Category Archives: Uncategorized

கா·ப்காவின் நாய்க்குட்டிக்கு விடுதலை

கடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.

 
காலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.

 

தமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.

 

ஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.

 

பிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

 
நண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.

 

நா.கிருஷ்ணா

“காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

Kaafkaavin Naaikkutti Wrapper Continue reading

காஃப்காவின் நாய்க்குட்டி – நாவல் ( காலச்சுவடு பதிப்பகம்)

அன்பினிய நண்பர்களே

வருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.
நிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

__________________________________________________
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை

 

காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ? பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.

 

இந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்குமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)

– நா.கிருஷ்ணா
nakrishna@live.fr

எழுத்தாளன் முகவரி -18: நூலகமும் எழுத்தாளனும்

‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.

 

வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.

 

நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?

 

வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.

 

நூலகம் ஏன்?

 

வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது

 

எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.

 

சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.

————————————

“வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழி”

பாரிசீலிருந்து கவிஞர் கி.பாரதிதாசன் அனுப்பியிருந்த செய்தியைத் மின்ஞஞ்சலில் வாசித்தேன். பின்னர் திரு. முருக பத்மபாபனும் அச்செய்தியை தெரிவித்திருந்தார். சில கணம் துடித்து பின்னர் மனதைச் சமாதானபடுத்திக்கொண்டேன். திரு மதிவாணன் புதுசேரியில் இறந்தார் என்பதுதான் அச்செய்தி.

திரு மதிவாணன் ஆசிரியப்பணியில் இருந்தவர், அண்மைக்காலத்தில் பிரான்சுக்கு குடியேறியவர். இறப்பு தொட்டுவிடும் தூரத்தில் அவர் இல்லை. எப்போதும் நமது வாசலில் இறப்புக் காத்திருக்கிறது எனபது உண்மை. இன்றோ நாளையோ பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டுமென்பது இயற்கை நியதி. எனினும் சில இழப்புகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன.

பாரீஸ் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செயராமன், நண்பர் பெஞ்சமின் லெபோ ஆகியோருடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்குவந்திருந்தார். அதுதான் மதிவாணன் என்ற இளைஞருடனான  முதல் சந்திப்பு. அதற்கடுத்து எப்போதேனும் இரண்டொரு முறை பாரீஸ் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது, மொத்த சந்திப்பைக் கணக்கிற்கொண்டாலும் சுமார் 30 நிமிடம் அவரோடு உரையாடியிருப்பேன். பல நேரங்களில் தமிழ் இனத்தின்மீது கசப்பும் வெறுப்பும் கோபமும் வருவதுண்டு, ஆனாலும் அவர் வேறுமனிதராக இருந்தார். வித்தியாசமானவராகத் தெரிந்தார். ஒரு மூன்றுமணிநேரம் விழா எடுத்து, ஆரவாரமாக தமிழின்பேரால் மேடையில் ஒரு கூட்டம் முட்டிமோதிக்கொண்டிருக்கும், ஆனால் இவரோ பரமசாதுவாக பார்வையாளர் கூட்டத்திடை, வாடும் செடிக்கு தேடித் தேடி நீர்வார்ப்பதுபோல வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழியால் மனிதர்களைப் உபசரித்து, தமிழ் வளர்த்த இளவல். புதுச்சேரி தமிழரில் ஓர் அபூர்வம், பசுமை மங்கா அருகம்புல். ஒதியமரங்களைக் காட்டிலும் அருகம்புல்தான் வழிபாட்டுக்குரியது

நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015

அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்jeyakanthan
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

 

ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.

 

ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.

 

குத்தர்கிராஸ்330px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது  வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.

இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117

 

ஆ. சுடப்பட்ட தமிழர்கள்

செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!

—————————————–

இரண்டு கவிதைகள்

1. மீண்டும் மீளும் அந்தத் தெரு.

 
என்னுள் இருக்கும் அந்தத் தெரு
சோம்பல் முறித்த அதிகாலைக்கு
தேத்தண்ணி விநியோகிக்கும்

காசாம்பின் கைப்பட்ட இட்டலியை
சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு
மீன் குழம்பை அபிஷேகிக்கும்

குமரிகள் கைபட்ட
கூடுதல் சந்தோஷத்தை
ஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்
அவர்கள் இடுப்பை எச்சலிட்டு
குடங்களிற் பருவமாய்த் தளும்பும்

ரிக்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த
திண்ணைக் குழந்தையாய்
திடுக்கிட்டு அழும்

“சாமியேய் ஐய்யப்பா!”
விளித்த காற்றாய்
வீட்டு முற்றம்வரை வந்து விழும்

பாற்கார ரங்கனின் கைப்பிடியில்
குவளையா? குளம்படியா?
குழப்பாமாய் மிஞ்சும்

நாசி எழுப்பி,
வெல்லப்பாகில் பிறப்பெடுக்கும்
வேம்புலி நாய்க்கர் பொரியுண்டை
மெல்லப் பேசும் இனியவை நாற்பது

வாழ்க்கைப் பயணத்தின்
வழிச்செலவுக்குதவுமென
சிக்கனமாய்ச் சேர்த்த
சில்லறை காலைகள்
சந்தோஷத் திரியில்
பண்டிகை நாட்களில்
வெடித்துத் சிதறும்
சிவகாசி சிறுவர்களாய்

சூல்கொண்ட மனவுண்டியல்
உடைக்கப்படாமல்
எண்ணப்படும் நாள்களில்
மீண்டும் மீளும் அந்தத் தெரு….
__________________________________

2. . கனவிடைத் தோயும்
நாணல் வீடுகள்!

 

சருகுகளான ‘நினைவுகளில்’:
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப்
பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல், ‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் ‘பாட்டி’யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,
முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு
சிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு

நிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில் ‘வாடகைக்கு விடப்படும்’
பிறந்தமண் புது வீடு

கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும் அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் –
பால்காய்ச்சவும் அலையும் ‘இருப்பு’.
நாணல் வீடுகள் கனவிடைத் தோயும்

——

எழுத்தாளன் முகவரி -17: எழுத்தாள இரட்டையர்கள்

அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட எனது நியாயங்களின் அடிப்படையில், எனக்குத் தெரிந்த பிரெஞ்சில் மூல மொழியின் தொனியும் பொருளும் சிதைக்கப்படாமல் பிரெஞ்சுக்குக் கொண்டுபோனேன். பிரெஞ்சு பெண்மணி தனது பண்பாட்டுப்பின்புலத்தில் அதற்கு மேலும் மெருகூட்டினார். உரிய சொற்களில், உரிய வாக்கியமைப்பில் அதனைக் கொண்டுவந்தார். இருவரும் விவாதித்தே தொடக்கத்திலிருந்து இறுதிவரை பயணித்தோம். பிரெஞ்சு வாசிப்பில் மூல ஆசிரியரின் குரல் பிசிறின்றி ஒலிக்க, இருவரின் பணியிலும் பரஸ்பர நம்பிக்கை வைத்துப் பணிசெய்தோம்.

காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார், அவரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தபோது ” Zumla ‘ பதிப்பகம் அமபை சிறுகதை நூல் பற்றி பேசினார்கள். நூல் நன்றாக வந்திருக்கிறதென்று இணையதளத்தில் செய்திருந்த விளம்பரத்தைக் காட்டினார்கள், உங்கள் பெயர் முதலில் இருந்தது” எனக்குச் சந்தோஷம் என்றார். அம்பை சிறுகதைகளை வெளியிட்ட பிரெஞ்சு பதிப்பகம் எனது பெயரை முதலில் போடுவதற்கு என்ன காரணமென்பது தெரியாது, ஒருவேளைத் தற்செயலாககூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்பெயர் விஷயம் பிரச்சினையாகப் பட்டது. பிரெஞ்சு பெண்மணி எப்படி எடுத்துக்கொள்வாரோ என நினைத்தேன். அவரைத் தொலைபேசியில் பிடித்து விஷயத்தைச் சொன்னபோது அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “அது பிரச்சினையே இல்லை கிருஷ்ணா” எனப் பேசினார். இருந்தபோதும் எனக்கு உடன்பாடில்லை, அவர் பெயர்தான் முதலில் இடம்பெறவேண்டும் அதுதான் முறை என வாதிட்டு சம்மதிக்க வைத்தேன். பதிப்பகமும் ஏற்று, முதலில் அவர் பெயரையும் பின்னர் எனது பெயரையும் போட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனக்கும் இவ்விஷயத்தில் ஒரு நிறைவு. ஒரு பணியில் இருவர் சேர்ந்து செயல்படுகிறபோது இதுபோன்ற கொடுக்கல் வாங்கல்களைக் கடைபிடித்தாகவேண்டுமென நினைக்கிறேன். இருவரின் உழைப்பு உரிய பயன்பாட்டினை அளித்திட பரஸ்பர புரிதல்கள் இன்றியமையாதவை. தொடக்கத்திலிருந்தே எனது அபிப்ராயங்களை பெண்மணியும், அவரதுடைய கருத்துக்களை நானும் காதுகொடுத்துக் கேட்டோம். இருவருமே அதனதன் தகமைக்கேறப ‘சரி’ அல்லது ‘சரி அல்ல’ என்ற முடிவுக்கு வந்தோம். மறுப்புக்கு மாத்திரம் காரணத்தை முன்வைப்பதில்லை, ஏன் உடன்படுகிறேன் என்பதையும் தெளிவாக விளக்கி மின்னஞ்சல் எழுதுவேன். இது மொழிபெயர்ப்பு அளவில் மற்றொருவருடன் சேர்ந்து பணியாற்றியதில் எனக்கேற்பட்ட அனுபவம்.

 

இரட்டையர்களாக சேர்ந்து பணிபுரிவதை, நாதஸ்வரக் கலைஞர்களிடம் முதலில் கண்டிருக்கிறேன். ஒற்றை ஆளாக வாசிக்கிறபோது இல்லாத மிடுக்கு அவர்கள் இரட்டையர்களாகப் பேருந்தில் வந்திறங்குகிறபோது களைகட்டிவிடும். கர்னாடக இசைகச்சேரிகளில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்ற அடைமொழியுடன் பிரபலமான இசைகலைஞர்களைச் சந்தித்திருக்கிறோம். திரைத்துரையில் இந்தியிலும் தமிழிலும் இரட்டையர்கள் இசை அமைப்பாளர்களாகச் சாதனைப் படைத்திருக்கிறார்கள். சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், நடிகர்களும் உண்டு. லாரல்-ஹார்டி கூட்டணிபோல தமிழில் கவுணமணி- செந்திலும் வெற்றிபெற்ற இரட்டையர்கள். இரட்டையர்களாக பணிபுரிந்த இவர்களால் தனி ஆளாக ஒளிர முடிவதில்லை. ஒரு நிறுவனத்தில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமான, இலாபம் ஈட்டும் ஸ்தாபனமாக அதனை நடத்திக்காட்ட முடியும். அதற்கு உதவியாக சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன. மொழிபெயர்ப்பிலும் சாத்தியமாகலாம். ஆனால் வரம்பற்ற சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தும் படைப்புலகில் சாத்தியமா? எழுத்தாளன் இயற்கையாகவே சிந்தனைச் சுதந்திரத்தை வற்புறுத்துகிறவன். தனிமையை நாடுபவன். இங்கே இரட்டையர்களாக இயங்கும் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த இரட்டையர்களாக பிரே-ரமேஷ் சாதனை படைத்தார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு அது இயலாத செயல், இணைந்துப் பணியாற்தினாலும் எப்போது வேண்டுமானாலும் அந்த இருவர் கூட்டணி உடையக்கூடிய நிலமை. படைக்கும் படைப்பு தங்கள் தனித்தன்மையை முன்னிலைப்படுத்துவதில்லை என்றோ, இருவரில் ஒருவர் என்னால்தான் மற்றவருக்கு அடையாளம் கிடைக்கிறது எனும் எண்ணத்திற்கு இடம் கொடுக்க ஆரம்பித்தாலோ கூட்டணி முறிந்துவிடுகிறது, கூட்டணி மட்டுமல்ல அவர்களுடைய வெகுநாளைய நட்பும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

 

இரட்டையர் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட பிறகூட்டணிகளைபோலவே இணைப்பைப் பிணைத்திருக்கும் ‘நம்பிக்கை’ கயிறு வலுவுடன் இருக்கவேண்டும். இந்த நம்பிக்கை மற்ற நண்பரின் அல்லது நண்பியின் வேலைத்திட்டம், எழுத்தாற்றல், வினைத்திறன் ஆகியவற்றில் முழுமையாக நம்பிக்கையை ( அவரிடம் நாம் எதிர்பார்ப்பதை) வைப்பது. பணியை இருவருமாக பகிர்ந்து நிறைவேற்றல் என்பது பிறவற்றில் சாத்தியம் ஆனால் எழுத்தில் அவரவர் ஞானத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ பகிர்ந்துகொள்ளலாம், மொழி பெயர்ப்பில் சேர்ந்து பணியாற்றுகிறபோது இது போன்ற மனநிலையைத் தேர்வுசெய்தேன், படைப்புக்கு இது சரிவருமா என்று தெரியவில்லை. வரவேண்டும். அடுத்ததாக மேலே கூறியதுபோன்று எனது மொழி பெயர்ப்பு அனுபவத்தில் புரிந்துகொண்டது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. நான் எழுதுவதுதான் சரி இருவரில் ஒருவர் பிடிவாதம் காட்டினாலும் முடிந்தது உறவு.
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு எழுத்தில் கூட்டணி அமைத்துக்கொண்டால் வெற்றிக்கூட்டணியாக வலம் வர முடியும் எனச் சொல்கிறார்கள் மர்சியா முல்லெரும் (Marcia Muller), பில் புரோன்ஸினி (Bill Pronzini) என்பவரும். இருவருமே எழுதிக்குவித்த அமெரிக்கர்கள், பல பதிப்புகள் கண்டு பணமும் சம்பாதித்தவர்கள்; அவர்கள் எழுத்து Roman noir என பிரெஞ்சு படைப்புலகம் தீர்மானித்திருக்கிற பிரிவுக்குள் வருகிறது. தமிழில் அவற்றை ‘கறுப்பு புனைகதை’ என அழைக்கலாம். எழுத்தில் அகதா கிறிஸ்டியும் திரைப்படத்தில் ஹிட்ஸ்காக்கும் பிழிந்த சாறு. வெற்றிகரமான இரட்டையர்கள் என அழைக்கலாமா, அவர்களுக்குள் அத்தனை ஆழமான புரிதல் இருந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக நமக்குக் கிடைக்கும் பதில் அவர்கள் இருவரும் கண்வன் மனைவி என்ற உண்மை. இருவருமே தனித்தனியாகச் சாதித்தவர்கள். கணவர் மர்மக்கதை மன்னர் என்றால் அவருக்கு மூன்றாவது மனைவியாக ஜோடி சேர்ந்த (?) மர்சியா மர்மக்கதை அரசி .இவர்கள் எழுத்திற்கு இலக்கிய தகுதிகள் இல்லை என்கிறார்கள், எனினும், இரட்டையராக எழுதிச் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நமக்கு முக்கியம்.

 

அவர்களின் கருத்துப்படி “ஒருவர் தனித்து புனைவையோ புனைவு அல்லாத ஒன்றையோ எழுதும்போது பெறாத வெற்றியை, இருவர் சேர்ந்து சிறப்பாகச் செயபட்டால் பெற முடியுமாம். அப்படைப்பை ஒருவரின் எழுத்தென்றோ அல்லது குரலென்றோ சொல்லக்கூடாதாம், இருவரின் சிந்தனையிலும் எடுத்துரைப்பு உத்தியிலும் கலந்து உருவானதாம். தவிர தம்பதிகள் கூறும் மற்றொரு கருத்தும் இங்கே கவனத்திற்கொள்ளத் தக்கது. “இருவரும் சேர்ந்து ஆளுக்குப்பாதியாக பங்களிப்பைச் செகிறார்கள் என்ற வெகுசனக் கருத்திற்கு மாறாக இரு மடங்கு பங்களிப்பை” அளிப்பதாகத் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருவர் சேர்ந்து எழுதுவதில் எனக்குத் தெரிந்த பெரிய நன்மை தனிமைச் சிறையிலிருந்து எழுத்தாளன் பெறும் விடுதலை.

 
பேச்சாற்றல் கொண்ட பாரீஸ் தமிழ் நண்பர் ஒருவர், ” எழுத வேண்டுமென்று நினைப்பதாகவும் ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை” எனப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு முறை எனது வீட்டிற்கு வந்திருந்தபோது சென்னையில் அவருடைய நண்பர் ஒருவர் புத்தகம் போட்டதாகவும் அவருக்குப் போதிய நேரமில்லாததால் வேறொருவரைக்கொண்டு முடித்ததாகவும் அப்படி யாராவது இருந்தால் நானும் என்ன செலவாகுமோ அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், அப்படி யாராவது இருக்கிறார்களா?” எனக்கேட்டார். உங்கள் நண்பரையே கேளுங்கள் அவர் ஏற்பாடு செய்வார் எனக்கூறி அனுப்பிவைத்தேன். அவர் ஆசைப்பட்டதில் தவறில்லை. அநேகப் பிரபலங்களின் நூல்கள் இவ்வகையில்தான் வருகின்றன. சில பத்திரிகையாளர்கள், இரண்டாம் நிலை எழுத்தார்கள் மேற்குலகில் இதற்கெனவே இருக்கிறார்கள். அவர்களிடம் தங்கள் அனுபவங்கள், வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைபற்றிய குறிப்புகளைத் தந்து பிரபலங்கள் தங்களைப்பற்றி எழுதவைத்து அதில் தங்கள் பெயரையும் போட்டுக்கொள்வதுண்டு. வயிற்றுக்காக புகழ்ந்து பாடிய புலவர்களைப் பெற்றிருக்கும் நமக்கும் அதில் வியக்கவோ அதிர்ச்சிகொள்ளவோ நியாயங்கள் இல்லை. சங்ககாலத்திலும் சரி அதற்குப் பின்பும் சரி, பாடப்பட்டவர்களுக்குப் பிறர் எழுதியதை தனது பெயரில் வெளியிடும் ஆசை இல்லாதிருந்திருக்கலாம், அரசவை நடுவே அரங்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அப்பாடல்களுக்கு இருந்ததால் எழுதியவனைத் தவிர வேறொருவர் சொந்தங்கொண்டாட முடியாதச் சூழ்நிலை அப்போது இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது திரை மறைவாக எதையும் செய்யலாம். அரசியல், பணம், இலக்கியம் ஏதோ ஒன்றினால் அதிகார பலத்தைக் கைவரப்பெற்றிருந்து, அறம்பற்றிய உணர்வு மரத்துப்போயிருந்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் எழுத்தாளராகலாம். இதைத்தான் Gost writing என மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள். இங்கேயும் எழுத்தில் இருவர் பங்கேற்கிறார்கள். ஒருவர் எழுதுபவராகவும் மற்றவர் எழுதாதவராகவும் இருக்கிறார். அதாவது ஒருவர் எழுத்தாளர் மற்றவர் எழுத்தாளராக இயங்காதவர். இங்கே இந்த இரண்டாமவர் எழுத்தாளராக இயங்காதுபோனாலும், விநோதமான அனுபவங்களுக்குச் சொந்தகாரராக இருக்கக்கூடும், அவ்வனுபவம் முற்றிலும் வித்தியாசமானதொரு புனைகதையை, சுயவரலாற்றை எழுத மற்ற்வருக்கு உதவக்கூடும். சமூகத்தில் பிரபலங்களில் பலர் ( ஒன்றிரண்டு விழுக்காட்டினரைத் தவிர ) – எழுத்தாளராக அவதாரமெடுக்கும் ரகசியம் இது.

 

ஆனால் தன்னால் எழுத முடியும் ஆனால் உந்துதல் இல்லை, உற்சாகப்படுத்த ஆளில்லை. பக்கத்துவீட்டுக் குடும்பசண்டை எனக்குத் தொந்திரவாக இருக்கிறது, ஓட்டலில் ரூம் போட்டுக்கொடுக்க பதிப்பாளர் முன் வரமாட்டேன் என்கிறார் இப்படிக் காரணத்தைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள், இதே மனநிலையிலுள்ள வேறொரு நண்பரை அணுகாமல் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரோடு சேர்ந்து எழுத உட்காரலாம். ஆணா¡க இருந்தால் பெண்ணொருத்தியுடனும், பெண்ணாக இருந்தால் ஆண் ஒருவனுடனும் (காதல் செய்து ஓய்ந்த நேரங்களில்) எழுத உட்கார்ந்தால் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புண்டு, மர்சியா முல்லெர், பில் புரோன்ஸினி அமெரிக்க தம்பதிகள்போல வெற்றி பெறலாம். இருவர் அனுபவம், இருவர் அறிவு அவரவர் கற்பனத் திறன், எடுத்துரைப்பு உத்தி இரண்டுமிங்கே இணைகின்றன. கோஸ்ட் ரைட்டிங்கில், கோஸ்ட்டாக இருப்பவர் பெயர் இடம் பெற சாத்தியமில்லை, ஆனாக் இரு எழுத்தாளர்கள் இணைகிறபோது, இருவர் பெயரும் நூலில் இடம்பெற வாய்ப்புண்டு.

நன்றி: திண்ணை

. ———————————————–

தமிழவன் – சிறுகதை

 

புத்திஜீவி கே.யின் வாழ்வும் பணியும்தமிழவன்

 

கே. பற்றிய இந்தச் சுருங்கிய வாழ்க்கை வரலாற்றை அவனுடைய மரணத்திலிருந்து தொடங்குவது தவிர வேறு வழியில்லை.அவன் மரணம் சம்பவித்தோ இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறையில், இந்தோ-ஆரியமொழிக் குடும்பத்தைச்சார்ந்த அவன் தாய் மொழியைப் பயிற்றுவிக்க, அமெரிக்க சமஸ்கிருத பேராசிரியர் வால்டர் வில்ஃபோர்ட் கே.யை அழைத்தபோது கே.யின் கால்கள் தரையில் பாவவில்லை. நானும் கே.யும் அதுபோல், கே.யின் நிரந்தர விரோதியான என் நண்பன் ஆனந்ததீர்த்தனும் (எனக்கு அந்நியமான) அந்த ஊரில் ஒரு மொழி நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

ஆனந்ததீர்த்தனை நான் என்னுடைய மொழியைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு தோற்றுப்போன எழுத்தாளன் (எ ஃபெயில்ட் ரைட்டர்) என்று அறிமுகப்படுத்துவதும் போது, ஆனந்ததீர்த்தன் ஏனோ உள்ளூர மகிழ்வான்.

ஆனந்ததீர்த்தன்தான் கே.யின் மரணத்தை, கைப்பேசி அறிமுகமாகியிராத, 70களில் அவ்வப்போது மக்கர் செய்யும் என்வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்துச் சொன்னான்.

“புஸ்வாணம் மேலே போய், போனவேகத்தில்

எரிந்து புஸ்ஸென்று கீழே விழுந்து விட்டது” என்றான்.

“ஐ டோண்ட் அன்ட்ரஸ்டான்ட் யு.”

என்றேன் ஆங்கிலத்தில். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் கே. பற்றித்தான் ஏதோ சொல்ல வருகிறான் என்று.

“கே.டைய்ட் டுடே அட் ஸெவன் இன் த மார்னிங். புஸ்வாணம் மேலே போய் அப்படியே விழுந்துவிட்டது”.

தொண்டையிலிருந்து பேசிய ஆனந்ததீர்த்தன் சொன்னமுறை எனக்கு அவன் வருத்தத்தோடு உண்மையைச் சொல்கிறான் என்று புலப்படுத்தியது. கே. திடீரென இறந்த செய்தி இப்படித்தான் அந்த நகரத்தில் பரவியது.

கே. அப்போது மொழிநிறுவனம் எங்களுக்கு ஒதுக்கியிருந்த குவார்ட்டர்ஸில் தங்கியிருந்ததால் அவன் வீடு என் வீட்டுக்கு அருகில் இருந்தது. நான் என் இரு சக்கர வாகனத்தில் அவன் வீட்டுக்குப் போன போது அவன் வீட்டின் முன் ஒரு மழை மேகம் கவிந்திருந்த அந்த ஜுலை மாதத்தில் பார்த்தவை எல்லாம் நன்றாக நினைவிருக்கின்றன. சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அவனிடம் பி.எச்.டி செய்யப்போய் அவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி மொழிநிறுவனத்தின் இயக்குநருக்கு முன்பொருமுறை கம்ப்ளயண்ட் எழுதிய பெண் அழுதுகொண்டு ஒரு மரத்தின் அருகில் தரையில் அவளுடைய சுடிதாரில் மண் ஒட்டுவதையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தாள்.

நான் அந்தப் பெண்ணை அறிவேன். எனவே அவளருகில் சென்றபோது அவள் கே.யின் சாவைப் பற்றிப் பேசாமல் அவளுக்கு முன்பு நடந்தது பற்றி ஏனோ பேசினாள். “கம்ப்ளய்ண்டைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக எங்க வீட்டுக்கு வந்து கே. மிரட்டியதைப் பார்த்து அப்பா உண்மையில் பயந்துபோனார். அதனால் கம்ப்ளயண்டை வாபஸ் வாங்கியதோடு பிஎச்டியும் கே.யிடம் செய்துகொண்டேன். இப்போது இப்படி ஆகிவிட்டது” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

கே. போன்ற அறிவாளியிடம் ஆய்வு செய்தால் அவர்கள் மொழி பேசுபவர்கள் உடனே வேலை வழங்குவார்கள் என்ற தகவலையும் அந்தப் பெண் சொன்னாள். இவளைப் போல் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை தந்து பிஎச்டியும் தருவான் கே. என்று ஆனந்த்தீர்த்தன் ஜோக் அடிப்பான். இறந்தவன் உடலையாவது பார்ப்பதற்கு ஆனந்ததீர்த்தன் வருவான் என்று நான் நினைத்தேன். அப்போது அந்தப் பெண், வேறு ஒரு பெண் வருவதைச் சுட்டிக்காட்டி

“அவளிடமும் முதலில் தவறாக நடக்க முயன்று பின்பு அவளது பிஎச்.டி நெறியாளராய் ஒழுங்காய் இருந்தான் கே.” என்ற தகவலைத் தரவும் புதிய இளம்பெண் அழுதபடி எங்களருகில் வந்து சேரவும் சரியாய் இருந்தது.

இப்போது 1998 நடந்துகொண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் கே.யை நினைப்பதற்கான ஒரே காரணம் கே.யின் இந்த வாசகம்: “ஒரு நிகழ்வை நிரூபிக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்வை இன்னொரு நிகழ்வோடு தொடர்பு படுத்துவதைவிட வேறு வழியில்லை”.

கடந்த 40 ஆண்டுகளில் இந்த வாசகம் அவர்கள் மொழியில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது. கே. இறந்தபின் முதல் பதினைந்து ஆண்டுகள் அவனுக்கு நினைவுக் கூட்டங்களை ஒழுங்காய் நடத்தினாள் அவனுடைய மனைவி சரஸ்வதி. (கே. வாழும்போது அப்படி நடத்தும் எண்ணம் அவள் கொண்டிருக்கவில்லை) அதன்பிறகு இப்போது நடத்துகிறாளோ என்னவோ தெரியாது.ஏனெனில் அந்த ஊரைவிட்டு நானும் எப்போதோ வந்துவிட்டேன். இந்த வாசகத்தை நான் பழைய புத்தகங்களை அடுக்கும்போது ஒரு பத்திரிகையின் பழைய மஞ்சள் படிந்த பக்கத்தில் யாரோ அடிக்கோடிட்ட பகுதியில் பார்த்தேன். அப்போதிருந்த புகழ் ‘கே’க்கு இப்போது இல்லை என்பேன் என்றாலும் சிலர் இப்போதும் ‘கே’யை புகழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘கே’ யின் வயதொத்தவர்கள். இழந்துபோன அவரவர் வயதை அப்படிக் கௌரவிக்கிறார்கள் என்பான் ஆனந்த தீர்த்தன்.

கே. ஒருமுறை ஓவியரான தேசத்தின் புகழ்பெற்ற கவிஞரைப் பற்றி எழுதியிருந்தான். தாடி வைத்துக் கொண்டிருக்கும் அந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரைப் பின்பற்றி தானும் தாடி வைத்திருப்பதாகக் கூறிய ‘கே’ அந்தக் கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை 2 பக்கத்தில் எழுதியிருந்தான். அது என் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அக்கவிஞர் முதுமையில் எத்தகைய கற்பனை சக்தியைக் கொண்டிருப்பார் என்ற அபூர்வமான கேள்வி அவனுக்குத் தோன்றியிருந்தது. ஆனந்த தீர்த்தனிடம் அது அபூர்வமான கேள்வி என்ற என் எண்ணத்தைக் கூறிய போது ஆனந்த தீர்த்தன் இப்படிச் சொன்னான்.

“நீ வயதானவர்கள் யாரும் எழுதாத மொழியிலிருந்து வந்துள்ளாய். கே. வயதானவர்கள் மட்டுமே எழுதும் மொழியில் எழுதுகிறான். எனவே வயதானவர்களின் கற்பனைபற்றி யோசிப்பது கே. போன்றவர்களுக்கு எளிது.”

நான் குழப்பமடைந்தேன்.

எனினும் ‘கே’ என்ன சொல்லவருகிறான் என்று சிந்தித்தேன். எனக்கும் ஆனந்த தீர்த்தனுக்கும் கே. தேசியப் புகழ்பெற்ற கவிஞரின் எல்லாப் படைப்பையும் படித்தவனல்ல என்பது தெரியும்.

‘கே’ தேசியப் புகழ்பெற்ற அந்தக் கவிஞரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறான். அழகற்ற தோற்றமுள்ள அவ்வோவியங்களைக் கூர்ந்து பார்த்து ஒரு கருத்தைச் சொல்கிறான். பல ஓவியங்களில் மறைந்திருக்கும் பெண் சாயை ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான். அக்கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.

“மறைவாக, பல ஓவியங்களில் ரகசியமாய் வெளிப்படும் பெண்சாயல் உண்மையில் ஓவியங்களில் காணப்படுவதில்லை”.

இந்த வாசகம் எனக்குப் பெரிய தலை வேதனையைக் கொடுத்தது. பெண்சாயல்  இருக்கிறதென்கிறான். ஆனால் அது இல்லாததென்கிறான். எனக்கு இவ்வாக்கியத்தின் முரண் புரிய இன்னொரு வாக்கியம் உதவியது.

“இருப்பது இல்லாததுபோல் தென்படுவது உணர்வின் அதீதத்தால்  ஆகும்”.

இந்தமாதிரி விசயங்களை நினைவில் கொண்டு வந்த நான் கே.யின் வறுமைகொண்ட இளமைக்காலம் பற்றி நினைத்தேன் ஊரில் கிராமத்தில் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தயாராக்கும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்திருக்கிறான். இது அவன் மிக அதிகமான இறை மறுப்பாளனாக இருந்தபோது நடந்தது. இதனை அவனது பாலிய காலத்தில் அவனோடு இறைமறுப்பாளர்களாக அலைந்து இப்போது பெரிய பக்தர்களாக மாறி அரசியலில் புகுந்துள்ளவர்கள் கூறுகிறார்கள்; இவர்கள் சிலரே.

‘கே’யின், ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னைக் கவர்ந்தது. அதுபற்றிக் கூறாவிட்டால் ‘கே’ பற்றிய என் மனப்பதிவு முழுமையடையாது. அக்கதைச் சம்பவம் வெயிலில் நடக்கிறது. அக்கதை, வெள்ளைக்காரர்கள் கொடூரமாய் ஆண்ட சமயத்தில், அச்சிட்ட பத்திரிகையின் தாள் போலீஸால் கறுப்புமைப் பூசி அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் போலீஸ் பற்றி ஏதும் பத்திரிக்கைகளில் எழுதமுடியாது. அச்சுறுத்தலுக்கு ஆளான அந்தக் கதையில் முழுவதும் வெயில் கொடூரமாய் அடித்தது. அக்கதையானது கர்ப்பமான ஒரு பெண்ணை அவளுடைய தாய் பேற்றுக்குத்  தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு  போவது பற்றியது. பஸ் நிலையத்துக்கு அப்பெண்ணும் அவளது கிராமப்புறத் தாயும் வந்து நிற்கும்போது, போலீஸ் எல்லோரையும் விரட்டுகிறது. அப்பெண்ணுக்கோ தாகம். அப்போது பார்த்து வெயில் சுள்ளென்று அடிக்கிறது. தாயால் பெண்ணை விட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்கப் போக முடியாது. எல்லா இடத்திலும் போலீஸ் பரவுகிறது. யாரோ பஸ்ஸில் கல்லடிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் என்னாகுமோ தன் குழந்தைக்கு என்று புலம்புகிறாள். அவளுக்கு வேறு ஏதும் தோன்றுவதில்லை.

நான் சொல்ல வந்தது ‘கே’ எழுதிய விமரிசனம் பற்றி. ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையின் தரங் குறைந்த தாளில் அச்சிட்ட தன் ஒரு பக்கக் கட்டுரையில் அக்கதை வெயில் பற்றியது என அடம்பிடிக்கிறான் கே. அக்கட்டுரை வெளியான அடுத்த நாள் ‘கே’யின் பாதத்தில் பெருவிரலில் ஒரு கோபக்கார இளைஞன் தன் பூட்ஸ் கால்களால் மிதித்தபடி ‘கே’யின் சட்டைக்காலரைப் பிடித்தான். வெயிலாம் வெயில் என்றான் இளைஞன். ‘கே’ அசராமல் தன் எழுத்தின் புரட்சிகரத் தன்மையால் உருவான எதிரிகளின் வேலை இது என்று கூறிக்கொண்டு தலையைக் கீழே போட்டபடி நடந்து போனான்.

இந்த நிகழ்ச்சி நானும் ஆனந்ததீர்த்தனும் ‘கே’ யும் நாங்கள் வேலை பார்த்த மொழிநிறுவனத்தின் கான்டீனில் காபி குடிக்கப்போனபோது நடந்தது. சிலவேளை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே இப்படி எழுதுகிறானோ இவன் என்றும் தோன்றியது.

கே. பார்ப்பதற்கு அழகற்றவனாக இருப்பான். கரிய நிறமுகம்;  சுருட்டைமுடி. கண்கள் பெரியவை. அவன் சிரிக்கும்போது நாசித்துவாரம் தேவைக்கதிகமாக விரிந்து சுருங்கும். அப்படி விரிந்து சுருங்கும் நாசித்துவாரத்தைக் காட்டி ஒருமுறை ஆனந்ததீர்த்தன்தான் எனக்கு, “சின்ன பறவைகள் உள்ளே போய்விட வாய்ப்பிருக்கிறது, சொல்லிவை ” – என்றான். கறுப்பு நிறமான முகத்தில் வெள்ளையான பெரிய பற்கள். அதில் ஒரு தாடி வேறு. எதிர்மறையான பிற அங்கங்களின் தன்மையை அவனது உயரம் ஓரளவு சரி செய்து நேர்மறையாக மாற்றியது எனலாம். ஒருமுறை என்மொழியில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் எப்படி எழுதுவார் என்று கேட்டான். நான் மொழிநிறுவனத்தில் எனக்கு வகுப்பு இருக்கிறது என்று வேகமாய்ப் போய்விட்டேன். ஒரு மணிநேரம் வரை அதே இடத்தில் நின்றபடி சிகரெட் இழுத்துக்கொண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டும் நின்றிருக்கிறான். வகுப்பை முடித்துக்கொண்டு நான் அவன் கேட்ட வேள்வியை அனாயசமாய் மறந்து வந்து கொண்டிருந்தேன். “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று என் தோளைத் தொட்டான். நான் நின்றேன்.

“ஆனந்த தீர்த்தன் ஒரு ………….. ………… ………….  பாஸ்டர்ட்

அவனுடன் சேர்ந்து ஏன் கெட்டுப் போகிறாய்? நீ நான் நேசிக்கும் புராதன மொழியியலிருந்து வந்திருப்பவன் பதில் சொல்” என்றான். அவன் கை என் தோளை இறுக்கியது. அப்போதுதான் அவன் என் மொழியில் எழுதும் கவிஞன் பற்றி என்னிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது.

“வா, கே. என் அறையில் அமர்ந்து பேசுவோம்” என்றேன்.

“இல்லை. உன்மீது கோபம், என் கேள்வியை உதாசீனம் செய்தாயோ என்று. எனவே என் கேள்வியை வானத்திடம் கேட்டபடி ஒரு மணிநேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்”.

“அய்யய்யோ, எதற்கு உன்னையே தண்டித்தாய்?” என்று கேட்டபடி கே.யின் கையைப் பிடித்தேன்.

வருகிறேன் என்று சிகரெட் பிடித்து அப்போதைக்கு மறைந்தவன் ஓரிரு நாளில் என் மொழிக்கவிஞன் பற்றி என்னிடம் தவல்களைப் பெற்று அவனுக்கே உரிய முறையில் அவற்றை வெட்டி ஒட்டி கட்டுரையை டெல்லியில் சிலருடைய தொடர்பின் மூலம் மதிப்புக்குரிய ஒரு கருத்தரங்கில் வாசித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிவந்தான். ஆனந்ததீர்த்தன் “உன் கருத்துக்களைத் திருடி வாசித்துவிட்டு வந்திருக்கிறான்” என்றான்.  ஒரு மாதம் கழித்து நான் அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தபோது கே. தோன்றி  அந்த என்மொழிக் கவிஞன் பெயரைச் சொல்லி அந்தக் கவிஞனைப் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டான். எனக்கு எரிச்சல் வந்தது. அது யார் என்று வேண்டுமென்றே கேட்டேன்.

“அப்புறம் விளக்குகிறேன். ஏ, ஃபைன் பொய்ட் என்றான்”.

உண்மையிலேயே என்னிடமிருந்து அக்கவிஞனைப் பற்றி முதன்முதலாக அவன் அறிந்து கொண்டதை முழுதும் மறந்திருந்தான்.

அவன் டெல்லியில் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை என்னிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டதும் நான் அக்கட்டுரையை எடுத்துப்புரட்டினேன். முதல் பக்கத்தில் கட்டுரை இப்படித் தொடங்கியது.

“இலக்கியம் உயிர் வாழ்கிறது; புழுப்பூச்சிகள் உயிர் வாழ்வது போல”.

நான் அவ்வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.

ஸார், கே. யின் கட்டுரையை அவர் உங்களிடம் கொடுத்து ஒரு  வாரம் ஆகிறதாம். உடனே வாங்கி வரும்படி சொன்னார் என்றாள்.

நான் முதல் இரண்டு வரிகளைப் படித்த கட்டுரையை அப்படியே தூக்கி அவளிடம் கொடுக்க, பேண்ட் அணிந்த உயரமான அப்பெண் வேகமாகப் பின்புறத்தைக் காட்டியபடி நடந்தாள்.

ஆனந்த தீர்த்தனிடம் சொன்னால் வேண்டுமென்றே அவன்  இப்படிச் செய்கிறான், அவனை மேதை என்று நீ நினைக்க வேண்டுமென்பதற்காக  என்பான்.

கே. எங்கள் மொழித்துறையில் தயாரித்து எழுதப்பட்ட  அவனுடைய மொழியின் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியை எழுதினான். அதனைப் பற்றி ஆனந்த தீர்த்தன் சொன்ன செய்திகள் எனக்கு கே. பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்தன. ஆனந்ததீர்த்தன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கே. என்னைவிட  ஐந்து வயது இளையவன். ஆனந்ததீர்த்தன் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுச் சிலகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு வந்தவன். கே. எப்படியாவது அமெரிக்காவிற்குப் போய் அவனுடைய தாய்மொழியைக் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினான். ஆங்கிலத்தாலும், அறிவாலும் வித்தியாசமான இலக்கியச் சர்ச்சைகளாலும்  அந்தந்த இடங்களில் காணப்படும் உயர் சமூகத்துப் பெண்களாலும்  கவரப்பட்டு வாழ்வின் கவர்ச்சியை அடையும் வழியாக இலக்கியக் கோட்பாடுகளும் விமரிசனங்களும் எழுதத் தொடங்கியவன். அவனது அறையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும்.  எங்கள்  மொழித் துறையில் எல்லோருக்கும் காற்றோட்டமான அறைகளும் தலைக்கு மேலே ஒட்டறை அடிக்கப்படாத மின்சார விசிறிகளும் உண்டு. ஆனால் கே. தேர்ந்து கொண்ட அறை ஒரு பழைய ஏடுகளை அடுக்கி வைக்கும் அறையினுள் நான்கடிக்கு நான்கடி பரப்பளவுள்ள ஒரு உள்அறை. ஒரு சிறு மேசையும் இரண்டு  இரும்பு நாற்காலிகளும் மட்டும் வைக்கமுடிந்த அறை. ஒருமுறை கே.யின் அறைக்கு வந்த அவனுடைய இப்போதைய மனைவியும் எங்கள் மொழித்துறையின் முன்னாள் மாணவியுமான சரஸ்வதி கே.யிடம் கத்திவிட்டுப் போனாள் என்று மாணவர்கள் சொன்னார்கள்.

“ஏன்யா உன் புத்தி இப்பிடி, நீ ஏன் இந்த மாதிரி அறையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கத்தினாள் என்று கேள்வி. அவள் கத்தும்போது வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாதவன்போல் சிகரெட் பிடித்தவாறு கே. சுவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானாம்.

ஆனந்ததீர்த்தனிடம் ஏன் இருட்டறையில் வசதியில்லாமல் கே. அமர்ந்திருக்கிறான் என்று கேட்க நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தன் கிடைக்கவில்லை. ஆனந்ததீர்த்தன் ஏற்கனவே எனக்குப் பழக்கப்படுத்திய கேயின் ஆய்வு ஆஸோசியேட் ஒருவன் ஒரு நாள் என்னுடன் பேசிக்கொண்டு வந்தான். கே. அந்த இளைஞன் முதுகலை படித்தபின்பு மிகவும் கஷ்டபட்டதை அறிந்து தன்னிடம் துணை ஆய்வாளனாகச்  சேர்ந்துகொள்ளும்படி கூறியதைச் சொன்னான். கே.யின் வீட்டில்தான் அந்த இளைஞன் கொஞ்சநாள் தங்கியிருந்தான். கே.யைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தேன். கே. எப்போது அமெரிக்கா போகிறான் என்று. உடன் அந்த துணை ஆய்வாளன் தன் மனதில்  இருந்ததைக் கொட்டினான்.

“ஸார், கே. போனவாரம் வீட்டுக்குப் பக்கத்து நிலத்தில் நின்றிருந்த பலாமரத்திலிருந்து இரண்டு பலாப்பழங்களை இரவில் பறித்ததற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரன் வந்து கே.யிடம் முன்பு தேங்காய் திருடினாய், இப்போது பலாப்பழம் திருடினாய் என்று சட்டையைப் பிடித்து இழுத்ததும் கே. தரையில் த்டால் என்று விழுந்தான் ஸார். நான் இடையில் புகுந்து கே.யைக் காப்பாற்றினேன். திடீரென்று கே. என்ன செய்தான் தெரியுமா? அயோக்கினை என் ஆசிரியன் என்று கூட இனி பார்க்கமாட்டேன். மரியாதையில்லாமல் தான் பேசுவேன். தேங்காயும் பலாப்பழமும் திருடியவன் இதோ நிற்கிறான் என்று என்னைப் பிடித்துக் கொடுத்தான், ஸார். அன்று கே.யின் வீட்டிலிருந்து வந்துவிட்டேன்” என்றான்.

ஆனந்ததீர்த்தனிடம் இதைச் சொன்னால் அவன் என்ன சொல்வானோ என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு நாள் மொழித்துறையில் மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது விரைவாய், கண்ணாடியைக் கையில் சுழற்றியபடி என் அறைக்கு வந்த கே. ஒரு டைப் செய்யப்பட்ட வெள்ளைத்தாள்  கத்தையைப் படி என்று கொடுத்தான். இந்திய இலக்கியத்தின் பொதுவான போக்குகள் என்பது கட்டுரையின் தலைப்பு. நானும் அவனும் முன்பு எனது மொழிக் கவிஞர்களின் கவிதைப்போக்கு  என்று விவாதித்த கருத்துக்கள்  பலமொழிக் கவிஞர்களின் கருத்துக்களாய் அவர்களின் பெயரின்றி டைப் செய்யப்பட்டிருந்தன. அக்காலத்தில் டைப் செய்வதுதான் வழக்கம். எனவே கரிகரியாய்  ஓரளவு நிறம் மங்கிய  ரிப்பனில் அடிக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டுரை. அடுத்த நாள் வந்து உன் கருத்துக்கள்தான் என்று கூறி  சிகரெட்டை ஊதியபடி மோட்டு வளையைப் பார்த்து என்ன புழுக்கம் என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டான். அக்கட்டுரையில் இந்த மேற்கோள் என் மனதைக் கவர்ந்தது.

“நான் தேடக்கூடாது. கண்டுபிடிக்கவேண்டும்”.

எனக்குத் தெரியும். அந்த மொழியில் அந்த ஆண்டு முழுதும் பலர் அவனுடைய இந்த மேற்கோளை விவஸ்தை இல்லாமல் எடுத்தாளப் போகிறார்கள் என்று.

மொழித்துறை தொகுத்துப் பிரசுரித்த அவர்களின் இலக்கிய வரலாற்றைப் பலர் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதினார்கள். ஒருவர் இலக்கணம் பற்றியும் இன்னொருவர் 1100 ஆம் ஆண்டில் அவர்கள் மொழியில் இருந்த சமண இலக்கியத்தில் செடிகொடிகளின்   ஆன்மா மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றியும் எழுதினார்கள்(ஒரு  முள் செடி முந்திய பிறப்பில் இறந்துபோன தன் தந்தைக்காக இரண்டுநாள் அழுது அரற்றிய மூன்றடி பாடலான முள்செடியின் அழுகை அவர்கள் மொழியில்   பிரசித்தம்.)இப்படி இப்படிப் பலர் எழுதினார்கள். கே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களின் இலக்கிய வடிவங்கள் என்று கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரையை வேறு யார் படித்தார்களோ இல்லையோ ஆனந்ததீர்த்தன் மட்டும் குறிப்பெடுத்துப் படித்தான். தேர்வுக்குப் போகிற மாணவனைப் போல் மிகச் சிரத்தையாகப் படித்தான். எனக்குத் தெரியும் விரைவில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றுடன் வருவான் என்று. ஆங்கில இலக்கியம் பல ஆண்டுகள் படித்து அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஒரு வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற சந்தேகம் வந்தவுடன் ஆனந்த தீர்த்தனுடைய மனைவி நாட்டுக்கு அழைத்தாள். அவனே இவற்றை எல்லாம் நகைச்சுவையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் கே. ஆங்கிலமும் படிக்கவில்லை; ஆங்கில இலக்கியத்தைப் படித்து அப்பாடத்தில் பட்டமும் பெற்றதில்லை. இளம் வயதில் கான்வெண்டில் படித்துவிட்டுப் பல்கலைக் கழகத்துக்கு வரும் பெண்களில் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் ஏழைக் கிராமக் குடும்பம் ஒன்றில் படித்து வந்த அந்தக்கால இளைஞன் கே. யின் இறுதி இலட்சியம். அதனால் அப்பெண்களிடம் பழகுவதற்காக ஆங்கில சினிமாக்களைப் பார்த்தும் பத்திரிகைகளைப் படித்தும் ஆங்கிலம் கற்றவன் கே.  இருபதாம் நூற்றாண்டில் எந்தெந்த ஆங்கிலக் கவிஞரிடமிருந்து உத்வேகம் பெற்று கே.யின் மொழி இலக்கியம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவானது என்று கே. அந்த இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்குக் கட்டுரை  அளித்திருந்தான். இங்கிலாந்தில் யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை எல்லாம் இங்கிலாந்து கவிஞர்கள் என்று கே. எழுதியிருக்கிறான்  என்று ஆனந்த தீர்த்தன் பொருமினான். பின்பு நகரத்திலிருந்து பாக்கு வியாபாரம் செய்யும் ஊர் இலக்கியச் சங்கத் தலைவரால் நடத்தப்படும் பத்திரிகையில் பல்கலைக்கழகம் வெளியிடும் இலக்கிய வரலாறு பற்றி “பாரெல்லாம் புகழும்  நம் மொழியில் இறக்கப்பட்ட புளுகுமூட்டைகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி ஆனந்த தீர்த்தன் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான். ஆனந்ததீர்த்தன், டென்னிசனையும் வர்ட்ஸ்வர்த்தையும் கே. தனித்தனிக் கவிஞர்கள் என்ற அறிவில்லாமல் “டென்வர்த்” என்று ஒரு புதுப்பெயரை அறிமுகப்படுத்தியுள்ளான் என்று குற்றம் சாட்டினான். ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் ஒரு புதுக்கவிஞனை கே. அறிமுகப்படுத்தியதற்கு கே.யை இங்கிலாந்துக்கு அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கட்டுரையை முடித்திருந்தான்.

இவ்விஷயம் பல்கலைக்கழகத்தில் உடனே பரவியதால் கே. ஒருவாரம் தலைமறைவானான். நெஞ்சை நிமர்த்தியபடி அந்த ஒரு வாரம் நடமாடிக் கொண்டிருந்த ஆனந்ததீர்த்தன் அடுத்த வாரம் பத்திரிகையில் வந்த சிறு விளக்கத்தைப் படித்துப் பல்லை நறநறவென்று கடித்தான். அந்த விளக்கத்தில் டென்னிசன் மற்றும் வர்ட்ஸ்வர்த் என்று கே. எழுதிக் கொடுத்ததைப் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பவர்கள் தவறுதலாக “டென்வர்த்” என்று அச்சுக் கோர்த்துப் பிழை செய்துள்ளார்கள். அதற்காகப் பத்திராதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் என்றிருந்தது. ஒருவாரம் காணாமல் போன கே. உடல் நலமில்லாமல் இருந்ததாய் கூறியபடி நானும் ஆனந்ததீர்த்தனும் கான்டீனுக்குப் போகும்போது எதிர்பட்டு  “எப்படி இருக்கிறீர் ஆனந்த தீர்த்தன்” என்று எதையும் அறியாதவன் போல் பேசிவிட்டுப் போனான். கொஞ்சம் மரியாதை கூடியிருந்ததைக் கவனித்தாயா என்று வினவினான் ஆனந்ததீர்த்தன்.

ஆனந்ததீர்த்தன் அன்று மாலையிலிருந்து இலக்கிய வரலாற்று தொகுப்புக்குக் கே. கொடுத்த கே. யின் கையெழுத்திலிருக்கும் மூல கையெழுத்துப் படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டான்.

கே. மறைந்த மறுவருடம் பல்கலைக்கழகக் குவர்டர்ஸின் அவனுடைய வீட்டை அவன் குழந்தைகள் படித்து முடிப்பது வரை காலி செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். (அவர்கள் மொழியில் சிறுசிறு இலக்கிய சண்டைகளில் எல்லாம் முதலமைச்சர் ஈடுபடுவார்.)அதற்கும் அவன் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கு அவனுடைய புகழ்பெற்ற ஒரு நூலின் பெயரை வைக்கவும் ஒரு விழா நடந்தது. அந்த நூலின் பெயர், சமஸ்கிருதச்  சொல்லால்  ஆன பெயர். “விஸ்மிருதி”.  அதற்கு அர்த்தம் ‘மறதி’ என்பதாகும். அந்தப் புத்தகத்தை ஆனந்ததீர்த்தன் ஆங்கிலத்தில் எனக்கு மொழிபெயர்த்து விளக்கினான். எல்லோரும் ‘நினைவால்’ கவிஞர்களும் நாவலாசிரியர்களும் எழுதுகிறார்கள் என்று விளக்குவார்கள். கே. என்ன செய்தானென்றால் கவிஞர்கள் மறதியிலிருந்து எழுதுகிறார்கள் என்று விவாதித்ததான்.   அதனால் அவனுடைய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதை வழக்கம்போல் ஆனந்ததீர்த்தன், வேறு ஒரு மொழியிலிருந்து அடித்த காப்பி என்றான். கே. அந்தச் சொல்லை இன்னொரு மொழியிலிருந்து எடுத்திருக்கலாம். அவனுடைய மொழியின் முக்கியமான கவிஞரின் கவிதைகளை அவர் குடிபோதையில்  எழுதியதை – எல்லாவற்றையும் அவர் மறந்தபோது – எழுதியதை அவர் இறந்த பிறகு அவர் எழுதிய டைரியைத் தேடி எடுத்து  எந்தெந்த தேதியில் குடித்தார் எந்தெந்த தேதியில் குடித்துவிட்டுக் கவிதை  எழுதினார் என்ற தகவலைத் திறமையாய் 10 பக்க அளவு தொகுத்து முக்கியமான கவிதைகள் என்று அந்த மொழிப் பள்ளிப்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட கவிதைகளை ஆதாரத்துடன் ‘குடிபோதைக் கவிதைகள்’ என்று எழுதி இறுதியில் “நாம் எல்லோரும் நினைவுடன் கவிதை எழுதுவதாய் நினைக்கிறோம், நம் மொழியின் தேசியக் கவிஞர் மறதியில் தான் முக்கியமான கவிதைகளை எழுதி நம்மொழிக்கு உலகப் புகழைத் தந்தார் என்று விவாதித்தான். எட்டுப் பதிப்புகள் மூன்று ஆண்டுகளில் கண்ட அந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தபோது குடிபோதைக் கவிதைகள் என்பதை “விஸ்மிருதிக் கவிதைகள்” என்று தலைப்பைத் திறமையாக மாற்றியிருந்தான். இப்படி இலக்கிய வரலாற்றையே மாற்றினான்.கடந்த 20, 25 ஆண்டுகளாய் விஸ்மிருந்தி பற்றியும் கே.யின் பெயரையும் குறிப்பிடாமல் இலக்கியக் கூட்டங்களும் டி.வி. விவாதங்களும் நடைபெறாது என்ற அளவு விஸ்மிருதி என்ற சொல் புகழ்பெற்றுவிட்டது.

பல வருடங்களாய் அவன் பெயர் அந்த மொழியில் ஒரு முக்கிய முத்திரைபோல் ஆகியிருந்தது. அவனை விமரிசிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவனுடைய மாணவர்களும் மாணவிகளும் நாங்கள் கே.யின் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட்டார்கள். தலைநகரில் அவனுடைய பெயர் பரவியிருந்ததுபோலவே சிறுகிராமங்களிலும் அவனுடைய பெயர் பரவியிருந்தது. அதை நானே கண்கூடாகப் பார்த்தேன். ஏதோ வேலையாய் நான் மலைப்பக்கத்துக் கிராமத்தில் இருந்த  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் என் முகவரியை எழுதிய லெட்ஜரின் மூலம் தலைநகரின் மொழித்துறையில் நான் கே.யுடன் வேலைபார்த்தவன் என்பதை அறிந்த ஹோட்டல் மானேஜர் “உண்மையிலேயே நீங்கள் கே.யுடன் வேலை பார்த்தவரா” என்று கண்கள் அகலவிரிய என்னை ஒரு அதிசயப் பொருளாய் பார்த்தான். கே.யைப் பற்றி 5-ஆம் வகுப்பில் சில ஆண்டுகளாய்  கே.யின் உருவப்படத்துடன் பாடம் ஒன்று இருந்தது. ஏழைக்குடும்பத்தில் அவன் பிறந்ததும் அவர்களின் 1 ½  கோடி மக்கள் – அம்மக்கள் கழுதைப்புலி வம்சராஜர்களின் வழித் தோன்றல்கள்  என்பது பெருமைக்குரியது என்ற பிரஸ்தாபத்துடன் – பேசும் சிறிய மொழியை அமெரிக்காவில் கற்பித்தவன் என்பதும் முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அதுபோல் அம்மக்களின் மலைப்பிரதேச பாரம்பரிய கதைகளைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தொகுத்தவன் என்பதும் அதனால் அவன் பெரிய இலக்கியவாதி (ஸாகிதி) என்றும் அவனுக்குரிய புகழுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ‘ஸாகிதி’  என்பவர்கள் எப்போதும் புகழுக்குரியவர்கள் என்று அம்மக்களிடம் ஒரு கருத்து இருந்தது.

அவன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு (அவன் இறந்தபோது அவனுக்கு 46 வயது) விழாக்குழு அவனுடைய நினைவைப் போற்ற ஒரு பெரிய இலக்கிய விழாவை நடத்தியது. மேடையில் கே.மீது ஒருமுறை அவதூறு பேசிய அவனுடைய துணை ஆய்வாளன் அமர்ந்திருந்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மூன்று நாள் விழாவில் மூன்றாம் நாள் அந்த மாநில முதலமைச்சர் கே. பெற்ற புகழும் அவனுடைய இலக்கிய விளக்கங்களும் எவ்வளவு புதுமையானவை என்று ஒரு சொற்பொழிவு செய்தார்.

மேடையில் கே.யின் மனைவி சரஸ்வதி அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய, குருவிக் கால்கள் போன்று தோற்றம் தரும் அவர்களின் மொழியில் நான் இதுவரை கேள்விப்படாத கே.யின் பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.

“வெற்றி என்பது ஒழுங்கு;  ஒழுங்கில்லாதது Evil” என்று கடைசி சொல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்தமாதிரி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை ஒரு மரபுபோல அவர்கள் மொழியில் செய்தவன் கே. என்று ஒரு கருத்தைச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ பொய்யோ கே.யின் பெயரைச் சொன்னால் எல்லோரும் தங்களுக்கும் தாங்கள் சொல்வதற்கும் அங்கீகாரம் அந்த மக்கள் அளிப்பார்கள் என்று எண்ணியது என்னவோ உண்மை.

வெகுநேரம் ஆடல்பாடல்கள், கவிதை வாசிப்பு என்று தொடர்ந்த விழாவில் கே. தொகுத்த மலைப்பிரதேச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. எல்லா கதைகளையும் கே.யின் ஆவி சொல்வதுபோல் கற்பனை செய்து நடித்துக் காட்டினார்கள். எனக்கு எப்போதோ இறந்துபோன ஆனந்ததீர்த்தனும் ஞாபகத்துக்கு வந்தான். யாருக்கும் தெரியாதவனாய் ஆனந்ததீர்த்தன் மாறிப்போனதை நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தனின் ஆவி இப்போது இந்த விழாவைப் பார்த்தால் எத்தகைய விமரிசனத்தை முன்வைக்குமென்று விநோதமாய் ஒரு கேள்வி தோன்றியது.  அத்துடன் அந்த ஆவி மேடையில் அமர்ந்து அன்றைய துணை ஆய்வளான் கே.யைப் பற்றி இன்று “தன்னை ஆளாக்கியவன் கே.” என்று கண்ணீர் விட்டதைப் பற்றி என்ன நினைக்கும் என்றும் கேட்கத் தோன்றியது. அந்த கே.யின் துணைவனாக அந்தக் காலத்தில் இருந்த ஆய்வாளன் கே. தன் விரோதிகளும் அவனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்படி கருத்துக்களைத் தன் நூல்களில் வைத்துள்ளதால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவன் புகழ் மறையாது என்றான். “சரித்திரத்தில் பல விஷயங்கள் புரியாதவை” என்ற கே.யின் மேற்கோள் இப்போது எனக்கு ஞாபகம் வந்தது.

 

(உயிரெழுத்து இதழில் வந்தது.)

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டு நூல்கள்

அ. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள்

Kafkavin praga wrapper-001-001
மேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.
ஆ. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்Maga sannithanam wrapper-001-001
கடந்த மூன்று ஆண்டுகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும் இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.
————————————————————————-