Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம் நவம்பர் – 15

The Artist – ஒருகனவுலகத்தின்கதை

கோடம்பாக்க கனவுகளுடன் ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் தஞ்சம் புகும் மனிதர்களை உண்மைக் கதைகளை அறிவோம். சினிமா இருக்கும்வரை இக்கதைகள் தொடரலாம். இன்றோ நாளையோ நாலைமறுநாளோ லாரியிலோ, பஸ்ஸிலோ, ரயிலேறியோ வருவதும் தெருவில் அலைவதும், சினிமா அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடப்பதும், காத்திருப்பதும், உள்ளே நுழையும் திருமுகங்களின் கடைக்கண்பார்வைக்காக ஏங்குவதும், கிடைத்த தருணங்களில் வேர்வையைத் துடைத்தபடி சவரம் செய்யாத முகத்தின் திணவுகளை சகித்துக்கொண்டு விண்ணப்பமிடுவதும், அவர்களின் பொய்யான உறுதிமொழியை  நடிப்பென தெரிந்தும் (?) நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும்.  இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும்? நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா? ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன? கம்பீரமாக அடியெடுத்துவைக்கும் ஆனைக்கு நிகழும் சறுக்கலில் நமது தோல்வியை நிவர்த்திசெய்து கொள்கிறோம். ‘தெருவில் அடிக்கடி உர் உர்ரென்று யமஹாவில் போகும் பையன், விபத்தில் செத்தானாமே’ ‘அந்த ஆள் ஆடிய ஆட்டத்துக்கு இது போதாது’. இதுபோன்ற நல்ல வாசகங்கங்களை நாமும் உதிர்த்திருப்போம்.

ஒரு நடிகை பிறக்கிறாள் (A Star is born) 1937ல் வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இத்திரைப்படத்தின் வெற்றியும் கதையிலுள்ள உண்மையும் மீண்டும் இரண்டு பதிப்புகளைக் காண உதவியிருக்கிறது. திருட்டு டிவிடியைக் கண்டிக்கும் நமது திரையுலகமும் அன்றுதொட்டு இன்றுவரை கூச்சமில்லாமல் பலகதைகளையும் திரைக்கதைகளையும் திருடியிருக்கிறது. அப்படி திருடிய கதை கோடம்பாக்கத்தில் எடுத்திருந்தால் வித்தியாசமான தமிழ்ப்படம், மும்பையில் எடுத்திருந்தால் மாறுபட்ட இந்திப்படம்.

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தமது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக தனது பாட்டியின் சேமிப்பைக் கைச்செலவுக்குபெற்று நடிகையாக புகழ்பெறவேண்டுமென்ற கனவுடன் ஹாலிவுட் வருகிறாள், அவ நம்பிக்கைகளுக்கிடையில்  புகழின் உச்சத்திலிருக்கும் நடிகரின் எதிர்பாராதச் சந்திப்பு வாய்க்கிறது, கனவு நனவாகிறது. அவள் வாழ்க்கைக்குத் தங்கப்பூச்சு கிடைக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிறக்கும் காதலும் காதல்சார்ந்த தளமும் உபகதை. இந்த உபகதைதான், ஒரு நடிகை பிறக்கிறாள்’ திரைப்படத்தை உச்சத்தில் நிறுத்திய கதை. இந்த உபகதையை உயிரோட்டத்துடன் நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற படத்தின் தங்க சூத்திரம் மறந்துபோகாதென்பதை நினைவூட்டும் இன்றைய திரைப்படமே The Artist என்கிற பிரெஞ்சு திரைப்படம்.

The Artist படத்தின் கதை நடக்கும் காலம் 1927 அதாவது ஊமைபட உலகத்தின் காலம். ஊமைபட உலகம் பேசும்பட உலகமாக மாற,  ஊமைபடங்களில் கொடிகட்டி பறந்த நடிகனும் நடிகையும் எப்படி கவனிப்பாரற்றுபோகிறார்கள் என்பதுதான் கதை. இக்கதையிலும் காதலும் அதன் மாய்மாலங்களும் உபகதையாக வருகிறது.  படத்தின் நாயகன் Jean Dujardin (ழான் துழார்தென்) இப்படத்தில் நடிப்புக்காக 2011ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 2011ல் வெளிவந்திருக்கும் 1927 ம் ஆண்டு ஊமைப்படவுலகைப் பற்றிய இத்திரைப்படம் கருப்பு வெள்ளை படம் என்பதோடு  முழுக்க முழுக்க ஓர் ஊமைப்படமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். இக்கதையின் இயக்குனர் A star is born திரைப்படமே தமது படத்திற்க்கு ஆதாரமென்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

——-

கராச்சி நீர்முழ்கி கப்பல் விவகாரம்

அண்மைக்காலமாக பிரெஞ்சு அரசியலில் நாறும் பிரச்சினை கராச்சி விவகாரம் என்றபெயரில் சூடுபிடித்துள்ள ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளை மையப்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான ஊழல்.

எண்பதுகளில் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த · போ·பர்ஸ் நிறுவனம் Haubits FH77 என்கிற பீரங்கிகள் விற்பனையில் இந்திய அரசின் உடன்பாட்டினைப்பெற அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பேரத்தை சாதகத்தை முடித்தவகையில் தரகுப்பணம் அளித்ததாக குற்றசாட்டு எழுந்ததும் வழக்கம்போல இந்திய சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்வதும், குதிரை செத்ததுமல்லாமல் குழிதோண்ட பத்துபணம் என்பதுபோல எய்தவனை மறந்து இடைத் தரகராக செயல்பட்ட  ஒட்டாவியோ குட்ரோச்சியை தேடி அலைந்ததும், நாம் மறந்துபோனதும் நேற்றைய கதை. இன்று வேறுகதைகள் படிக்க இருக்கின்றன. இந்த கராச்சிகதை பிரான்சு அரசியல்வாதிகள் எழுதிய கதை. எந்த நாடாக இருந்தாலென்ன அரசியல்வாதிகளென்றிருந்தால் ஊழல் இல்லாமலா?

2002ம் ஆண்டில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் அடுத்தடுத்து  தாக்குதல்கள் நடந்தன. முதல் பலி ஓர் அமெரிக்க பத்திரிகையாளர், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழைச் சேர்ந்தவர் பெயர் டேனியல் பெர்ல்,  கொலைசெய்யப்படுகிறார். மார்ச் மாதம் 17ந்தேதி நடந்த இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்களும் மூன்று ஐரோப்பியர்களும் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 8ந்தேதி கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் பதினான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தொழிலுக்கு தொழில் நுட்பத்தை வழங்கியவர்கள் என்ற வகையில் அங்கே பணியாற்றிய பிரெஞ்சு பொறியாளர்கள், மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். தொடர்ந்து மற்றொரு தாக்குதல் இம்முறை அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடந்தது. இத்தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 11 பேர், காயமடைந்தவர்கள் 46பேர். இந்த அனைத்தும் தாக்குதலும் ‘கராச்சி விவகாரம்’ (Affaire Karachi) என அழைக்கப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கண்ட தாக்குதல்  அனைத்திற்கும் தலிபான்கள் காரணமென்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிலவும் தலிபான்களைக் குற்றம் சாட்டின. ஆனால் உண்மை வேறாக இருந்தது.

 

1994ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கமும், அந்நாட்டைச்சேர்ந்த DCNS கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கடற்படை அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் படி Agosta 90B ரக அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு கட்டித் தரவேண்டும். நமது போபர்ஸ் சாயலில் பேரங்கள் முடிந்திருந்தன. அதாவது ஆளுகின்ற பாகிஸ்தான் அரசின் (பெனாசிர் பூட்டோ) நிர்வாகிகளுக்கும் முன்னின்று பேரத்தை நடத்திய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தத் தொகையில் அதாவது பிரான்சு விற்றவகையில் பெறுகின்ற தொகையில் பத்து சதவீதத்தை தரகாக தரவேண்டும். அதாவது பொருளின் விலையை 110 என தீர்மானித்து, அதை வாங்குகிற பாகிஸ்தானியரிடம் 110யும் வசூலித்து 10ஐ கையூட்டாக பாகிஸ்தான் நிர்வாகிகளிடம் திருப்பித் தரவேண்டும். இந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் பேரத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்பில் ஒரு பேரத்தை முன்வைத்தனர். அதன்படி பொருளின்விலையை 120 ஆக நிர்ணயித்து கூடுதலாக வரும் பத்து சதவீதத்தை தங்களிடத்தில் தரவேண்டுமென்றனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு சம்மதித்தது அதாவது 100 பெறுமதியான பொருளை 120 கொடுத்து வாங்க சம்பதிக்கின்றனர். ஒப்பந்த திகையின் மதிப்பு 826 மில்லியன் யூரோ. அவ்வகையில் அத்தரகு தொகை மூன்றுதவணையாக செலுத்தப்பட்டது. முதல் இரண்டு தவணையாக செலுத்தப்பட்ட தரகுத் தொகையினால்  பிரச்சினைகள் எழவில்லை. பெனாஸிர் பூட்டோவுக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தரகுத் தொகை செலுத்தப்பட அவர்களும் பிரெஞ்சுகாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தரகுத் தொகையை திருப்பி அளித்தனர். ஒப்பந்தப்படி பாகிஸ்தானியருக்கு 32 மில்லியன் யூரோ பாக்கியிருந்தது. அப்போது திடீரென பிரெஞ்சு ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. 1997ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவர்களுடைய  சட்டம் இதுபோன்ற தரகுகளை பிரெஞ்சு அரசு ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. விளைவு பாகிஸ்தானிய மக்களுக்கு அல்ல ஆளும்வர்க்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு 32 மில்லியன் யூரோ இல்லையென்றானது அதன் விளைவுதான் பாகிஸ்தானின் கடற்படையும் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளும் இணைந்து பிரான்சுநாட்டை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட தாக்குதலை நடத்தி பழியை தலிபான்கள்மீது சுமத்தியது.  தாக்குதலில் பலியானவர்களின் உறவுகள் கடந்த கால பிரெஞ்சு அரசாங்கத்தின் வலதுசாரிகள் சிலரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போதைய பிரெஞ்சு பிரதமரும் இன்றைய ஜனாதிபதியின் நண்பருமான எதுவார் பலாதூர் என்பவர் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் நின்றபோது தேர்தல் செலவுக்கு இந்த மாற்றுத் தரகுப் பணம் உதவியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய பிரான்சு அதிபர் சர்க்கோசி    எதுவார் பலாதூர் தேர்தலின்போது அவரது வலக்கரமாக இருந்து செயல்பட்டவர் என்றவகையில், அவரையும் இவ்விவகாரம் பாதித்துள்ளது. போபர்ஸ் புகழ் ராஜிவ் காந்தியும் இன்றில்லை, கராச்சி நீர்மூகிக் கப்பல் விவகாரப்புகழ் பெனாசீரும் இன்றில்லை.

 

 

மொழிவது சுகம்- நவம்பர் -2

பெங்களூரும் திருவாரூரும்

கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த ஒன்றிரண்டு நல்ல காரியங்களுள் அண்ணா நூற்றாண்டு நூலகமுமொன்று. அதைக் குழந்தை மருத்துவத்திற்கு அம்மையார் தாரைவார்த்திருக்கிறார். இது ஏதோ முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழர் நலனிலுமுள்ள அக்கரையால் நடந்ததல்ல வழக்கம்போலவே முன்னாள் முதலமைச்சரின் மீதுள்ள வயிற்ரெரிச்சலால் வந்தது. இருவருக்கும் அப்படியென்ன சொந்த பகைகள் இருக்க முடியுமோ? அண்மைக்கால தி.நகர் விவகாரங்கள் வரை தி.மு.க வுக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் சிறுமை சேர்க்கிற விவகாரங்கள் உண்டு. ஆனால் கருணாநிதி இடைக்கிடை தமிழ்மீதும் தமிழர்மீதும் அவ்வபோது கருணைகாட்டுவார். இந்த அம்மாவிடம் எப்போதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

ஆகா!சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியாயிற்று, மூவர் தூக்குதண்டனை முடிவுக்கு வந்ததென்று நினைத்தோம், உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கு பெப்பே என்றார் தமிழர்களைப்பார்த்து. ஆட்சிக்கு வந்த நாள்முதல் மக்களின்  அடிப்படை பிரச்சினைகளில் அக்கறைகொண்டு செயல்படுவதாக இல்லை அல்லது அதற்கான எந்த அறிகுறிகளுமில்லை. அந்த அம்மா எப்போதும் திருந்தமாட்டார், அப்படித்தான் என்பார்கள். அதில் உண்மையில்லாமலில்லை. அவருக்குக் கோபம் பெங்களூரிடமட்டுமல்ல திருவாரூரிடமும் இருக்கிறது மூர்க்கத்துடனிருக்கிற காவல் தெய்வத்திடம் வரத்தையா எதிர்பார்க்க முடியும்? பிடியுங்கள் சாபம் தமிழர்கள் கெட்டொழிந்து போகக் கடவது!

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு -2011

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -10ல் இவ்வருடம் Carole Martinez என்ற பெண்நாவலாசிரியையின் நாவலான முனகலின் வெளி (Du domaine des Murmures) என்ற நாவலுக்கு  பரிசு கிடைக்க்ககூடுமென எதிர்பார்க்கிறேன் என்பதாக எழுதியிருந்தேன். எனது கணிப்பு தவறிவிட்டது. ஒரு ஓட்டுவித்தியாசத்தில் இவர் நூல் பரிசை இழந்துவிட்டது. கொன்கூர் நேற்று அறிவித்த தேர்வில் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த நாவல் L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்ளது. பிரெஞ்சுக்காரர்களில் காலனியகால ஆட்சியயையும் காலனிகளை நடத்திய விதமும், அம்மக்களின் சுதந்திர உணர்வுகளை நசுக்க எடுத்தமுயற்சிகளையும் நாவல் விவாதிக்கிறது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.அவர் தம்மை ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது தாம் முழு நேர எழுத்தாளர் இல்லையென்ற பொருளில். ஐம்பது வயதில் முதல் நாவலை எழுதியிருந்த ஆசிரியரின் இந்நாவலை எந்த பதிப்பாளரும் பதிப்பிக்க முன்வரவில்லை 17 முறை பதிப்பாளர்களால் நிராகரிக்கபட்டதென்று சொல்கிறார்.

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு பிற இலக்கிய பரிசுகளைபோலவே  விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு இவ்வருடம் இளையதலைமுறை எழுத்தாளர்களில் ஒரு சிலர் அதற்கெதிராக குற்றசாட்டை எழுப்பியுள்ளனர்.  தேர்வுக்குழுவினர் அனைவரும் சராசரியாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் தங்கள் படைப்பை தேர்வு செய்யாமல் போனதற்கு வயதுதான் காரணம் என்கிறார்கள் இளம் எழுத்தாளர்கள். அவர்கள் சொல்வதுபோல பல நல்ல புதிய தலைமுறையினரின் நூல்கள் பரிசீலனை அளவிலேயே நிராகரிக்கபட்டதென்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

பிச்சைபாத்திரம் நண்பர் சுரேஷ்கண்ணனின் வலைப்பூ.

ராயர் காப்பி கிளப்பில் எனக்கு அறிமுகமானவர். இராயர் காப்பி கிளப் பல நல்ல படைப்பாளிகளின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்தது. சுரேஷ் கண்ணனுக்கு நல்ல பார்வையுண்டு. மிக நாசூக்காக ஒரு தேர்ந்தபடைப்பாளியின் மொழியில் சொல்லக்கூடிய ஆற்றல் கண்டு வியந்திருக்கிறேன். இவரது திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கட்டுரைகள் கவனத்தை பெறுபவை. தெய்வத் திருமகள் திரைபடங்குறித்த அவரது சமீபத்திய  கட்டுரையை விரும்பி வாசித்தேன்.

“மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை ‘தமிழின் உலக சினிமா’ என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல்.” (பார்க்க அவரது கட்டுரை  தெய்வத் திருமகன் எனும் இதிகாசம்’)

http://pitchaipathiram.blogspot.com/2011/08/blog-post_22.html

——

மொழிவது சுகம் -Oct.12

தலைவர்களும் மனிதர்களும்

இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர் திரண்டால் இப்படி அன்றாட வாழ்க்கையில் யாரோ, எவரையோ, செயற்கையாக, அழைப்புக்குறிய மனிதரிடமிருந்து பெறும் பலன்களின் அடிப்படையில்- அஞ்சலகத்தில் பேனாவை இரவல் கேட்பதில் ஆரம்பித்து – ‘ஐயம் இட்டு  ஊழலை உண்ணும்’ பெருச்சாளிகளைப் போற்றும் சங்கேதப் பொருளாக உபயோகிப்பதுவரை என எங்கும் ‘தலைவரே!’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. அதில் உள்ள போலித்தன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அறிவார்கள், பிறர் குறைவாகவே அறிவார்கள். ‘தலைவர்’ என்று அழைக்கிற ஒன்றிரண்டு முகங்களை நினைவுபடுத்தி பார்க்கிறேன், கண்கள் இரண்டொருமுறை படபடக்கின்றன, மூக்கோடு கூடிய மேல்தாள் உயர்ந்துகொள்ள, முப்பது பாகைமானி அளவில் வாய்பிளந்து நிற்பார்கள், சம்பந்தப்பட்ட நபரால் கிடைக்கும் பலனுக்கு எடை அதிகமென்றால் கைகள் இயல்பாகக் கும்பிடு போடும் இல்லையெனில் உடலோடு ஒட்டி கிடக்கும், நுணி பற்களைத் நாக்கு ஒருமுறை தொட்டு அடங்கும். ‘தலைவர்’ என்ற சொல்லுக்கான பொருளை இதுதானென்று அகராதிபடுத்திவிட முடியாது. இடம், பொருள், காலம் எல்லாம் சார்ந்தது; அதற்குமேலாக அழைக்கிற நபரும் அழைக்கப்படும் நபரும் அறிந்த உண்மையென்று ஒன்றுண்டு. தலைவர் என்று அழைக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனினும் அச்சொல்லை நெஞ்சத்திலிருந்து மேலே கொண்டுவரும் எண்ணமிருக்கிரதில்லையா அதில் சூதுண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் தலைவரென்று அழைக்கிற சூதுடன் கலந்தவை. அவை அவற்றுக்கான தருணங்களுக்கென காத்துக்கிடக்கின்றன. தலைமை பீடத்திற்கான கவர்ச்சிக்கு வரலாறுகள் பதிவு செய்திருக்கிற ‘அதிகாரம்’ மட்டும் காரணமல்ல, ‘எத்தனைபேர்கள் என்னைக்கொண்டாடுகிறார்கள்’, என்பதற்கான விடையையும் அது பொறுத்தது.  அதிகாரத்தின் பாய்ச்சலைக்காட்டிலும், புகழின் வீச்சுக்குக் கிடைக்கும் நிலப்பரப்பு அதிகமென்று சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். தலைமை எடுக்கும் புகழ்ரூபம் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகின்றன. வரலாற்றில் திருப்பங்களாக நாம் வாசிப்பதனைத்தும், பிறர் புகழ் கண்டு காழ்ப்புறுவதால் உண்டகிற குடற்புண்களே. ஒரு தலைவர் மற்றொருவரை தலைவராக கனவில் பொய்தோற்றமாகக்கூட  கற்பனை செய்வதில்லை. ‘பெரியார்’ ‘அண்ணா’ என உரிமையோடு அழைத்ததெல்லாம் சம்பந்தப்பட்ட மனிதர்களின் தலைமையை மறுப்பதற்கு உபயோகித்த தந்திர வார்த்தைகளென்று நினைக்கிறேன். எனக்கு மேலே இன்னொரு தலைவனா என்ற அசூயையின் வெளிப்பாடுகளே அவைகள். தலைவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடுவதில்லை, நம்மிலிருந்து வருபவர்கள். அன்று நம்மிலும் மேன்மக்கள் தலைமையேற்றார்கள், இன்று நம்மிலும் கீழ்மக்கள் தலைமை ஏற்கிறார்கள் என்பது அடிப்படையில் காணும் வேறுபாடு, விளைவு காவிரி பிரச்சினை தொடங்கி, காஷ்மீர் பிரச்சினைவரை அரசியல்வாதிகளின் கையாலாகதக்தன்மைக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன,

மூத்திரம் பேய்ந்தாலும் முழுபக்க விளம்பரம்கொடுக்கும் நமது அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், விளம்பரமின்றி ஓசையின்றி இந்தியாவிற்காக  நம்பிக்கை தரும் வகையில் உழைக்கும் மனிதர்களும் இல்லாமலில்லை. இந்தியப்பொருளாதாரமென்பது ரிலையன்ஸ், டாட்டா, இன்போசிஸ், விப்ரோ போன்ற அமெரிக்க முதலாளித்துவ சிந்தனையை அடிப்படையாகக்கொண்டவர்களை மட்டும் கொண்டதல்ல என்பது சற்று ஆறுதலானசெய்தி. அண்மையில் அமெரிக்காவின் மேலாண்மை இதாழான Academy of Management perspectives வெளியிட்டிருந்த “The Indian way: Lessons for the U.S.” என்கிற கட்டுரைபற்றிய செய்தியொன்றை பிரெஞ்சு தினசரியில் படிக்க நேர்ந்தது. இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கும் தகவலின்படி இந்தியாவிலுள்ள சிற்சில நிறுவனங்களின் அதிபர்களுக்கு, முதலீட்டாளர்களிடம் பொதுவில் காண்கிற ‘உபரி-மதிப்பு'(இலாப வீதம்) மீதான மோகம் குறைவு என்று தெரிவவந்திருக்கிறது. முதலீடு என்கிறபோது இலாபமின்றி இயங்குவது எப்படி? வேண்டும் எனினும் அவர்களுடைய தலையாய கவனம் இந்தியாவின் சமூக நலன் பற்றியதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவது, ஏழ்மைக்கு எதிராக வினையாற்றுவது, இந்தியத் தகவல் மற்றும் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்று அப்படியல் உள்ளது. இவை வெறும் வார்த்தை அலங்காரங்களல்ல. அடுத்த தேர்தலை குறிவைத்துவைத்து மக்கள் வரிபணத்தில் கொடைவள்ளல்களாக காட்டிகொள்ளும்  அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளல்ல. தங்கள் சொந்தமுதலீட்டில் கிடைக்கும் உபரி-மதிப்பில் கணிசமான பகுதியை தொழிலார்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதனால் தங்கள் தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவை பேணமுடிவதாகக் கூறுகிறார்கள். ‘எங்களுக்குத் தொழிலாளர் நலனே முதலாவது, வாடிக்கையாளர் நலன் இரண்டாவது’ என்கிறார் HCL Tecnologies அதிபர். இக்குரலை  கடந்தகால முதலாளித்துவத்தில் கேட்டிருக்க சாத்தியமில்லை. தவிர இந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கல்விக்காகாவும், பயிற்சிக்காகவும் காட்டுகின்ற அக்கறையினால், அவர்களுடைய உழைக்கும் திறன் அமெரிக்க நிறுவனங்களோடு ஒப்பீடு செய்கிறபோது ஏறக்குறைய மூன்றுமடங்காக இருக்கிறதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களின் வெற்றிக்கு தாங்கள் மட்டுமே காரணமல்ல என்பதை வெளிப்படையாகவே இந்திய முதலீட்டார்கள் ஒப்புகொள்கிறார்களென அமெரிக்க மேலாண்மை சஞ்சிகை புகழ்கிறது. அமெரிக்க அதிபர்கள் போலன்றி இவர்கள் கட்டமைப்பு, ஒருமுகப்படுத்துதல், ஒத்துழைப்பு என ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். இந்திய முதலாளிகளிடம் பாடம் கற்கவேண்டுமென அமெரிக்க முதலாளிகளுக்கு அறிவுறுத்துகிற  ஆங்கிலக் கட்டுரை இறுதியாக பங்கு உரிமையாளர்களை அலட்சியம் செய்து முதலீட்டை வளர்ப்பது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

முதலாளித்துவ நோக்கில்  அமெரிக்க மேலாண்மை இதழியல் கட்டுரையை வெளியிட்டிருப்பினும், இதுபோன்ற நல்ல விடயங்களும் இந்தியாவில் நடக்கின்றன எனகோடிட்டுக்காட்டத்தான் எழுதவேண்டியதாயிற்று. எந்திரனுக்கு கொடிபிடித்து ஊர்வலம்போகிற மந்தைகளுக்கிடையே, தெருகூத்தும், பொம்மலாட்டமும், பாரம்பர்யகலைகளும் உயிர்ப்பெறவேண்டுமென தங்களை வதைத்துக்கொள்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

——————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-7

இங்கிதமும் மரியாதையும்

பிரான்சு நாட்டைப்பற்றி சொல்கிறபோது அவர்கள் தலைக்கணம் பிடித்தவர்கள் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. எனது சொந்த அனுபவங்கள் அதை உறுதி செய்திருக்கின்றன. காலனி ஆதிக்கத்தில் முன்னூறு நானூறு ஆண்டுகள் ஊறி வெள்ளையர்கள் அல்லாதவர்களின் மூளையைக் குறைத்தே மதிப்பிட்டு வந்தவர்கள் அவர்கள். எனவே இதுபோன்ற கருதுகோள்களிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள் புரிகின்றன.

நாம் தமிழரின் பெருமையை பேசுவதில்லையா? தமிழன் அடையாளத்திற்கு சங்க கால அடையாளத்தை மட்டுமே நம்பி இருப்பதிலிருந்து என்ன தெரிகிறது? காதலும் வீரமும் தமிழனுக்கே சொந்தமென்று நாம் சொல்வதில்லையா? ஏதோ உலகில் வேரெவரும் ஆயுதத்தை எடுக்காததுபோலவும், இனவிருத்தியை பெருக்கிக்கொள்ளாததுபோலவும்…

என் பிள்ளை கால் பரிட்சையில் பாஸ் செய்தான், அரை பரிட்சையில் நூற்றுக்கு 95 மார்க் வாங்கினான் எல்லாம் சரி.. ஆனால் முழுபரிட்சையில் நாம் தேறவில்லை என்கிறபோது யோசிக்க வேண்டியிருக்கிறது.

வரலாறென்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இறுதி வெற்றியை தங்கள் இனத்திற்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாதுர்யத்தில் தேர்ந்தவர்கள் மேற்கத்தியர்கள். அவர்கள் பேசுவது குறைவு. செயல்திறன் அதிகம். எனவே முடிவு அவர்களுக்குச் சாதகமாக இருந்தது இருக்கிறது. எனவே மேற்கத்தியர்களிடமுள்ள கர்வத்தை புரிந்துகொள்கிறேன்.

ரோமில் இருக்கிறபொழுது ரோமானியர்கள்போல நடந்துகொள் என்ற பழமொழியுண்டு,  தமிழிலும் ஊருடன் ஒத்து வாழ் எனச் சொல்வதுபோல. எனவே நீங்கள் பிரான்சுக்குள் வந்தால் பிரெஞ்சு கலாசாரத்தை ஓரளவு புரிந்துகொண்டு நடக்கவேண்டுமென பிரெஞ்சுக் காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொது இடத்தில் காறி உமிழ்வது, சாப்பிடும்போது தொண்டையைச் செருமுவது, பல் துலக்கும்போது ஆ-ஊ வென்று ஊளையிடுவது பிரெஞ்சுக்காரர்களுக்கு பிடிக்காதவிஷயம். கண்டிப்பாக பிரான்சுக்குள் வருகிறபோது bonjour, merci போன்ற சொற்களையும் சில அடிப்படை சொற்களையும் பிரெஞ்சில் தெரிந்துகொண்டு வருவது நல்லது. பிரான்சில் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள், தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். வெளிநாடுகளில் தேவையெனில் உபயோகிக்கிறவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்சில்) கூடுமானவரை தவிர்ப்பார்கள். ஆங்கிலம் உலகமொழியாக இருக்கலாம் ஆனால் ஆங்கிலம்  மட்டுமே உலகமொழி அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும், ஆக பிரெஞ்சுக்காரர்கள் இந்த உண்மையை வெளிநாட்டவரிடம் உணர்த்த விரும்புபவர்கள். ஆங்கிலத்தைவிட்டால் வேறு நாதியில்லை என்றால் Bonjour Monsieur, parlez-vous anglais? என முதல் வாக்கியத்தையாவது குறைந்த பட்சம் பிரெஞ்சில் உபயோகித்தால்தான் ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சுக்காரர் உங்களிடம் வாய் திறப்பார்.

பிரெஞ்சுக்காரர்களை பொறுத்தவரை தங்கள் மொழி மட்டுமல்ல, தங்கள் கலை, தங்கள் படைப்பு, தங்கள் உணவுமுறை உயர்ந்தவையென்ற கர்வம் அதிகம். உலகில் எல்லா நாட்டு உணவகங்களும் பிரான்சில் இருக்கின்றன. எனினும் பிரெஞ்சுக் காரர்கள் தங்கள் பாரம்பரிய உணவுமுறை, அவற்றின் செய்முறை குறித்த ஞானம்,  அவற்றை பறிமாறும் கலை, சுவை அறியும் திறனென்று பல நுட்பங்களையும் இன்றளவும் போற்றி பாதுகாத்துவருபவர்கள். ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு உணவும் ஒரு கலை, பண்பாட்டின் விழுமியம். அவர்களுக்குச் சமையற்கலை வெறும் வார்த்தை அல்ல சுவைத்துண்ணும் அழகியல் அனுபவம்.
——-

மொழிவது சுகம்: செப்.20

Paris-Delhi-Bombay

கடந்த 16-17 தேதிகளில் பாரீஸ¤க்கு சென்றிருந்தேன்.  நானிருக்கும் Strasbourg லிருந்து சுமார் 500 கி.மீட்டர் தூரத்தில் பாரீஸ் இருக்கிறது. தொடக்கத்தில் சிலகாலம் பாரீஸில் இருந்துவிட்டு இப்போதிருக்கிற நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனக்கு பாரீஸ் வாழ்க்கை பிடிப்பதில்லை. உலகில் எல்லா பெருநகரங்களுக்கான வாழ்க்கை பாரீஸ¤க்கும் பொருந்தும். சென்னையில் எப்படி வடசென்னை தென் சென்னை இருக்கிறதோ அப்படியான பிரிவு பாரீஸிலும் உண்டு. பாரீஸின் வடபகுதியில் பிற பகுதிகளைக் காட்டிலும் மூன்றாவது உலகநாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுதலாக உள்ளனர். பொதுவாக உடலுழைப்பை நம்பி இருக்கிறவர்கள் வாழும் பகுதி, ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகம்.

கடந்த ஆறுமாதகாலமாக பாரீஸிலுள்ள நவீன கலையகமான Centtre Pompidou வில் Paris-Delhi-Bombay என்கிற கண்காட்சி நடைபெற்று  செப்டம்பர் பத்தொன்பதாம் தேதி முடிவுற்றது. பிரான்சு மற்றும் இந்திய நவீன ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக(?) மேலே நான் குறிப்பிட்ட தேதிகளில் “எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா” என்ற கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடபெற்றது. பார்வையாளர்களில் ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். முதல் நாள் இந்தியாவின் வேதகால ஞானத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில் மூன்று பிரெஞ்சு பல்கலைகழக பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு கிரகஸ்தா, சம்சாரா, நிர்வாணா என்று விவரித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே இவர்களுக்கு இந்தியா என்றாலே வேதகால இந்தியா  அல்லது மக்களின் அவல நிலை. மேற்கண்ட கண்காட்சியில்கூட கலை படைப்புகள் என்ற பெயரில் வைத்திருந்தவைகள்: இந்தியாவின் சாதிப்பிரிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித்மக்கள், சேரிகள், தெருவில் அலையும் மாடுகள், மும்பை மூன்றாம் பாலினமக்கள்.   இந்திய எழுத்தாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நால்வரும் ( Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu.) ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் கூட பரவாயில்லை வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். இந்தியாவில் பிறந்ததோடு சரி. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தபட்ட மூவரில் ஒருவர் மேற்கு வங்காளம், ஒருவர் மகாராஷ்டிரா, மூன்றாமவர் குஜராத். நான் நினைத்ததுபோலவே மூவரும் மேட்டுக்குடியினர். கல்லூரிபடிப்பை முடித்து மேலைநாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்; வீட்டில்கூட அவர்களுடைய தாய்மொழியை பேசுவதில்லையாம். காரணம் சிறுவயதுமுதலே ஆங்கிலத்தில் படித்ததுதானாம், ஆக தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாதென்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். நான்காவது பெண் மலேசியாவைச் சேர்ந்தவள், தமிழ்ப் பெண். அவளும் தம் பங்கிற்குத் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லிகொண்டாள். நால்வரின் நூல்கள் இந்தியாவில் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறியதோடு அதற்கான அவசியமில்லை என்றார்கள்.

ஆங்கிலத்தில் எழுதினாலும் அமெரிக்காவிலிலோ இங்கிலாந்திலோ வசித்தாலும் இவர்கள் இந்திய எழுத்தாளர்களுமல்ல ஆங்கில எழுத்தாளர்களுமல்ல என்றொரு பார்வை மேற்கத்திய படைப்புலகில் இருப்பதை உணர்ந்திருப்பார்கள் எண்றே நம்புகிறேன். இந்த நால்வரின் எழுத்தையும் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கும் உந்துதலை ஏற்படுத்தித்தருவதாக அவற்றின் பெயர்களுமில்லை. பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் பெரும்பான்மையோர் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பதென் அவதானிப்பு.

—–

Echanges et Partages Franco-Indienne:

இது அண்மையில் நான் ஏற்படுத்தியுள்ள அமைப்பு. இதற்கு நான் தலைவராகவும், Xavier என்ர பிரெஞ்சு நண்பர் பொருளாளராகவும், Fraçoise என்ற பெண்மணி செயலாளராகவும் உள்ளனர்.  எங்கள் சங்கத்தின் நோக்கம் நவீன தமிழ் படைப்புகளை  பிரெஞ்சுக்குக் கொண்டுவருவது, பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சத்திப்பிற்கு இந்தியாவிலும் பிரான்சிலும் ஏற்பாடு செவது ஆகியவை. தமிழிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. வங்காள மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் பிரெஞ்சு பெண்மணி தமது போராட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாவல்களை மொழிபெயர்த்துவைத்துக்கொண்டு பதிப்பாளர்களை தேடி ஓய்ந்துவிட்டாராம். வாழ்த்துக்கள் என்றார். மனதில் தைரியமிருக்கிறது, தமிழுக்குத் ஏதாவது செய்யவேண்டுமென்ற உந்துதலுமிருக்கிறது, முயன்று பார்ப்போம்.
————————————–

நந்திவர்மன் வலைத்தலம்.

நந்திவர்மன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இன்றைய பல அரசியல் கட்சி தலைவர்கள் பலருடனும் வடக்குத் தெற்கு என பேதமின்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார். திராவிடப் பேரவை செயலாளர். எனக்கு அவருடைய கொள்கைகளில் முரண்கள் இருப்பினும், அவரது உழைப்பை போற்றுகிறேன். புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்தவரை அம்மண்ணிற்கும் மக்களுக்கும் ஓயாமல் குரல்கொடுத்து வருபவர். காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அரசியலில் இலாபம் பார்க்கும் மனிதர்களில் இவரைப்போன்ற மனிதர்கள் அபூர்வம் என்பது எனது சொந்த அனுபவம்.

அனத்திற்கும் மேலாக அண்மையில் புதுச்சேரி அரசின் தமிழ் மாமணி விருதை பெற்ற்வர் என்பதையும் இங்கே நினவுகூர்தல் வேண்டும்.

உலகத் தமிழர்களுக்காகவும் வக்காலத்து வாங்குகிற நண்பரின் வலைப்பூ கீழ்க்கண்ட முகவரிகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.

http://nandhivarman.wordpress.com/
http://annaist.livejournal.com/
http://dravidaperavai.blog.co.uk/tags/nandhivarman/

மொழிவது சுகம் -Sep 9

எழுத்தாளனும் சினிமாவின் கதா நாயகனும்

ஒரு சினிமாவைப் பார்த்து கதாநாயகனின் பிம்பத்தை மனதில் வரித்துகொள்ளும் கடைநிலை ரசிகனின் மனப்பான்மைக்கும், எழுத்தை வைத்து படைப்பாளியின் பிம்பத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒத்திட்டுப் பார்க்க வருகிற வாசகனுக்கும் அதிக பேதமில்லை என்பதென் எண்ணம்.

இருவருமே வெகுசன தளத்தில் இயங்குகிற ரசிகர்கள்தான். எழுத்தாளன் தமது புனைவுக்குள் கட்டமைக்கும் கதாநாயக விலாசத்திற்குள் நான் போகவிரும்பவில்லை. ஆனால் பொதுவாகவே எல்லாமனிதர்களுக்குள்ளும் அவரவர் அறிவின் வழிபட்டு -அந்த அறிவை எல்லாமுமாக – ஓர் absolu (முழுமை) இந்த முழுமையை ஓர் instant absolu எனவும் கொள்ளலாம், அத்தருணத்தில் ஒரு பொருள் பற்றிய வாய்த்திருக்கும் அறிவு அல்லது அனுபவம் பிறருக்கு தட்டையானதாக இருந்தாலும் – தான் அதில் முழுமைபெற்றிருப்பதாக உறுதிபடுத்திக்கொண்டே, அம்முழுமையின் நெகிழ்ச்சி த்தன்மைகள் (Elasticity) ) குறித்த பிரக்ஞையின்றியே அத்தருணத்தைத் தொடங்குகிறான். விவாதத்தில் இறங்கும்போதோ அல்லது எழுதிக்கொண்டு போகிறபோதுதான் நிஜவாழ்க்கையின் அவன் சந்தித்த மறுப்புகளுக்கு இடம் தேடவேண்டும், அவ்வகையில் அவனது போதாமைக்கு, இல்லாமைக்கு களிம்பு பூசவேண்டும், சஞ்சலத்திற்கு கற்பனையிலாவது விடுதலை வாங்கித் தரவேண்டுமென ஏங்குகிறான். இதைத்தான் தொடக்ககாலத்தில் நமது இதிகாசங்களும், புராணங்களும் செய்தன. திராவிடம் பேசிய எழுத்தாளர்களும், அடுத்துவந்த வெகு சன இலக்கியங்களும் இதைத்தான் செய்தன. தீவிர இலக்கியங்களில் அதன் விழுக்காடுகள் குறைவு எல்லோருமே ஏதோவொரு உன்னதத்தை கட்டமைக்க காய்கறி வியாபாரி தொடங்கி கா·ப்கா வரை அவரரவர் ஞானத்தின் வழி முயல்கிறார்கள். அறிவொளி இயக்கங்கள் பிரபஞ்ச நோக்குகள் பற்றி பேசியதும் இந்தப்பொருளில்தான். பின்னர் அவர்களிடையே பேதம் வந்தது. பிரெஞ்சு தத்துவவாதி பிளேஸ் பஸ்க்கால் (Blaise Pascale)கூறுவதை இங்கே நினைவு கூர்தல் தகும்: “மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மை சார்ந்ததல்ல, அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்யும் தன்மை சார்ந்தது. அவனது அகவய தேர்வுக்கு எழுத்துவேறு வாழ்க்கை வேறு என்று இனம் பார்க்கத் தெரியும். தமது சொந்த கதையை சுயகதை –autofiction- என்ற பெயரில் எழுதுகிற்போதும் ஒளிவட்டத்தில் கூடுதல் கவனமெடுத்து எழுதும் எழுத்தாளர்கள் தான் மிக மிக அதிகம். எழுத்தினை வைத்து எழுத்தாளர்களின் அசலான பிம்பத்தை ஒருபோதும் நிறுவமுடியாதென்பதுதான் எனது கருத்தும். இப்படியெல்லாம் பிம்பத்தை வரித்துக்கொண்டு எழுத்தாளர்களை தேடிப்போகும் வாசகர்களைக் கண்டால் எனக்கு அனுதாபந்தான் பிறக்கிறது.

எழுத்தாளனும் ஒரு சராசாரி மனிதன் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. நீதிபதிகள் குற்றவாளிகளாக இருக்கமுடியாதென்பது விதியா என்ன?

உரையும் உரையாடலும்

உறவுக்கார நண்பரிடம் சென்னையில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது தெருவோர உணவகங்களைப்பற்றி பேச்சு வந்தது. அவர்கள் உபயோகிக்கும் எண்ணை மோட்டார் வாகனங்களில் உபயோகிக்கப்படும் lubricating oil என்றார். தெருவோர உணவகங்களில் கலப்பட எண்ணையை உபயோகிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மோட்டார் எந்திரங்களில் பிஸ்ட்டனின் உராய்வினை மட்டுப்படுத்துவதற்கென்று பயன்படும் எண்ணையை சமையலுக்குப் பயன்படுத்துவார்களா? அந்த எண்ணையின் அடர்த்தியென்ன சமையல் எண்ணையின் அடர்த்தியென்ன என்று யோசிக்க வேண்டியதில்லையா?

சிலர் இப்படித்தான் தடாலடியாக தங்கள் முடிவுகளைத் திணிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்றதுதான் ‘செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதல் உண்மையல்ல’ என்று வாதிடுவதும்; ‘நிலவில் மனிதன் நடக்கவே இல்லை’, என்று வாதிடுவதும், இவர்களைக் கொஞ்சம் உட்காரவைத்து பேசிப்பாருங்கள், ‘இறைவனே அகத்தியரிடம் பேசினார்’, என்று சத்தியம் செய்வார்கள். இறைவன் அகத்தியரிடம் பேசினார் என்பதை நம்பத் தயாராயிருப்பவர் நிலவில் மனிதன் நடந்தான் என்பதை நம்பத் தயாரில்லை.

உண்மை, உண்டு, ஏற்பு, இணக்கம் போன்ற சொற்களை அறிந்த நமக்கு பொய், இல்லை மறுப்பு, முரண் போன்ற சொற்களை தெரியாமலிருக்க நியாயமில்லை. எதிரெதிர் அணியைச்சேர்ந்த இவ்விரு வார்த்தைக் குழுமத்தின் தயவுடனேயே நமது உரையாடல்களையும், கலந்துரையாடல்களையும், விவாதங்களையும் கட்டிஎழுப்புகிறோம். அவற்றின் அடிப்படையிலேயே ஒரு கருத்தியத்தை அல்லது முடிவை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளவும், வரையறுக்கவும், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் செய்கிறோம். அதேவேளை ஒரு கருத்தியத்தை அல்லது ஒரு முடிவை தீர்மானிக்கும் முன்பாக மேற்கண்ட உரையாடலோ, விவாதமோ இரு தரப்பினருக்கும் சமபலத்தையும், சமகாலத்தையும், சமவாய்ப்பினையும் வழங்கினாலன்றி உரையாடலின் முடிவில் ஒரு நேர்மையான முடிவினை எட்டுவது இயலாது. எங்கேனும் எதிர்வினை ஏதேனும் சில காரணங்களால் மறுக்கப்படுகிறதெனில் அங்கே வழங்கப்படும் நீதி, எடுக்கப்படும் முடிவு ஒரு பக்க சார்புடையதென்று பொருள்.

தகவல் தொழில் நுட்பம் பெருகியுள்ள இந்நாட்களில் திரும்பிய திசைகளிலெல்லாம் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. உரை (Discours) மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன, உரையாடல்களில்லை (Dialectique). நேருக்கு நேர் உரையாட இயலாதகட்டத்தில் ஒரு மூன்றாம் மனிதனை தேர்வு செய்து உங்கள் மறுப்பையோ, முரணையோ தெரிவியுங்கள்!என்றாவது எங்காவது ஒரு நேர்மையான முடிவினை அக்குறிப்பிட்ட கருத்தியம் ஒரு நாள் எட்டக்கூடும். இப்போதைக்கு அதுவொன்றுதான் வழி

——–

வாசிப்பும் நிராகரிப்பும்

வாசிப்பு என்பது வேறு வாசிப்பு அனுபவம் வேறு. எதைசெய்தாலும் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தகளின்றி ஈடுபாடுகொள்கிறபோதுதான் அக்காரியத்திற்கும் கருப்பொருளுக்கும் பெருமை கர்த்தாவுக்கும் மகிழ்ச்சி. வாசிப்புக்கும் இது பொருந்தும். பள்ளி கல்லூரி நாட்களில் தேர்வுக்காக ஒன்றை பாடத்திட்டங்களில் இருந்து தொலைக்கிறதேயென்று வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. அதை விடுத்து வெளியில் வருகிறபோது அதாவது வளர்ந்து பெரியவர்களாகிறபோதும் அவற்றை வாசிக்க நமக்கு ஆர்வம் இருக்கிறதா என்ற கேள்வி முக்கியம். பொதுவில் பலருக்கும் மீண்டும் அவற்றை வாசிப்பதென்பது நிகழ்வதில்லை. சங்க இலக்கியங்களாயினும் சரி காப்பியங்களாக இருந்தாலும் சரி, நவீன படைப்புகளாக இருந்தாலும் சரி, ஏனைய பிறவாக இருந்தாலும் சரி அவ்விலக்கியங்கள் ஓர் ஈர்ப்பினை கொண்டிருந்தாலன்றி மறுவாசிப்புக்கு உட்படுவதில்லை. தமிழில் இவ்வளவு இலக்கியங்கள் குவிந்துள்ளபோதும் ஏன் ஒரு சிலவற்றை திரும்பத் திரும்ப ஆராதிக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. கம்ப இராமயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் பிறவற்றிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?  திருவெம்பாவையைக் காட்டிலும் திருப்பாவையை போற்றுவதேன்? யோசிக்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பனுவம் என்பது வேறு: வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்களை பிரித்து பார்ப்பதுடனோ, அறிவியலறிஞர்கள் துறைசார்ந்த இதழ்களைப் புரட்டிப்பார்ப்பதுடனோ; பேராசிரியர்கள் வகுப்பில் பாடமெடுப்பதற்காகவென்றே கல்விக்கூட நூலகத்திற்குள் நுழைவதுடனோ அதனை ஒப்பிடமுடியாது.  இவைகளெல்லாம் ஏற்கனவே கூறியதைப்போன்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுக்காக வாசிக்கும் மனநிலைக்கு உரியவை. தளைகளின்றி வாசிக்க வேண்டும். நிர்ப்பந்தகளின்றி பக்கங்களை புரட்டவேண்டும். புத்தகத்தை கையிலெடுத்தேன் வாசித்து முடித்தேன் என்ற உந்துதலுடன் வாசிப்பு நிகழ்த்தப்படவேண்டும். உலகில் இன்று ஓகோவென்று கொண்டாடப்படும் இலக்கியங்கள் இச்சூத்திரத்திற்குள் ஒடுங்குபவைதான்.

வாசிப்பனுவமென்பது வாசகன், வாசிக்கப்படும் படைப்பென்ற இருவர் கூட்டணியால் உருவாவாது. அவர் சொன்னாரென்றோ, நல்ல விமர்சகர் எழுதினாரென்றோ, விற்பனையில் சாதனை படைத்தது என்பதற்காகவும் ஒரு நூலை உடனடியாக வாங்கிவிடலாம், எடுத்து ஒரு நாள் படிக்கவும் தொடங்கலாம் ஆனால் அதனை முடிப்பதென்கிற மன உந்துதலுக்கு இவை மட்டுமே காரணிகளாகிவிடமுடியாது. கையிலெடுத்த நூலை தொடர்ந்து வாசிப்பதற்கான விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு படைப்புக்கு உண்டு.

என்னிடத்திலும் வாசிக்க ஆரம்பித்து முடிக்காத புனைவுகள் பல இருக்கின்றன. இக்காரணங்கள் உங்களுக்குப் பொருந்துமாவென்று தெரியாது. என்னை தொடர்ந்து வாசிக்கத் தூண்ட ஒருபடைப்பிற்கு கீழ்க்கண்ட குணங்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். அல்லாதவற்றை நிராகரித்திருக்கிறேன், அல்லது அதற்கான மனநிலை வருகிறபோது வாசிக்கலாமென தள்ளிப்போடுகிறேன்:

1. சொல்லப்படும் கதையில் உயிர்ப்பு ஒருக்கவேண்டும். அது இறப்பை பற்றியதாக இருந்தாலுங்கூட.

2. சொல்லப்படும் நடை புதியதாக அதாவது பிரத்தியேகமாக இருக்கவேண்டும்.

3. தேவைக்கதிகமாக  அல்லது தேவையின்றி சிலவற்ற சிலாகித்து எழுதிக்கொண்டிருப்பது. உதாரணம் மலத்தைக்குறித்து பக்கம் பக்கமாக பேசுவது.
—-
4. படைப்பில் அரும் அத்தனை பாத்திரங்களிலும் ஆசிரியர் கூடுபாய்வது தப்பில்லை. ஆனால் அவ்வளவுபேரின் பேச்சிலும் புத்திஜீவியென்கிற ஆசிரியனின் நினைப்பும் உடன் கூடுபாய்ந்திருக்குமானால் ஆபத்து.

5. நூலாசிரியர் தமது முடிவுகளையும் நம்பிக்கைகளையும் ஒற்றைக்குரலில் வாசகர்களிடம் திணிப்பது. காந்தியத்தின் மீது நம்பிக்கை இல்லை, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை இல்லை. தாராளமாக அவர் கட்டுரைகள் எழுதட்டும். பத்தி எழுதட்டும். ஆனால் ஒரு புனைவில் பக்கங்கள் தோறும் எழுதிக்கொண்டிருந்தால் தூக்கிப்போட்டுவிட்டு எழுந்திடுவேன்.

——

மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை” என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன உலகில் சில அரசாங்கங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொலைக்களத்திற்கு அழைத்துபோகப்படுபவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. தவிர தண்டனையென்பது குற்றவாளிக்கான நீதிசார்ந்தது அல்ல தண்டனை வழங்குபவருக்கான நீதிசார்ந்தது. பல நேரங்களில் செய்த குற்றத்தைவிட செய்தவன் யார் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. வாள்பிடித்தவன் நீதிபதி, எதிராளி ஆடு. நான்காண்டுகளுக்கொரு முறை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் மாநாடு கூட்டப்படுகின்றது. முதல் மாநாடு 2001ல் பிரான்சு நாட்டில் ஸ்ட்றாஸ்பூர் நகரில் கூடியது. அடுத்த மாநாட்டினை கனடாவில் மோரியால் நகரில் கூட்டினர். மூன்றாவது மாநாடு மீண்டும் பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் கூடியது. இப்போது நான்காம் முறையாக இம்மாதம் (பிப்ரவரி 24,25,26) சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரில் கூடியுள்ளது. கடந்த முறை பிரான்சு நாட்டின் அப்போதைய அதிபர் சிராக்கின் ஆதரவுடன் கூட்டப்பட்ட மாநாட்டில் உலகெங்குமிருந்து சுமார் ஆயிரம்பேர் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பு நிறுவனங்கள் சார்பில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் செயல்பாடுகளை, அரசியல்களை தீர்மானிக்கவல்ல சூத்ரதாரிகளை மாநாட்டில் பங்கெடுக்கச் சொல்வதன்மூலம் அந்நாடுகளின் அரசியற் சட்டங்களிலிருந்து மரணதண்டனையை ஒழிக்க இயலுமென சமூக ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.

அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் அரசியல்சட்டத்தின் உதவியோடு நடத்தும் சிரமறுத்தலில் ஒற்றுமை இருக்கிறது. உலகில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் 98 விழுக்காடு மரண தண்டனைகளை இம்மூன்று நாடுகளும் நிறைவேற்றுகின்றன. ஜனநாயகத்தைப் பேணுவதாக நம்பப்படும் அமெரிக்காவில் வெள்ளையரை காட்டிலும் பிறருக்கு(அவர் கறுப்பரோ ஆசியரோ) மரணத் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் ஏழு சதவீதத்தினர் மறு விசாரணையில் அப்பாவிகளென தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 93 சதவீதத்தினரில் 20 சதவீதத்தினரே மரண தண்டனைக்குறிய குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்கள் எனப்பார்க்கிறபோது இப்பிரச்சினையிலுள்ள விபரீதம் தெரியவரும். மனிதகுல பிரச்சினைகளுக்கு மார்க்ஸியமே தீர்வு என்று நம்பியகாலங்களிலும் சரி இன்றைக்குப் படுத்த படுக்கையிலிருக்கும் மார்க்ஸியத்தைத் தேற்ற, தனியுடமையை ஔடதமாக ஊட்டுகிற நவீன சோஷலிஸ சீனர்களுக்குஞ் சரி சுதந்திரம் என்ற சொல் கொடுங்கனவு. மார்க்ஸிய தோழர்களான சீனர்களின் சிந்தனையில் இன்று சிவப்பில்லை, மாறாக கைகள் என்றும்போல சிவப்பானவை. உயிரைக் குடித்து சிவந்தவை, மரண தண்டனை விதிப்பதில் ஆர்வம் அதிகம். அரசாங்கத் தரப்பில் வருடத்திற்கு ஆயிரமென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாகத் தெரிகிறது. இணைய தளங்களில் உள்ள தகவல்கள் வருடத்திற்கு 7000மென்று தெரிவிக்கின்றன. சீனர்களை அறிந்தவர்களுக்கு இந்த எண்ணிக்கை வேறுபாட்டில் வியப்புகளில்லை. ஈரான் நாட்டிலும் ஆண்டு தோறும் 300லிருந்தோ 400பேர்கள்வரை  கல்லால் அடித்தோ, தூக்கிலிடப்பட்டோ கொல்லப்படுகிறார்களெனச் சொல்லப்படுகிறது. பத்தொன்பது வயது, பதினாறு வயதென்றுள்ள பெண்கள்கூட பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கொல்லப்படுகிறார்கள். இங்கும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் உலக மனிதர் ஆணையம் வெளியிடும் தகவல்களுக்கும் மலைக்கு மடுவுக்குமான பேதங்கள் உள்ளன. சிறுவயதினரின் தவறுகளுக்கு மரணதண்டனையை தீர்ப்பாக வழங்கிய பின்னர் தண்டனையை நிறைவேற்ற பதினெட்டுவயது ஆகவேண்டுமென மரனத்தின் வாசலில் அவர்களை நிறுத்திவைப்பது ஆகக் கொடுமை. அண்மையில் எதிர்கட்சி ஆதரவாளர்கள் பலருக்கு ஈரான அரசாங்கம் தூக்குத் தண்டனை வழங்கியது. பொதுவாக மரணதண்டனைக்கான குற்றச்சாட்டுகளில் நியாயமிருப்பதுபோல தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பினும், கணிசமான வழக்குகளில் உண்மைக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அமெரிக்க நாட்டில் மரணதண்டனைக்கான வாய்ப்பு கறுப்பரினத்திற்கு அதிகம் அவ்வாறே ஈரானிலும், சீனாவிலும் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது விஷ ஊசியால் சாகடிக்கப்படுவார்களென்பதும் உண்மை. ஈரானிலும் சீனாவிலும் குற்றவாளிகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூட அனுமதிக்கபடுவதில்லை, வழக்கறிஞர்கள் உதவிக¨ளையெல்லாம் அவர்கள் கேட்டு பெறமுடியாது.

கடந்த காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி அரசியல் எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. தொடர்கொலைகள் புரிந்தவர்கள் மாத்திரமல்ல குற்றமற்ற அப்பாவிகளையும் கொன்றிருக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்களும் புனைவுகளும் பிரெஞ்சு மொழியில் வந்திருக்கின்றன. அந்நியன் கதைநாயகன் தமது நண்பனுக்கு உதவப்போய், மரணத்தண்டனை பெறுவான். இன்றைக்குப் பிரான்சு நாட்டின் நிலைமை வேறு, மரண தண்டனையை 1981லிருந்து முற்றாக ஒழித்திருக்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனைகள் அதிகம் விதிக்கப்படுவதில்லை மிக அரிதாகத்தான் நிறைவேற்றபடுகின்றன எனக்கூறியபோதிலும் அப்பணியைச் சமூக குற்றவாளிகளும் காவல் துறையினரும் செய்வது பலரும் அறிந்த செய்தி.ஒருமுறை இந்தியாவிற்கு பிரெஞ்சு நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரைத் தேடி சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மனுநீதிச் சோழன் சிலை குறித்து விசாரிக்க, நீதி விஷயத்தில் சோழனுக்கென்று புனைந்தோதப்பட்ட நேர்மையை விளக்கிக் கூறினேன். நண்பர் சிரித்தார். இருபது ஆண்டுகால நண்பர், நானிருக்கும் நகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகூடும் தத்துவவாதிகளின் உரையைக் கேட்க அவரும் வருவார், அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. இப்போது மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அணியில் தீவிர உறுப்பினர். கன்றிற்காக சோழன் தனது மகனைக் கொன்ற கதையின் தீர்ப்பில் உடன்பாடில்லை என்பதுபோல அல்பெர் கமுய் வார்த்தையில் அதை Absurdism என வர்ணித்தார். எங்கள் தமிழர் வாழ்க்கை இது போன்ற கற்பனை குறியீடுகளால் ஆனதென்ற உண்மையை சொல்ல வெட்கப்பட்டு எனக்கும் சிரித்து மழுப்பவேண்டியிருந்தது.

——————————————————–

மொழிவது சுகம் – கட்டுரை தொகுப்பிலிருந்து

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை -11 பதிப்பில் விரைவில் வெளிவர உள்ளது

மொழிவது சுகம்: மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல

“Aucun pouvoir sur terre ne peut arrêter une idée dont l’heure est venue.”

“காலமும் நேரமும் கைகூடினால், வருவது வழியில் நிற்காதென்று” எங்கள் கிராமத்தில் சொல்லக்கேட்டிருக்கிறேன். கைய்யறு நிலையில் மனிதர்க்கு தெம்பூட்டுவதற்கென்றே இது போன்ற வாசகங்கள் தமிழில் மட்டுமல்ல உலகில் எல்லாம் மொழிகளிலுமுண்டு. மேலேயுள்ள வாசகம் பிரெஞ்சுமொழிக்குச் சொந்தம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல், சமூகம், இலக்கியமென பிரெஞ்சு பிரபஞ்சத்தை சுற்றிவந்த விக்டர் யுகோ என்ற மாமனிதனுக்கு அவ்வரிகள் சொந்தமானவை. இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தியப் பாராளுமன்றத்தில் அவற்றை உச்சரித்திருக்கிறார்.  தமிழ் வழக்கிற்கும் விக்டர் யுகோவின் கூற்றுக்கு அடிப்படையில் வேறுபாடுண்டு. இங்கே ‘idée’ என்பதற்கு ‘திட்டம்’ அல்லது கருதுகோள் என்று பொருள். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரமும் காலமும் பொருந்திவந்தால் அதனைத் தடுப்பதென்பது எப்பேர்பட்ட அதிகாரத்திற்கும் இயலாது’ என்றப் பொருளில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் குறிப்பட்டிருந்தார். காரணம் ரூபாயின் மதிப்பை குறைப்பது, அந்நிய முதலீட்டை கட்டுப்பாடுகளின்றி வரவேற்பதென்ற தீவிர பொருளாதார சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினாலொழிய இந்தியா தலையெடுக்க முடியாதென்ற உண்மையின் அடிப்படையில் ஆற்றிய உரை.

மன்மோகன் சிங் அப்போது பிரதமரல்ல, இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலம். புது டில்லி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடன் 1991ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்திய உரை.. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். இந்தியா வாங்கியக் கடனை வட்டியுடன் திருப்பி அடைக்குமா என்ற நிலையில் உலக வங்கிக்கு முன்னீட்டு வைப்பாக தமது கையிறுப்பு தங்கங்களை -அதாவது 67 டன் தங்கத்தை உலக வங்கிக்கு அனுப்பிவைத்து கடனைப் புதுப்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம். இத்தகைய நெருக்கடியான நேரத்தில்தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். அதன்பின்னர் மளமளவென்று அப்போதைய இந்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, அறுவடை செய்துகொண்டிருக்கிற பலன்களுக்கு இன்றைய இந்தியா சாட்சி. இப்போது மன்மோகன் சிங் நிதி அமைச்சரல்ல நாட்டின் பிரதமர் அதாவது பெயரளவில். அவர் ஆளவில்லை பெரிய முதலாளிகள் ஆளுகிறார்கள். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரசாங்கங்கள் பெருமுதலாளிகளுக்காக வளைந்துகொடுக்கிறார்களெனில் இங்கே இந்தியாவில் அரசாங்கம் அவர்கள் காலடியில் கிடக்கிறது. ஆக அன்று மன்மோகன் சிங் மடைதிறந்த வெள்ளம் இன்று புற்களுக்குப் பாயந்ததுபோக பயிர்களை நனைக்கிறது.

உடடியாக பெரிய மாற்றங்கள் எதையும் அன்னா ஹஸாரே போராட்டம் விளைவிக்கப் போவதில்லை. அன்னா ஹசாரேவும், அவரது சகாக்களும், பொதுமக்களில் பலரும் இது மந்திரத்தில் மாங்காய் விழவைக்கிற செயல் திட்டமல்ல என்பதை உணர்ந்தே இருப்பார்கள். எனினும் ஊழல் சக்திகளை இப்போராட்டம் யோசிக்க வைக்கும். கையூட்டுக் கொடுக்கின்றவர்களில் ஒரு சிலரையாவது வேறுவகையில் தங்கள் அன்றாடப்பிரச்சினையை சமாளிக்கத் தூண்டும். அரசு ஊழியர்களில் ஒன்றிரண்டு பேராவது இலஞ்சம் கேட்க வெட்கப்படக்கூடும். காவலர்களில் உத்தமர்களை சந்திக்கும் அதிசயங்கள் நிகழலாம். நீதிபதிகள் இனி குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படும் ஊழல் ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டமாட்டார்கள்.

ஜனநாயகம் என்கிற கருத்தியமும் சரி அதன் தொழிற்படுத்தும்விதமுஞ்சரி மக்களின் ஆதரவும் திடமான உறுதியும் இருந்தாலொழிய ஜெயிப்பதில்லை. நேற்றைய இந்தியா, அண்மையில் துனீசியா, எகிப்து,  இன்று லிபியா உதாரணங்கள். மேற்கத்திய நாடுகள் விரும்பின அல்லது அமெரிக்கா விரும்பியது அதனால் மேற்கண்ட நாடுகள் சர்வாதிகாரிகளிடமிருந்து விடுதலைபெற்றார்களென கூறவியலாது. மக்கள் விரும்பினார்கள், வேண்டினார்கள், உறுதியாய் நின்றார்கள் முடிவில் விடுதலையைப் பெற்றார்கள். ஆனால் பெற்ற விடுதலையை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலுந்தான் பிரச்சினைகளிருக்கின்றன.  அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதால் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது. சொந்த வாழ்க்கையில் ஊழலைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

நமது மக்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். சில வேளைகளில் அன்னா ஹஸாரேவுக்குக் கூடும் கூட்டத்தைப்பார்க்க அரட்டை அரங்கங்களில் நடந்தேறும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கையில் நேர்மையை எதிர்பார்க்கும் நாம், சொந்த வாழ்க்கையில் இலாபத்தை தரும் காரியத்தை மட்டுமே தேர்வு செய்கிறோம். மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்வது. மனிதனின் அகவிருப்பம் அடுத்தவர்களின் நலனில் அக்கறைகொண்டதல்ல. மதுபோல, காமம்போல அதுவும் போதை தரக்கூடியது, நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. ஆக அன்னா ஹஸாரேயின் போராட்டமென்பது ஓர் ஆரம்பம் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதென்பது ஒவ்வொரு இந்தியனின் அந்தரங்க நேர்மை சார்ந்தது.

————

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-2

அன்றாட உணவு: பிரெஞ்சு மக்களுக்கு ரொட்டி ஒரு பிரத்தியேக உணவு.
இங்கே அதிகாலையிலேயே அதாவது காலை ஐந்து மணிக்கே ரொட்டிக்கடைகளை திறந்து வைத்திருப்பார்கள்.  பூலான்ழெரி (Boulangerie) என்கிற ரொட்டிக்கடைக்குச் சென்று வீட்டுக்கு,  அன்றைக்கு வேண்டிய ரொட்டிகளை வாங்குகிறார்களோ இல்லையோ தவறாமல் காலை உணவுக்கு வேண்டிய ரொட்டிகளை கட்டாயம் ஒர் அசலான பிரெஞ்சுக்காரன் கட்டாயம் வாங்கிவருவான். தினசரி ரொட்டியில் பகத் (Baguette)க்ருவாசான் (la Croissant) சாக்கலேட் க்ருவாசான் என அமெரிக்கர்கள் சொல்கிற சாக்லேட் ரொட்டி(le pain au chocolat) ஆகிய மூன்றும் முக்கியமானவை. பழங்காலத்தைப் போலன்றி இப்போது அநேக பிரெஞ்சுக்காரர்கள் பிறபொருட்களை வாங்குவதற்கென பேரங்காடிகளுக்குச் செல்கிறபொழுது ரொட்டிக்களையும் அங்கேயே வாங்கிக்கொள்ள நேர்ந்தாலும் ஆங்காங்கே இருக்கிற ஒன்றிரண்டு கடைகளில் இவற்றை வாங்குவதை ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர். எனவே அரிதாகி வருகிற இதுபோன்ற ரொட்டிக்கடைகளில் கூட்டம் அதிகம்.

பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களிலும், விமானங்களிலும் இந்த பிரெஞ்சு ரொட்டிகளை காலை உணவுக்கு வழங்குவதைப் பார்த்திரிப்பீர்கள். பகத்தை (Baguette) அதிகம் பார்த்திருக்க நண்பர்களுக்கு வாய்ப்பிருக்காது. இந்தியாவில் புதுச்சேரி சென்னை, பெங்களூர், நகரங்களில் பெரிய ரொட்டிகடைகளில் இப்பொழுது கிடைக்கிறது. பகத் என்ற சொல்லை அநேகமாக நீங்கள் கேட்டிருக்கலாம்  இசைக்குழுவை நடத்துபவர் கையிலிருக்கும் குச்சிக்கும், டிரம்ஸ் வாசிக்க உபயோகப்படும்  குச்சிகளுக்கும் பகத் என்றுதான் பெயர். பிரான்சுக்கு வந்தால் கையில் பகத்துடன் அதாவது நான் சொல்வது குச்சிபோன்ற நீண்ட ரொட்டியுடன் நடந்துபோகிற மனிதர்களை கட்டாயம் எதிர் கொள்வீர்கள். சிலர் வீடுவரை எடுத்துச்செல்லகூட பொறுமை இருக்காது, சூடாக இருக்கும்போது அதன் மணம் அப்படி, உடைத்து வாயில்போடச்சொல்லி வம்பு பண்ணும்.

———————