சிமோன் அப்பா (பிரெஞ்சு சிறுகதை)

          கி தெ மொப்பசான்

                    தமிழில் நா. கிருஷ்ணா

(1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )

 நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது.  பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து விடுவார்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக, சிறிது தூரத்தில் கூடி  நின்று, முணுமுணுக்கிறார்கள்.

காரணம் இல்லாமலில்லை, அன்றைய தினம் காலையில்தான், லா பிளான்ஷோத் மகன், முதன் முறையாக அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தான். பிளான்ஷோத் என்ற பெண்மணியின் பெயர் அவர்களுக்குப் புதிதல்ல, ஒவ்வொரு பையனின் குடும்பத்திலும் அப்பெயரைக் குறிப்பிட்டுப் வம்பு பேசுவது அன்றாடம் நடப்பதுதான் ; பொதுவெளியில் நல்ல அபிப்ராயம் இருப்பினும், அவர்கள் அம்மாக்களிடையே பெண்மணியின் பெயர் ஏதோ பாவப்பட்டதென்கிற அபிப்ராயம் இருக்கவே செய்தது, பையன்களும் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலேயே, அப்பெண்மணியைக்குறித்து அதே கருத்தைக் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

சிமோன் விஷயத்திற்கு வருவோம், அவன் வயது பையன்களுக்கு சிமோனைத் தெரியுமா என்றால் தெரியாது.. அவன் வீட்டிலேயே அடைந்து கிடப்பவன், பிற பையன்களோடு கிராமத்துத் தெருக்களிலோ அல்லது ஆற்றங்கரைகளிளோ ஓடிப்பிடித்து விளையாடுவதெல்லாம் இல்லை, ஊர்ப்பையன்களுக்கும் அவன் விளையாட வரவில்லை என்பதால் வருத்தமும் இல்லை. இப்படியான சூழலில்தான், சிமோன் இவர்களோடு அதிகம் கலக்காததன் காரணத்தை நன்கறிந்தவன்போல ஒருபையன், அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும், கண்களை இலேசாக சிமிட்டிக்கொண்டு ஏளனத்தோடு கூறியதை ஒருவித மகிழ்ச்சியோடும், கணிசமான ஆச்சரியத்தோடும் வரவேற்று, தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் தெரிவித்த செய்தி :

« சிமோனைத் தெரியுமில்லையா, அவனுக்கு அப்பா கிடையாதாம் ! »  

        பிளான்ஷோத் மகனான சிமோனும் வகுப்பிலிருந்து வெளியில்வந்திருந்தான். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், கொஞ்சம் வெளிறிய தேகம், பார்க்க என்னவோ போலிருந்தாலும், பையன் படு சுத்தம்.

        சிமோன்  வீடு திரும்பவேண்டும், வேறெங்கே அவன் அம்மாவிடம். ஆனல் அவனுடைய பள்ளித் தோழர்கள் விடுவதாக இல்லை, கூடிக்கூடித் தங்களுக்குள் அவனைப்பற்றிய கிசுகிசுப்பைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவர்களின் விஷமும்,  குரூரமும் கலந்த பார்வை  தற்போது நம்முடைய பையன் மீது, தொடர்ந்து அவனைச் சீண்டிப் பார்க்கும் திட்டத்துடன், ஒருவர் இருவரென நெருங்க ஆரம்பித்து, அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

        இவர்களுக்கு என்னிடம் என்ன வேண்டும், எதற்காக இப்படி தண்னைச் சூழ்ந்து நிற்கவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் குழப்பத்துடனும், வியப்புடனும் சிறுவன் சிமோன் அவர்கள் மத்தியில் நிற்க,  அவனைப் பற்றிய செய்தியைப் கொண்டுவந்து, அதனை வெற்றிகரமாக பரப்பிய பெருமையில் திளைத்த பையன் இவனை நெருங்கி :  

« உன் பெயரென்ன ?  » எனக்கேடக, இவனும் « சிமோன் ! » எனத் தெரிவித்தான்.

« சிமோன், சிமோன் மட்டும் தானா, தலைப்பெழுத்தில்லையா ? » எனத் திரும்பவும் போக்கிரிப்பையன் கேட்க,

ஐந்துவயது சிறுவனும் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத்  தெரியாமல் :

« ஆமாம், ‘சிமோன்’  » என்றான்.

« மொட்டையா இப்படி சிமோன் என்று சொன்னால் ஆச்சா ? »  – குரலை உயர்த்தி வயதில் மூத்தபையன் சிமோனை மறுபடியும் கேட்டான்.

        «  என்னுடைய பெயர் சிமோன், அதைத் தவிர வேறு பெயர்களில்லை » என்றான், கண்களில் நீர்கோர்த்திருந்தது.

கூடியிருந்த பையன்கள் சிரிக்க ஆரம்பித்தனர், இப்பிரச்சனையில் மறுபடியும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் சிமோனைச் சீண்டியவன் :

« நல்லா கேட்டுக்குங்க. இவன் அப்பன்  இல்லாத பையன் ! » – என்றான்.

மறுகணம், அங்கு மிகப்பெரிய அமைதி. பையன்கள் மொத்தபேரும் அதிர்ச்சியில் ஊமையாக நின்றார்கள், ‘தகப்பனற்ற ஒருபையன்’ என்பது, அவர்களைப் பொறுத்தவரை அசாதாரணமான,  நம்பவியலாத, மிகவும் மோசமானதொரு தகவல். இயற்கைக்குப் புறம்பான ஓர் அதிசயப் பிறவியைப் போல அவனைப் பார்த்தனர். சிமோன் தாய் பிளான்ஷோத் குறித்து, அவர்களுடைய அம்மாக்கள்  இதுநாளவரை கொண்டிருந்த, விவரிக்க முடியாத அதே வெறுப்பு தங்களிடமும் நன்கு வளர்ந்திருப்பதை அவர்கள் உணர முடிந்தது.

சிமோனைப் பொறுத்தவரை,  மீளமுடியாத பேரிடரில் சிக்கியதாக கருதி, ஒரு மரத்தின் பிடிப்பில் அழுந்த சாய்ந்து நின்றான். தன் தரப்பில் பதில்சொல்லவேண்டும், என்ன சொல்லலாம், யோசித்தான். தனக்கொரு தகப்பனில்லை என்கிற மோசமான விஷயத்தை மறுப்பதற்கு, மற்ற பையன்களுக்குப் பதிலென்று ஒன்றைக் கூற அவனிடம் எதுவுமில்லை. இறுதியாக, ஏதாவது சொல்லவேண்டும் என்றெண்ணியவன்போல ஆத்திரத்துடன்  அவர்களிடம்: “நீங்க நினைப்பதுபோல அப்பனில்லாத பையன் இல்லை, எனக்கும் ஒருவர் இருக்கிறார்”, எனக் கத்தினான்.

« இருக்கிறார் என்றால்,  எங்கே? » –  இம்முறையும் கேள்வி கேட்டது வயதில் மூத்த அதே பையன்.

        சிமோன் பதிலின்றி  மௌனம் காத்தான்; தெரிந்தால்தானே சொல்வான். சுற்றி நின்ற சிறுவர்கள் சந்தோஷ மிகுதியில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், விலங்குகள், பறவைகளென்று உறவாடும் வாழ்க்கை. கோழிப்பண்ணையில், காயமுற்ற ஒரு பறவையின் ஜீவனை முடிக்க, பிறகோழிகளுக்குத் தேவைப்படும் குரூரத்தைக் கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு, சிமோன் அவர்களுக்குக் காயமுற்ற பறவை. இந்நிலையில் சிமோன் கவனம் திடீரென்று அருகிலிலிருந்த சிறுவன்மீது சென்றது, அவன் அண்டைவீட்டுப் பையன், தாய் ஒரு விதவை, சிமோனைப்போலவே அப் பையனும் தாயுடன் தனியே வசிப்பவன்.  

        « ஏய் உன்னைத்தான். உனக்கு மட்டும் அப்பா இருக்கிறாரா என்ன, உனக்குக் கூடத்தான் இல்லை » – என்று அவனிடம்  சிமோன் கூற,

        « யார் சொன்னது அப்படி, எனக்கு அப்பா இருக்கிறாரே! »- என்றான் அப் பொடியன்.

       « இருந்தால், எங்கே? » சிமோன் பதில் கேள்வி கேட்டான்.

        « அவர் செத்துட்டார், கல்லறையில் இருக்கிறார். »

சிமோனுக்கு தக்கப் பதிலைக் கொடுத்த பெருமிதம் பையனிடம் தெரிந்தது. அண்டைவீட்டுப் பையனின் தகவலுக்கு கூடிநின்ற பிற பையன்களின் ஒப்புதலும் முணுமுணுப்பாக  வெளிப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை அவனது தந்தை கல்லறையில் இறந்துவிட்டார் என்ற உண்மை, தந்தையென்று ஒருவரும் இல்லாத பையனைத் துவம்சம் செய்யப் போதுமானது. கூடிநின்ற பையன்களின் தகப்பன்களும் பெரும்பாலும் பொல்லாதவர்கள், குடிகாரர்கள், கள்வர்கள், தங்கள் தங்கள் மனைவியரிடம் கடுமையாக நடந்துகொள்கிறவர்கள்,  இந்நிலையில் அவர்கள் பிள்ளைகளாகிய தாங்கள் எல்லோரும் நெறிமுறைப்படி இருப்பவர்கள்போலவும், மாறாக சிமோன் நெறிமுறைக்குள் வராதவன் போலவும் எனவே அவன் மூச்சுமுட்டிச் சாகலாம் என்பதுபோல ஒருவரை ஒருவர் முட்டிமோதிக்கொண்டு அவனை நெருங்கினார்கள்.

அடுத்த நொடி, சிமேனுக்கு நேரெதிரில் இருந்த பையன்,  அவனைக் கிண்டல் செய்யும் விதத்தில் தன்னுடைய நாக்கை வெளியில் நீட்டிக் காட்டிய பின்:

     “அப்பாஇல்லை! இவனுக்கு அப்பா இல்லை ! » எனச் சத்தம் போட்டான்.

     சிமோன் இரு கைகளாலும் அவன் தலைதலைமுடியைப் பற்றி, கால்களால் உதைக்க அச்சிறுவனோ சிமோன் கன்னத்தை மிருகத்தனமாகக் கடித்தான். அடுத்த நொடி அங்கே பெரும் சலசலப்பு. சண்டைபிடித்த பையன்கள் விலக்கப்பட்டார்கள். கூடியபையன்கள் கைத்ட்டி ஆர்ப்பரிக்க  சிமோன் அடிபட்டு, ஆடைகிழிந்து, கன்றிப்போய், ஆங்காங்கே வீங்கி , தரையில் கிடந்தான்.  எந்திரத்தனமாக எழுந்து, தன் சட்டைக்குமேல் அணிந்திருந்த ஜாக்கெட்டில் படிந்திருந்த மண்ணையும் தூசிகளையும் தட்டிக்கொண்டிருக்க, கும்பலில் இருந்த ஒரு பையன்:

        « நடந்த விஷயத்தை போய் உன் அப்பாகிட்ட சொல்லு.» எனக் கத்தினான்.

சிமோன் இதயம் உடைந்து நொறுங்கியிருந்தது. தன்னைச் சுறியிருந்த பையன்கள் பலசாலிகள், அவர்களுக்குப் பதில் சொல்ல இவனால் ஆகாது, காரணம்  அவனுக்கு அப்பா இல்லை என்பது பொய்யல்ல உண்மை. பையன்கள் முன்பாக அழக்கூடாது, அப்படி அழுவது தன்னைச் சங்கடத்தில் நிறுத்தக்கூடும் என்பதால் ஒருவித பெருமிதத்துடன் அழுகையை அடக்கப் பிரயத்தனம் செய்தான்.  மூச்சுத் திணறியது, பின்னர் சத்தமின்றி  பெரும் துக்கத்தில் உடல் குலுங்க தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

இந்நிலையில் அவனுடைய எதிரிகளிடையே ஒருவித மூர்க்கத்தனமான மகிழ்ச்சி வெடித்தது.  அச்சத்திற்குரிய கொண்டாட்டங்களில்  காட்டுமிராண்டிகள் வெளிப்படுத்தும் இயல்புடன்,  அவர்கள் ஒருவரையொருவர் கைகளைப் பிணைத்துக்கொண்டு,  அவனைச் சுற்றிவந்து ஆட்டம்போடத் தொடங்கினார்கள்: « அப்பா இல்லை »”  « அப்பா இல்லை  » எனத் திரும்பத் திரும்பச் சொல்லவும் செய்தார்கள்.

ஆனால் சிமோன் மறு நொடி அழுகையை நிறுத்தினான். ஒருவித ஆத்திரமும் கோபமும் தலைக்கேறியது. காலடியில் கற்கள் கிடந்தன;  அவற்றைக் கையிலெடுத்தவன் முழு பலத்துடன், தன்னிடம் வம்புசெய்தப் பையன்கள் மீது வீசினான். அடிபட்ட இரண்டு அல்லது மூன்று பேர் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சிமோன் தற்போது ஏதோ பலசாலிபோல தோற்றம் தர, பிற பையன்களிடத்திலும் ஒருவித அச்சத்தைக் காணமுடிந்தது. பெருங்கோபமுற ஒரு மனிதன் முன்பு  நிற்பதற்கு அஞ்சியோடும்  கூட்டம்போல, பையன்களும் கோழைகளாக தங்களை விட்டால் போதுமென்று ஓடி மறைந்தனர்.

தனித்து விடப்பட்ட , தந்தையற்ற அச்சிறுவன், மனதில் தோன்றிய பழைய நினைவொன்றின் காரணமாக ஆற்றிள் மூழ்கி உயிரைவிடத்  தீர்மானித்து வயற்காடுகளை நோக்கி ஓடினான். உண்மையில், எட்டுநாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு படுத்திக்கொண்டான்.  உயிர்வாழ்க்கைக்காக பிச்சையெடுத்த ஒரு தரித்திர மனிதன் கையில் காசில்லையென்று ஆற்றில் குதித்திருந்தான். அவனைத் நீரிலிருந்து மீட்டு கரையில் போட்டபோது சிமோன் அங்கிருந்தான். பாவபட்ட அம்மனிதன், சாதாரணமாக பரிதாபமாக இருப்பான், அத்துடன் அசுத்தமான அசிங்கமானத் தோற்றம்வேறு.  இந்நிலையில் அம்மனிதனை, வெளிறிய கன்னங்கள், நீரில் நனைந்த நீண்ட தாடி, மூட மறந்த கண்களென்று கரையில் கிடத்தியிருந்தபோது, அவனிடத்தில் கண்ட அமைதி, இவனிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர். “அவன் இறந்துவிட்டான்” என்றார். இன்னொருவர் “அவன் முகத்தில் இப்போதுதான் சந்தோஷத்தை காணமுடிகிறது” என்றார். அவனைப்போல சிமோனும் ஆற்றில் விழுந்து இறக்க நினைத்தான், காரணம், இறந்த தரித்திர மனிதனுக்கு கையில் காசில்லை என்பதுபோல இவனுக்கும் தகப்பனில்லை.

ஆற்றின் அருகே சென்றதும் சிமோன் பார்வை தண்ணீர் மீது சென்றது. மீன்கள் சில  தெளிவான நீரோட்டத்தில் சற்று துள்ளலுடன் உல்லாசமாக வலம்வந்தன, அவ்வப்போது எம்பி நீரின் மேற்பரப்பில் வட்டமிட்ட ஈக்களைப் பிடித்தன. அவற்றின் செயல்பாடுகள் ஆர்வத்தைத் தர ,அழுவதை நிறுத்தி அவற்றைப் பார்த்தான். ஆனால் சில சமயங்களில், புயலுக்கிடையிலான அமைதியின்போது திடீரென வீசும் சூறைக்காற்று மரங்களை முறித்து சாய்த்தபின் அடிவானத்தில் மறைந்துபோவதுண்டு, அதுபோல சாகவேண்டும் என்ற எண்ணம்  மனதில் பெரும் வலியுடடன் அவனுள் உதித்தது.: “நான் நீரில் மூழ்கவேண்டும், காரணம் எனக்கும் தந்தையென்று ஒருவருமில்லை” எனத் தனக்குள் கூறிக்கொண்டான்.

வெயில் கூடுதலாக இருந்தாபோதிலும்,  குறைசொல்ல முடியாது, வெப்பம் தாங்கிக் கொள்ளகூடியதாக. இனிமையான கதிரொளியில் புல் பூண்டுகளில் வெதுவெதுப்பை உணர்ந்தான்.  நீர் கண்ணாடி போல் ஒளிர்ந்தது. சிமோன் ஒரு சில நிமிடங்கள் பேரின்பத்தில் திளைத்தான். கண்களில் நீர்கோர்த்தது, தொடர்ந்துணர்ந்த சோர்வில், அங்கிருந்த புல்தரையில், காயும் வெயிலில் படுத்துறங்க விரும்பினான்.

சிறிய பச்சை தவளையொன்று அவனது காலடியில் குதித்தது. அதைக் கையில் எடுக்க முயற்சிக்க  தப்பித்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதியில் அதன் பின்னங்கால்களின் நுனியைப் பிடித்துத் தூக்கினான். அச்சிறு பிராணி, அவன் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்த முயற்சிகளைக் காண அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் உடலைச் சுருக்கி பின்னங்கால்களில் நிறுத்திய மறுகணம் உடலைத் தளர்த்தி,  அவற்றை தவளை நீட்ட, இரண்டும் கம்பிகளைப் போல விறைத்துக் கொண்டன. அதே வேளை பொன் வளையமிட்ட வட்டமான கண்களுடன், தவளையின் முன் கால்களின் பாதங்களிரண்டும் அசைவது கைகளை அசைப்பதுபோல இருந்தது. அக்காட்சி, சிறு சிறு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று ஆணியால் இணைத்து குறுக்குமறுக்குமாக உருவாக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய  விளையாட்டுபொம்மையை அவனுக்கு நினைவூட்டியது, அதிலும் இப்படித்தான்  பொம்மைவீரர்களை அசைத்து இயக்க முடியும். பின்னர் தனது வீட்டையும் தாயையும் நினைத்து, மிகுந்த சோகத்துடன் பழையபடி அழ ஆரம்பித்தான். அவனுடைய கைகால்களில் உதறல் எடுத்தது. உறங்குவதற்கு முன்பு மண்டியிட்டு பிரார்த்தனை செய்வான். அதைத் தற்போதும் முயன்றான், ஆனால் அதை முடிக்க இயலவில்லை, காரணம் விம்மல்கள் இடைவெளியின்றி, விரைவாகவாகவும், கொந்தளித்தும் அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. இந்நிலையில் அனைத்தையும் மறந்தான், அவனைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதிலும் கவனம்செல்லவில்லை, தற்போதைக்கு அழுவது ஒன்றுதான் செய்யவேண்டிய வேலை என்பதுபோல அதைமட்டும் செய்தான்.

        திடீரென்று, கனத்ததொரு கரம் தோளை அழுத்துகிறது, தொடர்ந்து கட்டைக் குரலில் : « அடேய் குட்டி பையா`!  அப்படியென்ன கவலை உனக்கு,  எங்கிட்டச் சொல்லேன், நானும் தெரிந்து கொள்கிறேன்`! ? » என்றது. சிமோன் திரும்பிப் பார்த்தான். சுருட்டைமுடியும், தாடியுமாக வாட்டசாட்டமான தொழிலாளித் தோற்றத்தில் இருந்த அம்மனிதன் நல்லவிதமாக அவனைப் பார்த்தான். சிமோன் அவனிடம், கலங்கிய கண்களும் நெஞ்சமுமாக : : 

        « அப்பா இல்லையென்று சொல்லி, எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு.. எனக்கு…அப்பா இல்லை » என பதிலளித்தான்.

        « என்னது, அப்பா இல்லையா,  அப்ப்டையெல்லாம் ஒருவரும் இருக்க முடியாது. தந்தை இல்லாத மனிதரில்லை, எல்லோருக்கும் அப்பா உண்டு »  எனத் தெரிவித்து, அந்நபர் சிரித்தான்.

        சிறுவன், தனது கடுந்துயரத்திற்கிடையில், சிரமத்துடன் பதில் சொல்ல முனைந்து : “ஆனால் எனக்கு அப்படி ஒருத்தரில்லை.” » என்றான். சிறுவனின் பதில் தொழிலாளியை பையன் விஷயத்தில்  அக்கறைகொள்ள வைத்தது.  பையன் வேறு யாருமல்ல லா பிளான்ஷோத் மகன் என்பதைத் தொழிலாளி புரிந்துகொண்டான். ஊருக்குப் புதியவன் என்றாலும், ஓரளவிற்கு சிமோன் கதையை அம்மனிதன் அறிந்திருந்தான்.

        « உனக்கு ஒரு அப்பா வேண்டும், அவ்வளவுதானே  கவலைப் படாதே, கொடுக்க முடியும் , என்னுடன் வா, உன் அம்மாவிடம்போவோம்” – என்று சிமோனிடம் தெரிவித்தான்.

சிறுவன் கையைப்பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து நடந்தார்கள். தொழிலாளியின்  முகத்தில் மீண்டும் சிரிப்பு, காரணம் பையனின் தாய்  ‘பிளான்ஷோத்’ ஐ திரும்பச் சந்திக்க நேரும் என்பதைக் குறித்த வருத்தமேதும் அவரிடமில்லை. அப்போதெல்லாம் அவள் ஊரில் மிக அழகானப் பெண்களில் ஒருத்தியென பெயரெடுத்திருந்தாள். ஒருவேளை அத்தொழிலாளியின் அடிமனதில் அவள் இள்மபெண்ணாக இருந்தபோது இழைத்த தவறை மறுபடியும் இழைக்கலாம், என்கிற எண்ணமிருக்கலாம், யார் அறிவார்.

பையனும் தொழிலாளியும், வெள்ளையடித்து, நன்கு பராமரிக்கபட்டிருந்த ஒரு சிறிய வீட்டை . அடைந்தார்கள். அங்கிருந்த பெண்மனியைக் கண்டதும்:

« இதுதான் ! » என்று வீட்டை அடையாளப்படுத்திய பையன். « அம்மா ! » என்று கூவி அழைத்தான்.

        வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி வெளிப்பட்டாள். அவளைக் கண்ட மறுநொடி தொழிலாளி சிரிப்பதை நிறுத்தினான், காரணம் நெட்டையாகவும், சற்று வெளிறிய தேகத்துடனும் இருந்த அப்பெண், ஏற்கனவே ஓருவனிடம் ஏமாந்தது போதும் இனி ஒர் ஆணை வாசற்படியைத் தாண்ட விடமாட்டேன் என்பதுபோல கடுமையான முகத்துடன் வாயிலில் நின்றிருந்தாள். அவள் தோற்றம் தொழிலாளியை அச்சம்கொள்ளச் செய்தது.தலையிலிருந்த தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு, தடுமாற்றத்துடன்: ” மேடம் இதோ உங்கள் பையன், ஆற்றங்கரையோரம் பார்த்தேன், அழைத்து வந்தேன் ” – என்றான்.

        ஆனால் சிமோன் தன் தாயைக் இறுகப் பிடித்துக்கொண்டு  மீண்டும் அழ ஆரம்பித்தான்:

        « அம்மா, ஆற்றைத்தேடி நான் போனது, விழுந்து சாகத்தான். எல்லோரும் என்னை அடித்தார்கள், உதைத்தார்கள் … ஏனென்றால் எனக்கு அப்பா இல்லையாம் ». இளம்பெண்ணின் கன்னமிரண்டும் எறிதழல்போல சிவந்தன, நெஞ்சில் ரணப்பட்டிருந்தாள். உணர்ச்சிவேகத்தில் மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய முத்தமிட்டாள். வந்த மனிதனோ நெகிழ்ந்திருந்தான், அங்கிருந்து எப்படி விடைபெற்றுச் செலதெனத் தெரியாமல் குழம்பியபடி நின்றிருந்தான்.. இந்நிலையில் பையன் சிமோன் திடீரென்று அவனிடம் ஓடிவந்தான் :

        « உங்களுக்கு என்னுடைய அப்பாவா இருக்க விருப்பமா? » – எனக்கேட்டான்.

        பெரும் அமைதி. லா பிளான்ஷோத், ஊமையாக, தான் பரிதாபமானநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப்போல கூனிக்குறுகி  இருகைகளையும் மார்பில்வைத்து சுவரின் பிடிமானத்தில் சாய்ந்து நின்றாள். தனது கேள்விக்குப் பதில் வராத நிலையில், சிறுவன் மீண்டும்:

« உங்களுக்கு என்னுடைய அப்பா ஆக விருப்பமில்லைன்னா சொல்லுங்க, நான் ஆத்துல குதிச்சுடறேன் »- என்றான்.

        தொழிலாளி அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டவன்போல,  சிரித்துக்கொண்டே

        « ஏன் ஆகக் கூடாது? உனக்கு அப்பாவாக இருக்க எனக்கும் சம்மதம்தான் » என்றான்.

        «  நல்லது, உங்கள் பெயரைச் சொல்லுங்க, மற்றவர்கள் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டால் நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமில்லையா? »

        “பிலிப்,”  என்று தொழிலாளி தனது பெயரைக் கூறினான்.

        ஒரு நொடி சிமோன் ‘பிலிப்’ என்கிற அப்பெயரை தனது மனதில் நன்கு பதிவு செய்தக்கொள்ள எண்ணியவன் போல அமைதியாக இருந்தான். பின்னர்  தனது கைகளை நீட்டி:

        « நல்லது,  இனி பிலிப் ஆகிய நீங்கள் எனக்கு அப்பா! » –  என்றான், தொழிலாளியின் பதிலால் சாமாதானம் அடைந்தவன் போல.

        பையனை தரையில் இருந்து உயரே தூக்கிப்பிடித்த தொழிலாளி இரண்டு கன்னங்களிலும் ஒருவித அவசரத்துடன்  முத்தமிட்டான், பின்னர் அதே வேகத்தில் அவ்விடத்திலிருந்து விரைவாக நடந்துசென்றான்.

        அடுத்த நாள் பையன் பள்ளிக்குள் நுழைந்தபோது, ​​எதிர்பார்த்ததுபோலவே விஷமச் சிரிப்பொன்று  அவனை வரவேற்றது; அன்றும் வகுப்பை விட்டு வெளியேறும்போது, மூத்த வயது பையன் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிக்க, சிமோன் தன் மனதில் பதிவு செய்திருந்த வார்த்தைகளை, கல்லை எறிவதுபோல வீசினான் :

        « பெயர் பிலிப்,  அவர் தான் என் அப்பா. »

        எனச் சிமோன் தெரிவிக்கவும், எல்லா பக்கங்களிலிருந்தும் ஏளன ஆரவாரங்கள்:

        « என்ன சொன்ன பிலிப்பா யார் அது?…இப்படி தலையுமில்லா வாலுமில்லாம சொன்னா போதுமா?… அது என்ன, பிலிப்?… எங்கே கண்ண்டு பிடிச்ச அந்தப் பெயரை?”

        சிமோனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லை; அவனுக்குத் தான் தெரிவித்த பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை, அலட்சியத்துடன் பையன்களைப் பார்த்தான். அவர்களுக்காக பயந்து ஓடும் எண்ணமில்லை மாறாக எது  நடந்தாலும் நடக்கட்டும், எனப் பொறுமையுடனிருந்தான். நல்லவேளையாக பள்ளி ஆசிரியர் குறுக்கிட்டு சிக்கலிலிருந்து அவனை விடுவித்தார். அவனும் வீடுவந்து சேர்ந்தான்.

        இச்சம்பவத்திற்குப் பின்னர் மூன்று மாதங்கள் தொழிலாளி பிலிப், லா பிளான்ஷோத் வீட்டு வழியாக அடிக்கடி போக நேரிட்டது. சிற்சில சமயங்களில் ஜன்னலருகே அமர்ந்து அப்பெண் எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள், அவ்வேளைகளில் அவளிடம் பேச அவன்  துணிந்திருக்கிறான். அவளோ, அவனை வீட்டிற்குள் அனுமதிக்காது வெளியிலேயே நிற்கவைத்து பேசி அனுப்பிவிடுவாள். தவிர தேவையற்ற பேசுக்க்கோ, சிரிப்புக்கோ இடமில்லை என்பதுபோல நடந்துகொள்வாள்.  இருந்தபோதிலும் தன்னிடம் உரையாடுகிற போதெல்லாம் அவள் கன்னங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி கூடுதலாக சிவக்கின்றன, என கற்பனைசெய்துகொள்ளும் அகம்பாவம் எல்லா ஆண்களையும் போல தொழிலாளியிடமும் இருந்தது.

        ஆனால் உடைந்த நற்பெயரை ஒட்டவைப்பது அத்தனைச் சுலபத்தில் இல்லை, அதற்குரிய தெம்பும் இளம்பெண்ணிடத்தில் இல்லை. வெளியிற் செல்லக்கூடத் தயங்கி லா பிளான்ஷோத், வீட்டில் அடைந்துகிடப்பாள், இருந்தபோதிலும் ஊர் வாயை அவளால் மூட முடியவில்லை. .

சிமோனைப் பொறுத்தவரை,  தனது புதிய அப்பாவை மிகவும் நேசித்தான், அன்றைய அலுவல்கள் முடிந்ததும்  ஒவ்வொரு மாலையும் அவருடன் உலாத்தச் செல்வான். பள்ளிக்கும் தவறாமல் ஆர்வத்துடன் சென்றுவந்ததோடு, வகுப்புத் தோழர்களுடன் பதிலுக்குப்பதில் என்றில்லாமல் கண்ணியத்துடன் பழகினான். இருப்பினும், ஒரு நாள், முதனலில்  சிமோனிடம் சண்டைபிடித்த பையன் அவனிடம் சொன்னான்:

« நீ  பொய் சொல்லியிருக்க. ’பிலிப் என்ற பெயரில், உனக்கு அப்பா என்று ஒருவரும் இருக்கமுடியாது. »

« எதனால் அப்படிச் சொல்ற ? » –  சிமோன் குழப்பத்துடன் கேட்டான்.

தன்னுடைய கைகளைப் பிசைந்தபடி, மற்றபையன் தொடர்ந்தான் :

” காரணம்,  அப்படி ஒரு அப்பா உனக்கு இருந்தால் ,  அவர்  உங்கள் அம்மாவின் கணவராக  இருக்கவேண்டும்.”

அந்தப் பையன் பதிலில் இருந்த நியாயம் சிமோனைக்  கலக்கமடையச் செய்தது: «இருக்கட்டுமே, அதனாலென்ன எனக்கு அவர் அப்பா. » என்றான் அவனிடம்.

« கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அவரை முழு மனதோடு  அப்பா என நீ சொல்ல முடியாது »- பையன் ஏளனத்தோடு கூறினான்.

சிமோன் தலையைத் தொங்கப் போட்டபடி பிலிப் வேlலைசெய்யும் லுசோன் என்பவருடைய கொல்லுபட்டறையை நோக்கி கனவுடன் நடந்தான்.

அக்கொல்லுப்பட்டறை மரங்களால் மூடப்பட்டு இருண்டிருந்தது. அவ்விடத்தில்  விசித்திரமான உலைஅடுப்பின்  சென்னிற ஒளிச்சிதறல்களில் ஐந்து கொல்லர்கள் கையுறையின்றி வெறும் கைகளால் சம்மட்டிகொண்டு பெரும் சப்தத்துடன் அடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தீச்சுவாலைகளிடையே அரக்கர்கள்போல இருந்தனர். அவர்கள் விழிகள் சம்மட்டியில் வதைபட உள்ள கனிந்த இரும்புகள் மீதிருந்தன.  எச்சரிக்கையுடன் கூடிய அவர்கள் கவனமனைத்தும் இரும்பு சம்மட்டியோடுசேர்ந்து  உயர்வதும் திரும்ப விழுவதுமாக இருந்தன. சிமோன் யார் கண்களிலும் படாமல் மெதுவாக தன்னுடைய அண்மைக்கால நண்பரை நெருங்கி சட்டைக்கையை பிடித்து இழுத்தான். தொழிலாளியும் திரும்பினான். சட்டென்று அங்கு வேலைகள் ஸ்தம்பித்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் தற்போது இவர்கள் மீது. வழக்கத்திற்கு மாறாக கொல்லுப்பட்டறையில் அமைதி. இந்நிலையில்,  சிமோனுடைய பலவீனமான சிறிய குரல் உரத்து ஒலித்தது:

« சொல்லுங்கள் பிலிப்! சற்று முன்பு, மிஷோது என்கிற பையன் என்னிடம், நீங்கள் எனக்குப் பெயருக்குத்தான் அப்பா என்கிறான், முழுமையான அப்பா இல்லையாம். » 

« எதனால் அப்படிச் சொன்னான் ? » தொழிலாளி கேட்டான்.

« ஏனென்றால் நீங்கள்  என் அம்மாவுக்கு கணவர் இல்லையாம். »- வெகுளித்தனத்துடன் வந்தது சிமோனுடைய பதில்.

சிறுவன் பதிலைக்கேட்டு ஒருவரும் சிரிக்கவில்லை.. பட்டறைகல்லில் நிறுத்தியிருந்த சம்மட்டியின் கைப்பிடியில் இருந்த தன் கைகளின் பின்பகுதியில் நெற்றிபட கவிழ்த்து, நின்றவண்னம்  பிலிப் யோசனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய தோழர்களான சக தொழிலாளிகளின் பார்வை அவனைவிட்டு விலகவில்லை, மாறாக ராட்சதர்கள் போல நின்றிருந்த அம்மனிதர்களுக்கிடையில்  பொடியன் சிமோன், பிலிப்பின் பதிலை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தான்.

திடீரென்று, அனைவரின் சிந்தனைக்கும் பதிலளிக்கும் வகையில், நான்கு கொல்லர்களில் ஒருவர் பிலிப்பிடம்:

« லா பிளான்ஷோத் நல்ல பெண் மட்டுமல்ல்ல  துணிச்சலானவளும் கூட,  அதுவன்றி அவளுடைய துரதிர்ஷ்ட்டத்திற்கிடையிலும் நேர்மையும் திடமனமும் கொண்டவள். ஒரு நேர்மையான மனிதனுக்கு, கண்ணிமிக்க மனைவியாக  அவள் இருக்கக்கூடியவள் » என்று தெரிவிக்க, மற்ற மூன்று பேரும், உண்மைதான் என்றார்கள். தொழிலாளி தொடர்ந்தார்:

« அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட  தோல்விக்கு, அப்பெண் இழைத்த தவறுதான் காரணமா என்ன ?” அவளிடம்,  மணம் செய்துகொள்கிறேன் என சத்தியம்  யாரேனும் செய்திருப்பான். இன்றைய தேதியில் ஒருவர் இருவரல்ல,  பெண்களுக்கு அப்படி வாக்குறுதி அளித்து ஏமாற்றும் பலரை நான் அறிவேன். அவர்களில் நம்முடைய மரியாதைக்குரியவர்களும் அடக்கம் . »

“அது உண்மை,” – மற்ர மூன்றுகொல்லர்களும் ஒரே குரலில் பதிலளித்தனர்.

அவர் தொடர்ந்தார்: “பாவம்  தன் பையனைத் தனியொருவளாக வளர்ப்பதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டாள், அவள் அழாத நாட்களே இல்லை, தவிர வீட்டைவிட்டு தேவாலயத்திற்குச் செல்வதன்றி வேறெதற்கும் வெளியிற் செல்வதில்லை. அவள் பிரச்சனைகளை ஆண்டவர் மட்டுமே நன்கு அறிவார். »

«அதுவும் உண்மைதான் » மூன்றுபேரும் திரும்பவும் ஆமோதித்தார்கள்.

அங்கு உலைக்களத்தீயை ஊதிக்கொண்டிருந்த துருத்தியின் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. திடீரென, பிலிப் சிமோன் பக்கம் குனிந்தான்.

 « இன்று மாலை உன் தாயிடம் பேசுகிறேன், அவளிடம் சொல்! »  எனத் தெரிவித்து சிமோன் தோளில் கைவைத்துத் தள்ளி கொல்லுபட்டறையைவிட்டு அவனை அனுப்பிவைத்தான்.

பிலிப் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தான். `அடுத்தகணம் சேர்ந்தாற்போல ஐந்து சம்மட்டிகளும் முழுமனதுடன் பட்டறைக்கல்லில் காய்ச்சிய இரும்பின்மீது விழ ஆரம்பித்து  வலுவுடனும், பலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அந்திவரை தொடர்ந்தன. எப்படி பண்டிகை நாட்களில் தேவாலயமொன்றின் மணியோசை சிறிய பிற மணிகளின் ஓசையை அமிழ்த்திவிட்டு ஓங்கி ஒலிக்குமோ அதுபோல அவனுடைய சம்மட்டியும் ஒவ்வொரு  நொடியும் ஓயாமல் ஒலித்து காதுசெவிடும்படி பெரும் ஓசையுடன் பிற சம்மட்டிகளின்மீது ஆதிக்கம் செலுத்த, பிலிப் தீப்பொறிகளிடையே நின்று இரும்பை அடிப்பதில் மும்முரமாக இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அணியும் ஜாக்கெட், துவைத்த சட்டை, ஒழுகுசெய்த தாடியுமாக லா  பிளான்ஷோத் வீட்டின் கதவை, பிலிப் தட்டும்போது வானம் முழுக்க நட்சத்திரங்கள்.  வெளிப்பட்ட அவள் வருந்தும் குரலில்:  “இருட்டிய பிறகு இப்படி வருவது சரியல்ல பிலிப்.” » என்றாள். அவன் பதில் சொல்ல விரும்பியபோதிலும், என்னசொல்வதென்று புரியாமல் தடுமாறி குழப்பத்துடன் நின்றான்.

அதையே சற்று விளக்கமாகச் சொல்ல நினைத்தவள்போல:

« உங்களுக்கு சொல்லி  புரியவைக்க வேண்டுமென்பதில்லை, என்னைப்பற்றி இந்த ஊர் பேசியது போதுமென்று நினைக்கிறேன். »

தாமதமின்றி அவன் கூறினான்:

« நீ என் மனைவியானால், அப்பேச்சு என்ன செய்யும் ! »

இம்முறை பதிலேதுமில்லை. ஆனால்  இருண்டிருந்த வீட்டின் அறையிலிருந்து உடலொன்று தொபீரென விழுவதுபோல ஒரு சத்தம்.மறுகணம் அவசர அவசரமாக பிலிப் வீட்டிற்குள் சென்றான்.

ஏற்கனவே படுக்கச் சென்றிருந்த நம்முடைய சிமோன் முத்தமிடும் ஓசையையும் , அவனுடைய தாய் அடிக்குரலில் முணுமுணுப்பதையும்  பிரித்துணர முடிந்தது.  பின்னர்,  தன்னுடைய சமீபத்திய நண்பனின் ஹெர்க்குலீஸ் கரங்கள் தன்னைத் திடீரென உயர்த்திப் பிடித்திருப்பதை  உணர்ந்தான். பிடித்திருந்த தொழிலாளி நண்பன் உரத்த குரலில் :

”  இனி யாராவது உன்னைச் சீண்டினால், அவர்கள் காதைத் திருக உன்னுடை அப்பா கொல்லர் பிலிப் ரெமி வருவாரென்று, வகுப்புத் தோழர்களிடம் சொல்” – என்றான்

மறுநாள், பள்ளி நிரம்பி வகுப்பு தொடங்கும் நேரத்தில், பொடியன் சிமோன்  எழுந்துநின்றான்,  வெளிறிய தோற்றம், உதடுகள் நடுங்க: “என் அப்பா பெயர்  ‘பிலிப் ரெமி’, கொல்லன் , எனக்குப் பாதகம் செய்வோரின் காதை இழுத்துப்பிடித்து  திருகுவேனென என்னிடம் அவர் உறுதி அளித்திருக்கிறார்” – எனத் தெரிவித்தான், குரலில் தெளிவிருந்தது.

இம்முறை ஒருவரும் சிரிக்கவில்லை,  ஏனென்றால் கொல்லன் பிலிப் ரெமியை அனைவருக்கும்  ஏற்கனவே நன்றாகத் தெரியும்,  அதுவன்றி  இன்று  அவன் ஓரு தந்தை, ஊரும் உலகமும் பெருமையுடன் கொண்டாடுகிற மனிதன்.

                           ——————————

UN MASALA D’IDENTITÉS !

La Nouvelle Revue de l’Inde vient de sortir un numéro spécial sur les femmes du sous-continent indien présentes dans le monde de la francophonie.

Ce dossier regroupe des articles, des interviews, des commentaires sur des femmes rattachées à la culture indienne par la naissance ou par l’éducation et qui évoluent bien dans leurs domaines respectifs. Hélas, les articles sur Pondichéry, qui fut pourtant l’ancien comptoir français, sont quasiment inexistants, comme c’est le cas pour l’île Maurice. Il faut néanmoins apprécier les deux articles sur les femmes d’origine indienne à la Réunion.

Et puis viennent les articles qui rappellent l’Inde, dans lesquels, comme d’habitude, on parle de recettes, d’épices, de cinémas et bien sûr ! comment oublier le pays de Kali et ses multiples divinités. Or, pas le moindre mot sur la littérature indienne, où les femmes à succès sont nombreuses. Ainsi, ils pourraient évoquer Susila Raman, qui vient d’un pays anglophone, en oubliant Mme Kamala Haris, la vice-présidente des Etats-Unis par exemple.

Malgré tout, il faut apprécier et saluer les efforts de la revue La Nouvelle Revue de l’Inde. Voilà quelques siècles que les souches du sous-continent sont là, nul ne les a honorées comme le fait ce magazine.

Bravo !

  அலெக்சாந்தர்

                      

       ( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)

                                         கி தெ மொப்பசான்

மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.

இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில்  மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும்  கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத்  தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.  

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.

திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது  அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:

–  பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..

திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான  சுயநலத்தில், அலெக்ஸாந்தரை  மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.

அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட  திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:

– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா?  என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.

 .- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக  திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில்  தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார். 

அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப  விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.  

– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு  இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.

அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :

– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான்  உண்மை, என்றார்.

–  நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது.  இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன்  பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.

– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும்.  ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.

அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!

திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம்  நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும்  ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்!  என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:

  – அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம்,  நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் ​​பணியாள் அலெக்சாந்தர்  இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய  வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி  தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.

பெண்மணி தொடர்ந்தார்:

– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ? 

தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :

– ஓ! நான் …நான் மேடம்,  எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .

பெண்மணித் தொடர்ந்து :

உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?

 «  ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று  கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.

திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :

— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.

அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :

—  ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.

— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?

அவருக்கு நா குழறியது :

— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.  

— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.

—  ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது  மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.  

பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்

—  ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும்,  அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?

பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :

– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !

பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.

மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.

– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க  எனக்காகவா, ஏன் ?

அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர்  பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :

— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.  

பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :

— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?

மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :

—  மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.

பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள்,  நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.

தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :

— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.

அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.

ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :

— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.

— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.

கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :

— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?

பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :

— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.  

பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.

— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும்  சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.

மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.

                       ———————————————————.

மொழிவது சுகம் செப் 16 2022: காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

த்து நாட்களுக்கு முன்பு எண்பது வயதைநெருங்கிய பெண்மணி ஒருவர் தன் மகளுடன் இனி நாட்களைக் கழிக்க இருப்பதாக கூறி விடைபெற விரும்ப, ஒரு சிறு பிரிவு உபசார நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. பிரெஞ்சு பண்பாட்டின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வில், கலந்து கொண்டேன்.  அந்நிகழ்வில் கலந்துகொள்வாரென நான் எதிர்பார்த்த  ஒருவர் வரவில்லை. ஒருவரை விசாரித்தபோது, அந்நபரின்  துணைவியார் மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ள தகவல் கிடைத்தது. கல்லீரல் புற்றுநோய் என்றார்கள். தகவல் உண்மை என்பதுபோல நான்காவது நாள் அப்பெண்மணியின் இறந்த செய்தி . இறந்த குடும்பம் இத்தாலியக் குடும்பம். பிரான்சு நாட்டில் வெகுகாலமாக இருக்கிறார்கள். கணவர் கூடுதலாக நின்று  உரையாடுகிறவர். அவர் வாழ்க்கைத் துணை இரண்டொரு நிமிட நலன்விசாரிப்புகளோடு உரையாடலை முடித்துக்கொள்கிறவர். 

கடந்த 13ந்தேதி காலை 10 மணிக்கு பெண்மணியின் இறுதிச் சடங்கு. இதற்கு முந்தைய வரிகளில் குறிப்பிட்டிருந்த நண்பர்கள் பலரையும் திரும்பவும் சந்த்க்க நேர்ந்தது. முதல் நிகழ்வில் இறந்த பெண்மணியின் உடல் நலன்குறித்து தகவல் தெரிவித்த நண்பரை இறுதிச்சடங்கு நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக மண்டப வாயிலில் மறுபடியும்  சந்திக்கிறேன். « நாம் இவ்வளவு சீக்கிரம் திரும்பச் சந்திக்க நேரும் என நினைத்த்தில்லை » என்று தெரிவித்தவர், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று குறிபிட்டார்.

இறுதிச் சடங்கு மண்டபத்திற்குள் நுழைந்தோம். அமைதி அமைதி.. அப்படியொரு நிசப்தமான சூழல். பெண்மணியின் உடலுடன்  சவப்பெட்டி. அனைவரும் இருக்கையில் அமர்ந்த மறுகணம்  பிரெஞ்சு மொழியில் ‘Mélopée’ என சொல்லப்படுகிற ஒப்பேரா சாயலில் உருக்கமானதொரு பாடல் அச்சிறிய மண்டபத்தை நிறைத்தது, சோகத்தை இசைக்கருவிகள் துணையோடு பாடலாக மொழிப்படுத்த இயலுமா என என்னை நானே கேட்டுக்கொண்டு, பாரத்துடன் பார்வையை ஓட்டினேன். வந்திருந்த மனிதர்களில் பெரும் விழுக்காட்டினர் முதிர்ந்த வயதினர், இறப்பின் வாயிலில் காத்திருப்பவர்கள்(நான் உட்பட).

இத்தனை சோகத்திற்கிடையிலும் எனக்கு சிலிர்ப்பினை ஏற்படுத்திய ஒரு சம்பவம்,  இறுதிச் சடங்கை நடத்திய மதப் பிரதிநிதிகள் இருவரும் ஆப்ரிக்க நாட்டவராக இருந்தது. பிரான்சு தேசத்தின் காலனிய சாட்சியம். சம்பிரதாய சடங்கின்போது வந்திருந்த ஐரோப்பிய இனத்தவரை உட்காருங்கள் அல்லது எழுந்திருங்கள் எனத் தங்கள் கைகளால் அவர்கள் கட்டளையிட, அக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒவ்வொரு முறையும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள், உட்கார்ந்தார்கள். இப்படியொரு விந்தையான காலமாற்றம்.

          கிறித்துவ முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தேறியபின் மீண்டும் சோகத்தை இசைத்துக்கொண்டு ‘Mélopée’,  இரண்டு மூன்று நிமிடங்கள் ஒலித்தன. அதன்பின் இறந்தவரை நினைவு கூறும் வகையில் பேச்சு. இறந்த பெண்மணியின் கணவர், மனைவியோடு உடல்கடந்து தான் பழகிய முதிர்வயது பதிவின் ரகசியக்கோப்பை பகிர்ந்துகொள்வதுபோல, ஒலித்த இசைக்கு கனம் சேர்த்தார். தன் மனைவி குறித்த அவருடைய பேச்சு  கைத்தட்டல் போன்ற புற உலக குறியீட்டிற்குரியவை அல்ல, அசாதரணமானது.  அங்கொலித்த இசையின் மறுவடிவாகத்தான் அப்பேச்சினை உணர்ந்தேன்.

மனிதர் வாழ்வில் ஆணு பெண்ணுமாக இரு உடல்கள் இரு உள்ளங்கள்  உயிர் வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்பம் துன்பம் இரண்டிலும் கைகோர்த்து, வலிகளைப் பகிர்ந்து, சுகங்களைத் தியாகம் செய்து, உனக்காக நான் என்பதை ஒவ்வொன்றிலும் உறுதி செய்து, ஒருநாள் «  இருந்ததும், நடந்த தும், சுவைத்ததும் சுகித்ததும் பொய்யாய் பழங்கதையாய் முடிகிறபோது, ஏன் இந்த மனித வாழ்க்கை என கேள்வி எழுகிறது.

        இறுதிச் சடங்கில் ஒலித்த உருக்கமான இசையும், அதற்கு இணையான  இறந்த பெண்மணியின் கணவருடைய பேச்சும் இத்தனை நாள் கிடப்பில் போட்டிருந்த இலண்டன் இளைஞர், எழுத்தாளர் கிரிதரனின் « காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை என்ற சிறுகதையை, பிரெஞ்சில் மொழி பெயர்க்கவும், இறந்த மனைவியின் நினைவில் வாழ்கிற ஓர் எழுத்தாளனைப் பற்றிய சிறு கதையை ‘ அவள்’ என்ற பெயரில் நான் எழுதவும் காரணமானது.

இரவு -(la Nuit) – கி தெ மொப்பசான்

                                             (கதை பிரசுரமான ஆண்டு 14 juin 1887)

இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை, அல்லது ஆசைநாயகியை ஆழமாகவும், இயல்பாகவும், தன்னை மீறிய மையலுடனும் நேசிப்பதுபோல எனக்கும் இரவின்மீது தணியாத மோகம். மோகமெனில் எப்படி? காண்பது, நுகர்வது, நிசப்தத்தைச் செவிமடுப்பது, அதன் அந்தகாரத்தை வருடுவதென இருக்கவே இருக்கின்றன புலன்கள்.

சூரிய ஒளி, நிரமலமான வானம், அனற் காற்று, பிரகாசமான அதிகாலை மென்காற்று என்கிற பேதங்களற்று பகற்பொழுதில் எல்லா நேரங்களிலும் வானம்பாடிகள் பாடும். மாறாக ஆந்தை, இரவுப்பொழுதில் கருமைநிறப் புள்ளிபோல இருண்டவெளியில் பறந்து செல்லும், இரவின் பிரம்மாண்டம் தரும் போதையில், இன்பத்தின் உச்சத்தில் எழுப்பும் அதன் அலறல் அதிர்வும் ஒருவகை சோகமும் தோய்ந்தது.  

பகற்பொழுது எனக்கு சோர்வை மட்டுமின்றி எரிச்சலையும் அளிக்கிறது. அதன் இரைச்சலும் மூர்க்கமும் ஊரறிந்தவை. காலையில் மிகுந்த சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுகிறேன், ஆடை அணிவது அலுப்புடனேயே நடந்து முடிகிறது, வீட்டை விட்டு வெளியிற் செல்கிறபோது, துளியும் மகிழ்ச்சியில்லை. நாள் முழுக்க எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு அசைவும், பாவமும், வார்த்தைகள், சிந்தனைகளென்று அனைத்தும் உடலை அழுத்துகிற பெரும் பாரத்தை இறக்கிவைப்பதுபோன்ற ஆயாசத்தை எனக்குத் தருகின்றன.

மாறாக சூரியன் மேற்கில் மறைகிறபோது, ​​எனதுடல் முழுக்க விளங்கிக்கொள்ள இயலாததொரு மகிழ்ச்சி. ஒருவகையில் நான் துயில்களையும் நேரம் மட்டுமல்ல உயிர்ப்புடன் எழுந்து நடமாடும் நேரமும் அதுதான். மெள்ள மெள்ள இருட்டத் தொடங்க  ​​நான் முற்றிலும் வேறொருவன். அதாவது பகற்பொழுதைக் காட்டிலும் இளமையாகவும், வலிமையுடனும், கூடுதல் எச்சரிக்கையுடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். விண்ணிலிருந்து விழுந்த மென்மையும், அளவிற் பெரியதுமான இருளின் பாரம் இரவுநேரத்தில் அதிகரிக்கிறது: கைக்குப் பிடிபடாத, ஊடுருவ முடியாத பேரலை ஒன்றினைப்போல, நகரத்தை மூழ்கடிக்கிறது. அனைத்தையும் ஒளித்துவைப்பதோடு,  வண்ணங்கள், வடிவங்களைத் துடைத்தழித்து, குடியிருப்புகளையும், உயிர் ஜீவன்களையும் நினைவுச்சின்னங்களையும் தொட்டுத் தழுவுகிறது.

இக்காட்சிகளால் என்னுள்ளும் மகிழ்சியோடு ஆந்தைபோல கூவவும், கூரைகளில் பூனைகள் போல் ஓடவும் ஆசை ; ஒருவித ஆவேசமும், உத்வேகமும் கலந்ததொரு காதல் விருப்பம் எனது நாடிநரம்புகளை முறுக்கேற்ற நடக்கிறேன், இரவு மூடிய புறநகர்ப் பகுதிகள், பாரீஸ் நகரத்தை ஒட்டிய காடுகள் என்று அலைகிறேன், அதிலும் பின்னதில் எனது விலங்குச் சகோதரிகள் அவர்களைக் கள்ளத்தனமாக வேட்டையாடவந்த மனிதர்களென்று  இருதரப்பினரின் நடமாட்டத்தையும் காதில் வாங்கமுடியும்.  

ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலே மரணம். எனக்கும் அப்படியொன்று நேர்ந்தது, எவ்வாறு சொல்வது? அதைத் தெரிவிக்க முடிந்தாலும், புரியும்படி கூற வேண்டுமில்லையா?  எனக்கு அது போதாது, ஆம் இதற்குமேல் சொல்லப் போதாது, எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்படி அது இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பது. அவ்வளவுதான்.

எனவே நேற்று – நேற்றா? – ஆம், அநேகமாக, அதற்கு முன்பு, வேறொரு நாளில், வேறொரு மாதத்தில், வேறொரு வருடம் அப்படியெதுவும் நிகழவில்லை என்கிறபோது ஐய்யமின்றி நேற்றாகத்தான் இருக்கவேண்டும் – என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. பொழுது விடியவில்லை. கிழக்கில் உதிக்கவேண்டிய சூரியனும் இக்கணம்வரையில் இல்லை, ஆக நேற்றாகத்தான் இருக்கவேண்டும். எப்போதிலிருந்து இரவு நீடிக்கிறது? எப்போதிலிருந்து? யார் சொல்லமுடியும்? யார் அறிவார்?

அதனால் நேற்றிரவும் வழக்கம்போல இரவு உணவிற்குப் பிறகு வெளியிற் சென்றேன்.

வானிலை நன்றாக இருந்தது. சற்று வெப்பத்துடன் இருந்தபோதிலும் மிகவும் இனிமையான காலநிலை. பெரியவீதிகளை நோக்கி நடந்தபோது தலைக்குமேல், வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த கருமைநிற ஆறு, வீதிக் கூரைகளால் துண்டாடப் பட்டிருந்தன. ஓரிடத்தில் அது வளைந்து, உண்மையான ஆறுபோலவே அலைகளை உண்டாக்கி நட்சத்திரங்களை உருட்டி விளையாடுகிறது.

தலையை உயர்த்திப் பார்க்க கோள்கள் முதல் எரிவாயு விளக்குகள் வரை நிர்மலமான வானில் அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருந்தன. விண்ணிலும் சரி நகரத்திலும் சரி பிரகாசமாக தீ பிழம்புகள் போல் நட்சத்திரங்களும, விளக்குகளும் பிரகாசிக்க, இருளே ஒளிர்வதுபோல தோற்றம். கதிரவன் காயும் பகற்பொழுதுகளைக் காட்டிலும் ஒளிரும் இரவுகள் மகிழ்ச்சிக்குரியவை.

அகன்ற அவ்வீதியில், கஃபேக்களே பற்றி எரிவதுபோல ஜெகஜோதியாய் விளக்குகள்;  சிலர் வாய் விட்டு சிரிக்கிறார்கள், வேறு சிலர் நுழைய விருப்பமில்லாதவர்கள்போல கடந்து செல்கிறார்கள், மற்றும் சிலர் மதுபானங்களையும் வேறு பானங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு நாடக அரங்கு. அதற்குள் சென்று, ஒரு சில நிமிடங்களைக் கழித்திருப்பேன். எந்த நாடக அரங்கு? ஏதோ ஒன்று. ஏன் நுழைந்தோம் என வருந்தும் அளவிற்கு அங்கே அப்படியொரு ஒளிவெள்ளம்: பொன்னிற பால்கனியின்  வெறுப்பூட்டும் ஒளி, மிகப்பெரிய ஸ்படிக சரவிளக்கின் செயற்கை மின்னொளி,  நுழைவாயில் விளக்கொளி, மற்றும் துயரூட்டக்கூடிய செப்பனிடபடாத அங்கிருந்த பிற வெளிச்சங்கள் அவ்வளவும் மனதில்  உண்டாக்கிய அதிர்ச்சியில், கசப்புடன் வெளியில் வந்தேன்.

தொடர்ந்து நடந்த நான் ஷாம்ஸ்-எலிஸே(1) பகுதிக்கு வந்து சேர்ந்தேன், அங்கும் இசை, பாடலென்று எப்போதும் கொண்டாட்டமாக இருக்கிற கஃபே-பார்களும் அருகிலிருந்த மரங்களின் இலைகள் தழைகளுங்கூட  தீப்பிடித்தவைபோல் ஒளியூட்டப்பட்டிருந்தன. மஞ்சள் ஒளியில் அமிழ்ந்திருந்த செஸ்ட்நட் மரங்கள் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டவை போல பாஸ்போரெஸ் சாயலில் மினுங்கிக்கொண்டிருந்தன. கோள உருண்டைபோன்ற மின்சார விளக்குகள் சற்று மங்கலாக ஒளிரும் நிலவுகள் போலவும், விண்ணிலிருந்து விழுந்த திங்களின் முட்டைகள் போலவும், ஜீவனுள்ள  இராட்சஸ முத்துகள்போலவும், இருந்தன. ஆனால் அவற்றின் உயர்குல தோற்றம், முத்துவெள்ளை நிறமென்கிற பெருமைமிகு அடையாளத்தின் கீழ் அசூயையான அழுக்கான வலைபோன்றதொரு தோற்றத்தில் வாயுமண்டலத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதும், அங்கிருந்த வண்ணக் கண்ணாடிச் சரத்தினாலும் அவ்விடம் சோபையின்றி இருந்தது.

ஆர்க் தெ த்ரியோம்ஃப்(2)  கீழ் நின்றேன், அங்கிருந்தபடி இருபக்கமும் தீக்கோடுகள்போல நீளும் தெருவிளக்குகள், நட்சத்திரங்களுடன் பாரீஸின் மையப்பகுதியை நோக்கிச் செல்லும் பிரம்மாண்டமான வீதியை சில நிமிடங்கள் நின்று இரசிக்கவேண்டும். தலைக்குமேல்  வானில் எதற்கென்று விளங்கிக் கொள்ளவியலாத வகையில், பெருவெளியில் இறைக்கபட்ட நட்சத்திரங்களால் உருவான வினோத வடிவங்கள் நம்மை கனவுகள், கற்பனைகளென்று அழைத்துச் செல்லும்.

பூலோஞ் காட்டிற்குள்(Bois de Boulogne) நுழைது, வெகுநேரம் எவ்வளவு நேரமென்று அளவிடப் போதாமலேயே நீண்ட நேரம் அங்கிருந்தேன். உடலில் இதுவரை அனுபவித்திராததொரு நடுக்கம், திடீரென மனம் கடுமையான உணர்ச்சிக்கு வயப்பட, வரம்பு மீறிய கற்பனைகள் கடைசியில் என்னைப் பித்தனாக்கின.

பிறகு வெகுநேரம், ஆம் ! வெகுநேரம் நடந்து களைத்து, புறப்பட்ட இடத்திற்குத்  திரும்ப வந்தேன்.  

ஆர்க் தெ த்ரியோம்ஃப்பிற்குத் திரும்ப வந்தபோது, நேரம் என்ன ? தெரியாது. பெருநகரம் உறங்கிக் கொண்டிருக்க, மேகங்கள், கனத்த பெரிய மேகங்கள் மெல்ல மெல்ல வானில் படர்ந்துகொண்டிருந்தன.

இம்முறை, ஏதோவொரு வித்தியாசமான சம்பவம் நிகழவிருப்பது உறுதியென  உள்மனம் எச்சரித்தது. குளிர்காற்று பலமாக வீச, இரவை, பிரியத்திற்குரிய எனது இரவை நெஞ்சில் பாரமாக உணர்ந்தேன். நீண்ட பெரியவீதியில் மனிதர் நடமாட்டமில்லை. இரண்டே இரண்டு காவலர்கள், அரசு வாகனங்கள் நிறுத்தத்தின் அருகே உலாத்திக் கொண்டிருந்தனர். சாலையோரங்களில் வாயு விளக்குகள், எந்தநேரத்திலும் இறுதி மூச்சை விடாலாம் என்பதுபோல எரிந்துகொண்டிருந்ததால், அதிக வெளிச்சமில்லை. சந்தைக்குக் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் வரிசையாகச் சென்றன.

கேரட்டையும், நூல்கோலையும், முட்டைக்கோசையும் ஏற்றிச்செல்லும் வண்டிகள் மெதுவாகவே சென்றன. வண்டியோட்டிகள், உறங்கிக் கொண்டிருக்கவெண்டும், அவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அறிகுறிகளில்லை குதிரைகள், வண்டிக்கான பாதையில் சீராக அடியெடுத்துவைத்து வரிசையில் போகின்றன. ஒவ்வொரு முறையும் சாலை விளக்குகளைக் கடக்கிறபோதெல்லாம் கேரட்டுகள் சிவப்பு நிறத்திலும், நூல்கோல்கள் வெள்ளைவெளேரென்றும், முட்டைகோசுகள் பச்சை நிறத்திலும் பிரகாசித்தன ; சிவப்பெனில் தீபோலவும், வெள்ளையெனில் வெள்ளிபோலவும், பச்சையெனில் மரகதத்தையொத்த நிறத்திலும் அவ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. அவைகளைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். ஆனால் ராயல் வீதிபக்கம் திரும்பி மறுபடியும் பெரியவீதிகளுள்ள பகுதியை வந்தடைந்தேன். அப்பகுதிச் சந்தடியின்றி இருந்தது. கஃபேக்கள் மூடப்பட்டுவிட்டன. தாமதப்பட்டவர்கள் மட்டும் வீடு திரும்பும் அவசரத்தில் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். சவத்தை ஒத்த ஜீவனற்ற இப்படியொரு பாரீஸ் நகரை நான் ஒரு போதும் கண்டதில்லை. சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை மணி இரண்டு.

ஏதோவொரு சக்தி உந்தித்தள்ள, நடக்கவேண்டும் போலிருந்தது. எனவே பஸ்த்தி(la Bastille) வரை நடந்தேன். அங்கே, ஜூலை நினைவுத்தூணையும்(3), அதன்மீது அமைக்கபட்ட  பொன்ன்னிற தேவதூதன் உருவத்தையும் பிரித்துக்காண முடியாதவகையில் இருள் வியாபித்திருந்தது, இதுவரை பார்வை ஊடுறுவ இயலாத அப்படியொரு இரவை நான் கண்டதில்லை. மிகப்பெரிய பருமனுடன் வளைந்த கூரைபோலிருந்த மேகங்கள், நட்சத்திரங்களைச் சூழ்ந்து அவற்றை பூமியில் புதைக்க முனையும் எண்ணத்துடன் கீழிறங்குவதுபோலிருந்தன.

காட்சியிலிருந்து விடுபட்டிருந்தேன். என்னைச் சுற்றி ஒருவரும் இல்லை. ஷத்தோ தோ(Château d’eau) என்கிற இடம். குடிபோதையில் இருந்த ஒருவன் என்மீது  ஏறக்குறைய மோதுவதுபோல நெருங்கி பின்னர் காணாமற் போனான். சிறிது நேரம் அவனுடைய சீரற்ற மற்றும் சத்தமான காலடிகளை மட்டும் கேட்க முடிந்தது. ஃபொபூர் – மோன்மார்த்த்ரு (Faubourg -Montmartre) பகுதியை நெருங்கியபோது குதிரைவண்டியொன்று என்னைக் கடந்து, சேன் (Seine) நதி திசைநோக்கிச் சென்றது. நான் வண்டிக்காரரை அழைத்தேன், பதில் இல்லை. பெண்ணொருத்தி ட்ரூஓ வீதி (rue Drouot)அருகே சுற்றிக்கொண்டிருந்தாள்: “ஐயா, கொஞ்சம் நில்லுங்களேன்”, என்றவளின் கை என் பக்கமாக நீள, அதைத் தவிர்ப்பதற்காக நடையை வேகப்படுத்தினேன். பிறகு எதுவுமில்லை. வோட்வீல்(Vaudeville) நாடக அரங்கிற்கு முன்பாக ஒருவர் சாலவத்தைத் துருவிக்கொண்டிருக்க, கையில் பிடித்திருந்த சிறிய விளக்கு தரைமட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவரிடம்: “ஏங்க மணி என்னன்னு சொல்லமுடியுமா?”, எனக் கேட்டேன்.

 “எனக்கு எப்படித் தெரியும், எங்கிட்ட கடிகாரமா இருக்கு?» என உறுமும் தொனியில் அவர் பதிலிருந்தது.

திடீரென எரிவாயு விளக்குகள் அணைந்திருப்பதைக் கவனித்தேன். இன்னும் விடியவில்லை, இதுபோன்ற பருவகாலத்தில், எரிவாயுவைச் சிக்கனமாக உபயோகிக்கும் எண்ணத்துடன் முன்கூட்டியே அணைத்திருக்கிறார்கள். ஆனால், பகற்பொழுது  வெகு தூரத்தில் இருந்தது, அத்தனைச் சீக்கிரம் விடியுமென்று தோன்றவில்லை.

– நல்லது சந்தை கூடும் இடத்திற்குப் போகலாம்,  அதாவது, கொஞ்சம் ஜீவனுடன் இருக்கும், என நினைத்தேன்.

தொடர்ந்து நடந்தேன். என்னை வழிநடத்தப் போதாமல், காட்டுக்குள் நடப்பது போல மெதுவாக நடந்தேன், தெருக்களை ஒரு வகையில் அடையாளம் கண்டும், அவற்றைக் கணக்கிட்டுக் கொண்டும் முன்னேறினேன்.

கிரெடி லியொன்னே (Credit Lyonnais) வங்கி முன்பாக நாயொன்று உறுமியது. கிராமோன் வீதி ( rue de Grammont) வழியாகத் திரும்பிய பிறகு எனக்குக் குழப்பம். சில நிமிட அலைச்சலுக்குப்பிறகு சுற்றிலும் இரும்புத் தண்டுகளில் வேலியிட்டிருந்த பங்குச் சந்தையை அடையாளம் கண்டேன். மொத்த பாரிஸ் நகரமும் அச்சுறுத்தும் வகையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனாலும், வெகு தொலைவில் குதிரை வண்டியொன்று ஓடிக் கொண்டிருந்தது. அவ்வண்டி, ஒரு வேளை என்னைக் கடந்து சென்றிருக்கலாம். நான் கவனத்திற் கொள்ளவில்லை. அவ்வண்டியை எப்படியாவது பிடிக்கவேண்டுமென நினைத்து அவற்றின் சக்கரங்கள் போடும் சத்தத்தை குறிவைத்து, மனிதரின்றி, பிணங்கள் கிடப்பதுபோல இருளில் மூழ்கியிருந்த தெருக்கள் வழியாக நடந்தேன்.

திரும்பவும் எங்கிருக்கிறேன் என்கிற குழப்பம். எரிவாயு விளக்குகளை  அணைக்கவேண்டிய வேளையில் அணைக்காமல், முன்கூட்டியே அணைப்பதென்பது எவ்வளவு முட்டாள்தனம்! அவ்விடத்தில் என்னைத்தவிர வேற்று மனிதரில்லை. தங்கள் அலுவல் முடித்து தாமதாமாக வீடு திரும்புகிற மனித ஜீவன்களுமில்லை. வீதி வீதியாய் அலையும் மனிதருமில்லை, காதல்வயப்பட்ட   பூனையின் சிணுங்கலுமில்லை. மொத்தத்தில் ஒன்றுமில்லை.

இரவு ரோந்து வரும் காவலர்கள் எங்குபோய்த் தொலைந்தார்கள்?  “நான் உரத்தக்குரலில் கத்தினால் அவர்கள் வரக்கூடும்”, என எனக்குள் கூறிக்கொண்டேன். கூவி அழைத்தேன், எவ்விதப் பதிலுமில்லை. மறுபடியும் சத்தம் போட்டேன்.  அசாத்தியமான இரவு பலவீனமான என் குரலோசையை நெரிக்க, எதிரொலிகள் ஏதுமின்றி ஜீவனை விட்ட குரல் காற்றில் கலந்தது. வேறுவழியின்றி “உதவி! உதவி ! உதவி ! எனக் கூவினேன்.

கதியற்ற எனது அழைப்பு கேட்பாரின்றி முடிந்தது. சரி நேரம் என்ன ? சட்டைப்பயிலிருந்த கடிகாரத்தைக் கையிலெடுத்தேன். மணிபார்க்க தீக்குச்சி வேண்டும், என்னிடமில்லை. அதன் சிறிய விசைப்பொறி எழுப்பும் டிக்-டிக் ஓசையை இதற்கு முன்  அறிந்திராத வினோதமான மகிழ்ச்சியுடன் காதில் வாங்கினேன், ஆக. நான் தனி மனிதனில்லை, உண்மையில் எல்லாமே புதிரானவைதான் ! இம்முறை ஒரு குருடனைப்போல கையிலிருக்கிற பிரம்பைக்கொண்டு சுவர்களைத் தட்டியும் தடவியும், பொழுது புலர்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கடைசியில் தெரிகிறதா என்பதை அறிவதற்கு தலையை உயர்த்தி ஆகாயத்தை அவ்வப்போது பார்த்தவண்ணமும் நடக்கத் தொடங்கினேன். ஆனால் வான்வெளியோ இருண்டிருந்தது, கீழேயுள்ள நகரத்தைக் காட்டிலும் கூடுதலாக இருண்டிருந்தது.   

தற்போது என்ன நேரமிருக்கும் ?  என யோசித்தபடி நடந்து கொண்டிருந்தேன், எனக்கென்னவோ வெகுநேரமாக முடிவின்றி நடந்துகொண்டிருக்கிறேன் எனப் பட்டது,  அதை உறுதிபடுத்துவதுபோல எனது கால்கள் பலவீனப்பட்டிருந்தன, மூச்சுவாங்கியது, பசி, பசி.. அகோரப்பசி.

கண்ணிற்படும் முதல் கதவின் மணியை அழுத்துவதென முடிவெடுத்து, அதுபோலவே ஒருவீட்டின் பித்தளைக் குமிழை இழுத்தேன். உள்ளே மணியொலித்தது, ஆனால் அவ்வொலியைத்தவிர அந்த வீட்டில் வேறு ஜீவன்கள் இல்லாததுபோல ஓருணர்வு.

காத்திருந்தேன், பதிலில்லை. கதவும் திறக்கப்படவில்லை. திரும்பவும் பித்தளைக் குமிழை இழுத்தேன், காத்திருந்தேன்…ம் பதிலில்லை.

பயத்தில் அங்கு நிற்காமல் அடுத்த வீட்டைத் தேடி ஓடினேன். இருபது முறை தொடர்ச்சியாக அக்குடியிருப்பின் மணியை இழுத்து பாதுகாவலர் உறங்கும் இருள் நிறைந்த கூடத்தில் ஒலிக்கச் செய்தேன். அம்மனிதர் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்து வேறு குடியிருப்புக்குச் சென்றேன். எனது பலத்தைப் பிரயோகித்து அழைப்பு மணியின் குமிழ்களை அல்லது சிறு வளையங்களை இழுப்பது, பிடிவாதமாக அக்கதவுகள் திறக்கப்படாமலிருக்க கால்களால் கதவை உதைப்பது அல்லது கைத்தடியால் கதவை அடிப்பதென்று ஒவ்வொரு வீட்டிலும் தொடர, சந்தைகூடும் இடத்தை அடைந்திருந்தேன். சந்தைகூடுமிடமும் நிசப்தமாக, நடமாட்டமின்றி, வண்டிகளின்றி,காய்கறிகள் அல்லது பூக்களின் குவியலின்றி  வெறிசோடிக் கிடந்தது. சந்தைக்கூடமும் வெறுமையாக, இயக்கமின்றி, கதியற்று பிணம்போல கிடக்கக் கண்டேன்.

       ஒருவித பயங்கரம் என்னைப் பீடித்திருப்பதைபோன்ற உணர்வு. என்ன நடந்தது ? கடவுளே என்னதான் நேர்ந்தது?

       நான் திரும்ப நடந்தேன். சரி நேரமென்ன ?ஆமாம், மணி என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எனக்கு அதை யார் சொல்லக்கூடும் ? என்ற கேள்வியும் மனதில் இருந்தது. ‘நினைவுக்கூட’ கடிகாரங்களில் அல்லது மணிக்கூண்டுகளில் உள்ள எந்தவொரு கடிகாரமும் அதைத் தெரிவிப்பதாக இல்லை.

       « கைக்கடிகாரத்தின் மேலிருக்கும் கண்ணாடியை எடுத்துவிட்டு முட்களை எனது விரல்களால் வருடிப் பார்க்கவேண்டும் », என நினைத்து. கடிகாரத்தை எடுத்துப்பார்க்க, அது ஓடவில்லை, நின்றிருந்தது. இல்லை, ஒன்றுமில்லை. நகரத்தில் எவித அதிர்வுமில்லை, எங்காவது சிறிது வெளிச்சம்.. ம் இல்லை, வெகுதொலைவில் எங்கேனும் குதிரை வாகனங்கள் ஓடும் ஒலி…ம் அதுவுமில்லை.

       நதியோரம் நடந்தேன், பனிக்குரிய குளிர்ச்சி நீரிலிருந்து வெளிப்பட்டது. சேன் நதி ஓடுகிறதா, என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

       எனக்குக் காரணம் தெரியவேண்டும். படிகட்டுகள் கண்ணிற்பட, இறங்கினேன். பாலத்தின் வளைவுகளின் கீழ், நதியின் நீரோட்டத்தில் நுரைத்துக்கொண்டு குமிழிகள் …. மறுபடியும் படிகள்…பிறகு மணல்…சேறு சகதியைத் தொடர்ந்து தண்ணீர் ….கையை நீரில் நனைத்தேன்…நதி மெல்ல சலசலத்தபடி நகர்கிறது …ஆம் தேங்கிநிற்கவில்லை…சில்லென்று இருக்கிறது;சிலுசிலுப்புடன் இருக்கிறது, சீதளத் தன்மையும் குளிர்ச்சியும்….கிட்டத்தட்ட உறைந்த நிலையில்…வீரியத்தைத் தொலைத்து… பிணம்போல சேன் நதி.

       திரும்பவும், பழைய நிலைக்கு மீளப் போதுமான பலம் எனக்கு ஒருபோதும் கிடைக்காதென்பது உறுதி. நானும் சாகப்போகிறேன், பசி, களைப்பு, கடுங்குளிரென உயிரைத் துறக்க எனக்கும் காரணங்கள் இருக்கின்றன.

           ——————————————————————————————————————

1. அவென்யூ தெ ஷாம்ஸ் – எலிஸே(Avenue des Champs-Élysées) அல்லது சுருக்கமாக Champs-Élysées,  என்பது பாரிஸில் உள்ள உலகின் மிகவும் அழகான,  ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நீளமுடைய சாலையாகும்.

2. Arc de Triomphe என அழைக்கபட்ட போதிலும் அத முழுப்பெயர் ஆர்க்  தெ த்ரியோம்ஃப் தெ எத்துவால்(Arc de Triomphe de l’Étoile). முதலாம்  நெப்போலியன் I, Austerlitz யுத்தத்திற்கு மறுநாள் பிரெஞ்சு வீரர்களிடம் பேசியபோது, : “நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறபோது  வெற்றி வளைவொன்றின் கீழ் செல்வீர்கள் ”  என அறிவித்து அதன்படி ஆஸ்டர்லிஸ் யுத்தத்தில் ஆஸ்ட்ரியா, ரஷ்ய படைகளைத் தோற்கடித்து 1806 ல் தலைநகர் பாரீசில் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

3. ஜூலை நினைவுத்தூண் (La colonne de juillet)என்பது 1830 இல் நிகழ்ந்த ஜூலை புரட்சியின் மூன்று நாட்களின் நினைவாக 1835 மற்றும் 1840 க்கு இடையில் பாரிஸில் உள்ள Place de la Bastilleல்  அமைக்கப்பட்ட தூண்..

_____________________________________________________________________________________________________

மொழிவது சுகம் : ‘மாப்பசான்’ ‘மொப்பசான்’ எது சரி?

உண்மையில் மொப்பசான் என உச்சரிப்பதுதான் சரி. அதிலும் பிரான்சு நாட்டில் இருந்துகொண்டு மொப்பசான் என உச்சரிக்கப்படுச்வதைக் காதில் வாங்கிகொண்டு, அவருடைய மொழிபெயர்ப்புக் கதைகளின் கீழ் மாப்பசான் எனப் போடுவது, இசை அபிமானிகள் வார்த்தையில் சொல்வதெனில் அபசுரம்.  நண்பரும், மொழிபெயர்ப்பாளருமான வெ. சு. நாயகர்,  இரண்டு முறை அவருக்கே உரிய நாகரீகமான முறையில் மாப்பசான் சிறுகதைகளை நான் மொழிபெயர்க்கப் போகிறேன் எனப் பதிவிட்டிருந்த போதும், அண்மையில் மாப்பசான் கதையொன்றை முகநூலில் பதிவிட்டிருந்தபோதும் ‘மொப்பசான்’  என அவருடைய கமெண்ட்டில் அப்பெயரைத்  திருத்திக் குறிப்பிட்டிருந்தார். 

நண்பர் நாயக்கருக்கும் எனக்கும் ‘மொப்பசான்’ என்று எழுதுவது சரி காரணம் ஏற்கனவே கூறியதுபோல நான் பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் இருப்பதோடு, இலக்கிய சார்ந்து புலன்களை அடகுவைத்து  நாட்களைக் கழிக்கிறேன். வெ.சு. நாயக்கர், பிரெஞ்சு மொழித் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறவர்.  மாணவர்களிடம் மொப்பாசான்  என்று பாடம் எடுத்துவிட்டு, வெளியில் மாப்பசான் என உச்சரிப்பதோ, எழுதுவதோ அவரைப் பொறுத்தவரை  நியாயமாகாது.

« ஆங்கிலத்தை  வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார்போல பேசமுடியுமா »  எனச் சொல்வதுண்டு. அதாவது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு  மாறாக அவர் ஆங்கிலேயர்களைப்போல ஆங்கிலத்tதில் அத்தனைச் சரளமாக சொற்பொழிவு ஆற்றுவார், உச்சரிப்பார் என்பதால் அப்படிச் சொல்வதுண்டு. என்னதான் கான்வெண்ட்டில் படித்துவிட்டு இங்கிலாந்து சென்றாலும் அல்லது அமெரிக்காவிற்குச் சென்றாலும் இந்தியாவிலிருந்து சென்ற முதல் தலைமுறை பேசும் ஆங்கிலத்திற்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த இன்றைய இந்திய தலைமுறைக்கும் உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. காந்தி ஆங்கிலத் திரைப்படத்தைப்  பார்த்தால், காந்தியாக நடிக்கும் பென் கிங்ஸ்லிக்கென ஒரு உச்சரிப்பை கொடுத்திருப்பார்கள், அதாவது இந்தியர் சாயலில் அவர் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக( இவ்வளவிற்கும் தமது பாரிஸ்ட்டர் பட்டத்தை இங்காந்தில் முடித்தவர்). நம்முடைய பழையத் திரைப்படங்களில் பட்டாணிக்கானாக வரும் நபருக்கென்று ஒரு தமிழிருக்கும் அதுபோல. உண்மையில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக்கொண்ட பிரிட்டிஷாரும் அமெரிக்கருங்கூட  ஆங்கிலத்தை வெவ்வேறு ஒலியில் பேசுகிறார்கள்.  

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பகுதி ஆங்கிலத் தாக்கத்தின் கீழ்  இருப்பதால் மேற்கத்திய பெயர்களை அவை ஆங்கிலம், இத்தாலி ஸ்பெய்ன், ஜெர்மனி என எந்த நாட்டிற்கு உரியவையாக இருப்பினும், ஆங்கில வழிதான் உச்சரிக்கிறோம். ஆங்கிலவழியில் அறியவந்த கொலம்பஸ் (Christobher Columbus) நமக்கு இன்று « சொலம்பசு », அவர் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் Cristobal Colon, பிரான்சு நாட்டில் Christophe Colomb . அதேவேளை ஜெர்மானியரான கார்ல் மார்க்ஸை ஆங்கிலேயரும் பிறரும் கார்ல் மார்க்ஸ் என்றே எழுதுகிறார்கள், அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கார்ல் என்ற பெயர் ஆங்கிலத்தில் சார்லஸ், பிரெஞ்சுமொழியில் ‘ஷார்ல்’ ஸ்பெய்ன் மற்றும் போச்சுகீசிய மொழியில், ‘கர்லோஸ்’.

புதுச்சேரி பிரெஞ்சுக் காலனியாகவிருந்த பகுதி, பிரெஞ்சு மொழி சார்ந்து இயங்குகிறபோது அம்மொழியூடாகப் பெற்ற அச்சொற்கள் பிரெஞ்சுமொழிக்குரிய ஒலித்தன்மையுடன்(Phonetics) இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு வருவது இயறகை. ஆனால் பிரெஞ்சுமொழிக்காரர்கள் வேற்று மொழி பெயர்களை அதற்கான  ஒலித்தன்மையுடன் உச்சரிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள்  மெத்தப்படித்தவர்கள், இலக்கியவாதிகள் என்றால் கூட கிரேக்கத்திலிருந்து வந்த சாகர்டீஸை ‘சொக்ராத்’ என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஸ்பைடர் மேன், பிரெஞ்சுக்காரர்களுக்கு ஸ்பிடர்மான், இதுபோல நூற்றுக் கணகில் உதாரணங்கள் இருக்கின்றன. பல தமிழர்களின் பெயர்கள் சிதைந்திருப்பதை (புதுச்சேரி மக்கள், மொரீசியஸ் மக்கள் பெயரைகளை) பிரெஞ்சு சூழலில் கேட்டால் வேறுபாடு புரியும்.  கிருஷ்ணாசாமி. ஏழுமலை போன்ற நூற்றுகணக்கான பெயர்கள்  பிரெஞ்சில் அல்லது ஆங்கிலத்தில் எப்படி எழுத்தப்படுகிறதென்பதை, எப்படி ஒலிக்கின்றன என்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியை, திருச்சியை, தரங்கம்பாடியை சிதைத்த ஆங்கிலேயர்கள் வழியில் இன்றைக்கும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட ஆங்கிலத்தில் கட்டுரையாக, நூலாக எழுதிறபோது வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள்  பழைய வழக்கிலிருந்து மீள்வதில்லை. டொரண்டோ, ஆஸ்திரேலியா, ஜன்னலென்று நாம் எழுதிக்கொண்டிருக்க நம்முடைய இலங்கைச் சகோதரர்கள் ரொறன்ரோ, அவுஸ்திரேலியா, யன்னல் என எழுதுகிறார்கள். நம்முடையா முன்னாள் முதலமைச்சர் தொடங்கி பலர் Jayalalitha, Jayaraman, என்றுதான் எழுழுதுகிறார்கள். இவற்றை மேற்குலக மக்கள் உச்சரிக்க  கேட்கவேண்டும்.

நவீன இலக்கிய அன்பர்கள் அண்மைக்காலமாகத்தான் கூடுதலாக பிரெஞ்சு எழுத்தாளர்களை, தத்துவ வாதிகளை அறிய வந்திருக்கிறார்கள். பலரும் ஆங்கிலம் வழி அறிய நேர்வதால் ஆங்கில ஒலியில் எழுதுகிறார்கள். குறிப்பாக அல்பெர் கமுய் , ஆல்பர்ட் காம்யூ என்றும் மொப்பசான் மாப்பசான் எனவும் சில பெயர்கள் கிட்டடத் தட்ட 30 ஆண்டுகாலமாக  வழக்கில் இருக்கின்றன. இந்நிலையில் பரவலாக ஓரளவு அறியப்பட்ட இப்பெயர்களை நவீன தமிழிலக்கிய பொதுவெளியில் வைக்கிறபோது சற்று குழப்பம். எனக்கும் அல்பெர் கமுய், மொப்பசான் என்று எழுதுவது சரி. ஆனால் பிரெஞ்சுக்காரர்களே முரண்பட்டு, கிரீஸ் நாட்டு சாக்ரடீஸை – Sōkrátēs –  தங்கள் மொழியில்  சொக்ராத் – Socrate என்றும், ஸ்பென் நாட்டு கொலம்பஸை –  Cristobal Colon, கிறீஸ்த்தோஃப் கொலோன் –  Christophe Colomb-  எனவும் ; கிருஷ்ணாசாமியை கிஷ்ணசாமி என  எழுதுவதும் சொல்வதும் சரி என்கிற விதியைப் பின்பற்றுகிறபோது ஏற்கனவே தமிழில் மாப்பசான் என்று அறிமுகமாகியுள்ள வழக்கிலுள்ள பெயரை மாற்றி மொப்பசான் என எழுத் தயக்கம்.   

எனவே இந்த நிலையில் ஓரளவு தெளிந்த கண்ணோட்டத்துடன் இருக்கிற உங்களிடம் வைக்கும் அன்புவேண்டுகோள். மொப்பசான்  அல்லது மாப்பசான் இவ்விரண்டில் எதைச் தேர்வு செய்யலாம்  என்பதைத் தெரிவித்தால், பெரும்பான்மை நண்பர்கள் விருப்பத்திற்கு உடன்படுகிறேன்.

————————————————————————————————————————–

விற்பனைக்கு(à vendre)….

                          கி தெ மாப்பசான்

                                       தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

சூரியன் உதிக்கும் போது,  பனி பெய்த பூமியில், ஒருபக்கம் வயல்கள், மறுபக்கம் கடலென்றிருக்க, இரண்டிற்கும் நடுவே நெடுக காலாற நடப்பதில்தான் எவ்வளவு சுகம்!  

 எவ்வளவு சுகம் !  கண்கள் ஊடாக ஒளியாகவும், மூக்குத் துவாரங்கள்  வழியாக சுவாசக் காற்றாகவும், உடலூடாக வீசும் காற்றாகவும் நம்முள் அது பிரவேசிக்கிற போது !

பூமி என்றதும் மிகவும் தெளிவான, அசாதரண, துல்லியமான, நினைவுகள் நம்மிடம், அந்நினைவு இனிமையான, கணநேர மனக்கிளர்ச்சிக்குரியது: ஒரு சாலையின் வளைவில், பள்ளத்தாக்கொன்றின் நுழைவாயிலில், ஆற்றங்கரையோரம், கண்ட காட்சிகளால், உணரப்படுபவை, மனதிற்கிசைந்த அழகான ஒருத்தியை சந்தித்ததுபோல, பூமி விஷயத்தில் மட்டும் இத்தனை பிரியமிக்க தருணங்களை நாம் நினைவில் வைத்திருப்பது ஏன் ?

நான் திக்குதிசையின்றி நடந்த நாட்கள் எத்தனையோ, அதில் ஒருநாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய தினம் ஃபினிஸ்த்தேர்(Finistère) முனையைக் குறிவைத்து பிரெத்தாஜ்ன்(Bretagne)  பிரதேச கடற்கரையையொட்டி, எவ்விதச் சிந்தனைகளுமின்றி வேகமாக நடந்து கொண்டிருந்தேன். பிரெத்தாஞ்ன் பிராந்தியத்தின் கண்ணுக்கினிய அழகான பகுதி, காம்ப்பெர்லே (Quimperlé) அதிக தூரத்தில் இல்லை, பக்கம். 

இளவேனிற்காலத்தின் காலைநேரம். நம்முடைய இருபதுவயது இளமையை மீட்டெடுக்கக்கூடிய, நம்பிக்கைகளை மறுகட்டமைப்புச் செய்து, பதின் வயது கனவுகளைத் திருப்பித்தரவல்ல காலைகளில் ஒன்று.

திசைகள் பிடிபடாத நிலையில், கோதுமை வயல்களுக்கும், அலைகடலுக்குமிடையில் நடக்கவேண்டியிருந்தது. அலைகளாவது அவ்வப்போது அசைந்தன, கோதுமைக் கதிர்களில் அசைவென்பதே இல்லை. முற்றிய  கோதுமைக் கதிர்களின் மணத்தையும்,கடற்பாசியின் மணத்தையும் நுகர்ந்தவண்ணம், எவ்வித சிந்தனையுமின்றி. முன்னோக்கி, பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த பயணத்தின் தொடர்ச்சியாக அன்று பிரெத்தாஞ் கடற்கரைப் பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தேன். சோர்வென்று எதுவுமில்லை, மாறாக சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்,உற்சாகமும் என்னிடமிருக்க நடந்துகொண்டிருந்தேன்.

எதைக் குறித்தும் யோசனைகளில்லை. தன்னை மறந்து, ஆழமாக, சரீரத்திற்கு சுகமளிக்கும் இயற்கை இன்பத்தில் திளைக்கிறபோதும், சந்தோஷ மிருகம் புற்களிடையே ஓடும் போதும் அல்லது அதுவே ஒரு இராட்சஸ பறவைபோல  நீல ஆகாயத்தில் பகலவன் முன்பாக பறக்கிறபோதும் வாய்ப்பதெல்லாம் மகிழ்ச்சிக் கணங்கள்,  இந்நிலையில் எதைப் பற்றிச் சிந்திக்கபோகிறேன்? தூரத்தில் பக்திப் பாடல்களின்    ஓசை. அன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே கிறித்துவ சமய ஊர்வலமாக இருக்கலாம். இரண்டொரு அடியெடுத்துவைத்து திருப்பமொன்றில் அசையாமல் நின்றேன், மனதில் ஒருவித சிலிர்ப்பு. ஐந்து பெரிய மீன்பிடி பாய்மரப்படகுகள், அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென்று மனிதர்கூட்டம், அவர்கள் ப்ளூனெவென் (Plouneven) புனிதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களென விளங்கிக்கொண்டேன்.

சொற்பநேரமே நீடித்த மென்காற்று, பழுப்பு நிற பாய்மரக் கித்தான்களை ஊதித் தள்ள சிரமப்பட, படகுகளும் மெதுவாகச் சென்றன, அடுத்து, வீசிய மறுகணமே காற்று களைத்துப்போனதும், கித்தான்கள் பாய்மரங்களைத் தழுவிக்கொண்டு விழுந்திருந்ததும் காரணம்.

மனிதச் சுமைகாரணமாக படகுகள் தள்ளாடி நகர்ந்தன. படகிலிருந்த  அனைவரும்  பாடிக்கொண்டிருந்தனர். பெரிய தொப்பியை அணிந்திருந்த ஆடவர் கூட்டம் படகின் விளிம்பைஒட்டி நின்றவண்ணம் சத்தமிட்டுப் பாட, பெண்கள் கீச்சொலியில் கத்துகிறார்கள், இந்நிலையில் கரகரகரப்புடன் பாடும் பிள்ளைகளின் கம்மியக் குரல், பொதுவாகத் தோத்திரப்பாடல்களின் பெருங்கூச்சலில் அடங்கிப்போகும்  போலி குழலோசைகள் கதிக்கு ஆளாயின.

ஐந்து படகுகளின் பயணிகளும் பாடியது ஒரே தோத்திரப் பாடலை,அதைச் சத்தமாகவும்  பாடினார்கள், அப்பாடலின் சலிப்பூட்டுகிற ஒலி வானத்தை முட்டியது. ஐந்து படகுகளும் ஒன்றன் பின் ஒன்றாக, உரசிக்கொண்டு சென்றன.

அவர்கள் என்னை முந்திக்கொண்டதோடு, என்னைக்கடந்தும் சென்றார்கள். அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி தூரம் மெள்ள மெள்ள அதிகரிக்க பாடல் ஒசை பலவீனமடைந்து. இறுதியில் அடங்கியும் போனது.

இனிமையான விஷயங்களைக் கனவுகான ஆரம்பித்தேன், அதாவது இளம்வயது பையன்களைப்போலச்  சிறுபிள்ளைத்தனமான, சொகுசான கனவுகளை.   

கனவுக்குறிய வயதை எத்தனைச் சீக்கிரம் நாம் தொலைத்து விடுகிறோம். உயிர்வாழ்க்கையில், மகிழ்ச்சியான கணங்களே கனவுகாணும் வயதொன்றுதான்!  தனிதிருக்கிற கணத்திலெல்லாம், நம்ம்பிக்கைகளில் கவனத்தைச் செலுத்தவல்ல தெய்வீகமான மனோசக்தியை நெஞ்சில் சுமக்கிறொம், எனவே ஒருபோதும் நாம் துணையின்றியோ, சோகத்துடனோ, முகவாட்டத்துடனோ இருப்பதில்லை, அது எத்தனை விசித்திரமான பூமி ! அங்கு காடுமேடென்று அலைந்து திரியும் சிந்தனையின் அமானுஷ்ய கற்பனையில் எதுவும் நடக்கலாம். கனவுகளின் பொன்னுலகில், வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது!

ம்! என் துரதிர்ஷ்டம், எல்லாம் முடிந்தது!

திரும்பவும் கனவு காணத் ஆரம்பித்தேன்.இளம்வயது கனவுகள் அல்ல, பின் எதைக் குறித்து?  எவற்றையெல்லாம் தொடர்ந்து எதிர்பார்ப்போமோ, எவற்றுக்கெல்லாம் ஆசைப்படுவோமோ அவற்றுக்காக : செல்வம்,புகழ்  பெண்கள் என்று அனைத்திற்கும் கனவு கண்டேன்.

நடந்துகொண்டிருந்தேன், முற்றிய கோதுமைக் கதிர்கள், என்விரல்களுக்கு வளைந்துகொடுத்து எனக்குக் கிளுகிளுபூட்ட தலைமுடியைக் கோதுவதுபோல, கோதுமையின் பொன்னிற தலையை வருடியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தேன்.

சிறிய மேடுபாங்கான நிலப்பகுதியை சுற்றிக்கொண்டு நடக்க, ஒரு குறுகிய, வட்டமான கடற்கரையின் முடிவில், அதைத் தொட்டதுபோல அமைந்திருந்த மூன்றடுக்கான நிலப்பாங்கில் வெள்ளைவெளேரென்று ஒரு வீடு.

இவ்வீட்டின் தோற்றம், எதற்காக என்னிடம் சந்தோஷ சிலிர்ப்பை ஏற்படுத்தவேண்டும், இதற்கான காரணம் என்ன, எனது மனம் அறிந்திருக்குமா? சிற்சில சந்தர்ப்பங்களில் இதுபோன்று சுற்றித் திரிகிறபோது, அப்பகுதிகளில் சிலவற்றை வெகுகாலமாக  அறிந்திருப்பதுபோலவும், மிகவும் பரிச்சயமானவை போலவும், மனதிற்குப் பரவசமூட்டுவதுபோலவும் உணர்கிறோம். இவற்றை நாம் அதற்கு முன்பாக கண்டிருக்க சாத்தியமில்லையா? இதற்கு முன்பு அப்பகுதியில் ஒருவேளை வாழ்ந்திருக்க முடியாதா? நம்மை அனைத்தும் ஈர்க்கின்றன, இன்பத்தில் மூழ்கடிக்கின்றன, அடிவானத்தின் மென்மையான கோடு,  மரங்களின் அமைப்பு, மணலின் நிறம்!

ஓ! உயரமான படிகள் போலமைந்த நில அடுக்குகளில் நிற்கும் அந்த வீடுதான் எவ்வளவு அழகு! பிரம்மாண்டமான படிகளாக  நீருள்ள திசைநோக்கி இறங்கியுள்ள அடுக்குகளின் நிலப்பரப்பில் உயரமான பழ மரங்கள். அவ்வடுக்குகளின் விளிம்புகளில், நெடுக மஞ்சள் வண்ண பூக்களுடன் ஸ்பெயின் தேச ழெனெ (genêts) வகைப் பூச்செடிகள் புதர்போல  மண்டிக்கிடக்க, ஒவ்வொரு அடுக்கும் தலையில் தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கும் தோற்றத்தை அளித்தது.

குடியிருப்பினால் காதல் வயப்பட்டிருக்க, நடப்பதை நிறுத்திக் கொண்டேன், அவ்வீட்டை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும், அங்கே வாழவேண்டும், அதுவும் கொஞ்ச காலத்திற்கல்ல நிரந்தரமாக என்பதுபோல, அதன்மீது காதலாகியிருந்தேன். 

வாயிலை நெருங்கினேன், இதயம் மட்டுமீறிய உந்துதலில் படபடவென அடித்துக்கொண்டது, தடுப்புச்சுவரின் சிறுதூண்களில் ஒன்றில், ஒரு பெரிய விளம்பர அட்டை, அதில்  “விற்பனைக்கு”, என்றொரு வாசகம். மறுகணம் யாரோ அவ்வீட்டை எனக்குத் தானமாக கொடுத்ததுபோல ஒரு இன்ப அதிர்ச்சி! ஏன் ? எதற்காக? எனக்குத் தெரியாது !

அவ்வீடு” விற்பனைக்கு”. எனவே,  தற்போதைய நிலையில்  கிட்டத்தட்ட ஒருவருக்கும் சொந்தமானதல்ல, நாளை யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம், நான் உட்பட, ஆம் எனக்கே கூட சொந்தமாகலாம்.!  எனக்கு! ஏன் இந்த விஷயத்தில் இப்படியொரு ஆழமான, விவரிக்கப் போதாத உணர்வு? இந்த வீட்டை வாங்க என்னால் ஆகாதென்பது நன்றாகத் தெரியும்! வாங்குவதற்கு என்னிடம் ஏது பணம்? அதனாலென்ன, அவ்வீடு விற்பனைக்குரியது என்ற சொல் முக்கியம். கூண்டில் அடைபட்டிருக்கும்  ஒரு பறவை அதன் எஜமானருக்கு மட்டுமே சொந்தம், மாறாக வானில் பறக்கும் பறவை பொதுவானது என்கிறபோது, நான் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

வளமான நிலப்பரப்பிற்குள் சென்றேன்.  ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய அரங்குகளைப் போல நில அமைப்பு,  சிலுவையில் அறையப்பட்டத்  தோற்றத்துடன் எஸ்ப்பலியெக்கள் (espaliers)(1), கொத்து கொத்தாக பூத்திருந்த மஞ்சள் வண்ண ழெனெ பூக்கள்,  ஒவ்வொரு அடுக்கின் முடிவிலும் வயதான இரண்டு அத்தி மரங்கள், மொத்தத்தில் அத்தோட்டம்தான் எவ்வளவு அழகு!

ஒவ்வொரு அடுக்காக கடந்து நில அமைப்பின் கடைசி அடுக்கான மூன்றாவது அடுக்கில் நின்று, அடிவானத்தைப் பார்த்தேன்.  கீழே வளைந்தும், எங்கும் மணலாகவும் பரந்து கிடந்த  சின்னஞ்சிறு கடற்கரையை நிலப்பகுதியிலிருந்து கனத்த மூன்று  பழுப்பு நிற பாறைகள் பிரித்திருந்தன. இங்கிருந்து காண, கடல்வாயிலை அடைத்த பெருங்கதவுகள் போலவும் இருந்தன, தவிர  கடற் கொந்தளிப்பு நாட்களில், அப்பாறைகளில் அலைகள் மோதிச் சிதறுமென்பது நிச்சயம்.

 எதிர் முனையில் இரண்டு பாறைகள் அவற்றில் ஒன்று நிற்பது போலவும் மற்றது புற்களின் மீது படுத்திருப்பதுபோலவும் இருந்தன, நிற்பது மெனிர்(menhir) மற்றது தொல்மென்(dolmen)(2) என்றும் புரிந்தது. இரண்டும் பார்ப்பதற்கு கணவன் மனைவிபோலவும், ஏதோஒரு சாபத்தால் கற்களாக மாறியவை போலவும், முன்பொரு காலத்தில் தனித்திருந்த கடலை பல நூற்றாண்டு காலமாக தெரிந்துவைத்திருப்பவை போலவும், சிறிய வீடு முழுமையாக கட்டிமுடிக்கபடும்வரை தொடர்ந்து  அவதானித்து வந்ததுபோலவும் எனக்குப் பட்டது, விற்பனைக்கென்று உள்ள அச்சிறிய வீடு ஒருநாள் இடிந்து நொறுங்க, காற்றில் கலக்க, பின்னர்  அவ்விடத்தில் புல்பூண்டுமுளைக்க  அவற்றையுங்கூட  இந்த ஜோடி காண நேரலாமென எனக்குத் தோன்றியது.

பல நூற்றாண்டுகளைக் கண்ட ‘மெனிர் தொல்மென்’ தம்பதிகளே, நீங்கள் இருவரும் என் அன்புக்குரியவர்கள் ! என அக்கற்களிடம் தெரிவித்தேன்.

வீட்டின் வாயிற்கதவில் நின்று, சொந்தவீட்டின் அழைப்பு மணியை உபயோகிப்பதுபோல அடித்துவிட்டுக் காத்திருந்தேன்.  ஒரு பெண் கதவைத் திறந்தாள், பணிப்பெண் தோற்றம், சற்று வயதானவள்,  கருப்பு உடை, தலையில் மடத்துப்பெண்களின் வெண்ணிற தொப்பி. இப் பெண்மணியைக்கூட இதற்குமுன் பார்த்திருக்கவேண்டும் என்பதுபோல எனக்குப்,பட்டது.

-நீங்கள் பிரெத்தோன் பெண்மணியாக இருக்கவேண்டும், சரிதானே? – என அவளிடம் கேட்டேன்.

– இல்லை ஐயா, நான் லொர்ரேன்(Lorraine) பிராந்தியத்தைச் சேர்ந்தவள்” என பதிலிறுத்தவள் தொடர்ந்து: 

-நீங்கள் வீட்டைப் பார்க்க வந்தவரா?” »  எனக்கேட்க,

அவளிடம்:

« நீங்கள் நினைத்தது சரி! » எனக்கூறிவிட்டு, அப்பெண்மணியைத் தொடர்ந்தேன். அங்கிருந்த சுவர்கள், தளவாடங்களென ஒவ்வொன்றையும் என்னால் நினைவு கூர முடிந்தது. முன்கூடத்தில் என்வீட்டில்  வழக்கமாக எனது கைத்தடியை சாத்தி வைப்பது வழக்கம், அன்று அதைக்கூட அங்கு தேடினேன். வீட்டின் வரவேற்புக் கூடத்திற்குள் சென்றேன், சுவர்கள் கோரையில்முடைந்த விரிப்புகொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, கடல் நீரைப் பார்க்கும் வகையில் மூன்று மிகப்பெரிய சன்னல்கள். தீக்காயும் அடுப்பின் மீது அலங்காரமாக சீனத்துப் பீங்கானில் பொருட்கள், அவற்றோடு ஒரு பெண்ணின் பெரிய அளவு புகைப்படம். தாமதிக்காது, அதை நோக்கிச் சென்றேன். நிச்சயம் என்னால் அவளை அடையாளம் காணமுடியும் என்ற நம்பிக்கை காரணமாக. நினைத்ததுபோலவே, அவள் யாரென்று விளங்கியது, அதேவேளை அவளை ஒருபோதும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை என்பதும் நிச்சயம். அவளா அது? எனக்கு வியப்பு. எவளுக்காக காத்திருந்தேனோ, எவளை அடையவேண்டுமென விரும்பினேனோ அதேபெண்!  என்னுடைய கனவுகளில் ஒயாமல் துரத்தும் அம்முகத்தை நினைவு  கூர்ந்தேன். இரவுபகலாக செல்லும் இடமெல்லாம் என்னால் தேடப்படும் பெண் ; இன்னும் சற்று நேரத்தில் வீதியில், அல்லது கிராமப்புறம் பக்கம் போகிறபோது கோதுமைக் கதிர்களில் சிவப்புக் குடையோடு ; பயணம் முடித்து, ஓர் விடுதியில் தங்கலாம் எனப் போகிறபோது, என்னை முந்திக்கொண்டிருப்பவளாக அல்லது நான் பயணிக்கிற இரயில்பெட்டியில் சக பயணியாகவோ அல்லது எனக்கென திறக்கும் வரவேற்பு கூடத்தில் எனக்கு முன்பாகவோ காண நேரும், அதே பெண்.

நிழற்படப் பெண் அவள் தான், நிச்சயமாக, சந்தேகத்திற்கு இடமின்றி அவள்தான்! என்னை அவதானிக்கும் அவளுடைய கண்கள் ; தலைமுடியை ஆங்கிலப் பெண்களைப்போல முடிந்திருக்கும் பாங்கு ; குறிப்பாக அவளுடைய வாய் ; வெகுகாலமாக அவளை யாரென்று யூகிக்க உதவும் அவள் புன்னகை, அனைத்தும் அப்பெண்ணை அடையாளப் படுத்தின.

 – யார் இந்தப் பெண்?- எனப் பணிப்பெண்ணிடம் கேட்டேன்.

சுரத்தின்றி அவரிடமிருந்து பதில் வெளிப்பட்டது: « இதுவா … மேடம் » .

நான் விடவில்லை, “அந்த அம்மாள் உங்கள் எஜமானியா?”

« ஓ! இல்லை, ‘அப்பெண் என் எஜமானி இல்லை, ஐயா !» இம்முறை அவளுடைய பதிலில் தன் பணி நிமித்தமான  கடமையோடு, சிறிது எரிச்சலும் கலந்திருந்தன.

இருக்கையைத் தேடி அமர்ந்த பின்னர், பணிப்பெண்ணிடம், ” – கொஞ்சம் விவரமாக அதைச் சொல்லமுடியுமா ? எனக் கேட்டேன்.

அவள் திகைத்து, அசையாமல், அமைதியாக நின்றாள்.

நான் விடுவதாக இல்லை: “படத்தில் இருப்பவர் இந்த வீட்டின் எஜமானி அம்மாள், சரியா?

–   இல்லை, அதுவுமில்லை,

–  இந்த வீடு யாருக்குத்தான் சொந்தம் ?

–  என்னுடைய எஜமான் தூர்னெல்  என்பவருடையது.

புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டி:

–  அப்போது இந்தப் பெண்?

– அது வந்து மேடம் ….

–  அப்படியெனில், உங்கள் எஜமானின் மனைவி என்று சொல்?

–  இல்லை, ஐயா.

–  மனைவி இல்லையென்றால் வேறு யார், உங்க எஜமானுடைய வைப்பாட்டியா?

மடத்துப் பெண் சாயலைக்கொண்ட பணிப்பெண்ணிடம் பதிலில்லை. மாறாகப் புகைப்படப் பெண்ணோடு சம்பந்தப்பட்ட  மனிதருக்கு எதிராகத் தெளிவில்லா பொறாமையும், குழப்பமான கோபமும் என்னை பீடித்திருந்த நிலையில் பிடிவாதமாக என் கேள்வியைத் தொடர்ந்தேன்.

–  சரி, இருவரும் இப்போது எங்கே?

பணிப்பெண் தாழ்ந்த குரலில்:

– எங்கள் ஐயா பாரீசில் இருக்கிறார், ஆனால் மேடம் பற்றிய தகவல் எதுவும் தெரியாது.

 ஒரு விதச் சிலிர்ப்புடன்

 – அப்படியென்றால்,  அவர்கள் இப்போது ஒன்றாக இல்லை.

–  இல்லை ஐயா.

சற்று தந்திரத்துடன், வருத்தம் தோய்ந்த குரலில் :

– என்னதான் நடந்தது சொல்லுங்களேன், உங்கள் முதலாளிக்கு என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன். எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியும், மோசமானவள், என்றேன்.

பணிப்பெண், பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. நான் சற்று வெளிப்படையாக பேசுவது, அப்பெண்மணிக்கு   நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.

« ஓ! அதை என்னன்னு சொல்வது. எங்க வீட்டு ஐயாவுக்கு அத்தனைத்  துன்பத்தையும் கொடுத்தாள். இத்தாலிக்குப் போயிருந்தபோது அங்கு இருவருக்கும் பழக்கம், மணம் செய்துகொண்டதுபோல தன்னுடன் அழைத்தும் வந்தார். அவள் நன்றாகப் பாடுவாள். அவள் மீது எங்க ஐயா உயிரையே வைத்திருந்தார்.  அவர் நிலைமையைப் காண பரிதாபமாக இருக்கும். கழிந்த ஆண்டு, இந்தப்பக்கம் சுற்றுப் பயணமாக வந்தவர்கள், யாரோ ஒரு பைத்தியக்காரன் கட்டியிருந்த இந்தவீட்டைக் கண்டிருக்கிறார்கள். அவனை உண்மையில் ஒரு பைத்தியக்காரன் என்று தான் சொல்லவேண்டும், இல்லையெனில், கிராமத்திலிருந்து இத்த்னை கல் தூரத்தில் இப்படியொரு வீட்டைக் கட்டுவானா? வீட்டைப் பார்த்த மறுகணமே அதைவிலைக்கு வாங்கி, எங்க எஜமானுடன்  இந்தவீட்டில் குடியிருக்க அவளுக்கு ஆசை. அவளைச் சந்தோஷப்படுத்த எங்க ஐயாவும் வீட்டை வாங்கினார்.

கடந்த வருடம் பனிக்காலம் முழுக்க இங்கே அவர்கள் இருந்ததாகச் சொல்லமுடியாது, ஆனால் கோடைக்காலத்தை  இந்த வீட்டில்தான் கழித்தார்கள்.

“ஒரு நாள் மதிய உணவு நேரம், “செசரின்!” என்றென்னைக் கூப்பிட்ட  முதலாளி : « வெளியில் சென்றிருந்த, மேடம் வீடு திரும்பிட்டார்களா? » எனக்கேட்டார். « இல்லை ஐயா » – என்றேன்.“ அன்றைய தினம் நாள் முழுக்க காத்திருந்தோம். கோபத்தின் உச்சத்தில் முதலாளி இருந்தார். எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. போனவள் போனவளே, ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது,  பணிப்பெண் பதிலைக் கேட்டதும், எனக்குத் தலைகால் புரியவில்லை.  மகிழ்ச்சியியை வெளிப்படுத்த பணிப்பெண்ணை முத்தமிடவும், அவள் இடுப்பைப் பிடித்தபடி நடனம் ஆடவும் விரும்பினேன்.

ஆகத் தற்போது புகைப்படக்காரி வீட்டு உரிமையாளரோடு இல்லை ! அவள் வீட்டை விட்டு போய்விட்டாள், நல்லவேளை தப்பித்தாள். இந்த மனிதரின் உறவு அவளுக்கு அலுப்பைத் தந்திருக்கவேண்டும், வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவளிடம் அம்மனிதர் நடந்துகொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் கிடைத்த செய்தியால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

வயதான பணிப்பெண் இன்னும் தான் சொல்லவேண்டியது இருக்கிறது என்பதுபோல தொடர்ந்தார்: « என் முதலாளி கவலையில் வாடினார், என் கனவரிடமும் என்னிடமும் வீட்டை விற்கப் பணித்துவிட்டு, பாரிஸுக்குத் திரும்பிட்டார், வீட்டின் விலை இருபதாயிரம் பிராங்குகள்», எனகூறிவிட்டு நிறுத்தினாள்.

வேலைக்கரப்பெண் கூறியவைகளை காதில் வாங்கும் நிலையில் நானில்லை! எனது நினைவெல்லாம் புகைப்பட பெண்ணிடம் இருந்தது. மறுகணம், எப்படியேனும் அவளை கண்டுபிடித்து இங்கே அழைத்து வரவேண்டும். இளவேனிற்காலத்தில் இப்பிரதேசத்திற்குத் திரும்பவும் கூட்டிவந்து, அவள் மிகவும் விரும்பிய அழகான இவ்வீட்டை, உடையவர் தற்போது இங்கில்லை என்பதையும் கூறி , திரும்பக் காணச் செய்யவேண்டும். செய்யவேண்டியது அதொன்றுதான்.

வயதான பணிப்பெண்ணின் கைகளில் பத்து பிராங்குகளைப் போட்டேன். தற்போது புகைப்படம் என்கையில். வேகமாகச் சென்று அட்டையிலிருந்த  இனிமையான அம்முகத்தை வெறித்தனமாக முத்தமிட்டேன்.  

வீட்டைலிருந்து வெளியேறியவன், வந்த சாலையைப் பிடித்து புகைப்படப் பெண்ணை பார்த்தவண்ணம் நடந்தேன். தற்போது அவளுக்கு விடுதலை, விடுதலைக்கு பின் அவள் எவ்வளவு அழகு!  அவள் காப்பாற்றப்பட்டிருந்தாள்!  வீட்டு மனிதரைப் பிரிந்தாயிற்று. இன்றோ நாளையோ, இந்த வாரமோ, அடுத்த வாரமோ அவளை நான் சந்திக்கப் போவது நிச்சயம்! அம்மனிதரைப் பெண் பிரிய என்னுடைய அதிர்ஷ்டமே காரணமென்றும் நினைத்தேன்.

நான் அறிந்த அப்பெண்  தற்போது இவ்வுலகில் ஏதோவொரு மூலையில்  சுதந்திரமாக இருக்கிறாள், நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், எப்படியாவது அவளை தேடி கண்டுபிடிக்கவேண்டும்.

விளைந்த  கோதுமையின் வளைந்த கதிர்கள் மீன்டும் என் கை தடவலில் இருக்க, கடற்காற்றை உள்வாங்கி என் மார்பு புடைத்தது, முகத்தில் சூரியன் முத்தமிட்டது. விரைவில் அவளைச் சந்திப்பதும், “விற்பனைக்கு”  என்றுள்ள அந்த அழகான வீட்டில், இம்முறை நாங்கள் வசிப்பதும் நிச்சயம். இனி தான் விரும்பும் வீட்டைப் பிரிய  அவளுக்கு மனம்வராது!

எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கை அளிந்த போதையுடனும் நடந்துகொண்டிருந்தேன்.

_______________________________________________________________

  1. எஸ்ப்பலியெ (espaliers) : ஒரு வகையான தோட்டக் கலை, பழமரங்களையும், பூச்செடிகளையும் சுவரில் பதியம். செய்வதுபோல வளர்க்கும் முறை

2;மெனிர்(menhir) தொல்மென் (dolmen) இவற்றுள் முதலாவது, ஒரு வகை குத்துக்கல், இரண்டாவது படுக்கைநிலையில் உள்ள ஒரு கல், இரண்டும் இறந்தவர்கள் நினைவுச் சின்ங்கள்,  கற்காலங்களில் புழக்கத்தில் இருந்

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   – (காலாழ் களரில் உலகு ) – வித்யா அருண்

                         

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம்,  தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை  சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம். 

« காலாழ் களரில் உலகு » அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதை தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடுபத்தலைவி மட்டுமல்ல, உயர் கல்விபெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர்,நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின்  மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.

நூலுக்கு  முன்னுரை எழுதியுள்ள  எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் « காலாழ் களரில் உலகு » என்ற  சிறுகதைநூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக்  காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார்.

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில்  பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும்  ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் « தன் »னையும்,  « பிறரை »யும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன் இந்த « யார் ? » சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது.

« ஏழாம் அறிவு », « காலாழ் களரில் உலகு » இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை ( கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில்  நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம் எதுவும் நடக்கலாம்.

« மோனம் », « தொட்டால் பூ மலரும் », இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன.

« வழித்துணை », « வெட்டென மற », « போகாதே » மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆனால்  இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின்  அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட  மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும்,  புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  « அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ? » என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  « ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் »என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’ » என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில் தன்மையில் வளவளவென்றில்லாமல் சிக்கனமான மொழியில் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன.

இத்தொகுப்பில் « அதிர்வலைகள் », நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும், « கானல் காலங்கள் » மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, « புதையல் » என்ற சிறுகதையையும். « அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை » என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின்  ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் « அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை » என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு,   இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும்  உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரை திறனைப்  பாராட்டுகிறென்.

——————————————————————–

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

மானுடம் காலாண்டிதழ்: அறத்தின் குரல்

மானுடம் காலாண்டிதழ் நண்பர்கள் அண்மையில் தங்கள் இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை அனுப்பிய நண்பர், அறந்த்தின் குரல் என்ற பெயரிட்டே அவற்றை மின் அஞ்சலில் அனுப்பியும் வைத்தார்.

மானுடம் என்பது, நிற இன வேற்பாடுகளைக்கொண்ட மனிதர்கூட்டம் முழுமைக்கான சொல் என்கிற போதும் அறத்தின் குரல் தேசத்துக்குத் தேசம் வேற்படுகிறது, அவரவர் பண்பாடு, சமூகம், சார்ந்து ஒலிப்பது. இந்தியாவின் அறமும் பாகிஸ்தானின் அறமும் ஒன்றல்ல. கீழைநாடுகளின் அறமும் மேற்கத்திய நாடுகள் அமைத்துக்கொண்ட அறமும் ஒன்றல்ல. ஈரான் அறம் வேறு, அமெரிக்காவின் அறமும் வேறு வேறு, கற்காலத்தின் அறம் வேறு இருபதாம் நூற்றாண்டின் அறம் வேறு, கண்ணகிக்கும் மாதவிக்கும் வேறு வேறு அறங்கள். அறிவியல் உண்மையின் அடிப்படையில் அது எழுதப்படுவது அல்ல அவரவர் பார்வையின் உண்மையில் எழுதபடுவது. மானுடம் என்ற உயிரியின் உறுப்புகள் என்கிறபோதும் புலனுக்கு வகுக்கப்பட்ட  அறத்தின் வழி ஒழுக கடமைபட்டுள்ளன. ஆம் அறம்,  பெற்ற ஞானம், உற்ற அனுபவம்,  சார்ந்த சமூகம் என்கிற அடிப்படைகளின் உண்டியல் சேமிப்பு. அவை கடமை, செஞ்சோற்றுக் கடன், மூடத்தனம் இதுபோன்ற திசைமானிகளால் வழி நடத்தப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

தமிழில் பருவ இதழ்கள் ஏராளமாக வருகின்றன. தமிழ், மொழி, இலக்கியம், சமூகம், மனித வாழ்க்கை அது சார்ந்த  ஆய்வுகள் கருத்துக்கள், விசாரணைகள், விவாதங்கள் அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இலக்கிய திங்களிதழ், மாத இதழ், காலாண்டிதழ், என்றபெயரில் அச்சிலும், காலத்தோடு இணைந்து மின்னிதழ், இணைய இதழ்களும் வருகின்றன. புரட்டுகிறபோதே அவற்றின் வாசனைகளை முகர்ந்துவிடுகிறோம், அவற்றில் சுகந்தம் துர்நாற்றம் இரண்டுமுண்டு. குழுவின் குல தெய்வ இலக்கியத்திற்கு  பிரார்ந்த்தனைகளை நிறவேற்றவேண்டிய கடமைகள் ஒருசிவலவற்றிற்க்கு  இருக்கின்றன. புரவலர்கள், ஆயுள் சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் எடைக்கேற்ப பால் காவடி, பன்னீர்காவடி, தீ மிதித்தல், அலகு குத்துதல், செடல் தேர் இழுத்தல் உண்டு. உக்கிரத்தைப்பொறுத்து கோழியோ, ஆடோ காவு வாங்கியபின் மலையேறி திரும்ப பாதைக்கு வரலாம்.

‘மானுடம்’ எவ்வித ஒய்யாரங்களுமின்றி இலக்கியபணி ஆற்றுகிற, அக்காலத்திய  டி.ஸ். பட்டணம்பொடி போல  காரசாரமான கட்டுரைகளுடன் வருகின்றன. பெரும்பாலானவை புருவத்தை உயர்த்தவைக்கின்றன, மனித இனம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிகள் அவை. இதழ்கள் ஒவ்வொன்றிலும் பேராசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் எனபலரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதழ்களைப் புரட்டும்போது கலைக் களஞ்சியமொன்றை புரட்டும் அனுபவம்.

இக்கட்டுரைகள் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, ஆய்வு மாணவர்களுக்கு உதவக் கூடியவை. தமிழை வளர்ப்பதென்பது, தமிழ் அறிவை வளர்ப்பதென்பது இது போன்ற இதழ்களை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வதில் இருக்கிறது. மானுட த் தேரை தமிழிலக்கிய வெளியில் வலம்வரச் செய்ய உழைக்கும் நண்பர்களைப் பாராட்டுகிறேன்.