Category Archives: Uncategorized

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் இந்தியப் பாலின ஏற்றத் தாழ்வுகள் -2 கமலா மரியுஸ்

கட்டுரை ஆசிரியர்  –  கமலா மரியூஸ், வருகைப் பேராசிரியர் பொர்தொ பல்கலைகழகம், பிரான்சு; பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

  1. வாய்ப்புகளில் சமத்துவமின்மை

 

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்புடன்   ஒப்பிடுடுகையில்  கல்விபயின்றவர்  விகிதாச்சாரம் 2001 ஆம் ஆண்டில்  64.83  சதவீதமாக இருந்தது, இவ்வெண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது தெரிய வந்தது. எனினும் பெண்கள் நிலமையில் காண்கிற சமத்துவமின்மை  அவர்களுடைய கல்விவாய்ப்பிலும் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை நிலை. தமிழ்நாடு மாநிலத்தில்  கவனிக்கத்தக்க வகையிற் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக  1982 ஆம் ஆண்டில்  இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைவருக்குமென நடைமுறை படுத்தியது, ஆரம்பக் கல்வி மட்ட த்திலேயே  பள்ளிக் கல்வியைத் தொடராமல் வெளியேறும் மாணவர்களைத் தடுக்கும் வகையில்  கட்டாயக் கல்வியைச் சட்டமாக்கியது போன்றவை  அன்றையத் தமிழ்நாடு அரசின் முயற்சிகள். அடுத்ததாக  நாட்டின் 2010 ஆண்டு ஏப்ரல்  முதல் தேதியிட்ட சிறுவர்க்கான கட்டாய இலவசக் கல்வி அரசு ஆணை (Right of children to free and compulsory education act  2009) கடைசியில்  6லிருந்து 14 வயதுவரையிலான  அனைத்து சிறுவர் சிறுஅனைவருக்கும் தொடக்கக் கல்வியைப்  பெறுவதற்கான உரிமையை முதன் முதலாக வழங்கியது. 80 சதவீத மாணவர்க்குக் கிடைத்த மதிய உணவுத் திட்டமும், 70 சதவீத மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டப் பாடப் புத்தகங்களும் கூடுதற் பலனை அளித்தன.

tx-alphab-inde-par-caste-par-age

எனினும் கல்விவாய்ப்பில்  பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவே செய்கின்றன. உதாரணத்திற்கு இருபாலினத்திரிடை கல்வி அறிவை,  2011ஆம் ஆண்டில்  ஆண்களில் 82.1 விழுக்காட்டினரும், பெண்களில் 65.5 விழுக்காட்டினரும் பெற்றிருந்தனர். அதாவது பாலின அடிப்படையில் பார்க்கிறபொழுது 2001 ஆம் ஆண்டில் வேறுபாட்டின் சதவீதம் 21.6 விழுக்காடு  என்றிருந்தது, 2011 ஆம் ஆண்டில் 16, 7 விழுக்காடு குறைந்துள்ளது  தெரிய வந்தது.  எனினும் எழுத்தறிவு பெற்றவரெனத் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையினரில் கணிசமான ஒரு பகுதியினர் அரசின் கல்வித் திட்டம் வகுத்துள்ள கல்வி அறிவை நிறைவு செய்யாதவர்கள், தவிர இந்தக் கல்வி அறிவு பெற்றவர்களென மக்கள் கணக்கெடுப்பு கையாளும் சொல்லாடலின் பொருளேகூட ஒரு குடும்பத் தலைவர் அளிக்கிற தகவலை அடிப்படையாக க் கொண்டது. தவிர  எழுதப்படிக்கத் தெரிந்தவர்  என்பவர் ஒரு குறிப்பிட்ட மொழியை ஓரளவு வாசிக்கவும் எழுதவும் கூடியவர்  என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.  இந்த எழுதப்படிக்கத் தெரிந்தோர் வீதாச்சாரம் வயதின் அடிப்படையில்  இருபாலினரிடையே வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  ஆண்கள் 54 சதவீத த்தினரும் பெண்கள் 19 சதவீத த்தினரும் கல்வி அறிவு உடையவர்கள். 10 வயதிலிருந்து 14 வயதுகுட்பட்ட பிரிவினரில்  பையன்கள் 82 சதவீதமும், பெண்கள் 78 சதவீதமும் கல்வி கற்றவர்கள். 14 வயதிற்கும் 17 வயதிற்கும் உட்பட்ட பிரிவினரிடை எழுதப் படிக்கத் தெரிந்தவர் சதவீதம் பெண்களித்தில்  32 சதவீத த்திலிருந்து  54 சதவீத த்தை இன்று எட்டியுள்ளது.

2-2012-09-27-11-32 7-img_3162_dxo

ஆயினும் இந்திய தேசத்தில் சராசரியாக எழுதப் படிக்கத்  தெரிந்தவர்களின்   விகிதாச்சாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்  வெறுமனே வயது, சாதிகள், வாழ்விடத்தின் நகரத் தன்மை ஆகியவற்றைப் பொருத்தவை மட்டுமே  அல்ல. உயர்சாதியினர் வசிக்கும் நகரப்பகுதிகளில் கல்விஅறிவுபெற்றொர் விகிதாச்சாரம் அதிகம். இம்மாதிரியான இடங்களில் இந்துக்கள் கிறித்துவர்கள் என்ற பேதங்கள் கல்வியறிவு ஏற்றத்தாழ்வில் தெரிவதில்லை. அவ்வாறே குடும்ப வருவாய் அதிகரிக்கிறபொழுது, அதற்கிணையாக  அக்குடும்பத்தில்  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணும் எழுத்தறிவு சமத்துவமின்மை வீதாச்சாரம்  குறையவும் செய்கிறது (fig 5 ).

5-abandon-scolarite-table

6-carte-alphab-femmes

பள்ளிபடிப்பைத் தொடராமல்  வெளியேறும் விழுக்காடும்  பெண்களிடத்தில் அதிகம். அதிலும் குறிப்பாக  தலித் , பழங்குடி மக்கள்  மற்றும்  இசுலாமியர் ஆகியோரிடை  மிகவும் அதிகம். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, நகரத்தில் வாழும் வாய்ப்புள்ள இசுலாமியர்   போன்ற சாதமாகனச் சூழ்நிலைகளுக்குப் பின்னரும் தொடரவே செய்கிறது. பள்ளிக் கல்வியை முடிக்காத  உயர்சாதி இந்துப் பிள்ளைகள்  8 சதவீதம் ஆனால் அதேவேளை , இசுலாமியடரித்தில் 26 சதவீதமும், தலித் மற்றும் பழங்குடிகளிடத்தில்  31 சதவீதம் என்றிருக்கிறது. உழைக்கும் வயதுடைய உயர் சாதி இந்துக்கள், ஜெயின்கள், கிறித்துவர்களிடை  ஆண்களில் 16லிருந்து 17 சதவீத த்தினர் பட்டமோ , டிபளாமோவோ பெற்றிருக்கிறபோது; தலித், பழங்குடியினர், இசுலாமியர்கள் ஆகியோரிடை 4லிருந்து 6 சதவீத த்தினரும் அதிலும் பெண்கள் என்றுவருகிறபோது  இப்பிரிவினரில் 2 சதவீத த்தினரே அத்தகுதியைப் பெற்றுள்ளனர்.

 

கல்வி அறிவில் காணும் இந்த ஏற்றத் தாழ்விற்கு கல்வி நிறுவனங்களில் நிலவும் சூழல்களுங்கூட காரணம். உபகரங்கரண ங்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை தேவைக்கேற்ப அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதாதது, அல்லது பணிக்கு ஒழுங்காக வராதது,  அவர்கள் கல்வி அறிவிலுள்ள குறைபாடுகள், கல்விநிறுவன செயல்பாடுகளில் காணும் குறைபாடுகள் போன்றவை இன்னொருபக்கத்தில் முறைசாரா கல்விமுறைக்கு வழிவகுக்கின்றன ( மாலைக் கல்வி, பிரத்தியேகமான கல்வி ஏற்பாடுகள் ..). அடுத்துப்  பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி ஸ்தாபனங்கள் என்றாலே மேல்தட்டு மக்களுக்கு என்பதுபோல இவ்விடயத்தில் அரசு காட்டும் மெத்தனமும்  சமூகத்தில் கல்வி அறிவில் காணும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம். எனினும் 2008க்கும் 2013க்கும் இடைபட்டக் காலத்தில் 58000 அரசுப் பள்ளிகளும் 70000 தனியார் பள்ளிகளும்  கட்டப் பட்டுள்ளன.

 

மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறபோதும் மாநில அரசுகளில் சொந்தத் திட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இத்துறை உள்ளதாலும் மாநிலங்களிடை சீரற்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணம்(fig 8). இதன் விளைவாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,இமாசலப்பிரதேசம், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் விகிதாச்சாரம்  70 சதவீத த்திற்கு அதிகம்: மாறாக ஜர்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, பீகார், ராஜஸ்த்தான் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலைமை, குறிப்பாக கடைசி இரண்டு மாநிலங்களிலும் கல்வி அறிவு 53 சதவீதம்(fig 7 ).இருந்தபோதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் பாலின அடிப்படையிலான கல்வி அறிவிலுள்ள  ஏற்றத் தாழ்வு வெகுவாக க் குறைந்துள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை,

 

என்னதான் கல்வி அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் பாலின அடிப்படையில் காணும் சமத்துவமின்மைக்கு மக்களின் சமூகம் மற்றும் பண்பாடுகள் காரணம் என்பதும் தெளிவு. பெண்பாலின எண்ணிக்கையை வரம்பிற்குட்படுத்துதல், சமயத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் பொதுவிடத்திற்கெனப்  பின்பற்றும் ஒழுங்கு போன்றவையும் இப்பிரச்சினையில் முக்கிய ப்பங்கினை வகிக்கின்றன.

 

3          பொதுவெளிப் பயன்பாட்டில் பாலின அடிப்படையிலான நிர்ப்பந்தங்கள்

 

ஆண்கள் பெண்கள் இருபாலினருமே பொதுவெளிகளில் காணக்கிடைத்தாலும், உடலளவில் பெண்களின் அண்டைவெளி புழக்கத்தை   சமூகத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகிற  பண்பாட்டு நெறிமுறைகள் அனேகம்.  கூட்டுக்குடும்பம் அல்லது  சார்ந்திருக்கும் சமுதாயம் காரணமாக, ஒருவித க் கட்டுப்பாடு  ஒருவித சமூகக் கெடுபிடி  இயல்பாக செயல்பட்டு ஆண்களிடமிருந்து பெண்களை விலக்கிவைப்பதில் சறுக்கல்களை தவிர்க்கும் முனைப்புத் தெரிகிறது. அன்றாடப் புழங்கும் இடங்களிலிருந்து வெளியில் வருகிறபோது  ஒருவித அநாமதேயத்தையோ, பிறர் பார்வைக்குத் தப்பிக்கும் உருவத்தையோ தேடிப்பெறவேண்டிய நெருக்கடி பெண்களுக்கு. உள்ளது. இஸ்லாமியப்பெண்களுக்கு பர்தா, சில வடமாநிலப்பெண்களுக்கு (உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்த்தான்)  குங்காட் (Ghunghat)  போன்றவை பொதுவிடங்களின்

உபயோகத்திற்கென்று நிர்ப்பந்திக்கப் பட்டவை. ஆக பொதுவிடங்களில் பெண்கள் புழங்கப் பொழுதுபோக்கு காரணிகளினும் பார்க்க (பூங்கா, காப்பி பார்கள், அழகு நிலையங்கள்  ..) குடும்பம்  அல்லது சமுதாய சார்ந்த காரணிகளே( சந்தை, பள்ளி, குழந்தைகள் பூங்கா, வேலை செய்யும் அலுவலகம், சமய வழிபாட்டு இடங்கள், பண்டிகைகள்) முக்கியத்துவம் பெறுகின்றன. நகரங்களின் பொதுவாக  எங்கும் காண்கிற பூங்காக்கள், திரைப்படக் கூடங்கள் காப்பி பார்கள், பேரங்காடிகள் போன்ற பொதுவிடங்களில் புழங்குகிற உரிமை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கிறது, இம்மாதிரியான பொதுவிடங்கள்  ஒருவகையில் சிலவரம்புகளுடன் நெறிமுறையைக் க்டக்கவும்  ஆண்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முகத்திரையிட்ட பெண்களை அனுமதிக்கின்றன. அதேவேளை  வீதிகளில் கடைவிரித்துள்ள துரித உணவகங்கள், மதுக்கடைகள், மதுவருந்தும் விடுதிகள் ஆண்களுக்கு மட்டுமே புழங்குவதற்குரியவை.

 

எனினும் பொதுவிடங்களில் பெண்களின் நடமாட்டம் என்ற உரிமைக்கான விலை  இப்பிரச்சினையை கையாளுதல், அதனை உணர்வு பூர்வமாக எதிர்கொள்ளுதல்  ஆகிய விடயங்களில் பேரத்திற்கு  உட்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டுஇந்திய மனித வளர்ச்சி  கணக்கெடுப்பின்படி பெரும்பான்மையான பெண்கள் அதாவது மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 73 விழுக்காட்டினர் மருத்துவ மனைகளுக்குச் செல்வதென்றாலுங்கூட தனியே போவதெனில் ஆண்களின் குறிப்பாக தங்கள் கணவர்களின் அனுமதியை பெறாமல் செல்லமுடியாதென்றும் , அவ்வாறான அனுமதியும் 34 விழுக்காட்டினருக்கு மறுக்கப்பட்டிருக்கிறதென்றும் தெரிவிக்கிறது.(fig 8)

8-autonomie-table

வடமாநிலங்களைப்  பொறுத்தவரை கல்வி, வயது, ஏன் பெருநகரங்களில் வசிபதுகூட மருத்துவமனைகளுக்கு செல்லும் வாய்ப்பில் குறுக்கிடுபவையாக உள்ளன. புர்க்கா மற்றும் குன்காட் வழக்கிலுள்ள இந்த வடமாநிலங்களில் பொதுவிடங்களில் பெண்களுக்கான  சமத்துவமின்மை மிக க் கடுமையாக உள்ளது (fig 9 ). ஆனால் இப்பிரச்சினை அதிகம் நகரவாழ்க்கையைக்கொண்ட மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்) இப்பிரச்சினை அதிகமில்லை. அரசு ஆவணங்களில் பெண்கள் தங்கள் பெயரை இடம்பெறசெய்வதேகூட பெண்களின் சுய அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக  தொழில் அபிவிருத்திபெற்ற குஜராத், கர்னாடகா மாநிலங்களில் கருதப்படுகிறது

9-cartes-autonomie-femmes

தவிர கூட்டுக்குடும்பம் (la famille indivise)அல்லது விரிந்தக் குடும்பம் (la famille élargie)என்கிற அமைப்புமுறை பெண்ணை அடிமை நிலையில் வைத்துள்ளது. விளைவாக இந்தியக் குடும்ப அமைப்பில்  அதிகம் வன்முறையில் பாதிக்கப்படுபவளாக அவள் இருக்கிறாள். மாமியாரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற பெண் அவ்வாறில்லாத பெண்ணைக்காட்டிலும் அதிகம் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக இது குறித்த பல ஆய்வு முடிவுகள் ( Jejeebhoy, 1998 ) தெரிவிக்கின்றன. எனினும் இக்கருத்தை ஒரு குடும்பத்தில்  மாமியார்  என்பவர் தன் குடும்பத்தின் நன்மதிப்பில் அக்கறைகொண்டு கணவன் – மனைவிப் பிணக்கைக் குறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரியவந்த கணத்தில் , பொதுமைப் படுத்தக்கூடியதல்ல என்பதாகிறது.

.

.(தொடரும்)

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

(அதிகாரம் மூச்சிழந்தால் அதன்காலில் மிதிபட்ட  காலத்தை மறந்து அமைதிகாத்தால்கூட ஏற்றுகொள்ளலாம், ஆனால் அதனைப் பரணிபாடும்  சிற்றெறும்பு மந்தைகளின் போக்கை எப்படி எடுத்துக்கொள்வது.  ‘அதிகாரம் நின்றாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம்பொன்’ என்ற புதுமொழியாகப் பொருள் கொள்ளலாமா ?    ‘இன்குலாப்’  என்ற  கவிக்குரல், புரட்சிக்குரல்  சில நாட்களுக்கு முன்பு அடங்கிப்போனது . அந்த இன்குலாப் குறித்து நண்பர் பா.ஜெயப்பிராகாசம் கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ இணைய இதழுக்கு எழுதியக் கட்டுரை சொரணையுள்ள தமிழ் நண்பர்களுக்காக.)inkulab

 

காலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்

 

கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம்.   பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில்  அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் தவிர  கால எல்லை இல்லை.தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக்காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல்   என்ற பேர் கல்லூரிக்கு!

கவிஞர்கள் மீரா,அப்துல்ரகுமான், அபி    என தமிழில் தடம்பதித்த   கவிஞர்கள்  மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம்;  அப்போது தமிழ் முதுகலையில்   . கவிஞர் நா.காமராசன் முதலாண்டு மாணவர்;   தமிழ்இளங்கலையில் இறுதியாண்டு மாணவன்  நான்.  இரண்டாம் ஆண்டு மாணவராக எஸ்.கே.எஸ் .என அறியப்பட்ட இன்குலாப்.  அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.

           தியாகராசர் கல்லுரியில் முதுகலை முடித்த கவிஞர் மீரா ‘சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக இருந்த வேளையில் அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் (Pre university  course) வாசித்தவர் எஸ்.கே.எஸ். சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்இளங்கலை சேருகிறார். இறுதி ஆண்டு முடிக்கும் வரை  அவர் எஸ்.கே. எஸ். சாகுல் அமீது.

எஸ்.கே.எஸ். சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். அவை யாப்பு சார்ந்த

மரபுக் கவிதைகள்.

மண்னின் குழந்தைகளாய்- இங்கு

வாழும் உயிர்களுக்கு

விண்ணின் ஒளிமுலையில்-இருந்து

வீழும் வெயில் பாலே.

முதிர வைப்பாய் அரும்பை-அனல்

முத்தம் கொடுப்பதனால்

முதிரவைத்தல் முறையோ –அந்த

ஊமை மலர்க் குலத்தை.

சுரண்டிக்  கொழுப்பவர்கள்உன்

சூட்டில் பொசுங்க வில்லை

சுரண்டப் படுபவர் தாம்- உன்

சூட்டில் பொசுங்குகிறார்.

இவை ’வெயில் ‘   தலைப்பில்   அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.

பாடகன் வருகின்றான்’ என்று மற்றொரு கவிதை.

பாலைவனத்தின் சோலைகளே –ஒரு

பாடகன் வருகின்றான் அவன்

பயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு

பாடல் தருகின்றான்

நீலவானத்திற் கப்பால் –எதையோ

நினைத்துப் போகின்றான்

நீண்ட உலகத் துயர் களைய

நெஞ்சை நனைத்துப் போகின்றான்”

மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார்.பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் இன்னும் வீரியமான சொல்லாடல்களை கைவசப்படுத்தினார்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) .இஸ்லாமியரில் கீழ் சாதியான ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

     இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த “நாவிதக்குடி“ – அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன.     தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு -மரைக்காயர் முஸ்லீம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது.   நாவித முஸ்லீம் இளைஞர்களின் அயராத முயற்சியால்நாசுவக்குடி’ என்னும் அந்தப்பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள்   எதிர்ப்புக் கங்கு சீராய்   வளர்ந்தது.        பிரச்சனைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை எதிர்கொள்ள இயலாமல் , ஊதி அணைத்து விட்டு, அல்லது உடன்பட்டுப்  போனவர்கள் பக்கம் அவர் போகவில்லை. மரபுக்கவிதை   விதைத்த போதும் எதிர்க்கருத்தியலின் வேர் அவருக்கு இந்த ஒடுக்கபட்டோர் குரலிலிருந்து உருவானது.

–2–

     1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, தமிழ்நாட்டில் சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல்   வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில்  தமிழ்நாடு முழுதும் கூட்டம் நடத்தி  உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி   தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள். மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் இரா.சேதுவும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாலையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

     பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது.     வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களை விட கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா. முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்)- போன்றோர் ஏற்றுச் செய்தனர்.

     1965 ஆகஸ்டு 15 –ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம்.   கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாபை, ஐ. செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும் வரை அடித்தது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். ” இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது)” என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கிமானவர். ஆயுதப் போராட்டக்   கருத்து 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோது தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றது   உண்மை.

இளங்கலை முடித்த பின் ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor).; 1967 –ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக   நடத்தியகார்க்கி’ இதழில் எஸ்.கே..சாகுலமீது -இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே கார்க்கியில்   பா. செயப்பிரகாசம்,  சூரிய தீபன் ஆகிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற.அப்போதிருந்தே(1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர்   ஆகியது போல் எஸ்.கே. எஸ், சாகுல்அமீது மறைந்து இன்குலாப்   இயற்பெயராகியது.

           “ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்.” என்கிறார்.

செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை . சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி ”ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை“ புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.

பள்ளியில் பயின்ற போது அவரும் நானும் தி.மு.கழகத்துக்காரர்கள். அக்காலத்தின் இளைய தலைமுறை   எப்படி உருவாகிற்றோ   அப்படியே நாங்களும் உருவானோம் . சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 . டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை மார்க்சியத்திற்கு உறுதியான   அடித்தளம் அமைத்தது.   அரசதிகாரத்திலிருந்த தி.மு.க. வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.

     “ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச்செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும்.“

      அவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி , மார்க்சிஸ்ட்   இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர்   புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசியவிடுதலையில் ஊன்றி நிற்பதுவும்  அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

     புரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்த போதுமனிதன்’ ‘புதிய மனிதன்’ என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். எனது தடமும் இன்குலாப் நடந்த பாதை போலவே அமைந்திருந்தது.  பின்னர் புரட்சிகர மா.லெ.இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர   விடுதலை என்னும்   முனைப்பில் ஒன்றாய் இருந்தோம்.

     .

     இன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்த போது ‘மனிதன்’புதிய மனிதன்’ இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே, தவிர முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.

     .”ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதற்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

     கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

  -3-

     கருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே  இன்றும் உயிரோட்டமாய்ச் சுமந்து வருகின்றன. இதனைத் தெளிவுபடுத்துகிறது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்கிற  மார்க்சிய வாசகம். இந்த முழக்கத்தை

வெள்ளையாய்த் தோன்றும்

எந்தச் சொல்லும்

வெள்ளையாய் இல்லாததால்

இல்லை எனது சொல்லும்

வெள்ளையாய்”

என்று  கவித்துவத்துவத்துக்குள் பொதிந்து தருகிறார் இன்குலாப்.

அவரின் சமகாலத்தவர்கள் எவரும் செல்லாத அளவுக்குச் சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார்.   தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது, ஒரு போதும் அந்தச் சுரப்பு வற்றிப்போக விடாமல் இதழ்ப் பணி,   கவிதை, கட்டுரை, நாடகம், சொற்பொழிவு எனப்  பலப்பல   வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.

முதுகில் சுமந்தாய்

அவர்கள் பல்லக்கு

முகத்தில் சுமந்தாய்

அவர்கள் எச்சில்

இன்றும் சுமப்பாய்

அவர்கள் மலங்கள்”

என்று   முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அது இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது.அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலைத் தரும் வகையில்

இனியும் சுமப்பாய்

அவர்கள் தலைகள்”

என வைக்கிறபோது இன்குலாப் என்னும்   கவி வெளிப்படுகிறார்..

முதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய  அனுபவ வெளிப்பாடு; இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.

     ” மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கங்களில் இன்றும் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.

   உயரம் கூடக்கூட அதிகாரமும்   சீரழிவும் அதிகரித்துக் கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும்.    அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், தேர்தல்அரசியலோடு கைபிணைத்தவர்கள்   அனைவரையும் கண்டார்.  எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்ப முடியும் என்பதற்கு சாட்சிகளாக அவர்கள் உருமாறினார்கள்.

சமகால அரசியல் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை .

நவீன கவிதை , நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை.  ஆயினும் அவை பொருட்டேயல்ல.    மனிதனாய் வாழ்ந்த பதிவு தான் முக்கியம்!  சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு வாழ்ந்தார்.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்:

எழுதியநாடகத்தால் நினைக்கப்படுவார்.                                                                                           

 எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

–4–

தோழரே, நினைவிருக்கிறதா?

1983- ஜூலை, இலங்கையின் கொழும்பில், பிறபிற பகுதிகளில் நடந்த தமிழர்மீதான இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி,   ஆகஸ்டு, செப்டெம்பர்மனஓசை’இதழ்களைக் கொண்டுவந்தோம்.செப்டம்பர் இதழில் ”கரையில் இனியும் நாங்கள்…. ” என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள்.

காற்று

ஈழத்தின்

கனலாய் வீசுகிறது.

கரைகளில்

இனியும்

நாங்கள் கைகட்டி நிற்கவோ? “

உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.

ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்

இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!

ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்

எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!

ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்

இன்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!

ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்

இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க! “

மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என குரலைப் பெய்தீர்கள்.

நினவிருக்கிறதா?

தோழரே. நீங்கள் இப்போது ஞாபக அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.

கவிஞராக நீங்கள், எழுத்தாளராக நான்,ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி,அரசியலாளராக தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பலகலைக் கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும்,   விடுதலைப் புலிகளின் “ கலைப் பண்பாட்டுக் கழகம்” பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே,   இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.

நான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு  அந்த உலகுதழுவும் குரலை அடையாளம் கண்டு,கவிதை எழுதிய கரத்தைத் தடவி 2002- அக்டோபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே,   தோழரே!

நேற்று நீங்கள் நடந்தீர்கள்

இன்று நீங்கள் நடக்கிறீர்கள்

நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.

சென்று வாருங்கள் தோழரே! வீர வணக்கம்.

——————————————————————————————–

இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் – கமலா மரியுஸ்

இந்தியா : மக்கட்தொகையும்  வெளியும்

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள்

கமலா மரியுஸ், வருகைப் பேராசிரியர்

  • பொர்தோ-மோந்த்தேஜ்ன் பல்கலைக் கழகம், பிரான்சு;
  • பிரெஞ்சுஅரசின் மொழி மற்றும் பண்பாடு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, இந்தியா.

 

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ; கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றமும் பலரும் அறித்ததுதான், இருந்த போதிலும் சமூகத்தில் மக்களிடையே பெரும் எற்றதாழ்கவுகள் இருக்கவே செய்கின்றன. 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்கிற விகிதாச்சாரமும் ; குறைவான ஊதியமும் ; பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ; ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிறுவ பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. எனவே பாலினம் என்கிற முப்பட்டகக் கண்ணாடியின் உட்கட்ட வேறுபாடுகளை நிலவியலை முன்வைத்து ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டிலிருந்ததே, இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி உதாரணமாக எடுத்தாளப்பட்டு வருகிறது, நியாயமான எடுத்துகாட்டே, இருந்தபோதிலும் அடைந்துள்ள இப்பொருளியல் முன்னேற்றம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளென்று வருகிறபோது வரைமுறைக்கு உட்பட்டதாகிறது . கிடைக்கும் அனேக சமூக அமைப்பின் தரவுகளின் படி ( அதாவது  மக்கட்பெருக்கம், கல்வியறிவு, குடும்பத்தைத் தவிர்த்து பிற பணிகளில் பெண்களின் பங்களிப்பு, மக்களின் ஆயுட்காலம், மருத்துவ வாய்ப்பு ஆகியவற்றில்) பாகிஸ்தானைத் தவிர்த்து பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது, ஆனால் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியென்று வருகிறபோது சிறந்த பலன்களை அது அடைந்துள்ளது. இதனை அமர்த்தியா சென் « வளர்ச்சிப்பாதையில் காண்கிற ஒரு களங்கத்தின் » குறியீடு (2014) என்கிறார்.

இனம், மதம், சாதி, பாலினம் அடிப்படையில் வேறுபடுகிற அனைத்து இந்தியரையும் கோட்பாட்டளவில் பாதுகாப்பதற்கு சமத்துவ அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்றிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும், தனித்தன்மையுடனும் வினையாற்றும் சாதி அமைப்பும் அதன் செல்வாக்கும் நவீன இந்திய சமூகத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் அனைத்து மட்டங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் வலுப்பெற்ற காரணமாக இருக்கின்றன என்பதும் உண்மை

12-img_6112 இந்த வெவ்வேறான ஏற்றதாழ்வுக்கான அடிப்படை காரணங்களை ஒட்டுமொத்தமாக அணுகுவதா அல்லது அவற்றின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை தெளிவுபடுத்துவதன் மூலம் அனைத்தையும் சேர்ந்தார்போல விளங்கிக்கொள்வதா ? என்பதே தற்போது நமக்குள்ள கேள்வி.  பாகுபாடு தாக்கக் கருத்தியத்திலும் ( le concept d’intersectionnalité ) [1] இது எதிரொலிக்கிறது  இக்கருத்தியம் எற்றத்தாழ்வுகளிலுள்ள ஒருங்கிணைந்த  பண்பினையும் ; சாதிப்பிரிவுகள், வர்க்கப் பிரிவினைகள், பிற அடையாளங்கள், பாலின நோக்கு, மத வேறுபாடுகள், புவிசார்  இடஅமைப்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய அடக்குமுறையையும்  மறு பரிசீலனை செய்வதற்கு பொருத்தமான ஆய்வுக்கருவி. ஆனால் பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினையின் ஒரு கூடுதல் காரணி  என்பது உறுதி. ஆனால் இதனைப்  வர்க்கம் மற்றும் சாதிய வேறுபாடுகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அமர்த்யா சென் கூறுவதைப் போல (2007,233) , « ஐயத்திற்கிடமின்றி  இருவகை உரிமை பாதிப்புகளின் தலையீடு பாலின வேறுபாட்டில் உள்ளது- பெண்ணாகவும் அதேநேரத்தில் பிற்பட்டவகுப்பினளாகவும் அவள்  இருக்கிறாள்  என்ற உண்மை- இது  ஏழ்மையில் உழலும்  குறைந்த அளவு சலுகைகளுடனும் வாழ்கிற  வகுப்பினைச் சார்ந்த பெண்களை பெருமளவில் தண்டிக்கிறது. »

எனினும் சாதி அமைப்பு பாலினவேறுபாட்டில் சிற்சில பிரிவினருக்குச் சாதகமாக வும் அமைத்துள்ளது. பிராமண பெண்ணுடைய நிலமை (2)   ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணைக் காட்டிலும்  பொறாமைப்படக் கூடியதாக இருக்கிறது  தவிர பாலின எல்லைகள் இருப்பினும் சலுகைபெற்ற வகுப்பைப் பின்புலமாகக் கொண்ட பெண்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் இராச்சியத்திற்கு  எதிராகவும், பின்னர் இந்திய அரசியல் உயர் பதவிகளிலும் ஆற்றிய,ஆற்றும்  பங்களிப்புகள் சாதி அமைப்பின் பலன்களைத் தெரிவிப்பவைதான். இந்திரகாந்தி பல ஆண்டுகள் (1966 -1977 ; 1980 -1984) நாட்டைஆள முடிந்தது இதற்கொரு நல்ல உதாரணம். பெண் என்பவள் வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒருபக்கம், நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக ஆவதென்பது இன்னொரு பக்கம் என்ற நிலையில் , இந்தியாவில் நிலவும் பாலின சமன்பாடின்மையை ஓர் இந்தியப் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் ?

சமத்துவமின்மைக்கு மாறுபட்ட பல காரணிகளைப் போலவே, மாறுபட்ட அதன் வடிவங்களும்  அதாவது வெளி சாரந்த பாகுபாடுகள், வன்முறைகள் அல்லது அமர்த்யா சென்  மொழியில் (2005) சொல்வதெனில் : வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவப் பாதுகாப்பின்மை  போன்றவையும் காரணமாகின்றன. உடல் சார்ந்த ஒரு சில வன்முறைகள் ( வரதட்சணை கொலைகள் , பெண் சிசுக்கொலைகள், பாலுறவு அடிபடையிலான வன்முறைகள்) நீண்ட நாட்களாகவே வெளிப்படையான பாகுபாடுகளாக இருந்து வந்துள்ளன என்பது மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது (கபாடியா 2002). மாறாக கவனத்திற்கு வராத வெளிசார்ந்த பாலின சமத்துவமின்மை பற்றிய விடயம் ஆய்வுக்கு மிக க் குறைந்த அளவிலேயே இதுவரை உட்படுத்தப்பட்டுள்ளது. « இடங்கள் மற்றும் வெளிகள் சார்ந்தும் பாலினப்பாகுபாடுகள் இருக்கின்றன » என்ற அனுமானத்துடன் அண்மைக் காலத்தில்தான் ஆய்வாளர்கள் (சார்லஸ் 2008, தேசாய் 2007, ரனதீவ் 2002) புதுவிதமான ஆய்வுப்பணிகளில்  இறங்கினார்கள்.

பாலின சமத்துவமின்மையின் பல்வகையான முகங்களுடன் இணைந்த பேதங்களின் பரப்பை அமர்த்யா சென் வழி முறையில் (2007,251)(3) வெவ்வேறான தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தி அவற்றில் வெளிசார்ந்த பரிமாணத்தையும் (மரியுஸ் 2016) கருத்தில் கொண்டு நாம் பரிசீலிப்போம்.

4-2012-09-30-11-18

  1. நிலவியல் அடிப்படையிலான பாகுபாடு

ஆசியாவில் மிக க் குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் பெண்களின் இறப்பு வீதம் அசாதாரண வகையில் அதிகரிப்பது, தொடரும் ஆண்குழந்தைகளின் பிறப்பினால் நிகழும் ஆண்மயம் இவ்விரண்டின் தாக்கத்தினாலு ம் பாலின ஏற்றத் தாழ்வு விகிதம்அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆசியாவின் பாலினப் பாகுபாட்டை நிலவியல் பரப்பு, மக்கள் அடர்த்தி அடிப்படையில்  ஐயத்திற்கிடமின்றி சிறப்பான முறையில் ஆய்வு மேற்கொண்ட மக்கட்தொகை வல்லுனர் கி. கில்மோட்டோ 2010 ஆம் ஆண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் 91 மில்லியன் ஆண்கள் கூடுதாலாக இருப்பார்களெனக் கணித்திருந்தார்.  இவ்விரண்டு தேசங்களிலும் பாலின  விகிதாச்சாரமென்பது உலகின் பிறநாடுகளையொத்ததாக இருக்குமெனில்  20 மில்லியன் பெண்களைக் கூடுதலாக கணக்கெடுக்க நேர்ந்திருக்கும். கணித்த எண்ணிக்கைக்கும், பின்னர் அவதானித்தமைக்கும் மக்கட்தொகையில் காண நேர்ந்த இப்பெரிய இடைவெளியை இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பொருளியல் நிபுணர் அமர்த்யா சென் இந்தியாவிலும் சீனாவிலும் பல மில்லியன் பெண்களை இழக்க நேரும், என்பதை « Missing women » என்ற பெயரில் தெளிவாக க் அனுமானித்திருந்தார்.  இம்மக்கட்தொகை பேரழிவிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய அமைப்பு முறையில் நெறிமுறை மற்றும் மதிப்பீடுகளில் தொடரும் இழப்புகள் மட்டுமின்றி நாட்டில் பிரத்தியேகமாகப் பின்பற்றப்பட்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு அரசியலும் காரணம்.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக இளம்வயது திருமணங்கள் வழக்கில் இருப்பினும், குழந்தைப்பேறு அளவோடு இருப்பதற்கு, தம்பதிகளிடையே பாலியலுறவில் கடைபிடிக்கும் ஒழுங்குகள்  உதாரணத்திற்கு பிரசவத்தை அடுத்து பாலியலுறவை தள்ளிவைத்தல் ; பாட்டியாக நேர்ந்தால், குழைந்தைப் பேற்றை தவிர்ப்பது (அதாவது நாற்பது வயதில்) போன்ற வலுவான சமூக நெறிமுறையும் காரணம்.  தவிர கடுமையான உணவுத் தட்டுப்பாடு என்ற சூழலில், சமூக அமைப்புகள் மற்றும் மால்தஸீயன் சர்வதேச  நிறுவனங்கள( ஐக்கிய நாட்டு சபையின் மக்கட்தொகை நிதியமைப்பு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவி, உலகச் சுகாதாதார அமைப்பு)போன்றவற்றின் தாக்கத்தினால் « மக்கட்தொகை வெடிகுண்டுக்கு  (the Population Bomb) » எதிராக அரசாங்கம் விரிவானதொரு  குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதனொரு பகுதியாகக் கருக்கலைப்புச் சுதந்திரமும் (கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் 1971) ஆண்களுக்கு வாசக்டமியும் நடைமுறைக்கு வந்தன. 1975 -1977ல் இந்திராகாந்தியால் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையிலிருந்த நெருக்கடி நிலையின்போது மிதமிஞ்சிய அளவில் கருத்தடைகள் செய்யப்பட்டன. 1975-1976 ல் வருடத்திற்கு 2.7 மில்லியனாக இருந்த கருத்தடை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை, அதற்கடுத்த வருடம் 8.3 மில்லியனைத் தொட்டது, அவர்களில்  வாசக்டமி செய்துகொண்டவர்கள் மட்டும் 6 மில்லியன்கள் (கில்மொட்டோ, குல்கர்னி, 2010,41). கருத்தடை அறுவைச் சிகிச்சியைத் மிகத் தீவிரமாகக் கையாண்டதன்  விளைவாக காங்கிரஸ் கட்சி 1977 பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது, அதன்பின்னர் கருத்தடை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கையில் விரைவான சரிவையும், மாறாக பெண்களின் எண்ணிக்கையில் உயர்வையும் காண முடிந்தது

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை 250 மில்லியன் பிறப்புகளைத்  தவிர்த்தது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கருத்தடையின் தயவினால்  நடந்தது.(கில்மொட்டோ, குல்கர்னி2010,68). இக்குடும்பக் கட்டுப்பாடு  அரசியலின் மிகக் கொடூரமானதொரு விளைவுகளிலொன்று பெண்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது :  1911 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு  972 பெண்கள் இருந்தார்கள் இன்று 933,  ஆக எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. அதாவது சீனாவை அடுத்து ( 100 பெண்களுக்கு 117 ஆண்கள் என்ற பிறப்பு வீதம்) உலகிலேயே ஆண்பெண் விகிதாச்சாரத்தில் பாதகமான நிலையிலுள்ள நாடு இந்தியா.  2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை  121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர்.  அதன்படி ஆண்கள் எண்ணிக்கையுடன் சரிநிகராக்க 38 இலட்சம்  பெண்கள் கூடுதலாகத் தேவை (624 இலட்சம் ஆண்களுக்கு  586 இலட்சம் பெண்கள்) (fig1). பெரும் எண்ணிக்கையில் தாய்மார்கள் வாரிசாக ஓர் ஆண்குழைந்தை வேண்டுமென்று இடையில் பிறக்கும் பெண்குழந்தைகளை மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன் கொன்றுவிடுகிறார்கள். கடந்த  இருபது ஆண்டுகளில் தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு நடமுறையினால் ஆண்ழந்தைகளின் பிறப்புவீதம் கணிசமாக பெருகியுள்ளதையும் பெண்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆண்களுக்கு 945 என்று 1991ல் இருந்தது  2011 ஆம் ஆண்டு 914 ஆக குறைந்துள்ளதன் மூலம் அறியமுடிகிறது. (4)

1-sex-ratio-evolutionகிராமப்புறங்களில் தந்தைவழிச் சமூக சொத்துரிமைச் சமச்சீரற்ற ஆண் பெண் விகிதாச்சாரத்திற்கு சாதகமாக உள்ளதென்பதை பெரியநாயகம் ஆரோக்கியசாமி மற்றும் சீனுவாசன் கோலி இருவரின் (2012) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி (National Family Health Survey (2005-2006), ஒரு குடும்பத்தில் எந்த அளவிற்கு நில உடமையின் அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவிற்குப் பெண்களின் சுயமாக செயல்படும் உரிமை  மட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மை தெரியவந்துள்ளது. அதாவது பெண்களின் இடம் பெயரும் உரிமை, முடிவெடுக்கும் உரிமை, பணிக்கான ஊதியம் இவற்றில் பாதிப்பினைக் காண்கிறோம், தவிர இக்குடும்பங்களில் பையன்கள் பெண்கள் விகிதாச்சாரமும் (0-6 வயது) பையன்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் அக்குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 107 பையன்கள் என்றிருக்கிறார்கள். ஆனால் பத்து ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருக்கிற நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் , அங்கே 100 சிறுமியருக்கு 128 பையன்கள் என்ற நிலை. ஆந்திரப் பிரதேசத்தில் நிலமை மிகவும்மோசம், 4 ஹெக்டார் நிலமுள்ள குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 170 சிறுவர்கள் என்றிருக்கிறார்கள். மாறாக கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய தாய்வழிச் சொத்துரிமை வழக்கிலிருக்கும் மாநிலங்களில் நில உடமை ஆண் பெண் விகிதாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

carte-sex-ratio-indeபாலினப் பாகுபாட்டில் தந்தை வழி சமூகக் கட்டமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை ஒருசில ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள், அதன்படி இஸ்லாமியர்களைபோலவே  இந்துக்களும் காஃப் பஞ்சாயத்தின் கீழ்(அதிகாரம் பரவலாக்கப்பட்ட பின்பு ஆண்கள் மட்டுமேஅங்கம் வகிக்கிற மரபுவழியில் அமைந்த ஆனால் நெறிமுறைகளைப் பின் பற்றாத கிராம சபை)  கௌவுரவத்தை முன் நிறுத்தினார்கள். விளைவாக மிதமிஞ்சிய வகையில் எங்கும் எதிலும் ஆண்கள் என்றொரு நிலைப்பாட்டினை பஞ்சாப், அரியானா மாநில இந்துக் குடும்பங்களிலும் கீக்கியரிடையே ஜாட் எனும் ஆதிக்க வகுப்பினரிடமும், இத்துடன் நில்லாது  கௌவுரவக்கொலைகள், சிசுக்கொலைகளென்ற குற்ற நடைமுறைகளை குஜராத், ராஜஸ்தான் மாநில பழமைவாத இந்துக்களிடமும் இஸ்லாமியர்களிடமும் காண்கிறோம். «  மேல்தட்டுமக்களின் கருத்தியங்கள் அல்லது உயர்சாதி பிராம்மணர்கள் மற்றும் பிரதிநித்துவ அமைப்பெனக் கூறிக்கொண்ட நவீனம், இவற்றுடன் ஆணாதிக்கம், இப்படி அனைத்துமாகவிருந்த இக்காவலரண்கள் பெண்களை வேட்டையாடுவதற்கு பெரிதும் ஆதரவாக இருந்தவை »(ஹெஸே 2014,277). மேலும் பிராந்தியப் பிரிவினைகளும் பாலினப் பாகுபாட்டில் குறிப்பிட்டுசொல்லும்படியாக ஏற்றத்தாழ்வுகளைத் தெரிவிப்பவைகளாக உள்ளன : வடமேற்கு மாநிலங்களை (ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்த்தான், குஜராத் ) தென்மாநிலங்கள் அல்லது கிழக்குப்பிராந்தியங்களுடன் ஒப்பிடுகிறபோது பிந்தியவற்றுள் ஆண் பெண் விகிதாச்சார  ஏற்றத்தாழ்வு அத்துணை முக்கியத்துவம் பெறவில்லை என்பது கண்கூடு.  (fig. 2).

carte-sex-ration-enfants-indeஎனினும் இந்தியச் சமூகங்கள் பாலின விகிதாச்சாரத்தைத் தாங்கள் தேர்வு செய்யும் நிலையிலில்லை என்பதையே இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் அல்லது தலித்துகள் மூலம் அறிகிறோம். அங்கு நாட்டின் இதரப் பிராந்தியங்களைக் காட்டிலும் ஆண்பெண் விகிதாச்சார எற்றத்தாழ்வுகள் கூடுதலாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும் அதன் பிரத்தியேக பண்பாடுகள், சமூகப் பண்புகள் ஆகியவற்றைபோலவே, அவர்கள் வாழும் இடமும் மேற்கூறப்பட்ட ஏற்றத்தாழ்விற்குக் காரணமாகிறது(கில் மோட்டோ, 2010).  உண்மையில் பாலினத் தேர்வு தொடக்கத்தில் செல்வாக்குடன் இருந்த பகுதி, வரலாற்றளவில் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடு எங்கு வலுவாக இருந்ததோ அப்பகுதி, அது குறிப்பாக குஜராத் தொடங்கி பஞ்சாப் வரை விரிந்துள்ள மேற்குப் பிராந்தியம்.  அங்கு பெண் சிசுக்கொலை பரவலாக வழக்கிலிருந்த காலத்தில் , அதனை ஒழிக்க காலனிய அரசாங்கம் கடுமையாக போராடியது.  ஆனால் பெண்களுக்கு எதிரான இப் பாகுபாடு மெள்ள மெள்ள  புதிய பிராந்தியங்களையும் தமது ஆதிக்கத்தின் கொண்டுவர வரைபடம் (fig3) தெரிவிவிப்பதைப்போல தேசத்தின் ஒரு கணிசமான பகுதியை  இன்று அப்பாகுபாடு தமக்குரிமையாக்கிக்கொண்டுள்ளது.  இறுதியாக வெளிசார்ந்த  அண்மையும், பாகுபாட்டின் இயல்புகள் மற்றும் நெறிமுறைகளின் பிரச்சாரத்திற்கு உதவியது(மனியெ,2015) ; பாகுபாட்டின் இயக்கத் தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள சமூகம் மற்றும் பொருளியல் காரணிகளன்றி, கில்மோட்டோ  ஆய்வின் உதவியால் (2004,2006,2008, 2010) இன்று  புவிசார் காரணங்களும் உதவுகின்றன.

மக்கட்தொகையில்  இதுபோன்ற இடையூறு கள் ஏற்படுத்தும் தீங்கான பலன்களை அளவிடத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக்கால தலைமுறையில் எற்பட்டுள்ள பெண்கள் பற்றாக்குறையினால் முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் திருமண வயதை அடைந்துள்ள இளைஞர்கள், விளைவாக தந்தைவழி இனப்பெருக்கமுறை மட்டுமின்றி மரபு வழிபட்ட பாலின கருத்தியமும் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இப்புதிய சூழல் பெண்களின் நிலையில் உண்மையில் மாற்றத்தைத் தந்துள்ளது, அவர்கள் தற்போது தங்கள் வரதட்சணையைக் குறைக்கும்படி பேரத்தில் ஈடுபடவோ அல்லது தங்கள் சாதிக்கு வெளியே மணம் செய்துகொள்ளவோ இயலும் (கௌர் 2014). காஃப் பஞ்சாயத்து அனுமதியுடன் கலப்புத் திருமணங்கள் ஜாட் வகுப்பினரிடையே  நடைபெறுவதைக் காண்கிறோம், அண்மைக் காலம் வரை இதனை நினைத்துப் பார்க்க இயலாது.  குடும்ப அமைப்புமுறை  இன்று கணவன்,மனைவி, பிள்ளைகள் எனும் தனிக்குடும்பமாக மாறிவருகிறது, இப்போக்கிற்கு, உலகமயமாக்கப் பட்டப் பொருளாதாரம் தரும் ஒத்துழைப்பினால்  பெண்களுக்கு வேலைவாய்ப்ப்பும்  அதனால் அவர்களுக்கு வாய்க்கிற தனித்து செயல் பட முடியுமென்ற  நம்பிக்கையும் தந்தைவழி சமூகத்தைக் கலகலக்கச் செய்வதோடு ஆண்பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தியத்தை உபயோகமற்றதாவும் ஆக்கியுள்ளது.  சமச்சீரான பாலின விகிதாச்சாரத்தை  அடைய ஊக்கத்தொகை, பலவகையான நிதி உதவிகளைப் பெண்களுக்கு மட்டுமே(5)  வழங்கி பாலினவேற்றுமைக்கு எதிராகப் பிரச்சாரத்தையும் மேற்கோள்ளவேண்டும்.  பாலின விகிதாச்சாரம் எதிர்பார்க்கின்ற காலக்கெடுவில்  இல்லையென்றாலும் சிறிது முன்போ பின்போ அந்தந்த மாநிலங்களைப் பொறுத்து ஓர் எல்லையைத் தொட்டு  தைவான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப்போல பின்னர் குறையும்,  அதற்கு இங்கும்  பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை பரவலாக்கவேண்டும் என்பது  கில் மொட்டோவின் யோசனை(6), அவ்வழியில் நாமும் சிந்திக்கலாம். இதை உறுதி செய்வதைபோலவே வரை படம்( fig2)வடமேற்கு மாநிலங்களில் (பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், அரியானா)  இந்நிகழ்வு உண்மையாகியிருப்பதை  அம்மாநிலங்களில் பெண்களுக்கு அனுகூலமாக இருக்கும் பாலின விகிதாச்சாரம் தெரிவிக்கிறது, அதேவரைபடத்தில் கிழக்குப் பிராந்தியங்களிலும், ஆந்திர மாநிலத்திலும், பாலின விகிதாச்சாரத்தில் உள்ள  சரிவையும் காணமுடிகிறது.

(தொடரும்)

———————————————–

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)

 

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

 

(பிரெஞ்சுமொழியில் வந்துள்ள எனது இச்சிறுகதை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா சன்னிதனமும் மர்லின் மன்றோ  ஸ்கர்ட்டும்’  என்ற  சிறுகதைத் தொகுப்பில் அடங்கியது.)

ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கிய, காக்கி நிற பெர்முடா; மேலே பூக்கள் அச்சிட்ட பொத்தான்களிடப்படாத அரைக்கை பருத்திச் சட்டை; பூத்த சாம்பல்போன்ற நரைத்த ரோமங்களுடன் மார்பு, கொளகொளவென்று மடிந்த வயிறு; தலையில் ஓலையில் முடைந்த வெள்ளை நிற ஹவாய்த் தொப்பி. தோட்டங்களில் உபயோகித்திற்கென்று தயாரிக்கப்பட்ட மேசைமீது ஒரு பீர் பாட்டிலும் கண்ணாடி கிளாஸ¤ம் இருக்கின்றன. கிளாஸின் அடிப்பகுதியில் மிச்சமிருக்கிற தேன்நிற திரவத்துடன் இணைந்துகொள்ள, விளிம்பிலிருந்து கண்ணாடி சுவரில் எச்சிலும் நீர்த்த நுரையுமாக வடிகிறது. ‘ஏவ்’ என்று புளித்த ஏப்பம் உதடுகளால் பூட்டப்படிருந்த வாயை அகலமாகத் திறக்க வைத்தது. மனைவி பிரான்சுவாஸ் பக்கத்தில் இல்லாத தைரியத்தில் புட்டத்தை உயர்த்தி அபாணவாயுவை இலகுவாக வெளியேற்றியதும், வயிறு இலேசானது. மண் தரையிலிருந்து இறக்கைமுளைத்த எறும்பொன்று தலையை இருபுறமும் அசைத்தபடி முழங்கால் ரோமங்களைச் சாதுர்யமாகப் பற்றி முன்னேறுவதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மேசையில் பேட்டிருந்த இடதுகை ஒத்துழைப்புடன் அதைத் தட்டி விட்டார். அவர் அங்கே உட்கார்ந்திருப்பது செரீஸ் பழங்களுக்கென்று வேலி தாண்ட முனையும் சிறுவர்களைத் தடுக்கவென, பிரான்சுவாஸ் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்திலிருக்கிற அரபு நாட்டவர் பிள்ளைகள் வேலியைத் தாண்டிக்குதித்து செரீஸ் மரங்களில் ஏறி விடுகிறார்கள். பூமியில் அழிந்தாலும் பரவாயில்லை, அப் பிள்ளைகள் வாயில்மட்டும் போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாகப் பிரான்சுவாஸ் இருக்கிறாள். அவளுக்குக் கடந்த மேமாதத்திலிருந்து வயது ஐம்பத்தைந்து. அந்தோணிசாமிக்கு இரண்டொரு வருடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக்கூடும். அவளைப் போல துல்லியமாக அவர் வயதைக் கணக்கிட முடியாது. அவர் பிறந்ததேதியோ வருடமோ நமக்குமட்டுமல்ல அவருக்கும் தெரியாது. பெயர்கூட பீட்டர் சாமியார் வைத்ததுதான். பெற்றவள் என்ன பெயர் வைத்திருப்பாளென்று ஒருவருக்கும் தெரியாது. ‘கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்’ அவரை பெற்றுபோட்டுவிட்டு காணாமற் போனதாகச் சொல்லப்பட்டது. பிரான்சுவாஸை ஒரு சுற்றுலாபயணியாக புதுச்சேரியில்வைத்து சந்திக்க நேர்ந்தது. ரிக்ஷா ஓட்டும் ஒரு நபருக்கும், சேவையொன்றிர்க்கான விலையைச் செலுத்த தயாராக இருந்த பயனாளிக்குமான சந்திப்பாகத்தான் அது தொடங்கியது. இருவருக்கும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் அந்த முதற் சந்திப்பில் இருந்திருக்க முடியாது. அவளுக்கு எப்படியோ, நம்முடைய அந்தோணிசாமிக்கு இல்லை.

 

முப்பது வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. மதியம் கடந்த நேரம்.  பள்ளிக்கூடப் பிள்ளைகள் சவாரியை முடித்துக்கொண்டு வழக்கம்போல தமது ஸ்டாண்டிற்கு அந்தோணிசாமி திரும்பியிருந்தார் எதிர்வெய்யிலுக்காகப் படுதாவை இறக்கிவிட்டு ரிக்ஷாவில்  கண்ணயர்ந்திருந்தார். சொடுக்குப்போட்டதுபோல திரண்ட மேகங்கள் சூரியனைச் சூழ்ந்துகொண்டன. தூறலும் காற்றுமாக இணைந்து மனிதர்களை விரட்ட ஆரம்பித்தது. இறக்கியிருந்த படுதா விலக தூறலில் நனைந்த கால்களா, மனிதர் குரலா அல்லது இரண்டும் சேர்ந்துமேவா?  அந்தோணிசாமியின் தற்காலிகத் தூக்கத்தை ஏதோ ஒன்று கலைத்தது. திடுக்கிட்டு எழுந்தபோது, வெள்ளைக்கார பெண்ணொருத்தி புருவ மயிர்களில் நீர்சொட்ட கழுத்தை இறக்கிக்கொண்டு இவர் எதிரே நிற்கிறாள். சவாரி வரமுடியுமா? என அவள் கேட்டதுபோலிருந்தது. இரண்டவது முறை குரலைச் செலவிட விருப்பம் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஒன்று இரண்டு என விழ ஆரம்பித்த மழைத்துளிகள் பல்கிப் பெருகி அடுத்த சில நொடிகளில் பறைபோல சடசடவென கொட்ட, அந்தோணிசாமி ரிக்ஷாவிலிருந்து இறங்கினார். அவள் ரிக்ஷாவில் அமர்ந்ததும் போக வேண்டிய இடத்தைச்சொன்னாள். லுங்கியை மடித்துக்கட்டினார். துண்டைத் தலையிற்போட்டுக்கொண்டார். ஹேண்ட்பாரில் ஒரு கையும், சீட்டின் பின்புறம் ஒருகையும் கொடுத்து வேகக்கால் வைத்து ரிஷாவைத் தோள்கொடுத்து தூக்க முனைபவர்போல சில அடிகள் தள்ளிக்கொண்டு ஓடினார். அதற்கு அடுத்தகட்டமாக இடப்பக்க பெடலில் ஒருகாலை ஊன்றி மறுகாலால் அடுத்த பெடலைத் தொட்டு மிதித்து உடலில் மொத்தபாரத்தையும் அதில் இறக்கினார். ரிக்ஷா உருளத் தொடங்கியது. வண்டி சீராக ஓடவும், தமக்கும் பிரெஞ்சு மொழி வரும் என்பதுபோல, “மதாம் சவா?” எனக் கழுத்தை ஒடித்துக் கேட்டார். அவள் காதில் விழவில்லையா அல்லது பதில் சொல்ல விருப்பமில்லையா எனத் தெரியவில்லை, அமைதியாக இருந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பத்து ரூபாயோடு கூடுதலாக ஒர் இரண்டு ரூபாய் தாளை அவள் நீத்தியபோது அந்தோணிசாமி மறுத்தார். அவள் வற்புறுத்திக் கையிற் திணித்துவிட்டுச் சென்றாள். அதற்கும் மறுநாளே அவளை மறுபடியும் சந்திக்கவேண்டிவருமென அவர் நினைக்கவில்லை. நேருவீதியில் தமது ரிக்ஷாவில் சவாரி வந்த உள்ளூர் தம்பதிகளை இறக்கிவிட்டு எதிரே பார்த்தபோது அரிஸ்டோ ஒட்டல் வாயிலில் பூ விற்கும் பெண்மனியுடன் அதே பெண் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். “வண்டியை உடனே எடு!” என்ற போலீஸ்காரரின் அதட்டலைக் பொருட்படுத்தாது  அவர்கள் பிரச்சினையில் குறுக்கிட இரண்டொரு நிமிடங்கள் தேவைப்பட்டன. பூவிற்கும் பெண்மணியின் கையில் மல்லிகைச் சரம் மடித்த பொட்டலம். பிரெஞ்சுப் பெண்ணின் கைவிரல்களிடை இரண்டுரூபாய் தாள் ஒன்று. அந்தோணிசாமிக்குப் புரிந்தது “மல்லிதானேம்மா, எத்தனை முழம்கொடுத்த?”, என்ற அவரின் கேள்விக்கு, ” ஒரு முழம்தான் தம்பி கொடுத்தேன், ஆனா முழம் ஐந்து ரூபாய்ண்ணு அஞ்சு விரலைக் காட்டினேன். அந்தப் பொண்ணு, இரண்டு ரூபாய் தாளை நீட்டுது” எனப் பூ விற்கிற பெண்மணி, அந்தோணிசாமியின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவருக்குக் கோபம் வந்தது, “ஏம்மா கொஞ்சங்கூட மனசாட்சிவேணாம், முழம் ஒரு ரூவாண்ணுதானே விக்கிற, அந்தப் பொண்ணு ரெண்டு ரூவாவை நீட்டுது. வாங்கிக்கிணு சந்தோஷமா போவியா” என்றவர் அவள் கையிலிருந்த பூச்சரத்தைப் பிரெஞ்சு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த இரண்டு ரூபாய் தாளை வாங்கி பூக்கார பெண்மணியிடம் கொடுத்தார். பிரெஞ்சுப் பெண் முகம் மலர “மெர்ஸி” என்றாள். அச்சம்பவத்திற்குப் பிறகு  பலமுறை இருவரும் குறுக்கிட்டுக்கொண்டது எதேச்சயாக நடந்ததென்று அந்தோணிசாமி நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளாவே இவரைத் தேடிவந்ததாக நினைத்தாள். ஒரு முறை “என்னை மணம் செய்துகொள்ள விருப்பமா” என அவரிடம் கேட்டாள். வெகுநாட்கள கேட்பாறின்றி சிதிலமாகக்கிடந்த வீடொன்றின் திண்ணையிற் குடிவைத்திருந்த “பொண்டாட்டியும் பிள்ளைகளும்” அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவளிடம்  மறைத்துவிட்டார். இருவரும் அவள் விருப்பப்படி ஒரு கோவிலில் மணம் செய்துகொண்டார்கள். பிரான்சுக்குப்போன ஆறுமாதத்தில், அவரை அழைத்துக்கொண்டாள். இன்றுவரை ஊர் திரும்பவில்லை. பலமுறை பிரான்சுவாஸிடம் கேட்டுப்பார்த்தார்  அவள் சம்மதிக்கவில்லை. ஆகாயத்தில் விமானங்களைப் பார்க்கிறபோதெல்லாம் ஊர் ஞாபகம் வருகிறது. இப்போதும் வாழைக்கு மேலே மெல்ல உருமிக்கொண்டு ஒரு தெற்கு நோக்கி விமானமொன்று போகிறது. குறுக்கிய விழிகளுடன் அந்தோணிசாமியின் பார்வையும் அதனுடன் பயணித்தது.

 

விமானம் அடிவானத்தில் மறைந்ததும் மீண்டும் அந்தோணிசாமியின் கவனம் வாழையின் பக்கம் திரும்பியது. தோட்டத்தில்   பருவத்திற்கேற்ப பிரான்சுவாஸ் பூச்செடிகள், பிறதாவரங்களென வளர்ப்பதும் புதுபித்தலுமாக இருப்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு தோட்டக்கடைக்கு அவளுடன் சென்றபோதுதான் இந்த வாழையைப் கண்டார். ஊரின் ஞாபகமாக இருக்கட்டுமென்று அதை வாங்க நினைத்தார், பிரான்சுவாஸ் கூடாதென்றாள். அந்தோணிசாமி தமது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். வீட்டுத் தோட்டத்தில் அதைப் பதியமிட்டார். ஒருவாரத்திலேயே குருத்து நீண்டு இலையாக உருமாறி சிரித்தபோது, இவரது நெஞ்சில் பூபூத்து, குலைதள்ளியது. தினப்படிக்கு நீர்வார்த்தார். தழை உரம், இராசயன உரமென்று பார்த்து பார்த்து வைத்தார். குருத்துகள் தொடர்ந்தன. ஓரிலை இரண்டிலை ஆனது. முன்னிரவுகளில் விஸ்கிபோதை தலைக்கேறியதும் அதனோடு உரையாடத்தொடங்கி,  பல நாட்கள் மண்தரையில் உறங்கிவிடுவார். பிரான்சுவாஸ் பிரம்பும் தண்ணீருமாக வருவாள். தண்ணீர் முகத்தில் விழும்போதே பிரம்படிகள் உட்காருமிடத்தில் விழும். சரியாக ஐந்தாவது அடியில் எழுந்து உட்கார்ந்து வாயைத் திறவாமல் கட்டிலுக்குத் திரும்புவார். அந்நாட்களில் இரவு சாப்பிடுவதில்லை. அவளும் அதற்கெல்லாம் கவலைகொள்வதில்லை. அந்த வாழைதான் திடீரென்று ஒருநாள் நிலைகுலைந்ததுபோல வாடி நின்றது. இலைகள் சுருண்டு, பசுமையெல்லாம் உறிஞ்சப்பட்டு துவண்டு தலைசாய்ந்து நிற்கிறது. அந்தோணிசாமிக்கு அதற்கான காரணங்கள் விளங்கவில்லை. பிரான்சுவாஸிடம் கேட்க தைரியமில்லை. கேட்டாலும் “உனக்கெல்லாம் அதைச் சொல்லி புரியவைக்க முடியாது” என்பாளென்று அவருக்குத் தெரியும்.

 

ஒரு நாள் அமெரிக்க சீரியலொன்றைப் பார்த்துவிட்டு, பார் மேசையைத் திறந்து ஆரோக்கியத்திற்கும் அவளுக்குமாக விஸ்கி பரிமாறிக்கொண்டு பிரான்ஸ¤வாஸ் சோபாவில் புதைந்தாள். தம்முடைய விஸ்கி கிளாஸ்கொண்டு, அவள் கரத்திலிருந்த கிளாஸைத் தொட்டு ‘உனது உடல் நலனிற்காக’ எனக்கூறிவிட்டு ஒரு மிடறு விழுங்கியதும் அந்தோணிசாமி: “இரண்டு வருடம் தாக்குப்பிடித்த வாழை மூன்றாவது வருடம் ஏன் கருகவேண்டும்?” எனக்கேட்டார். அவள் பதில் சொல்ல விருப்பமில்லாதவள் போல ஒரு மிடறு விஸ்கியைத் தொண்டைக்குழியில் இறக்கினாள். கண்களை மூடி, அச்சுகத்தை நரம்புகள் உடலெங்கும் கொண்டுசேர்த்து முடிக்கட்டுமெனக்  காத்திருப்பவள்போல இரண்டொருநிமிடங்கள் மௌனமாக இருந்தாள்.  அந்தோணிசாமி நிதானமிழந்தார். அவள் கையிலிருந்த விஸ்கி கிளாஸைப் பறித்து, அருகிலிருந்த மேசைமீது வைத்தார். “இல்லை எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும், நான் விடமாட்டேன்” என்று உதடுகள் துடிக்க அவர் கூறியபோது, மது நெடிசுமந்த எச்சில் அவள் முகத்தில் தெறித்தது. இரண்டொரு நிமிடங்கள் சுவாசிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டு ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். என்னவோ நடக்கப்போகிறதென அவர் உள்மனம் எச்சரித்தது. ‘எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்” என அதே மனம் அவருக்குத் தைரியமும் சொன்னது. அவள் எழுந்தாள். நெருங்கியவள் கையிலிருந்த அவர் விஸ்கி கிளாஸைப் பிடுங்கித் தரையில் வீசினாள். அது உடைந்து நான்குபக்கமும் சிதறியது. “ஒவ்வொண்ணுக்கும் உயிர்வாழ சில அடிப்படை தேவைகள் இருக்கு, அதை நம்மால சரியா கொடுக்க முடியாதென்றுதான், அன்றைக்கு வாங்க வேண்டாம் என்றேன். உங்கள் வாழைமரத்தின் முடிவுக்கு நீங்கள் தான் பொறுப்பு” எனக் கோபத்துடன் அவள் கூறியபோது, அந்தோணிசாமியும் ஏதோகேட்கவேண்டுமென்று நினைத்தார். அவள் முகத்தைப் பார்த்ததும் ‘நா காப்பது’ உத்தமமென அடங்கிப்போனார். அதன் பிறகு அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டா¡ள். வழக்கம்போல அன்றிரவும் சோபாவிலேயே அந்தோணிசாமி உறங்கவேண்டியிருந்தது. வாழை இருந்த இடத்தில் “ஒயிட் டேஸ்லர்’ வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்றாள், பிறகொரு நாள்.

 

“அந்தோணி! என்ன செய்யற? கூப்பிடுவது காதுலே விழலை. ஏற்கனவே மணி பத்து ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்குத் தொடங்குமென்று சொன்ன ஞாபகம்” –  தோட்டத்திற்குள் காலெடுத்து வைக்காமல், வீட்டிலிருந்தபடி பிரான்சுவாஸ் குரல் கொடுத்த்தாள். வாழைமீதிருந்த கவனத்தை கரகரப்பான அவள் குரல் சிதைத்தது. நெஞ்சில் உணர்ந்த வலியை “நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்கு” என்ற சொற்களிம்பு குறைப்பதுபோல தோன்றியது. அவர்கள் வீட்டுக்கு நான்குவீடுகள் தள்ளி மொரீஷியஸ் குடும்பமொன்று இருக்கிறது. அந்தோணிசாமி ஒரு ‘தமுல்’-(Tamoul-தமிழர்) என்று அறியவந்த நாளிலிருந்து அவர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அழைப்பார்கள். ஆனால் அந்தோணிசாமி-பிரான்சுவாஸ் தம்பதிகள் எங்கும் போவதில்லையெனத் தீர்மான இருந்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது.  பிரான்சுக்கு வந்த புதிதில் புதுச்சேரிகாரர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். நகரசபையில் பதிவு திருமணத்தை முடித்தபின் இரவு விருந்து. விஸ்கியும், ஒயினும் தாராளாமகக் கிடைத்தது. அந்தோணிசாமி – பிரான்சுவாஸ் மேசைக்கருகே மற்றொரு கணவன் – மனைவி ஜோடி. கணவன்  இவரைப்பார்த்து: “மிஸியே அந்தோணி! ஊருலே நீங்க ரிக்ஷா ஓட்டினவர் இல்லை, இங்கே என்ன பண்ணறீங்க” எனக்கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியதுபோல கலகலவென்று சிரிக்கிறார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். பலரின் முன்னிலையில் தமது கடந்த காலத்தை அந்தப் புதுச்சேரிக்காரர் நினைவூட்டியவிதம் போதையிலிருந்த அந்தோணிசாமியைத் சீண்டிவிட்டது. சிவ்வென்று கோபம் தலைக்கேறிவிட்டது. பிரான்சுவாஸ¤க்கு அங்கு நடந்த தமிழ் உரையாடல் விளங்காமற்போனாலும், உரையாடல் நடுவே வந்து விழுந்த ரிக்ஷா என்ற சொல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்திவிட்டது. அந்தோணிசாமியின் கோபத்தைத் தணிக்க நினைத்தவள்போல அவருடைய கையைப் பிடித்து இழுத்தாள். ” அந்தோணி! வம்பெதுவும் வேண்டாம், புறப்படுவோம்”, என்றாள். அந்தோணிசாமி தணியவில்லை,” ஆமா உங்க பொண்டாட்டியக்கூட லாட்ஜ்லே கொண்டுபோய் விட்டிருக்கேனே. அவங்களுக்கு இங்கே எப்படி, தொழில் பரவாயில்லையா?” எனத் திருப்பிக் கேட்க,  சம்பந்தப்பட்ட இருவரும் கட்டிப்புரண்டார்கள். மற்றவர்கள் சிரமப்பட்டு விலக்குபடி ஆனது. சம்பவத்திற்குப் பிறகு, பிரான்சுவாஸே எபோதாவது சம்மதித்தாலும், அந்தோணிசாமிக்குத் தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. அந்த விரதத்தை முடித்து வைத்தவர் மத்யாஸ் மாஸ்ட்டர். பிரான்சுவாஸ¤ம் மது சம்பந்தப்டாத எதுவென்றாலும் வீடே கதியென்று கிடக்கிற லனுஷன் வெளியிற் போய்வர உதவுமென்றால் பரவாயில்லை என்பதுபோல அனுமதிக்கிறாள்.

 

போன கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக ஒரு பகல் வேளையில் இரண்டு பெண்கள் சூழ, மத்யாஸ் மாஸ்ட்டர் அந்தோணிசாமியின் இல்லத்திற்கு வந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்ததும் “வணக்கம்” என்று ஏகக் காலத்தில் மூன்று குரல்கள்.  அந்தோணிசாமி  “வணக்கம்” என்ற சொல்லை புத்துச்சேரியில் கூட கேட்டதில்லை. பீட்டர் சாமியார் கூட, “வாடா அந்தோணி” என்றுதான் முகமன் கூறியிருக்கிறார். “அந்தோணி! அவர்களை உள்ளே கூப்பிடு, எதற்கு வெளியிலே நிக்கவச்சிருக்க” என்றாள் பிரான்சுவாஸ். வந்திருந்த மூவரும் உள்ளே வந்தார்கள். இவரை வந்தவர்களுடன் பேசச்சொல்லிவிட்டு பிரான்சுவாஸ் போய்விட்டாள்.  அந்தோணிசாமி மூவரையும் சோபாவில் உட்காரவைத்தார். “என்ன குடிக்கிறீர்கள்”, எனக்கேட்டார். நாசூக்காக மறுத்த  மத்யாஸ் மாஸ்டர்தான் முதலில் பேசினார். பெண்கள் இருவரும் அவர் பேசுவதை ஆமோதிப்பவர்களைப்போல ஓயாது புன்னகைப்பதும் தலை அசைப்பதுமாக இருந்தார்கள்.

 

“நாங்கள் மூவரும் யெகோவா சாட்சிகள். தேவனுடைய சாம்ராச்சியப் புகழைப் பரப்பும் பிரசங்கிகள். யெகோவாதான் கடவுள் என்பதை நீங்கள் நம்பவேண்டும். பரிசுத்த ஆவி என்பதெல்லாம் சுத்தப் பொய், அவர் கடவுளே அல்ல. நித்திய நரகம், நித்திய தண்டனை என்பதெல்லாம் ஏமாற்று பேச்சு. சிரியாவில் போர், ஈராக்கில் பங்காளிச் சண்டைகள், உக்ரைன் பிரச்சினை இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கிற ஒரே தீர்வு தேவனரசு நிறுவப்படுவது” – என மாத்யாஸ் மாஸ்ட்டர் மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டுபோக, அந்தோணிசாமிக்கு சோர்வைத் தந்தது.

 

– “நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு விளங்கலைங்க மிஸியெ”, எனக் குறுக்கிட்டார்.

 

– ” இதை புரிந்துகொள்வதில் என்ன  சங்கடம்? நீங்கள் தமிழ் வாசிப்பீர்கள் இல்லையா?”

 

– “ஓரளவு எழுத்தைக்கூட்டி வாசிப்பேன்”.

 

– ” பிரெஞ்சு அல்லது ஆங்கிலமாவது தெரியுமா? ”

 

– “எனக்குத் தெரியாது. மனைவி பிரெஞ்சு வாசிப்பாங்க”

 

– ” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன்  புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

 

இப்போது ஒரு மொரீஷியக் குடும்பம் “மாரியம்மன் கஞ்சிக்கு” அழைத்திருக்கிறது.  மாத்யாஸ் மாஸ்ட்டருக்குப் போன்போட்டு “மொரீஷியஸ் தமிழர்கள் ‘மாரியம்மனுக்குக் கஞ்சி’ படைக்கிறார்களாம், அழைத்திருக்கிறார்கள், இந்த ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்க வரமுடியாது” என்றார். மாத்யாஸ் மாஸ்ட்டருக்குக்கோபம் வந்தது.

 

– “உண்மையில் உங்களை அழைத்திருப்பது யார் தெரியுமா?

 

– “——” – இவர் பதில் சொல்லவில்லை.

 

– பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் உங்களை இணைத்துக்கொள்ளபார்க்கிறான். பைபிள் படிப்பதைவிட்டு இப்படி சாத்தானுக்குப் பலியாகாதீர்கள்.

 

– மிஸியே. எனக்கு இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்போதாது. பைபிள் படிக்க நீங்க கூப்பிட்டீங்க வந்தேன், அவங்க மாரியம்மன் கஞ்சிக்கு கூப்பிடறாங்க போகிறேன்.

 

– இப்படியொரு பதிலை சொன்னால் எப்படி? தெளிவா ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

 

– எனக்குச்சொல்ல தெரியலை.

 

மத்யாஸ் மாஸ்ட்டரின் கையில் தொலைபேசி இருக்கிறபோதே, அந்தோணிசாமி உரையாடலைத் துண்டித்துக்கொண்டார்.

 

பிரான்சுவாஸ¤ம் அந்தோணிசாமியும் மண்டபத்தை நெருங்கும்போது, நான்கு பேர் மாரியம்மன் சிலையை சுமந்தபடி நடந்தார்கள். நான்கைந்தடி துராத்தில், அவர்களுக்கு முன்பாக ஒருவர் கரகத்துடனிருந்தார். சிறுவன் ஒருவன் தோளில் சூலத்தைத் தாங்கியபடி நடந்தான். இரண்டு பெண்கள்  “களிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுட்டே, யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுட்டே” எனப்பாட, மற்றவர்கள் கோரஸாக ‘ஓம் ஷக்டி’ என்றார்கள். அந்தோணிசாமியின் அண்டை வீட்டு மொரீஷியஸ் நண்பர் இவர்களைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க இப்போதுதான் ‘ஷிவ் ஜீ’ பூஜா முடிந்தது, உள்ளே போய் உட்காருங்க” என்றார். மண்டபத்திற்குள் அந்தோணிசாமியும் -பிரான்சுவாஸ¤ம் நுழைந்தார்கள். பெரும்பாலோர் வெளியிலிருந்தால் பாதி நாற்காலிகளுக்கு மேலே காலியாக இருந்தன. எதிரே வரிசையாக நான்கைந்து பஞ்சலோக சிலைகள் சுவர்களில் தகுந்த இடைவெளிகளில் சாமிப்டம்போட்ட காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வலதுபக்கம் நாற்காலிகளை அடுத்து, நடக்க இடம்விட்டு சுவர் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில்  அவரவர் வீட்டில் செய்துகொண்டுவந்த உணவுவகைகளையும் கஞ்சிக்குடத்தையும் எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் தமிழ் திரைபடபாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மொரீஷியஸ் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். புதுச்சேரி மற்றும் ஈழத்தமிழர்களின் குடும்பங்களும் இருந்தன. திடீரென்று மண்டபத்தில் சலசலப்பு. வெளியில் ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டு வந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பது போலவும் இருக்கிற முகங்கள். பிரான்சுவாவும்-அவரும் எதிரெதிரே அமர்ந்து நடத்திய உரையாடல்களும்; மத்யாஸ் மாஸ்டரின் சாத்தான்பற்றிய விளக்கங்களும் பிறவும் ஒரு பெருங்கனவு சமுத்திரத்தின் ஜெல்லிமீன்களாக ஆழ்மனைதில் நீந்திக்கொண்டிருக்க இதுவரை உபயோகித்திராத பலத்துடன் கைகால்களை உதறி பெரும்பாய்ச்சலுடன் வெளியில் வந்தார். எல்லா நாற்காலிகளிலும் அந்தோணிசாமிகள். பெஞ்சிலிருந்த பஞ்சலோகச் சிலைகள்கூட அந்தோணிசாமிகளாகத் தெரிந்தன.

 

– பிரான்சுவா கொஞ்சம் உன்னுடைய மொபைலைக் கொடேன்.

 

– எதற்கு?

 

– அவசரமா ஒருத்தருக்குப் போன்பண்னனும்.

 

– இந்த நேரம் போன் பண்ணக்கூடாது. பிறகு செய்யலாமே.

 

– இப்பவே சொல்லியாகணும், பிறகென்றால் மறந்துபோகும்.

 

போனை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். மத்யாஸ் மாஸ்ட்டரைப் போனில் பிடித்தார்.

 

– ஹலோ! மத்யாஸ் மாஸ்ட்டரா? அந்தோணிசாமி பேசறேன். நான் உங்களிடம் பைபிள் படிக்க வந்தற்கும் மொரீஷியர்கள் அழைத்தார்களென்று  “மாரியம்மன் கஞ்சி”க்கு வந்ததற்கும் காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்.

 

– என்ன அந்த எழவு காரணம்?

 

அந்தோணிசாமிகளைப் பார்க்க முடிவது

 

——————————————————–

எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம்

RK

அடுத்தடுத்து சில பணிகள் காரணமாக முக நூல்பக்கம் அதிக வர இயல்வதில்லை. எனவே ‘எப்படி நடந்தது, என்று நடந்தது என்பதை உணரப்படாமலேயே அந்தி சாய்வதுபோல தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக அதிகம் கவனத்திற்கு வராமலேயே   ரெ. காரத்திகேசுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது..

எனக்கு அவருக்குமான தொடர்பு என்பதைவிட  அறிமுகம் ராயர் காப்பிக் கிளப்  மூலமாக ஏற்பட்ட து. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை  இணைய இதழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது, அவற்றில் சிலவ்ற்றை வாசித்து என்பீது அன்புகொண்டு, நான்  வெளி உலகிற்கு வரவேண்டும் என ஆசைப் பட்டவர்கள் பட்டியலைக் கவிஞர்  சதாரா மாலதியிடமிருந்து தொடங்கவேண்டும்.  மிகச்சிறந்த ஆர்ப்பாட்டமற்ற கவிஞர். இரண்டு  கிழமைக்கு ஒரு முறையாவது மின்ன ஞ்சல் எழுதுவார். பெரியவர் கி.அ. சச்சித்தானந்த த்தை  இலண்டன் வந்திருந்தபோது, அவரைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்து, ஸ்ட்ராஸ்பூர்வரை  அவரும் வந்து மூன்று நாட்கள் தங்கிச்சென்று எனது படைப்புகளைப் பற்றி சந்தியா நடராஜனிடம் கூறி பதிப்பிக்கவைத்தவர். மாத்தாஹரி  நாவல் வெளிவந்தபோது எனி இந்தியன் பதிப்பகத்திற்குச் சென்று கையோடு நாவலைக்கொண்டுபோய் அதற்கு கி.அ சச்சிதானந்தம் எழுதிய மதிப்புரை சம்பிரதாய விமர்சனமல்ல. இன்றளவும் அந்த அன்பு நீடிக்கிறது. அவர் வரிசையில் தான் அமர ர்கள் வே.சபாநாயகம், ரெ.கார்த்திகேசு போன்றவர்களையும் நிறுத்தவேண்டும். இவர்கள் இழப்பு எனது சொந்த இழப்புபோல. ரெ. கார்த்திகேசு கதைகள் எளிமையானவை, பன்முக ஆளுமை கொண்டவர். ஆனாலும் பிறர் எழுத்துக்களை பிடித்திருந்தாமல் மனமுவந்து பாராட்டுவார். பாரீஸில் ஒரு தமிழ் மாநாட்டைக்கூட்டினார்கள். தமக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் ‘நாகி’ உங்களைப் பார்ப்பதற்காக க் கலந்துகொள்ளப் போகிறேன். என எழுதினார். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லையென நினைக்கிறேன். ஆனால் வெளியில் எங்கேனும் சந்திக்கலாமென எழுதினேன்.  ரெ.கா. பிரான்சு வரவில்லை, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அக்குறை  பின்னர் கோவையில் ‘தாயகம் கடந்த தமிழ்’ நிகழ்வில்  தீர்ந்தது.  நண்பர் மாலன், திரு சிற்பி ஆகியோரின் பெரும் பங்களிப்பில்   நடந்த இரு நாள் நிகழ்வில்  ஓர் அமர்விற்கு என்னைத் தலமை தாங்கச்சொல்லியிருந்தார்கள். அது கார்த்திக்கேசுவிற்கும் மாலனுக்குமுள்ள உயர்ந்த நட்பின் விளவாக சாத்தியமாகி இருக்கவேண்டுமென்பது என் ஊகம்.   நிகழ்வின் போது இரண்டு நாட்களும்  ரெ.கா வுடன்  போதிய அளவிற்கு உரையாட முடிந்தது.

மாத்தாஹரி பிரெஞ்சில் 2017ல் வந்துவிடுமென்று நம்பிக்கை.செய்தியை அறியவந்தால்  உண்மையில் மகிழக்கூடியவர்களில் அவரும் ஒருவர். .

எனக்கு சிலர் யோசனைகூறியதுபோல, அவர்கூட மலேசியாவில் ஒரு பரிசொன்றை  ஏற்படுத்தி வருட த்திற்கு ஒரு மூத்த எழுத்தாளருக்கு ஐந்தாயிரம் மலேசிய வெள்ளி  பரிசு கொடுத்திருந்தால், தமிழகச் ஜாம்பவான்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் பகலும், இரவும், காலையும், மாலையும், பூத்தலும், காய்த்தலும் யார் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது?.

 

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்

                கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை.

மணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணித்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம்.

-போதுமான நேரம் இருக்கிறது, இரண்டு வாரங்கள் தங்க இருக்கிறாய்

நேரம், நேரம்! எல்லோரும் இங்கு நேரம் பற்றியே பேசுகிறார்கள்.

விமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான்.

– ‘ ஹூல்ட்ஸ் அம்புஎன்பதென்ன ? எங்கிருக்கிறது ?

புரியலை.

– ‘ஹூல்ட்ஸ் அம்பு‘.

என்ன அம்பு ? அப்படி எந்த அம்பும் இங்கில்லையே.

-அப்படி ஒன்றிருக்கிறது. சினேகிதன் லூசியன் சொல்லியிருக்கிறானே !

லூசியானா ? யார் அது ?

எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன்.

அப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்

-மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது ! – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார்

இதுதான் உங்கள் அறை, எண் 243. இது உங்கள் அறையின் சாவி. – பெண்.

கொஞ்சம் இரும்மா, போகாதே ! உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஹூல்ட்ஸ் அம்பு என்றால் என்ன தெரியுமா?

அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல :

ஹூல்ட்ஸ் அம்பு ? என மீண்டும் வினவினர்.

நீங்கள் அம்பு எனக்குறிப்பிடும் ‘flèche ‘ என்றப் பிரெஞ்சு வார்த்தைக்கு கோபுரம் என்றும் பொருளுண்டு

, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர்.

கிழவரின் பிதற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்ணும் எதையோ உளறுகிறாளென அப்தூலயே நினைத்தான்.

சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.

இது தானாஅது?

கதீட்ரலின் தேவாலய மணிகூண்டு.

பெண்ணின் கை முதியவரின் தோளில் இருந்தது. அவள் பக்கம் திரும்பியவர், «  லூசியன் பொய் சொல்லவில்லை, எனக்கூறினார், அவ்வாறு கூறியபோத, கண்களில் நீர் அரும்பியது

கோபுரத்தின் உயரம் 142 மீட்டர் ! கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் ! – பெண்.

இப்படியின்று இருக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். லூசியன்!…இக்கோபுரம் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான்.

          லூசியான் யார் என அவள் வினவவில்லை. கதீட்ரலின் உயரமான கோபுரத்தின் பக்கம் பார்வை சென்றது. ஹூல்ட்ஸ் அம்பு‘ , எனும் புதிரானச் சொற்கள் இரண்டும் அர்த்தமின்றி அவருடைய கதைசொல்லலில் இடம்பெற்றவை, அவை பொருளுளிழந்த சொற்களாகவே இருந்தன. அவை திடமானவையாக, மிகுந்த உயரத்தில் விண்ணில் பறப்பதற்கு முனைவதுபோல இருந்தன. உணர்ச்சிப் பெருக்குடன், கன்னத்தில் விழுந்து உதடுகளருகே உருண்ட ஆனந்தகண்ணீரைத் தேய்த்துத் துடைதார்.

          ஒரு வாரத்தில் ஸ்லாபூகூம் அவர் இதுவரை அறிந்திராத வேறு பல தகவல்களும் நகரைப்பற்றிக் கிடைத்தன. தமது சினேகிதனின் ஊரிலுள்ள அனைத்தையும் பார்க்க விரும்பினார். குடைராட்டினத்தில் சுற்ற ஆசைபட்ட குழந்தையைப்போல டிராமில் பயணப்பட்டார். செல்லவேண்டிய இடம் தூரமெனில், கார் வைத்திருந்த ஒன்றிரண்டு பேர் வழிகாட்டிகளாகக் கிடைப்பார்கள், அவர்களைச் சென்றுபார்ப்பார். தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நினைத்து, ரோவான் கோட்டை‘ (le château des Rohan), கதீட்ரல் கடிகாரம்,’ le palais de l’Europe’ மண்டபம், அதே பெயர்கொண்ட ஒரு பாலம் ஆகியவற்றைக் காணச் சென்றபோது நூற்றுகணக்கான கேள்விகளை எழுப்பினார். ‘la pharmacie du Cerf’ என்ற மருந்தகம் பிரான்சு நாட்டின் முதல் மருந்தகம் எனும் தகவல் அவருக்கு வியப்பை அளித்தது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறபோது கிராமத்துப் பரணொன்றில் பதுங்கி யிருந்தபோதும், பயணத்தை விடிந்து தொடரலாமென காட்டில் காத்திருந்த இரவுவேளையிலும்,, இலண்டனுக்குச் செல்லும் வழியிலும் சினேகிதன் லூசியன் மொர்பான்ழுடையக் வார்த்தைகள் போல இருந்தன. புதிது புதிதாய் ஒன்றை அறிகிறபோதெல்லாம் அவர் நெகிழ்ந்துபோகிறார். சிற்சில சமயங்களில் அவர் வாய் விட்டுச் சிரிப்பதுண்டு, அதற்கான காரணமும் பூடகமானது. ஊரில் தீவென்று இவர் வர்ணித்தது எப்படி தீவாக அல்லாமல் நதியாக இருந்ததோ அதுபோலக் கேட்டவர்கள் வியப்புற்ற ஸெல்‘(Zel) எனக்குறிப்பிட்டதும், கடைசியில் கதீட்ரலுக்கு எதிரே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர் குடியிருப்பாகத் திகழ்ந்த லா மெய்ஸோன் கமிட்ஸெல் (la maison Kammerzel) என்ற கட்டிடமன்றி வேறில்லை என்பதை விளங்கிக்கொண்டார். லூசியன் மொரான்ழ் நினைவுகளையெல்லாம், காலம் துடைத்திருந்தது, அவற்றில் எஞ்சியவற்றைக்கொண்டு வியப்புக்குரிய புனைவுகளை உருவாக்கினார். இன்று அவையெல்லாம் திரும்ப உண்மையாயின. இதுநாள்வரை பொருளைத் தொலைத்திருந்த அதுபோன்ற சொற்கள், கூற்றுகள் எல்லாம்,நகரைச்சுற்றுகிறபோது எதிர்பாராதவிதத்திலும்,, காப்பி விடுதியில் அற்முகம் ஆனவர்களிடம் வித்தியாசமானதொரு ஆப்ரிக்காவை இவர் இட்டுக் கட்டி விவரிக்கிறபோது கேட்கிறவர்கள் சந்தேகித்தவையும் இன்று உண்மையாயின. கனிம நீர், பீர், சாலட் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டே அப்தூலயே சிரித்துக்கொண்டிருப்பான். ‘இவரை ஏன் அழைத்தோம்என்கிற கவலைகளெல்லாம் அவனிடத்தில் தற்போதில்லை.

           கழிந்த ஒவ்வொரு நாளும் இளமைக்காலத்தை அவரிடம் திரும்ப அழைத்திருந்தது. அல்ஸாஸ் பிரதேச ‘les Dernières nouvelles d’Alsace’ செய்தித்தாளைப் வாசித்துக்கொண்டே காலை உணவை உட்கொண்டிருந்த முதியவருக்கு, ஸ்ட்ராஸ்பூர்நகர 60000 குடும்பங்களும் குடிநீர் விநியோக பிரச்சினையால் தவித்த செய்தியையும், நகரப் பேருந்துகளில் முன்னால் ஏறவேண்டிய நிலைமையையும் இனிப்பிறருக்குச் சொல்லலாம் என்பதை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியையே விலைக்குவாங்கிக்கொள்ளும் உத்தேசத்திலிருப்பவர்போல விடுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தார். ‘கலியா‘(Gallia) என அழைக்கபட்ட அவ்விடுதியின் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கினார். சில சமயம் தனித்தும், சிலசமயம் துணையுடனும் அது நிகழ்ந்தது. அப்போது, மாணவர்களின் உடற்பயிற்சிக் கூடத்தையும், அவர் கண்டிராத புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும்; ஓவியக்கூடத்தில் இசைக்கும் பியானோவையும், புத்தகங்களில் வரிசை வரிசையாகக் கவிழ்ந்திருந்த தலைகளை நூலகத்திலும் கண்டார். மாணவர்களில் ஒன்றிரண்டுபேர் தங்கள் அறைக்கு அழைத்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் அறைக்குச் சென்று அவர்களின் வாழ்வனுபவக் செய்திகளைக் காதுகொடுத்து கேட்பார், இவரும் தன்பங்கிற்கு துல்லியானத் தகவல்களைக்கற்பனையாக உருமாற்றித் தெரிவிப்பதுண்டு. அவரிடம் உரையாடியவர்கள் அனைவரும் ஆளுக்கொருவிதமாய் இருந்தது அவருக்கு வியப்பினைத் தந்தது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பிரதிநிதிகளாக மாணவர்களை விடுதிக்கு அனுப்பியிருக்கவேண்டுமென நினைத்தார். அவர்கள் சொல்ல நிதானத்துடன் கேட்டார், இடைக்கிடை அவர்களின் நாட்டார் மரபுக் கதைகள் பற்றி வினாக்கள் எழுப்புவார், அவற்றைக்கொண்டு புதிய, இசைவான குட்டிக்கதைப் படைத்தார். அவை அனைத்தையும் நினைவிற்கொள்ள இயலாமற்போகலாம். ஆனால் அவற்றில் நினைவில் நிறுத்த முடிந்தவற்றிலிருந்து, முதியவர் தமது சொந்த ஊரான துபாம்பூல் திரும்பியதும் , அவருடைய புனைபெயருக்குக் கடன்பட்டுள்ள வீதிகள் நகரம் குறித்து, அந்நகரம் பற்றிய உண்மைகள் கூடுதலாகத் தெரியவந்துள்ள நிலையில் இனி உரைக்கும் கதைகளில் அடுக்கடுக்கான அத்தியாயங்களைச் சேர்க்க உதவும். ஆனால் என்றும் விளங்கிக்கொள்ள இயலாதப் புதிராக அம்பும்‘, ‘ஸெல்லும் தொடரும், ஆனான் அவற்றுடன் வேறுபல பல இரகசியங்களும் இணைந்துகொள்ளும். ஏற்கனவே இவருக்கென மாணவர் பேரவை எற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கேட்டவற்றை தம்முடைய உபயோகத்திற்கென பத்திரப்படுத்திக்கொண்டார். .

          இவருடைய நிகழ்ச்சிக்கென வைத்திருந்த அறிவிப்புத் தட்டி ஸ்லாபூகூம், புகழ்பெற்ற கதைசொல்லி யினுடைய நிகழ்ச்சி எனத் தெரிவித்தது. அதன்படியே நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம். கைத்தட்டியவர்களைக் காட்டிலும் அவருடைய கதைசொல்லலில் மயங்கியவர்கள் எண்ணிக்கை அதிகம், அப்படியொரு வெற்றி. அவரொரு தொழில் முறை கலைஞர் இல்லையென்கிறபோதும் சிரிப்பையும், உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து, சேட்டைகளின்றி பார்வையாளர்களைக் கட்டிப் போட அவரால் முடிந்தது. துபாம்பூலில் நடந்ததைப் போலவே ஒவ்வொரு சொல்லும் புதிய சொற்களுக்குக் காரணமாயின, அதுபோலவே ஒவ்வொரு புனைவும், புதிய புனைவுகளுக்கு வித்திட்டன. உதாரனத்திற்கு தேன் நிறகூந்தலையுடைய இளம்பெண்ணின் கதை தற்போது, துரதிஷ்டம்கொண்ட எகிப்திய பெண் தேவதையை கொக்கொன்று இந்திய அரண்மணையில் காத்திருந்த காக்கேசிய (Caucase) இளைஞனிடம் கொண்டுபோய் சேர்த்தது. மாறுபட்ட இழைகளைக்கொண்டு திரும்பத் திரும்ப புதிய ஆடையாக உருமாற்றிகொண்டிருந்தார். விதிவிலக்காக கழுகும் சேவலும் என்ற கதையை மட்டும் முதல் நாளிலிருந்தே, திரும்பத் திரும்பத் சொல்லவேண்டியக் கட்டாயம். கேட்டவர்களில் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் அதைக்குறித்து எழுதினார்.

“தனது கூடு போதாதென நினைத்த கழுகொன்று சேவலொன்றின் பிரதேசத்தைக் கைப்பற்றியது. அதன் இறக்கைகொண்டு முதலில் இருமுறைத் தாக்குதல், பின்னர் மூன்றுமுறை அலகால் கொத்த பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது. வெற்றிபெற்றக் கழுகு , தம்மால் முடிந்த அளவிற்குக் கழுகுகளை ஒன்று திரட்டி, அற்புதமானதொரு வீட்டை வோழ்மலை கற்களைக்கொண்டு கட்டியது. சூரியன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வீடு சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. சேவல் பொறுமையுடன் சில ஆண்டுகள் காத்திருந்தது, அதுவும் தன்னால் முடிந்தமட்டும் துணைக்கு சேவல்களைச் சேர்த்துக்கொண்டு கழுகுடன் சண்டையிட்டுத் தனது பிரதேசத்தைக் கைப்பற்றி கழுகின் அற்புதமான வீட்டைத் தனதாக்கிக்கொண்டது.. கழுகு அதிகக் காலமெல்லாம் காத்திருக்கவில்லை. சேவல்களை அடித்துத் துரத்திவிட்டு, தன்னுடைய அதிசய வீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்திலேயே ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவென்று வெகு தொலைவிலிருந்து வந்த மிருகங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு கழுகைத் துரத்திவிட்டுத் திரும்பவும் சேவல் அந்த அற்புதமான வீட்டைத் தன்வசம் ஆக்கிக்கொண்டது. அக்கணத்தில் கழுகுகளும், சேவல்களும் பொருளின்றி சண்டையிட்டு அடிக்கடி உறையும் இடத்தை மாற்றிக்கொண்டிருப்பது வீணென்று புரிந்துகொண்டன. கழுகு சேவலின் பிரதேசத்திற்கு ஆசைப்படுவது தவறென உணர, அன்றிலிருந்து ஏராளமான சேவல்களும், கழுகுகளும் மாத்திரமின்றி கரடி, சிங்கம், மான், எருது, புறா என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் அந்த அதியவீட்டில் வசிக்கத் தொடங்கின.”

          இக்கதை யை முழுமையாக இட்டுக்கட்டியதென்று கூற முடியாது. அனைத்திற்கும் மேலாக வியப்புக்குரிய விஷயம் கலியா‘ (Gallia) என்ற பெயர்காரணத்தைத் தெரிந்துகோள்ள அவர் காட்டிய ஆர்வம். அவருக்கு அது தெரிவந்தபோது பெருமையாக இருந்தது.

ஆரம்பத்தில் கலியா என்ற பெயரில்லை. ஜெர்மானியா என்றே அழைக்கப்பட்டது. காரணம் 1870க்குப் பிறகு ஜெர்மானியர்கள்…………யுத்தத்தில்

அந்தப் போர்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெயித்திருந்தார்கள்.

நெப்போலியன் படையில் செனெகல் நாட்டு வீரர்கள் இடம்பெறாததுதான் காரணம்.- என்பது பெரியவரின் பதில்.

ஜெர்மானியர்கள் எழுப்பிய கட்டிடம். ஆனால் 1918ல் பிரெஞ்சுக்காரர்களின் கைவசம். ஜெர்மானியர்கள் இனி இல்லையென்றான பிறகு கலியாஎன்று அழைக்கத் தொடங்கினார்கள்.

40 ல் மறுபடியும் ஜெர்மானியாஆனதில்லையா.

ஆமாம், ஆனால் 45ல் மீண்டும்…..

புரிகிறது. இக்கதை நல்லவேளை பாதகமாக முடியவில்லை

உங்களிடம் அப்படி முடிகிற கதை இருக்கிறதா ?

இல்லை. பொதுவாக கதைக்கேட்பவர்கள் சுபமாக கதை முடியவில்லையெனில் கேட்கமாட்டார்கள்.

இக்கதை நீங்கள் பிறருக்குச் சொல்லக்கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தக் கதையாயிற்றே.

          முதியவர் சிரித்தார். அப்தூலயேவிற்கு ஸ்லாபூகூம் உண்மையான கதையொன்றை படைக்கக்கூடியவர் என்று தெரியாது.

           ஹூல்ட்ஸ் கோபுரத்தை ப் பார்க்கிறார். இனி அவருக்கு அது புதிரில்லை. அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதேவேளை நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் ஆகியோரையும் அவர் மறந்தவரில்லை. சாக்லேட் திணித்த ரொட்டியை, ஒரு சிறுவனைப்போல விரும்பிச் சாப்பிடும் நேரம். தூண்களுக்கிடையில் கச்சிதமாக அமைந்த 243 ஆம் எண்கொண்ட அறை, அசையாமல் நின்றிருந்தார். பதினைந்து நாட்களும் வேகமாக கரைந்துவிட்டன. ஸ்லாபூகிமிற்கு, ஸ்ட்ராபூர்கூமை மட்டுமல்ல பழகிவிட்ட கலியாவையும் பிரிந்து செல்ல மனமில்லை என செடார் சொகோன் முனுமுனுத்தார். தனது சினேகிதன் லூசியன் மொரான்ழிடம் , « அவர்கள் என்னைத் தங்கச்சொல்லப்போகிறார்கள் பார்எனத் தெரிவித்தார். இங்கே எனக்கு நன்றாக இருக்கிறது. தவிர நான் காணவேண்டிய வீதிகளும், வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிச்சமிருக்கின்றன. இங்கிருக்கிறவர்கள் அனைவரையும் விரும்புகிறேன். உன்னுடைய நகரத்தைப் பற்றி நிறைய கதைகள் சொல்லவேண்டியவை பாக்கியுள்ளன. அவற்றைச் சொல்லி முடித்ததும், பிற கதைகளுக்குச் செல்வேன். அல்ஸாஸ் மிகப்பெரிய பிரதேசம். »

          தனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கூறியதைத் திரும்ப முணுமுணுத்தார். அவரை ஒருவரும் முட்டளாக்க முடியாது. இனி இதுபோன்ற நாளைகள் உண்மை அல்லாத கதை மாந்தருக்கென அவர் படைக்கும் கற்பனை மனிதர்களிடத்தில் மட்டுமே சாத்தியம். இன்னும் சிறிது நேரத்தில் கலியாவைச் சேர்ந்த நண்பர்களும் பிற நண்பர்களும் வழி அனுப்ப வருவார்கள், சற்றுமுன்னர் அவர் உரையாடத்தொடங்கிய லூசியானும் அங்கு வரக்கூடும். உலகின் அம்மறுமுனை, விமான தளம், மேகத்திற்கு மேலே, நாலாயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடும், செனெகெல் நாட்டு டாக்ஸியில் சென்றால் இருநூறு கி.மீட்டர். அவருடைய வாழ்க்கை துபாம்பூலில் கதைசொல்லி யாக இருப்பதேயன்றி, சாலைகள் ஊரில் ஒரு நட்சத்திரமாக வலம் வதில்லை.

வருகின்றவர்கள் எதுவேண்டுமானாலும் கூறட்டும், நான் இங்குதான் தங்கப்போகிறேன்

          இனி இந்தவாழ்க்கை சாத்தியமில்லை என்கிற போதும் கணநேரம் அதில் திளைப்பதும் சுகமாக இருந்தது. நம்பிக்கையின்றி அவ்வனுபவக் கற்பனையில் மூழ்கினார். சாக்லேட் திணித்த ரொட்டியை மறந்து பாலகணியில் அசையாமல் நின்றார். இடதுபக்கம் கதீட்ரல், வல்துபக்கம் சேன்போல் தேவாலயம். நேரெதிரே தீவுஎன்று பெயர்கொண்ட நதி ஓடிக்கொண்டிருந்தது, நதியில் சுற்றுலா பயணிகளின் படகுகள்.

முற்றும்

 

 

கதை சொல்லி-3 (சென்றவாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெகிளெர்க்

          இடது பக்கம் கத்தீட்ரல், வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

          இப்புதியப் பயணத்தைத் தொடங்கியாயிற்று, தற்போது இதுவும் அவருடைய புனைவுகளில் ஒன்றாக தொடருகிறது. இயலாமைக்கு அல்லா ஒர் எல்லையை வகுத்திருந்தார். அவரைப் பொருத்தவரை “நீ போவது உறுதி” என்கிற நஃபிசாட்டுவின் வார்த்தைகள் போதுமானவையாக இருந்தன.

 

          அவரது புனைகதை நகருக்கு வந்தாயிற்று. காலை மணி எட்டு. வயிறு புடைக்க உண்ணும்  ஒரு சிறுவனைப்போல இரண்டு சாக்லேட் திணித்த ரொட்டியை காலை உணவாகக்கொள்ள கீழே இறங்கவேண்டும்.

 

          நஃபிசாட்டு, இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது, இவருடைய எள்ளல் புன்னகைக்கு மயங்கியதாகத் தெரியவில்லை. சகோதரருக்கு உண்மையில் நம்பிக்கை ஏற்படவில்லை.  எதிர்பார்த்ததுதான்.  கதைசொல்லி முதியவரின் சகோதரர்  நஃபிசாட்டு வெளிப்படையாக எதையும் கூறாமல்தான் புறப்பட்டுச் சென்றார். ஆனால் டக்கார் நகரை அடைந்ததும், தம்முடைய பேரன் அப்துலாயே வுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்லாபூகூம்  என்ற பெயரை முன்னிறுத்திக் கூறப்பட்ட நகரத்தைக்குறித்து எழுதவே செய்தார் :

            உனது பெரிய தாத்தாவின் கற்பனை மிகவும் சுவாரசியமானது ,  அதேவேளை மனதை நெகிழ்விக்கக் கூடியதுமாகும்  என்பதை  நீ புரிந்துகொள்வாயென எனக்குத் தெரியும். அவருடைய சினேகிதனின் நகரத்திற்குத் திரும்பும் சூழலுக்கு நீயும் முயற்சி செய் , அவ்வாறு செய்தால், உனது கனவிற்கும் ஏதேனும் பலன் கிடைக்கும்”

 

          அப்தூலயே சிரித்தான். ஒரு மாற்றத்திற்கு முதன்முறையாக பிடிவாதம் என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டு , கனவென்ற சொல்லைத் அவனுடைய தாத்தா உபயோகித்திருந்தார். 

 

          இரண்டாண்டுகளுக்கு முன்பு உமரைப் பார்க்க்கும் எண்ணம் வந்தது. ஸ்ட்ராஸ்பூர் லூயிபாஸ்ட்டர் பல்கலைகழகத்தில்  இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் மண்பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெறுவதர்க்குரிய கல்வியை உமர் முடித்திருந்தான். அப்தூலமயே அவனை மிகவும் நேசித்தான். உமரைச் சென்று பார்க்காதது ஒரு குறையாகத் தோன்றியது. அவனிடம் கூறுவதற்கென்றிருந்தவற்றை  மூன்று பக்கங்களில் ஒரு கடிதமாக எழுதினான். CROUS Cité Universitaire Gallia ; 1- Quai du maire Dietrich என்று முகவரியை எழுதியபோது, கை நடுங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே  உமருடைய பதிலும் இருந்தது :

 

          என்னைப் பார்க்கவிரும்பியது, உண்மையில் நல்ல யோசனை. எனக்கும் உன்னைக் காணாதது ஒரு குறை.  உன்னைப்பற்றித்தான் மேடம் சொடெவ் விடம்  பேசினேன். பல்கலைக்கழக த்தின் மாணவர்நலனுக்கென இயங்கும் CROUS அமைப்பின் கலை பண்பாட்டுத்துறையின் பிரதிநிதி அந்த அம்மாள். அன்பான  பெண்மணி, உதவும் மனப்பான்மை நிறைய உண்டு. நியாயமான வாடகைக்கு  ஒரு மாதத்திற்கு அந்த அம்மாள் உதவியுடன் ஓர் அறையை எடுக்க  முடியும். உன்னுடைய வருகையினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நகரத்தைச் சுற்றிவரலாம். உன்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்வதென்கிற  திட்டங்களெல்லாம் தயார். » கடிதம் ஏதோ சுற்றுலா கையேட்டுக்குரியத் தகவல்களுடன் தொடர்ந்தது.

 

           அப்தூலயே தனது சகோதரனை மிகவும் நேசித்ததென்னவோ உண்மை,  கண்ணாடி ஒவியம் கற்க வேண்டுமென்ற தாத்தாவினுடைய விருப்பத்தை நிறைவேற்ற பேரனுக்கு  ஆர்வமில்லை.  எனினும் திடீர் பயணத்திற்குக் காரணமும் இருந்தது. இவனுடைய சகோதரன் உமருக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும்,  இப்பயணம்  ஸ்ட்ராஸ்பூர்கில் சில நாள் தங்கித் திரும்பும் உத்தேசத்திற்குரிய ஒரு பயணம். ஆனால் அப்தூலயேவுக்குத் திரும்ப செனெகெல் நாட்டிற்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை.  . அவனுடைய  விசாவில் ஒரு முத்திரையும் சில நொடிகளும் போதும், சுற்றுலா பயணியென்கிற தகுதிக்குப் பதிலாக வந்தேறி , கள்ளத்தனமான குடியேற்றவாசி என்கிற அந்தஸ்த் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

 

       உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது !

 

       தங்கி விடுகிறேன்.

 

       அப்படித் தங்க முடியாது.

 

       எனக்குப் போக விருப்பமில்லை.

 

       அறிவுபூர்வமாக யோசி ! குடும்பத்தை யும் நினைத்து பார். உன்னுடைய இப்பயணத்திற்காக நம் குடும்பத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊரில் உனக்காக அவர் காத்திருக்கிறார்கள்.. என்னால் உனக்கு உதவ முடியாது. எங்கே போகப் போகிறாய் ? அதிலும் இங்கிருந்து என்ன செய்வதாய் உத்தேசம்.

 

       எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் இங்குதான் தங்கப்போகிறேன்.

 

       அதற்குச் சாத்தியமே இல்லை, அப் தூலயே. முட்டாள் தனமான காரியம். வீணாகப் பிரச்சினைகளைத் தேடுகிறாய் !

 

       என்ன சொன்னாலும் முடிவில் மாற்றமில்லை.

 

       இதற்கு மேல நான் என்ன சொல்ல, இருந்து தொலை !

 

          கிளேபர் சதுக்கத்தில், ஒரு காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் ஆரம்பித்து  சகோதரர்கள் இருவரும் உரத்து முடித்திருந்தார்கள். விவாதம் சர்ச்சையாக மாறியிருந்தது. உமர்  தொடர்ந்து வற்புறுத்த வில்லை. மேசையில் பில்லுக்குரிய பணத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். சர்வரிடம் அதனைக்கொடுத்தனுப்பிவிட்டு மீதிச் சில்லறைக்காக இவன் காத்திருந்தான். சிறிது தூரத்தில், வீதிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுவொன்று  ஆர்ம்ஸ்ட்ராங்கை இசைத்துக்கொண்டிருந்தது : « கொடுத்துவைத்த வாழ்க்கை ! » என நினைத்தான். ‘Stormy weather’, ‘Sweet Lorraine’, ‘Cheeck to cheek’ ஆகியவற்றை சீழ்க்கையில் இசைத்தான். ஒரு கிளாஸ் பீருடன்  அவர்கள் முடிக்கும்வரை காத்திருந்தான்.

 

          குழுவில் மிகவும் இளம் வயதாகத் தோன்றியவன், தன்னுடையைக் கிடாரை  வாசிப்பதை நிறுத்தியதுபோல பக்கத்தில் வைத்தான். காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி வந்தான். கேட்டுக்கொண்டிருந்தவர்கள்  இதொரு இலவச நிகழ்ச்சியல்ல என்பதை உணரவேண்டியக் கட்டாயம். அப்தூலயே இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டான். நாற்காலியிலிருந்து எழுந்தான்.  காசுகேட்டுவந்த இளைஞனைத் தவிர்க்க நினைத்தவன்போல முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘What a wonderful world’  பாடலை முனுமுனுத்தவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

 

          கிராண்ட் ஆர்க்காட்வீதிக்கு வந்தவன் சிறிது நின்றான் அவனுக்கு முன்பாக மனிதர் கூட்டம். கிட்டத்தட்ட வீதியின் கணிசமானதொரு பகுதியியை அடைத்துக்கொண்டிருந்தார்கள். காலத்திற்குச் சம்பந்தமற்ற ஹிப்பித் தோற்றத்தில் இருந்தார்கள். தலைமயிர் பராமரிக்கப்படாமல் புதர்போல மண்டிக்கிடந்தது. மூக்கு, காது, உதடுகளென்று வளையங்கள் அணிந்திருந்தார்கள்.  இதுவரை அவன் காணாதது. சுதந்திரத்தை ஊக்கத்தொகையாகப்பெற்ற மகிழ்ச்சி.  அவர்களைக் கடந்து சென்ற காவற்துறை  மனிதர்கள், அம்மனிதர்களிடம் மரியாதையான பார்வையைச் சிந்தினார்கள்.  தவிர அவர்களின் புன்னகையில்  வெளிப்பட்டது இரக்கமா ?  ஏக்கமா என்ற் கேள்வியும் பிறந்தது.

 

          அப்தூலயே  அவர்களை நெருங்கினான்.  பெட்டை நாயொன்றின் வயிற்றில், குட்டிகளுக்குக்  கோபமூட்டுகின்ற வகையில் கிழவரொருவர்  தலைவைத்துப் படுத்திருந்தார், அருகில் இளைஞனொருவன் ஹார்மோனிகா போல சத்தமெழுப்பிக்கொண்டிருந்தான். இருவருக்கும்  இடையில்  அமர்ந்தான். ஒரே சமயத்தில் முரண்பாடான இரு அனுபவங்கள்.பொருண்மையில் இரு அனுபவங்களுக்குகிடையில் பேதங்களுமில்லை. : மகிழ்சி, விரக்தி இரணடும் சமவீதத்தில் இருந்தன.

 

          அந்தி பிறந்தது, குளிரையும் கொண்டுவந்திருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் விரக்தி கூடுதல் வலிமைகொண்டதாக ப் பட்டது. சுதந்திரம் தற்போது ருசியாக இல்லை. தலையை மொட்டை அடித்திருந்த பெண் அளித்த ரொட்டியும், சாசேஜ்ஜும், விநோதமாக இருந்தன. எப்படி அவர்களை வந்தடைந்தானோ அதுபோலவே  அவர்களிடம் எவ்வித பேச்சுமின்றி புறப்பட்டுச் சென்றான். பெண் கெட்ட வார்த்தையை உபயோகிக்க, வயதான ஆசாமி, நல்லது நடக்கட்டுமென வாழ்த்தினான்.

 

          வீதி வீதியாக நடந்தான். உமருடன் சேர்ந்து நடந்த வீதிகள் அவை. தனியாக, சுற்றுலா பயணியாக , மெதுவாக, ஒரு திசையைக் குறிவைத்து, பின்னர் அத்திசையைத் தொலைத்து என்பது போன்ற அனுபவங்கள் திரிந்ததில் கிடைத்தன. தற்செயலாகவா, மனமிட்ட கட்டளையின் படியா, சுய நினைவின்றியா அல்லது விரும்பியா  ஆனால் அதை வெளிப்படையாகக் கூற விருப்பமின்றி ஒருவழியாக கடைசியில் தீவென அழைக்கப்டுகிற ‘L’ill’ நதிக்கரை அருகே வந்து நின்றான். அப்பகுதி அவனுக்குப் புதிதல்ல. வலது பக்கம் கதீட்ரல், இடதுபக்கம் சேன்-போல் தேவாலயம், எதிர்த் திசையில் ஒரு பெரிய கட்டிடம், இரவு நேர மின்சார ஒளியில் அதன் காவி நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது அக்கட்டிடம் ஸ்ட்ராஸ்பூர் பூர்க் ‘CROUS’ க்குச் சொந்தமான பல்கலைக் கழக மாணவர்களின் உணவு விடுதிக் கட்டிடம் : ‘Gallia’. அப்தூலயே அங்கு நிறைய மாணவர்களை நண்பர்களாகக்  கொண்டிருந்தான். அவனுடைய சகோதரன் வேலைசெய்தபோது, நண்பர்களை காப்பி விடுதியில் சந்திப்பதுண்டு. அங்கு சென்றான். தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக ஒரு பெருங்கூட்டமிருந்தது. ஒரு காற்பந்து போட்டி நடந்தது அதிற்கவனம் செல்லவில்லை. நடுவர் விசிலை ஊதி இடைவேளையை அறிவித்தபோது இரண்டாவதாக ஒரு பீரை குடித்துமுடித்துவிட்டு, பணிப்பெண்ணை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.  அவளிடமிருந்து இவன் கற்றது அதிகம், கைமாறாக முத்தம் தரலாம், தவறில்லை. முத்தமிட்டுவிட்டு, அவளிடம் திரும்பவும் கேட்டான்.

 

       உண்மைதானா, நன்றாகத் தெரியுமா ?

         

       உன்னிடம் எதற்காகப் பொய் சொல்லப் போகிறேன்? பதினைந்து நாளில் அவன் போகப்போகிறான். இதுவரை அவனுடைய வேலையைச் செய்ய எவரும் கிடைக்கவில்லை.

 

       பதினைந்து நாளிலா ! அது வரை நான் தாக்குப்பிடிக்க முடியும்.

 

          பிரச்சினைத் தீர்ந்தது.  தங்குவதற்கு அனுமதிக்கும், அரசாங்கத்தின் அத்தாட்சி தாள்கள் கைக்கு வந்தபிறகு  அதிட்டம்  வீரியத்துடன் இருக்கிறது. மினோத்தோர் காப்பி விடுதியில்  அப்தூலயே சொகோனுக்கு சர்வர் வேலை கிடைத்தது. உமர் செனெகெலுக்குத்  திரும்பிவிட்டான். அங்கிருந்துகொண்டு அவ்வப்போது கடிதமும் எழுதுகிறான். உள்ளூர் விவசாயிகளுடன் அவன் செய்கிற வேலைகள் பற்றியும் எழுதுகிறான். குடும்பத் தகவல்களும் உண்டு. தாத்தா நஃபிஸாட்டு பற்றியும் அவருடை புகழ்பெற்ற கண்ணாடி ஓவியங்கள் பற்றியும் கூட எழுதுகிறான். இந்தத் தாத்தா விடமிருந்துதான் அப்தூலயேவிற்கு, துபாம்பூல் நகர்  முதிய வர் பெரிய தாத்தா  கதைசொல்லிப்பற்றியத் தகவல் கடிதம் மூலமாகத் தெரியவந்தது.

 

          முயற்சி செய் !  என்றுய் டாக்கா நகரிலிருந்துகொண்டு எழுதுவது மிகம் சுலபம். ஒருமுறை புத்தான்டுப் பிறப்பிற்கு போஸ்   நகருக்கு கதைசொல்லி முதியவர் வந்திருந்தார், சுவாரஸ்யமான  மனிதராகவும் எல்லோரிடமும் குறிப்பாக இவனையொத்த பையன்களிடத்தில்  நன்றாகப் பழகினார்.

 

          நஃபிஸாட்டு  மிகத்தெளிவாக பலவிபரங்களையும் அப்தூலயேவிற்கு  எழுதியிருந்தார். அக்கடிதத்திலிருந்த பயணம்பற்றிய விவரம் வேடிக்கையாக இருந்தது.  சுவாரஸ்யாமாக இருந்ததென்றாலும், முட்டாள்தனமான யோசனையென நினைத்தான்.   ஒரு  கதைசொல்லியை,  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நண்பனுடைய ஸ்ட்ராஸ்பூர்  நகருக்கு,  ஒருவித ஆயிரத்தொரு  இரவுகள் நாடொன்றில் அந்நகரைக் கற்பனைசெய்து  தமது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக அவரை அனுப்புவது என்ன யோசனையோ ?  சுவாரஸ்யமானது‘, ‘நெகிழ்ச்சியானது  என்றாலும் முட்டாள் தனமானது‘. இம்மூன்று அடைமொழிகளையும்  தனது தாத்தா  நஃபிசாட்டுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்ட அப்தூலயே கடைசி அடைமொழியை மட்டும் அடித்துவிட்டு, ‘இயலாதது என்று மாற்றினான்.

 

          அதுவும் தவிர, விடுதிகளிலெல்லாம்  வாடகைக்கு எடுத்து அவரைத் தங்கவைப்பது கடினம், இந்த யோசனைக்கு நீ எழுதியிருப்பதைப்போலவே  அதிகப்பணம் தேவைப்படும். எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ. தவிர அவருடைய உணவுச் செலவுகளும் இருக்கின்றன. ஒன்றிரண்டு நாட்கள் சமாளிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமில்லை. நான் புலம்புகிறேன் என நினைக்கவேண்டாம். இரண்டுபேர் செலவினைச் சமாளிக்க என்னிடம் பணமில்லை என்றுதான் சொல்கிறேன். அடுத்ததாக அவர் முதியவர், இந்நிலையில் நீயோ அல்லது வேறு யார் துணையுடனோதான் வரமுடியும்.  அப்படிவந்தால்  கவனித்துக்கொள்ள எனக்கு நேரமுமில்லை. நம்முடைய ஊருக்கே அவர் வந்ததில்லை, அப்படியிருக்க தனியே அவர் ஸ்ட்ராஸ்பூர் வரை வருவாரா என்பதும் சந்தேகம்.  அதுமட்டுமல்ல, எந்நேரமும் என் கண்காணிப்பிலும் அவரை வைத்திருக்கவேண்டிய பிரச்சினையுமுள்ளது. நான் வேலை செய்கிறேன், எப்படி அவரருகில் இருப்பது ? என் பொறுப்பிலில்லாமல் அவரை அனுப்பி வைத்தால் நேரம் கிடைக்கிறபோது சென்று அவரைப் பார்ப்பேன்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊரையும் சுற்றிக்காட்டுவேன். ஆனால் எல்லா நாட்களிலும் என்னால்  அவரைபார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னால் முடியாது. »

 

          இக்கடிதத்திற்கு நஃபிசாட்டுவின் பதில் சுருக்கமாக இருந்தது. ஒரு சில வரிகளில் இருந்த அப்பதிலில் , ‘அதுவும் தவிரபோன்ற சொற்களையெல்லாம்  பயன்படுத்து வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் அச்சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாதே, என எழுதிவிட்டு,  சாத்தியமாகும்எனக்குறிப்பிட்டு ஒன்றுக்கு மூன்றாக  அடிக்கோடிட்டு  முயற்சி செய்என முடித்திருந்தார்.

 

          அப்தூலயே கடித்தத்தை  வீசி எறிந்தான். அவன் பதில் எழுதவில்லை,. அவன் வேலைசெய்யும் சகப்பணியாளர்களிடம், மாணவர்களிடம், மாணவிகளிடமென யார்யாரையெல்லாம் தெரிந்துவைத்திருந்தானோ அவர்களிடத்திலெல்லாம் இக்கதையைக் கூறினான். நாளடைவில் இக்கதை, சுவாரஸ்யம் குறைந்து கேலிக்குரியதாக  மாறி இருந்தது. வெகுசீக்கிரம் பல்கலைக் கழக மானவர் விடுதியில், இக்கதையை அறியாதவர் ஒருவருமில்லை என்றாயிற்று. அப்தூலயே எதிர்கொள்ளும் மாணவர்கள் , அவனை நலம்  விசாரிப்பதுபோல ” ஊரிலிருந்து அங்க்கிள் எப்போது வருகிறார் ? » எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.

 

          வந்ததென்னவோ புதிதாக ஒரு கடிதம். இம்முறை முயற்சி செய்என்ற வார்த்தைக்குக் கீழ் நான்குமுறை அடிக்கோடிட்டு இருந்தது. அவ்வார்த்தையை கண் முன்னால் அவை நிறுத்தின. அதன் கட்டளைக்குப் பணிந்து  சொந்தப் பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கினான். ஏதாவதொரு தீர்வினைக் காணவேண்டிய நெருக்கடி உருவாயிற்று. காப்பிவிடுதியில் வைத்திருந்த தகவல் விளம்பரம் அவனை ஈர்த்தது. ‘l’afges’ எனும் பல்கலைக் கழக மாணவர் பேரவை வைத்திருந்த தட்டி  அது.  பிரான்சு நாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள லா பூர்கோஜ்ன்  பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவர், கவிதை வாசிக்கப்போவதாக அதில் குறிப்பிடிருந்தது.  கடந்த சில மாதங்களாக  தள்ளாடும் வயதிலுள்ள தாத்தாவின்  மூத்த சகோதரரை பிரான்சு நாட்டிற்கு எப்படி அழைத்துவந்து தங்கவைப்பதென்ற விடயத்தில்  மிகவும்  குழம்பிப்போயிருந்த  அப்தூலயேவுக்கு தீர்வு  அத்தட்டிச் செய்தியில் இருக்கக்கூடுமென்று நினைத்தான். ‘CROUS’ பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யும், அமைப்பு. பேராசிரியர்கள் ஆய்வின் பொருட்டும், எழுத்தாளர்கள்  சொற்பொழிவுக்காகவும் வந்து தங்குவார்கள்.

 

       ஒரு ஆப்ரிக்கக் கதைசொல்லியும் ஏன் அதுபோல வரக்கூடாது ?

 

       என்ன சொல்கிறாய் ?

 

           பாரீஸ் சாலட்   என்ற ஒன்றைத் தயார் செய்துகொண்டே தனக்குத்தானே  சத்தமாக அவன் பேசிக்கொண்டிருந்தான்.

 

       ஆப்ரிக்கர் கதைசொல்லியை அழைத்துவருவதில் என்ன பிரச்சினை ? அதிலும் அனைவரினும் பார்க்க புகழ்பெற்றவர் என்கிறபோது.

 

       அப்படியா ?

 

       எனது  தாத்தாவின் சகோதரர்பற்றி வேண்டுமானால், உனக்கு விளக்கமாக சொல்கிறேன்.

 

       நிறைய தடவை நீசொல்ல நாங்கள் கேட்டாயிற்று.

 

          இவனிடம் காதுகொடுத்துக் கேட்ட சர்வர் பெண்ணிடம், தனது யோசனையைத் தெரிவித்தான். அன்று மாலையே ஒரு மாணவனைக் கலந்தான். அவனுடைய தந்தை ரைன் நதி புதிர்களென  ஒரு நூலை எழுதியிருந்தார். ஏராளமான சொற்பொழிவுகள், மாநாடுகள் என அடிக்கடி கலந்துகொண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கியதுண்டு. 2000 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரவாசியான டொமினிக் நாட்டைச் சேர்ந்த ழான் டொலெர்(Jean Tauler)  என்பவரின் ஏழாவது நூற்றான்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

 

       என் தந்தைக்கு  இங்கு தங்கியபோது எந்தக் குறையுமில்லை, அவருக்குத் திருப்தி.

 

       ஓரு கதைசொல்லியை, அதுவுமொரு ஆப்ரிக்க கதைசொல்லியை உண்மையில் இங்கே அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறாயா ?

 

        ஏன் கூடாது ? எதற்கும் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்கள் யாரையேனும் போய்ப்பார்.

 

       நானும் அதைப்பற்றி யோசித்தேன்.

 

          மறுநாள் அப்தூலயே மாணவர் பேரவையைச் சேர்ந்த இருவரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தான். அவர்கள் இருவரும் பல்கலைகழகத்தில் புதிதாய் எதையேனும் செய்வதில் ஆர்வம்கொண்டவர்கள்.  இவன் யோசனையைக் கேட்டதும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. விஷயத்தை அவர்கள் மதாம் சொடெவ்விடம் கொண்டு போனார்கள். பல்கலை கழகத்தின் கலைப்பண்பாட்டுத்துறை நிர்வாகியான அபெண்மணி  யோசனையையைக்  CROUS  இயக்குனரிடம் கொண்டுசென்றார்.

 

          இயக்குனரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்தூலயே இயக்குனரின் அலுவலகம் வரை வந்தவன் உள்ளே செல்ல தயங்கினான். என்ன சொல்லலாம் ? எப்படி ? என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. இந்தச் சின்னக் காரியத்திற்காக இயக்குனர் அலுவலகக் கதவையெல்லாம் தட்ட வேண்டியிருக்குமென அவன் யோசித்ததில்லை. அவனுக்கு தைரியம் காணாது. தாத்தாவின் கடிதத்திலிருந்த ” முயற்சி செய்” என்ற வார்த்தைக் காதில் ஒலித்தது.

 

          இயக்குனரின் அலுவகத்திற்குள் நுழைந்தவன்  முதல் அடியை எடுத்துவைக்க  சில நொடிகள் எடுத்துக்கொண்டான். சன்னல் அருகே ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படம். ல்ல சகுனமாகப்பட்டது.  ” ஆப்ரிக்காவில் கவனம் செலுத்தும் ஸ்ட்ராஸ்பூர்” என்கிற வார்த்தைகள்  மனதில் ஓடின, எனினும் அதைச் சொல்லத் தயங்கினான்.

 

       உட்கார் ! ஏதோ கதை சொல்லி ஒருவரை அழைத்து வரும் திட்டம் உன்னிடம் இருக்கிறதென்று கேள்வி.

 

       எப்பச் சொல்வது…ஆமாம்  ஒரு கதைசொல்லி … நான் சொல்ல வந்தது …

 

       சரி அதற்குத்தானே வந்திருக்கிறாய், சொல்லேன்.

 

  அவனுடையத் தயக்கத்தை இயக்குனரின் கனிவான வார்த்தைகள் போக்கின. வசதியாக நாற்காலியில் உட்கார்ந்தான். ஆப்ரிக்க நாட்டைச்சேர்ந்த மிகப்பெரியக் கதை சொல்லியைப் பற்றித்தான் அவன் பேச வந்தது. அவரின் புகழ் செனெகெல் நாடு மட்டுமின்றி ஆப்ரிக்கக் கண்டம் முழுதும் தெரிந்திருக்கிறது. எனக் கூறியபோது, சற்று மிகைபடக் கூறியதாக உணர்ந்தானே தவிர அதை நிறுத்தவில்லை, அதொருவகையில்  கேள்விகளைத் தள்ளிப்போட உதவியதும் காரணம் .  அவன் கூறியதை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குனர் கோப்பு ஒன்றை எடுத்து வைத்தார். தமக்குள்ள சங்கடத்தை தெரிவிக்க வும் அவர் தயங்கவில்லை. 

 

        கதை சொல்லி உனது உறவினரில்லையா ? அதுவும் தவிர மிகவும் வயதான மனிதர். சரிதானே ?

 

        ஆனால்  நெறிதவறாதவர்.

 

        மிஸியே சொகோன் என்பவரை நீ பல்கலைக்கழக விடுதியில் தங்கவைக்க நினைக்கிறாய் ?

 

        அவர் பெயர் உண்மையில் ஸ்லாபூம்.

        ஸ்லாபூல்கூம் ? கதைசொல்லியின் பெயரா அது ?

        ஆமாம் அவருடைய பெயர்தான் ஸ்லாபூகூம்

        அவர் இங்கே தங்கவைக்கவேண்டுமா ? முடியாததில்லை. எனினும் சில விதிமுறைகள் இருக்கின்றன. நீ முதலில் ‘DRAC’  ஐ சென்று பார்க்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா ?

 

        அதாவது……

        கலை பண்பாட்டுத்துறை அமைச்சகத்தில் பிரதேசக் கிளை அலுவலகம். அவர்களைச் சென்று பார்த்துவா. எனக்கு முதியவரை இங்கே தங்க வைக்க எந்தவிதப் பிரச்சினையுமில்லை.

 

        மிக்க நன்றி மிஸியே, அழகா இருக்கிறது !

 

        என்ன சொல்கிறாய் ? எனக்குப் புரியலை.

        உங்க ஒட்டகச்சிவிங்கி, அழகாக இருக்கிறதென்றேன். சன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல இருக்கிறது.

        ஆமாம் களைப்பின்றி அதைத்தான் செய்கிறது. அது அழகா இருப்பதும் உண்மைதான்.

     இத்தனை அழகா வேறொன்றைப் பார்த்ததில்லையென அப்தூலயே தெரிவித்தான். அவன் உயரத்திற்கு இருந்தது, துணிகொண்டு செய்திருந்தார்கள். கடைசியாக ஒருமுறை பார்த்தவன், நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டான்.

 

     இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியவன், கூடம் படிகள் என வேகமாகக் கடந்தான். இதை உடனே அவனுடைய தாத்தாவிற்கு எழுதவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.

 

இயக்குனரைச் சென்று பார்த்தேன். அவருடைய அலுவலகத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது . உண்மையானதல்ல. ஆனால் ஆப்ரிக்காவைப் பற்றி அவரிடம் பேச  எனக்குப்  பெரிதும் உதவியது. பின்னர் அவரிடம் என்னுடைய பெரியத் தாத்தாவை அழைக்கக்போகிறேன், அவருக்கு நமது பல்கலைக்கழக விடுதியில் ஓர் அறையை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன்.  சில விதிமுறைகள் இருக்கிறதென்றார். மாநில கலைப்பண்பாட்டுத்துறை அலுவலகத்தைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்குத் தற்ஓதைக்கு  அதுபற்றி எதுவும் தெரியாது.  உங்கள் ச்கோதரர் மிகப்பெரியக் கதைசொல்லியென்றும், அவர் ஆப்ரிக்காவெங்கும் அடைந்த புகழை ஸ்ட்ராஸ்பூர்கிலும் அடைவார் என்றேன். கதைசொல்லி தாத்தாவை உடனே அழைக்கலாம் என்ற பதில் அவரிடமில்லை. அதற்கென்று சில விதிமுறைகள் இருகின்றன. ஆனால் அவரிடம்  அச்சமின்றி பேசமுடிந்தது எனது கோரிக்கையை மறுக்கக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன். காதுகொடுத்து அனைத்தையும் கேட்டவர் இறுதியில் சம்மதம் தெரித்திருக்கிறார்.  நீங்கள் சொன்னதுபோலவே எனது முயற்சியில் ஜெயித்தியிருக்கிறேன். அவ்வார்த்தைக்கு  ஐந்து முறை அடிக்கோடிட்டான். அவர் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்,  என்று முடித்தான்.

 

(தொடரும்[

 

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2 பியெர் ரொபெர் லெக்ளெர்க்

 

நூரம்பரக் இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும் உருவாகி நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது. அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம் கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் குத்திட்டு நிற்பதையும் பலரும் அறிவார்கள். என்ன ஆனாய் லூசியன் ? உயிருடன் இருக்கிறாயா ? எங்கே நீ இறந்தாய் ? சாலைகள் நகருக்குத் திரும்பப் போனாயா ? என்றெல்லாம் முனுமுனுப்பதும் காதில் விழும். அல்லாவிடம் அவரது அடிமையானத் தன்னை அந்த நகரைத் திரும்பக் காண க் கருணைபுரியவேண்டும் என க் கேட்பார். ஆனால் அதில் எந்தப் பயனுமில்லை. கடவுள்களிடம் எல்லாவற்றையும் கேட்டுப்பெற முடியாது. அவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும் என்ன நிறமென்றாலும் சரி, இயலாததை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்களென்பது வயதினால் பெற்ற ஞானம் தெரிவிக்கும் உண்மை. இருந்தாலும், கடவுளிடம் இறைஞ்சுவது, குறைந்தப்பட்சம் அந்த ஊர்மீதான நம்பிக்கையைக் குலைக்காமல் வைத்திருக்க உதவலாம். அல்லாவாக இருந்தாலும் அவரால் முடிந்தது, எண்பபது வயது முதியவருக்கு அந்த ஊரைப்பற்றிய அறிவைத் தருவது, அதற்கு மேல் முதிவருக்கும் கடவுளிடம் எதிர்பார்ப்புகளில்லை.

முதிய தம்பதிகளின் பரணில், இரவுவேளைகளில் காடுகளில் தங்க நேரிட்ட இடங்களில், கலேயிலிருந்து ஃபோக்டோனுக்குப் சிறிய படகொன்றில் பயணித்தவேளையில், தேம்ஸ் நதிக்கரையில் என எல்லா இடங்களிலும் தான் காதலில் வீழ்ந்த அந்த ஊரைப்பற்றி மொரான்ழ் பேசாத நேரமில்லை.

    • அது என்னுடையது, புரியுதா, என்னிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்டார்கள்.
    • தைரியமாக இரு, திரும்ப அதைக் காணும் நாள் வரும்.
    • அதற்காகத்தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன், உன்னையும் ஒரு நாள் அங்கு அழைத்துப்போவேன், கண்டிப்பாக நடக்கும், இது சத்தியம்.

சத்தியம் நமக்குக் கட்டுப்பட்டதா என்ன. வழ்க்கை விருப்பங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது. புகழ்பெற்ற எண்ணிக்கையற்ற நகரங்களைக் காண்பதற்கு யுத்தம் ராணுவவீரர் சொகோனுக்கு சந்தர்ப்பத்தை அளித்தது, அதுபோலவே பெயர்களையும் எண்ணிக்கையையும் ஞாபகப்படுத்த முடியாத அளவிற்கு கிராமங்களையும் அதே யுத்தம் காண வகை செய்தது. அவரை, மொரான்ழ் ஊர் வழியாகவும் அவருடனோ அல்லது அவரின்றியோ அழைத்துச் செல்ல நேரிட்டிருக்கலாம். ஆனால் ராணுவத் தலைமை வேறு வகையாக முடிவெடுத்தது. கதைசொல்லியின் வாழ்க்கையில் அதிசயம்போல அது நிகழ்ந்தது. அவருக்கு அது கடவுளின் சமிக்கை.

அந்த அதிசயம், எதிர்பாராத அவருடைய தம்பியின் வருகையால் ஏற்பட்டது. அவருடைய கால் கள் ஒத்துழைக்க மறுத்த நாளிலிருந்து இளைய சகோதரரை அவர் பார்த்ததில்லை. நஃபிஸாட்டு, போஸ் என்ற இடத்தில் வசிக்கிறார். டக்கார் நகருக்கு போவதற்கு முன்பாக இடையில் டியூர்பெல் வரை அவர் செல்லவேண்டியிருந்தது, வழியில் துபாம்பூல், எனவே சேடாரை பார்த்து இரண்டொரு வார்த்தைப் பேசிவிட்டுப்போகலாமென வந்திருக்கிறார்.

    • இப்போதெல்லாம் நீ தம்காரிட்டிற்கு வருவதில்லையென குடும்பத்தில் அனைவருக்கும் வருத்தம்.
    • பிரச்சினை, எனது கால்கள்.
    • கால்கள் பிரச்சினையெனில், பேருந்து பிடித்து வரலாமே!
    • எனக்கு நடந்து பழகிவிட்டது, என்றைக்கு கால்கள் வலுவிழந்துவிட்டன எனத் தெரிந்ததோ அன்றைக்கே இருக்கின்ற இடத்தைவிட்டு எங்கும் நான் நகரக்கூடாதென்பதற்கான அறிகுறி.
    • நீயும் உனது அறிகுறியும் !
    • அல்லாவின் கட்டளை !
    • இருக்கலாம். ஆனால் அவர் சொல்ல மறந்தாலும், நீயாக ஏதாவது கற்பனை செய்துகொள்வது வழக்கம்தானே, உனக்கு அதுதானே தொழில்.
    • எங்கே இந்தப்பக்கம் ?
    • ‘Dak’art 2000 ல் கலந்துகொள்ள வந்தேன், கண்ணாடி ஒவியர்கள் பலர் கூடுகிறார்கள்.
    • Dak’art 2000?
    • கண்காட்சி. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆப்ரிக்கக் கண்டத்தில் நடக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சி. த்யூர்பெல்லில் என்னுடைய மாணவன் ஒருவனை அழைத்துச்செல்ல வந்தேன், வழியில் உன்னைப் பார்க்கலாமென்று தோன்றியது.
    • நல்ல காரியம் செய்தாய். எனக்கும் வயதாகிறது நஃபிஸாட்டு.
    • அப்படிசொல்ல இன்னும் காலம் இருக்கிறது.
    • இல்லை அநேகமாக இதுதான் கடைசியாக இருக்கும். வேண்டாம், பதிலெதுவும் சொல்லவேண்டாம். இங்கே வர நினைத்து வந்தது, மிகவும் நல்ல விஷயம். நானும் உன்னைப்போல ஒருவன் வருகைக்காகத்தான் காத்திருந்தேன். என்னிடமொரு ரகசியம் இருக்கிறது. என்னுடைய மரணத்தோடு அந்த ரசியத்தையும் கொண்டுபோகக்கூடாதில்லையா ? தோட்டத்திற்கு ரகசியங்களோடு வருகிறவர்கள் பூக்களற்ற பாலையில் அவற்றை வைக்கிறார்கள்.
    • உனது ரகசியம் தீயசக்தியான பாம்புகள் என்பது உறுதி. உனது வழக்கமானக் கட்டுக்கதைகளில் ஒன்றா.
    • கிண்டல் வேண்டாம்! என்னிடத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. ‘சாலைகள் நகரம் பற்றியது அந்த ரகசியம்.
    • நீ சொல்வதெதுவும் எனக்குப் புரியவைல்லை.
    • நாள் ஆக ஆக , மறதியும் அதிகரித்துவருகிறது. துண்டு துண்டாக ஊரின் மொத்தக் காட்சிகளும் ஒன்றன்பின்னொன்றாகஅதன் நிறத்தை இழந்துவருகின்றன. ஒரு நாள் அந்த ஊரையே இழக்க நேரலாம். என்னிடத்தில் எஞ்சியுள்ளவற்றில் கொஞ்சமேனும் உனது நினைவில் பதிவாக வேண்டியவை. பத்திரமாக நீ கட்டிக்காக்கவேண்டுமென்பது எனது ஆசை. அதைத் தொலைக்க எனக்கு விருப்பமில்லை. உனது தலையில் இருக்கின்ற அந்த மிச்சத்தை, அவ்வப்போது நீ எவரிடமாவது தெரிவிக்கவேண்டும்.
    • உன்னைபோல நானொரு கதைசொல்லி இல்லை. அந்த நகரம் உனக்குத்தான் சொந்தம். உன்னுடைய கற்பனைதானே ?
    • இல்லை, கற்பனையில்லை. ஆமாம் ! அப்படியும் சொல்லலாம். ஆனால் அது நிறமிழந்துவருகிறது., இரப்பரால் கலைபட்ட படத்தைப்போல. எனக்கு மறதி அதிகம். நிறைய விஷயங்களை மறந்துவருகிறேன். சாலைகள் நகரம் எப்படி இருக்குமென்பது சுத்தமாக எனக்கு மறந்துவிட்டது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எவரிடமிருந்தேனும் எனக்குத் தெரியவந்ததா? இல்லை நானாக இட்டுக்கட்டியதா? கதைசொல்லியின் வாழ்க்கையைக்காட்டிலும் , இந்தவாழ்க்கை விநோதமானது. உதாரணத்திற்கு எப்படிசொல்வது, ஒரு வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகவும் எளிமையான வீடு, , ஒரு நாள் அதைப்பற்றி விவரிக்கிறோம். மறுநாள் அது அரண்மணையாக மாறிவிடுகிறது. காலங்கள் கடக்கின்றன, ஆரம்பத்தில் அது வீடாகத்தான் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதுதான் லூசியான் நகரத்தின் விஷயத்தில் நடந்தது.
    • லூசியான் ?
    • லூசியான் மொரான்ழ. அவன் என்னுடைய கைகளில் இறக்கவில்லை. என்ன செய்ய சொல்ற ? சினேகிதன் ஒருவன் நமது கைகளில் மடிவது அத்தனைச் சந்தோஷம் அளிக்கக் கூடியதா ? இக்கட்டத்தில் கேட்பவர்கள் உருகிப்போய்விடுவார்கள். அவனுக்கு எந்நேரமும் தனது ஊரப்பற்றிய பேச்சுதான். யுத்தம் தொடங்கியதும் அதைப்பற்றி எழுதவேண்டுமென நினைத்தான். அந்த நூலுக்குத் பெயர்கூட வைத்து எனக்குச் சொல்லவும் செய்தான். எல்லாவற்றையும் போலவே அதுவும் எனக்கு மறந்து விட்டது. தற்போது அவைகளெல்லாம் ஒன்றோடொன்று கலந்துள்ளன. முன்புபோல லூசியனுடைய ஊரைப்பற்றி எதையும் கூற முடிவதில்லை .
    • இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது, முடிந்தமட்டும், அதைச்சொல்வது.
    • நினைவிலிருந்து கூற முடிகிற சிற்சிலவார்த்தைகளுக்கு உண்டான பொருள் ஞாபகத்திலில்லை. அச்சொற்கள் தரையில் கொட்டிய கற்களைப்போல கிடக்கின்றன, அவை வீடுகட்ட ஒருபோதும் உதவப்போவதில்லை….ஹூல்ட்ஸ்(Hultz)! என்ன அர்த்தம்? ஹூல்ட்ஸும் அம்பும் என்றால் என்ன? அது பற்றி தெரிந்துவைத்திருக்கிறேன் . எனக்கு அதுபற்றி முன்பே தெரியுமென்பது, உறுதி. ஹூல்ட்ஸ், நான் இட்டுக்கட்டிக் கூறியதல்ல., எனக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது, ஆனால் தற்போது அதுபற்றிய காரணம் வயதினால் மறந்துபோய்விட்டது.
    • ஒருவேளை வில் வீரனாக இருக்குமோ?
    • இருக்கலாம். புகழ்பெற்ற வில்வீரனாக இருந்து, அவனைப்பற்றி மொரான்ழ் என்னிடம் கூறியிருக்கலாம்.. ஆனால் அம்புஎன்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. அதைத்தான் தேடுகிறேன். என்னுடைய கதையுடன் இணைத்து பொருத்தமாக கூறும் முயற்சியில் தற்போது தோல்வி. லூசியன் கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்த முடிகிறது. அவற்றினால் பயனேதுமில்லை என்கிறபோதும் தெரிவிக்கிறேன். எவ்வித பிரயத்தனமுமின்றி வெகு எளிதாக அவற்றை நினைவுபடுத்தமுடிகிறது. எப்படியென்று கூறத் தெரியவில்லை. அதாவது என்ன மொழியென்று தெரியாமல், ஒரு மொழியில் உரையாடுவதைப்போன்ற உணர்வு.
    • கேட்பவர்கள் மகிழ்கிறார்கள் இல்லையா.
    • ஸெல்என்றொரு தாயைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவான். உதராணத்திற்கு இதையே கூட எடுத்துக்கொள்ளலாம் . இதற்கு என்ன பொருள்? இது போலவே அவன்: « ஆறொன்றிர்க்கு தீவு என்று பெயர் எனக்கூறிக்கொண்டிருப்பான். அதற்கு என்ன அர்த்தம்? ஆறு ஒரு தீவாக இருக்க முடியாது. எதற்காக சிரிக்கிறாய்? நான் இட்டுக்கட்டியதில்லை.. அவந்தான் தீவு என்று குறிப்பிட்டான். என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதை நான் மறக்கவில்லை. ஆனால் ஆறொன்றை நதியென்று எப்படிச் சொல்வார்கள் . ஏன் சிரிக்கிறாய்? அடுத்துதாக: «’ பெத்தீத் பிரான்சுபக்கம் நடத்துவிட்டு வரலாமா? » என்று கேட்பான். ‘பெத்தீத் பிரான்சுஎன்பதென்ன? ஏன் சிரிக்கிறாய்? அவன் : « அது என்னுடைய ரூழே தெ லீல் (Rouget de Lisle) நகரத்தில் இருக்கிறது » என்பான்.
    • லா மர்செய்யேஸ்‘ (La Marseillaise)பாடுவானா.
    • ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?
    • அதுதானே உன்னுடைய ரகசியம் ? உன்னுடைய மர்மமான நகரம் அதுதான் இல்லையா ? உண்மையில் இந்த உலகை ஏமாற்ற முடியுமென்று நினைக்கிறாயா ? இந்த மர்மத்தைக் கட்டிக் காக்க நீ ஆயிரம் தந்திரங்கள் கண்டுபிடிக்கலாம், தவிர அதில் நியாயமும் இருக்கிறது . மர்மத்தைக் கையாளத் தெரியாத கதைசொல்லி வந்த வேகத்தில் காணாமற் போய்விடுவார். ஆனால் உன்னுடைய கதை தெளிவாக இருக்கிறதே ! கேட்பவர்கள் இதையெல்லாம் ஊகிக்க மாட்டார்களென்றா நினைக்கிறாய் ? சரிதான் ! அனைவருமே ஊகிக்க மாட்டார்கள் என்பதை நம்ப நான் தயாரில்லை, வேண்டுமானால் பெரும்பாலோர் என்று வைத்துக்கொள்ளலாம்.. நீ தெரிவிக்கிற ஸெல்என்கிற இந்தத் தாய் யார், பிறகு ஹூல்ட்ஸ் மற்றும் அவருடைய அம்புஎன்றால் என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை என்று வேண்டுமானால் உறுதியாகக் கூறலாம்., எனக்குக்கூட அவைகுறித்து எதுவும் தெரியாதென்பதும் உண்மை. ஆனால் நீ குறிப்பிடும் நகரம் கேட்பவர் அனைவருக்கும் புதிரானது அல்லது மர்மமானதென்றல் யார் நம்புவது. உன் முதுகின் பின்னால், “மர்ம நகரத்தின் விஷயத்தில், நம்மை முட்டாளாகிவிட்டதாக நினைக்கிறான் மனுஷன் » என நாகரீகமாக கூறி நகைப்பார்கள் என்பது நிச்சயம்.
    • அப்படி யாரும் இதுவரைச் சொன்னதாகத் தெரியவில்லை.
    • நம்புகிறேன் ! காரணம் உன்னை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதற்காக. தவிர அப்படி க்கூறி அவர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் நினைக்கிறார்கள். கதை சொல்லிகள், எழுதுகிறவர்களும் ஒன்று என்பது உனக்குத் தெரியுமா ? கேட்பதும் வாசிப்பதும் ஏதோ முதன் முதலாக நடப்பதுபோன்ற உணர்வுடன் நிகழ்கிறது. ஒரு நூலில் தவறாமல் அன்பு, மரணம், பொறாமை, நல்லவை, கெட்டவை …..நகரம் என அனைத்தையும் சந்திக்கிறோம். கதைசொல்லலிலும் தீயவற்றைக் களைய தேவதைகள் வருவார்கள், நல்ல பூதங்கள் மேகத்தின் மீது நடக்கலாம்., மலைகளை இடம்பெயர்த்துவைக்கலாம்., கெடுமதிகொண்ட ராஜாக்களை, அழகான இளம் வீரன் சண்டையிட்டுக்கொன்று , அவர்களுடைய அழகான இளவரசியை மணக்கலாம்.. மர்மமான நகரம் வேறேன்ன !
    • ஆக என்னால் எந்தப்பயனுமில்லை.
    • இல்லை என்று சொல்ல முடியுமா ? கதை கேட்கிறவர்களுக்கு நீ சந்தோஷத்தை தருகிறாயே. அவர்கள் உன்னை நம்புவதில்லை , ஆனால் எப்படிச் சொல்லவேண்டுமோ அப்படிச் சொல்கிறாய், அவர்களை சிரிக்கவும் அழவும் உன்னால் செய்யமுடியும் என்றால், வீட்டை அரண்மணை ஆக்க முடியுமெனில் , பருத்திப் பறிக்கும் பெண்ணைத் தேவதை ஆக்க இயலுமென்றால், அவர்களுக்கு மகிழ்ச்சிதானே. எனவே திரும்ப உன்னிடம் கதைகேட்க வருகிறார்கள்.உன்னுடைய ரகசியமென்பது உனது சினேகிதனின் ஊரல்ல, உன்னுடையது. அதை நீ ஒருவரிடமும் தாரைவார்க்க முடியாது. ஆனால் உன்னால் கொடுக்கக் கூடியதென்று ஒன்றுண்டு, அது வேறொரு ரகசியம்.
    • அப்படியொரு வேறொரு ரகசியம் எதுவும் என்னிடத்திலில்லை.
    • நீ என்னிடம் அதுபற்றி பேசியதுண்டு என்று கூறினால் ? அதாவது உன்னுடைய் பொய்யான பெயர் பற்றியது அது.
    • ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அதற்கு உண்மையிலேயே உரிமையுடையவனாக மாறியுள்ளேன்.
    • ஸ்லாபூகூம் தானே! நமது குடும்பத்தில் அது குறித்து பேசியதுண்டு. இப்படி சொல்கிறேனே வருத்தப்படவேண்டாம். எங்களுக்கெல்லாம், உண்மையில் இதெல்லாம் முட்டாளதனமாகப் பட்டது. நகைப்பிற்குரிய இப்ப்டியொரு பெயரை அப்படி எங்குதான் கண்டுபிடித்தாய் ?
  • முதியவர் சிரித்தார். கெட்டிக்கார கதைசொல்லி, கேட்பவரின் ஆர்வத்தை மேலும் கூட்டுவ்தற்கு விரும்பினார். பிறரைக் காதுகொடுத்து கேட்கச்செய்யும் காரியம் அத்துணை எளிமையானதல்ல என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய கலையின் வெற்றிக்கான காரணமும் அதுதான். பெரும்பாலானவற்றை மறந்திருந்த போதிலும் ஸ்லாபூகூம் பெயரின் நதிமூலத்தை மறந்தவரில்லை. அதனைத் உறுதிபடுத்திக்கொள்ள , அழகானக் காட்சி சித்திரங்கள், கவனத்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய சூத்திரங்கள் என்று தேடுகிறார். தம்முடைய சகோதரனின் கேள்வியினால் முடிவுறாத கதையொன்றிர்க்காக பயணிப்பதைபோல உணர்கிறார். ஆனால் அதைத் தொடரவிருப்பமில்லை. அந்த ஞானஸ்நானத்திற்கு மொரான்ழிடம் பெரிதும் கடன்பட்டுள்ளார். அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லத் தொடங்குகிறார்.

ஸ்லாபூகூம் ! முதியவரின் அல்ஸாஸ் சினேகிதன் தன்னுடைய நகரம் குறித்து அனைத்தையும் பிறர் தெரிந்துக்கொண்டிருக்கிறார்களென்றுகவலைப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் : «  ஹூனர்(Huns) களின் படையெடுப்பிறகு அவர்கள் வேளியேறிய பின்னர் அந்த ஊரை ஸ்ட்ராட்பூர்கம்‘ (Strateburgum) என்று அழைக்கத் தொடங்கினார்கள். » எனக்கூறினான். அன்றிலிருந்தே எங்கள் இருவரிடை ஸ்லாபூகூம்வேடிக்கைச் சொல்லாக உருமாறியது. சேடார் ஸ்ட்ராட்பூர்கம்ஊரின் பெயரை உச்சரிக்க முயன்றார். பிரெஞ்சு மொழியில் ஊரின் பெயரிலுள்ள ‘r’ என்ற எழுத்தில் தடுமாறினார். எழுத்தைக் கூட்டிச் சரியாக உச்சரிக்க முயன்றபோது திக்கினார். சினேகிதனின் காதில் ஸ்லாபூகூம்என்று விழுந்திருக்கிறது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். முடிவில் சரியான மரமண்டை ஸ்லாபூகூம்என்று கூற இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். இது நடந்தது அல்ஸாஸ் கிராமத்தில் வயதானத் தம்பதியினர் இல்லப் பரணில். மொரான்ழ் செகோன்என்று அழைக்காமல் அன்றிலிருந்து ஸ்லாபூகூம்என்று கூப்பிட ஆரம்பித்தான்.

    • வேறு பெயரில் அவன் அழைப்பதில்லை. அவன் ஸ்லாபூகூம் என்று அழைக்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாங்கள் சிரித்தோம். அச்சிரிப்பு நெருக்கடியான தருணங்களிலும் தொடர்ந்தது. அவ்வாறான நெருக்கடியானத் தருணங்கள் கலே நகரம் வரை ஏற்பட்டன. ஸ்லாபூகூம் என்ற பெயர் எங்கள் இருவருக்கும் ஒருவிதத் துணிச்சலைத் தந்தது. அவன் கடைசியாக அப்பெயரை எப்போது உச்சரித்தான் என நினைவுகூர முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது.
    • அதைப் பெரிதுபடுத்தாதே. சில விஷயங்கள் அப்படித்தான். எதற்காக என்று விளங்கிக்கொள்ளாமலேயே , முக்கியமற்றவை, முக்கியமனவையாக உருமாறுகின்றன.
    • உண்மைதான் ! லண்டனில் நாங்கள் பிரிந்தபோது, விமானி ! ஆம் மொரான்ழிற்கு விமானியாக வரவேண்டுமென்ற எண்ணமிருந்தது. அதுதான் காரணமாக இருக்கவேண்டும் , வேறு காரனங்களுக்கு வாய்ப்பில்லை. அவன் என்னிடம் «ஹாய், ஸ்லாபூகூம்ஆமாம் அப்படி அழைத்ததாகத்தான் நினைவு. பிறகு நாங்கள் வழக்கம்போலச் சிரித்தோம். இம்முறை கடைசியாக. ஸ்லாபூகூம் ! பிரச்சினை உனக்கு வேடிக்கையாக இருக்கிறதில்லையா ?
    • இனி இருக்காது.

செகோன் கதைசொல்லியாக இருப்பதென்று முடிவெடுத்தபோது ஒருவரும் கேட்டிராதப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பெயரைத் தேர்வு செய்தார். அவருடைய மாமனாரும், «  நல்ல பெயர், உன் சினேகிதன் நினைவாக இப்பெயர் நல்ல யோசனைஎனக்கூற, அன்றிலிருந்து ஸ்லாபூகூம். மொரான்ழ், நினைவாக மட்டுமல்ல, இருவரும் சந்தித்த நெருக்கடிகள், பட்ட துயரங்கள், அச்சங்கள், சிரித்த சிரிப்புகள் என்று அனைத்தின் நினைவாகவும். அவரோடு ஒட்டிக்கொண்டது.

    • சாலைகள் நகரம் எங்கிருக்கிறதென்று தெரியும். அங்கு செல்லவேண்டுமென்று அடிக்கடி எண்ணம் வரும். அதொரு கனவு ! செல்ல நேர்ந்தால், சினேகிதனிடம் பேசமுடியும், அவனும் பதில் கூறுவான். ஒருவேளை உலக முடிவில் உரையாடுவதற்கென்றே கூட எங்களிடையே விஷயங்கள் இருக்கலாம். ஆம் சாலைகள் நகரம் எங்கே இருக்கிறதென்று தெரியும். அதன் உண்மைப்பெயர் தெரியாதென்றுதான் கூறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் நான் கூறுவது போல அந்த ஊரில்லை. அதுவும் தவிர எனது நண்பன் என்னை எப்படி அந்த ஊரைப் பார்க்கவைத்தானோ அதுபோலவும் இல்லை. அங்கே செல்வதற்காக பிரார்த்த்னைகூட செய்தேன்.
    • நீ போவாய் !
    • முடியாதென்று எனக்குத் தெரியும். நல்ல வகை பூதங்களையெல்லாங்கூட எனது கதைகளுக்கென உருவாக்கியதுண்டு, ஆனல் இந்த்க்கிழவன் சேடாரை அங்கு அழைத்துப்போக ஒன்றை படைக்கத் தவறிவிட்டேன்.
    • போகத்தான் போகிறாய். ஸ்லாபூகூம் ! உனக்காக அந்த ஊரில் யாரேனும் காத்திருக்கிறார்களா ?

அவருடைய கதைகளில் முதியவரான இக்கதைசொல்லி இதுபோன்ற பல பதில்களை, வாக்குறுதிகளை, பிரியமானவர்களிடம் உரைக்கிற மீண்டும் சந்திப்போம்என்பது போன்ற பிரியா விடை வார்த்தைகளை கற்பனைசெய்து இடம்பெறச்செய்திருக்கிறார் . « நீ போவாய் ! » என நஃபீகாட்டு அளித்த ஊக்கம், சாகும் தறுவாயில் இருக்கிற மனிதர்களிடத்தில் அவர்களுடைய எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுவதை ஒத்திருந்தது. முதியவரின் சகோதரர் பயனற்றதொரு ஆறுதலைத் தந்துவிட்டு க் கிளம்ப அவருக்கு அதை உணர்த்த முனைந்தவர்போல, அமைதியானதொரு எள்ளல் கலந்த புன்னகையை உதிர்த்தார்.

(தொடரும்)

 

கதை சொல்லி (le voyage de Slaboulgoum) -பியர் ரொபெர் லெக்ளெர்க் -தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

(Pierre –robert Leclercq பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை தந்திருக்கிறார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, கட்டுக்கதையா? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island , தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் எந்தத் தீவையும் காணாமலேயே எழுதியதாகச் சொல்வார்கள். , துராஸ் கல்கத்தாவை எட்டிப்பார்க்காமலேயே அந்நகரம் குறித்து தமது புனைவொன்றில் விவரிக்கிறார். நீலக்கடல்நாவலை எழுதியபோது மொரீஷியஸ் தீவை நான் பார்த்்தில்லை. எனினும் தன் சொந்த மரணத்தைக்கூட ஒரு கதைசொல்லியால் விவரிக்க இயலும். இது கதைசொல்லிகள் வாங்கிவந்த வரம். இச்சிறுகதை வாசித்தபோது கி.ரா. பற்றிய நினைவு இயல்பாய் தொடர்ந்தது)

தூபாம்பூல்(Touba Mboul) நகரத்திலிருந்து வெளியேறும் சாலையில் அவர் தன்னந்தனியாக வசித்து வருகிறார்.அவருடைய  வீட்டு வாசற்படியிலேயே  ஏதிர்கொள்வது நிச்சயம். தணிந்த குரலில், அவர் மட்டும் தனித்து உரையாடுவதைக் கண்டு ஒரு சிலர் ஆச்சரிப்பட்டிருக்கிறார்கள். «எங்க இருக்கிற? எங்க சாகிறஎன்பது போன்ற விநோதமான வார்த்தைகளை அவர் கூறக் கேட்டிருக்கிறார்கள்.

நிறைய பயணங்கள் செய்ததுண்டு என்கிறார். அவர் வர்த்தைகளின் படி சொல்வதெனில் ஏராளமாக……வெகுதூரம்நிறைய நாடுகள்“. கடந்த சில வருடங்களாக அவருடைய கால்கள் நீண்டதூர பயனத்தை மறுத்து வருகின்றன. பொஸ் (Mbos) நகரத்தில் வசிகும், செனெகல் நாட்டுக் கண்ணாடி ஓவியர்களில் மிகவும் புகழ்பெற்ற தனது இளம்வயது சகோதரரைக்கூட தற்போது பார்க்ப் போகும் வழக்கமில்லை. செனெகெல் நாட்டு ஷியா இஸ்லாமியர் வழக்கப்படி தம்ஹாரி(Tamkharit) என்கிற புதுவருடத் தினத்திற்கு மட்டும் பயணத்திலிருந்து விதிவிலக்குண்டு. விசுசாசிகளின் தலைவிதியை அன்றைய தினம் அல்லா தீர்மானிக்கிறார். தூபாம்பூல் நண்பர்களெல்லாம் ஒன்று கூடுவார்கள். பகலில் அரிசிச் சோறு, கருவாடு, மாமிசம், தக்காளி, மாவாக்கப்பட்டுப் பிசைந்த நிலக்கடலை  கலந்த எம்பக்ஸால்யூசலூம்(mbaxal-u-saloum) செனெகல் நாட்டு உணவை அவர்ளுடன் சேர்ந்து உண்பார். இரவானால் அவர்களுக்குக் கதைச் சொல்லத் தொடங்கிவிடுவார். வோழ் (Vosges) மலையில் போனோம்‘, ‘ஷ்லூர்ட்கண்வாய்களுக்கிடையே பசியுடன் திரியும் ஓநாய்கள், இலண்டன் பெண்ணொருத்தியுடன் காதல், 24செ.மீ நீளமுள்ள ஒரு வடு, ராணுவத் துணைத் தளபதி ஒருவரின் விமானம் லூசியன் மொரான்ழ் சிரிப்புகள் என்று அவருக்குக் கதைசொல்ல விடயங்கள் இருந்தன. கஒலாக், மிஸ்ஸிரா, ஃபூந்த்தியூன் என்று வெகுதூர ஊர்களிலிருந்தெல்லாம் , தூபஎம்பூல் நகருக்கு கதை கேட்க வருகிறார்கள். பிரான்சு நட்டிலிருந்தும் எழுத்தாளர் ஒருவர் வந்தார். தம்மிடமுள்ள தகவல்கள் போதாத நிலையில், அக்குறையைத் தவிர்க்க சில ஆப்ரிக்க கதைகளைக்கொண்டு தமது பாணியில் கலந்து சொல்லஎழுத்தாளர் ஏமாற்றதுடன் புறப்பட்டுவிட்டார். பிரெஞ்சு எழுத்தாளருக்கு ஆப்ரிக்க மக்கள் பூர்வீகக் குடிகள், எனவேப் பழங்குடியினர், மனித மாமிசம், நாற்பதுகளில் எடுக்கப்பட்டதிரைப்படங்களில் வருகிற கொண்டாட்டங்கள் போன்றவற்றை அக்கதைகளில் எதிர்பார்த்தார், ‘ஹூல்ட்ஸ் (Hultz) அம்புஎன்றும் வார்த்தை வந்தது, பிரெஞ்சு எழுத்தாளரைத் தடுக்க உதவவில்லை. ராணுவத் தளபதி ஒருவரின் கிரேடு பற்றிய பேச்சுதுகூட பெரிதாய் அவரை ஈர்க்கவில்லை. கிழவர் சொல்வதற்கென கையாளும் குறிப்புகள் தமது நாட்டின் சம்பிராதாயக் கதைகளிலிருந்து பெறப்பட்டவை அல்ல. அவர் கூறும் கதைகள் திரும்பத் திரும்ப இரண்டே இரண்டு விஷயங்கள் பற்றியதாக இருந்தன: முதலாவது கதைசொல்லியான முதியவரின் வாழ்க்கை, இரண்டாவதாக சொல்பவரைப்போலவே கேட்பவரையும் கனவில் மிதக்கவைக்கும் புராணிக நகருக்கு அவர் தரும் வர்ணனைகள். அப்படியும் அந்நகரைப் பற்றிமுழுமையாகக் கூறவில்லை என்றுதான் கேட்டவர்கள் சொல்கிறார்கள். இருந்தபோதிலும், அவர் கூறுவதைவைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நகரில் வாழ்ந்ததைப்போன்ற நம்பிக்கையை கேட்பவர்களிடத்தில் ஏற்படுத்துவார், தவிர ஒவ்வொருமுறையும் அந்நகரம் குறித்து புதிதாய் எதையோ அறிவதுபோன்ற அனுபவமும் நமக்கு வாய்க்கும்.

அனுபவங்களென்று கூறியதெல்லாம் புனைவுகளாக உருமாறின. அவரது கதைகளில் சொந்தவாழ்க்கையின் தாக்கமென்பது இருபத்தைந்து வயதில் தொடங்குகிறது. அக்கதையில் வரும் அதிசயநகரத்தை விவரிக்கிறபோதெல்லாம் தவறாமல் ஸெல்என்ற பெயரில் ஒரு தாயும் இடம் பெறுவார். அப்பெண்மணி குறித்து நிறைய அவருக்குச் சொல்ல இருந்தன. அவரைப் பற்றி பேசுகிறபோதுதான் ஹூல்ட்ஸ் அம்புபோன்ற வார்த்தைகள், குறும்புக்கார சிறுவனுக்குரிய குறுநகையுடன், முகத்திலிருந்து வெளிப்படும். இப்படியொரு அதிசயத்திற்குப்பிறகு விளங்கிக்கொள்ள முடியாத அவருடைய வார்த்தைகளை மேலும் குழப்புவதைப்போன்று, குரூஸ், கலியா அறை 243 என்பவற்றையும் அவ்வப்போது கூறலானார்.

தற்போது அவற்றில் சில எதனுடன் சொடர்புடையதென்பது மறந்துவிட்டது., வயது அவைபற்றிய ஆர்வத்தை சிதைக்காமல் வைத்துள்ளபோதிலும், அவற்றின் பொருளை நினைவில் நிறுத்த தவறிவிட்டது. இன்றும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால் எது எதோடு சம்பந்தப்பட்டதென்பதில் தெளிவில்லை. அதனாலென்ன! அவர் கதை சொல்கிறபோது இடம்பிடித்துவிடுகின்றன. ஸ்லாபூகும் சொல்லக் கேட்கவேண்டுமெனக் காத்திருக்கிறவர்களும் தங்கள் பங்கு மகிழ்ச்சியை பெறமுடிவதில் திருப்தியுறுகிறார்கள்.

இப்பெயர் காரணம் ஒருவரும் அறியாதது, ‘செடார் சொகோன்என்ற பெயர் ஸ்லாபூகூம்என்று மாறிய மர்மத்தை அறிந்த ஒரேமனிதர் அவருடைய முதல் மாமனார், ஆனால் அவர் மறைந்தும் பல வருடங்கள் ஆகின்றன. சிற்சில சமயம், விளையாட்டாக என்பதைவிட ஆர்வம் காரணமாக நேரடியாகவே அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அநாவசியமான நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர்போல, கண்களை இறுக மூடிக்கொள்வார், முகம் கோணலாகும், கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, « தெரியாது!» என களைத்த மனிதரைப்போல பதிலை உதிர்ப்பார், அதன் பிறகும் எப்படி நாம் வற்புறுத்த முடியும்?

இளம்வயது ஸ்லாபூகும் பற்றித் அதிகத் தகவல்களில்லை. வடக்கே வெகுதூரத்தில், மொரித்தானியா நாட்டிற்கு அண்மையிலிருந்த டகனாவில் பிறந்திருக்கிறார். அவருடைய முன்னோர்கள் கொலுவாக்கள் என்பதால் கிராமத்தைவிட்டு என்றைக்கு வெளியேறும்படி உத்தரவு பிறந்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது ஸ்லாபூகும் வாழ்க்கை. அப்போது, உலகின் மற்றொருமுனையில் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மானியரும் 1914-18 யுத்தத்தைத் திரும்பச் செய்துக்கொண்டிருந்த காலமது.

இளம்வயது கிராமாவாசியாக இருந்தபோது, பிரான்சு நாட்டையும், பாரீஸ் நகரையும் ஐஃபல் கோபுரத்தையும், ஆர்க் தெ ட்திரியோம்ஃப் என்கிற ஒஸ்டர்லிட்ஸ் யுத்த வெற்றி வளைவையும், லாங்க்ரு பகுதியில் பிறப்பெடுத்துப் பாயும் சேன் நதியையும் பார்க்கும் ஆர்வம் எப்போதும் இருந்தது. குறிப்பாகக் கடைசியாகக் குறிப்பிட்ட சேன் நதியின் மூலத்தைப் பற்றிய இத்தெளிவு பள்ளியில் பூகோளப் பாடத்தில் அவர் பத்துக்குப் பத்து மதிப்பெண் பெறக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆக இதுபோன்ற விஷயங்கள் அசௌகரியங்களை மட்டுமல்ல நல்ல பலன்களையும் தரக்கூடும்.

சேடார் சொகோன் இருபதுவயதில், ராணுவச்சீருடையில், சிரித்தமுகத்துடன், தலைநிறைய எப்பினால் (Epinal) நகரம் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் செய்ய புறப்பட்டுப் போனார். எல்லா யுத்தங்களையும் போலவே இந்த யுத்தத்திற்கும் பெயரென்று ஒன்று வேண்டும். எனவே வேடிக்கையான யுத்தம்எனப் பெயர் சூட்டினார்கள். இளம் ராணுவ வீரர் செகோனுக்கு அப்பெயர் தவறானத் தேர்வு. அதிலும் குறிப்பாக போனோம்மற்றும் ஷ்லூர்ட்கணவாய்களில் போர்த்திற நடவடிக்கையாக தங்கள் ராணுவம் பின்வாங்கியபோது ஓநாய் வாயில் அகப்படுவதற்கெனஎன்றுரைப்பது மங்கலச்சொல்லாக இருந்தது.

« என்ன நடந்தது? சிறைபிடிக்கப்பட்டோம்அன்று நடந்த சம்பவத்தை அப்படித்தான் கூறிக்கொண்டார்கள். எதிரிகளிடம் பிடிபட்டது நான் மட்டுமல்ல பலர், எனவேதான் கைதிகள்என்று பன்மையில் சொல்லவேண்டியிருக்கிறது. மொத்தம் நாங்கள் நூறுபேர். எங்கள் அனைவரையும் அல்ஸாஸ் பகுதியில் நேஃப் ப்ரிஸாக்‘(Neuf-Brisach) என்ற இடத்திற்குக் கொண்டுபோனார்கள். அங்கே சில கிழமைகள் வைத்திருந்தார்கள். பிறகு இரயிலிலும், டிரக்கிலும் அடைத்தார்கள். முதலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறார்களென்றே நினைத்தோம். இல்லை அவர்கள் கொண்டு சென்றது நூரன்பெர்க் என்ற இடத்திற்கு, ஆம் ! திரும்ப நாங்கள் சந்திக்க நேர்ந்தது நூரம்பெர்க்(Nuremberg) ஓப்லாக்(oflag) முகாம் எண் XIII Aல்.

இக்குறிப்பைத் துல்லியமாகத் தெரிவித்தபோது. கேட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு எவ்விதச் சங்கடமுமில்லை.

    • நீங்கள் கூறுவது உங்கள் வாழ்க்கையில் நடந்ததைத்தான் இல்லையா ?
    • என் கதையேதான் ! சந்தேகமே வேண்டாம்
    • அப்படியென்றால் ஸ்டாலாக்(Stalag) என்று சொல்லுங்கள். ஓப்லாக்கைதிகள் முகாம், ராணுவ அதிகாரிகளுக்கானது. சாதாரண ராணுவ வீரர்களை ஸ்டாலாக்கில் சிறைப்படுத்தியிருந்தார்கள். நீங்கள் ராணுவ அதிகாரியா ?

இக்கேள்வி ஸ்லாபூகூமை வியப்பில் ஆழ்த்தியிருக்கவேண்டும். கேள்வி அவரைச் சங்கடப்படுத்தவில்லை. சிறிது நேர இடைவெளிக்குப்பின்னர் மற்றொரு சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

    • நான் ராணுவ அதிகாரிதான், அதாவது கேப்டன்.
    • கேப்டன் ?

ஆமாம். மிகத்திறமையாகச் சண்டையிட்டேன். எங்களை வழிநடத்திய ஜெனரலுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு நாள் தம்மை வந்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். போர் சிறிது தணிந்திருந்த ஒரு நாளில் அவரைச் சந்திப்பதென்று முடிவு செய்தேன். எனது சக வீரரிடம், « இங்கே பார், நான் போகவேண்டும் ! » –என்று கூறினேன். அவனோ, « எங்கே போகிறாய்? » எனக்கேட்டான். நான், « ஜெனரலைப் பார்க்கஎன்றேன். அவன் திரும்ப, ” அவர் பார்க்கவிரும்பியது உண்மைதான், நான் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்” – என வருந்தினான். நான் சென்றபோது ஜெனரல் சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு கோட்டையில் தங்கியிருந்தார், ஆனல் எங்கேயென்று நினைவில்லை. சண்டை மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலம். சரி பிரச்சினைக்கு வருகிறேன். என்னைக் கண்டவுடன் புரிந்துகொண்டார். « உன்னைப்பற்றி நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்” –என்றார். தொடர்ந்து, « நான் கேட்ட அளவில், எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சுகிற ஆசாமி அல்ல, மிகவும் திறமையான ஆசாமி நீ! உன்னைப்போல ஒவ்வொரு வீரரும் எதிரிகளைச் சிறை பிடித்திருந்தால் போர் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்“- என்றார். நான் நீங்கள் நினைப்பது போலவே பதில்கூறாமல் இருந்தேன். அதிலும் ஒரு ஜெனரல் பேசும்போது, வாரத்தை எப்படி வரும் ? பிறகு சிறிது நேரம் என்னிடம் உரையாடிவிட்டு, « உன்னைப்போன்ற வீரனுக்கு உரிய சன்மானம் தரப்படவேண்டும்” – என்றார். நான் என்னைக் கோப்ரல் என்று அறிவிக்கப் போகிறார் எனநினைத்திருக்க, தடாலடியாக சில நொடி அவதானிப்பிற்குப் பிறகு,” இன்று முதல் நீ கேப்டன் ” – எனக்கூறினார்.

    • திடீரென்று!
    • ஆமாம், அப்படித்தான் அறிவித்தார்.
    • எடுத்த எடுப்பில் கேப்டன்?
    • ஆம்! உண்மையைச் சொல்வதெனில் எனக்குக்கூட வியப்பாக இருந்தது. அதிலும் ஜெனரலை எனக்கு முன்பின் தெரியாது.

«கேப்டன்! இனி சூப் நன்றாக இருக்கும்! –எனக் கூறியது காதில் இன்னமும் ஒலிக்கிறது. திரும்பவும் சக வீரரிடம் வந்தேன்.«என்னைக்காட்டிலும் உனக்கு கிரேடு கூடிவிட்டது ! », எனக்கூறினார். அவன் பெயர் லெமெர்சியெ, செம்பட்டைத்தலையன்….

திடீரெனப் படைத்த லெமெர்சியெ பாத்திரத்திரதிற்குத் துணைச் சேர்க்க வாழ்க்கை‘, ‘ராணுவ வீரர்களின் நூறு சாகசங்கள்எனக் கூறிக்கொண்டுபோக, கேட்டுக் கொண்டிருந்த பிரான்சு எழுத்தாளர் தோளை உயர்த்திவிட்டு, எழுந்துகொண்டார்.. பிரெஞ்சுக்காரர்கள், கதை சொல்லிகளை அம்போவென தவிக்கவிட்டுச் செல்கிறவர்கள் என்ற முடிவுக்கும் ஸ்லாபூகூம் வரலானார்.

ஆவர் கூறும் கதையின் இப்பகுதி அப்படியொன்றும் உபயோகமற்றதுமல்லஅவருடைய நம்பிக்கையான கதை கேட்கும் மனிதர்கள் லெமெர்சியெவினுடைய அசாதரண கதையையும், தங்கள் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கேப்டன் என்பதையும் மறுநாளே தெரிந்துகொண்டார்கள்.

அவர் கூறும் கதையை நம்பாதவரென்று ஒருவருமில்லை. இக்கட்டுகதைகளுக்குத் தேதி அத்தனை முக்கியமானதல்ல. கதைசொல்லிக்கு உண்மை ஓர் ஆதாரமேயன்றி சுமை அல்ல. அவரிடம் கதைகேட்கும் எவரும் வாழ்க்கை எதுவாக இருக்கிறது, இருந்தது, இருக்கும் என்றெல்லாம் கேட்பதில்லை, ஆனால் என்னவாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். எனவே ஜோடித்து அவரால் கதை சொல்ல முடிகிறது. அண்டை அயலில் இருப்பவர்களுக்கும், வெகுதூரத்திலிருந்து ஸ்லாபூகூமிடம் கதைகேட்கவென்று வருபவர்களுக்கும் நகரமொன்றின் மர்மம் (அவர் கதையில் இரண்டு நகரங்கள் இடம்பெறுவதில்லை), அல்ஸாஸ் பெண்ணொருத்திக்குப் பதிலாக சீமாட்டி ஒருத்தியுடன் காதல், போர் விவரிப்புகள்(அவர் ஒருவர்மட்டுமே சண்டையிட்டு ஜெயிக்காமல் போனதெப்படி எனும் வியப்புடன்) போன்றவைக் கருத்தில்கொள்ள வேண்டியவை. அவர்களுக்கு முக்கியமானவை என்று சொன்னால் : அவர் கதைகள் தரும் நெகிழ்ச்சி, பிரம்மிப்பு, வேடிக்கை, பயங்கரம் என அனைத்தும். அவைக் கேட்பவரை கணநேரம், அன்றாட வழ்க்கைப் பிரச்சினையிலிருந்து விலக்கிவைத்து, பிரக்ஞையுடன் கனவுகாண்கிற உணர்வைத் தரக்கூடியவை. உண்மையான கதைசொல்லியின் வேலையும் அதுதான். ஸ்லாபூகூம் அதை மிகச்சிறப்பாக செய்கிறார். சாகசங்களை அவர் உரைப்பதில் இட்டுக்கட்டிச்சொல்வது முக்கிய பங்கு வகிக்கிறது. அவருடைய கதைகள் கேட்பவர்க்கு அலுப்பைத் தராதவை. பொய்யை உண்மையெனத் திரித்துக்கூறாதவை, உண்மையை நுட்பமாக தழுவியவை. ஸ்லாகூம் ஒரு கவிஞர், அவரை  வரலாற்றாசிரியனாக இரு என்றால் எப்படி சாத்தியம்.

முட்கம்பிவேலிக்கு சில மீட்டர்கள் தூரத்தில், மேஜர் லூசியன் மொரான்ழினுடைய பெருமூச்சை உணர முடிகிறது. சிறை முகாமிலிருந்து தப்புகின்ற முயற்சியில், நண்பர்களாகியிருந்தோம். அவர் உடலை அருகிலிருந்த காட்டுக்குள் இழுத்துச் செல்லப் போதுமான தெம்பு என்னிடமிருந்தது, இழுத்துக்கொண்டுபோய் போடுகிறேன். «என்னை சாகவிடு என்கிறார். அவர் வயிறு கிழிந்திருக்கிறது. சுற்றிலும் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அவர், « என்னைச் சாகவிடு,என்கிறார். நான், « முடிடியாது, என்கிறேன். அவரோ இது என்னுடையக் கட்டளைஎன்கிறார். அங்கேயே அவரைப் போட்டுவிட்டுப் புறபட்டேன். ஓடுகிறேன், அதிஷ்ட்ட வசமாகத் தப்பினேன். இரவு முழுக்க நடந்து ஒருவழியாக பிரான்சு நாட்டின் கிழக்குப்பிரதேசமான அல்ஸாஸ் (Alsace)க்குள் வந்திருக்கிறேன் என்பது புரிந்தது. விடிந்ததும் கிராமமொன்றுக் கண்ணிற் பட்டது. “பரவாயில்லை, என நினைத்துக்கொள்கிறேன், அங்கே ஒரு பண்ணை “. எனகென்று பாடைத்ததுபோல ஓர் அழகான அல்ஸாஸ் பெண், என்னிடத்தில் காதல்கொள்கிறாள். பரணொன்றில் என்னை பதுங்கியிருக்க எற்பாடும் செய்கிறாள். அழகி, தேன் நிறத்தில் தலைமுடி, பனிபோல வெள்ளைவெளேரென்று இருந்தாள்.  என்னைத் தீவிரமாக நேசித்தாள், எந்த அளவிற்கெனில் அடுத்த சில நாட்களில் நான் யாரென்று புரிந்துகொண்டு உதவிய எங்கள் துணைத்தளபதி யின் தயவினால் இலண்டனில் சதிக்க நேர்ந்த சீமாட்டியின் காதலுக்கு ஈடாகா. லாங்க்ருவில் உற்பத்தியாகிப் பாய்ந்துகொண்டிருக்கிற சேன் நதி பாலத்தைக் கடந்தேன். இரயிலொன்றில் பதுங்கிப் பயணித்து பாரீஸ் வந்தடைந்தேன். துணைத் தளபதி என்ன சொல்லியிருப்பாரென நினைக்கிறீர்கள் ? அவர், « உங்களை எனக்குத் தெரியும். பழையத் துணிச்சல் தற்போதும் உங்களிடம் உண்டா ? » எனக் கேட்டார். நான் அவரிடம் : «  சந்தேகம் வேண்டாம் » , என்றேன். அவர் « என்னிடம் விமானமொன்று இருக்கிறது, காட்டில் தான் பதுக்கிவைக்க முடியும், அங்குதான் இருக்கிறது. நாளை இலண்டனுக்குப் போகிறேன், என்னுடன் வர உங்களுக்கு விருப்பமா ? எனக் கேட்டார். இலண்டனில் திரும்பவும் ராணுவ வீரன். பிறகு அங்கிருந்து திரும்பவும் விமானம் பிடித்து அல்ஜீரிய நாட்டிற்கு. அங்குதான் ஜெனரல் தெகோல் (le général de Gaulle) தமது காரை நிறுத்தி என்னிடம் விசாரித்தது. அவர், « பிரமாதம் ! உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ” –எனக்கூறினார். ஒருவேளை, «  என்னை சந்திக்க முடிந்ததே மிக்க மகிழ்ச்சி» என அவர் கூறியிருக்கலாம்., நினைவில்லை. எனது கையைப் பற்றி குலுக்குகிறார். அப்போதைய போர் நிலைமையை இருவருமாகச் சில நிமிடங்கள் பகிர்ந்துகொண்டோம். பின்னர் அவர் காரில் ஏறி சென்றுவிட்டார். பாரீஸில் ஜெனரல் லெகிளெர்க் படையினருக்குமுன்பாக என்னைக் கௌவுரவித்தபோது, திரும்ப அவரைக் காண முடிந்தது. ஆம், ‘படையினருக்கு முன்பாகஎன்றுதான் கூறவேண்டும், அப்படிச்சொல்வதுதான் எங்களுக்கு வழக்கம். லான்ங்க்ரூவில் உற்பத்தியாகிப்பாயும் சேன் நதிக்கரையில் இது நடந்தது. நொர்மாந்தியில்(Normandie) 30 ஜெர்மன் ராணுவ வீரர்களை நான் தனியொருவனாக சிறைபிடித்தேன் என்பதை ஜெனரல் அறிவார். ஆனால் பாரீஸ் நிகழ்ச்சியோடு யுத்தம் முடிந்துவிடவில்ல. திரும்பவும் போரிடவேண்டியிருந்தது. ஒரு நாள் மாலை…..

மீண்டும் கதைக்குள் மூழ்குகிறார். அர்தென் (Ardennes) சம்பவத்தில் பெற்ற 24 செ.மீட்டர் நீளமான வடுவை நினைவுபடுத்திவிட்டுக் அவர் காவியம் முற்றுபெறும். ஆனால் வடுவை பிறருக்குக் காட்டுவதற்கு அவருக்குத் தயக்கம் இருக்கிறது.

இரண்டாம் வகுப்பு ராணுவ வீரனான மோன்ராழைப் பின்பற்றித் தப்பித்த மற்றொரு இரண்டாம்வகுப்பு ராணுவ வீரன் சொகோன் என்று வருகிற இரண்டாவது கதையில், புனைவுத் தன்மைகள் குறைவு. இதில் நூரன்பர்க்கிலிருந்து அல்ஸாஸ் வந்தடைய ஓர் இரவுக்கும் கூடுதலாக அவர்கள் நடக்கவேண்டியுள்ளது. கிராமத்தில் ஒரு வயதானத் தம்பதிகள் உதவிசெய்ய பரணில் சில நாட்கள் பதுங்கி வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டில் பனியையொத்த வெள்ளை வெளேரென்று பெண் எவளுமில்லை. இரவில் நடந்தும், பகலில் உறங்கியும் பிரான்சு நாட்டின் வடக்கிலுள்ள கலெ (Calais) நகரை அடைகிறார்கள். அங்கிருந்து பயணித்து இங்கிலாந்துக்கு வருகிறார்கள். ; மோன்ராழ் இலண்டன் சீமாட்டியிடம் காதலில் விழுகிறான் , பின்னர் இருவரும் பிரிகிறார்கள். மொரான்ழிற்கு தரைப்படையைக்காட்டிலும் விமானப்படைபிரிவில் ஆர்வம் உண்டாகிறது. ராணுவ வீரர் சொகோன் ஆப்ரிக்கா, ஜெர்மனென்று யுத்தத்தில் கலந்துகொண்டபோதிலும், எந்த ஒரு ஜெனரலையும் சந்திப்பதில்லை, எதிரியைச் சிறைபிடித்த செய்தியோ, துப்பாக்கி முனை காயத்தினால் நீளமான வடு நிலைத்துவிட்டக் கதையோ இல்லை. இத்திருத்திய கதை, ரகசியமும், தயக்கமும் கொண்டது. சொந்த ராணுவ வாழ்க்கையின் உண்மையை வெளியுலகிற்குச் சிறிதும் வெளிக்காட்டாதது. சிலசமயங்களில் அவருக்குப் புகழ்சேர்க்கிற விஷயங்களும் அதிலுண்டு, அவ்வாறானவற்றை அலுக்காமற் கூறுவார். அவற்றுடன் கற்பனைக்கேற்ப கூடுதலாக சிறுசிறு தகவல்களைச் சேர்ப்பதுண்டு, உதாரணமாக தேன்நிற தலைமுடிகொண்ட பெண்களின் எண்ணிக்கையும் அவர்களின் காதலும் பன் மடங்கு ஆகும், யுத்தங்கள் காவிய அடையாளம் பெறும், விழுப்புண்களும் இரண்டு அல்லது மூன்றாகக் கூடலாம், விளைவாக கதைசொல்லி மாத்திரமின்றி கதைகேட்பவர்களும் சந்தோஷப்படுவார்கள்.

பிறந்த நாட்டிற்குத் திரும்பிய சேடார் சொகோன், நாடு எப்போதும்போல மாற்றமின்றி இருப்பதைக்கண்டார் . இறப்பும், பிறம்பும் பெரிதாய் இல்லை. இறந்தவர்களில் முக்கியமானவர்களென்று சொல்ல வேண்டுமெனில் அவருடைய தந்தையையும் தாயையும் சொல்லவேண்டும் அவருடைய சகோதரி சேன்லூயியைச்சேர்ந்த மீன்பிடிக்கும் தொழில் செய்த பழைய நண்பர் ஒருவரை மணம் செய்திருந்தாள். அவர்கள் மெங்கேய்(Menguèye) நகரத்தில் வசித்தார்கள். யுத்தம் செய்ய பிரான்சுநாட்டிற்கு புறப்பட்டுபோனபோது அவருடைய சகோதரர்கள் பதின் வயதினர், தற்போது போஸ்என்ற இடத்தில் வசிக்கிறார்கள் ; அவருடைய தகப்பனாரின் பிற மனைவிகளுக்கு அனைவரும் பெண்பிள்ளைகள்.அப்போதெல்லாம் அவர்கள் சின்னஞ்சிறுமிகள். அவர்களுக்கு சேடார் ஓர் அந்நியர். எனவே தனது சகோதரர்களுடன் வசிப்பதுதான் முதல் உத்தேசம்.அவர்களைக் காண இருநூறு கி.மீ. தூரம் பறந்து செல்லவேண்டும்.அங்கு இளைய சகோதரர் நஃபிசட்டூ அவருடைய வருகைக்காகக் காத்திருந்தார்.

அவர் துபாம்பூலில்  தங்க முடிவுசெய்தார், அந்நகரை நேசித்ததோடு, அவருடைய வார்த்தைள் ஜீவிக்கவேண்டுமெனில், அதுதான் சிறந்த இடமென்பது  எடுத்த முடிவு. அவர் தனது முதல் மாமனாரிடம் யுத்தத்தைப் பற்றி சிறிது கூற நேரிட்டது, அவர்தான் மற்றவர்களும் கேட்டால் சந்தோஷப்படுவார்கள் என்றார்அந்த யோசனையை அவர் முன்வைக்காவிட்டால், இவருக்கு கதை சொல்லும் எண்ணம் பிறந்திருக்காதுமுதல் நாள்மாலை கூறியதை அப்படியேசொல்லாமல் மாற்றி மறுநாள் காலை சொல்லத் தொடங்கினார். நிறைய முகங்களுக்கு முன்பாக, இயல்பாக, கதையை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப, அழகுற ஜோடித்துச் சொல்வார், கதைசொல்லும் திறனின் வேகத்திற்கேற்ப சொற்கள் வந்து விழுந்தன. அடுத்தடுத்த நாட்களில் செவி வழிச் செய்தியாக தகவல் பரவ, வந்தவர்கள் திரும்பச்சொல்லுமாறுக் கேட்டுக்கொண்டார்கள் . தொடக்கத்தில் இவராகச் சிலவற்றைச் சேர்க்கவேண்டியிருந்தது, அதன் பின்னர் தானாக வந்தது. கதை கேட்கவந்தவர்களைப் போலவே கதை சொல்லியான அவருக்கும் கிடைக்கும் சந்தோஷத்தைப் புரிந்துகொண்டார். தேன் நிற தலைமயிர் கொண்டபெண்ணொருத்தியைப் பற்றியும், ராணுவத் தளபதியின் விமானம் குறித்தும், சக ராணுவவீரர்களுக்கு முன்பாக தன்னைக் கௌவுரவித்ததைச் சொல்லத் தொடங்கியதும் அந்த மாலைதான்.

கேட்டவர் அனைவரும் மயங்கினார்கள். அதாவது தற்போது கேட்பவர்களைப் போலவே. இறுதிவரை கேட்பவரை ஆர்வம் குறையாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள அவருக்குத் தெரியும். ஒரே கதையை பலமுறை உரைக்க நேர்ந்தாலும் முடிவுமட்டும் ஒன்றல்ல. கதைசொல்லும் நேரத்தின் அளவைப்பொறுத்து கதைசொல்லும் தொனியில் ஏற்ற இறக்கங்களை பிரயோகிப்பார். அவருடைய ஞாபகங்களுக்கு இசைந்து உடல் சிலிர்க்கும், அதுபோன்றதொரு ஒத்திசைவான சிலிர்ப்பை புதிதாய்ச் சேர்க்கும் தகவல்களும் ஏற்படுத்தித் தரும்.

கடந்த அரைநூற்றாண்டாக அவர் கதை பின்னுகிறார். கதை சொல்லிக்குத் தன்னை ஸ்லாபூகூம் என்று அழைக்கப்படவே விருப்பம். பெயரின் நதிமூலத்தை அவருடைய மாமனார் ஒருவரைத் தவிர பிறர் அறியமாட்டார்கள். அவருடன் தப்பிய கூட்டாளியின் நினைவாகச் சூட்டிக்கொண்ட பெயர் அது. அவர் மணம் செய்துகொண்டிருந்த மூன்றுமனைவிகள், நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட அவருடைய ஆறு பிள்ளைகள் ஒருவரும் அறியமாட்டார்கள்.

மொரான்ழ் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அப்பெயருக்கு மரணத்தை அறிவித்து முடித்தாயிற்று. ஒருவேளை தனிமனிதனாகத் தப்பிக்கிறபோது தன்னை ஹீரோவாகச் சித்தரிக்க முடியுமென்ற நம்பிக்கையாக இருக்கலாம். நியாயமான நம்பிக்கை, ஹீரோயிஸத்தை நிச்சயம் அவருக்குச் சம்பாதித்துக் கொடுக்கும், காரணம் வினோதமான வார்த்தைப் புதிர்களினால் புனையப்பட்டதும் அவரால் சாலைகள் நகரம் என்று வர்ணிக்கப்படும் அவருடைய இரண்டாவது புனைவில் இடம்பெறும் நகரத்தின் மர்மத்தைக் களைய அது உதவும்.

(தொடரும்)

நன்றி திண்ணை செப்டம்பர் 25- 2016

மிக அருகில் கடல் – இந்திரன்

 

Indiranபடைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம். கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின்  ‘Beaux arts’ என்ற அழகியல் இவ்விருகூறுகளையும் கருத்தில் கொண்டு இயங்குவது. பிரெஞ்சில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் தமிழில் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல வரிசைகளில் இளம் கவிஞர்கள் நெருக்கிகொண்டு நிற்கிறார்கள். பருவம், சினிமா, இளம்பெண்கள் அல்லது இளம் ஆண்கள், கொஞ்சம் தமிழ் இவைகொடுத்த ஊக்கத்தில் நண்பர்களிடம் காட்ட அவர்களும் பாராட்ட, குறிப்பாக எதிர்பாலின நண்பர்கள் பாராட்டினால் அல்லது சிற்றேடுகள் பக்கத்தை நிரப்ப போட்டுவிவிடுவாதாலேயே  ‘ஜிவ்வென்று’ கவிஞர் நாற்காலிகளில் ஏறி அமர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதிய ஐந்து கவிதைகளுடன் தொகுப்பின் கனத்திற்காக பதினைந்து கவிதைகளை அவசர கதியில் எழுதி பதிப்பாளரின் கல் மனம் கரைந்தால் (?) நூலாக வெளிவந்துவிடுவிறது.  இந்த இளம்வயதினரிடையே சிறந்த கவிஞர்களும் இருக்கலாம், உருவாகலாம், அது அவர்களின் உழைப்பைப் பொருத்தது. இவர்களிடம் கவிதை மனம் இருக்குமெனில் அத்திபூப்பதுபோல கவிதை எழுத உட்காரமாட்டார்கள்,தொடர்ந்து இயங்குவார்கள், தமிழும் காலமும் கலந்துபேசி இவர்களைக் கொண்டாடும் காலம் வரும். இன்றிருக்கும் மூத்த கவிஞர்கள் பலரும் அப்படி உருவானவர்கள்தான் என்பதை, இளம் அசலான கவிஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்- உதாரணத்திற்கு இந்திரன்.

இந்திரன் இனித் தேடவேண்டியதென்று ஒன்றுமில்லை. தமிழுலகம் அறிந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கலை விமர்சகர். இந்த அங்கீகாரம் பரிசுகளாகவும், விருதுகளாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன, இருந்தும் தொடர்ந்து படைப்பிலக்கியத்துறை பல முனைகளிலும் அவரைக் காண்கிறோம். இலக்கிய நண்பர்களோடு தொடர்புவைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையான படைப்பாளிகளைத் தேடி சென்று பாராட்டுகிறார். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு உற்சாகப்படுத்துகிறார். இவைகளெல்லாம் அவரைக் கவிஞராக மட்டுமல்ல நல்ல மனிதரென்ற அடையாளத்தையும் தந்திருக்கின்றன. இந்திரன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பே “மிக அருகில் கடல்”. கவிஞர் இந்திரனின் கண்கள் பெரியவை – பெரியவை என்றால் அசாதாரணப் பெரியவை. நீங்களும் நானும் எட்டாத தூரத்திற்குப் பயணிப்பவை, கடலுக்கு அப்பாலும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் தன்மை கொண்டவை. அதனாற்றான் அவரால் நமது பார்வை பரப்பிற்கு வெளியிற்கிடந்த ஆப்ரிக்க கவிஞர்களைக் கட்டித் தழுவி, வாஞ்சையோடு நமது வாசல்வரை அழைத்து வரமுடிந்தது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்கவானம்’ அபூர்வமான மொபெயர்ப்புத் தொகுப்பு. கவிதைகளை மொழிபெயர்ப்பதென்பது எளிதானதல்ல, என்னால் இயலாதென ஒதுங்கிக்கொண்ட நிலப்பரப்பு. இந்திரனின் விழிகள் அகன்றவை, அவற்றின் பார்வை விஸ்தீரணம் உலகின் விளிம்பையும் உள்ளடக்கியது என்பதற்கு மற்றுமோர் உதாரணம்தான் அண்மையில் வாசித்த ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தொகுப்பு தொகுப்பிற்குள் இத்தலைப்பில் ஏதேனும் கவிதை இருக்கிறதா என்று தேடினேன். அப்படி எதுவும் இல்லை. உள்ள இருபத்தேழு கவிதைகளோடு இத்தலைப்பையும் கவிதையாக எடுத்துக்கொண்டால்  மொத்தம் இருபத்தெட்டுகவிதைகள்.  ஆம் தலைப்பே ஒரு கவிதைதான். ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தலைப்புக்கான காரணத்தை ‘கடலின் பாசை’ என்ற பெயரில் கவிஞர் எழுதிய முன்னுரையும் ‘தீவின் தனிமை’ என்கிற கவிதையில் இடம்பெறும் வரிகளும் தெரிவிக்கின்றன.mika arukil kadal

“கடலுக்கு மிக அருகில்தான் பிறந்தேன்.. புதுச்சேரியில் எனது வீட்டில் நான் சிறுவனாக இருந்தபோது நடு நிசியில் கேட்கும் கடல் புரளும் ஓசையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… என்னுடைய பெரும்பாலான கனவுகள் என்னிடம் யாசித்துப் பெற்றவைதான் .. என் உடம்பின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் எலும்புகள் கடல் உப்புகொண்டுதான் உருவாக்கப்படவையோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம்கூட வருவதுண்டு.. கடலை நான் அறிவேன். அதன் பாஷை எனக்குப் புரியும்…” (கடலின் பாசை)

“கடலுக்கு அப்பால்

அடிவானத்தில் பதுங்கி நிற்கும் தொலை தூர தீவுகளின்

பெயர்களை

நான் ஏற்கனவே அறிந்திருப்பதாக

எனக்குள் ஒரு பிரம்மை தோன்றுகிறது”.. (தீவின் தனிமை -பக்.54)

ஆக அவரோடு புறவெளியிலும் அகவெளியிலும் நெருக்கமான கடலை கவிதை ஆக்கியதில், தொகுப்பிற்கான பெயராக தேர்வுசெய்ததில் கவிஞரின் தருக்க நியாயங்களுக்கும் பங்கிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் இலைமறைகாயாக ஓர் ‘myth’ம் ‘mysteryம் ‘ கலந்திருப்பதை அப்பெயர் நமக்குத் தெரிவிக்கிறது. கவிஞரோடு அவர் அவதானித்தக் கடலில் நாமும் மூழ்கித் தேடி அலைகின்றவர்களாக இருக்கிறோம், தலைப்புப் போதாதென்று நூலட்டையில் இடம்பெற்றுள கல்லில் செதுக்கிய மனிதத்தலையும் அதன் பின்னே விரிந்துக் கிடக்கும் கடலும் இயற்கையோடிணைந்த மனித குல உயிர்வாழ்க்கையின் மர்மமுடிச்சுகளை அவிழ்பவையாக உள்ளன. அம்முகத்தைக் கண்டதாலோ என்னவோ ஓர் அதிரடி வாசிப்பை (incursion?) முதற்கட்டமாகவும் ஆழ்ந்த வாசிப்பை இரண்டாம் கட்டத்திலும் நடத்தி முடித்து உணர்ச்சி வியர்வையில் தெப்பமாக நனைத்து சிலுசிலுவென்று கவிச்சை மணத்துடன் “உப்பங்காற்றிர்க்காக” ஏங்குகிறது மனம், கால் புதைய வம்பா மணலில் சென்னை மெரீனாவில் ஆரம்பித்து புதுச்சேரிவரை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பருவங்களில் நடந்த நினைவுகளில் கழிகின்றன நொடிகள்.

இக்கவிதைத் தொகுப்பை கவிஞர் ஏன் எழுதினார்? எதற்காக எழுதினார்? என்ற கேள்விகளுக்கு இள்ம்வயதிலிருந்தே கடலோடு பின்னிப்பிணைந்த அவரது நெஞ்சத்தை குவாதுலுப் தீவும் அத்தீவின் மக்களும் புரிந்துகொண்டிருக்கவேண்டும் அத்தீவுகளுக்கு சென்றதன் பலனாக மீண்டும் கடல் அவரை உணர்ச்சி சூராவளியில் இறக்கிவிட்டிருக்கிறது, தப்புவதற்கு கவிஞரிடம் கவிதைக் கட்டுமரங்கள் இருக்கின்றனவென்று அவரை அறிந்த கடலுக்குத் தெரியாதா என்ன?

“ஆர்ப்பரிக்கிற அலைகடலில்

தொலைந்து போகிறபோதெல்லாம்

உன் மூச்சுக்காற்றையே ஒரு மிதவையாய்ப் பற்றிகொண்டு

சளைக்காமல் நீந்துகிறேன்” –(பிம்பம் பிரதிபிம்பம் -பக்கம் 36)

எனக் கவிஞரும் அதனை உறுதி படுத்துகிறார். இக்கவிதைகள் என்னசொல்லுகின்றன? மொழியியலாளனாகவோ, ஒரு திறனாய்வாளனாகவோ இக்கவிதையை நெருங்கவில்லை கொஞ்சம் இலக்கிய பசியுடனிருக்கிற வாசகனாக நெருங்கியிருக்கிறேன்.

‘பறவையும் குழந்தையும்’ சிறந்த படிமத்தைக் கண்முன்நிறுத்துகிறது. கவிதையின் பங்குதாரர்களாக ஒற்றை சிறகு, மற்றொன்று குழந்தை. உயிர்வாழ்க்கையின் முதலும் – முடிவும். உதிர்ந்த சிறகுபோலதான மனித வாழ்க்கை போகுமிடந்தோறும் ஒன்றை உதிர்த்து, நிரந்தரமாக ஓரிடத்தில் இருக்க சாத்தியமற்று, வாழ்க்கைத் தருணங்களை ஜெபமாலைபோல விரலால் தள்ளியபடி வாழ்ந்தாக நம்பிக்கொண்டிருந்தாலும் பிரக்ஞையின்றி முடிவை நோக்கி வெளியில் மேலே மேலே என்று பறந்து அலுத்து ஒரு நாள் ஒட்டுமொத்த இறகுகளையும் மண்ணுக்குள் புதைந்துவிடும். உதிராத இறகு அதற்குரிய இடத்தில் இருந்த கணத்தில் இறகின் உடலுக்கு என்ன செய்தாய் என்ற கேள்வியை கேட்க ஒரு குழந்தைக்குத்தான் தகுதரம் இருப்பதாகக் கவிஞர் தெரிவிக்கிறார். தானியமும் தண்ணீரும் வைக்கச்சொல்லும் குழந்தையின் பார்வைக்கு அங்கு சிறகை மறைத்து பறவையின் மொத்த உருவமும் தெரியலாம், அது சிறகடித்து துள்ளுவதும், கெத்தி கெத்தி உட்காருவதும், அதன் இரைதேடும் விழிகளும், பசித்த கீச் கீச்சும் குழந்தையின் பார்வைக்கு, செவிக்கு கேட்கிறது. குழந்தையின் அறிவுரைக்கேட்டு இறகுக்கு மனிதன் ஏதேனும் செய்தானா என்றால் இல்லை.  இரவெல்லாம் குற்ற உணர்வு உறுத்தியிருக்கவேண்டும், மறுநாள் மீண்டும் கதவைதிறந்து பார்க்கிறான். தற்போதுகூட இறகுக்குத் தண்ணீரும் தானியமும் வைப்பதற்காகத் திறந்தவனல்ல, எங்கே இன்னமும் பால்கனியில் கிடந்து, அவன் பால்கனி வருகையை நெருடலாக்கிவிடுமோ என்ற அச்சத்தில். இறகுகள் கூட தமது காலடிகளுக்குத் தடைகல்லாக இருக்கக்கூடாதென்பதுதான் நம்மிற் பலரின் வாழ்க்கைப் பயணம். ஆனால் நம்முடைய சிறகுகளும் ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன என்பதை உண்மையில் மறந்து போகிறோம்.

‘கரீபியன் சமையல்’ என்ற கவிதைகூட வாழ்க்கையை பற்றிய கேள்வியுடனேயே முடிகிறது

“உலகெங்கிலும்

வாழ்க்கை ஓர் அசைவ உணவு

வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா

கத்திமுள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா?

எதுவும் செய்யலாம்.

அல்லது

சாப்பாடு மேசைக்குக் கீழே இருந்துகொண்டு

மெலிதாய் குரல்கொடுக்கும்

செல்லப்பூனைக்குக்கூட பரிமாறி விடலாம்

………………………..

………………………….;

என்ன செய்யப்போகிறோம் இப்போது? ”

என சகமனிதர்களைப் பார்த்து கவிஞர் வைக்கும் கேள்விக்கான பதில் நாமறிந்ததுதான். பரிமாறப்படுபவை பெரும்பாலான நேரங்களில் சமைத்தவர் தேர்விலும் கைப்பக்குவத்தையும் நம்பியுள்ளன. நமக்கான பக்குவங்களைக் கணக்கிற்கொண்டோ நமது நாவிற்கு எவை சுவை தரும் என்றறிந்தோ சமைப்பவர்களும் படைப்பவர்களும் வினையாற்றுவதில்லை. எங்கே எது படைக்கப்படுகிறதோ அதை உண்ணப் பழகிக்கொள்ளுகிறபோது, உணவின் ருசியில் ஓர் ஒத்திசைவை கண்டடைகிறபோது எதுவும் ருசிக்கும். ஆனால்  நல்ல படையலைக்கூட தோற்றத்தைக்கண்டு முகம் சுளிக்கிறவர்களாக இருக்கிறோம். ஸ்டெர்மெர் (Stirner) என்ற ஜெர்மன் தத்துவவாதிச் சொல்வதைப்போல “அப்பத்தைத் தின்று செரித்தால் கடவுளடனான கணக்கு முடிந்தது’. இருபத்தோற்றாம் நூற்றாண்டு வாழ்க்கை இப்படித்தான் தின்று செரிக்கப்படுகிறது.

மழைக்காடும் ஓவியனும் இத்தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்த கவிதை. ஒவ்வொரு வரியும் அபாரம். அபூர்வமான கற்பனையும், அதனை மொழிக்குள் கொண்டுவரும் இலாவகமும் இருந்தாலொழிய இதைப்படைத்திருக்க முடியாது.

“மழைக்காடு வெட்கப்பட்டது

ஓவியனின் முன்னால் நிர்வாணமாக நிற்க

ஈரத்தில் ஊறிய இருள் துணியை

தன் தூரிகையால் போர்த்தினான் ஓவியன்”

இங்கே கவிஞனும் கலைஞனும் போட்டிப்போட்டுக்கொண்டு கவிதையைத் தீட்டியிருக்கிறார்கள்.  கவிஞன் எழுதியது எது கலைஞன் படைத்தது எது குழம்பித் தவிக்கிறோம். இக்கவிதையை இந்திரனன்றி வேறொருவர் அழகியலின் அத்தனை நேர்ந்த்திகளையும் ஒழுங்குகளையும் குழைத்து எழுத்தில் கொண்டுவர இயலாது.

கவிதைத் தொனி:

இந்திரன் கவிதைகளில் நான் பிரம்மிக்கும் விஷயம், அவர் கவிதைகளூடாக ஒலிக்கிற கம்பீரமான கவிஞனின் குரல், வீரியம் நிறைந்த ஆண்மையின் குரல்.

“ஊசிவால் குருவி

…….

என்னைப்பார்த்து கேட்டது

நீ எத்தனை கடல்தாண்டிவந்தாய்?

……….

“அடர்ந்து வளர்ந்த மரங்களின் கூட்டத்திலிருந்து

எனது வேப்ப மரத்தின் தமிழ்க்குரல்கேட்டது:

“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” (- வரிப்பூனை பக்கம்-20)

என்கிறபோதும்; கருப்பு அழகியில் “யார்பிம்பம்? யார் பிரதி பிம்பம்” எனக்குழம்பும் போதும்;  தேர்ந்தெடுப்புக்கவிதையில் “பாடும் பறவை ஏன் பாடுவதைத் தேர்ந்ந்தெடுக்கவில்லை” என புதிருக்கு விடைகாண முற்படுகிறபோதும் ஒலிக்கிற கவிஞரின் குரல்கள் முகத்தில் அறைவதுபோல இருக்கின்றன. போற்றியும், புகழ்ந்து பாடியும் வயிற்றைக் கழுவிய யுகத்தில் நாமில்லை. சுந்ததிரம் வார்த்தையில் ஜனித்தால் போதாது கவிதையின் நரம்புகளும் புடைத்தெழவேண்டும், எமெ செசேரும், செங்கோரும் முன்வைத்தது  “Négritude” என்ற பெயரில் இந்த ஆண்மையைத்தான்.

சொல்வதற்கு நிறையக் கவிதைகள் இருக்கின்றன. ‘வரிப்பூனை’,  கடல் ஆமை’, கதவு’ உடன் பிறப்பு’, ‘பார்வை அற்றவர்களுக்கான அருவி’, ‘பூங்கொத்துகள்’ ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. எல்லாவற்றையும் இங்கே எழுதுவது அறமாகாது. கவிதைகளெங்கும் உவமை, உவமேயங்கள் உருவகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ‘பால்கனிபறவை, வெயில் புரளும் காலை நேரம்’, மழைக்காடு, இருள்துணி , நிழல் சிற்பங்கள், காற்று வீதிகள்…கடைசியாய் ஒரு முறை இந்த வரிகளையும் குறிப்ப்டாமல் இக்கட்டுரையை முடிக்க மனமில்லை.

“தயக்கங்களுக்கிடையே சிந்திய

உன் ஒவ்வொரு வார்த்தையும்

தொலைபேசி கம்பிகளில் மழைநீர்க் குமிழிகளாத் தொங்கி

……………………………..;”

ஆனால் அண்மைக்காலத்தில் நான் படித்தக் கவிதைத் தொகுப்புகளில் மிகச்சிறந்ததொரு கவிதைத் தொகுப்பு.

நன்றி: திண்ணை  4 sep.2016

————————————————————————–

மிக அருகில் கடல்

கொதுலூப் தீவில் எழுதிய கவிதைகள்

ஆசிரியர் இந்திரன்

விலை 70ரூ

——————–

யாளி பதிவு வெளியீடு

எண் 8/17 கார்ப்பரேஷன் காலனி

ஆற்காடு சாலை

கோடம்பாக்கம் சென்னை -24

தொலைபேசி 91-44 -24721443

மின்னஞ்சல் indran48@gmail.com