மாத்தாஹரி

நூல்: மாத்தாஹரிபுதுச்சேரியிலிருந்துபுறப்பட்டஒருபெண்ணின்கதை
ஆசிரியர்: நாகரத்தினம்கிருஷ்ணா
பக்கங்கள்: 288
விலை: ரூ. 150
வெளியீடு: எனிஇந்தியன்பதிப்பகம்
102,
பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57,
தெற்குஉஸ்மான்சாலை,
தி. நகர்,
சென்னை – 17.

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
கி. . சச்சிதானந்தம்

ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.’

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான். சிவாஜி என்பான். வேறு ஒரு மசுறும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.


அரவணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்
வே.சபாநாயகம்

பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் – பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் – எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் – மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் ‘மார்த்தஹரி சமயக்குழு’ அவளை மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை – பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

– இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் ‘அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக’ அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் – ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே – அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ
ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் ‘கல்கி’ யின் ‘சோலைமலை இளவரசி’ நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் ‘சுஜதா’வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் – இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் – மழை பற்றிய வருணனையில் – எழுதப்பட்டிருக்கும் வரிகளும், ‘உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்” என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

——————————————-

உண்மை இல்லாத புனைவு எது?

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “மாத்தா ஹரி” குறித்த மேற்குறிப்புகள்
– ரெ.கார்த்திகேசு

‘உலகத்தரம்’ என நாம் அடிக்கடி karthiசொல்லிக்கொள்ளுகிறோம். ஆனால் உலகத்தரம் என்பது என்ன என்பதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. உலகமுழுவதுமுள்ள வாசகர்கள் ரசிக்கத்தக்க படைப்புகளை யாரும் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. படைப்பு என்பது அந்தந்த மொழிக்குள்ளும் அதன் கலாச்சார சூழ்நிலையிலும்தான் கட்டுண்டு கிடக்கிறது. ஆங்கிலம் இந்தக் கட்டுகளைத் தாண்டி போகும் காரணம் அதன் வாசகர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் ஆங்கிலம் நன்கறிந்திருக்கிரார்கள். அதன் கலாச்சாரத்தையும் அறிந்திருக்கிரார்கள். ஆகவே ஆங்கில இலக்கியம் உலகெங்கும் செல்லுபடியாகிறது.

இப்போது உலகின் பல பகுதிகளில் உள்ள வாசகர்கள் தமிழர்களாகவும் தமிழறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே தமிழ் இலக்கியமும் உலகெங்கும் புழங்குகிறது. ஆகவே உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழ் வாசகர்கள் வாசிக்கக் கூடியதாக அமைந்துள்ள சிறந்த பன்னாட்டு முகம் கொண்ட படைப்புகள் உலகத் தரம் வாய்ந்தவை என நாம் கூறிக்கொள்வதில் தவறில்லை. நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நாவலான ‘நீலக்கடல்’ அதற்கப்புறம் ‘மாத்தா ஹரி’ என்ற இவ்விரு நாவல்களும் அவற்றுள் நிச்சயம் சேரும்.

மாத்தா ஹரி பற்றி ஏற்கனவே விமர்சகர்கள் எழுதியுள்ளார்கள் – வெ. சபாநாயகம் திண்ணை இதழில், மற்றும் ‘வார்த்தை’ இதழில் சச்சிதானந்தம் – ஆகவே நான் எழுதுபவற்றை மேற்குறிப்பு என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

நாகி தமிழ் நாவல்களில் புத்தம் புதிய பரிமானங்களைக் கொண்டு வருகிரார் என்பதில் ஐயமைல்லை. கதை இரண்டு காலகட்டங்களில் நடைபெறுவதாககூறும்  உத்தியை இதற்கு முன்னும் நாவலாசிரியர்கள் பயன் படுத்தியுள்ளார்கள் என்றாலும் (கல்கியின் “சோலைமலை இளவரசியை’ சபாநாயகம் நினைவுபடுத்துகிறார்) நாகியின் கதைப்பின்னல் முற்றிலும் வேறானது. நவீனமானது. கல்கியின் நடை மிகச் சிருங்காரமாக வாசனை ஈர்க்கிறது என்றால் நாகியின் நடை ஒரு அதிர்ச்சியையும் கிளர்ச்சியும் தரும் நடையாக, நவீன தமிழ் வாசகனுக்கு ஏற்ற நடையாக இருக்கிறது.

நாகியின் நடைபற்றி வேறொன்றும் சொல்ல வேண்டும். தனது அத்தியாங்களின் சூழலுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப அவர் நடை மாறி மாறியும் வருகிறது. சில அத்தியாயங்களில் அவர் தன்னை முற்றாக மறைத்துக்கொண்டு தன் பாத்திரங்களையே உரையாட விடுகிறார்.(அத்தியாயத்தில் 15) அடுத்த அத்தியாயத்தில் ஆற்றோட்டமான நடை. இதே அத்தியாயத்தில் அவர் எடுத்தாளும் ராஜம் கிருஷ்ணனின் நடைபோலும் இதை வருணிக்கலாம். அத்தியாயம் 19ல் அவர் வாசகனை நேரடியாகப் பார்த்து பேசுவது கல்கியின்
பாணி. அத்தியாயத்தில் 37 எனக்கு பாலகுமாரனை நினைவுபடுத்தியது. அத்தியாயம் 40 துல்லியமாக ஒரு துப்பறியும் கதை நடை.

நாகிக்கென்று நிலைபாடுடைய நடை ஒன்றுள்ளது. ஆனால் அத்தியாயத்தின் உணர்வுக்கேற்ப  அவர் வேண்டுமென்றே இந்தப் பல்வகை நடைகளைப் பயன்படுத்துகிறார் என்பதே சிறப்பு. இந்த நோக்கம் முடிந்ததும் தன் நடைக்கு அவர் மீண்டு விடுகிறார். ஒரு நாவல் உத்தியாகவே இது பயன் படுகிறது.

இறுதி அத்தியாயத்தில் கிருஷ்ணா-பவானி உரையாடல்கள் ஒரு மாயவெளியில் நடைபெறுகின்றன. கதையின் சிக்கல்கள் சிலவற்றை தீர்ப்பதுபோல் இது மேலும் சில முடிச்சுகளையும் போடுகிறது. உண்மையான, புனைவா என்று வசகனைத் திகைக்க வைக்கிற இந்த அத்தியாயத்தில் உள்ள ஒருவரி இந்த நாவலை முற்றிலும் வருணிப்பதாக உள்ளது:

“உண்மை இல்லாத புனைவு எது?”

மாத்தா ஹரியை அதன் கதைச்சுவை கருதி படிப்பது அதன் பயனைக் குறைவாக அனுபவிப்பதே ஆகும். அதன் உண்மை வாசிப்புப் பயன் நாவலின் பல்வேறு உத்திகளை அறிந்துகொள்வதும், மனத்தின் இருளையும் வெளிச்சத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் வினைத்திறனை அனுபவிப்பதுமே ஆகும்.

நாகியை தமிழில் ஒரு முக்கிய நாவலாசிரியராக ‘மாத்தா ஹரி ‘ நிலைபடுத்தியிருக்கிறது.

நன்றி திண்ணை 19/02/2009
——————————————————————

இரண்டாம் உரையாடல்

(மாத்தா ஹரி நாவலை முன்வைத்து)

பேராசிரியர் பா. ரவிக்குமார்,         

Ravikumar                                       

தமிழில் எழுதப்படும் பெரும்பாலான நாவல்கள், யதார்த்ததிற்கு உட்பட்ட நேர்கோட்டு நாவல்களாக இருக்கின்றன. தமிழ் வாசகர்கள் இத்தகைய நாவல்களை வாசிப்பதற்கு என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஒருவகையில் தமிழர்களின் வாழ்க்கையேகூட பழக்கப்பட்ட வாழ்க்கைதான். இது ஏன்? இது எதற்கு? இது எப்படி என்பதையெல்லாம் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. இந்தக் கூற்று, பெரும்பாலும் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் விதிகள் அல்ல. பழக்கப்பட்ட வாழ்க்கை, வாழ்வதற்கு எளிதாக இருக்கிறது. வசதியாக இருக்கிறது. ஏன் இந்த எளிமையும், வசதியும் என்றால் வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை நாம் மறந்துவிடுகிறோம்; அல்லது பலவற்றை மறந்துவிட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை அதன் தன்மையில் புதிர்கள் நிறைந்தது. அதனாலேயே அழகானது. ரகசியங்கள் நிறைந்தது. ஒரு பள்ளத்தாக்கின் மௌனம் போன்றது.

எந்தக் கதையைச் சொன்னாலும், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்தப் புதிர்களையும், அழகையும், ஆபத்துகளையும் தன் எழுத்தில் கொண்டுவர நினைக்கிறார்.

‘மாத்தா ஹரி’ தமிழில் எழுதப்பட்ட நேர்கோட்டு நாவல் அல்ல; ஆனால், நேர்கோட்டு நாவலைப் படிக்கின்ற அனுபவத்தைத் தரக்கூடிய நாவல். அண்மைக்காலங்களில் (கடந்த பத்தாண்டுகளில்) தமிழில் எழுதப்பட்ட வித்தியாசமான நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைப் புகழவேண்டும் என்பதற்காக இக் கூற்றைக் கூறவில்லை. தமிழில் எழுதும் எல்லோருமே புகழ்ச்சியை விரும்புகிறார்கள். நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியோ, எனக்குத் தெரியாது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைக் கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

இந்த நாவலின் கதை இது; இது இதைச் சொல்கிறது……. அதைச் சொல்லவில்லை என்றெல்லாம் இந்த நாவலைப் பற்றி எதையும் கூறப் போவதில்லை. ஒரு முத்திரைக்குள் இந்த நாவலை அடக்கிவிடலாம் என்றால், அது நாவலாசிரியருக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி, என்கிற மூன்று பெண்களின் கதையை இந்த நாவலில் சொல்லிச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உண்மையில் கதை சொல்லல் மூலமாக, வாழ்க்கை குறித்து ஒரு விசாரனையை மிக இயல்பாக நடத்தியுள்ளார்.

நாவல் என்பது வெறும் கதையல்ல என்பதை நாம் அறிவோம். கதையின் மூலமாகவும், கதை மாந்தர்களின் மூலமாகவும் வாழ்க்கை பற்றிய பார்வையை நாவலாசிரியரின் முன்வைக்கிறான். சுவாரஸ்யமான கதை சொல்லலின்மூலம், நாகரத்தினம் கிருஷ்ணா வாசகர்களுடன் இணைந்து, வாழ்க்கை குறித்த தேடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நடனப் பெண்மணியான மாத்தா ஹரியைப் பற்றிய புனைவாகவும், புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் சென்ற பவானி என்ற பெண்ணைப் பற்றிய புனைவாகவும், அவளுடைய வளர்ப்பு மகள் ஹரினியைப் பற்றிய புனைவாகவும் இந்த நாவல் விரிகிறது. இடையில் நிறைய கதைமாந்தர்கள். மாத்தா ஹரியைத் திருமணம் செய்துகொண்ட ராணுவ அதிகாரி ருடோல்ப், மாத்தா ஹரியை நேசித்த அல்லது அவள் அழகில் மயங்கிய ஆண்கள், பவானியைத் திருமணம் செய்து கொண்ட தேவசகாயம், ஹரினியுடன் உறவு கொண்ட சிரில், அரவிந்தன், பவானியின் தந்தை, பாட்டி, தோழி பத்மா, தேவசகாயத்திடம் உறவு வைத்துக் கொண்ட எலிஸபெத், மாத்தா ஹரியின் மண்டையோட்டைத் தேடும் குளோத், பவானியை நேசிக்கும் பிலிப், நாவலின் இறுதியில் வரும் பஸ்கால் என்று ஏராளமான கதைமாந்தர்கள்.

ஆனால் மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று கதை மாந்தர்களை மையமிட்டுதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குள் நிறைய ஒற்றுமைகள். மாத்தா ஹரி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவள். கணவனால் வஞ்சிக்கப்பட்டவள். தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையின் காரணமாக, சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவள். ஜெர்மனியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்ஸ்தேச அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டவள். ஹாலந்தில் பிறந்து, இந்தோனேஷியாவில் துன்பங்களை அனுபவித்து, பின்னர் விபச்சார வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவள். பேரழகி.

காலமும், இடமும் வேறு என்றாலும், கிட்டத்தட்ட பவானியும் மாத்தா ஹரியைப் போன்றவள். சுயசிந்தனைவாதி. பவானியும் தண் கணவன் தேவசகாயத்தால் வஞ்சிக்கப்படுகிறாள். இத்தனைக்கும் மிகத் தெளிவான பெண். திருமணமும், காதலும் வேண்டாம் என நினைத்தவள். ஒரு கட்டத்தில் பவானி இப்படி நினைக்கிறாள்:-

“நடுத்தர வர்க்கத்து பெண்ணாய்ப் பிறந்தவள், ஒரு குபயோக சுபதினத்தில், காதலித்தோ அல்லது காதலிக்காமலேயோ, கல்லுடனோ, புல்லுடனோ, குறைந்தபட்சம் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தான் மலடி அல்லவென்று நிரூபித்தாக வேண்டும். கல்லுக்கும் புல்லுக்கும் பிடித்ததைச் சமைக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கென்று சினிமாவுக்குப் போகவேண்டும், அவனது விருப்பத்திற்கு நண்பர்களை உபசரிக்க வேண்டும், அவனது விருப்பத்திற்குப் படுக்க வேண்டும். நல்ல வேளை அவனுடைய விருப்பத்தைக் கேட்டுத்தான் மனைவியானவள் டாய்லெட் போகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை” (ப.111)

இப்படி நினைக்கும் பவானிதான், சூழலின் காரணமாகத் தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டு பிரான்ஸில் துன்புறுகிறாள். தற்கொலை செய்துகொள்கிறாள்; அல்லது கொலை செய்யப்படுகிறாள்.

தன் தாயின் இறப்பிற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஹரினி, இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவள். சிரில், அரவிந்தன் போன்ற இளைஞர்களிடம் மிக இயல்பாக உடலுறவு வைத்துக் கொள்பவள். வாசகர்கள் அதிர்ச்சியுறும் வண்ணம் நாவலின் இறுதியில் காணாமல் போகிறாள்.

“எனினும், அவர்களின் மூவரும் வாழ்க்கையும் முன்னர் சொன்னதுபோல ஒரு நிறம். ஒரு வாசனை. ஒரு பயணம். இதன் பொருள், எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையான நுகத்தடிகளைச் சுமக்கிறார்கள் என்று சொல்லி, இதைப் பெண்ணிய நாவல் என்று ஒரு சிமிழுக்குள் அடக்கிவிடமுடியுமா என்றால் முடியாது.” (ப.6) என்று மிகச் சரியாகவே, வாசகர்களையும் விமர்சகர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார் பிரபஞ்சன். வாழ்க்கை ஒரு வரையறைக்குள் அடங்குவதில்லை. இந்த நாவலையும் அப்படித்தான் கருத வேண்டியுள்ளது.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று பெண்கிளன் கதைகையும் நேர்கோட்டில் கூறாமல், நாகரத்தினம் கிருஸ்ணா முன் பின்னாக, சௌகரியமாகக் கதையை மாற்றிக் கூறுகிறார்.

நாவலை எழுகும் நாகரத்தினம் கிருஸ்ணாவிடமே பவானி பேசுதல், நாவலின் இறுதியில் நாகரத்தினம் கிருஷ்ணா பவானியிடம் பேசுவதன்மூலம் வாசகர்களிடம் பேசுதல் முதலிய உத்திகள் வாசகர்களுக்குப் புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாசகர்கள் அவரவர்களுக்குத் தேவையானதை இந்த நாவலின்மூலம் உணரலாம். பேரிலக்கியத்தின் தன்மை, வாசகர்களுடன் எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பதுதான். எது உண்மை? எது புனைவு? என்பதைப் பிரித்தறியாத வண்ணம், உண்மையும் புனைவும் கலந்த இலக்கியமாக இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஸ்டராஸ்போ, இந்தோனேஷியா போன்ற பல நகரங்களைக் களமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பதன்மூலம், பல்வேறு கலாச்சாரங்களின் தன்மையை மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிற தமிழ் நாவலாசிரியர்களிடமிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா வேறுபடும் இடம் இது. பல உலக நாவல்களை வாசித்த அனுபவம், கிருஷ்ணாவிற்கு அற்புதமாகக் கைகொடுத்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிநடையைத் தனியே கூறவேண்டும். நேர்கோடல்லாத நாவல்களில் வாசிப்புத் தன்மை (Readability) குறைந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாவலின் எந்த இடத்திலும் இத்தன்மை குறையவில்லை. ஒரு நூற்றணாடு வாழ்ந்த அனுபவத்தையம், பல நாடுகளைப் பார்த்த அனுபவத்தையும் வாசகர்கள் ஒருங்கே பெறுவார்கள் என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

வாழ்க்கை என்பதை ஒரு சாத்தியக்கூறு (Probability) என்று பார்க்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. ஹரினி என்னவானாள்? பவானியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதெல்லாம் பிரச்சனையில்லை. ஒரு துப்பறியும் நாவலாக இந்த நாவலை யாரும் கருதிவிடக்கூடாது. துப்பறியும் நாவலுக்குரிய சுவாரஸ்யம் இருக்கிறதே தவிர, உண்மையில், இது துப்பறியும் நாவலில்லை.

“வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய் கலவாதது. அந்தரங்கமானது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல். இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை” (ப.285) என்று நாவலின் இறுதியில் கூறுகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நாவலின் இறுதி என்று கூறுவதும் ஒரு வசதி கருதிதான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உண்மையில், இந்தப் பிரதி முதலும் முடிவும் அற்றதாக நீள்கிறது.

நாவல் முடியும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

வாழ்க்கைக்கும்கூட முதல் ஏது? முடிவு ஏது?

இந்த அனுபவத்தைத் தந்த கிருஷ்ணாவிற்குத் தமிழ் வாசகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

தமிழ் நாவலின் வரலாற்றை நாகரத்தினம் கிருஷ்ணா, தன் தத்துவப் பார்வையால் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

 

பா.இரவிக்குமார்

One response to “மாத்தாஹரி

  1. பிங்குபாக்: மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் | நாகரத்தினம் கிருஷ்ணா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s