Category Archives: Uncategorized

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1

 Panjangakm.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும்-பாராட்டுதலும்என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது  பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில்  எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை.  மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம்.  ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால்.  இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு.  ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ஒருபாற் கோடாமை மனத்துடன் உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல்எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும்வீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.

(தொடரும்)  

புதிய நூல்

புதிய நூல்

 வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

கிளேசியொவின் Le Procès -Verbal என்ற பிரெஞ்சு நாவல்  குற்றவிசாரணை( என்ற பெயரில் காலச்சுவடு பெளியிடுகிறது. ஜனவரி 17ந்தேதி திருவாளர்கள் பிரபஞ்சன் வெளியிட நண்பர் நாயகர் முதல் பிரதியைப் பெற்றுகொள்கிறார்

 நிகழ்ச்சி இடம் மற்றும் நேரத்தை பின்னர் அறிவிக்கிறேன்.

 அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

 

தாயகம் கடந்த தமிழ் -2014

தாயகம் கடந்த தமிழ்   –2014

              ஜனவரி-20-22

 

புரவலர் டாக்டர் நல்ல பழனிச்சாமியை தலைவராகக்கொண்டும் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க. பொன்னுசாமியை ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் இயங்கும் கோவை தமிழ் பண்பாட்டு மையம் ஆதரவில் ஜனவரி-20-22 தேதிகளில் தாயகம் கடந்த தமிழ்என்ற பெயரில் ஓர் கருத்தரங்கை ஏற்பாடுசெய்யப்படுள்ளது. திரு.மாலன். விழாக்குழுவின் தலைவர். வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் அ.முத்துலிங்கம், எஸ்.பொ. சேரன், ரெ.கார்த்திகேசு போன்ற படைப்பாளிகளோடு கல்விமான்களும், நவீன தமிழின் கணினி மேம்பாட்டிற்கு பெரும்பங்கினை அளித்துவரும் திரு முத்து நெடுமாறன் போன்றோர் கலந்துகொள்வதும் நிகழ்ச்சியின் சிறப்பு.

 பிற தகவல்களுக்கு தாயகம் கடந்த தமிழ் ‘2014, அதிகார பூர்வமான வலைத் தளத்திற்குச் செல்லவும்

http://www.webdesignersblog.net/tamil/amaippukkulu.php

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நூல்கள்

inviஎதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில்  நண்பர்  எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013.

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

4. கடைசி நாள் : 31.12.2013.

5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
மின்னஞ்சல் (e-mail),
அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)

பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com

www.naalaividiyum.blogspot.com

www.periyaariyal.blogspot.com

www.ambethkariyam.blogspot.com

www.penniyakkural.blogspot.com

www.aravaanigal.blogspot.com

www.jothidamosadi.blogspot.com

www.saibabamosadigal.blogspot.com

www.thamizhpeyargal.blogspot.com

www.anuulaiethirppu.blogspot.com

முனைவர் க.பஞ்சாங்கம்

 Senji -5 JPGமுனைவர் க.பஞ்சாங்கம்:

நண்பர் முனைவர் வெ.சுப்புராயநாயக்கரின் அறிமுகத்தால் வாய்த்த பேறு. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன்.  அறுபது வயதில் உறவுகள், நண்பர்கள்  கடந்தும் மறந்தும் வந்திருக்கிற பாதையைப் பார்க்கிறேன். இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. திராவிடக் கட்சிகளின் வேடதாரிகள் அதிகரித்த நிலையில் துக்ளக் சோ, ஸ்தாபன காங்கிரஸ் என்று ஒதுங்கினேன். இன்றைக்கு எந்த அரசியலும் உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி  எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் க.பஞ்சாங்கம். அவரது எழுத்துக்களை ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா  என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை.  நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளும், திறனாய்வு கட்டுரைகளும் கைக்கு கிடைத்துள்ளன வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு, அவை அடக்கமல்ல உண்மையும் அதுதான் என்பதால் அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் (நாவல், கவிதைகள்) பஞ்சாங்கமென்ற பிரபஞ்சம் என்றொரு தொடரை ஜனவரியிலிருந்து எழுத இருக்கிறேன். வேறு நல்ல தலைப்பு கிடைத்தால் அது மாறவும் கூடும்.

—————————-

மொழிவது சுகம் நவம்பர் 22 – 2013

கடந்த வாரம்?

கடந்த 3  ஆண்டுகளாக பாரீஸிலுள்ள ‘les comptoirs de l’Inde’  சங்கத்தினர் இந்திய புத்தக விழா என்ற ஒன்றை நடத்திவருகிறார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி. சனிக்கிழமை (16 நவம்பர்)அதில் கழிந்தது. மகன், மருமகள், பேரன் இளையமகள் என்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி பாரீஸில் இருக்கிறது.  நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் மூவருக்குப் பிறந்த நாள்  அதில் இருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதனை விமரிசையாக கடந்த ஞாயிறன்று பாரீஸில் கொண்டாடினோம். பேரன் உடல் நலம் சரியில்லாததால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது. எதிர்வரும் ஜனவரி 20, 21,22 தேதியில் கோவையில் தாயகம் கடந்த தமிழ் என் பெயரில் மாநாடொன்றை நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சிக் குழுவில் எனக்கும் இடம் அளித்திருக்கிறார்கள், கட்டுரை ஒன்றும் வாசிக்கிறேன். முதலில் எனக்கு தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும் ” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்க  கூறினார்கள், ஆனால் அமெரிக்க ஐரோப்பிய தமிழிலக்கியம் குறித்து கட்டுரை வாசிக்க இருந்த நண்பர் அதனைத் தவிர்த்ததால், அத் தலைப்பில் எனக்கு வாசிக்க சாத்தியமாவென நண்பர் மாலன் கேட்க சம்மதித்துவிட்டேன். சிறுகதைகளின் அடிப்படையில் ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களை அணுகுவது படைப்பாளிகளின் ஆளுமையை கூடுதலாக புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன். நாவல்களை வாசிக்கிறபோது எல்லோருடைய படைப்புகளும் உரிய நேரத்தில்கிடைப்பதில்லை பல எழுத்தாளர்களை தவறவிட சாத்தியமிருக்கிறது. இணையத்தில் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைப்பது மற்றொரு அனுகூலம்.

—————————————————

The Lunch Box

Lunch box

ஏறக்குறைய ஐந்து நாட்களை முழுவதுமாக வீணடித்துவிட்டு (எழுதாமல்) செவ்வாய் இரவு கிட்டட்ட ஐந்து நாட்களும் 1000 கி.மீட்டருக்கு மேல் காரோட்டிய களைப்பில் படுக்கசென்றவனின் மறுநாளும் சோர்வில் கழிந்ததென்று சொல்ல வேண்டும், கடுமையான காய்ச்சல் மனைவியை காலையில் கடையில் விட்டுவிட்டு வீட்டுக்குத்திரும்பிய பிறகு, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. வாடிக்கையாளர் ஒருவர்  The Lunch Box திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு இரண்டு அனுமதி சீட்டுகள் இருக்கிறதென்கிறார், வேண்டுமா என்று கேட்டார். திரைப்பட அரங்கில் படம் பார்த்து ஒரு மாமாங்கம் இருக்கும். எனினும் பெயரைக்கேட்டவுடனேயே காய்ச்சல், களைப்பு போயே போய்விட்டது. 2013 கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்டு தீவிர விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுதலைப் பெற்றிருந்த படம். எனவே படத்தைப் பார்த்தே ஆகவேண்டும், அழைப்பிதழைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கச் சொல் என்றேன். நேற்று மாலை ஏழுமணிக்கு எங்கள் கடைக்குசென்று அழைப்பிதழை  பார்த்தபோதுதான் டிசம்பர் 12ல் ஐரோப்பாவெங்கும் திரையிட இருக்கும் படத்தின் பிரத்தியேக காட்சி என்று புரிந்தது. படம் துவக்குவதற்கு முன்பாக படத்தின் மகாத்மியங்களை மிகையின்றி தெரிவித்த அறிவிப்பாளர் பெண்மணி, திரையிட்டு முடிந்ததும் படக் குழுவினருடன் உரையாடலாம் எனத் தெரிவித்தார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. கையில் புகைப்பட கருவி இல்லாதது ஏமாற்றத்தை தந்தது ஒரு பக்க மெனில், கைத்தோலைபேசி காமெராவை சோதித்து பார்த்தபோது பாட்டரி காலி என்றது. நொடிந்து போய்விட்டேன்.

இனி படத்திற்கு வருகிறேன்:

பம்பாய் என்றவுடன்  எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ டப்பா வாலாக்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்களைப்பற்றி முழுமையாக தெரியவந்தது, ஓர் பிரெஞ்சுக்காரர் தயாரித்திருந்த குறும்படத்தின் மூலமாக. ஒரு தேர்ந்த ராணுவப் படையைப்போல காலம் மற்றும் ஒழுங்கில் இம்மியும் பிசகாமல் இயங்கும் அம்மனித ரொபோக்களின் வினைத்திறன் கண்டு பிரம்மித்திருக்கிறேன். பம்பாய் நகரின் எஸ்தெட்டிக்கில் நீளமான சுமைகூடைகளில் பயணிக்கும் Lunch Box களும் ஓர் அங்கம். ஆனாலும் அதனை முதன் முறையாக ரித்தேஷ் பத்ரா என்ற இளைஞர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தானொரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். வாழ்க்கை என்பது எதிர்பாராத சம்பவங்களால் முன் நகர்த்தப்படுவது. ஒழுங்குடனும் தவறுதலுக்கு வாய்ப்பே இல்லை என நம்பப்படுகிற டப்பாவாலாக்களின் செயல்பாட்டில் எங்கோ ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அப்படியான தவறு நிழ்வதற்கான சாத்தியத்தையும் நடந்தால் விளைவு என்னவாக இருக்குமெனவும் இளஞர் ரித்தேஷ் மித்ரா யோசித்ததின் பலன் இத்திரைப்படம். நல்ல சிறுகதைகளில் இடையில் திடீரென்று கதையோட்டத்திற்கு முரண்படுவதுபோல ஒரு பத்தி வரும், வாசகனுக்கு அவகாசம் கொடுக்க கதையாசிரியர் இந்த உத்தியைக் கையாண்டிருப்பதுபோல தோன்றினாலும், அச்சிறுகதைக்கான பொறியே அந்த விதிவிலக்கான பத்தியில் இருக்கிறதென்பது தெரியவரும். இந்தியாவின் கோடானுகோடி மத்திய வர்க்கப் பிரிவுக்குள் ஒர் இளம் பெண் – ‘இலா சிங்'(நிம்ரத் கௌர்)கிற்கு ஏழெட்டு வயதில் ஒரு மகளும் உண்டு. அவள் குடியிருப்புக்கு மேலே வசிக்கும் ஓர் வயதான ஆண்ட்டியின் சமையல் ஆலோசனையின்படி கணவனுக்கு அலுவலகத்திற்குக் கொடுத்தனுப்ப மதிய உணவு தயார் செய்கிறாள், டப்பாவாலா வருகிறார் ஒரு பெரிய சங்கிலித்தொடர்போல பயணித்த அந்த லன்ச் பாக்ஸ் அரசாங்க அலுவலகமொன்றை அடைகிறது, மனைவியை இழந்த வயதான அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சாப்பாட்டு அடுக்கைப் பிரித்து ருசித்து சாப்பிடுவதாக அடுத்த காட்சி. வீட்டிற்கு லன்ச் பாக்ஸ் மாலை திரும்ப வருகிறது. அது காலியாக இருப்பதைப்பார்த்து அவளுக்கு சந்தோஷம். முன்னிரவு அழைப்பு மணி கேட்டு, இளம்மனைவி கதவைத் திறக்கிறாள். உள்ளே நுழைய இருப்பவன் வயதான அரசு அலுவலன் என நாம் நினைக்க அவள் கணவனாக வேறொருவனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இவள் தயாரித்து அனுப்பிய மதிய உணவை சாப்பிட்ட ஆசாமி (Irrfan Khan) வேறு ஆள் என நமக்குப் புரிகிறது. பிறழ்வதற்கு வாய்ப்பே இல்லையென நம்பப்படுகிற டப்பாவாலாக்கள் செயல்பாட்டில் தவறு நிகழ்ந்திருப்பதும் கணவனுக்குப் போகவேண்டிய லன்ச் பாக்ஸ் வேறொருவருக்குப் போய் சேர்ந்ததையும் எப்பொது அறிய வருகிறோமோ அப்போதே திரைப்படம் நம்மை அணைத்துக்கொள்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் மாடிவீட்டு ஆண்ட்டியின் யோசனையின்படி செய்த சமையல் நன்றாக இருந்ததா? எனகேட்கிறாள் அவள் செய்தனுப்பாத காய்கறியின் பெயரைக் கூறி நன்றக இருந்தது என போகிற போக்கில் கணவன் கூறுகிறான். இளம் மனவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது விளங்குகிறது. மறுநாளும் மேல் மாடி ஆண்ட்டியிடம் யோசனை. ஆண்ட்டி தனது சமையற் குறிப்பின் பலாபலனை தெரிந்துகொள்ளும் ஆவலில்,  லன்ச் பாக்ஸைப் பிரித்து உணவைச் சாப்பிட்டவனைத் துண்டுக் காகிதம் எழுதி விசாரிக்கத் தூண்டுகிறாள். முகம் தெரியாத ஆசாமியுடனான கடித உறவு லன்ச் பாக்ஸ் மூலமாக தொடருகிறது. தொடக்கத்தில் மேல் மாடி ஆண்ட்டி தூண்டுதலில் கடிதம் எழுதினாலும், பின்னர் இளம்பெண்ணுக்கும் சரி வயதான அலுவக ஊழியருக்கும் சரி அதைத் தொடர்வதற்குக் காரணங்கள் உள்ளன. மெல்ல இரு தரப்பிலும் காதற்கோட்டைவகையினாலான காதல் அரும்புகிறது. டப்பாவாலாக்கள் தவறை இருவருமே சுட்டிக்காட்டுவதில்லை. எத்தனை நாளைக்கு இப்படி எழுதிக்கொண்டிருப்பது சந்திக்கலாமே என்கிறாள். வயதான ஊழியரும் சம்மதிக்கிறார், சந்திக்க வந்த அரசு ஊழியர் தனது வயது உறைக்க, இளம்பெண்ணை சந்திக்காமலேயே, மாற்றல் கேட்டு பெற்று நாசிக் போய்விடுகிறார்

தமிழில் அடிக்கடி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். அப்படித்தான் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இர்பான் கான், நிம்ரத் கௌர், இர்பான் கானிடம் பயிற்சி பெற வரும் சித்திக் என்ற நடிகர் எவரையும் நடிகர்களாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. லன்ச் பாக்ஸ்யையும் நடிகர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேல் மாடி ஆண்ட்டியின் முகத்தை கடைசிவரை இயக்குனர் காட்டவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலில் ஆண்ட்டியாக நடித்தவரை ஏன் கடைசிவரை காட்டவில்லை எனக்கேட்டதற்கு. இயக்குனர், “பெண்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள் (மேல் மாடி ஆண்ட்டியின் கணவன் கோமாவில் இருக்கிறான், அவனைப் பராமரிப்பதன்றி அவருக்கு வேறுவேலைகள் இல்லை என இடையில் வசனம் வருகிறது)  பக்கத்து சிறைவாசியுடன் பேசுகிறபொழுது ஒரு முகம் போதும்”, என்றார். இன்னொரு ரசிகர் டப்பாவாலாக்கள் மெல்ல எண்ணிக்கையில் குறைத்துவருவதாகக் கேள்விபட்டேன், அதுவும் தவிர நவீனமயமாகிறது என நம்பப்படும் நகரத்தில் டப்பாவாலாக்கள் தொழில் நீடிக்க முடியுமா எனக்கேட்டதற்கு, இயக்குனர் கூறிய பதில்: “டப்பா வாலாக்கள் பம்பாய் வாழ்க்கையின் ஓர் அங்கம், மரபாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்குப் பழகிவிட்டது, இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார். படம் முடிந்த போது பார்வையாளர்கள் வெகு நேரம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நடிகை படத்தில் தோன்றியதைவிட மிகவும் இளபெண்ணாக இருந்தார். நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். முதல் நாள்  சென்ற லியொன் (Lyon) நகரைவிட இந்த நகரில் (Strasbourg) குளிர் அதிகம் நல்ல வேளை ஒயின் என்னைக் காப்பாற்றியது எனச்சொல்லி சிரித்தார்.

—————————————————————-

L’Inde de livres

L’Association les comptoirs de l’Inde organise son 3ème salon de livres à Paris le 16 et le 17 novembre 2013 à la Marie du 20ème ,6 – Place de Gambetta

Pour tout renseignement complémentaire, visitez leur site

http://www.comptoirs.inde.org Tél. : 0146590212

மொழிவது சுகம் நவம்பர் 10 2013

1. வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ -இந்திரன்

தீராநதி அக்டோபர் இதழில் க்ரியா வெளியீடாக வந்துள்ள கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ கவிதைத் தொகுப்புக் குறித்து இந்திரன் நூல் மதிப்புரை எழுதியுள்ளார். இன்று தமிழ்க் கவிதை வெளியில் இயங்குகிறவர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் எனக்கும் மிகச மிக மிக முக்கியமான கவிஞர். ‘இந்த வாரத்திற்கு ஒன்று, அந்த இதழுக்காக ஒன்று’ என எழுதும் படைப்பிலக்கியவாதியல்ல. ஓர் அசலானக் கவிஞர்.

சிலவற்றை சிலர்தான் மதிப்பிடவேண்டும். தங்கத்தை உரசிப்பாரென்று இரும்பு அடிக்கும் கொல்லனிடம் கேட்கமுடியாது, பொற்கொல்லனைத்தான் அனுகவேண்டும். வ.ஐ.ச. ஜெயபாலன் குறித்தும் அவர் கவிதை நரம்புகளைச் சுண்டி அவற்றின் உறுதிப்பாட்டையும் நெகிழ்ச்சியையும் பேசவல்லவர் இந்திரன். மதிப்புரையில் ஜெயபாலன் கவிதைக்குறித்து சற்று கூடுதலாக எழுதியிருக்கலாம் என்கிற மனக்குறை எனக்கு இருந்தபோதிலும், அக்கவிதை தொகுப்பைக் குறித்து முன்வைத்திருக்கும் கருத்து புறம் தள்ளக்கூடியது அல்ல. தமிழகத்து எழுத்தாளர்களின் புனைவுகளோடு ஒப்பிடுகிறபோது அண்மைக்காலங்களில், கவிதைகளில் நமது எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்டுகிறது என்பது உண்மை. எனது மனநிலைக்கு இசைவாக நண்பர் இந்திரன் கருத்து இருப்பதால் அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி:

“தற்கால தமிழகத்துக் கவிஞர்களுக்கு வாழ்க்கையிலிருந்து சவால்கள் ஏதுமில்லை. எனவே அவர்கள் மொழிக்குள் சவால்களை உருவாக்கிக்கொண்டு கவிதைகளைப் புனைகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிஞர்களின் முன்னால் வாழ்க்கை பல்வேறு சவால்களை முன்வைத்திருக்கிறது. எனவே ஈழத்துக் கவிஞர்கள் தாங்கள் பாடுபொருள்களை அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  அடுத்ததாக வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற கவிஞர்கள் நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறபோது தான் ஒரு தமிழன் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவர்கள் வாழ்தலுக்கு அத்தியாவசியமாகிறது. ஆனால் தமிழகத்துக் கவிஞனுக்கு தமிழ் அடையாளம் பேசவேண்டிய கட்டாயமில்லை. அவன் தன்னை ஒரு சர்வதேசக் கவிஞனாகக் கருதிக்கொள்வதற்கான உல்லாசமும், தான் தமிழனல்ல இந்தியன் என்று பேசக்கூடிய ஒரு மருட்சியும் வாய்த்திருக்கிறது. அடுத்ததாக தமிழகத்தில் தோன்றிய புதுக்கவிதையின்  பிறப்பே மரபுக் கவிதையை மறுதலித்து அதற்குப் பதிலியாக வேறொரு கவிநடையை  உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது எனவேதான் சங்கக் கவிதை நோக்கி புதுக்கவிதை நகரவேண்டும் எனப் பல தமிழகத்து நவீன கவிகள் பேசிய போதிலும் வ.ஐ.ச. ஜெயபாலனைப்போல சங்கத் தமிழின் மரபார்ந்த மொழி வெளிப்பாட்டை அவர்கள் கைக்கொள்ளவில்லை” (தீராநதி இதழ் அக்டோபர் 2013 பக்கம் 47)

இது துறைசார்ந்த நண்பர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த இடத்தில் புலம்பெயர்ந்து தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம்காட்டுகிறவன் என்ற வகையில் எனக்கும் ஒன்றைச் சொல்லவேண்டும்.  சிறு புரட்சி என்று ஒன்றிருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை தற்போது Micro Revolution’ என்கிறார்கள். இது வேறொன்றுமல்ல தனிமனிதனின் மறுதலிப்பு, கலகக் குரல், உடன்பாடில்லை என்கிறபோது ‘இல்லை’ சரியல்ல எனும் குணம். ஆரோக்கியமான சமூகத்திற்கு இணக்கமாக இருப்பது எத்துணை அவசியமோ, மறுதலிப்பும் அவசியம். பிறரைக் காட்டிலும் அறிவையும் உணர்ச்சியையும் சமமாகப் பாவிக்கிற கலை இலக்கிய படைப்பிலக்கியவாதிகளுக்கு இப்பொறுப்புக் கூடுதலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சவால்கள் இல்லாமலில்லை, ஆனால் அங்குள்ள பிரச்சினை அவர்கள் அதனைக் கணக்கில் கொள்வதில்லை. வெளிநாட்டில் வாழும் படைப்பாளிகள் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்றவர்கள் செயல்படுகிறபொழுது படைப்பு மட்டுமே அவர்கள் சிந்தனையில் குறுக்கிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுதுகிற பலருக்கும் வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் கவனமெல்லாம் சக கவிஞனை, சக படைப்பாளியை, சக மொழிபெயர்ப்பாளனை,  எப்படி வீழ்த்துவதென்ற சிந்தனைக்கு நேரத்தை அதிகம் செலவிடுகிறபோது எங்கிருந்து அதில் படைப்பு  பிறக்கும்? இந்திரன் கருத்து போய்ச்சேரவேண்டியவர்களிடம் போய்ச்சேரவேண்டும்.

2. பிரான்சில் என்ன நடக்கிறது.

கொன்க்கூர் இலக்கிய பரிசு 2013.

கடந்த நவம்பர் 4ந்தேதி அன்று பிரெஞ்சு புத்திலக்கிய உலகு 2013ம் ஆண்டுக்கான கொங்க்கூர் இலக்கிய பரிசை (Le prix Goncourt ) அறிவித்திருக்கிறது. பரிசுபெற்ற நாவலின் பெயர் ‘Au Revoir Lதூ-Haut’ நாவலாசிரியர் Pierre Lematre. தேர்வு அனைத்தும் வெளிப்படை. பன்னிரண்டு சுற்றுகள் தேர்வு நடைபெற்றது இறுதிச்சுற்றில் பத்து நடுவர்களில் ஆறுவாக்குகள் மேற்கண்ட நாவலுக்கும், நான்கு வாக்குகள் Frederic Verger எழுதிய ‘Arden’ நாவலுக்கும் கிடைத்தன. இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசை இம்முறை ஓர் குற்ற புனைவு நாவலுக்கு முதன்முறையாக வழங்கியிருக்கிறார்கள்.

————————-