மொழிவது சுகம் ஜூன் 29

1. Herta Muller:

2009 ஆண்டு நோபெல் பரிசை பெற்றவர். -ருமேனியா நாட்டைச்சேர்ந்த இந்த எழுத்தாளர் பெண்மணி ஜெர்மனில் வசிக்கிறார். கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்தபோது எனது பெரிய மகள் நன்றாக இருக்கிறதென்று சொல்லி இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலைக் கொடுத்தாள். நாவலின் பெயர் The Land of Green Plums.

“When we don’t speak, said Edgar, we become unbearable, and when we do, we make fools of ourselves என ஆரம்பமே ஈர்ப்பதாக இருந்தது. நாவல் எளிமையான, சிறுசிறு வாக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பினும் எனக்குப் புரியாத சொற்கள் நிறைய. மிக மெதுவாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து முடித்ததும் எழுதுகிறேன்

2. La terre du cielம் ஹரூகி முராகாமியும்

ழான் பியர் க்ரோ என்ற பிரெஞ்சு நண்பர், இங்கே (Strasbourg) La terre du ciel கிளை ஒன்றை துவக்கி இருக்கிறோம். அதன் அமைப்பாளர்கள் எதிர்வரும் 25/6/2014 அண்று கூட இருக்கிறோம் நீயும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைத்திருந்தார். நண்பர் குரோ 70வயது ஆசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் குடும்பத்துடன் நட்பிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு கணவன் மனைவி இருவரும் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்றிருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை பரிசாக அவருக்கு அளித்திருந்தேன். அதற்கு ஒரு டயர் வேண்டுமெனக் கேட்டிருந்தார். சென்றமுறை இந்தியா வந்தபோது அதைக் கொண்டுவர தவறிவிட்டேன். ஊரிலிருந்து திரும்பி நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலையில்தான் La terre du ciel அமைப்பை பற்றிக் கூறி அழைத்தார். புதன் கிழமை அக் கூட்டம் இருந்தது. திங்கட்கிழமை குரோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. புதன் கிழமை நிகழ்ச்சியை மறந்திடாதே என நினைவூட்டியவர், நான் சற்று முன்னதாகப் போகவேண்டியிருக்கிறது, நீ எலிஸபெத்தை ( அவர் மனைவி) காரில் அழைத்துக்கொண்டு ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடவேண்டும் என்றார். வரும்போதே எல்லோரையும்போல் உன்னுடைய பங்களிப்பாக நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவில் இரவு உணவிற்கு இருவகையான உணவுவகைகளை கொண்டுவந்துவிடு என்றார். உண்மையில் அன்று போகும் எண்ணத்தில் இல்லை. உலகக் கால் பந்து போட்டியின் முதல் சுற்று கfடைசி போட்டி. ஏற்கனவே பிரான்சு கலந்துகொண்ட இரு போட்டியிலும் நன்றாக விளையாடி, போட்டிக்கு 3 கோல்கள் என்று போட்டிருந்தார்கள். புதன் கிழமை போட்டி நன்றாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. விருப்பமின்றியே அந்த நிகழ்வுக்குப் போனேன். Strasbourg லிருந்து 20 கி.மீ. தொலைவிலிருந்த Niedernai ஓர் அழகான ஊர். நிகழ்ச்சி, மரி என்பவர் வீட்டில் நடந்தது. பதினைந்து பேருக்குமேல் கூடியிருந்தனர். இங்கே குரோ குடும்பத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள்: குரோ ஸ்ட்ராஸ்பூர் நகர சபையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக ஆர்வலர், பியானோ தொடங்கி நான்கைந்து இசைக்கருவிகளை வாசிப்பவர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை தனியாகவும் அவர் மனைவியுடனும் சேர்ந்து நடத்திவருகிறார். எலிஸபெத் உளப்பகுப்பாய்வு வல்லுனர், புல்லாங்குழல் நன்கு வாசிப்பார். எனவே இயல்பாகவே la terre du ciel உறுப்பினர்களைக் குறித்து நல்ல அபிப்ராயம். நிகழ்ச்சியில் ‘இந்தியர்களின் தீர்க்க தரிசனம்’ (la Sagesse indienne ) என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு நன்றாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவிற்கு இல்லை. பத்துமணிக்கெல்லாம் வந்துவிட்டேன். வீட்டை அடைந்த பிறகுதான் காற்பந்துபோட்டி இரவு பத்துமணிக்கு தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டேன்.போட்டி முடியும்போது இரவு பன்னிரண்டு. இரவில் சீக்கிரம் படுத்துப் பழக்கம் உறக்கம் வரவில்லை. கைவசம் “ஹரூகி முராகாமியின்” ஸ்புட்னிக்கின் காதலர்கள்’ (Les amants du Spoutnick) என்ற படைப்பு ஒலிவடிவில் இரண்டு நாட்களுக்கு முன் நூலகத்தில் வாங்கிவந்த குறுந்தகடு இருந்தது. அதைபோட்டுக் கேட்டுவிட்டு படுத்தபோது இரவு மூன்றுமணி. இது பற்றி தனியாக எழுதவேண்டும்.

பா. செயப்பிரகாசம். – உயிர்வேலி.

இந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழுதவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது

மே தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும்  மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டிமாடுகளைபோல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடல்போல வாக்கியங்கள்:

– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா

‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்

“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு!”

இந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.

அதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.

“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”

“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”

கிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது..

—————————————————————————-

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s