மொழிவது சுகம் செப்டம்பர் 27 -2013

1. கீற்று இணைய தளம்: க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள்

அண்மையில் கீற்று இணைய இதழில் நண்பர்  க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள் இரண்டை வாசிக்க நேர்ந்தது. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை தற்போது அக்கறையுடன் வாசித்துவருகிறேன். தற்கால இலக்கியவெளியில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிற பலரின் கட்டுரைகளில் இருக்கும் புழுக்கம், வெற்று சுமைகள் இவர் எழுத்தில் இல்லையென்பது வாசகர்களுக்குள்ள சௌகரியம்.  எடுத்துரைக்கும் பொருளும், எடுத்தாளும் சொற்களும் அவரொரு மூதறிஞர் என்பதை உறுதிபடுத்துபவை. அவர்மொழியின் வாயசைவையும், தொனியின் முழு பரிமாணத்தையும் உள்வாங்கிக்கொள்ள குறைந்த பட்ச அக்கறை போதுமானது. எழுத்திலுள்ள அபூர்வ கவர்ச்சிக்கு, அடிப்படையில் அவரொரு கவிஞர் என்பது காரணமாக இருக்கலாம். வழக்கம் போலவே நுட்பமானதொரு அவதானிப்பு. .

அ. தொல்காப்பியரின்  நன்நயப் பொருள்கோள்

தொல் இலக்கியங்களைப் பற்றிய அவரது பார்வை ஒருபோதும் பொதுவில் பலரும் பயணிக்கிற தடத்திற்கு உரியதல்ல. நம்மை வியப்பில் ஆழ்த்துவதெற்கென்றே சில கேமரா கோணங்களை பிரத்தியேகமாக உபயோகிக்கும் திறன் அவருக்குண்டு. நவீன இலக்கியத்தின் பல சிந்தனைகளை தொல் காப்பியர் அன்றே முன் மொழிந்திருக்கிறாரென நண்பர் சான்றுகளை முன் வைக்கிறபோது,  வியப்புடன் பெருமிதம் கொள்ளவேண்டியிருக்கிறது

ஆ. ஞானியும் தமிழ்தேசியக் கருத்தாக்கமும்
கோவை ஞானியின் தமிழ் தேசியம் குறித்து விரிவானதொரு பார்வை இக்கட்டுரை. ஆசிரியர் ‘தேசியம்’ என்ற உணர்வின் விளை நிலம் மேற்கு நாடுகளாக இருக்க முடியாது, தமிழகமாக இருக்கலாமென்ற ஊகத்துடன் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார். கோவை ஞானி வழக்கமாக நாம் எதிர்கொள்கிற காம்ரேட் அல்ல, கார்ல் மார்க்ஸைக் உணர்ச்சியுடன் வாசிப்பவரல்ல அறிவுடன் வாசிப்பவர் அதனால்தான் அவரால் தமிழ் தேசியம் பேசமுடிமிகிறது. நண்பர் பஞ்சுவின் இக்கட்டுரை, ஞானி தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க கையிலெடுத்த உபகரணங்கள் என்ன, அவர் வடிவமைத்த தேசியத்தின் அடிப்படை பண்புகள் என்ன என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறது. நூல்களிலுள்ள ஞானியின் கருத்துகளை போகிறபோக்கில் வழிமொழிந்துவிட்டுச்செல்லாமல் நண்பர் பஞ்சு தமிழ் தேசியத்தின் இன்றைய நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கிறார்.

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=24989&Itemid=139

2. நூல் தொகுப்பாளர் பழங்காசு ப.சீனுவாசன்

நண்பர் மு.இளங்கோவன் தமது இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ள பெருந்தகை. சொல்லப்பட்டிருந்த தகவலைப் படித்தபோது சுவாசமே நின்று போய்விடும்போல இருந்தது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த யுகத்தில் இப்படியும் சில மனிதர்கள். ஒரு நூற்றாண்டு அறிவு கருவூலத்தை தாய்க் கருவை சுமப்பதுபோல கட்டிக்காத்து வருகிறார். வாழ்க நீ எம்மான்! நண்பர் இளங்கோவனுக்கு நன்றிகள்.

http://muelangovan.blogspot.in/

3. பிரான்சில் என்ன நடக்கிறது?

நேற்றைய பிரெஞ்சு தினசரியில் இப்படியொரு செய்தி, வாசித்து முடித்தபோது வியப்பாக இருந்தது.

கடந்த 26 செப்டம்பர் 2013 அன்று பிரான்சு நாட்டைச்சேர்ந்த ஓர் இளம் மலையேறி ஆல்ப்ஸ் மலையில் சிறியதொரு பேழையை கண்டெடுத்திருக்கிறார். திறந்து பார்த்தபோது அதனுள் சிறு சிறு சுருக்குப் பைகளில் விலையுயர்ந்த கற்கள் இருந்திருக்கின்றன. அப்பைகளில் ‘Made In India’ என்ற வாசகம் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு 130000 யூரோவிலிருந்து ளூ246000 யூரோவரை எனசொல்லபடுகிறது. இளைஞர் கண்டெடுத்த புதையலை, தனக்கென ஒதுக்கிகொள்ளாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். தொலைத்தவர்களோ அவர்களின் வாரிசுதாரர்களோ கேட்டுவந்தால் அவர்களிடம் ஒப்படைப்பார்களாம், வரவில்லையெனில் புதையல் கண்டெடுத்த இளைஞருக்கு கிடைக்குமென செய்தி சொல்கிறது உடையவர்கள் இந்தியர்கள் எப்படி?

இரண்டு விமான விபத்துகள்

இந்திய நாட்டிற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஆல்ப்ஸ்   மலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றன

முதல் விபத்து நடந்தது 1950ல்.  ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான Malabar Princess 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ந்தேதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது பயணம் செய்த 58 பேரும் இறந்திருக்கிறார்கள். இரண்டாவது விபத்து, பதினாறு ஆண்டுகள் கழித்து அதாவது 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பெயர் கஞ்சன்ஜுங்கா. இவ்விமானமும் ஏர் இந்தியாவிற்குச் சொந்தமானது. நியுயார்க்- பம்பாய் என பயணித்த அவ்விமானம் 117 பயணிகளுடன் அதே இடத்தில் விபத்திற்குள்ளாக ஒருவரும் தப்பவில்லையாம். ஆக அவ்வப்போது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான் மோன் -பிளாங் மலையில் இப்படி ஏதாவது கிடைப்பது வழக்கமாம்.

http://alpes.france3.fr/2013/09/26/un-alpiniste-trouve-un-incroyable-tresor-sur-le-massif-du-mont-blanc-326057.html
—————————————

நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது

மணற்கேணி ஆய்விதழ் இவ்வருட நிகரி சமத்துவ விருதுபெறும் சாதனையாளர்களை அறிவித்துள்ளது.. நண்பர் ரவிக்குமார் அழைத்திருக்கிறார். 

நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும்.

———————————————————————————–

          நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது 

downloaddownload_004கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.

இதற்கான விழா இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே .வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அவர்களது புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் விழாவுக்கான அழைப்பிதழும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் நிகழ்வு குறித்த செய்தியைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டு உதவவும் வேண்டுகிறேன்.

அன்புடன்

ரவிக்குமார்

ஆசிரியர், மணற்கேணி 

குறிஞ்சி வட்டம் -51

செஞ்சியில் உள்ள குறிஞ்சி வட்ட நண்பர்கள் தொடர்ந்து படைப்பிலக்கியவாதிகளை உற்சாகப்படுத்திவருபவர்கள் ஞாயிறன்று (22 செப்.2013) அன்று நடந்த நிகழ்ச்சி பெண்கவியுலகத் திறனாய்வு சார்ந்தது. மூன்று பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1. இரா. தமிழரசியின் ‘மரக்கலம் திரும்பும் பறவை’ கவிதைத் தொகுப்புக் குறித்து முனைவர் வே. நெடுஞ்செழியன் (திருவண்ணாமலை) திறனாய்வு செய்திருக்கிறார்.

2. பா. உஷாரணியின் ‘மரம் வைத்த வீடுகள்’ பற்றி, பேராசிரியர் அ.மான்விழி ரஞ்சித் (திருவண்ணாமலை)
திறனாய்வு செய்திருக்கிறார்.

3. மனுஷியின் ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்பது பற்றி புதுவையைச்சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் இரா. கந்தசாமி திறனாய்வு செய்துள்ளார்.

அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் குறிஞ்சி வட்டத்திற்கு நன்றிகள்.

உலக எழுத்தாளர் வரிசை -2

:லிடியா ஜோர்ஜ் (Lidia Jorge)

téléchargementஇவர் போர்த்துகல் நாட்டின் முக்கிய படைப்பாளி. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், நாடகம் எனதொடர்ந்து நவீன இலக்கியத்தின் கீழ் இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் இலக்கியம் என அவர் படைப்புகளை வகைப்படுத்தலாம். போர்த்துகல் நாட்டின் தென்பகுதியில் 1946ம் ஆண்டு பொலிக்கிமெ (Boliquime) என்ற இடத்தில் பிறந்தவர். லிஸ்பன் பல்கலை கழகத்தில் நவீன இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் போர்த்துகல் நாட்டின் காலனி நாடுகளில் வசிக்க நேர்ந்திருக்கிறது. காலனி நாடுகள் இல்லையென்றான பிறகு லிஸ்பன் திரும்பியவர், பல்கலைக் கழகத்தில் சிலகாலம் ஆசிரியப் பணியில் இருந்திருக்கிறார், பின்னர் அதிலிருந்து விடுபட்டு தற்போது தமது நேரம் முழுவதையும் எழுத்துப் பணிக்கென ஒதுக்கிக் கொண்டு செயல்படுகிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், வீட்டில் ஒரு பெட்டி நிறைய நல்ல புத்தகங்கள் இருந்ததாம், அவற்றைப் பால்ய வயதில் வாசித்துப் பழகியாதாலேயே தமக்கு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென பின்னாளில் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவருடைய எழுத்தார்வத்திற்கு தங்கள் நாட்டின் பிரபல எழுத்தாளரான Fernando Antonio Nogueira Pessoa காரணம் என்கிறார். எனினும் லிடியா ஜோர்ஜுவின் படைப்புகளை முழுவதுமாக வாசித்தவர்கள், ஆழமாக அவரது படைப்பு வெளியை உள்வாங்கிக்கொண்டவர்கள் பெஸ்ஸொவிடமிருந்து வெகுதூரம் விலகிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். லிடியா ஜோர்ஜ் படைப்புகள், தன்னை சுற்றியுள்ள சமூக பிர்ச்சினைகளில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதை சுட்டுகிறார்கள். நவீன உலகின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதன் பலவீனங்கள், வன்முறை தீர்வுகள், அவ நம்பிக்கைகள், ஊழல்கள் என்று அவருக்கு எழுத நிறையவே உள்ளன என்பது வெளிப்படை. மேற்கத்திய நாடுகளில் பல பரிசுகளை வென்றுள்ள லிடியா தம்மைச்சுற்றியுள்ள உலகமே தமக்கான எழுதுபொருள் என்பதை மறுப்பதில்லை. சமூக பிரச்சினைகளைக் கையாளுவதில் தேர்ந்தவர் என்ற போதிலும் அவரது கதை சொல்லல் தனித்தது என்கிறார் பிரெஞ்சு இலக்கிய இதழ் ஒன்றில் அந்நாட்டின் சக எழுத்தாளர் Maria Gracieta Besse.

அவரது படைப்புகள் குறித்து: (தகவல் உபயம் பிரெஞ்சு இலக்கிய இதழ்)*

1. The Day of Prodigies (1980)
பல நூற்றாண்டுகளாக தனது புறம் அகம் இரண்டிலும் எவ்வித மாற்றாத்திற்கும் உள்ளாத போர்த்துகல் நாட்டின் தென் பகுதி கிராமம் ஒன்றுதான் கதை நாயகன். முன்முடிவுகளும், அவ நம்பிக்கைகளும், சச்சரவும், குருட்டு சடங்களுமாக உறைந்துகிடக்கும் கரம்பு நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். லிடியா தமது முதல் நூலிலேயே தமது பெண் இனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர்களுடைய கவலைகள், சுதந்திரமாக இயங்குவதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள், ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டியக் கட்டாயம், தான் கதை சொல்கிற இந்த நூற்றாண்டிலும் பெண்கள் ஓர் ஆணுடமைச் சமூகத்தின் வாழநேரும் அவலம் குறித்த எழுத்தாளரின் துயரம் இப்படைப்பில் சொல்லப்படுகிறது.

2. The Wind Whistling in the Cranes

பெற்றோர்களுக்கு என்ன நடந்ததென அறியமுடியாத மிலென் என்ற பெண், தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறாள். உடனிருந்த பிற உறவினர்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடொன்றிர்க்கு சென்றிருந்த வேளை பாட்டி திடீரென இறந்துவிடுகிறாள். இளம்பெண்ணான மிலென் அவளை அடக்கம் செய்யவேண்டும். இந்நிலையில் பாட்டியால் ஏற்கனவே னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த குடும்பமொன்றுதன் பழக்கம் ஏற்படுகிரது. மெல்ல மெல்ல போதைப்பொருளுக்கும் அடிமையாகிப்போகும் பெண்ணின் வாழ்க்கை மேட்டுக் குடியினரின் வாழ்கைப்போக்கில் எவ்வாறு சீரழிகிறது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.

3. The Night of the Singing Women – 2011

ழிசெலா லிஸ்பன் நகரைச் சேர்ந்த பணக்கார பெண்மணி. கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதி ஆர்வம் காட்டுபவள், ஆனால் கண்டிப்பான பேர்வழி. அவளிடம் பயிற்சிபெற்று மேடையேற ஆசைப்படும் பெண்கள் குழுவினருக்கு ஏற்படும் அனுபங்களைக் கொண்டு ஆசிரியர் கதையை நகர்த்துகிறார். குழுவில் இருக்கும் ஒவ்வொருத்திக்கும் என்றாவது ஒரு நாள் தன்னுடைய பாடல் குறைந்தபட்சம் ஒன்றாவது பதிவு செய்யப்படும், விற்பனையாகும், பணமும் புகழும் வந்து சேரும் என்ற கனவு இருக்கிறது. எனவே ழிசெலாவினால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பணிந்து போகிறார்கள். முதல் அத்தியாயம், கடுமையான பல மாதப் பயிற்சிக்குப்பிறகு பயிற்சிபெண்களின் கனவு நனவாவதைப்போல பொதுமேடையில் அவர்களின் பாட்டு அரங்கேறுவதற்கான சந்தர்ப்பத்துடன் நாவல் தொடங்குகிறது, கதை சொல்பவள் அப்பெண்களில் ஒருத்தியான சொலான் என்பவள். சொலானுடைய தினசரிகள், அவள் உரையாடல், அவள் பாலுறவு, பயிற்சிபெண்களுக்கும் ழிசெலாவிற்குமான உறவின் ஏற்ற இறக்கங்கள், விரிசல்கள், ஒட்டுதல்கள் என அத்தியாயங்கள் வருகின்றன. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் லிடியா, பாட்டு பாடுகிற பெண்களைப்பற்றிய நாவல் என்றாலும், மக்களைப்பற்றிய நாவல் என்கிறார்.

நன்றி – * Le Magazine Littளூraire ஆகஸ்டு 2013

பி.கு. ஆசிரியரின் விருது மற்றும் பிற நூல்களைப்பற்றிய தகவல்களை ‘விக்கிபீடியாவிலிருந்து’ நீங்கள் பெறலாம்.

____________________________________

மொழிவது சுகம் – செப்டம்பர் – 14

பாரீஸில் கம்பன் விழா:

1. இன்றும் நாளையும் (செப்.14, 15 -2013 ) பாரீஸ் கம்பன் கழகம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடத்தும் நிகழ்ச்சி. கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசன்குறித்து  ஏற்கனவே இவ்வலை தளத்தில் எழுதியிருக்கிறேன். அவருடைய தமிழ்ப் பற்று அளப்பதற்கரியது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலிருந்து இன்றைய சிறந்த பேச்சாளர்களை அழைத்து மிகச்சிறப்பாக நடத்துகிறார். இரண்டு நாள் விழாக்களில் பொதுவாக கம்பன் விழாக்களில் என்ன நடக்குமோ அதனை எதிர்பார்க்கலாம். இவ்வருடம் தமிழ்நாட்டிலிருந்து முனைவர் பர்வீன் சுல்தானா கலந்துகொள்வதாக அவர்கள் அழைப்பு தெரிவிக்கிறது

நிகழ்ச்சி நடைபெறும் இடம்
சனி மாலை 2.30லிருந்து
ஞாயிறு மாலை 10.00 மணியிலிருந்து
L’Espace Associatif des Doucettes
Rue du Tiers Pot
95140 Garges les Gonesse
———————————————————-
2. மனதிற் பதிந்த கவிதை: ஒரு யானை அங்குச தாரியாகிறது – ஆதவன் தீட்சண்யா

அண்மைக் காலங்களில் பல நேரங்களில் கவிதைகள் என்ற பெயரில் பல அபத்தங்களை வாசிக்க நேர்ந்திருக்கிறது.  சிற்றிதழ்கள்கூட பக்கத்தை நிரப்ப கவிதைகள், என்ற போக்கில் பிரசுரமாவதைக் கண்டு இந்த வேதனை. மாறாக அண்மையில் தீராநதியில் வந்த கவிதைத் தெம்பை அளித்தது.  எழுதியவர் ஆதவன் தீட்சண்யா.

ஒரு யானை அங்குசதாரியாகிறது
– ஆதவன் தீட்சண்யா

யானையின் நிறம்
கருப்பு, சாம்பல், கருஞ்சாம்பலெனக் குழம்பி
எலிபண்ட் ப்ளாக் எனச் சொல்லி
மாவுத்தனே நழுவும்போது
யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்
அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை

அந்தஸ்துக்காக அரசர்கள் வைத்திருக்கும்
யானையை
அன்னாடங்காய்ச்சிகள்

தூர இருந்து பார்க்கலாம்
தொடை நடுங்காதிருந்தால்
தொட்டும் தடவலாம்
வளர்க்க ஆசைபட்டு வாங்கினது கெடுவினை

கொஞ்சுவதற்கும் ஏவுவதற்கும் தோதாக
கைக்கடங்கிய வளர்ப்பு மிருகங்கள்
எத்தனையோ இருக்க
ஒரு யானையை இழுத்துவந்த தவறுக்கான
விலையை
நீங்கள் கொடுத்துத்தானாக வேண்டும்

காற்சங்கிலி
இரும்பிலா தங்கத்திலா
கட்டிவைப்பதெனில்
மரத்தடியிலா மாட்டுத் தொழுவிலா
கட்டாந்தரையிலேயே காற்றாட விட்டுவிடுவதா
கவரிவீசி கண்மூட வைப்பதா
ஏசியில் உறங்குமென்றால்
எந்த ஓட்டலில் ரூம் போடுவதென
எதையுமே யோசியாது யானையை
வாங்கிவிட்டீர்

மூங்கிக்குத்துகளையும் கருப்பங்காடுகளையும்
இஷ்டம்போல் தின்று வளர்ந்த யானை
நீங்கள் தரும் கூபா புற்கட்டுக்கு
பசியடங்காமல்
வேலியைப் பிய்த்தெறிந்து
விளைச்சலைத் தின்னும்
விரட்டத் துணிந்தோரை
மிதித்தே கொல்லும்

கழுதை குதிரை எருமை எருதென
எதன்மீதும் சவாரிபோக முடியாதபோது
காலொடிய நடந்தகதை மறந்து
உங்களைச் சுமக்குமென ஓட்டிவந்த
யானையை

நீங்கள் சுமக்கத் தொடங்கிய தலைகீழ்
நொடியிலிருந்து
உங்கள் நெற்றி புடைத்து மந்தகமாகிறது
அங்குசமோ அதன் தும்பிக்கையில்.

நன்றி : தீராநதி ஆகஸ்டு 2013

3. அப்பாவின் துப்பாக்கி – ஹினெர் சலீம்
– பிரெஞ்சிலிருந்து தமிழில் – வெங்கட சுப்புராய நாயகர்

Appavin thuppâkki
பிரெஞ்சு லிருந்து நண்பர் வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்துள்ள நாவல். நம்மில் பலருக்கு குர்தின மக்களின் அவலமான நிலமை தெரியாதிருக்கலாம். துருக்கியில் ஆரம்பித்து, ஈரான், ஈராக், சிரியா என மேற்கு ஆசியா முழுவது பரவிக் கிடக்கும் குர்தின மக்கள் அகதிகளாக உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறவர்கள். சொந்த நாடொன்றிற்கு ஏங்குகிற ‘கவனிப்பாரற்ற பிள்ளைகள்’. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு, இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை, ‘எங்கள் வாசலில் வந்து நில்லுங்கள் மிச்சமிருந்தால் போடுகிறோம் என்கிற’ பரந்த மனப்பாண்மைதான் அவர்கள் காட்டும் பரிவு. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்கிற வாய்ச்சொல் வீரர்களுக்கு அமெரிக்கா என்கிற பூச்சாண்டி கனவில் வராதவரை திடுக்கிட்டு எழுவதில்லை என்ற கோட்பாடு  இருக்கிறது. அரபு நாடுகளின் ஷேக்குகளுக்கோ வேறு கவலை: ஆசியப் பெண்களை மைதுனத்திற்கும், ஐரோப்பிய மாடல்களை படுக்கைக்குமென இறக்குமதிசெய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது, பாலஸ்தீனியர்கள் விஷயத்திலேயே அக்கறை செலுத்தாதவர்கள் அதிகச் சிக்கலுள்ள குர்திஸ்தான் பிரச்சினையிலா?…

குர்திஸ்தான் மக்களும் சுதந்திர நாடென்கிற கானல்நீருக்கு ஏங்குகிறார்கள். கனவில் கூட அது சாத்தியமில்லையென தெரிந்தும் போராடுகிறார்கள், உரிமைக்குரல் எழுப்புகிறார்கள் அவர்கள் போராட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் திட்டிவாசல்தான் அப்பாவின் துப்பாக்கி. ஹினெர் சலீம் (Hiner Saleem) என்ற குர்தினத்தைச் சேர்ந்த எழுத்தாளரின் புனைவு. ஈராக் நாட்டிலிருந்து சதாம் உசேன் காலத்தில் தப்பிவந்த அறிவு ஜீவி. பிரான்சு நாட்டில் வாழ்கிறார். பல திரைப்படங்களையும் எழுதித் தயாரித்திருகிறார். ஒரு வகையில் இந்நாவல் அவருடைய சுயகதை. நண்பர் நாயகர் வழக்கம்போலவே மிக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார். வாசகர்கள் தாகசாந்தி செய்வதுபோல நூலை வாசித்துப் போகலாம், அப்படியொரு அனுபவத்திற்கு வழியுண்டு. தானொரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளன் என்பதை நாயகர் மீண்டும் தமது உழைப்பூடாக தெரிவித்திருக்கும் சாட்சி. பணத்தையும் புகழையும் எளிமையாக சம்பாதிக்க என்ன வழி என அலைகிற ஆசிரியர்களுக்கிடை இப்படி அக்கறைகாட்டுகிற நாயகர் போன்றவர்களை உற்சாகப்படுத்தும் வாய்ப்பினை நாம்தான் உருவாக்கித் தரவேண்டும்.

அப்பாவின் துப்பாக்கி ஒரு “காலச்சுவடு” வெளியீடு.

————————————

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

பார்சலோனா -1

(இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்சலொனாவிற்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன் . உயிரோசை இணைய இதழில் தொடராக வந்தது. அதன் மறுபிரசுரம்.)

எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரைக் கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா…), ஃப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள். அவர்கள் பேசுவதென்றால் காதுவரை வாய்திறக்கிறார்கள், கேள்வியைத் தொடங்கும் முன்பே பதில்சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள், ஃபிளாமெங்க்கா தாளகதியை வாய்க்குள் கொண்டுவந்ததுபோல ஸ்பானிஷ் சொற்கள், தூக்கி எறியப்பட்ட பாத்திரங்களாக நங் நங்கென்று நெஞ்சில் விழுந்து காதை அடைக்கின்றன, செம்பையும் பறவை முனியம்மாவும் சேர்ந்து நிரவல் செய்வது போன்றதொரு சப்தம் நான்கு திசைகளிலிருந்தும் வருகிறது.

ஸ்பானிய மொழி அப்படியொன்றும் இளப்பமான மொழியுமல்ல. பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளில் சொல்லப்போனால், பிரேஸிலைத் தவிர்த்து பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஸ்பானிஷ்மொழிதான் அரசாங்க மொழி, இது தவிர வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமாக வசித்துவருகிறார்கள். எனினும் இத்தாலி மொழியையும், ஸ்பானிஷ் மொழியையும் பிரித்து அறியமுடியாமல் பல நேரங்களில் திணறுவதுண்டு. மொழி மாத்திரமல்ல; உணவு, கலாச்சாரம் எனபவற்றிலெல்லாங்கூட இத்தாலிக்கும், ஸ்பெயினுக்கும் மேலோட்டமாகப் பார்க்க வித்தியாசம் எதுவுமில்லை என்பதுபோலத்தான் தெரிகிறது.

பொதுவாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பானியர், இத்தாலியர், போர்ச்சுக்கீசியர்களெனில் பொருளாதாரத் தராசில் எடை குறைந்தவர்கள். அண்மைக் காலங்களில் இம்மூன்று நாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக பிரான்சுக்குக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் ஆப்பிரிக்க அரபுநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தபோதிலும் இன்றைக்கும் பிரான்சு நாட்டு வெளிநாட்டவரில் ஏறக்குறைய பதினேழு இலட்சம்பேர் இம்மூன்று நாடுகளைச்சார்ந்தவர்களே. ஒரு காலத்தில் இஸ்டான்புல் தெருக்களில் 70 மொழிகளைப் பேசுகின்ற மக்களைச் சந்திக்க முடியுமாம், அங்கு கிரேக்க இஸ்லாமியரும், அர்மீனிய கத்தோலிக்கர்களும், அரபு கிறிஸ்துவர்களும், செர்பிய யூதர்களும் சேர்ந்து வாழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. அப்பெருமையை இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய நகரங்கள் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் முப்பது ஆண்டுக்காலம் வாழ்ந்திருந்தும், சீனாவையும், பாகிஸ்தானையும், பங்ளாதேஷையும், இலங்கையையுங்கூட ஏட்டில் வாசித்ததுதான், செய்திகளில் அறிந்ததுதான். இன்றைய தினம் கடவுச்சீட்டின்றி, விசா இல்லாமல் வாரத்தில் ஒருநாளேனும், பாகிஸ்தானுடன் கைகுலுக்கவும், சீனாவுடன் முகமன் கூறவும், பங்களா தேஷுடன் நேசத்தை வெளிப்படுத்தவும், இலங்கையுடன் உறவு பாராட்டவும் முடிகிறது. உலகின் அத்தனை மனிதர்களுக்கும், அத்தனை இனங்களுக்கும் ஏதோவொரு வகையில், ஏதோவொரு பெயரில் மேற்கத்திய நகரங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றன. ஆக உலக நாடுகளின் பண்பாடுகளும், உணவுமுறைகளும் அசலாக இல்லையென்றாலும் நகலாக அறிமுகமாகியிருந்ததால் பெரிய எதிர்பார்ப்புகளென்று எதுவுமில்லை.

பாரீஸிலிருந்து பார்சலோன் ஒன்றரை மணிநேர விமானப்பயணம். 1992இல் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டின்போது விமானத் தளம் விரிவாக்கப் பட்டிருக்கவேண்டும், பெரிதாகத் தெரிந்தது. ஐரோப்பிய நாடுகளில் அதுவும் நாங்கள் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர்நகரில் எளிதில் வாய்க்காத தட்பவெப்ப நிலையும், தென் அமெரிக்க பனைமரங்களும், தோல் பழுத்த ஐரோப்பியரும், பெரியதலைகொண்ட சிவப்பிந்திய வம்சாவளியினரையும் பார்க்க, அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமானத் தளத்தை நினைவுபடுத்தும் சூழல். பார்சலோனா விமானத் தளத்தில் ஸ்பானிய மொழியைக்காட்டிலும் வேறொரு மொழி உபயோகத்தில் இருந்தது, தகவற் பலகைகளில் தவறாமல் அம்மொழி ஸ்பானிஷ் மொழிக்குக் கீழே இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. விசாரித்ததில் கட்டலான் என்றார்கள், ஸ்பானிஷ் மொழிக்கும் கட்டலான் மொழிக்கும் அதிகம் பேதமிருக்காதென்று நினைக்கிறேன்.

ஸ்பானிஷ் சொல்லுடன் ஒரு ‘O’வைக் கூடுதலாகப்போட்டால் போதுமென்றாகிறது, உண்மை என்னவென்று மொழியை அறிந்தவர்கள்தான் சொல்லமுடியும். கட்டலான் மொழி பிரான்சின் தென்பகுதியிலும், இத்தாலிநாட்டைச் சேர்ந்த சர்தினியா தீவிலும் ஸ்பெயின் நாட்டின் வடபகுதியிலும் பேசப்பட்டபோதிலும், பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள அந்தோரா என்ற மிகச்சிறிய நாட்டில்மட்டுமே ஆட்சிமொழியாக நேற்றுவரை இருந்த மொழி. பிரான்சைச் சேர்ந்த கட்டலோனியப் பிரதேசத்தைக் காட்டிலும் ஸ்பெயின் நாட்டுக் கட்டலோனியப் பகுதி சிறப்பு அதிகாரத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்துவருகிறது. 1979லிருந்து ஸ்பானிஷ் மொழியோடு கட்டலான் மொழியையும் அரசுமொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனினும், கட்டலோனியரில் 68 விழுக்காடு மக்களே கட்டலான் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். எனினும் இந்த 68 விழுக்காடு மக்கள் கட்டலோனிய நிர்வாகத்தில், பிரதேசத்தின் பண்பாட்டில் அழுத்தமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதை, விமானத் தளத்தில் இறங்கிய சில நொடிகளில் மனதிற் கொள்ளவேண்டியிருந்தது. “எங்கள் மக்கள் கட்டலான் மொழியில் வெளிவரும் படைப்புகளையே விரும்பி வாசிக்கிறார்கள். பிறமொழிப் படைப்புகளென்று வருகிறபோதும் ஸ்பானிஷ்மொழியினும் பார்க்க கட்டலான் மொழிபெயர்ப்பென்றால், நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என, பார்சலோனாவாசியொருவர் உள்ளூர் இரயில் பயணத்தின் போது குறிப்பிட்டார்.

நாங்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதி கடற்கரைக்கு வெகு அருகிலிருந்தது. விமானத் தளத்திலிருந்து அங்குசெல்ல, சிறப்புப் பேருந்துகளும் இரயில்களுமிருந்தன, எங்கள் தேர்வு இரயில். பிரான்சு நாட்டில் அதிவேக இரயில்களைத்தவிர புற நகர் இணைப்பு இரயில்களும் சரி, சுரங்க ரயில்களும் சரி பார்சலோனா நகர இரயில்களோடு ஒப்பிடுகிறபொழுது மிகவும் பின் தங்கியிருந்தன. பயண திசை, கால அளவு, எந்த நடைபாதை மேடைப்பக்கம் கதவுகள் திறக்கவிருக்கின்றன என்பவற்றை பயணிகளுக்குத் தெளிவாக மின்னணு தகவற்பலகைகள் அறிவிக்கின்றன. பாரீஸ் இரயில்களில் ஆப்பிரிக்க மக்களை நிறைய பார்க்கலாம், பார்சலோனாவில் குறைவு, மற்றபடி இரயில்களில் குழலிசைத்தும், பாட்டுப்பாடியும் பிச்சைகேட்பவர்கள் சென்னை, பாரீஸ், பார்சலோனா என்றுபோனாலுங்கூட உடன் பயணிக்கத்தான் செய்கிறார்கள். பார்சலோனா நகரத்தை நெருங்கியபோது, கடைகள் மூடியிருந்தன, வாகனங்களின் எண்ணிக்கையும் ஓட்டமும், ஐரோப்பாவின் பெரிய நகரங்களின் நண்பகலுக்கு ஒத்ததாக இல்லை, சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. விசாரித்தபோது கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. அங்கு பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டு மீண்டும் பிற்பகல் நான்கு மணி அளவில்தான் திறப்பார்களென்றும் அதன்பிறகு இரவு பத்துமணிவரை வியாபாரம் செய்வார்களென்றும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. உணவு விடுதிகளெல்லாங்கூட இரவு எட்டு மணிக்குமேல்தான் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதை அடுத்துவந்த நாட்களில் தெரிந்துகொண்டோம். பிரான்சில் அலுவலகங்களைத் தவிரக் கடைகளை நாள் முழுவதும் திறந்துவைத்திருப்பார்கள் என்பதோடு, பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்து பிறநாட்களில் இரவு ஏழுமணியோடு மூடிவிடுவது வழக்கம். பிலாஸ் தெ லா கட்டலோனாவில் இறங்கியபொழுது நகரம் உறக்கம் கலைந்திருக்குமென நினைக்கிறேன். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களைக் கலைத்தது போன்றதொரு மனித நடமாட்டத்தைக் காணமுடிந்தது.

பார்சலோனா நவீனத்தின் அவ்வளவு நுணுக்கங்களையும், அறிவியல் ஞானத்தையும், உரியவகையில் பயன்படுத்திக்கொண்டுள்ள நகரமென்று கேள்விப்பட்டிருந்தேன். படைப்புலக ஆளுமைகள், கலைஞர்கள், ஓவியர்கள் எனப் பலரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் மேடையாக நகரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நவீனத்தையும் பழமையையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கொரு நல்ல உதாரணம்: 1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 இல் கட்டி முடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிற லா சக்ரதா ஃபமிலியா (Sagrada Familia – Temple of the Holy Family). இதுவரை நாங்கள் பார்த்துள்ள நகரங்களில் பார்சலோனா அளவில் வேறொரு நகரம் எங்களைக் கவர்ந்ததில்லை எனபதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். காரணம் ‘பூவும் புகையும், பொங்கலும் சொரியும்’ பார்சலோனா ஓர் இந்திர விழா நகரம்.

– தொடரும்

உலக எழுத்தாளர் வரிசை -1

மாரியோ வார்கஸ் லோஸா ((Mario vargas Llosa)

mario-vargas-llosa1                                                                                                        உலகின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்களென ஓர் இருபதுபெயரை குறிப்பிட்டால் அதில் முதல் வரிசையில் நினைவுக்கு வருபவர் பத்திரிகையாளர், கட்டுரையாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 2010ம் ஆண்டு பெற்றவர், அவருடைய ஒவ்வொரு நாவலும் வித்தியாசமான கதை சொல்லலுக்கும், உண்மைப் பாத்திரங்களை புனைவுடன் கலந்து எது நிஜம் எது நிழல் என பிரித்துணர முடியாத கதையாடலுக்கும் பெயர் பெற்றவை.

91 இறுதியில் சொந்தமாக ஏதேனும் தொழில்  செய்வதென ஆரம்பித்து வாடகைக்கு ஓர் இடத்தைப் பிடித்து ஓர் சிறிய இந்திய அங்காடியை ஆரம்பித்தேன். எங்கள் கடைக்குப் பின்புறம் Association ‘Amérique Latine என்ற ஓர் அமைப்பு ஒன்றிருந்தது. 95ல் கடையை விரிவாக்க நினைத்து,  அருகிலேயே சொந்தமாக ஓர் இடத்தை வாங்கி மளிகைக் கடையை புதிய இடத்திலும், பழைய இடத்தில் இந்தியக் கைவினைப்பொருட்கள், படக்கொப்பிகள், அகர்பத்திகள் என விற்பனையை நடத்தினோம். ஆனால் அக்கடை இலாபகரமாக இயங்காததால் மூட நினைத்து வெளியேற நினைத்தபோது. அமெரிக்க லத்தீனியர் சங்கம் தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டது. அவர்கள் அங்கே ஓர் நூலகமொன்றைத் திறக்கபோவதாகக் கேட்டதும், இடத்துக்குச் சொந்தக்காரர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அதைக்கூறி ஏற்பாடு செய்தேன். ஒரு முறை நூலகத்தில் நுழைந்து பார்த்தேன். நூல்கள் மொத்தமும் ஸ்பானிய மொழியில் இருந்தன. நூலகப்பொறுப்பாளரிடம் கேட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கான நூலகம், வேறு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்த்தீர்கள்? என்று அதற்கான நியாயத்தை விளக்கினார். பிரேசில் நீங்கலாக தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஸ்பானிய மொழியை அரசாங்க மொழியாக ஏற்றுக்கொண்டவை. அதனால்தானோ என்னவோ பிரெஞ்சு மொழிக்கு அடுத்து ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிய மொழி இலக்கியங்கள் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. முழுத்தேங்காயைப் புரட்டுவதுபோல ஸ்பானிய மொழியில் இருந்த அப்புத்தகங்களை தடவி பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

நூலகத்திற்குள் 2002ல் ஒரு காப்பி பார் திறந்தார்கள், போகும் சந்தர்ப்பம் வாய்த்தது, போனேன். என்னை வியப்பில் ஆழ்த்துவதுபோல பிரெஞ்சில் சில புத்தகங்கள் இருந்தன. சங்கத்தின் உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகங்கள் தருவதில்லையென நூலகப் பொறுப்பாளர், பொறுப்பாக பதிலளித்தார். ஆனால் இம்முறை அங்கிருந்த சங்கத்தின் தலைவர் தமது பொறுப்பில், இதை வாசித்துப்பாருங்கள் நன்றாக இருக்குமெனக் கூறி “La ville et les Chiens” (The Time of the Hero) நூலை இரவலாகத் தந்தார். அப்போதெல்லாம் நான் அறிந்த ஒரே ஸ்பானிஷ் எழுத்தாளர், கப்ரியெல் கார்சியா மட்டுமே. ஆனால் கார்சியாவைக்காட்டிலும் மரியோ வார்கஸை,  இந்நூலை வாசித்த நாள் முதல் நேசிக்க ஆரம்பித்தேன். அவரது கதைசொல்லும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் தவிர தொடக்கத்தில் பிடெல் கஸ்ட்ரோவை ஆதரித்து பின்னர் அலுப்புற்ற ஆசாமி. கம்யூனிஸம் ஏட்டு சுரக்காய் என புரிந்துகொண்ட புத்தி ஜீவி என்பதும் ஒரு காரணம்.

மாரியோ வார்கஸ் லோஸா நூல்களில் தவறாமல் வாசிக்க வேண்டியவை: Captain Pantoja and the Special Service, Aunt Julia and the Scriptwriter, The Way to Paradise. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசிக்க நேர்ந்த Le Rêve du Celteம் ஓர் முக்கிய மான நாவல். தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நாவலுங்கூட. இந்நாவலில் ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடக்கும் கெல்ட்டியர் இனப்பிரிவைச்சேர்ந்த புகழ்பெற்ற ரோஜெர் காஸ்மெண்ட்தான் (Roger Cassement – 1864-1916) கதை நாயகன். முரண்பாடான ஆசாமி. அயர்லாந்து பூர்வீகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியபோதிலும் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் காங்கோவின் வளத்தை உறிஞ்சியதோடல்லாமல் அங்கே உள்ளூர் மக்களுக்கு இழைத்தக் கொடுமையை   வெளிப்படையாக விமரிசிக்கிறார், ஓர் அறிக்கையாகத் தயாரித்து, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அதனை அனுப்பியும் வைக்கிறார். அதுவே பின்னர்அவரை அயர்லாந்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் காரணமாக அமைந்தது. அடிப்படையில் அவரொரு பிராட்டஸ்டண்ட், எனினும் பிராட்டஸ்டண்ட்கள் கையில் அயர்லாந்து போவதை விரும்பவில்லை. உள்ளூர் மக்களை ஆளும் நிர்வாகத்திற்கு எதிராகத் திரட்டினார், முதல் உலகப்போரின்போது ஜெர்மானியருடன் இணைந்துகொள்ளவும் தயங்கவில்லை. கடைசியில் பிரிட்டிஷ் அரசு தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி அவரைக் கொலை செய்தது. முரண்பாடுகளையே கையாளுவதில் தேர்ந்த மாரியோ வார்கஸ் லோஸாவுக்கு, ரேஜெர் காஸ்மெண்ட் போன்ற முரண்பாடான ஆசாமிகள் தமது கதையாடலுக்குப் பொருத்தமான ஆசாமியாகத் தெரிந்திருக்கவேண்டும்.

அவரது சுயகதை எனச்சொல்லப்படும் Aunt Julia and the Scriptwriter அவருடைய நாவல்களிலேயே மிகசிறந்ததென்கிறார்கள். எனக்கென்னவோ இங்கே குறிப்பிட்ட எந்தப்படைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. சிறிது கவனத்துடன் வாசிக்கவேண்டும், ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் முக்கியம். ஒரு வகையில் இரட்டைப் பிறவிகளான குழந்தைகள் ஒன்றையொன்று துரத்திவிவிளையாடுவதைப்போல உண்மையும் புனைவும் ஒன்றை மற்றொன்று துரத்திசெல்கின்றன. சந்தோஷத் தவிப்புடன் அவர்களை மடக்கிப் பிடித்து கட்டி அணைத்து கிளர்ச்சியுறும் தாயின் நிலையில் நாம் – வாசகர்கள். பதினெட்டு வயது, முதிராத இளைஞன், விதவை ஒருத்தியிடம் காதல் கொள்கிறான். இதிலென்ன தப்பு என்பீர்கள், பிரச்சினை அதுவல்ல, அவள் வயது. அவள் பெண்ணல்ல பெண்மணி. 32 வயது. 14 வருடங்கள் மூத்தவள். அதுவும் தவிர அவனுக்கு சித்தி முறை. நெருக்கடியான பதின் பருவத்தைக் கடக்க மட்டுமல்ல, சுற்றியுள்ள சமுதாயத்தை எதிர்கொள்ளவும் அவனைத் தயார்படுத்துவதும் ஜூலியாதான். புனைவை மையமாகக்கொண்ட அத்தியாயங்களில் (‘வானொலித் தொடராக ஒலிப்பரப்பப்படுகின்றன) ஒவ்வொரு பாத்திரமும் விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள்போல,  தனித்தனியாக கதை சொல்கின்றன, போஜராஜன்போல நமக்கும் விடைதேடவேண்டிய கேள்விகள், ஐயுறு வினாக்கள் அதிலிருக்கின்றன.

பொதுவாகவே மரியோ வார்கஸ் கதைசொல்லலில் ஒரு வேகமுண்டு, ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன்பாக, வரும் வாக்கியத்தின் முதற் சொல் உங்கள் மனதிற்குள் சரிந்திருக்கும். இறுதிப்பக்கம்வரை பிரமை பிடித்தவர்கள்போல ஓடுகிறோம். சமுதாயப் பெருவெளியின் மேடு பள்ளங்கள் கால்களில் அல்ல நம் கண்களில் இடறுகின்றன. சமகால வாழ்வியல் அவரது வார்த்தை எள்ளலில் கூனிக்குறுகுகிறது, வார்த்தை விளையாட்டில் அவர் நிகழ்த்தும் சித்து, வியப்பூட்டுகிறது. இன்றைய உலக இலக்கியப்போக்கை அறியாதவர்கள் கூச்சல் இரைச்சலென பேர்சூட்டலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல அவர் எழுத்தில் உள்ள எள்ளலும், நீர்ப்பரவல்போன்ற நடையும், வார்த்தைச் சித்தும் சாதாரண மனிதர்களையும் நிகழ்வுகளையும் அசாதாரண மனிதர்களாக, அபூர்வ நிகழ்வாக மாற்றிக்காட்டும் ரஸவாதக் கலை வேறு படைப்புகளில் வாசிக்கக் கிடைக்காதது.

ரோஜெர் காஸ்மெண்ட் பட்டுமல்ல, Pantaléon et les visiteuses (Captain Pantoja and the Special Service) நாவலில் கதை நாயகனான  பாந்தலெயோன் பாந்த்தொஜா ஆகட்டும்,  La tente Julia et le scribouillard (Aunt Julia and the Scriptwriter)ல் வருகிற லெ பேடரோ  கமாச்சோ ஆகட்டும் மாரியோ வார்கஸ் லோஸாவின் கதைநாயகர்கள் முக்காலே மூணுவீசம்  முரண்பாடுடைய மனிதர்கள்தான். இங்கே முரண்பாடு எவரிடமில்லை. எல்லோரும் ஏதோஒருவிதத்தில் முரண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான். கொந்தளிக்கும் கடலும், வெடித்து சிதறும் எரிமலையும் நேற்றுவரை அமைதியாக இருந்தவைதான். கொரில்லா யுத்தமும் பயங்கரவாதமும் எவரிடம் பிறந்தது, ஏன் பிறந்தது? சந்தர்ப்பமும் சூழலும் வேறாகிறபோது காந்திமகன் கூட சந்தியில் நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனைதான் கற்றாலும், ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்கப்போகிறேன் என்றாலும் பல நேரங்களில் உணர்ச்சி அறிவை சுலபமாய் வென்றுவிடுகிறது, அன்பாய் இருக்கிற மனவியிடம் கையோங்கிவிட்டு அவள் கைவருடலில் கலங்கவேண்டியிருக்கிறது. மனிதர்கள் அனைவருமே மகாத்மாக்கள் இல்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிற மகாதமாக்களிடமும் ஓர் பத்துசதவீதம் முரண்கள் இருக்கலாம்.  இதுதான் எதார்த்தம், இதுதான் இயற்கை.

————————————-

மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி

“இன்னும் நல்லா இழு”

“எனக்கு முடியலைடா”!

” தோ பாரு! நல்லா உதடுகளை முன்தள்ளிக்குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து பீடிக்கு ஒரு கிடுக்கிப்பிடியிட்டு புகையைத் தம்கட்டி இழுக்கணும்.

” இழுத்தால்”?

” நாளைக்கே என்னைப்போல பெரிய மனுஷன் நீ!” -சொல்லிவிட்டு கலகலவென்று சிரிக்கிறான். அப்போ என்ன வயசிருக்குமென்று நினைவிலில்லை. ஏழாம் வகுப்பு கோடைவிடுமுறையென்று ஞாபகம். வாள் கொண்டு மரம் அறுப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டிவைத்திருந்தார்கள். பள்ளத்தின் இருகரையையும் பிடிமானமாகக்கொண்டு நீள்வாக்கில் மரம் போடப்பட்டிருக்கும் பள்ளத்தில் ஒருவரும் மேலே ஒருவரும் நின்றுகொண்டு மேலும் கீழுமாக சீரான கதியில் வாளை இழுப்பார்கள். அப்பள்ளந்தான் முதலும் கடைசியுமாக பீடியைக் குடித்துப்பார்க்க எனக்கு பயிற்சிகளமாக அமைந்தது. எனக்குக் குரு மண்ணாங்கட்டி.

அவன் பெயர் பதிவேடுகளில் சின்னத்தம்பி என்றிருந்தாலும், அவனுடையை பெற்றோர் மண்ணாங்கட்டியென்றே அழைக்க எங்களுக்கும் அது பழகிப்போயிற்று. அவன் அப்பா ராசு கவுண்டருக்குக் கடைசிகாலத்தில் பிறந்த ஒரே வாரிசு. கிராமத்தில் அப்போது ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில்கூட எதுவுமில்லை. எங்கள் கிராமத்திலிருந்து அரை கி.மீ தள்ளியிருந்த மற்றொரு கிராமத்திற்குச் செல்லவேண்டும். முதல் இரண்டு வகுப்புகள் அவனுடன் படித்திருப்பேன் பின்னர் நானும் எனது சகோதரரும் இரண்டு ஆண்டுகள் தாத்தா கர்ணமாக இருந்த அனுமந்தையென்ற ஊரிலும், பின்னர் ஐந்தாம் வகுப்பிலிருந்து எங்கள் பாட்டி சமைத்துப்போட புதுச்சேரியிலும் படிப்பைத்தொடர்ந்தோம். மண்ணாங்கட்டி பக்கத்து ஊரில் தொடர்ந்து படித்துவந்த ஞாபகம். பிறகு எட்டாம் வகுப்பிலிருந்து  எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீட்டர் தூரத்திலிருந்த புதுச்சேரி மாநிலத்தைத் சேர்ந்த காலாப்பட்டு என்ற ஊரில் படிப்பைத் தொடர வேண்டியதாயிற்று. மண்ணாங்கட்டியுடனான நட்பு தொய்வின்றி தொடர்ந்தது.

எங்கள் வீட்டில் அவனோடு சேராதே என்று உத்தரவு. இருந்தும் வீட்டிற்குத் தெரியாமல் அவனைத் தேடிபோய் பழகுவேன். எனக்கு அப்போது சிவாஜிபடங்கள் என்றால் பிடிக்கும் அதற்கு இரண்டுகாரணங்கள். அப்பா காங்கிரஸ்காரர் என்பது ஒரு காரணம். மற்றது மண்ணாங்கட்டி. சிவாஜிபோல வசனம் பேசுவான். கிராமத்தில் தெருக்கூத்தோ, நாடகமோ நடந்தால் மறுநாள் அதில் வரும் முக்கிய பாத்திரங்களாக மாறி என்னைப்போல பையன்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நடித்துக்காட்டுவான். தவலையைத் தலைக்குப்புற கவிழ்த்து நீச்சலடித்துக்கொண்டு மறுகரைக்கு போய்வருவான். பெண்கள் முன்னால் திடீரென்று காற்சட்டையை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக இடுப்பை ஒடித்து ஆடுவான். அவர்கள் ‘எடு துடைப்பக் கட்டையை! ‘எனக்கூவிக்கொண்டு துரத்துவார்கள், நின்று சிரிப்பார்கள், இவனும் பதிலுக்குச் சிரிப்பான். எனக்கு மட்டுமல்ல விடலைப்பருவத்தில் என் வயது பையன்கள் பெண்கள் என எல்லோருக்கும் அவன்தான் ஹீரோ. ஒருநாள் உள்ளூர் குளத்தில் வெகு நேரம் ஆட்டம்போட்டுவிட்டு கரையேறியபோது அவன் போடவிருந்த கால் சட்டையிலிருந்து பீடியொன்று விழுந்தது.

– ஐய்யயோ நீ பீடியெல்லாம் பிடிப்பாயா? எனக்கேட்டேன்.

– நான் பெரியமனுஷன் ஆயிட்டேன் பிடிக்கிறேன்

– எனக்கும் பிடிக்கணும்போல இருக்குது கொடேன்.

– இல்லை ஒரு பீடிதான் இருக்குது, நாளைக்கு உங்க வீட்டுலேயிருந்து காசு எடுத்துவா. பீடி புடிக்கக் கற்றுதரேன்- என்றான்.

மறு நாள் மரமறுக்கும் பள்ளத்தில் அவன் பீடிபிடிக்க எனக்குக் கற்றுதந்தபோது, பதட்டமாக இருந்தது. முதற்புகையைவிட்டபோது அவன் கூறியதைபோலவே சட்டென்று வளர்ந்து பெரிய மனுஷன் ஆன நினைப்பு. ஆனால் வீட்டிற்குத் திரும்பும்போது அச்சம் நெஞ்சுகொள்ள இருந்தது. யாராவது பார்த்திருப்பார்களோ என்ற கவலை. அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவாரென்று தெரியும். அவருக்கு அது மகா பெரிய தப்பு. ரொம்பக் கோபக்காரர். அன்றைக்கு ஒளிந்து புகைவிட்டபோது அப்பா முகத்தில் விட்டதுபோலத்தான் இருந்தது. அப்பாவை ஜெயித்துவிட்டதாக உணர்ந்தேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது வீட்டிற்கு நுழைந்ததும் நான்செய்த முதல் காரியம், அப்பாவின் கதர்த் துண்டை வாய்க்கு நேராகவைத்து, வாயில் இன்னமும் புகை பத்திரமாக இருப்பதைப்போல அதில் பலமுறை ஊதிய ஞாபகம். விடலைப்பருவம் அன்றையதினம் மனதிற் ஏற்படுத்திய இரசவாதத்திற்கு ஒப்பீடுகளில்லை.

*                         *                                       *                                     *

– அப்பா என் பிரண்டுக்கு பிறந்த நாள்.

– நான் காரில் கொண்டுபோய் விடவா.

– இல்லை அவள் அம்மா வந்து அழைத்து போவாங்க, நிகழ்ச்சிக்குப்பிறகு அவங்களே கொண்டு வந்து விடுவாங்க..

-*                                     *                                             *                          *

– பன்னிரண்டு மணி ஆகப்போகுது கம்ப்யூட்டர்ல என்ன பண்ற? வேளையா படுக்கணுமென்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்.

*                                    *                                       *                                    *

– ஒரு நண்பர் வீட்டுலே திருமணம், வீட்டுக்கு வந்தவங்க உன்னையும் தானே அழைச்சாங்க வாயேன்.

– இல்லை நான் வரலை. நீங்க போயுட்டு வாங்க, எனக்கு யாரையும் அங்கே தெரியாது.

*                              *                                     *                              *-

மேற்கண்ட உரையாடல்கள் எனக்கும் எனது இளையமகளுக்கும் ஆனது. அவளை இலேசாக கண்டித்தால் போதும், சட்டென்று அழுதுவிடுவாள். அவள் அம்மா, “இன்றைக்கு உனது பிறந்த நாளாயிற்றே, வேண்டுமென்பதைச் சொல்லேன், செய்துதரேன்”- என்பாள். எங்களுக்குக் கிடைக்கும் அவளுடைய எதிர்வினை தோளைக்குலுக்கி, உதட்டை பிதுக்குவது. ஏறக்குறைய இதேபோன்றதொரு உரையாடலை, அனுபவத்தைக் கடந்த காலத்தில் எனது பிற பிள்ளைகளுடன் பெற்றிருப்பேன்.

எனது பெற்றோர்களுக்கும் எனக்குமான விடலைப்பருவ உறவு எப்படி?  அப்பா நடைவாசலில் நுழையும்போதே, வீட்டைவிட்டு ஓடிவிடுவேன். அப்பாவின் மூர்க்கம் ஊரறிந்தது. அம்மாவிடம் அப்பா சொல்லுவது, ‘உனக்கு சமைக்கமட்டுமே தெரியும்’. அதையே கொஞ்சம் மாற்றி எங்களிடம், ” நீங்க சின்னப்பையன்கள், உங்களுக்கு ஒன்றும் தெரியாது” -என்பார். இதில் என்னைவிட மூன்று வயது பெரியவராக இருந்த அண்ணனிடத்தும் இதே அபிப்ராயத்தை வைத்திருக்கிறாறே என்பதில் எனக்கு சந்தோஷம். கொஞ்சம் தைரியத்துடன் அவரிடம் நாங்கள் பேசிவிட்டால் போதும், பிறகு இரண்டொரு மாதத்திற்கு  மறக்க முடியாதென்றாகிவிடும்.  தலைமுடி எப்படியிருக்கவேண்டும், சட்டை எப்படி இருக்கவேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம், வீட்டில் என்ன சமைக்கலாம் எல்லாம் அவர்.. அவர்.. அவர். எனது விடலைப்பருவம் அப்பா நிழலில் மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி.

சொல்லப்போனால் விடலைப்பருவத்தை உடல் ஏற்றுக்கொண்ட தருணம் தொடங்கி அதன் இயல்புக்குகந்த சில எதிர்வினைகளை நடத்தியிருக்கிறது. உடல், மனம் இவற்றிலேற்பட்ட மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையில்லை. விரல் முனையில் ஊடகங்கள் இல்லாதகாலம்.  என்னைச்சுற்றியிருந்த மனிதர்களின் தாக்கமும் குறைவாகவே இருந்தது. எனது தந்தையின் முரட்டு சுபாவத்திற்கு எதிரான குணம் கொண்டிருந்தவர்களை அல்லது அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்புவர்களைத் தேடிச்சென்று பழகினேன். எங்கள் வீட்டிற்கு வந்தால் தயங்கி நிற்பவர்கள் இல்லங்களைத்தேடி  அவர்களுடைய வீட்டுத் திண்ணையில் சென்று அமருவேன். விடலைப்பருவத்தில் முரட்டு அப்பாவிற்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளால் கொடி பிடித்ததாக நினைப்பு. அப்பா பழுத்த காங்கிரஸ்காரர். எங்கள் ஊர் தமிழாசிரியர் உள்ளூர் எம்.ஜி.ஆர். ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிராமத்தில் முதன் முறையாக தி.மு.க கொடியை ஏற்றிவிட்டார். அப்பா அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். கொடிக்கம்பமும் சின்னாபின்னமானது. நான் தி.மு.க அனுதாபியானது அப்படித்தான். அப்பாவின் மேலிருந்த கோபம் தமிழாசிரியரைக் கொண்டாட உதவிற்று, அவர் வீட்டிற்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அவருக்கு விடலைப் பருவத்தில் ஒரு பெண் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

முதன் முதலாக எனது குமர பருவம் உணர்த்தப்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அப்போதெல்லாம் அமெரிக்க அரசாங்கம் இந்திய பள்ளி மாணவர்களுக்கு பால் மாவும், மக்காச்சோள மாவும் CARE என்ற அமைப்பின் கீழ் இலவசமாக வழங்கிவந்தார்கள். இரண்டுமாதத்திற்கு ஒரு முறை, யூனியனுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்துவரவேண்டும். ஒருவாரமாக பெய்து கொண்டிருந்த மழையில் ஏரிகுளங்களெல்லாம் நிரம்பிவழிந்தன, கலிங்கல் வழிந்து ஓடையில் இடுப்பளவு தண்ணீர். கிராமத்திற்கு வந்திருந்த நான், உள்ளூர் பையன்களுடன்  கேர் பொருட்களைக்கொண்டுவர அவர்களுடன் தயாரானேன். ஆசிரியை முன்னால் போய்க்கொண்டிருக்கிறார். பையன்கள் நாங்கள் அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தோம்.

– என் பின்னாலேயே வரவேண்டும், ஆங்காங்கே தண்ணீர் குளம்போல நிற்கிறது, நீங்கபாட்டுக்கு எங்கேயாவது போய் தண்ணிரில் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள் என்று ஆசிரியை எச்சரித்திருந்தார்.

எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஆசிரியை திடீரென்று ஒரு புதர் மறைவில் ஒதுங்க நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பின்னால் போய் நிற்க, அவர் பதற்றத்துடன் எழுந்து எங்களை முறைத்ததையும், “- ஏண்டா தடிப் பசங்களா ஒரு பொம்மனாட்டி அவசரத்துக்கு ஒதுங்கிறதைப் புரிஞ்சுங்க மாட்டீங்களா? எனக்கேட்டுச் சிரித்ததையும் ஜென்மத்திற்கு மறக்கமுடியாது.

அப்போதும் மண்ணாங்கட்டிதான் பதில் சொன்னான்:

– நீங்கதானே டீச்சர் உங்க பின்னாடியே வரச்சொன்னீங்க!

– நீ பிஞ்சிலேயே பழுத்தவனாயிற்றே என்பது ஆசிரியையிடமிருந்து வந்த பதில். அவள் சொன்னவாக்கு கூடிய சீக்கிரம் பலித்தது. நான் பத்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தபோது, அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, நான் புமுகவகுப்பு படிக்கிறபோது இரண்டு குழந்தைக்கு அவன் தகப்பன். நான் கல்லூரியில் சேர்ந்தபோது இறந்துபோனான்.

எட்டாவது வகுப்பில் ஆரம்பித்து கல்லூரியில் புகுமுக வகுப்புவரை எனது குமரப்பருவம் நீடித்ததாகச் சொல்லலாம். துளசி என்ற ஆசிரியர் எங்கள் ஊரில் தங்கி பக்கத்து ஊர் பள்ளியில் பணியாற்றினார். வெகு சன பத்திரிகைகள் பலவும் அவர் வீட்டிற்கு வரும். அவர் படித்து முடித்த மறுகனம் அவற்றை வீட்டிற்குக்கொண்டுவந்து படிப்பேன். விடலைப்பருவ இச்சைகளை, தேடல்களை கூர்தீட்டியவை அவை. ஜெயராஜ் படங்களுக்காகவே சுஜாதாவை வாசிக்க நேர்ந்ததும் விடலைப்பருவத்தில் நிகழ்ந்ததுதான்.  ஒரு முறை வீட்டில் திதி கொடுக்கவேண்டுமென்று மாவிலையும் சுள்ளியும் ஒடித்துவரசொல்கிறார்கள்.  கையெட்டும் தூரத்தில் சுள்ளிகள், மாங்கொத்து. ஒடிக்கமுடியும் என்கிறபோதும், உறவுக்கார கன்னிப்பெண்ணொருத்தியைக் பார்த்த வேகத்தில் எவரெஸ்டில் ஏறுவதாக நினைத்துக்கொண்டு மடமடவென்று மரத்தில் ஏற, தாங்கிய கிளை முறிய, விழுந்ததைத் தொடர்ந்து  கட்டுபோட ஒரு மாதம் புதுச்சேரில்லருகில் ஓட்டேரிப்பாளையம் என்ற ஊருக்குப் போய்வந்ததற்கும் பருவக்கோளாறுக்கும் சம்பந்தமிருக்கிறது. விடலைப்பருவம் உடைகள் விஷயத்தில் அக்கறைகொள்ளவைத்திருக்கிறது. சொற்களை கவனமாக உச்சரிக்கவைத்திருக்கிறது. ஆசிரியர்களைக்காட்டிலும் ஆசிரியைகளிடத்தில் கூடுதலாக மரியாதை செலுத்தவைத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆசிரியர்கள் எங்கள் வகுப்புத் தோழிகளிடம் கடலைபோட்டிருக்கிறார்கள்.

அவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். அவள் எங்கள் வகுப்பு தோழி. எப்போது பாடினாலும் பி. சுசீலாவின் ‘நீ இல்லாத உலகத்திலே’ என்றபாடலை இனிமையாகப் பாடுவாள்.  அவள் பாடியதெல்லாம் அந்த அறிவியல் ஆசியருக்காகவென்று பின்னர்தான் தெரிந்தது. இருவருமாக சேர்ந்துகொண்டு பையன்களாகிய எங்களை நன்றாக ஏமாற்றியிருந்ததை காலம் தாழ்ந்தே புரிந்துகொண்டோம். அவள் வயதென்றாலும் எங்களை அவர் விடலைப்பையன்களாகக்கூட நடத்தவில்லை. அதற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்புவரை எங்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தவர் ஓர் ஆசிரியை, திருமணம் ஆகாதவர். அவர் அறிவியல் பாடங்களுக்கு கையேட்டில் படம் வரைகிறபோதெல்லாம் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறதென்று எழுதுவார். அவரும் நல்ல சிவப்பு, அழகுவேறு.  எனக்கும் நித்தியானந்தம் என்றொரு சக நண்பனுக்கும் அவரிடம் பாராட்டைப்பெறுவதில் கடுமையான போட்டி இருந்தது. ஆசிரியருக்குப் பதிலாக ஆசிரியைகளாக இருந்து பாடமெடுத்திருந்தால் எல்லாவற்றிலுமே கூடுதலாக மதிப்பெண்பெற்றிருப்போமென நினைக்கிறேன்.

விடலைப்பருவத்தை எப்படிக் கடந்துவந்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எபோது ஆரம்பித்தது எப்போது முடிவுக்குவந்ததென்பதைத் துல்லியமாக நூல் பிடித்து பிரித்துணர்ந்த அனுபவம் எனக்கில்லை. ஆனாலும் இதுவும் அதுவுமாக அலிஸ்ஸ¤க்குத் திறந்த விந்தையுலகம் எனக்கும் திறந்து வண்ணமயமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது. குமரப்பருவத்தில் புதுவீடுகட்டி குடித்தனம்போனதுபோல ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்து, கதவைத் திறந்து, காலெடுத்துவைத்து, பாய்போட்டோ போடாமலோ உட்கார்ந்து, எழுந்து, நடந்து, வாசங்களை நுகர்ந்து, கடந்த தருணங்களும் சிதைந்த கனவுகளும் எத்தனையெத்தனை?

அன்ன போழ்தினிலுற்ற கனவினை

அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? (பாரதி)

————————-

 

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2013.

1. லெ.கிளேசியோ – விசாரணை

எனது மகன் குடும்பமும், இளையமகளும், லாஸ் ஏஞ்ஜெல்ஸில் வசிக்கும் எனது பெரிய மகளைப்பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவருமே ஹவாய்த் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். எனது மனைவியுடன் செல்ல விருப்பமிருந்தது. கிளேஸியோ தடுத்துவிட்டார்? கடந்த இரண்டுமாதமாக வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக பணி, நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ.கிளேசியோவின் முதல் நாவலும் அவருக்கு பிரெஞ்சு படைப்புலகின் மிகப்பெரிய கொன்க்கூர் பரிசை பெற்றுத் தந்த “Le Proces -Verbal’ நாவல் காலச்சுவடு பதிப்பகத்திற்காக தமிழில் வருகிறது. அதன் நுட்பமான சொல் தேர்விற்கும், நெஞ்சை லுக்கும் சொல்லாடலுக்கும் புகழ்பெற்றது. முடிந்தவரை அதன் அடர்த்திக்குப் பங்கமின்றி மொழிபெயர்த்து களைத்திருக்கிறேன்.

2. அம்பை – சிறுகதைகள் – பிரெஞ்சில் வருகின்றன.

நண்பர் கண்ணன் முயற்சியால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் வருகின்றன. புகழ்பெற்ற பிரெஞ்சு பதிப்பகம்   வெளியிடுகிறது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவருடன் இணைந்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லாம் ஒழுங்காக நடந்தால் 2014 ஜனவரியில் அம்பை சிறுகதைத் தொகுப்புகளை எதிர்வரும். ஜனவரியில் பிரெஞ்சுப் புத்தககக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.

3. ஆக்கமும் பெண்ணாலே – முனைவர்  எ. இராஜலட்சுமி.

முனைவர் எ. இராஜலட்சுமியைப் பற்றி  என்னிடம் முதலில் குறிப்பிட்டவர், அவருடன் பணியாற்றும் புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் நண்பர் மு.இளங்கோவன்.  உங்கள் ‘ மாத்தா ஹரி நாவலைப் பற்றி முனைவர் எ. இராஜலட்சுமி தனது நூலொன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார், தாங்கள் புதுச்சேரிவந்தால் தெரிவிக்கும்படி சொன்னார், தங்களை சந்திக்க விருப்பமாம் என்றார். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், புதுவையில் இலக்கியம் புத்தகக் கடை நடத்தும் நண்பர் சீனு தமிழ் மணி. பொதுஉடமை, பெரியார், பசுமையைப் போற்றுதல் என்பதை ஆரவாரமற்று செய்பவர். அவரது ஏற்பாட்டின்படி பேராசிரியை எ. இராஜலட்சுமியை அவரது புத்தகக்கடையில் சந்தித்தேன். ஒன்றிரண்டு நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். ஒன்று ‘ஆக்கமும் பெண்ணாலே’ மற்றொன்று ‘நீயும் நானும் நாமும்’ என்ற கவிதைத் தொகுப்பு. இரண்டைப் பற்றியும் எழுதலாம் எழுதவேண்டும். ஒருவேளை மாத்தாஹரி பற்றி அவர் எழுதவில்லையெனில், அவர் யாரோ நான் யாரோ? எனக்கு அவர் எழுத்துகள் பற்றிய எந்த அறிமுகமும் நிகழ்ந்திருக்காது. ஓரளவு அறிமுகமானவற்றைத் தேடிப்படிக்கிறோம். தமிழில் நெட்வொர்க் இருந்தால் அல்லது இருநூறு ரூபாயை என்வலோப்பில் வைத்துக்கொடுத்தால் அல்லது பூசாரிகளைக் கவனித்தால் அவ்வைக்குப்போகவிருக்கும் நெல்லிக்கனியையும் தட்டிப் பறிக்கலாம். மேடைக்கும் மாலைக்கும் ஏற்பாடு செய்து  சந்தோஷப்படலாம். முனைவர் எ. இராஜலட்சுமிபோல கேட்பாரற்ற படைப்பாளிகள் தமிழ் நாடெங்கும் இருக்கிறார்கள்.

ஆக்கமும் பெண்ணாலே

இக்கட்டுரைத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. மொத்தக் கட்டுரைகளும் பெண்படைப்பாளிகளின் படைப்புகளை முன் வைத்து எழுதப்பட்டவை, வெண்பொங்கலில் கல் சேர்ந்ததுபோல ‘இடையில் மாத்தா ஹரி’ என்ற எனது நாவலைப்பற்றிய கட்டுரை, ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சங்ககாலம் தொட்டு பெண்படைப்பாளிகளின் படைப்புகள் மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலை எங்கனம் திடப்படுத்திக்கொண்டனர் என்பதை அப்படைப்புகளைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். கட்டுரையாளர் ஒரு தமிழ்ப் பேராசிரியை, முனைவர் வீ. அரசுவின் வழ்காட்டுதலில் உருப்பெற்றவர் என்பதால்  பத்தாம் பசலித்தனமான பழங்கதை பேராசிரியர்களின் ஊசல்வாடையும் ஊத்தை நெடியும் கொண்ட சிறைச் சவ்வை வெகு எளித்தாகக் கிழித்துக்கொண்டு சங்கத்தமிழ் நவீனத் தமிழில் இரண்டிலும் சம நிலையில் கால் ஊன்ற முடிகிறது.

பொதுவாகப் பெண்கள் சமூகம் சார்ந்தும், பொருள் சார்ந்தும் பாலின வரிசையில் இரண்டாம் இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ள கொடுமை இன்று நேற்றல்ல வெகுகாலம் தொட்டு, இப்பூமியில் எல்லாப் பரப்பிலும், எல்லா ஜீவராசிகளிடமும் -( தேனிக்கள் வாழ்க!) இருக்கிறது. நான் என் மனைவியை அதிககமாக நேசிப்பதாலோ என்னவோ ஆண் சமூகம் சார்ந்து இக்குற்ற உணர்விற்கு அவ்வப்போது, (நெடுக அப்படியொரு உணவுக்கு இடம் அளிப்பதில்லை நானும் ஒரு ஆண்தானே?) ஆளாகிறேன். இதில் வாசிக்கிற உங்களிலும் சிலர் நானாக இருக்கலாம். பெண்களிடம் ‘அவ்வப்போது’ அனுசரணையாக நடந்துகொள்ளும் விழுக்காடும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வாழ்நிலையைத் துணிச்சலாக எதிர்கொள்கிற பெண்களும் இச்சமூகத்தில் குறைவு. ஆணாதிக்க சமுதாயத்தை முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது மேற்கத்திய உலகம் என நினைத்துக்கொண்டிருக்க ஆசிரியர்  நமது சங்ககால பெண்கவிஞர்களை கை காட்டுகிறார். அவர்களை (பெண்களை) ஓர் அற்ப உயிரியாக பார்த்த சமூகம், அவர்கள் விருப்பத்தையும் வெளிகளையுங்கூட கண்ணியம், கட்டுப்பாடென்ற அலகுகளால் முடக்கிவைத்த நூற்றாண்டு அது, எனினும் துணிச்சலாக “சமூகக் கட்டுபாடுகள், மரபான கருத்தாக்கங்கள், சூழல் ஆகிய அனைத்தும் இறுகிக் கிடந்தபோதும்” தங்கள் கருத்தை முன் நிறுத்த முனைந்த பெண்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் உணர முடிகிறது: பரத்தை வீடுகளுக்குச் சென்று திரும்பும் தலைவனின் நடத்தையைக் கண்டிக்கும் பாடல்; உடன்கட்டை ஏறுதலுக்கு, கைம்மை நோன்பிலுள்ள சங்கடங்களைக் காரணமாக முன் வைக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஆகியவற்றை சமூக இயக்கத்தில் இயங்கியல் ரீதியான வரையறைகளை மீறி வெளிப்படும் குரல்கள் என்கிறார் கட்டுரையாளர்..

மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியம் – புதுக்கவிதை பெண்படைப்பு வெளியை இணைக்கும் முயற்சிக்கான களத்தை சீர் படுத்துவதில் முனைகிறது. சில சங்க கால கவிதைகளோடு தற்கால கவிதைகள் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்லப்படிருக்கிறது. அதன் பிறகு சமகால பெண் கவிஞர்களின் பல்வேறு விதமான படைப்புக் குரல்களைக் கேட்கிறோம். திரிசடை (‘பனியால் பட்ட பத்து மரங்கள்), “கவிதைகள் பூராவும் தேடிப்பார்த்துடேன் ம்ஹீம்..ம்  மருந்துக்குக்கூட ஒரு யோக்கியமான ஆண்பிள்ளையைக் காணோம்” என சுஜாதாவின், சந்தோஷக் குட்டுபட்ட ரோகினியின் கவிதைத் தொகுப்பு, தேவமகளின் ‘முரண்’, இவரா,  சுபத்ரா, இளபிறை மணிமாறன், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா என்று என்று ஆரம்பித்து தி.பரமேஸ்வரி, பாலபாரதி, அழகு நிலா, தாராகணேசன், லீனா மணிமேகலை, அ. வெண்ணிலா, கனிமொழி என நீளும் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியனையும், மாலதி மைத்ரியையும் ஆசிரியர் வேண்டுமென்றே தவிர்த்ததுபோல தெரிகிறது. கட்டுரையாளர் நவீனக் கவிதைப்போக்கில் குறிப்பாக 2000த்திற்குப் பின்னர் எழுதப்படும் கவிதைகளில் அதிகம் நிறைவுகாணாதவராக இருக்கிறார். அதற்கு ஒருவகையில் இதழ்களும் பொறுப்பென்பது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

கட்டுரையாளர் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் மனதிற்கொள்ளவேண்டியவை:

1. ஆணின் சிறப்புகளை அங்கீகரிக்கும் தன்மையும், தனக்கு இன்னல் தரும்போது ஆணை விமர்சிக்கும் மனப்பாங்கும் சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன (பக்கம் -43)

2. உணர்வை மட்டுமே மையப்படுத்தி, அதற்கேற்ப மொழியை கையாண்டமையினாலேயே இன்றும் சங்கப் பாடல்கள் உயிர்ப்போடு விளங்குகின்றன. வெற்று சொற்களின் கோர்வையாக எழுதி உடனடிக் கவனத்தை கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்க்குரியவை மட்டுமன்று, ஆபத்தானந்துங்கூட. (பக்கம் 43) -பெண்கவிஞர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல, ஆண் கவிஞர்களுக்கும் உரியதுதான்.

3. ” பாலியல் தொடர்பான செய்திகளின் வெளிப்பாட்டில் எழுத்தாளன் உணர்வுகளாகவே அவற்றை அடையாளம் காணக்கூடிய ஆபத்து இருப்பதால் பலரும் இத்தலைய உணர்வுகளைத் தாமே தணிக்கை செய்துகொண்டு எழுதுகின்றனர்” (ஹரி விஜயலட்சுமி 2003:37) -தொகுப்பில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இக்கட்டுரைத் தொகுப்பு ஓர் ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது, ஆங்காங்கே தக்கச் சான்றுகளுடன், ஆழமான விவாதங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நல்ல பல கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கையாண்டிருப்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகவில்லை என்பதையும், கவிதை அழகியலில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் தெரிவிக்கின்றன.

கடைசியாக இந்நூலில் இடம்பெற்றிருந்ததொரு கவிதை:

“புதுக்கடை திறக்கு முன்
மாமா விளம்பரமளித்தார்
சுறுசுறுப்பான அழகான
விற்பனை பெண்கள் தேவை
மாமி ஆட்சேபித்தாள்
மாமா சொன்னார்
பையன் திருடுவான்
தம்மடிக்கப்போவான்
சட்டம் பேசுவான்
தனிக் கடைபோடுவான்
பொட்டை புள்ளைக
சிவனேன்னு
கொடுத்த காசுக்கு உழைக்கும்
வாரவனுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியா
கூட்டம் குறையாது
மாமா சொல்லாதது
அப்பப்ப நானும்
தொட்டுப் பார்த்துக்கலாம்”

– ‘தேவமகள் (1981:64)

—————————————————
ஆக்கமும் பெண்ணாலே

ஆசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமி

முரண்களரி பதிப்பகம்
34/25 வேதாச்சலம் தெரு, காந்தி நகர்
சின்னசேக்காடு, மணலி, சென்னை-600 068
அலைபேசி:9841374809

————————————