Category Archives: Uncategorized

வருந்துகிறேன்

0001

ஈரோடு பல்லவி பதிப்பகம் மற்றும் Kongunadu Publications Pvt.Ltd. இணைந்து தேசிய ஆசிரியர் தின நூல் வெளியீட்டுத் திட்டம் – 2017 என்ற  பொருளின் கீழ் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த இருப்பதாக  ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அக்கருத்தரங்கத் தலைமைக் குழுவில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரச்சினை என்னவெனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னதாக இப்படியொரு கருத்தரங்கம் குறித்தோ, இதில் கலந்துகொள்ள இயலுமாவென்றோ என்னைக் கேட்டவர்களில்லை.

2015ல்  நடந்த ஒரு நிகழ்ச்சி : திருச்சியில் பேராசிரியர்களும் நண்பர்களுமான  பசும்பொன்,  விஜயராணி இருவரும் உலகத் தமிழ்ச் சங்கம்  சார்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் . அவ்விழாவில் பேராசிரிய நண்பர் உதயசூரியன்,    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள  பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இயலுமா எனக்கேட்டார்,  பிறகு தொலைபேசியிலும் தொடர்புகொண்டு வற்புறுத்த சம்மதித்துச் சென்றேன். நடந்த நிகழ்ச்சி ஆளும் கட்சியின் மாவட்ட மாநாடு போலவிருக்க, எனது பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது,  மேடையில் ஏறாமல் பக்கத்திலிருந்த ஒருவரிடம் பேராசியர் நண்பர் உதயசூரியனிடம் மன்னித்துக்கொள்ளச் சொல்லும்படி கூறிவிட்டு அரங்கத்தை விட்டுவெளியேறினேன். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல வெளி நாட்டுச் சாதனையாளர்களை இக்கூட்டத்திலும் பார்க்கிறேன், அவர்கள் சாதித்தது என்ன என்பதுதான் புரியாத புதிர் ? நாம்  சாதித்தவர்கள் அல்லது சாதிக்கின்றவர்கள் என்று நினைக்கிற  அசலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சாதனையாளர்கள்  பெயர்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனப்பார்த்தேன்.  மருந்துக்குக் கூட ஒரு பெயருமில்லை ஏமாற்றமே மிஞ்சியது.  எனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமில்லையென ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐயோ தமிழினமே !

நா.கிருஷ்ணா

The Great History of French India – Nagarathinam Krishna’s “Neela Kadal” (Blue Sea) – Ra. Giritharan

 

Giri(The author is a young writer, hailed from Pondichery who has written recently this synopsis  as an introductory note about Neelakadal to the  Cambridge Tamil Chair, as per their request)

 

Noted Writer Nagarathinam Krishna’s novel “Neela Kadal” (Blue Sea) –originally published in Tamil in 2005 – is compelling, convincing history of the Tamil diaspora in the last 600 years of Asian history. It runs to more than 500 pages and spans the history of the last five centuries. Being a historical novel, it is also long sighted and global in its theme. It cannot be categorised as a propaganda novel and serves its purpose in giving a cross sectional view of not only the history of the Tamils but also the nature of the colonial force across Asia and the British Isles from the 15th century till early 20th century.

nilakadalThe delightful title of the novel “Neelak Kadal” though rhetoric, brings in perspective the great ocean and its people who have crossed it in search of Power, Wealth and Livelihood. In this aspect, the novel spanning from the 15th century AD to the 20th century enlivens the monumental tale of oppression & morality. This is a thinly veiled account of the French colonies of India from Pondicherry, Mahe, Chandranagore to the French-British Isles of Mauritius & Reunion. Nagarathinam Krishna skilfully intervenes the elements of traditional mythological storytelling and the realms of modern physiology.

The novel is a story of a crumbled dynasty of Madurai Nayakas and their attempt to capture their kingdom amidst all the colonial forces trying to have their share of land. This is told with a historicity of fiercely Islamic rule in its dying age paving way to European colonial forces and how attempts to survive leads to more catastrophe among the Indian kings. Slavery, which was abolished by the British in the initial days of the 19th century, was one of the flourishing trades during the beginning of 18th century.

The novel deals with the life of the Tamils who migrated to Mauritius during the French colonisation of Pondicherry. Many of them were forcefully kidnapped and had to resort to their fate in the small island. All of them are the forefathers of the Tamil community that is currently lively in Mauritius. They were the builders of the island and the main reason for the growth of the capital city, Port Louis. At the same time, these people were the most dominated and subjugated population of Asia. Most of them lived so near to death each day, yet survived to build a vibrant community in the Island.

It is pleasure to read a novel that is philosophical, deals with metaphysical world and at the same time is embroiled with rich characters that span across multiple centuries. Many times it is the good old history repeats itself in its theme, but due to the transcendental nature of the vice it reaches new depths.

Nagarathinam Krishna does not deal with any stereotypical treatment of his characters. Most of his characters are life like and are picked from the lifeline of French-India history. This novel deals with the cultural colonisation of the last four centuries in Asia. This is the beginning of Indian writing on colonisation and its effects, especially in Tamil.1

Nagarathinam Krishna hails from a village in Pondicherry, India. He currently lives in Strasbourg, France. He is a bilingual writer and has authored more than 20 books in Tamil. Some of his popular writing ranges from introducing French Literature in Tamil, Mata Hari history and history of Pondicherry & Gingee. He has also translated many French writers into Tamil and vice versa. His website is:- https://nagarathinamkrishna.com/mukappu/

Neela Kadal

Published by Sandhya Publication, Chennai.

Published Year 2005 https://nagarathinamkrishna.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81

—————————————

மொழிவது சுகம் மே 8, 2017 எம்மானுவெல் மக்ரோன் – பிரான்சு ஒபாமா

photo-de-famille-macron-louvre-7-mai-2017

2009 ஜனவரி 20 ல் ஒபாமா ஏற்படுத்திய  நம்பிக்கையையும் மன நெகிழ்ச்சியையும் பிரெஞ்சுமக்களுக்கு 2017 மே 7 அன்று எம்மானுவெல் மக்ரோன் தந்திருக்கிறார். டிரம்ப்பின் வரவு கண்டு கலங்கிய உள்ளங்களுக்குப் பால் வார் த்ததுபோல பிரெஞ்ச் அதிபர் தேர்தலின் முடிவு அமைந்துள்ளது.

இளைஞர் , 39 வயது. இந்திய ஆட்சிப்பணிக்கு நிகரான பிரான்சு  நாட்டின்  Ecole Nationale d’Administration  வார்ப்பு.  தொடக்கத்தில், வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பின்னர், தனியார் நிறுவனத்தில் நிதித்துறை அதிகாரி. இதற்கிடையில்  சோஷலிஸ்ட் கட்சியின் மூன்றாண்டுகால உறுப்பினர். தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடைய அதிபர் தேர்தலின் போது அவரது குழுவில் அதிபரின் விருப்பத்தில் பேரில் தேர்தல் பணியாற்றுகிறார். ஹொலாந்து 2012 அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதும் அதிபர் அலுவலகத்தில் முக்கிய செயலாளர்களில் ஒருவராக நியமனம், அடுத்து மனுவல் வால்ஸ் என்ற ஹொலாந்து ஆதரவு பிரதமரின் கீழ் நிதி அமைச்சர்.  ஆரம்பம்முதலே அதிபர் ஹொலாந்தை விரும்பாத சோஷலிஸ்ட் அணியினர் சிலர் அவருடைய அமைச்சரவை அடித்தட்டு மக்களுக்கு எதிரான  நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி அவர் வழிக்காட்டுதலுடன் இயங்க்கிய அமைசரவையிலிருந்து வெளியேறுகின்றனர்.  நாட்டின் வளர்ச்சிவீதம், கடந்த வலதுசாரி அரசைக் காட்டிலும் அதிகரித்திருந்தது உண்மை, எனினும்  ஹொலாந்து அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்து  நடந்த தீவிரதவாத தாக்குதல்கள் அந்த உண்மையைப் பின்னுக்குத் தள்ளியதோடு, பிரெஞ்சு மக்களின் அபிமானத்தை இழக்கவும் காரணம் ஆயிற்று.  இலட்சியக் கனவுகளுடன்  அமைச்சரவையில் இடம்பெற்ற எம்மனுவெல் மக்ரோனுக்கு தாம் நினைத்தபடி திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற குறை தவிர, அதிபர் ஹொலாந்தும் சரி, சோஷலிஸ்ட்டுக் கட்சியும் இரண்டுமே மூழ்கும் கப்பல், பிரான்சு  நாட்டு வருங்கால அரசியல்  பாரம்பர்ய கட்சிகளுக்குரியதல்ல, தவிர மக்கள் மாற்றத்தை விருப்புகிறார்கள்  என்பதையெல்லாம்  சரியாகக் கணித்திருந்த மக்ரோன்  நிதி அமைச்சர் பதவியை உதறிவிட்டு வெளியேறுகிறார்.  « France en Marche » என்ற கட்சி சார்பற்ற புதிய இயக்கத்தைத் தொடங்குகிறார் (2016). சோசலிஸ்டு கட்சியில் இருந்திருந்தால், உட்கட்சித் தேர்தலில் தோற்று அதிபர் வேட்பாளர் ஆகும் கனவு ஆரம்பத்திலேயே கரைந்திருக்கும். மக்ரோனின் புதிய இயக்கத்திற்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. அதிட்டமும் இவருக்குச் சாதகமாக அமைந்தது, எப்படியும் ஜெயித்துவிடுவார் என  நம்பப்பட்ட  முக்கிய வலதுசாரி கட்சியின் வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, முதற் சுற்றில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட, இரண்டாம் சுற்றில் இவருக்குப் போட்டி வேட்பாளராக களத்தில்  நின்றவர் Front National  கட்சியின் மரின் லெப்பென் என்ற பெண்மணி.  பெரும்பாலான பிரெஞ்சுக்காரர்களுக்கு இனவாதப்பெண்மணியிடமிருந்து  நாட்டைக் காப்பாற்ற மக்ரோன் தேவைபட்டார். இங்கும் மக்ரோனைத்  தோற்கடிக்க, மரின் லெப்பெனுக்குச் சாதகமாக ரஷ்ய வத ந்திகள் மூட்டை மூட்டையாக வந்திறங்கின. ஆனால் பிரெஞ்சுமக்கள் ஏமாறவில்லை.  மக்ரோன் 66,1% வாக்கும், மரின் லெப்பென் 34,9 %  வாக்கும் பெற்றிருக்கிறார்கள். இனி மக்ரோன் செயல்பட  அல்லது அவரது வாக்குறுதிகளை  நிறைவேற்ற அடுத்த மாதம்  நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்(Assemblée Nationale) தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் (மொத்த உறுப்பினர்கள்  577). தவறினால் கொள்கைகளோடு ஒத்துப் போகிற பிறகட்சி உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மூன்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர் சமுத்திரத்தில்  ஒரு துளியாய்க் கிடந்த இளைஞரால்   இன்று உலகம் அறிந்த மனிராக எழுந்திருக்க முடிந்ததென்றால், இதுவும் முடியும் என்பதுதான்  என்னைப்போன்றோரின்   நம்பிக்கை.

——————————————————-

மொழிவது சுகம் மே 1 2017

Macronஎனது வாக்கு எம்மானுவெல் மக்ரோனுக்கு!

அடுத்த  ஞாயிற்றுக்கிழமை பிரான்சு  நாட்டின் அதிபர் தேர்தல் இரண்டாம் சுற்று. அன்றிரவே இரவு எட்டுமணி அளவில் அதிபர் பெயர் தெரிந்துவிடும்.அப்பெயர் மக்ரோன் என்ற இளைஞருக்கு உரியதாக இருப்பின் பிரான்சுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய அரசியலைக் கடந்து உலக அரசியலுக்கும் நல்லதென்பது  மானுடத்தின் மீது அக்கறைகொண்ட அறிவுஜீவிகளின் கருத்து.

மானுடத்திற்கு எதிரிகள் இன்றையதேதியில் அசலான முதலாளித்துவத்தைப்போலவே  போலியான சோஷலிஸ்டுகளூம் காரணமாவர். மார்க்ஸியத்தை ஓர் ஏட்டுச்சுரக்காய் ஆக்கியதில், சோசலிஸ எல்டராடோ கனவில் மட்டுமே காணக்கூடியது என்பதைத் தெளிவுபடுத்தியதில் சோஷலிஸ்டுத் தலைவர்களுக்குப் பெரும்பங்குண்டு, சமீபத்திய உதாரணம் வெனிசுலா அதிபர் மதுரோ. பிரான்சிலும்  மார்க்ஸியத்திற்கு வக்காலத்து வாங்கியவர் மெலான்ஷ்ொன் என்ற ஆசாமி . உண்மையில் இன்று “மக்களுக்காக  நான்” எனக்கூறிக்கொள்ளும் மரின் லெப்பென் எனும் பாசிஸவாதியும் சரி, இந்த மெலான்ஷோனும்  சரி முதலாளித்துவ முகங்கள். இவர்கள்  நிதி உலகின் பிரதி நிதி யென வர்ணிக்கிற   நடுத்தர வர்க்க மிதவாத சோஷலிஸ்டான  மக்ரோனைக்காட்டிலும் பெரும் கோடீஸ்வரர்கள். எனினும் பூசாரிகளை நம்பும் ஆடுகளைப்போலவே  பூர்ஷ்வாக்களை நம்பிய போல்ஷ்விக்குகளைத்தான் 1917 ரஷ்யப் புரட்சியில் கண்டோம்.

முதல் சுற்றின் முடிவில் இரு வேட்பாளர்கள்  இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தார்கள். ஒருவர் எம்மானுவெல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென் என்ற பெண்மணி. இருவருமே  வழக்கமான கட்சி வேட்பாளர்கள் அல்ல. அதிலும் மக்ரோன் என்பவர் இளைஞர். பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்காது தற்போதைய அதிபர் ஹொலாந்துவின் தயவினால்  நிதியமைச்சராகி உரியகாலத்தில் முடிவெடுத்து, அமைச்சரவையில் வெளியில்வந்து, இன்றைக்கு இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகி அதிபர் ஆவதற்கு ஓரளவிற்கு வாய்ப்புள்ள மனிதர்.

இரண்டாவது வேட்பாளர் தீவிர வலதுசாரி பெண்பணி, பெயர் மரின் லெப்பென். இப்பெண்மணியின் கட்சி Front National . தேசியவாத கட்சி மட்டுமல்ல இன வாத கட்சியுங்கூட. இனி எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிலும் பிறச்சலுகைகளிலும் பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்கிறார். பயங்கர வாத த்தை ஒடுக்க குற்ற பின்புலமுள்ள அன்னியமக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என் கிறார். பிரான்சு  நாடு ஐரோப்பாவிலிருந்து வெளியேறவேண்டும், அகதிகளை குடியேற்றத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்பதெல்லாம் கொள்கைகள். பிரச்சினை  அவர் ஜெயிப்பது எப்படி ? இவருடைய கட்சியை தீண்டத் தகாதக் கட்சியாக அறிவித்து   இக்கட்சிக்கு வாக்களிப்பது  நாட்டின் குடியரசு அமைப்புமுறைக்கு உதவாதென  இத் தேர்தலிலும் பெரிய கட்சிகள் மட்டுமின்றி  நாட்டின் நலனில் அக்கறையுள்ள தலைவர்களும் கூறிவருகின்றனர். தவிர பெண்மணிமீது ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. தேர்தலில் தோற்றால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஜெயித்தால் பதவிக்காலம் வரை தண்டனையைத் தவிர்க்கலாம். ஒன்றிரண்டல்ல ஆறு குற்றங்கள்.

  1. ஐரோப்பிய ஒன்றிய நிதியிலிருந்து கட்சிபணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கியது.
  2. தேர்தல் செலவில் முறைகேடு
  3. வருமான வரித்துறைக்கு தமது சொத்தை குறைத்து மதிப்பிட்டுத் தெரிவித்தது.
  4. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பைவளர்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த பிரச்சாரம்.
  5. 2012 தேர்தலில் மாவட்ட நிர்வாகசபை உறுப்பினர் என்ற வகையில் ஊழியர்களையும் அரசு சாதனங்ககளையும் தவறாக முந்தையப் பிரச்சாரத்திற்குப்  பயன்படுத்தியது.
  6. 2017 பிப்ரவரி 20ல், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட்டபோது, இவருக்கு எதிரான விசாரணை ஆவணங்கள் அரசின் ரகசியமென நம்பப்பட்டவை இவரிடம் எப்படி வந்த து என்ற விவகாரம்.

 

குற்றச்சாட்டுகளைப்பொருட்படுத்தாது எப்படியேனும் ஜெயிக்கவேண்டுமென  நினைக்கிறார். தமது தந்தைக்கு 2002ல் கிடைத்த தோல்வி தம்மை  நெருங்காதென  நம்புகிறார். அவர்  நம்பிக்கைக்குக் காரணம் தீவிர கிறித்துவமதவாதிகள், தீவிர வலது சாரிகளில் ஒருபிரிவினர், மற்றும் எதிரி ஜெயித்தாலும் பரவாயில்லை,  அண்டைவீட்டுக்காரனும், அரசியலுக்கு  நேற்று வந்த இளைஞனுமான ஒரு நபரை  எப்படி அதிபராக அனுமதிப்பது என் கிற நல்லெண்ணங்கொண்ட  மெலான்ஷோன் என்கிற பொதுவுடமை ஆசாமி மௌனம் இவருக்குச் சாதகமாக  உள்ளன.

ஏன் மக்ரோன்?

இன்றைய தேதியில் நூறுவிழுக்காடு முதலாளித்துவமும் சரி,     அக்மார்க் மார்க்ஸியமும் சரி நடைமுறைக்கு உதவாது. வெகுசன நலன் என்ற போர்வையில் அமெரிக்க மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி அமெரிக்காவை முத்ன்மைபடுத்தி, அந்நியர்கள் வெளியேற்றம், உலகவர்த்தகத்தில் பாதுகாப்பான செலவாணிக்கொள்கைகள், மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தடுப்புச் சுவர், வளிமண்டலம், சுற்றுப்புறசூழல் பாழடைந்தாலும் பிரச்சினையில்லை அமெரிக்க முதலாளிகளின் நலன் முக்கியம்  என வாக்குறுதிகளைக்கூறி அமெரிக்க ஏழை மற்றும்  நடுத்தரமக்களின் பிரதிநிதி எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ள பெருங்கோடீஸ்வரர் டிரம்ப் ஒருபக்கம், புட்டின், எர்டோகன், கிம்-ஜோங்-உன் போன்ற சர்வாதிகாரிகள்,  டேஷ் எனும் இஸ்லாமிய தீவிர வாதம், இனவெறி கட்சிகள் என வளர்ந்துவரும் சூழலில் மிதவாத அரசியல் கட்சிகள் மட்டுமே ஆரோக்கியமான அரசியல், அமைதியான சூழல், எதார்த்தத்திற்குப் பொருந்திவரும் நிர்வாகம் என்பதை த் தரமுடியும். எனவேதான் மரின் லெப்பனா, மக்ரோனா என்ற கேள்விக்கு எனது பதில், மக்ரோன்.

——————————————–

 

 

 

—————————————————–

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) : 3. பதினேழாம் நூற்றாண்டு

L_honnête homme

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin)  போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள்.  பதினைந்தாம் நூற்றாண்டு   இத்தாலியைப் போலவே  பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைப்புலகமும், அரசியலும் ஐரோப்பிய சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.  லிபெர்த்தினிஸம்(Libertinisme), ழான் செனிஸம் (Le Jansénisme), கிளாஸ்ஸிஸம் (Le Classicisme) ஆகிய மூன்று இயக்கங்களினாலும் இந்நூற்றாண்டு பெயர் பெற்றது. இது தவிர பிரெஞ்சு அரசியலில் பதின்மூன்றாம் லூயி, பதினான்காம் லூயி ; சமய குருக்களான கார்டினல் ரிஷ்லியெ, கார்டினல் மஸாரின் ஆகியோரின் தாக்கத்தையும் கொண்ட து. முதலாவது கார்டினல் ரிஷ்லியெ(Richelieu) என்பவர்தான் பிரெஞ்சு அகாதமியை (1634) ஏற்படுத்தியவர். முதல் அகராதி,  பிரெஞ்சு மொழிக்கென உருவானதும் இக்காலக் கட்டத்தில்தான்,ஆண்டு 1690, உருவாக்கியவர் அந்த்துவான் ஃயூர்த்தியெர் (Antoine Furtière) என்ற மொழியறிஞர்.

பதினேழாம் நூற்றாண்டும் பிரெஞ்சு அரசியலும் :

சுதந்திரம் பெற்றத் தொடக்கத்தில் இந்தியா எப்படி சிதறுண்டிருந்ததோ, அப்படியான நிலையில்தான் பிரான்சு நாடும் இருந்தது. இன்றிருக்கும் எல்லைப் பரப்பைக் கொண்ட நாடாக அன்று இல்லை. அதற்குப் பல காரணங்கள். அன்றைக்குங்கூட பிரான்சுநாட்டின் பூர்வீகமக்களென குறிப்பிட்ட இனத்தவரைச் சுட்டுவது கடினம். கிழக்கு ஐரோப்பிய குடிகள், ரொமானியர்கள், ஹன்ஸ் என்கிற நோர்டிக் இனத்தவர்  இப்படி பல இனத்தவர்களும் கலந்து உருவானவர்களே பிரெஞ்சு மக்கள். இவர்களுடன் இன்று கணிசமாக நேற்றைய காலனி மக்களும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். உண்மை இப்படியாக இருக்கையில் அதிபர் வேட்பாளராக இருக்கிற வலது சாரி பெண்மணி  வருங்காலத்தில் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற  பிரெஞ்சு மண்ணில் பிறந்தால் மட்டும்போதாது ஐரோப்பிய வம்சாவளியினராகவும் இருக்க வேண்டுமென்ற என்ற கருத்தை முப்ன்மொழிந்திருக்கிறார்.  வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றாலும் அசலான பிரெஞ்சு மக்களை அடையாளப்படுத்துவது எளிதானதல்ல.

பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு,  சமயப்போரினால் பாதித்த நாடு, இரண்டு லட்சத்திற்கும் குறைவான  மக்கள். போக்குவரத்து, தகவல் தொடர்புகளை அறிந்திராத வாழ்க்கை ; நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்கள் அதிகம். ஆகவே இவைகளெல்லாம் மனிதர் சிந்தனையில் எதிரொலிக்கவே  செய்தன. ஒரு நூற்றாண்டு சமயப்போர் தணிந்திருந்த போதிலும் புரொட்டஸ்டண்ட் மற்று கத்தோலிக்க மத த்தினரிடையே பெரும் பிளவை உண்டாக்கியிருந்தது. இத்தகைய சூழலில் பிரெஞ்சு மக்கள் புணர்வாழ்விற்கு ஏங்கினார்கள். அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பு குலைந்திருந்த நிலையில் சீரமைக்க வேண்டியிருந்தது. நான்காம் ஹாரி (1553-1616) என்ற பிரெஞ்சு மன்ன ன் சமயப்போரினால் மிகவும் பாதித்திருந்த புரொட்டஸ்டண்ட் மக்களை சமாதாப் படுத்தவேண்டி அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற வகையில் ஒரு பிரேரணையில் கையொப்பமிட்டான். அதற்கு நாந்த் பிரேரணை (l’Edit de Nantes) என்று பெயர். கத்தோலிக்க மத தீவிர வாதிகளாற் பாதிக்கபட்ட புரொட்டஸ்டண்ட்டுகள் பாதுகாப்பான உறைவிடங்களை அமைத்துக்கொள்ள்வோ, ஆயுதபல்த்தை அதிகரித்துக்கொள்ளவோ, சுதந்திரமாக தங்கள் சமயவழிபாட்டினைத் தொடர்வதற்கோ எவ்வித தடையுமில்லை என்று அதில் அரசு உறுதி அளித்திருந்தது. புரொட்டஸ்டண்ட் மக்களுக்கு மட்டுமன்றி பிற மக்களுக்கும் சுதந்திரமான சிந்தனைக்கு, இதொரு வகையில் வழி வகுத்த து எனலாம். இதன் காரணமாகவே கத்தோலிக்க தீரவாதிகள் நான்காம் ஹாரி மன்னனைக் கொலை செய்கிறார்கள். இவரது கொலைக்குப்பிறகு அவரது ஒன்பது வயது மகன் பதின்மூன்றாம் லூயி  பட்டத்திற்கு வருகிறான். இந்நிலையில் உண்மையான நிர்வாகப்பொறுப்பை அவர் தாயார் மரி தெ மெடிஸி, ஆலோசகர்கள் உதவியுடன் நடந்த்துகிறார். எனினும் நிர்வாகத்தில் தொடர்ந்து குழப்பங்கள், ஒரு கட்டத்தில் தாய்க்கும் மகனுக்குமே பகை ஏற்படுகிறது. நிர்வாகம் முழுமையாகத் தன் தாயின் கைக்குப் போனதை  விரும்பாத அரசன் தாய்க்கு அனுசரணையாக இருந்த கோன்சினி(le conte Concini) பிரபுவைக் கொல்வதோடு, நிர்வாகர்த்திலிருந்து தாயையும் ஒதுக்கிவைக்கிறான்.  அதன் பின்னர் உருவான அரசியல் சிக்கலைத் தீர்த்துவைத்ததில் கார்டினல் ரிஷ்லியெவிற்குப் பெரும்பங்குண்டு.  பதின்மூன்றாம் லூயி மன்னன் இறந்து பதினான்காம் லூயி பட்டத்திற்கு வந்த போது அவருக்கும் வயதென்னவோ ஐந்துக்கும் குறைவுதான். திரும்பவும் ஆட்சி நிர்வாகம் இறந்த மன்னனின்  மனைவியான ஆன் என்பவளிடம் போகிறது. ஆன் ஆதரவுபெற்ற ழூல் மஸாரன்(Jules Mazarin) அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது. நிர்வாகம் தள்ளாடுகிறது, மக்கள் வரிச்சுமையால் அல்ல்படுகின்றனர். ழூல் மசாரன் ஊழலுக்குப் பெயர்போனா ஆசாமி, இவரைப்பற்றிக் கூற சுவாரஸ்யமான விடயங்கள் நிறைய இருக்கின்றன. நாட்டுமக்களைப்போல்வே   பதினான்காம் லூயியும் சுதந்திரத்திற்கும்  முற்றுமுதலான அதிகாரத்திற்கும் விழைகிறான்.

நேர்மையான மனிதன் :

பதினேழாம் நூற்றாண்டு  மேல் தட்டுமக்களின், பெண்களின் அபிமானம் பெற்ற , கலை இலக்கியத்தின் மையப்பொருளாக இருந்த சொல் « நேர்மையான மனிதன் »  பதினான்காம் லூயி காலத்தில் அரசு நிர்வாகத்தில் பொறுப்பிலிருந்துகொண்டு ஏராளாமாக சம்பாதித்து,   மக்களின் வெறுப்பைக் கணிசமாகப் பெற்றிருந்த  கார்டினல் மஸாரன் கூட,  நேர்மையான மனிதன் என்ற சொல்லை மக்கள்  அதிகம் நேசிக்கக் காரணமாக இருக்கலாம். சமயப்போர் நேரிடையாகவும், மறை முகமாகவும் மக்களைப் பாதித்திருந்தது. ஆண்கள் சமயம், அரசியல் என்று ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்க, பெண்கள் படைப்பிலக்கியங்களில் ஆர்வம் செலுத்தினார்கள்.  நேர்மையான மனிதன் என்பவன் பெண்களின் அபிமானத்தைப் பெறவேண்டும் ; உழைப்பைக்காட்டிலும் பிறரை மகிழ்விக்கக் கூடியவனாக  இருப்பது ;  மரபுகளை, ஒழுங்குகளை, சமயத்தை துச்சமாக மதிப்பது ; நாத்திக சிந்தனை, நெறிமீறல் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சூழலில் தான் நொர்மாந்தி பகுதியைச் சேர்ந்த ஹர்க்கூர் (Harcourt) பிரபுவின் அவையைச் சேர்ந்த   நிக்கொலா ஃபொரெ (Nicolas Foret) என்பவர் « நேர்மையான மனிதன் அல்லது சபையை மகிழ்விக்கும் கலை » (L’honnête homme ou l’art de plaire à la cour) என்றொரு நூலை சூழலுக்கேற்பப் படைத்தார், பெண்கள் அபிமானத்திற்குரிய இலட்சிய மனிதனுக்கென சில  இலக்கணங்களையும் அதில் சிபாரிசு செய்தார். ஆக மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு நாடு நேர்மையான மனிதனுக்கென்று சில இலக்கணங்களை வகுத்திருந்தது : அவன் சகலகலாவல்லவன், ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்தவன். பிரபுக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் ,மேல்தட்டுமக்களுக்கு உரிய பண்புகளைத் தவறாமற் பெற்றவன். அவன் இருக்குமிடம், புழங்குமிடம் ஒளியூட்டப்பட்டது, பிரகாசிக்கும் தன்மையது. அவனுடைய நளினமான பாவங்களும் நேர்த்தியான உடையும், சுவைநயமிக்க பேச்சும், நுட்பமான செயல்களும்  பிறர் கவனத்தைப் பெறுபவை. ஆக மொத்த த்தில்  ஒரு கூட்டத்தில் அல்லது பலரும் கூடியிருக்கிற சபையில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விழைப்பவன். தன்னலத்திலும் பிறர் நலத்திலும்சேர்ந்தாற்போல அக்கறை செலுத்தும் மனிதன்.

(தொடரும்)

 

 

 

 

 

 

நிலா அழகாயிருக்கில்லே ?

(எனது நாவல்கள் அனைத்துமே சிறுகதைகளாக முதலில் வெளிவந்தவை

பார்த்திபேந்திரன் காதலி (ஆனந்த விகடன்) –நீலக்கடல்

நிலா அழகா இருக்கில்லே ? (நிலா இதழ்)   – மாத்தா ஹரி

புஸுபுஸுவென்று ஒரு நாய்க்குட்டி  (திண்ணை இதழ்) –  காஃப்காவின் நாய்க்குட்டி)

 

அருகிலிருந்த தேவாலயத்தின் மணி இரவின் நிசப்த த்தைக் குலைத்தது. விழித்துக்கொண்டேன். ஓசையை எண்ணத் தவறியிருப்பினும் பன்னிரண்டு முறை அடித்திருக்கவேண்டும். இந்த எண்ணிக்கையில் தவறு இருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல. நான் விழித்துக்கொண்டதும், வியர்வையில் நனைந்திருந்த தும் இங்கே முக்கியம், நிஜம்.

 

இந்த அவஸ்தை எனக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே இருக்கிறது. சொல்லிவைத்தாற்போல், நள்ளிரவில் சர்ச்சின் மணியோசையோடு புதைந்து பூச்சாண்டி காட்டுகிற அவஸ்தை. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாய்ப் போராடிக் களைத்து, இறுதியில் சித்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிற மரண அவஸ்தை.

 

எலிஸா என்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பிரெஞ்சு நண்பி. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அவளுக்கு நான்படும் அவஸ்தையின் பரிமாணம் தெரியாது இரண்டு கைகளையும் பிணைத்து, மடக்கியிருக்கும் கால்களுக்கிடையில் துருத்திக்கொண்டு கம்பளிப்போர்வைக்குள் அடங்கிக் கிடந்தாள்.

போர்வையை ஒதுக்கிவிட்டு, இரவ உடையில் உடலை மறைத்து, பாதங்களில் ஸ்லிப்பரைச் சூடி சபதமின்றி எலிஸாவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்ற அதீத கவனத்துடன், கதவினைப் பின்புறம் தள்ளிச் சாத்திவிட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன்.

காத்திருக்கும் என் கம்ப்யூட்டரை கண்டதும் பெருமூச்சு. எதிரிலிருந்த நாற்காலியில் என்னை இருத்திக்கொண்டு, மின்சாரத்தை இட்டு உயிர்ப்பித்தேன். மானிட்டர் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டேன். தமிழ் சாஃப்ட்வேரை உயிர்ப்பிக்கும்வரை பொறுமையில்லை. விரல்கள் கீ போர்டைச் சீண்ட ஆரம்பித்து தடதட வென்றன.

கற்பனையும் நிஜமும் வார்த்தைகளாக உயிர்பெற, விரல்கள் அவற்றுக்கு வடிவம்கொடுக்கப் பரபரபரத்தன.  எழுத்தாளன் மனத்துடன் கண்தை மட்டுமின்றி  காணாததையும் இறக்கிவைக்க ஆரம்பித்தேன். இல்லையெனில் எந்த நேரமும் தலைவெடித்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பியப் பெண்களைபோலவே எலிஸாவும் புகைபிடிப்பவள். குறிப்பாகஅவள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் புகை வருவதைக்கண்டு அருவருப்பதுண்டு. ஆனால் அதனை அவளிடம் சொல்ல எனக்கு வழக்கம்போலத் தயக்கம், காரணம்  நானும் புகைபிடிப்பவன், தவிர அவள் பெண்கள் விடுதலைப்பற்றி அதிக விவாதிக்கும் பெண்.

எலிஸாவிற்கு எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டும், செக்ஸ் உட்பட. விமலாவிற்கு நேர் எதிர். விமலாவிற்குப் பிடிக்காத தெல்லாம் எலிஸாவிற்குப் பிடிக்கும். எனக்கு எலிஸாவைப் பிடித்து, விமலாவைப்பிடிக்காமற் போனது இப்படித்தான்.

விமலா…

அம்மி மிதித்து அருந்ததிக் காட்டி, ‘மாங்கல்யம் தந்து நானே’விற்கு ப் பிறகு ‘ராமனிருக்கும் இடம் அய்யோத்தி என’  பிரான்சு நாட்டிற்கு வந்த என்னுடைய சீதா பிராட்டி, தாலிகட்டிய பந்தம். ‘பின் தூங்கி முன் எழுந்து ‘ கேட்டிருந்தால் எலிஸா வீடுவரைக் கூடையில் என்னைச் சுமந்து செல்ல தயாரகவிருந்த இருபத்து நாலு காரட் பத்தினிப்பெண்.

வழக்கம்போல தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவது என்றுதான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். அப்பாவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி, அம்மாவை மூக்கு சிந்தவைக்க ‘எலிஸா’ வைத் தற்காலிகமாக மறக்க நேரிட்டது. விமலாவிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும், அவள் தகப்பனிடம் அப்பாவின் எதிர்பார்ப்புமிருக்க, என்னுடைய எதிர்பார்ப்பு பற்றிக் கவலைப் படாமல் அவசரத்தில் போட்ட மூன்று முடிச்சு. கோழையா ஒரு புழுவைப்போல பெற்றோருக்கு வளைந்து, அவளைக் கைப்பற்றி பிரான்சுக்கு வந்த பிறகுதான் எனக்கும் விமலாவிற்குமுள்ள இடைவெளி இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் உள்ள தூரமென புரிந்தது.

எலிஸா, எங்கள் இருவரையும் ஒட்டவைக்க முயற்சி எடுத்தது என்னவோ உண்மை. மஞ்சள் குங்குமத்தைவிட லிப்ஸ்டிக் பர்ஃப்யூம்களில் எனக்கிருந்த கூடுதல் இச்சையில் விமலா வேண்டாதவளானாள். பிறகு ? பிறகென்ன ஒரு நாள் போயே போய்விட்டாள். மணெண்னெய் இன்றி, ஸ்டவ் விபத்தின்றி, அவளை முடித்துவிட்டேன். அந்நியர் விவகாரங்கள் என்றால் அலட்சியத்தோடு கையாளும் போலிஸாரின் விசாரணை, நீதிமன்றம், தீர்ப்பு எல்லாமே நான் நினைத்தபடி அமைந்தது. எலிஸா கூட ஆரம்பத்தில் சந்தேகப் பட்டு இப்போது நான் அப்பாவி என்கிறாள்.

இரண்டு மாதத்திற்கு முன்புவரை நிமதியாகத்தானிருந்தேன். எப்போது, எங்கே என்பதில் குழப்பமிருக்கிறது. ஆனால் விமலாவால் துரத்தப்படுகிறேன். ஓட முடியாமல் களைத்திருக்கிறேன். இந்த பயம் அங்கே இங்கேயென்று படுக்கைவரை வந்துவிட்டது.

அள்தான் எழுந்துவிட்டிருந்தாள். இரண்டு நாட்களாக க் காய்ச்சல் வேறு,  தொடர்ந்து இருமுவது கேட்ட து. சில விநாடிகளின் மௌன ஓட்டத்திற்குப் பிறகு, அந்தக் காலடி ஓசை. எப்போதும் பதிய மறுக்கும் பாதங்கள். காற்றுக்குக் கூட துன்பம் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அக்கறைகொண்ட நடை. அது ஓசையல்ல, முணுமுணுப்பு. விமலாவைப்போலவே, என் வெறுப்புக்கு ஆளாகும் காலடிகள். திடீரென்று நடக்கும் சப்தம் அறுபட்டது.  சிலநொடிகள் அமைதிக்குப் பிறகு கதவு திறக்கிறது, பருத்தியியினால் ஆன இரவாடையில் விமலா.

« விமலா.. ! » அதிர்ச்சியில் மேல் அண்னத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. அவள் மெல்ல நெருங்கினாள்.

« என்ன பரத் மறுபடியும் பிரமையா ? நான் விமலா இல்லை. எலிஸா. நாளைக்கு முதல்வேலையா சைக்கியாஸ்ட்ரிட்டைப் போய்ப் பார்க்கறீங்க. »

என் தோளில் சாய்ந்து, தனது மெல்லிய கரங்களை என் கழுத்தில் கொண்டுபோய்வருடி, மெள்ளக் குனிந்து தன் அதரங்களை என் கழுத்தில்  ஒற்றியெடுத்தாள். நான் கற்பனையில் விமலாவை நிறுத்திக் கலவரப்பட்டேன். .

« என்ன இப்படி வேர்க்குது ? » என்றவள் தன் தலையை அவளது மார்பில் இறக்கிக்கொண்டாள். நான் எழுதியிருந்ததைப் படிக்க ஆரம்பித்தாள். »

எங்களிடையே நிசப்தம் ஆக்ரமித்துக்கொண்டிருந்த து. மேசையிலிருந்த அலாரம் தேவையில்லாமல் அலற, அவள் என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.

« எனக்குத் தண்ணீர் வேணும். தாகமாயிருக்கு » என்றவள், சமயலறைக்குச் சென்றாள். அடுத்த சில விநாடிகளில், தண்ணீர் பாட்டிலைத் திறப்பதும் பின்னர் குடிக்கின்ற ஓசையும் தெளிவாக க் கேட்டது.

« பரத் சிகரட் தீர்ந்துபோச்சு வாங்கி வாயேன். »

«  இந்த நேரத்திலா ? » என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தாலும், என மன அழுத்தத்திற்கும் உடற்முழுக்கத்திற்கும் எனக்கும் சிகரெட்டும்  ‘சில்’ என்ற வெளிக்காற்றும்தேவைப்பட்டன. லெதர் ஜாக்கெட்டை அணிந்து தலைமுடியைக் கையால் ஒதுக்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.

வீதி வெறிச்சோடியிருந்தது. சாலயோர மரங்க்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு  நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று புத்தம் புதுசாக.–  இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை.

மீண்டும் அந்த ஓசை, பின் தொடர்வதுபோன்ற காலடிஓசை. எனக்குப் பழக்கப்பட்ட என்னைத் துரத்தும், நான் அறிந்த விமலாவின் காலடிகள். ஏதோ ஒரு திட்டத்தோடு நிராயுதபாணியாக இருக்கும் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து நெருங்கும் காலடிகள். குளிர்ந்த காற்று, அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் இறங்கி முதுதுத் தண்டில் இறங்க உடலொருமுறை சிலிர்ந்து அடங்கியது.

« நிலா அழகாயிருக்கில்லே ? » என் தோளில்  குளிர் காற்றோடு கலந்த வார்த்தைகளின் ஸ்பரிஸம். திரும்பிப் பார்க்கிறேன்.

பனியில் நனைந்த ஒரு பெண்ணுருவம். முகம், விமலாவினுடையது தான் சந்தேகமில்லை.

« விமலா நீயா ? »

«நானேதான் பரத் ! இங்க பாருங்க நீங்க கட்டின தாலியில் மஞ்சளின் ஈரங்கூட இன்னும் காயலை. என்னோட உதட்டைப்பாருங்க, உங்களுக்குப் பிடித்த  எலிஸாவின் உதடுகள்போல இருக்க  பச்சை இரத்தத்தில் தோய்ந்துவச்சிருக்கேன்..  பரத் கிட்ட வாங்க.. »

« இல்லை விமலா, என்னை விட்டுடு. ஏதோ நடந்துபோச்சு »

«  அதை த்தான் நீங்க சரியா புரிஞ்சுக்கணும். வாவிலும் சாவிலும் என்னைப்போலப் பெண்ணுக்கு  கணவன் துணையில்லாம இல்லாம எப்படி ? மாட்டேன்னு சொல்லிடாதீங்க. »

அவள் என்னை நெருங்கியிருந்தாள். அபோது தான் அதனைக் கவனித்தேன். அதிர்ச்சியில் உறைந்து நிற்க,  நிலவொளியில் பளபளவென்று  மின்னிய அந்தக் கத்தியை என் வயிற்றில் மெள்ளச் இறக்கினாள். நான் துவண்டு சரியத் தொடங்கினேன்.

« என்ன இன்னுமா எழுதற ? நான் சிகரெட் கேட்டேனே என்ன ஆச்சு ? »

« எலிஸாவின் குரல் கேட்டு நான் எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டுத் திருப்பினேன்.

« மன்னிச்சுக்க டியர்.. கதையிருந்த கவனத்துல உன்னை மறந்துட்டேன் »

அவளுக்குச் சிகரெட் இல்லாம எதுவும் நடக்காது.  இந்த நேரத்தில் கடைகள் ஏது ? ஏதாவதொரு தானியங்கி எந்திரத்த்தை த் தேடியாகனும் அல்லது ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகனும். லெதர் ஜாக்கெட்டை  அவசரம் அவசரமாகப் போட்டுக்கொண்டு வெளிக்கதவைக் கவனமாகச் சாத்திவிட்டு இரண்டு இரண்டு படிகளாகத் தாவி இறங்கி  வீதியில் கால்வைத்தேன்.

வீதி வெறிச்சோடியிருந்த து. சாலயோர மரங்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று. இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை….

(மாத்தா ஹரி நாவலின் மூலக் கதை. இச்சிறுகதை  நிலா இதழில் 2002ல் வெளியாயிற்று. )

 

மொழிவது சுகம் ஏப்ரல் 24 2017

 

 

பிரான்சு நாடும் அதிபர்  தேர்தலும்

Election 2017

பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முதற் சுற்று முடிவு தெரிந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக  தேர்வு செய்யப்பட்டு,  மாறி மாறி ஆட்சிசெய்த  கட்சிகளின் வேட்பாளர்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.  இரண்டாவது சுற்றில் தேர்வாகி இருப்பவர்கள் ஒருவர் எம்மானுவல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென்.  இம்முடிவு மற்றொரு உண்மையையும் தெரிவித்துள்ளது, தற்போதைக்கு இட து சாரி வேட்பாளர்கள் பிரெஞ்சு அரசியலுக்கு வேண்டாம் என்பது தான் அது,  பிரெஞ்சு வாக்காளர்கள் அவர்களைக் கூடாதென நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

முதல் சுற்றில் பதினோரு வேட்பாளர்கள்.  அவர்களில் முதல் ஐந்து இட த்தைப் பெற்ற முக்கியமானவர்கள் 1. எம்மானுவெல் மக்ரோன்2.  மரின் லெப்பென் 3. ஃபிரான்சுவா ஃபிய்யோன் 4. ழான் லுயிக் மெலான்ஷோன் 5. பெனுவாஅமோன்

பிரான்சுவா பிய்யோன்(François Fillon)

கடந்த காலத்தில் RPR , இன்றையUMP மொத்தத்தில்  தெகோல் கட்சியென (Charles de Gaulle) புதுச்சேரி முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் அபிமானத்துடன்அழைக்கும் கட்சியின் வேட்பாளர். உட்கட்சி தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர்களான முன்னாள் அதிபர் நிக்கோலா சர்க்கோசியையும், கருத்துக் கணிப்பில் அதிபராக வரக்கூடும் என நம்ப ப்பட்ட மிதவாத வலதுசாரியும், முன்னாள் பிரதமருமான  அலென் ழுப்பேயையும் வென்று, கட்சியின் ஆஸ்தான வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். இவர் தேர்வுக்கு தீவிர கிறித்துவ மதவாதிகள் பின்புலத்தில் இருந்த தாக நம்பப்பட்டது. உட்கட்சி தேர்தலில் வென்றபின்பு ஃபிரான்சுவா  ஃபிய்யோன் அதிபராவது உறுதி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன் பின்பு புலனாய்வு பத்திரிகைகள்  அவர் வீட்டுக் குப்பையைக் கிளறியதில்   எது வெளிவருமோ அதுவெளியில் வந்தது.

Affaire Penelope Fillon’   அல்லது பெனெலோப் ஊழல் :

திருமதி பெனெலோப், திரு ஃபிய்யோன் மனைவி, வழக்கறிஞர். குற்றச்சாட்டின்படி 1998 -2007 அடுத்து 2012 இந்த ஆண்டுகளில் வேட்பாளர் ஃபிய்யோன் தமது மனைவியை மட்டுமல்ல தமது பிள்ளைகளையும் தமது அலுவலர்களாக நியமித்து மனைவிக்கு 813440 யூரோவை ஊதியமா க க் கொடுத்தார் என்பது முதற் குற்றசாட்டு,  அடுத்து ‘Revue des deux monde’  பிரதியின் ஆலோசகர் என்ற வகையில் 100 000 என்ற தொகையை பெனெலோப் பெற்றார் என்பது  இரண்டாவது குற்றசாட்டு, இத்தம்பதிகளின் பிள்ளைகளும் 2005-2007ல் அவ்வாறான அலுவல்களுக்கு 84000 யூரோக்களை ஊதியமாக பெற்றனர் என்ற குற்றசாட்டுமுண்டு.  மேற்கண்டவை முதன்மைக் குற்றசாட்டுகள். இவற்றைத் தவிர வேறு சில குற்றச்சாட்டுகளும் உள்ளன.பாரளுமன்ற உறுப்பினர் தமது அலுவல்களைக் கவனிக்க உறவினர்களை அரசு செலவில் நியமித்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இப்பிரச்சினையில் உண்மையில் அவர்கள் அப்பணியைச் செய்தார்களா ? என்பதும் ஊதியத் தொகையின் அளவும் பிரசினைக்கு வித்திட்டுள்ளன. இது தவிர ஃபிய்யோன் பரிசாகப்பெற்ற பொருட்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடகட்சி அதிபர்வேட்பாளர் தேர்வின்போது தம்மை அப்பழுக்கற்ற வேட்பாளர் எனகூறிகொண்டவர், சக வேட்பாளரான சர்க்கோசியை (அவர் மீதும் வழக்கு, விசாரணை அளவில் உள்ளது) கடுமையாக விமர்சித்த மனிதர்,  பிரச்சினை வெளிவந்த பிறகு சட்டப்படி அதில் எந்த த் தவறுமில்லை என்றார். அவரது கட்சியிலேயே ஒரு சாரார் அவரை விலக்கிக்கொண்டு மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்றார்கள். ஃபிய்யோன்  விலகமாட்டேன் என அடம் பிடித்தார். அவருக்கு எதிராக இருப்பவர்களைச் சமாதானப்படுத்தினார், கட்சியின் தீவிர அபிமானிகளின்  வாக்கும், தீவிர கிறித்துவ மதவாதிகளின் வாக்கும், ஆளும் கட்சிமீதான கோபமும் தம்மைக் காப்பாற்றிவிடுமென நம்பினார். ஆனால் முதல் சுற்று முடிவு அவரை ஏமாற்றிவிட்டது. நாட்டின் முதன்மையான கட்சியின் வேட்பாளர்  மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

பெனுவா அமோன்(Benoit Hamon)

தற்போதைய ஆளுங்கட்சியான மிதவாத இடதுசாரிகள் கட்சியின் சார்பில் பெனுவா ஹமோன் முதல் சுற்றுக்குத் தேர்வானார். கடந்த அதிபர் தேர்தலில் இருந்தே சோஷலிஸ்டுகளின் மூத்த தலைவர்களிடையே பிளவு இருந்த து. 2007லும், 2012லும் தீவிர சோஷலிஸ்டு அபிமானிகள் உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார்கள்.  உட்கட்சி தேர்தல் முடிந்த தும், வெற்றிபெற்ற தங்கட் கட்சி எதிரணி வேட்பாளரை, கட்சியின் நலனை முன்னிட்டு அதிபர் தேர்வில் ஆதரிப்பது  என்கிற சடங்கு தொடரும். கடந்த 2012 அதிபர் தேர்தலில் ஹொலாந்து எனும் மிதவாத சோஷலிஸ்டு வென்றார். உட்கட்சி அதிபர் வேட்பாளர்  தேர்தலில் அவருக்கு எதிராகப்போட்டியிட்ட மர்த்தின் ஒப்ரி போன்ற  தீவிர சோஷலிஸ்டை வென்று பொது வேட்பாளராக களத்தில் இறங்கினார். வழக்கம்போல சோஷலிஸ்டுகள் தங்கள் வேட்பாளரை ஒற்றுமையாக ஆதரித்தனர். ஹொலாந்து அதிபரானார். தமது கட்சியின் எதிரணியினரை அவர் ஆசிபெற்ற அமைச்சரவையில் அமைச்சர்களாக வைத்து பிரச்சினையை முடித்துக்கொள்ள நினைத்தார்.  அமைரவையில் பதவிக்காலம் நெருங்க நெருங்க அதிபர் ஹொலாந்தும், அவருடைய  அமைச்சரவையும் மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருந்தது  மூழ்கும் கப்பல் எனத் தெரிந்து, ஹொலாந்து ஒரு வலதுசாரிபோல நடந்துகொள்கிறார் என்ற குற்றசாட்டினை ஒரு சாக்காகவைத்து, அதிபரின் எதிரணியினர்  அமைசரவையிலிருந்து, (பழைய பகையும் காரணம்)  ஒவ்வொருவராக விலகிக் கொண்டனர், அவர்களில் ஒருவர்தான் பெனுவா அமொன்.

உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் ஆதரவினால், அதிபர்ஹொலாந்தின் அமைச்சரவை பிரதமராக இருந்த மனுவல் வால்ஸ் என்பவரைத் தோற்கடித்து வேட்பாளராக பெனுவா அமோனால் முடிந்த து. எனினும்  முதற்சுற்றுத் தேர்வில் ஹொலாந்து ஆதரவாளர்கள் இவரை ஆதரிக்காததும்,  முன்னாள் சோஷலிஸ்டும்,  கம்யூனிஸ்டுகள் ஆதரவுபெற்ற தீவிர இடதுசாரி மெலான்ஷோன் இட து சாரி  வாக்குகளைப் பங்கிட்டுக் கொண்ட தும் இவருடைய மிக மோசமான தோல்விக்குக் காரணம். ஆளுங்கட்சியின் வேட்பாளர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறாதது மட்டுமல்ல நான்காம் இட த்திற்குத் தள்ளப்பட்ட து மிகப்பெரிய கொடுமை.

எம்மானுவெல் மக்ரோன்(Emmanuel Macron)

39 வயது இளைஞர். அதிக வாக்குகள் பெற்று முதற் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள வேட்பாளர். 2006 -2009 வரை  ஆளும் சோஷலிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். நிர்வாகத்துறையில் உயர் கல்வி முடித்தவர். திடீரென்று 2012ல் அதிபர் ஹொலாந்து தமதுஅலுவலக முதன்மைசெயலராக நியமித்தார். அதன் பின்னர் அவரது செயல் திறனின் அடிப்படையில் நாட்டின் முக்கியமான நிதி அமைச்சர் பதவியை 2014ல் வழங்கினார்.  சக அமைச்சர்களுக்கு இவர் மீது பொறாமையுங்கூட. தமது செல்வாக்கு சரிந்திருக்கும் உண்மையை உணர்ந்த ஹொலாந்து மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவிக்க நேரம் பார்த்து இவரும் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலுக்குக் கட்சிகள் சாராத வேட்பாளராகத்  தம்மை அறிவித்து நாடெங்கும் ஆதரவு திரட்டினார்.  வலது சாரிகள், இடது சாரிகள், கல்விமான்கள், வல்லுனர்கள், கலைஞர்கள் ஆதரவுகள் கிடைத்தன.  ஹொலாந்து ஆதரவு பெற்ற பிரதமர் வால்ஸ் உட்கட்சி தேர்தலில் தமக்குரிய வாய்ப்பின பெனுவா அமோனிடம் பறிகொடுக்க, இவரோ கட்சி சார்பின்றி போட்டியிட்டு பிரான்சு நாட்டின் அடுத்த அதிபராக வரகூடிய வாய்ப்புள்ள முதல் வேட்பாளர்.

மரின் லெப்பென் (Marine Le pen)

தீவிர வலது சாரி. இனவாதி. வாரிசு அரசியலின் பிரெஞ்சு உதாரணம். அப்பா jean Marie Lepen  பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது அபராதம் செலுத்தும் நபர். மரின் லெப்பென் தந்தைக்குத் தப்பாத வாரிசு. டொனால் ட்ரம்ப்பின் பெண்வடிவம்.  பாரம்பர்ய வலதுசாரிகளின் வீழ்ச்சி, பாமர மக்களின் செல்வாக்கு, தேசியவாதம், இனவாதம், பயங்கரவா த த்திற்கு எதிரான நட வடிக்கைகள் என்று அறிவிக்கும் அதிரடியான கொள்கைகள் இவரை முன்னிறுத்துகின்றன. கருத்துக் கணிப்பின்படி இரண்டாவது சுற்று தகுதி த் தேர்வில்  முதலிடம் பெறுவார் என நம்பப் பட்ட து.  மக்ரோன் இவரைப் பின்னுக்குத தள்ளி முதலிட த்தில் இருக்கிறார். 2002 அதிபர் தேர்தலில் இவருடைய தந்தை ழான் மரி லெப்பென் இவரைப்போலவே இரண்டாம் இட த்தைப் பெற்றார்.  அவருக்கு எதிராக நின்றவர் இன்றைய ஃபிய்யோன் கட்சியைச்சேர்ந்த  சிராக். இனவாத கட்சி பிரான்சு அதிபராக வந்துவிடக்கூடா தென கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு சிராக்கிற்கு ஆதரவளிக்க ழான் மரி லெப்பென் தோற்றார். தற்போதும் இடதுசாரிகளைக் காட்டிலும் வலது சாரிகள் எம்மானுவெல் மக்ரோனுக்கு ஆதரவை பகிரங்கமாக த் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அபிமானிகள் எந்த அளவிற்கு மரின் லெப்பெனை எதிர்த்து வாக்களிப்பார்களெனத் தெரியவில்லை.  மரின் லெப்பென் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது தான் பெரும்பான்மையோர் ஆசை. பிரான்சு நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது. இன்னொரு  ட்ரம்ப் உருவாகிடக் கூடாது என்பதுதான் எல்லோருடைய கனவும்.

—————————————————————————–

மொழிவது சுகம் ஏப்ரல் 18 2017

விலைபோகும் மானம் : சென்னை முதல் பாரீஸ்வரை

ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படுபவைகளை இனி பணநாயக நாடுகள் என்று அழப்பதுதான் முறை. இன்றைக்குப் பணம்தான் வேட்பாளரைத் தீர்மானிக்கிறது, வாக்குகளைத் தீர்மானிக்கிறது, வெற்றியைத் தீர்மானிக்கிறது முடிவில் ஆட்சியையும் ஆள்பவரையும் தீர்மானிக்கிறது. மக்கள் வெல்வதில்லை, பணம்தான் வெல்கிறது. எதையும் பணம் தீர்மானிப்பதுபோல ஜனநாயகத்தையும் பணமே தீர்மானிக்கிறது. ஆர்கே நாகர் இடைத்தேர்தல் ஓர் உதாரணம். பிறநாடுகளில் பணம் இலைமறை காயாக அல்லது, பிறருக்குத் தெரியவந்தால் தப்பு, என்ற நிலைபாட்டுடன் நாகரீகமாக வேடமிட்டு  மனிதர்களைக் கவர்கிறதெனில்,  நம்மிடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தாலும் பரவாயில்லை என்பதுபோல, சாலை நடுவே,  ஊரறிய, நாடறிய   எதைக்குறித்தும், எவர் குறித்தும்  கவலைப்படாமல் பகிரங்கமாகக் குத்தாட்டம் போடுகிறது. அண்மைக்காலத் தமிழகச் சம்பவங்கள் தெளிவானச் சாட்சியங்கள்.

மானம் எனும் உணர்வு எல்லா மொழியிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் அவரவர் சமயம், மரபு, பண்பாடு,  பழக்கவழக்கங்கள், சமூகப்படிநிலைகள், கல்வி, பணம், வயது சார்ந்து இருக்கவே செய்கிறது.  ‘அப்பாவிகளைக் கொல்வது’ வெட்க கேடானது எனப் பயங்கரவாதிகளை இடித்துரைக்கும் அரசுகள், ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொல்லும் வெட்கக் கேடான வரலாற்றைத் தொடர்ந்து வாசிக்கிறோம்.  « பிச்சை எடுக்க வெட்கமாயில்லை, உழைத்து சாப்பிட என்ன கேடு ? » எனக்கேட்பவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்ததும், « கையெழுத்து  சும்மாவராது, வீட்டில் போய் அம்மாவை பாரு » என்கிறான்.

கூச்சம், வெட்கம், மானம், தலை குனிவு, பழிச்சொல், அவமானம் அனைத்துமே பரிமான அளவில் வேறுபடினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர் வாழ்க்கையில்  நேற்றைய பொருளில்தான் இன்றும் இச்சொற்கள் பொருள்கொள்ளப்படுகின்றவனவா ? என்பதுதான் இன்றைக்கு நம்முன்னே உள்ள கேள்வி.

தமிழ் இலக்கியமும் மானமும் :

« பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின »தாக வாழ்க்கை இருக்கவேண்டும் என்கிற அறத்தை இல்லறவாழ்க்கைக்கும் வற்புறுத்தும் வள்ளுவன், பொருட்பாலில் பிற்சேர்க்கையாக   « மானம்  » என்ற அத்தியாயத்தை எதற்காக இணைக்கவேண்டும் ? அறங்களை பகுக்க அறிந்தவனுக்கு, நியதிகளையும் வாழ்க்கைக் கூறுகளையும் இனம் பிரித்து கையாளத்தெரிந்த வள்ளுவனுக்கு, இனி வருங்காலத்தில் மானம் பொருளோடு பிணைக்கபட்டதென்கிற தீர்க்க தரிசனமும் தெள்ளத் தெளிவாக இருந்துள்ளது.   காரணம் எதுவாயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே « மானம் » என்ற பண்பின் அவசியம் கருதி அதற்கொரு அத்தியாயத்தையும் பத்து குறளையும் ஒதுக்கினான், வள்ளுவனின் உயர்மக்கள் « இளிவரின் வாழாத மானம் உடையார் ».

தமக்கு ஓர் இழிவு வந்தபின் வாழக்கூடாது எனத் தீர்மானித்து உயிரை விடுதல் என்ற பண்பு உலகமெங்கும் இருக்கின்றது. இன்றும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு அதுவே முக்கிய காரணம்.  புறநானூற்றில் :  «சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர்கூற, மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென் யான் » என ஒரு தாய்  சூளுரைப்பது, பழிக்கு அஞ்சியே.  சிலப்பதிகார கண்ணகிக்கு கணவன் கொலையுண்டதைக் காட்டிலும் அவன் கள்வனென பழியுற்றது அவமானம். « காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’- என வினவுகிறாள் அவள். முதலாம் நெடுஞ்செழியன் இன்றிருந்தால் ஐந்து லட்சமோ, பத்துலட்சமோ கண்ணகிக்குக் கொடுத்து சமாதானம் செய்திருப்பான். பிழைக்கத்தெரியாத  நெடுஞ்செழியினும் அவன் துணைவியும் வழக்கம்போல பிழைக்கு அஞ்சி  உயிரை விடுகிறார்கள்.  மகாபாரதத்தில் கர்ணன் தேர்ப்பாகனால் எடுத்து வளர்க்கப்பட் டது அவமானமல்ல, பலர் அறிய அந்த உண்மைச் சொல்லப்படுவது அவமானம். துரியோதனன் சபைதன்னில் விழுந்தது மானப்பிரச்சினை அல்ல, ஆனால் திரௌபதி  அவனைப்பார்த்து சிரித்தது,  வெட்க க்கேடானது.  « அந்த ஏந்திழையாளும் எனைத் சிரித்தாளிதை எண்ணுவாய் » என்று வெப்பமான வார்த்தைகளில் அவன் பட்ட அவமானத்தை வெளிப்படுத்துகிறான். தொடர்ந்து பாஞ்சாலியை சபைநடுவே   நிறுத்தி நிர்வாணப்படுத்த முயன்றதும், அதன் உச்சமாக   பாரதப்போர் நடந்தேறியதும் காவிய உண்மை. மானத்தின் இழப்பிற்கு தற்கொலைதான் முடிவு என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்ட ஒரு சமூக அறம். இன்று அம்மரபு, சமூகத்தைச் சார்ந்திராமல், சமூகத்தின் பழிக்கு அஞ்சாமல்  தனிமனிதன் தனது நெறி சார்ந்து மனத் திட்பம் சார்ந்து  ஒழுகும்  அறமாக பரிணாமம் பெற்றுள்ளது. ந்நிலையில் அவமானம் என்பதென்ன ? எதை அவமானமாக எடுத்துக்கொள்வது, அவமானமாக ஒன்றைக் கருதும்  மனநிலை அனைவருக்கும் பொதுவானதாக எப்படி இல்லாமற் போனது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேவை.  அவமானத்திற்குரிய செயலை செய்துவிட்டேன் அல்லது என்னைச் சேர்ந்தோர் எனக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார்கள்  என்றொருவன் எண்ணி வருந்துவது அவமானம் தரும் அனுபவம்.  என்றாலும் இந்த அவமானம் படிப்படியாக தனது பொருளை இழந்து வருவது கண்கூடு.

சங்க காலத்தில் அறம் அல்லாதவற்றைத் தவறுதலாகச்  செய்து, பின்னர் செய்தவனே அக்குற்றத்தை அவமானாக க் கருதும்போக்கு இருந்தது பின்னர் அது

ஓர் ஆணோ பெண்ணோ விரும்பியோ விரும்பாமலோ தனது நலனை முன்னிட்டோ, தன்னைச் சார்ந்தோர் நலன் கருதியோ தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில், பெரும்பாலோர் (சட்டங்களோ, சமயமோ, நீதியோ என்ன சொல்கிறதென்பது இங்கு முக்கியமல்ல)  நம்பும் அறத்திற்கு மாறாக ஒரு காரியத்தைச் செய்தாலுங்கூட அந்த உண்மையை சமூகத்தின் பெரும்பாலோர் அறியாதவரை அவமானமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. «  ஏன் இப்படி கத்திப் பேசறீங்க, அக்கம்பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க ? »,« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று நந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் (அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்)» என்பதெல்லாம் பிறருக்குத் தெரியாதவரை அவமானமில்லை என்ற விதியின் பாற்பட்டதுதான். எனவே பிறர் என்ற பெரும்பான்மையினருக்குத் தெரியாமல், புகைபிடிக்கலாம்,  மது அருந்தலாம், கள்ள உறவு வைத்திருக்கலாம் தவறில்லை ஆனால் அந்த பிறர் அறிய வந்தால் தவறு, அவமானம், என்றொரு சமூக அறத்தை இடையில்  கடைபிடித்தோம்.

இன்றைக்கு மானப் பிரச்சினையின் எடைஎவ்வளவு ?   

பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தலுக்கு நிற்கும் வலதுசாரிவேட்பாளர்கள் இருவர் மீது பொது நிதியை தன்னலத்துடன் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் வெட்கமின்றி அவர்கள், «  குற்றம் இழைக்காதவர்களென நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களைக் காட்டிலும், குற்றம் சாட்டப்பட்ட நாங்கள் திறமைசாலிகள் » என்கிறார்கள், அதாவது அவர்கள் தகாச் செயல் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கிற தீவிர கிறித்துவ மதவாதிகளுக்கும் அவமானத்திற்குரியதல்ல. தமிழ் நாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வரையும் அவரது தோழியையும், சீடர்களையும் வெட்கமின்றி கொண்டாடும் கூட்டத்தைபார்க்கிறோம்.  ஒரு  வாக்கின் சந்தை மதிப்பை நாலாயிரம் ரூபாய்க்கு உயர்த்தி இருப்பது கின்னஸ் சாதனை. நீதியை விலைக்கு  வாங்கியவர்கள்,  ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து, இன்று எதையோ கடித்து தமிழர்களை அவமானத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தமிழர்களின் இச்சாதனை இந்தியாவெங்கும் பரவும், இதற்கும் கூடுதலான விலைகொடுத்து இச்சாதனையை முறியடிப்பவருக்குத்தான் இனி ஆட்சி என்ற நிலை வரலாம். ஒரு வாக்கிற்கு நாலாயிரம் என்பது அடிமை வியாபாரம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  கொத்தடிமைகளாக இருக்க வாக்காளர்களுக்குத் தரும் விலை.   நவீன யுகத்தில் தகாச்செயல்கள் அறத்தின் பாற்பட்டதல்ல, சட்டம் மற்றும் நீதியின் பாற்பட்ட து. இங்கே சாட்சிகளும் தடயங்களும் மட்டுமே ஆதாரங்கள். நாலாயிரம் ரூபாயைக் கொடுக்கின்ற ஓரிருவர் எதிர் தரப்பில் அந்த நாலாயிரம் ரூபாயை கைநீட்டி பெறும் பெரும்பான்மையோர், இதில் இரு தரப்பினருமே தகாத செயலின் கூட்டுக் களவாணிகள் என்கிறபோது அவமானம் எங்கிருந்து வரும் ?

. « மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் » இன்று நம்மில் எவருமில்லை. தலைகுனிவு  என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு இன்றைக்குஒரு ‘தகுதி’. நேற்றுவரை அவமானம் ஓர் இழிவான அனுபவம்; சமூகம் என்ற பெரும்பான்மையினர் நம்பும் அறத்திற்கு மாறாக தனிமனிதன் தகாச் செயலில் இறங்கிச் சம்பாதித்த மனநோய்.  இன்று அந்த அவமானம் இழிவானதல்ல. முன்னோர்கள் காலத்தில்  ஒன்றிரண்டு மனிதர்களே இம்மனநோய்க்கு ஆளாகி இருந்தனர்.  பெரும்பான்மையோர் தகு செயலை செய்யாதபோதும் அறத்தை நம்பினார்கள். இன்று அறத்தை நம்புபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்,அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். நம்மில் பெரும்பாலோர் இன்று அறத்தை நம்பாதவர்கள். எனவே நமது தலைவர்களும் அறத்தை நம்பாத தில் வியப்பில்லை.   குற்றவாளிகளுக்குத் தமது பெரும்பான்மை பலம் குறித்த சந்தேகங்கள் இல்லை. எனவேதான்,  கூச்சமின்றி அவர்களால் பேட்டிகொடுக்கமுடிகின்றது. எந்தச் சமூகத்திற்குத் தனது குற்றம் தெரியவந்தால் அவமானம் என ஒரு மனிதன் நினைத்தானோ அந்தச் சமூகத்தில் அனைவருமே தன்னைப்போன்றவர்கள் என்ற எண்ணம் தரும் துணிச்சல்,  ஆபத்தானது;

———————————————————————

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

La couverture

எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய  இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த  தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை,  புதுச்சேரி,யையும்  பிரான்சு  நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது நிச்சயம்.

 

மாத்தா ஹரி நாவலுக்கு தமிழில் பிற எனது படைப்புகளைப் போலவே மனமுவந்து பாராட்டி எழுதியவர்கள்  அதிகம்

Matahari1

மாத்தாஹரி நாவலை வாசித்த  திரு. கி. அ. சச்சிதானந்தம் வார்த்தை இதழ் ஆசிரியர் குழுவிலிருந்த திரு. தேவராஜுவிடம், இந்நாவல் குறித்து உங்கள் இதழில் எழுதுகிறேன் என தொலைபேசியில் தெரிவித்து அவ்வாறு எழுதி த் தந்த து தான் முதல் மதிப்புரை, நாவலைக் குறித்து  அவர் எழுதிய கடைசி நான்கு வரிகள் என்னால் மறக்க முடியாதவை:

“ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.”Matahari-2

மாத்தாஹரி

அதன்பிறகு எழுத்தாளர்கள் ரெ. கார்த்திகேசு, வே.சபாநாயம் ; பேராசிரியை  ராஜலட்சுமி, பேராசிரியர், பா. ரவிக்குமார்  என இந்நாவலுக்கு மதிப்புரைகள்  எழுதினார்கள். பிரபஞ்சன் நூலின் முன்னுரையிலும், கோ. ராஜாராம் பதிப்பாசிரியர் என்றவகையில் எழுதியதிலும் இருவருமே பாராட்டியிருந்தனர்.. இதன் தொடர்ச்சிபோல ஓர் அதிசயம் நிகழ்ந்த து.

2011 ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில்  நடைபெற்ற முதல்  தமிழ் எழுத்தாளர்  மாநாட்டில் கலந்துகொண்ட தமிழவன் தமிழவன் « புலம் பெயரியத் தமிழிலக்கியம், சில உட்பொருண்மைகள்  » என்ற கட்டுரையில் மாத்தாஹரி  நாவலைப் பற்றியும் குறிப்பிட்டதோடு, மாநாடு முடிந்த பின்னும் அந்நூல் குறித்து ரெ, கார்த்திகேசுவிடமும் கோ. ராஜாராமிடமும் சிலாகித்து பேசியிருக்கிறார்.,

அமெரிக்கா திரும்பிய திரு ராஜாராமிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, மாத்தாஹரியைப் பிரெஞ்சில்  கொண்டுவந்திருக்கலாமே எனத் தெரிவித்தார். ஆக இந்நூல் பிரெஞ்சில் வர முதற்காரணம் திரு. கோ.ராஜாராம்.  பின்னர் மெல்ல மெல்ல அந்த எண்ணம் உறுதிப்பட்டபோதிலும் எனது நூலை  நானே செய்ய தேவையின்றித்  தயக்கம். அக்கனவு நிறைவேற சில வருடங்கள்  பிடித்த தென்கிறபோதும் அக்கனவு நிறைவேற மூல மொழிபெயர்ப்பும் முதல் மொழிபெயர்ப்புமான பிரதியை மிகச் சிறப்பாக  செய்து,   நூலுக்கு ப்பெருமைச் சேர்த்தவர்,  நண்பர்  சு. வெங்கடசுப்புராய நாயகரின்  முன்னாள் பேராசிரியர், முனைவர் திரு.  கிருஷ்ணமூர்த்தி அவர்கள்kichanamourthy 1.  நண்பர் நாயகரின் மீதுகொண்டுள்ள அன்பின்பாற்பட்டு இதனைச் செய்தார். நாயகருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அடுத்ததாக இந்நூலின் பொருட்டு  நான் நன்றி தெரிவிக்கவேண்டிய நபர்  எனது நெடுநாளைய பிரெஞ்சு நண்பன் திரு சவியெ தெபல். « சந்திக்கிறபோதெல்லாம் உனது எழுத்தை நாங்கள் எப்போது படிப்பதாம் » என்பான்.  அவனுடைய பிடிவாத த்தினாலும் இந்நூல் வெளி வருகிறது.

« எங்காத்துகாரரும்  கச்சேரிக்குப் போனார் என்ற கதையாக ஆகிவிடக்கூடாது » என்ற அச்சம்  மகிழ்ச்சியை அடக்கமாக அனுபவிக்கச் சொல்லி எச்சரிக்கிறது. அதுவும் நியாயம் தான்.

 

Bavâni, l’avatar de Mata Hari (roman)

  • Krishna NAGARATHINAM

Edilivre :

175 Bld Anatole France

93200 Saint-Denis

 

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்):

 

மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)

 

கலை, இலக்கியத்துறையில்   பதினைந்தாம் நூற்றாண்டில்  நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி,  இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது  அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில் ஆதிக்கச்சக்தியின்கீழ் அண்டிப்பிழைத்த படைப்பாளிகள், கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி சமயத்தின் நிழலிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு  தொன்மத்திற்கு பயணிக்க முடிவுசெய்ததின் விளவு அது.

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் கலை இலக்கிய துறையில் இத்தாலிநாட்டின் பங்களிப்பினை குறைத்துமதிப்பிடமுடியாது, அதிலும்குறிப்பாக ஓவியம் சிற்பம் ஆகியவற்றில் உலகப்புகழ்பெற்ற கலை வல்லுனர்களை வழங்கிய பெருமை அந்நாட்டிற்குண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு முழுக்க முழுக்க இத்தாலி நாட்டின்  சாதனை, அச்சாதனையின் தாக்கம் பிரான்சு நாட்டில் இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? அதற்கான சூழல்கள் எவை என்பதை மிகச் சுருக்கமாக இப்பகுதியில் காண்போம்.

இடைக்கால அரசியல் சூழலும், மறுமலர்ச்சியும்:-

இடைக்கால இலக்கியங்களின் பண்பாடு, அவை செயல்பட்ட விதம் உண்மையான கலை இலக்கியவாதிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  நிலமானிய அமைப்புமுறை கட்டமைத்திருந்த அரசியல்,  அதிகாரத்தில் இருப்பவர்களை, அரசவையில் கொலுவீற்றிருப்பவர்களை துதிபாடும் இலக்கியத்திற்கு,  காணாத வீர தீர சாகசங்களை அவர்களிடம் கண்டதாக,  இட்டுக்கட்டிப் பிழைப்பதைத் தொழிலாகக்கொண்ட இலக்கியத்திற்கு வழிவகுத்திருந்தது.  ஒரு சிலரை அரியாசனத்தில் அமர்த்தி  புகழ்ந்துரைக்கும் இழிநிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு வெதும்பிய உண்மையான படைப்பாளிகளுக்கு இத்தகைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க மாற்றுவழியொன்று தேவைபட்ட து. இப் “ புதிய வாழ்க்கை(nouvelle vie)”  நிலமானிய பிரபுக்களின் காலடியில் கலையையும் இலக்கியத்தையும் கிடத்தி வயிறுவளர்க்க விரும்பாத படைப்பாளிகளுக்கு ஓர் ஔட தமாக வாய்த்தது.  இதே காலக் கட்டத்தில் இத்தாலி நாட்டில் ஓவியர்கள் தனிமனித உணர்வுகளுக்கு கொடுத்த முன்னுரிமை பிரெஞ்சு படைப்பாளிகளையையும் அவ்வழியில் சிந்திக்க வை த்தது. இத்தாலியர்களின் வழியில்  சக மனிதனை மையப்பொருளாக (centre d’intérêt) இலக்கியத்தில் இடம்பெறச் செய்தார்கள். சாமானிய மனிதனும்  கவனத்திற்கொள்வதற்குரிய தகுதி (dignes d’intérêt ) பெற்றவன் எனக் கருதினார்கள். அடிமை-ஆண்டான் என்ற உறவுமுறையில் விதந்தோதும்,  பரணிபாடும் இடைக்கால இலக்கியத்தின் தட த்தைச் சகமனிதருக்கென செப்பனிட்டு மனித வாழ்க்கைமீதான தீராப் பசியை,  கலை இலக்கியத்தில் ஆற்றிக்கொண்டார்கள். அறிய நேர்ந்த புதிய உண்மைகளும், புதிய எந்திரங்களின் வருகையும் – குறிப்பாக எச்சு எந்திரம்- மறுமலர்ச்சிகாலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வித்திட்டன. அனைத்திற்கும் மேலாக கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி  தொன்ம இலக்கியங்கள் மனிதரை போற்றியவை என்ற சிந்தனை, அவ்வுணர்விற்குக் கூடுதலாக உந்துதலை அளித்தது.

இடைக்கால சமயச் சூழலும் மறுமலர்ச்சியும்:-

ப்ரோட்டஸ்டண்ட்  எனும் கிறித்துவ சீர்திருத்த சபை உருவானதும் பதினைந்தாம் நூற்றாண்டில் அல்லது மறுமலர்ச்சி காலத்தில் என்பதை மறந்துவிடமுடியாது. இந்து மதத்தில் இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதைப்போல, தீயைத் தணிக்கின்ற வகையில் சைவம் வைணவம் எனப் பிரித்து உண்மையான சீர்திருத்தத்திற்கு வழியின்றி செய்துவிட்டார்கள். இடைக்காலத்தில் கிறித்துவ சமயத்தில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான வழிபாட்டுச் சடங்குகள்; அச்சடங்குகளிற் பின்பற்றபட்ட,  பெருவாரியான விசுவாசிகளுக்குப் புரியாத இலத்தீன்மொழி வழிபாடுகள்; சமயத்தின் பேரால் திணிக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்; பாவமன்னிப்பிற்கிடையே புகுந்த பணம் ஆகியவனவெல்லாம் மார்ட்டின் லூதர் என்ற ஜெர்மானிய இறையியல் அறிஞரை, கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவிக்க காரணமானது. அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதனால், விவிலியம் வெகுசனமொழிக்குக் கொண்டுசெல்லப்பட்டு மதகுருமார்களில் கைகளில்  இருந்த இலத்தீன் மொழி பிரதிகள், விசுவாசிகளான சாதாரண மக்களின் கைகளுக்குச் சென்றன, விளைவாக  சமயத்திலும் சாதாரண மக்களின் முக்கியத்துவத்தை உணரத்தொடங்கிய காலம் மறுமலர்ச்சிகாலம்.

மானுடவாதம் (l’humanisme)

மேற்கண்ட சூழலில், மனிதர் நலனில் அக்கறைகொண்ட மானுடவாதம்  என்ற கலை இலக்கிய கோட்பாடு உருவானதில் வியப்பில்லை.  மனிதரைக் கலை இலக்கிய படைப்புகளில் கொண்டாட வீரதீரங்கள் அவசியமல்ல, நற்பண்புகளே போதுமானவை என்றும், தொல் இலக்கியப் பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை என்றும்   இக்கோட்பாடு வாதிட்டது. இக்கருத்தியத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட மறுமலர்ச்சிகால கவிதைகள் மற்றும் இதர படைப்புகள்  கிரேக்கம்-இலத்தீன் தொல் இலக்கியங்களின் சாரத்தைக் குறிப்பாக மானுடப்  பண்புகளை எதிரொலிப்பவையாக இருந்தன.

மறுமலர்ச்சிகால ஓவியர்கள்

இவர்கள் அனைவருமே, மனிதர் உணர்வை ஒளியுடன் கலந்து மனித உடலை கலை நயத்துடன் ஓவியங்களாக படைத்த மறுமலர்ச்சிகால ஓவியர்கள் அனைவருமே ஏற்லனவே கூறியதுபோல இத்தாலி நாட்டவர்கள். லியோனார்டோ டாவின்சி(Leonardo di ser Piero da Vinci)  ஓவியரும் சிற்பியுமான ‘மைக்கலாஞ்சலோ’ (Michelangelo di Lodovico Buonarroti Simoni ), இளம் வயதிலேயே புகழின் உச்சத்தைத் தொட்ட ‘ரஃப்பாயெல்’(Raffaello Sanzio), பின்னர் புகழ்பெற்ற வீனஸ் ஓவியத்தைப் படைத்த ‘தீத்தியன்’(Titian), கரவாஜியோ(Michelangelo Merisi da Caravaggio) அனைவருமே இன்றும் கொண்டாடப்படும் ஓவியர்கள்.  பிரான்சு நட்டில் இவர்களின் தாக்கத்தில் பிரான்சுவா க்ளூஏ(François cluet), ழான்க்ளூஏ(Jean Cluet) இரண்டே இரண்டு ஓவியர்களைத்தான் காண முடிகிறது. இவர்கள் முறையே தந்தையும் மகனும் ஆவர், இவர்களை பிரெஞ்சு ஓவிய வரலாறு லெ க்ளூஏ(Les Cluet)  என அழைக்கிறது. ஆனால் இவர்களை இத்தாலிய ஓவியர்களுடன் ஒப்பிட முடியாது.

 

மறுமலர்ச்சிகால படைப்பாளிகள்

இலக்கியதுறையில்  பிரெஞ்சு படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க்க வகையில் கவனம் பெற்றுள்ளனர் அவர்களில் முதலாம் பிரான்சுவா மன்ன னின்  சகோதரியும் ஒருவர், முதல் பிரெஞ்சு பெண்கல்விமான் என்ற அடைமொழிக்கும்  சொந்தக் காரர், பெயர் மார்கெரித் தெ நெவார் (Marguerite de Navarre). L’Heptaméron என்ற சிறுகதை தொகுப்பு இவருடையது; எழுத்தாளர் பிரான்சுவா ரபெலே ஒரு மானுடவாதி, நான்கு நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் Pantagruel, Gargantua முக்கியமானவை. இவ்விருவரைத்தவிர, ப்ரோட்டஸ்டண்ட் சார்பானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி தண்டனைப்பெற்ற கவிஞர் கிளெமொன் மெரோ (Clémont Merot), தொடங்கி, பியெர் தெ ரொன்சார் (Pierre de Ronsard), ழோஆகிம் துபெல்லே (Joachim du Bellay) போன்ற கவிஞர்களும் மறுமலர்ச்சிகாலத்தில் குறிப்பிடத் தக்கவர்கள்.

——————————————————