Category Archives: Uncategorized

மொழிவது சுகம் டிசம்பர் 2 -2012

மின்னுவதெல்லாம் பெண்ணல்ல

அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன்.

இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் -பெல்ஜிய மக்களை முட்டாள்களாகச் சித்தரிக்கும் – ‘Histoire Belge’. அண்மையில் பிரெஞ்சுத் தினசரியில் வந்திருக்கும் செய்தி பிரெஞ்சு பேசும் பெல்ஜியமக்களைப் பற்றிய கருத்திற்கு வலுவூட்டியிருக்கிறது.  நமது பெல்ஜியக்கதை நாயகருக்கு தற்போது 64 வயது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்தவளைக் காந்தர்வ மணம்புரிந்து 19 ஆண்டுகாலம் இல்லறவாழ்க்கை அவருக்கு அமைதியாகவேக் கழிந்திருக்கிறது. ஜான், களவு வாழ்க்கையிலும் களவுக்குப்பின் தொடர்ந்த கற்பு வாழ்க்கையிலும் எவ்வித குறையுமில்லை என்கிறார். கடந்த வாரத்தில் அவர் சகபாலினத்தைச்சேர்ந்த ஒருவருடன் தாம் பல ஆண்டுகள் இல்லறம் நடத்தியிருக்கிற உண்மை தெரியவந்ததிலிருந்து மனிதர் பேயறைந்தவர் போலிருக்கிறார்.

இரண்டுமுறை விவாகரத்து செய்த மனிதருக்குக் கணக்கை நேர் செய்ய மூன்றாவதாக ஒன்று தேவைபட்டிருக்கிறது. 1993ம் ஆண்டு மோனிக்கா என்பவளைச் சந்தித்திருக்கிறார். மோனிக்காவிற்கு இந்தொனேசியா சொந்த நாடு. பெல்ஜியத்திற்குப் புலம்பெயர்ந்திருந்தாள். ஜான் உடைய சகோதரிவீட்டில் பணி. வழக்கம்போலவே சகோதரி இல்லத்திற்கு அன்றைய தினம் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த மோனிக்காவின் முதற்பார்வையே மோகம் கொள்ளும் வகையில் இருந்ததாம். அவள் அழகும், நடத்தையும் ஜானிடத்தில் காதலை விதைத்திருக்கிறது. சந்திப்பும் அதனைத் தொடர்ந்து காதலும் இருவருக்கிடையில் முகிழ்ந்தபோது இவருக்கு 44 அவளுக்கு இருபத்தேழு வயது. இருதரப்பிலும் குறுக்கீடுகளில்லை. நெருங்கிவந்தார்கள். உறவுக்கும் தடையில்லை. ஜானுக்குச் சின்னதாக ஒரு நெருடல். ‘ உனக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணமேதுமில்லையே?’ எனக்கேட்டிருக்கிறார். “சீச்சி அப்படியேதுமில்லை. சந்தோஷமாக இருக்கவேண்டிய வயதில், எதற்குப் பிக்கல் பிடுங்கல்”, என்றிருக்கிறாள். 44 வயதில் 4 பிள்ளைகளுக்குத் தந்தை என்ற நிலையிலிருந்த ஜானுக்கு, இருபத்தேழு வயது மோனிக்காவின் குடும்ப வாழ்க்கையைக்குறித்த கருத்தியம் மகிழ்ச்சியை அளித்தது.

ஏறக்குறைய இருபதாண்டுகால மணவாழ்க்கை.  மணவாழ்க்கையிலும்  அதன்பாற்பட்ட உறவுகளிலும் தம்பதிகளுக்கிடையே விரிசல்களில்லை.  வாழ்க்கைத் துணையின் பாலினம் குறித்து அவருக்கு ஐயங்கள் எழுந்ததில்லை. “உறவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வாள். ஆனால் என்னிடம் உண்மையை மறைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளைவையும் செய்திருக்கிறாள்”, என்கிறார். “பாலியல் உறவில் அது சாத்தியம் என்கிறார்கள், அத்துறைசார்ந்த வல்லுனர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. மோனிக்கா பின்னிரவுகளில் வெளியில் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது உடுத்திக்கொண்டவிதம் சந்தேகங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. அரசல் புரசலாக வதந்திகள் பரவ ஆரம்பித்து, கடைசியில் இவர் காதையும் எட்டின. மோனிக்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் இந்தோனேசியாவிலிருந்து வர, உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறான். ‘ஒரு சில நொடிகளில் எனதுலகம் இருண்டுபோய்விட்டது’ இருபதாண்டுகாலம் என்னை வன்புணர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டதாக நினைக்கிறேன், ‘ என அழுகிறார். அவரைச்சேர்ந்தவர்கள் பலருக்கும் உண்மை தெரியுமென்றபோதிலும் இவரிடத்தில் சொல்லாமல் மறைத்தது,  மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. மோனிக்காவுடனான தமது திருமணத்தைச் செல்லாதென அறிவிக்கக்கோரி ஜான் வழக்குத் தொடுத்திருக்கிறார். மோனிக்கா ஜானை மட்டுமல்ல பொய்யான ஆவனங்களை அரசுக்கு அளித்ததன்மூலம் பெல்ஜிய அரசாங்கத்தையே ஏமாற்றி இருக்கிறாள்(ர்) என்கிறார் ஜானுடைய வழக்குரைஞர்.

ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து விரைவில் பிரான்சுநாட்டில் சட்டவரைவு கொண்டுவர இருக்கிறார்கள்; இம் முடிவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கடந்த சில கிழமைகளாக ஊர்வலம் ஆர்ப்பாட்டமென இறங்கியிருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் இடதுசாரிகள், பெண்ணியம் பேசுகிறவர்கள், புத்திஜீவிகள். எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள், தீர மதச்சார்பு சிந்தனையாளர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரேன் நாட்டைச்சேர்ந்த ‘திறந்த மார்பு’ பெண்ணியக்கத்தினர் கணிசமாக ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கொண்டிருக்க அவர்களும் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக கொடிபிடித்துக்கொண்டு பாரீஸ் வீதிகளில் ஊர்வலம்போகின்றனர். ஒருபாலின எதிர்ப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் நடக்கும் அடிதடிச் சண்டைகள், காவற்து¨றையினர் தலையீட்டுடன் பார்க்க விறுவிறுப்பாக இருக்கின்றன.

எதிர்பாலினத்தைச்சேர்தவர்களை மணப்பதென்பது இயற்கையின்பாற்பட்டது. ஒருபாலினப் புணர்ச்சி, உலகம் தோன்றிய நாளிலிருந்து இருந்திருக்கலாம் எனினும் சமூகம் அதனை ஒதுக்கிவைத்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் ஓர் ஆண் மற்றொரு ஆனை அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை மணப்பது தனி மனிதச் சுதந்திரத்தின் பேரால் நியாயப்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆலந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றைத் தவிர வேறு சில ஐரோப்பியநாடுகளில் திருமணச் சடங்கின்றி ஒரு பாலின மக்கள் சேர்ந்துவாழலாம் என்கிற வகையில் சட்டப் பாதுகாப்புகளை வழங்குகின்றன. அவைகளில் பிரான்சுமொன்று. பிரான்சுநாடு கூடிய விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமென அறிவிக்க இருக்கிறது. பிரான்சைச்சேர்ந்த ஒருபாலின விரும்பிகள் பலரும் அண்டைநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஐரோப்பியரிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கே மணம் செய்துகொண்டாலும் அது சட்டப்படி செல்லும் என்பதால் இந்நடைமுறை அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்கவும், எல்லோருக்கும் திருமணம் என்பதை ஒரு சமூகத் தேவையாகவும் உணர்ந்து ஒரு பாலின திருமணச் சட்டத்தைக்கொண்டுவரவிருப்பதாக அரசு காரணம் சொல்கிறது. ஆனால் பிரச்சினை அதுமாத்திரமல்ல. இப்போது ஒரு பாலினத் தம்பதியினர் குழந்தைகளைக் தத்தெடுக்கவும் சட்டபடி அனுமதிவேண்டும் என்கின்றனர். சில நாடுகள் அதனை அனுமதிக்கவும் செய்கின்றன.

ஒரு பாலினமக்கள் திருமண உரிமைகோருவது ஒருபக்கமெனில் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பது எந்தத் தனிமனிதத் சுதந்திரத்தின் பாற்பட்டதென விளங்கவில்லை. நாய்போல பூனைபோல பிள்ளைகளை வளர்க்க நினைக்கிறார்கள். என் பிள்ளைக்கு இரண்டு தந்தை அல்லது இரண்டுதாய் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். மனதளவில் பிள்ளைகளுறும் சேதத்தை இவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

இருபதாம் நூற்றாண்டிற்கான பிரச்சினையே தனிமனிதச் சுதந்திரமென்று சொல்லவேண்டும். நான்குபேர், அண்டைவீடு, தெரு, சமூகம் இவர்களுக்காகவும் நாமிருக்கிறோம் என்றிருந்த வாழ்க்கையை நமக்கே நமக்கென்று அமைத்துக்கொள்வதே இன்றுள்ள பிரச்சினை. குடும்பத்திற்குள்ளும் சரி, புறமும் சரி தன்னலவாழ்க்கை அமைந்தால் போதும். இனி மரங்களுக்குக் கிளைகள் வேண்டாம். அது எனது சுவற்றைக்கடந்து நீளலாம் துளிர்க்கலாம், பூ பூக்கலாம். காயாகாலாம் கனியாகலாம் நிழல்தரலாம் ஆகவே கூடவே கூடாது. எனது மரம் நான் வெட்டுவேன், விறகாக்குவேன் கேள்விகேட்க அந்நியருக்கு உரிமையில்லை. எப்படியும் வாழ்வேன். உனக்குக் பிடிக்காதென்றால் கண்ணைமூடிக்கொள். நான் எனது, எனது உணர்வுகள், ஆசைகள், உந்துதல்கள் முக்கியம்.  இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து நாய் பூனையைக்கூட மணம் செய்துகொள்வேன்! புத்தி சுவாதீனத்துடன்து நாற்பது பேராகி நாற்பது இலட்சம்பேராகி நான்குகோடிபேராகி நாய் பூனையுடன் திருமணம் செய்துகொள்ள நினைத்தால்  தவறேஇல்லை, தனிமனிதச்சுதந்திரத்தின் பேரால் நீங்கள் ஆதரிக்கவேண்டும். நான் அறிவுஜீவி. எனவே செய்வது சரி. கேட்பார் கூடாது.

பர்மெனிட் (Parménide) கிரேக்கத் தத்துவவாதி. பிறப்பு, இறப்பு, ‘இருத்தல்’ ஆகியவற்றை விவாதித்தவர் அவர் உயிர்வாழ்க்கை நெறியை இருவகைபடுத்துகிறார். ஒன்று உண்மை மற்றது அபிப்ராயம் அவற்றின் தொடர்ச்சியாக. இருத்தல் மற்றது இருத்தலின்மை என்ற இரு சொற்களை உபயோகித்தவர். இருத்தலின் பணி உறபத்தியில் ஈடுவது, உற்பத்தி முடிவுக்கு வருகிறபோது இருத்தலின்மையாகிறது. ‘இருத்தலை’யும் (être) ‘இருத்தலின்மையையும் (Non-être) உயிரி, பிணம் என்றும் எழுதலாம். பர்மெனிட்டின் சிந்தனைப்படி செயல்பாடற்ற, உற்பத்தியில் ஈடுபடாதவை பிணம்.

———————————————

 

.

நூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’

நண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.

இடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம்,   எண் 2, தமிழ்ச்சங்க வீதி,    வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011

நாள்: 2012 -ஞாயிறு மாலை

மேலும் தகவல்களை அறிய:http://muelangovan.blogspot.in/

 

கவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012

1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்

நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.

எதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது.  தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.

இடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.

கட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.

Home-2

———————————-
2.  மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்

நாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.

“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன்,   அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்கிறார்.

ஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.

நண்பர்கள் வாசிக்க:
http://puthu.thinnai.com/?p=15672
____________________

3.  நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்
            அ.ராமசாமி

” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”

ஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை.  இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.

http://ramasamywritings.blogspot.fr/
—————————–

மனதிற் பதிந்த கவிதை

சிறந்த பத்து
        – முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என…

நன்றி: தேவமைந்தன்

http://httpdevamaindhan.blogspot.fr/
———————————————————-

இரண்டு நிகழ்வுகள்

1. பாரீஸில் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில்  பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

நாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை
இடம்  L’Espace Associatif des Doucettes, Rue du Tiers, 95140- Garges Les Gonesse
————————————–

2. Salon du Livre sur L’Inde

பாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).

திரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர்.  பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.

துக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்

2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

Salon du Livre sur l’Inde
Nov.17-18- 2012
Mairie du 20e – 6, Place Gambetta-Paris
———————————————————————————————————

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்- குளிர்கால நேரம்

கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கும் பிரான்சுக்குமான நேர இடைவெளி மூன்றரை மணி நேரமாகவிருந்தது நேற்றைய தினத்திலிருந்து அது நான்கரை மணி நேரமாக கூடியிருக்கிறது. என்ன நடந்தது? பிரான்சு நாட்டில் நேற்று அதிகாலை மூன்றுமணி எனக்காட்டிக்கொண்டிருந்த முட்களைத் திருத்தி இரண்டு மணிக்குக் கொண்டு போனதால் இந்த மாற்றம்.

ஒவ்வொரு வருடமும் கோடையில் ஒரு மணிநேரத்தைக் கூட்டுவதும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பிரான்சு என்றில்லை உலகில் அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (ரஷ்யா நீங்கலாக). வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளில் இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது ஆப்ரிக்க நாடுகளில் மொராக்கோவிலுண்டு, இஸ்ரேல் ஈரான் நாடுகளிலுமுண்டு.

இந் நேரமாற்றத்திற்கு முக்கியமான காரணம் பகற்பொழுதைக் குறிப்பாக குளிர்காலத்தில் கூடுதலாகப்பெறவேண்டும். இலையிதிர் காலத்தில் ஆரம்பித்து குளிர்காலம்வரை பகற்பொழுதைக்காலை ஒன்பதுமணிக்கு புலர்ந்தும் புலராமலும் தொடங்குவதும் மாலை நான்குமணிக்கெல்லாம் இருட்டத்தொடங்குவதும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் அதிகம்பார்த்திராத சாம்பல் நிறவானத்தை இலையுதிர்காலம் தொடங்கி குளிர்காலம் முடியக் காணலாம்.

பகற்பொழுதைக்கூடுதலாகப் பெறும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  2ந்தேதி ஒரு மணி நேரத்தை கூட்டிவைத்து ஆரம்பித்துவைக்கிறார்கள் பிறகு அவ்வருடத்திலேயே அக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமணிநேரத்தை குறைத்து முடிக்கிறார்கள்.
——————————–

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்: SOLDES

 

தமிழ்நாட்டில் குறிப்பாக ஆடித்தள்ளுபடி, பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடி என விளம்பரங்களைப் பார்க்கிறேன். பிரான்சுநாட்டில் பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடியென்று எதுவுமில்லை. வருடத்தில் இரண்டுமுறை குளிர்காலத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி பிப்ரவரி இரண்டாவது வாரம்வரை அதிகபட்சம் மூன்று வாரங்களும், கோடையில் ஜூன் ஜூலை ஆகஸ்டுமாதங்களிலும் நடைபெறும். பிரதேசங்களைப் பொறுத்து தேதிகளில் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். வருடம் முழுக்க கடைகள் தங்கட் பொருட்களை விலைகுறைத்து விற்க சுதந்திரமுண்டு என்றபோதிலும் ‘SOLDES” என்ற சொல்லை விளம்பரப்படுத்தி விற்க ஏற்கனவே கூறியதுபோன்று வருடத்தில் இருமுறையே அனுமதியுண்டு. தேதியையும் விற்பனைகாலத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. மற்றகாலங்களில் விலையைக்குறைத்துவிற்க ஏன் அனுமதியில்லை. வால்மார்ட்டுகள் இந்தியாவிற்கு வந்தால் அண்ணாச்சிகடைகளுக்கு ஆபத்தாகிப்போகும் என்பதைப்போல இத்தள்ளுபடியை அனுமதித்தால் அதாவது SOLDES என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தால் சில்லறைகடைகளின் விற்பனை பாதிக்குமென்று அரசாங்கம் நம்புகிறது எனினும் திமிங்கலங்கள் வாய்க்குள் வருடத்திற்குப் பல ஆயிரம் கடைகள் சமாதிஆவது தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.

இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.

1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது.  இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.

இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி  Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.

‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய  யுத்தத்தில் மிகக்கடுமையாக  தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில்  அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.

தனிமனிதனாகட்டும்  ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

————————-

2.  மொ-யன் (Mo-Yan)

முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மொ-யன் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால்  அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம்  இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மொ-யன்’  பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச்  சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.

பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.

மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே!  என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென  இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom  2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.

 

நன்றி: C.I.D.F.  29-8-2012

————————————

 

 

 

 

 

கவனத்தைப்பெற்ற பதிவுகள் அக்டோபர்-10:

1. வெடிக்கு மருந்தாகும் மக்கள் – முத்துகிருஷ்ணன்

அணமையில் சிவகாசியில் நடைபெற்ற கோரவிபத்தையும் அதற்கான நதிமூலங்களையும் கட்டுரை விவரிக்கிறது. பிரச்சினகளின் வேர் தேடி எழுதுகிற முத்துகிருஷ்ணன் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களின் தள்ளாடும் உயிர்வாழ்க்கையையும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும்  கூட்டத்தையும், கண்டும் காணாததுபோல  இருக்கிற அரசாங்க எந்திரங்களின் கையாலாகாதத் தனத்தையும் பின்புலத்திலுள்ள அரசியலையும் பிட்டுவைத்திருக்கிறார். தமிழில் உருப்படியான படைப்புகள்  அபூர்வமாகவே வருகின்றன. ஆக்கபூர்வமான; சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

http://amuthukrishnan.com/

2. இடிந்தகரைXகூடங்குளம்: நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்- அ.ராமசாமி

இடிந்தகரை கூடங்குளம் சிக்கல்களில் ஊடங்களின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்கிறது கட்டுரை.  இரண்டுவிதமாக ஊடகங்கள் உண்டு. மக்கள் நலனில் அக்கறைகொண்டு இயங்கும் ஊடங்கங்கள், அதுபோல பாவலா செய்யும் ஊடகங்கள். உலக அளவில் ஊடக அறம், சுதந்திரமென்பது பெரும்பாலும் இதழின் உரிமையாளர்களுடைய நலனைக் கருத்திற்கொண்டது. கூடங்குளம் தொடர்பான செய்திகளை தினசரிகளில் வாசிக்கிறபோதே பத்திரிகைகளின் நிறமும் குணமும் சந்தி சிரிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் இடிந்தகரை போராட்டகாரர்ளை அரசாங்கத்திடம் மட்டுமல்ல நமது ஊடகங்களிடமுங்கூட. கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்: அரசியல்வாதிகளைப்போலவே பெரும்பான்மையான ஊடகங்கள் எப்போ மக்களின் உண்மையான நலன்களில் அக்கறைகொண்டவையல்ல என்பது அவரது வாதம்.

http://ramasamywritings.blogspot.fr/2012/10/x.html#more

3.காலச்சுவடு கண்ணன் பதில்கள்

தமிழ்நாடு படைப்புலகம் தமிழ்நாடு அரசியலுலகத்திற்கு நிகரானது. அரசியலிலுள்ள அவ்வளவு கயமைகளும்  போலிகளும், பசப்புகளும், பாசாங்குகளும், வியந்தோதும் கூட்டத்தை விலைக்கு வாங்கும் கூட்டமும் அங்குண்டு. பல நேரங்களில் சமூக அக்கறைகொண்டும், சிறுமை கண்டும் கொந்தளிப்பவர்கள், நடிப்பில் களைத்து அரிதாரத்தை வெகுசீக்கிரம் கலைத்துக்கொள்கிறார்கள். அசல் வாழ்க்கையில் வேறு மனிதர்கள் என்பதை புரியவைக்கிறார்கள். என் அனுபவத்தில் பத்தாண்டுகளில் கண்ணன் சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்று இயங்குபவர். ‘எதுவரை’ இணைய தளத்தில் அவருடைய பதில்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளவை ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ இரகமல்ல.  சு.ரா.வுக்கு பரிசளிக்கக்கூடாதென்ற அரசியல், பிள்ளைகொடுத்தாள்விளை சிறுகதை சர்ச்சையென பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். பதில்களில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம், அவர் எரிச்சலுற்றிருப்பது வெளிப்படை. செயல்பாடுகளில் நியாயமிருப்பின் உரத்த குரலைத் தவிர்ப்பது சாத்தியம்மல்ல. இப்பதில்களை முடிந்தால் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவரவேண்டுமென அவரிடம் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இவ்வருடமும் கண்ணனைச் சந்திக்கிறேன்.

http://eathuvarai.net/

4.. வால் பசங்க வராங்க- ஞானி

பிரதமர் மன்மோகன்சிங் தலமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின்மீது வேளைக்கு ஒன்று நாளைக்கு ஐந்து என ஊழல் குற்றசாட்டுகள். காங்கிரஸ்காரர்களுக்குப்பழகிவிட்டது. ”நல்லமாட்டுக்கு ஒரு அடி’ என்ற சொலவடை கிராமத்திலுண்டு. மழையில் எருமைமாடுகள் அதுபாட்டுக்கு நனைந்துகொண்டு அசைபோட்டபடி படுத்திருக்கும். தலைக்கு மேலே வெள்ளம், இதில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன? எரிகின்ற வைக்கோல்போரில் பிடுங்கினமட்டும் இலாபம் என்பதுபோல அவசர அவசரமாக அரசின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கூட்டணிகள் எதிர்கட்சிகள் என்றிருக்கிறவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் சாதுர்யமாக காய் நகர்த்த முடிகிறது.  குற்றத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதில் பங்குண்டு எனசொல்லவும் முடிகிறது. சில்லரைவணிகத்தின் பின்னிருக்கும் அரசியலை வழக்கமான பாணியில் விளாசியிருக்கிறார் ஞானி.

http://gnani.net/

—————————————-