கி தெ மொப்பசான்
தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
—–
….. ஜார்ஜ் லெக்ராண்டிற்கு
ஒரு சில செய்தித்தாள்களில், இதரச்செய்திகள் என்கிற பிரிவின்கீழ் ஒவ்வொருநாளும் இதுபோன்றதொரு செய்தி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்:
“கடந்த புதன் கிழமை இரவு, ……வீதியில், கதவெண் 40ல் குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டுமுறை வெடித்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு விழித்திருக்கிறார்கள். சத்தம் மிஸ்டர் எக்ஸ் என்பவர் குடியிருப்பில் இருந்து வந்திருக்கிறது… பின்னர் கதவு திறக்கப்பட்டுப் பார்த்தபோது, அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசி ரத்தவெள்ளத்தில் கிடக்க, அவர் கைப்பிடியில் தற்கொலைக்கு உபயோகித்த கைத்துப்பாக்கி ».
« “திருவாளர் Xக்கு வயது ஐம்பத்தேழு, வசதியான வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் இருந்துள்ளது, எனவே குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. இந்நிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுத்தக் காரணமென்ன, எனபது விளங்காதப் புதிர். »
கடுமையான துயரங்கள், நெஞ்சில் ஏற்பட்டக் காயம், ஒளித்துவைத்த ஏமாற்றங்கள், வாட்டிய கவலைகள் இவற்றில் எவை அல்லது எது, சந்தோஷமான வாழ்க்கைக்குரிய வருவாயிருந்தும் இதுபோன்ற மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கக்கூடும்? என்ற கேள்வி எழுகிறது. பதிலைத் தேடுகிறோம் : காதல் தோல்வியாக இருக்கலாமென கற்பனை செய்ய முடிகிறது, பின்னர் பணம் ஒரு பிரச்சனையாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது, இறுதியில் திட்டவட்டமாக எதையும் அறியமுடியாதபோது, இப்படியான மரணங்களுக்கென்று நம்மிடம் இருக்கவே இருக்கின்றன “மர்மம்” என்ற வார்த்தை.
இப்படி காரணமின்றி தற்கொலைசெய்துகொண்ட ஒருவரின் மேசையிலிருந்து கடிதமொன்று கிடைத்தது. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி அருகே கைக்குக் கிடைத்த, கடைசியாக எழுதப்பட்ட அக்கடிதம், சுவாரஸ்யமாக இருக்குமென்றும் தோன்றியது. மனிதரின் விரக்தியான இகாரியத்திற்குப் பின்னே ஏதேனும் பெரும் விபரீதமான காரணங்கள் ஒளிந்திருக்குமோ என நினைக்க, அப்படி எதுவும் தகவலில்லை; பதிலாக அக்கடிதம் வாழ்க்கையில் ஓயாமல் படும் சிறு சிறு கஷ்டங்களை, கனவுகளத் தொலைத்து துணையின்றி காலம்தள்ளிய ஒரு மானுட உயிருக்கு நேர்ந்த சேதங்களைச் சொல்வதாக இருந்தது. மேலும் இப்படியொரு சோகமான முடிவுக்கு அக்கடிதம் கூறும் காரணத்தை புரிந்துகொள்ள நெஞ்சில் பதற்றமும் எளிதில் உணர்ச்சிவசப்படும் மனநிலையும் அவசியம்.
கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான் :
« நள்ளிரவு. இக்கடிதத்தை எழுதிமுடித்ததும், என்னுடலில் உயிர் தங்காது. ஏன் ? அதற்குரிய காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன். இவரிகளை எனது மரணத்திற்குப்பிறகு பிறகு படிக்கின்றவர்களுக்காக அல்ல, எனக்காக. எனது பலவீனமான தைரியத்திற்குத் தெம்பூட்டிக்கொள்ளவும், தள்ளிப்போடலாம் ஆனால் தவிர்க்கவியலாது என்கிற அபாயகரமான இதன் தேவைக்கு என் மனதைத் திடப்படுத்திக்கொள்வதற்கும் என வைத்துக்கொள்ளலாம்.
எந்தஒன்றையும் எளிதாக நம்புகிற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் நானும் அப்படிபட்டவனாக இருந்தேன். வெகுகாலம் உயிர்வாழ்ந்த அந்நம்பிக்கைக் கனவு அண்மையில்தான் தனது கடைசி முகத்திரையைக் கிழித்துக்கொண்டது.
கடந்த சிலஆண்டுகளாக ஏதோவொரு வினோதம் எனக்குள் நிகழ்வதுபோன்றதொரு அனுபவம். வைகறை சூரியனைப்போல பிரகாசித்த கடந்தகால சம்பவங்கள் இன்றெனக்கு மங்கியவைப்போலத் தோற்றமளிக்கின்றன. அவற்றின் முக்கியத்துவத்தில் இன்றுநான் காண்பதென்னவோ கசப்பான சில உண்மைகள். அன்பிற்குப் பின்புலத்திலிருந்த உண்மையான காரணம் எனக்கு வெறுப்பினைத் தந்தது, விளைவாக கவிநயமிக்க மென்மையான உணர்வுகள் விஷயத்திலும் கசப்பினை உணர்ந்தேன்.
உண்மையில் நாம், தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொள்ளும் முட்டாள்தனமும் கவர்ச்சியும் மிக்க மாயைகளின் நிரந்தர கைப்பொம்மைகள். ஆகையால் வயது கூடக்கூட கடும் பிரச்சனைகள், பயனற்றமுயற்சிகள், அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள் ஆகியவற்றோடு இணக்கமாகவிருக்க சம்மதித்தேன், இந்நிலையில்தான் இன்று மாலை, இரவு உணவிற்குப்பிறகு அனைத்து இன்மையின்மீதும் ஒருபுதிய வெளிச்சத்தினைக் காணமுடிந்தது.
முன்பெல்லாம் சந்தோஷமாக இருந்தேன். என்னைக் கடந்து செல்லும் பெண்கள், வீதிகளின் தோற்றம், எனது குடியிருப்பு இருக்கும் பகுதி என அனைத்தும் என்னைக் கவர்ந்தன. ஆனால் திரும்பத் திரும்பக் அக்காட்சிகளை காணநேரிட்டதால், எனது இதயத்தில் அயற்சியும், எரிச்சலும் நிரம்பி வழிந்தன, அதாவது நாடகத்திற்குச் செல்லும் ஒரு பார்வையாளனக்கு ஒவ்வொரு மாலையும் ஒரேவிதமான நாடகத்தைக் காண நேர்ந்தால் என்ன நேருமோ அத்தகைய அனுபவம்.
கடந்த முப்பது ஆண்டுகளாக நான் படுக்கையிலிருந்து எழும் நேரம் மாறியதா என்றால், இல்லை. பிறகு கடந்த முப்பது வருடங்களாக நான் செல்லும் உணவு விடுதியையும் மாற்றிக் கொள்ளாமலிருக்கிறேன். அங்கு உணவு கொண்டுவரும் பரிசாரகர்களில் மாறியிருக்கிறார்கள், மற்றபடி உண்ணும் நேரத்திலும் உணவிலும் மாற்றங்கள் இல்லை.
பயணத்தை முயற்சித்ததுண்டா ? உண்டு. ஆனால் புதிய இடங்களில் தனிமை எனக்குப் பயத்தை அளித்தது. இந்த உலகில், சின்ஞ்னசிறிய ஜீவனாக என்னை உணர்ந்த கணத்தில், தனிமை படுத்தப்பட்டதுபோன்ற உணர்விற்கு ஆளாகி, வீட்டிற்குத் திரும்பிவிடுவேன்.
பிறகு வாங்கிய நாளில் எப்படிப்பார்த்தேனோ அதுபோலவே கடந்த முப்பது ஆண்டுகளாக போட்டது போட்டபடி ஒரே இடத்தில் இருக்கிற வீட்டுத் தளவாடங்களும், புதிதாக வாங்கிவந்த மெத்தை இருக்கைளின் தேய்மானங்களும், பொதுவாக ஒவ்வொரு குடியிருப்பும் காலப்போக்கில் ஒருவாசத்தைப் பெற்றுவிடும் என்பதற்கிணங்க குடியிருப்பிலிருந்து வருகிற ஒருவித வாசமும், ஒவ்வொரு இரவும், இப்படியொரு வாழ்க்கைமீது மாறாததொரு குமட்டலையும், விளங்கிக்கொள்ளவியலாத ஒருவித துன்பத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன.
ஆக அனைத்துமே ஓயாமல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. பூட்டிய பூட்டை எப்படி திறக்கிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னுடையை தீப்பெட்டியை எந்த இடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் எடுக்கிறேன், தீக்குச்சியின் பாஸ்பரஸ் பற்றி எரிகிறபோது எனது அறையில் கண்ணிற்படும் முதற்காட்சிவரை அனைத்தும் தப்பிக்கவியலாத சலிப்பூட்டுகிற நிகழ்வுகள் என்பதால் சனலுக்கு வெளியே குதித்து இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டலாமா என்று கூஎட நினைப்பதுண்டு.
ஒவ்வொருநாளும் முகச்சவரம் செய்துகொள்ளும்போது என்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்ளலாம் என்கிற வெறித்தனமான எண்ணம் வரும், பிறகு கண்ணாடியில் எப்போதும்போல தெரிகிற எனது முகத்தையும் சோப்பு நுரையோடு அக்கன்னங்களையும் பார்க்கிற்போது அனேக தடவை துக்கம் தாங்காது அழுதிருக்கிறேன்.
முன்பெல்லாம் எந்தெந்த மனிதர்களை மகிழ்ச்சியுடன் சந்திப்பேனோ அவர்களைக்கூட தற்போது சந்திப்பதில்லை. அவர்களை நன்கறிந்தவன், அதாவது அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு என்னுடைய பதில் என்னவாக இருக்கும், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிற அவர்களுடையை சிந்தனையை வார்த்தெடுக்கும் கலன் எது, அவர்கள் முன்வைக்கும் நியாயங்களின் நெளிவு சுளிவுகள் எவை ? என்று அனைத்தையும் அப்போது தெரிந்துவைத்திருந்தேன்.
மனிதர் மூளைகள் ஒவ்வொன்றும் ஒரு சர்க்கஸ் கூடாரம், அங்கே தப்பவழியின்றி சுற்றிவரும் விலங்காக இருப்பது ஒரேஒரு குதிரை. முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகளென்று அணுகுமுறைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், வரைமுறைக்கு உட்பட்டே செயல்படமுடியும், பிறகு திரும்பவும் பழைய நிலமைக்குத் திரும்பவேண்டும். முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகள் என அணுகுமுறைகளில் சில வழிமுறைகளை கையாண்டாலும் ஓரள்விற்கே சாத்தியமாகும், பிறகு எப்போதும்போல பழைய பாதையில் ஓயாமல் ஒரேவிதமான கருத்துக்களை, மனமகிழ்ச்சியை, கேலி பேச்சுக்களை, மரபுகளை, நம்பிக்கைகளை, ஒவ்வாமைகளை சுமந்தபடி உழலவேண்டும்.
கடுமையான பனிமூட்டம். அகன்ற வீதிகளையும் அவை மூடியிருக்க, புகை மூடிய மெழுகுவர்த்திகள்போல தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தோள்களில் இதுவரை அறிந்திராத பாரம், உண்டது செரிமானம் ஆகாமல் இருந்திருக்கலாம்.
உண்பது ஒழுங்காக செரிமானம் ஆக கொடுப்பினை வேண்டும், வாழ்க்கையில் அனைத்துமே அதைச் சார்ந்தே இருக்கின்றன. கலைஞனுக்கு உத்வேகமும், இளம் வயதினருக்கு காதல் ஆசைகளும், சிந்தனையாளருக்குத் தெளிவான எண்ணங்களும், அனைவருக்கும் வாழ்க்கைக்கான சந்தோஷமும் நல்ல செரிமானத்தினால் மனிதருக்கு கிடைக்கும் நன்மைகள். தவிர நன்றாகச் சாப்பிடவும் மனிதர்க்கு அது உதவுகிறது (இதற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்). நோய்பட்ட வயிறு சந்தேகிக்கவும், நம்பிக்கையின்மைக்கும், கொடுங்கனவுகளுக்கும், மரணத்தின் மீதான விருப்பத்திற்கும் காரணமாகிறது என்பதை நான் நன்குணர்ந்திருக்கிறேன். இன்று மட்டும் நான் உண்டது ஜீரணமாகியிருக்குமெனில், ஒருவேளை எனது தற்கொலை எண்ணம் தவிர்க்கபட்டிருக்கக் கூடும்.
கடந்த முப்பது வருடங்களாக நாள்தோறும் மெத்தை நாற்காலியில் உட்காருவது வழக்கம், அவ்வாறு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் பார்வையை என்னைச் சுற்றிலும் ஓடவிடுவதுண்டு, அப்படிச் செய்கிறபோது மிக கடுமையானதொரு வேதனைக்கு ஆளாகி, கிட்டத்தட்ட பைத்திய நிலைக்குப் போவதுண்டு
என்னிடமிருந்தே நான் தப்பினால் போதுமென்றொரு நிலமையில் அதற்கான யோசனைகளில் இறங்கியதுண்டு. நான் எதையும்செய்யாமல் சும்மா இருந்திருக்கலாம், எதையாவது செய்யலாம் எனப்போக மிகப் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். மேசை இழுப்பறைகளில் குவிந்துகிடக்கும் காகிதங்களை ஒழுங்குபடுத்த நினைத்தேன்.
எப்போதிருந்து என்பது நினைவில்லை, ஆனால் நீண்ட நாட்களாகவே என்னுடைய மேசையின் இழுப்பறைகளை சுத்தம் செய்ய நினைப்பதுண்டு ; காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த மேசையில் கடிதங்களையும் ரசீதுகளையும் கலந்து கட்டி போட்டுவர, அந்த ஒழுங்கின்மை அவ்வப்போது எனக்கு கணிசமான மனக்கலக்கத்தை அளித்து வந்தது. ஆனால் பொதுவாகவே எதையாவது ஒழுங்கு படுத்தவேண்டும் என எண்ணினால் போதும் மறுகணமே எனது உள்ளம், உடல் இரண்டுமே சோர்வுக்கு ஆளாகும், விளைவாக இக்கடினமான பணியைச் செய்ய ஒருபோதும் துணிவதில்லை.
ஆனால் இம்முறை துணிந்து மேசைக்கு முன்பாக அமர்ந்து இழுப்பறையைத் திறந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றை அழித்துவிடும் நோக்கில், அதற்குரியவற்றை தெரிவு செய்தேன். என்முன்பாக ஆண்டுகள் பலவாக சீண்டப்படாமல் பழுப்பு நிறத்தில் குவிந்திருந்த காகிதங்களைக் கண்டு சில கணங்கள் தடுமாறி, பின்னர் ஒன்றை கையில் எடுத்தேன்.
நண்பர்களே ! உயிர்வாழ்க்கை மீது நல்ல அபிப்ராயம் உங்களுக்கு இருக்குமெனில் பழைய கடிதங்களின் புதைகுழிகயை ஒருபோதும் தோண்டாதீர்கள் ! தப்பித் தவறி அப்படியொரு தவறைச் செய்ய நேர்ந்தால் அவற்றைக் கைநிறைய எடுங்கள் ! எடுத்த மறுகணம் கண்களை இறுக மூடுங்கள், ஏனென்றால் சட்டென்று பழைய நினைவுகளின் சமுத்திரத்தில் உங்களைத் தள்ள வாய்ப்புள்ள ஒரே ஒரு வார்த்தை, மறந்துபோன அல்லது பரிச்சயமான சில வரிகள் உங்கள் கண்களில் பட்டுவிடக்கூடும், அதற்காக. அடுத்து நீங்கள் செய்யவேண்டியது, இந்த நச்சுக் காகிதங்களை தீயிலிடுதல், கவனமுடன் செய்யவேண்டும்,எரித்த சாம்பலில் துண்டு துணுக்குக்கூட மிஞ்சக்கூடாது, அவ்வளவும் கண்களுக்கு எளிதில் புலனாகாத தூசாக மாற்றப்படவேண்டும், தவறினால் நீங்கள் தொலைந்தீர்கள், என்னைப் போல ! கடந்த ஒரு மணிநேரத்திற்கு முன்பிருந்து என்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்.
என்ன சொல்ல! முதலில் படிக்க நேர்ந்த கடிதங்களில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை, தவிர அவை அண்மையில் எழுதப்பட்டவை. எழுதியவர்களும் உயிரோடிருக்கிறார்கள், அடிக்கடி அவர்களைச் சந்திக்கவும் செய்கிறேன், என்பதால் அவற்றை அலட்சியம் செய்தேன். திடீரென கண்ணிற்பட்ட உறையொன்று மெலிதானதொரு நடுக்கத்தைத் தந்ததது. உறைமீது மிகப்பெரிய எழுத்துகளில் இருந்த எனது பெயரைக் கண்டதும் என் விழிகளில் நீர் கோர்த்தது. என்னுடைய ஆருயிர் சினேகிதன், இளமைக்கால தோழன், நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். என்ன ஆச்சரியம், கண்முன்னே அவன் தெளிவான வடிவில் நிற்கிறான். எப்போதும் காணும் இயல்பான புன்னகையை முகத்தில் தேக்கி, கைகள் இரண்டும் என்னை நோக்கி நீட்டியபடி இருக்கும், அவனைக் கண்டதும் எனது முதுகுத்தண்டு சிலிர்த்தது. நான் நேரில் அவனைத் திரும்பவும் பார்த்தேன், இறந்தவர்கள் திரும்ப வருவார்கள், பொய்யில்லை, உண்மை ! பிரபஞ்சத்தைக் காட்டிலும் நம்முடைய நினைவுகள் ஒரு பரிபூரண உலகம், மரித்த மனிதர்களையும் உயிர்ப்பிக்கக் கூடியது அதொன்றுதான்.
எனதுகை நடுங்கிக் கொண்டிருக்க, கண்ணீர் திரையிட்டக் கண்களுடன் அவன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த அனைத்தையும் வாசித்தேன், விம்மி அழுதுக்கொண்டிருந்த எனது இதயம் காயமுற்றிருக்க, கைகால்கள் முறிக்கபடும் மனிதரொருவர் வலிபொறுக்கமுடியாமல் தனது வேதைனையை வெளிபடுத்துவதுபோல நானும் புலம்பினேன்.
நதிமூலத்தைத் தேடி ஒருவர் பயணிப்பதுபோல, எனது கடந்தகால வாழ்க்கையில் பிரவேசித்தேன். பல வருட காலமாக நான் மறந்திருந்த மனிதர்களை அடையாளம் காண முடிந்தது, ஆனால் பெயர்கள் நினைவில் இல்லை. அவர்கள் முகங்கள் மாத்திரம் என்னுள உயிர்பெற்றன. எனது தாயின் கடிதங்களில் அக்காலத்தில் எங்கள் வீட்டில் பணியாற்றிய ஊழியர்களைத் திரும்பக் கண்டேன். எங்கள் வீட்டின் வடிவமும் வந்துபோனது, சிறுவயது பிள்ளைகளுக்கென்று ஒருவகை குணமுண்டு, அர்த்தமற்ற சம்பவங்கள் என்கிறபோதும் அவர்களுக்கு அதில் ஒருவகையான ஒட்டுதலிருக்கும், அன்று அத்தகையவற்றையும் நினைவுகூர்ந்தேன்.
அதுமட்டுமல்ல என்னுடைய தாய் அன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப உடுத்திய ஆடைகளும், அவைதரும் வகைவகையான தோற்றங்களும், அவற்றுக்குப் பொருத்தமாக அடிக்கடி அவள் கையாளுகிற சிகை அலங்காரங்களும் திரும்பவும் நினைவுகூர முடிந்தது. இறகுபோன்ற மெல்லிய பின்னல் வேலைப்பாடுகொண்ட கவுன் ஒன்றை அவள் சில நேரங்களில் அணிவதுண்டு, அக்காட்சி என் நினைவில் வந்துபோனது. அதிலும் அந்த ஆடையை அணிந்திருந்த ஒரு நாள் « மகனே ரொபெர் ! நீ நேராக நிற்க பழகிக்கொள்ளவேண்டும், தவறினால் கூன்முதுகோடு வாழ்க்கை முழுதும் இருப்பாய் ! »- என எச்சரித்தது, நினைவுக்கு வந்தது.
பிறகு மேசையின் மற்றொரு இழுப்பறையைத் திறந்தேன். எதிரே எனது இளமைக்கால காதல்அனுபவங்களை நினைவூட்டுவதுபோல பாலே நடனத்திற்குரிய ஒரு ஷூ, கிழிந்த ஒரு கைக்குட்டை, ஒரு கணுக்காலுறை, தலைமுடிகள், உலந்த பூக்களென்று வரிசையாக இருந்தன. என்னுடைய வாழ்க்கையில் இரண்டு காதல்கதைகள், அவற்றின் கதாநாயகிகள் தலை முழுவதுமாக நரைத்து இன்றும் உயிர்வாழ்கிறார்கள், அவற்றை எண்ணிப் பார்த்தபோது, ஒருபோதும் முடிவுறாத கசப்பான துன்பத்தில் மூழ்கினேன். தங்கச்சரிகைபோன்ற கேசங்கள் ஒட்டி உறவாடும் இளம் நெற்றிகள், கைகளின் தீண்டல்கள், உரையாடும் பார்வை. துடிக்கும் இதயங்கள், உதடுகளுக்கு உத்தரவாதம், தரும் புன்சிரிப்பு, தழுவலுக்கு அழைத்துச்செலும் உதடுகள்… முதல் முதல்…., முடியாமல் நீளும் அம்முத்தம் கண்களை மூடச் செய்து, கூடியவிரைவில் உடமையாக்கிக்கொள்ள இருக்கிறோம் என்கிற அளவிடமுடியாத இன்பத்தில், அனைத்து சிந்தனைகளையும் மூழ்கடித்துவிடும்.
முன்னாள் காதலின் இப்பழைய பிணையப்பொருட்களை கைகொள்ள எடுத்து, அவற்றை வெறித்தனமான தழுவல்களைக் கொண்டு மூடினேன். நினைவுகளால் சிதைக்கபட்டிருந்த என் ஆன்மாவில் அவை ஒவ்வொன்ன்றையும் அனாதையாகப்பட்ட நேரத்தில் எப்படி இருந்தனவோ அப்படித் திரும்பப் பார்த்தேன்; நரகத்தை விவரிக்க அனைத்து கட்டுகதைகளிலும் சந்திக்கிற, இட்டுக்கட்டிய வதைகளுக்கும் மேலானதொரு கொடுமையான சித்திரவதையை அன்று நான் அனுபவித்தேன்.
இன்னுமொன்று வாசிக்க இருக்கிறது. அது என்னுடையது, ஐமபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஆசிரியர் சொலவது எழுதுதல் என்ற பெயரில் எனக்கு கொடுத்தது :
« அன்பினிய எனது அம்மாவிற்கு,
இன்றெனக்கு ஏழு வயது. பகுத்தரியும் வயது, எனவே இவ்வுலகிற்கு என்னை நீ கொண்டுவந்தவள் என்கிற வகையில் உனக்கு நன்றி கூற இது உகந்த தருணம்.
உங்களை மிகவும் நேசிக்கும் மகன் »
ரொபெர்
எல்லாம் முடிந்தது. ஒருவழியாக நதி மூலத்தை அடைந்தது போல, எனது ஆரம்பத்திற்கு வந்தாயிற்று. என்னுடைய வாழ்க்கையில் எஞ்சியிருப்பதை அறிய முற்பட்டதுபோல எனது பார்வையைச் சட்டென்று திருப்பினேன். குரூரமான தோற்றத்துடன் ஒற்றை மரமாக முதுமை, அடுத்து காத்திருப்பது தள்ளாமையும், பலவீனமும். ஆக அனைத்தும் முடிந்தது, இன்று நான் யாருமற்ற அநாதை.
என்னுடைய கைத்துபாக்கி மேசைமீது, கைக்கெட்டும் தூரத்தில். தோட்டாக்களை நிரப்புகிறேன்….. ஒரு போதும் உங்கள் பழைய கடிதங்களை திரும்ப வாசிக வேண்டாம்.,,, »
ஆக அனேக மனிதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வது, இதுபோன்ற காரணங்களுக்காக. நாமோ இவ்வாறான முடிவுகளுக்கு மிகப்பெரிய துன்பங்கள் காரணமாக இருக்கவேண்டுமென நினைத்து வீணில் நேரத்தை செலவிடுகிறோம்.
17 avril 1883