மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு

அகந்தை அல்லது செருக்கு

நான் இருக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரில் இரண்டு மெய்யியல் விவாத அமைப்புகள் உள்ளன ஒன்று le Café Philo மற்றது   Espace Culturel des Bateliers. முன்னதில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும், அடுத்ததில் மாதந்தோறும் நிகழ்வுகள் உண்டு. முதல் அமைப்பு கட்டணமின்றி செயல்படுவது, அடுத்தது நுழைவுக்கட்டணத்துடன் நடைபெறுவது. அதிக பட்சமாக இருபதுபேர் கூடுவார்கள். மிகவும் பயனுள்ள வகையில் மெய்யியலாளர்கள், மெய்யியல் கருத்தியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 70களில் சென்னையில் படித்தபோது, Forum of free enterprise என்ற அமைப்பு இருந்தது, அதில் உறுப்பினனாக இருந்தேன் அப்போதெல்லாம் என்.ஏ பல்கிவாலா சொற்பொழிவு பிரசித்தம், அந்த நோய் பிரான்சிலும் எந்த வேப்பிலைக்கும் இறங்காமல் இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளுக்கும் என்றில்லாவிட்டாலும் முடிந்தவரை கலந்துகொள்கிறேன் . கடந்த புதன்கிழமை le Café Philo வில் l’orgueil அதாவது செருக்கு, என்ற சொல் கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அடுத்த கிழமைக்குரிய தலைப்பினை முன்னமேயே தீர்மானித்துவிடுவார்கள். உரையாற்றவிரும்பும் நபர் எதுபற்றிய பொருளில் உரையாற்றவிரும்புகிறார் என்பதைத் தெரிவிக்கவேண்டும், ஒன்றுக்குமேற்பட்ட நண்பர்கள் வெவ்வேறு கருப்பொருளை முன்மொழிகிறபோது, அமர்வில் கலந்துகொள்ளும் நண்பர்களின் வாக்குகள் அடிப்படையில் விவாதத் தலைப்பை தேர்வு செய்வார்கள்.

இனி அகந்தைக்கு வருகிறேன். நமது புராணக்கதைகளில் அசுரர்களையெல்லாம் அகந்தையின் வடிவங்களாக முன் நிறுத்துவார்கள். இதிகாசத்திலும் மகா பாரதத்தில் துரியோதனன் இராமாயணத்தில் இராவணன் என அகந்தைக்கு உதாரணங்களைகாட்டுகிறோம். மனிதவாழ்க்கையை நெறிப்படுத்த இவ்வாறான கதைகளைக்கொண்டு உத்தமகுணங்களுக்கென்று சில மனிதர்களையும், தீயவற்றிற்கென சிலரையும் உருவகப்படுத்தி மனிதரினத்தை அடிமைப்படுத்த சமய எதேச்சாதிகாரம் பயன்படுத்திக்கொண்ட உத்திகள் இவை. ஆதாமையும் ஏவாளையும் தடைசெய்யபட்ட ஆப்பிளை உண்டு கடவுளுக்கு எதிராக அவர்களைச் சாத்தான் திசைதிருப்பி அகந்தையிற் தள்ளிய பாவக் கதை கிறித்துவத்தில் உண்டு., இந்து மதத்திலும் சபிக்கப்பட்டு பூலோகம் வந்த கதைகள் நிறைய(பூலோகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் ?), கிரேக்க இதிகாசத்திலும் இதுபோன்ற கதைகள் இருக்கின்றன. அகந்தை என்றதும், தற்புகழ்ச்சி, தற்பெருமை, மமதை, இறுமாப்பு, இனம், சாதி, நிறம், கல்வி, பதவி, பணம் தரும் அடையாளத்தினால் « தான் எனும் எண்ணம் » இப்படி நினைவுக்கும் வருகிற அனைத்துமே அகந்தையின் வடிவங்கள் என்கிறார்கள். அகந்தை என்றால் என்ன ? தம்மிடம் இல்லாத உயர்வை இருப்பதாக நினைத்து ஒழுகினால் அகந்தை, அல்லது தான் வெறுக்கின்ற ஒருவரைக்காட்டிலும் தனக்குக் கூடுதக் தகுதிகள் இருப்பதாக நினைத்தல். ஆனால் கர்வம் வேறு. பெருமிதத்தின் எல்லையை மீறினால் அகந்தை. ஒரு தமிழ் நடிகன் சூப்பர், சுப்ரீம், தளபதி, தல என்கிற கூட்டத்திடை தன்னை உலக நாயகனாக முன் நிறுத்திக் கர்வப்பட காரணங்கள் இருக்கலாம். அது ஹைதராபாத், திருவந்தபுரத்திலும்ங்கூட செல்லுபடி ஆகலாம், ஆனால் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும்ங்கூட தன்னை உலக நாயகன் என்று நினைப்பது, கேலிக்கூத்து, அகந்தைக்கு உதாரணம்.

« அகந்தையிடமிருக்கும் நல்ல விஷயம், பொறாமையைக் அது கட்டிக்காக்கிறது. ( «L’orgueil a cela de bon qu’il préserve de l’envie», de Victor Hugo) » என விக்தொர் யுகோவின் கூற்றுச் சுட்டிக் காட்டப்பட்ட து. « குற்றங்கள் அனைத்தையும் ஊட்டிவளர்க்கிற, தாயாகவும், குற்றங்களுக்கு அரசியாகவும் இருப்பது அகந்தை  » ( «La mère nourricière et la reine de tous les vices», de Saint Grégoire le Grand) என ஒரு  பிரெஞ்சு சமயகுரு கூறியிருக்கிறார் என்றார்கள். ஆத்திச்சூடி « உடையது விளம்பேல் » என்கிறது. அகந்தை இடத்தில் பணிவு வேண்டும் எனகிறது தமிழ் மரபுமட்டுமல்ல உலகமெங்கும் அறனெறிகள் பணிவை வற்புறுத்துகின்றன. அதேவேளை, சார்த்ரு உட்பட பல மெய்யியலாளர்கள் அகந்தைக்கு வக்காலத்து வாங்கியதையும், அகந்தைக்கு ஆதரவாகக் பேசியவர் நினைவூட்டினார். எனக்கும் வெபெர் என்ற அந்த நண்பர் கோடிட்டுக் காட்டிய சார்த்ருவின் இவ்வாக்கியம் பிடித்திருந்தது : « Cet orgueil, en fait, n’est pas autre chose que la fierté d’avoir une conscience absolue en face du monde » அதாவது «  இச்செருக்கு உண்மையில், உலகிற்கு முன்பாக, என்வசமிருக்கும் ஒரு முழுமையான  விழிப்புணர்வைக்குறித்த பெருமிதமன்றி வேறொன்றுமல்ல »  அந்நண்பர் ஃபூக்கோ வின் வாக்கியத்தையும்  நினைவூட்டினார் « செருக்கு என்பது, தன்னைக்குறித்த கவலையில் உருவாவது(l’orgueil est une transformation du souci de soi)  », அகந்தைகொள்வது நியாயமற்றதாக இருக்கலாம், ஆனால் கர்வப்படுவதில் நியாயமிருக்கிறது.  எனவேதான்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

என்ற குறளுடன் முழுமையாக உடன்பட எனக்கு விருப்பமில்லை. நாம் கர்வப்பட அவசியம் இருக்கிறது. தவிரக் கர்வப் படாதவர்கள் யார் ? எனது புத்தகம், எனக்குக் கிடைத்த பரிசு, ரஜனியுடன் எடுத்துக்கொண்ட படம், கலைஞரும் நானும் எனச் சொல்லிக்கொள்வதனைத்தும் கர்வம்தான், அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. செருக்கு என்பது நமது இருளைமறைத்து, ஒளியைமட்டும் காட்டும் முயற்சி. பெருமைகள் மட்டுமே என்னிடம் உள்ளன, சிறுமைகள் இல்லை, நான் தினமும் கிருமி நாசினி சோப் போட்டுக்குளிக்கிறேன் என்கிற மனோபாவம். சமூக வலைத்தளங்களை ஒருமுறை வலம் வாருங்கள் நாமனைவருமே உத்தமர்களென காட்ட முயல்கிறோம். நமது எதிரிகளைத் தேடிச்சென்று விசாரண நடத்த சாத்தியமற்ற நண்பர்களிடம் நமது பெருமைகளை அரங்கேற்ற நினைக்கிறோம். « சிறுமை அணிந்து என்னை நானே வியந்துகொள்வதும் பெருமைதான் » என வள்ளுவன் குறளுக்குப் புதிய உரை எழுதுகிறோம். கர்வத்தைச் செருக்காக மாற்றுவதில்தான் பிரச்சினை. எல்லோரும் எல்லாவற்றிலும் உயர்ந்தவராக அல்லது தாழ்ந்தவராக இருக்கமுடியாதென்பது உண்மையெனில், ஏதோ ஒன்றில் ஒருவன் அறிவாளியாகவும் பிறர் மூடராகவும் இருக்கமுடியுமென்பதும் உண்மை. அங்கே செருக்கை, தமது இருத்தலுக்கு முன்பாக அரியணையில் ஏற்றுவதுஅவசியமாகிறது. ஒரு வகையில் அது l’essence précède l’existence- இருத்தலுக்கு முன்பு சாரம்.

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்?”

என்ற கம்பனின் கர்வம் நியாயமானது.  விளம்பரமின்றி தொலக்காட்சியின் துணையின்றி, துதிபாடிகளின் துணையின்றி விருதுகளின்றி காலம் கடந்து தனது கவிதைவாழும் என நம்பிய  குரல் அது.  வள்ளுவரின் மற்றொரு குறள் வற்புறுத்தும்   வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி,அவ்வளவையும்  தூக்கிச் செயல்பட்டக்   கம்பனைப் பிழைக்கத் தெரியாதவனின் செருக்கு என கொள்ள முடியுமா ?. நாமிருக்கும் உலகம்,  நம்மைத் தாண்டிசெல்லும்  உலகமல்ல, மிதித்துக் கடக்க எண்ணூம்  உலகம், மிதிபடாமலிருக்க விழித்திருத்தல் அவசியம், கர்வம் அரைக்கண்மூடி விழித்திருத்தல்.

———–

பின்னூட்டமொன்றை இடுக