‘கைரேகைக்கொடியில் கனவுப் பூ’ – பா. இரவிக்குமார்

« கலக்குரலைக் கர்னாடக க் காரனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ? »

படைப்பிலக்கியத்தில் கவிதை எழுதுவது அத்தனை எளிதான செயல் அல்ல .ருந்தும் தமிழில் அதிகம் கவிதை எழுதப்படுகிறது. இன்றைக்கு உலகில் அதிகம் கவிதை எழுதுபவர்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும். பதிப்பாளர்கள் கவிஞர்களைக் கண்டால் ஒடுகிறார்கள். இன்று கவிதை எழுதுபவர்களை (தமிழில்) மூவகையினராகப் பிரிக்கலாம். தமிழ் படித்து, யாப்புப் படித்து, கவிதை வாசிக்க மேடைகிடைத்தால் வாழ்த்துப்பா, இரங்கற்பா எனக் கவிதை எழுதிகொண்டிருப்பவர்கள். ஆண்டுக்கு ஐந்துகவிதை எழுதுவதால் இலக்கண சுத்தமாக எழுதுவார்கள். ஆனால் கவிதைக்குரிய இலட்சணங்களைக் கோட்டைவிட்டிருப்பார்கள். அடுத்தவர்கள் பதின் வயதினர். கொஞ்சம் தமிழ் ஆர்வம் கொஞ்சம் வயதுக்கோளாறு என்ற சுரவேகத்தில் கவிதை எழுத ஆரம்பித்து, ஏதாவதொரு சிற்றிதழில் பிரசுரமானதும், முக நூலில் வைரமுத்துவை திட்டுவார்கள் (உள்ளூர வைரமுத்துவாக வரும் ஆவல் இருந்தாலுங்கூட). சொந்தச் செலவில் கவிதைப் புத்தகம்போட்டு தொடர்ந்து உழைப்பவர்கள் நிலைபெறவும் மற்றவர்கள் தொலைந்துபோகவும் இதில் வாய்ப்பிருக்கிறது

மகாகவி பாரதிக்கு கவிதையில் வாழ்பவனே கவிஞன், கவிதை எழுதுபவன் அல்ல. அவன் கவிதையையே வாழ்க்கையாக உடையோன் . வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன். வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தல் என்பதென்ன ? வாழ்க்கை முழுதும் கவிதையாக வாழ்ந்து முடிபவன்.தனது காலத்தின் மனித வாழ்க்கையைக் கவிதைகளில் பதிவு செய்கிறவன், அதன் உயர்வு கண்டு பெருமிதமும், தாழ்வுகண்டு பெரும் சீற்றத்திற்கும் ஆளாகிறவன். அவன் « தேடிச் சோறு நிதம் தின்ன்று, பல சின்னசிறுகதைகள் பேசி » வாழ்ந்து கரைகிற மனிதக் கூட்டத்தில் ஒருவனல்லன். தமது மொழியாற்றலை கவிப்புலமையை சகமனிதன் உயர்வுக்கு உபயோகிக்கிறவன். சமூக பிரக்ஞையோடு கவிதை செய்பவன். எட்டயபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிவரை சமகால வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தவன், பாரதி. குயிற்பாட்டில் தத்துவமும், சொல்லத் தெரிந்திருந்தான், ‘கண்ணம்மா கண்ணம்மா’ என காதலில் உருகவும் அறிந்திருந்தான் . வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தலென்பதன் அடையாளம் இது.
பா. இரவிக்குமார் என்ற இந்த இளைஞரிடம் சகமனிதனைப்பற்றிய அக்கறை தெரிகிறது. இச்சமூகத்தின் போக்கு குறித்து க் கவலைப்படுபவராக இருக்கிறார். ஆக பாரதி வைத்திருக்கிற கவிஞன் சட்டைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் இளைஞர். பா. இரவிக்குமார் பெயருக்கு முன்னால் கவிமாமன்னன் , கவிவேந்தன், கவி நாட்டாமை என்கிற பட்டங்கள் எதுவுமில்லை. கவிஞர் என்ற சொல்லையும் தவிர்த்திருந்தார். ஆக நல்ல கவிதைகள் எழுதியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே அவருடையக் கவிதைத் தொகுப்பைத் திறந்தேன், ஏமாற்றம் அதிகமில்லை.

இத்தொகுப்பிலுள்ள முதல் கவிதை . எனக்கும் உங்களுக்குமான ‘கடைசி சந்திப்பு’
என வாசகர்களை மிரட்டுவதுபோன்றதொரு கவிதைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது.

கடைசி சந்திப்பு

கடைசி சந்திப்பு/ஏற்படுத்தும் ரணங்கள்/சொல்லி முடியாதவை
அறைக்குள் என்றால்/ ஆறுதலாகச்/சற்றே விசும்பலாம்
சாலையில் என்றால்/அபத்தமாக எதையோ/பேசவேண்டி இருக்கும்.

எந்த த் தருணத்தில்/பிரிகிறோம்/என்பதைச் சொல்ல முடியாது/துல்லியமாக
ஏதோ ஒர் ஏக்கத்தின்/அல்லது /ஏதோ ஒரு கனவின் /மரணம் அது
சபித்தவோ வாழ்ந்தவோ/ சக்தியற்று/ஒரு சிறுவனின்/குமுறலெனத்/துடிக்கும் நெஞ்சம்

உயிர் /அறுபடும் நொடியில்/கண்ணீரின்/ உயிர்ப்பு அது

இனி/பார்க்கவே கூடாது /என்ற முடிவுடனும்../ஒரே ஒரு முறை/
சந்திக்கமாட்டோமா /என்ற ஏக்கத்துடனும் /நாம் பிரிந்தத் தருணத்தில்தான்
நான் இறந்து போனேன்.

கவிதை என்பது இறுக்கமானது, சொற்களை விரயம்செய்யாமல் சொல்லவேண்டியவற்றைக் கவிதைக்குரிய உபகரணங்களைக்கொண்டு விளக்க முற்படுவது. இக்கவிதையில் கடைசி சந்திப்பு என்ற சொல்லே நிழ்வின் மொத்தபாரத்தையும் சுமந்து வதைபடுகிறது கடைசி சந்திப்பை ரணங்கள் எங்கிறார் கவிஞர். ரணங்கள் நாள்பட்டவை. ஆறாப்புண்களைத்தான் ரணங்கள் என்கிறோம். ரணங்ககளின் வலியை வார்த்தைகள் கொண்டு விளக்கமுடியாது. அதனால் தான் அதனை « சொல்லி முடியாதவை » எங்கிறார். கவிதைக்குரிய கருவிகளை நாடாமல் அதாவது உருவகம், உவமை என்று சுற்றி வளைக்காமல் « ஏதோ ஓர் ஏக்கத்தின் அல்லது ஏதோ ஒரு கனவின் மரணம் அது » என்கிறார். « சபிக்கவோ வாழ்த்தவோ சக்தியற்று ஒரு சிறுவனின் குமுறலென துடிக்கும் நெஞ்சம் » என்றும், « உயிர் அறுபடும் நொடியில் கண்ணீரின் உப்பு அது » என்றும் உருவகப்படுத்துகிறார். உண்மையில் கடைசிசந்திப்பு என்பது ஒரு வகையான பொய்யான வீம்புடனும், மீண்டும் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கத்துடனும் நிகழ்வதாலேயே « நாம் பிரிந்த தருணத்தில் தான் நான் இறந்துபோனேன் » எனக் கூறுகிறபோது « பெண்ணை ஏமாற்றும் வழக்கமான ஆணின் தந்திரமோ எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலன் இறந்திருந்தால் கடைசி சந்திப்பு என்ற கவிதையை எழுதியிருக்க முடியாது,

இன்றைய உலகில், அதிகாரமென்பது சகமனிதரை அடக்கி ஆள்வதற்கு என்பதோடு, அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவசியம் எனில் மொத்த மனிதர்களையும் அழித்தொழித்துவிட்டு தனி மனிதனாக அவன் மட்டும் மிஞ்சினால் கூட போதுமென்று நினைக்கிறான்.

« ஏன் எதற்கு என்று தெரியாமல்
யார் யாருக்காகவோ
ஆடவேண்டியிருக்கிறது

அதிகாரத்தை நிலை நிறுத்த
சகலரையும் பலிகொடுக்கையில்
அரசன் அல்லது அரசி நான்

துக்கம் தோய்ந்த விரல்களால்
எவர் எவரையோ
வெட்ட வேண்டியிருக்கிறது
……….

வெட்டப்பட்டுப் பரிதாபமாய்
வீழ்கையில்
ஒரு சாதாரண சிப்பாய் நான்

என்பவை ‘பொய் முகங்கள்’ கவிதையில் இடம் கிற வரிகளில் தோய்ந்துள்ள உண்மைகள் அனைவருக்கும் பொருந்தும்.

தொகுப்பிலுள்ள மற்றொரு முக்கியமான கவிதை, ‘கனவில் வரும் பிணங்கள்’. இதொரு கொடுங்கனவென்று தலைப்பு நமக்கு சொல்கிறது. அர்த்த ராத்திரியில் குழந்தை அலறி அழும். வளர்ந்தவர்கள் என்றால் நடு இரவில் திடுக்கிட்டு எழுவார்கள். வேர்வையில் நனைந்திருப்பார்கள். ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கமுயற்சிப்பார்கள். கனவு கொடுங்ககனவாகிப் போவதே பிரதானக் காரணம். மூளை நரம்பியல் வல்லுனர்கள் , உறக்க ஒழுங்கின்மையின் போது கொடுங்க்கனவுகள் எற்படுகின்றன என் கிறார்கள். நமக்கு எப்போது கொடுங்கனவு வருகிறது என்பது முக்கியமல்ல ? ஏன் கொடுங்கனவு காண்கிறோம் என்பதும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. உலகெங்கும் எதேதோ காரணங்ககளுக்காக மனித இனம் பிளவுண்டு மோதுவது, வெட்டி மடிவது இன்று தொடர்கதையாகி இருக்கிறது. சமயம், நிறம், இனம், சாதி, எனக் கட்டிப்புரள காரணங்களும் உள்ளன. ‘ பொய் முகங்களில்’ கவிஞன் தன்னுள் இருக்கும் கொலைவெறிச் சிமிழைத் திறந்துபார்க்கிறான். இங்கே அதற்கான புறக் காரணத்தைக்கூறி, படுகளத்தின் பார்வையாளாகி கையறு நிலையில் கதறுகிறான். எழுதியவர் தமிழ்க்கவிஞர், அண்டை மா நிலமான கர்னாடக படைப்பிலக்கியவாதி அல்ல, அவர்களுக்கு எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று. நாம் காகிதப்புலிகள். கொடுங்கனவு கண்ட கையோடு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திகொண்டால் சுபம் இக்கேடுகெட்ட சமுகத்தை இடித்துரைக்க பா. இரவிக்குமாரும் தயாரில்லை.
« திரிசூலங்கள் பற்றியும்
கொலைவெறிகொண்ட கண்கள் பற்றியும்
எதுவும் தெரியாமலேயே
அந்தக் குழந்தைகள் இறந்த து
எவ்வளவு நல்லது ?
……………………..
…………………………….

கனவில் ஒரு பிணம் வந்து
நீ இந்துவா ? எனக்கேட்டால்
கடவுளே !
என்ன பதில் சொல்வேன் ?

எனச் சங்க டத்தை அந்தக் கடவுளிடமே முறையிட்டால் சிக்கல் தீர்நது. கலக்குரலைக் கர்னாடக எழுத் தாளனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களென்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ?
இத்தொகுப்பில் உள்ள ‘கடைசி இரவு’, ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ , ‘சுதந்திரம்’, ‘இந்த வாழ்க்கை’ பிற முக்கியமான கவிதைகள்.
———————————————————————-

கைரேகைக் கொடியில் கனவுப்பூ

ஆசிரியர் பா. இரவிகுமார்

வெளியீடு

மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்

சென்னை  84

மு. அரிகிருஷ்ணன்

கடந்த ஒருவருடமாகவே நச்சரித்து வந்தார் . நானும் பிடிகொடுக்காமல் நழுவிவந்தேன் . இறுதியில் பிடிவாதம் ஜெயித்தது. பிடிவா த த் தி ன் பெயர் மு . அரிகிருஷ்ணன்  பல படைபாளிகளோடு என்னையும் களரி கலை இலக்கியம் மற்றும் கூத்துகலைஞர்கள் ஆதரவு அமைப்பு சேலம் அருகே ஏர்வாடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் நிகழ்விற்கு (2-1-16) அழைத்திருந்தார்கள். நண்பர் பஞ்சுவுடன்  நானும் கலந்துகொண்டேன்

அரிகிருஷ்ணன் புஜக்கட்டையும் தலைக் கிரீடமுமாக இருப்பாரோ என எதிர்பார்த்தேன். இல்லை நட்சத் திர எழுத்தாளர்களில் ஆரம்பித்து முதற்படைப்பு சிற்றிதழில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிற இளம் படைப்பாளர்வரை இங்கே அனைவருக்கும் தங்கள் இருத்தலை கவனம் பெறச்செய்ய குறைந்தபட்சம் கீரிப்பிள்ளை பாம்புச் சண்டையையாவது களமிறக்குகிறபோது (இலக்கிய சேவைதான் நம்புங்கள்) தன் இருத்தலை கூத்துக் கலைஞர்களின் அடையாளத் தேடலில் செலவிடுகிற மனிதரை எப்படி எடுத்துகொள்வது?. அரசியலைப்போலவேஎழுத்திலும் விளம்பரமே கரைசேர்க்கும் என்ற சூட்சமத் தீவில் அரிகிருஷ்ணானும் சிக்கி இருக்கிறார் . எனினும் சேலம் மாவட்ட கூத்துக்கலைஞர்களை அமெரிக்க மண்ணில் கால்பதிக்க, கிராமியத் திடல்களில் அறுவடை நாட்களில் பின்னிரவுகளில் தோல்பாவை கூத்துகளில் ஒலித்த குலுரலுக்குரிய முகங்களை ஆங்கிலத் தினசரிகளில் இடம் பெற, பார்வையாளரிடமிருந்து பெற்ற ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சன்மானத்தைச் சாராயக்டையில் சேர்க்கும்வரை தொட்டுமகிழும் கைகள் முன் முறையாக விருதுகளையும் சான்றிதழ்களையும் காமெரா முன்பாக கையிற்பிடிக்க வாய்ப்பினை அளித்த அரிகிருஷ்ணனை நாம் மறந்தாலும் கூத்துக் கலைஞர்கள் மறக்கமாட்டார்கள் அரிகிருஷ்ணனோடு, அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவுகளும் சொல்லப்போனால் கிராமம் முழுக்க பல மாதங்கள் சோர்வின்றி உழைத்கிறார்கள் என்பது நடந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்தன.

அரிகிருஷ்ணன் பணி அரியப் பணி . தற்போது தமிழ் நாட்டில் கலை இலக்கியதுறையில் இருக்கிறவர்கள் சென்ற தலைமுறையினர் இல்லை. ஆரோக்கியமான பொருளதார சூழலில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் அரிகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிக்குத் துணை நிற்கிறார்கள்.  சாகித்ய  அகாடமி  அளித்த விருதையும் பணத்தையும் சுயமரியாதையுள்ள நமது எழுத்தாளர்கள் திருப்பித் தாராமற் போனதன் காரணம் அவர்கள்  ஒருவேளை அரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவுவதாக இருக்கலாமென என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கூறினார். கலை இலக்கியதுறை சார்ந்த மனிதர்கள் பிரச்சினையில் உழல அதைப் பார்த்துகொண்டிருக்க எப்படி   அவர்க ளுக் கு மனம் வரும்?  ஆக இனி நலிந்த எழுத்தாளர்களுக்கு பிரச்சினை வராமற் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  பரிசு பெறும் எழுத்தாளர்களைச் சேர்ந்தது என்பதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.
————————————————————–

நன்றி நன்றி

கடந்த  டிசம்பர் 27 மாலை நண்பர் பேராசிரியர் க.பஞ்சு தலைமையில் எனது நாநன்கு நாவல்கள் பற்றிய  திறனாய்வும் , திறனாய்வாளர் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு  – ‘வாழ்வின் பன்முகப் பிரதிகள்’ , நண்பர் பஞ்சுவைப் பற்றிய ‘இலங்கு நூல் செய வலர் – க. பஞ்சாங்கம்’  ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன.

நண்பர் சீனு தமிழ்பணி கடந்த ஆண்டு ‘காப்காவின் நாய்க்குட்டி’ புத்தக வெளியீட்டின்போது எனது நூல்கள் பற்றிய திறனாய்வை  நடத்தவேண்டும் என விரும்பினார். உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டார் என்றுதான்  நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். இந்த வற்புறுத்தல் பின்னர் நண்பர்கள் பஞ்சு, நாயகர் இருவர் ஊடாக வலுப்பெற்றது . நான்கு நாவல்கள், ஐந்து  சிறுகதைத் தொகுப்புகள் ஒன்பது கட்டுரை தொகுப்புகள் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஐந்து மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து  பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் என செய்திருந்தும் எனது இருத்தல் அத்தனை முக்கியத்துவம் பெற்றதல்ல.   நான் அறியப்படவேண்டும் எனவிரும்பிய நண்பர்களுக்கு நன்றி. தமிழர்கள் நினைவுகொள்ள மறந்தாலும் தமிழ் என்னை நினைவுகொள்ளூம் என்ற நம்பிக்கையிலேயே எழுதிவருகிறேன். இப்படிச்சொல்வதற்குக் காரணம் இருக்கிறது  நான் தனியே தமிழுலகில் ஈட்டாத புகழை அம்பையின் சிறுகதைகளை ஒரு பிரெஞ்சு பெண்மணியின் ஒத்துழைப்புடன்  இணைந்து செய்ததில் இன்று பிரெஞ்சு படைப்புலகில் எனது பெயரும் பதிவாகி இருக்கிறது. எனது சிறுகதையை Cousins de personnes  என்ற இதழும் பிரசுரித்துள்ளது.  கார்த்திக் தேவராஜ் என்றகணினித் துறை இளைஞர், ஆங்கிலத்தைத் திறமையாகவும் இலாவகமாகவும் கையாளக்கூடியவர்,  பெங்களூரிலிருந்து நீலக்கடலை மொழிபெயர்க்க விரும்பி  முதல்  அத்தியாயத்தை மொழிபெயர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாயகர், ஒரு பிரெஞ்சு நண்பர் ஆகியோரின் உதவியுடன் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களால் மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்படுகிறது.

 

தமிழில்  நல்ல எழுத்துக்களைக் காழ்ப்பின்றி பாராட்டுகிற மனிதர்களும் இல்லாமில்லை. திருவாளர்கள் க. சச்சிதானந்தம், வே. சபா நாயகம், ரெ. கார்த்திகேசு, பிரபஞ்சன், தமிழவன்,க. பஞ்சசாங்கம்,  நா. முருகேசபாண்டியன் , தேவமைந்தன்; இன்றைக்குப் பா. ரவிக்குமார், க. முத்துகிருஷ்ணன், இலண்டனிலிருந்து சிறந்த வருங்க்கால புலம்பெயர்ந்த எழுத்தாளராக பரிணமிக்க உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் ஆகியோர் நான் கேட்டுக்கொண்டு மதிப்புரை எழுதியவர்களல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  ஆக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைத்தால் எழுத்தும் ஊட்டத்துடன் இருந்தால்  நமது எழுத்துக் கவனிக்கப்படும் என்ற  நம்பிக்கை வேண்டும்(குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு).    இது கணினி உலகம், 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலமை இன்றில்லை.நல்ல படைப்புகள் காலம் தாழ்ந்தும் கவனிக்கப்படும், உங்கள் மீது நம்பிக்கை வையுங்க்கள். இல்லையென்றால்  சு.ரா வின் இனிய நண்பர் எம். எஸ் தொலைபேசியில் அழைத்து ‘காஃப்காவின் நாய்க்குட்டி’  நாவலைப் பாராட்டுவாரா? பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக்  தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமா?இங்கே  செஞ்சி இலக்கிய வட்டத்தின் துணைகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்திவரும்  நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கவே செய்கிறார்கள்.குறுகிய காலத்தில் நான் பெற்ற அடையாளத்திற்கு இந்த நல்ல உள்ளங்க்களே காரணம். இளைஞர்களே சோர்வின்றி எழுதுங்கள்.

மீண்டும் 27 ந்தேதி நிகழ்ச்சிக்கு வருகிறேன்  வித்திட்ட நண்பர் சீனு தமிழ்மணி எனது இலக்கிய பயணத்திற்கு வழித்துணையாக அமைந்து உடன் பயணிக்கும்   நண்பர் சு. ஆ வெங்கிட சுப்புராய நாயகர், எழுத்தாளன் என்பவன் எழுதுவதுபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவன்  நான். அத்தி பூத்தாற்போல சிலர் இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன் , வண்ணதாசன், வண்ண  நிலவன், கண்மணி குணசேகரன் என்பவர்களோடு அதிகம்  நெருக்கம் இல்லையென்றாலும்  அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள்  என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே சாட்சி.   பொய்யான, பகட்டான தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில்  நெருங்கிப்பழகி பிரம்மிக்கின்ற ஒருவர்  பேராசிரியர் பஞ்சு, அவர் வழிகாட்டுதலில்  நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி  சிறப்பாக முடிந்தது.    நண்பர்கள் சீனு தமிழ்மணி, நாயகர், பேராசிரியர் பஞ்சு  ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்

காலசுவடுபதிப்பகம் ஐந்து  நாட்களில் புத்தகத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள்  நண்பர் கண்ணன் எளிமைக்கும் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் அறியப்பட்ட இனிய நண்பர் களந்தை பீர் முகம்மது அவர்களை  நிகழ்ச்சியில் பங்க்கேற்க அனுப்பியும் வைத்தார். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மிகவும் நன்றி

நண்பர்கள் மற்றும் எனது அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர்கள் அ.ராமசாமி, ந முருகேசபாண்டியன், பாரதிபுத்திரன் , பா. ரவிக்குமார், நறுமுகை ஜெ ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றிகள்

 

எனது பள்ளி தமிழாசிரியர்கள் திருவாளர்கள் நாகி, ராஜேந்திரன், மூத்த இலக்கியவாதியும் திறனாய்வாளர்மான வே. சபா நாயகம், தேவமைந்தன், நந்திவர்மன் என என்மீது அன்புகொண்டுள்ள பெருந்தகைகள் கலந்துகொண்டது பெரும் பேறு. அவ்வாறே அ. பெருமாள் , பூங்குழலி பெருமாள் தம்பதிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த  நன்றிகள்

 

அன்புடனும் பணிவுடனும்

நா.கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் திறனாய்வு

வணக்கம்

அன்பினிய நண்பர்களுக்கு

தற்போது புதுச்சேரியில் இருக்கிறேன், கைத் தொலைபேசி எண் / 98 43 13 93 03

எதிர்வரும் டிசம்பர்  27 அன்று மாலை 4மணி அள்வில் எனது நான்கு நாவல்கள் குறித்த திறனாய்வு நண்பர்கள் முயற்சியால் புதுச்சேரியில் நடைபெற உள்ளது  மூத்த திறனாய்வாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.  நிகழ்ச்சி பற்றிய விபரம் விரைவில்

வணக்கத்துடன்

நா கிருஷ்ணா

முனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்து

panchu
பேராசிரியர் பஞ்சு இடதுசாரி சிந்தனையாளர், மொழி அறிஞர், திறனாய்வாளர், நவீனப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டவர், பெண்ணியவாதி என்றெல்லாம் அறியப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் தலித் இலக்கிய ஆதரவாளராகவும் இருப்பதில் வியப்புகளில்லை. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே என்று தமது படைப்புகளைக்கொண்டும்(1), உரைகளிலும், தமது தலித் ஆதரவு நிலையை தொடர்ந்து உறுதி செய்துவருபவர்.
தமிழ்ச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் கடந்த காலத்தினும் பார்க்க இன்றைக்குக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பங்களிப்பை மறுக்கவியலாதென்றாலும், அவர்கள் இன்றியும் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும். பேராசிரியர் கட்டுரைகளிலேயே அதற்கான விடைகள் உள்ளன. மனிதர்களைக் காட்டிலும் நீதியை எண்பிக்க, ‘காலம்’ ஒருபோதும் தவறியதில்லை எனினும் அதற்கு நாம் காத்திருக்கவேண்டும். எப்போது அதனைச்செய்யும் இன்றா நாளையா, அடுத்த தேர்தலிலா? நூறு வருடங்கள் கழித்தா? நமக்குத் தெரியாது என்பது அதிலுள்ள சிக்கல். அதுவரை? ஒடுக்கப்பட்டவர்களின் கதியென்ன? பள்ளிகூடத்தைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதால் மழைக்கு அங்கு ஒதுங்கிக்கொள்ளலாமா? பொறுமையுடன் சகித்துக்கொண்டு அல்லது மைக் கிடைத்ததென்று படபடவென்று பொறிந்துதள்ளி கண்ணைக் கசக்கி மீடியாவில் இடம்பிடித்ததால் தீர்வு கிடைத்துவிடுமா? பிறவிடயங்களைப்போலவே இப்பிரச்சினையிலும் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கிறது. அது, பொதுவில் பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் முயற்சியில் விமோசனத்திற்கு வழிகாணவேண்டுமென்கிற உண்மை. மீட்பதற்கு ‘மெசியா (Messiah) என்றொருவர் வரமாட்டார் என்ற உண்மை. இன்னொரு அய்யோத்தி தாசரோ பெரியாரோ, அம்பேத்கரோ, உடனடியாக வருவார்களென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்ற உண்மை. ஏழேன் பொத்தியே (Eugène Pottier) என்றொரு பிரெஞ்சுக் கவிஞர் பாடிய புரட்சி பாடல்வரிகள்தான் இந் நேரத்தில் நினைவுக்கு வருகிறது:

மகா இரட்சகரென்று எவருமில்லை
கடவுளில்லை, சீசரில்லை,
மனிதர் உரிமையைக் காட்டிக்காக்கும்
ரொமானியர்களின் ட்ரிப்யூனும் இன்றில்லை
உற்பத்தியாளர்களே, நம்மை நாமே
காப்பாற்றிக்கொள்வோம்! (1)
இங்கே கவிஞர் உற்பத்தியாளர்கள் என்றழைப்பது முதலாளிகளை அல்ல, தங்கள் உழைப்பை நல்கி உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் தொழிலாளர்களை. உழைக்கும் வர்க்கம் புத்தி தெளிந்தாலன்றி விமோசனமில்லை என்கிறார் கவிஞர்.
ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவர்க்கும் பாடல் பொருந்தும். இந்தியாவை பொறுத்தவரை வெகுகாலமாகவே இங்கே வர்க்கபேதம் பற்றிய புரிந்துதுணர்வை சாக அடிப்பதே சாதிய வெறிதான். ஓரிடத்தின் சமூகம், பூகோளம், பண்பாடு, தனி மனிதனின் அபிலாஷைகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாத மார்க்ஸியமும் இதற்குப் பெரிதும் உதவமுடியாது. இந்தப்பின்னணியில்தான் இந்தியாவில் தலித் அரசியல், தலித் இலக்கியம் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்
க. பஞ்சாங்கம் தலித் சமூகத்திற்கு எதிரான அவலங்கள், தலித் இலக்கியம் இரண்டையுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஓடி ஒளிதலோ, மழுப்பலோ இன்றி மனதிற்கு நேர்மையாகத் தோன்றுபவற்றைச் சொல்வதில் வழக்கம்போல தெளிவும் துணிவும் இருக்கின்றன. ‘தலித்’ சமூகத்தை முன்வைத்து கட்சி அரசியல், இலக்கிய அரசியல் இரண்டையும் பேசுகிறார். இரண்டிலுமே விடியல் என்பது முற்றாக அச்சமுதாயமக்களைச் சார்ந்தது என்பதை நம்பும் க.பஞ்சு, அச்சமூகத்திற்கு தலித் ஆதரவாளர்களின் பங்களிப்பும் அவசியமானதுதான் என்பதைத் தெரிவிக்கும் பஞ்சு, அதனைத் தலித் அல்லாத பிறமக்களின் கண்ணோட்டத்துடன் எடைபோட்டுப் பார்க்கிறார்.
‘தலித்’ என்ற சொல்லை தலித் அல்லாதவர்கள் பயன்படுத்துகிறபோது பொதுவில் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. தலித் ஆதரவாளர்கள் அனைவருமே பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப் போன்றவர்கள் அல்ல. இங்கு தலித் ஆதரவாளர் எனப் பிரகடனபடுத்திக்கொண்டு அரசியல், இலக்கியம் போன்றவற்றில் ஒரு பாசாங்கு அரக்கு மாளிகையை எழுப்புபவர்கள் அநேகம். நூறு குறைகள் இருந்தாலும், புல்லுக்கும் நீர்பாய்ச்சுபவர்களாக இருப்பினும், தலித் மக்களுக்கு நம்பகமானவர்களாக தலித் தலைவர்களே இருக்க முடியும். அதுபோலவே பூரணமானதொரு தலித் இலக்கியத்தைத் தலித் அல்லாதார் படைத்துவிடமுடியாது. தலித்திற்கு ஆதரவாக இருப்பதுபோல தலித் தலைவர்கள் அல்லாத கட்சிகளும் காட்டிக்கொள்கின்றன. இடது சாரி கட்சிகளைத் தவிர்த்து பிறவற்றை இவ்விடயத்தில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கட்சி சார்ந்த தலித் அரசியலை மறந்துவிட்டு, இலக்கிய அரசியலில் தலித்’ என்ற சொல்லின் நிலமைஎன்ன? அதன் ஆகிருதி என்ன, வீச்சு என்ன? நிகழ்த்தும் விளையாட்டுகள் என்ன? தன் இருத்தலை ஆழமாக வேரூன்றிக்கொள்ள போதுமான அடியுரம் அதற்குண்டா? பிறர் ஆதரவு அவசியமா என்பதை இனி பேராசிரியர் எழுத்துக்கொண்டே பரிசீலிக்கலாம்.
1. தலித் இலக்கியத்தில் ஆதரவாளர்களின் பங்கு
இக்கட்டுரை முழுக்க முழுக்க தலித் அல்லாத பிறர், தலித் இலக்கியவாதிகளுக்கு, தலித் எழுத்துக்களுக்கு உதவக்கூடிய யோசனையை வழங்குகிறது. ‘இது தலித் இலக்கியத்திற்கான காலம்’ என்ற முழக்கத்துடன் கட்டுரை தொடங்குகிறது. அதை நியாயப்படுத்த தலித் எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இலக்கியத்தில் முன்னெப்போதும் கண்டிராத வகையில் விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருப்பது முனைவர் க. பஞ்சுவினால் சுட்டப்படுகின்றன.
தலித் எழுத்து’ யார் எழுதுவது? என்ற கேள்வியும் ‘தலித் ஆதராவளர்’ செய்ய வேண்டியதும்.
தலித் எழுத்தை தலித்தாகப் பிறந்தவர்தான் எழுத வேண்டுமா? தலித் அல்லாத பிறர் எழுத முடியாதா என்ற கேள்வியைக்கேட்டு, அதற்குப் பதிலளிக்கின்ற வகையில் நீண்டதொரு விளக்கத்தைப் பஞ்சு தருகிறார். இங்குதான் ‘தலித் ஆதரவாளர்’ என்ற பதம் கட்டுரை ஆசிரியரின் உபயோகத்திற்கு வருகிறது.
“படைப்புத் தளத்தில் தலித் ஆதரவாளர்கள், தலித்தியத்திற்கு சார்பாக நின்று கவிதையோ, கதையோ, நாவலோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துக்கள் « தலித் ஆதரவாளர்களின் எழுத்துக்கள் அல்லது படைப்புகள »” என்ற தனித் தலைப்பின் கீழ் பகுக்கப்பட்டு தலித் இலக்கியத்திற்குப் பக்கபலமாக நின்றுதான் வினை புரிய முடியுமே ஒழிய தலித் இலக்கியமாகக் கருதிவிட முடியாது.” எனக்கூறும் பேராசிரியர், ” இலக்கியத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ‘நம்பகத் தன்மை’ இந்த ந்ம்பகத் தன்மையை தலித்தாகப்பிறந்து, வாழ்ந்து வளர்ந்த ஓர் உயிரிதான் சரியாகக் கட்டமைக்க முடியும்” எனக்கூறி தலித் இலக்கியத்தை யார் எழுதவேண்டுமென்ற விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறார்.
இந்த இடத்தில் எனக்கு அமெரிக்க வரலாறு நினைவுக்கு வந்தது. 17ம் நூற்ராண்டில் அடிமைகளாக வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களாக அடையாளம் பெற்றபோதும், ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்க மண்ணிற் குடியேறிய ஐரோப்பிய அமெரிக்கரோடு ஒப்பிடுகிறபோது வாழ்நிலை மெச்சத்தகுந்ததாக இல்லை. ஒரு மனித உயிரிக்குத் தரவேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு பலகாலம் துன்பத்தில் உழன்று, விரக்தியின் உச்சத்தில் புரட்சியில் குதித்தனர். அமெரிக்க வெள்ளை இனத்தவருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்தாகவேண்டும் என்ற சூழலில் அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் இசை, தங்கள் உள்ளக் குமுறலைப் பறையடித்து தெரிவிக்க விரும்பியர்களைப்போல Drums அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. ( ஆய்வு மாணவர்கள் கவனத்திகொள்ளவேண்டிய பொருள்) கையில் கிடைத்தவற்றையெல்லாம் (கரண்டி, தட்டு, எதையும் விடுவதில்லை) தட்டி ஓசையை எழுப்ப ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக பின்னாளில் ஜாஸ் இசை, இலக்கியம் எனத்தொட்டு அவர்களின் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்தனர்:
“The black folks make the cotton
And the white folks get the money.”
என்றெல்லாம் எழுதி, தங்கள் ஆறாத் துயரை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் எஜமானர்களாக இருந்து இவர்களை துன்புறுத்தி வேலைவாங்கிய வெள்ளை துரைமார்களில் ஒன்றிரண்டு நல்ல துரைமார்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களால் இவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? அதை பாதிக்கப்பட்ட கருப்பரின மக்களின் குரலாகக் எடுத்துக்கொள்ள முடியுமா? இசைக்கும் இலக்கியத்திற்கும் நேர்மையாக நடந்துகொண்டதாகப் பொருள்படுமா?ஆக, நண்பர் க. பஞ்சு கூறுவதுபோல தலித் இலக்கியத்தையும் ஒரு தலித் படைப்பதுதான் முறை, நியாயம். பேராசிரியர் கூறுகிற நம்பகத் தன்மைக்கும், இலக்கிய நேர்மைக்கும், அவை மட்டுமே உதவும்.
அ. வாசகர்கள்
தலித் ஆதரவாளர்கள் செய்யவேண்டியது தலித் இலக்கியத்திற்கு பக்கபலமாக நிற்பது. க.பஞ்சு தரும் யோசனை. வாசகர்களாக இருந்து, அப்படைப்புகளுக்கு முன்னுரிமைதருவது: “வாசகர் என்ற தளத்தில் தலித் ஆதரவாளர்கள் தலித் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பினை தலித் எழுத்துக்களை விலைக்கு வாங்கி விற்பனைக்குப் பக்க பலமாக நிற்க முடியும்” என்கிறார்.
ஆ. திறனாய்வாளர்கள்
“தலித் இலக்கியத்தினை ஒரு தலித்தாகப் பிறந்தவர்தான் படைக்கவேண்டும் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்ததுபோல தலித் இலக்கியத்தை மற்றொரு தலித்தே திறனாய்வு செய்யவேண்டும் என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை” – என க. பஞ்சு வருத்தப்படுவதில் முழுவதாக உடன்பாடில்லை. தலித் இலக்கியங்கள் ‘தலித்’ அடையாளம் என்கிற சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்தாதுலும், அவை தமிழ் இலக்கியத்தின் கிளைப் பிரிவை சேர்ந்தது. மாராத்திய தலித் இலக்கியமும், தமிழ்த் தலித் இலக்கியமும் வேறுபட்ட மொழியையும், வேறுபட்ட உரையாடலையும் நடத்த வாய்ப்பிருக்கிறது இதனையெல்லாம் உள்வாங்கிக்கொள்கிற திறனாய்வாளர் பொது நிலத்திலிருந்துதான் வரவேண்டும். தலித் திறனாய்வாளர் தலித் சார்பு நிலை எடுக்கும் ஆபத்துமுள்ளது. தலித் இலக்கியத்தின் குரல், தலித் மக்களுடைய குரலென்றாலும், தலித் அல்லாத பிறரிடத்திலும் போய்ச்சேரவேண்டும், அவர்கள் வலிகளை தலித் அல்லாத பிறர் உணர்வதுதான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும். இந்நிலையில் அவ்வலியை பகிர்ந்துகொள்ள முடிந்த, இலக்கியம் அறிந்த, வாசிப்புத் திறன்கொண்ட நடுநிலை திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்வதில் எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாதென நினைக்கிறேன். முனைவர் க.பஞ்சுவே நல்ல உதராணம்.
இ. இதழ்கள் பதிப்பகங்கள்
இங்கே தமி¢ழ் ஊடகங்கள், சிற்றிதழ்கள் தலித் இலக்கியத்திற்குச் செய்துவரும் பங்களிப்புகளும், இவற்றைத் தவிர தலித் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ்கள் அளித்துவரும் பிரத்தியேகப் பங்களிப்புகளும் நினைவுகூரப்படுகின்றன. தலித் இலக்கியத்திற்கு ஆதரவாக இருந்துவரும் பதிப்பகங்களைப் பட்டியலிடும் க.பஞ்சு அவற்றை சந்தேகிக்கவும் செய்கிறார். “தலித் அரசியலும் தலித் இலக்கிய சொல்லாடலும் முதலிடத்தை நோக்கி நகர்கிற ஒரு காலகட்டத்தில், அவைகளை நுகர்வுபண்டமாக மாற்றிச் சந்தைச் சரக்காக விற்க முயல்கிற பதிப்பகத்தாரையும் வெகுஜன ஊடகத்தையும் தனியே அடையாளம் கானவேண்டும் என்றும் சொல்லத் தோன்றுகிறது” என்கிற பஞ்சுவின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் தலித் இலக்கியத்தின்மீது பதிப்பகங்கள் காட்டும் அக்கறைக்குக் காரணம் எதுவாயினும், அவர்கள் தரும் ஒத்துழப்பு தலித் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. தலித் இலக்கியமும் தலித் ஆதரவாளர்களும்
க.பஞ்சுவின் இக்கட்டுரை தலித் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என்னென்ன சிக்கல்களைப் எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறது.

அ. ‘பிராமணர் அல்லாதவர்களும்’ – ‘தலித் அல்லாதவர்களும்’
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறியவந்த ‘பிராமணர் அல்லாதவர்கள்’, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறியவந்த தலித் அல்லாவதர்கள்’ ஆகிய இரண்டு சொற்களையும் கொண்டு சில உண்மைகளை விளக்குகிறார்.’ « பிராமணர் அல்லாதவர்’ என்று கட்டும்போது அல்லாதார் நடுவில் பிராமணர்களுக்கு ஆதரவாளர்களாகச் சிலரும் உருவாயினர் என்பதைப்போல, ‘தலித் அல்லாதவர்’ என்ற மனப்பான்மை உயர்சாதியினர் நடுவில உருவாகும்போது ‘தலித் ஆதர்வாளர்கள்’ எனச் சிலரும் உருவாலியுள்ளனர். ஆனால் ‘பிராமணர் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ‘தலித் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ஒன்றல்ல என்பதை யாரும் எளிதாக புரிந்துகொள்ள முடியும் »” – என்கிற பேராசிரியரின் கூற்று முழுக்க முழுக்க உண்மை . இதனை அடிப்படையாகக்கொண்டு தலித் ஆதர்வாளர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை வரிசைப்படுத்துகிறார்.
ஆ. தலித் ஆதரவாளர்கள் புறக்கனிக்கப்படுகின்றனர்
“பிராமண ஆதரவாளராக இயங்கும்போது சமூக அந்தஸ்தும் உயர்வும் கூடுவதற்குத் தமிழ்ச் சமூகத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால் தலித் ஆதரவாளராக இயங்கும்போது தலித்துகளுக்கு ஏற்படுவதுபோலவே தாழ்வும் புறக்கனிப்பும் இழிவும் வந்து சேர்கின்றன” – என்கிறார்
பிராமண ஆதரவாளர்கள் ஒரு படிமேலே போய் பிராமணர்களே வியக்கும்வகையில் தங்களைப் பிராமணர்களாக கற்பிதம் செய்துகொண்டு வலம் வந்ததும் இங்கு நடந்துள்ளது. அதற்கு மாறாக தலித் ஆதராவாளர்கள், தாங்கள் தலித் அல்லவென்று அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் கூறுவதைப்போல தலித்துகளுக்கு ஏற்படும் தாழ்வும் புறக்கணிப்பும் தமக்கு நேர்ந்துவிடக்கூடாதென்கிற எச்சரிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இ. தலித் ஆதராவளர்களிடத்தில் தலித் மக்கள் கொள்கிற சந்தேகம்.
‘தலித் ஆதரவாளர்கள்’ தங்களை முன் நிறுத்திக்கொள்ளாமல் தங்களைத் தாங்களே கண்கானித்துகொள்ளவேண்டியதிருக்கிறது, காரணம் தலித் ஆதரவாளர்களிடத்தில் தலித் மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. குறிப்பாக இலக்கிய தளத்தில் இத்தகைய சந்தேகப் பார்வைகள் தீவிரமாக வெளிப்படுகின்றன. இலக்கிய தளத்தில் இயல்பாகவே விளங்குகின்ற போட்டி, பொறாமை, தன்னை நிலைப்படுத்த முயலும் தந்திரம் எல்லாம் சேர்ந்து தலித் ஆதரவாளர்களாக இருப்பது பன்மடங்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது . இந்த நிலையில் “மேல் சாதி மேட்டிமைப்பார்வை உனக்குள்ளும் இறைந்து கிடக்கிறது” என்ற குற்ற சாட்டிற்கு உள்ளாவோம் என்ற நிலைக்கு தலித் ஆதரவாளர்கள் தள்ளப்படுகின்றனர்.” என்கிற பேராசியரின் கூற்றும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
தலித்துகள் நம்மை ஏன் சந்தேகிக்கிறார்கள்?” எனத் தலித் ஆதரவாளர்கள் யோசிக்க வேண்டும்; “நம்மை ஆதரிக்கிறவர்களை ஏன் சதேகிக்கிறோம்?” என்ற கேள்வியைத் தலித்துகளும் தம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்

.
தலித் ஆதராவளர் ஒரு சிலரின் திருதராட்டிர தழுவலை, தலித்துகள் புரிந்துகொண்டிருப்பது அவற்றில் ஒன்று. சூடுபட்ட பூனைகள் எல்லா பாலையும் சந்தேகிக்கவே செய்யும் என்பதுமனித இயல்பு. தவிர மனிதர் பண்பில் ‘ஆதரவாளர்’, ‘பாசக்காரர்’, ‘உடன் பிறவா’ சொற்களெல்லாம் பயணாளிக்கு இலாபத்தைத் தருமென்றால் கொண்டாடப்படுவதும், நட்டத்தைத் தருமென்றால் தூக்கி எறியப்படுவதும் இயற்கை. நம்வீட்டுக் குழந்தையைக் தூக்கலாம், கொஞ்சலாம், பரிசுகள் அளிக்கலாம். தவறிழைக்கிறபோது தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அடுத்தவீட்டுக் குழந்தையென்றால் தூக்கவும் கொஞ்சவும் பரிசளிக்கவும் மட்டுமே உரிமையுண்டு. பத்து நாள் கொஞ்சியிருக்கின்றேனே, ஒரு நாள் கண்டித்தால் என்ன தப்பு என்று நினைத்தோமென்றால் முடிந்தது. இனி எங்கள் வீட்டிற்கு வராதே எங்கள் குழந்தையைத் தூக்காதே என்கிற கண்டிப்புக் குரலைக் கேட்க வாய்ப்புண்டு. தலித் படைப்பாளிகளும் தங்களுடைய எழுத்தைப் பாராட்டுகிற தலித் அல்லாதாரை வாழ்த்துவதும், அதே தலித் அல்லாதார் எதிர்மறையான கருத்துகளை வைக்கிறபொழுது அவர் நேர்மையைச் சந்தேகிக்கவும் செய்வதென்பது இயல்பு.
ஈ. தலித் ஆதரவாளரின் இருப்பு
« தலித் இலக்கியத்தைத் தலித்துதான் படைக்க முடியும் என்ற நிலையில் தலித் ஆதரவாளர் எழுத்தும் தலித் எழுத்தாக முடியாத நிலையில், அவருடைய இருப்பே வினாக்குறியாகிவிடுகிறது. இன்னிலையில் தலித் இலக்கியம் குறித்தே பேசிக்கொண்டிருந்தால், தன் எழுத்துக்குறித்து பேசுவதற்கான சூழலைஎப்படிக் கட்டமைப்பது » என்ற நெருக்கடி அவருக்கு ஏற்படுகின்றது. எனவே « சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தலித் ஆதரவாளராக வெளிப்படுகிற படைப்பாளிகளில் சிலர், இலக்கிய தளத்தில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர் » எனப் முனைவர் க.பஞ்சு கூறுவதிலும் பொருளுண்டு. தலித் எழுத்தாளர்களே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள மந்திர தந்திர பிரயத்தனங்களில் பெரும் பொழுதைக் கழித்துக் கவனமாக இருக்கிறபோது, ஊருக்கு உழைத்து என்ன பலன் கண்டோம் என்ற கேள்வி ஆதராவாளருக்குத் தோன்ற தவறினாலும், அவர் நலனின் அக்கறைகொண்ட நான்குபேர் நினைவூட்டவே செய்வார்கள். « தலித் இலக்கியம் தோன்றிய அளவிற்குத் தலித் இலக்கியம் குறித்த எழுத்துகள் பெரிதும் தோன்றவில்லை » என்கிற க.பஞ்சுவின் ஆதங்கத்தை துறைசார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

உ. தலித் இலக்கியங்கள் இரக்கத்தை எதிர்பார்க்கின்றனவா?
“பொதுவாக எல்லா இலக்கியத்திற்குள்ளும் உள்ளோடும் ரத்தத் துடிப்பாக நின்று இயங்கிக்கொண்டிருப்பது “இரக்க உணர்வை- கருணை மனோபாவத்தை” உற்பத்தி செய்கிற முயற்சிதான், தலித் இலக்கியத்திற்கும் இந்த இரக்க உணர்வை உற்பத்தி செய்வதுதான் அடிப்படையாக அமைந்துள்ளது; தலித் கவிதைகளிலாவது ஒரு வகையான முழக்கமிக்க அர்சியல் கவிதைகளைக் கானமுடிகிறது. புனைகதைகளில் இந்த இரக்க உணர்வு உற்பத்திதான் பிரதானமான ஒன்றாகச் செயல்படுகிறது. அதனாலேயே கூடத் தலித் புனைகதைகள் பலவும் எல்லா மொழியிலும் சுயசரிதை இலக்கியமாகவே வெளிப்பட்டு பலருக்கும் வாசிப்புப் பொருளாக விளங்குகின்றன, எனக் கருத வாய்ப்பிருக்கிறது” – என்ற பஞ்சுவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “தலித் இயக்கமும், தலித் இலக்கியமும் பாரதம் தழுவியதாக உலகம் தழுவியதாக பரந்து விரிந்த தளத்திற்கு நகர்ந்திருக்கின்றன” என்கிற பஞ்சாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொண்டாலும், பஞ்சு தெரிவிக்கிற உலகத்தில் ( நமக்கு உலகம் எனப்படுவது இன்றுவரை மேற்குலகும், வட அமெரிக்காவுமாக இருப்பதன் அடிப்படையில்) தலித்துகளின் குரலாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பார்க்கப்படுகிறதே அன்றி இலக்கியமாக பார்க்கப்படுவதில்லை, என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு எமே செசேரோ (Aimé Césaire,) லெயோ போல்ட் செதார் சங்கோர்( Léopold Sédar Senghor) ஈடான கவிஞர்களைத் தலித் இலக்கியம் தரவில்லை அல்லது அவ்வாறான கவிஞர்கள் இருந்தும் அவர்களை முன் நிறுத்த தமிழ்ச்சூழல் மட்டுமல்ல இந்தியாவேகூட தவறிவிட்டதோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
தொடர்ந்து க.பஞ்சு வெகுசனப்பரப்பில் தலித் இலக்கிய வாசகர்கள் குறைவு என்றும், கல்லூரிகளிலும் தலித் படைப்புகளிடத்தில் தலித் அல்லாத மாணவர்கள் காட்டும் அக்கறை குறைவென்றும் வருத்தப்படுகிறார். தொடர்ந்து தலித் அல்லாத பேராசியர்களிடத்திலே கூட இத்தகைய மனநிலை இருக்கிறதென்று அவர் குமுறுவது கவலை அளிக்கிற ஒன்றுதான். அதுபோலவே இடது சாரி இயங்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள் ஆகியவை தலித் இயக்கத்தையும் தலித் இலக்கியத்தையும் தங்கள் செயல்திட்டத்தில் ஒருபகுதியாகப் பார்ப்பதும் பேரசிரியரைச் சங்கடப்படுத்துகிறது.

3. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே!
புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காரக்காலில் பேரசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் இப்பகுதி. தொன்றுதொட்டு தமிழர் சமூகத்தில் தலித் மக்களின் நிலமை என்ன? சமயசீர்திருத்தவாதிகள் தலித்துகளை ஆதரித்ததில் உள் நோக்கம் இருக்க முடியுமா? ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தலித் மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவந்ததா? கடந்த காலத்தில் தலித மக்களின் முன்னேற்றத்திற்கென உழைத்த தலித்தின தலைவர்கள் யார் யார்? அவர்களின் எழுச்சி இடையில் தொய்வு அடைய எதுகாரணம் ? என்றெல்லாம் பேசிவிட்டு இன்றைய தலித் இலக்கியம் குறித்து ஓர் விரிவான விளக்கத்தைத் தருகிறார். கவிஞர்கள், புனைகதை ஆசிரியர்கள், திறனாய்வாளார்கலென தலித் படைப்பிலக்கியவாதிகளின் பட்டியலையும்; தலித் மக்களைப் பொருளாகக்கொண்டு எழுதுகிற தலித் அல்லாத எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியலையும் க.பஞ்சு தருகிறார். இன்றைய தலித் எழுத்துக்களில் காணப்படும் பண்புகளென்று சிலவற்றைக் குறிப்பிடவும் அவர் தவறுவதில்லை: அ. “புனித உடைப்புக்களை, அதன் மூலம் வெளிப்படும் ‘அதிர்ச்சிகளை’ உற்பத்தி செய்வதைத் தனது எழுத்துப்பாணியாக கொள்ள முயலுகிறது”. ஆ. தலித் மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பினை உரத்து கூவுதல். இ. தலித்து இலக்கியம் உயிரோட்டமுள்ள பேச்சுமொழியை அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. ஆகியவை அவை.
எனினும் « கொடியன் குளம் நிகழ்வு, பொருநையாற்றில் அடித்து தூக்கி எறியப்பட்ட நிகழ்வு, இவையும் பல சாதிக் கலவரங்களும் கள ஆய்வு செய்யப்பட்டுக் கட்டுரைகளாக , தகவல் படங்களாக வெளிவருகின்றன. ஆனால் ஒரு கவிதையாக, ஒரு நாவலாக, ஒரு சிறுகதையாக ஏன் எழுதப்படவில்லை? » என்ற பேராசிரியரின் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் காணவேண்டும்.

இறுதியாக நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முன்வைத்து:

அ. ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள்
முதலாவதாக இன்றையத் தமிழ் சமூகத்தில் பெருவாரியான மக்கள் தலித் ஆதரவாளர்களாக இல்லாமலிருக்கலாம், ஆனால் தலித்தியத்திற்கு உண்மையில் -சுயத்தில் – எதிரானவர்களும் அல்ல. தினசரிவாழ்க்கையே போராட்டமாக இருக்கிறபோது, அவர்களுக்கு இதுபோன்ற அரசியல் வீணற்றவேலை. ஆனால் தன் இருத்தலை சமூகத்தில் முன் நிறுத்துகிறபோது, அச்சமூகத்தின் தராசு தன்னை எப்படி எடைபோடுமென்கிற கேள்வி எழுகிறது. இதில் படித்தவர்களேகூட ‘பரம்பரைபரம்பரையாக’, ‘தொன்றுதொட்டு’, ‘முன்னோர்கள்’ ஏற்படுத்திய அறமென்று சாதி அரசியலை நம்புவதோடு, தங்களைச் சுற்றியுள்ள நாலுபேர் என்ற இருட்டைக் கண்டு அஞ்சுகிற இந்திய சமூகத்தில், பாமரர்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த நாலுபேர் பற்றிய அச்சம் தலித் அல்லாத மக்களிடம் மட்டுமில்லை, தலித்துகளிடமும் இருக்கிறது. இக் கற்பிதம் செய்யப்பட்ட அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பி, அதன் பலனை அறுவடை செய்ய, பலவீனமானவர்களைத் தேர்வு செய்து அவர்களை மீட்கவந்த இரட்சகர்களாக சிலர் தங்களை முன் நிறுத்துகிறபோது, ‘நாலுபேர் இருட்டை’க்கண்டு அஞ்சும் மனோபாவம் உடைய மனிதர்கள் வழித்துணைக்கு ஆள் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வார்கள். தலித்தியத்திற்கு எதிராகக் களத்தில் இறங்குவது இப்படித்தான் தொடங்குகிறது. இன்று தலித்தியத்திற்கு அதிகம் எதிரிகளாக இருக்கிறவர்கள் ‘பிராமணர் அல்லாதவர்கள்தான்’, பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் அதாவது கிராமங்களைப் பொறுத்தவரை அல்லது முகங்கள் அதிகம் தெரிந்தவையாக உள்ள இடங்களில்.
அவ்வாறே தலித் மக்கள் ஆதரவாளர்களெனக் கூறிக்கொண்டு அடிமடியில் கை வைக்கிற ‘அனுகூல சத்ரு’க்கள் பற்றிய எச்சரிக்கையாகவும் க.பஞ்சுவின் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கட்சிகளில், தலித்திய ஆதரவில் இடதுசாரிகளின் நேர்மையை எவ்வாறு சந்தேகிக்க முடியாதோ அவ்வாறே இலக்கியவாதிகளில் க.பஞ்சு அ.மார்க்ஸ் போன்றவர்களைச் சந்தேகிக்கமுடியாமலிருக்கலாம், ஆனால் தலித் ஆதரவாளரென நேசக்கரம் நீட்டுகிற எல்லா கைகளும் சூதற்றவை அல்ல.
ஆ. தலித் தலைவர்களும் தலித் எழுத்தாளர்களும்
க.பஞ்சுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல தலித் அறிவுஜீவிகளைப் பட்டியலிட்டு, பின்னாளில் அதுபோன்ற முயற்சிகள் தொய்வடைந்துபோனதற்கு என்ன காரணமென ஓரிடத்தில் கேட்டிருக்கிறார். அதுபோலவே காரைக்காலில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தலித்மக்கள் சாதிக்கட்சிக் காண்பதில் தவறில்லை என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். கட்சி அரசியலில் நியாயங்கள் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அது தலைவர்களை அடையாளப்படுத்த மட்டுமே உதவியிருக்கிறது. சமூகத்திற்கு அவர்கள் சாதித்ததென்ன என்ற கேள்வி எழுகிறது. தலிதியசாதிக் கட்சிக்குள்ள நியாயத்தை தலித் அல்லாத அறிவு ஜீவிகள் புரிந்துகொள்ளலாம், ஆனால் படிக்காத பிற சாதியிலுள்ள பாமரமக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதன் விளைவுகள் என்ன? என்பது பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும். பஞ்சுவைப்போன்ற நடுநிலை மனிதர்கள்தான் இது குறித்தும் ஆழமாக விவாதிக்கவேண்டும்.தலித் மக்களின் விடுதலைக்கு, கட்சி அரசியலைக்காட்டிலும் சமூக அரசியல்தான் நம்பகமானது. அரசியல் கட்சிவைத்து திராவிடக் கட்சிகள சாதித்ததைகாட்டிலும்(?) பெரியார் என்ற தனிமனிதர் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு அதிகம். அயோத்திதாசர் போன்றவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, நிரப்ப தலித் அறிவு ஜீவிகளில் எவரும் முன்வராதது இங்க்கு பெருங்குறை, அவ்வாறு வந்திருந்தால் இன்று தலித்துகள் கூடுதலாகப் பலனடைந்திருப்பார்கள்.
தலித் கட்சித் தலைவர்க்கு ஏற்படும் நெருக்கடி தலித் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. தலித் அல்லாத வசிஷ்ட்டர்களின் ஆசீர்வாதத்திற்கு அவர்கள் காத்திருப்பது ஒரு பக்கமெனில் ; தலித் அல்லாதவர்களின் இதழ்களால், தலித் அல்லாத பிற ஜாம்பவான்களால் அரவணைக்கப்படாதத் தலித் எழுத்துகள், அடையாளம் பெறாமற்போகிற ஆபத்தும் இங்கிருக்கிறது. மேற்குலகில் கறுப்பரினத்தைச் சேர்ந்த தீவிர இலக்கிய வாதிகள் Négritude’ என்ற சொல்லாடல் கொண்டு நிகழ்த்திய ‘இலக்கிய அரசியலை’ தலித் இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்; அதன் வீச்சும் வேகமும் தலித் இலக்கியத்துடன் கலக்கவேண்டும்; தலித் எழுத்தென்பது ஒடுக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலாக இல்லாமல், கலகக் குரலாய் ஒலிக்கவேண்டும். பேராசிரியர் க.பஞ்சு போன்றவர்களின் கனவை நானவாக்குவதற்கு அதொன்றுதான் வழி.

——————————————————————
1. நவீன இலக்கியக் கோட்பாடுகள் (காவ்யா வெளியீடு) கட்டுரைத் தொகுப்பிலிருந்து
2. N’est pas de sauveurs suprêmes
Ni Dieu, ni César, ni tribun ;
Producteurs, sauvons-nous nous-mêmes !

——————————————-

மூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேசபாண்டியன்

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
ந. முருகேசபாண்டியன்

Naa.mu
பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

panchuஎதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வெளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற்றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

பஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெய்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.

‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்

“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை? புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக்கிறார்.

« ‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்’ இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.

உண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் தோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.

‘புரியவில்லை’ யார் காரணம்?

‘புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா? படைப்பாளியா? என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அடுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் ‘சார்பு நிலைக் கொள்கை’ புரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.

எப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா? « எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.

கலை மக்களுக்காக?

வேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன? எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா? ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.
‘புரியவில்லை’ – தீர்வுகள்

புரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை!’ என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.

இறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.

நன்றி.  திண்ணை
——————————————–

பிரான்சும் நிஜமும் நிழலும் -10: ஆக்கலும் அழித்தலும்

un-hommage-au-double-attentat-a-beyrouth-le-13-novembre-2015_5463584அ. நவம்பர் 13 இரவு 8.30 மணி

– ஷெரி வீக் எண்டிற்கு, நம்ம முதல் வருட திருமண நாளைக் கொண்டாட, ‘Le Bataclan’ இசை அரங்கில் ராக் நிகழ்ச்சியொன்றிர்க்கு இரண்டு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன், சர்பிரைசாக இருக்கவேண்டுமென்று உங்கிட்ட சொல்லல, போகலாமா?
ஆ. நவம்பர் 13 இரவு 9 மணி

– Salut mon pote! என்ன செய்யற? ”
– பிரான்சு – ஜெர்மன் மேட்ச் பார்க்கனும்னு இருக்கேன், எங்கும் வெளியிலே வர்ரதா இல்ல.”
– இன்றைக்கு என்பிறந்த நாள ரெஸ்ட்டாரெண்ட்ல கொண்டாடப்போறேன் வந்திடுன்னு சொல்லியிருந்தேனே மறந்துட்டியா? ”
– நல்லவேளை ஞாபகப் படுத்தின, நான் மறத்துட்டேன் என்னை மன்னிச்சுடு அரைமணிநேரத்துலே அங்கே இருப்பேன்.
– எங்கேன்னு ஞாபகம் இருக்கா?
-Paris 11ème, “la Belle équipe தானே வந்திடறேன்.
இ. நவம்பர் 13 இரவு ஒன்பது மணி

தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்குள் கணவன் மனைவி பிள்ளைகள் இருவர் என நுழைகிற குடும்பத்தினரை le Petit Cambodge, உணவு விடுதி ஊழியர் வரவேற்று அவர்கள் ரிசர்வ் செய்திருந்த மேசையில் உட்காரவைக்கிறார்.

 

இப்படி ஏதேதோ காரணத்தை முன்னிட்டு தினசரி வாழ்க்கையில் சங்கடங்களிலிருந்து விடுபட்டு கணநேர சந்தோஷத்திற்காக வீட்டில் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியிற் சென்ற பலர் வீடு திரும்பமாட்டோம் என நினைத்திருக்கமாட்டார்கள். அடுத்தடுத்து ஆறு இடங்களில் நடந்த பயங்கரவாதத்தின் தாக்குதல் இவர்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை, அவர்களின் கனவுகளை, வாழ்க்கை மீதான பற்றுதல்களை, அவர்களிடம் உறவாடியும் நட்புகொண்டும், அவர்களை ஆதரித்தும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து வாழ்ந்தவர்களின் நம்பிக்கைகளையும் சிதற அடித்திருக்கிறது. உயிரைப் பறிகொடுத்தவர்கள் 129 பேர், படுகாயமுற்றும் உயிர் பிவைப்பார்களா என்ற நிலமையில் இருப்பவர் 80 பேர், 300க்கும் அதிகமாக காயம்பட்டோர் என்கின்றன கிடைக்கும் தகவல்கள். பிள்ளையும் தாயுமாக சாப்பிட உட்கார்ந்து மகனை பறிகொடுத்த தாய், காதலனைப் பறிகொடுத்த காதலி, ஒரு குடும்பத்தில் தந்தை தாய் மூத்த சகோதரி மூவரையும் பறிகொடுத்துவிட்டு அனாதையான சிறுவன், பெரும்பாலோர் வயது 30க்கும் கீழ். .  இப்படி இறந்தபின்னம் தொடரும் அவலங்கள்

 

பாரீஸ்லிருந்து 500 கி.மீ தள்ளி வசிக்கிறேன் என்னிடமும் பத்திரமாக இருக்கிறாயா என்ற கேள்வியை நண்பர்களும் உறவுகளும் வைக்கிறார்கள். மனித மனத்தின் இயல்புப்படி நம்முடைய உறவுகள் நன்றாக இருக்கிறார்கள் அது போதுமே என்கிற குரூரத் திருப்தி நமக்கு. பாதிக்கக்கப்பட்டவர்களைப்பற்றிய உரையாடல் சில நாட்கள் நீடிக்கும், அதன் பிறகு அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள் கவலைகள் இருக்கின்றன. இதுதான் வாழ்க்கை, எதார்த்தம் என்கிற சமாதானம் இருக்கவே இருக்கிறது. தொலைபேசியில் “கடலூர்தான் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது, புதுச்சேரியில் பிரச்சினை இல்லை” என்ற செய்தி தருகிற அதே அற்ப சந்தோஷம்.

 

கொலையாளிகளும் கொலையுண்டவர்களும்
எதிர்பாராத மனித உருவில்வந்த சுனாமித் தாக்குதலால் மனித உயிர்களுக்குப் பெருஞ்சேதம். கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் என்ன பிரச்சினை. முன் விரோதமா ? பங்காளிகளா? வரப்பு அல்லது வாய்க்கால் சண்டையா? இவர்கள் தின்ற சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டார்களா? கூட்டு வியாபாரத்தில் மோசடியா? அல்லது தொழிற்போட்டியா ? அல்லது குறைந்த பட்சம் தங்கள் வாழ் நாளில் இதற்கு முன்பு கொலையாளிகளும் கொலையுண்டவர்களும் சந்தித்ததுண்டா ?

 

ஒவ்வொரு வருடமும் தற்போது நவம்பர் மாதம் பிறக்கிறபோதெல்லாம் திக் திக் என்கிறது. புண்ணியவான்கள் அப்படியொரு வரத்தை அந்த மாதத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். நவம்பர் 13த்ந்தேதியும் பிற நவம்பர் பயங்கர வாதத் தாக்குதல் தேதிகள்போல வரலாற்றில் இடம் பிடித்துவிடும். மனித மனங்கொண்டோரை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனையைப் பெற்றவைதான். இயற்கை எப்போது அதனை நிறைவேற்றுமென்கிற தேதியை மட்டும்  அறியாமலிருக்கிறோம், அவ்வளவுதான். தேதி தெரியவந்தால் வாழ்க்கை சுவாஸ்யமற்று போய்விடும். தங்கள் கொலைச்செயலைபுரிந்த கணத்திலேயே, அதற்குரிய தண்டனையைக் கொலையாளிகள் பெறவேண்டுமென்பது இயற்கையின் தீர்ப்போ என்னவோ அவர்களுக்குரிய தண்டனையையும் அப்போதே நிறைவேற்றிவிடுகிறது. ஆனால் கொலையுண்டவர்களுக்கு வேண்டுமானால் அவர்களின் மரணம் எதிர்பாராததாக இருந்திருக்கலாம், ஆனால் கொலையாளிகளுக்கு தங்கட் செயலை அரங்கேற்றும் தினத்துடன், மரணமும் இணைந்திருப்பது விந்தை.

 

பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை. ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு தங்கள் உயிரை தாங்களே முடித்துக்கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், ஆனால் அப்பாவி உயிர்களைக்கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நீட்சே கூறுவதுபோல “அவர்கள் என்னுடைய விரோதிகள், வீழ்த்துவதொன்றுதான் அவர்கள் விருப்பம், சுயமாக படைப்பதல்ல”. என்றுதான் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

பிரெஞ்சுமக்களுக்குள்ள பொறுப்பு
“குர்ஆனை படித்த எந்த முஸ்லீமும் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டான். உலகின் எல்லா ஜமாஅத்களிலும், இந்த ISIS தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு ஐ.நா . சபைக்கு அனுப்பி உலக மக்கள் அனைவரையும் இதில் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.” _என்று முகம்மது நைனாமுகம்மது என்ற நண்பர் ‘தி இந்து’ (நவம்பர்14) தமிழ் தினசரியில் கருத்துத் தெரிவித்ததை வாசித்தேன். இவர் கருத்தொப்ப மனிதர்கள் இஸ்லாமிய சமயத்தில் நிறையபேர் இருக்கிறார்கள். பாரீஸிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களில் பலரும் நவம்பர் 13 பாரீஸ் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள். பாரீசில் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் பேசுகிற இஸ்லாமியத் தலைவர்களைக்காடிலும் திரு நைனா முகம்மது’ போன்றவர்களின் பதிவு முக்கியமானது. பிறரைக்காட்டிலும் கொடிய வன்முறைச்சம்பவங்களை இஸ்லாமியச்சகோதரர்களே முன்வந்து கண்டிக்கிறபோது அது கூடுதலாகக் கவனம் பெறும்.

 

இந்நிலையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு மக்களக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. முதலாவதாக இவர்களைக் குழப்பவென்றே காத்திருக்கிற தீவிர வலதுசாரிகள் விரிக்கின்ற வலையில் விழமாட்டார்கள் என நம்புகிறேன். ISIS தீவிரவாதிகள் இழைத்தக்குற்றத்திற்காக நாம் தினம்தோறும் சந்திக்கிற எதிர்கொள்கிற, உங்களைப்போன்றும் என்னைபோன்றும் சமூகத்துடன் இணக்கமாக வாழும் இஸ்லாமிய குடும்பங்களை சந்தேகிக்க முடியாது. ஒன்றினைந்து வாழ நினைக்கிற சமூகத்தில் குழ்ப்பத்தை உண்டுபண்ணுவதுதான் ISIS அமைப்பின் நோக்கம் அதன் மூலம் கூடுதலான இஸ்லாமியர் ஆதரவை பெறமுடியுமென்பது அவர்கள் கனவு, அக்கனவினை நிறைவேற்ற பிரெஞ்சு மக்கள் உதவமாட்டார்களென நம்புவோம். இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு உள்ள பொறுப்பு மேற்குலக அறிவுஜீவிகளுக்கும் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும் மேற்குநாடுகளுக்கும் கணிசமாக பங்குண்டு. ஒரு சில நாட்களுக்கு முன்பாக பிரெஞ்சு தொலைகாட்சிகளில் பிரான்சு நாட்டின் அண்மைக்கால சாதனையாக ர•பால் (Rafale) என்ற போர் விமானங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பெருமையுடன் செய்தியில் தெரிவித்தார்கள். எகிப்துக்கு 24, கத்தார் நாட்டிற்கு 24, இந்தியாவிற்கு 36 என்கிற அவ்விற்பனை நமது கற்பனைக்கு எட்டாத தொகையை, பிரான்சுக்கு வருமானமாக கொண்டுவருமெனச் சொல்கிறது. மேற்குலக நாடுகளின் இதுபோன்ற காரியங்களும் பயங்கரவாதம்தான். எதிராளியைக் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நம்மையும் விசாரணைக்குட்படுத்துவது அவசியம்.

 

இறுதியாக நாம் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டியது இன்றைய உலகம் பன்முகத்தன்மைக்கொண்டதென்ற உண்மையை. மனிதர்க்கிடையே முரண்பட்ட நம்பிக்கையும், கொள்கைத் தேர்வும் தவிர்க்கமுடியாதவை. எனினும் ஒரு சமூகத்தின் அமைதியான பொதுவாழ்க்கைக்கு அச்சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களிடையே இணக்கம்வேண்டும் தவறினால் குழப்பங்களும் கலவரங்களுமே மிஞ்சும்.

நன்றி. சொல்வனம் நவம்பர் 15
————————————-

சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி

சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர்-20 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி

mathuumita32
1.பாண்டிச்சேரியிலிருந்து பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பூருக்குச் சென்றிருக்கிறீர்கள். இந்த 25 வருட வாழ்க்கையில் பாண்டிச்சேரிக்கும் இந்த நகருக்குமான பிணைப்பு குறித்து சொல்லுங்கள்?

 

புதுச்சேரிக்கு அருகில் பத்து கி.மீதூரத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கொழுவாரி என்ற கிராமம்தான் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் இருந்ததெல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளிதான். எனவே கல்வி, பணி, திருமணமென வாழ்க்கை புதுச்சேரியோடு என்றானது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வேறுபட்ட புதுச்சேரிக்கென ஓர் அழகு இருந்தது. புதுச்சேரியை பாரதி தேடிவர பிரெஞ்சு நிருவாகத்தின் அரசியல் கவர்ச்சி ஒரு காரணம் எனில், அம் மகாகவியைத் தொடர்ந்து தன் மடியில் கிடத்திக்கொள்ள ஆயிரமாயிரம் அழகுக் காரணங்களைப் புதுச்சேரி வைத்திருந்தது. பிரெஞ்சுக் கலையும் பண்பாடும், வைகறைத்தொடக்கம் இருள்கவியும்வரை புதுச்சேரி வாழ்வோடு இணைத்திருந்த மென்மையான சிலிர்ப்பு அவற்றுள் ஒன்று. புதுச்சேரி அளித்த பொன்முட்டை வாழ்க்கையில் அமைதியுறாமல், பேராசைகொண்ட மனம் பிரான்சுக்குப் போ என்றது. மனைவியின் மூலம் கிடைத்த பிரெஞ்சுக்குடியுரிமையும் ஒரு காரணம். ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)? தேர்வு தற்செயலாக நிகழ்ந்தது. ஒரு பேச்சுக்கு சென்னையை பாரீஸ் என வைத்துக்கொண்டால்; சென்னையை நிராகரித்து புதுச்சேரியைத் தேர்வுசெய்ய மனம் சொல்லும் நியாயங்களை, பாரீஸைத் தவிர்த்து ஸ்ட்ராஸ்பூரை தேர்வு செய்ததற்கும் சொல்லமுடியும். 1985ல் இங்குவந்தேன். வருடம் தோறும் புதுச்சேரிக்கு வருகிறேன், இரண்டுவாரங்கள் தங்குகிறேன். பல நண்பர்களை, உறவுகளை காலம் தின்று செரித்துவிட்டது. புதுச்சேரியில் காண்கிற என் முகம் அதிகம் சிதைந்திருப்பதுபோல தெரிகிறது. சிலிர்ப்பு தற்போது நடுக்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி என்னிடம் புலம்பவும் செய்யும், எனக்கும் புலம்பல்கள் இருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எனது கதைகளிலும் நாவல்களிலும் புதுச்சேரியும் -ஸ்ட்ராஸ்பூரும் தொடர்ந்து இடம்பெற்று அவற்றிடையேயான பிணைப்பை உறுதிசெய்வதாகவே நினைக்கிறேன்.
2.பணிகளுக்கிடையில் இலக்கிய வாசிப்பு எழுத்தை இடைவிடாமல் செய்வதற்கான சூழலை எப்படிப் பெற்றீர்கள்?

writer nagarathinam 75 copy1
எழுத்து உபதொழில்தான், இந்தியப் பொருள் அங்காடி ஒன்றும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றும் இருக்கிறது. இரண்டுமே சிறிய நிறுவனங்கள் என்கிறபோதும் சுமைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் இளம்வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் என்னுடன் இணைந்து பயணித்துவந்திருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணி என வாழ்க்கைப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுத்து உதவியது. எதையாவது வாசிக்காமலோ, குறைந்தது ஒருபக்கமோ எழுதாமல் இருக்கமுடிவதில்லை. பிரான்சுக்குவந்த புதிதில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டி வாணிபத்தில் கவனம் செலுத்தவேண்ட்டியிருந்தது. குடும்பமென்று ஒன்றிருக்கிறதில்லையா? இருந்தபோதிலும் இலங்கை நண்பர்களுடன் இணைந்து ஸ்ட்ராஸ் பூர் தமிழ் முரசு, பிறகு தனியொருவனாக ‘நிலா’ என்ற இதழ் என்றெல்லாம் ஆசிரியனாக இருந்து நடத்தினேன். சொந்த எழுத்தில் கவனம் செலுத்த முடியாததும்; வாகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இறங்கிப்போகவேண்டியிருந்ததும்; ஓசியில் இதழ்களை எதிர்பார்க்கிற கூட்டம் பெருகியதும், பொருளாதார நட்டத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை என்பதும் அவை நின்றுபோகக் காரணம். எழுத்தின் மீதான காதல் அதிகரித்தது.. வியாபாரத்திலோ, பணத்தினாலோ பெறமுடியாததை எழுத்தில் பெற முடியுமென்று தோன்றியது. கடையை விரிவாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எடுத்த முடிவில் தவறில்லையெனவே தோன்றுகிறது. பெற்றோர்காட்டிய பெண்ணை திருமணம் செய்வதென எடுத்த முடிவு, அரசுவேலையை உதறிவிட்டு, பிரான்சுக்கு வரத் தீர்மானித்த முடிவு, வியாபாரம்போதும் எழுத்துதான் முக்கியமென பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு அனைத்துமே எனக்குத் தவறானதாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். எழுதுவதற்கென காலை நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன்.  நேரடியாக கணினியில் தட்டுவது வழக்கமில்லை. ஒரு தாளில் மை பேனாவினால் குறைந்தது ஒரு சிலவரிகளாவது எழுதவேண்டும், எழுதும் பொருளின் தரிசனம் கிடைத்துவிடும், மூளையில் இக்கதகதப்பு உணரப்பட்ட மறுகணம் விசைப்பலகையில் எஞ்சியதைத் தொடர்ந்து எழுதுவேன். சில நேரங்களில் வீட்டின் பின்புறமிருக்கிற அரசாங்க பூங்காவில் நேரத்தை அமைதியாகச் செலவிடுவதும் நல்லபடைப்பிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.

3.மாத்தாஹரி குறித்து எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. உண்மைக்கும் புனைவுக்குமான பிணைப்பினை எவ்விதம் கையாள்கிறீர்கள்?

Matahari1
‘மாத்தா ஹரி’ நாவல் எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்நாவலில் வரும் ‘பவானி’ என் உறவுக்காரபெண். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், புதுச்சேரி கல்லூரியில் புகுமுக வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பத்தினை வாங்கிகொண்டு அதை நிரப்புவதற்காக அப்பெண்ணின் வீட்டிற்குச்சென்றேன். அவருடைய சகோதரர் புதுச்சேரி தாகூர்கலைக்கல்லூரியில் பி.எ படித்துக்கொண்டிருந்தார். இதற்கு முன்பும் அப்பெண்ணைப் பார்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் என்றால் பாவாடை சட்டை போட்டவராக. கொஞ்சம் வளர்ந்தவராக பாவடை தாவணியில் அன்றுதான் பார்த்தேன். அந்த நாட்களில் பல வீடுகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் அந்த வீட்டிலும் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிமிடம் பேசியிருப்பேன் அதுகூட அப்பெண்ண்ணின் சகோதரரை பார்த்து கல்லூரியில் எந்த குரூப் சேரலாம் எனக் கேட்கவந்தேன் என்று அவளிடம் தெரிவித்த சேதி. அதற்குள் அப்பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். பெண்ணை மிரட்டி உள்ளேபோகும்படி கூறியவர் என்னிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் று தெரியாதா? எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக? பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா? தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது?’ என மாத்தாஹரி நாவலில் ஒரு கேள்வி வரும். நம் ஒவ்வொருவரிடமும் நாமும் பங்குபெற்ற அல்லது நாம் அறியவந்த சம்பவங்களின் கோர்வைகள் ஏதோ ஒரு உண்மையை மையமாகவைத்து அல்லது அடிப்படையாககொண்டு எண்ணிக்கையற்று உள்ளன. அவை பெரிதும் புலன்களோடு இணைந்தவை. அவற்றைப் புற உலகுக்குக்கொண்டுக் கொண்டுசெல்லும் வழிமுறையாகவே எழுத்தென்ற கலைவடிவைப் பார்க்கிறேன். உண்மை பொய்போல அத்தனைக் கவர்ச்சியானதல்ல, எனவே சுவாரஸ்யமாகசொல்ல அருவருப்பூட்டாத அலங்காரம் தேவை. அதற்குப் பொய் கைகொடுக்கிறது. ஒரு நல்ல புனைகதை உண்மையும் உண்மையைப்போலத் தோற்றங்கொண்ட பொய்களும் சேர்ந்தது. இதுதான் உண்மையைப் புனைவாகச்சொல்ல நான் கையாளும் தந்திரம்.

 

4.சிமொன் தே பொவ்வார் ஆளுமை குறித்து தமிழுக்கு முழுமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க. சிமொன் தனக்கு அல்கிரென் அளித்த மோதிரத்தை இறுதித் தூக்கம் வரையிலும் அணிந்திருந்ததும், சார்த்தருக்கான முழு சுதந்திரத்தை அவர் அளித்திருந்ததையும் வாசிக்கையில் இன்னொரு பரிமாணத்தில் மனித உறவுகளின் மேன்மையை உணர முடிந்தது. இன்றும் அங்கே சிமொனின் இலக்கிய சமூக சிறப்புகள் பேசப்படுகின்றனவா?

writer nagarathinam 76-77 copy
சிமோன் தெ பொவார் படைப்புலகிற்குள் வந்தபோது உலகின் பிற பகுதிகளைப்போலவே பிரான்சிலும் பெண்களின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகள், கடப்பாடுகள், எழுத்தூடாக அவர் மொழிந்தவை, செய்தப் பிரச்சாரங்கள், அறிவித்த பிரகடனங்கள் அனைத்துமே தன் ‘இருத்தலை’ உறுதி செய்ய என்பதைக்காட்டிலும் ‘பெண்’ என்ற பாலினத்தின் இருத்தலை உலகிறகுத் தெரிவிக்க முனைந்தவை. இதைப் பிரெஞ்சு பெண்ணினம் மறக்கவில்லை. அவரது ‘இராண்டாம் பாலினம்’- பெண்ணினத்தின் மறை நூல் எனப்புகழப்பட்டது. இன்றளவும் அதற்கீடான நூல் எழுதப்படவில்லை. இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும் என்பது மூத்த இலக்கியவாதி கி. அ, சச்சிதான்ந்தத்தின் கனவு, கன்னடத்திலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, ஆங்கில மொழிபெயர்ப்பென்று வந்தவை மூலத்தின் பல பக்கங்களைத் தவிர்த்துவிட்டு மொழிபெயர்க்கப்பட்டவை, அதற்கான காரணத்தை மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லவில்லை. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்க மேற்ககுலகு ஆர்வம் காட்டுவது இதுபோன்ற காரணத்தினால்தான். இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும்.  நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே பிரெஞ்சு மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘France Culture’ என்ற பிரெஞ்சு வானொலி நிலையம் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒருவாரத்திற்கு நடத்தினார்கள். அதுபோலவே ‘Arte’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வருடம் முழுக்க ஏதாவதொரு இதழில் அவரை முன்வைத்து கட்டுரைகள் வரவேசெய்கின்றன. அவருடைய இரண்டாம் பாலினம் இன்றளவும் தொடர்ந்து விற்பனை ஆகிறது. அவரைப்பற்றி பிறர் எழுதிய நூல்களும், குறும்படங்களும், ஆவணப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடத்தில் காணும் பொதுப்பண்பு அவர்கள் ஒட்டுமொத்த மானுடம் சார்ந்த பிரச்சினை கையிலெடுத்துக்கொண்டு, அதன்மீது தங்கள் சொந்த சிந்தனையைக் கட்டமைப்பவர்கள். தங்கள் பூகோளப் பரப்பைக்கடந்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இதனை முக்கிய காரனமாகப் பார்க்கிறேன்.

5.வணக்கம் துயரமே பிரெஞ்ச் நாவல் வாசித்து அந்த கலாச்சார பாதிப்பின் துயர உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர மூன்று நாட்கள் ஆனது. பிரான்சுவாஸ் சகாங் அந்த ஒரு நாவல் தான் எழுதியுள்ளாரா?
வணக்கம் துயரமே பிரான்சுவாஸ் சகானுடைய (Françoise Sagan) முதல் நாவல், 1954ம் ஆண்டு வெளிவந்ததபோது அவருக்கு வயது பதினெட்டு. அதற்குப்பின்பு பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன. திரைப்படங்களிலும் பாங்காற்றி இருக்கிறார். எனினும் அவர் முதல் நாவல்தான் இன்றளவும் கொண்டாடப்படுகிறது
6.அம்பையின் சிறுகதைகளை பிரெஞ்சுக்கு அளித்திருக்கிறீர்கள். அங்கே நம் தமிழ் படைப்புகளுக்கான வாசக வரவேற்பு எப்படி இருக்கின்றது?

Ambai li
இது நான் தனியே செய்ததல்ல. டொமினிக் வித்தாலியோ (Dominique Vitalyos) என்ற பிரெஞ்சு பெண்மணியுடன் இணைந்து செய்தது. அவர் மலையாளத்திலிருந்து நேரடியாகப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர். வருடத்தில் சிலமாதங்கள் கேரளாவில் தங்கியிருப்பவர். அவர் நினைத்திருந்தால் தமிழறிந்த ஒரு மலையாளியை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கக்கூடும். நாமென்றால் அதைத்தான் செய்வோம். நமக்கு நம்முடைய நாவல் இன்னொரு மொழியில் வந்தாலே போதும் பூரித்து போவோம். நாவல் எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப்பற்றிய பிரச்சினைகளெல்லாம் அடுத்தக் கட்டம். தவிர டொமினிக் வித்தாலியோ இந்திய நாவல்களை ஆங்கிலத்திலிருந்தும் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர், இருந்தபோதிலும் மூல மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற பிரெஞ்சு பதிப்பாளர்களின் மொழிபெயர்ப்பு கொள்கைகளுக்கேற்ப தமிழிலிருந்து அம்பையின் சிறுகதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். பதிப்பகம் என்னைத் தொடர்புகொண்டு பிரெஞ்சுப் பெண்மணியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா எனக்கேட்டார்கள், சம்மதித்தேன். சில பக்கங்களைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து அனுப்பினேன், பதிப்பாளர் குழுவிற்குத் திருப்தியாக இருந்தது, டொமினிக்கும் ஓகே என்றார். இருவரும் பல முறை விவாதித்து, நானும் ஒரு எழுத்தாள்னாக இருப்பதால், சக எழுத்தாளரின் படைப்பில் குறையின்றி போய்ச்சேரவேண்டும் என உழைத்தேன். மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்வரிசையில் என் பெயரை முதலில் பதிப்பாளர்கள் போட்டிருந்தார்கள். டொமினிக் கும் அதுபிரச்சினையே இல்லை கிருஷ்ணா என்றார், எனக்கு நியாயமாகப் படவில்லை ஆட்சேபித்தேன். பதிப்பாளர்கள் பின்னர் திருத்தம் செய்தார்கள். நீங்கள் இணைய தளத்தில் அம்பை அல்லது மொழிபெயர்ப்பாளகளில் ஒருவரின் பெயரையோ தட்டிப்பார்த்தீர்களென்றால் ‘Zulma’ என்ற பிரெஞ்ச்சுபதிப்பகம் வெளியிட்டுள்ள ‘De haute lutte’க்கு வாசகர்கள் அபிப்ராயங்க்களை வைத்து அதற்கு எத்தகைய வரவேற்பிருக்கிறது என்று அறிவீர்கள். தமிழ் நூல்களுக்கு பெரும் வாசக வரவேற்பென்று தற்போதைக்கு எதுவுமில்லை. முதலில் தமிழ் படைப்புகள் சக மாநிலங்களில் எத்தகைய வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் அதன் பிறகு மேற்குலகு வரவேற்பை பற்றி பேசலாம்.

7.தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்து அளிக்கிறீர்கள். இரண்டுக்குமான பிணைப்பை இன்னும் வலுப்படுத்த முக்கியமாக என்ன செய்யவேண்டும். இருமொழியாளர்கள் இணைந்து ஏதும் செய்து வருகிறீர்களா?

Ambai 2
இது தனிமனிதனாக் செய்யும் விஷயமல்ல. பிரெஞ்சு படைப்புலகை பொறுத்தவரை அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் கொண்டு செல்லவேண்டுமென அக்கறைகொண்டு செயல்படுகிறார்கள். பதிப்பகங்களும், அரசாங்கமும் அவரவர் வழிமுறைகளில் தனித்தும் தேவையெனில் இணைந்தும் செயல்படுகின்றனர். தமிழில் அல்பெர் கமுய்யோ, லெ கிளேஸியோவோ வாசிக்கப்பட்டால்தான் தங்கள் படைப்பிலக்கியம் உலகில் அங்கீகாரிக்கப்பட்டதாகபொருள் என்கிற கனவெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. இருந்தபோதும் தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகம் இதனைக் கடமையாகக்கொண்டு புத்தகத்தின் பதிபுரிமை, மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையென அளித்து வெளிவரவேண்டுமென துடிக்கிறார்கள். இத்துடிப்பு நம்மவர்களிடத்திலும் வேண்டும். பிரெஞ்சு பதிப்பகங்கள் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பவர்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவிற்கு பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறுவதில்லை. நல்ல எழுத்துகள் சிபாரிசு அற்று பிரெஞ்சுப் பதிப்பகங்களிடம் போய்ச்சேரவேண்டும், பிரெஞ்சு பதிப்பகங்கள் வைத்திருக்கிற தேர்வுக்குழுவினருக்கு அவை திருப்தி அளிக்கவேண்டும்
8.பிரெஞ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பண்டைய காலத்து படைப்புக்கும் தற்கால படைப்புக்கும் இடையில் இருக்கும் நூதன வளர்ச்சியின் சிறப்பைக் காண்கிறீர்களா?

பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கியத்துறையை பண்டையகாலத்து படைப்பு தற்கால படைப்பென குறுக்கிவிட முடியாது. இந்தத் தற்கால படைப்பு பல படிகளைக் கடந்து பெறப்பட்டது. ஒவ்வொரு படிநிலையும் அவற்றை முன் எடுத்தவர்களால் உரிய வாதங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. மாற்றத்தை மூச்சாகக்கொண்டவர்கள் மேகுலகினர், மறுப்பு அவர்கள் இரத்தத்தோடு ஊறியது. ‘இருத்தல்’ என்பது இயக்கத்தால் நிரூபணமாவது, முடங்கிக் கிடப்பதல்ல. பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் தமிழ்மொழிபோல நெடிய வரலாற்றக்கொண்டதல்ல என்றபோதிலும் அதன் தொடக்ககாலத்திலிருந்தே ஏனைய பிறதுறைகளைபோலவே பல மாற்றங்களை சந்தித்தது. பிரான்சு நாட்டின் வரலாற்றில் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாம் கலை இலக்கியத்திலும் எதிரொலித்தன. முதல் இரு உலகப்போர்கள், பாசிஸத்தின் ஆதிக்கம், சமூகத்திலிருந்த ஏற்ற தாழ்வுகள், ஆட்சியில் சமயங்களுக்கிருந்த செல்வாக்கின் சரிவு, மொழியறிஞர்களால் திறனாய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இவை அனைத்திற்கும் மேற்குலகின் கலை இலக்கிய நூதன வளர்ச்சியில் பங்குண்டு, அது இன்றளவும் தொடர்கிறது.

9. பிரெஞ்சில் பின் நவீனத்துவத்தின் தற்போதைய நிலையென்ன – உங்கள் நாவல்கள் பின் நவீனத்துவம் சார்ந்த எழுத்தா?
அதுபோன்ற எந்த லேபிலையும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை. இன்றைக்கு மேற்குலகில் படைப்பாளி எவரும் தனது படைப்பு பின்நவீனத்துவம் என அறிவித்து எழுத உட்காருவதில்லை. அவரவர் படைப்பு சார்ந்து எடுத்துரைப்பில் உத்தியையும் வழிமுறையையும் கையாண்டு எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து பிரெஞ்சு படைப்புலகம் மிகச்சிறந்த எழுத்தாளர்களென்று ஏற்றுக்கொண்டிருக்கிற – அண்மைக்காலத்தில் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ, பத்ரிக் மோதியானோ உட்பட தங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவமென்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பின் நவீனத்துவத்தை மேற்குலகம் கடந்து, ஆண்டுகள் பல ஆகின்றன. உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் அமெரிக்கர்களிடம் அதிகம் புழங்கிய ஒரு முன்னொட்டு சொல் ‘பின்'(Post). அவர்கள் அமைப்பியல்(structuralism), பெண்ணியல் (feminism), காலனியத்துவம் (colonialism) போன்ற பலவற்றுடன் ‘Post’ஐச் சேர்த்திதிருக்கிறார்கள். ‘பின்’ என்ற சொல்லைக்கொண்டு சம்பந்தப்பட்டக் கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்சென்றார்கள் -குறிப்பாக அதற்கு முந்தைய கட்டத்தின் வீழ்ச்சியை வற்புறுத்திச்சொல்ல. இவற்றுள் பின் அமைப்பியல் வாதம், பின் பெண்ணியவாதம், பின் காலனியத்துவம் என்கிறபோது அதில் நியாயம் இருப்பதுபோல தெரிகிறது. ஏனெனில் அவைகளெல்லாம் ஒரு கருத்தியத்தியத்தின் கால அளவைக் குறிப்பிடுபவை. மாறாக பின்நவீனம் அல்லது பின்நவீனத்துவம் அத்தகைய நியாயத்துடன் ஒலிப்பதில்லை. இலக்கியத்தில் நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டம் பின் நவீனத்துவம் எனில்? நவீனத்துவத்தின் காலம் முடிந்துபோனதா?  பின் நவீனத்துவத்தைக் கோட்பாடாக வரையறுக்க முயன்ற ழான் பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard), ழாக் தெரிதா (Jacques Derrida) ழான் பொதுரிய்யார் (Jean Beaudrillard) மூன்று பிரெஞ்சுக்காரர்களுமே மெய்யியலாளர்கள், மொழியின் கூறுகளை ஆய்ந்து சில உண்மைகளை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் இலக்கியவாதிகளா என்றால் இல்லை. மொழியின் உபயோகம், சொற்களை வெட்டுதல், கூறுபோடுதல், சல்லடைகொண்டு சலித்தெடுத்தல் போன்ற, சோதனைச்சாலை ஆய்வு முடிவுகளெல்லாம் திறனாய்வாளர்களுக்கு உதவலாம் அல்லது பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் எடுபடக்கூடியவை. இலக்கியமென்பது அறிவைமட்டும் சார்ந்த விஷயமல்ல, புலன்களும் சேர்ந்தது. பின் நவீனத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்ட படைப்பிலக்கிய வாதிகளேகூட அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தவை எவை என்ற கேள்விக்கு கைகாட்டுவது, பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த டான் க்ய்க்ஸ்டோட்(Don Quichotte) நூலையும் கர்ணபரம்பரைக் கதையாக அறியப்பட்ட இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் பிறந்த ஆயிரத்தொரு இரவுகள் (Les Mille et Une Nuits) நூலையும், அது போன்றவற்றையும். ஆக பின் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டாலுங்கூட உந்துதலுக்கு அவர்கள் வழியிலேயே (ஆயிரத்தொரு இரவுகள் வழியில்) நாம் மகாபாரதத்தையோ? கருட புராணத்தையோ தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்; அறுபதுகளில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையை படித்து இருக்கிறேன், பின் நவீனத்துக்கு அது கூட நல்ல உதாரணம். அதன்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறுத்த ‘ பின்-பின் நவீனத்துவம்’ (Post -Postmodernism) குரல்கள் கேட்கின்றன. எத்தனை பின் வேண்டுமானாலும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப போட்டுக்கொள்ளலாம், நமக்கு வாசிக்கும்படி இருக்கவேண்டும்.
10. .இன்றைய தலைமுறையினரினிடையே பிரெஞ்ச் படைப்புகளை வாசிக்கும் வழக்கம் உள்ளதா?
பிரான்சு நாட்டிலும் வாசிக்கின்ற மனநிலை குறைந்துவிட்டதென்கிறார்கள். எனினும் அறிமுக எழுத்தாளர் என்றால்கூட குறைந்தது 5000 பிரதிகள் என்று அச்சிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுத்தன்றி வேறு பணிவேண்டாம். பெரிய எழுத்தாள்ர் எனில் ஐந்தாண்டுக்கு ஒரு நூலைக்கொண்டுவந்தால் கூட அவரால் நன்கு ஜீவிக்க முடியும்.
11. தற்கால பிரெஞ்ச் படைப்பாளிகளின் சிறந்த படைப்பு சிறந்த எழுத்தாளர் என நீங்கள் கருதுபவர்களைக் குறித்து சொல்லுங்களேன்

இதற்கு முன்பு கூறியதுபோல பிரெஞ்சு இலக்கியத்திற்கு தற்போதைக்கு நவீனமென்றோ, பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag). இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென: லெ கிளேசியோ (Le Clézio) பத்ரிக் மொதியானோ(Patrick Modiano), மிஷெல் ஹூல்பெக் (Michel Houelbeque) ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ருஃபன் (Jean-Christophe Rufin) நினைவுபடுத்த முடிந்த சிலர்.
13. ஆங்கில படைப்புகளில் நீங்கள் இந்த வருடம் விரும்பி வாசித்த 5 புத்தகங்கள் என்னென்ன?
இவ்வருடம் ஆங்கில படைப்புகளென்று வாசித்தது குறைவு. தாமஸ் பின்ச்சன் (Thomas Pynchon) எழுதிய “The Crying of Lot 49” நாவலை வெகுகாலமாய் வாசிக்க நினைத்து, அண்மையில் அமெரிக்கா போயிருந்தபோது வாங்கிவந்திருந்தேன். அடுத்தது கிரண்தேசாய் எழுதியிருந்த The Inheritance of Loss என்ற நாவல். இந்த இரண்டு ஆங்கில நாவல்கள்தான் இந்த வருடத்தில் நான் வாசித்தவை. இரண்டுமே வருட ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை. காலச் சுவடுக்காக Albert Camus யுடைய L’homme révolté என்ற நூலை மொழிபெயர்க்கிறேன் நேரம் சரியாக இருக்கிறது, திரும்பத் திரும்பப் பலமுறைவாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிற வாசிப்புகள் குறைவு .
14. நீலக்கடலுக்கான தமிழ் நாடு அரசின் விருது பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பெற்றுவரும் விருதுகள் படைப்புக்கான ஊக்கத்தை அளிப்பதாக உணர்கிறீர்களா?
2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற மற்றொரு நாவலுக்கும் கிடத்திருக்கிறது. இரண்டும் பின்வாசல் அணுகுமுறையால் பெறப்பட்டதல்ல என்பதால் உண்மையில் பெருமை. இதுபோன்ற அங்கீகாரங்கள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியவைதான். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியை விருதைக்கொண்டு அடையாளப்படுத்த முடியாது. உண்மையைசொல்லட்டுமா சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் இருவேறு துருவங்கள் என்கிறபோதும் அவர்கள் விருதுகளால் அடையாளம் பெற்றவர்கள் அல்ல. பிரான்சு நாட்டிலும் நிறையபேரை சொல்ல முடியும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காணும் வாசக நண்பர்கள் நடு நிலை திறனாய்வாளர்கள் தமிழிலும் இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் எனக்குக் கிடைத்த கூரை அவர்கள் வேய்ந்ததுதான்.
15. இந்த வருட புத்தகக்கண்காட்சிக்கு வெளிவரும் தங்களின் படைப்புகள் என்னென்ன?
காலச்சுவடுக்காக ஒரு மொழிபெயர்ப்பு – அல்பெர் கமுய்யுடையது, பிறகு நண்பரும் திறனாய்வாளருமான க.பஞ்சாங்கத்தைக்குறித்து இலங்கு நூல் செயல்வலர் என்றொரு புத்தகம் என்ற இரண்டு நூல்களும்.
நன்றி. ,  மதுமிதா , சூரியகதிர்

 

———————————————————————————————————-