Tag Archives: புதுச்சேரி

நீ வரவில்லையெனில் – புதிய நாவல்

2025 ஜூன் மாதம் வெளிவந்த எனது புதிய நாவல் குறித்து

—————————————————————–

அன்பினிய நண்பர்களுக்கு,

மனிதநேயம் என்கிற மனிதப்பண்பின் உன்னத  வெளிப்பாட்டைக் குறிக்க அன்பு, பாசம், பரிவு, இரக்கம், கருணை போன்ற சொற்கள் வழக்கில் இருப்பினும், கடைசியாக குறிப்பிட்ட ‘கருணை’ மனித நேயத்தினை தெளிவாக அடையாளப்படுத்தும் ஒரு சொல்.

மனிதரினத்தில் காணக்கூடிய அன்பும் பாசமும் வரையறைக்குட்பட்டவை, உறவு, நட்பு, என்கிற வட்டத்துக்குள் அடங்கியவை. முன்பின்தெரியாத மனிதர்களெனில் முகசுளிக்க கூடியவை. ஏன் பறவைகள் விலங்குகளிடம்கூட அன்பிற்கும் பாசத்திற்கும்  இடமுண்டு. மாறாக பரிவும், இரக்கமும், கருணையும் மனிதரினத்தில் மட்டுமே காணகூடிய மெய்மைகள். இப்பண்புடையோர் பிறர் துன்பங்கண்டு வருந்துவதோடன்றி அத்துன்பத்தைக் களையவும் முற்படுபடுகின்றனர். இம்மூன்றில் « பரிவும், இரக்கமும் » « மேலோர் கீழோர் » என்கிற பாகுபாட்டின்கீழ் தள்ளி நின்று செயல்படக்கூடியவை. மாறாக கருணயுள்ளம் கொண்ட மனிதர் துன்புறும் மனித உயிர்களைத் தேடி வருகிறார், அவர்களை அரவணைத்து கண்ணீர் துடைக்கிறார். வயிற்றுப்பசிக்கு வாசல்தேடி வரும் மனிதர்களுக்கு, உணவளிக்கும் மனிதர்களின் இரக்கத்தைக் காட்டிலும், வயிற்றுப்பசியில் வாடும் மனிதர்களைத் தேடிசென்று பசியாற்றும் மனிதர்களின் கருணையுள்ளம் பெரிது.  

நாடக அரங்குகளைக் காட்டிலும் நிஜவாழ்க்கையில் ஒப்பனையுடன் வலம் வருகிறவர்கள் இன்று எண்ணிக்கையில் அதிகம்.  இது பாசாங்குலகம். உறவு, நட்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், எழுத்தில் காட்டும் அறச்சீற்றமென எங்கும் எதிலும் பாசாங்கு. கருணைக்கு இதயபூர்வமாக பொருள்காண முற்படுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பிறர் நலத்தை மேடையிலும் சுயநலத்தை திரைமறைவிலும் தேடிச் சோர்வுறும்  கூட்டத்திடை,  வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் சபிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் கனக்க உதவிகரம் நீட்டும் மகாத்மாக்களை  இறைவனிடத்தை இட்டுநிரப்ப அவதரித்தவர்களென எண்ணத்தோன்றுகிறது.

பெங்களூரில் ஆட்டோ ராஜா என்ற மனிதர் நேற்றுவரை வன்முறைகளில் தீர்வுகண்ட மனிதர். இன்று திக்கற்ற பல மனித உயிர்களுக்கு எவ்வித விள்ம்பரமுமின்றி மறுவாழ்வுதரும் மகேசனாக இருக்கிறார் என்று கேள்வி. இந்நாவலில் இடம்பெறும் பெண், பிரான்சு நாட்டில் பிறந்து, தனது வளமான மேற்குலக வாழ்க்கையைத் துறந்து,  மொழி, பண்பாடு அனைத்திலும் வேறுபட்ட ; போக்குவரத்து, மின்சாரம் இவற்றை அறியாத, ஒருவேளை உணவைக்கூட எளிதாகப் பெறமுடியாத உலகில் பிறருக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருத்தி. முடிந்தவரை அதிகப் புனைவுகளின்றி அவள் வழித்தட உண்மையை எழுத்தில் வடித்திருக்கிறேன்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின்  உலக இருத்தலுக்கான  காரணங்களிலொன்றை  புதின மொழியில் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இந்நாவலைச் சிறப்புடன் கொண்டுவந்த சந்தியா பதிப்பகத்திற்கும், நண்பர் நடராஜனுக்கும் நன்றிகள்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

ஸ்ட்ராஸ்பூர்

nakrishna@live.fr

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

                              –  ரா கிரிதரன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’  – 1

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால்  ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியு ள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நீலக்கடல் – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை.  காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.

வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.

பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.

இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.

நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.

00Ooo

கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.

கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித  வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.

இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை

குடைராட்டினம்

குடைராட்டினம்

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை  தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.  

அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி.  பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில்  கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன்.  ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.

மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம்.  இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”

பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல்.  இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.

பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும்.  காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.

போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால்  கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:

– எங்கே வந்த?- என்றாள்.

– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.

– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?

– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.

– பிரண்டுன்னா

– நீங்க நினைக்கிறமாதிரிதான்.

வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.

– தெவடியா. தெவடியா..

குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.

இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட  குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான்.  ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.

ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன.  அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது.  அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.

பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக  ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ

 

 “ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து

அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.

« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை,  ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின்  தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை  அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.

     நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும்  மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென  விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து  வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »

ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம்.  அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.

கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும்  பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும்,  அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ?  எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

      கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது. 

      ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை  தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.

ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்;  இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற  தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.  

மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.

விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை.  மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு.  அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.

இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும்  அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.

 நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே

                                – ஔவை

_______________________________________

இறந்த காலம் (நாவல்)

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை

எஜமானடிமைகள்

              அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘புரட்சியாளன்’ (‘l’homme révolté’ ) என்ற கட்டுரை நூலை பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்த்தபோது இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல், மனதில் உதித்தது.   ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’  (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஒரு நுண்பொருளின்  பயன்பாடு எஜமான் (நுண்பொருள்)-அடிமை(செயலிகள்) உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.  அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து  புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். என்னுடைய கருத்தில் ‘எஜமானடிமைகள்’ எஜமானுமல்ல அடிமையுமல்ல.  எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள்.  இவர்கள் அலுவலங்களில் தலைமைக் கணக்காளராக இருக்கலாம், மேனேஜராக இருக்கலாம், வட்டாசியரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியராவும் இருக்கலாம், கட்சிகளில் மாவட்ட செயலாளரில் ஆரம்பித்து ஏன் கட்சித் தலைமை ஆகவும் இருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு ஏதோ சிலகாரணங்களை முன்வைத்து எஜமான்கள் என்ற ஹோதாவுடன் தங்கள் தங்கள் அரியாசனத்தில் இருந்தவாறே வேறு சிலருக்கு அடிமைகளாக இருக்கவேண்டிய நெருக்கடி.  உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.  இதுபற்றிய ஒரு நீண்ட  கட்டுரை எழுதி மலைகள் இணைய இதழில் வந்திருக்கிறது. இவர்களின் உள்மன வேட்கையை உணர்ந்து மேடையில் செங்கோலைக் கொடுத்து தலையில் மலர்க்கிரீடம் சூட்டுகின்ற தந்திரக்கார ர்களுக்கு அல்லது வெகுசனவழக்கில் ‘அல்லக் கைகளுக்கு’ உண்மையில் இந்த எஜமானர்கள் அடிமைகள். இக்கருத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது தான் 2017ல் வெளிவந்த ரணகளம் நாவல். நாவலில் வரும் அக்காள் மகாராணியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டபோதும், அண்டங்காக்கைகள் ஆட்டுவித்த கைப்பாவையாகத்தான் வாழ்ந்தார், மறைந்தார். உண்மையில் தலமை வாழ்க்கை பரிதாபத்திற்குரியது.

எஜமானடிமைகள் கட்டுரை விரைவில் ஒரு நூலில் இடம்பெற உள்ளது.

ரணகளம் நாவலில் இருந்து….

எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் வாயிலில் திரண்டிருந்த பெருங்கூட்டத்தையும்,  ஈக்கள் கூட தங்களை மீறி நுழைந்துவிடக்கூடாது என்பதைப்போல பொறுப்புடன் பணிசெய்த காவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணி நேர செவிலியர்கள், தனக்கு வேண்டியவர்களைத் தவிர அந்நியர் எவரும் அக்காளைச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கனகம் ஏற்பாடு செய்திருந்த மனிதர்களென அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிச் சாமர்த்தியமாக அக்காள் படுக்கையிற்கிடந்த  மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தான். இனி அக்காளின் கட்டிலைக் கண்டுபிடித்து அக்காள் ‘உயிரை’ விடுவிக்கவேண்டும்.

நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் வேளையில் சித்திரகுப்தன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம்’ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி’ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று. தொழுவத்தில் சாணம், கோமியம், கோரைப் புற்கள் கலவையிற் படுத்திருந்த எருமைக்கிடாவைக் குளத்தில் இறக்கித் தேய்த்து கழுவி மறுகரைக்கு  நீந்தவைத்து கரையேற்றி அழுந்தத் துடைத்தபோதும்  மிஞ்சியிருந்த நீர்த்திவலைகளை ஒற்றியெடுக்கமறந்து அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகள் உறிஞ்சிய சோமபான வாடையையும், ஆடைகளிற் படிந்திருக்கும் அத்தர் ஜவ்வாது மணத்தினையும், எருமையின் அடிவயிற்றில் கெட்டியாய் ஒட்டிக்கிடந்த சாணிப் பொருக்குகள் முடக்கியிருந்தன.  கடந்த  சில வருடங்களாகவே எமனுக்கு தனதுவேலை குறித்து அதிருப்தி இருக்கிறது.  எத்தனைகாலம் மனைவியுடன் சல்லாபம் செய்வதற்குக்கூட நேரமின்றி மானுட உயிரை எடுப்பது, அலுத்துவிட்ட து.  திரும்பவும் பூமியிற் பிறக்க விண்ணப்பிக்கலாமென்று தோன்றியது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தொழிலையும், தன்னையும் நவீனப்படுத்தும் யோசனை இருக்கிறது.  சியாமளாதேவி  இடத்தில் வேறொரு தேவி; தண்டம், பாசக்கயிறுக்குப் பதிலாக புதியவகைஆயுதம். ஒருநாள் போல அணிகிற பட்டு வஸ்திரம், பதக்கங்கள், கிரீடம் முதலானவற்றைத் தூர எறிந்துவிட்டு, இன்றைய நாகரீகத்திற்கேற்ப கோட்டு சூட்டு, எருமைக்குப் பதிலாக நவீன மோஸ்தரில் ஒரு வாகனமென்று ஆசைகள் நிறையவே இருக்கின்றன.  

கடந்த சில வருடங்களாக அவனுடைய வேலை பளு குறைந்து வருவதையும் மறுக்கமுடியாது.  ‘காமா சோமா’ உயிர்களுக்கு பூலோகத்தில்  தற்போது உத்திகளும், வழிமுறைகளும் ஏராளம். எமனுடைய சேவைக்காக மனிதர்கள் எவரும் காத்திருப்பதில்லை. மானுடர்களில் அநேகர் தம்முடைய உத்தியோகத்தின்மீது  கண் வைத்திருப்பது அவனுக்கு நன்றாகத்தெரியும். தீவிர சுதந்திர அபிமானிகளில் சிலர், பிறர் உயிரைப் பறிக்கிற சுதந்திரமும் வேண்டுமென்று போராட இருப்பதாகக் கேள்வி.  இருந்தும் இவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், அத்தனை சுலபத்தில் போவேனா என்று அக்காளின் ஜீவனையொத்தவையும் இருக்கவே செய்கின்றன. உறக்கத்திலிருந்த கும்பகர்ணனை யுத்தத்திற்கு எழுப்பியதும், பாதி சம்போகத்தின்போது  உத்தியோகத்திற்குத் திரும்ப தமக்குள்ள நிர்ப்பந்தமும் எமனுக்கு ஒன்றுதான்.   காரியம் முடிந்த உடனே காலவிரையமின்றி  எமலோகம் திரும்பவேண்டும்  சியாமளாதேவியை மஞ்சத்தில் சாய்த்து.. பாதியில் விட்டு வந்த சம்போகத்தைத் தொடரவேண்டும். எமன் கௌபீனத்தை இறுக்க மறந்திருந்தான், வழியனுப்ப கையை அசைப்பதுபோல  எருமை இருமுறைக்  கொம்புகளை அசைத்து, நாசி, மலதுவாரங்கள் ஊடாக தனது ஒவ்வாமையை வாயுவாக வெளியேற்றியதும், ஒருமுறை உடலைச் சிலிர்த்து மீண்டும் நடக்க ஆரம்பித்தது.

பகலில் தற்போதெல்லாம் அடிக்கடி  போக்குவரத்து நெரிசல்கள். சாலை மறியல்கள்.இரவுகளில் அம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதில்லை, குறித்த நேரத்தில் உயிரைப் பறித்து திரும்ப சௌகரியம்.    இவன் வரவை  எதிர்பார்த்து இரவில், அகால வேளைகளில்  தெருநாய்களின் ஓலம், நரிகளின் ஊளை; ஆந்தை, கோட்டான்களின் அலறல் போன்றவை வெகுகாலந்தொட்டு  கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள், அவைகள் இன்றில்லை என்பது ஒரு குறை. எங்கோ ஒரு கழுதை மட்டும் ஆரோகணத்தில் தொடங்கி  அவரோகணத்தில் முடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு, கால அட்டவணைப்படி  அக்காளின் உயிரைப் பறிக்கச் சாத்தியமா என்ற சந்தேகம் திடீரென எமனுக்கு வந்தது. அக்காள்  நலம் பெறவேண்டும் என்பதற்காக அக்காள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  தீவிரப்  பிரார்த்தனையில் இறங்கியிருந்தனர் அப்பிரார்த்தனைகளுக்கு இறங்கி,  இக் கடவுள்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவார்களோ,  எமதர்மராஜா என்ற தம் பெயருக்குச்  சிக்கல் வருமோ என்ற கவலையளித்த சந்தேகம். தன் கவலையைச் சித்திரகுப்தனிடம் தெரிரிவிக்க அவன் சிரித்தான் « பிரார்த்தனையின் நோக்கமே அக்காள் உயிர் சீக்கிரம் போகவேண்டும், என்பதுதான் அதனாலே கவலைப்படாம பூமிக்குப் போங்க. என் கணக்கு ஒருபோதும் தப்பாது. » எனக்கூறி சமாதானமும் செய்தான்.

அடர்த்தியாய் வானை உரசும்வகையிற்  தளும்பிக்கொண்டிருந்த இரவில் மூழ்கி பூமிப்பந்தைச் சில மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தாயிற்று.  சுரப்பெட்டிபோல ஒலித்த சுவர்க் கோழிகளின் சப்தமும், குண்டியைச் சொறித்தபடி வெளியில் வந்த நபர் தெருவைக் குறுக்காகக் கடந்து, ஒருமுறைக்கு இருமுறை  எதிர்வீட்டுக்காரன் சுற்றுசுவர்தாணா என்பதைத் திடப்படுத்திக்கொண்டு  மூத்திரம் போனதும் வந்திருப்பது பூமி என்பது உறுதியாயிற்று.  இனி எடுக்கவேண்டிய உயிர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற  மருத்துவமனையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சிக்காலானதல்லவென்று கூறி  எமனுடைய காரியதரிசி தெரிவித்த குறிப்புகள் மனதிலிருக்கின்றன. இந்திரலோகம்வரை மருத்துவமனையின் புகழ்  எட்டி இருந்தது. ஓரளவு சமாளிக்கக் கூடிய செலவில் உயிரை எடுப்பதற்குப் பூலோகத்தில் எவ்வளவோ வசதிகள் இருக்கிறபோது எதற்காக லட்சமாக லட்சமாக கொட்டிக்கொடுத்து, உயிரைக் போக்கிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு பெரிய பட்டிமன்றமே தேவர் சபையில்நடந்தது.  இரம்பையையும் ஊர்வசியையும் அணிக்கொருவராகப் போட்டிருக்க அப்படியொரு கூட்டம்.  முதன்முறையாகப்  பலகோடி உயிர்களைப் பறித்து எமன் செய்திருக்கும் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா. விழாவில் நமது எமனுக்கு பூ, பழம், தேங்காய், பாக்குவெத்திலை, பட்டு வஸ்திரம் பத்தாயிரம் வராகன் பொற்காசுகள்  தட்டில் வைத்து அளித்தார்கள். தமிழ்நாட்டுப் பிரதிநிதி ‘அண்டம் காத்த  தொண்டன்’ , எமனுக்கு  ‘உயிர்ப்பறிக்கும் உத்தமன்’  விருதை அளித்துப் பொன்னாடைப் போர்த்தினார். போர்த்திய கையோடு, ‘அப்படியே எனக்குமொரு விருதை ஏற்பாடு செய்திடுங்க, ஆகிற செலவை நான் பார்த்துக்கிறேன்’ என்று எமன் காதில் போடவும் செய்தார்.

 «யாருய்யா அது, எருமை மாடு ! படுத்திருப்பது தெரியலை »  என்ற குரல் கேட்டு எமன் சுய நினைவுக்குத் திரும்பினான். அவனுடைய வாகனம் சாலையிற் படுத்திருந்த  ஒருவரை மிதித்திருந்தது. சற்றுத்தள்ளி  ஜெகஜொதியாக மருத்துவமனை. வாகனத்தை  நிறுத்தி இறங்கிக் கொண்டதும், மூக்கனாங்கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், விளக்குக் கம்பமொன்றில் கட்டினான்.

 சிறுகுடலின் முற்பகுதி தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து சுவாசகுழாயை நெறித்தது.  இரு நாசி துவாரங்களும் காத்திருந்தவைபோல அடைத்துக்கொண்டு மூச்சை நிறுத்தப் பிரயத்தனப் பட்டன.  நெஞ்சில் கபம் கட்டியிருந்தது, இருமல் நிற்க மறுத்தது, எழுந்து உட்கார்ந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாக இருந்தது.  இருமல், சளி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என்று அனைத்தும் கைகோர்த்திருந்தன. இருமும்போது கண்களில் நீர் கோர்த்து ஒன்றிரண்டு சொட்டுகள் கன்னக்கதுப்புகளில் விழுந்து உடைவதுண்டு. இருமல்  சளியுடன் கடந்த சில நாட்களாக இரத்தத் துளிகளும் கலந்திருக்கின்றன. இருமி முடித்த மறுகணம், தொண்டைவறட்சியை உணர்ந்தாள். தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், பிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம்’ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். கனகம் எங்கே போய்த் தொலைந்தாள்?  இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அவள் வருவதில்லை. கறீம் கூறிய வார்த்தைகள்  உண்மையாக இருக்குமோ என நினைத்தாள். « கடைகள் நிர்வாகத்திற்குப் புதிதாக ஒரு குழுவினரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை  ஒப்படைக்கும்படி நீங்கள் கையொப்பம் இட்டிருந்ததாக ஒரு பேப்பரை  கனகம் உங்கள் குடும்பத்தாரிடம் காட்டினார். அந்த அம்மாள் பேச்சை நம்புகிறார்களேயொழிய, உங்களைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்குமில்லை. நான் பயந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது. உங்க தெய்வத்துக் கிட்ட நீங்க வேண்டிக்குங்க,  நமாஸ் பண்ணும்போது, உங்களைக் காப்பாத்தும் படி நானும் அல்லாகிட்ட வேண்டிக்கிடறேன், அதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியலை. » என்றான்.

மெள்ள எழுந்திருக்க முயன்றாள், இருமல் திரும்பவந்தது, ஓக்காளித்தாள், ஓக்காளித்ததைக் இரண்டுகைகளிலும் வாங்கினாள், சகதிபோல இரத்தமும் கோழையும். மயங்கி விழுந்தாள். கிராமத்தில் அம்மாவையும், சகோதரர்களையும், படியாட்களையும் கூட அதிகாரம் செய்தவள்தான். இயல்பான அவ்வதிகாரத்தைச் செலுத்திய இவளும் சரி, செலுத்தப் பட்ட மனிதர்களும் சரி மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். புதுச்சேரியில் செலுத்திய அதிகாரம் உபரிமதிப்பைக் குறிவைத்து, அவர்கள் வேலை நேரத்திற்கு விலைகொடுத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் சிப்பந்திகளை அடிமைகளாகப் பார்த்த எஜமான் அதிகாரம். காலம் விசித்திரமானது. இன்றைக்கு அவள் உயிர்கூட  அவள் பொறுப்பிலில்லை. இனி அவளுக்கு உரிமையான கடையில், ஓட்டலில், ஜவுளிக்டையில் மல்லிகைச்சரம் ஊதுபத்தி மணக்க நிழற்படத்தில் சிரிப்பாள்.  அவளுக்கென்றுள்ள வாடிக்கையாளர்களைப் பிடிக்கவேண்டுமில்லையா ?

இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்கிறார்கள். முதலில், ஊரில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு புதுச்சேரியில் மூத்தார் குடும்பத்தில் ஆரம்பித்து வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். ‘கணக்கன்வீட்டு கம்பத்தத்தில்’ பல தலைமுறையாக அடிமைபட்டுக்கிடந்த கறுப்பன்கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான், இறுதியாகக் கனகம். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.

       அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திர வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது? ஒருவேளை சிறுவயதில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்குத் தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவி வைக்க உழைமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள். பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் மூத்த அண்ணனிடம்  முறையிட்டதும், பத்து ருபாயை விட்டெறிஞ்சி “போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ” என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும்” எனச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

        பூப்டைந்த அக்காளுக்கு வரன்கள் தேடும் காலத்தில். பொருத்தமானவனைத் தேடிக் களைத்துப்போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், மூத்த சகோதரருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்தவாறுப் பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்.

       “என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா? இது புதுசா இருக்கு!”

        “ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர்’ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.”

        அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப்  படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது செக்குமாடுகள் பார்வையைத் விலக்க முடிவதில்லை.

ஏசியின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. சிறுவயதில் பனைஓலையில் செய்த காற்றாடியை குச்சியில் ஏந்தியபடி சகவயது பையன்களோடு ஒடுவாள். அப்போதொரு சத்தம் வரும், அதுபோலத்தான் குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. அளவைக் கூட்டிவைத்தால்  உடல் வெட வெடவென்று உதறுகிறது. ஒன்றுக்கு இரண்டுபேராக தமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் ஒருத்தியிடம் குறைக்கும்படி சொல்லியிருக்கலாம்,  பார்வையாளர் நேரத்தின்போது அங்கிருருந்த ஜவுளிக்கடை கணக்கப்பிள்ளை செல்வமணியிடம் கூறினாள். அவர் வேண்டுமென்றே ஐந்தில் உயர்த்திவைத்து, இரண்டொரு நிமிடங்கள் இவள் படும் வேதனையைப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்  பிறகு இரக்கப்பட்டவர்போல ஏசி அளவைக் குறைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தார். இவள் திரும்பமாட்டாளென்பது, அவருக்கு முடிவாகிவிட்து. அக்காளின்  கணவர் இறந்த பின்பு கனகத்தின் சிபாரிசில் நியமிக்கப் பட்ட ஆள். முதுகில் துணிமூட்டை சுமக்கும் சலவைத் தொழிலாளிபோல இவள் எதிரே பவ்யமாக நின்றவர். அக்காள் விட்டத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.  முடிச்சு முடிச்சாகக் குழப்பமான நினைவுகள், ஜொராஷ்ட்ரியர் பிணம்போல இவள் கிடக்க உடலுக்கு மேலே சுற்றிவரும் கழுகுகள். தரையில்,  சிறுகூட்டமாய்  உருமும் நரிகள், அவற்றை முந்திக்கொண்டு, நடக்கவிருப்பதை காணச் சகியாததுபோல தலையைத் தொங்கப்போட்டபடி நிற்கும் முருகேசன் கழுதை.

       கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும்’ வலது கரத்தில் ‘சுருக்கு’மாக நமது எமன்.  

       “வந்தாச்சா? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன்”.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. “பக்கத்திலென்ன கழுதையா? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது? வாகனத்தை மாற்றிக் கொண்டீர்களா?”

       “இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகளிருப்பது உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதாக வாங்கவேண்டும். தவிர வேறு யோசனைகளும் இருக்கின்றன.  இந்திரனிடத்தில் பிரச்சினையை கொண்டுபோகவேண்டும் நேரமில்லை. “

       ” பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை.”

          « உன்னிடத்தில் வாதிட நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகனும். எமலோகத்துலே வேலைகள் நிறைய இருக்கின்றன. கிளம்பு  நீ !


          ” இல்லை.. எனக்கு கழுதைமேல் ஏற விருப்பமில்லை, விட்டுடுங்க.”

          ” இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னுடன் இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘தண்டத்தில்’ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது.

—–

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

ஆனந்தரங்கப்பிள்ளை – 1

(   இத் தொடர் கடந்த ஆறு  மாதங்களாக யாம் என்ற இதழில் வெளிவருகிறது. யாம் இதழ் ஆசிரியர் குழுவினருக்கு குறிப்பாக  கபிலன் அவர்களுக்கு நன்றி சொல்ல்\ வேண்டும்.  ” யாம் இதழுக்கு  ஆனந்த ரங்கப்பிள்ளை குறித்து ஒரு தொடர்  எழுதவேண்டும்!’  என்ற வேண்டுகோளை வைத்தார். நான் அதனைத் தவிர்த்துவிட்டு சொல்லும் சொல் சார்ந்த வெளியும் என்ற தலைப்பில் வெற்றிபெற்ற நவீன புதினங்களின் குறிபாக எனது வாசிப்பு ரசனைக்கு உட்பட்ட எழுத்தாளர்களின்  சொற்களின் பயன்பாடு கலை நுணுக்கம் குறித்து எழுத நினைத்தேன். முதல் கட்டுரையை அனுப்பியும் வைத்தேன் பிரசுரமும் ஆனது. ஆனால் இதழின்  பிற ஆக்கங்களைவாசித்த தும் ஆனந்தரங்கப்பிள்ளை தொடரே பொருத்தமானது என முடிவுசெய்தேன். கட்டுரையின் நோக்கம் பிள்ளையின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவது. சிலதிருத்தங்களுடன் பிரசுரம் ஆகிறது)

          

மண்ணில் மனிதராய்ப்பிறந்த எல்லோரும் வரலாறு படைப்பதில்லை, வாரலாறாகவும் ஆவதில்லை.

வரலாறு என்பது  மானுட வாழ்க்கையில் சாதனைப் படைத்த மனிதர்களையும், அவர்களை மையப்படுத்திய நிகழ்வுகளையும் பேசுவது. உலகின் முக்கியத் தலைவர்களைப்பற்றிப் பேசுகிறபோதெல்லாம் அவர்களோடு பிறந்த வாழ்ந்த மண்ணின் வரலாறும் உடன் பயணிக்கிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தை, அக்காலத்திற்குச் சொந்தமான அரசியலை அத்ன் வெற்றிகளை, தோல்விகளை அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளை அவை  தெரிவிக்கின்றன.

இன்றைக்கும் புதுச்சேரி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது, 18ஆம் நூற்றாண்டின் ஆளுமையாகத் திகழ்ந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும், வரலாறும், அவரின் தலைமைப் பண்பும் முன் நிற்கின்றன. ஆவணங்கள் அடிப்படையில், கல்வெட்டுகள் அடிபடையில், தொல்பொருள் ஆய்வில் கிடைக்கும் உண்மைகள் அடிச்சுவட்டில் பிற்காலத்தில் வரலாறாசிரியர்கள் சரித்திரத்தைப் எழுதுவதுண்டு.  1736 செப்டம்பர் மாதம் தொடங்கி 1761 ஆண்டு சனவரி மாதம் வரை தமது வாழ்வை ஒட்டி நிகழ்ந்த சம்பவங்களை நாட்குறிப்பாகப் பதிவு செய்து ஓர் இருபத்தைந்து ஆண்டுகால அரசியல், சமூகம் சார்ந்த நிலமைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ஆனந்தரங்கப் பிள்ளை உதவி இருக்கிறார்.   நாட்குறிப்பென்பதால் சிறு சம்பவங்களைக்கூட கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார். அரசியல், அதன் பண்பிற்கு ஒப்ப சுயநலங்கள் சூழ்ச்சிகள், சதிகள், உட்பகைகள், தந்திரங்கள் உபாயங்கள், ஆங்கிலேயர் பிரெஞ்சுக்கார்களுகிடையிலானப் பங்காளிச் சண்டைகள், உள்ளூர் ஆட்சியாளர்களுக்கிடையிலான குத்துவெட்டுகள் ;  காலனித்துவகால சமயப் பிரச்சினைகள், சமூக சிக்கல்கள், கலகங்கள், அபாயங்கள் ; வணிகக் கொள்கைகள், இலாப நோக்கு, ஆசைகள், முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து என ஒரு பெரும் பட்டியலுக்கான தலைப்புகளில் விவாதிக்கப் போதுமான தகவல்களை தெள்ளத்தெளிவாக பிள்ளை  பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது 1709  மார்ச் மாதம் 30ந்தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார். பிரெஞ்சு நிர்வாகத்தின் வணிகச் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்த நெருங்கிய உறவினர் நைனியப்ப பிள்ளயின் வேண்டுதலை ஏற்று, அவரது பணிகளுக்கு துணை நிற்க புதுச்சேரிக்கு வருகைதரும் ஆன ந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை, நைனியப்பிள்ளையின் வீழ்ச்சிக்குப் பிறகு அவருடைய மகன் குருவப்பபிள்ளையுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் தந்தையின் மறைவுக்குப் பிறகு காலனிய பிரெஞ்சு அரசாங்கத்தின் முதுகெலும்பாக, உந்துவிசையாக தொடக்கத்தில் துபாஷ் பின்னர் தலைமை துபாஷாக  அவருடைய மகன் ஆனந்தரங்கர்  இருந்தாரென வரலாறு தெரிவிக்கிறது.

1735 ல் இன்றைய பரங்கிப்பேட்டையில், ஆனந்தரங்கப் பிள்ளையை அவருடைய இருபத்தாறுவயதில்  பிரெஞ்சிந்திய நிறுவனத்தின் வரத்தக பிரதிநிதியாக அப்போதைய பிரெஞ்சு ஆளுனர் லெனுவார் (Lenoir)  நியமிக்கிறார். அதுமுதல் அவர்காட்டில் மழைதான். அதற்கு மறுவருடமே இன்றைக்கு உலகமே வியக்கின்ற அவருடைய « தினப்படி  சேதி குறிப்புl » அல்லது « சொஸ்த லிகிதம் » எழுதப்படுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள் கிட்டத்தட்டட 10000 நாட்கள் 10000 பக்கங்கள். பிரமிப்பூட்டுகிறது. ‘செயற்கரிய செய்வார் பெரியார்’ என வள்ளுவன் சொற்களுக்கு சாட்சியமாக நாட்குறிப்புகள் இருக்கின்றன. 1761 ஆம் ஆண்டு எழுதி முடித்த நாட்குறிப்பு,  85 ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 1849 ஆம் ஆண்டு அ. கலுவா மொம்பிரன்(A. Gallois-Montbrun) என்பவரால் வெளி உலகிற்குத் தெரியவருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  கீழ்த்திசை வழக்கு மொழி கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த ஜூலியன் வான்சான் (Jelien Vinson) என்ற  தமிழறிந்த பேராசிரியரால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இன்று புதுச்சேரி அரசு பன்னிரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மிகவும் சிரத்தையுடன் தொகுத்ததில் பெரும்பணி ஆற்றியவர் ரா. தேசிகம் பிள்ளை.

தலைவர் என்பவர் யார் ? அவர்கள் வழி நடத்தும் மனிதர்கள் யார் ? அம்மனிதர்களுக்கும் தலைமைக்குமான உறவைக் கட்டிக்காக்கவும், அதிகாரமின்றி அன்பாக அரவனைத்து  திட்டமிட்ட இலக்கினை எட்டுவதற்கும் வழிமுறைகள் எவையெவை?  தேவையான பண்புகள்,  செயல் முறைகள் எவை ?  போன்ற கேள்விகளெக்கெல்லாம் பிள்ளையின்  நாட்குறிப்பில் பதில்கள் கிடைக்கின்றன. ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை அரசியல், நவீன உலகின் நிர்வாக அரசியலுக்குத் தேவையான அத்தனை நுட்பமான கூறுகளையும் உள்ளடக்கியது என்பதனை அவருடைய நாட்குறிப்புகளைக் கொண்டு தெரிந்து கொள்கிறோம்.

தலைமைத்துவம் என்பது முதன்மைப் பணி. தன்னைச்சேர்ந்த மனிதர்களை மட்டுமல்ல, தன்னையும் வழிநடத்திச் சாதிப்பது. அத் தலைமைத்துவப் பண்பு எத்தகையது ? அதன் சக்கரங்கள் பழுதற்றவையா, அவை சரியான அச்சில் சுழல்கின்றனவா, திட்டமிட்ட நேரத்தில்  இலட்சியத்தை எட்டுவதில் அதன் பங்களிப்பு நம்பகத் தன்மைக்கொண்டதா ? என்பதை பகுத்தறியும் முயற்சியில் நமது சிந்தனையைச் செலுத்துவதேகூட ஒருவகையில் தலைமைத்துவ நலன் சார்ந்ததே. இடியின் நிழலில் மின்னலாய் தோன்றி மறையும் மனிதர் உதாரணங்கள் நமக்கு வேண்டாம் ; நமக்குத் தேவை காலவானில் சூரியனாய், உயிர்களின் பச்சையத் தேவையாய் நீடித்து பிரகாசிக்கிற அசாதாரண மனிதர்களின் தலைக்குப்பின்னே ஒளிர்கிற ஒளிவட்டங்களுக்கான காரணத் தேடல்கள்.   பாரதி பாடியதுபோல « கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திடவும், மண்ணில் தெரியும் வானம் வசப்படவும் »   கனவுகள் உண்டெனில், உங்களுக்கு ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கையும் அவர் எழுதிய ‘தினப்படி சேதிக்குறிப்பு’ உதவும்.  வெற்றி என்பது தனிமனிதனுக்குரியது மட்டுமல்ல தனித்து சுவைப்பதைக்காட்டிலும், பெற்ற வெற்றியை பிறருடன் பகிர்ந்து சுவைப்பது கூடுதல் இன்பத்தைத் தரும். ஒட்டுமொத்த குழுவினரின், கூட்டத்தின், சமூகத்தின், தேசத்தின் வெற்றியில், நலனில்  அக்கறைகொண்டு அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு உறுதுணையாக நின்று சாதிப்பவனே சிறந்த தலைவனாக இருக்க முடியும், என்பதை ஆனந்த ரங்கப்பிள்ளையின் வாழ்க்கைத் தரும் செய்தி.

 

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண்டனைத்துஇவ்வுலகு.

 

என வாழ்ந்துகாட்டியவர் ஆனந்தரங்கப்பிள்ளை

 

தலமைப் பொறுப்பு இரு வகைகளில் கிடைக்கிறது, சுய உழைப்பில் சுய திறமையில் தலைமைப் பொறுப்பை எட்டுவதென்பது ஒன்று. வாரிசு என்றவகையில் தலைமையை எட்டுவதென்பது பிரிதொன்று. பின்னவர்களைக் காட்டிலும் முன்னவர்களே தலைமைப் பண்பை இயல்பாகச் சுவீகரித்து வாழ்க்கையிலும் தொழில்முறையிலும் சாதித்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை இவர்களோடு இசைந்து பயணிப்பவர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஆனந்தரங்கப்பிள்ளை  வேந்தனோ, படைத் தளபதியோ அல்ல. எனினும் அவர் ஈட்டிய வெற்றி, புகழ் அவர்கள் சாதனைக்கு இணையானதே.

உலக வரலாற்றில் மன்னர்களைக் காட்டிலும் அவர்களை வழி நடத்திய அமைச்சர்கள், அரசியல் குருக்கள் வழிகாட்டுதலால் சம்பந்தப்பட்ட அரசுகள் வெற்றிகளை குவித்திருகின்றன. பிள்ளை ஒர் அரசியல் சாணக்கியர். அவர்காலத்தில் பிரெஞ்சு அரசு அடைந்த பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே உரிமைகோரத் தக்கவர்.  பிள்ளையின் நாட்குறிப்பை, அவருடைய வாழ்க்கையை தன் முனைப்பு கட்டுரைகளாகவோ, ஆர்வத்தை த் தூண்டுகிற கதைகளாகவோ, காலத்தின் கண்ணாடி ஆகவோ, பிரெஞ்சு காலைத்துவத்தின் அத்தியாயங்களாகவோ, ஒரு தமிழனின் சாதனையாகவோ அவரவர் ரசனைக்கேற்ப வாசித்து மகிழலாம். அடுத்துவரும் அத்தியாயங்களின் உங்களின் அனுபவம் அதுவாக இருக்க என்னால் இயன்றவரை முயன்றிருக்கிறேன்.

பிரெஞ்சு காலனிய அரசு இருவகை சலுகைகளின் அடிப்ப்டையில் மதமாற்றத்தை ஊக்கப்படுத்தியது :

சமூகத்தின் அடிதட்டுமக்களை ‘Renonciation’ (பூர்வீக அடையாளத்தை துறத்தல்) என்கிற சிறப்பு ஆணையின் கீழ் பிரெஞ்சு குடிமக்களாக மாறினால் அடித்தட்டு மக்கள், மேல்தட்டு மக்களுக்கு இணையாகிவிடுவார்கள் என்பது முதற் சலுகை.

கிறித்துவத்தை தழுவியவர்களுக்கு காலனி நிர்வாகத்தில் முன்னுரிமை என்பது இரண்டாவது சலுகை.

ஆனால் மதமாற்றத்திற்குப் பின்னரும் கிறித்துவ தேவாலயங்களில் அன்றைக்குச் சாதிபாகுபாடுகள் இருந்தன. பிரெஞ்சு குடிமக்கள் ஆனபின்னரும் ஐரோப்பியருக்கு இணையாக ஊதியமோ சலுகைகளோ வழங்கப்படவில்லை குளோது மரியுஸ் (Claude Marius), புதுச்சேரி தமிழர்  தம்முடைய இருபதாம் நூற்றாண்டு இந்தோ சீன அனுபவத்தை எழுதுகிறார். இதனை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்தரங்கப்பிள்ளை ஊகித்திருக்கவேண்டும். அவர் உறவினர் குருவப்ப பிள்ளைபோல  மதம் மாறியிருந்தால் உட னடியாக தலைமை துபாஷ்  உத்தியோகம் கிடைத்திருக்கும். காலம் காத்திருந்த து, கவர்னர் துய்ப்ளே தமது மனைவி ழான் என்பவளின் தலையணை மந்திரத்தை  உதாசீனம் செய்து தகுதியின் அடிப்படையில் அப்பதவியைப் பெற நெருக்கடியை உருவாக்கியது.  யாரை எங்கே வைக்கவேண்டுமென காலத்திற்குத் தெரியம். ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் பல துபாஷிகள் பல்லக்கு ஏறினார்கள். காலம் இன்றளவும் சுமப்பது புதுச்சேரி ஆனதரங்கப்பிள்ளையை.கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக் குறைவாக இருந்தகாலத்தில் (பதினெட்டாம் நூற்றாண்டில்) கல்வியும்பெற்று, சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையையையும் பின் தங்கிய வகுப்பினர் ஒருவரால் சாதித்து காட்டமுடிந்ததெனில் அது சாதாரண விடயமல்ல.  தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்ட மனிதர்கள்  வெற்றிபெறுவார்கள் என்பது எழுதப் படாதவிதி.

 

தொடரும்

மொழிவது சுகம் டிசம்பர் 1 2019

அ. திறனாய்வு பரிசில்

பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது.  உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.

 

பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020

வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு’ எனும் க.பஞ்சாங்கம்.

தமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.

தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.

முகவரி: பாரதிபுத்திரன்
எண்10, நான்காம்குறுக்குத்தெரு
துர்கா காலனி
செம்பாக்கம்  ,   சென்னை-600073
மின்னஞ்சல்: nayakarts@gmail.com
செல்பேசி:94442 34511

 

ஆ. எது சுதந்திரம் ?

சுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.

அதற்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறதா ? விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என  நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.

மனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.

ஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். «  என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ? ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.

என்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை.  அதற்கு முன்னதாக செக்‌ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன்.  « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.

அப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த  தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன்.  இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன்.  பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு,  உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4  வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில்  DPECF, பின்னர் DECF (accountancy).  அதன் பின்னர்  மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா.  கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு  சொந்தமாகத் தொழில்.  தொழிலில் கூட்டு எனது சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக்கருதி என்னுடன் இணைந்துகொள்ள  விரும்பிய பிரெஞ்சு நண்பனின் உதவியை நிராகரித்ததென முடிந்தவரை இழப்பினைபொருட்படுத்தாது எனது சுதந்திரம் என நினைப்பவற்றை   காப்பாற்ற நினைக்கிறேன்.

எனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது ?  எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம். இறுதியாக நாமார்க்கும் குடியல்லோம் என வாழும் சுதந்திரம்.  ஒக்கல் வாழ்க்கை  எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகளில் சில. இவற்றை முடிந்தமட்டும் மூன்றுபேருக்கு எதிராக உபயோகிப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஒன்று :  கண்ணாடியில் தெரியும் எனது பிறன்,

இரண்டு :  மனைவியின் கண்கள்

மூன்று : என்னை நானாக  இருக்க அனுமதிக்கும் நட்புகள். மனிதர்கள்.

—————————————

 

 

 

 

  கடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்

கடந்த காலத்தின் குரல்

  • ஜிதேந்திரன்

  நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘இறந்த காலம்’ நாவல் சந்தியா பதிப்பகம் வெளியீடாக டிசம்பர், 2018-இல் வெளிவந்திருக்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி, ரணகளம் முதலிய ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ‘இறந்த காலம்’ அவருடைய ஆறாவது நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வரலாற்றுப் பின்புலத்திலேயே தன்னுடைய படைப்புகளை அமைத்துக் கொள்கிறவர். புதுச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிப்பதனால், பிறந்த தேசத்தைப் பற்றிய வரலாற்றைத் தன்னுடைய படைப்புகளில் வரைந்து கொள்கிறார். புதுச்சேரி வரலாற்றைப் பேசுபவை பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள். புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அதே திசையில், ஆனால் மாறுபட்ட கதைசொல்லல் திறமையில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பிரதிகளைச் செய்கிறார். இவருடைய நீலக்கடல் நாவல் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்கத் தீவு மொரிஷியஸ் பற்றியது. மாத்தா ஹரி நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டவள். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் புதுச்சேரி மற்றும் செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்கிறது. காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் புதுச்சேரியிலிருந்து பிரான்சு, செக் குடியரசுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. ரணகளம் நாவல் தமிழக அரசியல் பற்றியது.

மிரா அல்ஃபஸ்ஸா (அன்னை) புதுச்சேரி வந்த 1914 முதல் புதுச்சேரி அரசு இந்திய அரசுடன் இணைந்த 1954 வரையிலான அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது இந்நாவல். புதுச்சேரி நகர உருவாக்கமும், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையும் இதில் இருக்கின்றன. ஆரோவில் ஒரு கண்ணியாகவும், புதுச்சேரி விடுதலை மற்றும் புலம்பெயர் அரசியல் மறு கண்ணியுமாக நாவல் அமைகிறது. இரண்டையும் இறுதியில் இணைக்கும் லாவகம் சிறப்பு.

மனிதன் இறந்த காலத்திலிருந்து மீள முடியாது. இறந்த காலம் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கும், அவனுக்குள் மனமாக. சுற்றியிருப்பவர்களும் அவனை அவனது இறந்த காலத்தின் நீட்சியாகவே காண்கிறார்கள். தனது நேற்றைய சம்பவங்களை; நேற்றைய தவறுகளை; அவமானங்களை தனிமனிதன் மறக்கலாம். ஆனால் அவனைக் குறித்த அந்நிகழ்வுகளை மற்றவர்கள் மறந்துவிடுதில்லை. அதிலும், வரலாற்றுத் தவறுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில்தான், பிரெஞ்சிந்திய விடுதலைச் சிக்கலும் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில்  பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த புதுச்சேரியின் நிலை தர்மசங்கடமானது. வேறு வழியில்லாமல் அவர்களும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. நாவலில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆரோவிலியன்களாவது என்பது ஏமாற்று வேலை. எந்த மனிதனும் முழுமையாகப் புனிதனாகிவிட முடியாது. ஆரோவில் குழுமத்தில் இணைபவர்கள் சில காலம் புனிதர்களாக நடிக்கலாம். தவம், தியானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகப் பாலியல் சிக்கலுக்குள் தத்தளிக்கின்றனர். உலகின் எந்தத் தியான ஆஸ்ரமும் பாலியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்ததில்லை. ஓஷோ கம்யூன், நித்யானந்தா ஆஸ்ரமம் உட்பட, வட இந்தியச் சாமியார்கள் பட்டியல் பெரிது. காலங்காலமாக மனிதன் காமத்திலிருந்து விடுபட முடியாதா? என்ற சிக்கல் இருக்கிறது. ஏன் விடுபட வேண்டும்? ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கிற வழியைக் காட்டுகிறார். தியானம் செய்கிறவர்கள் காமத்தை அடக்குவதன் மூலம் தங்களுக்குள் மனப் பிளவுகளை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனை அடக்குவதன் மூலம் பாலியல் சிக்கல் வெறி கொண்டதாகிறது.

குருவால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் தங்கள் சொத்துக்களை தாங்களாகவே ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுகின்றனர். அல்லது வசியத்தால் சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டலாலும்கூட. இங்கு அவர்கள் சீடர்கள் அல்ல; பொதுமக்கள். ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, பணம் சேர்கிறது. ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி, ஆஸ்ரமத்தை விஸ்தரித்துக் கொண்டே போகிற யதார்த்தத்தைப் பார்க்க முடிகிறது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சுற்றியுள்ள மக்கள், சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளின் குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படித்தான் ஆரோவில்லும். “இந்த நகரத்தை (ஆரோவில்) உருவாக்க 50 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக் கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தொழில் தொடங்குவதற்காகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை” (ப.180).

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆரோவில் அமைப்பிற்கு உள்ளது என்று விவரிக்கிறார் நாவலாசிரியர். வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியப் பெண் ஆரோவில் நகரத்தில் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட செய்தி, ஆரோவில் நகர விரிவாக்கம் ஆகிய இரண்டும் சமீபத்திய உண்மைச் செய்திகள். ஆனால், ஆரோவில் உருவாகும்பொழுது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு எதிரான திசையில் இப்போதைய ஆரோவில் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத்தான் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் முன்வைக்கிறார்.

நில அபகரிப்பு என்பதில் ஆரோவிலுக்கு பிரெஞ்சு அரசாங்கமே குறைந்த விலையில் நிலத்தைக் கொடுத்தது என்பதும் அடங்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆஸ்ரமவாசிகள் / ஆரோவிலியன்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்கிற உண்மையை நாவல் விவரிக்கிறது. ஆரோவிலின் ஆன்மீக சோஷலிஸம் என்பதே ஏமாற்றுத் தந்திரம். புளி ஏப்ப ஆன்மீகவாதிகள், பசி ஏப்ப ஆன்மீகவாதிகள் உண்டு என்கிறார் நாவலாசிரியர். தங்கம் பூசப்பட்ட மாத்ரி மந்திர் கோளம் ஆன்மீகத்திலிருந்து விலகிய நிலை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்குகிற ஆஸ்ரமவாசிகள், ஆரோவிலுக்கு வெளியே வாழும் புதுச்சேரி ஏழை மக்கள் எனப் பெரும் பிளவுகளைக் கொண்டிருக்கிறது ஆரோவில் நகரம். ஆரோவிலுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, ஆரோவிலுக்கு உள்ளேயே எடுபிடி வேலை பார்க்கும் ஏழை மக்களும் இருக்கிறார்கள்.

நர்மதா குடும்பத்திடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்ட ஆல்பர்ட், நர்மதாவைக் கற்பழித்த ஆல்பர்ட், ஆரோவிலுக்கு வருகிற பெண்களைச் சீரழிக்கிற துய்மோன் என ஆரோவில் நகரக் களங்கத்திற்கு உருவகமாக இரண்டு கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வருகிற ஜெஸிக்கா, பிரான்சிலிருந்து வருகிற மீரா இருவருமே ஆரோவில் நகரில் கற்பழிக்கப்படுகிறார்கள். ஜெஸிக்கா எந்தப் புகாரும் அளிக்காமல், நாடு திரும்புகிறாள். மீரா காவல் நிலையத்தில் புகாரளித்தாலும், சாட்சியங்கள் இல்லையென்று கூறி, காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது. மீரா ஜெஸிக்காவைத் திரும்ப அழைத்துவந்து, அஸ்ஸாமிற்குச் செல்கிற துய்மோன், ஆல்பர்ட் இருவரையும் குழந்தை கடத்துபவர்களாகச் சித்திரித்து, அங்கு வைத்து அவர்கள் இருவரும் கொல்லப்படும் சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

அன்னை, அரவிந்தரின் நல்ல நோக்கம் தற்போதைய நிகழ்வுகளால் அடிபட்டுப் போகிறது. ‘ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃபஸ்ஸாவுமல்ல’ (ப.103). ஆரோவிலுக்கு எதிரான கருத்துக்கள் மாதவன் வழியாகச் சொல்லப்படுகின்றன. நாவல் முழுக்க அன்னை, அரவிந்தருக்கு எதிரான பார்வை இருக்கிறது. அன்னை, அரவிந்தரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. “முடிகொட்டிய நரைத்த தலைக்கு ஒரு சல்லடைத் துணியை முக்காடிட்ட சூன்யக்காரி போல ஒரு மூதாட்டி” (ப.39) என்கிற அன்னையின் முகத் தோற்றத்தைச் சொல்லும் வரிகள் அன்னையின் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரும். அன்னையின் கண்கள்தான் பிரசித்தமானவை. மாறாக, இந்த நாவலில் அன்னையின் ‘குரல்’ பேசுகிறது. பிரான்சிலிருக்கிற மீராவை (நாவலின் நாயகி) இந்தக் குரல்தான் தொந்தரவு செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் வருகிற அந்தக் குரல், இறுதியில் மீரா கற்பழிக்கப்பட்டபின்தான் வருகிறது. மீராவை இங்கு அழைத்து வந்த குரல், ஆரோவிலின் பெருமைக்குக் களங்கம் செய்கிறவர்களை அழிக்க விரும்பும் குரல்.. அவள் கற்பைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘இறந்த காலம்’ நாவல், அன்னையின் கடந்த (இறந்த) கால வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுகிறது. துய்மோன், ஆல்பர்ட் கொல்லப்பட்ட பிறகு, ஆரோவில் களங்கங்களைப் போக்கிய பிறகு,  அன்னையின் இந்தக் குரலில் அமைதி ஏற்படுவதாக நாவல் முடிகிறது.

நாவலின் மற்றொரு தளம் – புதுச்சேரி அரசியல். இறந்த காலம் – புதுச்சேரியின் கடந்த காலம். புதுச்சேரியிலிருந்து பிற நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தோ சீனாவிற்குப் (சைக்கோன்) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது. சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட, சமத்துவ உரிமையைப் பெற விரும்பி பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்க நாடுகளில் வாழும் மக்கள் ‘ரெனோன்சியாசியோன்’ (La renonciation) எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு மாறியவர் ‘ரெனோன்சான்’ (காலனிவாசி) எனப்படுகிறார். சுப்பராயன் அப்படி ரெனோன்சானாக, ஃபெலிக்ஸ் சுப்பராயனாக மாறிக்கொண்டார். சிங்காரவேலர் எதுவார் என்று மாறிக்கொண்டார். இவர்கள் சிப்பாய்களாக பிரெஞ்சு தேசத்திற்காகப் போர்க் களத்தில் உயிரைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதாவது ரெனோன்சானாவதற்கு இது ‘இரத்த வரி. ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தை மட்டுமே அறிந்திருந்த தமிழ்ச் சூழலுக்கு இந்தப் பிரெஞ்சிந்தியக் காலனியாதிக்கச் சிக்கல்கள் புதிது. பிரெஞ்சு தேசத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். பூர்வீகப் பிரெஞ்சு மக்கள், கிரேயோல் மக்கள் (தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் ஐரோப்பியர்), ரெனோன்சான் மக்கள். இவர்களில் ரெனோன்சான் மக்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை. பதவி, வேலை, ஆடம்பர வாழ்க்கை, சாதியத் தடைகளிலிருந்து விடுதலை என ஆசை வார்த்தைகாட்டி, இந்தோ சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி மக்களின் நிலையை சுப்பராயன், சிங்காரவேலர், வேதவல்லி வழி நாவலாசிரியர் புலப்படுத்துகிறார். அதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விளக்குகிறார். சைக்கோனின் நிகழ்வுகளை வேதவல்லியும், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளை அவரது தம்பி சதாசிவமும் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள் மூலமாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

புதுச்சேரி நிகழ்வில் அரவிந்தர் ஆஸ்ரமம் அமைத்தது, ஆரோவில் உருவாக்கப்பட்டது, காந்தியின் புதுச்சேரி வருகை, அரவிந்தரைச் சந்திக்க காந்தி தூது அனுப்பியபோதும் அரவிந்தர் மறுப்பு தெரிவித்தமை, இந்தோ சீனா வங்கி, புதுச்சேரி அரசியலின் நாயகன் ‘வி.எஸ்’ எனப்படுகிற வ. சுப்பையாவின் அரசியல் போராட்டங்கள், பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம், சவானா மில், ரோடியர் மில், கெப்ளே மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு, கவர்னர் எதுவார் குபேர் என்பவரின் அரசியல் மீதான விமர்சனம் எனப் பல பக்கங்களை நாவலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததை, தற்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த உணர்வெழுச்சியோடு பொருத்தி எழுதியிருக்கிறார்.

வரலாற்றுப் புனைவை எழுதும்போது, நிகழ்வை எழுதுகிற அதேநேரத்தில், கற்பனையும், படைப்பாற்றல் மிக்கவராகவும், தனித்த பாத்திரங்களை உருவாக்கி, ரசனை குன்றாமல் நாவலை எழுதிச் செல்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனித்திறமையே கதைசொல்லும் உத்திதான். கதையில் ஏற்படுத்துகிற சுவாரஸ்ய முடிச்சுகள், வாசகர்கள் கண்டுபிடிக்கிற அளவில் ‘பொடி’ வைத்து எழுதுகிற எழுத்து நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுடையது. இந்த நாவலில் மட்டுமல்ல, அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்தத் தனித்திறனைப் பார்க்கலாம். நாள், தேதியிட்டு காலத்தை மாற்றி மாற்றி எழுதும் உத்தி இவருடைய பொதுவான தன்மை. கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமாக இவரது மொழி, கதை சொல்லும் உத்தி மாறி, மாறிப் பயணிக்கும். காலத்தை இணைக்கும் புள்ளியைக் கூர்ந்த அவதானிப்புடன் செய்கிறார். நிகழ்கால அரசியலை; சம்பவங்களை; அரசியல்வாதிகளைக் குறிப்பால் உணர்த்தும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்.

மீரா, ஜெஸிக்கா, மாதவன் தவிர பிரான்சிலிருக்கும் மீராவின் தாய் இஸாபெல், அவரது இரண்டாவது கணவர் லூயிஸ், புதுச்சேரியில் மாதவனின் குடும்பம், மீரா தங்கும் வீட்டில் ஆல்பர்ட்-தேவகி, ஆரோவிலியன் துய்மோன், நர்மதா, கலைவாணி முதலியோர்தான் கதாபாத்திரங்கள். அரூபப் பாத்திரங்களான வேதவல்லி, சதாசிவம் கடிதங்களின்படி மாதவனும், மீராவும் திருமண முறை உறவினர்கள். இந்த முடிச்சை அவிழ்ப்பதில்தான் நாவலின் சுவாரஸ்யம் இருக்கிறது. வேதவல்லியின் மற்றொரு தம்பி சிங்காரவேலர் புதுச்சேரியிலிருந்து இந்தோ சீனாவிற்குச் சென்று, அங்கு வியட்நாமியப் பெண்ணை மணம் செய்து, அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்வதாகச் சொல்கிறது வேதவல்லியின் கடிதம். மீரா தன்னுடைய தாத்தா பற்றிக் குறிப்பிடும்பொழுது, இதே குறிப்பைச் சொல்கிறாள். கதாபாத்திர உறவுகளை சஸ்பென்ஸாக வைத்து, வாசகர்கள் கண்டுபிடிக்கும்படியான எழுத்து முறை இவருடைய மற்ற நாவல்களிலும் காணப்படுகிறது. மீராவின் தாய் இஸாபெல்லும் புதுச்சேரியில் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மீராவின் தந்தை யாரென்றே தெரியாத சூழலில், துய்மோனாக இருக்கலாம் என இஸாபெல் கூறுகிறாள். துய்மோன் – இந்தப் பெயர் ஏன்? 1735ஆம் ஆண்டு கவர்னராகப் புதுவைக்கு வந்தவர் துய்மா. இவர் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரைக் குறிப்பிடும் விதமாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதோ என ஐயம் தோன்றுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வீணாக்கவில்லை. சாதாரணமாக ஒருமுறை டிராப் செய்கிற டிரைவர்கூட இறுதியில் மறுபடியும் வருகிறார், மணிகண்டனாக. மீராவின் திட்டங்களுக்கு உறுதுணையாக. மீராவை ஆரோவில் நகரில் சைக்கிளில் பின்தொடர்கிற பத்திரிகையாளர், விமான நிலையத்தில் தற்செயலாகப் பக்கத்தில் அமர்பவர் நாவலின் இறுதியில் மீண்டும் வருகிறார்கள். முதலில் ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி. அதற்கு நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் விடை என்கிற ரீதியில் நாவலின் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அண்மையில் தமிழகத்தில் குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தவர்களைக் குழந்தை கடத்தல் கும்பலென அடித்துக் கொன்ற (உண்மை) செய்தியை, இரண்டாகப் பிரித்து, முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தை சாக்லேட் பெறுவது குற்றமாகப் பார்க்கும் நாடு இது என்று ஒரு பகுதியிலும், குழந்தை கடத்துபவர்கள் எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, இருவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொலை செய்கின்றனர் என்பதை இறுதிப் பகுதியிலும் அமைத்திருக்கிறார்.

‘இறந்த காலம்’ நாவல் புதுச்சேரியில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமவாசிகளால் இந்த நாவல் நிச்சயம் விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

 

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்