கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்

                கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை.

மணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணித்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம்.

-போதுமான நேரம் இருக்கிறது, இரண்டு வாரங்கள் தங்க இருக்கிறாய்

நேரம், நேரம்! எல்லோரும் இங்கு நேரம் பற்றியே பேசுகிறார்கள்.

விமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான்.

– ‘ ஹூல்ட்ஸ் அம்புஎன்பதென்ன ? எங்கிருக்கிறது ?

புரியலை.

– ‘ஹூல்ட்ஸ் அம்பு‘.

என்ன அம்பு ? அப்படி எந்த அம்பும் இங்கில்லையே.

-அப்படி ஒன்றிருக்கிறது. சினேகிதன் லூசியன் சொல்லியிருக்கிறானே !

லூசியானா ? யார் அது ?

எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன்.

அப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்

-மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது ! – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார்

இதுதான் உங்கள் அறை, எண் 243. இது உங்கள் அறையின் சாவி. – பெண்.

கொஞ்சம் இரும்மா, போகாதே ! உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஹூல்ட்ஸ் அம்பு என்றால் என்ன தெரியுமா?

அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல :

ஹூல்ட்ஸ் அம்பு ? என மீண்டும் வினவினர்.

நீங்கள் அம்பு எனக்குறிப்பிடும் ‘flèche ‘ என்றப் பிரெஞ்சு வார்த்தைக்கு கோபுரம் என்றும் பொருளுண்டு

, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர்.

கிழவரின் பிதற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்ணும் எதையோ உளறுகிறாளென அப்தூலயே நினைத்தான்.

சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.

இது தானாஅது?

கதீட்ரலின் தேவாலய மணிகூண்டு.

பெண்ணின் கை முதியவரின் தோளில் இருந்தது. அவள் பக்கம் திரும்பியவர், «  லூசியன் பொய் சொல்லவில்லை, எனக்கூறினார், அவ்வாறு கூறியபோத, கண்களில் நீர் அரும்பியது

கோபுரத்தின் உயரம் 142 மீட்டர் ! கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் ! – பெண்.

இப்படியின்று இருக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். லூசியன்!…இக்கோபுரம் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான்.

          லூசியான் யார் என அவள் வினவவில்லை. கதீட்ரலின் உயரமான கோபுரத்தின் பக்கம் பார்வை சென்றது. ஹூல்ட்ஸ் அம்பு‘ , எனும் புதிரானச் சொற்கள் இரண்டும் அர்த்தமின்றி அவருடைய கதைசொல்லலில் இடம்பெற்றவை, அவை பொருளுளிழந்த சொற்களாகவே இருந்தன. அவை திடமானவையாக, மிகுந்த உயரத்தில் விண்ணில் பறப்பதற்கு முனைவதுபோல இருந்தன. உணர்ச்சிப் பெருக்குடன், கன்னத்தில் விழுந்து உதடுகளருகே உருண்ட ஆனந்தகண்ணீரைத் தேய்த்துத் துடைதார்.

          ஒரு வாரத்தில் ஸ்லாபூகூம் அவர் இதுவரை அறிந்திராத வேறு பல தகவல்களும் நகரைப்பற்றிக் கிடைத்தன. தமது சினேகிதனின் ஊரிலுள்ள அனைத்தையும் பார்க்க விரும்பினார். குடைராட்டினத்தில் சுற்ற ஆசைபட்ட குழந்தையைப்போல டிராமில் பயணப்பட்டார். செல்லவேண்டிய இடம் தூரமெனில், கார் வைத்திருந்த ஒன்றிரண்டு பேர் வழிகாட்டிகளாகக் கிடைப்பார்கள், அவர்களைச் சென்றுபார்ப்பார். தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நினைத்து, ரோவான் கோட்டை‘ (le château des Rohan), கதீட்ரல் கடிகாரம்,’ le palais de l’Europe’ மண்டபம், அதே பெயர்கொண்ட ஒரு பாலம் ஆகியவற்றைக் காணச் சென்றபோது நூற்றுகணக்கான கேள்விகளை எழுப்பினார். ‘la pharmacie du Cerf’ என்ற மருந்தகம் பிரான்சு நாட்டின் முதல் மருந்தகம் எனும் தகவல் அவருக்கு வியப்பை அளித்தது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறபோது கிராமத்துப் பரணொன்றில் பதுங்கி யிருந்தபோதும், பயணத்தை விடிந்து தொடரலாமென காட்டில் காத்திருந்த இரவுவேளையிலும்,, இலண்டனுக்குச் செல்லும் வழியிலும் சினேகிதன் லூசியன் மொர்பான்ழுடையக் வார்த்தைகள் போல இருந்தன. புதிது புதிதாய் ஒன்றை அறிகிறபோதெல்லாம் அவர் நெகிழ்ந்துபோகிறார். சிற்சில சமயங்களில் அவர் வாய் விட்டுச் சிரிப்பதுண்டு, அதற்கான காரணமும் பூடகமானது. ஊரில் தீவென்று இவர் வர்ணித்தது எப்படி தீவாக அல்லாமல் நதியாக இருந்ததோ அதுபோலக் கேட்டவர்கள் வியப்புற்ற ஸெல்‘(Zel) எனக்குறிப்பிட்டதும், கடைசியில் கதீட்ரலுக்கு எதிரே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர் குடியிருப்பாகத் திகழ்ந்த லா மெய்ஸோன் கமிட்ஸெல் (la maison Kammerzel) என்ற கட்டிடமன்றி வேறில்லை என்பதை விளங்கிக்கொண்டார். லூசியன் மொரான்ழ் நினைவுகளையெல்லாம், காலம் துடைத்திருந்தது, அவற்றில் எஞ்சியவற்றைக்கொண்டு வியப்புக்குரிய புனைவுகளை உருவாக்கினார். இன்று அவையெல்லாம் திரும்ப உண்மையாயின. இதுநாள்வரை பொருளைத் தொலைத்திருந்த அதுபோன்ற சொற்கள், கூற்றுகள் எல்லாம்,நகரைச்சுற்றுகிறபோது எதிர்பாராதவிதத்திலும்,, காப்பி விடுதியில் அற்முகம் ஆனவர்களிடம் வித்தியாசமானதொரு ஆப்ரிக்காவை இவர் இட்டுக் கட்டி விவரிக்கிறபோது கேட்கிறவர்கள் சந்தேகித்தவையும் இன்று உண்மையாயின. கனிம நீர், பீர், சாலட் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டே அப்தூலயே சிரித்துக்கொண்டிருப்பான். ‘இவரை ஏன் அழைத்தோம்என்கிற கவலைகளெல்லாம் அவனிடத்தில் தற்போதில்லை.

           கழிந்த ஒவ்வொரு நாளும் இளமைக்காலத்தை அவரிடம் திரும்ப அழைத்திருந்தது. அல்ஸாஸ் பிரதேச ‘les Dernières nouvelles d’Alsace’ செய்தித்தாளைப் வாசித்துக்கொண்டே காலை உணவை உட்கொண்டிருந்த முதியவருக்கு, ஸ்ட்ராஸ்பூர்நகர 60000 குடும்பங்களும் குடிநீர் விநியோக பிரச்சினையால் தவித்த செய்தியையும், நகரப் பேருந்துகளில் முன்னால் ஏறவேண்டிய நிலைமையையும் இனிப்பிறருக்குச் சொல்லலாம் என்பதை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியையே விலைக்குவாங்கிக்கொள்ளும் உத்தேசத்திலிருப்பவர்போல விடுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தார். ‘கலியா‘(Gallia) என அழைக்கபட்ட அவ்விடுதியின் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கினார். சில சமயம் தனித்தும், சிலசமயம் துணையுடனும் அது நிகழ்ந்தது. அப்போது, மாணவர்களின் உடற்பயிற்சிக் கூடத்தையும், அவர் கண்டிராத புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும்; ஓவியக்கூடத்தில் இசைக்கும் பியானோவையும், புத்தகங்களில் வரிசை வரிசையாகக் கவிழ்ந்திருந்த தலைகளை நூலகத்திலும் கண்டார். மாணவர்களில் ஒன்றிரண்டுபேர் தங்கள் அறைக்கு அழைத்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் அறைக்குச் சென்று அவர்களின் வாழ்வனுபவக் செய்திகளைக் காதுகொடுத்து கேட்பார், இவரும் தன்பங்கிற்கு துல்லியானத் தகவல்களைக்கற்பனையாக உருமாற்றித் தெரிவிப்பதுண்டு. அவரிடம் உரையாடியவர்கள் அனைவரும் ஆளுக்கொருவிதமாய் இருந்தது அவருக்கு வியப்பினைத் தந்தது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பிரதிநிதிகளாக மாணவர்களை விடுதிக்கு அனுப்பியிருக்கவேண்டுமென நினைத்தார். அவர்கள் சொல்ல நிதானத்துடன் கேட்டார், இடைக்கிடை அவர்களின் நாட்டார் மரபுக் கதைகள் பற்றி வினாக்கள் எழுப்புவார், அவற்றைக்கொண்டு புதிய, இசைவான குட்டிக்கதைப் படைத்தார். அவை அனைத்தையும் நினைவிற்கொள்ள இயலாமற்போகலாம். ஆனால் அவற்றில் நினைவில் நிறுத்த முடிந்தவற்றிலிருந்து, முதியவர் தமது சொந்த ஊரான துபாம்பூல் திரும்பியதும் , அவருடைய புனைபெயருக்குக் கடன்பட்டுள்ள வீதிகள் நகரம் குறித்து, அந்நகரம் பற்றிய உண்மைகள் கூடுதலாகத் தெரியவந்துள்ள நிலையில் இனி உரைக்கும் கதைகளில் அடுக்கடுக்கான அத்தியாயங்களைச் சேர்க்க உதவும். ஆனால் என்றும் விளங்கிக்கொள்ள இயலாதப் புதிராக அம்பும்‘, ‘ஸெல்லும் தொடரும், ஆனான் அவற்றுடன் வேறுபல பல இரகசியங்களும் இணைந்துகொள்ளும். ஏற்கனவே இவருக்கென மாணவர் பேரவை எற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கேட்டவற்றை தம்முடைய உபயோகத்திற்கென பத்திரப்படுத்திக்கொண்டார். .

          இவருடைய நிகழ்ச்சிக்கென வைத்திருந்த அறிவிப்புத் தட்டி ஸ்லாபூகூம், புகழ்பெற்ற கதைசொல்லி யினுடைய நிகழ்ச்சி எனத் தெரிவித்தது. அதன்படியே நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம். கைத்தட்டியவர்களைக் காட்டிலும் அவருடைய கதைசொல்லலில் மயங்கியவர்கள் எண்ணிக்கை அதிகம், அப்படியொரு வெற்றி. அவரொரு தொழில் முறை கலைஞர் இல்லையென்கிறபோதும் சிரிப்பையும், உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து, சேட்டைகளின்றி பார்வையாளர்களைக் கட்டிப் போட அவரால் முடிந்தது. துபாம்பூலில் நடந்ததைப் போலவே ஒவ்வொரு சொல்லும் புதிய சொற்களுக்குக் காரணமாயின, அதுபோலவே ஒவ்வொரு புனைவும், புதிய புனைவுகளுக்கு வித்திட்டன. உதாரனத்திற்கு தேன் நிறகூந்தலையுடைய இளம்பெண்ணின் கதை தற்போது, துரதிஷ்டம்கொண்ட எகிப்திய பெண் தேவதையை கொக்கொன்று இந்திய அரண்மணையில் காத்திருந்த காக்கேசிய (Caucase) இளைஞனிடம் கொண்டுபோய் சேர்த்தது. மாறுபட்ட இழைகளைக்கொண்டு திரும்பத் திரும்ப புதிய ஆடையாக உருமாற்றிகொண்டிருந்தார். விதிவிலக்காக கழுகும் சேவலும் என்ற கதையை மட்டும் முதல் நாளிலிருந்தே, திரும்பத் திரும்பத் சொல்லவேண்டியக் கட்டாயம். கேட்டவர்களில் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் அதைக்குறித்து எழுதினார்.

“தனது கூடு போதாதென நினைத்த கழுகொன்று சேவலொன்றின் பிரதேசத்தைக் கைப்பற்றியது. அதன் இறக்கைகொண்டு முதலில் இருமுறைத் தாக்குதல், பின்னர் மூன்றுமுறை அலகால் கொத்த பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது. வெற்றிபெற்றக் கழுகு , தம்மால் முடிந்த அளவிற்குக் கழுகுகளை ஒன்று திரட்டி, அற்புதமானதொரு வீட்டை வோழ்மலை கற்களைக்கொண்டு கட்டியது. சூரியன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வீடு சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. சேவல் பொறுமையுடன் சில ஆண்டுகள் காத்திருந்தது, அதுவும் தன்னால் முடிந்தமட்டும் துணைக்கு சேவல்களைச் சேர்த்துக்கொண்டு கழுகுடன் சண்டையிட்டுத் தனது பிரதேசத்தைக் கைப்பற்றி கழுகின் அற்புதமான வீட்டைத் தனதாக்கிக்கொண்டது.. கழுகு அதிகக் காலமெல்லாம் காத்திருக்கவில்லை. சேவல்களை அடித்துத் துரத்திவிட்டு, தன்னுடைய அதிசய வீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்திலேயே ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவென்று வெகு தொலைவிலிருந்து வந்த மிருகங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு கழுகைத் துரத்திவிட்டுத் திரும்பவும் சேவல் அந்த அற்புதமான வீட்டைத் தன்வசம் ஆக்கிக்கொண்டது. அக்கணத்தில் கழுகுகளும், சேவல்களும் பொருளின்றி சண்டையிட்டு அடிக்கடி உறையும் இடத்தை மாற்றிக்கொண்டிருப்பது வீணென்று புரிந்துகொண்டன. கழுகு சேவலின் பிரதேசத்திற்கு ஆசைப்படுவது தவறென உணர, அன்றிலிருந்து ஏராளமான சேவல்களும், கழுகுகளும் மாத்திரமின்றி கரடி, சிங்கம், மான், எருது, புறா என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் அந்த அதியவீட்டில் வசிக்கத் தொடங்கின.”

          இக்கதை யை முழுமையாக இட்டுக்கட்டியதென்று கூற முடியாது. அனைத்திற்கும் மேலாக வியப்புக்குரிய விஷயம் கலியா‘ (Gallia) என்ற பெயர்காரணத்தைத் தெரிந்துகோள்ள அவர் காட்டிய ஆர்வம். அவருக்கு அது தெரிவந்தபோது பெருமையாக இருந்தது.

ஆரம்பத்தில் கலியா என்ற பெயரில்லை. ஜெர்மானியா என்றே அழைக்கப்பட்டது. காரணம் 1870க்குப் பிறகு ஜெர்மானியர்கள்…………யுத்தத்தில்

அந்தப் போர்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெயித்திருந்தார்கள்.

நெப்போலியன் படையில் செனெகல் நாட்டு வீரர்கள் இடம்பெறாததுதான் காரணம்.- என்பது பெரியவரின் பதில்.

ஜெர்மானியர்கள் எழுப்பிய கட்டிடம். ஆனால் 1918ல் பிரெஞ்சுக்காரர்களின் கைவசம். ஜெர்மானியர்கள் இனி இல்லையென்றான பிறகு கலியாஎன்று அழைக்கத் தொடங்கினார்கள்.

40 ல் மறுபடியும் ஜெர்மானியாஆனதில்லையா.

ஆமாம், ஆனால் 45ல் மீண்டும்…..

புரிகிறது. இக்கதை நல்லவேளை பாதகமாக முடியவில்லை

உங்களிடம் அப்படி முடிகிற கதை இருக்கிறதா ?

இல்லை. பொதுவாக கதைக்கேட்பவர்கள் சுபமாக கதை முடியவில்லையெனில் கேட்கமாட்டார்கள்.

இக்கதை நீங்கள் பிறருக்குச் சொல்லக்கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தக் கதையாயிற்றே.

          முதியவர் சிரித்தார். அப்தூலயேவிற்கு ஸ்லாபூகூம் உண்மையான கதையொன்றை படைக்கக்கூடியவர் என்று தெரியாது.

           ஹூல்ட்ஸ் கோபுரத்தை ப் பார்க்கிறார். இனி அவருக்கு அது புதிரில்லை. அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதேவேளை நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் ஆகியோரையும் அவர் மறந்தவரில்லை. சாக்லேட் திணித்த ரொட்டியை, ஒரு சிறுவனைப்போல விரும்பிச் சாப்பிடும் நேரம். தூண்களுக்கிடையில் கச்சிதமாக அமைந்த 243 ஆம் எண்கொண்ட அறை, அசையாமல் நின்றிருந்தார். பதினைந்து நாட்களும் வேகமாக கரைந்துவிட்டன. ஸ்லாபூகிமிற்கு, ஸ்ட்ராபூர்கூமை மட்டுமல்ல பழகிவிட்ட கலியாவையும் பிரிந்து செல்ல மனமில்லை என செடார் சொகோன் முனுமுனுத்தார். தனது சினேகிதன் லூசியன் மொரான்ழிடம் , « அவர்கள் என்னைத் தங்கச்சொல்லப்போகிறார்கள் பார்எனத் தெரிவித்தார். இங்கே எனக்கு நன்றாக இருக்கிறது. தவிர நான் காணவேண்டிய வீதிகளும், வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிச்சமிருக்கின்றன. இங்கிருக்கிறவர்கள் அனைவரையும் விரும்புகிறேன். உன்னுடைய நகரத்தைப் பற்றி நிறைய கதைகள் சொல்லவேண்டியவை பாக்கியுள்ளன. அவற்றைச் சொல்லி முடித்ததும், பிற கதைகளுக்குச் செல்வேன். அல்ஸாஸ் மிகப்பெரிய பிரதேசம். »

          தனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கூறியதைத் திரும்ப முணுமுணுத்தார். அவரை ஒருவரும் முட்டளாக்க முடியாது. இனி இதுபோன்ற நாளைகள் உண்மை அல்லாத கதை மாந்தருக்கென அவர் படைக்கும் கற்பனை மனிதர்களிடத்தில் மட்டுமே சாத்தியம். இன்னும் சிறிது நேரத்தில் கலியாவைச் சேர்ந்த நண்பர்களும் பிற நண்பர்களும் வழி அனுப்ப வருவார்கள், சற்றுமுன்னர் அவர் உரையாடத்தொடங்கிய லூசியானும் அங்கு வரக்கூடும். உலகின் அம்மறுமுனை, விமான தளம், மேகத்திற்கு மேலே, நாலாயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடும், செனெகெல் நாட்டு டாக்ஸியில் சென்றால் இருநூறு கி.மீட்டர். அவருடைய வாழ்க்கை துபாம்பூலில் கதைசொல்லி யாக இருப்பதேயன்றி, சாலைகள் ஊரில் ஒரு நட்சத்திரமாக வலம் வதில்லை.

வருகின்றவர்கள் எதுவேண்டுமானாலும் கூறட்டும், நான் இங்குதான் தங்கப்போகிறேன்

          இனி இந்தவாழ்க்கை சாத்தியமில்லை என்கிற போதும் கணநேரம் அதில் திளைப்பதும் சுகமாக இருந்தது. நம்பிக்கையின்றி அவ்வனுபவக் கற்பனையில் மூழ்கினார். சாக்லேட் திணித்த ரொட்டியை மறந்து பாலகணியில் அசையாமல் நின்றார். இடதுபக்கம் கதீட்ரல், வல்துபக்கம் சேன்போல் தேவாலயம். நேரெதிரே தீவுஎன்று பெயர்கொண்ட நதி ஓடிக்கொண்டிருந்தது, நதியில் சுற்றுலா பயணிகளின் படகுகள்.

முற்றும்

 

 

கதை சொல்லி-3 (சென்றவாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெகிளெர்க்

          இடது பக்கம் கத்தீட்ரல், வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

          இப்புதியப் பயணத்தைத் தொடங்கியாயிற்று, தற்போது இதுவும் அவருடைய புனைவுகளில் ஒன்றாக தொடருகிறது. இயலாமைக்கு அல்லா ஒர் எல்லையை வகுத்திருந்தார். அவரைப் பொருத்தவரை “நீ போவது உறுதி” என்கிற நஃபிசாட்டுவின் வார்த்தைகள் போதுமானவையாக இருந்தன.

 

          அவரது புனைகதை நகருக்கு வந்தாயிற்று. காலை மணி எட்டு. வயிறு புடைக்க உண்ணும்  ஒரு சிறுவனைப்போல இரண்டு சாக்லேட் திணித்த ரொட்டியை காலை உணவாகக்கொள்ள கீழே இறங்கவேண்டும்.

 

          நஃபிசாட்டு, இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது, இவருடைய எள்ளல் புன்னகைக்கு மயங்கியதாகத் தெரியவில்லை. சகோதரருக்கு உண்மையில் நம்பிக்கை ஏற்படவில்லை.  எதிர்பார்த்ததுதான்.  கதைசொல்லி முதியவரின் சகோதரர்  நஃபிசாட்டு வெளிப்படையாக எதையும் கூறாமல்தான் புறப்பட்டுச் சென்றார். ஆனால் டக்கார் நகரை அடைந்ததும், தம்முடைய பேரன் அப்துலாயே வுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்லாபூகூம்  என்ற பெயரை முன்னிறுத்திக் கூறப்பட்ட நகரத்தைக்குறித்து எழுதவே செய்தார் :

            உனது பெரிய தாத்தாவின் கற்பனை மிகவும் சுவாரசியமானது ,  அதேவேளை மனதை நெகிழ்விக்கக் கூடியதுமாகும்  என்பதை  நீ புரிந்துகொள்வாயென எனக்குத் தெரியும். அவருடைய சினேகிதனின் நகரத்திற்குத் திரும்பும் சூழலுக்கு நீயும் முயற்சி செய் , அவ்வாறு செய்தால், உனது கனவிற்கும் ஏதேனும் பலன் கிடைக்கும்”

 

          அப்தூலயே சிரித்தான். ஒரு மாற்றத்திற்கு முதன்முறையாக பிடிவாதம் என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டு , கனவென்ற சொல்லைத் அவனுடைய தாத்தா உபயோகித்திருந்தார். 

 

          இரண்டாண்டுகளுக்கு முன்பு உமரைப் பார்க்க்கும் எண்ணம் வந்தது. ஸ்ட்ராஸ்பூர் லூயிபாஸ்ட்டர் பல்கலைகழகத்தில்  இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் மண்பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெறுவதர்க்குரிய கல்வியை உமர் முடித்திருந்தான். அப்தூலமயே அவனை மிகவும் நேசித்தான். உமரைச் சென்று பார்க்காதது ஒரு குறையாகத் தோன்றியது. அவனிடம் கூறுவதற்கென்றிருந்தவற்றை  மூன்று பக்கங்களில் ஒரு கடிதமாக எழுதினான். CROUS Cité Universitaire Gallia ; 1- Quai du maire Dietrich என்று முகவரியை எழுதியபோது, கை நடுங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே  உமருடைய பதிலும் இருந்தது :

 

          என்னைப் பார்க்கவிரும்பியது, உண்மையில் நல்ல யோசனை. எனக்கும் உன்னைக் காணாதது ஒரு குறை.  உன்னைப்பற்றித்தான் மேடம் சொடெவ் விடம்  பேசினேன். பல்கலைக்கழக த்தின் மாணவர்நலனுக்கென இயங்கும் CROUS அமைப்பின் கலை பண்பாட்டுத்துறையின் பிரதிநிதி அந்த அம்மாள். அன்பான  பெண்மணி, உதவும் மனப்பான்மை நிறைய உண்டு. நியாயமான வாடகைக்கு  ஒரு மாதத்திற்கு அந்த அம்மாள் உதவியுடன் ஓர் அறையை எடுக்க  முடியும். உன்னுடைய வருகையினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நகரத்தைச் சுற்றிவரலாம். உன்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்வதென்கிற  திட்டங்களெல்லாம் தயார். » கடிதம் ஏதோ சுற்றுலா கையேட்டுக்குரியத் தகவல்களுடன் தொடர்ந்தது.

 

           அப்தூலயே தனது சகோதரனை மிகவும் நேசித்ததென்னவோ உண்மை,  கண்ணாடி ஒவியம் கற்க வேண்டுமென்ற தாத்தாவினுடைய விருப்பத்தை நிறைவேற்ற பேரனுக்கு  ஆர்வமில்லை.  எனினும் திடீர் பயணத்திற்குக் காரணமும் இருந்தது. இவனுடைய சகோதரன் உமருக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும்,  இப்பயணம்  ஸ்ட்ராஸ்பூர்கில் சில நாள் தங்கித் திரும்பும் உத்தேசத்திற்குரிய ஒரு பயணம். ஆனால் அப்தூலயேவுக்குத் திரும்ப செனெகெல் நாட்டிற்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை.  . அவனுடைய  விசாவில் ஒரு முத்திரையும் சில நொடிகளும் போதும், சுற்றுலா பயணியென்கிற தகுதிக்குப் பதிலாக வந்தேறி , கள்ளத்தனமான குடியேற்றவாசி என்கிற அந்தஸ்த் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

 

       உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது !

 

       தங்கி விடுகிறேன்.

 

       அப்படித் தங்க முடியாது.

 

       எனக்குப் போக விருப்பமில்லை.

 

       அறிவுபூர்வமாக யோசி ! குடும்பத்தை யும் நினைத்து பார். உன்னுடைய இப்பயணத்திற்காக நம் குடும்பத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊரில் உனக்காக அவர் காத்திருக்கிறார்கள்.. என்னால் உனக்கு உதவ முடியாது. எங்கே போகப் போகிறாய் ? அதிலும் இங்கிருந்து என்ன செய்வதாய் உத்தேசம்.

 

       எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் இங்குதான் தங்கப்போகிறேன்.

 

       அதற்குச் சாத்தியமே இல்லை, அப் தூலயே. முட்டாள் தனமான காரியம். வீணாகப் பிரச்சினைகளைத் தேடுகிறாய் !

 

       என்ன சொன்னாலும் முடிவில் மாற்றமில்லை.

 

       இதற்கு மேல நான் என்ன சொல்ல, இருந்து தொலை !

 

          கிளேபர் சதுக்கத்தில், ஒரு காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் ஆரம்பித்து  சகோதரர்கள் இருவரும் உரத்து முடித்திருந்தார்கள். விவாதம் சர்ச்சையாக மாறியிருந்தது. உமர்  தொடர்ந்து வற்புறுத்த வில்லை. மேசையில் பில்லுக்குரிய பணத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். சர்வரிடம் அதனைக்கொடுத்தனுப்பிவிட்டு மீதிச் சில்லறைக்காக இவன் காத்திருந்தான். சிறிது தூரத்தில், வீதிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுவொன்று  ஆர்ம்ஸ்ட்ராங்கை இசைத்துக்கொண்டிருந்தது : « கொடுத்துவைத்த வாழ்க்கை ! » என நினைத்தான். ‘Stormy weather’, ‘Sweet Lorraine’, ‘Cheeck to cheek’ ஆகியவற்றை சீழ்க்கையில் இசைத்தான். ஒரு கிளாஸ் பீருடன்  அவர்கள் முடிக்கும்வரை காத்திருந்தான்.

 

          குழுவில் மிகவும் இளம் வயதாகத் தோன்றியவன், தன்னுடையைக் கிடாரை  வாசிப்பதை நிறுத்தியதுபோல பக்கத்தில் வைத்தான். காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி வந்தான். கேட்டுக்கொண்டிருந்தவர்கள்  இதொரு இலவச நிகழ்ச்சியல்ல என்பதை உணரவேண்டியக் கட்டாயம். அப்தூலயே இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டான். நாற்காலியிலிருந்து எழுந்தான்.  காசுகேட்டுவந்த இளைஞனைத் தவிர்க்க நினைத்தவன்போல முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘What a wonderful world’  பாடலை முனுமுனுத்தவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

 

          கிராண்ட் ஆர்க்காட்வீதிக்கு வந்தவன் சிறிது நின்றான் அவனுக்கு முன்பாக மனிதர் கூட்டம். கிட்டத்தட்ட வீதியின் கணிசமானதொரு பகுதியியை அடைத்துக்கொண்டிருந்தார்கள். காலத்திற்குச் சம்பந்தமற்ற ஹிப்பித் தோற்றத்தில் இருந்தார்கள். தலைமயிர் பராமரிக்கப்படாமல் புதர்போல மண்டிக்கிடந்தது. மூக்கு, காது, உதடுகளென்று வளையங்கள் அணிந்திருந்தார்கள்.  இதுவரை அவன் காணாதது. சுதந்திரத்தை ஊக்கத்தொகையாகப்பெற்ற மகிழ்ச்சி.  அவர்களைக் கடந்து சென்ற காவற்துறை  மனிதர்கள், அம்மனிதர்களிடம் மரியாதையான பார்வையைச் சிந்தினார்கள்.  தவிர அவர்களின் புன்னகையில்  வெளிப்பட்டது இரக்கமா ?  ஏக்கமா என்ற் கேள்வியும் பிறந்தது.

 

          அப்தூலயே  அவர்களை நெருங்கினான்.  பெட்டை நாயொன்றின் வயிற்றில், குட்டிகளுக்குக்  கோபமூட்டுகின்ற வகையில் கிழவரொருவர்  தலைவைத்துப் படுத்திருந்தார், அருகில் இளைஞனொருவன் ஹார்மோனிகா போல சத்தமெழுப்பிக்கொண்டிருந்தான். இருவருக்கும்  இடையில்  அமர்ந்தான். ஒரே சமயத்தில் முரண்பாடான இரு அனுபவங்கள்.பொருண்மையில் இரு அனுபவங்களுக்குகிடையில் பேதங்களுமில்லை. : மகிழ்சி, விரக்தி இரணடும் சமவீதத்தில் இருந்தன.

 

          அந்தி பிறந்தது, குளிரையும் கொண்டுவந்திருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் விரக்தி கூடுதல் வலிமைகொண்டதாக ப் பட்டது. சுதந்திரம் தற்போது ருசியாக இல்லை. தலையை மொட்டை அடித்திருந்த பெண் அளித்த ரொட்டியும், சாசேஜ்ஜும், விநோதமாக இருந்தன. எப்படி அவர்களை வந்தடைந்தானோ அதுபோலவே  அவர்களிடம் எவ்வித பேச்சுமின்றி புறப்பட்டுச் சென்றான். பெண் கெட்ட வார்த்தையை உபயோகிக்க, வயதான ஆசாமி, நல்லது நடக்கட்டுமென வாழ்த்தினான்.

 

          வீதி வீதியாக நடந்தான். உமருடன் சேர்ந்து நடந்த வீதிகள் அவை. தனியாக, சுற்றுலா பயணியாக , மெதுவாக, ஒரு திசையைக் குறிவைத்து, பின்னர் அத்திசையைத் தொலைத்து என்பது போன்ற அனுபவங்கள் திரிந்ததில் கிடைத்தன. தற்செயலாகவா, மனமிட்ட கட்டளையின் படியா, சுய நினைவின்றியா அல்லது விரும்பியா  ஆனால் அதை வெளிப்படையாகக் கூற விருப்பமின்றி ஒருவழியாக கடைசியில் தீவென அழைக்கப்டுகிற ‘L’ill’ நதிக்கரை அருகே வந்து நின்றான். அப்பகுதி அவனுக்குப் புதிதல்ல. வலது பக்கம் கதீட்ரல், இடதுபக்கம் சேன்-போல் தேவாலயம், எதிர்த் திசையில் ஒரு பெரிய கட்டிடம், இரவு நேர மின்சார ஒளியில் அதன் காவி நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது அக்கட்டிடம் ஸ்ட்ராஸ்பூர் பூர்க் ‘CROUS’ க்குச் சொந்தமான பல்கலைக் கழக மாணவர்களின் உணவு விடுதிக் கட்டிடம் : ‘Gallia’. அப்தூலயே அங்கு நிறைய மாணவர்களை நண்பர்களாகக்  கொண்டிருந்தான். அவனுடைய சகோதரன் வேலைசெய்தபோது, நண்பர்களை காப்பி விடுதியில் சந்திப்பதுண்டு. அங்கு சென்றான். தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக ஒரு பெருங்கூட்டமிருந்தது. ஒரு காற்பந்து போட்டி நடந்தது அதிற்கவனம் செல்லவில்லை. நடுவர் விசிலை ஊதி இடைவேளையை அறிவித்தபோது இரண்டாவதாக ஒரு பீரை குடித்துமுடித்துவிட்டு, பணிப்பெண்ணை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.  அவளிடமிருந்து இவன் கற்றது அதிகம், கைமாறாக முத்தம் தரலாம், தவறில்லை. முத்தமிட்டுவிட்டு, அவளிடம் திரும்பவும் கேட்டான்.

 

       உண்மைதானா, நன்றாகத் தெரியுமா ?

         

       உன்னிடம் எதற்காகப் பொய் சொல்லப் போகிறேன்? பதினைந்து நாளில் அவன் போகப்போகிறான். இதுவரை அவனுடைய வேலையைச் செய்ய எவரும் கிடைக்கவில்லை.

 

       பதினைந்து நாளிலா ! அது வரை நான் தாக்குப்பிடிக்க முடியும்.

 

          பிரச்சினைத் தீர்ந்தது.  தங்குவதற்கு அனுமதிக்கும், அரசாங்கத்தின் அத்தாட்சி தாள்கள் கைக்கு வந்தபிறகு  அதிட்டம்  வீரியத்துடன் இருக்கிறது. மினோத்தோர் காப்பி விடுதியில்  அப்தூலயே சொகோனுக்கு சர்வர் வேலை கிடைத்தது. உமர் செனெகெலுக்குத்  திரும்பிவிட்டான். அங்கிருந்துகொண்டு அவ்வப்போது கடிதமும் எழுதுகிறான். உள்ளூர் விவசாயிகளுடன் அவன் செய்கிற வேலைகள் பற்றியும் எழுதுகிறான். குடும்பத் தகவல்களும் உண்டு. தாத்தா நஃபிஸாட்டு பற்றியும் அவருடை புகழ்பெற்ற கண்ணாடி ஓவியங்கள் பற்றியும் கூட எழுதுகிறான். இந்தத் தாத்தா விடமிருந்துதான் அப்தூலயேவிற்கு, துபாம்பூல் நகர்  முதிய வர் பெரிய தாத்தா  கதைசொல்லிப்பற்றியத் தகவல் கடிதம் மூலமாகத் தெரியவந்தது.

 

          முயற்சி செய் !  என்றுய் டாக்கா நகரிலிருந்துகொண்டு எழுதுவது மிகம் சுலபம். ஒருமுறை புத்தான்டுப் பிறப்பிற்கு போஸ்   நகருக்கு கதைசொல்லி முதியவர் வந்திருந்தார், சுவாரஸ்யமான  மனிதராகவும் எல்லோரிடமும் குறிப்பாக இவனையொத்த பையன்களிடத்தில்  நன்றாகப் பழகினார்.

 

          நஃபிஸாட்டு  மிகத்தெளிவாக பலவிபரங்களையும் அப்தூலயேவிற்கு  எழுதியிருந்தார். அக்கடிதத்திலிருந்த பயணம்பற்றிய விவரம் வேடிக்கையாக இருந்தது.  சுவாரஸ்யாமாக இருந்ததென்றாலும், முட்டாள்தனமான யோசனையென நினைத்தான்.   ஒரு  கதைசொல்லியை,  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நண்பனுடைய ஸ்ட்ராஸ்பூர்  நகருக்கு,  ஒருவித ஆயிரத்தொரு  இரவுகள் நாடொன்றில் அந்நகரைக் கற்பனைசெய்து  தமது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக அவரை அனுப்புவது என்ன யோசனையோ ?  சுவாரஸ்யமானது‘, ‘நெகிழ்ச்சியானது  என்றாலும் முட்டாள் தனமானது‘. இம்மூன்று அடைமொழிகளையும்  தனது தாத்தா  நஃபிசாட்டுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்ட அப்தூலயே கடைசி அடைமொழியை மட்டும் அடித்துவிட்டு, ‘இயலாதது என்று மாற்றினான்.

 

          அதுவும் தவிர, விடுதிகளிலெல்லாம்  வாடகைக்கு எடுத்து அவரைத் தங்கவைப்பது கடினம், இந்த யோசனைக்கு நீ எழுதியிருப்பதைப்போலவே  அதிகப்பணம் தேவைப்படும். எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ. தவிர அவருடைய உணவுச் செலவுகளும் இருக்கின்றன. ஒன்றிரண்டு நாட்கள் சமாளிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமில்லை. நான் புலம்புகிறேன் என நினைக்கவேண்டாம். இரண்டுபேர் செலவினைச் சமாளிக்க என்னிடம் பணமில்லை என்றுதான் சொல்கிறேன். அடுத்ததாக அவர் முதியவர், இந்நிலையில் நீயோ அல்லது வேறு யார் துணையுடனோதான் வரமுடியும்.  அப்படிவந்தால்  கவனித்துக்கொள்ள எனக்கு நேரமுமில்லை. நம்முடைய ஊருக்கே அவர் வந்ததில்லை, அப்படியிருக்க தனியே அவர் ஸ்ட்ராஸ்பூர் வரை வருவாரா என்பதும் சந்தேகம்.  அதுமட்டுமல்ல, எந்நேரமும் என் கண்காணிப்பிலும் அவரை வைத்திருக்கவேண்டிய பிரச்சினையுமுள்ளது. நான் வேலை செய்கிறேன், எப்படி அவரருகில் இருப்பது ? என் பொறுப்பிலில்லாமல் அவரை அனுப்பி வைத்தால் நேரம் கிடைக்கிறபோது சென்று அவரைப் பார்ப்பேன்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊரையும் சுற்றிக்காட்டுவேன். ஆனால் எல்லா நாட்களிலும் என்னால்  அவரைபார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னால் முடியாது. »

 

          இக்கடிதத்திற்கு நஃபிசாட்டுவின் பதில் சுருக்கமாக இருந்தது. ஒரு சில வரிகளில் இருந்த அப்பதிலில் , ‘அதுவும் தவிரபோன்ற சொற்களையெல்லாம்  பயன்படுத்து வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் அச்சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாதே, என எழுதிவிட்டு,  சாத்தியமாகும்எனக்குறிப்பிட்டு ஒன்றுக்கு மூன்றாக  அடிக்கோடிட்டு  முயற்சி செய்என முடித்திருந்தார்.

 

          அப்தூலயே கடித்தத்தை  வீசி எறிந்தான். அவன் பதில் எழுதவில்லை,. அவன் வேலைசெய்யும் சகப்பணியாளர்களிடம், மாணவர்களிடம், மாணவிகளிடமென யார்யாரையெல்லாம் தெரிந்துவைத்திருந்தானோ அவர்களிடத்திலெல்லாம் இக்கதையைக் கூறினான். நாளடைவில் இக்கதை, சுவாரஸ்யம் குறைந்து கேலிக்குரியதாக  மாறி இருந்தது. வெகுசீக்கிரம் பல்கலைக் கழக மானவர் விடுதியில், இக்கதையை அறியாதவர் ஒருவருமில்லை என்றாயிற்று. அப்தூலயே எதிர்கொள்ளும் மாணவர்கள் , அவனை நலம்  விசாரிப்பதுபோல ” ஊரிலிருந்து அங்க்கிள் எப்போது வருகிறார் ? » எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.

 

          வந்ததென்னவோ புதிதாக ஒரு கடிதம். இம்முறை முயற்சி செய்என்ற வார்த்தைக்குக் கீழ் நான்குமுறை அடிக்கோடிட்டு இருந்தது. அவ்வார்த்தையை கண் முன்னால் அவை நிறுத்தின. அதன் கட்டளைக்குப் பணிந்து  சொந்தப் பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கினான். ஏதாவதொரு தீர்வினைக் காணவேண்டிய நெருக்கடி உருவாயிற்று. காப்பிவிடுதியில் வைத்திருந்த தகவல் விளம்பரம் அவனை ஈர்த்தது. ‘l’afges’ எனும் பல்கலைக் கழக மாணவர் பேரவை வைத்திருந்த தட்டி  அது.  பிரான்சு நாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள லா பூர்கோஜ்ன்  பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவர், கவிதை வாசிக்கப்போவதாக அதில் குறிப்பிடிருந்தது.  கடந்த சில மாதங்களாக  தள்ளாடும் வயதிலுள்ள தாத்தாவின்  மூத்த சகோதரரை பிரான்சு நாட்டிற்கு எப்படி அழைத்துவந்து தங்கவைப்பதென்ற விடயத்தில்  மிகவும்  குழம்பிப்போயிருந்த  அப்தூலயேவுக்கு தீர்வு  அத்தட்டிச் செய்தியில் இருக்கக்கூடுமென்று நினைத்தான். ‘CROUS’ பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யும், அமைப்பு. பேராசிரியர்கள் ஆய்வின் பொருட்டும், எழுத்தாளர்கள்  சொற்பொழிவுக்காகவும் வந்து தங்குவார்கள்.

 

       ஒரு ஆப்ரிக்கக் கதைசொல்லியும் ஏன் அதுபோல வரக்கூடாது ?

 

       என்ன சொல்கிறாய் ?

 

           பாரீஸ் சாலட்   என்ற ஒன்றைத் தயார் செய்துகொண்டே தனக்குத்தானே  சத்தமாக அவன் பேசிக்கொண்டிருந்தான்.

 

       ஆப்ரிக்கர் கதைசொல்லியை அழைத்துவருவதில் என்ன பிரச்சினை ? அதிலும் அனைவரினும் பார்க்க புகழ்பெற்றவர் என்கிறபோது.

 

       அப்படியா ?

 

       எனது  தாத்தாவின் சகோதரர்பற்றி வேண்டுமானால், உனக்கு விளக்கமாக சொல்கிறேன்.

 

       நிறைய தடவை நீசொல்ல நாங்கள் கேட்டாயிற்று.

 

          இவனிடம் காதுகொடுத்துக் கேட்ட சர்வர் பெண்ணிடம், தனது யோசனையைத் தெரிவித்தான். அன்று மாலையே ஒரு மாணவனைக் கலந்தான். அவனுடைய தந்தை ரைன் நதி புதிர்களென  ஒரு நூலை எழுதியிருந்தார். ஏராளமான சொற்பொழிவுகள், மாநாடுகள் என அடிக்கடி கலந்துகொண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கியதுண்டு. 2000 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரவாசியான டொமினிக் நாட்டைச் சேர்ந்த ழான் டொலெர்(Jean Tauler)  என்பவரின் ஏழாவது நூற்றான்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

 

       என் தந்தைக்கு  இங்கு தங்கியபோது எந்தக் குறையுமில்லை, அவருக்குத் திருப்தி.

 

       ஓரு கதைசொல்லியை, அதுவுமொரு ஆப்ரிக்க கதைசொல்லியை உண்மையில் இங்கே அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறாயா ?

 

        ஏன் கூடாது ? எதற்கும் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்கள் யாரையேனும் போய்ப்பார்.

 

       நானும் அதைப்பற்றி யோசித்தேன்.

 

          மறுநாள் அப்தூலயே மாணவர் பேரவையைச் சேர்ந்த இருவரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தான். அவர்கள் இருவரும் பல்கலைகழகத்தில் புதிதாய் எதையேனும் செய்வதில் ஆர்வம்கொண்டவர்கள்.  இவன் யோசனையைக் கேட்டதும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. விஷயத்தை அவர்கள் மதாம் சொடெவ்விடம் கொண்டு போனார்கள். பல்கலை கழகத்தின் கலைப்பண்பாட்டுத்துறை நிர்வாகியான அபெண்மணி  யோசனையையைக்  CROUS  இயக்குனரிடம் கொண்டுசென்றார்.

 

          இயக்குனரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்தூலயே இயக்குனரின் அலுவலகம் வரை வந்தவன் உள்ளே செல்ல தயங்கினான். என்ன சொல்லலாம் ? எப்படி ? என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. இந்தச் சின்னக் காரியத்திற்காக இயக்குனர் அலுவலகக் கதவையெல்லாம் தட்ட வேண்டியிருக்குமென அவன் யோசித்ததில்லை. அவனுக்கு தைரியம் காணாது. தாத்தாவின் கடிதத்திலிருந்த ” முயற்சி செய்” என்ற வார்த்தைக் காதில் ஒலித்தது.

 

          இயக்குனரின் அலுவகத்திற்குள் நுழைந்தவன்  முதல் அடியை எடுத்துவைக்க  சில நொடிகள் எடுத்துக்கொண்டான். சன்னல் அருகே ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படம். ல்ல சகுனமாகப்பட்டது.  ” ஆப்ரிக்காவில் கவனம் செலுத்தும் ஸ்ட்ராஸ்பூர்” என்கிற வார்த்தைகள்  மனதில் ஓடின, எனினும் அதைச் சொல்லத் தயங்கினான்.

 

       உட்கார் ! ஏதோ கதை சொல்லி ஒருவரை அழைத்து வரும் திட்டம் உன்னிடம் இருக்கிறதென்று கேள்வி.

 

       எப்பச் சொல்வது…ஆமாம்  ஒரு கதைசொல்லி … நான் சொல்ல வந்தது …

 

       சரி அதற்குத்தானே வந்திருக்கிறாய், சொல்லேன்.

 

  அவனுடையத் தயக்கத்தை இயக்குனரின் கனிவான வார்த்தைகள் போக்கின. வசதியாக நாற்காலியில் உட்கார்ந்தான். ஆப்ரிக்க நாட்டைச்சேர்ந்த மிகப்பெரியக் கதை சொல்லியைப் பற்றித்தான் அவன் பேச வந்தது. அவரின் புகழ் செனெகெல் நாடு மட்டுமின்றி ஆப்ரிக்கக் கண்டம் முழுதும் தெரிந்திருக்கிறது. எனக் கூறியபோது, சற்று மிகைபடக் கூறியதாக உணர்ந்தானே தவிர அதை நிறுத்தவில்லை, அதொருவகையில்  கேள்விகளைத் தள்ளிப்போட உதவியதும் காரணம் .  அவன் கூறியதை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குனர் கோப்பு ஒன்றை எடுத்து வைத்தார். தமக்குள்ள சங்கடத்தை தெரிவிக்க வும் அவர் தயங்கவில்லை. 

 

        கதை சொல்லி உனது உறவினரில்லையா ? அதுவும் தவிர மிகவும் வயதான மனிதர். சரிதானே ?

 

        ஆனால்  நெறிதவறாதவர்.

 

        மிஸியே சொகோன் என்பவரை நீ பல்கலைக்கழக விடுதியில் தங்கவைக்க நினைக்கிறாய் ?

 

        அவர் பெயர் உண்மையில் ஸ்லாபூம்.

        ஸ்லாபூல்கூம் ? கதைசொல்லியின் பெயரா அது ?

        ஆமாம் அவருடைய பெயர்தான் ஸ்லாபூகூம்

        அவர் இங்கே தங்கவைக்கவேண்டுமா ? முடியாததில்லை. எனினும் சில விதிமுறைகள் இருக்கின்றன. நீ முதலில் ‘DRAC’  ஐ சென்று பார்க்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா ?

 

        அதாவது……

        கலை பண்பாட்டுத்துறை அமைச்சகத்தில் பிரதேசக் கிளை அலுவலகம். அவர்களைச் சென்று பார்த்துவா. எனக்கு முதியவரை இங்கே தங்க வைக்க எந்தவிதப் பிரச்சினையுமில்லை.

 

        மிக்க நன்றி மிஸியே, அழகா இருக்கிறது !

 

        என்ன சொல்கிறாய் ? எனக்குப் புரியலை.

        உங்க ஒட்டகச்சிவிங்கி, அழகாக இருக்கிறதென்றேன். சன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல இருக்கிறது.

        ஆமாம் களைப்பின்றி அதைத்தான் செய்கிறது. அது அழகா இருப்பதும் உண்மைதான்.

     இத்தனை அழகா வேறொன்றைப் பார்த்ததில்லையென அப்தூலயே தெரிவித்தான். அவன் உயரத்திற்கு இருந்தது, துணிகொண்டு செய்திருந்தார்கள். கடைசியாக ஒருமுறை பார்த்தவன், நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டான்.

 

     இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியவன், கூடம் படிகள் என வேகமாகக் கடந்தான். இதை உடனே அவனுடைய தாத்தாவிற்கு எழுதவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.

 

இயக்குனரைச் சென்று பார்த்தேன். அவருடைய அலுவலகத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது . உண்மையானதல்ல. ஆனால் ஆப்ரிக்காவைப் பற்றி அவரிடம் பேச  எனக்குப்  பெரிதும் உதவியது. பின்னர் அவரிடம் என்னுடைய பெரியத் தாத்தாவை அழைக்கக்போகிறேன், அவருக்கு நமது பல்கலைக்கழக விடுதியில் ஓர் அறையை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன்.  சில விதிமுறைகள் இருக்கிறதென்றார். மாநில கலைப்பண்பாட்டுத்துறை அலுவலகத்தைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்குத் தற்ஓதைக்கு  அதுபற்றி எதுவும் தெரியாது.  உங்கள் ச்கோதரர் மிகப்பெரியக் கதைசொல்லியென்றும், அவர் ஆப்ரிக்காவெங்கும் அடைந்த புகழை ஸ்ட்ராஸ்பூர்கிலும் அடைவார் என்றேன். கதைசொல்லி தாத்தாவை உடனே அழைக்கலாம் என்ற பதில் அவரிடமில்லை. அதற்கென்று சில விதிமுறைகள் இருகின்றன. ஆனால் அவரிடம்  அச்சமின்றி பேசமுடிந்தது எனது கோரிக்கையை மறுக்கக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன். காதுகொடுத்து அனைத்தையும் கேட்டவர் இறுதியில் சம்மதம் தெரித்திருக்கிறார்.  நீங்கள் சொன்னதுபோலவே எனது முயற்சியில் ஜெயித்தியிருக்கிறேன். அவ்வார்த்தைக்கு  ஐந்து முறை அடிக்கோடிட்டான். அவர் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்,  என்று முடித்தான்.

 

(தொடரும்[

 

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2 பியெர் ரொபெர் லெக்ளெர்க்

 

நூரம்பரக் இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும் உருவாகி நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது. அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம் கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் குத்திட்டு நிற்பதையும் பலரும் அறிவார்கள். என்ன ஆனாய் லூசியன் ? உயிருடன் இருக்கிறாயா ? எங்கே நீ இறந்தாய் ? சாலைகள் நகருக்குத் திரும்பப் போனாயா ? என்றெல்லாம் முனுமுனுப்பதும் காதில் விழும். அல்லாவிடம் அவரது அடிமையானத் தன்னை அந்த நகரைத் திரும்பக் காண க் கருணைபுரியவேண்டும் என க் கேட்பார். ஆனால் அதில் எந்தப் பயனுமில்லை. கடவுள்களிடம் எல்லாவற்றையும் கேட்டுப்பெற முடியாது. அவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும் என்ன நிறமென்றாலும் சரி, இயலாததை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்களென்பது வயதினால் பெற்ற ஞானம் தெரிவிக்கும் உண்மை. இருந்தாலும், கடவுளிடம் இறைஞ்சுவது, குறைந்தப்பட்சம் அந்த ஊர்மீதான நம்பிக்கையைக் குலைக்காமல் வைத்திருக்க உதவலாம். அல்லாவாக இருந்தாலும் அவரால் முடிந்தது, எண்பபது வயது முதியவருக்கு அந்த ஊரைப்பற்றிய அறிவைத் தருவது, அதற்கு மேல் முதிவருக்கும் கடவுளிடம் எதிர்பார்ப்புகளில்லை.

முதிய தம்பதிகளின் பரணில், இரவுவேளைகளில் காடுகளில் தங்க நேரிட்ட இடங்களில், கலேயிலிருந்து ஃபோக்டோனுக்குப் சிறிய படகொன்றில் பயணித்தவேளையில், தேம்ஸ் நதிக்கரையில் என எல்லா இடங்களிலும் தான் காதலில் வீழ்ந்த அந்த ஊரைப்பற்றி மொரான்ழ் பேசாத நேரமில்லை.

    • அது என்னுடையது, புரியுதா, என்னிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்டார்கள்.
    • தைரியமாக இரு, திரும்ப அதைக் காணும் நாள் வரும்.
    • அதற்காகத்தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன், உன்னையும் ஒரு நாள் அங்கு அழைத்துப்போவேன், கண்டிப்பாக நடக்கும், இது சத்தியம்.

சத்தியம் நமக்குக் கட்டுப்பட்டதா என்ன. வழ்க்கை விருப்பங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது. புகழ்பெற்ற எண்ணிக்கையற்ற நகரங்களைக் காண்பதற்கு யுத்தம் ராணுவவீரர் சொகோனுக்கு சந்தர்ப்பத்தை அளித்தது, அதுபோலவே பெயர்களையும் எண்ணிக்கையையும் ஞாபகப்படுத்த முடியாத அளவிற்கு கிராமங்களையும் அதே யுத்தம் காண வகை செய்தது. அவரை, மொரான்ழ் ஊர் வழியாகவும் அவருடனோ அல்லது அவரின்றியோ அழைத்துச் செல்ல நேரிட்டிருக்கலாம். ஆனால் ராணுவத் தலைமை வேறு வகையாக முடிவெடுத்தது. கதைசொல்லியின் வாழ்க்கையில் அதிசயம்போல அது நிகழ்ந்தது. அவருக்கு அது கடவுளின் சமிக்கை.

அந்த அதிசயம், எதிர்பாராத அவருடைய தம்பியின் வருகையால் ஏற்பட்டது. அவருடைய கால் கள் ஒத்துழைக்க மறுத்த நாளிலிருந்து இளைய சகோதரரை அவர் பார்த்ததில்லை. நஃபிஸாட்டு, போஸ் என்ற இடத்தில் வசிக்கிறார். டக்கார் நகருக்கு போவதற்கு முன்பாக இடையில் டியூர்பெல் வரை அவர் செல்லவேண்டியிருந்தது, வழியில் துபாம்பூல், எனவே சேடாரை பார்த்து இரண்டொரு வார்த்தைப் பேசிவிட்டுப்போகலாமென வந்திருக்கிறார்.

    • இப்போதெல்லாம் நீ தம்காரிட்டிற்கு வருவதில்லையென குடும்பத்தில் அனைவருக்கும் வருத்தம்.
    • பிரச்சினை, எனது கால்கள்.
    • கால்கள் பிரச்சினையெனில், பேருந்து பிடித்து வரலாமே!
    • எனக்கு நடந்து பழகிவிட்டது, என்றைக்கு கால்கள் வலுவிழந்துவிட்டன எனத் தெரிந்ததோ அன்றைக்கே இருக்கின்ற இடத்தைவிட்டு எங்கும் நான் நகரக்கூடாதென்பதற்கான அறிகுறி.
    • நீயும் உனது அறிகுறியும் !
    • அல்லாவின் கட்டளை !
    • இருக்கலாம். ஆனால் அவர் சொல்ல மறந்தாலும், நீயாக ஏதாவது கற்பனை செய்துகொள்வது வழக்கம்தானே, உனக்கு அதுதானே தொழில்.
    • எங்கே இந்தப்பக்கம் ?
    • ‘Dak’art 2000 ல் கலந்துகொள்ள வந்தேன், கண்ணாடி ஒவியர்கள் பலர் கூடுகிறார்கள்.
    • Dak’art 2000?
    • கண்காட்சி. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆப்ரிக்கக் கண்டத்தில் நடக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சி. த்யூர்பெல்லில் என்னுடைய மாணவன் ஒருவனை அழைத்துச்செல்ல வந்தேன், வழியில் உன்னைப் பார்க்கலாமென்று தோன்றியது.
    • நல்ல காரியம் செய்தாய். எனக்கும் வயதாகிறது நஃபிஸாட்டு.
    • அப்படிசொல்ல இன்னும் காலம் இருக்கிறது.
    • இல்லை அநேகமாக இதுதான் கடைசியாக இருக்கும். வேண்டாம், பதிலெதுவும் சொல்லவேண்டாம். இங்கே வர நினைத்து வந்தது, மிகவும் நல்ல விஷயம். நானும் உன்னைப்போல ஒருவன் வருகைக்காகத்தான் காத்திருந்தேன். என்னிடமொரு ரகசியம் இருக்கிறது. என்னுடைய மரணத்தோடு அந்த ரசியத்தையும் கொண்டுபோகக்கூடாதில்லையா ? தோட்டத்திற்கு ரகசியங்களோடு வருகிறவர்கள் பூக்களற்ற பாலையில் அவற்றை வைக்கிறார்கள்.
    • உனது ரகசியம் தீயசக்தியான பாம்புகள் என்பது உறுதி. உனது வழக்கமானக் கட்டுக்கதைகளில் ஒன்றா.
    • கிண்டல் வேண்டாம்! என்னிடத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. ‘சாலைகள் நகரம் பற்றியது அந்த ரகசியம்.
    • நீ சொல்வதெதுவும் எனக்குப் புரியவைல்லை.
    • நாள் ஆக ஆக , மறதியும் அதிகரித்துவருகிறது. துண்டு துண்டாக ஊரின் மொத்தக் காட்சிகளும் ஒன்றன்பின்னொன்றாகஅதன் நிறத்தை இழந்துவருகின்றன. ஒரு நாள் அந்த ஊரையே இழக்க நேரலாம். என்னிடத்தில் எஞ்சியுள்ளவற்றில் கொஞ்சமேனும் உனது நினைவில் பதிவாக வேண்டியவை. பத்திரமாக நீ கட்டிக்காக்கவேண்டுமென்பது எனது ஆசை. அதைத் தொலைக்க எனக்கு விருப்பமில்லை. உனது தலையில் இருக்கின்ற அந்த மிச்சத்தை, அவ்வப்போது நீ எவரிடமாவது தெரிவிக்கவேண்டும்.
    • உன்னைபோல நானொரு கதைசொல்லி இல்லை. அந்த நகரம் உனக்குத்தான் சொந்தம். உன்னுடைய கற்பனைதானே ?
    • இல்லை, கற்பனையில்லை. ஆமாம் ! அப்படியும் சொல்லலாம். ஆனால் அது நிறமிழந்துவருகிறது., இரப்பரால் கலைபட்ட படத்தைப்போல. எனக்கு மறதி அதிகம். நிறைய விஷயங்களை மறந்துவருகிறேன். சாலைகள் நகரம் எப்படி இருக்குமென்பது சுத்தமாக எனக்கு மறந்துவிட்டது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எவரிடமிருந்தேனும் எனக்குத் தெரியவந்ததா? இல்லை நானாக இட்டுக்கட்டியதா? கதைசொல்லியின் வாழ்க்கையைக்காட்டிலும் , இந்தவாழ்க்கை விநோதமானது. உதாரணத்திற்கு எப்படிசொல்வது, ஒரு வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகவும் எளிமையான வீடு, , ஒரு நாள் அதைப்பற்றி விவரிக்கிறோம். மறுநாள் அது அரண்மணையாக மாறிவிடுகிறது. காலங்கள் கடக்கின்றன, ஆரம்பத்தில் அது வீடாகத்தான் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதுதான் லூசியான் நகரத்தின் விஷயத்தில் நடந்தது.
    • லூசியான் ?
    • லூசியான் மொரான்ழ. அவன் என்னுடைய கைகளில் இறக்கவில்லை. என்ன செய்ய சொல்ற ? சினேகிதன் ஒருவன் நமது கைகளில் மடிவது அத்தனைச் சந்தோஷம் அளிக்கக் கூடியதா ? இக்கட்டத்தில் கேட்பவர்கள் உருகிப்போய்விடுவார்கள். அவனுக்கு எந்நேரமும் தனது ஊரப்பற்றிய பேச்சுதான். யுத்தம் தொடங்கியதும் அதைப்பற்றி எழுதவேண்டுமென நினைத்தான். அந்த நூலுக்குத் பெயர்கூட வைத்து எனக்குச் சொல்லவும் செய்தான். எல்லாவற்றையும் போலவே அதுவும் எனக்கு மறந்து விட்டது. தற்போது அவைகளெல்லாம் ஒன்றோடொன்று கலந்துள்ளன. முன்புபோல லூசியனுடைய ஊரைப்பற்றி எதையும் கூற முடிவதில்லை .
    • இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது, முடிந்தமட்டும், அதைச்சொல்வது.
    • நினைவிலிருந்து கூற முடிகிற சிற்சிலவார்த்தைகளுக்கு உண்டான பொருள் ஞாபகத்திலில்லை. அச்சொற்கள் தரையில் கொட்டிய கற்களைப்போல கிடக்கின்றன, அவை வீடுகட்ட ஒருபோதும் உதவப்போவதில்லை….ஹூல்ட்ஸ்(Hultz)! என்ன அர்த்தம்? ஹூல்ட்ஸும் அம்பும் என்றால் என்ன? அது பற்றி தெரிந்துவைத்திருக்கிறேன் . எனக்கு அதுபற்றி முன்பே தெரியுமென்பது, உறுதி. ஹூல்ட்ஸ், நான் இட்டுக்கட்டிக் கூறியதல்ல., எனக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது, ஆனால் தற்போது அதுபற்றிய காரணம் வயதினால் மறந்துபோய்விட்டது.
    • ஒருவேளை வில் வீரனாக இருக்குமோ?
    • இருக்கலாம். புகழ்பெற்ற வில்வீரனாக இருந்து, அவனைப்பற்றி மொரான்ழ் என்னிடம் கூறியிருக்கலாம்.. ஆனால் அம்புஎன்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. அதைத்தான் தேடுகிறேன். என்னுடைய கதையுடன் இணைத்து பொருத்தமாக கூறும் முயற்சியில் தற்போது தோல்வி. லூசியன் கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்த முடிகிறது. அவற்றினால் பயனேதுமில்லை என்கிறபோதும் தெரிவிக்கிறேன். எவ்வித பிரயத்தனமுமின்றி வெகு எளிதாக அவற்றை நினைவுபடுத்தமுடிகிறது. எப்படியென்று கூறத் தெரியவில்லை. அதாவது என்ன மொழியென்று தெரியாமல், ஒரு மொழியில் உரையாடுவதைப்போன்ற உணர்வு.
    • கேட்பவர்கள் மகிழ்கிறார்கள் இல்லையா.
    • ஸெல்என்றொரு தாயைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவான். உதராணத்திற்கு இதையே கூட எடுத்துக்கொள்ளலாம் . இதற்கு என்ன பொருள்? இது போலவே அவன்: « ஆறொன்றிர்க்கு தீவு என்று பெயர் எனக்கூறிக்கொண்டிருப்பான். அதற்கு என்ன அர்த்தம்? ஆறு ஒரு தீவாக இருக்க முடியாது. எதற்காக சிரிக்கிறாய்? நான் இட்டுக்கட்டியதில்லை.. அவந்தான் தீவு என்று குறிப்பிட்டான். என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதை நான் மறக்கவில்லை. ஆனால் ஆறொன்றை நதியென்று எப்படிச் சொல்வார்கள் . ஏன் சிரிக்கிறாய்? அடுத்துதாக: «’ பெத்தீத் பிரான்சுபக்கம் நடத்துவிட்டு வரலாமா? » என்று கேட்பான். ‘பெத்தீத் பிரான்சுஎன்பதென்ன? ஏன் சிரிக்கிறாய்? அவன் : « அது என்னுடைய ரூழே தெ லீல் (Rouget de Lisle) நகரத்தில் இருக்கிறது » என்பான்.
    • லா மர்செய்யேஸ்‘ (La Marseillaise)பாடுவானா.
    • ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?
    • அதுதானே உன்னுடைய ரகசியம் ? உன்னுடைய மர்மமான நகரம் அதுதான் இல்லையா ? உண்மையில் இந்த உலகை ஏமாற்ற முடியுமென்று நினைக்கிறாயா ? இந்த மர்மத்தைக் கட்டிக் காக்க நீ ஆயிரம் தந்திரங்கள் கண்டுபிடிக்கலாம், தவிர அதில் நியாயமும் இருக்கிறது . மர்மத்தைக் கையாளத் தெரியாத கதைசொல்லி வந்த வேகத்தில் காணாமற் போய்விடுவார். ஆனால் உன்னுடைய கதை தெளிவாக இருக்கிறதே ! கேட்பவர்கள் இதையெல்லாம் ஊகிக்க மாட்டார்களென்றா நினைக்கிறாய் ? சரிதான் ! அனைவருமே ஊகிக்க மாட்டார்கள் என்பதை நம்ப நான் தயாரில்லை, வேண்டுமானால் பெரும்பாலோர் என்று வைத்துக்கொள்ளலாம்.. நீ தெரிவிக்கிற ஸெல்என்கிற இந்தத் தாய் யார், பிறகு ஹூல்ட்ஸ் மற்றும் அவருடைய அம்புஎன்றால் என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை என்று வேண்டுமானால் உறுதியாகக் கூறலாம்., எனக்குக்கூட அவைகுறித்து எதுவும் தெரியாதென்பதும் உண்மை. ஆனால் நீ குறிப்பிடும் நகரம் கேட்பவர் அனைவருக்கும் புதிரானது அல்லது மர்மமானதென்றல் யார் நம்புவது. உன் முதுகின் பின்னால், “மர்ம நகரத்தின் விஷயத்தில், நம்மை முட்டாளாகிவிட்டதாக நினைக்கிறான் மனுஷன் » என நாகரீகமாக கூறி நகைப்பார்கள் என்பது நிச்சயம்.
    • அப்படி யாரும் இதுவரைச் சொன்னதாகத் தெரியவில்லை.
    • நம்புகிறேன் ! காரணம் உன்னை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதற்காக. தவிர அப்படி க்கூறி அவர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் நினைக்கிறார்கள். கதை சொல்லிகள், எழுதுகிறவர்களும் ஒன்று என்பது உனக்குத் தெரியுமா ? கேட்பதும் வாசிப்பதும் ஏதோ முதன் முதலாக நடப்பதுபோன்ற உணர்வுடன் நிகழ்கிறது. ஒரு நூலில் தவறாமல் அன்பு, மரணம், பொறாமை, நல்லவை, கெட்டவை …..நகரம் என அனைத்தையும் சந்திக்கிறோம். கதைசொல்லலிலும் தீயவற்றைக் களைய தேவதைகள் வருவார்கள், நல்ல பூதங்கள் மேகத்தின் மீது நடக்கலாம்., மலைகளை இடம்பெயர்த்துவைக்கலாம்., கெடுமதிகொண்ட ராஜாக்களை, அழகான இளம் வீரன் சண்டையிட்டுக்கொன்று , அவர்களுடைய அழகான இளவரசியை மணக்கலாம்.. மர்மமான நகரம் வேறேன்ன !
    • ஆக என்னால் எந்தப்பயனுமில்லை.
    • இல்லை என்று சொல்ல முடியுமா ? கதை கேட்கிறவர்களுக்கு நீ சந்தோஷத்தை தருகிறாயே. அவர்கள் உன்னை நம்புவதில்லை , ஆனால் எப்படிச் சொல்லவேண்டுமோ அப்படிச் சொல்கிறாய், அவர்களை சிரிக்கவும் அழவும் உன்னால் செய்யமுடியும் என்றால், வீட்டை அரண்மணை ஆக்க முடியுமெனில் , பருத்திப் பறிக்கும் பெண்ணைத் தேவதை ஆக்க இயலுமென்றால், அவர்களுக்கு மகிழ்ச்சிதானே. எனவே திரும்ப உன்னிடம் கதைகேட்க வருகிறார்கள்.உன்னுடைய ரகசியமென்பது உனது சினேகிதனின் ஊரல்ல, உன்னுடையது. அதை நீ ஒருவரிடமும் தாரைவார்க்க முடியாது. ஆனால் உன்னால் கொடுக்கக் கூடியதென்று ஒன்றுண்டு, அது வேறொரு ரகசியம்.
    • அப்படியொரு வேறொரு ரகசியம் எதுவும் என்னிடத்திலில்லை.
    • நீ என்னிடம் அதுபற்றி பேசியதுண்டு என்று கூறினால் ? அதாவது உன்னுடைய் பொய்யான பெயர் பற்றியது அது.
    • ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அதற்கு உண்மையிலேயே உரிமையுடையவனாக மாறியுள்ளேன்.
    • ஸ்லாபூகூம் தானே! நமது குடும்பத்தில் அது குறித்து பேசியதுண்டு. இப்படி சொல்கிறேனே வருத்தப்படவேண்டாம். எங்களுக்கெல்லாம், உண்மையில் இதெல்லாம் முட்டாளதனமாகப் பட்டது. நகைப்பிற்குரிய இப்ப்டியொரு பெயரை அப்படி எங்குதான் கண்டுபிடித்தாய் ?
  • முதியவர் சிரித்தார். கெட்டிக்கார கதைசொல்லி, கேட்பவரின் ஆர்வத்தை மேலும் கூட்டுவ்தற்கு விரும்பினார். பிறரைக் காதுகொடுத்து கேட்கச்செய்யும் காரியம் அத்துணை எளிமையானதல்ல என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய கலையின் வெற்றிக்கான காரணமும் அதுதான். பெரும்பாலானவற்றை மறந்திருந்த போதிலும் ஸ்லாபூகூம் பெயரின் நதிமூலத்தை மறந்தவரில்லை. அதனைத் உறுதிபடுத்திக்கொள்ள , அழகானக் காட்சி சித்திரங்கள், கவனத்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய சூத்திரங்கள் என்று தேடுகிறார். தம்முடைய சகோதரனின் கேள்வியினால் முடிவுறாத கதையொன்றிர்க்காக பயணிப்பதைபோல உணர்கிறார். ஆனால் அதைத் தொடரவிருப்பமில்லை. அந்த ஞானஸ்நானத்திற்கு மொரான்ழிடம் பெரிதும் கடன்பட்டுள்ளார். அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லத் தொடங்குகிறார்.

ஸ்லாபூகூம் ! முதியவரின் அல்ஸாஸ் சினேகிதன் தன்னுடைய நகரம் குறித்து அனைத்தையும் பிறர் தெரிந்துக்கொண்டிருக்கிறார்களென்றுகவலைப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் : «  ஹூனர்(Huns) களின் படையெடுப்பிறகு அவர்கள் வேளியேறிய பின்னர் அந்த ஊரை ஸ்ட்ராட்பூர்கம்‘ (Strateburgum) என்று அழைக்கத் தொடங்கினார்கள். » எனக்கூறினான். அன்றிலிருந்தே எங்கள் இருவரிடை ஸ்லாபூகூம்வேடிக்கைச் சொல்லாக உருமாறியது. சேடார் ஸ்ட்ராட்பூர்கம்ஊரின் பெயரை உச்சரிக்க முயன்றார். பிரெஞ்சு மொழியில் ஊரின் பெயரிலுள்ள ‘r’ என்ற எழுத்தில் தடுமாறினார். எழுத்தைக் கூட்டிச் சரியாக உச்சரிக்க முயன்றபோது திக்கினார். சினேகிதனின் காதில் ஸ்லாபூகூம்என்று விழுந்திருக்கிறது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். முடிவில் சரியான மரமண்டை ஸ்லாபூகூம்என்று கூற இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். இது நடந்தது அல்ஸாஸ் கிராமத்தில் வயதானத் தம்பதியினர் இல்லப் பரணில். மொரான்ழ் செகோன்என்று அழைக்காமல் அன்றிலிருந்து ஸ்லாபூகூம்என்று கூப்பிட ஆரம்பித்தான்.

    • வேறு பெயரில் அவன் அழைப்பதில்லை. அவன் ஸ்லாபூகூம் என்று அழைக்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாங்கள் சிரித்தோம். அச்சிரிப்பு நெருக்கடியான தருணங்களிலும் தொடர்ந்தது. அவ்வாறான நெருக்கடியானத் தருணங்கள் கலே நகரம் வரை ஏற்பட்டன. ஸ்லாபூகூம் என்ற பெயர் எங்கள் இருவருக்கும் ஒருவிதத் துணிச்சலைத் தந்தது. அவன் கடைசியாக அப்பெயரை எப்போது உச்சரித்தான் என நினைவுகூர முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது.
    • அதைப் பெரிதுபடுத்தாதே. சில விஷயங்கள் அப்படித்தான். எதற்காக என்று விளங்கிக்கொள்ளாமலேயே , முக்கியமற்றவை, முக்கியமனவையாக உருமாறுகின்றன.
    • உண்மைதான் ! லண்டனில் நாங்கள் பிரிந்தபோது, விமானி ! ஆம் மொரான்ழிற்கு விமானியாக வரவேண்டுமென்ற எண்ணமிருந்தது. அதுதான் காரணமாக இருக்கவேண்டும் , வேறு காரனங்களுக்கு வாய்ப்பில்லை. அவன் என்னிடம் «ஹாய், ஸ்லாபூகூம்ஆமாம் அப்படி அழைத்ததாகத்தான் நினைவு. பிறகு நாங்கள் வழக்கம்போலச் சிரித்தோம். இம்முறை கடைசியாக. ஸ்லாபூகூம் ! பிரச்சினை உனக்கு வேடிக்கையாக இருக்கிறதில்லையா ?
    • இனி இருக்காது.

செகோன் கதைசொல்லியாக இருப்பதென்று முடிவெடுத்தபோது ஒருவரும் கேட்டிராதப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பெயரைத் தேர்வு செய்தார். அவருடைய மாமனாரும், «  நல்ல பெயர், உன் சினேகிதன் நினைவாக இப்பெயர் நல்ல யோசனைஎனக்கூற, அன்றிலிருந்து ஸ்லாபூகூம். மொரான்ழ், நினைவாக மட்டுமல்ல, இருவரும் சந்தித்த நெருக்கடிகள், பட்ட துயரங்கள், அச்சங்கள், சிரித்த சிரிப்புகள் என்று அனைத்தின் நினைவாகவும். அவரோடு ஒட்டிக்கொண்டது.

    • சாலைகள் நகரம் எங்கிருக்கிறதென்று தெரியும். அங்கு செல்லவேண்டுமென்று அடிக்கடி எண்ணம் வரும். அதொரு கனவு ! செல்ல நேர்ந்தால், சினேகிதனிடம் பேசமுடியும், அவனும் பதில் கூறுவான். ஒருவேளை உலக முடிவில் உரையாடுவதற்கென்றே கூட எங்களிடையே விஷயங்கள் இருக்கலாம். ஆம் சாலைகள் நகரம் எங்கே இருக்கிறதென்று தெரியும். அதன் உண்மைப்பெயர் தெரியாதென்றுதான் கூறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் நான் கூறுவது போல அந்த ஊரில்லை. அதுவும் தவிர எனது நண்பன் என்னை எப்படி அந்த ஊரைப் பார்க்கவைத்தானோ அதுபோலவும் இல்லை. அங்கே செல்வதற்காக பிரார்த்த்னைகூட செய்தேன்.
    • நீ போவாய் !
    • முடியாதென்று எனக்குத் தெரியும். நல்ல வகை பூதங்களையெல்லாங்கூட எனது கதைகளுக்கென உருவாக்கியதுண்டு, ஆனல் இந்த்க்கிழவன் சேடாரை அங்கு அழைத்துப்போக ஒன்றை படைக்கத் தவறிவிட்டேன்.
    • போகத்தான் போகிறாய். ஸ்லாபூகூம் ! உனக்காக அந்த ஊரில் யாரேனும் காத்திருக்கிறார்களா ?

அவருடைய கதைகளில் முதியவரான இக்கதைசொல்லி இதுபோன்ற பல பதில்களை, வாக்குறுதிகளை, பிரியமானவர்களிடம் உரைக்கிற மீண்டும் சந்திப்போம்என்பது போன்ற பிரியா விடை வார்த்தைகளை கற்பனைசெய்து இடம்பெறச்செய்திருக்கிறார் . « நீ போவாய் ! » என நஃபீகாட்டு அளித்த ஊக்கம், சாகும் தறுவாயில் இருக்கிற மனிதர்களிடத்தில் அவர்களுடைய எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுவதை ஒத்திருந்தது. முதியவரின் சகோதரர் பயனற்றதொரு ஆறுதலைத் தந்துவிட்டு க் கிளம்ப அவருக்கு அதை உணர்த்த முனைந்தவர்போல, அமைதியானதொரு எள்ளல் கலந்த புன்னகையை உதிர்த்தார்.

(தொடரும்)

 

கதை சொல்லி (le voyage de Slaboulgoum) -பியர் ரொபெர் லெக்ளெர்க் -தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

(Pierre –robert Leclercq பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை தந்திருக்கிறார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, கட்டுக்கதையா? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island , தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் எந்தத் தீவையும் காணாமலேயே எழுதியதாகச் சொல்வார்கள். , துராஸ் கல்கத்தாவை எட்டிப்பார்க்காமலேயே அந்நகரம் குறித்து தமது புனைவொன்றில் விவரிக்கிறார். நீலக்கடல்நாவலை எழுதியபோது மொரீஷியஸ் தீவை நான் பார்த்்தில்லை. எனினும் தன் சொந்த மரணத்தைக்கூட ஒரு கதைசொல்லியால் விவரிக்க இயலும். இது கதைசொல்லிகள் வாங்கிவந்த வரம். இச்சிறுகதை வாசித்தபோது கி.ரா. பற்றிய நினைவு இயல்பாய் தொடர்ந்தது)

தூபாம்பூல்(Touba Mboul) நகரத்திலிருந்து வெளியேறும் சாலையில் அவர் தன்னந்தனியாக வசித்து வருகிறார்.அவருடைய  வீட்டு வாசற்படியிலேயே  ஏதிர்கொள்வது நிச்சயம். தணிந்த குரலில், அவர் மட்டும் தனித்து உரையாடுவதைக் கண்டு ஒரு சிலர் ஆச்சரிப்பட்டிருக்கிறார்கள். «எங்க இருக்கிற? எங்க சாகிறஎன்பது போன்ற விநோதமான வார்த்தைகளை அவர் கூறக் கேட்டிருக்கிறார்கள்.

நிறைய பயணங்கள் செய்ததுண்டு என்கிறார். அவர் வர்த்தைகளின் படி சொல்வதெனில் ஏராளமாக……வெகுதூரம்நிறைய நாடுகள்“. கடந்த சில வருடங்களாக அவருடைய கால்கள் நீண்டதூர பயனத்தை மறுத்து வருகின்றன. பொஸ் (Mbos) நகரத்தில் வசிகும், செனெகல் நாட்டுக் கண்ணாடி ஓவியர்களில் மிகவும் புகழ்பெற்ற தனது இளம்வயது சகோதரரைக்கூட தற்போது பார்க்ப் போகும் வழக்கமில்லை. செனெகெல் நாட்டு ஷியா இஸ்லாமியர் வழக்கப்படி தம்ஹாரி(Tamkharit) என்கிற புதுவருடத் தினத்திற்கு மட்டும் பயணத்திலிருந்து விதிவிலக்குண்டு. விசுசாசிகளின் தலைவிதியை அன்றைய தினம் அல்லா தீர்மானிக்கிறார். தூபாம்பூல் நண்பர்களெல்லாம் ஒன்று கூடுவார்கள். பகலில் அரிசிச் சோறு, கருவாடு, மாமிசம், தக்காளி, மாவாக்கப்பட்டுப் பிசைந்த நிலக்கடலை  கலந்த எம்பக்ஸால்யூசலூம்(mbaxal-u-saloum) செனெகல் நாட்டு உணவை அவர்ளுடன் சேர்ந்து உண்பார். இரவானால் அவர்களுக்குக் கதைச் சொல்லத் தொடங்கிவிடுவார். வோழ் (Vosges) மலையில் போனோம்‘, ‘ஷ்லூர்ட்கண்வாய்களுக்கிடையே பசியுடன் திரியும் ஓநாய்கள், இலண்டன் பெண்ணொருத்தியுடன் காதல், 24செ.மீ நீளமுள்ள ஒரு வடு, ராணுவத் துணைத் தளபதி ஒருவரின் விமானம் லூசியன் மொரான்ழ் சிரிப்புகள் என்று அவருக்குக் கதைசொல்ல விடயங்கள் இருந்தன. கஒலாக், மிஸ்ஸிரா, ஃபூந்த்தியூன் என்று வெகுதூர ஊர்களிலிருந்தெல்லாம் , தூபஎம்பூல் நகருக்கு கதை கேட்க வருகிறார்கள். பிரான்சு நட்டிலிருந்தும் எழுத்தாளர் ஒருவர் வந்தார். தம்மிடமுள்ள தகவல்கள் போதாத நிலையில், அக்குறையைத் தவிர்க்க சில ஆப்ரிக்க கதைகளைக்கொண்டு தமது பாணியில் கலந்து சொல்லஎழுத்தாளர் ஏமாற்றதுடன் புறப்பட்டுவிட்டார். பிரெஞ்சு எழுத்தாளருக்கு ஆப்ரிக்க மக்கள் பூர்வீகக் குடிகள், எனவேப் பழங்குடியினர், மனித மாமிசம், நாற்பதுகளில் எடுக்கப்பட்டதிரைப்படங்களில் வருகிற கொண்டாட்டங்கள் போன்றவற்றை அக்கதைகளில் எதிர்பார்த்தார், ‘ஹூல்ட்ஸ் (Hultz) அம்புஎன்றும் வார்த்தை வந்தது, பிரெஞ்சு எழுத்தாளரைத் தடுக்க உதவவில்லை. ராணுவத் தளபதி ஒருவரின் கிரேடு பற்றிய பேச்சுதுகூட பெரிதாய் அவரை ஈர்க்கவில்லை. கிழவர் சொல்வதற்கென கையாளும் குறிப்புகள் தமது நாட்டின் சம்பிராதாயக் கதைகளிலிருந்து பெறப்பட்டவை அல்ல. அவர் கூறும் கதைகள் திரும்பத் திரும்ப இரண்டே இரண்டு விஷயங்கள் பற்றியதாக இருந்தன: முதலாவது கதைசொல்லியான முதியவரின் வாழ்க்கை, இரண்டாவதாக சொல்பவரைப்போலவே கேட்பவரையும் கனவில் மிதக்கவைக்கும் புராணிக நகருக்கு அவர் தரும் வர்ணனைகள். அப்படியும் அந்நகரைப் பற்றிமுழுமையாகக் கூறவில்லை என்றுதான் கேட்டவர்கள் சொல்கிறார்கள். இருந்தபோதிலும், அவர் கூறுவதைவைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நகரில் வாழ்ந்ததைப்போன்ற நம்பிக்கையை கேட்பவர்களிடத்தில் ஏற்படுத்துவார், தவிர ஒவ்வொருமுறையும் அந்நகரம் குறித்து புதிதாய் எதையோ அறிவதுபோன்ற அனுபவமும் நமக்கு வாய்க்கும்.

அனுபவங்களென்று கூறியதெல்லாம் புனைவுகளாக உருமாறின. அவரது கதைகளில் சொந்தவாழ்க்கையின் தாக்கமென்பது இருபத்தைந்து வயதில் தொடங்குகிறது. அக்கதையில் வரும் அதிசயநகரத்தை விவரிக்கிறபோதெல்லாம் தவறாமல் ஸெல்என்ற பெயரில் ஒரு தாயும் இடம் பெறுவார். அப்பெண்மணி குறித்து நிறைய அவருக்குச் சொல்ல இருந்தன. அவரைப் பற்றி பேசுகிறபோதுதான் ஹூல்ட்ஸ் அம்புபோன்ற வார்த்தைகள், குறும்புக்கார சிறுவனுக்குரிய குறுநகையுடன், முகத்திலிருந்து வெளிப்படும். இப்படியொரு அதிசயத்திற்குப்பிறகு விளங்கிக்கொள்ள முடியாத அவருடைய வார்த்தைகளை மேலும் குழப்புவதைப்போன்று, குரூஸ், கலியா அறை 243 என்பவற்றையும் அவ்வப்போது கூறலானார்.

தற்போது அவற்றில் சில எதனுடன் சொடர்புடையதென்பது மறந்துவிட்டது., வயது அவைபற்றிய ஆர்வத்தை சிதைக்காமல் வைத்துள்ளபோதிலும், அவற்றின் பொருளை நினைவில் நிறுத்த தவறிவிட்டது. இன்றும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால் எது எதோடு சம்பந்தப்பட்டதென்பதில் தெளிவில்லை. அதனாலென்ன! அவர் கதை சொல்கிறபோது இடம்பிடித்துவிடுகின்றன. ஸ்லாபூகும் சொல்லக் கேட்கவேண்டுமெனக் காத்திருக்கிறவர்களும் தங்கள் பங்கு மகிழ்ச்சியை பெறமுடிவதில் திருப்தியுறுகிறார்கள்.

இப்பெயர் காரணம் ஒருவரும் அறியாதது, ‘செடார் சொகோன்என்ற பெயர் ஸ்லாபூகூம்என்று மாறிய மர்மத்தை அறிந்த ஒரேமனிதர் அவருடைய முதல் மாமனார், ஆனால் அவர் மறைந்தும் பல வருடங்கள் ஆகின்றன. சிற்சில சமயம், விளையாட்டாக என்பதைவிட ஆர்வம் காரணமாக நேரடியாகவே அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அநாவசியமான நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர்போல, கண்களை இறுக மூடிக்கொள்வார், முகம் கோணலாகும், கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, « தெரியாது!» என களைத்த மனிதரைப்போல பதிலை உதிர்ப்பார், அதன் பிறகும் எப்படி நாம் வற்புறுத்த முடியும்?

இளம்வயது ஸ்லாபூகும் பற்றித் அதிகத் தகவல்களில்லை. வடக்கே வெகுதூரத்தில், மொரித்தானியா நாட்டிற்கு அண்மையிலிருந்த டகனாவில் பிறந்திருக்கிறார். அவருடைய முன்னோர்கள் கொலுவாக்கள் என்பதால் கிராமத்தைவிட்டு என்றைக்கு வெளியேறும்படி உத்தரவு பிறந்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது ஸ்லாபூகும் வாழ்க்கை. அப்போது, உலகின் மற்றொருமுனையில் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மானியரும் 1914-18 யுத்தத்தைத் திரும்பச் செய்துக்கொண்டிருந்த காலமது.

இளம்வயது கிராமாவாசியாக இருந்தபோது, பிரான்சு நாட்டையும், பாரீஸ் நகரையும் ஐஃபல் கோபுரத்தையும், ஆர்க் தெ ட்திரியோம்ஃப் என்கிற ஒஸ்டர்லிட்ஸ் யுத்த வெற்றி வளைவையும், லாங்க்ரு பகுதியில் பிறப்பெடுத்துப் பாயும் சேன் நதியையும் பார்க்கும் ஆர்வம் எப்போதும் இருந்தது. குறிப்பாகக் கடைசியாகக் குறிப்பிட்ட சேன் நதியின் மூலத்தைப் பற்றிய இத்தெளிவு பள்ளியில் பூகோளப் பாடத்தில் அவர் பத்துக்குப் பத்து மதிப்பெண் பெறக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆக இதுபோன்ற விஷயங்கள் அசௌகரியங்களை மட்டுமல்ல நல்ல பலன்களையும் தரக்கூடும்.

சேடார் சொகோன் இருபதுவயதில், ராணுவச்சீருடையில், சிரித்தமுகத்துடன், தலைநிறைய எப்பினால் (Epinal) நகரம் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் செய்ய புறப்பட்டுப் போனார். எல்லா யுத்தங்களையும் போலவே இந்த யுத்தத்திற்கும் பெயரென்று ஒன்று வேண்டும். எனவே வேடிக்கையான யுத்தம்எனப் பெயர் சூட்டினார்கள். இளம் ராணுவ வீரர் செகோனுக்கு அப்பெயர் தவறானத் தேர்வு. அதிலும் குறிப்பாக போனோம்மற்றும் ஷ்லூர்ட்கணவாய்களில் போர்த்திற நடவடிக்கையாக தங்கள் ராணுவம் பின்வாங்கியபோது ஓநாய் வாயில் அகப்படுவதற்கெனஎன்றுரைப்பது மங்கலச்சொல்லாக இருந்தது.

« என்ன நடந்தது? சிறைபிடிக்கப்பட்டோம்அன்று நடந்த சம்பவத்தை அப்படித்தான் கூறிக்கொண்டார்கள். எதிரிகளிடம் பிடிபட்டது நான் மட்டுமல்ல பலர், எனவேதான் கைதிகள்என்று பன்மையில் சொல்லவேண்டியிருக்கிறது. மொத்தம் நாங்கள் நூறுபேர். எங்கள் அனைவரையும் அல்ஸாஸ் பகுதியில் நேஃப் ப்ரிஸாக்‘(Neuf-Brisach) என்ற இடத்திற்குக் கொண்டுபோனார்கள். அங்கே சில கிழமைகள் வைத்திருந்தார்கள். பிறகு இரயிலிலும், டிரக்கிலும் அடைத்தார்கள். முதலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறார்களென்றே நினைத்தோம். இல்லை அவர்கள் கொண்டு சென்றது நூரன்பெர்க் என்ற இடத்திற்கு, ஆம் ! திரும்ப நாங்கள் சந்திக்க நேர்ந்தது நூரம்பெர்க்(Nuremberg) ஓப்லாக்(oflag) முகாம் எண் XIII Aல்.

இக்குறிப்பைத் துல்லியமாகத் தெரிவித்தபோது. கேட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு எவ்விதச் சங்கடமுமில்லை.

    • நீங்கள் கூறுவது உங்கள் வாழ்க்கையில் நடந்ததைத்தான் இல்லையா ?
    • என் கதையேதான் ! சந்தேகமே வேண்டாம்
    • அப்படியென்றால் ஸ்டாலாக்(Stalag) என்று சொல்லுங்கள். ஓப்லாக்கைதிகள் முகாம், ராணுவ அதிகாரிகளுக்கானது. சாதாரண ராணுவ வீரர்களை ஸ்டாலாக்கில் சிறைப்படுத்தியிருந்தார்கள். நீங்கள் ராணுவ அதிகாரியா ?

இக்கேள்வி ஸ்லாபூகூமை வியப்பில் ஆழ்த்தியிருக்கவேண்டும். கேள்வி அவரைச் சங்கடப்படுத்தவில்லை. சிறிது நேர இடைவெளிக்குப்பின்னர் மற்றொரு சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

    • நான் ராணுவ அதிகாரிதான், அதாவது கேப்டன்.
    • கேப்டன் ?

ஆமாம். மிகத்திறமையாகச் சண்டையிட்டேன். எங்களை வழிநடத்திய ஜெனரலுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு நாள் தம்மை வந்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். போர் சிறிது தணிந்திருந்த ஒரு நாளில் அவரைச் சந்திப்பதென்று முடிவு செய்தேன். எனது சக வீரரிடம், « இங்கே பார், நான் போகவேண்டும் ! » –என்று கூறினேன். அவனோ, « எங்கே போகிறாய்? » எனக்கேட்டான். நான், « ஜெனரலைப் பார்க்கஎன்றேன். அவன் திரும்ப, ” அவர் பார்க்கவிரும்பியது உண்மைதான், நான் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்” – என வருந்தினான். நான் சென்றபோது ஜெனரல் சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு கோட்டையில் தங்கியிருந்தார், ஆனல் எங்கேயென்று நினைவில்லை. சண்டை மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலம். சரி பிரச்சினைக்கு வருகிறேன். என்னைக் கண்டவுடன் புரிந்துகொண்டார். « உன்னைப்பற்றி நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்” –என்றார். தொடர்ந்து, « நான் கேட்ட அளவில், எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சுகிற ஆசாமி அல்ல, மிகவும் திறமையான ஆசாமி நீ! உன்னைப்போல ஒவ்வொரு வீரரும் எதிரிகளைச் சிறை பிடித்திருந்தால் போர் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்“- என்றார். நான் நீங்கள் நினைப்பது போலவே பதில்கூறாமல் இருந்தேன். அதிலும் ஒரு ஜெனரல் பேசும்போது, வாரத்தை எப்படி வரும் ? பிறகு சிறிது நேரம் என்னிடம் உரையாடிவிட்டு, « உன்னைப்போன்ற வீரனுக்கு உரிய சன்மானம் தரப்படவேண்டும்” – என்றார். நான் என்னைக் கோப்ரல் என்று அறிவிக்கப் போகிறார் எனநினைத்திருக்க, தடாலடியாக சில நொடி அவதானிப்பிற்குப் பிறகு,” இன்று முதல் நீ கேப்டன் ” – எனக்கூறினார்.

    • திடீரென்று!
    • ஆமாம், அப்படித்தான் அறிவித்தார்.
    • எடுத்த எடுப்பில் கேப்டன்?
    • ஆம்! உண்மையைச் சொல்வதெனில் எனக்குக்கூட வியப்பாக இருந்தது. அதிலும் ஜெனரலை எனக்கு முன்பின் தெரியாது.

«கேப்டன்! இனி சூப் நன்றாக இருக்கும்! –எனக் கூறியது காதில் இன்னமும் ஒலிக்கிறது. திரும்பவும் சக வீரரிடம் வந்தேன்.«என்னைக்காட்டிலும் உனக்கு கிரேடு கூடிவிட்டது ! », எனக்கூறினார். அவன் பெயர் லெமெர்சியெ, செம்பட்டைத்தலையன்….

திடீரெனப் படைத்த லெமெர்சியெ பாத்திரத்திரதிற்குத் துணைச் சேர்க்க வாழ்க்கை‘, ‘ராணுவ வீரர்களின் நூறு சாகசங்கள்எனக் கூறிக்கொண்டுபோக, கேட்டுக் கொண்டிருந்த பிரான்சு எழுத்தாளர் தோளை உயர்த்திவிட்டு, எழுந்துகொண்டார்.. பிரெஞ்சுக்காரர்கள், கதை சொல்லிகளை அம்போவென தவிக்கவிட்டுச் செல்கிறவர்கள் என்ற முடிவுக்கும் ஸ்லாபூகூம் வரலானார்.

ஆவர் கூறும் கதையின் இப்பகுதி அப்படியொன்றும் உபயோகமற்றதுமல்லஅவருடைய நம்பிக்கையான கதை கேட்கும் மனிதர்கள் லெமெர்சியெவினுடைய அசாதரண கதையையும், தங்கள் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கேப்டன் என்பதையும் மறுநாளே தெரிந்துகொண்டார்கள்.

அவர் கூறும் கதையை நம்பாதவரென்று ஒருவருமில்லை. இக்கட்டுகதைகளுக்குத் தேதி அத்தனை முக்கியமானதல்ல. கதைசொல்லிக்கு உண்மை ஓர் ஆதாரமேயன்றி சுமை அல்ல. அவரிடம் கதைகேட்கும் எவரும் வாழ்க்கை எதுவாக இருக்கிறது, இருந்தது, இருக்கும் என்றெல்லாம் கேட்பதில்லை, ஆனால் என்னவாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். எனவே ஜோடித்து அவரால் கதை சொல்ல முடிகிறது. அண்டை அயலில் இருப்பவர்களுக்கும், வெகுதூரத்திலிருந்து ஸ்லாபூகூமிடம் கதைகேட்கவென்று வருபவர்களுக்கும் நகரமொன்றின் மர்மம் (அவர் கதையில் இரண்டு நகரங்கள் இடம்பெறுவதில்லை), அல்ஸாஸ் பெண்ணொருத்திக்குப் பதிலாக சீமாட்டி ஒருத்தியுடன் காதல், போர் விவரிப்புகள்(அவர் ஒருவர்மட்டுமே சண்டையிட்டு ஜெயிக்காமல் போனதெப்படி எனும் வியப்புடன்) போன்றவைக் கருத்தில்கொள்ள வேண்டியவை. அவர்களுக்கு முக்கியமானவை என்று சொன்னால் : அவர் கதைகள் தரும் நெகிழ்ச்சி, பிரம்மிப்பு, வேடிக்கை, பயங்கரம் என அனைத்தும். அவைக் கேட்பவரை கணநேரம், அன்றாட வழ்க்கைப் பிரச்சினையிலிருந்து விலக்கிவைத்து, பிரக்ஞையுடன் கனவுகாண்கிற உணர்வைத் தரக்கூடியவை. உண்மையான கதைசொல்லியின் வேலையும் அதுதான். ஸ்லாபூகூம் அதை மிகச்சிறப்பாக செய்கிறார். சாகசங்களை அவர் உரைப்பதில் இட்டுக்கட்டிச்சொல்வது முக்கிய பங்கு வகிக்கிறது. அவருடைய கதைகள் கேட்பவர்க்கு அலுப்பைத் தராதவை. பொய்யை உண்மையெனத் திரித்துக்கூறாதவை, உண்மையை நுட்பமாக தழுவியவை. ஸ்லாகூம் ஒரு கவிஞர், அவரை  வரலாற்றாசிரியனாக இரு என்றால் எப்படி சாத்தியம்.

முட்கம்பிவேலிக்கு சில மீட்டர்கள் தூரத்தில், மேஜர் லூசியன் மொரான்ழினுடைய பெருமூச்சை உணர முடிகிறது. சிறை முகாமிலிருந்து தப்புகின்ற முயற்சியில், நண்பர்களாகியிருந்தோம். அவர் உடலை அருகிலிருந்த காட்டுக்குள் இழுத்துச் செல்லப் போதுமான தெம்பு என்னிடமிருந்தது, இழுத்துக்கொண்டுபோய் போடுகிறேன். «என்னை சாகவிடு என்கிறார். அவர் வயிறு கிழிந்திருக்கிறது. சுற்றிலும் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அவர், « என்னைச் சாகவிடு,என்கிறார். நான், « முடிடியாது, என்கிறேன். அவரோ இது என்னுடையக் கட்டளைஎன்கிறார். அங்கேயே அவரைப் போட்டுவிட்டுப் புறபட்டேன். ஓடுகிறேன், அதிஷ்ட்ட வசமாகத் தப்பினேன். இரவு முழுக்க நடந்து ஒருவழியாக பிரான்சு நாட்டின் கிழக்குப்பிரதேசமான அல்ஸாஸ் (Alsace)க்குள் வந்திருக்கிறேன் என்பது புரிந்தது. விடிந்ததும் கிராமமொன்றுக் கண்ணிற் பட்டது. “பரவாயில்லை, என நினைத்துக்கொள்கிறேன், அங்கே ஒரு பண்ணை “. எனகென்று பாடைத்ததுபோல ஓர் அழகான அல்ஸாஸ் பெண், என்னிடத்தில் காதல்கொள்கிறாள். பரணொன்றில் என்னை பதுங்கியிருக்க எற்பாடும் செய்கிறாள். அழகி, தேன் நிறத்தில் தலைமுடி, பனிபோல வெள்ளைவெளேரென்று இருந்தாள்.  என்னைத் தீவிரமாக நேசித்தாள், எந்த அளவிற்கெனில் அடுத்த சில நாட்களில் நான் யாரென்று புரிந்துகொண்டு உதவிய எங்கள் துணைத்தளபதி யின் தயவினால் இலண்டனில் சதிக்க நேர்ந்த சீமாட்டியின் காதலுக்கு ஈடாகா. லாங்க்ருவில் உற்பத்தியாகிப் பாய்ந்துகொண்டிருக்கிற சேன் நதி பாலத்தைக் கடந்தேன். இரயிலொன்றில் பதுங்கிப் பயணித்து பாரீஸ் வந்தடைந்தேன். துணைத் தளபதி என்ன சொல்லியிருப்பாரென நினைக்கிறீர்கள் ? அவர், « உங்களை எனக்குத் தெரியும். பழையத் துணிச்சல் தற்போதும் உங்களிடம் உண்டா ? » எனக் கேட்டார். நான் அவரிடம் : «  சந்தேகம் வேண்டாம் » , என்றேன். அவர் « என்னிடம் விமானமொன்று இருக்கிறது, காட்டில் தான் பதுக்கிவைக்க முடியும், அங்குதான் இருக்கிறது. நாளை இலண்டனுக்குப் போகிறேன், என்னுடன் வர உங்களுக்கு விருப்பமா ? எனக் கேட்டார். இலண்டனில் திரும்பவும் ராணுவ வீரன். பிறகு அங்கிருந்து திரும்பவும் விமானம் பிடித்து அல்ஜீரிய நாட்டிற்கு. அங்குதான் ஜெனரல் தெகோல் (le général de Gaulle) தமது காரை நிறுத்தி என்னிடம் விசாரித்தது. அவர், « பிரமாதம் ! உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ” –எனக்கூறினார். ஒருவேளை, «  என்னை சந்திக்க முடிந்ததே மிக்க மகிழ்ச்சி» என அவர் கூறியிருக்கலாம்., நினைவில்லை. எனது கையைப் பற்றி குலுக்குகிறார். அப்போதைய போர் நிலைமையை இருவருமாகச் சில நிமிடங்கள் பகிர்ந்துகொண்டோம். பின்னர் அவர் காரில் ஏறி சென்றுவிட்டார். பாரீஸில் ஜெனரல் லெகிளெர்க் படையினருக்குமுன்பாக என்னைக் கௌவுரவித்தபோது, திரும்ப அவரைக் காண முடிந்தது. ஆம், ‘படையினருக்கு முன்பாகஎன்றுதான் கூறவேண்டும், அப்படிச்சொல்வதுதான் எங்களுக்கு வழக்கம். லான்ங்க்ரூவில் உற்பத்தியாகிப்பாயும் சேன் நதிக்கரையில் இது நடந்தது. நொர்மாந்தியில்(Normandie) 30 ஜெர்மன் ராணுவ வீரர்களை நான் தனியொருவனாக சிறைபிடித்தேன் என்பதை ஜெனரல் அறிவார். ஆனால் பாரீஸ் நிகழ்ச்சியோடு யுத்தம் முடிந்துவிடவில்ல. திரும்பவும் போரிடவேண்டியிருந்தது. ஒரு நாள் மாலை…..

மீண்டும் கதைக்குள் மூழ்குகிறார். அர்தென் (Ardennes) சம்பவத்தில் பெற்ற 24 செ.மீட்டர் நீளமான வடுவை நினைவுபடுத்திவிட்டுக் அவர் காவியம் முற்றுபெறும். ஆனால் வடுவை பிறருக்குக் காட்டுவதற்கு அவருக்குத் தயக்கம் இருக்கிறது.

இரண்டாம் வகுப்பு ராணுவ வீரனான மோன்ராழைப் பின்பற்றித் தப்பித்த மற்றொரு இரண்டாம்வகுப்பு ராணுவ வீரன் சொகோன் என்று வருகிற இரண்டாவது கதையில், புனைவுத் தன்மைகள் குறைவு. இதில் நூரன்பர்க்கிலிருந்து அல்ஸாஸ் வந்தடைய ஓர் இரவுக்கும் கூடுதலாக அவர்கள் நடக்கவேண்டியுள்ளது. கிராமத்தில் ஒரு வயதானத் தம்பதிகள் உதவிசெய்ய பரணில் சில நாட்கள் பதுங்கி வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டில் பனியையொத்த வெள்ளை வெளேரென்று பெண் எவளுமில்லை. இரவில் நடந்தும், பகலில் உறங்கியும் பிரான்சு நாட்டின் வடக்கிலுள்ள கலெ (Calais) நகரை அடைகிறார்கள். அங்கிருந்து பயணித்து இங்கிலாந்துக்கு வருகிறார்கள். ; மோன்ராழ் இலண்டன் சீமாட்டியிடம் காதலில் விழுகிறான் , பின்னர் இருவரும் பிரிகிறார்கள். மொரான்ழிற்கு தரைப்படையைக்காட்டிலும் விமானப்படைபிரிவில் ஆர்வம் உண்டாகிறது. ராணுவ வீரர் சொகோன் ஆப்ரிக்கா, ஜெர்மனென்று யுத்தத்தில் கலந்துகொண்டபோதிலும், எந்த ஒரு ஜெனரலையும் சந்திப்பதில்லை, எதிரியைச் சிறைபிடித்த செய்தியோ, துப்பாக்கி முனை காயத்தினால் நீளமான வடு நிலைத்துவிட்டக் கதையோ இல்லை. இத்திருத்திய கதை, ரகசியமும், தயக்கமும் கொண்டது. சொந்த ராணுவ வாழ்க்கையின் உண்மையை வெளியுலகிற்குச் சிறிதும் வெளிக்காட்டாதது. சிலசமயங்களில் அவருக்குப் புகழ்சேர்க்கிற விஷயங்களும் அதிலுண்டு, அவ்வாறானவற்றை அலுக்காமற் கூறுவார். அவற்றுடன் கற்பனைக்கேற்ப கூடுதலாக சிறுசிறு தகவல்களைச் சேர்ப்பதுண்டு, உதாரணமாக தேன்நிற தலைமுடிகொண்ட பெண்களின் எண்ணிக்கையும் அவர்களின் காதலும் பன் மடங்கு ஆகும், யுத்தங்கள் காவிய அடையாளம் பெறும், விழுப்புண்களும் இரண்டு அல்லது மூன்றாகக் கூடலாம், விளைவாக கதைசொல்லி மாத்திரமின்றி கதைகேட்பவர்களும் சந்தோஷப்படுவார்கள்.

பிறந்த நாட்டிற்குத் திரும்பிய சேடார் சொகோன், நாடு எப்போதும்போல மாற்றமின்றி இருப்பதைக்கண்டார் . இறப்பும், பிறம்பும் பெரிதாய் இல்லை. இறந்தவர்களில் முக்கியமானவர்களென்று சொல்ல வேண்டுமெனில் அவருடைய தந்தையையும் தாயையும் சொல்லவேண்டும் அவருடைய சகோதரி சேன்லூயியைச்சேர்ந்த மீன்பிடிக்கும் தொழில் செய்த பழைய நண்பர் ஒருவரை மணம் செய்திருந்தாள். அவர்கள் மெங்கேய்(Menguèye) நகரத்தில் வசித்தார்கள். யுத்தம் செய்ய பிரான்சுநாட்டிற்கு புறப்பட்டுபோனபோது அவருடைய சகோதரர்கள் பதின் வயதினர், தற்போது போஸ்என்ற இடத்தில் வசிக்கிறார்கள் ; அவருடைய தகப்பனாரின் பிற மனைவிகளுக்கு அனைவரும் பெண்பிள்ளைகள்.அப்போதெல்லாம் அவர்கள் சின்னஞ்சிறுமிகள். அவர்களுக்கு சேடார் ஓர் அந்நியர். எனவே தனது சகோதரர்களுடன் வசிப்பதுதான் முதல் உத்தேசம்.அவர்களைக் காண இருநூறு கி.மீ. தூரம் பறந்து செல்லவேண்டும்.அங்கு இளைய சகோதரர் நஃபிசட்டூ அவருடைய வருகைக்காகக் காத்திருந்தார்.

அவர் துபாம்பூலில்  தங்க முடிவுசெய்தார், அந்நகரை நேசித்ததோடு, அவருடைய வார்த்தைள் ஜீவிக்கவேண்டுமெனில், அதுதான் சிறந்த இடமென்பது  எடுத்த முடிவு. அவர் தனது முதல் மாமனாரிடம் யுத்தத்தைப் பற்றி சிறிது கூற நேரிட்டது, அவர்தான் மற்றவர்களும் கேட்டால் சந்தோஷப்படுவார்கள் என்றார்அந்த யோசனையை அவர் முன்வைக்காவிட்டால், இவருக்கு கதை சொல்லும் எண்ணம் பிறந்திருக்காதுமுதல் நாள்மாலை கூறியதை அப்படியேசொல்லாமல் மாற்றி மறுநாள் காலை சொல்லத் தொடங்கினார். நிறைய முகங்களுக்கு முன்பாக, இயல்பாக, கதையை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப, அழகுற ஜோடித்துச் சொல்வார், கதைசொல்லும் திறனின் வேகத்திற்கேற்ப சொற்கள் வந்து விழுந்தன. அடுத்தடுத்த நாட்களில் செவி வழிச் செய்தியாக தகவல் பரவ, வந்தவர்கள் திரும்பச்சொல்லுமாறுக் கேட்டுக்கொண்டார்கள் . தொடக்கத்தில் இவராகச் சிலவற்றைச் சேர்க்கவேண்டியிருந்தது, அதன் பின்னர் தானாக வந்தது. கதை கேட்கவந்தவர்களைப் போலவே கதை சொல்லியான அவருக்கும் கிடைக்கும் சந்தோஷத்தைப் புரிந்துகொண்டார். தேன் நிற தலைமயிர் கொண்டபெண்ணொருத்தியைப் பற்றியும், ராணுவத் தளபதியின் விமானம் குறித்தும், சக ராணுவவீரர்களுக்கு முன்பாக தன்னைக் கௌவுரவித்ததைச் சொல்லத் தொடங்கியதும் அந்த மாலைதான்.

கேட்டவர் அனைவரும் மயங்கினார்கள். அதாவது தற்போது கேட்பவர்களைப் போலவே. இறுதிவரை கேட்பவரை ஆர்வம் குறையாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள அவருக்குத் தெரியும். ஒரே கதையை பலமுறை உரைக்க நேர்ந்தாலும் முடிவுமட்டும் ஒன்றல்ல. கதைசொல்லும் நேரத்தின் அளவைப்பொறுத்து கதைசொல்லும் தொனியில் ஏற்ற இறக்கங்களை பிரயோகிப்பார். அவருடைய ஞாபகங்களுக்கு இசைந்து உடல் சிலிர்க்கும், அதுபோன்றதொரு ஒத்திசைவான சிலிர்ப்பை புதிதாய்ச் சேர்க்கும் தகவல்களும் ஏற்படுத்தித் தரும்.

கடந்த அரைநூற்றாண்டாக அவர் கதை பின்னுகிறார். கதை சொல்லிக்குத் தன்னை ஸ்லாபூகூம் என்று அழைக்கப்படவே விருப்பம். பெயரின் நதிமூலத்தை அவருடைய மாமனார் ஒருவரைத் தவிர பிறர் அறியமாட்டார்கள். அவருடன் தப்பிய கூட்டாளியின் நினைவாகச் சூட்டிக்கொண்ட பெயர் அது. அவர் மணம் செய்துகொண்டிருந்த மூன்றுமனைவிகள், நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட அவருடைய ஆறு பிள்ளைகள் ஒருவரும் அறியமாட்டார்கள்.

மொரான்ழ் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அப்பெயருக்கு மரணத்தை அறிவித்து முடித்தாயிற்று. ஒருவேளை தனிமனிதனாகத் தப்பிக்கிறபோது தன்னை ஹீரோவாகச் சித்தரிக்க முடியுமென்ற நம்பிக்கையாக இருக்கலாம். நியாயமான நம்பிக்கை, ஹீரோயிஸத்தை நிச்சயம் அவருக்குச் சம்பாதித்துக் கொடுக்கும், காரணம் வினோதமான வார்த்தைப் புதிர்களினால் புனையப்பட்டதும் அவரால் சாலைகள் நகரம் என்று வர்ணிக்கப்படும் அவருடைய இரண்டாவது புனைவில் இடம்பெறும் நகரத்தின் மர்மத்தைக் களைய அது உதவும்.

(தொடரும்)

நன்றி திண்ணை செப்டம்பர் 25- 2016

மிக அருகில் கடல் – இந்திரன்

 

Indiranபடைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம். கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின்  ‘Beaux arts’ என்ற அழகியல் இவ்விருகூறுகளையும் கருத்தில் கொண்டு இயங்குவது. பிரெஞ்சில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் தமிழில் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல வரிசைகளில் இளம் கவிஞர்கள் நெருக்கிகொண்டு நிற்கிறார்கள். பருவம், சினிமா, இளம்பெண்கள் அல்லது இளம் ஆண்கள், கொஞ்சம் தமிழ் இவைகொடுத்த ஊக்கத்தில் நண்பர்களிடம் காட்ட அவர்களும் பாராட்ட, குறிப்பாக எதிர்பாலின நண்பர்கள் பாராட்டினால் அல்லது சிற்றேடுகள் பக்கத்தை நிரப்ப போட்டுவிவிடுவாதாலேயே  ‘ஜிவ்வென்று’ கவிஞர் நாற்காலிகளில் ஏறி அமர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதிய ஐந்து கவிதைகளுடன் தொகுப்பின் கனத்திற்காக பதினைந்து கவிதைகளை அவசர கதியில் எழுதி பதிப்பாளரின் கல் மனம் கரைந்தால் (?) நூலாக வெளிவந்துவிடுவிறது.  இந்த இளம்வயதினரிடையே சிறந்த கவிஞர்களும் இருக்கலாம், உருவாகலாம், அது அவர்களின் உழைப்பைப் பொருத்தது. இவர்களிடம் கவிதை மனம் இருக்குமெனில் அத்திபூப்பதுபோல கவிதை எழுத உட்காரமாட்டார்கள்,தொடர்ந்து இயங்குவார்கள், தமிழும் காலமும் கலந்துபேசி இவர்களைக் கொண்டாடும் காலம் வரும். இன்றிருக்கும் மூத்த கவிஞர்கள் பலரும் அப்படி உருவானவர்கள்தான் என்பதை, இளம் அசலான கவிஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்- உதாரணத்திற்கு இந்திரன்.

இந்திரன் இனித் தேடவேண்டியதென்று ஒன்றுமில்லை. தமிழுலகம் அறிந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கலை விமர்சகர். இந்த அங்கீகாரம் பரிசுகளாகவும், விருதுகளாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன, இருந்தும் தொடர்ந்து படைப்பிலக்கியத்துறை பல முனைகளிலும் அவரைக் காண்கிறோம். இலக்கிய நண்பர்களோடு தொடர்புவைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையான படைப்பாளிகளைத் தேடி சென்று பாராட்டுகிறார். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு உற்சாகப்படுத்துகிறார். இவைகளெல்லாம் அவரைக் கவிஞராக மட்டுமல்ல நல்ல மனிதரென்ற அடையாளத்தையும் தந்திருக்கின்றன. இந்திரன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பே “மிக அருகில் கடல்”. கவிஞர் இந்திரனின் கண்கள் பெரியவை – பெரியவை என்றால் அசாதாரணப் பெரியவை. நீங்களும் நானும் எட்டாத தூரத்திற்குப் பயணிப்பவை, கடலுக்கு அப்பாலும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் தன்மை கொண்டவை. அதனாற்றான் அவரால் நமது பார்வை பரப்பிற்கு வெளியிற்கிடந்த ஆப்ரிக்க கவிஞர்களைக் கட்டித் தழுவி, வாஞ்சையோடு நமது வாசல்வரை அழைத்து வரமுடிந்தது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்கவானம்’ அபூர்வமான மொபெயர்ப்புத் தொகுப்பு. கவிதைகளை மொழிபெயர்ப்பதென்பது எளிதானதல்ல, என்னால் இயலாதென ஒதுங்கிக்கொண்ட நிலப்பரப்பு. இந்திரனின் விழிகள் அகன்றவை, அவற்றின் பார்வை விஸ்தீரணம் உலகின் விளிம்பையும் உள்ளடக்கியது என்பதற்கு மற்றுமோர் உதாரணம்தான் அண்மையில் வாசித்த ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தொகுப்பு தொகுப்பிற்குள் இத்தலைப்பில் ஏதேனும் கவிதை இருக்கிறதா என்று தேடினேன். அப்படி எதுவும் இல்லை. உள்ள இருபத்தேழு கவிதைகளோடு இத்தலைப்பையும் கவிதையாக எடுத்துக்கொண்டால்  மொத்தம் இருபத்தெட்டுகவிதைகள்.  ஆம் தலைப்பே ஒரு கவிதைதான். ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தலைப்புக்கான காரணத்தை ‘கடலின் பாசை’ என்ற பெயரில் கவிஞர் எழுதிய முன்னுரையும் ‘தீவின் தனிமை’ என்கிற கவிதையில் இடம்பெறும் வரிகளும் தெரிவிக்கின்றன.mika arukil kadal

“கடலுக்கு மிக அருகில்தான் பிறந்தேன்.. புதுச்சேரியில் எனது வீட்டில் நான் சிறுவனாக இருந்தபோது நடு நிசியில் கேட்கும் கடல் புரளும் ஓசையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… என்னுடைய பெரும்பாலான கனவுகள் என்னிடம் யாசித்துப் பெற்றவைதான் .. என் உடம்பின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் எலும்புகள் கடல் உப்புகொண்டுதான் உருவாக்கப்படவையோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம்கூட வருவதுண்டு.. கடலை நான் அறிவேன். அதன் பாஷை எனக்குப் புரியும்…” (கடலின் பாசை)

“கடலுக்கு அப்பால்

அடிவானத்தில் பதுங்கி நிற்கும் தொலை தூர தீவுகளின்

பெயர்களை

நான் ஏற்கனவே அறிந்திருப்பதாக

எனக்குள் ஒரு பிரம்மை தோன்றுகிறது”.. (தீவின் தனிமை -பக்.54)

ஆக அவரோடு புறவெளியிலும் அகவெளியிலும் நெருக்கமான கடலை கவிதை ஆக்கியதில், தொகுப்பிற்கான பெயராக தேர்வுசெய்ததில் கவிஞரின் தருக்க நியாயங்களுக்கும் பங்கிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் இலைமறைகாயாக ஓர் ‘myth’ம் ‘mysteryம் ‘ கலந்திருப்பதை அப்பெயர் நமக்குத் தெரிவிக்கிறது. கவிஞரோடு அவர் அவதானித்தக் கடலில் நாமும் மூழ்கித் தேடி அலைகின்றவர்களாக இருக்கிறோம், தலைப்புப் போதாதென்று நூலட்டையில் இடம்பெற்றுள கல்லில் செதுக்கிய மனிதத்தலையும் அதன் பின்னே விரிந்துக் கிடக்கும் கடலும் இயற்கையோடிணைந்த மனித குல உயிர்வாழ்க்கையின் மர்மமுடிச்சுகளை அவிழ்பவையாக உள்ளன. அம்முகத்தைக் கண்டதாலோ என்னவோ ஓர் அதிரடி வாசிப்பை (incursion?) முதற்கட்டமாகவும் ஆழ்ந்த வாசிப்பை இரண்டாம் கட்டத்திலும் நடத்தி முடித்து உணர்ச்சி வியர்வையில் தெப்பமாக நனைத்து சிலுசிலுவென்று கவிச்சை மணத்துடன் “உப்பங்காற்றிர்க்காக” ஏங்குகிறது மனம், கால் புதைய வம்பா மணலில் சென்னை மெரீனாவில் ஆரம்பித்து புதுச்சேரிவரை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பருவங்களில் நடந்த நினைவுகளில் கழிகின்றன நொடிகள்.

இக்கவிதைத் தொகுப்பை கவிஞர் ஏன் எழுதினார்? எதற்காக எழுதினார்? என்ற கேள்விகளுக்கு இள்ம்வயதிலிருந்தே கடலோடு பின்னிப்பிணைந்த அவரது நெஞ்சத்தை குவாதுலுப் தீவும் அத்தீவின் மக்களும் புரிந்துகொண்டிருக்கவேண்டும் அத்தீவுகளுக்கு சென்றதன் பலனாக மீண்டும் கடல் அவரை உணர்ச்சி சூராவளியில் இறக்கிவிட்டிருக்கிறது, தப்புவதற்கு கவிஞரிடம் கவிதைக் கட்டுமரங்கள் இருக்கின்றனவென்று அவரை அறிந்த கடலுக்குத் தெரியாதா என்ன?

“ஆர்ப்பரிக்கிற அலைகடலில்

தொலைந்து போகிறபோதெல்லாம்

உன் மூச்சுக்காற்றையே ஒரு மிதவையாய்ப் பற்றிகொண்டு

சளைக்காமல் நீந்துகிறேன்” –(பிம்பம் பிரதிபிம்பம் -பக்கம் 36)

எனக் கவிஞரும் அதனை உறுதி படுத்துகிறார். இக்கவிதைகள் என்னசொல்லுகின்றன? மொழியியலாளனாகவோ, ஒரு திறனாய்வாளனாகவோ இக்கவிதையை நெருங்கவில்லை கொஞ்சம் இலக்கிய பசியுடனிருக்கிற வாசகனாக நெருங்கியிருக்கிறேன்.

‘பறவையும் குழந்தையும்’ சிறந்த படிமத்தைக் கண்முன்நிறுத்துகிறது. கவிதையின் பங்குதாரர்களாக ஒற்றை சிறகு, மற்றொன்று குழந்தை. உயிர்வாழ்க்கையின் முதலும் – முடிவும். உதிர்ந்த சிறகுபோலதான மனித வாழ்க்கை போகுமிடந்தோறும் ஒன்றை உதிர்த்து, நிரந்தரமாக ஓரிடத்தில் இருக்க சாத்தியமற்று, வாழ்க்கைத் தருணங்களை ஜெபமாலைபோல விரலால் தள்ளியபடி வாழ்ந்தாக நம்பிக்கொண்டிருந்தாலும் பிரக்ஞையின்றி முடிவை நோக்கி வெளியில் மேலே மேலே என்று பறந்து அலுத்து ஒரு நாள் ஒட்டுமொத்த இறகுகளையும் மண்ணுக்குள் புதைந்துவிடும். உதிராத இறகு அதற்குரிய இடத்தில் இருந்த கணத்தில் இறகின் உடலுக்கு என்ன செய்தாய் என்ற கேள்வியை கேட்க ஒரு குழந்தைக்குத்தான் தகுதரம் இருப்பதாகக் கவிஞர் தெரிவிக்கிறார். தானியமும் தண்ணீரும் வைக்கச்சொல்லும் குழந்தையின் பார்வைக்கு அங்கு சிறகை மறைத்து பறவையின் மொத்த உருவமும் தெரியலாம், அது சிறகடித்து துள்ளுவதும், கெத்தி கெத்தி உட்காருவதும், அதன் இரைதேடும் விழிகளும், பசித்த கீச் கீச்சும் குழந்தையின் பார்வைக்கு, செவிக்கு கேட்கிறது. குழந்தையின் அறிவுரைக்கேட்டு இறகுக்கு மனிதன் ஏதேனும் செய்தானா என்றால் இல்லை.  இரவெல்லாம் குற்ற உணர்வு உறுத்தியிருக்கவேண்டும், மறுநாள் மீண்டும் கதவைதிறந்து பார்க்கிறான். தற்போதுகூட இறகுக்குத் தண்ணீரும் தானியமும் வைப்பதற்காகத் திறந்தவனல்ல, எங்கே இன்னமும் பால்கனியில் கிடந்து, அவன் பால்கனி வருகையை நெருடலாக்கிவிடுமோ என்ற அச்சத்தில். இறகுகள் கூட தமது காலடிகளுக்குத் தடைகல்லாக இருக்கக்கூடாதென்பதுதான் நம்மிற் பலரின் வாழ்க்கைப் பயணம். ஆனால் நம்முடைய சிறகுகளும் ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன என்பதை உண்மையில் மறந்து போகிறோம்.

‘கரீபியன் சமையல்’ என்ற கவிதைகூட வாழ்க்கையை பற்றிய கேள்வியுடனேயே முடிகிறது

“உலகெங்கிலும்

வாழ்க்கை ஓர் அசைவ உணவு

வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா

கத்திமுள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா?

எதுவும் செய்யலாம்.

அல்லது

சாப்பாடு மேசைக்குக் கீழே இருந்துகொண்டு

மெலிதாய் குரல்கொடுக்கும்

செல்லப்பூனைக்குக்கூட பரிமாறி விடலாம்

………………………..

………………………….;

என்ன செய்யப்போகிறோம் இப்போது? ”

என சகமனிதர்களைப் பார்த்து கவிஞர் வைக்கும் கேள்விக்கான பதில் நாமறிந்ததுதான். பரிமாறப்படுபவை பெரும்பாலான நேரங்களில் சமைத்தவர் தேர்விலும் கைப்பக்குவத்தையும் நம்பியுள்ளன. நமக்கான பக்குவங்களைக் கணக்கிற்கொண்டோ நமது நாவிற்கு எவை சுவை தரும் என்றறிந்தோ சமைப்பவர்களும் படைப்பவர்களும் வினையாற்றுவதில்லை. எங்கே எது படைக்கப்படுகிறதோ அதை உண்ணப் பழகிக்கொள்ளுகிறபோது, உணவின் ருசியில் ஓர் ஒத்திசைவை கண்டடைகிறபோது எதுவும் ருசிக்கும். ஆனால்  நல்ல படையலைக்கூட தோற்றத்தைக்கண்டு முகம் சுளிக்கிறவர்களாக இருக்கிறோம். ஸ்டெர்மெர் (Stirner) என்ற ஜெர்மன் தத்துவவாதிச் சொல்வதைப்போல “அப்பத்தைத் தின்று செரித்தால் கடவுளடனான கணக்கு முடிந்தது’. இருபத்தோற்றாம் நூற்றாண்டு வாழ்க்கை இப்படித்தான் தின்று செரிக்கப்படுகிறது.

மழைக்காடும் ஓவியனும் இத்தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்த கவிதை. ஒவ்வொரு வரியும் அபாரம். அபூர்வமான கற்பனையும், அதனை மொழிக்குள் கொண்டுவரும் இலாவகமும் இருந்தாலொழிய இதைப்படைத்திருக்க முடியாது.

“மழைக்காடு வெட்கப்பட்டது

ஓவியனின் முன்னால் நிர்வாணமாக நிற்க

ஈரத்தில் ஊறிய இருள் துணியை

தன் தூரிகையால் போர்த்தினான் ஓவியன்”

இங்கே கவிஞனும் கலைஞனும் போட்டிப்போட்டுக்கொண்டு கவிதையைத் தீட்டியிருக்கிறார்கள்.  கவிஞன் எழுதியது எது கலைஞன் படைத்தது எது குழம்பித் தவிக்கிறோம். இக்கவிதையை இந்திரனன்றி வேறொருவர் அழகியலின் அத்தனை நேர்ந்த்திகளையும் ஒழுங்குகளையும் குழைத்து எழுத்தில் கொண்டுவர இயலாது.

கவிதைத் தொனி:

இந்திரன் கவிதைகளில் நான் பிரம்மிக்கும் விஷயம், அவர் கவிதைகளூடாக ஒலிக்கிற கம்பீரமான கவிஞனின் குரல், வீரியம் நிறைந்த ஆண்மையின் குரல்.

“ஊசிவால் குருவி

…….

என்னைப்பார்த்து கேட்டது

நீ எத்தனை கடல்தாண்டிவந்தாய்?

……….

“அடர்ந்து வளர்ந்த மரங்களின் கூட்டத்திலிருந்து

எனது வேப்ப மரத்தின் தமிழ்க்குரல்கேட்டது:

“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” (- வரிப்பூனை பக்கம்-20)

என்கிறபோதும்; கருப்பு அழகியில் “யார்பிம்பம்? யார் பிரதி பிம்பம்” எனக்குழம்பும் போதும்;  தேர்ந்தெடுப்புக்கவிதையில் “பாடும் பறவை ஏன் பாடுவதைத் தேர்ந்ந்தெடுக்கவில்லை” என புதிருக்கு விடைகாண முற்படுகிறபோதும் ஒலிக்கிற கவிஞரின் குரல்கள் முகத்தில் அறைவதுபோல இருக்கின்றன. போற்றியும், புகழ்ந்து பாடியும் வயிற்றைக் கழுவிய யுகத்தில் நாமில்லை. சுந்ததிரம் வார்த்தையில் ஜனித்தால் போதாது கவிதையின் நரம்புகளும் புடைத்தெழவேண்டும், எமெ செசேரும், செங்கோரும் முன்வைத்தது  “Négritude” என்ற பெயரில் இந்த ஆண்மையைத்தான்.

சொல்வதற்கு நிறையக் கவிதைகள் இருக்கின்றன. ‘வரிப்பூனை’,  கடல் ஆமை’, கதவு’ உடன் பிறப்பு’, ‘பார்வை அற்றவர்களுக்கான அருவி’, ‘பூங்கொத்துகள்’ ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. எல்லாவற்றையும் இங்கே எழுதுவது அறமாகாது. கவிதைகளெங்கும் உவமை, உவமேயங்கள் உருவகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ‘பால்கனிபறவை, வெயில் புரளும் காலை நேரம்’, மழைக்காடு, இருள்துணி , நிழல் சிற்பங்கள், காற்று வீதிகள்…கடைசியாய் ஒரு முறை இந்த வரிகளையும் குறிப்ப்டாமல் இக்கட்டுரையை முடிக்க மனமில்லை.

“தயக்கங்களுக்கிடையே சிந்திய

உன் ஒவ்வொரு வார்த்தையும்

தொலைபேசி கம்பிகளில் மழைநீர்க் குமிழிகளாத் தொங்கி

……………………………..;”

ஆனால் அண்மைக்காலத்தில் நான் படித்தக் கவிதைத் தொகுப்புகளில் மிகச்சிறந்ததொரு கவிதைத் தொகுப்பு.

நன்றி: திண்ணை  4 sep.2016

————————————————————————–

மிக அருகில் கடல்

கொதுலூப் தீவில் எழுதிய கவிதைகள்

ஆசிரியர் இந்திரன்

விலை 70ரூ

——————–

யாளி பதிவு வெளியீடு

எண் 8/17 கார்ப்பரேஷன் காலனி

ஆற்காடு சாலை

கோடம்பாக்கம் சென்னை -24

தொலைபேசி 91-44 -24721443

மின்னஞ்சல் indran48@gmail.com

 

 

 

 

உயிரி, உயிரிரியாக இருக்க காரணமென்று ஒன்றிருக்கிறதா ?

வணக்கத்திற்குரிய பஞ்சு, இந்திரன் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

 

லெ கஃபே -ஃபிலோ, ஸ்ட்ராஸ்பூர் ல் விவாதத்திற்குரிய தலைப்பு l’être (Being) ம் l’existence ம் ஒன்றா வெவ்வேறா என்பது பற்றியதல்ல, எனினும் கேள்விக்கானப் பதிலைத் தேடுமுன் வினைமுதலான உயிரி என்றால் என்ன என்று புரிந்துகொள்வது நலம், அதுபோலவே அதனை தமிழில் அல்லது மேற்குலக மெய்யியலில் ‘இருத்தல்’ எனக் கையாளுகிறபோது அதனை ‘உயிரி’ என்று  அழைக்கிற காரணத்தையும் விளக்கியாகவேண்டும்.

தலைப்பிலுள்ள்ள கேள்வியை மேற்குலகு பார்வையின்படி « இருத்தல், இருத்தலாக இருக்க காரணமிருக்கிறதா ? »எனத் தற்காலிகமாக  வைத்துக்கொள்வோம் .

இருத்தல் என்றால் என்ன ? இருத்தலை உறுதிசெய்கிற காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு விடையென்ன ? இவ்விடையைப் பெறுதலேகூட இருத்தல், இருத்தலாக இருப்பதற்குரிய காரணத் தேடல்தான். மெய்யியல் சிந்தனையாளர்கள் பலரும் ‘இருத்தல்’ (l’être)  என்ற சொல்லை ‘எதுவாக இருக்கிறதோ அது’ (ce qui est)  என்கிறார்கள். அந்த ‘அது’ என்பது, உண்மை நிலை(la réalité)அல்லது இயற்கை நிலை. மீயியல் (la métaphysique)  சிந்தனை வாதிகள் ‘இருத்தலை’ அவன், அவள், அது என மூன்றாகவும் கண்டார்கள்.‘எதுவாகவோ இருக்கிறதோ அது’  எதோ ஒரு வகையில் தனது ‘இருத்தலை’ உறுதி செய்ய முனைகிறது, என்பது தெக்கார்த், காண்ட், அரிஸ்டாடில் போன்றவர்களின் கருத்து. L’existence என்ற சொல்லும் ஒன்றின் உண்மைநிலை அல்லது இயல்நிலைபற்றித்தான் பேசுகிறது. ஆனால் இருத்தலியல் (l’existentialisme) சார்த்ரு, அதனை மனிதரை மையப்படுத்தியதொரு சிந்தனையாக முன்வைக்கிறார் அவருக்கு அது l’être(Being) அல்ல l’être humain (human being) – இருத்தல் அல்ல மனித இருத்தல் சார்ந்த விடயம் : இருத்தலை ‘தன்னில்’ (l’en-soi), ‘தனக்காக’ (pour-soi) என்று அவர் வரையறை செய்கிறார். இதில் ‘l’en-soi’  என்பது ஒன்றின் இயல்பான பண்பு (உண்மை நிலை). ‘pour-soi’ என்பது தன்னை உணர்வது , தன்னை உணர்ந்த தன் பலனாக அதன் தேவைக்குழைப்பது. மேற்கண்டை இரண்டின் கூட்டுப்பொருள்தான் ‘சாரம்’ (l’essence) ; இச்சாரம் தான்  சார்த்த்ருவைப் பொறுத்தவரை  ஓர் இருத்தலின் தனித்துவம்,, அதன் அடையாளம்.

 

இருத்தல் ஓர் உயிரி ஏன் ?

 

பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலுள்ளதுபோல  உயிரியைக் குறிக்க espèce என்ற சொல் உள்ளது, இருந்தும் l’être ஐ உயிரி என்றழைக்க சில காரணங்கள் இருக்கின்றன.

அ.   மீயியல்வாதிகள் இருத்தலை ஒரு சடப்பொருளாக உருவகப்படுத்துகிறார்கள்.  கீழ்த்திசையின்  பார்வையில்  எதுவும் உயிர்தான், உயிர் சார்ந்ததுதான் மெய், அல்லது உண்மைநிலை., . சார்த்ருவின் ‘l’en-soi’ ஒரு சடப்பொருளுக்கும் பொருந்தும், என்றாலும்  ‘pour-soi’ என்று வருகிறபோது  ‘தனக்காக’  அது இயங்கும்போது உயிரியாகவேத் தன்னை முன்நிறுத்துகிறது.

 

ஆ.  ‘இருத்தலை’  மேற்கத்திய மெய்யியல் உலகு ஒரு பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு, தங்கள் சிந்தனையை முன்வைக்கிறது. ஆனால் அவர்களில் சார்த்த்ரு ‘இருத்தல்’ வினை ஆற்றக்கூடியதென்கிறார் ; L’être(to be)  என்றாலுங்கூட வினையின்றிப் பெயர்ச்சொல் இல்லை. வினை  என்பது இயக்கம்மெனில், அவ்வினை உயிரிக்குமட்டுமே சாத்தியம்

 

இ. இருத்தல் என்பதை நிகழ்காலத்திற்குரியது  அது மரணித்தது அல்ல அவ்வகையிலும் அதொரு உயிரி. இருத்தல் என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலானது, இந்த இடைபட்டவெளியில் அது எங்கே இருந்தாலும் அதொரு உயிரியாக மட்டுமே இருக்கமுடியும்.

 

ஈ. பௌத்தம் சார்த்துருவின் தன்னை உணர்தலை விழிப்பு என்கிறது, விழிப்பு உயிர்ப்புள்ள ஒன்றிர்க்கே சாத்தியம்.

 

உ. மார்க்ஸ் சிந்தனையின் படி இயற்கை மனிதர் உழைப்பிற்குக் காத்திருக்கிறது, மனிதர்களின் உழைப்பால் பலனாகிறது, சுயமாக எதையும் செய்யமுடியாதது, அதன் பலவீனமாகவே இருக்கட்டும், ஆனால் மனினும் சுயமாக முளைத்தவனல்ல, அதே நிலம் உட்பட அவனது சார்புவாழ்க்கை தவிர்க்கமுடியாதது. ஆகப்பொதுவில் மாற்றம், வளர்ச்சி, ஆக்கம் பரிணாமம் அனைத்துமே அது பொருளொன்றில் நிகழ்ந்தாலும்கூட, உயிரொன்றின் படிநிலைதான்.

 

ஆக இந்த இருத்தலை ஓர் உயிரி என்று அணுகுகிறபோது.ஓர் இருத்த்ல் இருத்தலாக இருப்பதற்குகுரிய காரணத்தைத் தெரிந்துகொள்வது எளிது.

 

இருத்தல் செயல்படாமல் இருக்கமுடியாது, அச்செயலில் அதன் அடையாளத்தேடல் இருக்கிறது,

 

இக்கொள்கைக்கெல்லாம் உண்மைநிலைதான் அடிப்படை நியதியை வகுக்கிறதெனில் எதுவாக இருக்கிறதோ அது, அத மரணிக்கும்வரை எதோ ஒரு வகையில் இயங்க வேண்டுமென்பதும் அதற்குரிய நியதியே, அவ்வியக்கத்திற்காக இருத்தல் இருந்தாக வேண்டும்.

 

இருத்தல் மரமோ, செடியோ, கொடியோ மனிதனோ விலங்கோ எதுவென்றாலும் பல் சக்கரத்தின் ஒரு பல்போல இப்பிரபஞ்சத்தின், ஒரு சமூக எந்திரத்தின் அங்கம். அது சுழல பிரக்ஞையின்றியோ பிரக்ஞையுடனோ இயங்க ‘இருத்தல்’ ‘இருத்தலாக’ இருப்பது அவசியமாகிறது சார்த்ருவின் தன்னில் மற்றும் தனக்காக வென்று இயங்குகிறபோதும் அவனுடையா தனக்காக என்ற சொல்லில் பிறரும் இருக்கிறார்கள், அது குடும்பம், உறவு, சகதொழிலாளர்கள் எனக் கண்ணிகளாக நீளும் சங்கிலி. அக்கண்ணியில் அவனுமொரு கண்ணி என்பதாலும் இருத்தல் நியாயப் படுத்தப்படுகிறது.

———————————————-

 

 

 

 

 

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் கா. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  – புதினத்தை முன்வைத்து 

panchuபேராசிரியர்  க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம். IMG_20160819_181249

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல வென்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு  ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

அக்கா (நாவல்)
ஆசிரியர் : கா. பஞ்சாங்கம்
வெளியீடு:
அகரம்
மனை என்1 நிர்மலா நகர்
தஞ்சாவூர் 613007
தமிழ்நாடு

நன்றி : திண்ணை 21 -08-2016

—————————————

 

 

 

பெனுவா க்ரூல்ட்

benoit groultஎழுத்தாளர், இதழியல் ஆசிரியர் இருபதாம் நூற்றாண்டின் மூத்த பெண்ணியல்வாதி யென அடையாளம்பெற்றவர் என்பதோடு, பிரான்சு நாட்டில் பெண்களுக்குரிய பல உரிமைகளை மீட்டெடுக்க களத்தில் இறங்கிப் போராடியவர், நேற்று இறந்துவிட்டார்.

அவருடைய Ainsi soit -elle (அப்படியே ஆகுக, ஆமென் என்ற பிரெஞ்சுஸ்லோகத்திற்குரிய  Ainsi soit-il, ல் உள்ள  ஆண் பால் சொல்லான il ஐ நீக்கிவிட்டு  ‘elle’ ஐ பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்க ) முக்கியமானதொரு கட்டுரைத் தொகுப்பு அதிலிருந்து……

“பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக அவளது விதிப்படி ஆகட்டும்வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரெனநினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக்கொள்ளுமென்று எவரும் நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

 

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலைபேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு மகப்பேறு கொள்கைஅடிப்படையில் ஒரு சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் பெத்தேன்‘(Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

 

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3) பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென சட்டம் கொண்டுவந்திருந்தும், பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால் அதிர்ச்சிதருகிறது.

 தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த  இரண்டாம் பாலினம் (Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு ஜீவிகளுடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் சிமோன் தெ பொவாருக்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர் கையாண்டவிதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில் நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் சிமோன்வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில்  லிட்ரேலுடைய‘(Maximilien Paul Emile Littre) அகரமுதலியில்  பெண்ணியம்என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும் வரையறையைத் தாண்டிவிட்டதெனக்குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட பெண் விடுதலைசிந்தனையும், எழுப்பிய ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும், ‘பெண்ணென்ற  ஓர் இரண்டாமினத்தில்சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge) பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert), மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம் செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்•ப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

 யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் – பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.

 உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். பண்டை வழக்குகள்நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

 இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்; காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு. நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

 புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யபட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்ததுஎன நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1792ம் ஆண்டில் ஒலிம்ப் தெ கூர்ழ்‘(Olympe De Gourge) உரத்து குரல்கொடுத்ததைபோல: ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது‘,  அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால் அவர் சிரம் வெட்டபட்டது.

 அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த பொவாருடைய‘(Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர். உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று‘(La plus massive survivance de l’esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.

 பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு போகிறது.  அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை, எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது,’இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.சட்டென்று அவளுக்கு ஓரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

 மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டாண்டுகள் கழித்து அது கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய்  முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென சட்டம் இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.

 அவள்’(Elle) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர், மார்கெரித் துராஸ், பிரான்சுவாஸ் தோபோன், எவ்லின் சுல்லெரோ, பெனுவாத் மற்றும் •ப்ளோரா க்ரூல்ட், மொனிக் விட்டிக், சிமொன் தெ பொவார், லூயீஸ் வைஸ், அர்லெத் லகிய்யே, ழிஸேல் அலிமி, டெல்பின் செரிக், லிலியானா கவான்னி, மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் மகளிர் ஆண்டாகஅறிவித்தது. அன்னையர் தினம்என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. ஷந்தால் ஷவா•ப் பெண்ணைப்பற்றியும், ‘வீழ்ந்த பெண்கள்என்று எரென் பிஸ்ஸேவுல், ‘சூதக இரத்தம்என்று மரி கர்டினல் என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான அவள் விதிப்படி ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.

 

இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். பெண் விடுதலை இயக்கம்இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது, பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன. ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O)என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர். வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

 

இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென சொல்லிவருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்‘(DEUXIEME SEX) மிகப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்லஎன்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

——————————————————–

**.  1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.

 

  1. மே -ஜூன் –1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது, ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

 

  1. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)

 

3.. REGIME DE VICHY(1940 – 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு பெத்தேன்‘(Petain)என்ற ராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிருவாகம்

 

  1. Charle DE GAULLE (1890-1970) –இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

 

  1. Mouvement de liberation des femmes –பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.

———————————————————————————————

 

மொழிவது சுகம் ஜூன் 20 -62016

பிரான்சுநாட்டு  உயர்நிலைப்பள்ளிப்பொதுத் தேர்வும் த த்துவமும்

பிரெஞ்சுக் கல்விமுறை இந்தியாவினும் பார்க்க சற்றுக் கடுமையானதென்பது , எனதுக் கருத்து. இக்கல்விமுறைகுறித்து  பிரான்சு  நாடு பற்றிய இரண்டாவது தொடரை ஆரம்பிக்கும் பொழுது விரிவாக எழுத ஆசை. இங்கே உயர்நிலைப்பளி என்பட்து(Lycée ). . சிறப்புப் பாடமாக எதை எடுத்திருந்தாலும் , மொழிப்பாடத்தைப் போல  தத்துவமும்  கட்டாயம். பள்ளி இறுதிவகுப்பு மாணவர்கள்  பக்கலோரெயா (Baccalauréat) என்ற பொது த் தேவுக்கு தயாராகிறவர்கள்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பின் முடிவில்,  வருகிற தேர்வுக்கு  ஈடானது. இதனைச் சுருக்கமாக Bac  என குறிப்பிடுவதுண்டு. கடந்த வாரம் நடந்து முடிந்த  தத்துவத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :

1‘Bac’ இலக்கிய பிரிவினருக்கு

அ.       நமது  அறநெறி நம்பிக்கைகள், அனுபவத்தின் அடிப்படையில் உருவானவையா ?

– « Nos convictions morales sont-elles fondées sur l’expérience »

ஆ. ஆசை  இயல்பிலேயே அளவில்லாததா ?

– « Le désir est-il par nature illimité ? »

2. ‘Bac’ பொருளியல் மற்றும் சமூகவியல்

அ  ஆசைகள் பற்றிய தெளிவு எல்லாநேரங்களிலும் நம்மிடத்தில் உண்டா ?

–       « Savons-nous toujours, ce que nous désirons ? »

ஆ. வரலாற்றை அறிவதால் கிடைக்கும் நன்மை என்ன ?

– « Pourquoi avons-nous intérêt à étudier l’histoire ? »

3 .  Bac அறிவியல்

அ. குறைவான வேலை என்பதற்கு நன்றாக வாழ்வதென்று பொருளா ?

– « Travaillons moins, est-ce vivre mieux ? »

ஆ. ஒன்றைப்பற்றிய அறிதலுக்கு நிரூபணம்  அல்லது காரண காரியம் விளக்கம்

அவசியமா ?

–   « Faut-il démontrer, pour savoir ? »

  1.    Bac தொழில் நுட்பம்

அ.  சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல்  மட்டுமே நேர்மையாகுமா ?

– « Pour être juste, suffit-il d’obéir aux lois ? »

ஆ.  நம்பிக்கைகளை எப்பொழுதுமே நம்மால் நியாயப்படுத்த முடிகிறதா ?

– « Pouvons-nous toujours justifier nos croyances ?

ஒவ்வொரு தலைப்பைக் குறித்தும் எனக்குப் பட்ட தை எழுதலாமென நினைக்கிறேன், நீங்களும் உங்கள் கருத்தை நேரமிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

———————————

மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு

அகந்தை அல்லது செருக்கு

நான் இருக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரில் இரண்டு மெய்யியல் விவாத அமைப்புகள் உள்ளன ஒன்று le Café Philo மற்றது   Espace Culturel des Bateliers. முன்னதில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும், அடுத்ததில் மாதந்தோறும் நிகழ்வுகள் உண்டு. முதல் அமைப்பு கட்டணமின்றி செயல்படுவது, அடுத்தது நுழைவுக்கட்டணத்துடன் நடைபெறுவது. அதிக பட்சமாக இருபதுபேர் கூடுவார்கள். மிகவும் பயனுள்ள வகையில் மெய்யியலாளர்கள், மெய்யியல் கருத்தியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 70களில் சென்னையில் படித்தபோது, Forum of free enterprise என்ற அமைப்பு இருந்தது, அதில் உறுப்பினனாக இருந்தேன் அப்போதெல்லாம் என்.ஏ பல்கிவாலா சொற்பொழிவு பிரசித்தம், அந்த நோய் பிரான்சிலும் எந்த வேப்பிலைக்கும் இறங்காமல் இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளுக்கும் என்றில்லாவிட்டாலும் முடிந்தவரை கலந்துகொள்கிறேன் . கடந்த புதன்கிழமை le Café Philo வில் l’orgueil அதாவது செருக்கு, என்ற சொல் கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அடுத்த கிழமைக்குரிய தலைப்பினை முன்னமேயே தீர்மானித்துவிடுவார்கள். உரையாற்றவிரும்பும் நபர் எதுபற்றிய பொருளில் உரையாற்றவிரும்புகிறார் என்பதைத் தெரிவிக்கவேண்டும், ஒன்றுக்குமேற்பட்ட நண்பர்கள் வெவ்வேறு கருப்பொருளை முன்மொழிகிறபோது, அமர்வில் கலந்துகொள்ளும் நண்பர்களின் வாக்குகள் அடிப்படையில் விவாதத் தலைப்பை தேர்வு செய்வார்கள்.

இனி அகந்தைக்கு வருகிறேன். நமது புராணக்கதைகளில் அசுரர்களையெல்லாம் அகந்தையின் வடிவங்களாக முன் நிறுத்துவார்கள். இதிகாசத்திலும் மகா பாரதத்தில் துரியோதனன் இராமாயணத்தில் இராவணன் என அகந்தைக்கு உதாரணங்களைகாட்டுகிறோம். மனிதவாழ்க்கையை நெறிப்படுத்த இவ்வாறான கதைகளைக்கொண்டு உத்தமகுணங்களுக்கென்று சில மனிதர்களையும், தீயவற்றிற்கென சிலரையும் உருவகப்படுத்தி மனிதரினத்தை அடிமைப்படுத்த சமய எதேச்சாதிகாரம் பயன்படுத்திக்கொண்ட உத்திகள் இவை. ஆதாமையும் ஏவாளையும் தடைசெய்யபட்ட ஆப்பிளை உண்டு கடவுளுக்கு எதிராக அவர்களைச் சாத்தான் திசைதிருப்பி அகந்தையிற் தள்ளிய பாவக் கதை கிறித்துவத்தில் உண்டு., இந்து மதத்திலும் சபிக்கப்பட்டு பூலோகம் வந்த கதைகள் நிறைய(பூலோகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் ?), கிரேக்க இதிகாசத்திலும் இதுபோன்ற கதைகள் இருக்கின்றன. அகந்தை என்றதும், தற்புகழ்ச்சி, தற்பெருமை, மமதை, இறுமாப்பு, இனம், சாதி, நிறம், கல்வி, பதவி, பணம் தரும் அடையாளத்தினால் « தான் எனும் எண்ணம் » இப்படி நினைவுக்கும் வருகிற அனைத்துமே அகந்தையின் வடிவங்கள் என்கிறார்கள். அகந்தை என்றால் என்ன ? தம்மிடம் இல்லாத உயர்வை இருப்பதாக நினைத்து ஒழுகினால் அகந்தை, அல்லது தான் வெறுக்கின்ற ஒருவரைக்காட்டிலும் தனக்குக் கூடுதக் தகுதிகள் இருப்பதாக நினைத்தல். ஆனால் கர்வம் வேறு. பெருமிதத்தின் எல்லையை மீறினால் அகந்தை. ஒரு தமிழ் நடிகன் சூப்பர், சுப்ரீம், தளபதி, தல என்கிற கூட்டத்திடை தன்னை உலக நாயகனாக முன் நிறுத்திக் கர்வப்பட காரணங்கள் இருக்கலாம். அது ஹைதராபாத், திருவந்தபுரத்திலும்ங்கூட செல்லுபடி ஆகலாம், ஆனால் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும்ங்கூட தன்னை உலக நாயகன் என்று நினைப்பது, கேலிக்கூத்து, அகந்தைக்கு உதாரணம்.

« அகந்தையிடமிருக்கும் நல்ல விஷயம், பொறாமையைக் அது கட்டிக்காக்கிறது. ( «L’orgueil a cela de bon qu’il préserve de l’envie», de Victor Hugo) » என விக்தொர் யுகோவின் கூற்றுச் சுட்டிக் காட்டப்பட்ட து. « குற்றங்கள் அனைத்தையும் ஊட்டிவளர்க்கிற, தாயாகவும், குற்றங்களுக்கு அரசியாகவும் இருப்பது அகந்தை  » ( «La mère nourricière et la reine de tous les vices», de Saint Grégoire le Grand) என ஒரு  பிரெஞ்சு சமயகுரு கூறியிருக்கிறார் என்றார்கள். ஆத்திச்சூடி « உடையது விளம்பேல் » என்கிறது. அகந்தை இடத்தில் பணிவு வேண்டும் எனகிறது தமிழ் மரபுமட்டுமல்ல உலகமெங்கும் அறனெறிகள் பணிவை வற்புறுத்துகின்றன. அதேவேளை, சார்த்ரு உட்பட பல மெய்யியலாளர்கள் அகந்தைக்கு வக்காலத்து வாங்கியதையும், அகந்தைக்கு ஆதரவாகக் பேசியவர் நினைவூட்டினார். எனக்கும் வெபெர் என்ற அந்த நண்பர் கோடிட்டுக் காட்டிய சார்த்ருவின் இவ்வாக்கியம் பிடித்திருந்தது : « Cet orgueil, en fait, n’est pas autre chose que la fierté d’avoir une conscience absolue en face du monde » அதாவது «  இச்செருக்கு உண்மையில், உலகிற்கு முன்பாக, என்வசமிருக்கும் ஒரு முழுமையான  விழிப்புணர்வைக்குறித்த பெருமிதமன்றி வேறொன்றுமல்ல »  அந்நண்பர் ஃபூக்கோ வின் வாக்கியத்தையும்  நினைவூட்டினார் « செருக்கு என்பது, தன்னைக்குறித்த கவலையில் உருவாவது(l’orgueil est une transformation du souci de soi)  », அகந்தைகொள்வது நியாயமற்றதாக இருக்கலாம், ஆனால் கர்வப்படுவதில் நியாயமிருக்கிறது.  எனவேதான்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

என்ற குறளுடன் முழுமையாக உடன்பட எனக்கு விருப்பமில்லை. நாம் கர்வப்பட அவசியம் இருக்கிறது. தவிரக் கர்வப் படாதவர்கள் யார் ? எனது புத்தகம், எனக்குக் கிடைத்த பரிசு, ரஜனியுடன் எடுத்துக்கொண்ட படம், கலைஞரும் நானும் எனச் சொல்லிக்கொள்வதனைத்தும் கர்வம்தான், அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. செருக்கு என்பது நமது இருளைமறைத்து, ஒளியைமட்டும் காட்டும் முயற்சி. பெருமைகள் மட்டுமே என்னிடம் உள்ளன, சிறுமைகள் இல்லை, நான் தினமும் கிருமி நாசினி சோப் போட்டுக்குளிக்கிறேன் என்கிற மனோபாவம். சமூக வலைத்தளங்களை ஒருமுறை வலம் வாருங்கள் நாமனைவருமே உத்தமர்களென காட்ட முயல்கிறோம். நமது எதிரிகளைத் தேடிச்சென்று விசாரண நடத்த சாத்தியமற்ற நண்பர்களிடம் நமது பெருமைகளை அரங்கேற்ற நினைக்கிறோம். « சிறுமை அணிந்து என்னை நானே வியந்துகொள்வதும் பெருமைதான் » என வள்ளுவன் குறளுக்குப் புதிய உரை எழுதுகிறோம். கர்வத்தைச் செருக்காக மாற்றுவதில்தான் பிரச்சினை. எல்லோரும் எல்லாவற்றிலும் உயர்ந்தவராக அல்லது தாழ்ந்தவராக இருக்கமுடியாதென்பது உண்மையெனில், ஏதோ ஒன்றில் ஒருவன் அறிவாளியாகவும் பிறர் மூடராகவும் இருக்கமுடியுமென்பதும் உண்மை. அங்கே செருக்கை, தமது இருத்தலுக்கு முன்பாக அரியணையில் ஏற்றுவதுஅவசியமாகிறது. ஒரு வகையில் அது l’essence précède l’existence- இருத்தலுக்கு முன்பு சாரம்.

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்?”

என்ற கம்பனின் கர்வம் நியாயமானது.  விளம்பரமின்றி தொலக்காட்சியின் துணையின்றி, துதிபாடிகளின் துணையின்றி விருதுகளின்றி காலம் கடந்து தனது கவிதைவாழும் என நம்பிய  குரல் அது.  வள்ளுவரின் மற்றொரு குறள் வற்புறுத்தும்   வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி,அவ்வளவையும்  தூக்கிச் செயல்பட்டக்   கம்பனைப் பிழைக்கத் தெரியாதவனின் செருக்கு என கொள்ள முடியுமா ?. நாமிருக்கும் உலகம்,  நம்மைத் தாண்டிசெல்லும்  உலகமல்ல, மிதித்துக் கடக்க எண்ணூம்  உலகம், மிதிபடாமலிருக்க விழித்திருத்தல் அவசியம், கர்வம் அரைக்கண்மூடி விழித்திருத்தல்.

———–