கதையல்ல வரலாறு1-6

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள்  மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி,  வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார். ஹெஸ்ஸின் சொந்த யோசனையா? அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு  இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:

” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.

“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”

“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.

பீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:

– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா?

– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.

பீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்

பீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதகமாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும்  நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.

இப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.

ஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை இட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன.  முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார்.  அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா·வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேடிக்கை!’ என அலுத்துக்கொண்டிருக்கிறார்.

நாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.

இச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா?” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா?”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”,  எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு  ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, ·பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட  ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவருக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு  சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.

சம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான  நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் ·ப்ரிட்ச்  டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ?” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா?, என்றாராம்.

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள்.  1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.

ருடோல்·ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.

இச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா? ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா? அவர் இறப்பு தற்கொலையா? கொலையா?

நம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர்  அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.

– முற்றும் –

———————————————————-

 

1. Leasor, J. (1962). Rudolf Hess : the uninvited envoy. London: Allen & Unwin [©1962]

மொழிவது சுகம் நவம்பர் – 15

The Artist – ஒருகனவுலகத்தின்கதை

கோடம்பாக்க கனவுகளுடன் ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் தஞ்சம் புகும் மனிதர்களை உண்மைக் கதைகளை அறிவோம். சினிமா இருக்கும்வரை இக்கதைகள் தொடரலாம். இன்றோ நாளையோ நாலைமறுநாளோ லாரியிலோ, பஸ்ஸிலோ, ரயிலேறியோ வருவதும் தெருவில் அலைவதும், சினிமா அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடப்பதும், காத்திருப்பதும், உள்ளே நுழையும் திருமுகங்களின் கடைக்கண்பார்வைக்காக ஏங்குவதும், கிடைத்த தருணங்களில் வேர்வையைத் துடைத்தபடி சவரம் செய்யாத முகத்தின் திணவுகளை சகித்துக்கொண்டு விண்ணப்பமிடுவதும், அவர்களின் பொய்யான உறுதிமொழியை  நடிப்பென தெரிந்தும் (?) நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும்.  இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும்? நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா? ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன? கம்பீரமாக அடியெடுத்துவைக்கும் ஆனைக்கு நிகழும் சறுக்கலில் நமது தோல்வியை நிவர்த்திசெய்து கொள்கிறோம். ‘தெருவில் அடிக்கடி உர் உர்ரென்று யமஹாவில் போகும் பையன், விபத்தில் செத்தானாமே’ ‘அந்த ஆள் ஆடிய ஆட்டத்துக்கு இது போதாது’. இதுபோன்ற நல்ல வாசகங்கங்களை நாமும் உதிர்த்திருப்போம்.

ஒரு நடிகை பிறக்கிறாள் (A Star is born) 1937ல் வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இத்திரைப்படத்தின் வெற்றியும் கதையிலுள்ள உண்மையும் மீண்டும் இரண்டு பதிப்புகளைக் காண உதவியிருக்கிறது. திருட்டு டிவிடியைக் கண்டிக்கும் நமது திரையுலகமும் அன்றுதொட்டு இன்றுவரை கூச்சமில்லாமல் பலகதைகளையும் திரைக்கதைகளையும் திருடியிருக்கிறது. அப்படி திருடிய கதை கோடம்பாக்கத்தில் எடுத்திருந்தால் வித்தியாசமான தமிழ்ப்படம், மும்பையில் எடுத்திருந்தால் மாறுபட்ட இந்திப்படம்.

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தமது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக தனது பாட்டியின் சேமிப்பைக் கைச்செலவுக்குபெற்று நடிகையாக புகழ்பெறவேண்டுமென்ற கனவுடன் ஹாலிவுட் வருகிறாள், அவ நம்பிக்கைகளுக்கிடையில்  புகழின் உச்சத்திலிருக்கும் நடிகரின் எதிர்பாராதச் சந்திப்பு வாய்க்கிறது, கனவு நனவாகிறது. அவள் வாழ்க்கைக்குத் தங்கப்பூச்சு கிடைக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிறக்கும் காதலும் காதல்சார்ந்த தளமும் உபகதை. இந்த உபகதைதான், ஒரு நடிகை பிறக்கிறாள்’ திரைப்படத்தை உச்சத்தில் நிறுத்திய கதை. இந்த உபகதையை உயிரோட்டத்துடன் நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற படத்தின் தங்க சூத்திரம் மறந்துபோகாதென்பதை நினைவூட்டும் இன்றைய திரைப்படமே The Artist என்கிற பிரெஞ்சு திரைப்படம்.

The Artist படத்தின் கதை நடக்கும் காலம் 1927 அதாவது ஊமைபட உலகத்தின் காலம். ஊமைபட உலகம் பேசும்பட உலகமாக மாற,  ஊமைபடங்களில் கொடிகட்டி பறந்த நடிகனும் நடிகையும் எப்படி கவனிப்பாரற்றுபோகிறார்கள் என்பதுதான் கதை. இக்கதையிலும் காதலும் அதன் மாய்மாலங்களும் உபகதையாக வருகிறது.  படத்தின் நாயகன் Jean Dujardin (ழான் துழார்தென்) இப்படத்தில் நடிப்புக்காக 2011ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 2011ல் வெளிவந்திருக்கும் 1927 ம் ஆண்டு ஊமைப்படவுலகைப் பற்றிய இத்திரைப்படம் கருப்பு வெள்ளை படம் என்பதோடு  முழுக்க முழுக்க ஓர் ஊமைப்படமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். இக்கதையின் இயக்குனர் A star is born திரைப்படமே தமது படத்திற்க்கு ஆதாரமென்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

——-

கராச்சி நீர்முழ்கி கப்பல் விவகாரம்

அண்மைக்காலமாக பிரெஞ்சு அரசியலில் நாறும் பிரச்சினை கராச்சி விவகாரம் என்றபெயரில் சூடுபிடித்துள்ள ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளை மையப்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான ஊழல்.

எண்பதுகளில் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த · போ·பர்ஸ் நிறுவனம் Haubits FH77 என்கிற பீரங்கிகள் விற்பனையில் இந்திய அரசின் உடன்பாட்டினைப்பெற அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பேரத்தை சாதகத்தை முடித்தவகையில் தரகுப்பணம் அளித்ததாக குற்றசாட்டு எழுந்ததும் வழக்கம்போல இந்திய சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்வதும், குதிரை செத்ததுமல்லாமல் குழிதோண்ட பத்துபணம் என்பதுபோல எய்தவனை மறந்து இடைத் தரகராக செயல்பட்ட  ஒட்டாவியோ குட்ரோச்சியை தேடி அலைந்ததும், நாம் மறந்துபோனதும் நேற்றைய கதை. இன்று வேறுகதைகள் படிக்க இருக்கின்றன. இந்த கராச்சிகதை பிரான்சு அரசியல்வாதிகள் எழுதிய கதை. எந்த நாடாக இருந்தாலென்ன அரசியல்வாதிகளென்றிருந்தால் ஊழல் இல்லாமலா?

2002ம் ஆண்டில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் அடுத்தடுத்து  தாக்குதல்கள் நடந்தன. முதல் பலி ஓர் அமெரிக்க பத்திரிகையாளர், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழைச் சேர்ந்தவர் பெயர் டேனியல் பெர்ல்,  கொலைசெய்யப்படுகிறார். மார்ச் மாதம் 17ந்தேதி நடந்த இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்களும் மூன்று ஐரோப்பியர்களும் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 8ந்தேதி கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் பதினான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தொழிலுக்கு தொழில் நுட்பத்தை வழங்கியவர்கள் என்ற வகையில் அங்கே பணியாற்றிய பிரெஞ்சு பொறியாளர்கள், மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். தொடர்ந்து மற்றொரு தாக்குதல் இம்முறை அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடந்தது. இத்தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 11 பேர், காயமடைந்தவர்கள் 46பேர். இந்த அனைத்தும் தாக்குதலும் ‘கராச்சி விவகாரம்’ (Affaire Karachi) என அழைக்கப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கண்ட தாக்குதல்  அனைத்திற்கும் தலிபான்கள் காரணமென்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிலவும் தலிபான்களைக் குற்றம் சாட்டின. ஆனால் உண்மை வேறாக இருந்தது.

 

1994ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கமும், அந்நாட்டைச்சேர்ந்த DCNS கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கடற்படை அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் படி Agosta 90B ரக அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு கட்டித் தரவேண்டும். நமது போபர்ஸ் சாயலில் பேரங்கள் முடிந்திருந்தன. அதாவது ஆளுகின்ற பாகிஸ்தான் அரசின் (பெனாசிர் பூட்டோ) நிர்வாகிகளுக்கும் முன்னின்று பேரத்தை நடத்திய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தத் தொகையில் அதாவது பிரான்சு விற்றவகையில் பெறுகின்ற தொகையில் பத்து சதவீதத்தை தரகாக தரவேண்டும். அதாவது பொருளின் விலையை 110 என தீர்மானித்து, அதை வாங்குகிற பாகிஸ்தானியரிடம் 110யும் வசூலித்து 10ஐ கையூட்டாக பாகிஸ்தான் நிர்வாகிகளிடம் திருப்பித் தரவேண்டும். இந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் பேரத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்பில் ஒரு பேரத்தை முன்வைத்தனர். அதன்படி பொருளின்விலையை 120 ஆக நிர்ணயித்து கூடுதலாக வரும் பத்து சதவீதத்தை தங்களிடத்தில் தரவேண்டுமென்றனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு சம்மதித்தது அதாவது 100 பெறுமதியான பொருளை 120 கொடுத்து வாங்க சம்பதிக்கின்றனர். ஒப்பந்த திகையின் மதிப்பு 826 மில்லியன் யூரோ. அவ்வகையில் அத்தரகு தொகை மூன்றுதவணையாக செலுத்தப்பட்டது. முதல் இரண்டு தவணையாக செலுத்தப்பட்ட தரகுத் தொகையினால்  பிரச்சினைகள் எழவில்லை. பெனாஸிர் பூட்டோவுக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தரகுத் தொகை செலுத்தப்பட அவர்களும் பிரெஞ்சுகாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தரகுத் தொகையை திருப்பி அளித்தனர். ஒப்பந்தப்படி பாகிஸ்தானியருக்கு 32 மில்லியன் யூரோ பாக்கியிருந்தது. அப்போது திடீரென பிரெஞ்சு ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. 1997ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவர்களுடைய  சட்டம் இதுபோன்ற தரகுகளை பிரெஞ்சு அரசு ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. விளைவு பாகிஸ்தானிய மக்களுக்கு அல்ல ஆளும்வர்க்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு 32 மில்லியன் யூரோ இல்லையென்றானது அதன் விளைவுதான் பாகிஸ்தானின் கடற்படையும் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளும் இணைந்து பிரான்சுநாட்டை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட தாக்குதலை நடத்தி பழியை தலிபான்கள்மீது சுமத்தியது.  தாக்குதலில் பலியானவர்களின் உறவுகள் கடந்த கால பிரெஞ்சு அரசாங்கத்தின் வலதுசாரிகள் சிலரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போதைய பிரெஞ்சு பிரதமரும் இன்றைய ஜனாதிபதியின் நண்பருமான எதுவார் பலாதூர் என்பவர் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் நின்றபோது தேர்தல் செலவுக்கு இந்த மாற்றுத் தரகுப் பணம் உதவியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய பிரான்சு அதிபர் சர்க்கோசி    எதுவார் பலாதூர் தேர்தலின்போது அவரது வலக்கரமாக இருந்து செயல்பட்டவர் என்றவகையில், அவரையும் இவ்விவகாரம் பாதித்துள்ளது. போபர்ஸ் புகழ் ராஜிவ் காந்தியும் இன்றில்லை, கராச்சி நீர்மூகிக் கப்பல் விவகாரப்புகழ் பெனாசீரும் இன்றில்லை.

 

 

கதையல்ல வரலாறு 1-5

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்:

“தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.”

“ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் யுத்த விமான தளத்திலிருந்து மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று புறப்பட்டுப் போனவர் திரும்பவில்லை.”

“போனவர் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறார், அக்கடிதத்திலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாரென்பது உறுதிபடுகின்றது, பிரமை பீடித்திருப்பதாக அஞ்சுகிறோம். ”

“·ப்யூரெர் இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக தோழர் ‘ஹெஸ்’ ஸின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தோழர் ஹெஸ்ஸின் விமான பயணம் பற்றிய முழுத் தகவல்களை தெரிந்திருந்த அவர்கள்  ·ப்யூரெர் ஆணைப்படி அதனை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உரிய நேரத்தில் அரசுக்கு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தெரிவித்திருக்கவேண்டும், இரண்டும் இல்லையென்றானதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

தமது நெருங்கிய நண்பர் ஹெஸ்ஸின் திடீர் பயணத்தை உலகுக்கு இட்லர் எவ்வாறு அறிவித்திருந்தார் என்பதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.

ஒரு குற்றத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யமுடியாத நிலையில் யாரை அரசாங்கம் சந்தேகிக்கவேண்டுமோ அவர்கள் எவரையும் குற்ற வளையத்துக்குள் இட்லர் அரசு கொண்டுவரவில்லை.’ஹௌஸ் ஷோபெரையோ, யுத்த விமான தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய மற்றொரு சகாவான மெஸ்ஸெர்ஷ்மிட்டையோ, ஹெஸ்ஸின் மனைவியையோ.. மூவரில் ஒருவரைக்கூட அரசு தொடவில்லை. ஹௌஸ் ஷோபெருடைய மகனை, விசாரணை என்ற பேரில் மூன்று மாதம் சிறை வைத்தார்கள். மூன்றாவது மாதம் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தவர் வழக்கம்போல தமது பணியினைத் தொடர அனுமதிக்கபட்டார். அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’. இவர் மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். விடுதலைக்குப்பிறகு 1944ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் ரஷ்யர்களிடம் சிக்கவே மீண்டும் சிறைவாசம்.

ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’ ஐ சிறைபிடித்த ரஷ்யர்கள், அவரது எஜமானருடைய பிரிட்டிஷ் பயணத்தின் உண்மையை அறிய பலவகைகளிலும் வதைசெய்தார்கள்: விரல்கள் உடைக்கப்பட்டன, உணவு மறுக்கப்பட்டது; உறங்க விடவில்லை. எவ்வளவு வதை செய்துமென்ன? அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லமுடியும். அவர்களிடத்திலும் அதைத்தான் கூறினார். பதினோறு ஆண்டுகள் அவர் ரஷ்ய சிறையிலிருந்த பின்னர் விடுதலைப்பெற்று 1955ம் ஆண்டு ஜெர்மன் திரும்பினார்.

இனியும் ஹெஸ்ஸின் பயணத்தையும் அவருடைய திட்டத்தையும் மர்மப் பயணம் என்றோ, ரகசியப் பயணமென்றோ சொல்லிக்கொண்டிருக்க இயலாது. வெளியுலகம் அறிந்த ரகசியமாயிற்று. 1941ம் ஆண்டு மே 17ந்தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு விளக்கமாக மே 11, 12, 14, 15 தேதிகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி நடத்திய உரையாடலின் முழுவிபரத்தையும் ஓர் அவசரசெய்தியாக பாவித்து தகவல் அனுப்பியிருந்தார். இதற்கு முந்தைய தொடரில் நீங்கள் வாசித்தவைதான் அத்தகவல்கள் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்குச் சுருக்கமாக நினைவுபடுத்துவது நல்லது..

மே 11 மற்றும் 12 தேதிகளில் இரவில் நடந்த உரையாடலில் ஹெஸ் குறிப்புகளை வைத்துக்கொண்டு வளவளவென்று நிறைய பேசினாரென்றும். அன்றையப் பேச்சில் மூன்று விடயங்கள் அவரிடம் பிரதானமாக இருந்தனவென்றும் சொல்லப்பட்டிருந்தது. முதலாவது இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளிடையேயான கடந்த 30 ஆண்டுகால உறவுபற்றியப் பேச்சு. அதன் நோக்கம் ஜெர்மன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், பிரிட்டன் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும்.  இரண்டாவது எப்படியும் இட்லர் ஜெர்மன் மக்களின் முழு ஆதரவுடன்,  விமானப்படை மற்றும் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் துணைகொண்டு கூட்டுபடைகளை வெல்லப்போகிறாரென்ற ஹெஸ்ஸின் கர்வப் பேச்சு. இங்கிலாந்துடன் சமாதானமாக போகவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஹெஸ்ஸின் பேச்சு பற்றியது, மூன்றாவது. ·ப்யூரெருக்கு பிரிட்டனைப் பற்றி வெகுகாலந்தொட்டு உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், அவை இனியும் தொடருமென்றும், அந்நம்பிக்கைக்கு இடையூறின்றி பிரிட்டன் ஜெர்மனுக்குச் சொந்தமான காலனிநாடுகளை திருப்பி அளித்து, ஐரோப்பிய விவகாரத்தில் ஜெர்மனியின் நடவடிக்கைகளில் பிரிட்டன் குறுக்கிடக்கூடாதென்று ஹெஸ் கூறியதும் முதல் நாள் ஹெஸ்ஸின் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம். ‘இங்கிலாந்துடன் சமாதானமாகப்போவதற்கு இப்போதுள்ள தலமைக்குப் பதிலாக வேறொரு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்’ என்று ஹெஸ் தெரிவித்த இட்லர் விருப்பத்தையும் சர்ச்சில் மறக்காமல் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மே 14ம் நாள் ‘ஹெஸ்” ஸ¤டன் நடந்த உரையாடலென்று:

1. சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எதுவாயினும் ஜெர்மன் ஈராக்கின் ரஷீத் அலி குழுவினரை ஆதரிக்கும், அடுத்து ஈராக்கிலிருந்து பிரிட்டன் வெளியேறியே ஆகவேண்டும்.

2. நீர்மூழ்கி கப்பல்களின் துணையுடன் இங்கிலாந்தின் உணவுப்பொருட்களின் வரத்தை தடைசெய்யும் வகையில் முற்றுகையை நீட்டித்து கடைசி இங்கிலீஷ்காரன் பசியால் துடிப்பதை ஜெர்மன் காணவேண்டும். என தந்தி தெரிவித்தது.

மே15ம்நாள் ஹெஸ்ஸ¤டனான பேட்டி என்ற வகையில் தந்தியில் அமெரிக்கா நட்புக்குகந்த நாடல்ல என்பதாகவும்; அமெரிக்காவின் ஆயுதங்கள், யுத்த விமானங்கள் ஆகியவைக்குறித்து ‘ஹெஸ்’ ஸ¤க்கு பெரிய அபிப்ராங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

‘ஹெஸ்’ஸ¤டன் நடந்த உரையாடலென்று மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருந்த சர்ச்சில் ‘ஹெஸ்’ஸின் ஆரோக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்த தகவலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரச்சினை பின்னர் தெரியவந்தற்கு இங்கிலாந்து அரசாங்கமும் ஜெர்மன் அரசாங்கமும் ஹெஸ் உடல்நிலைகுறித்த அறிக்கையில் முரண்பட்டிருந்தைக் காரணமாகச் சொல்லலாம். ஹெஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மன நிலை பாதித்ததன் அறிகுறி அவரிடம் சுத்தமாக இல்லையென்றும் சர்ச்சில் தந்தி தெரிவிக்கிறது. அதுவன்றி ஹெஸ்ஸின் முயற்சிகள் பற்றி இட்லர் அறிந்திருக்கமாட்டாரென தாம் நம்புவதாகவும், இங்கிலாந்தில் சண்டையின்றி சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் இப்போதுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டிவிடுவார்களென்று அந்த’ ஆள் (ஹெஸ்) கூறுவதை நம்பாமல் இருக்கமுடியவில்லை என்கிறார் சர்ச்சில்.

வணக்கத்திற்குரிய அதிபருக்கு, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்திற்கு மட்டும் உரியது. எங்கள் தரப்பில் நாங்கள் விரும்புவதெல்லாம், இதுகுறித்த எத் தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு மூச்சு விடகூடாது. அதன் மூலம் ஜெர்மன் தலைவர்கள் குழப்பத்தில் நிறுத்தவேண்டும். நம்மிடம் கைதிகளாகவுள்ள எதிரிகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் அதுதான் நிலமை. நிச்சயமாக இப்பிரச்சினை ஜெர்மன் ராணுவத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறேன், என எழுதி சர்ச்சில் முடித்திருந்தார்.

இதற்கிடையில் ‘ஹெஸ்’-ஐ ·பார்ன் பரோவுக்கருகிலிருந்த மாளிகைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். ஹெஸ் தொடர்ந்து சர்ச்சில் அரசாங்கத்தில் ஓர் அமைச்சரையேனும் தாம் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிப்பந்தம் கொடுத்தார். கிர்க் பட்ரிக், பிரிட்டிஷ் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து  கைதுசெய்யப்படுள்ள ஹெஸ்ஸ¤க்கு உதவ முன்வந்தார். சர்ச்சிலுக்கு உடன்பாடில்லை. தாம் இணங்கினால் சர்ச்சில் ஜெர்மனுடன் சமாதானம் பேச குறுக்குவழியில் இறங்கினாரென அரசியல் விமர்சர்கள் எழுதுவார்களென்று தவிர்த்தார். ஆனாலும் கிர்க் பட்ரிக் சளைக்கவில்லை. அதன் மூலம் ஹெஸ்சிடமிருந்து வேறு உண்மைகளை பெறமுடியுமென்பதுபோல பேசினார். இறுதியில் சர்ச்சில் அவர் யோசனைக்கு சம்மதிக்க சர் ஜான் சைமன் என்ற வெளிவிவகாரத்துறை முதன்மைச் செயலரை அனுப்பினார்கள். இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததாகவே காட்டிக்கொள்ளகூடாது என்று பிரதமர் அலுவலகம் தீர்மானித்தது. இச்சந்திப்பு பற்றிய முழு விபரமும் பின்னர் நூரம்பெர்க் விசாரனையின்போது வெளிவந்தது. இம்முறை உரையாடல் மூன்றுமணி நேரம் நீடித்தது. ஹெஸ், சர் ஜான் சைமனிடம் பிரான்சு நாட்டிலிருந்து 1940ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வரவேண்டுமென்று தமக்கு திட்டம் இருந்ததென்பதை உறுதி செய்தார். தொடர்ந்து

– எப்படியும் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் போரில் நாம்தான் ஜெயிக்கபோகிறோம், அப்படி இருக்கையில் சமாதான ஒப்பத்தத்திற்கு முன்பாக வெர்சாய் ஒப்பந்தத்தின்படி நம்மிடம் கைப்பற்றியவற்றை திரும்பவும் ஒப்படைக்கவேண்டுமென்று உங்களை ஏன் வற்புறுத்தக்கூடாதெனக் கேட்டதற்கு ·ப்யூரெரிடமிருந்து வந்த பதிலென்ன தெரியுமா, ‘அப்படியே போரில் நாம் ஜெயித்தாலும், நல்லுறவை பேணவேண்டும் என நினைக்கிறபோது இதுபோன்ற நிர்பந்தங்களை விதிக்கக்கூடாது’, என்றார். எங்கள் தலைவரின் நல்லெண்ணம் மட்டும் உங்களுக்குத் தெரியவருமெனில், சமாதானத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என்று நினைத்தேன். தவிர மிக மோசமான உங்கள் நிலமையும் இப்படியொரு பயணத்தை மேற்கொள்ள எனக்குக் காரணமாயிற்று, -என்றார் ஹெஸ்.

– எங்கள் மீது நீங்கள் பரிதாபப் படுவதைவைத்து, மிகமோசமானதொரு தாக்குதலை நடத்த நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனக் கருதலாமா?

தலையாட்டிய ஹெஸ் மீண்டும் தமது நாட்டின் யுத்ததளவாடங்களின் எண்ணிக்கை, நீர்மூழ்கிக்கப்பல்களின் ஆற்றலென பேச ஆரம்பித்துவிட்டார். இடையில் குறுக்கிட்ட சர் ஜான் சைமன்:

– வந்தது எப்படி ·ப்யூரெர் அனுமதியுடனா? அல்லது அனுமதி இன்றியா?

– அவரது சம்மதத்துடன் வந்தேனென்றா சொல்லமுடியும்? என்று பதில் கேள்விகேட்ட ஹெஸ், கடகடவென்று சிரிக்கிறார். சிரித்துமுடித்ததும் ஒரு சிறிய தாளை எடுத்து அவர் முன் பரப்பினார்.

‘ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்’ என்று அதில் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெஸ்:

– இவைகளெல்லாம் அவ்வப்போது எங்கள் தலைவர் முன்வைத்த நிபந்தனைகள், என்றார்.

சர் ஜான சைமன் அதனைப் படித்துபார்த்தார் புதிதாக எதுவுமில்லை, ஏற்கனவே இவோன் கிர்க் பட்ரிக்கிடம் ஹெஸ் கூறியிருந்தவைதான் அதிலிருந்தன.

(தொடரும்)

 

 

பாரீஸில் இருவிழாக்கள்

பாரீஸில் காந்தி சிலை:

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் குடியிருக்கும் Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். நாளை அதாவது 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறக்கவிருக்கிறார்கள். வொரெயால் தமிழ்சங்க தலைவர் இலங்கைவேந்தன் என்பவரை கடந்த சில வருடங்களாக அறிவேன் அயராத உழைப்பாளி. வருடந்தோறும் விழாக்களை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைக்கிறார். தமிழ்ப்பள்ளியொன்றை நிறுவி பிள்ளைகள் தமிழின் விரல் பிடித்து நடப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்திக்குமுள்ள பந்தமென்பது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதாக இருக்கலாம், ஆக அவர்களும் காந்தியைப் போற்றுகிறவர்களாகிறார்கள். ஆனால் இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாதது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளரசியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது. பாரீஸில் முதன் முதலாகக் காந்தி சிலை திறக்க எடுத்துக்கொண்ட நண்பர் இலங்கைவேந்தனின் முயற்சி போற்றுதலுக்குரியது.

நாள்: 11-11-2011, பகல் 2மணி அளவில்; இடம்: Avenue Gandhi, 95490- Vaureal தொடர்புகட்கு: Ilangaivendhan- 06 10 43 22 16

பத்தாவது ஆண்டு கம்பன் விழா:

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனை பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கு தமிழ்தான் குடும்பம், தமிழர்கள் தான் உறவினர்கள். சந்தத்துடன் மரபுக்கவிதை எழுதுவதில் சமர்த்தர். தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டு இயங்குபவர். தமிழர்களென்றாலே பல சங்கங்கள் இருக்கவேண்டுமில்லையா? இங்கேயும் நூறு சங்கங்களாகவது அப்படி இயங்கும். அவற்றுள் உருப்படியாக தமிழுக்கு உழைக்கும் அமைப்புகளில் நானறிந்தவகையில் ஐந்து அல்லது ஆறு அமைப்புகள் இருக்கலாம். அவற்றுள் சட்டென்று அனைவரும் நினைவு கூரும் அமைப்பு பாரீஸ் கம்பன் கழகம். வருடந்தோறும் செப்டம்பர்மாதங்களில் பாரீஸில் கம்பன் விழா களைகட்டும். இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக கொண்டாட நினைத்திருக்கவேண்டும். நவம்பரில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கம்பன் விழா மேடைகளறிந்த பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போல பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என அமர்க்களபடுத்துகிறார்கள். ஆக இரண்டு நாட்களுக்கு பாரீஸ் வாழ் தமிழர்கள் தமிழ் அமுதைப் பருக நல் வாய்ப்பினை பாரீஸ் கம்பன் கழகம் அருளியிருக்கிறது. சிறப்பு பேச்சாளராக தமிழருவி மணியன் கலந்துகொள்கிறார்.

நாட்கள்: 12 மற்றும் 13-11-2011 (சனி மற்றும் ஞாயிறு) இடம்: La Salle Champ De Foire, Route des Refzniks, 92500- Sarcelles; தொடர்புகட்கு: K. Barathidassan- 01 39 93 17 06

கதையல்ல வரலாறு1-4

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

ஹெஸ், ஹௌஸ்ஷோபெர் சந்திப்பு நடந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. 1941ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஹெஸ் தமது பாதுகாவலர் கேப்டன் கர்லைன் பின்ஷ்(Karlheinz Pintsch)ஐ அழைத்துக்கொண்டு ஆக்ஸ்பூர்க்கிலிருந்த சிறிய விமான தளமொன்றிற்கு வந்தார். அங்கு மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் என்ற பெயரில் யுத்த விமான தயாரிப்பு நிறுவனமொன்று இருந்தது. நிறுவனத்தின் முதலாளி விலி மெஸ்ஸெர்ஸ்மிஷ்ட்டும் ஹெஸ்ஸ¤ம் முதல் உலகப்போரில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்ற வகையில் இருவரும் நெருங்கிய சகாக்கள். அவ்வப்போது நண்பரிடம் இரவல் கேட்டு அவர்களுடைய மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் யுத்த விமானத்தில் ஆக்ஸ்பூர்க் எல்லைப் பகுதிகளில் வானில் பறப்பது வழக்கம். கேட்பவர்களிடம், பறப்பது தம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள உதவுகிறதென்று கூறிவந்தார்.

அப்போதைய அதிநவீன யுத்த விமானமாகக் கருதப்பட்ட ME110 ரகத்தை ஜெர்மன் விமானப்படையில் சேர்த்துக்கொண்டபிறகு முதன்முதலாக அதனை ஓட்டிப்பார்க்க அனுமதிக்கப்பட்டவர்களில் ஹெஸ்ஸ¤ம் ஒருவர். ME110 நட்பு நாடுகளின் படைகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கும் நம்பகமான யுத்த விமானமென்று பெயரெடுத்திருந்தது. ஆனால் விமானத்தின் எரிசக்தி அதிகபடியான நிலப்பரப்பில் தாக்குதலை நடத்த போதுமானதல்ல என்று போர் வல்லுனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அத்தகைய விமர்சனத்தை வைத்தவர்களில் ‘ஹெஸ்’ ஸ¤ம் ஒருவர். ஹெஸ்ஸின் வற்புறுத்தலுக்கிணங்க பின்னர் மற்றொரு எரியெண்ணெய் கொள்கலத்தை ME110 ரக விமானத்தில் சேர்த்தார்கள்.

அன்றைக்கு பிற்பகல் விமான தளத்திற்கு வந்த ஹெஸ் வழக்கத்திற்கு மாறாக கையுடன் துண்மணிகள் வைக்கிற சிறிய பெட்டியொன்றை கொண்டுவந்திருந்தார். தமது பாதுகாவலரிடம்: இண்றைக்கு வெகு நேரம் வானில் பறக்க இருக்கிறேன், எனக் கூறியிருக்கிறார். இரண்டு கடித உறைகளையும் பாதுகாவலரிடம் கொடுத்துள்ளார். இரண்டிலொன்று  பாதுகாவலருக்கும், மற்றொன்று ·ப்யூரெருக்கென்றும் எழுதப்பட்டிருந்தது. அடுத்த நான்கு மணிநேரத்திற்குள் தாம் திரும்பவில்லையெனில் பாதுகாவலர் தனக்கென்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துபார்க்கலாமெனவும், மற்றதை இட்லரிடம் கைப்பட ஒப்படைக்கவேண்டுமெனவும் சொல்லப்பட்டது. பாதுகாவலரை அறிவுறுத்தியபிறகு எஞ்சின் உறுமியது, ஓட்டுனர் இடத்தில் ஹெஸ் அமர்ந்தார், சாவியை ஒருமுறை சுழட்டித் திருப்பினார், அடுத்த சில நொடிகளில் யுத்த விமானம் வானில் பாய்ந்தது. பாதுகாவலர் பின்ஷ் விமானம் வானில் மறையும்வரை காத்திருந்தார். ஒவ்வொரு மணிநேரமும் ஒரு யுகம்போல கழிந்தது. பிற்பகல் கரைந்து, பொழுதும் சாய்ந்தது. ஹெஸ் கூறியிருந்த நான்கு மணி நேர கெடுவும் முடிந்தது. ஹெஸ் திரும்பவில்லை. பாதுகாவலர் இரண்டு கடிதங்களும் பத்திரமாக இருக்கின்றனவா என சட்டை பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டார். தம்முடைய கடித்தத்தைப் பிரித்து பார்ப்பதென தீர்மானித்தார். படித்தவர் திகைத்தார். அதிற் சொல்லப்பட்டிருந்த தகவல்களின் தன்மை அப்படி. அவ்வளவும் கற்பனையாக இருக்குமோவென்ற சந்தேகம். “தாம் இங்கிலாந்து திசைக்காக பயணப்பட்டிருப்பதாகவும், பயனத்தின் நோக்கம் இருநாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதெனவும்”, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடிதத்தின் வரிக¨ளை சரியாகக்கூட பாதுகாவலர் உள்வாங்கிகொள்ளவில்லை. மீண்டும் வானில் எஞ்சின் உறுமல். பின்ஷ் தலையை உயர்த்தி பார்த்தார். ME110போல தெரிந்தது, ஆமாம் அதுதான். ஹெஸ் தானா அல்லது வேறு யாரேனுமா என யோசிப்பதற்குள், விமானம் தரை இறங்கியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே காக்பிட் கடவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவர் ஹெஸ்.

பாதுகாவலர் கையில் திறந்திருந்த கடித உறையை பார்த்த மாத்திரத்தில் என்ன நடந்திருக்குமென ஹெஸ்ஸால் ஊகிக்க முடிந்தது.தமது இல்லத்திற்கு பாதுகாவலரை அழைத்துச் சென்று தமது திட்டத்தையும் அதற்கான காரணங்களையும் பொறுமையாக விவரித்தார். பின்னாளில் ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது ஹாமில்டன் பிரபுவிடமும், கிர்க் பட்ரிக்கிடமும் என்ன கூறினாரோ அதை அப்படியே வரிபிசகாமல் தமது பாதுகாவலரிடம் தெரிவித்தார். ஜெர்மனுக்கு ஆபத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தல்ல, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து என்பது அவர் கூறிய தகவலின் சாரம். இங்கிலாந்திடம் சமாதானமாக போவதால் ஜெர்மனுக்கு என்னென்ன நன்மைகளென்று பட்டியலிட்டார். பிரிட்டிஷாரிடம் சுமுகமான உறவைக் பேணமுடியுமெனில் ரஷ்யாவின் விஷயத்தில் அதன் விருப்பம்போல ஜெர்மன் நடந்துகொள்ள இயலுமென்றார். திட்டத்தை ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க விரும்புவதாகவும், அவர்கள் ஏற்கும்பட்சத்தில் ஆங்கிலேயர் விடயத்தில் ஜெர்மன் தலையிடாதென்ற உத்தரவாதத்தை அவர்களுக்குத் தரப்போவதாகவும் பாதுகாவலரிடம் விளக்கினார்.

தமது எஜமானரின் விளக்கத்தை நம்புவதா கூடாதாவென்று பின்ஷ்க்கு குழப்பம். தலை நிமிர்ந்து ஹெஸ்ஸின் முகத்தைப் பார்த்தார். இம் மனிதர் தாய் நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவரல்ல, அவர் எதைசெய்தாலும் அது நாட்டின் நன்மைகருதிய நடவடிக்கையாக மட்டுமே இருக்கு என மனமார நம்புகிறார். ஹெஸ்ஸின் திட்டம் குறித்து எவரிடமும் வாய் திறப்பதில்லையெனவும் பாதுகாவலர் அன்றைக்கு ஹெஸ்ஸிடம் உறுதியளித்ததாகக் கூறுகிறார்கள்.

தமது பாதுகாவலர் துணையுடன் ஹெஸ் பார்த்த ஒத்திகை நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் வழக்கம்போல பின்ஷ் அலுவலகப்பணியில் முழ்கியிருந்தபோது தொலைபேசி அலறியிருக்கிறது. போனை கையிலெடுத்தார், மறுமுனையில் இவரது எஜமானின் குரல்:

– என்னய்யா தயாராக இருக்கிறாயா? திட்டத்தை இன்றைக்குத்தான் செயல்படுத்தபோகிறேன்- என்கிறார் ஹெஸ்.

அன்றைய தினம் சனிக்கிழமை. தேதியை சரியாக சொல்லவேண்டுமெனில் மே 10, 1941.  கிடைத்த கட்டளைப்படி தனது எஜமானரைத்தேடி ஆக்ஸ்பூர்க் விமானதளத்திற்கு பதட்டத்துடன் வந்தார். விமானக்கூடம் மூடியிருந்தது. அன்றைக்கு விடுமுறை. பூட்டை உடைத்து கதவைத் திறந்தார்கள். யுத்த விமானத்தை  இருவருமாக வெளியில் கொண்டுவந்தனர். தமது பாதுகாவலரிடம் ஹெஸ் இம்முறை இடலருக்கென்று வேறொரு கடிதத்தைக் கொடுத்தார். காக்பிட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் வானில் பறந்தார்.

சென்றமுறைபோலவே ஹெஸ் வானில் மறைந்து நான்கு மணிநேரம் கடந்திருந்தது. ஹெஸ்ஸின் பாதுகாவலருக்கு இம்முறை ஹெஸ் திரும்பமாட்டாரென்று புத்தியில் உறைத்திருக்கவேண்டும், அவசரகதியில் விமான கூடத்திலிருந்து புறப்பட்டார். தாமதிக்காமல் நடந்த சம்பவத்தை ·ப்யூரெருக்குத் தெரிவித்துவிடவேண்டும், இல்லையென்றால் தமக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைப்போல இரவுமுழுக்க பயணம் செய்து இட்லரின் அலுவலகம் இருக்கிற பெர்ஷ்ட்காடென்(Berchtesgaden) வந்து சேர்ந்தார்.

இனி ஹெஸ் விவகாரத்திற்கு வருவோம்.

ஹெஸ் பிரிட்டிஷ் எல்லைக்குள் பிரவேசித்து, அவர்களுடைய கடற்பகுதியில் பறந்தபோது பொழுது சாயவில்லை. பகல் நேரத்தில் ஆங்கிலேயரின் விமான எதிர்ப்பு பீரங்கியிடமிருந்து தப்புவதென்பது அத்தனை சுலபமல்ல என்பதை ஹெஸ் நன்றாகவே அறிவார். அப்படியொரு ஆபத்தை எதற்காக விலைகொடுத்து வாங்குவானேன் என்று அவர் யோசித்திருக்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு இரவு பிறக்கட்டுமென வடக்குக் கடலுக்கு மேலாகச் சுற்றித் திரிந்தார். பிறகு   அதற்கான நேரமும் வந்தது வடக்கு கடற்கரையை நோக்கி விமானத்தைச் செலுத்த தயாரானபோது தமக்குமேலே திடீரென்று மேகங்கள் திரள்வதை எதிர்பார்க்வில்லை. இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தவர் இருநூறுமீட்டருக்கும்  தாழ்வாகப் பறக்கவேண்டியிருந்தது.  அதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயரின் ஸ்பிட்பையர் யுத்த விமானமொன்று இவரது விமானத்தை கண்டுவிட்டது. ME 110 விமானத்தின் பின்னே ஸ்பிட்பயர். இரண்டு விமானங்களில் ME110 ஆற்றலை பலரும் அறிவார்கள். “எனது விமானத்தை ஆங்கிலேயர் விமானம் பின்தொடருகிறது என்றறிந்தமாத்திரத்தில் அதிவேகமாக எனது விமானத்தைச் செலுத்தி இடைவெளியைக்கூட்ட முடிந்ததென்று பின்னர் ஹெஸ் தெரிவித்தார். ஹெஸ் தொடக்கத்தில் ஹாமில்டன் பிரபுவின் மாளிகைக்கு எதிரிலிருந்த பூங்காவில் தரையிறங்க முடிவுசெய்திருந்தார். பின்னர் அம்முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பாதுகாப்பாதென யோசித்திருக்ககூடும் நிலா ஒளியில் கிராமமொன்று தெரிந்தது. அக்கிராமம் Eaglesham ஆக இருக்கலாமென்பது அவருடைய ஊகம். இவரது கணிப்பு சரியென்றால் ஹாமில்டன் பிரபுவின் மாளிகையான Dungavel Housem அங்கிருந்து பக்கம் தான் எனமுடிவுக்கு வந்த மறுகணம், எஞ்சினை நிறுத்திவிட்டு பாராசூட்டில் கீழே குதிக்க நினைத்தார். அப்படி அவர் குதிக்கும்போது ME 110 விமானம் தரையில் மோதி வெடித்து சிதறும், ஆங்கிலேயர்கள் தங்கள் ME 110 ரக விமானத்தின் தயாரிப்பு ரகசியத்தை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையாதென்று நம்பவும் செய்தார்.

நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?  ME 110 விமானத்தை அநாயசமாக கையாண்டிருக்கிறார். மிகதுல்லியமாக கனக்கிட்டு விமானத்தை செலுத்தும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவசர காலத்தில் பார சூட்டை எப்படி கையாளுவதென்ற அனுபவம் அவருக்கு இல்லை, அதுபோன்ற சந்தர்ப்பமும் இதற்குமுன்பு அவருக்கு ஏற்படபில்லை. முதந் முறையாக மட்டுமல்ல, கடைசிமுறையாக குதித்ததும் அன்றுதான்.

(தொடரும்)

 

கதையல்ல வரலாறு1-3

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

கனடாவைப் கைப்பற்றிய கையோடு பிரிட்டனையும் அபகரிக்கவிருக்கிற பேராசை பிடித்த அமெரிக்கர்களின் திட்டத்தை  தெரியுமென்று கூறி ஹெஸ் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையில் இவோன் கிர்க்பட்ரிக் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

– நம்மிரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன்தரக்கூடிய யோசனை என்னிடமுள்ளது. ஆனால் அதன் வெற்றி நீங்கள் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது. இங்கிலாந்து ஜெர்மனுக்குச் சொந்தமான காலனி நாடுகளை அதனிடம் ஒப்படைக்கவேண்டும், அப்படி ஒப்படைப்பீர்களெனில் ஐரோப்பிய அரசியலில் பிரிட்டிஷ் அரசாங்கம் எதையும் செய்யலாம், நாங்கள் தடுக்கப்போவதில்லை, அவ்வாறே எங்கள் ஐரோப்பிய நாட்டாமையில் நீங்களும் குறுக்கிடமாட்டீர்களில்லையா?

கிர்க் பட்ரிக் மிகவும் அமைதியாகத் திருப்பிக்கேட்டார்.

– எனக்கொரு சந்தேகம்?

– என்னது?

– ரஷ்யா இருப்பது ஐரோப்பாவிலா, ஆசியாவிலா?

– இதென்ன கேள்வி, இரண்டிலும் என்றுசொல்வதைக்காட்டிலும் ஆசியா என்பதுதான் பொருத்தமான பதிலாக இருக்கும்

– அப்படியெனில் ஐரோப்பிய விவகாரங்களில் வேண்டப்படுகிற முழுச்சுதந்திரம், ரஷ்யா விவகாரத்தில் தங்களுக்கு வேண்டாம், அப்படித்தானே?

ஹெஸ் முகம் மாறியது. பட்ரிக் மனதிலுள்ள ஐயத்தை உடனடியாக தீர்க்க நினைத்தவர்போல அவருடைய பதிலிருந்தது.

– எங்களுக்கு ரஷ்யாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. பேச்சு வார்த்தை அல்லது யுத்தம் இரண்டில் ஏதாவதொரு வழிமுறையில் அவை பூர்த்திசெய்யப்படவேண்டும். அதுவன்றி வேறு திட்டங்கள் தற்போதைக்கு இல்லை ரஷ்யா மீது உடனடியாக நாங்கள் தாக்குதல் நடத்த இருக்கிறோமென்பதெல்லாம் வதந்தி.

உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்த வகையிலும் மனிதகுலத்திற்கு எதிராக நடத்திய யுத்தமூலமாக இழைத்த குற்றங்களுக்காகவும் ஜெர்மானிய நாஜித் தலமைக்கு எதிராக நடந்த புகழ்பெற்ற நூராம்பெர்க்(Nuremberg) வழக்கின் ஆவணங்களை பரிசீலித்திருந்த பிரெஞ்சு பத்திரிகையாளர் ரெமொன் கர்த்தியே ஒன்றை அவதானித்திருந்தார். அவரது கணிப்பின்படி ஹெஸ்ஸ¤க்கும் பட்ரிக்கிற்கும் இடையிலான உரையாடல் நடந்தது 1941ம் ஆண்டு மேமாதம் 13ந்தேதி அடுத்த இரு தினங்களில் (மேமாதம் 15ந்தேதி) ரஷ்யாவின் மீது படையெடுக்க  ஜெர்மானியர்கள் முடிவெடுத்துவிட்டார்கள், எனவே ரஷ்யா மீதான ஜெர்மானிய படையெடுப்புக்கு உடனடி சாத்தியமில்லை என்று ஹெஸ் கூறியதும் அவற்றை வதந்தியென நிராகரித்திருந்தமையும் உண்மையில்லை என்பது அவரது கணிப்பு

– இத்தாலியைப்பற்றிய தங்கள் அபிப்ராயமென்ன, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – பட்ரிக்

– எனக்குத் தெரியாது.-ஹெஸ்

– இது மிக முக்கியமானது.

– இத்தாலியர்களின் எதிர்பார்ப்புகள் அத்தனை கடுமையானவைகளாக இருக்குமென்று நான் நம்பவில்லை.

– அவற்றுக்கான தகுதிகள் அவர்களுக்கில்லை?

– தாராளமாக இருக்கிறது இல்லையென்று சொல்ல முடியுமா என்ன. அவர்களுக்கு நாங்கள் நிறைய கடமைபட்டுள்ளோம். தவிர 1919ல் ருமேனியர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு உதவ நீங்கள் ஆர்வம் காட்டியது மறந்துபோனதா? அவர்கள் மட்டும் உத்தமர்களா என்ன?

ஹெஸ்ஸ¤ம் இவோன் பட் ரிக்கும் இரண்டே கால் மணிநேரம் உரையாடினார்கள். பட்ரிக் அலுத்துபோனார். இத்தனை நேரம் உட்கார்ந்து இந்த மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தது அதிகமென்று நினைத்திருக்கவேண்டும், எழுந்தார்.

– ஒன்றை முக்கியமாக  உங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்? – மீண்டும் ஹெஸ்.

– எதைப்பற்றி?

-இவ்வளவு நேரம் நான் முன்வைத்த பரிந்துரைகள் நியாயமான முடிவுகளை அடைய வேண்டுமெனில், அது பற்றி விவாதிக்க ஒரு புதிய அரசாங்கமும் தலைவர்களும் வேண்டும். உங்கள் இப்போதையை அரசாங்கம் கூடாது. சர்ச்சிலும் சரி அவரது நண்பர்களும் சரி 1936 லிருந்தே ஜெர்மனுக்கும் இங்கிலாந்துக்குமிடையேயுள்ள அவ்வளவு சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பவர்கள். யுத்த தீர்வை முன்வைத்து காய் நகர்த்தியவர்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நண்பர் இட்லர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்.

மறுநாள் அதற்கும் மறுநாளென்று கிர்க் பட்ரிக் ஹெஸ் சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல்நாள் மனநிலையில் ஹெஸ் இல்லை. இப்போது தமது தகுதியின் அடிப்படையில் சில மரியாதைகளை எதிர்பார்க்கத்தொடங்கினார். அதுவும் தவிர கிர்க் பட்ரிக் ஓர் அதிகாரி என்பதைத்தவிர வேறு தகுதிகளில்லாதாவர். மாறாக ருடோல்ப் ஹெஸ்ஸென்ற தான் ஜெர்மன் அதிபருக்கு நண்பர் மட்டுமல்ல ரை(Reich) அரசாங்கத்தில் மூன்றாவது இடம். அதற்குரிய மரியாதையை ஆங்கிலேயர்கள் கொடுக்கவில்லை, அவரது தகுதிக்கு பிரிட்டன் மன்னரை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும், சாத்தியமில்லையெனில் குறைந்த பட்சம் ஓர் அமைச்சரையாவது கண்ணில் காட்டியிருக்கலாம். மாறாக கண்டவர்களையும் இவரிடத்தில் அனுப்பிவைத்து முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில்சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்கள். யோசித்துப்பார்க்கவும்  எரிச்சலுற்றார். அந்த எரிச்சலில் தமக்கு மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டுமென்றார்; சட்ட ஆலோசர்கள் உதவியும், காரியதரிசிகளின் சேவையும் தமக்குத் தேவைப்படுகிறது ஏற்பாடு செய்யுங்களென்று அதிகாரமாகக் கேட்டார். இதற்கிடையில் லிவர்பூல் அருகில் சிறைவைக்கபட்டிருந்த இரண்டு ஜெர்மன் பிரமுகர்களின் பெயரைக்கூறியவர் மறக்காமல் அவர்களுடைய தண்டனைக் கைதி எண்ணையும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இவ்வளவு களேபரங்களுக்கிடையிலும் அவரது மே 13ந்தேதியிட்ட பிரேரணையில் ஒருசிலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். அதிலொன்று இங்கிலாந்து ஈராக்கைவிட்டு வெளியேற வேண்டுமென்பது.

– ஆனால் ஒன்றுமட்டும் எனக்குத் தெளிவாகவில்லை. ஈராக் ஒன்றும் ஐரோப்பாவில் இல்லையே? – மீண்டும் கிர்க் பட்ரிக்

– ஈராக் நாட்டினர் எங்களுக்காக ஆயுதம் தூக்கியவர்கள். எங்கள் ·ப்யூரெர் நமது நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறபோது இவ்விஷயங்களை தவறாமல் கணக்கிற் கொள்ளவேண்டுமென நினைக்கிறார்.

ஹெஸ் அமெரிக்காவை மறக்கவில்லையென்பதை அவரது உரையாடலின் தொடர்ச்சி தெரிவித்தது. ஜெர்மானியர்களுக்கு அமெரிக்கர்களிடம் கிஞ்சித்தும் பயமில்லை என்றார். மறுபடியும் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல்களால் இங்கிலாந்துக்கு ஏற்படவிருக்கும் பேரழிவினைக்குறித்து பேச ஆரம்பித்தார்.

– நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள், உங்களுக்குள்ள எல்லா தொடர்புகளையும் துண்டிப்பதன்மூலம் போரில் வெற்றிபெறபோவது ஜெர்மன். எங்களிடம் தயார் நிலையிலுள்ள நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு, கட்டிக்கொண்டிருக்கிற நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கெல்லாம் உங்களிடத்திலில்லை. இட்லருக்கும் எதையும் பெரிய அளவில் செய்யவேண்டும், இதுவரை உலகம் கண்டிராத அளவில் எங்கள் அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல்கள் புதுரக போர்விமானங்களின் துணையுடன் தாக்குதலில் இறங்கப்போகின்றன. அதன் விளைவாக கூடிய சீக்கிரம் இங்கிலாந்தின் எல்லா வழிகளும் அடைபடும். அதன் விளைவாக நீங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு சரண் அடைந்தாலும் எங்கள் ·ப்யூரெர் அதை அனுமதிக்கும் திட்டமில்லை. உங்கள் மக்கள் பட்டினிகிடந்து மரணத்தை தழுவும்வரை முற்றுகை தொடரும்.

– பிரிட்டானிய மக்களின் உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை முடக்குவதுதான் யுத்தமெனில், உங்களால் அதை சாதிக்க இயலாது. நீங்கள் நினைப்பதுபோல டன் கணக்கில் எங்களுக்கு பொருட்கள் வேண்டியதில்லை. நாங்கள் கையிறுப்பைவைத்தே கூட உங்களுடன் மோதமுடியும்.

– எங்கள் யுத்த தந்திரம் உங்கள் கற்பனைக்குக்கூட பிடிபடாதது. மிக மோசமான முற்றுகையை வெகு சீக்கிரம் சந்திக்கவிருக்கிறீர்கள். நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டுகப்பல்கள் உதவிக்கு வரகூடுமென்று வைத்துக்கொண்டாலுங்கூட உங்கள் தேவைக்கு காணாது, குறித்துக்கொள்ளுங்கள்

உரையாடலின் தொனிமட்டுமல்ல, ஹெஸ்ஸின் உடல் மொழியும் புதிய பாவங்களை வெளிபடுத்தியது, மேசையை ஓங்கிக் தட்டினார்.

– எனது பயணம் அருமையான சந்தர்பத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம், தவறினால் ஜெர்மன் நாட்டுடன் சமாதானம் காண மறுக்கிறீர்கள் என்று பொருள். உங்களை அழிப்பது ·ப்யூரெர் கடமை, அதன் பிறகு காலத்திற்கும் நீங்கள் அவருக்கு அடங்கிய குடிகள்.

தமது உரையை நிறுத்தி சிறிது மூச்சுவாங்கினார்.

– சொல்ல வேண்டிய அவ்வளவையும் கூறியிருக்கிறேன்.

ஹெஸ்ஸை தற்காலிகமாக தங்க வைத்திருந்த சிறிய அறையின் கதவு மூடப்பட்டது. ஹெஸ் வந்த நோக்கம் வேறு. . இங்கே நடப்பதெதுவும் அவருக்கு உகந்ததாக இல்லை. தனது நாட்டைவிட்டு இவர்களையெல்லாம் நம்பி இவ்வளவுதூரம்   வந்ததே தவறோ என அவர் யோசித்திருக்கக்கூடும்.

வெகுகாலந்தொட்டு அரசியல் மனதிற்கு பிடித்ததுறையாக ஹெஸ்ஸ¤க்கு இருந்துவந்திருக்கிறது. ம்யூனிச் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த காலந்தொட்டே ஹௌஸ்ஷோபர் போன்றவர்களின் அரசியல் சிந்தனைகளில் தீவிர பிடிப்புடன் இருந்தவர். பொருளியல் மாணவர். யுத்தத்தின்போது கவசப்படையில் பணியாற்றி இருக்கிறார். இரண்டுமுறை போரில் படுகாயமுற்று உயிர்பிழைத்தது ஓர் அதிசயமாக நிகழ்ந்தது. அதன் பிறகு பின்பு விமானப்படையில் சேந்து மளமளவென்று உயர் பதவியை எட்டினார். முதல் போரில் ஜெர்மனுக்கு நேர்ந்த தோல்வியை அவரால் சகித்துகொள்ள முடியவில்லை. ஜெர்மன் நாட்டின் இழந்த புகழை மீட்கக்கூடிய ஓர் அதிபரை எங்கனம் உருவாக்கப்போகிறோம்? என்ற ஹெஸ்ஸின் வாக்கியங்கள் இடலர் காதுவரை சென்றவை சோஷலிஸ்டு கட்சியின் நிகழ்வொன்றில் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருந்த ஹெஸ்ஸை ஹிட்லர் முதன்முதலாக சந்திக்கிறார். ஹெஸ் அவரிடம் ஹௌஸ்ஷோபர் சிந்தனைகள் குறித்து உரையாடுகிறார். ‘உயிர்வாழ்க்கையின் வெளி'(Vital space) யென்ற அக்கோட்பாடு பிற்காலத்தில் தன்னை பெரிதும் கொண்டாடிய நபரை அன்றைக்குத்தான் முதன் முதலாகச் சந்தித்தது.

அன்று தொடக்கம் ஹெஸ் இட்லரின் நெருங்கிய சகாவானார். 1933ம் ஆண்டுவரை அவருடைய துணை நிர்வாகியாகவும் அவருடைய அந்தரங்க காரியதரிசியாகவும் பணியாற்றிருக்கிறார். அவரிடம் இட்லர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இட்லரின் எதிரிகளை அழிக்க எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, 1935ம் ஆண்டு யூதர்களுக்கு எதிரான சட்டவரைவுக்கும் சரி ஹெஸ் காரணமாக இருந்திருக்கிறார், அவற்றில் கையொப்பமும் இட்டிருக்கிறார்.  நாளுக்குநாள் ஹெஸ்ஸின் செல்வாக்கு ஆட்சியில் மட்டுமல்ல சோஷலிஸ்டு கட்சியின் நிர்வாகத்திலும் அதிகரித்தது. ஹெஸ்ஸின் மேற்பார்வையிலேயே அநேக சட்டவரைவுகள் கொண்டுவரப்பட்டன. 1938முதல் நாட்டின் ரகசிய அமைச்சகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து யுத்தத்திற்கான திட்டங்களை வகுத்தார். ஜெர்மன் நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமிடையே பகமை வெளிப்படையாக தெரிவந்தபோது  ரை(Reich) பாதுகாப்பு சபையின் ஆறு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். தமது அரசியல் வேதகுருவான ஹௌஸ்ஷோபர் மனைவி ஒரு யூதர் என்று அறியவந்தபோது அவரை வதை முகாமிருந்து காப்பாற்றியவர். அதுபோலவே வதை முகாம்கள் என்று சொல்கிறபோழுது நினைவுக்கு வருகிற புக்கென்வால்ட், ஔஸ்விட்ஷ் விவகாரத்தில் இவருக்குப் பங்கில்லை என்கிறார்கள். குறிப்பாக இட்லர் கோரிங்கிற்கு அடுத்த இடத்தை வழங்கியதன்மூலம் தமது நம்பிக்கைக்குரியவர் ஹெஸ் என்பதை உலகுக்கு அறிவித்திருந்தார்.

‘ஹெஸ்’ஸை அறிந்தவர்கள் அவருடைய இங்கிலாந்து விஜயத்திற்கு வேறொரு காரணத்தை முன் வைக்கிறார்கள்; அது அவரது சொந்த முயற்சியாக இருக்காதென்பது அவர்கள் வாதம். குறிப்பாக ஹெஸ்ஸ¤டன் பழகிய நண்பர்கள், உறவினர்களின் கூற்றுப்படி, சரித்திர வல்லுனர்களை திகைப்பில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு ஹெஸ்ஸின் அபிமானத்திற்குரிய நண்பரும் பேராசிரியருமான கார்ல் ஹௌஸ்ஷோபரிடம் வைத்திருந்த அளவுகடந்த பக்தியை குற்றம் சொல்கிறார்கள்.பின்னவர் ஹெஸ்ஸிடம் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். நமது கதை நாயகரின் பைத்தியக்காரத்தனமான விமான பயணம் மாத்திரமல்ல அவருடைய உயிர்வாழ்க்கையும் கார்ல் ஹௌஸ்ஸ்ஹோபரின்  சிந்தனையை ஒட்டியதாக கடைசிவரை இருந்தது.

கார்ல் ஹௌஸ்ஷோபரை ஓர் அசாதாரண மனிதரென்றே சொல்லவேண்டும். தம்மை சுற்றியிருந்த மனிதர்களிடத்தில், எதையும் தீர்க்கதரிசனத்துடன் கணிக்க தம்மால் முடியும் என்று நம்பவைத்தார். முதல் உலகப்போரின்போது ஒரு நாள் ஹௌஸ் ஷோபர் ஒரு ராணுவ உயர்மட்ட அதிகாரியோடு இரயில் பயணம் செய்யவேண்டியிருந்தது. இரயில் புறப்படவிருந்த சமயம், கடைசி நிமிடத்தில் தமது பயணத்தை இரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் பயணத்தின்போது இரயில் குண்டு வீச்சிற்கு ஆளாகுமென்பதாகும். அவர் கூறியதுபோலவே இரயில் குண்டுவீச்சில் சேதமுற்று நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. இதை ஹெஸ் நேரிடையாகக் கண்டு ஹௌஸ் ஷோபெர் திறனைக் கண்டு பிரம்மித்ததாக, கூறியிருக்கிறார். ஹெஸ் தமது அபிமான பேராசிரியரின் மகனிடமும் நட்பு பாராட்டினார்.  ம்யூனிச் நகரிலிருந்த அந்த வீட்டிற்குச் செல்வதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போதெல்லால் கார்ல் ஹௌஸ்ஷோபர் பிரிட்டனையும் அந்நாட்டின் மக்களையும் சிலாகித்து சொல்வது வழக்கம். ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் கார்ல் ஹௌஸ்ஷோபருடைய கூற்றின்படி ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள். அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் இட்லரிடம் ஜெர்மனும் இங்கிலாந்தும் சேர்ந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு,  ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இட்லர்  பிரிட்டன் சென்று வரவேண்டுமென்கிற யோசனையையும் முன்வைத்தார். 1940ம் ஆண்டு ஹௌஸ்ஷோபர் இங்கிலாந்திடம் ஜெர்மன் சுமுகமான உறவை பேணவேண்டுமென வற்புறுத்தினார். இட்லர் ரஷ்யாவைத் தாக்க  முடிவெடுத்தபோது, ஹௌஸ் ஷோபர், கோரிங், ஹெஸ் ஆகிய மூவரும் ஜெர்மன் அரசு நடத்தவிருக்கும் இருமுனைத் தாக்குதல் என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்குச் சமமென்று தெரிவித்திருந்தார்கள்.

– இருமுனைதாக்குதலென்பதே இல்லை, சுவர்போல அட்லாண்டிக் பெருங்கடல் துணையிருப்பதால் ரஷ்யாவை தரைமட்டமாக்குவதென்பது எளிதில் முடியுமென்ற பதில் இட்லரிடமிருந்து தீர்க்கமாக வந்தது.

பதிலைக்கூறிய இட்லர் கார்ல் ஹௌஸ்ஷோபர் மூவர் அணியின் கோரிக்கையைக்கேட்டு சிரித்திருக்கிறார். இங்கிலாந்துடன் சமாதானமாக போகச் சொல்லும் யோசனையை வரவேற்க கூடிய நேரம் அது அல்லவென்பது இட்லரின் கருத்து, அதுவும் ஜெர்மனியர்களில் கப்பற்படையும், வான்படையும் நவீனப்படுத்தியிருக்கின்ற நேரத்தில். 1940லேயே தாம் போனால் போகிறதென்று சொல்லி இங்கிலாந்துடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அதற்கு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து எவ்வித பதிலுமில்லை என்பதை தமது நண்பர்களுக்கு இட்லர் நினைவூட்டினார்.

1940 ம் ஆண்டு ஆகஸ்டுமாதத்தின் இறுதியில் ஒருநாள் ஹெஸ்ஸ¤ம் பேராசிரியரும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய பேசினார்கள். கூரூன்வால்ட் காட்டில்மட்டும் சுமார் மூன்று மணிநேரத்திற்கு உரையாடல் நீண்டிருக்கிறது. உரையாடலின் கருப்பொருள் பிரிட்டன் மீது ஜெர்மன் திட்டமிட்டுக்கொண்டிருந்த தாக்குதல் பற்றியது. உரையாடலின் சாரம் பொதுவான ஓர் இடத்தில் வைத்து ஜெர்மன் மற்றும் ஆங்கிலேயருக்கிடையேயான யுத்த பதட்டத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது. அதற்கு இரு தரப்பிலும் ஆதவுதரகூடியவர்களின் உதவியை நாடுவது. இங்கிலாந்து தரப்பில் அதற்கு உகந்த நபர் சர் ஐயன் ஹாமில்டன் அதாவது ஏற்கனவே இக்கட்டுரையில் நமக்கு பரிச்சயமான ஹாமில்டன் பிரபு. அவருக்கு கடிதம் எழுத லிஸ்பன் நகரில் வசித்த இவர்களுக்கு நன்கு அறிமுகமான பிரிட்டிஷ் பெண்மணியொருத்தியின் உதவியை நாடுவதென தீர்மானித்தார்கள்.  இது சம்பந்தமாக ஹெஸ், கார்ல் ஹௌஸ்ஸ் ஷோபெர், அவருடையமகன் ஆகிய மூவருக்கிடையே தொடர்ந்து கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அக்கடிதங்களில் அப்பெண்மணியின் இடத்திலோ அல்லது ஹாமில்டன் யோசனையின்படி பொருத்தமான ஓர் இடத்திலோ இருதரப்பிலும் தலா ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்வது குறித்து சற்று விஸ்தாரமாகவோ யோசித்திருக்கிறார்கள். ஆகஸ்டு மாதத்தின் இறுதியில் நடந்துமுடிந்த உரையாடலைத் தொடர்ந்து ஹெஸ் செப்டம்பர்மாதம் 10ந்தேதி கார்ல் ஹௌஸ் ஷோபருக்கு எழுதியிருந்த கடிதம் நமக்கு மிகத்தெளிவாக அவர்களுடையை யோசனையை விளக்குகிறது. அதே மாதத்தில் மேற்கண்ட கடிதத்தின் அடிப்படையில் ‘மிகவும் ரகசியம்’ என்று குறிப்பிட்டு  கார்ல் ஹௌஸ்ஷோபரின் மகன் ஆல்பிரெஷ்ட் ஹௌஸ்ஷோபெர் ஹெஸ்ஸ¤டனான தமது சந்திப்புபற்றி எழுதியிருக்கிறார். ஹெஸ்ஸ¤டைய பயணத்தையும், அவரது ஆழ்மனத்தையும் புரிந்துகொள்ள இக்குறிப்பு உதவுகிறது. அந்த ஆவணத்தில் ஆல்ப்ரெஷ்ட் எழுப்பும் கேள்வி: இங்கிலாந்திற்கும், ஜெர்மனுக்குமிடையே அமைதியை ஏற்படுத்திதருவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளதா?

(தொடரும்)

மொழிவது சுகம்- நவம்பர் -2

பெங்களூரும் திருவாரூரும்

கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த ஒன்றிரண்டு நல்ல காரியங்களுள் அண்ணா நூற்றாண்டு நூலகமுமொன்று. அதைக் குழந்தை மருத்துவத்திற்கு அம்மையார் தாரைவார்த்திருக்கிறார். இது ஏதோ முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழர் நலனிலுமுள்ள அக்கரையால் நடந்ததல்ல வழக்கம்போலவே முன்னாள் முதலமைச்சரின் மீதுள்ள வயிற்ரெரிச்சலால் வந்தது. இருவருக்கும் அப்படியென்ன சொந்த பகைகள் இருக்க முடியுமோ? அண்மைக்கால தி.நகர் விவகாரங்கள் வரை தி.மு.க வுக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் சிறுமை சேர்க்கிற விவகாரங்கள் உண்டு. ஆனால் கருணாநிதி இடைக்கிடை தமிழ்மீதும் தமிழர்மீதும் அவ்வபோது கருணைகாட்டுவார். இந்த அம்மாவிடம் எப்போதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

ஆகா!சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியாயிற்று, மூவர் தூக்குதண்டனை முடிவுக்கு வந்ததென்று நினைத்தோம், உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கு பெப்பே என்றார் தமிழர்களைப்பார்த்து. ஆட்சிக்கு வந்த நாள்முதல் மக்களின்  அடிப்படை பிரச்சினைகளில் அக்கறைகொண்டு செயல்படுவதாக இல்லை அல்லது அதற்கான எந்த அறிகுறிகளுமில்லை. அந்த அம்மா எப்போதும் திருந்தமாட்டார், அப்படித்தான் என்பார்கள். அதில் உண்மையில்லாமலில்லை. அவருக்குக் கோபம் பெங்களூரிடமட்டுமல்ல திருவாரூரிடமும் இருக்கிறது மூர்க்கத்துடனிருக்கிற காவல் தெய்வத்திடம் வரத்தையா எதிர்பார்க்க முடியும்? பிடியுங்கள் சாபம் தமிழர்கள் கெட்டொழிந்து போகக் கடவது!

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு -2011

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -10ல் இவ்வருடம் Carole Martinez என்ற பெண்நாவலாசிரியையின் நாவலான முனகலின் வெளி (Du domaine des Murmures) என்ற நாவலுக்கு  பரிசு கிடைக்க்ககூடுமென எதிர்பார்க்கிறேன் என்பதாக எழுதியிருந்தேன். எனது கணிப்பு தவறிவிட்டது. ஒரு ஓட்டுவித்தியாசத்தில் இவர் நூல் பரிசை இழந்துவிட்டது. கொன்கூர் நேற்று அறிவித்த தேர்வில் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த நாவல் L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்ளது. பிரெஞ்சுக்காரர்களில் காலனியகால ஆட்சியயையும் காலனிகளை நடத்திய விதமும், அம்மக்களின் சுதந்திர உணர்வுகளை நசுக்க எடுத்தமுயற்சிகளையும் நாவல் விவாதிக்கிறது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.அவர் தம்மை ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது தாம் முழு நேர எழுத்தாளர் இல்லையென்ற பொருளில். ஐம்பது வயதில் முதல் நாவலை எழுதியிருந்த ஆசிரியரின் இந்நாவலை எந்த பதிப்பாளரும் பதிப்பிக்க முன்வரவில்லை 17 முறை பதிப்பாளர்களால் நிராகரிக்கபட்டதென்று சொல்கிறார்.

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு பிற இலக்கிய பரிசுகளைபோலவே  விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு இவ்வருடம் இளையதலைமுறை எழுத்தாளர்களில் ஒரு சிலர் அதற்கெதிராக குற்றசாட்டை எழுப்பியுள்ளனர்.  தேர்வுக்குழுவினர் அனைவரும் சராசரியாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் தங்கள் படைப்பை தேர்வு செய்யாமல் போனதற்கு வயதுதான் காரணம் என்கிறார்கள் இளம் எழுத்தாளர்கள். அவர்கள் சொல்வதுபோல பல நல்ல புதிய தலைமுறையினரின் நூல்கள் பரிசீலனை அளவிலேயே நிராகரிக்கபட்டதென்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

பிச்சைபாத்திரம் நண்பர் சுரேஷ்கண்ணனின் வலைப்பூ.

ராயர் காப்பி கிளப்பில் எனக்கு அறிமுகமானவர். இராயர் காப்பி கிளப் பல நல்ல படைப்பாளிகளின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்தது. சுரேஷ் கண்ணனுக்கு நல்ல பார்வையுண்டு. மிக நாசூக்காக ஒரு தேர்ந்தபடைப்பாளியின் மொழியில் சொல்லக்கூடிய ஆற்றல் கண்டு வியந்திருக்கிறேன். இவரது திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கட்டுரைகள் கவனத்தை பெறுபவை. தெய்வத் திருமகள் திரைபடங்குறித்த அவரது சமீபத்திய  கட்டுரையை விரும்பி வாசித்தேன்.

“மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை ‘தமிழின் உலக சினிமா’ என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல்.” (பார்க்க அவரது கட்டுரை  தெய்வத் திருமகன் எனும் இதிகாசம்’)

http://pitchaipathiram.blogspot.com/2011/08/blog-post_22.html

——

கதையல்ல வரலாறு1-2

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ?

                   தொடர்ச்சி                                                           

ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்.  ராயல் ஏர் ·போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஹாமில்டனுக்குச் சந்தேகம், தகவல் தவறானதாக இருக்குமோவென்ற ஐயம். விமானப்படையில் பொறுப்பினை வகித்த அளவில் மெஸெர்ஸ்மிட் 110 ரக விமானத்தின் பயண தூரத்தின் தகுதி எனவென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷாரின் எல்லையைக் கடந்து தனது பறக்கும் தூரத்தை அதிகரித்து ஆபத்தை தேடிக்கொள்வதற்கான முகாந்திரமில்லை என்பதை அவரது விமாநங்களைப் பற்றிய அறிவு தெளிவுபடுத்தியது.

– அப்படியே முடிந்தாலும் ஜெர்மனிக்குத் திரும்ப அதற்கு எரிசக்தி போதாதே,  என்று சொல்லிக்கொண்டார்.

சில நொடிகளுக்குப்பிறகு இரண்டாவது முறையாக தொலைபேசி ஒலிக்கிறது. கையிலெடுத்து தகவலை உள் வாங்கிக்கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப்போனது. வான் குடை உதவியுடன் குதிந்திருந்த ஜெர்மன் ஆசாமி தனது பெயர் ஆல்·ப்ரெட் ஹொர்ன் என்று தெரிவித்துக்கொண்டதாகவும், அவரைச் உடனே சந்திக்க விரும்புவதாகவும் இம்முறை தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவர்கள் கீறியிருந்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பெயரை தனக்குள் அவர் முனுமுனுத்துக்கொண்டபோதிலும் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவரால் வர இயலவில்லை. அப்படியொரு பெயரை இதற்கு முன்பு கேட்டிருந்த ஞாபகமில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது வியப்பினை தந்தது. மறுநாள்காலை கிளாஸ்கோவுக்கு நேரில் செல்வதென்று தீர்மானித்தார். விடிந்தது. திட்டமிட்டதுபோல மறுநாள் கிளாஸ்கோ மருத்துவமனையொன்றில் பிரிட்டிஷ் படைப்பிரிவொன்றின் பலத்தக் காவலுடன் சேர்க்கப்பட்டிருந்த ஜெர்மானிய விமானியை சந்திக்கவும் செய்தார். ஆனால் ஜெர்மன் ஆசாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திபோடுவானென அவர் கிஞ்சித்தும் நினைத்து பார்த்தவரல்ல.

பரஸ்பரம் முகமனுக்குப் பிறகு, ஜெர்மன் ஆசாமி பேசினான்.

– நான் ருடோல்ப் ஹெஸ், என் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீங்க

– ருடோல்ப் ஹெஸ்?

– ம்… மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குதவ வந்திருக்கேன்.

உண்மைதான், ஹாமில்டன் பிரபுவிடம் ஹெஸ்ஸைப் பற்றிய கேள்விஞானங்கள் ஏராளம். ஆனால்  இப்படி இரத்தமும் தசையுமாக  அந்த மனிதரை அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமென கனவு கண்டவரல்ல. எனினும் கண்முன்னே நடப்பதை நம்புவதா? கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ? நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ? என்றெல்லாம் கேள்விகள்கேட்டு தலையிலடித்து கொள்ளாத குறை.

 

ஹாமில்டன் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ருடோல்ப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்நபரை இப்படி யுத்த காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்கநேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாடமுடியுமென்றோ நினைத்துப்பார்த்ததில்லை. இவைகளெல்லாம் கேலிகூத்தென்று மனதிற் தோன்றியது. இருதரப்பிலும் ஒருவர்கூட இதை நம்பமாட்டார்களென்ற அப்போதைய அவரது தீர்மானத்தை பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் பலரும் அப்படியொரு முடிவுக்குத்தான் எவரும் வரமுடியுமென்று எழுதினார்கள். ஹாமில்டன் குழப்பத்திலிருக்க நமது ஜெர்மானிய கதாநாயகனுக்குப் பொறுப்புகள் கூடின. தம்மைப் யாரென்று நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார்.

– மிஸ்டர் ஹாமில்டன் உங்களுக்கு ஹௌஸ்ஷோபரைத் தெரியுமில்லையா? அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உங்கள் தரப்பில் எனது விருப்பங்களை, யுத்தத்தைப் பற்றிய எனது கருத்துக்களை புரிந்துகொள்ளகூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்று அடித்துக்கூறினார். நாமிருவரும் சந்திக்க வேண்டுமென்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23ந்தேதி, உங்களுக்கு கடிதங்கூட போட்டிருந்தாரே, மறந்து விட்டீர்களா என்ன?

– இல்லை. ஆனால் உங்களைச் சந்திப்பதுபற்றிய யோசனை எதையும் அக்கடிதம் தெரிவிக்கவில்லையே!

– கடந்த டிசம்பருக்குப் பிறகு இங்கே வருவதற்கு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். நான்காவது முறைதான் முடிந்தது. கடந்தகால முயற்சிகளின் போது ஒவ்வொரு முறையும் கைவிட நேர்ந்ததற்கு மோசமான வானிலைதான் காரணம். மோசமாக இருந்ததால் திரும்பிப்போக நேர்ந்தது. அடுத்து லிபியா போரில் நீங்கள் வெற்றிபெற்றிருந்த நேரத்தில் உங்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசுவதும் சரியல்ல. ஜெர்மானியர்களான நாங்கள் பயந்துவிட்டோம் அதனாற்தான் சமாதானம் பேசவந்திருக்கிறோமென நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இப்போது வடக்கு ஆப்ரிக்காவில் எங்கள் கை மேலோங்கி இருப்பதுடன், கிரேக்க நாட்டையும் எங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறோம். ஆக உங்களுடன் சமாதானம் பேச இதுதான் நல்ல தருணம். ஜெர்மானிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நான் நேரில் வந்திருப்பதைவைத்து அமைதியை நிலைநாட்டுவதில் எனக்குள்ள அக்கறையையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறேன். ·ப்யூரெர்(இட்லர்), யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாய் இருக்கிறார். போரில் இறுதிவெற்றியைத்தான் கணக்கில்கொள்ளவேண்டும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரலாறு எங்கள் வெற்றியை உறுதிசெய்யும். எனினும் ய்நாம் யோசிக்கவேண்டும். தேவையின்றி உயிரிழப்பு எதற்கு. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்.

ஹாமில்டன் பிரபுவுக்கு குழப்பம் நீங்கியிருந்தது. எதிரே உட்கார்ந்திருப்பவனை நம்பத்தான் வேண்டும். கார்ல் ஹௌஷோபெர் என்ற மந்திரச் சொல் அவர் நினைவுப்பெட்டகத்தைச் சட்டென்று திறந்தது. கடந்த கால காட்சி கண்முன்னே விரிந்தது. 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம், உண்மையாகவே அவர் பெயருக்குப் பிரத்தியேக கடிதமொன்று வந்திருந்து.  ஹௌஷோபெர் என்ற ஜெர்மானிய ராணுவ ஜெனரல் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு எழுதிய ஞாபகம், வேறு குறிப்பிட்டுச்சொல்லுபடி அக்கடிதத்தில் எதுவுமில்லை. ஆமில்டன் ஹௌஷோபெர் மகனை 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில்¢ல் சந்தித்திருந்தார். அக்கடிதத்தை தனக்கு மேலே உள்ளவர்களிடம் அனுப்பிவைத்தார். அத்துடன் எல்லாம் முடிந்தது. அச்சம்பவத்தைச் சுத்தமாக அதன்பின்  மறந்திருந்தார். ஆக ஹெஸ் வந்திருப்பற்கு காரணமிருக்கிறது, நம்பத்தான் வேண்டும். அதிலும் இது ஹௌஷோபெர் சம்பந்தப்பட்ட விஷயம். மனிதர் சாதாரண ஆளல்ல ”Lebensraum” (வாழ்வாதாரம்),1 என்ற கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர், பின்னாளில்  இட்லரின் அபிமானத்தைப் பெற்று நாஜிப்படையினர் பிற நாடுகள்மீது படையெடுக்க வழிவகுத்தக் கொள்கை. ஹௌஷோபெர் அறிவு ஜீவியுங்கூட. வெர்சாய் உடன்படிக்கைக்கு மாறாக ஜெர்மானிய எல்லைகளை விரிவுபடுத்த இட்லர் தீர்மானித்தபோது கார்ல் ஹௌஷோபெர் சிந்தனைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஹௌஷோபெர் தகவலோடு வந்திருப்பது உண்மையாவென்று அறிவதற்குமுன்னால், ஏதிரே அமர்ந்திருக்கும் நபர் ஜெர்மானிய ராணுவ அதிகாரி ருடோல்ப் ஹெஸ்தானா என்று நீருபிக்கப்படவேண்டும். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது. வந்திருந்த ஆசாயின் பேச்சில் அதிகாரத்தின் வாள்வீச்சுகளை நிறையவே ஆமில்டன் உணர்ந்தார்.

– அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்புவகிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, அமைதியை திரும்பக்கொண்டுவருவது குறித்த யோசனைக்குத் தக்க பதிலை நீங்கள் சொல்லவேண்டும்.

– போர் தொடங்கியதிலிருந்து இங்கே இவர்தான் அவர்தானில்லை, பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள்.

– இனி நம் இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தமென்று ஒன்று வரக்கூடாது என்பதுதான் இட்லரின் எதிர்பார்ப்பு. அதற்கு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்.

– எப்படி?

– முதலாவது ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடென்று தலையெடுக்கும் எந்த நாட்டையும் எதிர்ப்பதென்கிற தமது புளித்துப்போன கொள்கையை பிரிட்டன் கைகழுவவேண்டும்.

– இப்போது சமாதானமாகப் போனாலும், வருங்காலத்திலும் நாம் சமாதானமாக வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

– ஏன்? எதற்காக நமக்குள்ள யுத்தம் வருமென்று சந்தேகிக்கறீங்க?

– இதை முன்பே உணர்ந்திருக்கவேண்டும். நமக்குள் பகமையை வளர்த்தாயிற்று. அமைதியை விரும்பிய எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம், இந்த நிலையில் எந்தவிதமான ஒப்பந்தம் இனி உடனடியாக அமைதியை நிலைநாட்ட உதவுமென நினைக்கிறீங்க.

ஹெஸ் யோசிப்பதுபோல இருந்தது அல்லது ஆமில்ட்டனின் ஆங்கிலம் விளங்கியதாவென்று தெரியவில்லை. தாம் சொல்லவந்ததை எதிராளிக்குப் புரியவைக்கும் அளவிற்கு இருந்த ஜெர்மானிய அதிகாரி, பிரிட்டிஷ்காரரின் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளத் தடுமாறினார். அவசியமென்றால் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்யட்டுமாவென்று ஹாமில்டன் கேட்க, செய்யுங்கள் என்பதுபோல தலையாட்டினார். ஏற்பாடு செய்யப்பட்டது.

– தவிர, இவ் விஷயத்தில் அதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியவைகளென சில உள்ளன. ஆயுதமெதுமின்றி, தன்னிச்சையாக நான் வந்திருப்பதை பிரிட்டிஷ் மன்னர் ஏற்கும்படி உணர்த்தவேண்டும், அடுத்து ஜூரிச்சிலிருக்கும் எனது குடும்ப முகவரிக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். தவிர பத்திரிகையாளர்களுக்கு எனது வருகைக் குறித்து எவ்வித தகவலும் இப்போதைக்குக் கசியக்கூடாது.

– மன்னிக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க இயலாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை, என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர் காலதமதமின்றி தமது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்த பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்குகளில்லை. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலராகவிருந்த சர் அலெக்ஸாண்டர் கடொகார் என்பரிடம் தகவலைக் கொண்டுபோக நினைத்தார். பலதடவை முயற்சி செய்து கடைசியில் அலெக்ஸாண்டரின் தனிச்செயலர் கிடைத்தார். அவரிடம் மிக முக்கியமானதும் அவசரமானதுமான ஒரு பிரச்சினைக்கு அலெக்ஸாண்டரிடம் பேசவேண்டுமென்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவருடைய வேண்டுதலை ஒருவரும் மதிக்கவில்லை. முக்கிய பணிகளன்றி வேறு காரணங்களுக்காக வெளிவிவகாரதுறை துணை செயலரிடம் பேசவியலாதென்று அமைச்சகத்தின் தனிச் செயலர் கறாராகக் கூறிவிட்டார். வேண்டுமானால் பத்து நாளைக்குப் பிறகு ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்பு அவரைச் சந்திக்க இயலாது என்பது அவரது பதில்.

ஹாமில்டனுக்குப் பொறுமையில்லை. அங்கே இங்கேயென்று தொடர்புகொண்டு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து பொறுமையாக விளக்கி ஒருவழியாக வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தை நெருங்க முடிந்தது. பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் அலுவலகம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்; பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. தமது அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு பிறபகல் நார்த்ஹோ¡ல்ட் என்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரிடம் அதிகாரி கொடுத்த முத்திரையிட்ட ரகசிய உறையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருக்கும் கிட்லிங்க்டன் வருமாறு சொல்லப்பட்டிருந்தது. தமது வார இறுதியைக் கழிப்பதற்கென்று பிரிட்டிஷ் பிரதமர் டிஷ்லிபார்க்கை சேர்ந்த மாளிகைக்கு வந்திருந்தார். ஆகக் கிட்லிங்டனிலிருந்து வேறொரு காரில் டிஷ்லி பார்க்கிற்கு ஆமில்டன் அழைத்துச் செல்லப்பட்டார். டிஷ்லிபார்க்கைக் கார் அடைந்தது. இரண்டாயிரம் ஹெக்டார் கொண்ட நிலப்பரப்பு. பிரமுகர்களை வரவேற்பதற்கென்று மாத்திரம் ஏழு விசாலமான கூடங்கள். இருபத்து நான்கு படுக்கை அறைகள். பத்து குளியல் அறைகள், 30 காட்டேஜ்களென்று வால்ட்டர் ஸ்காட்டால் வர்ணிக்கபட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய மாளிகை.

உள்ளே நுழைந்ததுமிருந்த கூடத்திற் பொறுப்பிலிருந்த பெண்செயலாளர் தொலைபேசியில் தெரிவித்துக்கொண்டிருந்த செய்தி, நாடு இதுவரை காணாத போர்த்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறதென்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடகூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆட்களுக்கும் பற்றாகுறை. ஒரே நேரத்தில் பல முனை தாக்குதகள். ஹாமில்டனை சர்ச்சிலிடம் அழைத்துபோனபோது, இரவு உணவை முடித்திருந்தார்.

– சொல்லுங்க, இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உங்களுக்கென்ன என்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அப்படியென்ன தலைபோகிற அவசரம்.

– மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்டர்- அதை நான் உங்கள் உதவியாளர்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. நாமிருவரும் தனியே பேசவேண்டிய தகவல்.

சர்ச்சில் சுற்றியிருந்த மனிதர்களைப்பார்த்தார், புரிந்துகொண்டவர்களைபோல அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். வான் வெளியைக் கவனித்துக்கொண்ட சர் ஆர்ச்சி பால்ட் சென்கிளேரை உரையாடலில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஹாமில்டன் நடந்ததனைத்தையும் விளக்காமாக பிரதமரிடம் தெரிவித்தார். கடைசியில், ஜெர்மனிய விமான அதிகாரியின் புகைப்படமொன்றையும் பிரதமரிடம் காணபித்தார். உண்மைதான் வந்திருக்கிற ஆள் சாதாரண நபரல்ல, இட்லருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மன் அதிகாரக் கட்டிலில் இருக்கும் ஹெஸ் என்பவர்தான், சந்தேகமில்லை. இப்பிரச்சினையில் தனது கருத்தென்று எதையும் சொல்லாதது ஆமில்டனுக்கு ஆச்சரியம். பின்னர் ஒரு முறை இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமில்டன், ‘ ஏதோ நான் உளறுகிறேன் என்பதைப் போல அன்றைய தினம் சர்ச்சிலுடைய பார்வை இருந்தது.’ என்று கூறுகிறார்.

– நல்லது, ஹெஸ் பற்றிய பிரச்சினையை இப்போதைக்கு எடுக்கவேண்டாம். மார்க்ஸ் சகோதரர்கள்(2) பார்க்க போகணும்.

சர்ச்சில் குணத்தை அறிந்தவர்களுக்கு, அவரது நடத்தையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. படம் திரையிடப்படவிருந்த கூடத்திற்கு சர்ச்சிலும் ஆமில்டனும் பிறரும் வந்தார்கள். இருக்கையில் உட்கார்ந்த மறுகணம் ஆமில்டனுக்கு நல்ல உறக்கம். விழித்தபோது நல்லிரவு கடந்திருந்தது. திரைப்படமும் முடிந்திருந்தது. திரைப்படம் சர்ச்சிலுக்கு அன்றைய பிரச்சினைகளிடமிருந்து சற்றுநேரம் விடுபட உதவியிருக்கவேண்டும். சற்று முன்புவரை அவரிடமிருந்த சோர்வுகள் இப்போதில்லை. ஹாமில்டனிடம், ஜெர்மானிய அதிகாரி ஹெஸ்குறித்து இரண்டு மணிநேர உரையாடலை சர்ச்சில் நடத்தினார். இன்னதென்றில்லை பல கேள்விகள், கற்பனைக்கெட்டாத கேள்விகள். அவ்வளவிற்கும் பொறுமையாக முடிந்த அளவு தமக்குத் தெரிந்த தகவல்களைப் பதிலாக ஆமில்டன் கூறினார். அடுத்து சர்ச்சில் இப்பிரச்சினையில் ஹாமில்டன் கருத்தென்ன என்பதையும் அக்கறையுடன் கேட்டார்.

– ஹெஸ்தானா? நன்றாகத் தெரியுமா?

 

– அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஹௌஷோபெர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-ம் அப்போ பழத்தில் புழு வந்து சேர்ந்ததுபோல- சர்ச்சில் முனுமுனுக்கிறார்.

மறுசாள் காலை சர்ச்சில், ஹாமில்டன் பிரபு, அதிகாரிகளென்று ஒரு சிறுகுழு இலண்டன் புறப்பட்டது. பத்துமணிக்கெல்லாம் 10, டௌனிங் தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குத் தகவல் போயிற்று. நண்பகல் சர் அலெக்ஸாண்டர் கடோகர், இவான் கிர்க்பட்றிக்கை தொலைபேசியில் பிடித்தார், உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு வரும்படி கட்டளை பிறந்தது. கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குனராக பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினின் இருந்திருக்கிறார். நாஜி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தமது பணிக்காரணமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக அவருக்கு ‘ஹெஸ்’ ஸ¤ம் அறிமுகமாகியிருந்தார். ஹெஸ்ஸை சந்திக்குபடி கிர்க்பட்றிக் கேட்டுக்கொள்ளபட்டார்.

– உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா?

– நிச்சயமா, -கிர்க்பட்றிக்.

கிர்க் பட்றிக்கிற்கும், ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஓன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரகூடநேரமில்லை. தொலைபேசி மணி, மறுமுனை குரல்

– ஜெர்மன் வானொலியில் ஹெஸ் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவரை உடனடியாக நீங்கள் இருவரும் சென்று பார்க்கவேண்டும்.

– அவர் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனை பக்கத்திலில்லை.

– என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, உடனடியாக உங்கள் அறிக்கை எங்கள் கைக்கு வந்தாக வேண்டும்.

ஆமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தபோது நல்லிரவுக்கும் மேல் ஆகியிருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிற எல்லா நோயாளிகளையும் போலவே பைஜாமாவுடன் இரும்பு கட்டிலொன்றில் ருடோல்ப் ஹெஸ் படுத்திருந்தார். கிர்க்பாட்றிக்கை பொறுத்தவரை ருடோல்ப் ஹெஸ்போன்றவர்களை எப்பொழுதுமே ஆடம்பரமும் அதிகாரமும் கலந்த சூழலில் பார்த்து பழகியிருந்தார். “ஹெஸ்ஸ¤டன் பொருந்தாத எளிமையும் அமைதியும் நிலவிய மருத்துவமனையின் சூழலை ஏற்றுக்கொள்ள தடுமாறினேன்”, பின்னர் தெரிவித்திருந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதிலும் ஜெர்மன் நாட்டு அதிகார மையத்தின் ஆளுமை தற்போதைக்கு இங்கிலாந்தில் கைதி. “உறக்கத்திலிருந்த அந்த மனிதர் எழுப்பப்பட்டதுமே என்னை யாரென்று புரிந்துகொண்டார்” என்றார் கிர்க்பட்றிக்.

ஆமில்டனுக்கும், கிர்க்பட்றிக் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. கைதியருகே அமர்ந்தார்கள். ஹெஸ் பத்திரமாக தம்வசம் வைத்திருந்த ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பாரென நினைக்கிறீர்கள் 90 நிமிடம், ஒன்றரை மணிநேரம் இட்லர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெல்லாம் வருத்தங்கள். ஆமில்டனோ, கிர்க்பட்றிக்கோ இடையில் குறுக்கிடவில்லை. அமைதியாக தங்கள் வியப்பினைமுகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேட்டபடி  இருந்ததனர். இடையில் அவசரமாக தொலைபேசி. கிர்க் பத்ரிக்கை அழைப்பதாக செய்தி.

– என்ன நடக்கிறது சந்தித்தீர்களா இல்லையா?

– சந்தித்தோம். மனிதர் ஹெஸ் என்பது உறுதி. சந்தேகமேயில்லை

– அவர் முடிவாக என்னதான் சொல்லவருகிறார்?

– கடந்த ஒன்றரை மணிநேரமா நாங்க அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் முடிவை எட்டவில்லை.

மீண்டும் கிர்க்பத்ரிக் ஹெஸ் இருந்த அறைக்குத் திரும்பினார். இம்முறை ஹெஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஏழாம் எட்வர்டை பற்றிய நூலொன்றை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக வாசித்ததாகவும், நேர்மையாக சார்பற்று எழுதப்பட்டிருந்த அந்நூல் அவரது மனமாற்றத்திற்குக் காரணமென்றும் கூறினார். அடுத்தடுத்து இங்கிலாந்து செய்யும் தவறுகளே ஐரோப்பிய பிரச்சினைகள்அனைத்துக்கும் காரணமென்றார்: 1904லிருந்தே இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. 1914ல் தொடங்கிய யுத்தத்திற்கு இங்கிலாந்துதான் காரணம், ஜெர்மனல்ல. 1939ம் ஆண்டு இங்கிலாந்து மாத்திரம் போலந்து நாட்டை ஜெர்மனுக்கு எதிராக தூண்டாடாமல் இருந்தால், அவர்கள் தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டிருப்பார்கள். எனவே இரண்டு யுத்தங்களுக்குமே இங்கிலாந்துதான் காரணமென்று இட்லர் நினைப்பதாக ஹெஸ் கூறினார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்தத்தில் தோற்பது நிச்சயம். எங்கள் வசமிருக்கிற விமானங்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அமெரிக்கா, இங்கிலாந்து என சேர்ந்துவந்தாலும் ஈடு செய்யமுடியாது. எங்களிடமுள்ள பயிற்சிபெற்ற விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகம். இப்போதைக்கு விமானப் படை பலத்தில் எங்களை வெல்லும் நிலையில் நீங்களில்லை. எனினும் இட்லர் பொறுமை காத்தார். 1940ல் ஜெர்மன் எல்லைக்குள் நீங்கள் விமானப்படை தாக்குதலைத் தொடங்கியபொழுது ஓரிரு நாட்களில் நிறுத்திக் கொள்வீர்களென நினைத்தார். தவிரவும் இட்லருக்கு பிரிட்டிஷ் புராதன மற்றும் கலாச்சாரச்சின்னங்களை மீது பற்றுதலுண்டு. பதில்தாக்குதலைத் தொடுக்க பல வாரங்கள் நாங்கள் காத்திருந்ததையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. எங்கள் கப்பல் படை வலிமையும் இளப்பமானதல்ல. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மன் கப்பல் கட்டுந்தளங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்களில் உங்கள் நாட்டிற்கான அனைத்து கடல்வழிகளும் அடைக்கப்படும். என்ன செய்யபோகிறீர்கள். ஆனால் ஜெர்மனில் நிலைமைவேறு. உணவுப் பொருள்களென்றாலும், அத்தியாவசியப் பொருள்களென்றாலும் கணிசமாக சேமிப்பில் இருக்கின்றன. உள்நாட்டில் திட்டமிட்டு உற்பத்தியிருப்பதோடு, எங்கள் ஆக்ரமிப்பில் உள்ள நாடுகளிலிருந்தும் கொண்டுவரபட்ட பொருள்கள் கையிருப்பில் உள்ளன. அடுத்து ஜெர்மன் மக்களும் தங்கள் தலைவனை முழுமையாக நம்புகிறார்கள். ஆக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் கை ஓங்கியிருக்கிறது.

– பிறகு எதற்காக இங்கே வந்தீர்கள்.

– சொல்கிறேன். போரினால் என்ன லாபம் சொல்லுகுங்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்பலியையும், எளிதில் சீரமைப்பபடமுடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம். நான் இங்கே வந்திருப்பது எங்கள் ·ப்யூரெருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாக போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர இட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்துமீது எவ்வித தப்பான எண்ணமுமில்லை. உலகமனைத்தையும் ஜெர்மன் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணமெல்லாம் பலரும் நினைப்பதுபோல எங்களுக்கில்லை. எங்கள் ஆர்வமனைத்தும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவின் நலன்களன்றி வேறு கனவுகளில்லை. குறிப்பாக நாளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு வீழ்ச்சியெனில் முதலில் வருந்துவது அவராகத்தானிருக்கும்.

(தொடரும்)

 

—————————————————————

1. http://en.wikipedia.org/wiki/Lebensraum

 

2. Marx Brothers –  – ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க சகோதர்கள் நடிப்பில் வெளிவந்த திரைபடங்கள் நகைச்சுவைக்குப் பெயர்பெற்றவை.

 

 

 

கதையல்ல வரலாறு 1-1

“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங்,  -பிரெஞ்சு வரலாற்றாசிரியர்

வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் மனைவி மீது நம்பிக்கைக்கொள்வதுபோல அல்லது மனைவி தன் கணவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒப்பானது அது. சந்தேகித்தால் வரலாற்றையும் மூக்கைப்பிடித்துகொண்டு வாசிக்கவேண்டியிருக்கும். தவிர இன்னொன்றையும் மறந்துவிடமுடியாது, எதையும் அறிவுகொண்டு தீர்மானிக்கும் இனம் மனித இனமென்றாலும், அந்த அறிவையும் புலன்களே பெரும்பாலும் வழி நடத்துகின்றன. அறிவு ஜீவிக்கவேண்டுமெனில் புலன்களின் அவாக்களை பூர்த்திசெய்யும் நிர்ப்பந்தமுமிருக்கிறது, எனவே வரலாற்று உண்மைகள் என எழுதபட்டபோதிலும் வரலாறெல்லாம் உண்மைகளா என்றால் இல்லை. ஒன்றிரண்டு விழுக்காடுகள் திரித்தும், உண்மையை மறைத்தும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. செஞ்சியைப் பற்றி நாவலொன்று எழுதுவதற்கான தகவல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தேடிச் சேகரித்து வருகிறேன். கடந்தவருடம் அதன் ஓர் அங்கமாக பாரீஸிலுள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்திற்கு சென்றபோது அந்த ஒன்றிரண்டு விழுக்காடுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நண்பரொருவரின் புதிய இதழொன்றில் இத்தொடரை எழுதவும் விரும்பினேன். என்ன காரணத்தாலோ அவ்விதழ் முதல் இதழிலேயே முடங்கிப்போனது. பல மாதங்களுக்குப் பின்னர் செஞ்சியைப்பற்றிய நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் அத்தொடரை எழுத விரும்பினேன்.

நாகரத்தினம் கிருஷ்ணா

 1. ருடல்·ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன்

 11-5- 1941. தேதியைக்கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி. பெஷ்ட்ஸ்காடன் ஆல்ப்ஸ்மலையின் மார்பில் வாய்திறந்திருந்த ஓர் அழகு சிற்றூர். வசந்தகாலத்திற்கென்றே பிரத்தியேக கவனமெடுத்து தகிக்கும்  சூரியனால் பொன்முலாம் பூசப்பட்ட ஆல்ப்ஸ் ஜொலிக்கிறது. நமக்கு ஆல்ப்ஸ் மலையோ, அதன் அழகோ முக்கியத்துவமல்ல புனைகதையெனில் ஓர் அரைபக்கத்தை ஆல்ப்ஸ் மலைக்காக மட்டுமே ஒதுக்க முடியும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும்  அவ்விடம் அசாதாரணமானது. அன்றைய தேதியில் காற்றுகூட அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது.  பெரிய கூடம். ஐரோப்பாவின் மத்தியிலுள்ள பிற பிரதேசங்களைப்போலவே மரங்களின் அவ்வளவு உபயோகத்தையும் செவ்வனே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விசாலமான கூடம்; விலையுயர்ந்த சிவப்பு நிற சலவைக் கற்கள் பதித்த தரை; அதற்கு அழகு சேர்த்ததுபோல சாதுவாக தரையிற் கிடந்த விலைமதிப்பற்ற இரத்தின கம்பளம். ஆகஅந்தக் கூடமும், அதன் எழிலங்காரமும், விலை மதிப்பற்ற இரத்தின கம்பளமும் இடத்தின் சொந்தந்தக்காரர்களையும் புழங்கும் மனிதர்களையும் அவர்களின் தராதரத்தையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவலாம் .  உங்கள் ஊகத்தை உறுதிபடுத்த மேலும் சிலபொருட்கள்: நீள்சதுர மேசையொன்று அதன் மீது அவ்வப்போது அந்நபரின் கைபட்டு சுழலும் பூகோள உருண்டை.. நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரை தெரிகிறதா? உலகனைத்தையும் கட்டி ஆளவேண்டுமென கனவுகண்ட ·பூரெர்: தலைவன், வழிநடத்துபவன் –  தேவ பாஷையில் சொல்லவேண்டுமெனில் அசுரன். அடோல்ப் இட்லர்

உறையிலிருந்த கண்ணாடியை எடுத்தணிந்த அடோல்·ப் இட்லர் உறையிலிருந்த கடிதத்தை எடுத்த வாசிக்கலானார். எதிரில் எந்த நேரமும் தமது உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற குலை நடுக்கத்தில் ருடல்·ப் ஹெஸ்ஸின் முதன்மைப் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸ் பிண்ச் (Karlheinz Pintsch). ருடல்·ப் ஹெஸ்(Rudolf Hess). நாசிஸ ஜெர்மனியின் மூன்றாவது முக்கிய பிரதிநிதி. அடோல்·ப் இ¢ட்லரின் உயிர்த் தோழன். நம்மவர்களை கேட்டால் விதிப்படிதான் நடக்குமென்பார்கள், அதற்கான சாத்தியங்கள் பிறருக்கு எப்படியோ. ருடோல்ப் ஹெஸ்ஸை அறிந்தவர்கள் விதி வலியதென துண்டைப்போட்டு தாண்டுவார்கள். இரண்டாவது உலகப்போரை நிறுத்துவதற்காக தமது சுயமான முடிவின்படி இங்கிலாந்திற்கு யுத்த விமான மொன்றில் பறந்துசென்றுள்ளதாக தெரிவித்துக்கொண்ட அக்கடிதம், “எனது இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான  சாத்தியங்கள் குறைவு, பலனில்லாமலும் போகலாம் என்பதை அறிந்தே இருக்கிறேன், விதி எனக்கெதிராக ஒருவேளை இருந்தால் அதன் விளைவுகள் ஜெர்மன் நாட்டுக்கோ, உங்களுக்கோ பாதகமாக இருக்ககூடாது என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று மறுக்கவோ அல்லது என்னை ஒரு பைத்தியக்காரனென விமர்சனம் செய்யவோ…”  தொடர்ந்து கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த வரிகளை முழுவதுமாக இறுக்கமான முகத்துடன் இட்லர் வாசித்து முடித்தார்.

சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் தமது வலதுகைபோலிருந்த ஹெஸ், பிரிட்டனுடன் சமாதானம் பேசலாம் என்று சென்றிருப்பதை அறிந்த இட்லரின் உண்மையான மனநிலையை விளங்கிகொள்வதில் நாஜி அரசாங்கத்தின் பிற தலைவர்களுக்கே மிகவும் கடினமாக இருந்தது. மேசையிலிருந்த அழைப்பு மணியை பலம்கொண்டமட்டும் தட்டினார், அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரது அலுவலகம் களேபரத்தில் மூழ்கியது. ரைஷ்மார்ஷல் (Reichmarschall)- தலைமைத் ராணுவ தளபதி- கோரிங் (Goering) என்பவரையும், வெளிவிவகார அமைச்சர் யோவாரின் வொன் ரீபந்த்ரோப்பையும் (Joachin von Ribbentrop) உடனே தம்மை வந்து பார்க்க ஏற்பாடு செய்யும்படி தமது பாதுகாவலர் ஒருவரிடம் ஆணை பிறப்பித்தார். இத்தனை களேபரத்திற்கிடையிலும், அடோல்ப் இட்லர் கோபமின்றி அமைதியாக இயங்கியது ஹெஸ் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸை வியப்பிலாழ்த்தியது. உடனடியாக தனது தலைக்கு ஆபத்தில்லை என்று எண்ணிக்கொண்டார். இட்லரின் ஒருசில கேள்விகளுக்கு அவரிடம் பதில்களிருந்தன. முதல் நாள் மாலை ஆறுமணி பத்து நிமிட அளவில் அவுஸ்பூர் என்ற ஊரிலிருந்து ஸ்காட்லாந்திற்கு அவர் பறந்து சென்றதையும், அங்கு ஆமில்ட்டன் பிரபுவை சந்திப்பதென்ற அவரது நோக்கத்தையும் கார்ல்ஹைன்ஸின் சுருக்கமான பதிலிருந்து ·பூரெர் பெற முடிந்த தகவல்கள்.

அன்றையதினம் அடுத்துவந்த சந்தர்ப்பங்களில் அடோல்ப் இட்லரின் குணம் வேறாக இருந்தது. செய்தியை அறிந்தபோது இருந்த இட்லர் வேறு என்பதற்கொப்ப  பிற சம்பவங்கள் அமைந்தன. தளபதி கேத்தெல் (Keitel) என்பவரிடம் இட்லர், ஹெஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றாக மறுத்தார், அது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றார். 1946ம் ஆண்டு நூராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி குற்றவாளிகளைக்குறித்த வழக்கு விசாரணையின்போது சம்பவத்தை நினௌகூர்ந்த கேத்தெல், “அன்றைக்கு ·பூரெரை அவருடைய மிகப்பெரிய குடியிருப்பில் சந்தித்தது நினைவிருக்கிறது, கால்களை எட்டிவைத்து நடந்தபடியிருந்தார். அவரது சுட்டுவிரல்முனை நெற்றிப்பொட்டிலிருந்தது. இப்படியொரு காரியத்தைச் செய்ய அந்த ஆளுக்கு(‘ஹெஸ்ஸ¤க்கு) பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். அவரது மூளைக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. தனது நடவடிக்கைக் குறித்து நமக்குத் தெரிவித்திருக்கும் கடிதத்தினைவைத்து அப்படியொரு முடிவிற்குதான் என்னால் வரமுடிகிறது என்று சொன்னதை இன்னமும் நான் மறக்கவில்லை”, என்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பங்களில் இன்றளவும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிர் நாஜி ஜெர்மனியின் தலைமை பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பின்வாசல்வழியாக எதிரி நாட்டில் இறங்கியது. அப்படிச்சென்றவர் ஏதோ நாஜி ஜெர்மனியின் கெஸ்ட்டாப்போவால் தேடிக் கைதுசெய்யப்படவேண்டியவர்களில் ஒருவருமல்ல. கடிதத்தை முதலில் பார்த்தபோது இட்லர் நடந்துகொண்டவிதத்திற்கும் பின்னர் அவர் நடந்துகொண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடோல்·ப் இட்லரின் நெருங்கிய சகாக்களில் ஒருவர், போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி தன்னிச்சையாக ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துவருகிறேன் எனப் புறப்பட்டுப்போகமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. நடந்ததெதுவும் எனக்குத் தெரியாதென்ற இட்லரின் சொற்களை எந்த அளவிற்கு நம்புவது? பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம்  நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்ன?அவர் மனைவி என்ன சொல்கிறார்? ·பூரெர் சுற்றியிருந்தவர்களில் குறிப்பாக கேப்டன் பிண்ச், பேராசிரியர் கார்ல் ஹௌஸ்ஷோ·பர் அவரது மகன், ஹெஸ் பயணித்த மெஸ்ஸெர்ஷ்மித் விமானத்தை உருவாக்கியவர் ஆகியோரின் கருத்து இறுதியில் ஆங்கிலேயர்கள் பங்களிப்பென்று அனைத்தையும் சார்பற்று பார்க்கவேண்டியிருக்கிறது.

*                                  *                                  *                                       *

டேவிட் மக் லீன் என்ற விவசாயிக்கு அன்றையதினம் வரலாற்றில் தனது பெயரும் போகிறபோக்கிலே குறிப்பிடப் படுவதற்கான வாய்ப்பு அமையப்போகிறது என்பதை உணராமலேயே வழக்கம்போல உறங்குவதற்காக தனது அறைக்குத் திரும்பும் நேரம். விமானமொன்றின் எந்திர சத்தம் வெகு அண்மையில்கேட்கவே திகைத்து நின்றான். காரைபூசிய ஆவனது வீடு பூகம்பத்திற்கு உள்ளானதுபோல அதிருகிறது. அதிர்ச்சியிருந்து மீளாமலேயே யுத்தகால வழக்கின்படி முன்னெச்சரிக்கையாக விளக்கினை அணைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று சன்னல் திரையை விலக்குகிறான். மூர்ச்சையாகாத குறை. பாராசூட்டுடன் ராணுவ அதிகாரிபோலிருந்த ஒருவன் குதிப்பதை முதன்முதலாகப் பார்க்க அவனுக்கு அதிசயமாகவும் இருக்கிறது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அடுத்த நொடி சுய நினைவுக்குத் திரும்பிய மக் லீன் அவசர அவசரமாக உடையை அணிந்துகொண்டு, தமது தாய் படுத்திருந்த அறைக்காய் குரல்கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்தான்.

பாராசூட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அதிகாரி முயன்றுகொண்டிருப்பது தெரிந்தது.

– யார் நீ?- மாக் லீன்

பாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன், முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். காலெடுத்துவைக்கையில் தடுமாறினான், இலேசாகத் தாங்கி நடக்கிறான். மெல்ல அடியெடுத்து வைத்து இவனிடம் நெருங்கி வந்தவன் நிதானமாக யோசித்துப் பேசிய ஆங்கிலத்தில்:

– நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். எனதுபெயர் அவுட்மன் ஆல்·ப்ரெட் ஓர்ன். டங்காவெல் அவுஸ் வரை செல்லவேண்டும், ஆமில்டன் பிரபுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். – என்றான்.

இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஜெர்மானியன் ஒருவன் கிரேட் பிரிட்டனுக்குள் வந்திருக்கிறானென்பதை நம்புவதற்கு பிரிட்டிஷ் விவசாயி தயாராக இல்லை. விமான இரைச்சலைக்கேட்டு அதிர்ந்துபோய் அதற்குள் மற்றுமொரு விவசாயியும் வந்து சேர்ந்திருந்தான் பெயர் கிரேக். இப்படியான சிக்கலை இதற்கு முன்பு சாதாரணக் குடியானவர்களான மாக்லீனும், கிரேக்கும் சந்திக்க நேர்ந்ததில்லை. இருவருமாக கலந்தாலோசித்தார்கள். மாக்லீ, ஜெர்மானியனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பாதுகாப்பதென்றும், கிரேக் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையின் வான் சமிக்ஞைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த சில விநாடிகளில், பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் மாக் லீன் வீட்டுக்குள் குவிந்துவிட்டார்கள். அவர்களின் தலைவனான வில்லியம்ஸன் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் நன்கு குடித்திருந்தான். எனினும் ஜெர்மன் அதிகாரியை முதுகில் துப்பாக்கியை முனையை அழுத்திப்பிடித்தபடி அழைத்துச்செல்ல போதுமான நிதானத்துடன் இருந்தான். அவந் கீழிருந்த ராணுவ அதிகாரிகள் ஜெர்மானிய உயரதிகாரி குதிகால் வலியால் துடிப்பதை அறிந்து அருகாமையிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

ஜெர்மானிய கைதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவன் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டான்.

– இந்த ஆளை எங்கோ பார்த்தஞாபகம். சண்டைக்கு முன்பாக ஜெர்மனியில் உண்மையில் பார்த்திருக்கிறேன். அநேகமாக அவர் ருடோல்ப் ஹெஸ்ஸாகத்தான் இருக்கக்கூடும், இட்லருக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அடுத்த கணம் அங்கிருந்த பிறஅதிகாரிகள் வாய்விட்டு சிரித்தனர். “ஆனாலும் உனக்கு கற்பனை அதிகம் ஐயா”, என்றனர்.

(தொடரும்)

 

 

 

 

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -10

 கொன்க்கூர் இலக்கிய பரிசு:

எட்மண்ட் டெ கொன்க்கூர் (Edmond Huot de Goncourt)  என்பவரின் மரணத்திற்கு பின்பு அவரது உயிலின் அடிப்படையில் அவரது சகோதரர் ழூய்ல் கொன்க்கூர் (Jules Huot de Goncourt) பெயரில் 1900 ம் ஆண்டில் ஏற்படுத்தபட்டதே கொன்க்கூர் இலக்கிய பரிசு. சகோதரர்கள் இருவருமே எழுத்தாளர்கள். இணைந்தும் தனித்தனியாகவும் இவர்களுடைய படைப்புகள் பிரெஞ்சில் உள்ளன. இவ்வமைப்பு கவிதைகள், கட்டுரைகள் என்று பிற படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறபோதிலும் புனவுகளுக்கு வழங்கப்படும் பரிசே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சில் இன்றுவரை பல இலக்கிய பரிசுகள் இருப்பினும், கொன்க்கூர் இலக்கிய பரிசு என்பது ஓர் எழுத்தாளனை சிறந்த படைப்பாளியாகவும் பரிசுபெற்ற படைப்பின் விற்பனையை அதிகரிக்கவும் துணைநிற்கிறது. பிரெஞ்சு மொழியில் பரிசுக்கான ஆண்டில் வெளிவந்த நாவல்களைக் கணக்கிற்கொண்டு தேர்வு செய்கிறார்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுத் தகுதி போட்டிக்கான ஆண்டில் ‘உரைநடையில் வெளிவந்த மிகச்சிறந்த புனைவு’ (‘le meilleur ouvrage d’imagination en prose, paru dans l’annளூe’). போட்டியை நடத்துபவர்களே – (l’Acadளூmie Goncourt) தேர்வுக்குரிய நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். படைப்பாளரோ, பதிப்பகமோ தங்கள் நூல்களை அனுப்பவேண்டியதில்லை, அனுப்பவுங்கூடாது. ஒருமுறை பரிசுபெற்றவரை மறுமுறை தேர்வுசெய்வதில்லை.

நான்கு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. முதற் கட்டத் தேர்வில் (செப்டம்பர் முதல் வாரம்) 15 நூல்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் 8 நூல்கள் ( அக்டோபர் முதல்வாரம்) மூன்றாம் கட்டத் தேர்வில் நான்கு நூல்கள் (அக்டோபர் இறுதிவாரத்தில்) என முடிவு செய்கிறார்கள் ஆக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவில் (அக்.25) 2011 நவம்பர் மாதம் 2ந்தேதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தேர்வுக்குத் தகுதியானவையென நான்கு படைப்புகளை தெரிவு செய்துள்ளனர்.

1. Sorj Chalandon –  Retour தூ Killybegs – Grasset
2. Alexis Jenni –  L’Art franவூais de la guerre – Gallimard
3. Carole Martinez –  Du Domaine des Murmures – Gallimard
4. Lyonel Trouillot – La belle amour humaine – Actes Sud

1. Retour à Killybegs – கில்லிபெக்கிற்கு திரும்புதல்  என்ற நூல் அயர்லாந்து விடுதலைப்படை (IRA)- என்ற தீவிர தேசிய அமைப்பில் பங்குபெற்று பின்னர் அந்த அமைப்புக்கு எதிராக அரசுடன் சேர்ந்து செயல்பட்ட  Tyrone Meehan என்பவரின் செயபாட்டில் உள்ள அரசியலையும், மனித குணபண்பையும் இந்த மனிதனின் ஊடாக  ஆசிரியர் சாற்பற்ற விவாதத்தை எழுப்புகிறார். இலங்கை நண்பர்கள் இப்படியொரு நாவலை கருணாவை மையமாகக்கொண்டு எழுதலாம் ஆனால் சார்பற்று சொல்லப்படவேண்டும். வெறும் அரசியல் சார்ந்து சொல்லாமல் மனித மனங்கள் முரண்களை பற்றுவதற்கான கணங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சொல்ல உளவியல் அடிப்படையிலான கண்ணோட்டம் அவசியம். Sorj Chalandon: நூலின் ஆசிரிரியர். Liberation தினசரியில் பத்திரிகையாளர். இவரது 4வது நாவலே மேலேகுறிப்பிடப்பட்டது. இதற்கு முன்பு  மூன்று நாவல்கள் வந்துள்ளன. மூன்றுமே இலக்கிய பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளன. இந்நாவல் கடந்த செப்டம்பர்மாதம் வெளிவந்தது.

2-L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்லது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.

3.- முனகலின் வெளி (Du Domaine des Murmures). இடைக்காலத்தைப்பற்றி பேசும் புனைவில் உண்மை புனைவு இரண்டுமுண்டு. பன்னிரண்டாம் நூற்ராண்டுக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறகதை. முழுக்க முழுக்க புனைவை வடிப்பதைக்காட்டிலும், உண்மை வரலாற்றை புனைவிற்கொண்டுவருவதற்கு உழைப்பு வேண்டும். உரிய சான்றுகள் வேண்டும் அதை உண்மையா என பலமுறை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், காலத்தை வரையறுப்பதிலும் வரிசையிடலிலும் கவனம் வேண்டும். செஞ்சியைப்பற்றி எனது நாவலில் சீர்காழியில் நடைபெறும் முலைப்பால் உற்சவத்தின் மாதமும், கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கும் கால வரிசையில் பிறழ்ந்து இருப்பதைக் கவனித்து திரும்பவும் எழுதவேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு இரட்டைசடை என எழுதி பின்னர் அதைத் தைத் திருத்த வேண்டியிருந்தது. இதுபோன்று சின்ன சின்ன அவதானிப்புகள் தேவையாகின்றன. அதற்கான மொழிகள் வேறு உடை, உணவுமூறை, வைத்திய மென்று இன்றுள்ள சித்த ஆயுர்வேதத்தை போகிற போக்கில் மறுபதிவுசெய்யலாமா? அவற்றை எவைகளெல்லாம் உண்மையிலிருந்தன. என்கிற கேள்விகள் வரலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டை முன்வைத்துசொல்லப்பட்டுள்ள இந்நாவல் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கினேன். இதற்குப் பரிசு கிடைக்கவேண்டும் என்பதென் விருப்பம்.

ஓர் இளம்பெண் – Esclarmonde- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்கிற நமது ஆண்டாள் வழிவந்தவள். பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தை மறுக்கிறாள். ஆழ்வார் ஆண்டாளை அரங்கனோடு சேர்த்துவைக்கிறார். இங்கே Esclarmonde  கோட்டையொன்றில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு வெளியுலக்தொடர்பு என்பது ஒரு சிறிய சன்னல். அவளுடைய சிறை அவளுக்குக் கட்டப்படுள்ள சமாதியென்று தெரியாமலே அங்கிருக்கிறாள்;  இப்புதிய தனிமைக்கும் அவள் நேசித்த தனிமைக்கு பாரிய இடைவெளிகொண்டதென்கிற உணரத்தொடங்குகிறபோது, செத்த உயிர்களோடு கைகோர்க்க நேரிடுகிறது தான் உயிருள்ள ஜென்மமா, இறந்த ஜென்மமா எனத் தெரியாமல் தடுமாறுகிறாள். தந்தையின் அதிகாரம் கழுத்தை நெரிக்கிறபோது அவளுடைய சுதந்திரக்குரல் அல்லது ஈனஸ்வரம் அவளுடைய எம்பிரான் வாழும் புனிதஸ்தலத்தில் (இஸ்ரேல்)எதிரொலிக்கிறது. இநாவல் குறித்து தனிக்கட்டுரை எழுதவேண்டும். Carole Martinez என்ற பெண்நாவலாசிரியருக்கு இது இரண்டாவது நாவல். அவரது முதல் Le Cஞூur cousu, Paris, னditions Gallimard மூன்று பரிசுகளை வென்ற நாவல்.

4. ஓர் இனிய மானுடக் காதல் -( La belle amour humaine)  Lyonel TROUILLOT என்கிற ஹைத்திநாட்டைச்சேர்ந்த படைப்பாளியின் கதை. மேற்கிந்திய தீவு ஒன்றிர்க்கு தனது தந்தையைத் தேடிவரும் மேற்கத்திய இளைஞனின் உளவியல் தேடலை விவரிக்கும் புனைவில் இன்றைய உலகவாழ்க்கைக்கு மனிதனின் எந்த அவதாரம் உகந்ததென்கிற கேள்விக்கு விடைதேடுகிறது. நாவலாசிரியருக்கு இது மூன்றாவது நாவல். .

——————————————————