பிப்ரவரி 12
பன்னிரண்டாம் தேதி காலை விடுதிபொறுப்பிலிருந்தவர் கணக்கு தீர்க்கும்போது ஒரு நாள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கிறதென்றார். ஆக வைப்புதொகைபோக அவரிடம் ஒரு நாள்கட்டணத்துக்குண்டான தொகை செலுத்தப்பட்டது. இதற்கு ரசீதெல்லாம் இல்லை. பொதுவாக இந்தியாவில் அநேக கொடுக்கல்வாங்கல்களுக்கு ஆதாரங்களில்லை. நூற்றுக்கு 90 சதவீதம் இப்படித்தான். இதுவே குற்றத்தை நினைக்காதவர்களுக்குகூட குற்றமிழைக்க தூண்டுதலாக இருக்கிறது. கிராம மணியக்காரராக எனது தகப்பனார் அரசாங்க சிட்டா அடங்கல் தாள்களை கையேடுகளாக தைத்துக்கொள்ள உதவியதும், அவர் வாங்கிய ஐந்தும் பத்தும் அப்போது எனக்கு இலஞ்சமாகவே தெரியவில்லை. இந்திய உத்தியோக பர்வதத்தில் இவைகளெல்லாம் அறங்கள் என நினைத்திருந்தேன். தூரத்தில் நின்று பார்க்கிறபொழுதுதான் அதனுடைய கொடூரம் விளங்குகிறது.
காலை சென்னையை நோக்கி புறப்பட்டோம். திண்டிவனம் தாண்டியதும் வண்டியை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். எங்கள் வாகன டிரைவர் வழக்கமான வாகன ஓட்டிகளைபோலவே ஒரு விண்ணப்பத்தை வைத்தார். அவர் கண்டாக்டரிடம் காட்டியதாகவும் கண்ணாடி மாற்றுவதற்காக ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறதெனவும் கூறினார். இது பரவாயில்லை. ஒரு வாகனஓட்டி தாம் அநாதையெனவும் தம்மை தத்து எடுத்துக்கொள்ள முடியுமா எனவும் கேட்டு ஒரு கட்டத்தில் பிரெஞ்சு நண்பர் ஒருவரை மிரட்டும் அளவுக்குப்போயிருக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் தலையிட பாதுகாப்புடன் விமானம் ஏறியதாகக்கூறினார். இந்தியப்பயணத்தை கொண்டாடும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் அனுபவம் அப்படி.
காலை பத்துமணி அளவில் பறங்கிமலையை அடைந்தோம். புனிததோமையார் கொல்லப்பட்டதாக நம்பப்படுமிடத்தில் போர்ச்சுகீசியர்கள் அவரது ஞாபகார்த்தமாக நினைவு சின்னம் ஏற்படுத்தியிருந்தார்கள் எனது இளங்கலை பட்டப்படிப்பை சென்னையில் முடித்திருந்தேன். அப்போதெல்லாம் காலையும் மாலையும் மின்சார ரயிலில் தாம்பரத்திலிருந்து கல்லூரிக்குப் பறங்கிமலையை கடந்துதான் செல்லவேண்டும். அதன் பிறகும் பலமுறை சென்னைக்கு சென்றிருக்கிறேன், தங்கியிருக்கிறேன். ஆனால் பறங்கிமலையில் ஏறியதில்லை. முதன் முறையாக ஏறினேன். மேலே மலையினினுன்று பார்க்கும் மீனம்பாக்கமும் சென்னையின் பிறபகுதிகளும் வேறுவகையான சென்னையை கண்முன்னே நிறுத்தியதை மறக்கமுடியாது. பெரு நகரத்தின் ஆரவாரங்களிலிலிருந்து விலகிக்கொண்ட நகரத்தின் ஒரு துண்டு அது. உயர்ந்தவைகள் எப்போது ஆராவராமின்றியே செயல்படுகின்றன. சாந்த்தோம் போவதற்கு முன்பாக நண்பர் சந்தியா நடராஜனையும், சூளைமேட்டில் சுதாராமலிங்கம் குடும்பத்தினரையும் சந்தித்து விடைபெற்றோம். பிரெஞ்சு நண்பர்களிடம் வள்ளுவர் கோட்டம் பற்றி பேசினேன். ஆனால் அங்கே இறங்கிபார்க்க ஆர்வம் இல்லாததும் சாந்த்தோம் செல்வதில் மட்டுமே குறியாக இருந்ததும் எனக்கு அவர்களுடைய மதம்பிக்கைமேல் வெறுப்புகொள்ள செய்தது. சாந்தோம் ஆலயத்தில் எப்போதும்போல வெளிநாட்டவரை நிறைய பார்க்க முடிந்தது. உள்நாட்டவர்களில் குறிப்பாக வெளிநாட்டவர் அதிகம். மதிய உணவை ஸ்பென்ஸர் பிளாஸாவிலிருந்த சரவண பவனில் எளிமையாக முடித்துக்கொண்டோம். அங்கேயே வியாசர்பாடியிலிருந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கவேண்டியதொகைக்கு உரிய இந்தியரூபாயை யூரோ கொடுத்து மாற்றிக்கொண்டோம். அவருக்கு திண்டுக்கல் செலவும், ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வாகனச்செலவும் கொடுக்க வேண்டியிருந்தது. பிறகு வியாசர்பாடியில் தொண்டு நிறுவன நண்பர் இருந்தார். வரவேற்று பரிசுகள் தந்தார், உணவளித்தார் கடைசியாக பில்லை கொண்டுவந்தார். நியாயயமான அணுகு முறைதான்.
மாலை நானும் நண்பர் சவியெ தெபெல்லும் தில்லி செல்வதாக இருந்தோம். எங்களுக்கு 8.40க்கு விமானம். மனே தம்பதியினர் நள்ளிரவில் லூப்தான்ஸா விமானம்பிடித்து பிராங்பர்ட்வழியாக பிரான்சு திரும்புவதாக இருந்தார்கள். எனவே நாங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு கிளம்பினோம். எங்களுடன் தில்லி வரவிருந்த நண்பர் நாயகர் விமான நிலையத்தில் இணைந்துகொண்டார். புதுச்சேரி விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். எனினும் முன்னேற்பாடாக அங்கே ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் ஆர்.கே புரத்தில் நண்பர்களுடன் தங்கிக்கொள்கிறேன், நீங்கள் இருவர் மட்டும் கிடைக்கும் ஒரு அறையில் புதுச்சேரி விருந்தினர் மாளிகையிலேயே தங்கிக்கொள்ளலாமென அறிவித்தார். ஏதேனும் செய்தாகவேண்டுமேயென நினைத்து எழுத்தாளர் சின்னப்ப பாரதி கூறியிருந்த தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ பேராசிரியர் கிடைப்பாரா என முயற்சித்தேன். பேராசிரிய பாலசுப்பிரமணியனை சென்னையில் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நான் சென்னையில் சந்திக்க வேண்டியது. என்னகாரணத்தாலோ அது நடைபெறவில்லை. எழுத்தாளர் சின்னப்பபாரதியிடம் பிரச்சினையைக்கூறினேன். என்ன சார் கொஞ்சம் முன்னாடிச்சொல்லக் கூடாதா என வருத்தப்பட்டார். பின்னர் நண்பர் காலச்சுவடு கண்ணனுக்கு எஸெம்ஸ் அனுப்பினேன். அவர் பிரச்சினையில்லையென உடனடியாக நண்பர் பி.எ.கிருஷ்ணன் பெயரையும் வேறு இரண்டு நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பு எண்களையும் கொடுத்தார். கவலைப்படாமல் போய் இறங்குங்களென நம்பிக்கையும் கிடைத்தது.
ஏர் இந்தியாவுகென்றே எழுதிய விதியின்படி ஒரு மணிநேரம் தாமதமாக டில்லி தலை நகரை அடைந்தோம். தில்லி விமான நிலையத்தில் பிரம்மாண்டம் தலையைச் சுற்றியது. உண்மையில் அசந்துபோனேன். இரவு ஒருமணிக்கு தில்லி இந்திராகாந்தி விமானதளத்தில் இறங்கி பெட்டிகளை ட்ராலிகளில் தள்ளிக்கொண்டு மூவருமாக வெளியேற நாகரத்தினம் கிருஷ்ணாவென அட்டையில் எழுதி காத்திருந்த இளைஞர்கள் கண்ணிற்பட்டனர். எழுத்தாளர் கு.சின்னப்பாரதியின் தயவினால் பேராசிரியர் பாலசுப்பிரணியன் அனுப்பிவைத்த ஜவஹர்லால் நேர் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்யும் மாணவர்களென அறிமுகத்திற்குப்பின்னர் தெரியவந்தது. ஜெகதீசன் என்ற மாணவர் குறிப்பாக பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம் செய்யப்படுபவைகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்பது தில்லி பயனத்தில் மூன்றாம் நாள் எனக்கு தெரியவந்த செய்தி.
தில்லி பன்னாட்டு விமான தளத்திலுள்ள ஒரு வசதி, போகும் முவரியைக்கொடுத்து கட்டணத்தைச் செலுத்தி ரசீதுபெற்றுக்கொண்டவுடன் காத்திருக்கும் டாக்ஸிகள் வரிசையில் வந்து நம்மை ஏற்றிக்கொள்கின்றன. இந்த நற்காரியத்திற்கு தில்லி காவல் துறைக்கு நன்றி கூறவேண்டும். இரண்டு டாக்ஸிகளில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கு முன்பாக இறங்கியவுடன் நடுத்தரவயது டாக்ஸி டிரைவர் பெட்டிகளுக்கு கூடுதலாகக் கட்டணம் கேட்டார். எல்லாவற்றையும் அங்கே செலுத்திவிட்டதாகத் தெரிவித்தேன். இளைஞரான டாக்ஸிடிரைவரிடம் நடுத்தரவயதுகாரர் சணடைபிடித்தார். அங்கேயே நீ தெளிவய் அவர்களிடம் கூறியிருக்கவேண்டுமென்றார். இளைஞர் அமைதியாக ஏதோ பதில் சொன்னார். பின்னர் டாக்ஸியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். நடுதரவயதுகாரரும் புறப்பட உள்ளே விடுதியில் எங்களுக்கு வேறு பிரச்சினைகள் காத்திருந்தன.
நாயக்கர் பயந்ததுபோலவே புதுச்சேரி விருந்தினர் மாளிகை இரவு பொறுப்பாளர் ஒரு அறைதான் உங்களுக்குப் பதிவு செய்திருக்கிறதென்று குண்டைத் தூக்கிப்போட்டார். நண்பர் நாயக்கரும் நான் வேண்டுமானால் புதுச்சேரி நண்பர்கள் இருவர் வெளியில் தங்கியிருக்கிறார்கள் அவர்களுடன் இருந்துகொள்கிறேன், நீங்கள் இங்கே தங்குங்கள் என்றார். வேறொரு ஓட்டலில் அன்றிரவு அறைகளெடுத்து தங்கியிருக்க முடியுமென்றாலும், வெள்ளைக்கார நண்பர் முன்னால் எனக்கு அது கௌரவ பிரச்சினையாகபட்டது. புதுச்சேரி அரசாங்கம் நாயக்கரிடம் கொடுத்திருந்த அத்தாட்சியில் இருவர் பெயரில் அறை பதிவுசெய்திருப்பது தெளிவாக இருந்தது. அதை தில்லியிலுள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கும் மின் நகலில் அனுப்பி இருக்கிறார்கள். ஆக எங்கள் தரப்பில் வாதாட ஆதாரங்களிருந்தன. விடுதி பொறுப்பாளராக வட இந்தியரிடம் தெளிவாகக் கூறினேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ! நாங்கள் இங்கிருந்து போகும் உத்தேசமில்லை. இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களை இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லையென உடனடியாக அழையுங்கள் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன், என்றேன். அவர் என்னென்னவோ கூறினார். நானும் எனது முடிவை மாற்றிக்கொள்ளபோவதில்லை என்றேன். எனது குரல் பொறுப்பாளர் குரலைக்காட்டிலும் ஓங்கியே ஒலித்தது. ‘சாப், நான் என்ன செய்யட்டும் என்மீது தப்பில்லை. இங்கிருந்த ஊழியர்கள் செய்த தப்பு’ என்று கூற அது எனக்கு வசதியாய் போயிற்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரேட்டில் எங்கள் பெயர்கள் பதிசெய்யப்பட சாவியை வாங்கிக்கொண்டு கொடுத்த இரண்டு அறைகளில் ஒன்றில் நானும் நாயக்கரும் மற்றதில் தெபெல்லும் தங்கிக்கொண்டோம். மறுநாள் வந்து சந்திப்பதாகக்கூறி மாணவர்கள் விடைபெற்றார்கள்.
————————–







