Category Archives: Uncategorized

இசைவானதொரு இந்தியப் பயணம்-12

பிப்ரவரி 12

பன்னிரண்டாம் தேதி காலை விடுதிபொறுப்பிலிருந்தவர் கணக்கு தீர்க்கும்போது ஒரு நாள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கிறதென்றார். ஆக வைப்புதொகைபோக அவரிடம் ஒரு நாள்கட்டணத்துக்குண்டான  தொகை செலுத்தப்பட்டது. இதற்கு ரசீதெல்லாம் இல்லை. பொதுவாக இந்தியாவில் அநேக கொடுக்கல்வாங்கல்களுக்கு ஆதாரங்களில்லை. நூற்றுக்கு 90 சதவீதம் இப்படித்தான். இதுவே குற்றத்தை நினைக்காதவர்களுக்குகூட குற்றமிழைக்க தூண்டுதலாக இருக்கிறது. கிராம மணியக்காரராக எனது தகப்பனார் அரசாங்க சிட்டா அடங்கல் தாள்களை கையேடுகளாக தைத்துக்கொள்ள உதவியதும், அவர் வாங்கிய ஐந்தும் பத்தும் அப்போது எனக்கு இலஞ்சமாகவே தெரியவில்லை. இந்திய உத்தியோக பர்வதத்தில் இவைகளெல்லாம் அறங்கள் என நினைத்திருந்தேன். தூரத்தில் நின்று பார்க்கிறபொழுதுதான் அதனுடைய கொடூரம் விளங்குகிறது.

காலை சென்னையை நோக்கி புறப்பட்டோம். திண்டிவனம் தாண்டியதும் வண்டியை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். எங்கள் வாகன டிரைவர் வழக்கமான வாகன ஓட்டிகளைபோலவே ஒரு விண்ணப்பத்தை வைத்தார். அவர் கண்டாக்டரிடம் காட்டியதாகவும் கண்ணாடி மாற்றுவதற்காக ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறதெனவும் கூறினார். இது பரவாயில்லை. ஒரு வாகனஓட்டி தாம் அநாதையெனவும் தம்மை தத்து எடுத்துக்கொள்ள முடியுமா எனவும் கேட்டு ஒரு கட்டத்தில் பிரெஞ்சு நண்பர் ஒருவரை மிரட்டும் அளவுக்குப்போயிருக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் தலையிட பாதுகாப்புடன் விமானம் ஏறியதாகக்கூறினார். இந்தியப்பயணத்தை கொண்டாடும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் அனுபவம் அப்படி.

காலை பத்துமணி அளவில் பறங்கிமலையை அடைந்தோம். புனிததோமையார் கொல்லப்பட்டதாக நம்பப்படுமிடத்தில் போர்ச்சுகீசியர்கள் அவரது ஞாபகார்த்தமாக நினைவு சின்னம் ஏற்படுத்தியிருந்தார்கள் எனது இளங்கலை பட்டப்படிப்பை சென்னையில் முடித்திருந்தேன். அப்போதெல்லாம் காலையும் மாலையும் மின்சார ரயிலில் தாம்பரத்திலிருந்து கல்லூரிக்குப் பறங்கிமலையை கடந்துதான் செல்லவேண்டும். அதன் பிறகும் பலமுறை சென்னைக்கு சென்றிருக்கிறேன், தங்கியிருக்கிறேன். ஆனால் பறங்கிமலையில் ஏறியதில்லை. முதன் முறையாக ஏறினேன். மேலே மலையினினுன்று பார்க்கும் மீனம்பாக்கமும் சென்னையின் பிறபகுதிகளும் வேறுவகையான சென்னையை கண்முன்னே நிறுத்தியதை மறக்கமுடியாது. பெரு நகரத்தின் ஆரவாரங்களிலிலிருந்து விலகிக்கொண்ட நகரத்தின் ஒரு துண்டு அது. உயர்ந்தவைகள் எப்போது ஆராவராமின்றியே செயல்படுகின்றன. சாந்த்தோம் போவதற்கு முன்பாக நண்பர் சந்தியா நடராஜனையும், சூளைமேட்டில் சுதாராமலிங்கம் குடும்பத்தினரையும் சந்தித்து விடைபெற்றோம். பிரெஞ்சு நண்பர்களிடம் வள்ளுவர் கோட்டம் பற்றி பேசினேன். ஆனால் அங்கே இறங்கிபார்க்க ஆர்வம் இல்லாததும் சாந்த்தோம் செல்வதில் மட்டுமே குறியாக இருந்ததும் எனக்கு அவர்களுடைய மதம்பிக்கைமேல் வெறுப்புகொள்ள செய்தது. சாந்தோம் ஆலயத்தில் எப்போதும்போல வெளிநாட்டவரை நிறைய பார்க்க முடிந்தது. உள்நாட்டவர்களில் குறிப்பாக வெளிநாட்டவர் அதிகம். மதிய உணவை ஸ்பென்ஸர் பிளாஸாவிலிருந்த சரவண பவனில் எளிமையாக முடித்துக்கொண்டோம். அங்கேயே வியாசர்பாடியிலிருந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கவேண்டியதொகைக்கு உரிய இந்தியரூபாயை யூரோ கொடுத்து மாற்றிக்கொண்டோம். அவருக்கு திண்டுக்கல் செலவும், ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வாகனச்செலவும் கொடுக்க வேண்டியிருந்தது. பிறகு வியாசர்பாடியில் தொண்டு நிறுவன நண்பர் இருந்தார். வரவேற்று பரிசுகள் தந்தார், உணவளித்தார் கடைசியாக பில்லை கொண்டுவந்தார். நியாயயமான அணுகு முறைதான்.

மாலை நானும் நண்பர் சவியெ தெபெல்லும் தில்லி செல்வதாக இருந்தோம். எங்களுக்கு 8.40க்கு விமானம். மனே தம்பதியினர் நள்ளிரவில் லூப்தான்ஸா விமானம்பிடித்து பிராங்பர்ட்வழியாக பிரான்சு திரும்புவதாக இருந்தார்கள். எனவே நாங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு கிளம்பினோம். எங்களுடன் தில்லி வரவிருந்த நண்பர் நாயகர் விமான நிலையத்தில் இணைந்துகொண்டார். புதுச்சேரி விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். எனினும் முன்னேற்பாடாக அங்கே ஏதேனும் பிரச்சினைகள் வந்தால்  ஆர்.கே புரத்தில் நண்பர்களுடன் தங்கிக்கொள்கிறேன், நீங்கள் இருவர் மட்டும் கிடைக்கும் ஒரு அறையில் புதுச்சேரி விருந்தினர் மாளிகையிலேயே தங்கிக்கொள்ளலாமென அறிவித்தார். ஏதேனும் செய்தாகவேண்டுமேயென நினைத்து  எழுத்தாளர் சின்னப்ப பாரதி கூறியிருந்த தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ பேராசிரியர் கிடைப்பாரா என முயற்சித்தேன். பேராசிரிய பாலசுப்பிரமணியனை சென்னையில் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நான் சென்னையில் சந்திக்க வேண்டியது. என்னகாரணத்தாலோ அது நடைபெறவில்லை. எழுத்தாளர் சின்னப்பபாரதியிடம் பிரச்சினையைக்கூறினேன். என்ன சார் கொஞ்சம் முன்னாடிச்சொல்லக் கூடாதா என வருத்தப்பட்டார். பின்னர் நண்பர் காலச்சுவடு கண்ணனுக்கு எஸெம்ஸ் அனுப்பினேன். அவர் பிரச்சினையில்லையென உடனடியாக நண்பர் பி.எ.கிருஷ்ணன் பெயரையும் வேறு இரண்டு நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பு எண்களையும் கொடுத்தார். கவலைப்படாமல் போய் இறங்குங்களென நம்பிக்கையும் கிடைத்தது.

ஏர் இந்தியாவுகென்றே எழுதிய விதியின்படி ஒரு மணிநேரம் தாமதமாக டில்லி தலை நகரை அடைந்தோம். தில்லி விமான நிலையத்தில் பிரம்மாண்டம் தலையைச் சுற்றியது. உண்மையில் அசந்துபோனேன். இரவு ஒருமணிக்கு தில்லி இந்திராகாந்தி விமானதளத்தில் இறங்கி பெட்டிகளை ட்ராலிகளில் தள்ளிக்கொண்டு மூவருமாக வெளியேற  நாகரத்தினம் கிருஷ்ணாவென அட்டையில் எழுதி காத்திருந்த இளைஞர்கள் கண்ணிற்பட்டனர். எழுத்தாளர் கு.சின்னப்பாரதியின் தயவினால் பேராசிரியர் பாலசுப்பிரணியன் அனுப்பிவைத்த ஜவஹர்லால் நேர் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்யும் மாணவர்களென அறிமுகத்திற்குப்பின்னர் தெரியவந்தது. ஜெகதீசன் என்ற மாணவர் குறிப்பாக பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம் செய்யப்படுபவைகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்பது தில்லி பயனத்தில் மூன்றாம் நாள் எனக்கு தெரியவந்த செய்தி.

தில்லி பன்னாட்டு விமான தளத்திலுள்ள ஒரு வசதி, போகும் முவரியைக்கொடுத்து கட்டணத்தைச் செலுத்தி ரசீதுபெற்றுக்கொண்டவுடன் காத்திருக்கும் டாக்ஸிகள் வரிசையில் வந்து நம்மை ஏற்றிக்கொள்கின்றன. இந்த நற்காரியத்திற்கு தில்லி காவல் துறைக்கு நன்றி கூறவேண்டும். இரண்டு டாக்ஸிகளில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கு முன்பாக இறங்கியவுடன் நடுத்தரவயது டாக்ஸி டிரைவர் பெட்டிகளுக்கு கூடுதலாகக் கட்டணம் கேட்டார். எல்லாவற்றையும் அங்கே செலுத்திவிட்டதாகத் தெரிவித்தேன். இளைஞரான டாக்ஸிடிரைவரிடம் நடுத்தரவயதுகாரர் சணடைபிடித்தார். அங்கேயே நீ தெளிவய் அவர்களிடம் கூறியிருக்கவேண்டுமென்றார். இளைஞர் அமைதியாக ஏதோ பதில் சொன்னார். பின்னர் டாக்ஸியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். நடுதரவயதுகாரரும் புறப்பட உள்ளே விடுதியில் எங்களுக்கு வேறு பிரச்சினைகள் காத்திருந்தன.

நாயக்கர் பயந்ததுபோலவே புதுச்சேரி விருந்தினர் மாளிகை இரவு பொறுப்பாளர் ஒரு அறைதான் உங்களுக்குப் பதிவு செய்திருக்கிறதென்று குண்டைத் தூக்கிப்போட்டார். நண்பர் நாயக்கரும் நான் வேண்டுமானால் புதுச்சேரி நண்பர்கள் இருவர் வெளியில் தங்கியிருக்கிறார்கள் அவர்களுடன் இருந்துகொள்கிறேன், நீங்கள் இங்கே தங்குங்கள் என்றார். வேறொரு ஓட்டலில் அன்றிரவு அறைகளெடுத்து தங்கியிருக்க முடியுமென்றாலும், வெள்ளைக்கார நண்பர் முன்னால் எனக்கு அது கௌரவ பிரச்சினையாகபட்டது. புதுச்சேரி அரசாங்கம் நாயக்கரிடம் கொடுத்திருந்த அத்தாட்சியில் இருவர் பெயரில் அறை பதிவுசெய்திருப்பது தெளிவாக இருந்தது. அதை தில்லியிலுள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கும் மின் நகலில் அனுப்பி இருக்கிறார்கள். ஆக எங்கள் தரப்பில் வாதாட ஆதாரங்களிருந்தன. விடுதி பொறுப்பாளராக வட இந்தியரிடம் தெளிவாகக் கூறினேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ! நாங்கள் இங்கிருந்து போகும் உத்தேசமில்லை. இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களை இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லையென உடனடியாக அழையுங்கள் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன், என்றேன். அவர் என்னென்னவோ கூறினார். நானும் எனது முடிவை மாற்றிக்கொள்ளபோவதில்லை என்றேன். எனது குரல் பொறுப்பாளர் குரலைக்காட்டிலும் ஓங்கியே ஒலித்தது. ‘சாப், நான் என்ன செய்யட்டும் என்மீது தப்பில்லை. இங்கிருந்த ஊழியர்கள் செய்த தப்பு’ என்று கூற அது எனக்கு வசதியாய் போயிற்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரேட்டில் எங்கள் பெயர்கள் பதிசெய்யப்பட சாவியை வாங்கிக்கொண்டு கொடுத்த இரண்டு அறைகளில் ஒன்றில் நானும் நாயக்கரும் மற்றதில் தெபெல்லும் தங்கிக்கொண்டோம். மறுநாள் வந்து சந்திப்பதாகக்கூறி மாணவர்கள் விடைபெற்றார்கள்.
————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்

பிப்ரவரி 11

அதிகாலை திண்டுகல்லிலிருந்து திரும்பியிருந்தோம். இம்முறை நந்திவர்மன் வீட்டெதிரேலேயே அறை எடுத்து தங்கினோம். அரவிந்தர் ஆஸ்ரமத்தோடு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது விடுதி. மறுநாள் அதிகாலை அறைகளை காலி செய்துவிட்டு சென்னை திரும்புவதாக இருந்தது. வாடகை இரண்டுநா¨ளைக்குக்கொடுப்பதா ஒரு நாள் கொடுப்பதா என்ற சிக்கல் இருந்தது. நிர்வாகிகளில் ஒருவரைத் தவிர இருவர் (‘முதல் நாள் சந்தித்த ஆஸ்ரமத்து பெண்மணி உட்பட) ஒரு நாள் வாடகை செலுத்தினால் போதுமென்றார்கள். எனக்கு அவர் ஒரு நாள் வாடகை என்கிறாரே, இவரிடம் செலுத்தினால் பிரச்சினை முடிந்தது நாளைக்கு எப்படியோ? என நினைத்து எனது நிலமையை விளக்கினேன். அவர் போகும்போது கொடுங்களென்றார். பதினோராம் தேதி விடுதிப் பொறுப்பிலிருந்தவர் வாடகை வசூலிப்பதைக்காட்டிலும் தம்மையும் தமது நண்பரையும் போகும் போது கவனித்துவிட்டுப்போங்கள் எனக்கெஞ்சுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். நானும் இரண்டுநாள் வாடகை செலுத்தவேண்டியிருக்குமோவென நினைத்திருக்க ஒருநாளாக குறைந்திருந்த சந்தோஷத்தில் (உண்மையில் ஒரு நாள் வாடகை நாங்கள் கட்டுவதுதான் நியாயமுங்கூட) 50 ரூபாயைக் கொடுத்தேன். அவனுக்குக் கொடுத்தேன் ( மன்னிக்கவும் நான் காசுகொடுத்தபிறகு அந்த மானுடப்பிறவி சிறுத்துப் போனது. இவர்களில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசுவக்கீல் இத்தாலிவிவகாரத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகெதிராக முகத்தில் கரியைப்பூசுவதை மரக்கட்டை இந்தியர்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், உணர்வுள்ள இந்தியன் கொதித்துதான் போவான்.

மீண்டும் பதினோறாம் தேதி அதிகாலைக்கு வருகிறேன். நண்பர் இந்திரனும் சென்னையிலிருந்து எங்களுடன் திண்டுக்கல் பயணத்திற்காக இணைந்துகொண்ட ஆரோக்கியராஜ் என்பவரும் நாமக்கலிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தவுடனேயே புறப்பட்டு போனார்கள். மதியம் புதுச்சேரி அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், என்று நண்பர் நந்திவர்மன் கூறினார். எனக்கு இதில் விருப்பமில்லை. இதுபோன்ற விருந்துகளினால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னவென்று தெரியாது. தவிர எனக்கு மழைக்கு முளைத்த காளான்போல இந்த தேர்தலில் நட்சத்திரமாகி அடுத்த தேர்தலில் உதிர்ந்து விடுகிற எரிநட்சத்திரங்கள் மீது பிடிப்பு எப்போது இருந்ததுமில்லை. அமைச்சரைக்காட்டிலும் நந்திவர்மனை மதிப்பது முக்கியமாகப் பட்டது, சம்மதித்தேன். பன்னிரண்டு மணிக்கு வருவதாகக்கூறிய அமைசர் ஒரு மணிக்கு என்றாகி பின்னர் இரண்டு மணிக்கு வந்தார்.  அமைச்சர் என்கிறபோது இதைக்காட்டிலும் முக்கியபணிகள் இருந்திருக்கலாம். நாசூக்காக அவரும் இதை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை பிரசுரிக்க எனக்கு ஆர்வமில்லை

எங்கள் வீட்டு கல்யாண ஆல்பத்தில் ஒரு சிறுவன் எடுத்திருந்த நிழற்படங்களில் பெரும்பாலானவற்றுள் நிற்பான். இப்போது அச்சிறுவன் வளர்ந்து வாலிபநாக இருக்கிறான். இப்போதும் அப்படி போட்டோக்களுக்கிடையே ஓடி ஓடி நிற்பானா எனத்தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இதற்கெனவே மெனக்கெட்டு அலையும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். பிணத்தின் பக்கத்தில் படுத்து அவர்கள் போட்டோ எடுத்து பார்த்ததில்லை. பிணம் விஐபி உடையதாக இருந்தால் அதனுடனும் படமெடுத்து வீட்டில் மாட்டிவைப்பார்கள். ஒரு சிலர் விஐபிக்கள் தெருக்களில் பொதுமக்களுடன் கைகுலுக்கிறபோது இடையிற் கைகொடுத்து நண்பர்களை நிழற்படம் எடுக்கச்சொல்லி வீட்டில் மாட்டிவைத்திருக்க பார்த்திருக்கிறேன். கிளி ஜோஸ்யக்காரன் அண்ணாவுக்குப்பார்த்தேன், பெரியாருக்கு ஜோசியம்பார்த்தேன் என போட்டோக்களை காண்பிப்பதுபோல இவர்களுக்கு இப்படியொரு நோய். இதில் வேடிக்கை என்னவெனில் பிறரிடம் கேமராவைக்கொடுத்தால் எங்கே தவறிப்போகுமோ என நினைத்து மனவியை விட்டே போட்டி எடுக்கச் சொல்கிறார்கள். அந்த மனைவி இவர் மீது என்ன அபிராயங்களை வளர்த்துக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒரு சிறுகதைக்கூட உருவாகியது. . உளவியல் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துக்கொண்டு கூட ஆய்வு செய்யலாம்.

மாலை 7மணி அளவில் ஆசிரியர் வெங்கிடேசனாரைச் சந்தித்ததையும் இங்கே பதிவுசெய்யவேண்டும். இவர் ஒரு மரபுக் கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், புல்லாங்குழல் கலைஞர். அவர் வீட்டிற்குள் நுழையும்போது கர்ணகடூர குரலில் ஏசு அழைக்காமலிருந்தால் அவருக்குச் சந்திக்க நேரிட்ட தருணங்கள் கூடுதல் மகிழ்ச்சியைத்  தந்திருக்கும். அவர் லால்பகதூர் சாலையில் வசிக்கிறார். இந்திய சம்பிரதாயப்படி காரமும் இனிப்பும் வழங்கப்பட்டன. வயது எழுபதுக்குமேல் என்றார் நம்பமுடியவில்லை. அடிக்கடி தலைகாட்டிய கருப்பானை அவர் அதட்டியபோதும் அஞ்சாமல் உலாவந்ததைக்கொண்டே அவர் வயதை நம்பவேண்டியிருந்தது. புல்லாகுழலில் ஒரு இசைத்துண்டை வாசித்துக்காட்டினார். அவர் எழுத்தைக்காட்டிலும் இசை எங்களை கூடுதலாக வசீகரித்தது. அவருடைய மூத்தமகள் திருமதி பூங்குழலியையும் அவரது துணைவர் திரு பெருமாளையும் அறிவேன். இருவரும் புதுச்சேரியில் ஆசிரியப்பணி ஆற்றுகிறவர்கள். சிலகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரான்சுநாட்டில் வந்து தங்கியிருந்தார்கள். அவ்வமயம் திருமதி பூங்குழலி பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு நன்றாக பேசுவார். கத்தரித்ததுபோல விவாதங்களைவைத்து, எடுத்துக்கொண்ட தலைப்பினின்று பிறழாமல் உரையாடும் வல்லமை அவருக்குண்டு.
———————-

சிற்பங்களே எனது வார்த்தைகள்- படைப்புகளைக்கொண்டு எனது இருப்பை நியாயப்படுத்துகிறேன் -கபி க்ரெட்ஸ் (Gaby Kretz)

அவரைச் சந்திப்பதற்கு முன்பு அவரது குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்திவெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் வைத்து நிகழ்ந்தது. அவரது குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாக கபி க்ரெட்ஸென்ற  கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென்று அவற்றை சொல்லவேண்டும். அமைதியும் சன்னமான மின்சாரஓளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாகப் நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டு குருவி முனுமுனுப்பதுபோல குரல்கள். நண்பர் அவர்தான் என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. நிழல்போல அவரைத் தொடர்ந்துசென்று பெண்மணி முன் நின்றேன். மொட்டவிழாத சிரிப்பு, கூர்மையான கண்கள். நெற்றியில் நிழல்போல் அசையும் தலைமையிர். எதிரிலிருப்பவர்களை உள்வாங்கி மனதிற்குள் பிசைந்து பிரதியெடுப்பதுபோன்றதொரு பார்வை.  நண்பர் ஓரிருவார்த்தைகளில் அவருடைய சிற்பங்களை சிலாகித்துவிட்டு,  இரண்டாவது முறையாக அவற்றைக் காணவந்தத தமது நோக்கத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கிடையில் என்னைபற்றிய அறிமுகமும் நடந்து முடிகிறது.

 சிற்பக் கலை மானுடத்தின் அழுத்தமான பிரதிகள். சொற்களை மறுதலித்து  ஊமைமொழியில் உரையாடும் கலைவடிவங்களில் ஓவியமும் சிற்பமும் தன்னிகரற்றவை. ஓவியமும் சிற்பமும் ஒரே இனமென்றாலும் ஓவியத்தின் முப்பரிமாணவடிவமென்று சிற்பத்தைக் குறிப்பிடலாம். தொடு உணர்வை சிற்பக் கலையினும் பார்க்க வேறொன்றால் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமமென்று நினைக்கவில்லை. ஏனையகலைகளைக் காட்டிலும் சிற்பகலையுடன் ஒரு நெருக்கத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள இதுவே காரணமென்று நினைக்கிறேன். சிற்பக் கலைக்குள்ள மற்றொரு சிறப்பு இவர் அவைரைப்போல, அந்த சிற்பத்தைப்போலவென்று ஒரு கலைஞரை அவரது படைப்பை மற்றொருவருடனோ, பிரிதொரு படைப்புடனோ போகிறபோக்கில் ஒப்பீடுசெய்வதில் சங்கடங்களுண்டு. சிற்ப கலைஞனும் சரி அவரது படைப்புகளும் சரி தனித்தவை.

கலைஞர் கபி க்ரெட்ஸ் நவீன கற்பனையுடன்கூடிய வெண்களிமண்ணிலான சுடுமண் சிற்பங்கள் வடிப்பதில் தேர்ந்தவர். அவரது சிற்பங்களை காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர் சேவியர் என்ற நண்பர். இருவரும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் பாரீசிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். பேச்சுக்கிடையில் கிருஷ்ணா! ஸ்ட்ராஸ்பூர் அருகில் சிற்பக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது. நீ அதை விரும்புவாய் என்று நினைக்கிறேன், ஆகையால் இருவருமாகச் சென்று பார்த்து வருவோம்’, என்றார். அண்மையில் ஓவிய கண்காட்சியொன்றிற்குச்சென்று மனம் ஒன்றாமல் ஏமாற்றத்துடன் உதிர்த்த எனது வார்த்தைகளுக்கு நிவாரணம் தேடுகிறார் நண்பர் என்பதாக அப்போதைக்கு நினைத்துக்கொண்டேன். அருங்காட்சியகங்களுக்குப் போகிறபோது சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. பொதுவில் அனைவரையும் போலவே கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு அவசரமின்றி நிதானமாக அவற்றை பார்க்க நேரும். அம்மாதிரி நேரங்களில் நீங்கள் பொறுமையாகப்பாருங்கள் எனக் கூறிவிட்டு கிடைக்கிற இடத்தில் அலுப்புடன் எனது மனைவி  உட்கார்ந்துவிடுவாள். அநேக தருணங்களில் ஓவியம் மற்றும் சிற்பக் காட்சிகள் எங்கள் திட்டத்தில் இடம்பெறாமல் போவதுண்டு. நண்பர் தான் கண்ட காட்சியை, தமக்கு நேர்ந்த அனுபவத்தை எனக்கும் எப்படியாவது ஏற்படுத்தித் தருவதென்று தீர்மானித்துவிட்டதால் ஒரு ஞாயிற்றுகிழமை அவரும் நானுமாக கபி க்ரெட்ஸ் சிற்பங்களை பார்ப்பதென்று முடிவெடுத்துச் சென்றோம். கபி க்ரெட்ஸ் என்ற பெண் சிற்பக்கலைஞரின் நுணுக்கமான உணர்வுகளை அவர் படைத்திருந்த சிற்பங்களூடாக புரிந்துகொள்ள வாய்ப்பமைந்தது இப்படித்தான்.

 மானுடத்தின் வழித்தடங்களை, உயிர்வாழ்க்கையின் உள்ளுணர்வை சிற்பங்களூடாக நம்மிடம் பகிர்ந்துகொள்ள கபி க்ரெட்ஸ் அகத்தில் கால்கடுக்க வெகுதூரம் நடந்திருக்கவேண்டும். பல்வேறு கருப்பொருளில்  மனித உயிர்களை இரத்தமும் சதையுமாக ஒரு சிற்பக் கலைஞருக்கேயுரிய கவி உள்ளத்துடன் வடிவமைத்திருக்கிறார். ஆரம்பம், உறவு, துன்பம், வழித்தடம், வழிகாட்டி, மகோன்னதம், ஒளி, சக்தி, மூச்சு, திசைமயக்கம் போன்றவை அவரது கருப்பொருட்களில் சில. வடிவங்கள் தோறும் தம்மையும் இணைத்துக்கொண்டு, ஆன்மீகத் தேடலை கலைஞர் தமது சிற்பங்களூடாக அவர் நிகழ்த்தியிருந்தார். மனித குணத்தின் ஓட்டைகளையும், விரிசல்களையும்  வென்ற நிம்மதியையும் எட்டிய அனுபூதி நிலையையும் சிற்பங்களின் முகத்தில் – காணமுடிந்தது. பனித்த கண்கள், புன்னகைபூத்த உதடுகள், சிறைத்த தலை என்ற பொதுஇலக்கணம்கொண்டு சிற்பங்கள் இருந்தன. அச்சிற்பங்கள் அனைத்துமே ஏகாந்த பிரதிகள், ஆனால் அவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக, கும்பலாக நின்று மானுடவாழ்க்கையின் இரகசியங்களை முனுமுனுக்கிறார்கள். சிற்பங்களில் பலர் பௌத்த பிட்சுகளாக எனக்குத் தெரிந்தார்கள். அப்பிட்சுகள் இடைக்கால கிருத்துவ மடாலயத்திற்குள் பிரவேசித்திருப்பதுபோல உணர்வு. ஓர் இந்தியனென்ற வகையில் அச்சிற்பங்களை பரபிரம்மங்களாகக் கண்டேன். எத்தனை யுகங்கள்,  ஊழிக்காலங்கள் வரினும் போயினும் நிலைபேறுடைய கடைபேருண்மையை சுமக்கும் சிற்பவடிவங்கள் அவை. அவரது படைப்புகளை ஒரு தேவாலயத்தின் பின்புலத்தில் காட்சிபடுத்தியமைக்குப் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அமைதி குடிகொண்டிருக்கும் எந்தச்சூழலும் அச்சிற்பங்கள்வழி உணர்த்தப்படும் உண்மைகளுக்குப் பொருத்தமாகவே இருக்குமென தோன்றியது. எனவே அவரை குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பார்க்க சங்கடப்பட்டேன். “எனது படைப்பு மாந்தர்கள் பெரும்பாலும் கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்து அக உலகத்தில் மூழ்கிய ஆன்மீக மனிதர்கள். அவர்களை அறிமுகப்படுத்த தேவாலயச் சூழல் ஒத்ததாக இருக்கிறது மற்றபடி மதம் அல்லது கோட்பாடு என்ற முத்திரையின் கீழ் எனது படைப்புகளை அடையாளப்படுத்த விருப்பமில்லை, பிரபஞ்சத்தின் குறியீடுகளென சொல்லிக்கொள்ளவே விருப்பம்”, என்ற கபி க்ரெட்ஸின் கறாரான பதில் எனது அனுமானத்தை உறுதிபடுத்துவதாகவே அன்று அமைந்தது.

கலைஞர் கபி க்ரெட்ஸை மீண்டும் நண்பரும் நானும் அவரது கலைகூடத்தில் சென்று சந்தித்தோம். உரையாடலின்போது சிற்பக்கலையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், சிற்பத்தை படைக்கிறபோது மனதிலுதிக்கும் எண்ணங்கள் அதற்கான காரணங்கள் எனப்பொதுவாகச் சில கேள்விகளை முன் வைத்தேன். கபி க்ரெட்ஸ் சித்திர கலை, ஓவியம் தீட்டுதல் என ஆர்வங்கொண்டிருந்த மிக அடக்கமான கிராமத்துபெண். தொடக்கத்தில் தனதிருப்பை பிறருக்குணர்த்த ஓவியங்களும் சித்திரங்களும் தேவையாய் இருந்த என்றார்.  “வெண்களிமண்ணில் சிற்பங்களை உருவாக்குகிறபோது ஆரம்பம் முதல் முடிக்கின்றவரை எனது உணர்வுகளை குறையின்றி அதனோடு பகிர்ந்துகொள்ளும் மன நிலைக்கு ஆளாகிறேன். அவ்வுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தவும் முடிகிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். பரபரப்புடன் இயங்கும் உலகச்சூழலில் நம்முள் நிதானத்தையும் அமைதியையும் தேடவேண்டியவர்களாக இருக்கிறோம். சிற்பக்கலை அதற்கு வழிவகுக்கிறது”, என்ற பதிலில் எனது பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.   இளைமைமுதற்கொண்டு கலைகளில் இருந்த ஆர்வத்தினால் ஒற்றைபெண்ணாக இத்தாலிக்குப் புறப்பட்டு போனார். அங்குதான் சுடுமண்வகை சிற்பங்களில் அவருக்கு காதல் பிறக்கிறது. சிற்பக் கலையை பயில ரோம் நகர வீதிகளில் குருவைத் தேடி அலைந்திருக்கிறார். அப்படிக்கிடைத்தவர்தான் the name of the rose போன்ற திரைப்படங்களில் பணியாற்றி பெரும் புகழ்பெற்றிருந்த Filomeno Crisara. அவரிடம் குருகுலவாசம். இன்று கபி க்ரெட்ஸ் ஒரு தேர்ந்த சிற்பக்கலைஞர். வருடம்தோறும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று கண்காட்சிகளை நடத்திவருகிறார். “விரல்கொண்டு ஓவியம் தீட்டுவதைக்காட்டிலும் கைகொள்ள களிமண்ணையெடுத்து உருவங்களை சமைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறதென்று” உரையாடலின் போது அவர்தெரிவித்த வார்த்தைகள் பேரின்பத்தில் உய்யும் நிலை.

——–

உலக மகளிர்தினம்:

பண்டிகைக்கு, நாட்டிற்கு, தலைவர்களுக்கென ஒதுக்கிய நாட்கள் போக, எஞ்சிய நாட்களில் ஒன்றிரண்டு சில நல்ல காரியங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றுள் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் நினைவுகூரப்படும் உலகமகளிர் தினமும் ஒன்று. ஆனால் புள்ளிவிவரங்கள் தரும் ஏமாற்றத்தினால் அறைகூவல்கள்,  புதிய சபதங்கள். சமுதாயத்தில் அடையாளம்பெற்ற பெண்களை தலமையில் உரைகள், விவாதங்கள், தீர்மானங்கள். ஆனால் வரலாறு தரும் உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றன. தனிமனிதனோ, இனமோ, ஒரு சமூகமோ பாதிக்கப்படுகிறவர் எவராயினும் சுயமுயற்சியோ விழிப்புணர்வோ இல்லையென்றால் விமோசனங்களில்லை. சுதந்திரம், சமத்துவம் எனப் பெருமைகொள்ளும் பிரான்சுநாட்டின் இன்றைய நிலமை:

4மணி 1நிமிடம்: சராசரியாக நாளொன்றிர்க்கு பெண்ணொருத்தி வீட்டுப்பணிகளுக்கு செலவிடும் நேரமிது. ஓர் ஆண் குடும்பத்திற்கென்று வீட்டிலிருக்கிறபோது செலவிடும் நேரத்தைக்காட்டிலும் (2மணி 13 நிமிடம்) இருமடங்கு அதிகம். இது தவிர  பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறாள், மாறாக ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒதுக்க முடிந்த நேரம் அரைமணிக்கும் குறைவு.

ஒரு நாளில் பெண், தமது விருப்பமானவைகளுக்காக செலவிடும் நேரம்: 4மணி.45. ஆண்கள் விருப்பமானவைகளுக்கு ஒதுக்கும் நேரம் 5மணி 30 நிமிடங்கள். வேலைவாய்ப்பும் ஆண்களுக்கே அதிகம். பெண்களில் 31  சதவீதத்தினர் வேலையின்றி முடங்கிக்கிடக்க ஆண்களில் வேலைவாய்ப்பு அமையாதவர்கள் 25 சதவீதத்தினர். வேலைக்கும் செல்லும் பெண்களிலும் 31சதவீதத்தினர் பகுதிநேரப் பணிகளைச் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களில் சொற்ப சதவீதத்தினரே (அதாவது 7 விழுக்காட்டினர்) இந்நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தவிர வேலைக்குச்செல்லும் பெண்களில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்களுக்கு ஈடான ஊதியமோ, ஊதிய உயர்வோ வழங்கப்படுவதில்லையாம். இப்படி பலதுறைகளில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்கள் நிலைமை ஆண்களினும் பார்க்க தாழ்ந்தேயிருக்க, இயற்கை ஒரு விஷயத்தில் அவர்களுக்கு நீதியை வழங்கியிருக்கிறது. அது பெண்களுக்கான ஆயுட்காலம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் பெண்கள் ஆயுட்காலம் 85 ஆண்டுகள் என்கிறார்கள். சராசரி ஆணுக்கு 78 வயதில் உயிர்வாழ்க்கை முடிந்துவிடுமாம். ஆணைக்காட்டிலும் 7 ஆண்டுகள் அதிகம். 78 ஆனடுகால இழப்பை இந்த எட்டு ஆண்டுகளில் தாய்க்குலத்தினர் ஈடுசெய்யமுடியுமாவெனத் தெரியவில்லை. ஆனால் பெண்களில் அநேகர் கணவனை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறார்ளென்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

——-

பதிப்புலகத்தின் எதிர்காலம்

இனி அச்சு வடிவ புத்தகங்களுக்கும் செய்திதாட்களுக்கும் வேலையில்லை என்கிறார்கள். ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் ஒரு பிரிவான உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் கருத்தின்படி 2040ல் மேற்கண்ட சங்கதிகள் இலக்கமயப்படுத்தப்பட்டு கணினிக்குள் கரைந்து போகும். எச்சரிப்பவர் இவ்வமைப்பின் பிரதிநிதி திருவாளர் கர்ரி (M. Gurry). La Tribune de Geneve’ என்ற சுவிஸ் நாட்டு தினசரி ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தின்படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தினசரிகள் அவ்வளவும் இல்லாதொழியும்.- இப்போதே நம்மில் பலர் குறிப்பாக வலைத்தள இணைப்புள்ள கணினி உபயோகிப்பாளர்கள் தினசரிகளை இணையதளங்களில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அச்சசு வடிவிலான புத்தகங்கள் 2040ல் முடிவுக்குவந்துவிடுமாம். அமெரிக்கா முந்திக்கொள்ளும் என்கிறார்கள்.அதாவது 2017லேயே அங்கு அச்சிட்ட புத்தகங்கள் சந்தைக்கு வராது. வளர்ச்சியென ஒன்றிருந்தால் இழப்புகளுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் எழுப்பும் வேறொரு பிரச்சினை கவனத்திற்குரியது. பத்திரிகையாளரும் எழுத்தாளர்களும் திருவோடு ஏந்தவேண்டியிருக்குமென அஞ்சுகிறார். பதிப்பிக்க சாத்தியமில்லை என்கிறபோது பதிப்பாளர்களும் பத்திரிகை அதிபர்களும் ஊதியத்தை எங்கிருந்து வழங்குவார்கள் என்று கேட்கிறார்?   “குறைந்த பட்சம் அறிவுசார் சொத்துரிமைக்கேனும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் இல்லையேல் ஆபத்து”, என்கிறார் ஆசாமி. மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவேளை இக்குரலில் தொனிக்கும் குரலுக்குப் பொருளிருக்கலாம், தமிழ் எழுத்தாளர்கள் இதில் கவலைப்பட  என்ன இருக்கிறது, சொல்லுங்கள்?

—————————————————————.

இசைவானதொரு இந்தியப்பயணம் -10

பிப்ரவரி 10

திண்டுக்கல்லில் ஒன்பதாம் தேதி இரவு பார்சன்ஸ் கோர்ட் என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் ஆறரைமணிக்கெல்லாம் புறப்பட்டு, எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு எட்டுமணிக்கெல்லாம் நாமக்கல் புறப்பட்டுவிட்டோம். ஹோசூர் கிருஷ்ணகிரி சாலையில் வடக்கே பயணம் செய்யவேண்டியிருந்தது. அண்மைக்காலங்களில் சாலைகளின் துரிதவளர்ச்சியை இந்தியாவில் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலையும் எதிர்பார்த்ததைக்காட்டிலும் நன்றாக இருந்தது. கு. சின்னப்ப பாரதி காலையிலேயே ஒருமுறை தொடர்புகொண்டிருந்தார். வழிகளையெல்லாம் சரியாகச் சொல்லியிருந்தார். ஓரிடத்தில் எங்கள் வாகனஓட்டி சாலையைத் தவறவிட்டு கரூருக்குள் போய்விட்டார். பத்து நிமிடநேரம் கூடுதலாக செலவிட்டிருந்தோம். ஆனால் அதை பெரிதாகச் சொல்லிக்கொள்ள இல்லை. இடையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த நேர்ந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலை ஓரம் நன்றாகவே இருந்தன. ஒன்பது மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்துவிட்டோம். நகரத்தின் உள்ளே சேலம் ரோட்டில் எழுத்தாளர் சின்னப்ப பாரதி அவரது நண்பருடன் காத்திருந்தார்.

கிறித்துவ சகோதரி ஒருவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த தமது சங்கம் என்ற நாவலை பிரான்சு நாட்டில் எந்த பதிப்பகமாவது வெளியிட முன் வருமா எனக்கேட்டு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி எழுதியிருந்தார். எனக்கும் தமிழ் படைப்புகளை எனது அமைப்பு மூலமாக பிரெஞ்சில் கொண்டுவரும் ஆர்வம் இருந்ததால் சம்மதித்தேன். எங்கள் அமைப்பு மூலம் கொண்டுவந்தால் பிரயோசனமில்லையென்பதும் தெரியவந்தது. காரணம் பிரெஞ்சு பதிப்பகங்கள் துணையின்றி அதனைப் பரவலாக பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாதென்பது காலம் கடந்து தெரியவந்தது.  எனினும் பதிப்பகங்களுக்கு அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தேன். இதற்கிடையில் தமிழ்நாட்டிலிருந்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் பிரெஞ்சு பதிப்பகங்களுக்கு முதன் முதலாக அனுப்புகிறபொழுது தமிழில் நல்ல நூல்களை அனுப்பினால்தானே தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள் என்றார்கள். நான் பிரெஞ்சில் வெளிவந்த அந்த நூலை வாசித்தேன். எனக்கு நிறைவாக இருந்தது. தவிர கொல்லிமலை மக்களின் பிரச்சினையை பேசுவதாக இருந்தது. பிரெஞ்சு பதிப்பகங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இதுபோன்ற நூல்களைத்தான் எதிபார்க்கிறார்கள் என்ற எனது நம்பிக்கை காரணமாக முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்கள் பதிப்பகத்தின் மீது நம்பிக்கைவைத்து கையெழுத்து பிரதியை அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துவிட்டு, தாங்கள் பதிப்புக்கு இணங்கினால் ஒரு மாதத்தில் கடிதம் எழுதுவதாகவும் இல்லையெனில் உரிய தபால் கட்டணம் அனுப்பிவைத்தால் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள். கு.சின்னப்பாரதி பிரெஞ்சு மொழி பெயர்ப்புவெளிவர மிகுந்த ஆர்வமும்காட்டினார்  அவசரமும்காட்டினார். எனவே வேறு இரண்டு பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் கூறியதுபோல அதனை அப்படைப்பின் குற்றமாக ஏற்றுகொள்ள இயலாது. இக்காலத்தில் மொழிபெயர்ப்பினை பதிப்பிக்கிறபோது அம்மொழிபெயர்ப்பும் ஒழுங்காக வந்திருக்கவேண்டும். எனக்கு நன்றாக இருந்தது. படித்த பதிப்பாளர்களின் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. தவிர பல நல்ல எழுத்துகள் பதிப்பாளர்களால் பல முறை நிராகரிக்கப்பட்டமைக்கு  முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

மாறாக எனது அமைப்பு நண்பர்களிடம் மொழிபெயர்ப்பு நாவலை அனுப்பிவைத்தபோது அதில் பிரான்சுவாஸ் மட்டும் மொழிபெயர்ப்பு திருப்தியில்லை என்றார். மற்ற இருவரும் நாவல் நன்றாக இருக்கிறதென்றார்கள். ஆக நாவலைப்படித்துவிட்டு அடித்தட்டு மக்களின் துயரில் அக்கறைகொண்டிருக்கிற  கு.சின்னப்ப பாரதியை  பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக சின்னப்ப பாரதியிடம் இவ்விஷயத்தைக்கூறியிருந்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். எந்த எழுத்தாளனும் எதிர்பார்ப்பது அதைத்தானே. விருதுகள், பரிசுகளைக்காட்டிலும் இதுபோன்ற பாராட்டுதல்கள்தான் எழுத்தாளனை உற்சாகப்படுத்துக்கின்றன. கு.சின்னப்பபாரதி சேலம் ரோட்டில் பிரெஞ்சு நண்பர்களைக் காரில் பார்த்ததும் கட்டி தழுவினார். சக எழுத்தாளனாக அந்த மகிழ்ச்சியை உள்வாங்கிக்கொண்டேன். அவரது வாகனத்தை பின்தொடர்ந்துவருமாறு எங்கள் வாகனஒட்டிக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு முன்னால் சென்றார்.  கொஞ்சதூரத்தில் ஒரு உணவு விடுதிமுன்னால், பலகாரம் சாப்பிடலாமே என்றார். நாங்கள் ஏற்கனவே திண்டுக்கல்லில் முடித்துவிட்டு வந்ததைக் கூறினோம். அவருடைய வீடு நகரத்தைவிட்டு தள்ளி, புற நகரில் அமைந்திருந்தது. பிரெஞ்சு நண்பர்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள். உள்ளே சென்றதும் தேநீர் வந்தது. சின்னப்பபாரதியின் துணைவியார் பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் என நினைத்துக்கொண்டேன். வேறு சொற்கள்வேண்டாம். எழுத்தாள நண்பர் ஒரு குழந்தையைபோல தமது படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் எடுத்துகாட்டி மகிழ்ந்தார். அந்தக் கண்களைப்பார்க்கவேண்டுமே!

எல்லோரும் செல்வம் காலேஜ் ஆவ் டெக்னாலஜிக்குச்சென்றோம். அங்கும் அனைவருக்கும் வரவேற்பு. பிறகு அறக்கட்டளை நண்பர்களின் அறிமுகம், செல்வம் கல்விஸ்தாபனத்தில் தலைவர் திருவாளர் முனைவர் செல்வராஜ் அறிமுகமென முடிந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கு; சின்னப்பபாரதி அறக்கட்டளை தலைவரும் சரி நிர்வாகிகளும் சரி கு.சின்னப்பாரதி மீது வைத்திருந்த மரியாதையை புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்கள் ஆசிரியர்களென சுமார் இரு நூறுபேருக்கு மேல் கூடியிருந்தனர். எனது மாத்தாஹரி அண்மையில் சின்னப்பாரதி அறக்கட்டளையின் சார்பாக பரிசினை வென்றிருந்தது. என்னை அறிமுகப்படுத்துகிறபோது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்கள். இரண்டு மாணவர்கள் காலச்சுவடில் எனது படைப்புகளை தொடர்ந்து படிப்பதாக கூறியது எதிர்பாராத சந்தோஷம். நண்பர் இந்திரனும் பேசினார். பிரெஞ்சு நண்பர்கள் சின்னப்பபாரதியின் நூலை குறிப்பிட்டு பேசினார்கள். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

மதியம் கேட்டரிங் மாணவர்கள் தயாரித்திருந்த இந்திய உணவு மேற்கத்திய பாணியில் பரிமாறப்பட்டது. இடையில் எழுத்தாளர் சின்னப்பபாரதி எ·ஸ்பிரஸ், இந்து பத்திரிகையாளர்களை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரெஞ்சு நண்பர்களுக்கு நாமக்கல் மண்ணில் எழுத்தாளர் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்த செய்தியை பின்னர் படிக்கவும் நேர்ந்தது. இந்தியாவில் ஆங்கிலதினசரிகளைக்கூட அத்தனை சுலபமாக நம்பக்கூடாதென்பதுபோல அடுத்த நாள் செய்திகளிருந்தன. பிரெஞ்சு நண்பர்கள் தங்களை எழுத்தாளர்களென்று சித்தரித்தும், சின்னப்பபாரதியைப் பார்க்கத்தான் இவ்வளவுதூரம் வந்தோமென்றும் நாங்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். இதெல்லாம் இந்திய தினசரிகளில் சகஜமென கூறி அவர்களை (பிரெஞ்சு நண்பர்களை) பிறகொருநாள் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மதியம் கொல்லிமலைக்கு பயணித்தோம். எழுத்தாளர் சின்னப் பாரதி நூலில் வரும் சந்தை நடக்குமிடத்தையெல்லாம் காண முடிந்தது. சின்னப்ப பாரதியின் தயவால் கொல்லிமலையின் தரிசனம். இன்னொரு முறை ஆற அமர குடும்பத்துடன் சென்று அங்கே தங்கிவிட்டு வரவேண்டும், என நினைத்துக்கொண்டிருக்கிறேன். சின்னப்பபாரதி கொல்லிமலைக்குத் துணையாக அனுப்பியிருந்த நண்பர் இருமுறை வழியைத் தவறவிட்டதும், நாமக்கல்லை நெருங்குகறபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதும் வழக்கம்போல நண்பர் சவியே தெபலுக்கு எரிச்சலூட்டியது. ஏதோ சொல்லப்போக நான் பதிலுக்கு ஏதோகூற விவாதம் விதண்டாவாதமாக நீண்டது. போதாதற்கு எங்களுக்கு முன்னால் காரில் சென்ற சின்னப்ப பாரதியின் நண்பர் நாங்கள் பின்னால் வருகிறோமா இல்லையா என்பதைக்கூட கவனியாமல் புறப்படுபோய்விட நாங்கள் வழியைத் தவறவிட்டு சில மணித் துளிகள் கூடுதலாக அலைந்தோம். பின்னர் சின்னப்பபாரதிக்கு போன்செய்து அவருடைய இளைய மருமகன் வந்து எங்களை அழைத்து சென்றார். இரவு எழுத்தாளர்வீட்டில் இலைபோட்டு குழிப்பணியாரம், இட்டலி, தோசை, பூரி யென வயிற்றை நிரப்பினார்கள். முதலில் பத்தாம்தேதி இரவு தங்கிவிட்டு பதினோறாம் தேதி காலை புதுச்சேரி செல்லலாமென்றுதான் யோசித்திருந்தோம். அதிகாலை எழுந்திருக்க தாமதித்துவிடும் பின்னர் புதுச்சேரிசெல்ல காலை பத்தும் ஆகலாம பதினொன்றும் ஆகலாமென்றுகூற அன்றிரவே புதுச்சேரிக்குப் புறப்பட்டாயிற்று.

————————

பிரான்சும் திரைப்பட விழாக்களும்

செசார் தேசிய திரைப்பட விருது-2012

இபோதெல்லாம் இந்தியத் திரைபடத்துரையினருக்கு ஆஸ்கார் விருதுகளில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ கான் (Cannes) திரைப்பிடவிழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். ஆஸ்கார்போல அதுவுமொருநாள் அலுத்துபோகக்கூடும். கான் திரைப்படவிழாவைத் தவிர்த்து பிரான்சு நாட்டில் ஆப்ரிக்க  லத்தீன் அமெரிக்கா திரைபட விழா, ஐரோப்பிய திரைப்படங்களுக்கான விழா, கேலிச்சிந்திரங்களுக்கான திரைபடங்கள்விழா, இத்தாலிய படவிழா, அமெரிக்க திரைப்படவிழா, பெண்கலைஞர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் விழா, சமூக விழிப்புணர்வு தரும் திரைப்படங்கள் விழா, குறும்படங்கள் விழா, நார்வே சுவீடன் திரைப்படங்கள் விழா, குற்றவியல் படங்கள், அதீதக் கற்பனைகளை கதைக்களனாகக் கொண்ட படங்களென ஆண்டுதோறும் பிரான்சுநாட்டில் 24 திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர தேசிய திரைப்பட விருது விழாவும் பிப்ரவரிமாதத்தில் செசார் தேசிய திரைப்பட விருது விழாவென்ற (Cérémonie des César du cinéma) பெயரில் நடை பெறுவதுண்டு.

செசார் தேசிய திரைப்பட விருது விழா 1975ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசை அமைப்பாளர், சிறந்த துணை நடிகர், நடிகை அறிமுகக் கலைஞரென பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்குகிறார்கள். விருது  குழுவினர், அரசாங்கத்தின் தலையீடின்றி செயல்படுகிறார்கள். அமைப்பு ஒரு தன்னாட்சி உரிமையுள்ள இயக்கம். அமெரிக்காவுக்கு ஆஸ்கார் விழா எப்படியோ அப்படி பிரான்சு நாட்டிற்கு செசார் தேசிய திரைப்பட விழா. இவ்வருடம் “L’Artiste (The Artist) என்ற ஊமைப்படம் பல பரிசுகளைத் தட்டிசென்றது. இப்படத்தைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் எழுதியிருந்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகையென பரிசுகளைக் குவித்தபோதும் சிறந்த நடிகருக்கான செசார் விருது ‘Intouchables’ (‘தீண்டத் தகாதவர்கள்) படத்தில் நடித்திருந்த கறுப்பரான ஒமர் சி (Omar Sy)க்கு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில சினிமாக்களிலும் இதுவரை துணைபாத்திரங்களில் நடித்திருந்த ஒமர் சிக்கு தகுந்த பரிசென்றே சொல்லவேண்டும். L’Artiste படத்தின் கதா நாயகன் Jean Dujardin (ழான் துய்ழர்தென்)  ஏமாற்றத்துக்குள்ளானார். அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அதற்கடுத்த வாரத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற விழாவில் L’Artiste திரைப்படம் பலபரிசுகளை வென்றது. அதில் சிறந்த நடிகருக்கான பரிசும் அடங்கும்.

ஆசிய திரைப்படங்களுக்கான விழா

பிரான்சு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த (மார்ச்-7-11) ஆசிய திரைப்படங்களுக்கான விழா’( Festival international des cinémas d’Asie –FICA)  நமக்கு முக்கியமானது. இந்தியத் திரைப்படத்துறையினர், இப்படியொரு திரைப்பட விழா பிரான்சுநாடைபெறுகிறதென்பதை அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சீனா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. வழக்கம்போல இந்தியாவின் பெயரை காணவில்லை. புதிய முயற்சிகளிலிறங்கும் நமது தமிழ்ப்பட இயக்குனர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விழா. விழாவுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீனியரான இயக்குனர் எலியா சுலைமான் (Elia Suleiman) தலமை வகித்தார், அவரொரு நல்ல நடிகருங்கூட. மொர்ட்டெஸா பாஷ்பாப் (Morteza Farshbab)என்ற ஈரானிய இயக்குனரின், துக்கம் (Mourning) தாமரை விருதைப் பெற்றது. விமர்சகர்களின் தங்கத் தாமரை விருதை ஜப்பானிய இயக்குனர் சொனோ சியொன் (Sono Sion) உழைப்பில் வெளிவந்திருந்த ‘Himlizu’ வென்றது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குனரான வாங் சியாஷ¤வாய் (Wang Xiashuai)யும், ஜப்பான் நாட்டின் இயயக்குனருமான கியோஷி குரொசொவா (Kiyoshi Kurosawa)வும் கௌரவிக்கப்பட்டனர்.

————————————–

 

உள்ளத்தில் ஒளியுண்டாயின்

எல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.

இம்மாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா? என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அவ் வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.

தமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:

“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகமாகாவா? தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப்பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்த அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.

பிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவ அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் ஓர் அறம் வேண்டாமா? இப்படியா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரணங்கள் இல்லையா அல்லது வறட்சியா? விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?

1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கியவர், « கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள் », என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளரலை இதோ இன்றும் கூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென சொல்லிக்கொள்கிற பலபேர்களின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்

———————————————–

இசைவானதொரு இந்தியப் பயணம்

பிப்ரவரி -8 -9

பிரெஞ்சு நண்பர்களுடனான எனது இந்தியப் பயணத் திட்டத்தில் பிப்ரவரி எட்டு மற்றும் ஒன்பது தேதிகள் வேறுவகையானவை. இலக்கியம் சார்ந்திராதவை. ஆனாலும் மனித உயிர்கள் -சமூகம் – மானுடம் -பிரபஞ்சம் தவிர்த்ததொரு இலக்கியம் இருக்கமுடியுமா என்ன? இவற்றை பற்றிய பிரக்ஞையின்றி இலக்கியம் இயங்கமுடியாதென்கிற ஓர்மைக்கு உங்களைப் போலவே நானும் சொந்தக்காரன்.

இங்கே ஓர் உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடந்த ஓராண்டிற்கு முன்பு பிரான்சு நாட்டில் நான் வசிக்கிற Strasbourg நகரில் தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம் அதனை சொல்புதிது என்ற அமைப்பின் பேராலேயே நடத்தினோம். தமிழர் குடியேறியுள்ள நாடுகளில்லெல்லாம் அவர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். பிரான்சிலுமுண்டு. எனக்கு நவீன இலக்கியங்களில் கவனம். நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் பிறபகுதிகளைப்போலவே பிரான்சிலும் குறைவு. எனக்கோ அதனைத் தவிர்த்து வேறு திசையில் தலைவைத்து படுக்க விருப்பமில்லை. பள்ளியில் கல்லூரியில் தொன்ம இலக்கியங்களை படித்தது, இப்போதும் அவ்வப்போது வாசிக்க நேருகிறது, அதுபோதும். எனது முழுக்கவனத்தையும் நவீன இலக்கியத்தில் செலுத்த விரும்புகிறேன்.  இந்திரன் பிரான்சுக்கு வருகிறாரே அவரைக்கொண்டு தமிழ் நிகழ்ச்சியொன்றை நான் இருக்கின்ற ஊரில் செய்யலாமென்று நடத்தவும் செய்தேன். பின்னர் தொடர்ந்து அதனை செயல்படுத்த முடியாமைக்கு இரண்டு காரணங்கள்:

1. நவீன தமிழ் இலக்கியமென்பதே குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் என்கிற வெகுசனபுரிதலுக்கு பாடமெடுக்க கையாலாகாதவனாக நான் இருந்தேன் என்பது முதற்காரணம்.

2. இலக்கியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் தமிழிலக்கிய வரலாற்றை பதினெட்டாம் நூற்றாண்டுக்கு மேல் தெர்¢ந்திராதவர்கள் அல்லது தெரிந்திருந்தும் புரட்டிப்பார்க்க விருப்பமில்லாததாவர்கள் என்பது இரண்டாவது காரணம்.

ஆக அத்தி பூப்போல நடந்தேறிய எனது சொல்புதிது இலக்கிய அமர்விற்கு எனது நீண்டகால நண்பர்களான சவியெ, மனே தம்பதியினரையும் அழைத்திருந்தேன். நிகழ்வில் ஒரியக் கவிஞர் டாக்டர் மனோரமா பிஸ்வால் அவர்களின் கவிதைத்தொகுப்பொன்று பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டு  “L’heure du retour” என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது – ஒரிய மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்குக் கொண்டுவந்திருந்தவர் சூரிய காந்த்த கயனென்கிற மொரீஷியர். இதில் என்பங்கு எதுவுமில்லை முழுக்கமுழுக்க நண்பர் இந்திரனின் முயற்சி. இந்திரன் உரையில் இந்திய இலக்கியங்கள் குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் பிரெஞ்சில் வரவேண்டுமென்கிற தமது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தினார். நானும் எனது உரையில் அதன் அவசியத்தை உணர்ந்தவன் போல பேசினேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் குறிப்பாக ஆங்கிலத்தில் அல்லாத மாநில மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியங்களை பிரெஞ்சில் கொண்டுவருவதென்கிற கனவை நனவாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்துவதென்ற யோசனையை முன்வைத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் பின்னர் சந்தித்தபோது அமைப்பினை உருவாக்க ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள்; இத்துறையில் பிரான்சிலிருக்கும் புதுச்சேரி தமிழருக்கு அதிக நாட்டமினமையால் பிரெஞ்சு நண்பர்களோடு சேர்ந்து செயல்படுவது உத்தமமென தொடங்கினோம். இந்நண்பர்கள் தீவிர இலக்கியவாதிகளில்லை. அமெச்சூர் கவிஞர்கள். அவர்கள் கவிதைகளில் பல நன்றாகவுமிருந்தன. எனவே அவர்கள் துணையுடன் எனது அமைப்பைத் தொடங்குவதென தீர்மானித்தேன். இருபதாண்டுகளுக்கு மேலாக அவர்கள் மூவரும் எனக்கு நண்பர்கள். எனவே தெரியாத பலாக்காயைக் காட்டிலும் தெரிந்த கலாக்காய் மேலானதென்கிற பழமொழிக்கு ஏற்ப தொடங்கினேனென வைத்துக்கொள்ளுங்கள். நண்பர் சவியே என்னிடத்தில் கிறித்துவ மதத்தை பேசாவிடினும் இறைநம்பிக்கை அதிகமாக இருந்தது. மனே தம்பதியினரும் இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் நண்பரான பிரான்சுவா மனே  கரித்தாஸ் (Caritas) என்கிற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகிறவர். ஆக நண்பர்கள் மூவரும் இந்தியாவில் கிராமப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் பணியைப் பார்வையிடவேண்டுமென்று ஆசைபட்டனர்.  பிரான்சுவா மனேவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கரித்தாஸ் பொறுப்பாளராக இருக்கும் இயக்குனர் ஜான் ஆரோக்கியராஜ்  பழக்கமென்பதால் அவரைத் தொடர்புகொண்டு ஆவன செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடு முழுக்க முழுக்க மனே தம்பதினர் ஏற்பாடென்று சொல்லலாம். முதலில் இதனை நான் எதிர்த்தேன். இலக்கியப்பணி என்று  ஆரம்பித்துவிட்டு வேறு திசையில் பயணிக்க எனக்கு விருப்பமுமில்லை நேரமமுமில்லை. தவிர பொதுவாக ஐரோப்பியர்களுக்கு ஒரு விதமான ‘Voyeurism’ உண்டு. நமது அறிவைக்காட்டிலும் அறியாமையைத் தெரிந்துகொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இந்தியாவில் தேனீக்கள் மொய்க்கும் மலர்களை படம் பிடிக்கமாட்டார்கள், ஆனால் ஈக்கள் மொய்க்கும் மனிதர்களையும் பண்டங்களையும் காட்சிப்படுத்துவார்கள். இந்த அலகினை  இலக்கியத்திற்கும் உபயோகிக்கிறார்கள் என்பதுதான் சோகம். இந்நிலமைக்கு இந்தியர்களான நாமும் ஒருவகையில் பொறுப்பு. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கவிரும்பாத இயலாத தாய்மார்களாக நாம் இருக்கிறோம்.  எனினும் நண்பர்களால் இந்திய இலக்கியத்திற்கு நாலு நல்லது நடக்குமெனில் சகித்துக்கொள்வதென முடிவு எடுத்தேன்.

முதல்நாள் மாலை சென்னையிலிருந்து ஜான் ஆரோக்கியராஜ் நாங்கள் கேட்டுக்கொண்டபடி வாடகைக் காரை பிடித்து புதுச்சேரி வந்திருந்தார். அவருடைய வாகனத்தில் புறப்பட்டு புதுச்சேரி அண்ணா நகரிலிருந்த ‘Rural Education and Action for Liberation’ [REAL]. என்கிற தொண்டு நிறுவனத்திற்குச் சென்றோம். நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான திருவாளர் எம்.ஏ லாரன்ஸ¤ம் அவரது அலுவலக ஊழியர்களும் வரவேற்றனர். எங்களுக்குச் சந்தணமாலைகள் போட்டார்கள். காப்பியும் பிஸ்கட்டும் கிடைத்தன. ஸ்தாபனத்தின் தொடக்கம் அதன் வளர்ச்சி, இயங்கும் விதம், களப்பணியாற்றும் ஊர்கள், பணி பற்றிய விவரங்கள் அனைத்தையும் சோர்வின்றி ஆர்வத்துடன் விளக்கினார்கள்.

1960ம் ஆண்டு திண்டிவனம் அருகே எண்ணாயிரமென்ற கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கிராமத்தின் விளிம்பு நிலைமக்களும், தலித் மக்களும் படும் துயரத்தைக் காணச்சகியாமல் இத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியதாக அறிந்தோம். ஆரம்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இன்றோ 132 அமைப்புகள் இருக்கின்றன.  பெண்கள் கல்வி, வங்கிக்கடன், முதியோர் கல்வி, சுற்றுப்புற சூழல் என இவர்கள் ஆற்றும் பணியினைக் கண்ணுற்ற ஆட்சியாளர்கள் ஓட்டுவங்கியின் மகத்துவத்தை அறிந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். எனினும் இன்றளவும் சுற்றுவட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இவர்கள் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். REAL அமைப்பின் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி மாநில கரித்தாஸ் நிர்வாகி, கள ஊழியோர்கள் ஆகியோரின் துணையுடன் கோட்டக்குப்பம், கூனிமேடு பின்னர் எண்ணாயிரமென்று சென்றோம்.

பிப்ரவரி 9ந்தேதி காலை ஐந்து மணி அளவில் ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியிலிருந்த எங்கள் அறைகளைக் காலிபண்ணிவிட்டு பெரிய பெட்டிகளையெல்லாம் நண்பர் நந்திவர்மன் வீட்டில் போட்டுவிட்டு கைப்பைக்களுடன் திண்டுக்கல் புறப்பட்டோம்; அங்கே நண்பர் இந்திரன் எங்களுடன் சேர்ந்துகொண்டார்; விழுப்புரம் திருச்சி வழியாக திண்டுக்கல் பயணப்பட்டோம்.  அங்கும் நிர்வாகிகள், நிறுவனத்தின் ஊழியர்கள் தொண்டு நிறுவனத்தினர் வரவேற்பளித்தார்கள். அவர்களுடைய பணிகளை விளக்கினார்கள். பல்வேறு கிளை நிறுவனங்கள் அவர்களின் பிரத்தியேக பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பின் பெண்தலைவிகள் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்கள். அன்று மதியம் திண்டுக்கல் அருகே இருபது கி.மீட்டர் அருகிலொரு கிராமத்தில் வரவேற்பு: கும்மியாட்டம் தேவராட்டம் என சிரத்தையோடு எல்லாவற்றையும் ஆடினார்கள். முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தில் சந்தித்த சுய உதவி குழுக்களைக்காட்டினாலும் திண்டுக்கல் மகளிர் சுய உதவி குழு வசதி கூடியதாக இருந்தது. ஆனால் திண்டுக்கல் சுய உதவி குழுவும் சரி முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த சுய உதவி குழுக்களுக்கும் சரி மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில் தாங்கள் கிராமப்பஞ்சாயத்து தேர்தலில் உறுப்பினர் ஆகியிருப்பதாக தெரிவித்தார்கள். இவைகளெல்லாம் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தைரியம் என்றார்கள். நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்கள். நாங்கள் போனஇடங்களிலெல்லாம் மாலைகள், குளிர்பானங்கள் அல்லது தேனிர் என்றவகையில் ரூபாய் ஐம்பதிலிருந்து நூறுவரை செலவு செய்திருப்பார்கள். ஏழைப்பெண்களின் உழைப்பில் வந்த காசு. அப்பெண்கள் ஒவ்வொருவருக்கு  புண்ணியவான்கள் வரமளிக்கவந்திருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தது. அவர்கள் செய்திருந்த மணிமாலைகள், பொம்மைகள் போன்றவற்றைக் காண்பித்தார்கள். பிற பெண்கள் அமைப்புடன் போட்டியிட்டு பரிசுகள் வென்ற சந்தோஷத்தையும் பகிர்ந்துகொண்டனர். பெண்களில் அநேகருக்கு வெள்ளைதோல்காரர்கள் இரட்சகர்களென்கிற நினைப்பு. எண்ணாயிரத்தில், ஒரு மில்  தொடங்கி வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்தால் புண்ணியமாப்போகுமென்று பெண்ணொருத்தி கூறியது ஓயாமல் ஒலிக்கிறது.

———————————————

கவனம்பெற்ற பதிவுகள் – ஏப்ரல் 7

கூடங்குள அணுமின் உலையை மூடுவவதற்கான வழிமுறையும் அசதா என்பவரின் கவிதையும்:
http://mugaiyurasadha.blogspot.fr/”

அசதா என்பவரின் வலைப்பூவிலுள்ள “கூடங்குளத்து சாஸ்தா” வாசிக்கப்படவேண்டிய கவிதை. அண்மைக்காலங்களில் கவிதகள் மீது அதிகம் நாட்டமின்றி இருந்தவன், எந்திரத்தனமான உற்பத்திகளில் கலைஞனைக் காணாததால் ஏற்படும் சோகம் சகித்த முடியாதது. இக்கவிதை மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அணுஉலை மின்சாரத்திற்கு ஆதரவானவன் நான்  ஆனால் எனக்கு ‘நாராயண்சாமி’களைக்காட்டிலும் ‘உதயகுமார்’ போன்றவர்களின் மீது மரியாதையுண்டு. ஆனால் அணு உலைக்கு ஏன் ஆதரவளிக்கிறேன் என்பதை நண்பர்களுக்குச் சொல்லியாகவேண்டும்.

1. உலகில் அணுஉலையை வேண்டாமென முடிவெடுத்துள்ள நாடுகள்  படிப்படியாக அதனைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டுவரவேண்டுமென்று சொல்கிறார்களேயன்றி நாளைக்கே மூடிவிடலாம் எனக்கூறுவதில்லை. இதில் பாதிப்படைந்த ஜப்பான், ரஷ்ய நாடுகளில்கூட அதுதான் உண்மை.

2. அணு உலையைக் காட்டிலும் மலிவான நம்பகமான மின்சார உற்பத்திமுறை தற்போதைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

3. அணு உலையால் ஆபத்து என்ற கருத்தியம்: மறுக்கமுடியுமா என்ன? விபத்து நடந்தால் அப்பகுதியே புல் பூண்டற்று போய்விடும் என்கிறார்கள்.  யாரில்லை என்பது? ஆனால் இன்றைக்கு எங்கே ஆபத்தில்லை வாகனவிபத்தென்று பயணம் செய்யாமல் விடுகிறோமா? அல்லது விமான விபத்தென்று பறக்காமல் தவிர்ப்போமா? பத்திரமாக போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் காரில் ஏறுகிறோம். பாதுகாப்பான பயணமென்கிற உத்தரவாதத்தை நம்பியே விமானத்தில் பறக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விமான விபத்துகள் நடவாமலில்லை. பயணிக்காமல் இருக்கிறோமாவென்ன? அதுபோலத்தான் அணு உலை மின் தாயாரிப்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் அணுமின்சாரம் வேண்டாம் என்கிறவர்கள் அதன் பயபாட்டை முற்றாக நிராகரிக்க வேண்டும். பிறவகை (அனல், புனல், காற்று…) மின்சாரங்களை மட்டுமே உபயோகிப்போமென அவர்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். சாத்தியமில்லையா காவிளக்கு உபயோகத்திற்கு மீண்டும் திரும்புகிறோம் எனச்சொல்லி வாழ்ந்து காட்டவேண்டும். நாமும் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.

ஆனால் இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தந்திரமாக நடந்துகொண்டன. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டின் அண்டைமாநிலங்களும் சரி இந்திய மத்திய அரசும் தமிழர் விரோத போக்கைக் தங்கள் நெறியாக கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கூடங்குளத்தை அணுமின்னுலையை மூடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. போராட்டக்குழு கூடங்குளம் மின்சார உற்பத்திமுழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்கச் சொல்லவேண்டும், அப்படிக்கூறினால் இந்திய அரசு  நாளைக்கே கூடங்குளத்தை மூடிவிடுவார்கள்.

————————–