மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் –1

நீலக்டல் நாவல் குறித்து முனைவர்.ரெ.கார்த்திகேசு.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல் – நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர்ரெ.கார்த்திகேசுஅவர்கள்மலேசியா, பினாங்குநகரைச்சேர்ந்தவர். மலேசியஅறிவியல்பல்கலைக்கழகத்தில்பொதுமக்கள்தகவல்சாதனைத்துறையில்பேராசிரியராகஇருந்துஓய்வுபெற்றவர். மலேசியவானொலி, தொலைக்காட்சியின்முன்னாள்அலுவலர். தமிழ்கூறும்நல்லுலகத்திற்கும்மலேசியாவிலும்நன்கறியப்பட்டசிறுகதைஎழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத்திறனாய்வாளர். அனைத்துலகநாடுகள்பலவற்றில்கலந்துகொண்டுஆய்வுக்கட்டுரைகளைச்சமர்ப்பித்தபெருமைக்கும்உரியவர்இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சிலபுத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

******

பிரான்சு நிஜமும் நிழலும் – 4

பிரெஞ்சுக் குடும்பம்

இன்றிருக்கிற சராசரி பிரெஞ்சுக்குடும்பமொன்றின் கூறுகள் உலகெங்குமுள்ள எல்லா நாடுகளிலும் படித்த மேல்தட்டு மக்களுக்குரியவைதான். புலன்களுக்கு அறிவைக்காட்டிலும் வீரியம் அதிகம். தங்களுடனான மோதலில் வீழ்ந்த அறிவை அத்தனை எளிதாக நெஞ்சுயர்த்த அவை அனுமதிப்பதில்லை. எளிதில் சோர்வுறும் குணங்கொண்ட அறிவும், புலன்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்கிறது. ஆற்றல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள், உணர்ச்சி அறிவைக்காட்டிலும் பலசாலி. உலகமனைத்தையும் மேற்கத்தியர்கள் அறிவால் வெல்ல முடிந்தது, உணர்ச்சியிடம் தோற்றுப்போனார்கள். உலகத்தின் வீழ்ச்சி உணர்ச்சிவசப்படுதலில்தான் தொடங்குகிறது. உணர்ச்சியைக் கண்கள், காது, வாய், மனம் என்று தனித்தனியாக அனுமதித்தால் தப்பித்தோம் – பிரித்தாளவேண்டும். அவற்றைக் கூட்டாகச் (உடலை) செயல்படவிட்டால் ஆபத்து. மேற்கத்தியர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதது என்று ஒன்றிருக்குமானால் இன்றைய அவர்களுடைய குடும்ப அமைப்பைச் சொல்வேன். சமூகப் பண்பாடுகளில் ஒன்றான குடும்பஅமைப்புமுறை இன்று மேற்கத்திய நாடுகளில் குலைந்துவருகிறது – எச்சரிக்கையாக இல்லாதுபோனால் நம்மையும் ஒரு நாள் தின்றுதீர்த்துவிடும்.

குடும்பம் என்றாலென்ன ? பொதுவானதொரு மூதாதையர் வழிவந்த இரத்த உறவுகளில் இறந்தவர்போக மிஞ்சியவர்கள், சமூக அறத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வது. ஒருவருக்கொருவர் இன்பத்தையும் துபத்தையும் பகிர்ந்துகொள்வது, நெருக்கடி காலங்களில் தமது குடும்பத்தைசேர்ந்தவர்களுக்குத் துணை நிற்பது. இந்த இலக்கணங்களுக்குப் பொருந்துகிற குடும்பம்தான், ஒரு நல்ல சமூகத்தையும், தொடர்ந்து நாட்டையும் கட்டமைக்க முடியும்.

பிரான்சு நாட்டில் குடும்ப அமைப்பு நேற்று எப்படி இருந்தது?

இந்த நேற்று இரு பொருளைக்கொண்டது, முதலாவது நேற்று 30 வருடங்களுக்கு முன்பாக இந் நாட்டிற்கு (பிரான்சுக்கு) வந்த காலத்தைக் கணக்கில் கொள்ளவேண்டிய நேற்று, மற்றது ஒரு வயதான (70?) பிரெஞ்சுக் காரரிடம் நினைவில் இருக்கிற சுமார் ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்தைய பிரான்சு. எனது பார்வையில் ஒரு பிரெஞ்சுக் குடும்பம் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் அப்படியே இருப்பதுபோல இருக்கிறது. ஆனால் பிரெஞ்சுக் காரர் புலம்புகிறார்.

இன்றைய பிரெஞ்சுக் சமூகத்தில் – குடும்பத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பார்க்கிறபோது நவீன பிரெஞ்சுக் குடும்பம், பாரம்பர்யப் பிரெஞ்சுக் குடும்பத்தைக்காட்டிலும் மேம்பட்டதென்கிற பொதுவானதொரு தோற்றத்தைத் தரும். நவீனப் பிரெஞ்சுக் குடும்பம் கட்டற்ற சுதந்திரத்தின் பெயரால் வானமே எல்லையென்று இருக்கின்ற கூரைகளை பிய்தெறிந்ததின் பலன், குடும்பம் என்ற அமைப்பு இன்று மழையிலும் வெயிலிலிலும் பாதுகாப்பற்று துன்புறுவதை சுகமென்று வர்ணிக்கிறபோது எரிச்சல் வருகிறது. பிரெஞ்சுக்காரிடம் கேட்டேன், “குடும்ப அமைப்பு என்பது பண்பாட்டுச்சின்னம், அதனைக் கட்டமைப்பது ஒரு சமூகத்தின் அறங்கள், இந்நிலையில் உங்கள் குடும்பம் என்ற குறியீடு அல்லது ஒழுங்குமுறை (system) ஐரோப்பியர்கள் என்கிற பொதுகுணத்திற்கு உரியதா, அல்லது உங்களுடையதா?” எனக்கேட்டேன். இரண்டொரு நிமிடங்கள் யோசித்தார், என்ன சொல்வதென யோசித்திருப்பார்போல, நுணி மூக்கைச் சொரிந்தபடி, ” மேற்கத்திய பண்புகளோடு, சாப்பாட்டு மேசையில் ‘பொர்தோ’ ஒயினையும், கமாம்பெர் பாற்கட்டியையும் (Le fromage Camembert), சேர்த்தீர்களானால் அதுதான் இன்றைக்கு பிரெஞ்சு பண்பாடு, என்பதுபோல, ஐரோப்பியருக்குரிய பொதுபண்புகளும், எங்களுடையதும் கலந்ததுதான் ” எனப் பதிலிறுத்தார், சமாளித்துவிட்டோம் என்கிற திருப்தி முகத்தில் தெரிந்தது.
இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் மனதில் என்ன தோன்றியதோ: ” உங்கள் பண்பாடு என்ன? இங்கே நீங்கள் எங்களைப்போலத்தானே வாழ்கிறீர்கள்?” எனச் சீண்டினார். 30 ஆண்டுகால புதுச்சேரி தமிழர்களின் பிரெஞ்சுப் பண்பாடென்று எதைச்சொல்வது? எனத் தயங்கினேன்.அவருக்குப் பதில் சொல்வதுபோல, ” சோறு சாப்பிடுகிறோம், மனைவி புடவை உடுத்துகிறாள், சிறுவயது பிள்ளைகள் என்றால் அவர்கள் விஜய் அல்லது ரஜனியின் ரசிகர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம், வளர்ந்ததும் குலம் கோத்திரம் பார்த்து நாங்கள் கைகாட்டுகிற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்று பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறோம், உழைத்தோ உழைக்காமலோ (பிரான்சில் முடியும்) இங்கேயோ ஊரிலோ வீடோ, அப்பார்ட்மெண்ட்டோ வாங்கவேண்டுமென்று நினைக்கிறோம்” – எனக்கூறினேன். அவர் சிரித்தார். சிறிது தாமதித்து “எங்களுக்கு இதுபோன்ற பண்பாட்டுக் கவலைகள் இல்லை” எனக்கூறியவரிடம் மறுபடியும் ஓர் எள்ளல் சிரிப்பு.

“2015ல் தமிழ்ப் பண்பாடு என்றுசொல்லிக்கொள்ள இருப்பதென்ன?” என்னிடமே கேட்டுக்கொண்டு அதற்குப் பதிலையும் கூறிப்பார்த்தேன். கன்னியாகுமரியில் ஆரம்பித்து தமிழர்களின் புண்ணிய ஸ்தலமான சென்னைவரை நம்மிடம் நான் நினைத்தைவிட கலந்துகட்டிய பண்பாடுகள் வரிசையில் நிற்கின்றன. கிராமங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் வெளியிற் செல்ல உகந்த நேரம் பொழுது புலர்வதற்கு முன்பாக அல்லது பொழுது சாய்ந்தபின். மற்ற நேரங்களின் சன்னற்கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்பார்கள். கணவன் மனைவியாக ஆன பிறகும் உழைக்கும் மக்களிடம் பிரச்சினைகளில்லை, ஆனால் சில வீட்டுப் பெண்கள் நான்கு சுவருக்குள்தான் அடைந்து கிடக்கவேண்டும், வெளியிற் போனால் கணவருக்குப் பின்னால் பத்தடி தள்ளிதான் மனைவிபோகவேண்டும், அதுதான் நல்ல (?) குடும்பத்துப் பண்பாடு என்பார்கள். புதுச்சேரிக்கு வந்தபோது அங்கே திருமணமான புது ஜோடியொன்று ரிக்ஷாவில் சேர்ந்து சினிமாவுக்குப் போனதை எங்கள் தந்தை வழி பாட்டி, “இதென்ன கலிகாலம், கொஞ்சங்கூட வெட்கமில்லாம!” என்றது நினைவில் இருக்கிறது. சென்னையில் சபையர் தியேட்டரில் படம் தொடங்கியதும் காதல் ஜோடிகளுக்கு மெரீனா பீச்சில் கிடைக்காத பண்பாட்டுச் சுதந்திரமுண்டு. இது போக சற்று ஒரிஜினலாக செட்டியார்களுக்கென காரைக்குடிப்பக்கம் சில தமிழ்ப்பண்பாடுகள், நாஞ்சில் நாடனைகேட்டால் நாஞ்சில் நாட்டுப்பண்பாடு என ஒரு புத்தகமே எழுதுவார், பிறகு கி.ரா.வின் கரிசல் காட்டுப் பண்பாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சையென்று திசைக்கொரு பண்பாடு இருக்கிறது. இதுபோக நாயக்கர்கள், மராத்தியர்கள், நவாபுகள், நிஜாம்கள், ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்கள் விட்டுச்சென்ற பண்பாடுகள் இருக்கின்றன. இவைகளைப் புடைத்து தூற்றினால் பதர்போக தமிழகக் களத்துமேட்டில் மணப்பந்தல், தாலி, சோறு, பொங்கல் பண்டிகை, ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்குப் புடவை, கீழ் சாதி, மேல் சாதி, தலைவர்களுக்கு அடிமட்டத் தொண்டரென்றால் உயிர்த் தியாகமும் அமைச்சரென்றால் தீச்சட்டியும்; நடிகர்களுக்குப் பாலாபிஷேகமும், பொழுது சாய்ந்தால் நல்ல குடிமகன்களாக இருப்பதும் தமிழ்நாட்டுப் பண்பாடு. பிறகு இருக்கவே இருக்கிறது பீஜித்தீவில் ஆரம்பித்து மொரீஷியஸ் வரை உலகமெங்கும் தீமிதித்தல், காவடி எடுத்தல்..ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறவற்றை யோசித்தபோது பிரெஞ்சுக் காரர் குறுக்கிட்டு “என்னிடத்தில் பகிர்ந்து கொள்ளேன்!” – என்றார்.

நான், அடுத்தவரிடம் குறைகாண்பது சுலபம் என்பதால் “உங்கள் குடும்ப அமைப்பு எப்படி முன்பு போலவே இருக்கிறதா? மாற்றம் தெரிகிறதா? “, எனக்கேட்டேன்

“முன்பெல்லாம் மரபான பிரெஞ்சுக் குடும்பம் என்பது கணவன் மனைவி பிள்ளைகள் என்று வாழ்ந்தக் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம், சில குடும்பங்களில் இரண்டு மூன்று சந்ததியினர் கூட இருப்பார்கள்” பிள்ளைகளுக்குப் திருமணத்தைப் பெற்றோர்களே நடத்திவைத்தார்கள்; வருகின்ற பெண் அல்லது பிள்ளை நல்ல குடும்பமா? அவர்களால் குடும்பத்திற்கு என்ன இலாபம்; என சகலத்தையும் யோசித்தே திருமணங்கள் நடந்திருக்கின்றன” என்றார். அதேவேளை கடந்த காலத்திலிருந்த ஒரு வைதீகப் பிரெஞ்சுக் குடும்பம் ( La famille traditionnelle française) உலகின் பிற பகுதிகளைப்போலவே தந்தை வழிமுறைக்கு முக்கியத்துவம் தருகிற ஓர் ஆனாதிக்கக் குடும்பம்: ஆண்கள் வேலை செய்தார்கள் ஆண்கள் யுத்தம் செய்தார்கள், ஆண்கள் அரசியல் செய்தார்கள்; பெண்கள் எச்சில் எடுதார்கள், பத்துபாத்திரம் தேய்த்தார்கள், பெருக்கினார்கள் வாரினார்கள், பிள்ளைகளைச் சீராட்டினார்கள், உடன் கட்டை மட்டும் ஏறவில்லை, மற்றபடி இந்தியபெண்களுக்கிருந்த அதே நிலமைதான். சங்க காலத்திலேயே பெண்கவிஞர்களைச் சந்தித்திருக்கிற நமக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிரெஞ்சுப் பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத விஷயம் வியப்பை அளிக்கலாம்.

நவீன பிரெஞ்சுக் குடும்பம்:

இன்று நிலமை வேறு சமூக அமைப்பில் மதத்தின் தலையீடு குறைந்ததும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றமும் வைதீகப் பிரெஞ்சுக் குடும்ப அமைப்பைப் புரட்டிப்போட்டது. இந்தியாவைப் போலவே பதிவுத் திருமணம், சம்பிரதாயத் திருமணம் பிரான்சு நாட்டிலும் உள்ளன. தமிழில் நாம் அறிந்த பதிவு திருமணத்தைத்தான் இங்கே ‘le mariage civil’ என்ற பெயரில் நகரசபைகளிலும், மாநகராட்சிகளிலும் மேயர்களால் நடத்தி வைக்கபடுகின்றது. மதத்தின் பேரால் தேவாலயங்களில் ‘le mariage religieux’ நடத்திவைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் அரசே வழிவகுத்துக்கொடுத்த ஆண் பெண் கைகோர்த்தல் மேற்குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் உதறிவிட்டது அல்லது செல்வாக்கைக் குறைத்துவிட்டது எனலாம். கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித உறுத்தலுமின்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கம், குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதும் 80 விழுக்காடு பெண்கள் கல்விபெற்றவர்களாக இருப்பதும், 25 வயதிலிருந்து -45 வயது வரையிலான பெண்கள் பிறரைச்சார்ந்திராமல் சொந்தச் சம்பாத்தியத்தில் வாழ்வதும், தனித்திருக்கும் துணிச்சலை கொடுத்துவிடுகிறது. தவிர புதிதாக கொண்டுவரப்பட்ட ‘Le PACS’ (Pacte Civil de Solidarité -1999) சட்டம் தகுந்த வயதை அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி சகபாலினம் அல்லது எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தியோடு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ அனுமதிக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இன்றைக்கு ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான கணவன் -மனைவி பந்தம் PACS முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மூன்று தம்பதிகளில் ஒரு ஜோடி பிரான்சு நாட்டில் விவாகரத்து செய்துக்கொண்டதாக இருக்கிறது. ஒப்பந்தந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நவீன பிரெஞ்சு குடும்ப அமைப்பை அணுக் குடும்பம் ( la famille nucléaire ) என்றும், கலப்புக்குடும்பம் (la famille composée ou recomposée) என்றும் வகைபடுத்தலாம். ‘அணுக்குடும்பம்’ என்பது ஏற்கனவே கூறியதுபோல பாரம்பர்ய திருமணச் சடங்கினால் இணையும் தம்பதிகள். ‘கலப்புக் குடும்பம்’ என்பது தம்பதிகளில் ஒருவர் தனது பிள்ளைகளுடன் தனித்து வாழ்வது அல்லது மணவிலக்குப்பெற்ற கணவனோ மனைவியோ விவாகம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது ஆகும். இவகைக்கு Le PACS முதுகெலும்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2013) ஓரினத் திருமணத்தையும் சட்டப்படி அங்கீகரித்து, தீவிர சமய வாதிகள், வலதுசாரிகள் கோபத்தை பிரெஞ்சு இடதுசாரி அரசாங்கம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையைமாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அபைப்பு ஆனாதிக்கமோ பெண்னாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.
(தொடரும்)
—————————————————–

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)

சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த சமகாலத்தை எங்கே ஆரம்பிப்பது அதன் எல்லை எதுவரை? எண்ணிக்கையில் எத்தனை ஆண்டுகள் சார்ந்த விஷயம்? நிகழ்காலமென்றால், எது நிகழ்காலம்? இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த தருணம் நீங்கள் வாசிக்கிறபோது இறந்த தருணமாக மாறியிருக்கும் அல்லது நான் இப்பகுதியை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற நேரம் எனக்கு எதிர்காலம். ஆக நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கிறபொழுது நவீனத்துவத்தின் காலத்தை வரையறுப்பது எப்படி? எனவேதான் ஒரு தற்காப்புக்காக சுயபுனைவை நான் எழுதிய கணத்தின் இலக்கியபோக்கு எனக்குறிப்பிட்டேன். நவீனத்துவம் பின் நவீனத்துவம் குறித்த தலைப்புகளில் எழுதுகிறபோது சற்று விரிவாக இவைற்றைபற்றி பேசுகிறேன்.

சுய புனைவு என்ற பெயரில் இரண்டு சொற்கள் இருக்கின்றான. இச்சொற்களைக்கொண்டு இப்படைப்பிலக்கியம் எந்த வகை சார்ந்தது எனவிளங்கிக்கொள்ளலாம். வழக்கம்போல இதுவும் ஒரு உரைநடை புனைவுதான், மாறாக ஒரு தனிநபரின் சொந்த வாழ்க்கைபற்றிய புனைவு – கற்பனையும், எழுதும் மனிதனின் அந்தரங்கமும் கைகோர்க்கும் எழுத்து. புதியது என்பது தேடலில் பிறப்பது, போதும் அலுத்துவிட்டது என் புலன்களுக்கு, சிந்தனைக்குப் புதிதாய் என்னதரப்போகிறேன், வழக்கமான திசையில் பயணித்தபோது சோலையும், சுணைநீரும், நிழல் தரும் மரங்களும் இருந்தனவென்பது உண்மைதான், புதிய திசையில் பாலையும் வெக்கையும் குறுக்கிடலாம், இருந்தும் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன் அதுவே என் ஆண்மைக்கு அழகு என ‘நேற்றை’ மறுப்பதில் தான் ‘நாளை’ இருக்கிறது. மனித வாழ்க்கையில் மறுப்பு முக்கியமான சொல். மேற்கத்திய நாடுகளின் கலை இலக்கியம் அறிவியல் முன்னேறங்கள் மறுக்கவேண்டியவற்றை மறுத்ததால் கண்ட பலன்.

சுயபுனைவு என்ற சொல் சுய சரித்திரம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெளிவு. ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த வாழ்க்கையை சுவைபட புனைவாக்குவது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலேயே சுயபுனைவுகள் எழுதப்பட்ட வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவற்றிர்க்கு வெவ்வேறு பெயர்கள். சிலர் ” புதிய சுயவரலாறு” (Nouvelle autobiographie) என அழைத்தார்கள்; சிலர் ” நான்- புதினம்” ( Roman de je) பெயரிட்டார்கள்; வேறு சிலரோ “சுயவரலாற்றுப் புனைவு” ( Roman autobiographie) என அழைத்திருக்கிறார்கள், இறுதியாக இன்றைய பொருளில் சுய புனைவு என்ற சொல்லை 1977ம் வருடத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் செர்ழ் தூப்ரோவ்ஸ்கி(Serge Dobrovsky).

பிரெஞ்சு சுயபுனைவுகளில், avant-gardiste களின் பங்கும் நிறைய இருக்கிறது ‘காதலன்’ நாவலை எழுதிய மார்கரித் துராஸ் படைப்புகள் அனைத்துமே, அவரரது சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியதுதான். அதுபோல அண்மையில் நோபெல் பரிசுபெற்ற பத்ரிக் மொதியானோ படைப்புகளும் அவர் சொந்தவாழ்க்கையைப் பேசுபவைதான். லெ கிளேஸியொவின் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்த ‘குற்றவிசாரணை’ நாவலும் சுயபுனைவுகளில் ஒன்றே. Alain Robbe-Grillet என்பவர்தான் புதிய சுயவரலாறு என்ற அடையாளத்துடன் அவருடைய “Le Voyageur”(2001) என்ற நாவலை எழுதினார். எழுபதுகளில் ‘je'(நான்) என்றசொல்லோடு சமூகம், உடல் நோய், மரணம், குடும்பம், பாலுறவு போன்ற விடயங்கள் இணைத்த படைப்புகள்(சுயபுனைவுகள்) புத்தகச் சந்தைகளில் அதிகம் விலைபோயின. இன்றைய பிரெஞ்சு படைபுலகம் சுயபுனைவுகளைச் சுற்றி இயங்குவது என உறுதிபடக் கூற முடியும். சுயவரலாறு அல்ல என்கிறபோதும் படைப்பிலக்கியாதி தான் சாட்சியமாக இருந்தவற்றையே புனைவில் அதிகம் கொண்டுவருகிறான். இதுபோன்ற நிலையில் ‘நான்’ என தன்னிலையில் கதை சொல்ல முனைகிறபோது, அதை எழுதியவனாகவே பார்க்கிற மரபு எங்கும் இருக்கிறது, .படைப்பில் வருகிற ‘நான்’ (கதைசொல்லி) வேறு, எழுதிய ‘நான்’ (எழுத்தாளன்) வேறு என்று வற்புறுத்திசொல்லவேண்டியல் கட்டாயம் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகளுக்கும் இருந்திருக்கிறது. மர்செல் புரூஸ்டு இதற்கெனவே ஒரு நூலை (Contre Sainte-Beuve) எழுதினார்.

ஆ. கடவுளின் கடவுள்- இரா இராகுலன்.

ஒன்றை நேசிப்பது என்பது வேறு, அதை சுவாசிப்பது என்பதுவேறு. ஒரு நல்ல கவிஞன் பிறருக்காக அல்ல தனக்காக கவிதை வடிவைத் தேர்வு செய்கிறான், கவிஞன் இயல்பில் ஓர் அழகியல் உபாசகன், மென்மை உள்ளம் படைத்தவன், பிறர் துயரம் சகியாதவன், இவ்வுலகின் ஒழுங்குகளில் அக்கறை கொண்டவன் அவை பிறழ்கிறபோது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறான். அவன் தனக்காக அல்ல பிறருக்காக குரல்கொடுக்கும் கலகக்காரன், போராளி. இந்த அக்கறையை, அறச்சீற்றத்தை, பரிவை, நாம் காணாத உலகின் தரிசனத்தை, இதமான மொழியில் இலக்கியம் ஆக்குகிறான். உண்மையான கவிதை ஒரு காற்றுபோல தொழிற்படும்: மென் தளிர்களை நளினமாக அசைத்துப்பார்க்கும் வித்தையும் வரும், எச்சில் இலைகளை எங்கே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் செய்யும். நல்ல கவிஞன் காத்திருப்பதில்லை, சீண்டிய நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவன் உடலையும் உணர்வையும் ஒருசேர ஆட்டிவிக்கும் அனுபவத்தை உடனுக்குடன் மொழிப்படுத்தினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். இளைஞர் இரா. இராகுலன் அப்படிப்பட்டவரென தெரிகிறது.

குழந்தை அழலாம் என்றொரு கவிதை, பார்க்க எளிய கவிதைபோலத் தெரிகிறது ஆனால் அக்க்விதை பூடகமாகத் தெரிவிக்கும் செய்திகள், அதன் புன்புலத்தில் விரியும் காட்சிகள், கேட்கும் கேள்விகள் சாத்தியமுள்ள விடைகள், இவ்வுலகின் மீதான கோபம் – மொத்தத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் சிருஷ்டிக் கர்த்தாவின் முகத்தில் வீசுகிற கேள்வி.

குழந்தை அழலாம்

பசிக்காக
தொடரும் கொசுக்கடிக்காக
வயிற்றுக்கிரகத்திலிருந்துப் புலம் பெயர்த்தியதற்காக
அல்லது
தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு
ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக

இக்கவிதையில் பொதுவில் ‘குழந்தை அழுவதற்கு’ சராசரி மனிதர்கள் முன்வைக்கும் காரணத்திலிருந்தே பதிலைத் தொடங்குகிறார். ஆனால் அடுத்தடுத்த வரிகளில் வரும் வார்த்தைகள் சொல்ல வருவது வேறு. கொசுக்கடியை முழுமைப்படுத்த உபயோகித்த ‘தொடரும்’ என்ற வார்த்தையின் தேர்வும் அதன் இடமும் முக்கியம். ‘வயிற்றுக் கிரகத்திலிருந்து புலம்பெயர்த்தியதற்காக’ வும் குழந்தை அழலாம் என்ற யூகத்தை எழுப்புக்கிறார், யூகம்போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் ( ‘அல்லது’ என்ற சொல் உபயோகத்தைக் கவனிக்கவும்). அந்த அழுகை சீற்றத்தினால் வெடித்து எழுந்த குரலாகவும், ஏன் செய்தீர்கள்? என்ற கேள்வியாகவும் தொக்கி நிற்கிறது. படைத்தவர்கள் அனைவரிடமும் குழந்தைக்குள்ள கேள்வி இது – உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் படைப்புக் கடவுளிடமுங்கூட எனச்சேர்த்துக்கொள்ளலாம். தன்னை இந்த மண்ணில் பிறப்பெடுக்கவைத்ததில் உடன்பாடில்லை – என்பதைத் தெரிவிக்கும் அழுகை. இறுதியாக ‘குழந்தை அழுவதற்கு கவிஞர் கூறும் மற்றொரு காரணம்: “தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக “. அவ்வழுகைக்குள் ஓலிந்துள்ள உத்தரவு ஓர் எள்ளல்போல இருப்பினும், கவிஞர் சொல்ல வருவது நம்முடைய மரமண்டைக்கு அதன் அழுகைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள போதாது, தன்போன்ற இன்னொரு குழந்தை மட்டுமே புரிந்துகொள்ளும் – எனவே என்னைப்புரிந்துகொள்ளக்கூடிய ஒரு குழந்தையை என்னோடு பேசுவதற்கு அனுப்பிவையுங்கள் என்பதற்காக குழுந்தை அழுகிறது எனக்கூறுவது, விரக்தியின் உச்சம், இச்சமூகத்தின் மீது இயல்பாக மென்மை உணர்வுடையோருக்கு எழும் தார்மீகக்கோபம்.

‘நினைவுகூர்தல்’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான கவிதை. நோஸ்ட்டால்ஜியாவை இதைக் காட்டிலும் சிறபான படிமமம்கொண்டு – விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்த கவிதைகளில் அதுவொன்று

………..
தூசிபடித்த நாற்காலி மீது
வீட்டுக்காரனொருவன் அமர்ந்திருந்தான்

மேசையின் மீது புத்தகங்கள்
தூசியாலும் பூச்சிகளாலும்
வாசிக்கப்படுவதைப் போல்
கடந்த நிகழ்வுகளைப்
பாழ்பட்டுபோன வீட்டுக்குள்
ஒவ்வொன்றாய்த் தேடியெடுக்கிறான்”

இவரது கவிதைகள் அதிகம், தனிமை, நினைவுகள், நினைவுலகம் மனம் எனசுற்றி வருகின்றன அதனாலேயே இவுலகின் குறை நிறைகளை கூர்ந்து கவனித்து கவிதை வடிக்க முடிகிறது.

இத்தொகுப்பில் சுருக்கமாக இருந்தபோதிதிலும் என்னை ஈர்த்த மற்றொரு கவிதை
பெருமழை‘ என்ற தலைப்பிட்ட எளிமையான வரிகள்:

வெகு நேரமாய் மழை
காரணம் புரியவேயில்லை
பாறையின் இடுக்கொன்றில்
சிக்கிகொண்ட விதையினருகே
இப்பொழுதுதான்
பெருமழையின் ஒரு துளிவந்து சேர்ந்தது.

வாழ்க்கைமீதான அவநம்பிக்கைகள் ஏற்படுத்தித் தரும் கோபம் கடவுளிடம் திரும்புவதை இவர் கவிதைகளில் வெவ்வேறு இயற்கைநிகழ்வாக அறிமுகமாகின்றன. மேலே அதே இயறகைக்கொண்டு அவிழ்க்கப்பட்டப் புதிரை, சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டு தனி மனிதனாக அவிழ்க்கமுற்படுகிறபோது ‘நான் நானாகக்கூட இல்லையே” என்ற ஏக்கம் கவிதை மொழியில் மின்னலாகத் தோன்றுகிறது, நடப்பது சில கணமென்றாலும், தாக்கத்தால் நெஞ்சம் அதிர்வது சத்தியம்.

தொகுப்பிலுள்ள அந்த வயோதிகன், அன்பெனும் மது, இரவைக் கிழித்த கதிர்கள் எனத் தொடங்கும் கவிதை, மன நிலை, பொம்மைகள், இவ்வாறு வாழ்கிறோம் போன்றவற்றைப் பலமுறை வாசித்திருப்பேன். ‘உயிர்க் கிணறு’, ‘ஊர்ந்த நடை’, ‘உலகின் கரை’ நினைவில் நிற்ககூடிய வார்த்தை கட்டிகள். பல நேரங்களில் சொற்சிலம்பில் கவனம் செலுத்தி கவிதையின் இலக்கை தவறவிடுவதுபோலவும் தெரிகிறது. உதாரணம் ‘தெரியாது’ என்ற கவிதை.

இவரது கவிதைகளை வாசித்துவிட்டு இருவர் தங்கள் கருத்துக்களை அழகான தமிழில் உள்ளார்ந்த உணர்வோடு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், ஒருவர் மூத்தக் கவிஞர் பழமலய் மற்றவர் ஸ்ரீநேசன், அவற்றின் மீதான நம்பகத் தன்மை இரா. இராகுலன் கவிதைகளைப் படித்தபின் கணிசமாகக் கூடியிருக்கிறது. இறுதியாக இக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, புண்ணியம் தேடிக்கொண்ட ‘நறுமுகை ஜெ. இராதாகிருஷ்ணனுக்கும் நன்றி.

———

கடவுளின் கடவுள் (கவிதைத் தொகுப்பு)
விலை ரூ50.
– இரா. இராகுலன்
நறுமுகைப் பதிப்பகம்
29/35 தேசூர் பேட்டை, செஞ்சி 604202

இ. ஸ்ட்ராஸ்பூர் தேவாலய ஒலி ஒளி காட்சி

பிரான்சு நாடெங்கும் சுற்றுலா காலமென்பதால், பயணிகளை ஈர்க்கின்ற வகையில் நகரம் அதன் சுற்று புறங்களில் கண்களுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் வையில் நிகழ்ச்சிகளை செப்டம்பர்வரை ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். ஸ்ட் ராஸ்பூர் மாநகராட்சியியும் தன்பங்கிற்கு சிலவற்றை ஏற்பாடு செய்து உள்ளூர் வாசிகளையும், சுற்றுலா பயணிகளியும் மகிழ்விக்கும் பணியில் நகரமெங்கும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள், ஆயிரம் வயதைக் கொண்டாடும் உலகப் புகழ்பெற்ற தேவாலயத்தில் ஒலி, ஒளி காட்சிகள் தினந்தோறும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நேற்று மனைவியும் நானுமாகச் சென்று பார்த்தோம். சொல்ல வார்த்தைகள் போதாது. தொழில் நுட்பமும், கலையும் இணைந்து கண்களுக்கும் காதிற்கும் சுகத்தை அளித்தன.

நன்றி : You tube
———————————————————-

பிரான்சு: நிஜமும் நிழலும் -3

கைகுலுக்கல் – Se serrer la main

 

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

 

காதலும் முத்தமும் :

 

“இது யார்தும்மா குழந்தை? தங்கச்சியா- தம்பியா? உங்கம்மாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? நீ தூக்கிவந்திருக்க!”

 

“இல்ல சார் என்னோடதுதான். திடீர்னு கல்யாணம் கூடிடுச்சி. அவர் எங்க வீட்டாண்டதான் இருக்கார். அப்பப்ப பார்ப்பாரு, ஒரு நாள் திடீர்னு ‘லவ்’ வை சொன்னாரு. நான் ஆரம்பத்துலே, எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னுதான் சொன்னன். அவர் கேட்கலை.?
“அப்புறமென்ன நீயும் லவ்வ சொல்லிட்ட, ஓடிப்போய் கல்யாணம்பண்ணிகிட்ட சரிதானே? ”

 

‘ ‘லவ் மேரேஜ்’, ‘லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்’ என்ற வார்த்தைகள் தமிழ் சமூகத்தில் அதிகம் காதில் விழுகின்றன. ஒரு பக்கம் காதலைக் கொண்டாடும் தமிழ் சினிமாக்கள், இன்னொரு புறம் காதலைத் தீவிரமாக எதிர்க்கும் சாதிக்கட்சிகள் – இவ்விரண்டையும் செய்திகளாக்கும் தினசரிகள். ஆக மொத்தத்தில் தமிழ்மண்ணில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகம் மகசூலைத்தரும் பொருள் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அவ்வளவு உண்மை காதல் திருமணம் இந்தியர் மரபில் மிகக்குறைவான விழுக்காடுகளுக்குரியவை என்பதும். பீஸா சாப்பிடப் பழக்கிக்கொண்டதை ப் போல இந்த நிலமையும் மாறலாம். நாளை மகனையோ மகளையோ பார்த்து ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற சீக்கிரம் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கோ! என்கிற மேற்கத்தியர்களின் நிலமை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாதது. பிரான்சு போன்ற நாடுகளில் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெற்றோர்கள் சம்மதத்துடனே திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்று மேற்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களிடை பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணங்கள் நடப்பதில்லை. ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ விரும்புவது பெற்றோர்கள் சம்மதமின்றி நடக்கிறது என்பதால், திருமணச்செலவையும் அந்த ஜோடியே பார்த்துக்கொள்கிறது, பின்னர் அவர்கள் பிரிவும் பெற்றோர்களை எதிர்பார்க்காமலேயே நடைபெறுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்வதும் பிரிவதும் அவரவர் சொந்த விருப்பம், இரண்டிற்குமே உதவச் சட்டங்கள் இருக்கின்றன.

 

மனிதர்கள் கூடிவாழ்வது என்று தீமானித்தபிறகு, ஒரு கூட்டத்திற்கென பொதுவானதொரு வாழ் நெறியை அச்சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களோ அல்லது அவர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு சிலரோ அறிவுறுத்துகிறார்கள். தனது தேவைகளை தான்மட்டுமே நிறைவேற்றிக்கொள்வது இயலாது என்றிருக்கிறபோது, தானல்லாத பிறர் வகுக்கும் நியதிக்கும் அவன் கட்டுப்பட்டான். அதுபோலவே இவன் பிறரோடு சேர்ந்து ‘இதுதான் சரி’ என்றதை ஏற்ற மனிதர்களும் இருந்தார்கள். பெருவாரியான மக்களால் ஏற்கப்பட்ட ஒரு வழக்கம் ஆண்டு பலவாக கடைபிடிக்கப்பட்டு மரபு ஆனது. மானுடம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஒப்ப வாழ் நெறிகளை விவாதத்திற்குட்படுத்தி தேவையெனில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம், எதுவும் ‘taboo’ அல்ல என்று நினைத்த மேற்கத்திய சமூகத்தில் ஒரு பிரிவினர் “இப்போக்கு எதில் போய் முடியுமோ?” என்ற கவலையில் மூழ்கி இன்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வீதியில் இறங்குகின்றனர்.
ஒரு பிரெஞ்சுக் குடும்பம் இரண்டு பெண்கள்: ஒருத்தி நடுத்தர வயது, மற்றவள் உயர்கல்வி தொடர்பவள். ஒருத்திதாய், மற்றவள் மகள். தன்னுடன் பழகும் ஆண் நண்பன் தன்னிடம் காதலைத் தெரிவிக்கவில்லை என்ற வருத்தத்தைத் மகள், தாயிடம் தெரிவிக்கிறாள். தாயோ “அவசரப்படாதே அவன் உன்னிடம் பழகுவதைவைத்துப் பார்க்கிறபோது, விரும்புவதாகத்தான் தெரிகிறது, ஒரு வேளை எப்படிச் சொல்வது என தயங்குகிறானோ என்னவோ” என மகளுக்குச் சமாதானம் சொல்கிறாள். ஒரு வாரம் கழித்து மகள் இல்லாத சமயம் பார்த்து அவள் தாயிடம் இளைஞன் வருகிறான், தனது மனதிலுள்ள காதலைத் தெரிவிக்கிறான். பிரச்சினை என்னவெனில் அவன் காதல் வயப்பட்டது பெண்ணின் தாயிடமே அன்றி அவள் மகளிடம் அல்ல என்ற உண்மை. பெண்ணின் தாய்க்கு எதிர்பாராத இத்தகவல் அதிர்ச்சியை அளிக்தபோதிலும், தனக்கான நியாங்களின்படி அக்காதலை ஏற்பது சரி. இளைஞனுக்கு அவள் தரும் பதில் ஒரு பெரிய’Oui’ (Yes). அவள் பெண்ணேகூட தாய் எடுத்த முடிவினைக்கேட்டு அதிர்ச்சி அடைவதில்லை, பெண்கள் இருவரும் தாய்- மகள் என்ற உறவின் அடிப்டையில் இப்பிரச்சினையைப் பார்ப்பதில்லை, இரு பெண்களுக்கிடையேயான பிரச்சினையாக பார்க்கின்றனர். “எனது நலன் முக்கியம், மகளோ, மகனோ உறவினர்களோ, நண்பர்களோ, சமூகமோ வாழ்வில் குறுக்கிட, எனது நடத்தையை மதிப்பிட ஒன்றுமில்லை – என்ற இந்த பிரெஞ்சுக்காரர்களின் அல்லது மேற்கத்தியர்களின் போக்கு உலகமெங்கும் பரவி வருகிறது.

 

சுதந்திரத்திற்கு வானமே எல்லை என்கிற ‘Libertine’ கூட்டம் – Marquis de sade (1740 -1814) போன்றவர்கள் பிரெஞ்சு சமூகத்தில் இன்று அதிகம். அவர்கள் “மனம்போன போக்கில் வாழ்வேன், எனது தேவைகளும், உணர்ச்சிகளுமே எனக்கு முக்கியம்” என வாதிடுபவர்கள். விளைவாக ஓர் ஆணும் பெண்ணும் -அல்லது ஆணும் ஆணும் – அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்துவாழ (திருமணம் என்பது தற்போதைக்கு விலக்கப்பட்ட சொல்) காதல் – (l’amour) ‘இறைவணக்கம் போல’ பிரெஞ்சுக் காரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே முதற்பார்வையிலேயே ஏற்பட்ட மயக்கம் – coup de foudre, காதலுக்குக் காரணமாக இருக்கலாம், ஆங்கிலத்தில் ‘love at first sight’ என்கிறோமே அதே பொருளில். வயது, குடும்பம், சமூகம் என எவ்விதத் தளைகளும் அவர்களுக்கில்லை, தயக்கமின்றி ஒருவர் மற்றவரிடம் “Je t’aime’ (I love you) என்பார்கள்.

 

முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்த பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஒலாந்து (François Hollande) அதிபர் தேர்தலில் ஜெயித்து மேடையில் தோன்றியபோது தமது காதலி பத்திரிகையாளர் பெண்மணிக்குப் பகிரங்கமாக பிரெஞ்சு முத்தம் தர தயங்கவே இல்லை. அப்பெண்மணியின் இடத்தில் இன்று ஒரு நடிகை. இவரிடம் ‘Je t’aime’ என அதிபர் தெரிவித்து ஒருவருடம் ஆகப்போகிறது. இவருக்கு முன்பிருந்த அதிபர் சர்க்கோசியும் தனது அப்போதையை மனைவிய விவாகரத்து செய்துவிட்டு, இத்தாலி நாட்டைச்சேர்ந்த பாடகி ஒருவரை பதவிக்காலத்தில் காதலித்து மணம் செதுகொண்டார். பெரும்பாலான பிரெஞ்சுகாரர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணவன், மனைவி என வாழ்கின்றவர்கள்தான். முறைப்படி மணவிலக்கு பெற்றபிறகே இது நடைபெறுகின்றன என்றாலும் தங்கள் பிள்ளைகள் நலனில் அக்காறைகொள்ளாத இந்த நவீன வாழ்க்கை ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொள்கிற வாழ்க்கை முறை.

 

Faire le Bise – முத்த பரிமாற்றம்:

 

முத்தம் என்றாலே காதல் சம்பந்தப்படப் பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரெஞ்சு சந்திப்புகளில் கைகுலுக்கல்போல, முத்தங்கள் இரு மனிதர்களுக்கிடையேயான உறவின் வெளிப்பாடு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது வழக்கம். முத்தத்தை Bise அல்லது Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள்.

 

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. அதிலும் பிரெஞ்சு முத்தம் உலகம்புகழ்பெற்றது. இரண்டாம் உலகபோருக்குப்பின் அமெரிக்க வீர்கள் சொந்த நாடு திரும்பியபோது, காத்திருந்த காதலிக்கும், மனைவிக்கும் மணிகண்ணகில் தாங்கள் ஐரோப்பாவில் கற்றதென பிரெஞ்சு முத்தங்களை வழங்கியிருக்கிறார்கள்; இதன் விசேடம், உதடுகளோடு இருபாலரின் நாக்கும் ஒத்துழைக்கவேண்டும், பிரெஞ்சில் இம்முத்தத்தைச் அரங்கேற்றுவதற்கு Galocher என்று பெயர். Galocher என்பதற்கு Overshoe என்று பொருள். மழைக்காலத்தில் ஓவர் ஷூ போட்டு நடந்து பார்த்துவிட்டு காதலிக்கோ காதலர்க்கோ பிரெஞ்சு முத்தத்தைத் கொடுத்துப் பெயர்வைத்தது சரிதானா? எனத் தெரிவியுங்கள்.

 

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் கன்னத்தில் முத்தமிடலாம் குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை. முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும்.

 

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

 

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

– கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது (நட்பு, நெருங்கிய உறவுகள்) பொது வழக்காக இருக்கிறது.
சில நேரங்களில் சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

(தொடரும்)

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie)
தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய சரித்திரம்’. Autobiographie என்ற பிரெஞ்சு சொல்லை நேரடியாக மொழிபெயர்ப்பின் அது எழுதிய நபரின் வாழ்க்கைச் சரித்திரம். ஆனால் உண்மையில் ஒருவகையான நினைவு கூரல். எழுதிய நபரின் கடந்தகால நினைவுகளை அசைபோடுதல். இக்காரியத்தில் குவிமையமாக இருப்பது: எழுதியவர் மூன்றாவது நபராக இருந்து பார்த்தக் கேட்ட சம்பவங்களல்ல; அவரே பங்காற்றிய நிகழ்வுகள். ‘இருத்தல்’ சம்பாதித்து, மறக்க இயலாமல், அவருடைய மனக்குளத்தில் தெப்பமாக மிதக்கிற சொந்த அனுபவங்கள். அவர் துணைமாந்தரல்ல, நாயகன்; சாட்சி என்று கூற முடியாது சம்பவத்தின் கர்த்தா. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் “கடந்தகால வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து தன்னுடைய இயற்கைப் பண்பை உரைநடையில் ஒருவர் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் செயல்.

 
“என்னுடைய நாவலின் மையப்பாத்திரமே நான்தான் என்கிறார் ” “Les aventures burelesques de Monsieur d’Assoucy” எழுதிய Charles Coypeau d’Assoucy (1605 – 1677). வெகுகாலம் தொட்டே தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பதிவுசெய்வது இலக்கிய உலகில் நடந்துவருகிறது. ஆனால் அப்படி யொன்றை பதிவுசெய்கிறோம் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தது பதினேழாம் நூற்றாண்டு என பிரெஞ்சு இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. சாட்சியங்கள் என்ற பெயரில் தங்கள் சுய சரித்திரத்தில் தன்னைத் தானே வியந்தோதிக்கொண்ட கதைகள் பிரெஞ்சு இலக்கியங்களிலும் தொடக்ககாலங்களில் நிறைய நடந்திருக்கின்றன. சுயசரித்திரம் எழுத மதமும் தூண்டுகோலாக அமைந்தது. குறிப்பாக கிருத்துவத்தில் சமயச் சடங்குகளில் ஒன்றாக இருக்கிற பாவ சங்கீர்த்தனம் சுய சரித்திரத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. பாவச் சங்கீர்த்தன சடங்கு அளித்த தைரியதில் தங்கள்ள் சமய குருக்களிடம் பகிர்ந்துகொண்ட சொந்த வாழ்க்கையில் இழைத்தத் தவறுகளை, அல்லது அப்படிக் கருதிய தவறுகளை, முன்பின் அறிந்திராத வெகு சனத்திடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக தங்கள் நெஞ்சின் பாரத்தைக் குறைக்கமுடியுயுமென பலர் நம்பினார்கள். உதாரணத்திற்கு மோந்தேஞ்னுடைய ( Montaigne) ” Essais, ரூஸ்ஸோவுடைய (Rousseau) ‘Les confessions’ ஆகியவற்றைக் கூறலாம். அதன் பின்னர் ஷத்தோ•ப்ரியான்(Chateaubriand ) என்பவர் எழுதிய Mémoires d’outre-tombe, சுயவரலாற்றின் புதியதொரு பயன்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு புனைவிற்குறிய குணத்தை எழுத்தில் கொண்டுவந்ததோடு, ஒரு தனிமனிதன் சமூகத்திற்குக் கையளித்த விண்ணப்பமாகவும் அது இருந்தது. “மானுடத்தின் அந்தரங்க வரலாறு ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட George Sandன் (1804-1876) ‘Histoire de ma vie”யும் அவ்வகையில் முக்கியமானதொன்று  Autobiographie என்ற வார்த்தையில் அதன் முன்னொட்டு சொல்ல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் , அடுத்து பின்னொட்டு சொல் அடிப்படையில் எழுத்தும் வாசிப்பும் எடுத்துக்கொள்கிற சுதந்திரம், இவ்விரண்டு கருத்தியங்களிலும் திறனாய்வாளர்கள் – இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கிடையிலும் முரண்கள் இருக்கின்றன. விளைவாக இன்றளவும் கோட்பாட்டளவில் குழப்பமான சொல்லாடலாகவே இருந்துவருகிறது. ஒரு சுய சரித்திரத்திற்கான வரவேற்பு என்பது ஒரு மனிதன் தனது சமூகத்தில் ஏற்கனவே சம்பாதித்திருந்த செல்வாக்கு மற்றும் இடம் சார்ந்தது. அதே வேளை அதன் வெற்றி என்பது சொல்லப்படும் செய்தியிலுள்ள நம்பகத் தன்மை, எடுத்துரைப்பிலுள்ள தனித்தன்மை மற்றும் அழகியலால் தீர்மானிக்கபடுபவை.

 

ஆ. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

 

புதுச்சேரியைசேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதி இயக்கிய ஆவணப்படம். சுந்தரேசனாரின் அருமை பெருமைகளை அவரோடு நெருங்கிப்பழக வாய்ப்பமைந்த நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காவிரி ஆற்றோடு கலந்து பாய்கிற சிலப்பதிகார கானல்வரிகள் சுந்தரேசனாரின் கணீரென்ற குரலில் அந் நதி நீர்போலவே ஓசையிலும் சுவையிலும் உயர்ந்து நிற்கிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டவரென்றும் தமிழ் நாட்டில் மிகப்பெரும் இசை விழிப்புணர்வு ஊட்டி, தமிழர்களிடத்து இசையார்வம் தழைக்க உழைத்தவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சிற்றிலக்கியங்களை அதற்குரிய இசையில் பண்முறையில் பாடிக்காட்டிய பெருமைக்குரியவர்” என்கிற குறிப்புகள் இந்த ஒளிவட்டில் இடம்பெற்றுள்ளன, அதற்குப் பொருந்துகிறவகையிலேயே ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
ண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (ஆவணப்படம்)

எழுத்து இயக்கம்: முனைவர் மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளித் திரைக்களம்
தொடர்புகட்கு: http://www.muelangoven.com

 

இ. அதிபர் அப்துல் கலாமும் – மாத்தாஹரி நாவலும்

 

அவரது மரணத்தால் நாடே உறைந்துபோய்விட்டது. இந்திய அதிபர்களில் ஒருவருக்கு நானறிந்து நாடுதழுவிய அஞ்சலி என்பது இதுதான். அதற்கான தகுதிகள் அவருக்கு கூடுதலாகவே இருந்தன. அதிபராக அல்ல ஒரு மா மனிதராக அதிபர் நாற்காலியை அலங்கரித்திருந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் சம்பிரதாயமாக அல்லாது, அண்மைக்காலங்களில் ஒர் அசாதாரண ஆசாமி என்ற நினைப்போடு கைகுலுக்கிய இந்தியத் தலைவர் இவராகத்தான இருக்கவேண்டும். தமிழர்களுக்கென்றமைந்த தனித்த குணத்தின்படி ஆராவரத்துடன் துக்கத்தை அனுசரித்தார்கள். அவர் இரண்டாம் முதறை அதிபரானால் எனது பெருமை என்ன ஆவது நினைத்த தமிழினத் தலைவர்களெல்லாங்கூட தராசில் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் கலாம் பெயரால் பரிசு என்று அறிவித்து எல்லோரினும் பார்க்க எனது அஞ்சலி எடைகூடியதென்று தெரிவித்து எதிரிகளை வாயடைக்கசெய்துவிட்டார். மறைந்த கலாமே இத்தைகைய கூத்துகளுக்குச் சம்மதிக்கக்கூடியவரா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.  ஐரோப்பிய யூனியனின் பொன்விழா (50 ஆண்டுகள்) நிகழ்வில் திரு கலாம் கலந்துகொண்டார். ஐரோப்பிய பாராளுமன்றம் இருப்பது நான் இருக்கிற Strasbourg நமரில். அழைக்கப்ட்ட இந்தியர்களில் நானும் ஒருவன். நாள் ஏப்ரல் 25, 2007. அவர் ஆற்றிய உரையை மறக்க முடியாது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எங்களைபோல அழைக்கப்பட்டிருந்த நண்பர்களுக்கு முன்னால் கனியன் பூங்குன்றனாரைபற்றி இரண்டொரு வரிகள், புறநானூற்றிலிருந்து “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” எனத் தமிழில் கூறி ” I am a world citizen, every citizen is my own kith and kin” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டு உரையைத் தொடர்ந் த போது, நாங்கள் சிலிர்த்ததும், பரவசத்தில் கண்கள் சுரந்ததும் மறக்க முடியாத அனுபவம்.  அச்சம்பவத்தை ‘மாதாஹரி ‘நாவலில் அத்தியாயம் 24ல் பயன்படுத்திக்கொண்டேன், கதையில்வரும் இளம்பெண் (ஹரிணி) இந்திய அதிபர் அப்துல் கலாம் பாராளுமன்ற உரையை நேரில் கேட்பதுபோன்று அமைத்து அவர் உரையின் சில பகுதிகளை நாவலில் கலாம் பேச்சாக பதிவு செய்தேன். ஏதோ என்னால் முடிந்தது.
———————————————————-

பிரான்சு: நிஜமும் நிழலும் -2:

கேள்வி ஞானம் என்ற சொல்லை பலரும் அறிந்திருக்கிறோம். இக் கேள்விஞானம் அவரவர் பெறமுடிந்த தகவல்களின் அடிப்படையிலும், அத்கவல்களைப் பெற்ற நபரின் கற்பனை வளத்தைப் பொறுத்தும் உருவாவது. பிரான்சு நாட்டைப்பற்றியும் அப்படியொரு கருத்தினை நீங்கள் வைத்திருக்கலாம். அக்கருத்திற்கு வலு சேர்ப்பதோ அல்லது அதனைப் பலவீனப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. கிராமங்களில் பையன்கள் விளையாட உத்தி பிரிக்கும் போது, தன்னோடு வந்திருக்கும் புதிய பையனை அறிமுகப்படுத்த நினைக்கிற ஒருவன் ” கூழுப்பிள்ளை (உபயம் -கந்தர்வன் சிறுகதை) வீட்டுக்கு வந்திருக்காண்டா” என்பான். அந்தப் பையன் ‘கூழுப்பிள்ளை’ வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருப்பான், இருந்தும் பையன்கள் பார்வை சட்டென்று அவன் வயிற்றில் இறங்கும். அவன் வயிறும் கூழுப்பிள்ளை வீட்டு ஆண்களைப்போலவே பெருவயிறாக இருக்கவேண்டும் என்று அவர்கள்மனது தீர்மானித்ததை, பார்வையால் உறுதிசெய்துகொள்ளும் முனைப்பு அக்கண்களில் தெரியும். “கூழுப்பிள்ளை வீடு” என்ற அடைமொழி சிறுகச் சிறுகக் கட்டிய குளவிக்கூடு. அப்பையனைப்பற்றிய அசலான புரிதல் அவர்களிடத்தில் நிகழும் வரை அவ்விடத்தைக் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்ற சொல் நிரப்பும்.

நாடுகளும் அதுபோன்றவைதான். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஆகிருதியை, தனித்தன்மையை, பலத்தை, பலவீனத்தை முதலிற் கட்டமைப்பதில் சமூகத்தைப்போல அவன் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பங்கிருக்கிறது. பிரான்சு என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பார்த்த திரைப்படங்கள், படித்தப் புத்தகங்கள், மேற்கு நாடுகளில் அதுவுமொன்று என்ற உண்மையையொட்டிய கற்பனைகள்; புதுச்சேரிவாசியாக இருந்து பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்களிடம் உரையாடிய அனுபவமிருப்பின் அவர்கள் திரித்த கயிறுகள், உங்கள் சொந்தக் கற்பனை என அனைத்தும் சேர்ந்து ஒருவகையானச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும். பின்னர் சித்திரத்தின் பருமனைப் பெருக்கிப் பார்ப்பதும், குறைத்துப் பார்ப்பதும் உங்களின் கற்பனையையும் அக்கற்பனைக்கான சூழலையும் பொறுத்தது. பிரெஞ்சுக்காரன், அமெரிக்கன், இந்தியன், போலந்துவாசி, உகாண்டாக்காரன், பாகிஸ்தானியன் என்கிற நாட்டு அடையாளம் மனிதர்கள் பற்றிய முதல் புரிதலைத் தொடங்கிவைக்கின்றன. ஒரு மண்ணின் பெருமையும் சிறுமையும், அதன் வரலாறும் அறிவியல் முன்னேற்றமும், சாதனைகளும், சாபங்களும் அம்மண்ணின் குடிகளை நிழல்போல சாகும் வரை துரத்துகின்றன. இதற்கு வேர் எது? பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான கல்யான குணங்கள் எங்கிருந்து வந்தன. Rome wasn’t built in a day என்பதுபோல சிறுக சிறுக அதனைக் கட்டியெழுப்பியவர்கள் வேறுயாருமல்ல அவர்களும் அந்நாட்டின் குடிகள்தான். இன்றைய இந்தியனின், பாகிஸ்தானியன் அல்லது பிரெஞ்சுக்காரனின் பெருமை சிறுமை இரண்டிற்குமே அவரவர் முன்னோர்கள் தான் பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

பிரெஞ்சு மக்களும் பண்பாடும்

உலகில் எப்பகுதியில் வசிக்க நேரினும் மனிதர்களுக்கான அடிப்படை உயிரியல் தேவைகளில் பேதமில்லை. பசிவந்தால் உண்பதும், இயற்கை உபாதைகளுக்கு வழி செய்து கொடுப்பதும், புலன்களைப் பயன்படுத்துவதிலும் மனித விலங்குகளிடை பேதமில்லை. எனினும் பண்பாடு வேறு, அது வாழ்வியக்கத்தின் விழுமியம். மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுவதைப்போலவே, சமூகம், இனம், நாடு சார்ந்து வேறுபடுவதுண்டு. ஓர் இடத்தில் நிலையாய் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் தங்களிடத்தில் ஏற்படுத்திக்கொள்கிற வாழ்க்கை நெறிகளின் தொகுப்பென்றும் பண்பாட்டைக் கூறலாம். கல்வி, சிந்தனை, அவன் சார்ந்த சமூகத்தின் தேவைகள், புவிசார் காரணிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மரபு. உண்பது உயிரியல் தேவையெனில், எதை உண்பது? எப்படி உண்பது? எவருடன் உண்பது, உண்ணும்போது செய்யவேண்டியதென்ன செய்யக்கூடாதது என்ன? என்பதெல்லாம் பண்புகளாகப் பார்க்கப்டுகின்றன. ஆக மானுடத்திற்குப் பொதுவான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பண்பாடுகள் குறுக்கிடுகின்றன. ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றொரு சமூகத்திற்கு வியப்பைத் தரலாம், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டை மற்றொரு சமூகத்தின் பண்பாட்டின் அடைப்படையில் உயவென்றோ தாழ்வென்றோ முடிவுக்குப் பொதுவில் வரமுடியாது. செவ்விந்தியர்களுக்கும், மலைவாழ்மக்களுக்கும் நகர சார் மக்களின் பண்பாடுகள் தாழ்ந்தவை என நினைக்க உரிமைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகால காலனி ஆதிக்கம், அறிவியல் முன்னேற்றத்தின் அசுர வளர்ச்சி, ஊடகம், தகவல் மற்றும் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகமயமாக்கல் என பலவும் அண்மைக்காலங்களில் ஒற்றை பண்பாட்டை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருக்கக் காரணமென்ற சூழலில் பிரெஞ்சு பண்பாட்டில் நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறதென பார்க்கலாம்:

 

மரியாதை, நாகரீகம், உபசாரம்:
ஓர் அந்நியனாக இருந்துகொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் நான் பார்க்கும் குணம்: நேரம் தவறாமை, சட்டத்தை மதித்தல், எளிமை, வேலை நேரத்தை வேலைக்கென மட்டுமே செலவிடுதல், செய்யும் பணியில் அல்லது தொழிலில் அக்கறையுடனும், அர்பணிப்பு மனத்துடன் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல், மனதிலுள்ள வெறுப்பையோ கசப்பையோ துளியும் வாடிக்கையாளரிடமோ, நோயாளியிடமோ, நுகர்வோரிடமோ வெளிப்படையாகக் காட்டிகொள்ளாதது ஆகியவை. பேரங்காடியாக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம், அரசு அலுவலகங்களாக இருக்கலாம், தனியார் நிர்வகிக்கும் காப்பீடு நிறுவனங்களாக இருக்கலாம், மருத்துவ மனையாக இருக்கலாம் உங்களுக்கு உரிய நேரத்தை உங்களோடு செலவிட சம்பந்தப்பட்டவர் காத்திருப்பவார், இங்கே அது சேவை, தொழில் அல்ல. எதிர்பாராவிதமாக ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடக்கலாம், ஆனால் அது அபூர்வமாக நிகழக்கூடியது.

 

மூன்று ஐரோப்பியர் இருக்குமிடத்தில் ஒருவர் மட்டும் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் பிரெஞ்சுக் காரராக இருப்பார் – (இது ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களைக் குறித்து வைத்திருக்கும் அனுபவத்திற்கு நேர்மாறானது ) ஆங்கிலேயரும், ஜெர்மன்காரரும் என் அனுபவத்தில் சிரித்து பார்த்ததில்லை. பிரெஞ்சுக் காரர் நம்முடன் சட்டென்று கை குலுக்குவார், வளவளவென்று பேசுவார். அவரைப்பற்றிக் கூடுதலாக நம்மிடம் தெரிவித்திருப்பார். எத்தனை வெளிப்படை, எவ்வளவு நெருக்கம் என்றெல்லாம் நினைத்து மனதிற்குள் பாராட்டிக்கொண்டிருப்பீர்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் கண்ணெதிதே காப்பியோ தேநீரோ வாங்கிப் பருகுவார். பிரெஞ்சு நண்பர் ரெஸ்ட்டாரெண்டுக்கு சாப்பிடப் போகலாம் என அழைப்பார் நீங்கள் இரண்டு பேர் எனில் பிரச்சினையில்லை. அதிக எண்ணிக்கையில் இருப்பீர்களெனில் அவரவர் பில்லுக்கு அவரவர்தான் பணம் கொடுக்கவேண்டும். இந்த அணுகுமுறையில் எவ்விதச் சங்கடமும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்காது. பிரான்சுக்கு வர நேரிட்டால் உங்கள் ஆங்கிலத்திற்கு எல்லா இடங்களிலும் கதவு திறக்கும் என நம்பாதீர்கள், இந்தியாலோ அல்லது ஆங்கில மொழி பேசுகிற நாடுகளிலோ தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் பிரெஞ்சுக்காரர்கள், உள்ளூரில் தமக்கு ஆங்கிலம் வராது, தெரியாது என்பார்கள். நெப்போலியனுக்கு ஆங்கிலேயரால் நேர்ந்த தோல்வியை சகித்துக்கொள்ள இன்றளவும் பிரெஞ்சுக்காரர்கள் தயாரில்லை. எனவே குறைந்த பட்சம் பிரெஞ்சுக் காரர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ‘merci’ (நன்றி) என்ற வார்த்தையையாவது சொல்லப்பழகிக்கொண்டு பிரான்சுக்குள் வருவது நல்லது.

அ. நீ அல்லது நீங்கள் – tutoiement ou Vouvoiement

தமிழில் உள்ளதுபோல நீ என்ற சொல்லும் நீங்கள் என்ற சொல்லும் பிரெஞ்சில் இருக்கிறது. நீ என்று அழைப்பதை tutoiement என்றும் நீங்கள் என்று அழைப்பதை Vouvoiement என்றும் பிரெஞ்சில் சொல்வதுண்டு . அந்நியர்கள், புதிய மனிதர்கள், பரிச்சயமற்ற மனிதர்கள் ஆகியோரிடம் ‘நீங்கள்’ என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. மாறாக ‘நீ’ என்ற சொல்லை சிறுவர் சிறுமியரிடமும், உறவினர்கள், நண்பர்கள் தோழிகள் ஆகியோரை அழைக்கவும் பயன்படுத்துகிறார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் ‘நீ’ போட்டே அழைக்கிறார்கள். வயது ஒரு தடையே இல்லை. முன்பின் தெரியாதவர்கள் பழக நேரும்போது ‘நீங்கள்'(Vous) எனத் தொடங்கி பின்னர் நெருக்கம் ஏற்படுகிறபோது ‘நீ'(Tu) என ஒருவர்க்கொருவர் அழைத்துக்கொள்வது சகஜம். இருவரில் ஒருவருக்கு 15 வயதும், மற்றவருக்கு 90 வயது என்றாலும் ஒருமையில் அழைத்துக்கொள்வது அவர்கள் பார்வையில் இடைவெளியைக் குறைக்கிறது. இங்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், தற்போதும் பழகிய நண்பர்களை முதல் நாளில் விளித்ததைப்போலவே ‘நீங்கள்’ போட்டு அழைக்கிறேன். ‘ நீ’ என்று அழைக்க தயக்கமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் தள்ளாடும் வயதிலும் கூட வயதிற் சிறியவர்களை ‘வாங்க போங்க’ என அழைக்கும் பெரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மனிதர் உயர்வு தாழ்வு இடைவெளியைக் குறைக்க பிரெஞ்சுக் காரர்களின் ‘நீ’ க்கு உரிய நியாயங்கள் சரியானவையென்றே நினைக்கிறேன்.

Bonjour – வணக்கம்

பிரெஞ்சுக்காரர்களின் வெற்றிக்கு அவர்கள் முகமனுக்காகச் செலவிடும் வார்த்தைகளுக்கும் சமிக்கைகளுக்கும் பெரும் பங்குண்டு. இருமனிதர்களின் பார்வைகள் சந்தித்தால் முகமன் இன்றிதமையாததென்பது அடிப்படை நாகரீகம். அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கேற்ப ( அந்நியர், நண்பர், உறவினர் எனபதைப்பொறுத்து மாறுபடும்) எனினும் வார்த்தைகள், முறுவல்கள், கை குலுக்கல்கள் இரு கன்னங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள், தழுவல்கள், கட்டி அணைத்து முதுகில் தட்டுதல் என்று பிரான்சு நாட்டில் முகமனுக்குப் பல வடிவங்களுண்டு.

வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் பக்கத்து வீட்டிற்குச் செல்ல படியேறி வருகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ற வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு. இதப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது: அவர் ஆணோ பெண்ணோ, சிறுவரோ சிறுமியோ; கிழவனோ கிழவியோ; நாயுடன் நடதுபோகிறவரோ அல்லது காதலனின் தழுவல் பிடியிலிருந்து சட்டென விடுபட்டவளோ எவராயினும் உங்களுக்கு ஒரு ‘Bonjour” சொல்லாமல் கடந்து செல்லமாட்டார் பெரிய அங்காடிக்குள் நுழைகிறீர்கள், ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள், வாங்குவதா வாங்க வேண்டுமா எனக் குழப்பத்திலோ அல்லது வெறுமனே, மனைவியைத் திருப்திபடுத்தவேண்டியும், பர்சைக் காப்பாற்றும் யோசனையுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வாங்கும் ஆசாமிகளா, கடைதோறும் இப்படி நுழைந்து நேரத்தை செலவிடும் தம்பதிகளா என்பதை விற்பனையாளர் உங்கள் முகங்களைப் பார்த்ததும் அறிந்திருப்பார், எனினும் உங்களை நெருங்கி “உங்களுக்கு உதவட்டுமா?’ எனக்கேட்பதற்கு முன்பாக விநயமாக இரண்டு ‘Bonjour’ களை பிள்ளையார் சுழிபோல செலவிட்டபிறகே விற்பனை உரையாடலைத் தொடங்குவார். பொருளை எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தவருகிறீர்கள், காசாளரும் ஒரு ‘Bonjour’ க்குப் பிறகே பொருளுக்குரிய பணத்தை பெறுவார். அன்றைய தினம் அவர் இரு நூறு வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் அனைவருக்கும் முறுவலுடன் கூடிய ‘Bonjour’ ஒன்றை காசாளர் பெண்மணி செலவிடுவாள். பிரான்சு நாட்டில் இரயிலில் பயணம் செய்த அனுபவமிருப்பின், பரிசோதகர் பயணச்சீட்டை வாங்கி சரிபார்க்கும் முன்பாக ‘Bonjour’ தெரிவிக்காமல் உங்கள் கையிலிருந்து டிக்கெட்டை வாங்கமாட்டார். ஒரு இரயிலில் குறைந்தது நூறுபேருக்கு என்றாலும் ஒரு நாளைக்கு 500 பேருக்காவது அவர் ‘Bonjour தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரில் போகிறீர்கள், அல்லது நடந்து போகிறீர்கள் உங்களிடம் உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப்பார்க்க போலிஸார் நினைத்தாலும் மேற்கண்ட வார்த்தைதான் முதலில் வரும். ஆக நாடு முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல லட்சக்கணக்கான வணக்கங்கள் மனிதர்களிடையே பரிமாறிகொள்ள நேரிடுகிறது: முறுவலோடும் வணக்கத்தோடும் தொடங்கும் உரையாடல், இரு நபர்களுக்கிடையேயான இடைவெளியை குறைக்கிறது, உரையாடலை இலேசாக்குகிறது.

(தொடரும்)

மொழிவது சுகம் ஜூலை 18 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

 

கலை மக்களுக்காக (Art Social)

கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் இவ்வியக்கம் தீவிரமாக செயல்பட்டது. ‘கலை மக்களுக்காக’ என்பது கலை, இலக்கியம் ஆகியவற்றைக்கொண்டு சமூக ஏற்றதாழ்வுகளை விமர்சனம் செய்வது மற்றும் சாதாரண மக்களின் முன்னேறத்திற்கு ஆதரவாக அவ்வைரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுதல். மரபை உடைத்து, புதிய போக்கில் நம்பிக்கைக்கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் இவ்வியக்கத்தின் அபிமானிகள். பதினெட்டாம் நூற்றாண்டில் மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கம், மதத்தில் தலையீடு ஆகியவற்றை மறுத்த சீர்திருத்தவாதிகள், கலைஞர்களை சராசரி மக்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படவேண்டுமென வற்புறுத்தினார்கள் அச்செயல்பாடு இரண்டுவிதமாக இருக்கலாமென யோசனையும் சொல்லப்பட்டது. சமூகக் குறைபாடுகளை படைப்புகளில் வெளிப்படுத்துதல் என்பது ஒரு முறை, அக்குறைபாடுகளை அகற்றுவதற்கு உரிய யோசனைகளை வழங்குதல் என்பது மற்றொரு முறை.

 

“கலை கலைக்காக” என்ற இயக்கம் படைப்பிலக்கியவாதிகளிடத்தில் செல்வாக்கைப் பெற்ற அதேக் காலக் கட்டத்தில் கலை மக்களுக்காக என்ற இயக்கம் ஓர் எதிர் நடவடிக்கையாக இடது சாரி சிந்தனையாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது. இவ்விரண்டு போக்குகளும், அவை பயணித்த பாதைகளும் வேறு வேறாக இருந்தபோதிலும் ஒவ்வொன்றும் மற்றதின் இயங்கா தளத்தைக் கண்டறிந்து அதில் செயல்பட்டதால், படைப்பிலக்கியதுறைக்கு இரண்டுமே உதவிபுரிந்திருக்கின்றன. இவ்வகையில் வந்த தொடக்ககால படைப்புகள்: உதாரணத்திற்கு Journal des débats என்ற பிரெஞ்சு தினசரியில் எழென் சுய் (Eugène Sue) என்பவர் ஒருவருடத்திற்குமேல் தொடர்ச்சியாக எழுதிய ‘The Mysteries of Paris’ என்ற நாவலைக் குறிப்பிடலாம். சோஷலிஸ சமூகத்தை கட்டமைக்கமுயலும் ஒரு மேட்டுக்குடி கதாநாயகன் தொழிலாளர்கள், அடித்தட்டுமக்கள் சகவாசம் என வலம் வரும் கதை. இப்படைப்புகள் ஒரு பக்கம் தொழிலாளர்கள் உலகில் ஓர் எதிர்பார்ப்பினை உருவாக்கின, மற்றொரு பக்கம், சமூக நலனில் அக்கறைகொண்டு அர்பணிப்பு மனத்துடன் செயல்படும் படைப்பாளிகளை இனம் கண்டது. ஆனாலும் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும், தம்மை நேரடியாக இணைத்துக்கொண்டு இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றிய பிரபலங்கள் குறைவு, சொற்ப எண்ணிக்கையினரே, ஆர்வம் காட்டினார்கள். மாறாக தொடர்கதைகள், கவிதகள், நாடகங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டினார்கள், அவற்றில் வேகம் இருந்தது, உண்மையும் இருந்தது, மாறாக வாசிப்புக் கணந்தோறும் சிலிர்க்கவைக்கிற, இன்பத்தில் திளைக்கவைக்கிற, எண்ணி மகிழ்கிற இலக்கிய குணங்கள் அற்றவையென்ற விமர்சனத்திற்கு ஆளாயின; எமிலி ஜோலா, பியர் த்ய்ப்போன்(Pierre Dupont) போன்றோர் அந்தக் களங்கத்தைத் துடைத்தவர்கள் என்கிறபோதும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

1851ம் ஆண்டில் இரண்டாம் பிரெஞ்சு குடியரசைக் கலத்துவிட்டு, அதுநாள் வரை அதிபராகவிருந்த லூயி நெப்போலியன் போனபார்த் இரண்டாம் பிரெஞ்சு பேரரசை ஏற்படுத்தி தன்னை மூறாம் நெப்போலியனாக அறிவித்துக்கொண்டபோது ‘கலை மக்களுக்காக’ என்ற அணியினருக்குப் போதாதகாலம். ஆனால் 1889ல் மீண்டும் இவ்வியக்கம் சுறுசுறுப்பாக இயங்கியது. A. Tabarant, L.Cladel ஆகியோர், வேறு சிலருடன் இணைந்து சமூக எழுத்தாளர்கள் கிளப் (Club de l’art social) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். L’art social (1891-94) என்ற இதழ், ‘Théâtre d’art social’ என்ற நாடக இயக்கம், B. Lazare என்ற எழுத்தாளர் நடத்திய L’écrivain et l’art social (1896) என்ற சஞ்சிகை ஆகியவைகளெல்லாம் பின்னாளில் இவியக்கத்திற்கு ஏற்பட்ட ஆதரவைத் தெரிவிப்பவை.

 
இருபதாம் நூற்றாண்டில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் ‘கலை மக்களுக்காக’ இயக்கத்தைக் கையிலெடுத்ததும், அது இலக்கிய அடையாளத்தை இழந்து அரசியல் சாயத்தை அப்பிக்கொண்டது, தொடக்கத்திலிருந்த கவர்ச்சி அதற்கில்லை. பின்னாளில் அதனாலேயே செல்வாக்கிழக்க காரணமும் ஆயிற்று. எனினும் சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது அவ்வப்போது இக்குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வியக்கத்தின் பலமும் பலவீனமும் அடித்தட்டு மக்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வரும் படைப்புகளுக்கு அம்மக்களே உரிய வரவேற்பைத் தருவதில்லை. அவர்கள் அக்கறைகொள்ள இருக்கவே இருக்கின்றன மலிவான பொழுதுபோக்கு அம்சங்கள். அடித்தட்டு மக்களை குறிவைத்து தார்மீக நோக்கம், எதார்த்தைத் தோலுரித்துக்காட்டுதல், பொழுதுபோக்கு அம்சங்கள் ( வெகு சன எதிர்பார்ப்பு?)மூன்றையும் ஒன்றிணைப்பதென்பது எளிதான விஷயமுமல்ல இன்று ‘தலித் எழுத்த்து’ ‘பெண்ணிய எழுத்து’ என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் ‘கலை மக்களுக்காக’ முன் வைக்கும் வாதங்கள்தான். நாளை ‘முதியோர் இல்லத்தில் வாடும் வயது கிழங்கட்டைகளின் எழுத்து’ என்று கூட ஒரு வகைமை உருவாகலாம், எதுவவும் தப்பில்லை, ஆனால் இயங்கும் தளம் இலக்கியம் அல்லது கலை என்பதை மறந்து அனுதாபத்தை யாசிப்பதும், பிரச்சார அரசியலை மையப்படுத்துவதும் உண்மையான நோக்கத்திற்கு ஒரு போதும் உதவாது. ‘கலை மக்களுக்காக’ என்ற கூத்தரங்கில் அதிகம் அமெச்சூர் நடிகர்கள் அரிதாரம் பூச வருகிறார்கள், விளைவாக அவர்கள் நொண்டுவதைக் கூட கலை என சாதிக்கிறார்கள், பார்வையாளர்கள் முகம் சுளித்தால் கூடம் கோணலென்கிறார்கள் அதே வேளை தற்போது தமிழில் மற்றொரு கூட்டம் (‘கலை கலைக்காக’ என்ற திருநாமத்தை அவர்கள் வெளிப்படையாக தரிப்பதில்லை, தரித்தால் வடகலையா? தென்கலையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய ஆபத்து அதில் இருக்கிறது.) கைக்கு எட்டாத இடத்தில் இலையைச் போட்டு முடிந்தால் சாப்பிட்டுக்கொள் என்கிறது.

 

வயிறு பசிக்கிறதே என்று வைக்கோலையும் புண்ணாக்கையும் சாப்பிடமுடியாது, வாய்க்கும் ருசியாக இருக்கவேண்டும் என்பது என்கட்சி.

 

ஆ. அண்மையில் வாசித்தது

சொல்வனம் இதழ் 131ல் வாசித்தவற்றுள் கவர்ந்தவை அல்லது கவனம் பெற்றவை என இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இக்கட்டுரைகளை நான் தேர்வு செய்தமைக்குக் காரணம் அவை இரண்டுமே, சித்திரத்தை அடிப்படையாகக்கொண்டவை. நூலாசிரியர்கள் கனவுபோல எழுத்தில் இயக்கிய காட்சிகளை, வாசகர் மனதில் படிமங்களாக மட்டுமே இடம்பெறக்கூடியவற்றை கோடோவியங்களைக்கொண்டு நடமாடச்செய்வதற்கு அசாத்திய ஞானம் வேண்டும், கலைஞானம் அறிந்து வருது அல்ல, கண்டு கேட்டு உற்று உணர்ந்து பெறுவது, மனிதர் காரியமல்ல, சிந்தனையில் விவேகமும் பார்வையில் நுட்பமும் அழகும் வேண்டும்.

‘கோபுலு’ மறக்க முடியாத நினைவுகள் – எஸ். சிவக்குமார்: என்ற தலைப்பில் அவரோடு பழகிய நண்பர், எஸ். சிவக்குமார் தம் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். விகடன் இதழாளர்கள் தங்கள் இதழில் இக்கட்டுரையை வெளியிடத் தவறினோமே என வருந்தி இருக்கக்கூடும். கோபுலுவுக்கு செலுத்தப்பட்ட உன்னதானமான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கமுடியும், கோபுலு என்ற பெயர் தன்னுள் விதையாக விழுந்த கதையிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. கோபுலுவின் கோட்டோவியத்தின் சௌந்தர்யமும் நளினமும் இந்த மனிதரின் எழுத்திலும் இருக்கிறது, வெகு நாளாயிற்று இதுபோன்ற நடையிற் தோய்ந்து. வெறுமனே சடங்காக எழுதிப் பிரசுரமான கட்டுரையாக தெரிவியவில்லை. கோபுலுவின் ஓவியத்துடனும், காலத்துடனும் தோய்ந்து சுவைத்து மகிழ்ந்ததை அவற்றின் Texture கொண்டே வார்த்தைகளாக வடிவமைத்திருக்கிறார். விகடனில் வெளிவந்த த. நா. குமாரசுவாமியின் நாவல் வரிகளை கோபுலு தமது தூரிகை கொண்டு உயிர்பித்திருந்த காட்சியைக் கட்டுரையாளர் விவரிக்கிறபோது, கோபுலுவின் சித்திரங்கள் திரும்பவும் உயிர்பெற, நாடகக்கொட்டகை பார்வையாளன்போல கண்களை அகல விரித்து காட்சியில் லயிக்கிறோம். எனக்கும் தேவன் எழுதிய “ஸ்ரீ மான் சுதர்சனத்தை” ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சந்திக்கிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. கோபுலுவின் ஓவியத்தைக் கட்டுரையாளர்போல அக்கறைஎடுத்துக்கொண்டு அந்த நாளில் கவனித்தது குறைவு, பின்னாளில் சில வார இதழ்களைப் பிரிக்கிறபோது ஓவியங்களை வைத்து வரைந்தது யார்? என்பதை அறிவது எளிதாக இருந்திருக்கிறது, எனினும் கட்டுரையாளர் திரு எஸ். சிவக்குமார் அளவிற்கு ஓவியங்களில் தோயும் மனம் அப்போது எனக்கில்லை.

பீமாயணம் -தீண்டாமையின் அனுபவங்கள் -ரா.கிரிதரன்: சொல்வனத்தில் நான் வாசித்து மகிழ்ந்த இரண்டாவது கட்டுரை.பொதுவாகத் தமிழில் புத்தக மதிப்புரைகள் செய்வது இலக்கிய சேவை அல்ல. இவர்களை ஐந்து வகையினராகப் பிரித்துப் பார்க்கலாம்.
முதற் பிரிவின்படி சில விடாக்கொண்டன் எழுத்தாளர்கள் ( இதில் பெண்களும் அடக்கம்) நமது கையில் புத்தகத்தைத் திணித்து அல்லது தபாலில் அனுப்பி எப்படியாவது மதிப்புரையை எழுதவைத்துவிடுவார்கள். இராண்டாவது வகையில் எழுத்தைத் தவிர வேறு கூறுகளின் நிர்ப்பந்தகளால் எழுதப்படும் மதிப்புரைகள், சொல்லக் கூச்சமாக இருக்கிறது, நான் எழுதிய 90 விழுக்காடுகள் இப்படி எழுதப்பட்டவைதான். மூன்றாவது வகைமையில் ‘இவர்’ ‘அவர்’ நூலுக்கு மதிப்புரை எழுதுவார், நன்றிக்கடனாக சில மாதங்களுக்குப்பின் ‘அவர்’ ‘இவர்’ நூலுக்கு மதிபுரை எழுதுவார். பரஸ்பரம் முதுகைச் சொரிந்துகொள்வார்கள்.மேற்கண்ட மூன்று வகமைகளிலும் மதிப்புரைகள் தரம் எப்படியென்று சொல்லத்தேவையில்லை. நூலாசிரியர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார்கள் மற்றபடி அவர்கள் எழுதிய பத்து மதிப்புரைகளை எடுத்து மறுவாசிப்பு செய்துபார்த்தால், வார்த்தைகளுக்கு அவர்களிடம் எவ்வளவு வறட்சி யென்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால் மேற்கண்ட மூன்று வகைமைக்குள்ளும், அணுகுமுறையில் தவறிருப்பினும், நியாயங்களும் நடந்திருக்கலாம், தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்கள் சொந்த முயற்சியால்தான் தங்கள் அடையாளத்தை உறுத்திப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த மூன்றுவகை புத்தக மதிப்புரையாளர்களால் ஒருவருக்கும் பாதிப்பில்லை.நான்காவதாகத் தங்களை வசிஷ்டர்கள்(?) என நினைத்துக்கொள்கிற விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கொண்டாடப்பட ஒன்று நீங்கள் அவருக்குக் குடிப்பிள்ளையாக இருக்கவேண்டும், மீடியாக்கள் தயவால் வாமணவதாரம் எடுத்தவரென்றால், உங்களுக்குச் சலுகைகள் உண்டு, வசிஷ்டர்களை அனுசரித்துப்போகத் தெரியவேண்டும். தவறினால் உங்கள் இருப்பு கேள்விக்குறியாகும், அரிச்சுவடி பாடம் எடுப்பார்கள், உங்களுக்கு பேனாவைத் தொட யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளும் வரலாம்.

 

இவற்றையெல்லாம் கடந்து ஐந்தவதாக வகை புத்தக மதிப்புரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சிற்றிதழ்களையும், இணைய இதழ்களையும் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் அறிவார்கள். நல்ல புத்தகங்கள் படித்தேன், அவற்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன், என புத்தக மதிப்புரைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒருவர் நண்பர் ரா.கிரிதரன்.

 

இவர் மதிப்புரை எழுதுகிற புத்தகங்களை நம்பி வாங்கலாம். வாசித்தபின் மதிப்புரை எழுதிய ரா. கிரிதரன் கருத்திற்கு உடன்படாமல் போக வாய்ப்புண்டு. ஆனால் மதிப்புரை என்ற பெயரால் கொடுக்கும் சிபாரிசு கடிதம் நம்பிக்கைத் தன்மை கொண்டது. அவர் மதிப்புரைக்குத் தேர்வு செய்த நூலின் ஆசிரிரியரோ, ஓவியரோ, பதிப்பாளரோ ஒருவரும் வேண்டியவர்கள் பட்டியலில்லை. அம்பேத்த்கரின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டிலும் அதனைஓவியமாக்கிய கலைஞர்கள் ரா. கிரிரனைக் அதிகம் கவர்ந்த்திருக்கிறார்கள். அதாவது ஐயத்திற்கு இடமின்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை ஓவியமொழியில் கூடுதலாக பேசவைத்திருப்பதில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.சாதாரணமாக சித்திரகதைகளில் ஒரு கலைஞனின் ஓவிய ஞானத்தை மறைக்கிற, மீறிய கதை சொல்லல் இருக்கும். சித்திரக் கதையின் உற்பத்தியில், ஓவியன் ஒரு தொழிலாளி, கலைஞன் அல்ல. மாறாக பீமாயணம் நூலை விமர்சனம் செய்திருக்கிற நண்பர் ரா.கிரிதரன் கோபுலு பற்றிய கட்டுரைரையில் எஸ். சிவக்குமார் நினைவுகூருகிற அதே அணுகுமுறையை இங்கே கையாண்டிருக்கிறார். பல நேரங்களில் ரா.கிரிதரன் காட்சியில் லயித்து அதிலேயே அமிழ்ந்துவிடுவதுபோன்ற உணர்வை கட்டுரையில் சில வரிகள் தருகின்றன. பர்தான்கோட் ஓவிய முறையை உயிர்ப்பித்த பணியில் பாரத்பவன் மட்டுமல்ல, பீமாயணம் நூல் ஊடாக தமிழ் அறிய காரணமான காலச்சுவடு, அந்நூலை அறிமுகசெய்ய நூலின் கலைத் தன்மையைப் புரிந்துகொண்டு ஓர் ஆழமான கட்டுரை எழுதிய ரா. கிரிதரன் அனைவருக்கும் நன்றி கூற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 
மேற்கண்ட இருகட்டுரைகளின் முழுப் பயனை அடைய, சொல்வனம் இணையதளைத்தில் அவற்றை வாசியுங்கள்.
http://solvanam.com

————————————————————————————————————————

பிரான்சு: நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக ஒரு “Français” (பிரெஞ்சுக்காரர் அல்லது பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்) இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் -தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழிபெயர்த்த தேசிகப்பிள்ளை குடும்பம் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

(தொடரும்)

நன்றி: சொல்வனம்

 

மொழிவது சுகம் ஜூலை 5 2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -3

கலை கலைக்காக (Art pour l’art)

“கலை கலைக்காக” அல்லது ‘art pur’ ( ‘தூய கலை’ அல்லது அசல் நெய் என்பதுபோல ‘அசல் கலை’ ) என்ற குரல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஒலிக்கத் தொடங்கியது. படைப்பிலக்கியம் சுதந்திரமாக இயங்கவேண்டி பலரும் தீவிரமாக செயல்பட்ட நேரத்தில் இக்குரல்கள் கேட்டன. “எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தவேண்டிய அவசியம் படைப்புகளுக்கில்லை”, “தமது முடிவைத் தாமே தீர்மானிக்கக்கூடியவற்றை மட்டுமே படைத்தல்” போன்ற கனவுகளுக்குரியவையாக அக்குரல்கள் இருந்தன. இன்றைய நவீன இலக்கியத்தில், ஒரு பிரிவினரின் முன்னோடிகள் அவர்கள். “மக்களைப் பற்றியும், தங்கள் சமூகத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத மனிதர்களுக்கு இவையெல்லாம் ஒரு சால்ஜாப்பு” என எதிர் தரப்பினர் (கலை மக்களுக்காக) குற்றம் சாட்டினார்கள். கலையின் அனைத்து சாத்தியகூறுகளையும் முயற்சி செய்ததோடு, அறிவோடு முரண்பட்டு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கற்பனை நவிற்சி வாதமும் (Romanticisme) ஒருவகையில் “கலை கலைக்காக” என்ற வாதத்திற்குக் காரணம், குறிப்பாக அதன் “சுயாதீன உத்வேகம்” (Libre inspiration).

‘பல்ஸாக்'(Balzac)க்கின் ‘Illusions Perdues’ கதை நாயகனிடம், எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்வாய்? என்கிற கேள்வியை முன்வைக்கிறபோது:எளிமையான படைப்பாளிகள் கூட்டத்தோடா? ஆடம்பரமான பத்திரிகையாளன் வாழ்வா? – அவன் தேர்ந்தெடுப்பது படைப்பாளிகள் கூட்டத்தை, அதுமட்டுமே கலைஞனுக்குரிய வாழ்வாக இருக்க முடியும் என நம்புகிறான். ‘கலை கலைக்காக’ என்றவர்களுக்கு எதிராக ஒரு பெரிய சொற்போரே நடந்தது. எதிரணியில் இருந்தவர்கள் உங்கள் படைப்பில் அப்படி என்ன இருக்கிறது? அதன் உபயோகம்தான் என்ன? எனக்கேட்டபோது தெயோபில் கொத்தியெ ( Théobile Gautier): “அழகைபோற்றுகிறோமே, அது போதாதா, வேறென்ன வேண்டும்? ” எனக்கேட்டார்?

‘கலை கலைக்காக’ என வாதிட்டவர்களுக்கும், அவர்களின் எதிராளிகளுக்குமிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தம் நீதிமன்றம் வரை சென்றது. எங்கள் செயல்பாட்டில் எவரும் குறுக்கிட சகியோம், என்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போக நேர்ந்தது ஒரு முரண் நகை. கொத்தியெ, பொதுலெர், பொபெர், கொங்க்கூர் சகோதரர்கள் எனப்பலரும் தங்கள் கொள்கையைப் பறைசாற்ற தேர்வு செய்த இடம் “Le salon de Madame sabatier” ( மதாம் சபாத்தியெ ஒரு Demi-mondaine – அதாவது தாசி அபரஞ்சி ரகம்) “.

‘தூய கலை’ என்ற பெயரில் அழகியலை சுவீகரித்துக்கொண்டவர்களை, சமூகம் சார்ந்து செயல்பட்ட இலக்கியவாதிகள் நிராகரித்தனர். “அழகியல் குறித்து வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் அதில் சமூகத்தின் எதார்த்தநிலைக்கும் இடமுண்டு என்பதை எப்படி மறந்துபோனார்கள்” என்பது இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றசாட்டு.. மார்க்ஸிய அபிமானிகள் குறிப்பாக Ecole de Francfort, எங்களிடம் இதுபற்றி பேசவே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே இக்குரல்கள் அடங்கி ஒலிக்கத் தொடங்கின. சமூகம் சார்ந்த விழுமியங்களை நிராகரிக்கிற இக்குரல்கள் இன்றுங்கூட அவ்வப்போது கேட்கின்றன. ஒட்டுமொத்த சமூகமே அழிந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு (எழுத்தாளனுக்கு – இந்திரலோகத்து பிரஜை? ) ‘நகச்சுத்தி’ வந்தால் கூட அது அழகியல் – “கலை கலைக்காக” என்கிற சவடால் கூட்டம் பாரீஸில் மட்டுமில்லை சுங்குவார்பட்டியிலும் இருக்கிறது.

————————————–
ஆ. காஃப்காவின் கையெழுத்து பிரதிகள்

காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளுக்காக அவற்றின் தற்போதைய உரிமையாளருக்கும் -இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் நாட்டுக்கும் நடக்கும் சட்டப்போர் பற்றி ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துவிட்டதெனலாம்.

காஃப்கா இறக்கும் தருவாயில், தான் இறப்பிற்குப் பிறகு அழித்துவிடவேண்டுமென தன் நண்பர் மாக்ஸ் பிராட் என்பவரிடம் ஒப்படைத்திருந்த (1924)கையெழுத்து பிரதிகளின் தலையெழுத்து வேறாக இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவை ஜெர்மன் கைப்பற்றியபோது, காஃப்காவின் நண்பர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பினார்(1939), பின்னர் இஸ்ரேல் குடிமகன் ஆனார். இவரும் தன் பங்கிற்கு ஒரு உயிலை எழுதி பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கையெழுத்துப்பிரதிகளை தமது அந்தரங்கப் பெண் செயலாளர் ‘எஸ்த்தர் ஹோஃப். என்பவருக்கு உரிமை ஆக்கினார் (1968). காஃப்காவின் நண்பர் எழுதிய உயிலி வாசகம், ” இஸ்ரேல் பல்கலை கழகத்திற்கோ, தெல் அவிவ் மாநகராட்சி நூலகத்திற்கோ, வேறு நிறுவனத்திற்கோ அல்லது அந்நிய நாடொன்றிர்க்கோ “அப்பெண்மணி விரும்பினால் கொடுக்கலாம் என்றிருந்தது. உயிலிலிருந்த “அந்நிய நாடொன்றிர்க்கும் கொடுக்கலாம்” என்ற வாசகம் பிறவற்றைக்காட்டிலும் பொன் முட்டை இடுவதாக இருந்தது. எப்படியோ பல ஆண்டுகள் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளில் ஒரு சில இஸ்ரேல் நாட்டில் -டெல் அவிவ் நகரில் பெண்மணி வீட்டிலும்; பெரும்பாலானவை சுவிஸ் வங்கியொன்றின் காப்பகப் பெட்டியிலும் இருந்தன. ‘விசாரணை’ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஜெர்மன் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு விற்கவும் செய்தார். இந்நிலையில் காரிதரிசிப் பெண்மணி 2007ல் இறந்தார். இவர் தன்பங்கிற்கு ஒரு உயிலை எழுதி தமது இருமகள்களுக்கும் சீதனமாக அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து காஃப்காவின் வேர் எங்கள் மண்ணுக்குச்ச்சொந்தம், எனவே கையெழுத்துப் பிரதிகள் எங்களுக்கேச் சொந்தமென ஜெர்மன் அரசாங்கமும், அவர் மாக்ஸ் பிராட் எங்கள் குடிமகன், அவர் உயிலும் எங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது எனவே கையெழுத்துபிரதிகள் எங்களுக்கேச் சொந்தம் என இஸ்ரேல் அரசாங்கமும், எஸ்தெர் ஹோபின் வாரிதாரர்களுக்கே சொந்தமென காரிதரிரிசியின் பெண்களும் வாதிட, டெல் அவிவ் நீதிமன்றம் இஸ்ரேல் நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திடம் கையெழுத்துப்பிரதிகள் அனைத்தும் ஒப்படைக்கப்படவேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
——————————–

பேராசிரியர் க.பஞ்சு விற்கு ‘மேலும்’ இலக்கிய விமர்சகர் விருது.

panchuஇந்த ஆண்டு மேலும் இலக்கிய விமர்சன விருதினை பேராசிரியர் க.பஞ்சுவிற்கு அளித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். பேராசிரிரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு செய்தி. மேலும் பலவிருதுகளைப்பெற மனமார வாழ்த்துகிறோம். பேராசிரியர் தமிழவனுக்கும் ‘மேலும்’ இலக்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சிகுறித்த விவரம் கீழ்க்கண்ட அழைப்பிதழில் உள்ளது. நேரில் அழைத்ததுபோலக்கருதி நண்பர்கள் விழாவைச் சிறப்பிக்க வேண்டும். பஞ்சுவைக் கௌரவிப்பது தமிழைக் கௌவுரவிப்பதுபோல.

பணிவுடன்
நா.கிருஷ்ணா, வே சுப.நாயகர், சீனு தமிழ்மணி

Melum