மொழிவது சுகம் ஜூன் 6 -2015

விரல் குறைந்த மாட்டுத் தரகர்கள்

 

உலகமெங்கும் கோலோச்சுக்கொண்டிருக்கிற கொக்கோ கோலாவிற்குக்கூட வாடிக்கையாளரை நிரந்தரமாக்கிக்கொள்ள தொடர்ந்து மீடியாவில், விளம்பரத்தில் இடம்பெற்றாகவேண்டும். காம்ரேட்டுகள் உலகிற்கும் சரி, இது பொருந்தும். தமிழ் படைப்புலகும் இதற்கு விதிலக்கல்ல. ஒவ்வொரு சிற்றிதழுக்கும் குழு இருக்கிறது, படைப்பிலக்கியம் என்ற பெயரில் போற்றுவதும் தூற்றுவதும் இருக்கிறது. கிராமங்களில் இலக்கிய உரையாடல்கள், சந்திப்புகள் என்ற பெயரில் பல நேரங்களில் ஊசல் பொருட்களில் வாசனாதி திரவியங்களைச் சேர்த்து “சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி” என வாதிட நண்பர்களை வைத்திருக்கிறார்கள். மாட்டுத் தரகர்கள் ஒரு மாட்டினை விலைபேச தன் கையையும் எதிராளியின் கையையும் ஒரு துண்டால் மறைத்து, விரல்களைபிடித்து விலை பேசுவார்கள். ஒரு விரலுக்கு நூறு ரூபாய் என்று கணக்கு. எங்கள் ஊரில் வெங்கிட்டு என்ற மாட்டுத்தரகரை 900த்திற்கு மேல் பேரம் பேச தெரியாது எனக்கிண்டல் செய்வார்கள், காரணம் அவருக்கு இடது கையில் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தன. இந்த வெங்கிட்டுகள் தமிழ்ப் படைப்புலகிலும் இருக்கிறார்கள் என்பதை சென்னையில் நடந்த ஒர் நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.
அண்மையில் ஒரு எழுத்தாளரிடமிருந்து மடல் வந்தது. எழுதியவர் என் வீட்டுத் துணைவியார் நலனையெல்லாம் விசார்த்துவிட்டு “தமது சிறுகதைகள் பிரெஞ்சில் வரவேண்டும் என்று நினைப்பதாகவும் அதற்கு என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? எனக் கேட்டிருந்தார். இதுதான் முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் அவரிடமிருந்து இதுபோன்ற கடிதங்கள் வந்திருந்தன. இவரைப் போல பலருக்குத் தங்கள் படைப்பு பிரெஞ்சில் இடம் பெறவேண்டும் என்ற அவா இருக்கிறது. எனக்கு எழுதவும் செய்கிறார்கள். தவறில்லை. இயல்பான ஆசைதான், யாருக்கு இல்லை? பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு என்பது குறிப்பாக பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அந்நாவல் வெளிவந்த மொழியில் பெற்ற வரவேற்பினை யொட்டி ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ இடம் பெறுகிறது.. தமிழ்ச்சூழலில் அது நல்ல நூலாக இருந்தாலுங்கூட அதைப்பற்றி படைப்புலகம் சார்ந்திராத பிறர் பேசுவது குறைவு. தமிழ்ப் படைப்புகளை படைப்புலகம் சார்ந்திராதவர்கள் வாங்குவதும் குறைவு. இந்த எழுத்தாள வாசகர்களை நம்பியே தமிழ் படைப்புகள் இருக்கின்றன இந்நிலையில் பெரும்பாலான படைப்பிலக்கியவாதிகள் ” நீ என்னைப்பற்றி எழுது, நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன், அல்லது நீ என்பின்னால் நில் நான் உன்னைப்பற்றி வலைப்பூவில் எழுதுகிறேன்” ” பரிசுக்கு ஏற்பாடு செய்கிறேன்” எனப் பரஸ்பர ஒப்பந்தத்துடன் செயல்படுகிறார்கள். எனவே நல்லப் படைப்பாக இருந்தாலுங்கூட, சந்தேகிக்க வேண்டியிருக்கிறது, தமிழ்ச் சமூகம் அப்படியொரு சூழைலை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. நீலக்கடல் நாவல் வெளியீட்டின் போது கி.பி. அரவிந்தன, புதுச்சேரியில் ஒருவர் பெயரைக்கூறி அவரைத் தெரியுமா? எனக்கேட்டார். தெரியாது என்றேன். இதென்ன புதுச்சேரியை சேர்ந்தவர் என்கிறீர்கள் அவரைத் தெரியாது என்கிறீர்கள் எனக்கூறி அவர் பெயரைத் தெரிவித்தார். நீலக்கடல் வெளியீட்டின்போது அவரைச் சென்று பார்த்தேன். வருகிற பத்திரிகையாளர்களுக்கு உறையில் வைத்து பணம் தரவேண்டும் என்றார். நான் பதில் பேசாமல் வந்துவிட்டேன். அண்மையில் ‘கா·ப்காவின் நாய்க்குட்டி நாவல் விழா செய்தி புதுச்சேரி நாளிதழ்களிலும் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த்த தமிழ்ச்சங்க தலைவரால் கிடைத்த விளம்பரம் அது, இல்லையென்றால் “கா·ப்காவின் நாய்க்குட்டி வெளியீட்டு விழா” வெளியில் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை ஆக பெருமாள் -பூங்குழலி தம்பதிகளுக்கு மீண்டும் நன்றி.

 

இந்தியாவிலிருந்து 28 மே திரும்பியிருந்தேன், பத்து நாட்கள் ஆகப்போகிறது. இங்கிருந்து போகிறபோது பல எழுத்தாளர்களைப் பார்க்கவேண்டுமென திட்ட மிட்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் எஸ். ராமகிருஷ்ணன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் தமிழவன், பாவண்ணன், ந. முறுகேசபாண்டியன், கி.அ. சச்சிதானந்தன் ஆகியவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும் என்ற ஆசையில் புறப்படுவதுண்டு. அது கைக்கூடுவதில்லை. மூன்றுவாரங்களை ஒதுக்கிப் போகிறபோது எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. போகிறபோதெல்லாம் வீடு பழுது பார்க்கின்ற வேலைகளில் கைவைப்பதால் அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை இதன் விளைவாக எழுத்துலக நண்பர்களைப் பார்க்க முடிவதில்லை. இந்தியாவில் நான்கைந்து மாதம் தங்கினால் நிறைய எழுத்தாளர் நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியும். இங்கும் கடைநிர்வாகத்தில் சிக்கலான நேரங்களில் எனது தலையீடு அவசியமாக இருக்கிறது. எனவே அதிகப்பட்சம் ஒருமாதத்திற்கு மேல் தங்க முடிவதில்லை. ஈரோது தமிழன்பன் வீடுவரைசென்று, “இந்த நேரத்தில் அவரைச் சந்தித்து தொந்திரவு செய்யவேண்டுமா?” எனத் திரும்பியதும் நண்பர் பஞ்சாங்கத்துடன் கூடுதலாக உரையாட வாய்ப்பு அமையவில்லை என்பதும் பெருங்குறை.

 

சில சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடந்தன நண்பர் பஞ்சாங்கம், நாயகர், தமிழ்மணி ஆகியோருடன் எனது கிராமத்தில் சில மணிநேரங்களைச் செலவிட்டோம். மறக்க முடியாத தருணம் அது. அதுபோல சென்னையில் தமிழவன் நண்பர் முத்துகிருஷ்ணனைச் சந்தித்தது, .

——————————————-

கா·ப்காவின் நாய்க்குட்டிக்கு விடுதலை

கடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.

 
காலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.

 

தமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.

 

ஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.

 

பிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

 
நண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.

 

நா.கிருஷ்ணா

“காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

Kaafkaavin Naaikkutti Wrapper Continue reading

காஃப்காவின் நாய்க்குட்டி – நாவல் ( காலச்சுவடு பதிப்பகம்)

அன்பினிய நண்பர்களே

வருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.
நிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

__________________________________________________
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை

 

காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ? பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.

 

இந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்குமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)

– நா.கிருஷ்ணா
nakrishna@live.fr

எழுத்தாளன் முகவரி -18: நூலகமும் எழுத்தாளனும்

‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.

 

வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.

 

நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?

 

வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.

 

நூலகம் ஏன்?

 

வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது

 

எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.

 

சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.

————————————

“வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழி”

பாரிசீலிருந்து கவிஞர் கி.பாரதிதாசன் அனுப்பியிருந்த செய்தியைத் மின்ஞஞ்சலில் வாசித்தேன். பின்னர் திரு. முருக பத்மபாபனும் அச்செய்தியை தெரிவித்திருந்தார். சில கணம் துடித்து பின்னர் மனதைச் சமாதானபடுத்திக்கொண்டேன். திரு மதிவாணன் புதுசேரியில் இறந்தார் என்பதுதான் அச்செய்தி.

திரு மதிவாணன் ஆசிரியப்பணியில் இருந்தவர், அண்மைக்காலத்தில் பிரான்சுக்கு குடியேறியவர். இறப்பு தொட்டுவிடும் தூரத்தில் அவர் இல்லை. எப்போதும் நமது வாசலில் இறப்புக் காத்திருக்கிறது எனபது உண்மை. இன்றோ நாளையோ பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டுமென்பது இயற்கை நியதி. எனினும் சில இழப்புகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன.

பாரீஸ் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செயராமன், நண்பர் பெஞ்சமின் லெபோ ஆகியோருடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்குவந்திருந்தார். அதுதான் மதிவாணன் என்ற இளைஞருடனான  முதல் சந்திப்பு. அதற்கடுத்து எப்போதேனும் இரண்டொரு முறை பாரீஸ் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது, மொத்த சந்திப்பைக் கணக்கிற்கொண்டாலும் சுமார் 30 நிமிடம் அவரோடு உரையாடியிருப்பேன். பல நேரங்களில் தமிழ் இனத்தின்மீது கசப்பும் வெறுப்பும் கோபமும் வருவதுண்டு, ஆனாலும் அவர் வேறுமனிதராக இருந்தார். வித்தியாசமானவராகத் தெரிந்தார். ஒரு மூன்றுமணிநேரம் விழா எடுத்து, ஆரவாரமாக தமிழின்பேரால் மேடையில் ஒரு கூட்டம் முட்டிமோதிக்கொண்டிருக்கும், ஆனால் இவரோ பரமசாதுவாக பார்வையாளர் கூட்டத்திடை, வாடும் செடிக்கு தேடித் தேடி நீர்வார்ப்பதுபோல வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழியால் மனிதர்களைப் உபசரித்து, தமிழ் வளர்த்த இளவல். புதுச்சேரி தமிழரில் ஓர் அபூர்வம், பசுமை மங்கா அருகம்புல். ஒதியமரங்களைக் காட்டிலும் அருகம்புல்தான் வழிபாட்டுக்குரியது

நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————

மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015

அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்jeyakanthan
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

 

ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.

 

ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.

 

குத்தர்கிராஸ்330px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது  வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.

இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117

 

ஆ. சுடப்பட்ட தமிழர்கள்

செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!

—————————————–

அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை

நீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷூவுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி மகனே மகனேண்ணு புலம்பினா, உங்க மன நிலை எப்படி இருக்கும். கடந்த ஒருமாசமா இந்த பிரச்சினை எங்கிட்டே இருக்கு. அரசமரம் பேசுமாண்ணு கேக்காதீங்க? நிலவில் கால் வைத்ததையும், அமெரிக்காவிலே ஜெய்ஹோ ஒலித்ததையுங்கூட ஆரம்பத்திலே ஒருத்தரும் நம்பலை, கற்பனையிலேதான் சாத்தியம்னு சொன்னாங்க. அதுமாதிரிதான் இதுவும். நாளைக்கு உங்களையும் எதாவது ஒரு மரம் தொட்டுப் பேசலாம், ‘சார், பத்து நிமிஷம் என் நிழலிலே நின்றிருக்கீங்க, 100 ரூபாய் ஆகுது, பில்லைப் பிடியுங்க”ண்ணு சொல்லலாம், முத்தொள்ளாயிரத்துலே வரமாதிரி, “எனக்கு வெட்கமா இருக்கும்மா, வேறு எங்கனாச்சும் உங்க காதலை வச்சுக்குங்கண்ணு’ கேட்டுக்கலாம். ஆக நம்புங்க, நம்பிக்கையிலேதான் எதிர்காலமிருக்கு, குடும்பமிருக்கு, கூட்டணியிருக்கு, அமைச்சர்பதவியிருக்கு.

பெயர் வேல் என்கிற வேலாயுதம். டில்லியைச் சேர்ந்த இரண்டு கணினியாளர்களுக்குச் சொந்தமான வாம்ப் நெட்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தில் பன்னூடகப் பிரிவில் வேலை. எண்11158, மாக்மில்லன் அவென்யூ, அப்பார்ட்மெண்ட் 10, லாஸ் ஏஞ்ஜெல்ஸ், கலிஃபோர்னியா, யு.எஸ்.எ. ங்கிற முகவரிக்குச் சொந்தக்காரன். காலையிலும் மாலையிலும் கீழ்த்தளத்தில் பாவாடைக் கட்டிய யானைபோல நிற்கிற ஆப்ரிக்க பெண்மணியையும், எனக்காகவே மட்டும் வாய் திறக்கிற அல்லது தேவகி சொல்வதுபோல என்னைப் பார்த்தால் மாத்திரம் குரைக்கிற அவளுடைய நாயையும் தவிர்த்து அமெரிக்க வாழ்க்கையில் பெரிதாக எனக்கு உபத்திரவம் எதுவுமில்லைண்ணுதான் சொல்லணும். எனக்கு சனிதிசை நடக்கிறதென்று மாதவன் சொல்கிறான். அதையே நண்பனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ரமேஷ் பண்டாரியிடத்தில் சொன்னபோது குதிரை கனைப்பதுபோல சிரித்தான். ஒருமாதமா தூக்கமில்லைண்ணு சொன்னால் நம்பமாட்டேன்கிறான். படுக்கை நோகிறது, பால் பழங்கள் கசந்துவிட்டன. தேவகிங்கிற எனது பிரியத்துகந்த காதல் மனைவியை தொடணுங்கிற கெமிஸ்ட்ரி இரத்தத்தில் இல்லை. நான் படிகளில் கால் வைக்கிற நேரமாக பார்த்து, ஹாய் சொல்லியபடி கதவைப் பூட்டுகிற பஞ்சாபி ஆண்ட்டியின் விசாலமான மார்புகள் குறித்த கவனமோ, அவளுடைய பிரெஞ்சு பர்ஃப்யூம் குறித்த பிரக்ஞையோ இப்படி எதுவுமில்லை.

இரண்டுமாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதென்று தேவகியும் மைனஸ் நானுமாக தீர்மானித்தோம். அதற்கு தேவகி இரண்டு காரணங்களை வைத்திருந்தாள். ஒன்று, அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து நான்கு ஆண்டுகளாக ஆகியிருந்தது, இரண்டு,” அப்பாவும் அம்மாவும் பேரனைப் பார்க்கணுமென்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்”. எனக்கும் அதுபோல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “மருமகனுக்காக நம்ம பெரியாண்டவர்கிட்டே நேந்துகிட்டிருக்கேன், எப்போ அமெரிக்காவிலிருந்து வர, அவனுக்கு முடியிறக்கி காதுகுத்தணும்’ என்று கடிதங்கள் தோறும் வற்புறுத்துகிற அக்காள். இரண்டு, “தனது அமெரிக்க வாழ்க்கையை சிநேகிதிகளுக்கும், உறவினர்களுக்கும்” காட்டியாகணுமென்ற தேவகியின் ஆசை. ஆக இந்த கடைசி விருப்பமே ஊருக்குபோவதென்கிற எங்கள் முடிவுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும். அப்பா அம்மா இறந்த பிறகு, எங்கள் தாய்மாமாக்களில் ஒருவரை மணந்து எங்கள் கிராமத்திலேயே குடியிருந்தவள் எனது தமக்கை. என்னை படிக்கவைத்தது, சீராட்டியது எல்லாமுமாக இருந்து கவனித்துக்கொண்டதுன்னுஅக்காவைக் கொண்டாட வண்டி வண்டியா காரணங்களிருக்கு. ஆக இந்தியப் பயணம் முடிவானதும் தேவகிக்கு ரொம்ப சந்தோஷம், புறப்படுவதற்கு முன்னால அவசரம் அவசரமா விக்டோரியா பெக்காம் ஸ்டைலில் பாப் வெட்டிக்கொண்டாள். பிரெஞ்சு ஃபேஷன் புத்தகங்களை வரவழைத்து வாசித்தாள், ஆங்கில உச்சரிப்பில் அமெரிக்கர் டிக்ஷன் வருமாறு பார்த்துக்கொண்டாள். “உங்க வீட்டு வழக்கப்படி அருணுக்கு பெரியாண்டவர் கோவிலில் மொட்டைபோட்டு காது குத்தி கிடாவும் வெட்டுவோம், நான் வேண்டாங்கிலை ஆனா என்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதிகளுக்கும் எங்கனாச்சும் ஸ்டார் ஓட்டலில்தான் டின்னர் ஏற்பாடு பண்ணனுமென்றாள். அவளுடைய அப்பா தலையைவிட என் தலை நன்றாக ஆடுகிறதென்று அவள் வழங்கியிருந்த பாராட்டுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்பதால் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன்..

முதல் ஒரு வாரம் சென்னையில் கழிந்தது. மறு வாரம் திட்டமிட்டப்படி கிராமத்துக்குப் புறப்பட்டோம். ஏற்பாடு செய்தபடி பெரியாண்டவருக்குப் படைத்து முடி இறக்கி, உள்ளூர் காசி பத்தரைக் கூப்பிட்டு குழந்தைக்கு காதும் குத்தினோம். அந்த மகா மகா இரவு வந்தது. அரசமரத்தடியிலேயே வெகு காலத்திற்குப் பிறகு கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்துவிட்டேன். மாதவன் துணைக்குப் படுக்க வருகிறேன் என்று சொன்னவன், வரவில்லை. திண்டிவனம்வரை போயிருப்பதாகச் சொன்னார்கள். “தனியாக, பனியிலே இப்படி திறந்த வெளியிலே ஏன் படுக்கணும்? உள்ளே வாங்க”, என்றாள் தேவகி. முகத்தைப் பார்த்தேன், இந்த நான்காண்டுகால தாம்பத்யத்தில் தேவகியிடமிருந்து இதுபோன்ற சொல்லாடல்களை அறிந்ததில்லை. “கயிற்று கட்டில், அரசமரம், துணைக்கு நீயும்னா அந்த காம்பினேஷன் இன்னும் ஜோராகவிருக்கும்,” என்றேன், அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும், தலையில் கொட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.

எத்தனை மணிநேரம் தூங்கி இருப்பேனோ தெரியாது. வேலு, வேலு என்று அழைப்பதுபோல இருந்தது, சட்டென்று விழித்துகொண்டேன்? சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும்? நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கின்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா?” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ? என்று நினைத்தேன். “தெரியலை!, தைரியமிருந்தால் முன்னாலே வா”, என்றேனேத் தவிர, உண்மையில் பயந்துபோயிருந்தேன். ஒருவேளை பேசுவது பெரியாண்டவராக இருக்குமோ? என்ற சந்தேகமும் வராமலில்லை. என மனத்திலிருப்பதை குரலுக்குடைய ஆசாமி புரிந்துகொண்டிருக்கவேண்டும். “என்ன யோசனையிலே மூழ்கிட்டே, அரசமரந்தான் பேசறேன்”, என்றது மீண்டும் குரல். இப்போது நிலவை முழுதுமாக மேகம் மறைக்கத்தொடங்கி, எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது.

“வேலு! நீ என்னோட பிள்ளை. இம்முறை குரல் எனது தலைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது.” அதற்கென்ன இருந்துட்டு போறேன்.” “இல்லை நான் சொல்றதை நம்பணும்”, “சரி சரி நம்பறேன், அதுக்காக மாசம் ஆயிரம் டாலர் எனக்கு அனுப்பிவைக்கணுமென்று கேட்டுவிடாதே”, என்றேன். அரசமரம் சிரிப்பதுபோல காற்றில் கிளைகளை அசைத்து சலசலத்தது. ஊருலே பலரும் கேலி பேசியிருக்காங்க. அக்கா பிறந்ததுக்கப்புறம் வெகுகாலம் ஆண்பிள்ளை இல்லைங்கிற கவலையில் அம்மாவும் அப்பாவும் வாட்டத்துடன் இருந்ததாகவும், அம்மா பிள்ளை வரங்கேட்டு அரசமரத்தை சுற்றியதாகவும் பேச்சுகளுண்டு. அதற்காக அரசமரத்தை அப்பாண்ணு சொன்னா எப்படி. எனது அம்மான்னு இல்லை, இந்தியாவுல தெருவுக்கு இப்படி பத்துபேராச்சும் தேறுவாங்க. “உன்னை பெற்றது அரசமரந்தான், உங்க அப்பனில்லை”, என்று என் காதுபட சிலர் பகடிபேசியிருக்கிறார்கள். அதற்காக அரசமரம் என்னிடம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே! மகனே! என்று குரல்கள்.

காலையில் வெகுநேரம் உறங்கியிருந்தேன். கண்விழித்தபோது தேவகியும், அக்காளும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். “அருண் எங்கேயென்று கேட்டேன். ‘ தாத்தா தூக்கி போயிருக்கார். வடக்கு வெளி பக்கம் போயிருக்கணும், என்ற அக்காள், தொடர்ந்து ” உன் உடம்பு அனலா கொதிச்சுது, நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். அரசடியிலே எதுக்காக படுக்கபோன, அங்கே காத்து கருப்பு நடமாடுதுண்ணு சொல்லிக்கிறாங்க”, என்று புலம்பினாள். “பயப்படாதக்கா, நானென்ன சின்ன சின்னகுழந்தையா?”, என்று எழுந்தவன் பல்துலக்கிக்கொண்டு தேவகிக் கொடுத்த காப்பியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, எதிர்பட்ட மாதவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அங்குதான் போனேன். இரவு சம்பவம் என்னை முழுதாக மாற்றியிருந்தது. நேற்றைய இரவின் சுவடின்றி அரசமரம் பிரமாண்டமாக நின்றுகொண்டிருந்தது. அடிமரத்தில் ஆங்காங்கே முதுமையின் தளர்ச்சி. கிளைகளும், கணுக்களுங்கூட உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற கிழட்டு சிங்கத்தினைபோல பரிதாபமாக இருக்க, நான் முதன் முறையாக அதை அக்கறையோடு பார்த்தேன். .

– மாதவா என்னடா இது, அரசமரம் ஏன் இப்படி இருக்கு, யாரும் கவனிக்கிறதில்லையா?

– கவனிக்கதான் செய்யறாங்க, வயசாச்சில்லையா. அநேகமாக அடுத்தமுறை நீ வருகிறபோது இருக்காது, வெட்டி அப்புறபடுத்திட்டு, புதுசா நடபோறாங்க.

– அதைத் தடுக்கணுமே.

– எதுக்கு?

– இந்த மரத்துக்கும் எனக்கும் உறவு இருக்குது.

மாதவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். உனக்கு ஒண்ணும் ஆகலையே.

– ராத்திரி இங்கே கட்டிலைப்போட்டு படுத்திருந்தேன், கனவா உண்மையில் நடந்ததாண்ணு தெரியலை. அரசமரம் என்னை தன்னோட பிள்ளைண்ணு சொல்றமாதிரி குரலைக் கேட்டேன்.

மாதவன் முதலில் நான் சொன்னதெதையும் விளங்கிக்கொள்ளாதவன்போல அமைதியாக என்னைப்பார்த்தான். சட்டென்று கைகள் இரண்டையும் உதறி உதறி நிறுத்தாமல் குனிந்து, குனிந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தான். ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த இரண்டொரு பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். .

– டேய் நீ இப்படி சிரித்தால், எனக்குக் கோபம் வரும், நீ நம்பணுங்கிறதுக்காக நான் சொல்லலை.

– அரசமரம் உன்னிடம் பேசியதாகவே இருக்கட்டும் அதற்கென்ன? போயுட்டு ஆகவேண்டிய வேலையைப்பார்ப்பியா. இந்த லசணத்துலே அமெரிக்காவுலே வேற இருக்க. பொண்டாட்டியோட நாலு எடம் சுத்திபார்த்துட்டு நல்லபடியா ஊரு போய்ச்சேரு.

– இல்லைடா, இந்த மரத்த வெட்டாம தடுக்கணும். அதற்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.

– போடா பைத்தியக்காரா. நாமல்லாம் சொன்னா ஒருத்தரும் இங்கே கேக்கமாட்டாங்க. நாட்டாமை வீட்டு சூளைக்கு மரம் தேவைபடுது, மரத்துக்கு வயசாச்சுங்கிறது ஒரு சாக்கு.

அதற்குப் பிறகு ஊரிலிருந்த இரண்டு நாட்களும் அரச மரத்தடியில்தான் எனக்குப் படுக்கை என்றானது. எனக்கும் அரசமரத்துக்கும் விடிய விடிய பேச நிறைய இருந்தன. மாதவன்போல உங்களுக்கு என்மீதான அபிப்ராயம் எதுவானாலும் இருக்கட்டும், அரசமரத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பதில் திடமாக இருந்தேன். எனது அம்மாவின் ஒழுக்கத்தையும், திருமணம் என்கிற பந்தத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிற தந்தை மகன் உறவுபற்றிய சமூகக் குறியீட்டையும் கேள்விக்குட்படுத்தலாம் என்ற சிக்கலையும் தாண்டி அரசமரத்தை முழுக்க முழுக்க நம்பினேன்.

* * * *
சோதனைச் சாலையில், மூன்று நாட்கள் கழித்து வரச்சொல்லியிருந்தார்கள். எனக்கு முதல்நாள் இரவிலிருந்தே தூக்கமில்லை, அதிகாலையில் பச் என்று கன்னத்தில் பாதி காதில்பாதியென்று தேவகி முத்தமிட்டும், தள்ளி படுக்கத்தான் தோன்றியது. காலையிலிருந்தே அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. எப்போது மாலை மணி நான்கு ஆகுமென காத்திருந்தேன். பண்டாரி இருக்கையில் இல்லாதது சௌகரியமாக இருந்தது. அவனுடைய காரிதரிசி அல்போன்ஸா இருக்கிறாளாவென்று எட்டிப் பார்த்தேன், நாற்காலி பக்கவாட்டில் திரும்பிக்கிடந்தது. டாய்லெட்டில் சலசலவென்று சத்தம், உள்ளேதான் இருந்தாள், அவள் வெளியிலிருந்தால்தான் ஆச்சரியம். புறப்பட்டுவிட்டேன். பெவெர்லி ஹில்ஸின் பிரதான சாலையைப் பிடித்து, ஹோஷ் அவென்யூவூக்குள் நுழைந்து, காரை நிறுத்த இடம்தேடியபொழுது, புல்வெளிக்கு இரப்பர் குழாய் மூலம் நீர் பீய்ச்சியபடியிருந்த லத்தீன் அமெரிக்க பெண்ணொருத்தி, ஹாய் என்றாள். தொங்கலில் தெரிந்த ஃப்ரோபேஸ் ஜெனெடிக்ஸ் விளம்பரப் பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, படபடக்கும் இதயத்துடன் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் வியர்த்துக் கொட்டியது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கவும், வரவேற்பிலிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் வந்த காரணத்தைத் தெரிவித்தேன். என் கையிலிருந்த தாளை வாங்கிப்பார்த்தாள், பின்னர் கணினித் திரையைப்பார்த்தபடி, கடகடவென்று விசைப்பலகையில் எனது கோப்புக்குரிய எண்ணை விசைப்பலகையில் தட்டினாள். பரிசோதனை முடிவின் அறிக்கை வந்திருக்க வேண்டும். உதட்டைச் சுழித்துக்கொண்டு ‘எஸ்’ என்றாள். பின்னர் குனிந்து வரவேற்பு மேசையில் வலப்பக்க இழுப்பறையில் தேடியெடுத்த உறையை என்னிடத்தில் நீட்டினாள். கையில் வாங்கிக்கொண்டேன். அவசரமாக உறையைக் கிழித்து அறிக்கையை வாசிக்க, ‘எக்யூஸ்மி’ என்று எனக்குப் பின்புறம் ஒரு குரல். ஒதுங்கிச் சென்று அங்கு வரிசையாய்ப்போட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து நிதானமாக அறிக்கையை வாசித்தேன். உறவுமுறைக்கான சாத்தியம் 0% என்று சோதனை அறிக்கையின் முடிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் வரவேற்பு மேசை பெண்ணிடம் சென்று நின்றேன். அறிக்கை தயாரித்தவரை பார்க்க வேண்டுமே என்றேன். கூப்பிடுகிறேன், கொஞ்சம் உட்காருங்கள் என்றாள். மிகவும் பதட்டமாக இருந்தது. தேவகியிடம் அனைத்தையும் சொல்லி இருக்கலாமோவென தோன்றியது. வீடு பக்கத்தில்தான் இருக்கிறது, அருண் தூங்கிக்கொண்டிருப்பான். அநேகமாக இந்நேரத்தில் இணையத்தில் ஏதேனும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது சமையல் குறிப்புகள் எழுதிவைத்துள்ள நோட்டை புரட்டியபடி இன்றிரவுக்கு என்ன சமையல் செய்யலாமென அவள், யோசித்துக் கொண்டிருக்கலாம்.

– மிஸ்டர் வேல்! என்ற குரலைகேட்டு எழுந்தேன். ஜான் மாத்யூவென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் என்னிடம் கை நீட்டினான், புரிந்துகொண்டு எனது கையை நீட்டினேன். கைகுலுக்கியபடி, பார்வையால் தனது அறையைக் காட்டிவிட்டு முன் நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்து நடந்தேன். இருக்கையில் அமர்ந்ததும் என்னை அமரச்செய்தான். அவனுடைய கையில் எனக்கான சோதனை அறிக்கையின் மற்றொரு படி இருந்தது. உங்க தாத்தா மரபணுமீது நடத்தப்பட்ட Y குரோமோசோம் சோதனையின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் உறவு இல்லைண்ணு முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், இம்முடிவுகள் நீங்களாகக் கொடுத்திருந்த மாதிரி உயிரணுக்களிலிருந்து உருவானது. இம்முடிவுலே வேறு சந்தேகங்களிருந்தால் சொல்லுங்கள் முடிந்த அளவு விளக்குகிறேன்,” என்றான். “இல்லை, எதுவுமில்லை, புறப்படறேன். நன்றி. என்று அவனிடம் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றேன்.வெளியில் வந்ததுபோது தலை பாரமாக இருந்தது.

அன்றிரவு தேவகியின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. முதன் முறையாக அவளது மறுப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஒருவார விடுமுறையில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகச் சென்றுவருவதென்பதில் உறுதியாக இருந்தேன்.

* * * * *

சென்னையில் விமான நிலையத்தில், மதியம் ஒருமணிக்கு இறங்கி சுங்க இலாக்காவினரின் சோதனைளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியில்வந்தபோது மாதவன் காத்திருந்தான்.

– அக்கா, மாமா வரலையா?

– இல்லைடா. முதலில் அவங்க வருவதாகத்தான் இருந்தது. நெல்லறுப்பு வச்சிருக்காங்க களத்து மேட்டுலே காவல் இருக்கணும். நீ போயிட்டு வந்திடுண்ணு சொன்னாங்க. நானும் சரிண்ணு சொல்லிட்டேன். ஏது உங்க மாமியார் வீட்டுக்குப் போகாம இந்த முறை நேரா நம்ம கிராமத்துக்குப் போகத் துடிக்கிற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே, என்றவனிடம், காரணத்தை ஊருலே போய் சொல்றேன், உன்னிடத்திலா மறைக்கப் போறேன், என்றேன். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்தை அடைந்திருந்தோம்.

‘தம்பி இருந்து காப்பித் தண்ணி குடிச்சுட்டுப்போயேன். எங்கே அத்தனை அவசரமா போற”, என்ற அக்காவின் குரலை காதில் போட்டுகொள்ளாமல் புறப்பட இருந்த மாதவனிடம், “ஆறுமணிக்கெல்லாம் அரசடியிலே வந்திடு பேச நிறைய இருக்கிறது என்றேன். “எந்த அரசடி?” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது? பெரியாண்டவர் கோவில் அரசடியைத்தான் சொன்னேன்”, என்றேன். “சரி சரி அதற்கென்ன வந்துட்டாப் போச்சு”, என்றவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவன்போன பிறகு அக்காள் வெநீர் வைத்துக்கொடுக்க குளித்து முடித்தேன். பிறகு காப்பி வந்தது, குடித்தேன். பயண அலுப்பு இருக்குமில்லையா, கொஞ்சம் படுக்கிறது. நாளைக்கு வேணா செய்யவேண்டியதை பார்க்கிறது, என்ற அக்காவிடத்தில், இல்லைக்கா, மாதவனைத்தான் பார்க்கணும் வேறு ஜோலிகளில்லை, வந்திடுவேன் என்று கிளம்பிப்போனேன்.

அரசமரமின்றி பெரியாண்டவர்கோவில் வெறிச்சோடி கிடந்தது. பழைய மரத்தை வெட்டி, குழியைப்பறித்து, வேர்களை சுத்தமாக அகற்றி மண்ணிட்டு நிரப்பி இப்போது அந்த இடத்தில் வேறொன்றை நட்டிருந்தார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம்.

– என்னடா, அரசமரம் இல்லையென்றா அப்படி பார்க்கற. இன்னும் பத்துவருடத்திலே தளதளண்ணு இது வளர்ந்து அந்த இடத்தை பிடிச்சிடப்போவுது..

– இல்லைடா பழைய மரம் எங்கப்பா மாதிரி..

– ஆரம்பிச்சிட்டியா, மாதிரியாவது பாதிரியாவது, உங்கப்பனை எரிச்ச இடத்துலே புதர் மண்டிகிடக்கு, அதை பார்க்கறதுக்கு இல்லை. அரசமரத்தை அப்பண்ணு சொல்லிகிட்டுத் திரியறான்.

– இந்த ஒரு மாதத்துலே நான் இரண்டாவது முறையா இந்தியாவுக்கு வரக்காரணமே அரசமரந்தான். அரசமரந்தான் பேசுச்சோ, இல்லை அது என்னுடை சொந்தக் கற்பனையோ. இந்த இடத்துலே அந்த இரவுலே எனக்கென்று சில உண்மைகள் சொல்லப்பட்டிருக்கு, அந்த வார்த்தைகளை நம்பறேன். அதை உறுதிபடுத்திக்கத்தான் மீண்டும் வந்திருக்கேன். அது என்னண்ணு தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும்போலிருந்தது புறப்பட்டு வந்துட்டேன். அரசமரம் எனக்கு அப்பாவோ இல்லையோ, ஆனா எங்க தாத்தாவுக்கு நான் பேரனில்லை.

– எப்படி சொல்ற?

– Y-STR மரபணு சோதனைண்ணு ஒண்ணிருக்கு, அதை இங்கிருந்து கொண்டுசென்ற சாம்பிளை லேபில் கொடுத்து சோதிக்க சொன்னேன். அவர்களுடைய அறிக்கையின்படி எனக்கும் எங்க தாத்தாவுக்கும் உறவு இல்லை.

– நியாயமாப் பார்த்தா உங்க உங்க அப்பா, அம்மா, நீயென்று உங்கள் மூவருடைய உயிரணுக்களையும் சோதிச்சுதானே ஒப்பிட்டு பார்க்கணும்.

– அப்பாவும் அம்மாவும் இல்லாததால், தாத்தாவோட உதவியை நாடினேன். ஆனா அவர்கிட்டே உண்மையை சொல்லலை.

– உங்க அப்பா எரிச்ச இடத்துலே போயுட்டு ஒரு எலும்பை எடுத்தும்போறது.

– யார் எலும்பை எடுத்தும்போகச் சொல்ற? எங்கப்பாவை எரிச்சதுக்கபுறம் குறைந்தது நான்கு பேரையாவது அந்த இடத்திலே எரிச்சிருப்பாங்கண்ணு சொல்றாங்க

– சரி அதைவிடு, நீ இத்தனை பைத்தியகாரனா இருக்கிறாதால, நான் கேட்கிறேன்? உங்க அம்மா விஷயத்துலே உண்மை இல்லைண்ணு நம்பும் போது, உங்க பாட்டியை மட்டும் எப்படி நம்பறே, அவங்க உங்க தாத்தாவோட இல்லாம வேற ஒருவரோட உறவுவச்சிருந்து உங்கப்பா பிறந்திருந்தாகூடத்தான் உனக்கும் உங்க தாத்தாவுக்குமான மரபணு பொருத்தத்துக்குச் சாத்தியமில்லாம போகும். உயிரியல்வழி தந்தை உறவுமுறையை உறுதிபடுத்துவதேகூட 99.99 விழுக்காடுதான் சாத்தியமென சொல்கிறபோது எல்லாவற்றையுமே சந்தேகிக்கலாமே. பேப்பர்ல படிச்சேன், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த சோதனைகளை உணர்வின் அடிப்படையிலே பார்க்க்லை, சமூக பொருளாதார அடிப்படையிலே என்ன லாபம்னு அவங்க பார்க்கிறாங்க. ஏற்கனவே குடும்ப உறவுகள் கலகலத்துபோச்சு, இதுலே இது வேற.

* * * * *

இரவு உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிடமிருந்து சுருட்டு நாற்றம், உறக்கத்தை மேலும் சிக்கலாக்கியது. எழுந்து வெளியில் வந்தேன். திண்ணை முழுக்க அடர்த்தியாக இருட்டு, தாத்தாவின் இருப்பை அடையாளப் படுத்தும் பவானி ஜமுக்காளம், இருட்டுக்குப் பொட்டிட்டதுபோல தீக்கங்கு. .

– வா உட்கார்- ஜமுக்காளம் பேசியது.

– தாத்தாவுக்கு உறக்கம் வரலியா?

– இல்லை, ஆனா தேவைன்னா தானாவரும். அரசப்பன்கிட்டேயும் இதைத்தான் சொன்னேன். அவனும் ஒரு இராத்திரி இப்படித்தான் உன்னைப்போல தூக்கமில்லாம தவிச்சான். அர்த்தராத்திரியிலே எழுந்துவந்து உன்னைப்போலத்தான் கேட்டான்.

– அரசப்பன் யாரு?

– வேற யாரு, உன் தகப்பன்தான். உன்னைப் பெற்றவளைபோலவே உன் அப்பனைப் பெற்றவளும் பிள்ளைவரம் கேட்டு அரசமரத்தை சுத்தினவதான், பிறந்த பிள்ளைக்கு அரசப்பனென்று பேரும் வச்சாள். அந்தபேரையும் பிடிக்கலை ஊரையும் பிடிக்கலை புறப்பட்டு வந்துட்டோம்.

அன்றிரவு ஏதோ புரிந்ததுபோல இருந்தது. ஆனாலும் ஒரு கேள்வி மனதில் இன்றுவரை இருக்கிறது. தாத்தா சமாதானப்படுத்தியது அவரையா என்னையா?

——-

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் கதைகள் தொகிப்பிலிருந்து. பிற கதைகளை வாசிக்க இங்கே சொடுக்குக:http://www.pratilipi.com/nagarathinam-krishna/sirikkira-robovaiyum-nampakkuudathu

 

——

18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்

படைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.

உங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா? கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.

 

1. எழுதும் நேரம்

இரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது.  உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று.  மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்?) எனவே எழுதவேண்டும்.  ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்? இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார்? அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம்.  மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.

 

2.குரலும் தொனியும்

என்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது? இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார்? இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள்? கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.

 

“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

குறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது  கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது,  எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா? ஏன் முடியாது? ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:

 

“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு? என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்!’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

படர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

 

“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ?” ( மாத்தாஹரி – நாவல் )

 

இங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது? படைப்பாளியுடையதா? கதைநாயகிக்குரியதா? படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான்  நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.

 

3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.

புனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.

 

4. நாவலை நகர்த்துதல்

அதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.
——————————————————