதாசிவம்.

 ———————————————————————

உண்மை இல்லாத புனைவு ஏது – 1

அன்மையில் இரணடு சம்பவங்கள் விசாரணக்குட்படுத்தப்பட்டு அறிக்கைகள் செய்தியாக வெளிவந்தன. எழுத்தென்பது எழுதப்படும் காலத்தின் அரசியல் சமூக போக்கை, விமர்சிக்ககவும் கடமை ப் பட்டுள்ளது.

இக்கணத்தில் வாசக நண்பர்களுக்கு ரணகளம் நாவலின் முதல் அத்தியாயத்தைப் பகிரிந்து கொள்வது சரியென பட்டது

எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் வாயிலில் திரண்டிருந்த பெருங்கூட்டத்தையும்,  ஈக்கள் கூட தங்களை மீறி நுழைந்துவிடக்கூடாது என்பதைப்போல பொறுப்புடன் பணிசெய்த காவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணி நேர செவிலியர்கள், தனக்கு வேண்டியவர்களைத் தவிர அந்நியர் எவரும் அக்காளைச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கனகம் ஏற்பாடு செய்திருந்த மனிதர்களென அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிச் சாமர்த்தியமாக அக்காள் படுக்கையிற்கிடந்த  மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தான். இனி அக்காளின் கட்டிலைக் கண்டுபிடித்து அக்காள் ‘உயிரை’ விடுவிக்கவேண்டும்.

நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் வேளையில் சித்திரகுப்தன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம்’ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி’ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று. தொழுவத்தில் சாணம், கோமியம், கோரைப் புற்கள் கலவையிற் படுத்திருந்த எருமைக்கிடாவைக் குளத்தில் இறக்கித் தேய்த்து கழுவி மறுகரைக்கு  நீந்தவைத்து கரையேற்றி அழுந்தத் துடைத்தபோதும்  மிஞ்சியிருந்த நீர்த்திவலைகளை ஒற்றியெடுக்கமறந்து அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகள் உறிஞ்சிய சோமபான வாடையையும், ஆடைகளிற் படிந்திருக்கும் அத்தர் ஜவ்வாது மணத்தினையும், எருமையின் அடிவயிற்றில் கெட்டியாய் ஒட்டிக்கிடந்த சாணிப் பொருக்குகள் முடக்கியிருந்தன.  கடந்த  சில வருடங்களாகவே எமனுக்கு தனதுவேலை குறித்து அதிருப்தி இருக்கிறது.  எத்தனைகாலம் மனைவியுடன் சல்லாபம் செய்வதற்குக்கூட நேரமின்றி மானுட உயிரை எடுப்பது, அலுத்துவிட்ட து.  திரும்பவும் பூமியிற் பிறக்க விண்ணப்பிக்கலாமென்று தோன்றியது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தொழிலையும், தன்னையும் நவீனப்படுத்தும் யோசனை இருக்கிறது.  சியாமளாதேவி  இடத்தில் வேறொரு தேவி; தண்டம், பாசக்கயிறுக்குப் பதிலாக புதியவகைஆயுதம். ஒருநாள் போல அணிகிற பட்டு வஸ்திரம், பதக்கங்கள், கிரீடம் முதலானவற்றைத் தூர எறிந்துவிட்டு, இன்றைய நாகரீகத்திற்கேற்ப கோட்டு சூட்டு, எருமைக்குப் பதிலாக நவீன மோஸ்தரில் ஒரு வாகனமென்று ஆசைகள் நிறையவே இருக்கின்றன.  

கடந்த சில வருடங்களாக அவனுடைய வேலை பளு குறைந்து வருவதையும் மறுக்கமுடியாது.  ‘காமா சோமா’ உயிர்களுக்கு பூலோகத்தில்  தற்போது உத்திகளும், வழிமுறைகளும் ஏராளம். எமனுடைய சேவைக்காக மனிதர்கள் எவரும் காத்திருப்பதில்லை. மானுடர்களில் அநேகர் தம்முடைய உத்தியோகத்தின்மீது  கண் வைத்திருப்பது அவனுக்கு நன்றாகத்தெரியும். தீவிர சுதந்திர அபிமானிகளில் சிலர், பிறர் உயிரைப் பறிக்கிற சுதந்திரமும் வேண்டுமென்று போராட இருப்பதாகக் கேள்வி.  இருந்தும் இவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், அத்தனை சுலபத்தில் போவேனா என்று அக்காளின் ஜீவனையொத்தவையும் இருக்கவே செய்கின்றன. உறக்கத்திலிருந்த கும்பகர்ணனை யுத்தத்திற்கு எழுப்பியதும், பாதி சம்போகத்தின்போது  உத்தியோகத்திற்குத் திரும்ப தமக்குள்ள நிர்ப்பந்தமும் எமனுக்கு ஒன்றுதான்.   காரியம் முடிந்த உடனே காலவிரையமின்றி  எமலோகம் திரும்பவேண்டும்  சியாமளாதேவியை மஞ்சத்தில் சாய்த்து.. பாதியில் விட்டு வந்த சம்போகத்தைத் தொடரவேண்டும். எமன் கௌபீனத்தை இறுக்க மறந்திருந்தான், வழியனுப்ப கையை அசைப்பதுபோல  எருமை இருமுறைக்  கொம்புகளை அசைத்து, நாசி, மலதுவாரங்கள் ஊடாக தனது ஒவ்வாமையை வாயுவாக வெளியேற்றியதும், ஒருமுறை உடலைச் சிலிர்த்து மீண்டும் நடக்க ஆரம்பித்தது.

பகலில் தற்போதெல்லாம் அடிக்கடி  போக்குவரத்து நெரிசல்கள். சாலை மறியல்கள்.இரவுகளில் அம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதில்லை, குறித்த நேரத்தில் உயிரைப் பறித்து திரும்ப சௌகரியம்.    இவன் வரவை  எதிர்பார்த்து இரவில், அகால வேளைகளில்  தெருநாய்களின் ஓலம், நரிகளின் ஊளை; ஆந்தை, கோட்டான்களின் அலறல் போன்றவை வெகுகாலந்தொட்டு  கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள், அவைகள் இன்றில்லை என்பது ஒரு குறை. எங்கோ ஒரு கழுதை மட்டும் ஆரோகணத்தில் தொடங்கி  அவரோகணத்தில் முடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு, கால அட்டவணைப்படி  அக்காளின் உயிரைப் பறிக்கச் சாத்தியமா என்ற சந்தேகம் திடீரென எமனுக்கு வந்தது. அக்காள்  நலம் பெறவேண்டும் என்பதற்காக அக்காள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  தீவிரப்  பிரார்த்தனையில் இறங்கியிருந்தனர் அப்பிரார்த்தனைகளுக்கு இறங்கி,  இக் கடவுள்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவார்களோ,  எமதர்மராஜா என்ற தம் பெயருக்குச்  சிக்கல் வருமோ என்ற கவலையளித்த சந்தேகம். தன் கவலையைச் சித்திரகுப்தனிடம் தெரிரிவிக்க அவன் சிரித்தான் « பிரார்த்தனையின் நோக்கமே அக்காள் உயிர் சீக்கிரம் போகவேண்டும், என்பதுதான் அதனாலே கவலைப்படாம பூமிக்குப் போங்க. என் கணக்கு ஒருபோதும் தப்பாது. » எனக்கூறி சமாதானமும் செய்தான்.

அடர்த்தியாய் வானை உரசும்வகையிற்  தளும்பிக்கொண்டிருந்த இரவில் மூழ்கி பூமிப்பந்தைச் சில மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தாயிற்று.  சுரப்பெட்டிபோல ஒலித்த சுவர்க் கோழிகளின் சப்தமும், குண்டியைச் சொறித்தபடி வெளியில் வந்த நபர் தெருவைக் குறுக்காகக் கடந்து, ஒருமுறைக்கு இருமுறை  எதிர்வீட்டுக்காரன் சுற்றுசுவர்தாணா என்பதைத் திடப்படுத்திக்கொண்டு  மூத்திரம் போனதும் வந்திருப்பது பூமி என்பது உறுதியாயிற்று.  இனி எடுக்கவேண்டிய உயிர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற  மருத்துவமனையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சிக்காலானதல்லவென்று கூறி  எமனுடைய காரியதரிசி தெரிவித்த குறிப்புகள் மனதிலிருக்கின்றன. இந்திரலோகம்வரை மருத்துவமனையின் புகழ்  எட்டி இருந்தது. ஓரளவு சமாளிக்கக் கூடிய செலவில் உயிரை எடுப்பதற்குப் பூலோகத்தில் எவ்வளவோ வசதிகள் இருக்கிறபோது எதற்காக லட்சமாக லட்சமாக கொட்டிக்கொடுத்து, உயிரைக் போக்கிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு பெரிய பட்டிமன்றமே தேவர் சபையில்நடந்தது.  இரம்பையையும் ஊர்வசியையும் அணிக்கொருவராகப் போட்டிருக்க அப்படியொரு கூட்டம்.  முதன்முறையாகப்  பலகோடி உயிர்களைப் பறித்து எமன் செய்திருக்கும் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா. விழாவில் நமது எமனுக்கு பூ, பழம், தேங்காய், பாக்குவெத்திலை, பட்டு வஸ்திரம் பத்தாயிரம் வராகன் பொற்காசுகள்  தட்டில் வைத்து அளித்தார்கள். தமிழ்நாட்டுப் பிரதிநிதி ‘அண்டம் காத்த  தொண்டன்’ , எமனுக்கு  ‘உயிர்ப்பறிக்கும் உத்தமன்’  விருதை அளித்துப் பொன்னாடைப் போர்த்தினார். போர்த்திய கையோடு, ‘அப்படியே எனக்குமொரு விருதை ஏற்பாடு செய்திடுங்க, ஆகிற செலவை நான் பார்த்துக்கிறேன்’ என்று எமன் காதில் போடவும் செய்தார்.

 «யாருய்யா அது, எருமை மாடு ! படுத்திருப்பது தெரியலை »  என்ற குரல் கேட்டு எமன் சுய நினைவுக்குத் திரும்பினான். அவனுடைய வாகனம் சாலையிற் படுத்திருந்த  ஒருவரை மிதித்திருந்தது. சற்றுத்தள்ளி  ஜெகஜொதியாக மருத்துவமனை. வாகனத்தை  நிறுத்தி இறங்கிக் கொண்டதும், மூக்கனாங்கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், விளக்குக் கம்பமொன்றில் கட்டினான்.

 சிறுகுடலின் முற்பகுதி தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து சுவாசகுழாயை நெறித்தது.  இரு நாசி துவாரங்களும் காத்திருந்தவைபோல அடைத்துக்கொண்டு மூச்சை நிறுத்தப் பிரயத்தனப் பட்டன.  நெஞ்சில் கபம் கட்டியிருந்தது, இருமல் நிற்க மறுத்தது, எழுந்து உட்கார்ந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாக இருந்தது.  இருமல், சளி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என்று அனைத்தும் கைகோர்த்திருந்தன. இருமும்போது கண்களில் நீர் கோர்த்து ஒன்றிரண்டு சொட்டுகள் கன்னக்கதுப்புகளில் விழுந்து உடைவதுண்டு. இருமல்  சளியுடன் கடந்த சில நாட்களாக இரத்தத் துளிகளும் கலந்திருக்கின்றன. இருமி முடித்த மறுகணம், தொண்டைவறட்சியை உணர்ந்தாள். தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், பிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம்’ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். கனகம் எங்கே போய்த் தொலைந்தாள்?  இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அவள் வருவதில்லை. கறீம் கூறிய வார்த்தைகள்  உண்மையாக இருக்குமோ என நினைத்தாள். « கடைகள் நிர்வாகத்திற்குப் புதிதாக ஒரு குழுவினரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை  ஒப்படைக்கும்படி நீங்கள் கையொப்பம் இட்டிருந்ததாக ஒரு பேப்பரை  கனகம் உங்கள் குடும்பத்தாரிடம் காட்டினார். அந்த அம்மாள் பேச்சை நம்புகிறார்களேயொழிய, உங்களைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்குமில்லை. நான் பயந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது. உங்க தெய்வத்துக் கிட்ட நீங்க வேண்டிக்குங்க,  நமாஸ் பண்ணும்போது, உங்களைக் காப்பாத்தும் படி நானும் அல்லாகிட்ட வேண்டிக்கிடறேன், அதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியலை. » என்றான்.

மெள்ள எழுந்திருக்க முயன்றாள், இருமல் திரும்பவந்தது, ஓக்காளித்தாள், ஓக்காளித்ததைக் இரண்டுகைகளிலும் வாங்கினாள், சகதிபோல இரத்தமும் கோழையும். மயங்கி விழுந்தாள். கிராமத்தில் அம்மாவையும், சகோதரர்களையும், படியாட்களையும் கூட அதிகாரம் செய்தவள்தான். இயல்பான அவ்வதிகாரத்தைச் செலுத்திய இவளும் சரி, செலுத்தப் பட்ட மனிதர்களும் சரி மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். புதுச்சேரியில் செலுத்திய அதிகாரம் உபரிமதிப்பைக் குறிவைத்து, அவர்கள் வேலை நேரத்திற்கு விலைகொடுத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் சிப்பந்திகளை அடிமைகளாகப் பார்த்த எஜமான் அதிகாரம். காலம் விசித்திரமானது. இன்றைக்கு அவள் உயிர்கூட  அவள் பொறுப்பிலில்லை. இனி அவளுக்கு உரிமையான கடையில், ஓட்டலில், ஜவுளிக்டையில் மல்லிகைச்சரம் ஊதுபத்தி மணக்க நிழற்படத்தில் சிரிப்பாள்.  அவளுக்கென்றுள்ள வாடிக்கையாளர்களைப் பிடிக்கவேண்டுமில்லையா ?

இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்கிறார்கள். முதலில், ஊரில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு புதுச்சேரியில் மூத்தார் குடும்பத்தில் ஆரம்பித்து வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். ‘கணக்கன்வீட்டு கம்பத்தத்தில்’ பல தலைமுறையாக அடிமைபட்டுக்கிடந்த கறுப்பன்கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான், இறுதியாகக் கனகம். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.

       அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திர வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது? ஒருவேளை சிறுவயதில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்குத் தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவி வைக்க உழைமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள். பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் மூத்த அண்ணனிடம்  முறையிட்டதும், பத்து ருபாயை விட்டெறிஞ்சி “போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ” என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும்” எனச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

        பூப்டைந்த அக்காளுக்கு வரன்கள் தேடும் காலத்தில். பொருத்தமானவனைத் தேடிக் களைத்துப்போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், மூத்த சகோதரருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்தவாறுப் பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்.

       “என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா? இது புதுசா இருக்கு!”

        “ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர்’ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.”

        அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப்  படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது செக்குமாடுகள் பார்வையைத் விலக்க முடிவதில்லை.

ஏசியின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. சிறுவயதில் பனைஓலையில் செய்த காற்றாடியை குச்சியில் ஏந்தியபடி சகவயது பையன்களோடு ஒடுவாள். அப்போதொரு சத்தம் வரும், அதுபோலத்தான் குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. அளவைக் கூட்டிவைத்தால்  உடல் வெட வெடவென்று உதறுகிறது. ஒன்றுக்கு இரண்டுபேராக தமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் ஒருத்தியிடம் குறைக்கும்படி சொல்லியிருக்கலாம்,  பார்வையாளர் நேரத்தின்போது அங்கிருருந்த ஜவுளிக்கடை கணக்கப்பிள்ளை செல்வமணியிடம் கூறினாள். அவர் வேண்டுமென்றே ஐந்தில் உயர்த்திவைத்து, இரண்டொரு நிமிடங்கள் இவள் படும் வேதனையைப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்  பிறகு இரக்கப்பட்டவர்போல ஏசி அளவைக் குறைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தார். இவள் திரும்பமாட்டாளென்பது, அவருக்கு முடிவாகிவிட்து. அக்காளின்  கணவர் இறந்த பின்பு கனகத்தின் சிபாரிசில் நியமிக்கப் பட்ட ஆள். முதுகில் துணிமூட்டை சுமக்கும் சலவைத் தொழிலாளிபோல இவள் எதிரே பவ்யமாக நின்றவர். அக்காள் விட்டத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.  முடிச்சு முடிச்சாகக் குழப்பமான நினைவுகள், ஜொராஷ்ட்ரியர் பிணம்போல இவள் கிடக்க உடலுக்கு மேலே சுற்றிவரும் கழுகுகள். தரையில்,  சிறுகூட்டமாய்  உருமும் நரிகள், அவற்றை முந்திக்கொண்டு, நடக்கவிருப்பதை காணச் சகியாததுபோல தலையைத் தொங்கப்போட்டபடி நிற்கும் முருகேசன் கழுதை.

       கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும்’ வலது கரத்தில் ‘சுருக்கு’மாக நமது எமன்.  

       “வந்தாச்சா? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன்”.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. “பக்கத்திலென்ன கழுதையா? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது? வாகனத்தை மாற்றிக் கொண்டீர்களா?”

       “இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகளிருப்பது உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதாக வாங்கவேண்டும். தவிர வேறு யோசனைகளும் இருக்கின்றன.  இந்திரனிடத்தில் பிரச்சினையை கொண்டுபோகவேண்டும் நேரமில்லை. “

       ” பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை.”

          « உன்னிடத்தில் வாதிட நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகனும். எமலோகத்துலே வேலைகள் நிறைய இருக்கின்றன. கிளம்பு  நீ !


          ” இல்லை.. எனக்கு கழுதைமேல் ஏற விருப்பமில்லை, விட்டுடுங்க.”

          ” இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னுடன் இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘தண்டத்தில்’ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது.

*                            *                            *                            *

அக்காள் இறந்த து 1991ஆம் மே மாதம் 21ந்தேதி.  செய்தி கிடைத்தபோது,  வேலூரில் இருந்தேன்.

இதய வாசலா, சேரன் பாண்டியனா ஞாபகமில்லை, ரிலீஸாகியிருந்த நேரம். சினிமா கொட்டகைமுதலாளி எங்கள் வருவாய்துறையிடம்  போட்டிருந்த  எழுதா ஒப்பந்தத்தின்படி முதற்காட்சிக்கு வாங்களேன் எனச்சொல்லியிருந்தார்.  கட்டி முடித்த புதிய சினிமா அரங்குகளுக்கு இசைவுச் சான்றிதழ் வழங்குவதென்றாலும் சரி பழையவற்றிர்க்கு இயங்கும் உரிமம் என்றாலும் சரி வருவாய்த் துறை துணைச்செயலர் மற்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்ரேட்இரண்டிற்கும் ஒரே அதிகாரிதான். எங்கள் அலுவலகத்திற்குத்தான் விண்ணப்பதாரர்கள் வரவேண்டும். அது சம்பந்தப்பட்ட கோப்புகளின் ஆரம்பம் எனது மேசை. அதிகாரி என நினைக்காதீர்கள். சாதாரண கிளார்க். இருந்தும் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டாகவும் துணை மாவட்ட ஆட்சியாளராகவும் இருப்பவரின் அறிக்கை, தீயணைப்புத் துறையின் அறிக்கையென எங்களிடம் வருகிற உல்டா அறிக்கைக்களின்   அடிப்படையில், நாங்களும்  ஒர் உல்ட்டா ஒப்புதலை அரசாங்க முத்திரையுடன் வழங்காமற்போனால்  உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் இயக்கம் ஸ்தம்பித்து போகாதா ? அரசாங்க காரியங்களில் அன்பளிப்புகள் பல்வேறு வடிவங்களில் உலாவரும், அதிலொன்று எங்கள் அலுவலகத்தினருக்கு இலவசமாக கிடைக்கும் அனுமதி சீட்டுகள். தியேட்டர் முதலாளி வழக்கம்போல ஐந்து அனுமதி சீட்டுகளைச் சிப்பந்திமூலம் அனுப்பிவைத்திருந்தார். மனைவிக்குக் கோபம். நண்பரை அனுப்பிவிட்டு  நீங்கள், நாளைக்குப் போக க் கூடாதா என்றாள். ‘நீங்கள் அக்காள் அக்காள் என்று கொண்டாடுகிற பெண்மணி சீரியஸான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகச் சொல்றீங்க,  இந்த நேரத்தில் போகனுமா?’ என்றாள். அவளுக்கு அக்காள்  உயிர்விடும்  கட்டத்தில் இருப்பது கவலைக்குரிய பிரச்சினையல்ல. இலவசமாக வந்த ஐந்து பால்கணி சீட்டுகள் வீணாய்ப் போகிறதென்ற கவலை.

‘அக்காள்’  கணக்கன் வீடு என்றழைக்கப்பட்ட கர்ணம் செல்வராஜு, கர்ணம் தங்கராஜு ஆகியோருக்கு  ஒரே தங்கை.  வீட்டின் கம்பத்தைப் பார்த்துக்கொண்ட  அவர்கள் தம்பி சுப்புராஜு க்கு ஒரேஅக்காள்.  அலமேலு அத்தையின் ஒரே மகள், குடும்பத்தின் ஒரேபெண்வாரிசு.  அத்தை  நாற்பது வயதில் தாலியை அறுத்தபோது, குடும்பத்தை ஏற்று நடத்தும் வயதில் பிள்ளைகள் இல்லை.  நஞ்சையில் கொஞ்சம் புஞ்சையில் கொஞ்சம் என்றிருந்த நிலங்களை குத்தகை, வாரம் என்று உள்ளூர் ஆசாமிகளிடம் விட்டுக் குடும்பத்தைச் சமாளித்தார். பிள்ளைகள் தலையெடுத்ததும் மூத்தவர்கள் இரண்டு பேரும் அப்பாவைப்போலவே கர்ணம் ஆனார்கள். மூத்தவர் செல்வராஜுக்கு உள்ளூருரில் உத்தியோகம். தங்கராஜு உத்தியோகம் பார்த்த கிராமங்களும் காத தூரத்தில் இல்லை. இளையவர்  சுப்புராஜுமட்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். வயதுக்கு வந்து வீட்டிலிருந்த அக்காள்  « வீட்டுநிர்வாகத்தை நான் பார்த்துக்கறேன்,  கோவில் மாடுபோல ஊரைச் சுற்றிவரும் சுப்பு  விவசாயம் பாக்கட்டும், பிணையில் கட்டினாத்தான் அவன் உருப்படுவான்.» என்று முன்வைத்த யோசனை  தப்பில்லை என்று அத்தைக்குப் பட்டது, மறுகணம்  உக்கிராண சாவியைப் பெண்ணிடம்  தூக்கிக் கொடுத்தாள்.

அக்காளுக்கு இந்தச் சாவிகள்தான் ஆயுதம், செங்கோல். சகல அதிகாரங்களுக்கும் திறவுகோல். சகல சௌபாக்கியங்களுக்கும் ‘திறந்திடு சீஸே’; அவள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் சாவிகளுக்குப் பெரும்பங்குண்டு. சாதாரணமாகவே அத்தைவீட்டில் எல்லோரும்  நெடு நெடுவென்று நல்ல உயரம், உக்கிராண சாவி கைக்கு வந்ததும் அவளுக்கு நிலைப்படி இடித்தது. முருங்கை இலையை துறட்டுக்கோலின்றி கால்விரல்களைத் தரையில் ஊன்றாமல் கிளையைத் தாழ்த்திப் பறிக்க முடிந்தது. கைவீசிக் கம்பீரமாகத் தரை அதிர நடந்தாள். படியாட்களை இரைந்து கூப்பிடுவது தோட்டக்கால்வரை கேட்கும். எதிரிலிருக்கும் மனிதர்களின் கண்களைப் பார்த்துபேசுவாள், அவர்களுக்குப் பேச்சுவராது, ஆமாம் என்றோ இல்லையென்றோ பூம் பூம் மாடுபோல எல்லாவற்றிர்க்கும் தலையாட்டல்தான்.  வெத்திலை போடும் பழக்கமுள்ள அத்தையிடம். ‘வாரத்திற்கு நான்கணா தருவேன், அதற்குமேல் கிடையாது !’ எப்படியாவது சமாளியென்று ஒரு நாள் கறாராகத் தெரிவிக்க, அத்தை கோபித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். மாலை செல்வராஜுமாமா சமாதானம் செய்து, வீட்டிற்கு அழைத்துபோக வேண்டியிருந்தது.  அக்காளின் அதிகாரம் ஆட்களைக் கடித்து, அத்தையைக் கடித்து கடைசியில் மாமாக்களையும் கடிக்க அவர்கள் மிரண்டுபோனார்கள். இரண்டு பேரும் கர்ணம் உத்தியோகம் பார்த்ததால் நில அளவையாளர், வருவாய் ஆய்வாளர், தாலுக்கா அலுவலக எழுத்தர்கள் என்று  வருகிறவர்களுக்குச் சாப்பாடு தயார் செய்யவேண்டும். எங்கள் வீட்டிலும் அப்படி நடப்பதுண்டு. வருகின்றவர்கள் அசைவமாக இருந்தால் கோழி அடித்து குழம்புவைக்கவேண்டும், சாத்தியமில்லையென்றால் முட்டையாவது இலையில் இருந்தாகவேண்டும். அன்று அத்தையிடம் அக்காள் கறாராகத் தெரிவித்ததை நானும் பக்கத்திலிருந்து கேட்டேன்:  « முருங்கைக் கீரை சாம்பார்தான், சோற்றுவத்தல்தான், அதிகப்பட்சமாக உருளைக்கிழங்கை வறுப்பேன், நம்மால அதுதான் முடியும். அவங்களும் கோழி, ஆடுன்னு எதிர்பார்த்து வரலை. போட்டதை சாப்பிடறவங்கதான்,  கெடுக்கிறது நீங்கதான் ! » என்று அத்தையை ஒரு பிடி பிடித்துவிட்டாள். அத்துடன் நிறுத்தினாளா என்றால் இல்லை ,  என்னிடம் « உங்க அம்மாகிட்டேயும் படையல் போடறதை நிறுத்தச்சொல்லு !  ஏற்கனவே சுத்தி சுத்தி மாமா(எங்க அப்பா)கடன்வாங்கி வச்சிருக்கார்னு கேள்விப்பட்டேன் » என்று முடித்தாள். அக்காள் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென்று  மணவாழ்க்கையை  வெகுகாலம் தள்ளிப் போட்டாள். வீட்டு நிர்வாகத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டாள்.  கிராமத்தில் இருந்தவரை, எல்லா விஷயத்திலும் மிகவும் பிடிவாதமாக அவள் இருந்தாளென்று எனக்குத் தெரியும். புதுச்சேரி உறவினர் வீட்டு நல்லது கெட்ட துக்குப் போகும் அத்தை,  அங்கொரு ஃபேன்ஸி ஸ்டோருக்கு வாடிக்கையாளர். கடை முதலாளியும் இது புதிதாக வந்திருக்கிறது, அது புதிதாக வந்திருக்கிறதென்று சொல்லி எதையாவது அத்தை தலையில் கட்டிவிடுவார். ஊர் திரும்பினால் அன்றைக்கு முழுதும் வீட்டில் அத்தைக்கும் அக்காளுக்கும் பிரச்சினைதான். « எனக்கு வங்கி வளையல் பிடிகாதில்லை. சிவப்பு நிறத்துல பளிச்சுன்னு எதுவும் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்ல. நீயே எத்தனை முறை கொண்டுபோய் திருப்பிக்கொடுத்திருக்க ! அதற்கப்புறமும் வாங்கிவந்தா என்ன அர்த்தம் ? » என்று ஒரே ஆர்ப்பாட்டம் தான். அத்தை « சரி அடுத்தமுறை போறேன், மாத்தி உனக்குப் பிடிச்சமாதிரி வாங்கிவறேன் ! » என்கிற சமாதானமெல்லாம் எடுபடாது . மறு நாளே  வீட்டிலுள்ள யாராவது ஒருவருடன் புதுச்சேரி சென்று மாற்றிவரவேண்டும். « ஒரே பொண்ணுன்னு  செல்லம் கொடுத்த து தப்பாபோச்சு » என்று அத்தை புலம்பினாலும் திரும்பத் திரும்ப அது  நடந்திருக்கிறது. அவளுடைய அனைத்து தேர்வுகளுமே பிறர் கொடுத்தது அல்ல, அவளாக எடுத்துக்கொண்டது

மொழிவது சுகம் அக்டோபர் 8 2022 :  அன்னி  எர்னோ (Annie Ernaux)

கடந்த மூன்று தினங்களாக இலக்கிய உலகம் நன்கறிந்த பெயர்.  இலக்கியத்திற்கான நோபெல் பரிசை பெற்ற பதினாறாவது (ழான்போல் சார்த்ரு, பரிசைமறுத்துவிட்டார் ) பிரெஞ்சு எழுத்தாளர், மாறாக உலகறிந்த பிற பிரெஞ்சு பெண் படைப்பாளிகளுக்கு கிடைக்காத நோபெல்  விருது இவருக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் முத பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபற்றிய தகவல் வானொலிச் செய்தியாக அறியவந்ததற்கு முன்பாக கூடுதலாக எதுவும் அவரைப் பற்றி (அதாவது அவருடைய படைப்புகள் சார்ந்து) எனக்குத் தெரியாது. அவரது படைப்புகள் எதையும் நான் வாசித்தவனில்லை.  

இந்திய தேசத்தை காந்தியின் இந்தியா என மேலை நாட்டினர் சொல்ல அல்லது பத்திகளில் எழுத கேட்டிருக்கிறேன். அதுபோல பிரான்சு தேசத்தை ‘மோலியேர் தேசம்’ என பெருமிதத்துடன் சொல்லிக்கொள்வதில் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. மோலியேர் நாடகப்ப் படைபாளி, மற்றும் , மற்றும் கலைஞர். பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களைக் கண்டவர்கள், அவ்வலையில் இலக்கியத்திற்குரிய  நோபெல் பரிசுகள் அவர்களைத் தேடிவருவதில் நியாயமுண்டு.  உலகில் இலக்கியத்திற்குரிய நோபெல் பரிசை வென்ற  நாடுகளில் பிரான்சு  முதலாவது இடத்தை வகிக்கின்றது.

பிரெஞ்சு மொழி ஆண் படைப்பாளிகளைப் போலவே பெண் படைப்பாளிகள் உலகெங்கும் அறியபட்டவர்கள் நாவலாசிரியை எனச் சொல்லப்படாவிட்டாலும், பெணியல்வாதியான சிமொன் தெ பொவாரும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற நூலும்  உலகில் இன்றளவும் கொண்டாட டப்படுபவை. இந்த வரிசையில் கொலெத், ழார்ழ் சாந், மரி ஒலம்ப் தெ கூர்ழ், பிரான்சுவாஸ் சகான், மார்கெரித் துராஸ், மார்கெரித் யூர்செனார் என கடந்தகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர் தொடங்கி வாழும் எழுத்தாளர்களிலும் ஒரு பெரிய  பட்டியல் இருக்கிறது.

இவற்றில் சிமொன் தெ பொவ்வார் அவருடைய இரண்டாம் பாலினம் பற்றிய கட்டுரை பரிசில் பதிப்பகத்தில் கிடைக்கும். பிரான்சுவாஸ் சகானுடைய வணக்கம் துயரமே காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும். மார்கெரித் துராஸ் ஒரு முக்கிய பெண்படைப்பாளி, அவருடைய காதலன் என்கிற நாவலை என்னுடைய மொழிபெயர்ப்பில் தென் திசை பதிப்பகம் வெளியிட்டது. இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை. மாறாக அவருடைய சிறுகதையான உயிர்க்கொல்லி அதே பெயரில் வேறு சில எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு ஒரு தொகுப்பாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. மார்கெரித் யூர்செனாருடைய புகழ்பெற்ற படைப்பான அதிரியன் நினைவுகள் என்ற நூலும் தமிழில் வரவேண்டிய நூல்.

அன்னி எர்னோ

நோபெல் பரிசுபெற்ற இவரைப் பற்றி நான் முதன்  முதலில் அறியவந்தது, பத்து வருடங்களுக்கு முன்பாக அன்னி சொமோன் என்கிற எழுத்தாளரின் சிறுகதையை மொழி பெயார்த்தபோது.

இவருடைய(அன்னி சொமோன்)சிறுகதையையும் வேற்சுசில முக்கிய பிரெஞ்சு எழுத்தாளர்களின் கதை யையும் போர் அறிவித்தாகிவிட்டது என்ற பெயரில் எனனுடைய மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் கொண்டுவந்தது. இரண்டாவது முறையாக நான் அன்னி எர்னோவை அறிய வந்த து, நான் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மார்கெரித் யூர்செனார் பெயரில், அவருக்குக்கு பிரெஞ்சு இலக்கிய அமைப்பு ஒன்று பரிசில் வழங்கியபோது.

இதைத் தவிர 82 வயதான நோபெல் பரிசுபெற்ற இவருடைய எழுத்தைக் குறித்து எனக்குச் சொல்ல தற்போதைக்கு எதுவுமில்லை.  காலையில்தான் இரண்டு நூல்களை வாங்கினேன். இனிதான் அவற்றை வாசிக்க வேண்டும்.  ஏன் இதுநாள்வரை அவருடைய படைப்பு என்னை ஈர்க்கவில்லை என்றேனக்குத் தெரியவில்லை. அவர் எழுத்து கூடுதலாக சுய புனைவு  வகைமையைச் சார்ந்திருப்பது காரணமாக இருக்கலாம். நூலின் பெயர் எனக்கு நினைவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு இவருடைய நாவலொன்றின்  ஏதோ ஒரு பக்கத்தை புரட்ட அப்பக்கம் என்னை ஈர்க்கவில்லை. தவறு என்னுடையதாகவும் இருக்கலாம், ஒரு நூலின் எல்லாபக்கங்களுமே நம்மை ஈர்க்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. புதுச்சேரியில்  70 களில் பாரதி வீதியிலிருந்த  ஓட்டலில் பூரிக்கு வைத்த கிழங்கு வேகாலிருக்க, அந்த ஓட்டலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.

அன்னி எர்னோவின் அரசியலுக்காக கிடைத்தவிருதே அன்றி இலக்கியத்திற்காக அல்ல என்கிற விமர்சனங்கள் பிரான்சில் உண்டு. பெண்ணியம், பெண்விடுதலை என்கிற கடப்பாடுடன், இடது சாரி கொள்கைகளில் தீவிர பிடிமானத்துடன் எழுதுபவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக ஈரானில்  மாசா அமினி என்ற இளம்பெண்ணின் அகால மரணத்திற்குக் ஆதரவாக நடக்கிற போராட்டத்தை மனதில்வைத்து கொடுக்கபட்ட விருது என்கிறார்கள். அமைதிக்காக கொடுக்கபட்ட இந்த ஆண்டு விருதுகளும் அரசியல் சார்ந்தவை என்கிற குற்றச்சாட்டு உண்டு.

         அன்னி  ஏர்னோ இரண்டு நூல்கள் கைவசம் இருக்கின்றன.வாசித்தபின்னர் எனது கருத்தை எழுதுகிறேன். அப்படியே எழுதினாலும் எனது வாசிப்பு ருசி சார்ந்த முடிவென்பதை மனதில் வையுங்கள்.

சிமோன் அப்பா (பிரெஞ்சு சிறுகதை)

          கி தெ மொப்பசான்

                    தமிழில் நா. கிருஷ்ணா

(1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )

 நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது.  பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து விடுவார்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக, சிறிது தூரத்தில் கூடி  நின்று, முணுமுணுக்கிறார்கள்.

காரணம் இல்லாமலில்லை, அன்றைய தினம் காலையில்தான், லா பிளான்ஷோத் மகன், முதன் முறையாக அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தான். பிளான்ஷோத் என்ற பெண்மணியின் பெயர் அவர்களுக்குப் புதிதல்ல, ஒவ்வொரு பையனின் குடும்பத்திலும் அப்பெயரைக் குறிப்பிட்டுப் வம்பு பேசுவது அன்றாடம் நடப்பதுதான் ; பொதுவெளியில் நல்ல அபிப்ராயம் இருப்பினும், அவர்கள் அம்மாக்களிடையே பெண்மணியின் பெயர் ஏதோ பாவப்பட்டதென்கிற அபிப்ராயம் இருக்கவே செய்தது, பையன்களும் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலேயே, அப்பெண்மணியைக்குறித்து அதே கருத்தைக் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

சிமோன் விஷயத்திற்கு வருவோம், அவன் வயது பையன்களுக்கு சிமோனைத் தெரியுமா என்றால் தெரியாது.. அவன் வீட்டிலேயே அடைந்து கிடப்பவன், பிற பையன்களோடு கிராமத்துத் தெருக்களிலோ அல்லது ஆற்றங்கரைகளிளோ ஓடிப்பிடித்து விளையாடுவதெல்லாம் இல்லை, ஊர்ப்பையன்களுக்கும் அவன் விளையாட வரவில்லை என்பதால் வருத்தமும் இல்லை. இப்படியான சூழலில்தான், சிமோன் இவர்களோடு அதிகம் கலக்காததன் காரணத்தை நன்கறிந்தவன்போல ஒருபையன், அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும், கண்களை இலேசாக சிமிட்டிக்கொண்டு ஏளனத்தோடு கூறியதை ஒருவித மகிழ்ச்சியோடும், கணிசமான ஆச்சரியத்தோடும் வரவேற்று, தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் தெரிவித்த செய்தி :

« சிமோனைத் தெரியுமில்லையா, அவனுக்கு அப்பா கிடையாதாம் ! »  

        பிளான்ஷோத் மகனான சிமோனும் வகுப்பிலிருந்து வெளியில்வந்திருந்தான். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், கொஞ்சம் வெளிறிய தேகம், பார்க்க என்னவோ போலிருந்தாலும், பையன் படு சுத்தம்.

        சிமோன்  வீடு திரும்பவேண்டும், வேறெங்கே அவன் அம்மாவிடம். ஆனல் அவனுடைய பள்ளித் தோழர்கள் விடுவதாக இல்லை, கூடிக்கூடித் தங்களுக்குள் அவனைப்பற்றிய கிசுகிசுப்பைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவர்களின் விஷமும்,  குரூரமும் கலந்த பார்வை  தற்போது நம்முடைய பையன் மீது, தொடர்ந்து அவனைச் சீண்டிப் பார்க்கும் திட்டத்துடன், ஒருவர் இருவரென நெருங்க ஆரம்பித்து, அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

        இவர்களுக்கு என்னிடம் என்ன வேண்டும், எதற்காக இப்படி தண்னைச் சூழ்ந்து நிற்கவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் குழப்பத்துடனும், வியப்புடனும் சிறுவன் சிமோன் அவர்கள் மத்தியில் நிற்க,  அவனைப் பற்றிய செய்தியைப் கொண்டுவந்து, அதனை வெற்றிகரமாக பரப்பிய பெருமையில் திளைத்த பையன் இவனை நெருங்கி :  

« உன் பெயரென்ன ?  » எனக்கேடக, இவனும் « சிமோன் ! » எனத் தெரிவித்தான்.

« சிமோன், சிமோன் மட்டும் தானா, தலைப்பெழுத்தில்லையா ? » எனத் திரும்பவும் போக்கிரிப்பையன் கேட்க,

ஐந்துவயது சிறுவனும் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத்  தெரியாமல் :

« ஆமாம், ‘சிமோன்’  » என்றான்.

« மொட்டையா இப்படி சிமோன் என்று சொன்னால் ஆச்சா ? »  – குரலை உயர்த்தி வயதில் மூத்தபையன் சிமோனை மறுபடியும் கேட்டான்.

        «  என்னுடைய பெயர் சிமோன், அதைத் தவிர வேறு பெயர்களில்லை » என்றான், கண்களில் நீர்கோர்த்திருந்தது.

கூடியிருந்த பையன்கள் சிரிக்க ஆரம்பித்தனர், இப்பிரச்சனையில் மறுபடியும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் சிமோனைச் சீண்டியவன் :

« நல்லா கேட்டுக்குங்க. இவன் அப்பன்  இல்லாத பையன் ! » – என்றான்.

மறுகணம், அங்கு மிகப்பெரிய அமைதி. பையன்கள் மொத்தபேரும் அதிர்ச்சியில் ஊமையாக நின்றார்கள், ‘தகப்பனற்ற ஒருபையன்’ என்பது, அவர்களைப் பொறுத்தவரை அசாதாரணமான,  நம்பவியலாத, மிகவும் மோசமானதொரு தகவல். இயற்கைக்குப் புறம்பான ஓர் அதிசயப் பிறவியைப் போல அவனைப் பார்த்தனர். சிமோன் தாய் பிளான்ஷோத் குறித்து, அவர்களுடைய அம்மாக்கள்  இதுநாளவரை கொண்டிருந்த, விவரிக்க முடியாத அதே வெறுப்பு தங்களிடமும் நன்கு வளர்ந்திருப்பதை அவர்கள் உணர முடிந்தது.

சிமோனைப் பொறுத்தவரை,  மீளமுடியாத பேரிடரில் சிக்கியதாக கருதி, ஒரு மரத்தின் பிடிப்பில் அழுந்த சாய்ந்து நின்றான். தன் தரப்பில் பதில்சொல்லவேண்டும், என்ன சொல்லலாம், யோசித்தான். தனக்கொரு தகப்பனில்லை என்கிற மோசமான விஷயத்தை மறுப்பதற்கு, மற்ற பையன்களுக்குப் பதிலென்று ஒன்றைக் கூற அவனிடம் எதுவுமில்லை. இறுதியாக, ஏதாவது சொல்லவேண்டும் என்றெண்ணியவன்போல ஆத்திரத்துடன்  அவர்களிடம்: “நீங்க நினைப்பதுபோல அப்பனில்லாத பையன் இல்லை, எனக்கும் ஒருவர் இருக்கிறார்”, எனக் கத்தினான்.

« இருக்கிறார் என்றால்,  எங்கே? » –  இம்முறையும் கேள்வி கேட்டது வயதில் மூத்த அதே பையன்.

        சிமோன் பதிலின்றி  மௌனம் காத்தான்; தெரிந்தால்தானே சொல்வான். சுற்றி நின்ற சிறுவர்கள் சந்தோஷ மிகுதியில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், விலங்குகள், பறவைகளென்று உறவாடும் வாழ்க்கை. கோழிப்பண்ணையில், காயமுற்ற ஒரு பறவையின் ஜீவனை முடிக்க, பிறகோழிகளுக்குத் தேவைப்படும் குரூரத்தைக் கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு, சிமோன் அவர்களுக்குக் காயமுற்ற பறவை. இந்நிலையில் சிமோன் கவனம் திடீரென்று அருகிலிலிருந்த சிறுவன்மீது சென்றது, அவன் அண்டைவீட்டுப் பையன், தாய் ஒரு விதவை, சிமோனைப்போலவே அப் பையனும் தாயுடன் தனியே வசிப்பவன்.  

        « ஏய் உன்னைத்தான். உனக்கு மட்டும் அப்பா இருக்கிறாரா என்ன, உனக்குக் கூடத்தான் இல்லை » – என்று அவனிடம்  சிமோன் கூற,

        « யார் சொன்னது அப்படி, எனக்கு அப்பா இருக்கிறாரே! »- என்றான் அப் பொடியன்.

       « இருந்தால், எங்கே? » சிமோன் பதில் கேள்வி கேட்டான்.

        « அவர் செத்துட்டார், கல்லறையில் இருக்கிறார். »

சிமோனுக்கு தக்கப் பதிலைக் கொடுத்த பெருமிதம் பையனிடம் தெரிந்தது. அண்டைவீட்டுப் பையனின் தகவலுக்கு கூடிநின்ற பிற பையன்களின் ஒப்புதலும் முணுமுணுப்பாக  வெளிப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை அவனது தந்தை கல்லறையில் இறந்துவிட்டார் என்ற உண்மை, தந்தையென்று ஒருவரும் இல்லாத பையனைத் துவம்சம் செய்யப் போதுமானது. கூடிநின்ற பையன்களின் தகப்பன்களும் பெரும்பாலும் பொல்லாதவர்கள், குடிகாரர்கள், கள்வர்கள், தங்கள் தங்கள் மனைவியரிடம் கடுமையாக நடந்துகொள்கிறவர்கள்,  இந்நிலையில் அவர்கள் பிள்ளைகளாகிய தாங்கள் எல்லோரும் நெறிமுறைப்படி இருப்பவர்கள்போலவும், மாறாக சிமோன் நெறிமுறைக்குள் வராதவன் போலவும் எனவே அவன் மூச்சுமுட்டிச் சாகலாம் என்பதுபோல ஒருவரை ஒருவர் முட்டிமோதிக்கொண்டு அவனை நெருங்கினார்கள்.

அடுத்த நொடி, சிமேனுக்கு நேரெதிரில் இருந்த பையன்,  அவனைக் கிண்டல் செய்யும் விதத்தில் தன்னுடைய நாக்கை வெளியில் நீட்டிக் காட்டிய பின்:

     “அப்பாஇல்லை! இவனுக்கு அப்பா இல்லை ! » எனச் சத்தம் போட்டான்.

     சிமோன் இரு கைகளாலும் அவன் தலைதலைமுடியைப் பற்றி, கால்களால் உதைக்க அச்சிறுவனோ சிமோன் கன்னத்தை மிருகத்தனமாகக் கடித்தான். அடுத்த நொடி அங்கே பெரும் சலசலப்பு. சண்டைபிடித்த பையன்கள் விலக்கப்பட்டார்கள். கூடியபையன்கள் கைத்ட்டி ஆர்ப்பரிக்க  சிமோன் அடிபட்டு, ஆடைகிழிந்து, கன்றிப்போய், ஆங்காங்கே வீங்கி , தரையில் கிடந்தான்.  எந்திரத்தனமாக எழுந்து, தன் சட்டைக்குமேல் அணிந்திருந்த ஜாக்கெட்டில் படிந்திருந்த மண்ணையும் தூசிகளையும் தட்டிக்கொண்டிருக்க, கும்பலில் இருந்த ஒரு பையன்:

        « நடந்த விஷயத்தை போய் உன் அப்பாகிட்ட சொல்லு.» எனக் கத்தினான்.

சிமோன் இதயம் உடைந்து நொறுங்கியிருந்தது. தன்னைச் சுறியிருந்த பையன்கள் பலசாலிகள், அவர்களுக்குப் பதில் சொல்ல இவனால் ஆகாது, காரணம்  அவனுக்கு அப்பா இல்லை என்பது பொய்யல்ல உண்மை. பையன்கள் முன்பாக அழக்கூடாது, அப்படி அழுவது தன்னைச் சங்கடத்தில் நிறுத்தக்கூடும் என்பதால் ஒருவித பெருமிதத்துடன் அழுகையை அடக்கப் பிரயத்தனம் செய்தான்.  மூச்சுத் திணறியது, பின்னர் சத்தமின்றி  பெரும் துக்கத்தில் உடல் குலுங்க தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

இந்நிலையில் அவனுடைய எதிரிகளிடையே ஒருவித மூர்க்கத்தனமான மகிழ்ச்சி வெடித்தது.  அச்சத்திற்குரிய கொண்டாட்டங்களில்  காட்டுமிராண்டிகள் வெளிப்படுத்தும் இயல்புடன்,  அவர்கள் ஒருவரையொருவர் கைகளைப் பிணைத்துக்கொண்டு,  அவனைச் சுற்றிவந்து ஆட்டம்போடத் தொடங்கினார்கள்: « அப்பா இல்லை »”  « அப்பா இல்லை  » எனத் திரும்பத் திரும்பச் சொல்லவும் செய்தார்கள்.

ஆனால் சிமோன் மறு நொடி அழுகையை நிறுத்தினான். ஒருவித ஆத்திரமும் கோபமும் தலைக்கேறியது. காலடியில் கற்கள் கிடந்தன;  அவற்றைக் கையிலெடுத்தவன் முழு பலத்துடன், தன்னிடம் வம்புசெய்தப் பையன்கள் மீது வீசினான். அடிபட்ட இரண்டு அல்லது மூன்று பேர் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சிமோன் தற்போது ஏதோ பலசாலிபோல தோற்றம் தர, பிற பையன்களிடத்திலும் ஒருவித அச்சத்தைக் காணமுடிந்தது. பெருங்கோபமுற ஒரு மனிதன் முன்பு  நிற்பதற்கு அஞ்சியோடும்  கூட்டம்போல, பையன்களும் கோழைகளாக தங்களை விட்டால் போதுமென்று ஓடி மறைந்தனர்.

தனித்து விடப்பட்ட , தந்தையற்ற அச்சிறுவன், மனதில் தோன்றிய பழைய நினைவொன்றின் காரணமாக ஆற்றிள் மூழ்கி உயிரைவிடத்  தீர்மானித்து வயற்காடுகளை நோக்கி ஓடினான். உண்மையில், எட்டுநாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு படுத்திக்கொண்டான்.  உயிர்வாழ்க்கைக்காக பிச்சையெடுத்த ஒரு தரித்திர மனிதன் கையில் காசில்லையென்று ஆற்றில் குதித்திருந்தான். அவனைத் நீரிலிருந்து மீட்டு கரையில் போட்டபோது சிமோன் அங்கிருந்தான். பாவபட்ட அம்மனிதன், சாதாரணமாக பரிதாபமாக இருப்பான், அத்துடன் அசுத்தமான அசிங்கமானத் தோற்றம்வேறு.  இந்நிலையில் அம்மனிதனை, வெளிறிய கன்னங்கள், நீரில் நனைந்த நீண்ட தாடி, மூட மறந்த கண்களென்று கரையில் கிடத்தியிருந்தபோது, அவனிடத்தில் கண்ட அமைதி, இவனிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர். “அவன் இறந்துவிட்டான்” என்றார். இன்னொருவர் “அவன் முகத்தில் இப்போதுதான் சந்தோஷத்தை காணமுடிகிறது” என்றார். அவனைப்போல சிமோனும் ஆற்றில் விழுந்து இறக்க நினைத்தான், காரணம், இறந்த தரித்திர மனிதனுக்கு கையில் காசில்லை என்பதுபோல இவனுக்கும் தகப்பனில்லை.

ஆற்றின் அருகே சென்றதும் சிமோன் பார்வை தண்ணீர் மீது சென்றது. மீன்கள் சில  தெளிவான நீரோட்டத்தில் சற்று துள்ளலுடன் உல்லாசமாக வலம்வந்தன, அவ்வப்போது எம்பி நீரின் மேற்பரப்பில் வட்டமிட்ட ஈக்களைப் பிடித்தன. அவற்றின் செயல்பாடுகள் ஆர்வத்தைத் தர ,அழுவதை நிறுத்தி அவற்றைப் பார்த்தான். ஆனால் சில சமயங்களில், புயலுக்கிடையிலான அமைதியின்போது திடீரென வீசும் சூறைக்காற்று மரங்களை முறித்து சாய்த்தபின் அடிவானத்தில் மறைந்துபோவதுண்டு, அதுபோல சாகவேண்டும் என்ற எண்ணம்  மனதில் பெரும் வலியுடடன் அவனுள் உதித்தது.: “நான் நீரில் மூழ்கவேண்டும், காரணம் எனக்கும் தந்தையென்று ஒருவருமில்லை” எனத் தனக்குள் கூறிக்கொண்டான்.

வெயில் கூடுதலாக இருந்தாபோதிலும்,  குறைசொல்ல முடியாது, வெப்பம் தாங்கிக் கொள்ளகூடியதாக. இனிமையான கதிரொளியில் புல் பூண்டுகளில் வெதுவெதுப்பை உணர்ந்தான்.  நீர் கண்ணாடி போல் ஒளிர்ந்தது. சிமோன் ஒரு சில நிமிடங்கள் பேரின்பத்தில் திளைத்தான். கண்களில் நீர்கோர்த்தது, தொடர்ந்துணர்ந்த சோர்வில், அங்கிருந்த புல்தரையில், காயும் வெயிலில் படுத்துறங்க விரும்பினான்.

சிறிய பச்சை தவளையொன்று அவனது காலடியில் குதித்தது. அதைக் கையில் எடுக்க முயற்சிக்க  தப்பித்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதியில் அதன் பின்னங்கால்களின் நுனியைப் பிடித்துத் தூக்கினான். அச்சிறு பிராணி, அவன் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்த முயற்சிகளைக் காண அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் உடலைச் சுருக்கி பின்னங்கால்களில் நிறுத்திய மறுகணம் உடலைத் தளர்த்தி,  அவற்றை தவளை நீட்ட, இரண்டும் கம்பிகளைப் போல விறைத்துக் கொண்டன. அதே வேளை பொன் வளையமிட்ட வட்டமான கண்களுடன், தவளையின் முன் கால்களின் பாதங்களிரண்டும் அசைவது கைகளை அசைப்பதுபோல இருந்தது. அக்காட்சி, சிறு சிறு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று ஆணியால் இணைத்து குறுக்குமறுக்குமாக உருவாக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய  விளையாட்டுபொம்மையை அவனுக்கு நினைவூட்டியது, அதிலும் இப்படித்தான்  பொம்மைவீரர்களை அசைத்து இயக்க முடியும். பின்னர் தனது வீட்டையும் தாயையும் நினைத்து, மிகுந்த சோகத்துடன் பழையபடி அழ ஆரம்பித்தான். அவனுடைய கைகால்களில் உதறல் எடுத்தது. உறங்குவதற்கு முன்பு மண்டியிட்டு பிரார்த்தனை செய்வான். அதைத் தற்போதும் முயன்றான், ஆனால் அதை முடிக்க இயலவில்லை, காரணம் விம்மல்கள் இடைவெளியின்றி, விரைவாகவாகவும், கொந்தளித்தும் அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. இந்நிலையில் அனைத்தையும் மறந்தான், அவனைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதிலும் கவனம்செல்லவில்லை, தற்போதைக்கு அழுவது ஒன்றுதான் செய்யவேண்டிய வேலை என்பதுபோல அதைமட்டும் செய்தான்.

        திடீரென்று, கனத்ததொரு கரம் தோளை அழுத்துகிறது, தொடர்ந்து கட்டைக் குரலில் : « அடேய் குட்டி பையா`!  அப்படியென்ன கவலை உனக்கு,  எங்கிட்டச் சொல்லேன், நானும் தெரிந்து கொள்கிறேன்`! ? » என்றது. சிமோன் திரும்பிப் பார்த்தான். சுருட்டைமுடியும், தாடியுமாக வாட்டசாட்டமான தொழிலாளித் தோற்றத்தில் இருந்த அம்மனிதன் நல்லவிதமாக அவனைப் பார்த்தான். சிமோன் அவனிடம், கலங்கிய கண்களும் நெஞ்சமுமாக : : 

        « அப்பா இல்லையென்று சொல்லி, எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு.. எனக்கு…அப்பா இல்லை » என பதிலளித்தான்.

        « என்னது, அப்பா இல்லையா,  அப்ப்டையெல்லாம் ஒருவரும் இருக்க முடியாது. தந்தை இல்லாத மனிதரில்லை, எல்லோருக்கும் அப்பா உண்டு »  எனத் தெரிவித்து, அந்நபர் சிரித்தான்.

        சிறுவன், தனது கடுந்துயரத்திற்கிடையில், சிரமத்துடன் பதில் சொல்ல முனைந்து : “ஆனால் எனக்கு அப்படி ஒருத்தரில்லை.” » என்றான். சிறுவனின் பதில் தொழிலாளியை பையன் விஷயத்தில்  அக்கறைகொள்ள வைத்தது.  பையன் வேறு யாருமல்ல லா பிளான்ஷோத் மகன் என்பதைத் தொழிலாளி புரிந்துகொண்டான். ஊருக்குப் புதியவன் என்றாலும், ஓரளவிற்கு சிமோன் கதையை அம்மனிதன் அறிந்திருந்தான்.

        « உனக்கு ஒரு அப்பா வேண்டும், அவ்வளவுதானே  கவலைப் படாதே, கொடுக்க முடியும் , என்னுடன் வா, உன் அம்மாவிடம்போவோம்” – என்று சிமோனிடம் தெரிவித்தான்.

சிறுவன் கையைப்பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து நடந்தார்கள். தொழிலாளியின்  முகத்தில் மீண்டும் சிரிப்பு, காரணம் பையனின் தாய்  ‘பிளான்ஷோத்’ ஐ திரும்பச் சந்திக்க நேரும் என்பதைக் குறித்த வருத்தமேதும் அவரிடமில்லை. அப்போதெல்லாம் அவள் ஊரில் மிக அழகானப் பெண்களில் ஒருத்தியென பெயரெடுத்திருந்தாள். ஒருவேளை அத்தொழிலாளியின் அடிமனதில் அவள் இள்மபெண்ணாக இருந்தபோது இழைத்த தவறை மறுபடியும் இழைக்கலாம், என்கிற எண்ணமிருக்கலாம், யார் அறிவார்.

பையனும் தொழிலாளியும், வெள்ளையடித்து, நன்கு பராமரிக்கபட்டிருந்த ஒரு சிறிய வீட்டை . அடைந்தார்கள். அங்கிருந்த பெண்மனியைக் கண்டதும்:

« இதுதான் ! » என்று வீட்டை அடையாளப்படுத்திய பையன். « அம்மா ! » என்று கூவி அழைத்தான்.

        வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி வெளிப்பட்டாள். அவளைக் கண்ட மறுநொடி தொழிலாளி சிரிப்பதை நிறுத்தினான், காரணம் நெட்டையாகவும், சற்று வெளிறிய தேகத்துடனும் இருந்த அப்பெண், ஏற்கனவே ஓருவனிடம் ஏமாந்தது போதும் இனி ஒர் ஆணை வாசற்படியைத் தாண்ட விடமாட்டேன் என்பதுபோல கடுமையான முகத்துடன் வாயிலில் நின்றிருந்தாள். அவள் தோற்றம் தொழிலாளியை அச்சம்கொள்ளச் செய்தது.தலையிலிருந்த தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு, தடுமாற்றத்துடன்: ” மேடம் இதோ உங்கள் பையன், ஆற்றங்கரையோரம் பார்த்தேன், அழைத்து வந்தேன் ” – என்றான்.

        ஆனால் சிமோன் தன் தாயைக் இறுகப் பிடித்துக்கொண்டு  மீண்டும் அழ ஆரம்பித்தான்:

        « அம்மா, ஆற்றைத்தேடி நான் போனது, விழுந்து சாகத்தான். எல்லோரும் என்னை அடித்தார்கள், உதைத்தார்கள் … ஏனென்றால் எனக்கு அப்பா இல்லையாம் ». இளம்பெண்ணின் கன்னமிரண்டும் எறிதழல்போல சிவந்தன, நெஞ்சில் ரணப்பட்டிருந்தாள். உணர்ச்சிவேகத்தில் மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய முத்தமிட்டாள். வந்த மனிதனோ நெகிழ்ந்திருந்தான், அங்கிருந்து எப்படி விடைபெற்றுச் செலதெனத் தெரியாமல் குழம்பியபடி நின்றிருந்தான்.. இந்நிலையில் பையன் சிமோன் திடீரென்று அவனிடம் ஓடிவந்தான் :

        « உங்களுக்கு என்னுடைய அப்பாவா இருக்க விருப்பமா? » – எனக்கேட்டான்.

        பெரும் அமைதி. லா பிளான்ஷோத், ஊமையாக, தான் பரிதாபமானநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப்போல கூனிக்குறுகி  இருகைகளையும் மார்பில்வைத்து சுவரின் பிடிமானத்தில் சாய்ந்து நின்றாள். தனது கேள்விக்குப் பதில் வராத நிலையில், சிறுவன் மீண்டும்:

« உங்களுக்கு என்னுடைய அப்பா ஆக விருப்பமில்லைன்னா சொல்லுங்க, நான் ஆத்துல குதிச்சுடறேன் »- என்றான்.

        தொழிலாளி அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டவன்போல,  சிரித்துக்கொண்டே

        « ஏன் ஆகக் கூடாது? உனக்கு அப்பாவாக இருக்க எனக்கும் சம்மதம்தான் » என்றான்.

        «  நல்லது, உங்கள் பெயரைச் சொல்லுங்க, மற்றவர்கள் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டால் நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமில்லையா? »

        “பிலிப்,”  என்று தொழிலாளி தனது பெயரைக் கூறினான்.

        ஒரு நொடி சிமோன் ‘பிலிப்’ என்கிற அப்பெயரை தனது மனதில் நன்கு பதிவு செய்தக்கொள்ள எண்ணியவன் போல அமைதியாக இருந்தான். பின்னர்  தனது கைகளை நீட்டி:

        « நல்லது,  இனி பிலிப் ஆகிய நீங்கள் எனக்கு அப்பா! » –  என்றான், தொழிலாளியின் பதிலால் சாமாதானம் அடைந்தவன் போல.

        பையனை தரையில் இருந்து உயரே தூக்கிப்பிடித்த தொழிலாளி இரண்டு கன்னங்களிலும் ஒருவித அவசரத்துடன்  முத்தமிட்டான், பின்னர் அதே வேகத்தில் அவ்விடத்திலிருந்து விரைவாக நடந்துசென்றான்.

        அடுத்த நாள் பையன் பள்ளிக்குள் நுழைந்தபோது, ​​எதிர்பார்த்ததுபோலவே விஷமச் சிரிப்பொன்று  அவனை வரவேற்றது; அன்றும் வகுப்பை விட்டு வெளியேறும்போது, மூத்த வயது பையன் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிக்க, சிமோன் தன் மனதில் பதிவு செய்திருந்த வார்த்தைகளை, கல்லை எறிவதுபோல வீசினான் :

        « பெயர் பிலிப்,  அவர் தான் என் அப்பா. »

        எனச் சிமோன் தெரிவிக்கவும், எல்லா பக்கங்களிலிருந்தும் ஏளன ஆரவாரங்கள்:

        « என்ன சொன்ன பிலிப்பா யார் அது?…இப்படி தலையுமில்லா வாலுமில்லாம சொன்னா போதுமா?… அது என்ன, பிலிப்?… எங்கே கண்ண்டு பிடிச்ச அந்தப் பெயரை?”

        சிமோனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லை; அவனுக்குத் தான் தெரிவித்த பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை, அலட்சியத்துடன் பையன்களைப் பார்த்தான். அவர்களுக்காக பயந்து ஓடும் எண்ணமில்லை மாறாக எது  நடந்தாலும் நடக்கட்டும், எனப் பொறுமையுடனிருந்தான். நல்லவேளையாக பள்ளி ஆசிரியர் குறுக்கிட்டு சிக்கலிலிருந்து அவனை விடுவித்தார். அவனும் வீடுவந்து சேர்ந்தான்.

        இச்சம்பவத்திற்குப் பின்னர் மூன்று மாதங்கள் தொழிலாளி பிலிப், லா பிளான்ஷோத் வீட்டு வழியாக அடிக்கடி போக நேரிட்டது. சிற்சில சமயங்களில் ஜன்னலருகே அமர்ந்து அப்பெண் எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள், அவ்வேளைகளில் அவளிடம் பேச அவன்  துணிந்திருக்கிறான். அவளோ, அவனை வீட்டிற்குள் அனுமதிக்காது வெளியிலேயே நிற்கவைத்து பேசி அனுப்பிவிடுவாள். தவிர தேவையற்ற பேசுக்க்கோ, சிரிப்புக்கோ இடமில்லை என்பதுபோல நடந்துகொள்வாள்.  இருந்தபோதிலும் தன்னிடம் உரையாடுகிற போதெல்லாம் அவள் கன்னங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி கூடுதலாக சிவக்கின்றன, என கற்பனைசெய்துகொள்ளும் அகம்பாவம் எல்லா ஆண்களையும் போல தொழிலாளியிடமும் இருந்தது.

        ஆனால் உடைந்த நற்பெயரை ஒட்டவைப்பது அத்தனைச் சுலபத்தில் இல்லை, அதற்குரிய தெம்பும் இளம்பெண்ணிடத்தில் இல்லை. வெளியிற் செல்லக்கூடத் தயங்கி லா பிளான்ஷோத், வீட்டில் அடைந்துகிடப்பாள், இருந்தபோதிலும் ஊர் வாயை அவளால் மூட முடியவில்லை. .

சிமோனைப் பொறுத்தவரை,  தனது புதிய அப்பாவை மிகவும் நேசித்தான், அன்றைய அலுவல்கள் முடிந்ததும்  ஒவ்வொரு மாலையும் அவருடன் உலாத்தச் செல்வான். பள்ளிக்கும் தவறாமல் ஆர்வத்துடன் சென்றுவந்ததோடு, வகுப்புத் தோழர்களுடன் பதிலுக்குப்பதில் என்றில்லாமல் கண்ணியத்துடன் பழகினான். இருப்பினும், ஒரு நாள், முதனலில்  சிமோனிடம் சண்டைபிடித்த பையன் அவனிடம் சொன்னான்:

« நீ  பொய் சொல்லியிருக்க. ’பிலிப் என்ற பெயரில், உனக்கு அப்பா என்று ஒருவரும் இருக்கமுடியாது. »

« எதனால் அப்படிச் சொல்ற ? » –  சிமோன் குழப்பத்துடன் கேட்டான்.

தன்னுடைய கைகளைப் பிசைந்தபடி, மற்றபையன் தொடர்ந்தான் :

” காரணம்,  அப்படி ஒரு அப்பா உனக்கு இருந்தால் ,  அவர்  உங்கள் அம்மாவின் கணவராக  இருக்கவேண்டும்.”

அந்தப் பையன் பதிலில் இருந்த நியாயம் சிமோனைக்  கலக்கமடையச் செய்தது: «இருக்கட்டுமே, அதனாலென்ன எனக்கு அவர் அப்பா. » என்றான் அவனிடம்.

« கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அவரை முழு மனதோடு  அப்பா என நீ சொல்ல முடியாது »- பையன் ஏளனத்தோடு கூறினான்.

சிமோன் தலையைத் தொங்கப் போட்டபடி பிலிப் வேlலைசெய்யும் லுசோன் என்பவருடைய கொல்லுபட்டறையை நோக்கி கனவுடன் நடந்தான்.

அக்கொல்லுப்பட்டறை மரங்களால் மூடப்பட்டு இருண்டிருந்தது. அவ்விடத்தில்  விசித்திரமான உலைஅடுப்பின்  சென்னிற ஒளிச்சிதறல்களில் ஐந்து கொல்லர்கள் கையுறையின்றி வெறும் கைகளால் சம்மட்டிகொண்டு பெரும் சப்தத்துடன் அடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தீச்சுவாலைகளிடையே அரக்கர்கள்போல இருந்தனர். அவர்கள் விழிகள் சம்மட்டியில் வதைபட உள்ள கனிந்த இரும்புகள் மீதிருந்தன.  எச்சரிக்கையுடன் கூடிய அவர்கள் கவனமனைத்தும் இரும்பு சம்மட்டியோடுசேர்ந்து  உயர்வதும் திரும்ப விழுவதுமாக இருந்தன. சிமோன் யார் கண்களிலும் படாமல் மெதுவாக தன்னுடைய அண்மைக்கால நண்பரை நெருங்கி சட்டைக்கையை பிடித்து இழுத்தான். தொழிலாளியும் திரும்பினான். சட்டென்று அங்கு வேலைகள் ஸ்தம்பித்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் தற்போது இவர்கள் மீது. வழக்கத்திற்கு மாறாக கொல்லுப்பட்டறையில் அமைதி. இந்நிலையில்,  சிமோனுடைய பலவீனமான சிறிய குரல் உரத்து ஒலித்தது:

« சொல்லுங்கள் பிலிப்! சற்று முன்பு, மிஷோது என்கிற பையன் என்னிடம், நீங்கள் எனக்குப் பெயருக்குத்தான் அப்பா என்கிறான், முழுமையான அப்பா இல்லையாம். » 

« எதனால் அப்படிச் சொன்னான் ? » தொழிலாளி கேட்டான்.

« ஏனென்றால் நீங்கள்  என் அம்மாவுக்கு கணவர் இல்லையாம். »- வெகுளித்தனத்துடன் வந்தது சிமோனுடைய பதில்.

சிறுவன் பதிலைக்கேட்டு ஒருவரும் சிரிக்கவில்லை.. பட்டறைகல்லில் நிறுத்தியிருந்த சம்மட்டியின் கைப்பிடியில் இருந்த தன் கைகளின் பின்பகுதியில் நெற்றிபட கவிழ்த்து, நின்றவண்னம்  பிலிப் யோசனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய தோழர்களான சக தொழிலாளிகளின் பார்வை அவனைவிட்டு விலகவில்லை, மாறாக ராட்சதர்கள் போல நின்றிருந்த அம்மனிதர்களுக்கிடையில்  பொடியன் சிமோன், பிலிப்பின் பதிலை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தான்.

திடீரென்று, அனைவரின் சிந்தனைக்கும் பதிலளிக்கும் வகையில், நான்கு கொல்லர்களில் ஒருவர் பிலிப்பிடம்:

« லா பிளான்ஷோத் நல்ல பெண் மட்டுமல்ல்ல  துணிச்சலானவளும் கூட,  அதுவன்றி அவளுடைய துரதிர்ஷ்ட்டத்திற்கிடையிலும் நேர்மையும் திடமனமும் கொண்டவள். ஒரு நேர்மையான மனிதனுக்கு, கண்ணிமிக்க மனைவியாக  அவள் இருக்கக்கூடியவள் » என்று தெரிவிக்க, மற்ற மூன்று பேரும், உண்மைதான் என்றார்கள். தொழிலாளி தொடர்ந்தார்:

« அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட  தோல்விக்கு, அப்பெண் இழைத்த தவறுதான் காரணமா என்ன ?” அவளிடம்,  மணம் செய்துகொள்கிறேன் என சத்தியம்  யாரேனும் செய்திருப்பான். இன்றைய தேதியில் ஒருவர் இருவரல்ல,  பெண்களுக்கு அப்படி வாக்குறுதி அளித்து ஏமாற்றும் பலரை நான் அறிவேன். அவர்களில் நம்முடைய மரியாதைக்குரியவர்களும் அடக்கம் . »

“அது உண்மை,” – மற்ர மூன்றுகொல்லர்களும் ஒரே குரலில் பதிலளித்தனர்.

அவர் தொடர்ந்தார்: “பாவம்  தன் பையனைத் தனியொருவளாக வளர்ப்பதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டாள், அவள் அழாத நாட்களே இல்லை, தவிர வீட்டைவிட்டு தேவாலயத்திற்குச் செல்வதன்றி வேறெதற்கும் வெளியிற் செல்வதில்லை. அவள் பிரச்சனைகளை ஆண்டவர் மட்டுமே நன்கு அறிவார். »

«அதுவும் உண்மைதான் » மூன்றுபேரும் திரும்பவும் ஆமோதித்தார்கள்.

அங்கு உலைக்களத்தீயை ஊதிக்கொண்டிருந்த துருத்தியின் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. திடீரென, பிலிப் சிமோன் பக்கம் குனிந்தான்.

 « இன்று மாலை உன் தாயிடம் பேசுகிறேன், அவளிடம் சொல்! »  எனத் தெரிவித்து சிமோன் தோளில் கைவைத்துத் தள்ளி கொல்லுபட்டறையைவிட்டு அவனை அனுப்பிவைத்தான்.

பிலிப் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தான். `அடுத்தகணம் சேர்ந்தாற்போல ஐந்து சம்மட்டிகளும் முழுமனதுடன் பட்டறைக்கல்லில் காய்ச்சிய இரும்பின்மீது விழ ஆரம்பித்து  வலுவுடனும், பலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அந்திவரை தொடர்ந்தன. எப்படி பண்டிகை நாட்களில் தேவாலயமொன்றின் மணியோசை சிறிய பிற மணிகளின் ஓசையை அமிழ்த்திவிட்டு ஓங்கி ஒலிக்குமோ அதுபோல அவனுடைய சம்மட்டியும் ஒவ்வொரு  நொடியும் ஓயாமல் ஒலித்து காதுசெவிடும்படி பெரும் ஓசையுடன் பிற சம்மட்டிகளின்மீது ஆதிக்கம் செலுத்த, பிலிப் தீப்பொறிகளிடையே நின்று இரும்பை அடிப்பதில் மும்முரமாக இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அணியும் ஜாக்கெட், துவைத்த சட்டை, ஒழுகுசெய்த தாடியுமாக லா  பிளான்ஷோத் வீட்டின் கதவை, பிலிப் தட்டும்போது வானம் முழுக்க நட்சத்திரங்கள்.  வெளிப்பட்ட அவள் வருந்தும் குரலில்:  “இருட்டிய பிறகு இப்படி வருவது சரியல்ல பிலிப்.” » என்றாள். அவன் பதில் சொல்ல விரும்பியபோதிலும், என்னசொல்வதென்று புரியாமல் தடுமாறி குழப்பத்துடன் நின்றான்.

அதையே சற்று விளக்கமாகச் சொல்ல நினைத்தவள்போல:

« உங்களுக்கு சொல்லி  புரியவைக்க வேண்டுமென்பதில்லை, என்னைப்பற்றி இந்த ஊர் பேசியது போதுமென்று நினைக்கிறேன். »

தாமதமின்றி அவன் கூறினான்:

« நீ என் மனைவியானால், அப்பேச்சு என்ன செய்யும் ! »

இம்முறை பதிலேதுமில்லை. ஆனால்  இருண்டிருந்த வீட்டின் அறையிலிருந்து உடலொன்று தொபீரென விழுவதுபோல ஒரு சத்தம்.மறுகணம் அவசர அவசரமாக பிலிப் வீட்டிற்குள் சென்றான்.

ஏற்கனவே படுக்கச் சென்றிருந்த நம்முடைய சிமோன் முத்தமிடும் ஓசையையும் , அவனுடைய தாய் அடிக்குரலில் முணுமுணுப்பதையும்  பிரித்துணர முடிந்தது.  பின்னர்,  தன்னுடைய சமீபத்திய நண்பனின் ஹெர்க்குலீஸ் கரங்கள் தன்னைத் திடீரென உயர்த்திப் பிடித்திருப்பதை  உணர்ந்தான். பிடித்திருந்த தொழிலாளி நண்பன் உரத்த குரலில் :

”  இனி யாராவது உன்னைச் சீண்டினால், அவர்கள் காதைத் திருக உன்னுடை அப்பா கொல்லர் பிலிப் ரெமி வருவாரென்று, வகுப்புத் தோழர்களிடம் சொல்” – என்றான்

மறுநாள், பள்ளி நிரம்பி வகுப்பு தொடங்கும் நேரத்தில், பொடியன் சிமோன்  எழுந்துநின்றான்,  வெளிறிய தோற்றம், உதடுகள் நடுங்க: “என் அப்பா பெயர்  ‘பிலிப் ரெமி’, கொல்லன் , எனக்குப் பாதகம் செய்வோரின் காதை இழுத்துப்பிடித்து  திருகுவேனென என்னிடம் அவர் உறுதி அளித்திருக்கிறார்” – எனத் தெரிவித்தான், குரலில் தெளிவிருந்தது.

இம்முறை ஒருவரும் சிரிக்கவில்லை,  ஏனென்றால் கொல்லன் பிலிப் ரெமியை அனைவருக்கும்  ஏற்கனவே நன்றாகத் தெரியும்,  அதுவன்றி  இன்று  அவன் ஓரு தந்தை, ஊரும் உலகமும் பெருமையுடன் கொண்டாடுகிற மனிதன்.

                           ——————————

UN MASALA D’IDENTITÉS !

La Nouvelle Revue de l’Inde vient de sortir un numéro spécial sur les femmes du sous-continent indien présentes dans le monde de la francophonie.

Ce dossier regroupe des articles, des interviews, des commentaires sur des femmes rattachées à la culture indienne par la naissance ou par l’éducation et qui évoluent bien dans leurs domaines respectifs. Hélas, les articles sur Pondichéry, qui fut pourtant l’ancien comptoir français, sont quasiment inexistants, comme c’est le cas pour l’île Maurice. Il faut néanmoins apprécier les deux articles sur les femmes d’origine indienne à la Réunion.

Et puis viennent les articles qui rappellent l’Inde, dans lesquels, comme d’habitude, on parle de recettes, d’épices, de cinémas et bien sûr ! comment oublier le pays de Kali et ses multiples divinités. Or, pas le moindre mot sur la littérature indienne, où les femmes à succès sont nombreuses. Ainsi, ils pourraient évoquer Susila Raman, qui vient d’un pays anglophone, en oubliant Mme Kamala Haris, la vice-présidente des Etats-Unis par exemple.

Malgré tout, il faut apprécier et saluer les efforts de la revue La Nouvelle Revue de l’Inde. Voilà quelques siècles que les souches du sous-continent sont là, nul ne les a honorées comme le fait ce magazine.

Bravo !

  அலெக்சாந்தர்

                      

       ( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)

                                         கி தெ மொப்பசான்

மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.

இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில்  மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும்  கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத்  தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.  

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.

திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது  அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:

–  பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..

திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான  சுயநலத்தில், அலெக்ஸாந்தரை  மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.

அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட  திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:

– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா?  என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.

 .- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக  திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில்  தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார். 

அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப  விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.  

– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு  இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.

அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :

– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான்  உண்மை, என்றார்.

–  நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது.  இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன்  பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.

– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும்.  ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.

அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!

திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம்  நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும்  ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்!  என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:

  – அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம்,  நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் ​​பணியாள் அலெக்சாந்தர்  இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய  வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி  தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.

பெண்மணி தொடர்ந்தார்:

– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ? 

தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :

– ஓ! நான் …நான் மேடம்,  எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .

பெண்மணித் தொடர்ந்து :

உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?

 «  ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று  கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.

திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :

— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.

அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :

—  ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.

— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?

அவருக்கு நா குழறியது :

— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.  

— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.

—  ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது  மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.  

பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்

—  ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும்,  அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?

பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :

– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !

பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.

மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.

– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க  எனக்காகவா, ஏன் ?

அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர்  பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :

— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.  

பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :

— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?

மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :

—  மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.

பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள்,  நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.

தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :

— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.

அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.

ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :

— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.

— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.

கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :

— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?

பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :

— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.  

பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.

— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும்  சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.

மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.

                       ———————————————————.