Category Archives: Uncategorized

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

நூற்றாண்டு விழா

தமிழிசை மூதறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் முகமாக அது பற்றிய செய்தியும் அவரைபற்றிய அரியதகவல்களும் கொண்டு முனைவர் மு. இளங்கோவன் தமது வலைப்பூவில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.

தமிழ்மொழிபால் உண்மையான அக்கறைகொண்டுள்ள உள்ளங்கள் விழாகுழுவினரை தொடர்புகொண்டு தோள்கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

http://muelangovan.blogspot.in/

நா.கிருஷ்ணா

———————————————

நூல் வெளியீடு : அப்பாவின் துப்பாக்கி

invitation new                                                             எதிர் வரும் அக்டோபர் 20ந்தேதி சென்னையில் இனெர் சலீம் என்ற குர்திய திரைத்துறை வல்லுனர் பிரெஞ்சில் எழுதிய ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா நடக்க உள்ளது இந்நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயேத்திருப்பவர் நண்பர் பேராசிரியர் வெங்கிட சுப்புராய நாயக்கர்.

அதே நாளில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட இருக்கிறார்கள். இரண்டு நூல்களுமே காலச்சுவடு வெளியீடுகள்.

நண்பர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமென பணிவான வேண்டுகோள்

அன்புடன்
நா.கிருஷ்ணா

உலக எழுத்தாளர் வரிசை -4

லோரா காசிஷெக் ( Laura Kasisschke)Laura

பிரான்சுநாட்டை பொருத்தவரை ஒரு நல்ல நாவலாசிரியராக அறியப்பட்ட பெண்மணி. அமெரிக்காவில் இவர் ஒரு நல்ல கவிஞர் என்கிறார்கள். எனக்கு கவிஞராக அல்ல நாவலாசிரியராக அறிமுகம். ஒன்றிரண்டு தமிழ்க் கவிதைகள் தருகிற அலுப்பு பிறமொழி கவிதைகள்வரை நீள்கிறது. எனவே அறிமுகமான பெயர்களைத் தேர்வு செய்து கவிதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. லொரா கசிஷ்க் என்றா லோரா காசிஷெக் என்றா எப்படி உச்சரிப்பதென அவரது படைப்பொன்றை வாங்கியபோது (அட்டையில் போட்டிருந்த பெண்மணியின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு) குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்று, அவரைப்பற்றி எழுத உட்கார்ந்தபோதுதான் இப்படியொரு சங்கடம் அதிலிருப்பது தெரியவந்தது. எழுத்தாளர் பெண்மணி கணவர், பிள்ளைகளென கொஞ்சம் சமர்த்தாக குடித்தனம் பண்ணிக்கொண்டு மிச்சிகன் பல்கலைகழகத்தில் ஆசிரியபணியையும் செய்து நேரம் கிடைக்கிறபோது நாளொன்றுக்கு நான்கு மணிநேரத்தை எழுத்திற்குச் செலவிடுவதாக் பிரெஞ்சு இலக்கிய இதழ் ‘Lire’ சத்தியம் செய்கிறது.

வீட்டிற்கு ஒரே மகள், இளம்வயதிலேயே  வளர்ந்தபெண்போல பாவித்து பெற்றோர்கள் தோழமையுடன் அவரை நடத்தியிருக்கிறார்கள். தனது வயதொத்த சிறுமிகள் போலன்றி அலுப்புதரும் வாழ்க்கை முறையில் தப்பிக்க வாசிப்பையும் எழுத்தையும் தேர்வு செய்தாராம்.

அகன்ற வீதிகள், மரங்கள், வீடுகள் வீடுகளைச் சுற்றிலுமிருக்கிற பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், நடை ஓட்டத்திற்கென நைக் ஸ்போர்ட்ஸ் ஷ¥க்கள் அணிந்து செல்லும் இள்வயது பெண்கள், அவர்களைத் துரத்திக்கொண்டு செல்லும் ஆண்கள், சிரிப்பை உதட்டிலும் கசப்பை மனத்திலுமாக இருத்திக்கொண்டு ஓரக் கண்களால் நம்மை பார்த்துக்கொண்டு தங்கள் நாயைக் கொஞ்சியபடி லிப்டில் இறங்குகிற நடுத்தர வயது பெண்மணி, விள்ம்பரங்களில் பார்க்கிற முகங்கள் போல சிரித்தபடி வீட்டைவிட்டு இறங்குகிற ஜோடிகளென அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் அருகிலுள்ள பசாடின நகரில் எனது மகளைப் பார்க்கச் செல்கிறபோதெல்லாம் மனதிற் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற காட்சிகள் லோரா காஷிஷெக் நாவல்களிலும் இடம்பெறுகின்றன. நடுத்தர குடும்ப (பேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடுத்தர குடும்பமென்று சொன்னால் இந்தியாவில் நாம் காண்கிற நடுத்தர வர்க்கமல்ல அதற்கு மேலே) பெண்களின் பிரச்சினகளை இவர் பொதுவாக கதைகளுக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார். ஆர்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென நம்பப்படுகிற நடுத்தர குடும்பங்களின் தலைக்குமேலே ஒன்றல்ல இரண்டல்ல பல டாமக்கிளீஸ் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் திசைச் சிக்கல், வற்றாத துன்பங்கள், ஆபத்து விளிம்பில் கால் கடுக்க நிற்கிறார்கள். இவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என்பதால் அவர்களின் பிரச்சினைகளை எளிதாகக் கையாளுகிறார்.

அவரது முக்கிய நாவல்கள் :

1. A moi pour toujours  (Be mine)
2. En un monde parfait (In a perfect world)

பார்சலோனா-2

Barcelona1

முதல்நாள்மாலை  ஐந்துமணிக்குமேல், எங்கள்  விடுதியிலிருந்து  புறப்பட்டுச்சென்றோம்இருமருங்கிலும்  அணிவகுத்துநிற்கும்  மரங்கள். எதிர்ப்படும்மனிதர்களைகவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துக்காலிட்டு  அமர்ந்தபடி, கும்பல்நடுவே வைராசாவை என நம்மைப் பார்த்து தூண்டில்போடும் மூணுசீட்டுரக மங்காத்தா  ஆசாமிகளின் வசீகரிக்கும் குரலை சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டுவேற்றுலக மனிதர்கள்போலவும், இடைக்கால மனிதர்கள் போலவும், வரலாற்று புருஷர்கள்போலும் வேடம்பூண்டு ஜீவிக்கும் மனிதர்களையும்பூக்கடைகளையும், ஐரோப்பாவின் பெரியநகரங்களின் சுற்றுலாப்பகுதிகளில் காண்கிற பிறஅம்சங்களையும் போகிறபோக்கில் ரசித்து, மகிழ்ச்சியுடன் உலாவர உதவும் ரம்பலா வீதியைக்குறித்து நிறைய எழுதலாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் லாரம்பலாவென்று எங்கள் கைவசமிருந்த வழிகாட்டிக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் கட்டலோன் மொழியில் லெரம்பால்என்கிறார்கள்; அரபுச் சொல்லான ரமலாஸ் அதற்கு மூலம் என்கிறார்கள்

Barcelona3பிலாசா தெ கட்டலோனாவில் ஆரம்பித்து இறங்கி கிழக்கே நடந்தால் கொலம்பஸ் நினைவுத் தூண்வரை லாரம்பலாவின்ஆதிக்கந்தான். கொலம்பஸ்நினைவுத்தூணைக்கடக்கிறபோது, சிலுசிலுவென்றுகாற்று, உப்புநீரின்மணம், வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் உல்லாசப்படகுகள், வலதுபக்கம்சற்றுதூரத்தில் துறைபிடித்துநிற்கும் உல்லாசக்கப்பல்கள், துறைமுகம், சரக்குக்கப்பல்கள்துறைமுகத்தை நெருங்கியதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் சரக்குவாகனங்கள்.

Barcelona4கரையோரங்களில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள மணற்சிற்பங்களை வியந்துமகிழலாம். மனமிருந்தால்அக்கலைஞர்களுக்கு உதவலாம், கிராஸியாஸ் என்றுசொல்லி வாங்கிக்கொள்கிறார்கள். பிறகு தண்ணீர்தண்ணீர்மத்தியதரைக்கடல்: பார்த்தவுடன் ஸ்படிகம்போன்றகடல்நீரைக் கைகொள்ள அள்ளிக்கொள்ளத்தோன்றும். நீலநிற மஸ்லினைப்போர்த்திக்கொண்டதுபோல கடலுக்கடியில் மணல்மூடியதரை; அதில் நொடிக்கொருதரம் நட்சத்திரக் கும்பலொன்று நிதானமாய் அசைந்து செல்வதுபோல மீன்கள்நீந்தும் அழகையும், கரகாட்டக்காரியின் பாவடைபோல விரிந்து பின்னர்நிலைக்குத்திரும்பும் நீர்த்திரைகளையும் பார்த்துமகிழநேரம் போதாது.

லாரம்பலாவை வீதி என்பதைக்காட்டிலும், அகன்ற நடைபாதை என்றுசொல்வதுமிகவும் பொருத்தமானது. சுமார் 150 அடி அகலங்கொண்ட அச்சாலையில் சுமார் ஐம்பது அடிகளை இருமருங்கிலும் வாகனங்களின் போக்குவரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறார்கள், மீதியுள்ள சாலை மக்கள் நடமாட்டத்திற்கென்று தாரைவார்க்கப் பட்டிருக்கிறது. பார்சலோனா நகரில்பார்க்கவேண்டியவை என்று நாங்கள்தீர்மானித்திருந்த அல்லது அப்படியொருதீர்மானத்திற்கு எங்களைக் கொண்டுவந்திருந்த புகழ்வாய்ந்த இடங்கள், கட்டிடங்கள், போதைதரும் வெளிகள் அனைத்துமே இந்தரம்பலாவைச் சுற்றியிருந்தன என்பதால், பார்சலோனாவில் தங்கியிருந்த ஐந்துநாட்களிலும் ரம்பலாவின் காலைநேரங்களும்மாலை நேரங்களும் பழகியிருந்தன.

Barcelona2

ரம்பலா பாதசாரிகளை,கடற்கரையைநோக்கிச்செல்லுபவர்கள், கடற்கரையிலிருந்து திரும்புபவர்கள் என இருவகையாகப் பிரித்தாலும் உலகின் எல்லா பெரியநகரங்களின் பாதசாரிகளின் கால்களுக்குள்ள குணங்கள் ரம்பலா பாதசாரிகளுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை, அர்த்தமற்று கால்போனபோக்கிலே நடப்பவர்கள், அவசரகதியில் எதையோஅல்லது எவரையோ தேடிப்போகிறவர்களைப் போலநடையும் ஓட்டமுமாய் விரைந்துசெல்பவர்கள், தேவதைகள், தேவர்கள், பரத்தைகள், அசுரர்கள், பணம்படைத்தவர்கள், பிச்சைஎடுப்பவர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ரோஜாவிற்கும் பாகிஸ்தானியர், குளிர்பானங்கள் அடைத்த சிறுடின்களைக் கூவிவிற்கும் சிவப்பிந்தியர், ஏமாளிகளுக்காகக் காத்திருக்கும் கிழக்குஐரோப்பிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; மலைப் பாம்புபோலமரத்தில் சுற்றிக்கொண்டு கஞ்சாபுகைக்கும் ஆசாமி, அவனருகே வானத்தை விழிவெண்படலத்தால் அளந்தபடிசொள்ளொழுகஉறங்கும் பெட்டை, திரிசடை சிவனார் போன்ற தலைமுடியும் சிவந்தகண்களுமாய் வயலினா, மாண்டலினா எனத் தீர்மானிக்கமுடியாத இசைக்கருவியை  வாசிப்பதில் லயித்திருக்கும்மனிதர்; புராண இதிகாசநாயகர்களாக, சரித்திரபுருடர்களாகவும், வேடம்தரித்து வெள்ளை அல்லது பொன்வண்ணத்தில் நாள்முழுக்க, பாதசாரிகள் இரக்கப்பட்டுஅல்லது தாமாக மனமுவந்துதரும் ஒற்றைநாணயத்தை வாங்குகிறநேரங்கள் தவிர்த்துபிறநேரங்களில் அசைவின்றி மணிக்கணக்கில் சிலைபோலநிற்கும் வீதிக்கலைஞர்களென ரம்பலாபற்றிச் சொல்லநிறைய இருக்கிறது

– – தொடரும்

மொழிவது சுகம் செப்டம்பர் 27 -2013

1. கீற்று இணைய தளம்: க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள்

அண்மையில் கீற்று இணைய இதழில் நண்பர்  க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள் இரண்டை வாசிக்க நேர்ந்தது. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை தற்போது அக்கறையுடன் வாசித்துவருகிறேன். தற்கால இலக்கியவெளியில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிற பலரின் கட்டுரைகளில் இருக்கும் புழுக்கம், வெற்று சுமைகள் இவர் எழுத்தில் இல்லையென்பது வாசகர்களுக்குள்ள சௌகரியம்.  எடுத்துரைக்கும் பொருளும், எடுத்தாளும் சொற்களும் அவரொரு மூதறிஞர் என்பதை உறுதிபடுத்துபவை. அவர்மொழியின் வாயசைவையும், தொனியின் முழு பரிமாணத்தையும் உள்வாங்கிக்கொள்ள குறைந்த பட்ச அக்கறை போதுமானது. எழுத்திலுள்ள அபூர்வ கவர்ச்சிக்கு, அடிப்படையில் அவரொரு கவிஞர் என்பது காரணமாக இருக்கலாம். வழக்கம் போலவே நுட்பமானதொரு அவதானிப்பு. .

அ. தொல்காப்பியரின்  நன்நயப் பொருள்கோள்

தொல் இலக்கியங்களைப் பற்றிய அவரது பார்வை ஒருபோதும் பொதுவில் பலரும் பயணிக்கிற தடத்திற்கு உரியதல்ல. நம்மை வியப்பில் ஆழ்த்துவதெற்கென்றே சில கேமரா கோணங்களை பிரத்தியேகமாக உபயோகிக்கும் திறன் அவருக்குண்டு. நவீன இலக்கியத்தின் பல சிந்தனைகளை தொல் காப்பியர் அன்றே முன் மொழிந்திருக்கிறாரென நண்பர் சான்றுகளை முன் வைக்கிறபோது,  வியப்புடன் பெருமிதம் கொள்ளவேண்டியிருக்கிறது

ஆ. ஞானியும் தமிழ்தேசியக் கருத்தாக்கமும்
கோவை ஞானியின் தமிழ் தேசியம் குறித்து விரிவானதொரு பார்வை இக்கட்டுரை. ஆசிரியர் ‘தேசியம்’ என்ற உணர்வின் விளை நிலம் மேற்கு நாடுகளாக இருக்க முடியாது, தமிழகமாக இருக்கலாமென்ற ஊகத்துடன் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார். கோவை ஞானி வழக்கமாக நாம் எதிர்கொள்கிற காம்ரேட் அல்ல, கார்ல் மார்க்ஸைக் உணர்ச்சியுடன் வாசிப்பவரல்ல அறிவுடன் வாசிப்பவர் அதனால்தான் அவரால் தமிழ் தேசியம் பேசமுடிமிகிறது. நண்பர் பஞ்சுவின் இக்கட்டுரை, ஞானி தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க கையிலெடுத்த உபகரணங்கள் என்ன, அவர் வடிவமைத்த தேசியத்தின் அடிப்படை பண்புகள் என்ன என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறது. நூல்களிலுள்ள ஞானியின் கருத்துகளை போகிறபோக்கில் வழிமொழிந்துவிட்டுச்செல்லாமல் நண்பர் பஞ்சு தமிழ் தேசியத்தின் இன்றைய நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கிறார்.

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=24989&Itemid=139

2. நூல் தொகுப்பாளர் பழங்காசு ப.சீனுவாசன்

நண்பர் மு.இளங்கோவன் தமது இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ள பெருந்தகை. சொல்லப்பட்டிருந்த தகவலைப் படித்தபோது சுவாசமே நின்று போய்விடும்போல இருந்தது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த யுகத்தில் இப்படியும் சில மனிதர்கள். ஒரு நூற்றாண்டு அறிவு கருவூலத்தை தாய்க் கருவை சுமப்பதுபோல கட்டிக்காத்து வருகிறார். வாழ்க நீ எம்மான்! நண்பர் இளங்கோவனுக்கு நன்றிகள்.

http://muelangovan.blogspot.in/

3. பிரான்சில் என்ன நடக்கிறது?

நேற்றைய பிரெஞ்சு தினசரியில் இப்படியொரு செய்தி, வாசித்து முடித்தபோது வியப்பாக இருந்தது.

கடந்த 26 செப்டம்பர் 2013 அன்று பிரான்சு நாட்டைச்சேர்ந்த ஓர் இளம் மலையேறி ஆல்ப்ஸ் மலையில் சிறியதொரு பேழையை கண்டெடுத்திருக்கிறார். திறந்து பார்த்தபோது அதனுள் சிறு சிறு சுருக்குப் பைகளில் விலையுயர்ந்த கற்கள் இருந்திருக்கின்றன. அப்பைகளில் ‘Made In India’ என்ற வாசகம் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு 130000 யூரோவிலிருந்து ளூ246000 யூரோவரை எனசொல்லபடுகிறது. இளைஞர் கண்டெடுத்த புதையலை, தனக்கென ஒதுக்கிகொள்ளாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். தொலைத்தவர்களோ அவர்களின் வாரிசுதாரர்களோ கேட்டுவந்தால் அவர்களிடம் ஒப்படைப்பார்களாம், வரவில்லையெனில் புதையல் கண்டெடுத்த இளைஞருக்கு கிடைக்குமென செய்தி சொல்கிறது உடையவர்கள் இந்தியர்கள் எப்படி?

இரண்டு விமான விபத்துகள்

இந்திய நாட்டிற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஆல்ப்ஸ்   மலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றன

முதல் விபத்து நடந்தது 1950ல்.  ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான Malabar Princess 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ந்தேதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது பயணம் செய்த 58 பேரும் இறந்திருக்கிறார்கள். இரண்டாவது விபத்து, பதினாறு ஆண்டுகள் கழித்து அதாவது 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பெயர் கஞ்சன்ஜுங்கா. இவ்விமானமும் ஏர் இந்தியாவிற்குச் சொந்தமானது. நியுயார்க்- பம்பாய் என பயணித்த அவ்விமானம் 117 பயணிகளுடன் அதே இடத்தில் விபத்திற்குள்ளாக ஒருவரும் தப்பவில்லையாம். ஆக அவ்வப்போது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான் மோன் -பிளாங் மலையில் இப்படி ஏதாவது கிடைப்பது வழக்கமாம்.

http://alpes.france3.fr/2013/09/26/un-alpiniste-trouve-un-incroyable-tresor-sur-le-massif-du-mont-blanc-326057.html
—————————————

நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது

மணற்கேணி ஆய்விதழ் இவ்வருட நிகரி சமத்துவ விருதுபெறும் சாதனையாளர்களை அறிவித்துள்ளது.. நண்பர் ரவிக்குமார் அழைத்திருக்கிறார். 

நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும்.

———————————————————————————–

          நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது 

downloaddownload_004கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.

இதற்கான விழா இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே .வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அவர்களது புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் விழாவுக்கான அழைப்பிதழும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் நிகழ்வு குறித்த செய்தியைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டு உதவவும் வேண்டுகிறேன்.

அன்புடன்

ரவிக்குமார்

ஆசிரியர், மணற்கேணி 

குறிஞ்சி வட்டம் -51

செஞ்சியில் உள்ள குறிஞ்சி வட்ட நண்பர்கள் தொடர்ந்து படைப்பிலக்கியவாதிகளை உற்சாகப்படுத்திவருபவர்கள் ஞாயிறன்று (22 செப்.2013) அன்று நடந்த நிகழ்ச்சி பெண்கவியுலகத் திறனாய்வு சார்ந்தது. மூன்று பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1. இரா. தமிழரசியின் ‘மரக்கலம் திரும்பும் பறவை’ கவிதைத் தொகுப்புக் குறித்து முனைவர் வே. நெடுஞ்செழியன் (திருவண்ணாமலை) திறனாய்வு செய்திருக்கிறார்.

2. பா. உஷாரணியின் ‘மரம் வைத்த வீடுகள்’ பற்றி, பேராசிரியர் அ.மான்விழி ரஞ்சித் (திருவண்ணாமலை)
திறனாய்வு செய்திருக்கிறார்.

3. மனுஷியின் ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்பது பற்றி புதுவையைச்சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் இரா. கந்தசாமி திறனாய்வு செய்துள்ளார்.

அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் குறிஞ்சி வட்டத்திற்கு நன்றிகள்.

உலக எழுத்தாளர் வரிசை -2

:லிடியா ஜோர்ஜ் (Lidia Jorge)

téléchargementஇவர் போர்த்துகல் நாட்டின் முக்கிய படைப்பாளி. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், நாடகம் எனதொடர்ந்து நவீன இலக்கியத்தின் கீழ் இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் இலக்கியம் என அவர் படைப்புகளை வகைப்படுத்தலாம். போர்த்துகல் நாட்டின் தென்பகுதியில் 1946ம் ஆண்டு பொலிக்கிமெ (Boliquime) என்ற இடத்தில் பிறந்தவர். லிஸ்பன் பல்கலை கழகத்தில் நவீன இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் போர்த்துகல் நாட்டின் காலனி நாடுகளில் வசிக்க நேர்ந்திருக்கிறது. காலனி நாடுகள் இல்லையென்றான பிறகு லிஸ்பன் திரும்பியவர், பல்கலைக் கழகத்தில் சிலகாலம் ஆசிரியப் பணியில் இருந்திருக்கிறார், பின்னர் அதிலிருந்து விடுபட்டு தற்போது தமது நேரம் முழுவதையும் எழுத்துப் பணிக்கென ஒதுக்கிக் கொண்டு செயல்படுகிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், வீட்டில் ஒரு பெட்டி நிறைய நல்ல புத்தகங்கள் இருந்ததாம், அவற்றைப் பால்ய வயதில் வாசித்துப் பழகியாதாலேயே தமக்கு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென பின்னாளில் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவருடைய எழுத்தார்வத்திற்கு தங்கள் நாட்டின் பிரபல எழுத்தாளரான Fernando Antonio Nogueira Pessoa காரணம் என்கிறார். எனினும் லிடியா ஜோர்ஜுவின் படைப்புகளை முழுவதுமாக வாசித்தவர்கள், ஆழமாக அவரது படைப்பு வெளியை உள்வாங்கிக்கொண்டவர்கள் பெஸ்ஸொவிடமிருந்து வெகுதூரம் விலகிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். லிடியா ஜோர்ஜ் படைப்புகள், தன்னை சுற்றியுள்ள சமூக பிர்ச்சினைகளில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதை சுட்டுகிறார்கள். நவீன உலகின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதன் பலவீனங்கள், வன்முறை தீர்வுகள், அவ நம்பிக்கைகள், ஊழல்கள் என்று அவருக்கு எழுத நிறையவே உள்ளன என்பது வெளிப்படை. மேற்கத்திய நாடுகளில் பல பரிசுகளை வென்றுள்ள லிடியா தம்மைச்சுற்றியுள்ள உலகமே தமக்கான எழுதுபொருள் என்பதை மறுப்பதில்லை. சமூக பிரச்சினைகளைக் கையாளுவதில் தேர்ந்தவர் என்ற போதிலும் அவரது கதை சொல்லல் தனித்தது என்கிறார் பிரெஞ்சு இலக்கிய இதழ் ஒன்றில் அந்நாட்டின் சக எழுத்தாளர் Maria Gracieta Besse.

அவரது படைப்புகள் குறித்து: (தகவல் உபயம் பிரெஞ்சு இலக்கிய இதழ்)*

1. The Day of Prodigies (1980)
பல நூற்றாண்டுகளாக தனது புறம் அகம் இரண்டிலும் எவ்வித மாற்றாத்திற்கும் உள்ளாத போர்த்துகல் நாட்டின் தென் பகுதி கிராமம் ஒன்றுதான் கதை நாயகன். முன்முடிவுகளும், அவ நம்பிக்கைகளும், சச்சரவும், குருட்டு சடங்களுமாக உறைந்துகிடக்கும் கரம்பு நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். லிடியா தமது முதல் நூலிலேயே தமது பெண் இனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர்களுடைய கவலைகள், சுதந்திரமாக இயங்குவதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள், ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டியக் கட்டாயம், தான் கதை சொல்கிற இந்த நூற்றாண்டிலும் பெண்கள் ஓர் ஆணுடமைச் சமூகத்தின் வாழநேரும் அவலம் குறித்த எழுத்தாளரின் துயரம் இப்படைப்பில் சொல்லப்படுகிறது.

2. The Wind Whistling in the Cranes

பெற்றோர்களுக்கு என்ன நடந்ததென அறியமுடியாத மிலென் என்ற பெண், தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறாள். உடனிருந்த பிற உறவினர்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடொன்றிர்க்கு சென்றிருந்த வேளை பாட்டி திடீரென இறந்துவிடுகிறாள். இளம்பெண்ணான மிலென் அவளை அடக்கம் செய்யவேண்டும். இந்நிலையில் பாட்டியால் ஏற்கனவே னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த குடும்பமொன்றுதன் பழக்கம் ஏற்படுகிரது. மெல்ல மெல்ல போதைப்பொருளுக்கும் அடிமையாகிப்போகும் பெண்ணின் வாழ்க்கை மேட்டுக் குடியினரின் வாழ்கைப்போக்கில் எவ்வாறு சீரழிகிறது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.

3. The Night of the Singing Women – 2011

ழிசெலா லிஸ்பன் நகரைச் சேர்ந்த பணக்கார பெண்மணி. கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதி ஆர்வம் காட்டுபவள், ஆனால் கண்டிப்பான பேர்வழி. அவளிடம் பயிற்சிபெற்று மேடையேற ஆசைப்படும் பெண்கள் குழுவினருக்கு ஏற்படும் அனுபங்களைக் கொண்டு ஆசிரியர் கதையை நகர்த்துகிறார். குழுவில் இருக்கும் ஒவ்வொருத்திக்கும் என்றாவது ஒரு நாள் தன்னுடைய பாடல் குறைந்தபட்சம் ஒன்றாவது பதிவு செய்யப்படும், விற்பனையாகும், பணமும் புகழும் வந்து சேரும் என்ற கனவு இருக்கிறது. எனவே ழிசெலாவினால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பணிந்து போகிறார்கள். முதல் அத்தியாயம், கடுமையான பல மாதப் பயிற்சிக்குப்பிறகு பயிற்சிபெண்களின் கனவு நனவாவதைப்போல பொதுமேடையில் அவர்களின் பாட்டு அரங்கேறுவதற்கான சந்தர்ப்பத்துடன் நாவல் தொடங்குகிறது, கதை சொல்பவள் அப்பெண்களில் ஒருத்தியான சொலான் என்பவள். சொலானுடைய தினசரிகள், அவள் உரையாடல், அவள் பாலுறவு, பயிற்சிபெண்களுக்கும் ழிசெலாவிற்குமான உறவின் ஏற்ற இறக்கங்கள், விரிசல்கள், ஒட்டுதல்கள் என அத்தியாயங்கள் வருகின்றன. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் லிடியா, பாட்டு பாடுகிற பெண்களைப்பற்றிய நாவல் என்றாலும், மக்களைப்பற்றிய நாவல் என்கிறார்.

நன்றி – * Le Magazine Littளூraire ஆகஸ்டு 2013

பி.கு. ஆசிரியரின் விருது மற்றும் பிற நூல்களைப்பற்றிய தகவல்களை ‘விக்கிபீடியாவிலிருந்து’ நீங்கள் பெறலாம்.

____________________________________

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

பார்சலோனா -1

(இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்சலொனாவிற்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன் . உயிரோசை இணைய இதழில் தொடராக வந்தது. அதன் மறுபிரசுரம்.)

எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரைக் கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா…), ஃப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே பதில்சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள், ஃபிளாமெங்க்கா தாளகதியை வாய்க்குள் கொண்டுவந்ததுபோல ஸ்பானிஷ் சொற்கள், தூக்கி எறியப்பட்ட பாத்திரங்களாக நங் நங்கென்று நெஞ்சில் விழுந்து காதை அடைக்கின்றன, செம்பையும் பறவை முனியம்மாவும் சேர்ந்து நிரவல் செய்வது போன்றதொரு சப்தம் நான்கு திசைகளிலிருந்தும் வருகிறது.

ஸ்பானிய மொழி அப்படியொன்றும் இளப்பமான மொழியுமல்ல. பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில் சொல்லப்போனால், பிரேஸிலைத் தவிர்த்து பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஸ்பானிஷ்மொழிதான் அரசாங்க மொழி, இது தவிர வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமாக வசித்துவருகிறார்கள். எனினும் இத்தாலி மொழியையும், ஸ்பானிஷ் மொழியையும் பிரித்து அறியமுடியாமல் பல நேரங்களில் திணறுவதுண்டு. மொழி மாத்திரமல்ல; உணவு, கலாச்சாரம் எனபவற்றிலெல்லாங்கூட இத்தாலிக்கும், ஸ்பெயினுக்கும் மேலோட்டமாகப் பார்க்க வித்தியாசம் எதுவுமில்லை என்பதுபோலத்தான் தெரிகிறது.

பொதுவாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பானியர், இத்தாலியர், போர்ச்சுக்கீசியர்களெனில் பொருளாதாரத் தராசில் எடை குறைந்தவர்கள். அண்மைக் காலங்களில் இம்மூன்று நாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக பிரான்சுக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் ஆப்பிரிக்க அரபுநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தபோதிலும் இன்றைக்கும் பிரான்சு நாட்டு வெளிநாட்டவரில் ஏறக்குறைய பதினேழு இலட்சம்பேர் இம்மூன்று நாடுகளைச்சார்ந்தவர்களே. ஒரு காலத்தில் இஸ்டான்புல் தெருக்களில் 70 மொழிகளைப் பேசுகின்ற மக்களைச் சந்திக்க முடியுமாம், அங்கு கிரேக்க இஸ்லாமியரும், அர்மீனிய கத்தோலிக்கர்களும், அரபு கிறிஸ்துவர்களும், செர்பிய யூதர்களும் சேர்ந்து வாழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. அப்பெருமையை இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய நகரங்கள் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் முப்பது ஆண்டுக்காலம் வாழ்ந்திருந்தும், சீனாவையும், பாகிஸ்தானையும், பங்ளாதேஷையும், இலங்கையையுங்கூட ஏட்டில் வாசித்ததுதான், செய்திகளில் அறிந்ததுதான். இன்றைய தினம் கடவுச்சீட்டின்றி, விசா இல்லாமல் வாரத்தில் ஒருநாளேனும், பாகிஸ்தானுடன் கைகுலுக்கவும், சீனாவுடன் முகமன் கூறவும், பங்களா தேஷுடன் நேசத்தை வெளிப்படுத்தவும், இலங்கையுடன் உறவு பாராட்டவும் முடிகிறது. உலகின் அத்தனை மனிதர்களுக்கும், அத்தனை இனங்களுக்கும் ஏதோவொரு வகையில், ஏதோவொரு பெயரில் மேற்கத்திய நகரங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றன. ஆக உலக நாடுகளின் பண்பாடுகளும், உணவுமுறைகளும் அசலாக இல்லையென்றாலும் நகலாக அறிமுகமாகியிருந்ததால் பெரிய எதிர்பார்ப்புகளென்று எதுவுமில்லை.

பாரீஸிலிருந்து பார்சலோன் ஒன்றரை மணிநேர விமானப்பயணம். 1992இல் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டின்போது விமானத் தளம் விரிவாக்கப் பட்டிருக்கவேண்டும், பெரிதாகத் தெரிந்தது. ஐரோப்பிய நாடுகளில் அதுவும் நாங்கள் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர்நகரில் எளிதில் வாய்க்காத தட்பவெப்ப நிலையும், தென் அமெரிக்க பனைமரங்களும், தோல் பழுத்த ஐரோப்பியரும், பெரியதலைகொண்ட சிவப்பிந்திய வம்சாவளியினரையும் பார்க்க, அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமானத் தளத்தை நினைவுபடுத்தும் சூழல். பார்சலோனா விமானத் தளத்தில் ஸ்பானிய மொழியைக்காட்டிலும் வேறொரு மொழி உபயோகத்தில் இருந்தது, தகவற் பலகைகளில் தவறாமல் அம்மொழி ஸ்பானிஷ் மொழிக்குக் கீழே இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. விசாரித்ததில் கட்டலான் என்றார்கள், ஸ்பானிஷ் மொழிக்கும் கட்டலான் மொழிக்கும் அதிகம் பேதமிருக்காதென்று நினைக்கிறேன்.

ஸ்பானிஷ் சொல்லுடன் ஒரு ‘O’வைக் கூடுதலாகப்போட்டால் போதுமென்றாகிறது, உண்மை என்னவென்று மொழியை அறிந்தவர்கள்தான் சொல்லமுடியும். கட்டலான் மொழி பிரான்சின் தென்பகுதியிலும், இத்தாலிநாட்டைச் சேர்ந்த சர்தினியா தீவிலும் ஸ்பெயின் நாட்டின் வடபகுதியிலும் பேசப்பட்டபோதிலும், பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள அந்தோரா என்ற மிகச்சிறிய நாட்டில்மட்டுமே ஆட்சிமொழியாக நேற்றுவரை இருந்த மொழி. பிரான்சைச் சேர்ந்த கட்டலோனியப் பிரதேசத்தைக் காட்டிலும் ஸ்பெயின் நாட்டுக் கட்டலோனியப் பகுதி சிறப்பு அதிகாரத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்துவருகிறது. 1979லிருந்து ஸ்பானிஷ் மொழியோடு கட்டலான் மொழியையும் அரசுமொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனினும், கட்டலோனியரில் 68 விழுக்காடு மக்களே கட்டலான் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். எனினும் இந்த 68 விழுக்காடு மக்கள் கட்டலோனிய நிர்வாகத்தில், பிரதேசத்தின் பண்பாட்டில் அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதை, விமானத் தளத்தில் இறங்கிய சில நொடிகளில் மனதிற் கொள்ளவேண்டியிருந்தது. “எங்கள் மக்கள் கட்டலான் மொழியில் வெளிவரும் படைப்புகளையே விரும்பி வாசிக்கிறார்கள். பிறமொழிப் படைப்புகளென்று வருகிறபோதும் ஸ்பானிஷ்மொழியினும் பார்க்க கட்டலான் மொழிபெயர்ப்பென்றால், நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என, பார்சலோனாவாசியொருவர் உள்ளூர் இரயில் பயணத்தின் போது குறிப்பிட்டார்.

நாங்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதி கடற்கரைக்கு வெகு அருகிலிருந்தது. விமானத் தளத்திலிருந்து அங்குசெல்ல, சிறப்புப் பேருந்துகளும் இரயில்களுமிருந்தன, எங்கள் தேர்வு இரயில். பிரான்சு நாட்டில் அதிவேக இரயில்களைத்தவிர புற நகர் இணைப்பு இரயில்களும் சரி, சுரங்க ரயில்களும் சரி பார்சலோனா நகர இரயில்களோடு ஒப்பிடுகிறபொழுது மிகவும் பின் தங்கியிருந்தன. பயண திசை, கால அளவு, எந்த நடைபாதை மேடைப்பக்கம் கதவுகள் திறக்கவிருக்கின்றன என்பவற்றை பயணிகளுக்குத் தெளிவாக மின்னணு தகவற்பலகைகள் அறிவிக்கின்றன. பாரீஸ் இரயில்களில் ஆப்பிரிக்க மக்களை நிறைய பார்க்கலாம், பார்சலோனாவில் குறைவு, மற்றபடி இரயில்களில் குழலிசைத்தும், பாட்டுப்பாடியும் பிச்சைகேட்பவர்கள் சென்னை, பாரீஸ், பார்சலோனா என்றுபோனாலுங்கூட உடன் பயணிக்கத்தான் செய்கிறார்கள். பார்சலோனா நகரத்தை நெருங்கியபோது, கடைகள் மூடியிருந்தன, வாகனங்களின் எண்ணிக்கையும் ஓட்டமும், ஐரோப்பாவின் பெரிய நகரங்களின் நண்பகலுக்கு ஒத்ததாக இல்லை, சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. விசாரித்தபோது கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. அங்கு பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டு மீண்டும் பிற்பகல் நான்கு மணி அளவில்தான் திறப்பார்களென்றும் அதன்பிறகு இரவு பத்துமணிவரை வியாபாரம் செய்வார்களென்றும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. உணவு விடுதிகளெல்லாங்கூட இரவு எட்டு மணிக்குமேல்தான் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதை அடுத்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். பிரான்சில் அலுவலகங்களைத் தவிரக் கடைகளை நாள் முழுவதும் திறந்துவைத்திருப்பார்கள் என்பதோடு, பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்து பிறநாட்களில் இரவு ஏழுமணியோடு மூடிவிடுவது வழக்கம். பிலாஸ் தெ லா கட்டலோனாவில் இறங்கியபொழுது நகரம் உறக்கம் கலைந்திருக்குமென நினைக்கிறேன். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களைக் கலைத்தது போன்றதொரு மனித நடமாட்டத்தைக் காணமுடிந்தது.

பார்சலோனா நவீனத்தின் அவ்வளவு நுணுக்கங்களையும், அறிவியல் ஞானத்தையும், உரியவகையில் பயன்படுத்திக்கொண்டுள்ள நகரமென்று கேள்விப்பட்டிருந்தேன். படைப்புலக ஆளுமைகள், கலைஞர்கள், ஓவியர்கள் எனப் பலரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் மேடையாக நகரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நவீனத்தையும் பழமையையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கொரு நல்ல உதாரணம்: 1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 இல் கட்டி முடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிற லா சக்ரதா ஃபமிலியா (Sagrada Familia – Temple of the Holy Family). இதுவரை நாங்கள் பார்த்துள்ள நகரங்களில் பார்சலோனா அளவில் வேறொரு நகரம் எங்களைக் கவர்ந்ததில்லை எனபதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். காரணம் ‘பூவும் புகையும், பொங்கலும் சொரியும்’ பார்சலோனா ஓர் இந்திர விழா நகரம்.

– தொடரும்