Tag Archives: பிரான்சு

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

                              –  ரா கிரிதரன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’  – 1

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால்  ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியு ள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நீலக்கடல் – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை.  காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.

வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.

பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.

இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.

நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.

00Ooo

கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.

கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித  வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.

இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை

குடைராட்டினம்

குடைராட்டினம்

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை  தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.  

அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி.  பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில்  கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன்.  ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.

மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம்.  இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”

பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல்.  இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.

பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும்.  காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.

போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால்  கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:

– எங்கே வந்த?- என்றாள்.

– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.

– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?

– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.

– பிரண்டுன்னா

– நீங்க நினைக்கிறமாதிரிதான்.

வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.

– தெவடியா. தெவடியா..

குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.

இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட  குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான்.  ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.

ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன.  அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது.  அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.

பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக  ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.

எஜமானடிமைகள்

              அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘புரட்சியாளன்’ (‘l’homme révolté’ ) என்ற கட்டுரை நூலை பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்த்தபோது இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல், மனதில் உதித்தது.   ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’  (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஒரு நுண்பொருளின்  பயன்பாடு எஜமான் (நுண்பொருள்)-அடிமை(செயலிகள்) உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.  அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து  புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். என்னுடைய கருத்தில் ‘எஜமானடிமைகள்’ எஜமானுமல்ல அடிமையுமல்ல.  எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள்.  இவர்கள் அலுவலங்களில் தலைமைக் கணக்காளராக இருக்கலாம், மேனேஜராக இருக்கலாம், வட்டாசியரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியராவும் இருக்கலாம், கட்சிகளில் மாவட்ட செயலாளரில் ஆரம்பித்து ஏன் கட்சித் தலைமை ஆகவும் இருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு ஏதோ சிலகாரணங்களை முன்வைத்து எஜமான்கள் என்ற ஹோதாவுடன் தங்கள் தங்கள் அரியாசனத்தில் இருந்தவாறே வேறு சிலருக்கு அடிமைகளாக இருக்கவேண்டிய நெருக்கடி.  உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.  இதுபற்றிய ஒரு நீண்ட  கட்டுரை எழுதி மலைகள் இணைய இதழில் வந்திருக்கிறது. இவர்களின் உள்மன வேட்கையை உணர்ந்து மேடையில் செங்கோலைக் கொடுத்து தலையில் மலர்க்கிரீடம் சூட்டுகின்ற தந்திரக்கார ர்களுக்கு அல்லது வெகுசனவழக்கில் ‘அல்லக் கைகளுக்கு’ உண்மையில் இந்த எஜமானர்கள் அடிமைகள். இக்கருத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது தான் 2017ல் வெளிவந்த ரணகளம் நாவல். நாவலில் வரும் அக்காள் மகாராணியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டபோதும், அண்டங்காக்கைகள் ஆட்டுவித்த கைப்பாவையாகத்தான் வாழ்ந்தார், மறைந்தார். உண்மையில் தலமை வாழ்க்கை பரிதாபத்திற்குரியது.

எஜமானடிமைகள் கட்டுரை விரைவில் ஒரு நூலில் இடம்பெற உள்ளது.

ரணகளம் நாவலில் இருந்து….

எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் வாயிலில் திரண்டிருந்த பெருங்கூட்டத்தையும்,  ஈக்கள் கூட தங்களை மீறி நுழைந்துவிடக்கூடாது என்பதைப்போல பொறுப்புடன் பணிசெய்த காவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணி நேர செவிலியர்கள், தனக்கு வேண்டியவர்களைத் தவிர அந்நியர் எவரும் அக்காளைச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கனகம் ஏற்பாடு செய்திருந்த மனிதர்களென அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிச் சாமர்த்தியமாக அக்காள் படுக்கையிற்கிடந்த  மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தான். இனி அக்காளின் கட்டிலைக் கண்டுபிடித்து அக்காள் ‘உயிரை’ விடுவிக்கவேண்டும்.

நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் வேளையில் சித்திரகுப்தன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம்’ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி’ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று. தொழுவத்தில் சாணம், கோமியம், கோரைப் புற்கள் கலவையிற் படுத்திருந்த எருமைக்கிடாவைக் குளத்தில் இறக்கித் தேய்த்து கழுவி மறுகரைக்கு  நீந்தவைத்து கரையேற்றி அழுந்தத் துடைத்தபோதும்  மிஞ்சியிருந்த நீர்த்திவலைகளை ஒற்றியெடுக்கமறந்து அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகள் உறிஞ்சிய சோமபான வாடையையும், ஆடைகளிற் படிந்திருக்கும் அத்தர் ஜவ்வாது மணத்தினையும், எருமையின் அடிவயிற்றில் கெட்டியாய் ஒட்டிக்கிடந்த சாணிப் பொருக்குகள் முடக்கியிருந்தன.  கடந்த  சில வருடங்களாகவே எமனுக்கு தனதுவேலை குறித்து அதிருப்தி இருக்கிறது.  எத்தனைகாலம் மனைவியுடன் சல்லாபம் செய்வதற்குக்கூட நேரமின்றி மானுட உயிரை எடுப்பது, அலுத்துவிட்ட து.  திரும்பவும் பூமியிற் பிறக்க விண்ணப்பிக்கலாமென்று தோன்றியது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தொழிலையும், தன்னையும் நவீனப்படுத்தும் யோசனை இருக்கிறது.  சியாமளாதேவி  இடத்தில் வேறொரு தேவி; தண்டம், பாசக்கயிறுக்குப் பதிலாக புதியவகைஆயுதம். ஒருநாள் போல அணிகிற பட்டு வஸ்திரம், பதக்கங்கள், கிரீடம் முதலானவற்றைத் தூர எறிந்துவிட்டு, இன்றைய நாகரீகத்திற்கேற்ப கோட்டு சூட்டு, எருமைக்குப் பதிலாக நவீன மோஸ்தரில் ஒரு வாகனமென்று ஆசைகள் நிறையவே இருக்கின்றன.  

கடந்த சில வருடங்களாக அவனுடைய வேலை பளு குறைந்து வருவதையும் மறுக்கமுடியாது.  ‘காமா சோமா’ உயிர்களுக்கு பூலோகத்தில்  தற்போது உத்திகளும், வழிமுறைகளும் ஏராளம். எமனுடைய சேவைக்காக மனிதர்கள் எவரும் காத்திருப்பதில்லை. மானுடர்களில் அநேகர் தம்முடைய உத்தியோகத்தின்மீது  கண் வைத்திருப்பது அவனுக்கு நன்றாகத்தெரியும். தீவிர சுதந்திர அபிமானிகளில் சிலர், பிறர் உயிரைப் பறிக்கிற சுதந்திரமும் வேண்டுமென்று போராட இருப்பதாகக் கேள்வி.  இருந்தும் இவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், அத்தனை சுலபத்தில் போவேனா என்று அக்காளின் ஜீவனையொத்தவையும் இருக்கவே செய்கின்றன. உறக்கத்திலிருந்த கும்பகர்ணனை யுத்தத்திற்கு எழுப்பியதும், பாதி சம்போகத்தின்போது  உத்தியோகத்திற்குத் திரும்ப தமக்குள்ள நிர்ப்பந்தமும் எமனுக்கு ஒன்றுதான்.   காரியம் முடிந்த உடனே காலவிரையமின்றி  எமலோகம் திரும்பவேண்டும்  சியாமளாதேவியை மஞ்சத்தில் சாய்த்து.. பாதியில் விட்டு வந்த சம்போகத்தைத் தொடரவேண்டும். எமன் கௌபீனத்தை இறுக்க மறந்திருந்தான், வழியனுப்ப கையை அசைப்பதுபோல  எருமை இருமுறைக்  கொம்புகளை அசைத்து, நாசி, மலதுவாரங்கள் ஊடாக தனது ஒவ்வாமையை வாயுவாக வெளியேற்றியதும், ஒருமுறை உடலைச் சிலிர்த்து மீண்டும் நடக்க ஆரம்பித்தது.

பகலில் தற்போதெல்லாம் அடிக்கடி  போக்குவரத்து நெரிசல்கள். சாலை மறியல்கள்.இரவுகளில் அம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதில்லை, குறித்த நேரத்தில் உயிரைப் பறித்து திரும்ப சௌகரியம்.    இவன் வரவை  எதிர்பார்த்து இரவில், அகால வேளைகளில்  தெருநாய்களின் ஓலம், நரிகளின் ஊளை; ஆந்தை, கோட்டான்களின் அலறல் போன்றவை வெகுகாலந்தொட்டு  கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள், அவைகள் இன்றில்லை என்பது ஒரு குறை. எங்கோ ஒரு கழுதை மட்டும் ஆரோகணத்தில் தொடங்கி  அவரோகணத்தில் முடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு, கால அட்டவணைப்படி  அக்காளின் உயிரைப் பறிக்கச் சாத்தியமா என்ற சந்தேகம் திடீரென எமனுக்கு வந்தது. அக்காள்  நலம் பெறவேண்டும் என்பதற்காக அக்காள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  தீவிரப்  பிரார்த்தனையில் இறங்கியிருந்தனர் அப்பிரார்த்தனைகளுக்கு இறங்கி,  இக் கடவுள்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவார்களோ,  எமதர்மராஜா என்ற தம் பெயருக்குச்  சிக்கல் வருமோ என்ற கவலையளித்த சந்தேகம். தன் கவலையைச் சித்திரகுப்தனிடம் தெரிரிவிக்க அவன் சிரித்தான் « பிரார்த்தனையின் நோக்கமே அக்காள் உயிர் சீக்கிரம் போகவேண்டும், என்பதுதான் அதனாலே கவலைப்படாம பூமிக்குப் போங்க. என் கணக்கு ஒருபோதும் தப்பாது. » எனக்கூறி சமாதானமும் செய்தான்.

அடர்த்தியாய் வானை உரசும்வகையிற்  தளும்பிக்கொண்டிருந்த இரவில் மூழ்கி பூமிப்பந்தைச் சில மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தாயிற்று.  சுரப்பெட்டிபோல ஒலித்த சுவர்க் கோழிகளின் சப்தமும், குண்டியைச் சொறித்தபடி வெளியில் வந்த நபர் தெருவைக் குறுக்காகக் கடந்து, ஒருமுறைக்கு இருமுறை  எதிர்வீட்டுக்காரன் சுற்றுசுவர்தாணா என்பதைத் திடப்படுத்திக்கொண்டு  மூத்திரம் போனதும் வந்திருப்பது பூமி என்பது உறுதியாயிற்று.  இனி எடுக்கவேண்டிய உயிர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற  மருத்துவமனையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சிக்காலானதல்லவென்று கூறி  எமனுடைய காரியதரிசி தெரிவித்த குறிப்புகள் மனதிலிருக்கின்றன. இந்திரலோகம்வரை மருத்துவமனையின் புகழ்  எட்டி இருந்தது. ஓரளவு சமாளிக்கக் கூடிய செலவில் உயிரை எடுப்பதற்குப் பூலோகத்தில் எவ்வளவோ வசதிகள் இருக்கிறபோது எதற்காக லட்சமாக லட்சமாக கொட்டிக்கொடுத்து, உயிரைக் போக்கிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு பெரிய பட்டிமன்றமே தேவர் சபையில்நடந்தது.  இரம்பையையும் ஊர்வசியையும் அணிக்கொருவராகப் போட்டிருக்க அப்படியொரு கூட்டம்.  முதன்முறையாகப்  பலகோடி உயிர்களைப் பறித்து எமன் செய்திருக்கும் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா. விழாவில் நமது எமனுக்கு பூ, பழம், தேங்காய், பாக்குவெத்திலை, பட்டு வஸ்திரம் பத்தாயிரம் வராகன் பொற்காசுகள்  தட்டில் வைத்து அளித்தார்கள். தமிழ்நாட்டுப் பிரதிநிதி ‘அண்டம் காத்த  தொண்டன்’ , எமனுக்கு  ‘உயிர்ப்பறிக்கும் உத்தமன்’  விருதை அளித்துப் பொன்னாடைப் போர்த்தினார். போர்த்திய கையோடு, ‘அப்படியே எனக்குமொரு விருதை ஏற்பாடு செய்திடுங்க, ஆகிற செலவை நான் பார்த்துக்கிறேன்’ என்று எமன் காதில் போடவும் செய்தார்.

 «யாருய்யா அது, எருமை மாடு ! படுத்திருப்பது தெரியலை »  என்ற குரல் கேட்டு எமன் சுய நினைவுக்குத் திரும்பினான். அவனுடைய வாகனம் சாலையிற் படுத்திருந்த  ஒருவரை மிதித்திருந்தது. சற்றுத்தள்ளி  ஜெகஜொதியாக மருத்துவமனை. வாகனத்தை  நிறுத்தி இறங்கிக் கொண்டதும், மூக்கனாங்கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், விளக்குக் கம்பமொன்றில் கட்டினான்.

 சிறுகுடலின் முற்பகுதி தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து சுவாசகுழாயை நெறித்தது.  இரு நாசி துவாரங்களும் காத்திருந்தவைபோல அடைத்துக்கொண்டு மூச்சை நிறுத்தப் பிரயத்தனப் பட்டன.  நெஞ்சில் கபம் கட்டியிருந்தது, இருமல் நிற்க மறுத்தது, எழுந்து உட்கார்ந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாக இருந்தது.  இருமல், சளி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என்று அனைத்தும் கைகோர்த்திருந்தன. இருமும்போது கண்களில் நீர் கோர்த்து ஒன்றிரண்டு சொட்டுகள் கன்னக்கதுப்புகளில் விழுந்து உடைவதுண்டு. இருமல்  சளியுடன் கடந்த சில நாட்களாக இரத்தத் துளிகளும் கலந்திருக்கின்றன. இருமி முடித்த மறுகணம், தொண்டைவறட்சியை உணர்ந்தாள். தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், பிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம்’ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். கனகம் எங்கே போய்த் தொலைந்தாள்?  இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அவள் வருவதில்லை. கறீம் கூறிய வார்த்தைகள்  உண்மையாக இருக்குமோ என நினைத்தாள். « கடைகள் நிர்வாகத்திற்குப் புதிதாக ஒரு குழுவினரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை  ஒப்படைக்கும்படி நீங்கள் கையொப்பம் இட்டிருந்ததாக ஒரு பேப்பரை  கனகம் உங்கள் குடும்பத்தாரிடம் காட்டினார். அந்த அம்மாள் பேச்சை நம்புகிறார்களேயொழிய, உங்களைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்குமில்லை. நான் பயந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது. உங்க தெய்வத்துக் கிட்ட நீங்க வேண்டிக்குங்க,  நமாஸ் பண்ணும்போது, உங்களைக் காப்பாத்தும் படி நானும் அல்லாகிட்ட வேண்டிக்கிடறேன், அதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியலை. » என்றான்.

மெள்ள எழுந்திருக்க முயன்றாள், இருமல் திரும்பவந்தது, ஓக்காளித்தாள், ஓக்காளித்ததைக் இரண்டுகைகளிலும் வாங்கினாள், சகதிபோல இரத்தமும் கோழையும். மயங்கி விழுந்தாள். கிராமத்தில் அம்மாவையும், சகோதரர்களையும், படியாட்களையும் கூட அதிகாரம் செய்தவள்தான். இயல்பான அவ்வதிகாரத்தைச் செலுத்திய இவளும் சரி, செலுத்தப் பட்ட மனிதர்களும் சரி மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். புதுச்சேரியில் செலுத்திய அதிகாரம் உபரிமதிப்பைக் குறிவைத்து, அவர்கள் வேலை நேரத்திற்கு விலைகொடுத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் சிப்பந்திகளை அடிமைகளாகப் பார்த்த எஜமான் அதிகாரம். காலம் விசித்திரமானது. இன்றைக்கு அவள் உயிர்கூட  அவள் பொறுப்பிலில்லை. இனி அவளுக்கு உரிமையான கடையில், ஓட்டலில், ஜவுளிக்டையில் மல்லிகைச்சரம் ஊதுபத்தி மணக்க நிழற்படத்தில் சிரிப்பாள்.  அவளுக்கென்றுள்ள வாடிக்கையாளர்களைப் பிடிக்கவேண்டுமில்லையா ?

இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்கிறார்கள். முதலில், ஊரில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு புதுச்சேரியில் மூத்தார் குடும்பத்தில் ஆரம்பித்து வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். ‘கணக்கன்வீட்டு கம்பத்தத்தில்’ பல தலைமுறையாக அடிமைபட்டுக்கிடந்த கறுப்பன்கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான், இறுதியாகக் கனகம். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.

       அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திர வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது? ஒருவேளை சிறுவயதில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்குத் தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவி வைக்க உழைமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள். பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் மூத்த அண்ணனிடம்  முறையிட்டதும், பத்து ருபாயை விட்டெறிஞ்சி “போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ” என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும்” எனச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

        பூப்டைந்த அக்காளுக்கு வரன்கள் தேடும் காலத்தில். பொருத்தமானவனைத் தேடிக் களைத்துப்போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், மூத்த சகோதரருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்தவாறுப் பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்.

       “என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா? இது புதுசா இருக்கு!”

        “ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர்’ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.”

        அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப்  படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது செக்குமாடுகள் பார்வையைத் விலக்க முடிவதில்லை.

ஏசியின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. சிறுவயதில் பனைஓலையில் செய்த காற்றாடியை குச்சியில் ஏந்தியபடி சகவயது பையன்களோடு ஒடுவாள். அப்போதொரு சத்தம் வரும், அதுபோலத்தான் குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. அளவைக் கூட்டிவைத்தால்  உடல் வெட வெடவென்று உதறுகிறது. ஒன்றுக்கு இரண்டுபேராக தமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் ஒருத்தியிடம் குறைக்கும்படி சொல்லியிருக்கலாம்,  பார்வையாளர் நேரத்தின்போது அங்கிருருந்த ஜவுளிக்கடை கணக்கப்பிள்ளை செல்வமணியிடம் கூறினாள். அவர் வேண்டுமென்றே ஐந்தில் உயர்த்திவைத்து, இரண்டொரு நிமிடங்கள் இவள் படும் வேதனையைப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்  பிறகு இரக்கப்பட்டவர்போல ஏசி அளவைக் குறைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தார். இவள் திரும்பமாட்டாளென்பது, அவருக்கு முடிவாகிவிட்து. அக்காளின்  கணவர் இறந்த பின்பு கனகத்தின் சிபாரிசில் நியமிக்கப் பட்ட ஆள். முதுகில் துணிமூட்டை சுமக்கும் சலவைத் தொழிலாளிபோல இவள் எதிரே பவ்யமாக நின்றவர். அக்காள் விட்டத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.  முடிச்சு முடிச்சாகக் குழப்பமான நினைவுகள், ஜொராஷ்ட்ரியர் பிணம்போல இவள் கிடக்க உடலுக்கு மேலே சுற்றிவரும் கழுகுகள். தரையில்,  சிறுகூட்டமாய்  உருமும் நரிகள், அவற்றை முந்திக்கொண்டு, நடக்கவிருப்பதை காணச் சகியாததுபோல தலையைத் தொங்கப்போட்டபடி நிற்கும் முருகேசன் கழுதை.

       கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும்’ வலது கரத்தில் ‘சுருக்கு’மாக நமது எமன்.  

       “வந்தாச்சா? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன்”.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. “பக்கத்திலென்ன கழுதையா? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது? வாகனத்தை மாற்றிக் கொண்டீர்களா?”

       “இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகளிருப்பது உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதாக வாங்கவேண்டும். தவிர வேறு யோசனைகளும் இருக்கின்றன.  இந்திரனிடத்தில் பிரச்சினையை கொண்டுபோகவேண்டும் நேரமில்லை. “

       ” பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை.”

          « உன்னிடத்தில் வாதிட நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகனும். எமலோகத்துலே வேலைகள் நிறைய இருக்கின்றன. கிளம்பு  நீ !


          ” இல்லை.. எனக்கு கழுதைமேல் ஏற விருப்பமில்லை, விட்டுடுங்க.”

          ” இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னுடன் இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘தண்டத்தில்’ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது.

—–

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

மொழிவது சுகம் டிசம்பர் 1 2019

அ. திறனாய்வு பரிசில்

பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது.  உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.

 

பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020

வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு’ எனும் க.பஞ்சாங்கம்.

தமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.

தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.

முகவரி: பாரதிபுத்திரன்
எண்10, நான்காம்குறுக்குத்தெரு
துர்கா காலனி
செம்பாக்கம்  ,   சென்னை-600073
மின்னஞ்சல்: nayakarts@gmail.com
செல்பேசி:94442 34511

 

ஆ. எது சுதந்திரம் ?

சுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.

அதற்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறதா ? விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என  நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.

மனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.

ஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். «  என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ? ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.

என்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை.  அதற்கு முன்னதாக செக்‌ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன்.  « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.

அப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த  தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன்.  இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன்.  பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு,  உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4  வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில்  DPECF, பின்னர் DECF (accountancy).  அதன் பின்னர்  மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா.  கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு  சொந்தமாகத் தொழில்.  தொழிலில் கூட்டு எனது சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக்கருதி என்னுடன் இணைந்துகொள்ள  விரும்பிய பிரெஞ்சு நண்பனின் உதவியை நிராகரித்ததென முடிந்தவரை இழப்பினைபொருட்படுத்தாது எனது சுதந்திரம் என நினைப்பவற்றை   காப்பாற்ற நினைக்கிறேன்.

எனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது ?  எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம். இறுதியாக நாமார்க்கும் குடியல்லோம் என வாழும் சுதந்திரம்.  ஒக்கல் வாழ்க்கை  எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகளில் சில. இவற்றை முடிந்தமட்டும் மூன்றுபேருக்கு எதிராக உபயோகிப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஒன்று :  கண்ணாடியில் தெரியும் எனது பிறன்,

இரண்டு :  மனைவியின் கண்கள்

மூன்று : என்னை நானாக  இருக்க அனுமதிக்கும் நட்புகள். மனிதர்கள்.

—————————————

 

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

 

 

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் தமிழ் படைப்புலக நண்பர்கள் வருகையால் இல்லம் நிறைந்திருந்தது. ஒருவர் நாஞ்சில் நாடன், மற்றவர் பதிப்பாள நண்பர் கண்ணன். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் வந்திருந்த நண்பர் நான்சில்நாடனை பாரீஸில் வழி அனுப்பிவிட்டு, இறுதியில் இரண்டு நாட்கள் காலச்சுவடு நண்பர் கண்ணனையும்  அவர் துணைவியாரையும் வரவேற்க ஸ்ட்ராஸ்பூர் திரும்பவேண்டியிருந்த து. பின்னர் அவர்களை வழி அனுப்பிவிட்டு விடுமுறையில் இருந்த பேரப்பிள்ளைகளுடமன் திரும்பவும் பத்து நாட்கள். 4 ந்தேதி ஸ்ட்ராஸ்பூ திரும்பினேன்.  இதற்கிடையில் விபத்து. பிரச்சினை வாகனத்திற்கென்றாலும், கடைபிடித்தாகவேண்டிய சில சடங்குகள் இருக்கின்றன.

இந்திய இலக்கிய நண்பர்களுடன்  உரையாட விடயங்கள் இருந்தன. அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாதது என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன். படைபாளிகள் பதிப்பாளர்கள் அரிதாக புத்தகவாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் என அனைவரையும்  உள்ளடக்கிய எழுத்தாளர் உலகம், பிற மனிதர்களையும் பார்க்க பார்க்க மேன்மக்களைக் கொண்ட உலகம்.

அக்டோபர் பத்தொன்பது அன்று பாரீஸில் நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  சொற்கள் குறித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து நல்லதொரு கருத்துரையை வழங்கினார். கலந்துரையாடலில் இருகேள்விகள் எனக்கு முக்கியமாகப் பட்டன. ஒன்று  அன்றாட வழக்கில் தமிழர்கள் மிக க் குறைவான சொற்களையே தமிழர்கள் கையாளுகிறார்கள் என்பதைக் கவலையுடன் நாஞ்சிலாருடன் தெரிவித்தபோது, தங்கள் உபயோகத்திற்கு அதுபோதும் என்று நினைக்கிறார்கள், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றார் ஒரு நண்பர். நாஞ்சிலார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமாக கையாளப்படுகிற சொற்கள் பல,  பழந்தமிழுக்குச்சொந்தம், இன்று வழக்கில் அவற்றினை உபயோகிக்கத் தவறுவதால் தமிழுக்குப் பெரும் தீங்கிழைக்கிறோம் என்ற பொருளில் பதில் அளித்தார். எனக்குச் சொற்கள் உபயோகம் விதவிதமாக உண்டு பசி ஆறுவதுபோல. கம்பன் விருந்து படைக்க நாஞ்சில்போன்ற மனிதர்கள் பரிமாறுகிறபோது, வெறும் சோறுபோதும் பசியாறிவிடுவேன் என்பது பேதைகுணம்.   மற்றொரு நண்பர் தமிழ்ச் சொற்களில் வடமொழியைக் கலப்பது தவறென்கிற தொனியில்   « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேள்வியை எழுப்பியவர் இயல்பாகவே அக்கேள்வியை வைத்தார். எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.  எனினும் பாரீஸில் இக்கேள்வியின் பின்புல அனுபவம் எனக்குப் புதிதல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கும் அல்வா, ஆப்பிள் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தேடும் நண்பர்களுக்கும் எனது அனுபவ அறிவின் பாற்பட்டு ஒரு பதிலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறி இருக்கிறோம்.  ‘கிருஷ்ணா’ போன்ற பெயர்களை தமிழில் எழுத மறுப்பதால்  தமிழ் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை நான் நம்பத் தயாரில்லை. கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலப்பது தமிழைப் பாழ்படுத்திவிடும் ? என்கிற திறனாய்வைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.   எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்கானது.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் René Descartes «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்) அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தாய்மொழி : உயிர்மொழி, கருவில் காதில் வாங்கிய மொழி, தாலாட்டு மொழி, வீட்டில் தம்பி தங்கைகளுடன் சண்டையிட்ட மொழி, கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி. சிந்தனை மொழி.

வாழ்க்கை மொழி : உடல்மொழி, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி, பிழைப்பு மொழி.

ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெய்ன், நார்வே, சுவீடன் ஜப்பான், தென்கொரியா என பல நாடுகளை இந்த வரிசையில் அடுக்கலாம்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம்.. உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள்  பொருளாதார காரணங்களுக்காக பிரான்சு நாட்டில் குடியேறி  வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் பிரச்சனைகாரணம் என்று சொல்லமுடியாது. சிரியா நாட்டில் பிரச்சினையெனில் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகலாம், இடையில் குறுக்கிடும் நேற்றுவரை கம்யூனிஸப்பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக குடியேறுவது ஜெர்மன் பிரான்சு போன்ற நாடுகாளில். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்  வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைப் பேசினாலும், வீட்டை விட்டு   வெளியில்வந்தால்  உபயோகித்தே ஆகவேண்டிய மொழியாக இருப்பது  பிரெஞ்சு மொழி.  காரணம் எங்கள் வாழ்க்கை மொழி அது. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும்  அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும்  அந்நிய மக்களின்  தாய்மொழி இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். முப்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து 31 வயதில் பிரான்சு வாழ்க்கையை ஏற்கிற்போது வீட்டில் தமிழையும், வெளியில் வந்தால் வாழ்க்கைமொழியாக பிரெஞ்சு மொழியை நாங்கள் ஏற்கிறோம். எஞ்சிய காலத்தில்  தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற மனிதர்கூட்டத்துடன்   போட்டியிடமுடியாமல் இரண்டாம் குடிகளாக வாழவேண்டிய சிக்கல். பின்னாட்களில் இங்கேயே பிறப்பும் வாழ்க்கையும் என்கிறபோது மூதாதையர் மொழியைக் காட்டிலும் எதார்த்த வாழ்க்கைக்கான மொழி எது என்ற தேடல் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.  மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை இது.

இன்று தமிழ் நாட்டின் நிலமை என்ன. பிரெஞ்சுக்கார ர்கள்போல  ஜெர்மனியரைப்போல,  ஜப்பானியரைப்போல  தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்  தமிழர்களுக்கு ஒன்றா ?  புலபெயர்ந்த எங்களைப்போலத்தான் தமிழர்கள், வாழ்க்கைமொழியாக தாய்மொழி அல்லாத ஒன்றை கல்விக்கூடங்களில், அலுவலங்களில், பொது வெளிகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் அன்று  தமிழ்நாட்டில் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் காலை முதல் மாலைவரை தமிழ்பேசாமலேயே நாளைத் தள்ளிவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம். புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களுளும் தங்கள் அறிஞர் பெருமக்களுக்கு குலம் கோத்திரம் தேடி நேரத்தை செலவிடுபவர்கள் அல்லர். தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. நமக்கு தமிழ்ப்பற்று என்பதும் ஓர் பிழைப்பு, அரசியல். புறவாசல் களஞ்சியத்தில் பெருச்சாளிகளை அனுமதித்து.  தெருவாசலில் பந்தல்போட்டு வள்ளுவன் எந்த சாதியென வாக்குவாதம் செய்கிறோம்,  ஆப்பிளுக்கும் அல்வாவிற்கும் தமிழ்சொற்கள் தேடி வியர்வை சிந்துகிறோம்.

——————————————————-

 

 

 

 

பிரான்சு நிஜமும் நிழலும் -6: பிரெஞ்சு மக்கள்

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ கூற்றை ஒரு மெய்மைக் கருத்தாக தருக்க நியாயத்தின் முடிவாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். உலகம் தோன்றிய நாள்தொட்டு புலப்பெயர்வுகள் இருக்கின்றன. பழங்காலத்தில் அடிப்படை தேவைகளின்பொருட்டோ, இயற்கை காரணங்களுக்காகவோ புலம்பெயர்ந்தார்கள். பின்னர் உபரித்தேவைகளை முன்னிட்டு பொருளாதாரத்தில் மேம்பட்ட அல்லது சுபிட்சமான நாடுகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்தார்கள். பழங்காலந்தொட்டே இனம், மதம் அடிப்படையிலான உள்நாட்டுப் பிரச்சினைகள் புலப்பெயரலுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றன. எனினும் இதுநாள்வரை காணாத அளவில் அண்மைக் காலமாக புலப்பெயர்வு உலகெங்கும் அதிகரித்துவருகின்றன. அறிவுசார் புலப்பெயர்தலை பெரிதும் வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இடம்பெயரும் சராசரி மக்களின் புலப்பெயர்வை ஓர் அபாயமாகப் பார்க்கின்றன. காலம்காலமாக நிகழ்ந்துவரும் இப்புலபெயர்வுதான் மனிதனோடு ஒட்டிப்பிறந்த மண் அடையாடளத்தை உதறக் காரணமாக இருந்துவருகிறது. எனவேதான் பிரெஞ்சு மக்களைக்குறித்து எழுத நினைத்தபோது, புலப்பெயர்வும் சொல்லப்படவேண்டியதாக உள்ளது. இன்றைய இந்தியனோ, இலங்கையனோ, அமெரிக்கனோ அல்லது மேற்கு நாடுகளைச்சேர்ந்தவனோ “தனிஒருவன்” அல்ல; அவன் பலப் பண்புகளின் சங்கமம், பத்துத் தலையும் இருபது கைகளுங்கொண்ட இராவணன். அது போலவே, ஒரு பிரெஞ்சுக்காரன் என்பவன் எந்த நிறமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், எந்த இனமாகவும் இருக்கலாம், தாய்மொழியாக எதுவும் இருக்கலாம், வடக்குத் தெற்கு, கிழக்கு மேற்கென்று வந்த திசை எதுவென்றாலும், தன் வாழ்நாளின் கணிசமான காலத்தைப் பிரான்சு நாட்டில் அல்லது அதன் தொலைதூர பிரதேசங்களில் (மர்த்தினிக், பிரெஞ்சு கயானா, குவாதுமுப் ரெயூனியன்) கழிக்க நேர்ந்த, பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அனைவருமே ஒருவகையிற் பிரெஞ்சு மக்கள்தான். அப்படித்தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன. இந்த நாட்டிற்கு ஏதேதோ காரனங்களால் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகிவிடமுடியுமா? என்னிடம்கூட பிரெஞ்சுப் பாஸ்போர்ட் இருக்கிறது. சட்டம் அதன் பெயரால் உரிமைகளையும், வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ஐரோப்பிய நாடொன்றைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனுக்கு நான் சமமா என்றால் இல்லை. எனக்கே என்னை பிரெஞ்சுக்காரனாக ஏற்பதில் குழப்பங்கள் இருக்கிறபோது அவர்களைக் குறை சொல்ல முடியாது.

 

பூர்வீகப் பிரெஞ்சு மக்கள்?

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றாசிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள் பிறகு பன்னிரண்டாம் நூற்றாடில் அரசாண்ட கப்பேசியன் முடியாட்சி, தம்மை •பிரான்க் முடியாட்சி என அறிவித்துக்கொண்டததென்றும் அவர்கள் அரசாங்கம் பிரான்சியா என்றும், மக்கள் பிரான்சியர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இது தவிர பிரெத்தோன், பாஸ்க்,நொர்மான் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பிரெஞ்சுக்காரர்களின் முன்னோர்கள் என்று வரலாறு சொல்கிறது.

 

புலம்பெயரும் மக்களும் பிரான்சும்

இன்றைக்கு பிரான்சு நாட்டின் குடிவரவு சட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பிரெஞ்சு மக்கள் இரண்டு பிரிவாக நின்று யுத்தம் செய்கிறார்கள். ஒரு பிரிவினர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த செக், ஸ்லோவாக்கியா, போலந்து, அங்கேரி முதலான நாடுகளின் அகதிகள் எதிர்ப்பு நிலையை வரவேற்கிறவர்கள். குறிப்பாக செக், அங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் கிருஸ்துவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்போம் என்கின்றன. டென்மார்க் நாடு அகதிகளுக்கான சலுகைகளைக் குறைத்துக்கொண்டதன் மூலம் அகதிகள் தங்கள் நாட்டிற்கு வரும் ஆர்வத்தை மட்டுபடுத்தியிருக்கிறது. பிரான்சு நாட்டிலும் சில வலதுசாரிகள் தங்கள் நகரசபைகளில் கிருஸ்துவர்களுக்கு மட்டுமே இடமளிப்பதென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த வலதுசாரிகள் சொல்லும் காரணம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் செழுமையான வளைகுடா நாடுகள் அகதிகளை ஏற்க முன்வராதபோது நாம் ஏன் உதவேண்டும் என்பதாகும். இந்த வாதம் பிரெஞ்சு மக்களில் ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இந்நிலையில் பிரான்சு நாட்டு இடதுசாரிகளும் எதிர் வரும் தேர்தலைக் கணக்கிற்கொண்டு தங்கள் அகதிகள் ஆதரவு நிலையை சிறிது அடக்கி வெளிப்படுத்தபடவேண்டிய நிர்ப்பந்தம். ஈராக், சிரியா நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே ஏற்பது, பொருளாதார காரணங்களை முன்னிட்டு அகதித் தகுதிக்கு விண்ணப்பிக்கும் அந்நியர்களை நிராகரிப்பது, இனி வருங்காலத்தில் படிப்படியாக அகதிவிண்ணபங்களைக் குறைப்பது எனப் பேசிவருகிறார்கள்.
1793ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் தங்கள் அரசியல் சட்டத்தில், சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு புகலிட அனுமதி வழங்குவதென” தீர்மானித்தார்கள். இதன்படி நல்ல பொருளாதார வாழ்க்கைக்காக பிரான்சு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்க்கு எல்லைக்கதவுகள் திறந்தன. புகலிடம் தேடிவருபவர்களும் தங்கள் உழைப்பு, ஆற்றல், இரண்டையும் முழுமையாக அளித்து நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், பண்பாடு ஆகியவற்றிர்க்கு உதவுவார்கள் என பிரான்சு எதிர்பார்த்தது. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜிய மக்களின் வருகை பிரான்சு நாட்டின் தொழிற்துறை வளரக் காரணமாயிற்று. அவ்வாறே முதல் உலகப்போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக போலந்து அர்மீனியா, ரஷ்யா மக்களால் பிரான்சு வளம்பெற்றது. அறுபதுகளில் வட ஆப்ரிக்க நாடுகள், ஆசிய பிரெஞ்சுக் காலனி மக்கள் பிரான்சு நாட்டின் ராணுவம் பொருளாதாரம் ஆகியவற்றிர்க்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். கலை இலக்கியமுங்கூட அதிக இலாபத்தை அடைந்திருக்கிறது வெளிநாட்டிலிருந்து பிரெஞ்சில் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள், பாடகர்கள் பட்டியல் நீளமானது: குந்தெரா, யூர்செனார், ஸொல்ல, மாலூ•ப் என நிறையக் கூறலாம்.

 

பிரான்சும் தமிழர்களும்:

பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

 

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure Transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

 

பிரான்சு நாட்டில் குடியேறிய வெளிநாட்டினர் பொருளாதார அடிப்படையில் நன்றாகவே வாழ்கின்றனர். எக்காரணத்தை முன்னிட்டு புலப்பெயர்வு இருந்தாலும் நாட்டில் பிரச்சினை தீர்ந்தவுடன் அல்லது பொருளாதார காரணங்களால் இங்கு வந்தவர்கள் ஓரளவு பொருள் சேர்த்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவது வழக்கமில்லை. இன்று நேற்றல்ல புலம் பெயருதல் என்றைக்குத் தொடங்கியதோ அன்றிலிருந்தே இது ஒருவழிச் சாலையாகத்தான் இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்குக் குடியேறினாலும் சரி, மாஸ்கோவொலிருந்து பாரீஸ¤க்கும் வந்தாலும் சரி, விதியொன்றுதான். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெற்றோர்கள் எப்படியிருப்பினும், பிள்ளைகள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஊறியபின் உலருவது எளிதாக நடப்பதில்லை. தவிர சொந்த நாடு வந்த நாடு இருதரப்பின் பலன்களையும் எடைபோட்டுபார்க்கிறபோது வந்த நாட்டில் பலன்கள் கூடுதலாக இருப்பதும் ஒருகாரணம். புலம்பெயர்ந்த மக்களுக்கு மட்டும் நன்மையென எண்ணவே வேண்டாம். புலம்பெயர்ந்த மக்களை ஏற்ற நாடுகளுக்கும் இதில் இலாபம் பார்த்திருக்கின்றன.

 

66.3 மில்லியன் மக்கட்தொகையைக்கொண்ட பிரான்சு நாட்டில், 70 விழுக்காடு மக்கள் பூர்வீக மக்களென்றும் மற்ற்வர்கள் இந்தத் தலைமுறையிலோ அதற்கு முன்போ புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள். இப்புலம்பெயர்ந்த மக்களிலும் 40 விழுக்காடுமக்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்சுக்குள் குடியேறிவர்கள். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வருகிற மக்களுக்கு பிரச்சினைகள் பொதுவில் இருப்பதில்லை. ஆனால் ஆசிய ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்களிடமே உள்ளூர் மக்களுக்கு வெறுப்பிருக்கிறது. அந்த வெறுப்பினை உமிழ்கிறவர்கள் பெரும்பாலும் பூர்வீக பிரெஞ்சு மக்கள் அல்ல புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களின் வாரிசுகள். பிரான்சு நாட்டு மக்களில், பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது மதமாக இஸ்லாம் இருக்கிறது சுமார் ஏழுமில்லியன் மக்கள் அச்சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனினும் 40 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும், 60 விழுக்காடு மக்கள் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்திருக்கிறபோதும் மதச்சடங்குகள், சம்பிரதாயங்களை பொருட்படுத்தாமல் வாழ்கிறவர்கள் என வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றுதலைமுறைகளாக பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் மக்களின் குணம் எப்படி? எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். பரிசுப் பொருட்களுக்கு சட்டென்று மயங்குபவர்கள். அந்நியர்களை அத்தனை சீக்கிரம் பொதுவில் நம்ப மாட்டார்கள். தங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயங்கள் உண்டு, பிறரைக் குறிப்பாக மூன்றாவது உலக நாட்டினரை குறைத்து மதிப்பிடுவார்கள். வரலாறு பிரிட்டிஷ்காரர்களை உயர்த்தி பிடிப்பது காரணமாகவோ என்னவோ கனவில்கூட ‘So British!’ காதில் விழுந்துவிடக்கூடாது. ஆங்கிலம் கூடவே கூடாது ஆனால் அமெரிக்கர்கள் பேசினால் Bravo ! – ஆனால் இந்த ‘Bravo’ ’ இத்தாலியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தது,

 

(தொடரும்)

——-

பிரான்சு: நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக ஒரு “Français” (பிரெஞ்சுக்காரர் அல்லது பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்) இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் -தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழிபெயர்த்த தேசிகப்பிள்ளை குடும்பம் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

(தொடரும்)

நன்றி: சொல்வனம்

 

மொழிவது சுகம் ஜனவரி 12 -2015

1. பிரான்சு நாட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு சுதந்திற்காக அது எந்தவிலையையும் கொடுக்கக்கூடிய நாடென்பது தெரியும்

Paris2
பிற ஐரோப்பியநாடுகளைப்போலவே பிரான்சுநாட்டில் உலகின் அத்தனை நாட்டவரும், அத்தனை இனமக்களும், நிறத்தவர்களும் வாழ்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்சிலும் காலனி ஆதிக்கத்தினால், பொருளாதாரக் காரணங்ககளால் புலம்பெயர்ந்த மக்கள் என்பதற்கு அப்பாற்பட்டு அரசியல் மற்றும் வேறுகாரணங்களால் பாதிக்கப்படுகிறவர்களுங்கூட இங்கு அடைக்கலம் கோரி வருகிறார்கள். எத்தனை சிரமபட்டாவது, எவளவு செலவானாலும் பரவாயில்லை நிம்மதியான வாழ்க்கைக்கு மேற்கு மட்டுமே உத்தரவாதம் என நம்பி இலட்சக்கனக்கானவர்கள் நேர்வழியிலும், பிற வழிமுறைகளிலும் மேற்கத்திய நாடுகளைத் தேடி வருவது – மேற்குலகு நாடுகள் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிற இக்காலத்திலும் – தொடரவே செய்கிறது. கற்கால மனிதன் கூட்டமாக புலம்பெயர்ந்து சென்றதும் பாலையை நோக்கியல்ல, ஆற்றோரங்களையும் புல்வெளிகளையும் நோக்கி. இவ்விஷயத்தில் பிரான்சுக்கென தனி வரலாறு உண்டு. நாஜிகள் காலத்திலும், அதன் பிறகு கிழக்கு ஐரோப்பியநாடுகள் கம்யூனிஸத்தின் பிடியில் சிக்கித் தவிதபோதும், ஆளுகின்ற வர்க்கத்துடன் அல்லது உள்ளூர் அமைப்பு முறையுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாத இஸ்லாமிய அறிவு ஜீவிகள் ஆகியோரும்- சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென நினைக்கிறவர்கள் – மேற்கு நாடுகளுக்கே குறிப்பாக பிரான்சு நாட்டையே நம்பிவருகிறார்கள்.

இன்று இரண்டாவது மதமென்ற தகுதியை இஸ்லாம் பிரான்சுநாட்டில் பெற்றிருக்கிறதெனில், அதன் வளர்ச்சிக்கு பிரெஞ்சுக் காரர்களும் காரணம். இங்கே எவித பேதமுமின்றி பிரெஞ்சின் இறையாண்மைக்கு ஒத்துழைக்கிற பெரும்பான்மையான இஸ்லாமியரை குழ்ப்பத்தில் ஆழ்த்த, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சிறுகூட்டம் முயன்றுவருகிறது. ஒரு பெரும் அணியாகத் திரண்டு உலகில் முதன்முதலாக முடியாட்சிக்கு எதிராக புரட்சிசெய்து வரலாற்றில் இடம்பெற்றவர்கள் பிரெஞ்சுக் காரர்கள். அவர்கள் சுதந்திரத்திற்கு கொடுத்த விலை அதிகம். அதற்கான விலையைக் கடந்தகாலத்தைபோல எதிர்காலத்திலும் கொடுக்கும் நெஞ்சுரம் அவர்களுக்குண்டு என்பதை பிரான்சு நாடெங்கும் வன்முறைக்கு எதிராகத் திரண்ட கோடிக்கணக்கான மக்களின் கூட்டம் நேற்று நிரூபித்தது. ஷார்லி ஹெப்டோ இதழ் வழக்கம்போல புதனன்று விற்பனைக்கு கிடைக்குமென சொல்லியிருக்கிறார்கள், இம்முறை பல மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு வருகின்றன.
தி இந்து தினசரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல தலையங்கங்கள் வந்துள்ளன
படிக்க: http://tamil.thehindu.com/opinion/editorial/பேனாவைக்-கொல்ல-முடியாது/article6

 

2. எனது கதைகளின்கதை -வே.சபாநாயகம்

 

Sabanayagamதங்கத்திற்குச் செம்புசேர்ப்பதுபோல கதையின் முழுமைக்கு கற்பனை துணை எவ்வளவு அழகாகச்சொல்லியிருக்கிறார். திரு வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் புதிதாக ஒரு தொடரை தொடங்கி யிருக்கிறார். தலைப்பு ‘எனது கதைகளின் கதை’ – அவருடைய கதைகளுக்கான வேரினை அறிய இத் தொடர் நமக்கு உதவுமென நம்புகிறேன். வே.சபாநாயகம் என்ற படைப்பாளியையும் நாமறியச் செய்யும். படைப்புத்துறையில் சோர்வின்றி செயல்படும் மூத்த எழுத்தாளர். விருதுகளை நம்பி எழுத்தாளர்களை வாசிப்பவன் இல்லை நான். முதல் இரண்டுவரிகளே போதும் ஓர் எழுத்தின் மனத்தையும் பலத்தையும் உணர்வதற்குப் போதுமென நம்புகிற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அதனாலேயே திரு வே. சபாயகம் தனது முதல்கதையின்”தொடக்கவரி’ வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்கவேண்டும் என்பதற்காக ‘கல்கி’ ‘துமிலன்’ பாணியில் எழுதியதாக கூறி இருப்பதை இரசிக்க முடிந்தது, எனக்கும் அதில் உடன்பாடுண்டு. வாசகரை ஈர்ப்பதென்பது ஓர் எழுத்தின் முதற்படி. விளையும் பயிர் முளையிலே என்பது எழுத்துக்கும்பொருந்தும். வே. சபாநாயகத்தின் விளைச்சலுக்கு அவர் நல்ல நாற்றாக இருந்திருக்கிறார். கலை இலக்கிய நாட்டம் என்பது ஒரு வரம், அவ்வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்களில் ஒருசிலரே, அவ்வரத்தின் பயனை பிறருக்கும் அளிக்கும் திறன்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஆசிரியர் பற்றியும் பிற செய்திகளையும் அவரது நினைவுத் தடத்தில் வாசித்திருக்கிறேன், அவற்றை நினைவூட்டி ‘எனது கதைகளின் கதைத்’ தொடரை ஆரம்பித்திருக்கிறார். வே. சபாநாயகம் போன்ற்வர்கள் எதுபற்றி பேசினாலும் கேட்கவும் வாசிக்கவும் சுவாரஸ்யமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில் தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
http://ninaivu.blogspot.fr/

 

3. மிஷெல் ஹூல்பெக்:

 

Mishel Houellebecqஷார்லி ஹெஃப்டோ படுகொலை சம்பவத்திற்கு முன்பாக பிரெஞ்சு ஊடகங்களில் பரபரப்புடன் விவாதிக்கபட்ட விஷயம் மிஷெல் ஹூல்பெக்கின் நாவல் Soumission. மிஷெல் ஹூல்பெக் மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். ஒவ்வொரு முறையும் அவரது நூல் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவரும். இம்முறையும் பெயரை மிகவும் ரகசியமாக வைத்திருந்து இம்மாதம் முதல்வாரத்தில் புத்தககக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது. புதல் பதிப்பே ஒன்றரை மில்லியன் பிதிகள் எனச்செய்திகள் சொல்கின்றன. தன்னிலையில் சொல்லப்படும் கதை, ஓர் அறிவு ஜீவி கதை சொல்கிறார், அவர் வாழ்க்கையில் எதிர்கொள்கிற சம்பவங்கள் கதையாக வருகின்றன. நாவலில் இன்றைக்கு பிரெஞ்சு அரசியலில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனவரும் வருகிறார்கள். 2022ல் பிரான்சுநாட்டு அதிபர் தேர்தல் வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவில் தீவிர வலதுசாரி வேட்பாளரான திருமதி லெப்பென் (Marie Le Pen) முதலாவதாகவும், அடுத்த வேட்பாளராக இஸ்லாமிய வேட்பாளரும், மூன்று நான்கு இடத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் வருகிறார்கள். வலது சாரி பெண்மணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளரைத் தேர்தலிலிருந்து விலக்கிக்கொண்டு இரண்டாவது இடத்திலிருக்கும் இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கின்றன. நாட்டின் பிரதான இடது சாரி கட்சிகளும் ( Partie Socilaiste, Communist…) மிதவாத வலதுசாரிகளும் ( UMP etc..), நாட்டின் பொது எதிரியாக தீவிர வலதுசாரியைக் கருதி அவருக்கு எதிராக இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். ( முந்தைய தேர்தல்களில் எப்போதெல்லாம் தீவிர வலதுசாரிக்கு வெற்றி வாய்ப்பு வந்ததோ அப்போதெல்லாம் மேற்கண்ட கட்சிகள் கூட்டுசேர்ந்து தோற்கடித்திருக்கிறார்கள்) தேர்தல் முடிவில் வழக்கம்போல தீவிர வலதுசாரி வேட்பாளர் மரி லெப்பென் தோற்கடிக்கப்படுகிறார். இனி மரபான குடும்பம், அதாவது ஆண்களுக்கு மட்டுமே கல்வி பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் தீவிர கிறிஸ்துவர்களையும் ஈர்ப்பதால் மிதவாத இஸ்லாமியர் பிரான்சு நாட்டின் அதிபராகிறார். பிறகென்ன நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பது எளிதாகிறது (பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் எபதால்) வளைகுடா நாடுகளின் முதலீட்டால் நாட்டில் பல்கலைகழகங்கள் இஸ்லாமியப் பல்கலைகழகங்களாகின்றன என்றெல்லாம் ஒருவகை இஸ்லாமியா ஃபோபியாவுடன் எழுதப்பட்டுள்ள நாவலை விமர்சகர்கள் ஜார்ஜ்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலுடன் ஒப்பிடுகிறார்கள்.
——-

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012


1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

Poomaniபிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.

2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல்  ட்ரூயோ (Lyonel Trouillot)  – தருமபுரி – மாதவ் சவாண்.

Lyonel ‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்.  ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன? என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.

ஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது.  தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்கரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா? கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’  நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.

Madav Chavanஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழுக்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில்,   இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க  வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.

Strasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த பிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம்? தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும்.   Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது? இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா? La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும்.  . ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.

—————————————