Category Archives: Uncategorized

மொழிவது சுகம்-ஜூலை 29

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.

மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)

1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

3. அண்மையில் வாசித்த பதிவுகள்

அ. மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது.  இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.

பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.

இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.

http://malaigal.wordpress.com/

ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது.  இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.

நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்

இறைவா!
இருட்டும்  வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!

அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!

வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!

வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்

“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!

ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?

***
http://abedheen.wordpress.com

—————————————————–

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கிய வேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

(மல்லியும் மழையும்)

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைகள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப் பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

– வேஸ்ட் ஓ·ப் டைம்

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441

e.mail: umapublications@gmail.com

———————————-

 

 

பூசாரிகளுக்கு அல்ல மார்க்ஸிய அபிமானிகளுக்காக மொழிபெயர்க்கப்பட்டது.

அண்மையில் எதிர்பாராதவிதமாக மார்க்ஸின் கொடுங்கனவு என்ற நூலைப்பற்றிய விமர்சனமென்ற பெயரில் வசைதொகையறாவொன்றை வாசிக்க நேர்ந்தது. அதற்கு எனது எதிர்வினை.

நண்பர்களுக்காக:

http://74.208.102.131/index.php?option=com_content&view=article&id=19836:2012-05-22-11-28-07&catid=1475:2012&Itemid=718

தமிழில் நூல் விமரிசகர்கள் என்ற பிரிவினர் இல்லை. விமரிசனம் எழுதுபவர்களில் நடுநிலையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அ. ராமசாமி, தமிழவன், பாவண்ணன், ந. முருகேசபாண்டியன், போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் விமரிசனம் எத்தகையதென்றாலும் நான் ஏற்பேன். அவர்கள் எழுத்தூடாக தெரியவந்த உண்மை அது. மிச்சமுள்ள 99 விழுக்காட்டினர் கலவையை பிரித்தெடுப்பது சுலபம்: அவர்கள் இரண்டே இரண்டு பிரிவினர்: துதிபாடிகள், வசைபாடிகள். முன்னவர்கள் ஒருபிரிவினர் விமர்சனமென்ற பெயரில் நூலையும், நூல் சம்பந்தப்பட்டவர்களையும் இனியில்லையென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். பின்னவர்கள் சம்பந்தப்பட்ட நூலை இழிவுபடுத்துவதற்கு முகாந்திரங்களென்ன என யோசித்தே எழுதத் தொடங்குவார்கள். இரண்டிற்கும் பின்னே ‘அரசியல்’ இருக்கிறது, இது ஊரறிந்த இரகசியம்.

இரண்டாவது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் கிடைத்த நூல் ‘மார்க்ஸின் கொடுங்கனவுகள்’. நியாயமான விமரிசினமென்றால் ஏற்கத்தான் வேண்டும், ஆனால் இதொரு வசைபாடியின் விமரிசனமென்பதால் எனது தரப்பை முன்வைக்க வேண்டியிருக்கிறது.  ரிக்கார்டு டான்ஸைக் கலையென நம்பி தமிழககிராமங்களில் இப்போதெல்லாம் ‘எழவு விழுந்தால்கூட’ ஏற்பாடு செய்கிறார்கள்.  அந்நிலை நாம் பெரிதாய் நம்பிக்கொண்டிருக்கும் படைப்புலகத்திற்கும் நேர்ந்துவிடக்கூடதென்பதால் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

‘மார்க்ஸின் கொடுங்கனவுகளை’ எழுதிய டெனிஸ் கொலன் அவர்களின் அபிமானிகளை குறிவைத்தே எழுதியவர் இதில் எந்தக்குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மார்க்ஸின் கொடுங்கனவு பிரெஞ்சு மூலத்திற்கு ஊடகங்கள், சஞ்சிகைகளில் (இடது சாரி பத்திரிகைகளும் அடக்கம்) வெளிவந்த விமர்சனங்கள் இருக்கின்றன. இப்பிரெஞ்சு விமர்சனங்கள் மார்க்ஸ் தாசர்களால் எழுதப்பட்டதல்ல துறைசார்ந்த வல்லுனர்களால் எழுதப்பட்டது. ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ விமர்சனம் செய்ய தமக்குகுள்ள தகுதிகள் என்பதைச் சொல்லாமல் சொல்ல,  தமிழில்  எட்டாம் வகுப்பு வாசகர்களை மிரட்டவென்று பலரும் எடுக்கும் ஆயுதத்தை நண்பரும் எடுத்திருக்கிறார். அவர்கள் வேறுயாருமல்ல தெரிதா, ரொலான் பாத், போன்றவர்கள்  அவர்களைப் பற்றி ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ மொழிபெயர்த்த எனக்கும், என்னைக்காட்டிலும் கூடுதலாக டெனிஸ் கொலனும் அறிவார். டெனிஸ் கொலன் நூலை பிரெஞ்சில் விமரிசனம் செய்தவர்களும் நன்கறிவார்கள்.

மார்க்ஸின் கொடுங்கனவை யார்வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அதன்மீது பாரபட்சமற்ற ஒரு விமரிசனத்தை வைக்க வறட்டு உணச்சிக்கொப்பளிப்பு போதாது, பொருளியல் அறிவும், மூலதனத்தின் முக்கியமான பகுதிகளையாவது விளங்கிக்கொண்டும் இறங்கவேண்டும். அப்படி தமிழ்நாட்டில் இல்லாமலில்லை. ஆனால்  தற்போது அவர்கள் இங்கே அதனைச்செய்வதில்லை என்பதுதான் படைப்புலகிற்கு நேர்ந்துள்ள சோகம்.

1. இந்த விமரிசினத்தின் திசை:

“தன்னுடைய காலத்திலேயே இந்த நாட்டில் ஒரு சோசலிச சமுதாயம் மலர்வதைக் கண்ணால் கண்டுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் போராடிய ஆர். நல்லகண்ணு, பாலன், என். சங்கரைய்யா, டி.ஆர்.எஸ். போன்ற அன்றைய இளைய தலைமுறையினர் முதல் அவ்வாறில்லாத இன்றைய இளைய தலைமுறை வரை விடை தேடும் சிக்கல் ஒன்றிற்கு விடை சொல்ல முன்வரும் எந்தப் பிரதியும் உற்சாகமூட்டக்கூடியதுதானே!

முதலாளித்துவக் கொடுமைக்கும், இன்னும் தொடரும் நிலவுடைமை, சாதிய, பெண்ணடிமை மனோபாவங்களும் மடிந்து, என்று விடியும் எமது வாழ்வு?’ என்று ஏங்கும் நிலையில் கோடிக்கணக் கான ஜீவன்கள் இந்த மண்ணில் உள்ளன.

மனிதர்கள் மனிதர்களாக வாழும் ஒரு சமூகமாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கையுடன் அதற்கான மார்க்கத்தையும் முன் வைக்கும் தத்துவமாக மார்க்ஸியம் அல்லாது வேறொரு தத்துவம் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை. இந்த அமைப்பிலேயே ஏதாவது சிறிது மேம்படுத்திக்கொள்ள சில நலத்திட்டங்களை மட்டும் சொல்லும் தத்துவங்கள் வேண்டுமானால் ஏராளம் உள்ளன. ‘வள்ளுவனும் கம்பனும் கனவாக முன்வைத்த பொதுவுடைமையை நனவாக்கவும் முடியும்’ என்று தெளிந்த பாரதியின் நம்பிக்கையைத் தொடர மனித குலத்திற்கு மார்க்ஸியத்தைத் தவிர வேறொரு தத்துவம் இதுவரை கிடைக்கவில்லை.”

கட்டுரையாளர் இத்தனை பில்டப்  எதற்காகக் கொடுக்கிறாரென்று கேட்கறீர்களா?

“ஒரு மார்க்ஸியவாதியின் நிலையிலிருந்து முன் வைக்கப்படும் விமரிசனம் அல்ல. அதாவது, நூலாசிரியர் டெனிஸ்கொலன் முன்வைக்கும் கருத்துக்கள் மீதான ஒரு மார்க்ஸிய வாதியின் எதிர்வினையாக இது அமைக்கப்படவில்லை” என்று அவர் சத்தியம் செய்வதற்காக.

இதைத்தான் தமிழில்
“கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.” என்பார்கள்.

2. முதல் நெருடல்:

மார்க்ஸின் கொடுங்கனவு புத்தகத்தின் பின் அட்டையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென சொல்லப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த அரிய உண்மையை நண்பர் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென புத்தகத்தின் பின் அட்டையில் உண்மையில் போடவேண்டுமென நோக்கமிருப்பின், புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதென்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. காலச் சுவடு எதனையும் கவனத்துடன் செய்பவர்கள், ஆனைக்கும் அடிச்சறுக்குமென்பதுபோல அத்ததவறு நிகழ்ந்துவிட்டது. புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பிரதிகள் கைக்குக் கிடைத்ததும் அதனைச் சுட்டிக்காட்டினேன். காலம் கடந்துவிட்டது, அதை பெரிதுபடுத்தவில்லை. அவ்வளவுதான்.  இதில் எந்த வியாபார தந்திரமுமில்லை.

கட்டுரையாளர் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்ததென்று சொல்லப்படுவதை “மூல பாஷையான எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதுபோல” என நக்கலடிக்கிறார். இதில் கொஞ்சநஞ்சமெல்ல எனக்கு நிறைய பெருமை இருக்கிறது. கட்டுரையாளருக்கு எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கலாம், கிரேக்கம், இலத்தீன் மொழிகூட அறிந்திருக்கலாம். எனக்குத்தெரிந்தது தமிழும், ஆங்கிலமும், பிரெஞ்சும் மட்டுமே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மாறாக நிரம்ப மகிழ்ச்சி. காரணம்  பிரெஞ்சு நூல்களுக்கு மொழிபெயர்ப்புரிமையை அதிகார பூர்வமாக பெறவேண்டுமானால், மூல நூலான பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கவேண்டுமென்பது பிரெஞ்சு அரசாங்கம் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை முன் வைக்கும் நிபந்தனை. அந்நிபந்தனையை  படைப்புதுறையில் அரிதாக நிறைவேற்றுகிற ஒரு சிலரில் இந்திய அளவில் நானுமொருவன். எனது இடத்தில் எவரிருந்தாலும் சொல்லத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளையும் விஞ்சி விளம்பரம் தேடும் படைப்புலககில், எனக்கிருக்கும் உண்மையான தகுதியை பெருமையாகச்சொல்லிக்கொல்வதில் தவறேதுமில்லை

தமிழில் என்ன நடக்கிறதென தெரியாது. மேற்கத்தியர்கள் மொழிபெயர்ப்புக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். மிகவும் அரிதான சூழல்களைத் தவிர்த்து அவற்றில் கறாராக இருக்கவும் செய்கிறார்கள்.

1. உதாரணமாக பிரான்சு நாட்டில் பிற மொழிகளிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டும்.

2. நூலின் மூலமொழியிலிருந்து நேரடியாக அவை மொழிபெயர்க்கப்படவேண்டும்.

அவ்வாறே தங்கள் மொழியிலிருந்து வேற்று மொழிக்குப்போகும்போதும் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இந்த அடிப்படை விதிமுறைகளோடு சில உட்பிரிவுகளையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புலகில் திருப்திசெய்யவேண்டும்.

உதாரணமாக பிரெஞ்சில் அமெரிக்கன் இங்கிலிஷ், பிரிட்டிஷ் இங்கிலிஷ், இந்தியன் இங்கிலிஷ் என்றெல்லாம் வகைப்படுத்தபடுத்தப்பட்ட பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்பைமட்டுமே கையிலெடுக்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால் பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்பாளர் பெயரை பார்த்தவுடனே மூல நூலசிரியர் யாரென்று சொல்லிவிடலாம். காரணம் அவர் மொழிபெயர்ப்பது அனைத்துமே அந்த மூல ஆசிரியரின் படப்புகளாக இருக்கக்கூடும்.  இம்மொழிபெயர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கியிருப்பார்கள்.  படைப்பாளியை மட்டுமல்ல படைப்பாளியின் மக்களையும் படைப்பாளியின் உலகையும் நன்கு உள்வாங்கிக்கொண்டே மொழிபெயர்க்க உட்காருவார்கள். தமிழ் படைப்புலகில் அத்தகைய வாய்ப்புகள் குறைவு. அதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காலச்சுவடின் மொழிபெயர்பாளர்களுக்கு பதிப்பாளர் அத்தகைய வாய்ப்புகளை வழங்கிவருகிறார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழ் படுத்துவதைக்கூட அமெரிக்காவிலிருக்கும் தமிழரோ இங்கிலாந்திலிருக்கும் தமிழரோ அந்தந்தநாடுகளின் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தினால் தமிழுக்குக் கூடுதலாக நன்மைகள் பிறக்குமென்பது எனதுக் கருத்து. மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, பண்பாட்டை பெயர்ப்பது, முதல்நூலின் படைப்பாளியை புலம்பெயரவைப்பது. இதிலுள்ள உண்மையை சார்பற்று கண்டறியவேண்டும். ஆக பிரான்சிலிருந்துகொண்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் எனக்கு நியாயமான கர்வங்கள் இருக்கின்றன.

மார்க்ஸின் கொடுங்கனவு’

” சிந்தனைக்கு நாங்கள் ஏகபோக உரிமையாளர்களெனச் சொல்லிக்கொள்கிறவர்கள் கார்ல் மார்க்ஸ் சவப்பெட்டியின் என்ச்ஜிய ஆணிகளை இறுக அடித்துக்கொண்டிருக்கிற காலமிது. புதைத்த ஆண்டைக் கணக்கிற்கொண்டால் அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டவொன்று. ஆனாலும் சிற்சில சமயங்களில் அசைந்துகொடுக்கிறது. நான் இறக்கவில்லை என்கிறது. இன்றளவும் அவரைத் துரத்துகிற ஏச்சும் பேச்சும் அல்லது  இனி அவரை நினைத்து என்ன ஆகப்போகிறதென்கிற பாசாங்குகளும் மார்க்ஸ் இறப்பை நம்ப மறுப்பதற்கான சான்றுகள்.

” இச்சூழல் மிக மோசமான முரண்களைக் கொண்டுள்ளது. உண்மையில் காலாவதியான  மார்க்ஸியத்தின் தந்தையாக மார்க்ஸ் இருப்பாரெனில்  சமூக அறிவியல் மற்றும் வரலாற்று புலத்தின் எதிர்காலத்தை அதாவது இன்றைய உலகைக்குறித்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் சரியாகத் தெரிவித்த சிந்தனையாளராக அவர் இருந்திருப்பாரா என்பதை யோசிக்கவேண்டும்.”

டெனிஸ்கொலனை அறிந்தவர்களுக்கு, (பரமார்த்த குருவின் சீடர்களுக்கல்ல) அல்லது இந்நூலை முற்றுமுதலாக ஆழ வாசித்தவர்களுக்கு என்ன சொல்லவருகிறார் என்று புரிந்திருக்கும். மார்க்ஸியம் பற்றிய டெனிஸ்கொலன் விமரிசன  நூலை தமிழ் படைப்புலக பெரும்பாலோரின் விமரிசனப் சூத்திரத்துடன்அணுகக்கூடாது. நம்மில் பலருக்குப் பூச்சொரியவும், புழுதிவாரி தூற்றவும் மட்டுமே தெரியும். மார்க்ஸின் கொடுங்கனவு நூலை விமரிசனம் செய்தவர் தாம் மார்க்சியவாதி அல்லவென அழுகுணி ஆட்டம் ஆடுவதைத் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். மார்க்ஸியம் பற்றிய விமரிசின நூலில் மொத்தப்பக்கங்கள் 270லும் மார்க்ஸ்பற்றிய துதிகளாக இருக்கவேண்டுமென அவர் நினைக்கிறார். மன்னிக்கவும் அதற்கு சாத்தியமில்லை.    விமரிசனமென்பது  நிறை குறைகளை பேசுவது. கொலன் அதனைச் சரியாகவே செய்திருக்கிறார். புத்தகத்தில் முழுக்க முழுக்க மார்க்ஸியத்தில் தெளிந்தவராக, இறுதிவரை மார்ஸ்சியத்தின் ஆதரவாளராக செயல்படும் டெனிஸ் கொலன் வேண்டிய இடத்தில் அவரை கண்டிக்கவும் தவறவில்லை. ஏனெனில் அவர் மார்க்ஸின் பக்தன், கட்டுரையாளரைபோல மார்க்ஸை வைத்து பிழைப்பு நடத்தும் பூசாரிகள் கூட்டமல்ல. கீதையையும் காண்டீபனையும் வலிய மார்க்ஸ¤டம் ஒப்பிட்டுப்பேசிய அவலத்தால் இப்படி எழுதவேண்டியதாயிற்று- நவீன மார்க்ஸியவாதிகள் மார்க்ஸைக் காப்பாற்ற கண்ணனை அழைப்பார்கள் போலிருக்கிறது.

நான் உண்மையில் எதிர்பார்த்தது முதலாளிய வர்க்கத்தினரின் கண்டனக்குரலை. பல இடங்களில் முதாளியத்தைக்குறித்த எள்ளல்களும் மார்க்ஸியம் குறித்த துதிபாடல்களும் இந்நூலில் நிறைய இடம்பெறுவதும் இறுதியில் மார்க்ஸியத்தின் சார்பாக தர்க்கத்தை முடிப்பதும் காரணங்கள். இந்நூலில் அடிநாதமாக மூன்று விஷயங்கள் இருக்கின்றன. மார்க்ஸியம் எங்கே பொய்த்தது, எங்கே வெற்றிபெற்றது என்பதொன்று, மார்க்ஸியவாதிகளென்கிற பூசாரிகள் இழைத்த தவறுகளென்ன, எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? என்பது இரண்டாவது. பிறப்பு முதற்கொண்டு முதலாளியியம் எப்படி சாதுர்யத்துடன செயல்பட்டுவருகிறது என்பது மூன்றாவது. இறுதியில் தம் பங்கிற்கு சில மாற்று யோசனைகளை வைக்கிறார். இங்கே அவற்றை பட்டியலிட்டால், தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் காட்சிகளை பிய்த்து போடுவதுபோல ஆகிவிடும்.  விருப்பமுள்ளவர்கள் படியுங்கள். கேள்விகளிருப்பின் எழுதுங்கள். கேள்விகள் நூலில் பேசப்படும் விஷயங்கள் பற்றியதாக இருக்கவேண்டும்.

டெனிஸ் கொலன் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையே நூல் சொல்ல வருவதென்ன என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறது. மார்க்ஸியம்பற்றிய பகுப்பாய்வு என்ற வகையில் மார்க்ஸ் தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்படிச்சொல்லபடவில்லையெனில் அதுபகுப்பாய்வு நூல் அல்ல. இன்றைய உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இதற்கெல்லாம் டெனிஸ்கொலனை குறைசொல்ல ஒன்றுமில்லை. இல்லையில்லையென்றால் யார் தடுத்தது. உங்கள் கனவு காணும் உரிமையை யார் பறித்தது. மார்க்ஸியத்தின் மீது உண்மையில் நம்பிக்கைவைத்து ஆக்கபூர்வமாக முதலாளியியத்தை எதிர்கொள்ளும் வழியை சிந்திப்ப்பவர்க்கு டெனிஸ்கொலன் எழுதியிருக்கிறார். சோஷலிஸத்திற்கேற்பட்ட சரிவினை மிகத் துல்லியமாக முன் வைக்கிற டெனிஸ் கொலன், அதில் முதலாளியியத்தின் பங்கினையும் சுட்டத் தவறுவதில்லை. மார்க்ஸின் முக்கிய கருத்தியங்களெல்லாம் விசாரணைக்கு உட்படுத்துகிறார். கொஞ்சம் சகிப்புத் தன்மையோடு,  அவற்றை வாசித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறவர்கள் எழுந்திருக்க முயற்சிக்கவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முதலாளியாகவே இருக்க நினைக்கிறான். இந்த அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அடம் பிடிப்பது அடாவடித்தனம். முதலாளியியத்தின் தந்திரங்களையும், உபாயங்களையும்; மூலதன இயங்கியல், நுகர்வோர் சமுதாயமும் சுரண்டலும், உழைப்பின் மீதான சுரண்டல் அதிகரிப்பு என முதலாளித்துவ உற்பத்தி கூறுகளின் நிரந்தரமாக்கப்பட்ட விதிகள் பலவும் நம் எல்லோரிடமும் இருக்கிறது. என்ன செய்வது ஸ்டாலின் தொடங்கி கேரள காம்ரேட்டுகள் வரை மார்க்ஸை புரிந்துகொண்டிருக்கும் விதத்தை பார்க்கிறபோது, கொலன் சொல்வதுபோல மார்க்ஸின் சவப்பெட்டியின் எஞ்சிய  ஆணிகளை முதலாளியியத்தோடு சேர்ந்து இறுக அடித்துவிட்டுத்தான் கட்டுரையாளர் கூட்டம் ஓயும் போலும். இத்தனை களேபரத்திற்குமிடையில் மார்க்ஸியத்தை மீட்கவேண்டுமென நினைப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும் நீங்கள் சொல்லுகிற தோழர் நல்லகண்ணுவும் அதிலொருவர். இது தவிர தமிழ்நாட்டில் மார்க்ஸியத்தில் தேர்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள், நிச்சயமாக வாசிப்பார்கள்.   பொத்தாம் பொதுவாக முன் முடிவுகளின் அடிப்படையில் புழுதிவாரி இறைக்கமாட்டார்களென்பது நம்பிக்கை.

மொழி பெயர்ப்பு குறித்து.

எல்லா மொழிபெயர்ப்புகளுமே நூறு விழுக்காடுகள் சரியென்று எந்த கொம்பனும் சொல்லமாட்டான்.

மார்க்ஸ் ஒரு சொல் ஒருமொழியில் கறாராக இருந்தார் என்கிறார். அப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் என் அனுபவம். எனக்கு யோசனை கூறும் முன்பு தோழர் முனுசாமி தோழர் கந்தசாமியென விளிப்பதை அல்லது எழுதுவதைத் தவிர்த்து காம்ரேட் கந்தசாமியென்றோ காம்ரேட் முனுசாமியென்றோ அழைத்துக்கொள்வதுதான் மார்க்ஸ்சின் ஒரு சொல் ஒரு மொழிக்குப்பொருந்தும்மென மார்க்சியவாதிகளுக்கு முடிந்தால் அறிவுரைகூறுங்கள்.

சோஷலிசத்தையும் பொதுவுடமையையும் பிரித்துணர்வதில் எந்தக்குழப்பமுமில்லை. பிரெஞ்சு தெரிந்த தமிழும் அறிந்த நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொஞ்சம் ஒப்பிட்டுப்பார்க்கச்சொல்லவும். Dialectical Materialism – பொருள் முதல்வாத உரையாடல் என்மொழிபெயர்க்கப்பட்டதில் எவ்வித தவறுமில்லை. சொல்லப்போனால் அதுதான் சரியான அதற்குகந்த மொழிபெயர்ப்பு, அவ்வாறே பூக்கோவின்
Order of things என்பதையும் தேவையில்லாமல் போகிறபோக்கில் தட்டடையாக பொருள்கொள்வது சரியாகாது.

இந்த எதிர்வினையின் ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்:

மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, குயிலாபாளையத்தில் குதிரையை குர்ரமென்று எழுதுவோம் நீயும் அப்படி எழுதென்றுசொல்ல நண்பர் எந்த அதிகாரத்தின்கீழ் இதுபோன்ற  எதிர்பார்ப்பினை வைக்கிறாரென்று புரியவில்லை. பூக்கோவை உங்களைவிட கூடுதலாக அறிவேன். மொழிசார்ந்து அல்ல பண்பாடு சார்ந்து. எனவே அதனடிப்படையில் மிகச்சரியாகவே ஒவ்வொரு சொல்லையும் பலமுறை யோசித்து விவாதித்தே மொழிபெயர்க்கிறேன்,எழுதுகிறேன். தமிழில் கலைசொற்களுக்கென்று முறையான அகராதிகளில்லை. மேற்கத்திய உலகில் வருடத்திற்கொருமுறை மொழியின் வளர்ச்சிக்கேற்ப சொற்களின் வருகைக்கேற்ப அகராதிகளும் தம்மை புதுப்பித்துக்கொண்டுவருகின்றன. இங்கே நாட்டாமையாக இரண்டுபேர் எழுதிவிட்டால் அதுசரியோ தப்போ மற்றவர்களும் அதையே கடைபிடிக்கவேண்டுமென்பதுதான் அபத்தம்.

தமிழில் எனக்குக்கிடைத்த மூலதன நூலைவாசித்தேன். அதிலுள்ள குறைகளை இங்கே சொல்வது நியாயமாகாது. மொழிபெயர்ப்பென்றால் ஒன்றிரண்டு தவறுகள் நேரலாம். ஆனால் சரியான மொழிபெயர்ப்பையே தவறென்று வாதிடும் நண்பர்கள் பொருள் மயக்கம்தரும் குறைகளைத் தவிர்க்க கொஞ்சம் அக்கறை எடுக்கவேண்டும். அவற்றைத் திருத்தி நல்லபதிப்பாக கொண்டுவருவது மார்க்ஸியவாதிகளுக்கு அவசியம். நண்பர் தியாகுவின் உழைப்பை பார்க்கிறபோது அது கடினமான காரியமல்ல. தோழர்கள் சீரியஸாக கவனிக்கவேண்டிய பிரச்சினை இது.

நூலை விமர்சிப்பதற்கு முன்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல மார்க்ஸியத்தின் மீதுள்ள தீவிர அபிமானத்தைத் தெரிவித்துவிட்டு நூலைத் தவிர நூலாசிரியன் வரலாற்றையே அறிந்ததுபோல டெனிஸ் கொலன் மீதான விமர்சனம் கட்டுரையாளர் மொழியில் சொல்வதெனில் மன்னிக்க முடியாதக்குற்றம்.

1. டெனிஸ்கொலன் மார்க்ஸியவாதியென்று இங்கே யார்சொன்னார்கள். அவர் மார்க்ஸியவாதியே அல்ல. காலச்சுவடு பதிப்பகமோ மொழிபெயர்ப்பாளனாகிய நானோ எந்த இடத்திலும் அவரை மார்க்ஸியவாதியாக சித்தரிக்கவில்லை. அவரை மார்க்ஸிய சிந்தனாவாதியென்றே பிரெஞ்சு படைப்புலகம் அறியும், அதைத்தான் நாங்களும் பதிவுசெய்தோம். ‘மார்க்ஸியவாதிக்கும்’ ‘மார்க்ஸிய சிந்தனாவாதிக்குமுள்ள’ பேதத்தைக்கூட அறியாமல் இந்த நூலைப்பற்றிய விமர்சனம்செய்யும் துணிச்சல் எதனால் வந்தது. அநேகமாக உங்கள் பார்வையில் புரிதல் தரும் குழப்பம் காரணமாக இருக்குமா அல்லது தமிழ் வாசகர்கள் பொருளற்ற வம்புகளை விரும்பிபடிப்பவர்கள் நம்பிக்கை காரணமா? இதே அணுகுமுறைதான் மொழிபெயர்ப்பிலும் வந்திருக்குமோ?

2. விமர்சிக்க வந்த நூலைக்காட்டிலும் கட்டுரையாளர் காலச்சுவடிடம் காட்டும் அக்கறையும் யோசனைகளும், மொழிபெயர்ப்பாளர் வணிகர் என்ற கண்டுபிடிப்பும், என்ன பெரிதாக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துவிட்டாய் என்கிறதொனியும் கட்டுரையாளருக்கு வலி வேறெங்கோவென்று விளங்கிகொள்கிறோம்.
வணிகன் என்கிற தகுதி கார்ல் மார்க்ஸை பற்றிய நூலை மொழிபெயர்க்க தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா? நான் அம்பானியோ, டாட்டாவோ அல்ல ஒரு மளிகைகடை நடத்தி வருகிறேன் அவ்வளவுதான். எங்கேயேனும் மளிகைகடைக்காரன் கார்ல்மார்க்ஸை தொடக்கூடாது கூலித்தொழிலாளிதான் செய்யவேண்டுமென்று விதியிருக்கிறதா. புரட்சியை பாட்டாளிவர்க்கம் நடத்தியதாக சரித்திரமில்லை.  புரட்சிக்கு பூர்ஷ்வாக்களைத்தான் நம்பவேண்டியிருந்தது. பிரான்சிலும், ரஷ்யாவிலும் நடந்தது அதுதான். பூர்ஷ்வாக்களை வழி நடத்த அனுமதித்த பாட்டாளிவர்க்கம் மளிகைகடைகாரனுக்குக் கதவைச் சாத்திவிடுமா என்ன?

இதுபோன்ற காரணங்களை முன்வைத்து விமர்சிப்பதைப்பதைத் தவிர்த்து, பதிப்பகத்தின் பெயரையோ எழுத்தாளன் மொழிபெயர்ப்பாளன் பெயர்களையோ நினைவு கூராமல் நேரமிருந்தால் ஒருமுறை முழுவதும் பொறுமையோடு படித்துப்பாருங்கள்.

நன்றி.

அன்புடையீர்

கீழ்க்கண்ட இரு அமைப்புகளும் எங்களுடன் பிரெஞ்சில் நடத்திய செவ்வி ஒன்றை தங்கள்
இதழிலும் வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்,
அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெவித்துக்கொள்வதோடு, பிரெஞ்சு தெரிந்த
நண்பர்களின் பார்வைக்காகவும் அவர்களின் வலைத்தல இணைப்பைக்
கொடுத்துள்ளோம்.

http://www.larevuedelinde.com/itwNKrishna.htm

மொழிவது சுகம்- ஜூலை 5

பயணமும் படைப்பும்

படைப்பாளிகள் எஸ். ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் எழுத்தில் விஞ்சி நிற்பதற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், என்னைக்கேட்டால் அதற்கான சூட்சமம் அவர்கள் ஓயாமல் சுற்றிய ஊர்களிளும், சந்தித்த உயிர்களிலும்; கால் நனைத்த புழுதியிலுமிருக்கிறது.

நண்பர் V.S. நாயகர் எங்கள் பிரெஞ்சு வலைத்தளத்திற்காக ஜாம்பவான் ஜெயகாந்தனுடைய பாரீசுக்குப்போ நாவலைக் குறித்து கட்டுரையொன்று எழுதியிருந்தார். அக்கட்டுரையில் வெகு நாட்களுக்குப்பிறகு ‘Imagologie’ என்ற சொல்லை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலத்தில் Imagology. அந்நிய தேசத்துடன் எழுத்தாளனுக்குள்ள உறவை அவனைப்போன்ற உணர்வுகொண்ட வேறொருவனுடன் ஒப்பிட்டு பேசுவது. இக்கட்டுரையை வாசித்தபோது அண்மையில் நோபெல் பரிசுபெற்ற கிளேஸியோவை நினைவு கூர்ந்தேன். இவர் தமது ஒவ்வொரு நாவலிலும் இந்தியாவை அல்ல
து அதன் பண்பாட்டை ஒன்றிரண்டுபக்கங்களிலேனும் தொடாது போனால் தமது படைப்பு முழுமைபெறாதென நினைப்பவர். இந்தியா இல்லாமல் தமது எழுத்தில்லையென நினைக்கிற மேற்கத்தியர்களில் ஒரு பத்துபேரை சிறுபிள்ளைபோல விரல்விட்டுச் சொல்லமுடியும். இந்தியாவும் மேற்குலக படைப்பாளிகளுமென்றே தனிக்கட்டுரையொன்று எழுதலாம். சிந்தனையை அதன் போக்கில் செல்லவிட்டு மூக்கனாங்கயிறை கையில் பிடித்தபோதுதான் இவர்கள் அனைவருமே தேசாந்திரிகள் என்கிற உண்மை பிடறியில் விழுந்தது.விலங்குகளில் மீன் போன்ற இவர்கள் அகத்திலும், புறத்திலும் ஓயாமல் அலைபவர்கள்.

புராணங்களை நம்புபவர்களுக்கு நாரதர் முதல் தேச சஞ்சாரி. அவர் சஞ்சாரம் நன்மையில் முடிகிற கலகத்திற்கு உதவியதாம். பாதிக்கப்பட்ட  அசுரர்தரப்பு பதிவுகள் ஏதுமில்லாததால் ஒருதலைபட்சமாக இக்கருத்தை ஆதரிக்கவேண்டியிருக்கிறது.எங்கள் கிராமத்தில் திடீரென்று குஞ்சு குளுவான்களுடன், தங்கள் உடமைகளை முதுகில் சுமந்துகொண்டு நரிகுறவர்கள் வந்து கூடாரம் அடித்துக்கொண்டு பத்து நாட்களோ பதினைந்து நாட்களோ தங்கியிருப்பார்கள். கிராமத்தில் தங்கியிருக்கிற அவ்வளவு நாட்களும் அவர்கள் மீது பிரம்மிப்பை வரித்துக்கொண்டு சுற்றிவருவோம். வாஸ்கோடாகாமையும், கொலம்பஸையும் பள்ளி பாடத்தில் நிழற்படமாகப் பார்த்திருந்த எங்களுக்கு, இவர்கள் நிஜவாழ்க்கையின் ஆச்சர்யம். உலகத்தையே முதுகில் சுமந்து வந்து ஊர் புளியமரத்தடிகளில் இறக்கியதாக நினைத்து கொசுக்கள் போல அவர்கள் விரட்ட விரட்ட இருட்டும்வரை கண்கள் விரிய அவ்விடத்தை விட்டு அகலாமல் மொய்த்துக்கொண்டிருப்போம். கிராமத்தில் சிலர்  அவர்களனுபவங்களை விசாரிப்பதும்,  அவ்வனுபவங்கள் அவர்கள் மொழி, அவர்கள் உடையை அணிந்து எங்கள் முன்னே உயிர்ப்பிப்பதும் அழகு.

ஒரு கலைஞன் அவன் புகைப்படக்காரனோ, ஓவியனோ கவிஞனோ கதாசரியனோ பயணத்தின் முடிவில் பகிர்ந்துகொள்வது வேறு; அது நீங்களும் நானும்பார்த்த உலகமோ விளங்கிக்கொண்ட பேச்சோ அல்ல, வேறு உலகம், வேறு மொழி, அவர்கள் மற்றவர்களாகவும் இருக்கலாம் அந்நியர்களெனவும் கருதலாம். .ஹாரி மிஷோ என்ற பிரெஞ்சுபடைப்பாளியும் ஒரு நாடோடி, ‘உத்தமமான மனிதனை நான் சந்தித்ததில்லை’ என்பவரின் கூற்றைவத்து அவர் உலகம் சுற்றியதற்கு என்ன காரணமென்று புரிந்துகொள்கிறோம்.

நானோ எனது வாழ்க்கையோ துணை எதற்கு
நீ புறப்படு
காற்றாய் நீ பறக்கிறாய்
எடுத்துவைக்கவேண்டிய
ஓரடிக்குக்கூட -இன்னமும்
யோசித்துக்கொண்டிருக்கிறேன்

தமது வாழ்க்கையிடம் கவிஞர் நடத்திய உரையாடல். பதில் கிடைத்திருக்கவேண்டும். பின்தொடர்ந்து ஓடிய  சொந்த வாழ்க்கை கை விரித்துவிட வெற்றிடத்தை நிரப்ப புதியபூமி, புதியகாற்று, புதிய மனிதர்கள் உன்மத்தம் பிடித்து அலைகிறார், தேடலுக்கு முடிவில்லை.

நிக்கோலா பூவியே என்ற மற்றொரு எழுத்தாளருக்கு  அண்டைமனிதர்களை அதிகம் நேசித்ததாலேயே பயணம் கட்டாயமாகிறது. பயணமே ஒரு கலை, அக்கலைக்கு பாம்பு சட்டையைக் கழற்றுவதுபோல அத்தனையையும் உதிர்த்துவிட்டு அருவமாக நிற்கிறார். நிக்கோலா பூவியேயின் கால்கள் இந்தியாவில் கால்பதிக்காத இடமில்லை.

காதலையும், சாகஸத்தையும் மையமாக்கொண்டு படைப்புகள் உருவான காலத்தில்  ஜார்ஜ் சாண் என்கிற பிரெஞ்சு பெண்மணி முன்னணி எழுத்தாளர். இவருமொரு ஒர் தேசாந்திரி.  பார்த்த தேசங்களையும், கிடைத்த அனுபங்களையும் தமது நாவல்களிலும், சுயசரிதையிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்கெரித் துராஸ் நாவல்களும்  வியட்நாம் இந்தியாவென பயணம் செய்வன. பத்ரிக் டெவில் என்ற மற்றொருஎழுத்தாளரும் இதே இனம்.
———————————————————————————

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள்  அவை வரலாற்றின் குறியீடுகள்.

ஐரோப்பிய நாடுகளில் எங்கு சென்றாலும் பழமையானக் கட்டடங்களை பராமரிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நகரத்தின் அழகு வானளாவ எனப்புகழப்படும் மீட்டர் அளவுகளிலில்லை, அந்நகரத்தில் பழைய நகரம் எங்கே இருக்கிறதென விசாரித்து சென்று பாருங்கள். ஒரு தேசத்தின் பெருமையும் கம்பீரமும் அங்கேதான் ஒளிந்திருக்கும். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளை கடந்த இல்லங்களும், மண்டபங்களும், தேவாலயங்களும், தேசிய சொத்துகள். துருக்கி நாட்டின் அண்ட்டல்யாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைபோலவே பழைய அண்ட்டல்யாவை கம்பீரத்துடன் நெஞ்சில் சுமந்திருந்தது.

எங்கள் பேருந்து துருக்கி விடுதலைப்படையினர் சிலைக்கருகே (சென்னை உழைப்பாளர் சிலையை நினைவூட்டும்) மத்திய தரைக்கடலையொட்டி இறக்கிவிட்டது. வழிகாட்டி அங்கு சற்று தூரத்தில் தெரிந்த  மினாரைக் காட்டி நான்கு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றார். பழைய அண்ட்டல்யா என்பது கோட்டைச்சுவர்போன்ற மதிற்சுவர் ஒருபுறம் புதிய நகரின் இரண்டு நீண்டவீதிகள் மற்றொரு புறமென்று  இரண்டிற்குமிடையில் தொட்டிற்குழந்தைபோல கிடந்தது. குறுகலான நீண்ட வீதிகள், அவற்றை வீதிகள் என்பதைக்காட்டிலும் சற்று அகலமான நடைபாதைகஎன கூற வேண்டும். ஒட்டோமான் காலத்து வீடுகள் வரிசைகட்டி நின்றன. பெரும்பாலும் மரத்தாலானவை. வெள்ளை அடித்த முகப்புகளும் போர்டிகோவில் படர்ந்த்திருக்கும் மல்லிகையும்  காலனியத்துவ கால இல்லங்களை நினைவூட்டுபவை. ஒட்டோமான் காலத்தில் இதொரு மிகப்பெரிய கிராமமென்று வழிகாட்டி கூறினார். கண்முன்னே விரிந்த திரையில் கிராமம் அசைந்து கொடுத்தது. பெரும்பாலான இல்லங்கள் இன்றைக்கு உணவு விடுதிகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ இருக்கின்றன. மேசைகள் நாற்காலிகளும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து மேற்கத்திய மொழிகளில் கிடைக்கும் உணவையும் ஒயினையும் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. ஆர்வக்கோளாறினால் எங்கள் குழுவைச்சேர்ந்த ஒருவர் இல்லத்தின் கதவைத் திறக்க நாங்கள் அவரைத் தொடர்ந்தோம், இல்லத்துக்குச் சொந்தக்காரர்கள் பொதுவாக அனுமதிக்கிறார்கள். அநேகமாக சற்று முந்தைய வரியில் குறிப்பிட்டிருந்ததுபோன்று உணவு விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஏராளமான செடிகொடிகள், பாக்கு மரங்கள், விசிறிவாழை கூண்டில் அடைத்த பஞ்சவர்ணக் கிளிகள், சிறியதொரு நீச்சல் குளம்த்துடன் கூடிய விசாலமான முற்றம். புதுச்சேரியிலும் நீச்சல் குளம் தவிர்த்து இதுபோன்ற வீடுகள் வெள்ளையர் பகுதியில் இருக்கின்றன. பழைய அண்டல்யாவில் தீக்கிரையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதிலமடைந்த பள்ளிவாசலொன்றையும் காணமுடிந்தது.

வழிகாட்டி கூறியபடி நான்கு மணிக்கு அவர் கைகாட்டிய மினார் திசைக்கு வந்து சேர்ந்தோம். பதினெட்டாம் நூற்றாண்டைசேர்ந்த பள்ளிவாசல் அதன் மினார் எங்கிருந்து பார்த்தாலும் கலங்கரை விளக்கம் போல தெரிகிறது. நல்ல உயரமாக இருக்கவேண்டும். பிறகு அங்கிருந்து அத்ரியன் துறமுகம். நகரின் சுவரைகுடைந்து உருவாக்கியதுபோலவிருந்த இத்துறைமுகம் ரோமாபுரிமன்னன் அத்ரியன் என்பவனால் கி.பி 130 ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த அத்ரியனை மையமாக வைத்து மார்கரித் யூர்சினார் என்பர் பிரெஞ்சில்  எழுதிய அத்ரியன் நினைவுகள் ( Memoires d’Hadrien) உலக இலக்கியங்களில் மிக முக்கியமானது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20பக்கம் மொழிபெயர்த்து பிறகு தொடரவில்லை. சென்னைக்கு வருகிறபோதெல்லாம் கடந்த நான்கு வருடங்களாக கி.அ. சச்சிதானந்தம் முடிக்கவேண்டுமென வற்புறுத்துவார். அவருக்கும் அலுத்திருக்கவேண்டும் தற்போது சொல்வதில்லை. அத்ரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைகடல் வளைகுடாபகுதியை பார்த்தீர்ளெனில் பிரிந்துவரமாட்டீர்கள்.

இரவு வேறொரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டோம். பிரெஞ்சு நண்பர்களில் பலர் ஓட்டலில் இருந்த  ஹமாம் குளியலுக்குச்சென்றார்கள், கட்டணம் 50யூரோ. நாங்கள் எங்கள் அறைகளிலேயே குளியலை முடித்துவிட்டு நிம்மதியாக டின்னரை முடித்துக்கொண்டு படுத்தோம்.

ஏப்ரல் 2 ந்தேதி

காலை ஓட்டலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பேருந்து. காலை ஒன்பது மணிக்கு ஒரு தோலாடை நிறுவனத்தை பார்வையிடல். ஏற்கனவே சுற்றுலாவில் இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்புகுறித்து சற்று அலுப்போடு எழுதியிருக்கிறேன். இங்கே கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களை தோலாடை அணிவித்து பூனை நடை போடவைத்தார்கள். பிறகு வழக்கம்போல ஏமாந்த சுற்றுலா பயணிகளின் தலையில் அவற்றை கட்டுவதற்கான முயற்சிகள். பன்னிரண்டு மணிக்கு வெளியில் வந்திருப்போம். அங்கிருந்து நேராக செலால் என்ற வனப்பகுதியிலிருந்த நீர்வீழ்ச்சி. பிற்பகல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்கு துருக்கியில் புகழ் பெற்ற உணவு விடுதியென்று ஒன்றிர்க்குக் கூட்டிசென்றார்கள். அங்கே கெபாப் புகழ் பெற்றதாம். அக்கட்டணம் இங்கள் சுற்றுலாக் கட்டணத்தில் அடங்காது. நான் இருக்கிற Strasbourg நகரில் துருக்கியர் அல்லது கிரேக்கர்கள் நடத்தும் உணவு விடுதியில் 8 யூரோவுக்கு நல்ல கெபாப்புடன் கூடிய டின்னர் கிடைக்கும். அங்கே அதற்கு எங்களிடம் 20 யூரோவை வாங்கிக்கொண்டார்கள். வந்திருந்த அத்தனைபேரும் புலம்பினாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் புறப்பட்டு விமான நிலையம் வந்தோம். விமான நிலையமே சுற்றுலா பயணிகளுக்காக இயங்கிறதோ என்பதுபோல வேறு பயணிகளில்லை. முதல் நாள் எங்கள் விமானத்தில் வந்த பலரும் வரிசையில் நிற்பதைப்பார்த்தேன். நாங்கள் வரிசையில் நிற்கிறபொழுது தட்டச்சு செய்யப்பட பெயர்களை வைத்துக்கொண்டு வரிசையில் நின்ற பயணிகளை விமான ஊழியர்கள் தேடினார்கள். எங்களைக்கூப்பிடவில்லை. முதலில் புரியவில்லை. எதற்காக கூப்பிட்டிருப்பார்கள் என்று மண்டையைகுடைந்துகொண்டிருந்தேன். நானும் எனது மனைவியும் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டோம். எங்களுடனிருந்த டாக்டரின் தம்பதி புலம்பிகொண்டு வந்து சேர்ந்தார். என்ன நடந்ததென விசாரித்தேன். தரைவிரிப்பு, நகை தொழிற்சாலை, தோலாடை என்றெல்லாம் பார்வையிட்டோமில்லையா, அங்கே பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியல் துருக்கி சுங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட அவர்கள் கணிசமானதொரு தொகையை சுங்கவரியாக இவர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். பலர் முகத்தைத் தொங்கப்போட்டபடி விமானத்தில் பயணிப்பதை காணமுடிந்தது.

முடிக்கு முன்பாக ஒரு கொசுறுச் செய்தி: ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்காக துருக்கியில் கடனட்டையை விரும்புவதில்லை. துருக்கி நாட்டில் ரஷ்யாவைப்போலவே சுற்றுலாவும் பெரும் வணிகமும் மபியாக்கள் வசம் இருக்கவேண்டுமென்பதென் யூகம், யூகம் மட்டுமே.  இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பாரீஸ் திரும்பிவிட்டோம்.

தொடரை வாசித்த அனைவருக்கும் நன்றி

-நிறைவுபெறுகிறது-

 

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

துப்பறியும் புனைவுகள்: Whodunit

மேற்கத்திய நாடுகளில் குற்ற புனைவுகள் என வகைபடுத்தியபோதிலும், தமிழில் அவற்றை துப்பறியும் புனைவுகளென்றே அறிவோம். தவிர நம்முடைய துப்பறியும் புனைவுகளுக்கு நெடிய வரலாறு கிடையாது, அண்மைகாலத்தியவை. இருபதாம் நூற்றாண்டிலிருந்தே குற்றபுனைவுகளை தமிழ் எழுத்துலகம் சந்திக்க நேர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்காரும் வை.மூ கோதைநாயகி அம்மாளும் முன்னோடிகள். குற்றப்புனைவுகள் அனைத்திலுமே பொலீஸார் வரவேண்டுமென்கிற அவசியமில்லை. அண்மையில் குற்ற நூல்களின் வரலாறு என்றதொரு நூலை வாங்கினேன். நூலாசிரியர்கள் இருவரும் குற்ற நூல்களின் வரலாற்றை அகழ்ந்து ஆய்ந்து அட்டவணை படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் நூலைப்பற்றியும் நூலாசிரியர்கள் பற்றியும், நூல் உருவான விதம் பற்றியும் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். துப்பறியும் கதைகள் வாசகர்களிடம் ஏற்படுத்துகிற தூண்டலை இலக்கிய விமர்சகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் தொனிக்கிறது.

முதல் குற்ற புனைவு எந்த நூற்றாண்டில், எங்கே எழுதப்பட்டதென நினைக்கிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஊர்பேர்தெரியாத சீனர் ஒருவரால் எழுதப்பட்ட அந்நூலின் பெயர் Trois affaires criminelles résolues par le juge Ti (Celebrated Cases of Judge Deei). இதொரு வரலாற்று குற்றப்புனைவு. குற்ற புனைவிற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்கள். வரலாறு என்பதற்கு என்ன பொருளென்றும் அறிந்திருப்பீர்கள். இரண்டையும் சேர்த்து பொருள்கொண்டால் வரலாற்று குற்றபுனைவு. சற்று எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், படைப்பாளியின் உயிர் வாழ்க்கைக்கு முந்தைய காலத்தில் நடந்ததென்று ஒரு புனைவை கட்டமைப்பது வரலாற்று குற்றவியல். பாத்திரங்களின் மொழி, சமூக அமைப்பு, காட்சிகள் விவரணை அனைத்திலும் கடந்த காலத்தைத் தெளிவாய்க் கொண்டுவரவேண்டும். இவ்வரலாற்று புதினங்களில் ‘யார் செய்திருப்பர்’ அல்லது எதனால் நிகழ்ந்தது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் இதனை’ Whodunit (Who done it) என்கிறார்கள். Celebrated Cases of Judge Dee. என்ற சீன நூலை ரோபர்ட் வான் குலிக்(Robert Hans van Gulik ) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை வாசிக்கசந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக France-Culture என்கிற பிரெஞ்சு வானொலியில் பத்து பகுதிகளாக கேட்க வாய்ப்புக்கிடைத்தது. பிரெஞ்சில் தொடரைக்கேட்க விருப்பம் உள்ளவர்களுக்காக: http://www.franceculture.fr/oeuvre-trois-affaires-criminelles-resolues-par-le-juge-ti-roman-anonyme-chinois-du-xviiie-siecle-de-

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ‘பல்ஸாக்’ 1841ம் ஆண்டு எழுதிய Une ténébreuse affaire , என்ற நூலும் வரலாற்று குற்ற புனைவிற்கு நல்ல உதாரணம்.  பிறகு அகதா கிறிஸ்டி எழுதிய புனைவுகளில் சிலவும், கோனன் டாயில் புதினங்களும் அவ்வகைப்பட்டவை என்று கருதலாம். ஆனால் குற்றப்புனைவுகளை முழுக்க முழுக்க துப்பறியும் புதினங்களாக மாற்றிய புண்ணியவான்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும்.

இன்றைக்கு குற்ற வரலாற்று புதினங்கள் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இன்றைக்கு அவை இலக்கியம்: உம்பர்ட்டோ எக்கோ, குந்த்தர் கிராஸ், ட்ரூமன் கப்போட், ஓரான் பாமுக் போன்ற படைபாளிகள் குற்றப்புனைவுகளை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்தியவர்கள்.

தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்து அல்லது அதையே காரணமாக முன்வைத்து காழ்ப்பில் விமர்சனம் செய்பவர்கள்கூட கதைசொல்லலில் கல்கியின் இடத்தை என்றைக்கும்  எட்டப்போவதில்லை. எனக்கு அவருடைய பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் வரலாறு குற்றப்புனைவு வகைமை சார்ந்ததே. எனது பங்கிற்கு நீலக்கடல், மாத்தாஹரி என்ற இரண்டு நூல்களை எழுதினேன். ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துள்ளது அதில் செய்திருக்கு பல முயற்சிகளை பாராட்டுகிறவர்கள் ஒருபக்கமெனில், உள்ளார்ந்த எரிச்சலில் உதாசீனப்படுத்தும் மனிதர்களுமுண்டு. நீலக்கடலுக்கும் மாத்தாஹரிக்கும் ஏன் எனது எந்தப்படைப்பிற்கு விமார்சனங்களை லாபி செய்து பெற்றவனல்ல. எழுதியவர்களை அவர்களின் விமர்சனத்திற்குப்பிறகே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கத்திய படைப்பாளிகளின் பெயர்களை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் சற்று உரத்து பேசத் தொடங்கியிருக்கிறோம்.  இன்றைய மேற்குலகைப்பற்றியும் அதன் படைப்புகளையும் கொண்டாட வழக்கம்போல இவர்களுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படலாம்.

——————————–

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-1

எனக்குப்பிடித்த எனது சிறுகைதைகளில் முக்கியமானவற்றை மீண்டும் நண்பர்களுக்காக அவ்வப்போது மீள் பிரசுரம்செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

நாளைபோவேன்

கதை எழுந்த கதை:

காரணம் எதுவாயினும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஏக்கம் பின்னிரவு கனாக்களாக மட்டுமின்றி பகற்பொழுது உரையாடல்களில் கூட வந்துபோகும். ஒவ்வொரு நாளும்,  வந்ததற்கு ஏதோ கொஞ்சம் பணம் திரட்டிக்கொண்டு  ஊர் திரும்பிவிடமாட்டேனா? என அவர்கள் ஓயாமல் கூறியதை நீங்களும் காதுகொடுத்துக் கேட்டிருப்பீர்கள். தோட்டமென்ன, காணி என்ன? ஆற்றின் சலசலப்பு என்ன, ஆத்தா வைக்கும் குழம்பு ருசியென்ன என்கின்ற இவர்கள்தான் வந்த ஊரின் வசதிகள், தரும் சௌகரியங்கள், கூரையைப்பிரித்துக்கொட்டிய தளுக்கான வாழ்க்கை, பதியமிட்ட புதுநிலத்தில் தளிர்விடும் சந்ததிகள் இவற்றை பிரிய மனமின்றி சொந்த மண்ணுக்குத் திரும்புவதை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டு பின்னர் தம் மனதை சமாதானப்படுத்த புதுப்புதுக்காரணத்தை தேடிக்கொண்டிருப்பார்கள்.  இந்தியாவில் குக்கிராமமொன்றில் பிறந்து பொருளாதாரக் காரணத்திற்காகவே புலம்பெயந்த எனது வாழ்க்கையும் கனவும் அதற்கு விதிவிலக்கல்ல.

17-6-2001ல் கல்கியில் வெளியான இச்சிறுகதையை ஆனந்தவிகடன், கல்கி இருவருமே தேர்வு செய்திருந்தார்கள். கல்கியிடமிருந்து முதலில் பிரசுரத்திற்குத் தேர்வுசெய்து கடிதம் வந்ததால் விகடன் திரு. வீயெஸ்விக்கு உரிய நேரத்தில் கடிதம் எழுதி தவிர்க்கவேண்டியதாயிற்று.

நாளைபோவேன்

வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது.

இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக இவனுக்குள் தீர்மானம். இயற்கைகூட தமது காரியங்களை அட்டவணைபடுத்திச் சாதிக்கிறதோ? முன்னதாக் கணிக்கப்பட்டு காரியங்கள் ஆற்றப்படுவதில், எதிர்பார்த்தபடி நடைபெறுவதில் சுவாரஸ்யமில்லையென்பது அவன் எண்ணம். வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அத்தியாயங்களால்  எழுதப்படவேண்டும். சந்தோஷமோ துக்கமோ சொல்லிக்கொண்டு வரக்கூடாது. பிறப்பைப்போல இறப்பைப்போல ‘இன்றோ நாளையோ’ எனும் நிகழ்வுகளால் அமையவேண்டும்.

திரைச்சீலையை விலக்கி, சன்னலின் இரட்டைக் கண்ணாடியினூடே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்ற நிகழ்ச்சி.  இந்நிகழ்வில் இவனுக்குள் முரண்பாடு. எந்தத் திட்டமிடலை எதிர்க்கின்றானோ, அதனிடமே சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போகிறான். புறவாழ்க்கையை உடைத்துக்கொள்ள சிந்தனை அவசரப்படுவதும், அந்நேரங்களில் அதனை அமைதிப்படுத்துகிறவகையில், போதும் இந்த வாழ்க்கைபோதும் என தீர்மானிப்பான். இந்த பொம்மலாட்ட வாழ்வு வேண்டாம் இக்கயிற்றிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

வானிலிருந்து இரைச்சலாக சப்தம். அவன் உள்ளத்தைபோல இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் விமானம். அதனுடைய காரியங்கள்கூடத் திட்டமிடப்பட்டவை. புறப்படும் இடம், சேர இருக்கிற இடம், எடுத்துக்கொள்ளும் நேரம், பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என எல்லாமே. இரைச்சலிடும் இவ்விமானம் போகும் ஊர் எந்த ஊராக இருக்குமென்பதனை அவனுடைய பூகோள அறிவு விடை தராமலேயே  தேடுதல் சுவாரஸ்யத்தைக் கலைக்காமல் ஒளிந்துக்கொண்டது.

காலை ஆறுமணி. அதிகாலை விழிப்பினை ஐரோப்பா அறியாதது. இவன் மட்டும் விழித்திருந்தான். காலை ஐந்துமணியிலிருந்து சன்னலை ஒட்டி நிற்கிறான். அதிகாலையில் எழுந்திருக்கிற பழக்கம் அவனுக்கு இந்தியாவில்தான் வந்தது. மார்கழித் திங்களில் சின்னவயதில், காலையில் எழும்பி, கிணற்று நீரை வாளி வாளியாக உடம்பில் கொட்டிக்கொண்டு, பஜனை பாட ஓடியதும், பஜனையின் முடிவில் சுண்டலைத் தின்று சட்டையில் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவில் வந்து போயின. அன்றைக்கு பஜனைக்குக்கூடும் பையன்களில் யார் முந்திக்கொள்வதென்பதை முன்னிட்டு பிறக்கும் உற்சாகம் இன்றைக்கில்லை. என்றாலும், ஐரோப்பிய மண்ணிலும் காலையில் விழிப்பு பிறக்கிறது. தனதில்லத்தில் பிறர் காலை பத்து மணிவரை உறக்கத்தை அனுபவிப்பதைக் கண்டு எரிச்சலும் கோபமும் வருகிறது.  இந்த எரிச்சலும் கோபமும் எதிர்தரப்பிலுள்ள அந்தப் பிறருக்கும் உண்டு.

பிரேமா- அவன் மனைவி எழுந்தவுடன் அவளிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தான்.

சன்னலில் பார்க்கிற காட்சிகள் மாறவேண்டும். காகம் கரைதலைக்கேட்கவேண்டும். கூரைவேய்ந்த வீடுகளைக் கடந்துசெல்லும் புகை மூட்டத்தைக் காணவேண்டும். காலைப்பேருந்துகளில் ‘மார்க்கெட்’டிற்கு கொண்டுபோவதற்காக இறக்கப்படும் காய்கறி மூட்டைகளில் ‘தொபீர்’களைக் கேட்கவேண்டும். போர்வையை விலக்காமல் கலைந்த தலையும் கண்களில் தூக்கமுமாக டீக்கடைக்குள் நுழையும் ‘என் முகங்களைக்’ காணவேண்டும். மழையில் நனைந்த சோர்வை வெளிக்காட்டாமல், சாராயத்திற்கு வழி பிறந்ததென்ற தெம்பில் ரிக்ஷாவின் பெடல்களை அழுந்த மிதிக்கும் ‘என் கால்களைக்’ காணவேண்டும். தண்ணீரில்  நனைத்த விரல்களைக் சொடுக்கிக் காம்புகள் வலிக்காமல் கால் இடுக்கில் குவளையைத் தொற்றவைத்துப் பால் கறக்கிற ‘என் கைகள்’ வேண்டுமென சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஊரில் நிறையபேர் இருந்தனர். ஆனால் அதுதான் எப்போது? என்றைக்கு? நாளையா? நாளை மறுதினமா? அடுத்த மாதமா? அடுத்த வருடமா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்து எல்லாவற்றிலும் பிரம்மித்தது நிஜம். அந்தப் பிரம்மிப்பு இப்படித் தன்னை இவ்வளவு சீக்கிரம் குறுக்கிக்கொள்ளும் என்று அவன் நினைத்ததில்லை. தீர்மானித்துவிட்டான். இன்றைக்கு இதற்கொரு முடிவு கட்டியாகவேண்டும். ஸ்டீரியோவைத் திருப்பினான். சி.டியி யில் நித்யஸ்ரீ யின் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்ற பாடல். சிரித்துக்கொண்டான். பிரேமா எழுந்துவிட்டாள். கட்டிலைச்சரி சரி செய்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் கேட்பாள் என்னங்க கப்பூசீனாவா? ஹார்லிக்ஸா? இக்கேள்வியைக்கூட அவள் மாற்றினால் தேவலாம்.

பூசனிப்பூவும் கோலமுமில்லாமல் இங்கே மார்கழி விழித்துக்கொள்வதில் அவனுக்குள் கசப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இவனது வாரிசுகள் அறைகளில் “குளோஸ் ஆல் மை ஐஸ்” ஸோ அல்லது விட்னி ஹ¥ஸ்டனின், “மை லவ் ஈஸ் யுவர் லவ்”வோ ஒலிக்கத் தொடங்கும். இவன் தேடுகிற தருமபுரம் சுவாமிநாதனுக்குகோ, சின்ன மௌலானாவுக்கோ இங்கே இடமில்லை என்கிற்போது மனதுக்குள் புழுக்கம் கூடிவிடும்.

முகத்தைத் திருத்திக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள் அவன் மனைவி.

“பிரேமா! கொஞ்சம் சாக்லேட் அதிகமாகவிட்டு கப்புச்சீனோதான் கொண்டுவா, உன்னோட பேசணும்”

” உங்களுக்கு ஞாயிற்றுகிழமையானா இந்தியா ஞாபகம் வந்திடுமே. இன்றைக்கே இந்தியாவுக்குக் கிள்ம்பவேண்டும்னு காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு குதிப்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டதே?”

“அப்படியில்லை பேரேமா! இன்றைக்குத் தீர்மானமா இருக்கேன். இப்படி உட்கார்.”

” எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” சென்றவள் வங்கியிலிருந்து கடந்த மாத இறுதியில் வந்திருந்த நிலவரத் தாள்களை மேசையிற் பரப்பினாள்.

அவசர அவசரமாக அவற்றைப் புரட்டினான். எத்தனை முறை புரட்டினாலும் அதில் இருப்பதுதான் இருக்குமென்ற அடிப்படை உண்மையில் நம்பிக்கையற்றுப் புரட்டினான். எண்களும் பூஜ்ஜியங்களும் கண்ணாமூச்சி ஆடின.

இங்கே வந்த ஆரம்பத்தில் இந்தியப் பெரியவர்களைப் பார்த்து அவன் கேட்கிற கேள்வி:

“ஏங்க..! எப்படி இந்த ஊர்ல இருக்கறீங்க? ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நம்ம ஊருபோல வருமா?”

“என்ன செய்வது தம்பி? நம்முடைய தலைவிதி அது. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கணும்னுதான் வரோம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளைகள் இச்சூழலில் வளரும்போது, அவர்களோட நாமும் இங்க வாழவேண்டிய நிர்ப்பந்தம்.”

“இல்லைங்க.. அப்படிச்சொல்லாதீங்க! எனக்கு மட்டும் தேவையான பணம் கெடைச்சுதுன்னா ஊருக்குத் திரும்பிவிடுவேன்.”

பெரியவர் சிரித்தார்.

அவனுக்கு அந்தத் ‘தேவையானப் பணத்தை’ நிர்ணயிப்பதில்தான் சிக்கலே. வந்த புதிதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வரித்துக்கொண்டு ‘தேடுதலைத்’ தொடங்கியவன் இன்றுவரை நிறுத்தியபாடில்லை. வருடங்கள் கூடக்கூட அவன் மனதில் வரித்தத் தொகை தனது நீள அகலத்தை, பரிமாணத்தைக் கூட்டிக்கொண்டு உச்சுகொட்டியது. கைக்கெட்டிய சுகங்கள் அவனுக்குத் திகட்டவில்லை. பதிலாக இன்னும் இன்னும்.. என்ற ஏக்கத்தை வளர்த்தன.

வங்கித்தாள்களில் விடுபடமுடியாமல் தலையைச் சொறிந்துகொண்டான்.

“பிரேமா?”

“கூப்பிட்டீங்களா?”

“ஆமாம். நம்ம வங்கிக்காரனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும். இந்தியாவிலேயே இன்னுமொரு வீடோ அல்லது இங்கேயே இன்னுமொரு அப்பார்ட்மெண்ட்டோ வாங்கணும்.”

“அப்போ.. இந்தியாவுக்கு எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“இப்போதைக்கு இல்லை” சலித்துக்கொண்டு பதில் வந்தது.

அடுத்த ஞாயிற்றுகிழமையும் சன்னல் திரையை விலக்கி வைத்துக்கொண்டு, ஐரோப்பிய வாழ்க்கையைச் சாபமிடுவான். இந்தியாவிற்குப்போக நாள் குறிப்பான்.

——————————

துருக்கி பயணம்-7

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

ஏப்ரல் – 1

 மீண்டும் அண்ட்டால்யா விலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன.

அண்டல்யாவில் எப்போதும்போல நல்ல சீதோஷ்ணநிலை. மாசுமருவின்றி வானம் வெளுர் நீலத்தில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தெரிந்தது. இதமான குளிர்ந்தகாற்று. நாளையும் இதுபோலவே இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ரோம் நகரில் மூன்று நாட்கள் மழையில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் எங்களை பெட்டிகளுடன் இறங்கும்படி வழிகாட்டிக் கேட்டுக்கொண்டார். இதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருக்கப்போவது இரண்டு நாட்கள், ஒரே ஓட்டலில் தங்க வைத்திருக்கலாம். அன்றிரவு நகரத்தை ஒட்டிய  மற்றொரு ஓட்டலில் தங்கவிருக்கிறோமென்றார்கள். உருப்படியான ஓட்டலாக இருந்தால் சௌகரியமென நினைத்துக்கொண்டேன்.

சென்ற வார கட்டுரையில் தெரிவித்த சுவட்டில் பண்பாட்டு சுற்றுலாவில் இன்றைய உபயம் நகை உற்பத்தித் தொழிற்சாலை. எங்கள் கிராமத்தில் ஒருகிராம் இரண்டுகிராம் தங்கத்தை குமிட்டி உமி உழக்கில் வைத்து உருக்கும் கோவிந்தசாமி பத்தரைத் தவிர்த்து வேறு தொழிற்சாலைகளைக் கண்டதில்லை.  நகைகள் மேற்கத்தியரின் ரசனைகேற்று தயாரித்திருந்ததால் என் மனைவி அக்கறைகொள்ளமாட்டாளெனத் தெரியும். எங்கள் குழுவினருடன் நுழைந்தபொழுதே, இங்கிருந்து தப்பிக்க வழியிருக்கிறதாவென அங்கிருந்த நபரிடம் கேட்க, அவர் முகம் சுருங்கிப்போனது. இங்கும் ஒருவர் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்த பெரியதொரு சொற்பொழுவு ஆற்றினார். அவர் ஓய்ந்ததும்   விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒரு விற்பனையாளர் நீங்கள் பாகிஸ்தானியரா என்றார், மறுத்தேன். எங்களைவிடாமல் பின்தொடர்ந்து வந்தவரிடம் எங்கள் பேருந்து நிற்கும் இடத்திற்குத் திரும்பவேண்டும் சாத்தியமா என்றேன். வழி சொன்னார். எங்களுக்குத் துணையாக மூன்று தம்பதிகள். வெளியில்வந்து பேருந்தைக் கண்டுபிடித்தோம். வரிசை வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் எங்கள் பேருந்து எண்ணைக் கண்டு பிடித்தோம். குழுவைச்சேர்ந்த மற்றவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது. நடுத்தரவயது மனிதரொருவர் ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துவிற்றார். துருக்கியில் போனவிடங்களிலெல்லாம் ஆரஞ்சு சாறு விற்பது ஒரு தேசியத் தொழிலாக இருந்தது. பொதுவாக ஒரு குவளைச்சாறு ஒரு டாலரெனில் நகை உற்பத்தி நிறுவனத்தில் 1.50 டாலர்.

அங்கிருந்து பத்துமணிஅளவில் நாங்கள் சென்று பார்த்தது பெர்க(Perge) என துருக்கி மொழியிலும் பெர்ஜ் என்று ஆங்கிலத்திலும்  சொல்லப்படும் வரலாற்று நகரம். அண்ட்டால்யாவிற்கு 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பலமுறை துருக்கிக்கும் கிரேக்கத்திற்குமுள்ள வரலாற்று தொடர்புகள் குறித்து எழுதி வந்துள்ளேன். 12ம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் கிரேக்க மக்கள் துருக்கிக்கு வடக்கிலிருந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நுழைந்தவர்கள் ஆரம்பகால புலம்பெயர்ந்தோர் விதிமுறைப்படி செழுமையாகவிருந்த மத்திய தரைகடலொட்டி குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய அப்பிரதேசம் ‘பாம்பிலி (Pamphylie) என அழைக்கப்பட்டது. இத்தொடரின் இரண்டாம் நாள் கட்டுரையில் அஸ்பெண்ட்டோஸ் திறந்த வெளி நாடக அரங்கத்தைபற்றி விளக்கமாக எழுதுயிருந்தேன். அந்நாடக அரங்கு பெர்ஜ் நகரத்தின் ஒரு பகுதிஅல்லது பெர்ஜ் நகர கிரேக்கமக்களின் கலை பண்பாட்டுக் குறியீடு. நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல பெரிய கோட்டை சுவரொன்று இருந்ததன் அடையாளமாக பத்துபன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள மதிற் சுவரின் எச்ச சொச்சங்கள் நுழைவாயிலில் காணக் கிடைக்கின்றன.  அடுத்த பெரிய அதிசயம் கவிழ்த்த ‘U’ போன்ற குதிரை இரத போட்டி மைதானம்,  ரதபோட்டிக்கென பாதைகளில் கற்களைபாவித்திருக்க அவற்றில் இன்றும்  ரதங்கள் தொடர்ந்து ஓடியதால் ஏற்பட்ட தடங்கள், அதிசயமாக சீர்குலையாமல் இருக்கின்றன. ஏறக்குறைய பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் உள்ளன. இது தவிர நகரில் கடைத்தெருக்களும், மக்களுக்கான நடைபாதைகளும், கடைச்சொந்தக்காரர்கள் பின்புறமாக கடைக்குள் வரவும், வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள மக்கள் நடைபாதையோடு கடைமுன்புறம் திறப்பும் உள்ளன. இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டியது பொது நீராடுமிடமும், வெந்நீர் போடுவதற்கென அவர்கள் கையாண்ட பொறி இயல் நுட்பமும் வியக்கவைப்பவை. திரும்பிய திசைகளிலெல்லாம் பல மொழிகளில் (சீன மொழி உட்பட) வழிகாட்டிகள் உரத்த குரலில்  அழைத்து வந்திருந்த சுற்றுலா பயணியருக்கு கிரேக்க பழைய நகரத்தின் பெருமையைக் கூறிக்கொண்டிருக்க,  நம் அண்மையில் வந்து மெல்லிய குரலில், கைப்பிடியைத் திறந்துக்காட்டி இவ்விடத்தைச்சேர்ந்த பொருள், ஐம்பது டாலருக்குக் கிடைக்கும், வேண்டுமா என்கிற துருக்கியர்களையும் காணமுடிந்தது பெரும் அதிர்ச்சி.

அங்கிருந்து மத்திய தரைக்கடலொட்டி மேற்கத்தியர்களாலும், கோடீஸ்வரர்களாலும் ஆக்ரமிக்கபட்டிருந்த நவீன அண்ட்டல்யாவைக் கண்டபிறகு தூங்கி வழிந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மதிய உணவிற்கு அழைத்துசென்றார்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகம். உப்பு சப்பில்லாமலிருந்தது. கடந்த ஏழு நாட்களில் வேறெங்கும் அத்தனைமோசமான உணவை எடுத்துக்கொண்டதில்லை.

பிற்பகல் அண்ட்டால்யாவின் இதயப்பகுதிக்குச் சென்று பார்த்தோம். அதை கொஞ்சம் விபரமாக எழுதவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

துருக்கி பயணம்-6

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-31

உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாட்களும் முக்கிய

மானதுதான். கப்ப டோஸை பிரிகிறபோது மனதைச் சமாதானப்படுத்த வேறு காரணங்கள் உடனடியாகத் தோன்றவில்லை. இனி திரும்பவும் கப்படோஸ் அனுபவம் வாய்க்குமா? இங்கு கழித்த இரண்டு நாட்கள் போல மறுபடியும் அமையுமாவென என்னை நானே கேட்டுக்கொண்டபோதுதான், நமது வாழ்க்கையில் எல்லா நாட்களும் முக்கியமானவையென நினைத்துக்கொண்டேன். இன்னொரு கப்படோஸ் எனக்கு அவசியமற்றதாகப் பட்டது. கப்படோஸ் கப்படோஸ் மட்டுமே அப்படி இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு பிரதேசம் அதன் சாயலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது, மனம் அலுப்பில் நுரைதள்ளக்கூடும். உலகத்தின் சுவாரஸ்யமே ‘அதைப்போல இது’, ‘மற்றவரைபோல நானென’ சொல்லிக்கொள்ளாத இருப்புகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தங்கிய விடுதி, ஊழியர்கள், மக்கள் இப்படி எல்லோரும் வேறாக இருந்ததாலேயே, நினைவில் இருக்கிறார்கள். குறிப்பாக அமீது என்ற இளைஞரை மறக்க முடியாது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பகலில் நாங்கள் வெளியிற் செல்கிறபோதும், தங்கிய ஓட்டலில் காலை சிற்றுண்டி, இரவு உணவு என சாப்பிட்டபோதும் கப்படோஸ் பிரதேச உணவை ( பயண ஏற்பாட்டாளர்க்கு அதில் இலாபமும் இருக்கக்கூடும்)  சிபாரிசு செய்தார்கள். வேண்டாமென்றால் வேறு உணவிற்கு வாய்ப்பிருந்தது. அந்த வேற்று உணவுகள் இரண்டொரு ஐரோப்பிய மற்று துருக்கிய உணவுகள். அண்ட்டல்யாவில் தங்கியிருந்தபோன்று அதிக பல்வகையான உணவுகளுக்கு வாய்ப்பில்லை.

உணவு பிரியர்களுக்காக:  காலை உணவுக்கு துருக்கியில் காவல்ட்டி ( kahvalti) என்று பெயர். ஏற்கனவே காலையில் என்ன உண்டோமென்பதை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் அங்கே எழுதாதவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். பிரத்தியேக உணவுகளின் பெயர்களை  (துருக்கி பெயர்கள்) சிலவற்றை கேட்டுக் குறித்துக்கொண்டாலும், பின்னர் எங்கள் வழிகாட்டியிடம் காட்டிய பொழுது, அவற்றை திருத்தினார்.  பலபெயர்களை தவறாக காதில் வாங்கிக்கொண்டு கையேட்டில் குறித்துவைத்திருந்தேன். Bazlama, lavash ரொட்டிகளில் குறிப்பிடப்படவேண்டியவை.  இறைச்சி தூவிய Lahmacun வாய்க்கு ருசியாக இருந்தது. இதை துருக்கியரின் பிஸ்ஸா எனவும் சொல்லக்கேட்டேன். ஹொமோஸ் (houmous) கப்படோஸில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது: கொத்துகடலையையும் எள்ளையும் சேர்த்து அரைத்த தொகையல் போன்ற ஒன்று, கொஞ்சம் புளிக்கவும் செய்கிறது, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பதப்படுத்தபட்ட மிளகாய், ஆலிவ் (ஊறுகாய்?) ஆகியவற்றையும் துருக்கியர்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். துருக்கி காபி: பால்கலவாத மிக ஸ்ட்ராங்கான கறுப்புகாபி. முயற்சி செய்தேன், தொடர விருப்பமில்லை.

கப்படோஸ் எனும்போது நினைவில் நிற்கக்கூடிய நபர் உணவு விடுதியிலில் பணியாற்றிய அமீது. இருபது வயதைத் தாண்டாத இளைஞர். பயிற்சி மாணவராக இருக்கவேண்டும்.  பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழியில் உரையாடுவது அவருக்கான குறியீடு. அவரவருக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளும்வகையில் மேசைகளில் உணவுவகைகள் காத்திருக்க, விருந்தினர் அம்மேசைகளை நெருங்கினால் போதும், அமீதுவின் கண்களோடு பற்களும் அகலத் திறக்கும், அதை நாங்கள் புன்னகையென எடுத்துக்கொண்டோம்.  பாலினத்திற்கேற்ப முஸே அல்லது மதாம் மூக்கடைப்புடன் ஒலிக்கும். தொடர்ந்து சூப் வேண்டுமா என்பது ஆங்கிலத்தில் கேட்பார். அவர் வாக்கியத்தை முடிக்குமுன்பே கோப்பையில் ஊற்றப்பட்ட சூப்பின் ஆவி உங்கள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டிருக்கலாம். முதல் முறையாக அவரது உபசரிப்பைக் கண்டு குதூகலித்து பதிலுக்கு புன்னகைத்தது உண்மை.  அதுவே இரண்டாவது மூன்றாவதெனத் தொடர்ந்தபோது, இளைஞரைகண்டு ஒளியவேண்டியிருந்தது. மூன்றாம்நாள் மாலை, மறுநாள் ஓட்டலை காலிசெய்யவிருந்ததால், இரவு உணவைமுடித்துக்கொண்டு அறைக்குத் திரும்புவதற்கு முன், வரிசையில் நின்று இளைஞரிடம் எங்கள் குழுவினர் விடைபெற்றுக்கொண்டது அற்புதமான காட்சி.

காலையில் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேற்பு கூடத்தில் நேரத்திற்கு இருந்தோம்.  பனி கொட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை நேற்றும் அதற்கு முந்தைய நாளும் பனி இல்லையே என்றளவில் ஆறுதல். ஐரோப்பாவில் குளிர்காலமென்பது டிசம்பர் நான்காவது வாரத்தில் ஆரம்பித்து மார்ச் நான்காவது வாரம் முடிய என்பது பொதுவிதி. இருப்பினும், மார்ச் மாதத்தில் இரண்டாவதுவாரத்திற்குப்பிறகு பணிப்பொழிவு அரிது. கப்படோஸில் பனிப்பொழிவு அன்று கடுமையாகவே இருந்தது. எங்கள்  ஓட்டுனர் பேருந்தை நிதானமாகவே செலுத்தினார்.

 கைவினை நெசவு ஊடாக தரைவிரிப்புகள் செய்யும் நிறுவனமொன்றை பார்வையிட எங்களை அழைத்துச்சென்றார்கள். நவீன சுற்றுலா அகராதியில் எங்கள் சுற்றுலாவிற்கு கலாச்சார சுற்றுலா என்று பெயர். சுற்றுலாவின்போது ஏதாவதொரு நிறுவனத்தின் தயாரிப்பை – நுகர் பொருளை- பார்வையிட அழைத்துசெல்வார்கள். சுற்றுலா பயணிகளில் 90 விழுக்காட்டினர் ஏமாளிகள் என்று பரிபூரணமாக  நம்புகிறார்கள். சுற்றுலா கட்டணம் கவர்ச்சிகரமாக இருக்கும். அக் கட்டண இழப்பை ஈடு செய்ய இதுபோன்ற துனை சுற்றுலா திட்டங்கள் உதவுகின்றன. தரை விரிப்பு நிறுவனத்தில் நுழைந்தவுடன் ராஜ உபச்சாரம். கோட்டு சூட்டுடன் ஒரு விரிவுரையாளர் உங்களை வரவேற்பார். உலக அளவில் தங்கள் பொருட்களுக்குள்ள வரவேற்பை கவர்சிகரமான உரிச்சொற்களுடன் புகழ்பாடுகிறார். பக்கிங்காம் அரண்மணைக்குப்பிறகு உங்கள் வீட்டு வரவேற்பறையைமட்டுமே எங்கள் தரைவிரிப்பு அலங்கரிக்கப்போகிறது என்கிறார், சொல்லி முடித்ததும், நமது தேவைக்குரிய பானங்கள் (ஒயின், ஸ்னாப்ஸ், தேநீர்..) வரவழைக்கப்படுகின்றன. கம்பளம், பட்டு பருத்தி என மூவகை நூல்களையும் கலந்தும் தனித்தனியாகவும் செய்திருந்த விரிப்புகள் விரித்துபோட்டபொழுது, அடடா! ஆகா! உச்சுகள். விலை? பக்கிங்காம் அரண்மனைக்கு நெசவு செய்த நுணுக்கமும், ஞானமும் உங்கள் வீட்டிற்கு வருகிறதென்றால் விலையைபற்றி யோசிக்க என்ன இருக்கிறது. உங்களுக்குத் தலைச்சுற்றல் வராதெனில் கடிதம் எழுதுங்கள் விலையைச் சொல்கிறேன். விரிவுரையாளரின் சொற்பொழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் தேடி விற்பனையாளர் முதலைகள் படையெடுக்கின்றன. ஸ்பெயினில் எருதுசண்டை பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய அதே அணுகுமுறை. என்னை அணுகியபோதே அவர்களுக்கு நெற்றியில் என்ன எழுதியிருக்கிறதென ஊகித்திருக்கவேண்டும். அரைமணி நேரத்திற்குக்கூடுதலாக எங்களிடம் ஒரு பெண்மணிவிவாதித்தாள். எனது மனைவி அருகிலில்லையெனில் ஒருவேளை துருக்கிப்பெண்மணியின் பிரெஞ்சுக்காக இல்லாவிட்டாலும் அவள் முகத்திற்காகவாவது அசடு வழிந்திருப்பேன். அவள் சாமர்த்தியமான பேச்சையெல்லாம் சமாளித்து  எங்கள் வீட்டிற்கு பக்கிங்காம் அரண்மனை வேலக்காரி கூட வரமாட்டாள், உங்களுக்கேன் வீண் சிரமமென்றேன். வேண்டிய விலையில் கிடைக்கும் என்றாள், எதுவென்று கேட்க ஆசை.  வயதும் மனைவியும் தடையாக இருந்தார்கள், தவிர்த்தேன். விலையைப் பாதியாகக்குறைத்தாள், நான்கு தவணையில் கட்டலாம் என்றாள். வீட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றாள். ம்.. இல்லை. அநேகமாக அன்றிரவு அவள் சபித்திருக்கக்கூடும்.

Mustapa Pasa (Sinosa)அண்டல்யா விற்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பாக காணநேர்ந்த சிறு நகரம் அதனையும் அங்கிருந்த சந்தையையும் கண்டோம். ஒட்டோமான் காலத்தில் இங்கே கிரேக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்திருக்கிறார்கள். அப்பொழுது பெயர் சினாசோஸ். இன்றைக்கும் ஒன்றிரண்டு கிரேக்க குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை அந்நகரம் சினாசோஸ். துருக்கியர் தேனீரோ அவர்கள் மதுவையோ அருந்தும்போது, கணப்படுப்பை எரியவிட்டு சுற்றிலும் மணிக்கணக்கில் உட்கார்ந்துகொண்டு ஊர்க்கதைகளை அளக்கிறார்கள்.தேனீரை இந்தியாவில் சாய் என்பதுபோல சே என்கிறார்கள். அங்கே பெண்களை தவிர்த்துவிட்டு எங்கள் வழிகாட்டி, ஓட்டுனர், டாக்டர், இன்னும் நான்குபேரென உட்கார்ந்து துருக்கி-பிரெஞ்சு அரசியல் பேசினோம்.

 Saratli:ரண்டாவதாக நாங்கள் பார்த்தது. கப்படோஸ் அருகில் எண்ணற்ற நிலவறை கிராமங்கள் இருக்கின்றன. அதாவது இருந்தன.  அவற்றில் ஒன்று சராத்தலி. ஏற்கனவே கொரேம், உர்க்கூட் போன்ற இடங்களில் மலைகளை குடைந்து மக்களும், மதகுருமார்களும் வசித்தற்கான காரணங்களைக் கூறினேன். அவை இக் கிராமங்களுக்கு ப்பொருந்தும், அதாவது எதிரிகள் படையெடுக்கிற போது நிலவறை உறைவிடங்கள் அவர்களுக்கு மிகப்பாதுகாப்பாக இருந்திருக் கின்றன.  இதில் வியப்புக்குரிய விடயம், குடியிருப்பு ஒவ்வொன்றிர்க்கும் ஒரு சுரங்க வழி, அது தவிர குடியிருப்புக்களிடையேயும் தொடர்புகள். உள்ளே அறைகள், கிணறு, சூரிய ஒளி உள்வாங்கிக்கொள்வதற்காக மறைவான திறப்பு, காற்றுவாங்கிகள், உணவு தானியங்களை சேமிக்க ஜாடிகள் என எல்லாம் உபயோகத்திலிருந்திருக்கின்றன. இறந்தவர்களை அக்குடியிருப்புகளிலேயே புதைத்துமிருக்கிறார்கள். சில நிலவறை கிராமங்கள் பல அடுக்குகளைக்கொண்டவை. துருக்கி அரசாங்கத்தின் தொல் பொருள் இலாகா இவ்விடங்களை மிகப்பொறுப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.

பேருந்தில் தொடர்ந்து பயணம். மீண்டும் கொன்யா, தொரஸ் மலைத்தொடர் எனக்கடந்து வழியில் கிராமங்களில் நிறுத்தி அவ்வப்போது கிடைக்கும் பழங்களை: ஆரஞ்சு, ஆப்ரிகாட், திராட்சை – வாங்கிக்கொண்டு அண்டல்யா ஓட்டலை அடைந்தபோது மாலை மணி ஐந்து. (பொதுவாக 30யூரோவிலிருந்து 50யூரோவரை இரண்டுபேருக்கான அறைகிடைக்கிறது. ஐரோப்பாவினும்பார்க்க மலிவு. இந்தியாவில் கூட நட்சத்திர ஓட்டல்களில் இன்று 5000 ரூபாய்க்குக்குறைந்து அறைகளில்லை). ஓட்டலில்  எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் பெட்டிகளைபோட்டுவிட்டு, ஒருமணி நேரம் அக்கடாவென்று ஓய்வு. மாலை 6.30 க்கு சிறிது வெளியிற் சுற்றிவிட்டுவரலாம் எனக் கிளம்பியபொழுது, டாக்டர் தம்பதிகள் எதிர்பட்டார்கள். பக்கத்தில்தான் கடல் அங்கிருந்து தான் வருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் கடலை பார்த்துவருவதென்று கிளம்பினோம் ஓட்டலின் பின்புறம் இருபது முப்பது மீட்டரில் ஆரவாரமின்றி கடல் உறங்குவதுபோல கிடந்தது. ஒரு மணிநேரத்துக்குமேல் இருந்திருப்போமென நினைக்கிறேன். ஓட்டலுக்குத் திரும்பும்போது இரவு எட்டு மணி.

(தொடரும்)