குளோது லெவி-ஸ்ட்ற்றோஸ் – பிரெஞ்சு மானிடவியல் அமைப்பிய சிந்தனாவாதி.

(எழுத்தின் தேடுதல் வேட்டை என்கிற நூலிலிருந்து )


எதிர்வருகிற 28 நவம்பரில் குளோது லெவி-ஸ்ற்றோஸ¤க்கு (Claude Levii-Strauss) நூறுவயது( கட்டுரை 10 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது) மனிதம்-மானிடம் என்ற அறிவியல் பிரவாகத்தில் மூழ்கி எழுந்த மாபெரும் சிந்தனாவாதி. மானிடவியலை எவரெஸ்டின் உச்சத்தில் நிறுத்தியதற்கான காய்ப்புகள் அவரது வயதுக்கு நிறையவே உண்டு, இன்றைக்கு ஆசுவாசமாக கால் நீட்டி முதுமை தூணில் சாய்ந்தபடி அதன் பெருமை பிரவாகத்தில் மூழ்கி சந்தோஷிக்கிற மனிதர்.

மானிடவியலை ‘அமைப்பியம்'(Structuralism) ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவி-ஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம்’ என்ற சொல்லை அறிமுகத்தியவர் ·பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்ர்(Ferdinand de Saussure) என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த  மொழியியல் வல்லுனர். அவர் மொழிகளை ஒரு முறைமையாகக்(System) கருதி அறிந்திடவேண்டுமென்றதோடு, முறைமையில் அடங்கியுள்ள தனிமங்களுக்கு இடையேயான பரஸ்பர பொருத்தம் மற்றும் பொருத்தமின்மையை ஒட்டியே, ஒவ்வொரு தனிமத்தினைப் பற்றிய வறையறையைத் தீர்மானிக்க முடியுமென்றும் சொன்னார். வாசிப்பு, கிரகித்தல், புரிதல் போன்ற சொற்களுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது. விமர்சனம், ‘எழுத்தை-சொல்லை’ கட்டுடைத்து அதன் ஜீவதாதுக்களை ஆய்வுக்குட்படுத்தியது. பிறதுறை சார்ந்த அறிவு ஜீவிகளும் – மானிடவியலறிஞர்கள், சமூக அறிவியல் வல்லுனர்கள், இலக்கிய படைப்பாளிகளென பலரும் அதன் ஈர்ப்புச் சக்திக்கு வயப்பட்டவர்கள் – அமைப்பியல் வாதத்தில் தங்களை இணைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருத ஆரம்பித்தனர். மானிடவியலைப் பொறுத்தவரை குளோது லெவி-ஸ்ற்றொஸ் அமைப்பியம் பேசியவர். அவரது நூல்கள் மானிடவியல் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவின, உதவிக்கொண்டிருக்கின்றன. அவை அத்துறை சார்ந்த அறிஞர்களுக்கான செஞ்சோற்றுக்கடன்கள். ஒரு சிந்தனை அல்லது ஒரு படைப்பின் வீச்சினை அளவீடு செய்யவேண்டுமெனில் அச்சிந்தனை அல்லது படைப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நடத்தப்படும் விவாதங்கள், வைக்கப்படும் எதிர்வினைகள், எழுப்பப்படும் கலகக்குரல்கள், உருவாகும் புதிய சிந்தனைகள் எவை எவையென்று பார்க்கவேண்டும். ஒரு சிந்தனைக்கான வரவேற்பு, அல்லது வெற்றி தோல்வியை மதிப்பீடு செய்யும் உறைகல்கள் அவை. மானிடவியலை பல்வேறு தளங்களிலும் நிறுத்தி அதன் முழுமைக்கு வழி வகுத்த அல்லது அதன் இயல்பான உருவாக்கத்திற்கான காரணிகளைக் குறித்த பரந்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர் லெவி. 1930 களில் அமேஸான் காடுகளில் கடுவியோ, பொரோரோ, நம்பிக்வாரா, துப்பி கவாயி மக்களுக்கிடையேயான உறவுகள், உணவு முறைகள், உடைகள், அணிகலன்கள் ஆயுதங்கள், சம்பாஷனைகள், இசைகள் குறித்து அவர் மேற்கொண்ட பண்பாட்டு அவதானிப்புகள் மானிடவியலுக்குக் கிடைத்த கொடையென சொல்லப்படுகின்றன. 

இளைஞர் குளோது லெவி-ஸ்ற்றோஸ், இளமைக்காலத்தில் எதிர்காலம் குறித்து உறுதியான திட்டங்களேதும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு தேர்ந்த சித்திர கலைஞர், மனிதர்களை தத்ரூபமாக வரைபவர், லெவி-ஸ்ற்றோஸ் தந்தையைபோல ஒரு ஓவியராக வந்திருக்கலாம்; தென் அமெரிக்க காடுகளில் அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கிறவர்கள், சிறந்த புகைப்படக் கலைஞருக்கான திறனும் அவருக்குள் ஒளிந்திருந்ததாகச் சத்தியம் செய்கிறார்கள், எனவே புகைப்படக்கலைஞராகவே வந்திருந்தாலும் ஜெயித்திருப்பார் போலிருக்கிறது; மேடை அலங்காரம், காட்சிக்குத்தேவையான பின்புலங்கள் வடிவமைப்பு கலைஞராகக் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதற்கு அவரது நண்பரொருவர் உருவாக்கிய இசை நாடகத்திற்கான அவரது பங்களிப்பு சாட்சி; நல்ல நாடக ஆசிரியராக கூட பரிணமித்திருக்கலாம் என்பதற்கான உதாரணங்களும் உண்டு, ஆனால் எதுவுமில்லையென்றானது. மொத்தத்தில் அவருக்குள் கலைஞர் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு. கலைஞர்களுக்கு இயல்பாய் இருக்கக்கூடிய பார்வை கூர்மையும், அவதானிப்பும் லெவி-ஸ்ற்றோஸிடமும் இருந்திருக்கவேண்டும். ஆசிரியர் ஆந்த்ரே கிரெஸ்ஸோன் (Andrளூ Cresson) யோசனையின்படி கல்லூரியில் தத்துவமும், சட்டமும் படித்தபோதிலும், அவை இரண்டும் அவர் உயர்கல்விக்கு வழிகோலினவே அன்றி, சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாட்டினை அவருக்குத் தரவில்லை. உயர்கல்வி படித்து முடிந்திருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ராபர்ட் எச். லவி (Robert H. Lowie) என்பவர் எழுதியிருந்த முதன்மைச் சமூகம் (Primitive Society) என்ற நூலை, அது பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதைப் படித்து முடித்ததும் திடீரென்று அவருக்கு இனவரைவியலர் (ethnographer) ஆக வரவேண்டுமென்று ஆசை. பிரேஸில் உள்ள சாவோ போலோ(Sao Paulo) நகரில் சமூக அறிவியல் போதிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் அமைகிறது. நகரத்தின் வெளியே புற நகர்களில் வசிக்கும் அடிதட்டு சிவப்பு இந்தியரைப்பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அதனை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்கிறார். குளோது லெவி-ஸ்ற்றோஸ் வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணத்தின்” ஆரம்பம். சமூக அறிவியல் போதிக்கவந்தவர் நிலவியல், அகழ்வாராய்ச்சி என ஆர்வம்காட்டி தென்அமெரிக்க மண்ணில் தொலைந்திருந்த சிவப்பிந்திய மக்களின் இனவரலாற்றை, பண்பாட்டு தடயங்களைத் தேடிப் பதிவு செய்தார். பதினேழுவயதில் படித்திருந்த மார்க்ஸியத்தை நடைமுறை வாழ்க்கையில் அடையாளபடுத்துவதும் அங்கே அவருக்கான சவாலாக அப்போதிருந்தது. நிலவியல், உளப்பகுப்பாய்வு, மார்க்ஸியம் என்ற மூன்றின் ஊடாக அவர் விளங்கிக்கொண்டது: 1. ஒர் உண்மையை வேறொன்றாக எவ்வாறு கற்பிதம் செய்து ஏமாறுகிறோம். 2. நிஜத்தில் அசலான உண்மை தன் இருப்பை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. 3. இயல்பில் உண்மை தன்னை ஒளித்துக்கொள்வதில் ஆர்வமுடையது(1)

பாறையொன்றில் தங்கள் கூட்டுக்குள் ஒடுங்குவதென்கிற போட்டியில் இறங்கும் இரண்டு நத்தைகளின் செயல்பாடுகளின் சமநிலையின்மை, அவைகளுக்கான கால அவகாசத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளுக்கான சாட்சியம் அதாவது போட்டியொன்றில் கலந்துகொள்ளும் இரண்டுபேருக்குமான தருணமும் வெளியும் ஏற்ற தாழ்வற்று அமைவது அவசியம் – மனித வாழ்க்கையில் அநேக முரண்களுக்கு அவையே காரணம் என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ். இக்கால-வெளி மயக்கம் காலங்காலமாய்  நிரந்தரமாக தங்கிவிட்டதுகுறித்த கவலைகள் அவருக்கு நிறையவே இருக்கின்றன, விளைவு தனது வாழ்க்கை முழுக்க முரணற்ற இணக்கமான சூழலைத் தேடுவபராக லெவி-ஸ்ற்றோஸ் பார்க்கிறோம்.

லெவி-ஸ்ற்றோஸ் படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள(2)வேறுபாட்டினைக் குறித்தும் நிறைய பேசுகின்றன. தென்அமெரிக்க இந்தியர்களுடைய ஒரு கூடை; கருநீல வண்ணம் தீட்டிய கவர்ச்சியான முகங்கொண்ட கடூவியொ பெண்மணி; பலதார மணமுடிக்கும் வழக்கம் கொண்ட துப்பி இன குடும்பத்தலைவனின் சிறுமியொருத்தியை மணமுடிக்கும் பேரவா; அட்லாண்டிக் கடலின் சூரிய அஸ்தமனம் என்பது புலன்களால் வியந்துணர்ந்த அனுபவங்கள். மாறாக, சுழற்றி எறிந்தால் துள்ளி குதிக்கக்கூடும் என்ற கூடையின் திறனுக்குள்ளே அடங்கியுள்ள புதிர்; பெண்ணினுடைய வடிவ இயல் சித்திர தோற்றப் பின்னணிக்குக் காரணமான அவளுடைய சமூக படிநிலை அதன் பிரதிபலன்கள்;  நான்கு பெண்களை மணக்க அதிகாரம்பெற்ற குடும்பத்தலைவன் எட்டுவயது பெண்ணுக்குத் தரும் வாக்குறுதிகள்; சூரியன் மறையும் காட்சிமாத்திரம் பிடிபடமறுக்கிறது. படகுக்கு மேலாக கண்ணிற்பட்ட அக்காட்சி, பிறக்கும்  இரவுக்கான நெகிழவைக்கும் அடையாளச் சின்னம். அக்காட்சியில் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டென்பது அறிவு தரும் புரிதல்.

1949ம் ஆண்டு உறவின் ஆரம்ப கட்டமைப்புகள் (Les Structures ளூlளூmentaires de la parentளூ) என்ற நூலில் குடும்பங்களுக்கிடையேயான உறவுகள் பரிமாற்றத்தை விளக்குவதற்கு கணித வல்லுனர் ஆந்த்ரே வேய் (Andrளூ Weil) உதவியுடன் கணக்கியல் தருக்கங்களூடாக(Logico-mathளூmatique) சமூகக் கட்டமைப்பை லெவி-ஸ்ட்ரோஸ் விளக்கினார். உறவுகள் என்பது பெண்கள் மற்றும் பொருட்கள் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க மனித இயல்பும்-பண்பாடும் பிணைப்பற்று இருந்தகாலமென்று அதனைத் தீர்மானித்தார். உண்மைநிலையை அறிவதென்பது மிகவும் சிக்கலானது என்ற காலக்கட்டத்தில் பெண்களையும் பொருட்களையும் ஒரே தளத்தில் நிறுத்திய லெவி-ஸ்ற்றோஸ¤டைய  ஆய்வு பிற்காலத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சித்தவர்கள், இம்முடிவு லெவி-ஸ்ற்றோஸ¤டைய அறிவைப்(l’Intelligible) பிரதிப்பலிக்கிறதேயன்றி அவருடைய உணர்வைப்(le Sensible) பிரதிபலிக்கவில்லை என்றார்கள்.

1949ம் ஆண்டில் அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மற்றொரு பொருள் மந்திரச் சொற்கள். அமெரிக்காவின் நியூ மெக்ஸிக் பகுதியைச் சேர்ந்த ஸ¥னி இனத்தவர், கனடா நாட்டின் வான்கூவர் பகுதி க்வாக்யூட்ல் இனத்தவர், பனாமா நாட்டு குனா இனத்தவர் ஆகியோரை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டார். உடலுக்கோ உயிருக்கோ ஏற்படும் நன்மை தீமைகளை ஒரு சில சொற்கள் எப்படி தீர்மானிக்கின்றன, அச்சொற்களுக்கென்று ஏதேனும் பிரத்தியேக ஆற்றலுண்டா என்பது கேள்வி. பிராய்டுவின் உளபகுத்தாய்வின்படி சொற்களுக்கு எப்படி உயிர் காக்கும் வல்லமையுண்டோ அதுபோலவே உயிரை வாங்கும் சக்தியுண்டென்பது லெவி-ஸ்ற்றோஸ் கண்ட முடிவு. மந்திர சொற்களால் உண்டாகக்கூடிய அச்சம் குண்டுமழை பொழிகிற யுத்தகளத்தில் உண்டாகும் அச்சத்திற்கு ஈடானது என்கிறார். வூடு(Voodoo),பில்லி சூனியகாலத்தில் உபயோகிக்கப்படும் சொற்கள் சம்பந்தப்பட்ட மனிதர்களின் அமைதியைக்கெடுக்கிறது அவர்கள் பதட்டமடைவதால் உடலில் இரத்தத்தின் அளவு குறைகிறது பின்னர் நாடித் துடிப்பும் அடங்க, இறுதியில் அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடிவதில்லை. பிராய்டு (Freud) எவ்வாறு உள-உடலியக்கவியல்( Psycho-physiologiques) குறித்து அக்கறைகாட்டினாரோ, அதுபோலவே லெவி-ஸ்ற்றோஸ், உயிர்- உடலென்று தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறார். 1949ம் ஆண்டு சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட  ஆய்வொன்றில், நரம்பு செல்களில் பாலிநியூக்கிளியோடைடினுக்குள்ள (polynuclளூotides) முக்கியத்துவத்தை அறிவிக்க அதனை ஆதாரமாகக்கொண்டு லெவி-ஸ்ற்றோஸ் மனச் சிக்கல்களுக்கு வார்த்தைகளைக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியுமென நம்பினார். சிகிச்சைகாலத்தில் ஆற்றல்மிக்க சொற்களை உபயோகிப்பதால் உயிர்ப்பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள், திசைமாறிய மனிதமனத்தினை மீண்டும் மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதோடு, எதிர்காலத்தில் நெருக்கடிகாலங்களில் மீள்வதற்கும் மனத்தினை தயார் படுத்துகிறது, என்பது அவரது கருத்து. “உலகில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனில் ரெம்போவின்(3) உணர்வுபூர்வமான சொற்கள் போதும்” என்பது லெவி-ஸ்ட்ரோஸ் தரும் யோசனை.

” எதிர்காலத்தில் அறிவியல் சிந்தனைகளும் மரபுவழி சிந்தனைகளும் ஒத்துபோகலாம் ” என்பது 1955ல் ‘லெவி’ கணித்த ஆரூடம்(4). அக்கணிப்பை மெய்யாக்க நினைத்தவர்போல, 1962ம் ஆண்டு ஆதிவாசிகளின் மந்திரம்- மரபு, படித்த பண்பட்ட உலகின் அறிவியற் செயல்பாடுகள் என இரண்டையும் சமதளத்தில் நிறுத்தி எழுதப்பட்டதே விலங்கு மனம்(5)  அவருடைய மிகப்பெரிய படைப்பு எனச் சொல்லப்படுவது புராணக்கதைகள்-(Mythologiques). 1964 தொடங்கி 1971 வரை நான்கு பாகங்கள் வந்துள்ளன:வெந்ததும் வேகாததும், தேனிலிருந்து சாம்பல்வரை, உணவு உட்கொள்ளும்முறைகளின் பூர்வீகம், நிர்வாண மனிதன்(6). தென்அமெரிக்க பொரோரோ மக்களின் மரபுவழிக் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. முறைதவறி பிறந்த மகனொருவன் தகப்பனால் தண்டிக்கப்பட அவன் தனது குறைகளை நிவர்த்திசெய்துகொண்டு தகப்பனை பழிவாங்குவதாகக் கதை.  எண்ணூற்று பதின்மூன்று நாடோடிகதைகள் அதிலுள்ளன. ஒரு சில ஜப்பானிய கதைகளும் அதிலுண்டு/ கதைகளினூடாக செவ்விந்திய மனிதனொருவனுடைய அனுபவங்கள் சொல்லப்படுகின்றன. அவ்வனுபவத்தில் பங்குதாரர்கள்: விலங்குகள், பெண்கள், தாவரங்கள், கடவுள்கள்.. தீயின்றி மானிடத்தின் இன்றைய பிரம்மாண்டமான வளர்ச்சி ஏது? தீ மூட்டுவோம் என்ற சங்கேதத்துடனேயே கதை ஆரம்பமாகிறது. விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிற கதையில்  ‘ஹாம்லெட்டும்’ அவனது புகழ்பெற்ற இறப்பதா இருப்பதா?என்ற கேள்வியுடன் வருகிறான். தனது உயிர் வாழ்க்கையை ‘இருப்பு’ உறுதிபடுத்துவதால் மனிதன் வாழ நினைக்கிறான்,  ஆனால் அவன் உள்மனம், உலகம் தோன்றிய நாள்தொட்டு நீ இருந்ததில்லையே, என எச்சரிக்கிறது. இடையில் தோன்றிய மனிதரினம் இடையிலேயே அழிந்தும்போகலாம் என்பதுதான் உண்மை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

மானிடவியலாளர்கள் பொதுவாக இயற்கைவாதிகளாகவும் திகழக்கூடியவர்கள், ஆனால் லெவி இயற்கையை நேசிக்க புத்தர் காரணமென்று சொல்லப்படுகிறது. இயற்கைக்கு முன்னே எல்லா உயிர்களும் சமம் என்ற புத்தரின் வாக்கு அவரைப் பெரிதும் பாதித்ததாம். ‘விடுதலை குறித்த சிந்தனை'(Rளூflection sur la libertளூ) என்ற நூலில்  நமது இனவரைவியலர் லெவி அடிப்படை மனித உரிமைககளை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்கிறார். “மனிதரின் அடிப்படைகுணமென்று ஒழுங்குணர்வினைச் சொல்கிறோம். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. இயல்பாகவே நமக்கு நம் ‘இருப்பை’ அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும், அதற்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறோம், எனவே நாம் ஒழுங்குணர்வுகொண்ட இனமல்ல பிற உயிரினங்களைப்போல நாமும் ஓர் உயிரினம் அவ்வளவுதான். மனிதரினமும் சராசரி உயிரினம் என்கிறபோது பிற உயிரினங்களைக் காட்டிலும் கூடுதலாக அல்லது பிரத்தியேகமாக சலுகைகளையோ உரிமைகளையோ எதிர்பார்ப்பது நியாயமாகாது, என்பது அவருடைய கருத்து. “சுற்றுச் சூழல் குறித்து இன்றைக்கு கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறோம், உண்மையில் மனிதர்களுக்குச் சுற்று சூழலிடமிருந்து பாதுகாத்துகொள்ளும் உரிமை வேண்டியதில்லை, சுற்றுச்சூழலுக்கே மனிதர்களிடமிருந்து தமமைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை வேண்டியிருக்கிறது”, என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ்.(7). இயற்கைக்கு மாத்திரமல்ல மனிதகுலத்திற்கும் மேற்கத்தியர் இழைத்த அநீதிகள் அதிகமென்று குற்றஞ்சாட்டினார், விளைவு அப்போதைய நாஜிகள் ஆதிக்கத்திலிருந்த பிரெஞ்சு அரசு, அமலிலிருந்த யூதர்களுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அவரை பதவி நீக்கம் செய்கிறது. எனவே நியூயார்க்கில் அடைக்கலமானார். அங்கிருந்துகொண்டு சுதந்திர பிரெஞ்சு ராணுவமென்ற எதிரணியில் அங்கம் வகித்து ஜெர்மானியர் ஆக்ரப்பிலிருந்த பிரான்சின் விடுதலைக்கு உழைத்தார்.

விவாதம் குறித்த விமர்சனம் (Critique de la raison dialectique) என்ற நூல் சார்த்துருவால் எழுதப்பட்டு 1961ல் வெளிவந்து புயலைக் கிளப்பியது. ஒருவகையில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் லெவி-ஸ்ற்றோஸ் எழுதி வெளிவந்ததே ‘விலங்கு மனம்’.(1962). நமது இனவியலாளர் புத்தகத்தில் முக்கியத்துவம்பெற்ற பழங்குடிகளை(primatif) மனிதரினத்தின் கேவலமான மனிதர்கள் என்று சார்த்துரு சித்தரித்திருந்தார். ஆனால் லெவி-ஸ்ற்றோஸோடு மோதுவதற்கு சார்த்துருவுக்கு வேறு விஷயங்கள் இருந்தன. முதலாவது மனித குல வரலாறு பற்றியது. வரலாறு என்ற சொல்லுக்கு ஏதேனும் பொருளுண்டா? உண்டென்பது சார்த்துருவின் வாதம். சார்த்துருவின் கருத்துப்படி, லெவி-ஸ்ற்றோஸ¤க்கு வரலாறென்பது மர்மம்- புரியாத புதிர், வரலாற்றாசிரியர்கள், மர்மக் கதையின் ஆசிரியர்கள். சார்த்துருவின் விமர்ச்னம் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும்; லெவி-ஸ்ற்றோஸ¤டைய கருத்தில் உண்மை இல்லையென்று நம்மால் சொல்ல முடியுமா? ஆப்ரிக்காவில் ஒரு பழமொழியுண்டு, சிங்ககத்துக்கென வரலாற்றாசிரியர்கள் இல்லாதவரை, வேட்டைபற்றிய வரலாறு என்பது வேட்டை ஆடியவர்களுக்குச் சாதமாகத்தான் இருக்குமென்பது உண்மை. வரலாற்றை அவரவர் விருப்பபடி திசை திருப்பலாம். ஆதாரங்கள், ஆவணங்கள் யாருக்குவேண்டும்? அவரவர் விருப்படி தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை விடுத்து எழுதபட்ட உலகவரலாறுகள் ஏராளம். காலனிநாடுகளின் வரலாறுகள் அனைத்துமே வேட்டைஆடியவர்களால் தீர்மானிக்கபட்டதுதான். நமது லெவி-ஸ்ற்றோஸ் பற்றி பேசுவோம். அவரது ‘விலங்கு மனத்தில்’ சொல்லப்பட்டவை அனைத்துமே தெளிவானவை, கால நேரங்களுக்கு கட்டுண்டவையல்ல என்பது அவரது அழுத்தமான வாதம். லெவி-ஸ்ற்றோஸை பொறுத்தவரை வரலாறுக்குப் பொருளேதுமில்லை: வரலாறு மனிதச்சமுதாயத்தை காலங்களால் பிரிக்கிறதென்றும், இனவரைவியல் வெளிகளால் பிரிக்கிறதென்றும் கூறியவரல்லவா?

—————————————————————————

1. Triste tropiques Edition Plon p62

2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible

3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷

4. Ibid Magie et Religion, La structure des mythes p255

5. La Pensee Sauvage- The Savage Mind

6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu

7. Le Regard élignée. éd.Plon 1983 P 374

1. Triste tropiques Edition Plon p62

2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible

3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷

4. Ibid Magie et Religion, La structure des mythes p255

5. La Pensee Sauvage- The Savage Mind

6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu

7. Le Regard élignée. éd.Plon 1983 P 374

பின்னூட்டமொன்றை இடுக