Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம் ஜூன் 29

1. Herta Muller:

2009 ஆண்டு நோபெல் பரிசை பெற்றவர். -ருமேனியா நாட்டைச்சேர்ந்த இந்த எழுத்தாளர் பெண்மணி ஜெர்மனில் வசிக்கிறார். கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்தபோது எனது பெரிய மகள் நன்றாக இருக்கிறதென்று சொல்லி இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலைக் கொடுத்தாள். நாவலின் பெயர் The Land of Green Plums.

“When we don’t speak, said Edgar, we become unbearable, and when we do, we make fools of ourselves என ஆரம்பமே ஈர்ப்பதாக இருந்தது. நாவல் எளிமையான, சிறுசிறு வாக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பினும் எனக்குப் புரியாத சொற்கள் நிறைய. மிக மெதுவாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து முடித்ததும் எழுதுகிறேன்

2. La terre du cielம் ஹரூகி முராகாமியும்

ழான் பியர் க்ரோ என்ற பிரெஞ்சு நண்பர், இங்கே (Strasbourg) La terre du ciel கிளை ஒன்றை துவக்கி இருக்கிறோம். அதன் அமைப்பாளர்கள் எதிர்வரும் 25/6/2014 அண்று கூட இருக்கிறோம் நீயும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைத்திருந்தார். நண்பர் குரோ 70வயது ஆசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் குடும்பத்துடன் நட்பிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு கணவன் மனைவி இருவரும் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்றிருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை பரிசாக அவருக்கு அளித்திருந்தேன். அதற்கு ஒரு டயர் வேண்டுமெனக் கேட்டிருந்தார். சென்றமுறை இந்தியா வந்தபோது அதைக் கொண்டுவர தவறிவிட்டேன். ஊரிலிருந்து திரும்பி நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலையில்தான் La terre du ciel அமைப்பை பற்றிக் கூறி அழைத்தார். புதன் கிழமை அக் கூட்டம் இருந்தது. திங்கட்கிழமை குரோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. புதன் கிழமை நிகழ்ச்சியை மறந்திடாதே என நினைவூட்டியவர், நான் சற்று முன்னதாகப் போகவேண்டியிருக்கிறது, நீ எலிஸபெத்தை ( அவர் மனைவி) காரில் அழைத்துக்கொண்டு ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடவேண்டும் என்றார். வரும்போதே எல்லோரையும்போல் உன்னுடைய பங்களிப்பாக நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவில் இரவு உணவிற்கு இருவகையான உணவுவகைகளை கொண்டுவந்துவிடு என்றார். உண்மையில் அன்று போகும் எண்ணத்தில் இல்லை. உலகக் கால் பந்து போட்டியின் முதல் சுற்று கfடைசி போட்டி. ஏற்கனவே பிரான்சு கலந்துகொண்ட இரு போட்டியிலும் நன்றாக விளையாடி, போட்டிக்கு 3 கோல்கள் என்று போட்டிருந்தார்கள். புதன் கிழமை போட்டி நன்றாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. விருப்பமின்றியே அந்த நிகழ்வுக்குப் போனேன். Strasbourg லிருந்து 20 கி.மீ. தொலைவிலிருந்த Niedernai ஓர் அழகான ஊர். நிகழ்ச்சி, மரி என்பவர் வீட்டில் நடந்தது. பதினைந்து பேருக்குமேல் கூடியிருந்தனர். இங்கே குரோ குடும்பத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள்: குரோ ஸ்ட்ராஸ்பூர் நகர சபையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக ஆர்வலர், பியானோ தொடங்கி நான்கைந்து இசைக்கருவிகளை வாசிப்பவர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை தனியாகவும் அவர் மனைவியுடனும் சேர்ந்து நடத்திவருகிறார். எலிஸபெத் உளப்பகுப்பாய்வு வல்லுனர், புல்லாங்குழல் நன்கு வாசிப்பார். எனவே இயல்பாகவே la terre du ciel உறுப்பினர்களைக் குறித்து நல்ல அபிப்ராயம். நிகழ்ச்சியில் ‘இந்தியர்களின் தீர்க்க தரிசனம்’ (la Sagesse indienne ) என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு நன்றாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவிற்கு இல்லை. பத்துமணிக்கெல்லாம் வந்துவிட்டேன். வீட்டை அடைந்த பிறகுதான் காற்பந்துபோட்டி இரவு பத்துமணிக்கு தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டேன்.போட்டி முடியும்போது இரவு பன்னிரண்டு. இரவில் சீக்கிரம் படுத்துப் பழக்கம் உறக்கம் வரவில்லை. கைவசம் “ஹரூகி முராகாமியின்” ஸ்புட்னிக்கின் காதலர்கள்’ (Les amants du Spoutnick) என்ற படைப்பு ஒலிவடிவில் இரண்டு நாட்களுக்கு முன் நூலகத்தில் வாங்கிவந்த குறுந்தகடு இருந்தது. அதைபோட்டுக் கேட்டுவிட்டு படுத்தபோது இரவு மூன்றுமணி. இது பற்றி தனியாக எழுதவேண்டும்.

பா. செயப்பிரகாசம். – உயிர்வேலி.

இந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழுதவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது

மே தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும்  மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டிமாடுகளைபோல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடல்போல வாக்கியங்கள்:

– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா

‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்

“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு!”

இந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.

அதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.

“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”

“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”

கிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது..

—————————————————————————-

 

மொழிவது சுகம் -ஜூன் 22 2014

1. Procrastination அல்லது தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல் என்ற சொல்லை நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு மன நோய்தான். இம்த மனநோய்க்கு நானும் பலியாகி இருப்பதின் அடையாளம் தான் எனது எழுத்தில் உள்ள தொய்வுக்கான காரணம். கடந்த காலங்களைப் பார்க்கிறபோது இவ் வருடத்தில் எழுதியது குறைவுதான். 2013 ஆரம்பத்திலிருந்து 8 சிறுகதைகளோடு ஒரு தொகுப்பு நிறைவுறாமல் இருக்கிறது.  வெகு நாட்களுக்குப்பிறகு சொல்வனம் நண்பர் கிரிதரன் அன்பினால் அவர்களுக்கு ஒரு சிறுகதையை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எனது கடைக்கு வருகிற மொரீஷியஸ் வாடிக்கையாளர்கள் அவர்கள் நடத்தும் ‘மாரியம்மன் கஞ்சி’ என்ற பண்டிகைக்கு அழைத்திருந்தார்கள். வருடத்தில் மூன்று பண்டிகைகள் நடத்துவார்கள்; எல்லா பண்டிகைகளுக்கும் போக முடிவதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அல்லது முன்னிரவுகளில் அவற்றை நடத்துகிறார்கள். குறைந்தது 3 மணிநேரம் அந்நிகழ்ச்சிக்கு ஒதுக்கவேண்டும். கடைவைத்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மனங்கோணக்கூடாது எனப் போகவேண்டியிருக்கிறது ஒரு சிறுகதைக்கான கரு கிடைத்தது.  உடனே எழுதாமற் தள்ளிப்போட்டுவந்தேன்.  சிறுகதைத் தொகுப்பைப்போல,  பிரெஞ்சு இலக்கியத்தைப்பற்றிய கட்டுரைத் தொகுப்பும் முடியாமல் இருக்கிறது. கூடுதலாக நான்கைந்து கட்டுரைகள் எழுதினால் முடித்துவிடலாம். போன வருடத்தில் அம்பை சிறுகதைகளை மொழி பெயர்க்க உட்கார்ந்ததில் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியதாயிற்று. பிரெஞ்சு பெண்மணியோடு இணைந்து செய்வதால் நேரம் பிடித்தது.  மொழி பெயர்ப்பு எனது படைப்புத் திறனை (?) கூர்மையைத் சிதைப்பதாக உணர்கிறேன்.  சோம்பலுக்கும் தள்ளிபோடும் மனநோய்க்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணம். காலூன்றி இருக்கிற வலைத்தளங்களிலும்ங்கூட அவற்றின் தாக்கம் எதிரொலிக்கிறது. தள்ளிபோடும் மனநோயிலிருந்து விடுபடவேண்டும் என நினைப்பதே  நல்ல அறிகுறிதான். ஆனால் அதையும் தள்ளிப்போடக்கூடாதல்லவா?

சொல்வனம்  இணைய இதழ் 16-6-2014

இந்த இதழ் சிறுகதை இதழாக வந்துள்ளது. நாஞ்சில் நாடன்மொழியில் சொல்வதெனில் ‘அரைக்கோட்டை விதைப்பாடு வேணும்னாலும் எழுதித் தரலாம்” அப்படி வாச்சிருக்கு. நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், குட்டி ரேவதி வ.ஸ்ரீனிவாசன், ரெ. கார்த்திகேசுவின் படைப்புக்களோடு, மொழி பெயர்ப்புளும் உள்ளன.

வல்விருந்து – நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை.

வழக்கம்போல மனிதர் சிலம்பம் சுழற்றுகிறார். நாஞ்சிலார் எழுத்து. ஒப்பிடமுடியாதது. லாசாரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சு.ரா. என சேர்ந்ததொரு கலவை. கும்ப முனியின் எண்ணைகுளியலை ஓர் பத்துதடவையாவது வாசித்திருப்பேன். எதையாவது எழுதி கிச்சு கிச்சு மூட்டுவதென்பது வேறு. பிறரைக் காயப்படுத்தாத நக்கலும், கேலியும், குத்தலும், கோபமும் எத்தனை படைப்பாளிகளுக்குச்சாத்தியம். அவர் வீட்டில் கட்டுதறி இருக்குமென்றால் களவாடிடணும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாவே இருந்துவருகிறது.

குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அ·தென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.
– (வல் விருந்து- சொல்வனம் 16-6-20014)
இடுக்கிகோல்ட். -குட்டி ரேவதி.

கதைசொல்லலிலும் தாம் வல்லவர் என்பதைக் குட்டி ரேவதி நிரூபித்திருக்கும் சிறுகதை. அவருடைய படைப்பாற்றலை – மொழிக்கும் அவருக்குமான பிணைப்பை ஒருவரும் குறைசொல்லிவிடமுடியாது. சில பகுதிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. அது ஒரு குறைதான். எனினும் அவர் எழுத்தாற்றல் பிரமிப்பதாக இருக்கிறது. தக்க தருணத்தில் தமது இருப்பை உறுதிசெய்திருக்கும் ஆக்ரோஷமான எழுத்து. பிரெஞ்சில் துராஸ் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு கவிதையை ஒதுக்கிவிட்டு உரைநடைபக்கம் வாங்களேன் என்ற கோரிக்கையை தாராளமாக நாம் வைக்கலாம்.

சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை”(இடுக்கிகோல்ட் – சொல்வனம் 16-6-20014)

“கவிதை எழுதுகிறவர்கள் உரைநடயிலும் ஜெயிக்கக்கூடும்” என்று சொல்வதுண்டு – இச்சிறுகதை உதாரணம்.

பிற சிறுகதைகளில் யுவன் சந்திரசேகரின் “உலகளந்த நாயகி” ரெ.கார்த்திகேசுவின் ‘வேளைவந்துவிட்டது’ வ.ஸ்ரீனிவாசனின் ‘தீட்டு’ ஆகியவை வாசித்துள்ள பிற சிறுகதைகள். மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தி.கசியை நினைவுகூரும் வித்தியாசமான இருகட்டுரைகள். பெரியவர் வெங்கட் சுவாமிநாதனும், சுகாவும் தந்திருக்கிறார்கள். அசோகமித்திரனின் ‘இரண்டு விரல் தட்டச்சு’ம் இருக்கிறது. மூவருமே நன்றாகசொல்ல க்கூடியவர்கள் என்பதால், படிக்க சுவையாக இருக்கிறது.

குன்னி முத்து : இந்த வாரம் படித்து முடித்த நாவல். அரசியல்விமர்சகரின் நாவல்போல இருந்தது. அரசியல்கட்சிகள், இந்துமதம், கிறித்துவ மதத்தின் உட்பிரிவுகள் (இஸ்லாமை கவனமாகத் தவிர்த்துவிட்டு) விமர்சனத்திற்குள்ளாகின்றன. நாவலில் வரும் இருளி, சுந்தரி, கிரேசி, என அவ்வளவுபேரும் விரும்பியோ விரும்பாமலோ சோரம்போகின்றார்கள். அதிக எதிர்பார்ப்புடன் படித்ததாலோ என்னவோ பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அது இலக்கியம். இதையே குட்டி ரேவதியோ அம்பையோ எழுதினால் அவர்கள் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் தந்திரம்.  இதில் வலிந்து சொல்லப்பட்டவை அதிகம். ஒருவேளை நமக்குத்தான் இவர்களின் இலக்கிய அரசியலெல்லாம் பிடிபடவில்லையோ என்னவோ?
—————————

 

 

மொழிவது சுகம் – மே 28 -2014

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல் – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததுபோலவே பாசிஸ்டு சிந்தனைகொண்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பிரான்சு நாட்டில் Front National (தேசிய முன்னணி) தீவிர வலது சாரி கட்சி, நாட்டில் நன்கு அறியப்பட்ட வலது மற்றும் இடது சாரி கட்சிகளை பின் தள்ளிவிட்டு முந்திக்கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்டின் பொதுத் தேர்தல்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கான அறிகுறி இது.

இந்த நூற்றாண்டில் பல சொற்களுக்கு விநோதமாகப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. குடும்பம், வீதி, சமூகம் நாடு, சாதி, மதம், இனம், நிறம் என்கிற பல்வேறு கூறுகள் தங்கள் பண்பில் முரண்படும் ஒன்றிர்க்கு வழங்கும் சொல், அந்நியன். இந்த ‘அந்நியனை’ ஒருவர் நேசிப்பதும் வெறுப்பதும், அந்நியரின் இருப்பிடத்தைப் பொருத்தது. ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே’ என்பது ‘அந்நியன்’ சொல்லைப் பொருத்தவரை மிகவும் உபயோகமான வாக்கியம். இந்த அந்நியன் மூன்றாவது வீட்டில் இருந்தால் பிரச்சினையில்லை. நமக்கு அண்டைவீட்டுக்காரன் என்கிறபோது பிரச்சினை வருகிறது. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் அந்நியனின் வளர்ச்சி நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. போகும்போது வரும்போதும் அவன் புன்னகைக்காக ஏங்குகிறோம். வாய்ப்பு அமையுமானால் வீடு தேடி சென்று பாராட்டவும் செய்வோம், கேட்கிற மனைவியிடம் அதிலென்ன தப்பு, அவர் உழைப்பு அப்ப, பாராட்டித்தானே ஆகவேண்டும் என்போம். ஆறுமாதம் கழிந்தது. அந்த மூன்றாவது வீட்டு அந்நியர் அடுத்த வீட்டுக்கு குடித்தனம் வருகிறார். மூன்றாவது வீட்டில் இருந்தவரை அவரின் உயர்வை சங்கடங்களின்றி ஏற்றமனம், அவர் துயரங்களைப் பரிவுடன் அணுகிய மனம், அவர் அண்டைவீட்டுக்காரரானதும் விரோதியாகப் பார்க்கிறது. தனது முன்னேற்றத்திற்கு இந்த அண்டைவீட்டு அன்னியர் தடையாக இருப்பார் என்கிற கற்பனையில், தமது தினசரி சந்தோஷங்களை தொலைத்து தூக்கமின்றி தவிக்கத் தொடங்குகிறது. அவருக்கு எதிராக வாய்ப்பு அமையுமானால் காய்களை நகர்த்தி தமது மனப்ப்புண்ணுக்கு மருந்திடுகிறது. இந்த அண்டைவீட்டு அந்நியர் அரசியல் நமது சமூகத்தின் எல்லா படிநிலைகளிலும் இன்று இடம்பிடித்திருக்கிறது. இவ் வாழ்க்கை அரசியல் நமது வர்க்க அரசியலையெல்லாம் ஓரங்கட்டிவிட்டன.ஒரு ஐரோப்பிய தொழிலாளி, ஆப்ரிக்கன் ஒருவரை அல்லது ஆசிய நாட்டவர் ஒருவரை அவர் நாட்டிலிருந்தபோது சக தொழிலாளியாகப் பார்த்தார், ஓடினார், உதவிக்கரம் நீட்டினார். அதே தொழிலாளி தனது அண்டைவீடுக்காரர் என்கிறபோது முகம் சுளிக்கிறார். பங்காளியாகப் பார்க்கிறார். பிரான்சு நாட்டில் பிரெஞ்சு தேசியவாதத்தை முன் நிறுத்திய ‘ தேசிய முன்னணி’ கட்சியில் இன்றைக்கு யார் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களெனப் பார்த்தால் சாதாரண தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள், பாமர மக்கள். நேற்றுவரை இடதுசாரி கட்சிகளில் தீவிர அனுதாபிகளாவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். மேற்கத்திய நாடுகளில் இதுவரை காணாத அளவில் பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தமது பொதுவுடமைக் குடையைச் சுருக்கிக்கொண்ட பிறகு அந்நாடுகளின் மக்கள் ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து முதலான வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற கொள்கை முடிவுகளால் உள்ளே நுழைவது எளிதாகியிருக்கிறது. ஏற்கனவே ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு விதி முறைகளின் கீழ் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டனர் என்ற கோபத்தீயில் இருக்கிற மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு சில மக்கள் வருகை எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது. அடித்தட்டுமக்களின் பலவீனத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகின் எல்லாபகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலே ஐரோப்பிய பாராளுமன்ற முடிவுகளும் இருக்கின்றன. அவ நம்பிக்கை கூடாதுதான், நல்லதே நடக்குமென நம்புவோம்.

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

மொழிவது சுகம் நவம்பர் 10 2013

1. வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ -இந்திரன்

தீராநதி அக்டோபர் இதழில் க்ரியா வெளியீடாக வந்துள்ள கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ கவிதைத் தொகுப்புக் குறித்து இந்திரன் நூல் மதிப்புரை எழுதியுள்ளார். இன்று தமிழ்க் கவிதை வெளியில் இயங்குகிறவர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் எனக்கும் மிகச மிக மிக முக்கியமான கவிஞர். ‘இந்த வாரத்திற்கு ஒன்று, அந்த இதழுக்காக ஒன்று’ என எழுதும் படைப்பிலக்கியவாதியல்ல. ஓர் அசலானக் கவிஞர்.

சிலவற்றை சிலர்தான் மதிப்பிடவேண்டும். தங்கத்தை உரசிப்பாரென்று இரும்பு அடிக்கும் கொல்லனிடம் கேட்கமுடியாது, பொற்கொல்லனைத்தான் அனுகவேண்டும். வ.ஐ.ச. ஜெயபாலன் குறித்தும் அவர் கவிதை நரம்புகளைச் சுண்டி அவற்றின் உறுதிப்பாட்டையும் நெகிழ்ச்சியையும் பேசவல்லவர் இந்திரன். மதிப்புரையில் ஜெயபாலன் கவிதைக்குறித்து சற்று கூடுதலாக எழுதியிருக்கலாம் என்கிற மனக்குறை எனக்கு இருந்தபோதிலும், அக்கவிதை தொகுப்பைக் குறித்து முன்வைத்திருக்கும் கருத்து புறம் தள்ளக்கூடியது அல்ல. தமிழகத்து எழுத்தாளர்களின் புனைவுகளோடு ஒப்பிடுகிறபோது அண்மைக்காலங்களில், கவிதைகளில் நமது எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்டுகிறது என்பது உண்மை. எனது மனநிலைக்கு இசைவாக நண்பர் இந்திரன் கருத்து இருப்பதால் அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி:

“தற்கால தமிழகத்துக் கவிஞர்களுக்கு வாழ்க்கையிலிருந்து சவால்கள் ஏதுமில்லை. எனவே அவர்கள் மொழிக்குள் சவால்களை உருவாக்கிக்கொண்டு கவிதைகளைப் புனைகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிஞர்களின் முன்னால் வாழ்க்கை பல்வேறு சவால்களை முன்வைத்திருக்கிறது. எனவே ஈழத்துக் கவிஞர்கள் தாங்கள் பாடுபொருள்களை அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  அடுத்ததாக வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற கவிஞர்கள் நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறபோது தான் ஒரு தமிழன் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவர்கள் வாழ்தலுக்கு அத்தியாவசியமாகிறது. ஆனால் தமிழகத்துக் கவிஞனுக்கு தமிழ் அடையாளம் பேசவேண்டிய கட்டாயமில்லை. அவன் தன்னை ஒரு சர்வதேசக் கவிஞனாகக் கருதிக்கொள்வதற்கான உல்லாசமும், தான் தமிழனல்ல இந்தியன் என்று பேசக்கூடிய ஒரு மருட்சியும் வாய்த்திருக்கிறது. அடுத்ததாக தமிழகத்தில் தோன்றிய புதுக்கவிதையின்  பிறப்பே மரபுக் கவிதையை மறுதலித்து அதற்குப் பதிலியாக வேறொரு கவிநடையை  உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது எனவேதான் சங்கக் கவிதை நோக்கி புதுக்கவிதை நகரவேண்டும் எனப் பல தமிழகத்து நவீன கவிகள் பேசிய போதிலும் வ.ஐ.ச. ஜெயபாலனைப்போல சங்கத் தமிழின் மரபார்ந்த மொழி வெளிப்பாட்டை அவர்கள் கைக்கொள்ளவில்லை” (தீராநதி இதழ் அக்டோபர் 2013 பக்கம் 47)

இது துறைசார்ந்த நண்பர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த இடத்தில் புலம்பெயர்ந்து தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம்காட்டுகிறவன் என்ற வகையில் எனக்கும் ஒன்றைச் சொல்லவேண்டும்.  சிறு புரட்சி என்று ஒன்றிருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை தற்போது Micro Revolution’ என்கிறார்கள். இது வேறொன்றுமல்ல தனிமனிதனின் மறுதலிப்பு, கலகக் குரல், உடன்பாடில்லை என்கிறபோது ‘இல்லை’ சரியல்ல எனும் குணம். ஆரோக்கியமான சமூகத்திற்கு இணக்கமாக இருப்பது எத்துணை அவசியமோ, மறுதலிப்பும் அவசியம். பிறரைக் காட்டிலும் அறிவையும் உணர்ச்சியையும் சமமாகப் பாவிக்கிற கலை இலக்கிய படைப்பிலக்கியவாதிகளுக்கு இப்பொறுப்புக் கூடுதலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சவால்கள் இல்லாமலில்லை, ஆனால் அங்குள்ள பிரச்சினை அவர்கள் அதனைக் கணக்கில் கொள்வதில்லை. வெளிநாட்டில் வாழும் படைப்பாளிகள் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்றவர்கள் செயல்படுகிறபொழுது படைப்பு மட்டுமே அவர்கள் சிந்தனையில் குறுக்கிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுதுகிற பலருக்கும் வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் கவனமெல்லாம் சக கவிஞனை, சக படைப்பாளியை, சக மொழிபெயர்ப்பாளனை,  எப்படி வீழ்த்துவதென்ற சிந்தனைக்கு நேரத்தை அதிகம் செலவிடுகிறபோது எங்கிருந்து அதில் படைப்பு  பிறக்கும்? இந்திரன் கருத்து போய்ச்சேரவேண்டியவர்களிடம் போய்ச்சேரவேண்டும்.

2. பிரான்சில் என்ன நடக்கிறது.

கொன்க்கூர் இலக்கிய பரிசு 2013.

கடந்த நவம்பர் 4ந்தேதி அன்று பிரெஞ்சு புத்திலக்கிய உலகு 2013ம் ஆண்டுக்கான கொங்க்கூர் இலக்கிய பரிசை (Le prix Goncourt ) அறிவித்திருக்கிறது. பரிசுபெற்ற நாவலின் பெயர் ‘Au Revoir Lதூ-Haut’ நாவலாசிரியர் Pierre Lematre. தேர்வு அனைத்தும் வெளிப்படை. பன்னிரண்டு சுற்றுகள் தேர்வு நடைபெற்றது இறுதிச்சுற்றில் பத்து நடுவர்களில் ஆறுவாக்குகள் மேற்கண்ட நாவலுக்கும், நான்கு வாக்குகள் Frederic Verger எழுதிய ‘Arden’ நாவலுக்கும் கிடைத்தன. இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசை இம்முறை ஓர் குற்ற புனைவு நாவலுக்கு முதன்முறையாக வழங்கியிருக்கிறார்கள்.

————————-

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “மொழிவது சுகம்” – நூலை முன்வைத்து

– பேரா.க.பஞ்சாங்கம்,

(கீற்று இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு – கீற்று இணைய தளத்திற்கும் நண்பர் பஞ்சாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றி)

நாகரத்தினம் கிருஷ்ணாவை இந்த ஆண்டு ஏப்ரலில் நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் மூலமாகச் சந்தித்துப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது; பிரான்சில் வாழும் அவர் அடிக்கடித் தனது சொந்த மண்ணுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்; ஆனால் இந்தத் தடவைதான் அவரோடு உரையாடுகிற அனுபவம் கிட்டியது. மனிதர்களுக்கிடையேயான உறவுகளைக் கூடச் சந்தர்ப்பங்கள்தான் நிர்ணயிக்கின்றன போலும். அவரது எழுத்துக்கள் சிலவற்றைக் காலச்சுவடு போன்ற சிறுபத்திரிக்கையில் வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக எதையும் வாசித்ததில்லை. அந்த வாய்ப்பும் இப்பொழுது கிடைத்தது. செஞ்சி நாயக்கர் வரலாற்றைக் களமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவலை, செஞ்சியிலே வெளியிட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பொருட்டு நாவலை வாசிக்க வாசிக்க அவருடைய எழுத்துக்குள்ளேயே வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு எடுத்துரைப்புப் பாணியில் எழுதியுள்ளார். அந்நாவலைக் குறித்து ஒரு மதிப்புரையும் எழுதியுள்ளேன். இப்பொழுது இங்கே நான் சொல்ல வந்தது அவருடைய மற்றொரு நூலான “மொழிவது சுகம் (சிந்தனை மின்னல்கள்)” என்பது குறித்தாகும். 24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசையில் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார்;

கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பியச் சூழலில் வாழ்ந்தாலும், தமிழ் மண்ணையும் அதன் வாழ்வையும் குறித்துப் பெரிதும் அக்கறையோடு சிந்திப்பவராகவும், அதனால் பாரம் சுமப்பவராகவும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார்; எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் தமிழ்ப் பின்னணி, ஐரோப்பிய பின்னணி என்ற இரண்டு களத்திலும் நின்று கொண்டு அலசுவதால் அவர் எழுத்துப் பளிச்செனத் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது.

‘பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ எனச் சொல்லும் எழுத்தாளர் மரிதியய் (Marie NDiay) என்பாரை அறிமுகப்படுத்த முயலும் கிருஷ்ணா, தமிழ்நாட்டில் நிகழும் வாரிசு அரசியலை, வாரிசு சினிமா உலகத்தை எல்லாம் முதலில் கேலி செய்கிறார்; நல்லவேளை எழுத்தாளர் உலகத்தில் அந்த வாரிசுத்தொல்லை இல்லை என அமைதி அடைகிறார்; இதற்கும் காரணம் எழுத்தாளனை அடையாளப்படுத்தப் பயன்படுகின்ற “தரித்திர சூழல்தான்” என்கிறார்; இங்கேயும் “பெட்டி பெட்டியாய்ப் பணத்திற்கும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால்” வாரிசுகள் உற்பத்தி ஆகிவிடுவார்கள் என்று கேலிமொழியைக் கையாளும்போது வாசிப்பதும் மொழிவது போலவே சுகம் பெறுகிறது. தொடர்ந்து அங்கே எவ்வாறு தர்க்கப்பூர்வமாகத் தேர்வுக் குழுவினர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கொண்டே போகும்போது, இங்கே எப்படிப் பரிசு என்பது தரம் சார்ந்து இல்லாமல், ‘வேண்டியவர்’ என்ற தளத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற நம் இலக்கிய உலகின் இழிநிலையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். இன்னொரு முக்கியமான தகவலையும் தருகிறார். 2007 – ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராக நிக்கோலாஸ் சர்க்கோசி அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆள் ஒரு மிருகம், இனவாதி, அவரது ஆட்சியின்கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை” என்று வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெர்லினில் வாழ்ந்து வருகிறாராம் அந்த 43 வயது பெண் எழுத்தாளர்; ஆனாலும், பிரெஞ்சு இலக்கிய உலகம் அவருக்குத்தான் 2009-இல் கொன்க்கூர் இலக்கியப் பரிசை அளித்து மரியாதை செய்கிறது. நம் தாய்ப்பூமியில் இது நிகழுமா?

அங்கேயும் வலது, இடது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் பெருமையைப் போற்றவில்லை; பிரான்சு நாட்டு அதிபரையும் நாட்டையும் சிறுமைப்படுத்திப் பேசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்; ஆனால் தேர்வு செய்த படைப்பாளிகள் அவர் என்ன எழுதியிருக்கிறாரெனப் பார்த்துதான் பரிசளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப் பார்த்துப் பரிசளிக்கவில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழியப் பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படிப் பேசக்கூடாது, அப்படிப் பேசக்கூடாதென்று தெரிவிப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்?” என்றும் அரசாங்கத்தைப் பாரத்துக் கேட்டிருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லேம்’ என்று இந்தக் கடடுரைக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். கூடவே அதிபருக்கு விசுவாசமாக இருந்த இடதுசாரி அமைச்சரை ”ஐம்பது பைசாவிற்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ என்று கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரியை எடுத்துப் போட்டு விமர்சிக்கும்போது இவருக்குள்ளும் வினைபுரியும் சுதந்திரயுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வோடு சாதிவெறி காரணமாக உத்தபுரத்தில் எழுந்த சுவரை இணைத்தொரு கட்டுரை இட்லராவது தனது இனத்தை நேசித்தான்; ஆனால் ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல என்கிறார்; 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மன் விழ்ந்து சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் (20லட்சம்) பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்ற தகவலைத் தந்துவிட்டு, நாஜிப்படைகளைவிட இம்மியளவும் தரத்தில் ‘செம்படைகள்’ குறைந்ததல்ல என்கிறார். போரினால் ஜெர்மன் கிடைத்தது; இரண்டு ஏகாதிபத்தியங்களும் அதைக்கூறு போட்டுக் கொண்டன. ஆனால் சோவியத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கத்தியரின் அரவணைப்பில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் (2-7 மில்லியன் மக்கள்) இதைத் தடுப்பதற்காகத்தான் 1961 – இல் பெர்லினை இரண்டு துண்டாக்கும் சுவர் எழுப்பப்பட்டது. 165 கி.மீ நீளம் 302 காவல் அரண், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி, தானியங்கி துப்பாக்கிப் பொருத்தப்பட்ட காவல் தூண்கள், குறி பாரத்துச் சுடுவதில் வல்ல காவலர் – இப்படிக் கட்டப்பட்ட சுவர் 1989 – ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் தமிழ்நாட்டின் உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக உயர்சாதியினர் சுவர் எழுப்புகிறார்கள். இதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்ரமித்ததோடு மட்டுமல்லாமல் 2005 – ஆம் ஆண்டில் இருந்து சுவரும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காலத்தின் முன்னால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போல இவைகளும் இடிக்கப்படும். இலங்கைத் தமிழினமோ பாலஸ்தீனமோ உத்தபுரமோ ஒடுங்கிவிடாது என்கிறார். இதோடு நின்றுவிடாமல், அப்போதும் எங்கோ வேறு இடத்தில் வேறொரு சுவர் எழுந்துகொண்டுதான் இருக்கும் என்று கிருஷ்ணா எழுதும்போது மனிதவாழ்வு குறித்த அவரது புரிதல் ஆழமாகப் பரவுகிறது.

பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சமூகமென அனைவரும் வளரும் குழந்தைகள் போல் நிகழ்த்திக் காட்டும் வன்முறைதான், பின்னால் அவர்கள் மழலையர் பள்ளிகளில் கடித்துக் கொள்வதற்கும், தொடக்கப் பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலைப் பள்ளிகளில் ரவுடிகள் போல் நடந்து கொள்வதற்கும் பருவ வயதில் பெண்களைச் சீண்டுவதற்குப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிற பிரான்சு நாடடுக் குழந்தை நல மருத்துவர் ‘எட்விஜ் ஆந்த்தியே’ என்பார் கூற்றை எடுத்துக்காட்டி ‘அடித்து வளர்க்காத பிள்ளை உருப்படாது’ என்கிற நம்முடைய அணுகுமுறையைக் குப்பைத் தொட்டியில் தலைகுப்புறத் தூக்கிப் போட்டுப் புதைத்தொழிக்கக் சொல்லுகிறார். இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ‘ஊடகங்கள்’ இந்தத் திசையில் திரும்பினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த ஹைத்தியில் நடந்த நிலநடுக்கம் 15 லட்சம் மக்களை அனாதை ஆக்கியதும், 70000 உயிர்களுக்கும் இறந்த தேதியில் ஒற்றுமை என்பதும் கொடுமை”  “உயிரற்ற உடல்களின் மௌனத்தினைச் சகித்துக் கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல் என்னை அச்சுறுத்துவன (31 – 32) என்பது.. புர்க்காவும் முகமும் என்ற கட்டுரையில் முகத்தின் மொழியைக் குறித்துப் பேசுகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற கட்டுரையில் 1960 –இல் கார் விபத்தில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் அல்பெர்கமுய் – யின் உடலை ஒரு தேவாலயத்திற்கு மாற்றுவது என்ற பிரெஞ்சு அதிபரின் யோசனையை அ.சமுய்-வின் மகன் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் என்கிற தகவலைத் தரும் கிருஷ்ணா, அதையும் ஆளும் வர்க்கத்தினை விமர்சிப்பதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஒளியும் நிழலும் என்ற கட்டுரை எழுத்துலகில் நடக்கும் பல மோசடிகளில் ஒன்றான கோஸ்ட் ரைரட்டர் பற்றிய கட்டுரை.  புகழ்பெற்ற அலெக்ஸாந்தரு துய்மாவிற்கு இருந்த கோஸ்ட் ரைரட்டர் ஒகுய்ஸ்த் மக்கே பற்றிய கட்டுரையில் பல தகவல்களைச் சுவைபடச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி எழுதுகிறார்!. “இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்”.. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவில் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா? அல்ல அரசு அதிகாரத்தின் பொருட்டா?

அந்தமான் நிக்கோபார் தீவில் வாழ்ந்த போவா(Poa) இன மூதாட்டி (85-வயது) இறந்து போனாள்; அவளோடு இந்தியாத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்து ‘போ’ மொழியும் இறந்துபோய்விட்டது. இப்படி எத்தனை மொழிகள் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 1635 மொழிகளில் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகும்; இதில் தமிழும் ஒரு மொழியாகிவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார் ” நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றான பிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்” என்றொரு அடிப்படையான, மிக முக்கியமான கேள்வியைத் தமிழர்கள் முன்வைக்கிறார்.

நமக்குள் இருக்கும் இன்னொருவனாகிய ஏமாற்றுப் பேர்வழி குறித்து ஒரு கட்டுரை பல அரிய மேனாட்த் தகவல்களுடன் (66 – 72) அமைந்துள்ளது,

நம்மிலுள்ள அந்த ஒன்றரை பேருக்கு நன்றி’ என்ற கட்டுரை” எஜமான மனங்களைக் காட்டிலும் சேவக மனங்கள், ஆபத்தானவை” என்பதையும் நம்மில் பலரும் அதிகாரத்திற்கு வளைந்து போகிறவர்கள்தாம்; மேலும், அதிகார ஆதரவு உண்டெனில் எவரையும் கொலை செய்யவும் – தயாராக இருக்கிறவர்கள்தாம் என்பதையும் உளவியல் சோதரென அடிப்படியில்ல் விளக்கிவிட்டு, இதையும் மீறி சிலபேர் மானுட அறத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காலகட்டதிலேயும் முன் வருகின்றனர். காந்தியடிகள் போல; தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஸ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதர்களைப் போல.

புன்முறுவல் செய்ய 17 தசைகளில் ஒத்துழைப்பு தேவை என்ற அறிவியல் உண்மைகூறி, திருமுகத்து அழகு குறுநகையை விதந்தோதுகிறார். பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தைப் பல மேற்கத்தியர் நீது? என்ற கட்டுரையும் பிரான்சு சாட்டின் பண்பாட்டு அரசியல் என்ற கட்டுரையிலும் நுட்பமாக அலசிவிடுகிறார். “அரசியல் வரலாறு என்பதே ஆதிக்க வரலாறுதான் காலனிய வரலாறுதான் தடியெடுத்த சிறுகூட்டத்தின் வரலாறுதான்” என்றெல்லாம் பேசும் கிருஷ்ணா, பிரெஞ்சு கலை இலக்கிய உலகமும் இன்றைக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடுமபோது எவ்வளவு பின்தங்கி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கட்டுரையில் நீதி, தண்டனை, சிறை, ஆதிக்க அரசு குறித்தெல்லாம் பிரான்சு நாட்டுப் பின்னணியில் விளக்கமாக எடுத்துரைத்துவிட்டு, சமுதாயத்தின் நலம், நீதி போன்ற சொற்களைத் தந்திரமாகக் கையாளும் அணியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை உலுக்குகின்றன” என்று வருத்தப்படுகிறார்.

மிலென் குந்தெராவையும் குண்ட்டெர் கிராஸையும் எழுத்தும் அரசியலும் என்ற பொருளில் அறிமுகப்படுத்திவிட்டுத் தமிழர்களின் எழுத்தாளர்கள் எவ்வாறு பரிசுக்கும் பொருளுக்கும் புகழுக்குமாகத் தம்மை விற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்டுகிறார்.

இறப்பும் அனுதாபமும் என்ற கட்டுரையில் டயானா கார் விபத்தில் இறந்தபோது ஐரோப்பிய வெள்ளை இன அரசுகள் அனுதாபச் செய்திகளை எப்படி வெளியிட்டன அதேநேரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் என்ற பெரும் இசைக்கலைஞன் இறந்தபோது அவைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுக் காட்டி இறப்பில்கூட நிறவெறி ஐரோப்பியாவில் வெளிப்படுகிறது; அதுபோலவே இந்தியாவில் ஆந்திரமுதல்வர் விபத்தில் இறந்தபோது போட்டிப்போட்டுக் கொண்டு எட்டுத் திசைகளிலும் இருந்தும் அனுதாபச் செய்திகள் பறந்தன. இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அனுதாபச் செய்திகளில் ஒன்றுபடாத தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட ஆந்திரமுதல்வர் இறந்துபோது ஒன்றுபோல் அனுதாபச் செய்திகளை அனுப்பித் தங்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டனர். தமிழர்கள் தமிழர்களுக்காக ஒன்றுபடுவார்களா? எனக் கேட்கிறார். ஒரு கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி நிகழ்கிறது என்பது இருக்கட்டும். இந்தியாவிற்குள் நிலவும் நிறவெறியை என்ன சொல்வது எனக் கேட்கிறார். நமது ஊடகங்களும் விளம்பரங்களும் சிவப்புத் தோலைத்தானே அழகு அழகென முன்னிறுத்துகின்றன. இந்த அடிமைத்தனத்திற்கும் பெயரென்ன?

உலக அளவில் நடக்கும் பிள்ளை கடத்தில் பற்றியும் ஒரு கட்டுரை. தொண்டு நிறுவனம் என்ற பேரில் நடக்கும் மோசடி குறித்தெல்லாம் புள்ளிவிவரத்தோடு பேசுகிறார்; உலகமயமாதல், என்ற பொருளாதாரச் சூழலில் தாம் செழிக்கலாம் என்று கருதிய ஐரோப்பியாவும் அமெரிக்காவும் எப்படி இடர்ப்பாடுக்குள் சிக்கிக் கொண்டன என்பதையும் இச்சூழலைச் சீன எவ்வாறு வெற்றிக்கரமாகக் கையாண்டு இன்றைக்கு மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது என்பதையும் ‘ஆறாவது கதவு’ என்ற கதையில் நுணுக்கமாக எடுத்துரைக்கிறார். எல்லாக் கட்டுரைகளிலுமே அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிரான ‘குரல் பதிவாகிக் கொண்டே போவதால் அவரது அலைவரிசையும் நம் அலைவரிசையும் ஒரே நேர்கோடடில் வந்துவிடுகிறது அதானல் சுகமான வாசிப்பு வாய்த்துவிடுகிறது. மிகச் சிறப்பாக அலிகாரை எடுத்து வெளியிட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். கிருஷ்ணா எழுத்து பல்வேறு பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையின் மேல் நடந்தாலும், வாசிப்பதற்கு இதமான எழுத்தாக அது மாறுவதற்குக் காரணம் அவர் கையாளும் மொழியும் கேலி கலந்த முறையும் கூடவே அடிப்படையில் அழமாக இயங்கும் அறச்சீற்றமும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

முட்டாள்களைக் குறித்துப் பேசும் ஒரு கட்டுரை அவரது கல்லூரிக் கால நிகழ்வை ஒன்றைப் பதிவு செய்கிறது. அடுக்குமொழியானால் கழக உறுப்பினர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை விளக்குகிறது அந்த நிகழ்வு. கல்லூரி விழாவிற்குப் பேச வந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ‘அடுக்குமொழி மோகத்தால்’ சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம். என்று பேசினாராம். பேச்சினூடே, நான் என்ன சொல் வருகின்றேன் என்றால்என்று அவர் பேசும்போது எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் மாணவர்கள், சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினீர்கள் என்று எதிர்ப்பாட்டுப்பாட , விழா மோதலில் முடிதந்தாம். மொழிபெயர்ப்பைக் குறித்தும் கிருஷ்ணா சில நுட்பமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பேயே ‘மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை’ என்று தொடங்கும் அந்தக் கட்டுரை, மொழிபெயர்ப்பாளன் என்பவன் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற ஓர் எழுத்தாளன் என்ற ஜார்ஸ் ஆர்த்தர் கோல்ட்ஸ்மித் கூற்றை எடுத்துக்காட்டி விளக்குகிறது. ஒரு மாநில மொழியாலான படைப்பு நிகழ்கிறது என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார்ஸ“நல்ல வாசகனை மொழிபெயர்ப்பாளன் வாசிப்பின் முடிவில் தனது உணர்வுகளுக்குச் செவிச் சாய்க்காது பொதுமதிப்பீட்டிற்கு உட்பட்டு மொழிபெயர்ப்புக்கான நூலைத் தேர்வு செய்கிறான்” என்கிறார்.

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘மொழிவது சுகம், (சிந்தனை மின்னல்கள்)’ அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.11, 2012. விலை. ரூ.90/- பக். 152

– பேரா.க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

மொழிவது சுகம் அக்டோபர் – 20 2013

1.  வாசித்ததில் மனதிற்பதிந்தவை.

அ. அம்மா நீ வென்றுவிட்டாய் – அ.முத்துலிங்கம்

தலைப்பை போடுகிறபோதே எழுத்தாளர் பெயரையும் கூடவே சேர்ந்துவிட்டேன், நீங்கள் என்னை சந்தேகிக்கக்கூடாது இல்லையா? .  கட்டுரையாளர் அ.முத்துலிங்கம்,  குசும்பு இல்லாவிட்டால் எப்படி.  அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிற அம்மா சுடச்சுட நோபெல் பரிசும் கையுமாக நிற்கிற அலிஸ் மன்றோவைபற்றியது. சிறுகதை எழுத்தாளரான 82 வயது கனேடியப் பெண்மணியை நேரில் சந்தித்த சம்பவத்தை அவரது பிரத்தியேக மொழியில் ஆங்காங்கே எழுத்தாளரைபற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் தந்திருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

Typology Home

ஆ. சொல்வனம் 16-19-2013

தற்போதெல்லாம் இணைய இதழ்கள் நன்றாக வருகின்றன, அச்சிதழ்களைக் காட்டிலும் இலக்கிய அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இரு வாரத்திற்கு ஒரு முறையென வரும் சொல்வன இதழில் இம்முறை ஒரு சிறுகதை, இரண்டு பயணக்கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என வந்திருக்கின்றன. வௌவால் உலவும் வீடு என்ற சிறுகதையை கே.ஜே. அசோக்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். மிக நன்றாகசொல்லப்பட்டிருந்தது. அண்மைக்காலத்தில் இப்படியொரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் எனக்கில்லை. அதுபோல ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ என்ற நூலின் புத்தக விமர்சனத்தையும், ரா.கிரிதரன் எழுதியுள்ள நார்வே பயணக்கட்டுரையின் இரண்டாம் பகுதியையும் விரும்பி படித்தேன். காபி பற்றிய ஒரு கலந்துரையாடலில் இதுவரை அறிந்திராத பல தகவல்கள். எங்கேயோ எப்போதோ வாசித்ததுபோல,  ஒரு வேளை சொல்வனத்தில்தான் ஏற்கனவே வந்ததா? இருந்தாலும் எத்தனை முறை குடித்தாலும் காபி அலுப்பதில்லை என்பதுபோலவே சொல்லப்படும் தகவல்களும் சுவையாகவே இருந்தன. ஆர். எஸ் நாராயணன் எழுதிய இயற்கை வேளாண்மை களஞ்சியமும் தொடராக வருகிறது. இதுதவிர மற்றுமொரு பயணக்கட்டுரையும், புத்தக விமர்சனமொன்றும் , ஒரு மொழி பெயர்ப்பு சிறுகதையும் உள்ளன.

http://solvanam.com/
————————————
2. புறங்கூறல்

பயனில சொல்லாமை – இன்னாச்சொல் மூன்றுமே ஒரு குடும்பத்துப் பிள்ளைகள்தான்

நமக்கு வெண்சாமரங்கள் வீசப்படுகிறபோதும், பரிவட்டம் கட்டுகிறபோதும் குளிரும் மனம், நமக்குத் தெரிந்த மனிதருக்கு என்கிறபோது வதைபடுகிறது. அதிலும் அவர் அண்டைவீட்டுக்காரராக இருப்பின் அம் மனிதரை பிடிக்காமல் போய்விடுகிறது நேற்றுவரை நம்மைபோல அவனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, கூடுவதும், குலவுவதும் ஆராதிப்பதும் அணைப்பதுமாகக் கழிந்த வாழ்க்கை,  பக்கத்து வீட்டுக்காரன் நான்கு சக்கர வாகனத்தில் போவதைப் பார்த்ததும் அல்லது அவன் பிள்ளைக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததும் நிலைகுலைந்து போகிறது. உறக்கமின்றி தவிக்கிறது. அண்டைவீட்டுக்காரனுக்கு ஏதேனும் அச்ம்பாவிதம் நடக்காதா என எதிர்பார்க்கிறது, இயலாதபோது, குறைகளை தனது குடும்பத்தில் ஆரம்பித்து அந்த அண்டைவீட்டுக்காரனுக்கு (இவன் இடப்பக்கம் வசிக்கிறான் என்றால்) வலப்பக்கம் ஓர் அண்டைவீட்டுக்காரன் இவனைப்போல தவித்துக்கொண்டிருப்பான் இல்லையா அவனிடம் சென்று   விமர்சித்து இருவருமாக ஆறுதல் அடைவார்கள். இம்மன நிலை அந்த அண்டைவீட்டுகாரனுக்கும் வேறு காரணங்களை முன்னிட்டு இவன் மீது ஏற்பட்டிருக்கும். அன்டைவீட்டுக்காரன் பற்றிய இந்த புறங்கூறல் ஒரு குறியீடுதான்.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய தகவல்  பலரிடம் நாம் பொதுவில் காண்பதுதான். “எனக்கும் அவருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு என்றவர், அவருக்கும் இன்னாரை …. பிடிக்காது என்றார்” ஒருவனை எளிதாக பலிகடாவாக ஆக்கவும் இப்படி நான்கு பேர்கூடி தங்கள் சரியான பக்கம் இருக்கிறோம் என்பதை நம்பச்செய்யவும் புறங்கூறலை  ஆயுதமாகக்கொள்வதுண்டு. தமிழ்நாட்டிலிருக்கும் ஆயிரத்தெட்டு கட்சிகளுக்கும், எழுத்தாளர்களிடையில் வெளிப்படையாகவும், இலைமறைகாயாகவும் வன்மம் பாராட்டுவதும் இப்படியான வக்கிரங்களின் அடிப்படையில்தான். மனைவி குடிகார கணவனைக்கொன்றாள் எனும் செய்தியைக்காட்டிலும், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கண்வனைக்கொன்றாள் என்ற செய்தியும், எதிர்கட்சி எம்.எல். ஏ ஆளும்கட்சி தலைவரை சந்தித்தார் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இம்மனக்கோளாறு நம் எல்லோரிடமும் உண்டு.

புறங்கூறுதல் எங்கிருந்து பிறக்கிறது, எதனால் பிறக்கிறது? அழுக்காறு, அவா, வெகுளி என வள்ளுவர் இன்னாசொல்லுக்கு முன்பாக மூன்று படிநிலைகளைத் தெரிவிக்கிறார். ஒரே குடும்பம், ஒரே அலுவலகம், ஒரே துறை, ஒரே ஊரைச்சேர்ந்த இருவருள் ஒருவர்தான், இம்மன சிக்கலில் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகில் எந்த நாடும், எந்த மதமும், எந்த இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்மிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்குமென்கிற ஐயம் எனக்கு எப்போதுமுண்டு.  செத்த வீட்டில் கூட ஒப்பாரிமுடித்த கையோடு:

– ” அவள் கழுத்திலே இருக்கற சங்கிலி பர்வதத்துடையது மாதிரி இல்லை?”

– ” மாதிரி என்ன அவளுடையதுதான், இவளுக்கேது, சங்கிலி சரடெல்லாம்,”எனப் பேசும் பெண்களுண்டு. இது போன்ற உரையாடல் உங்கள் காதிலும் விழுந்திருக்கும். பார்வதி வீட்டிலிருந்து இரவல் வாங்கப்பட்ட நகையென்ற உண்மையை போட்டுடைக்கும் நல்லெண்ணத்திற்கு அடிப்படை காரணம், இவள் இரவல் வாங்கப்போனபோது, வேறொருத்தி முந்திக்கொண்டதும், இவளுக்கு அது வாய்க்கவில்லை என்கிற அசூயையுமாகும்.

ழான் குளோது லொதெ (Jean Claude Laudet) என்கிற உளப்பகுப்பியல் அறிஞர், “நம் ஒவ்வொருவரிடமும் அடுத்தவரைபற்றிய இருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன, ஒன்று நேர்மறையானது, மற்றது எதிர்மறையானது என்கிறார். மற்றவரைப்பற்றிய எதிர்மறை அபிப்ராயங்கள், அவர் நம் அருகில் இருக்கிறபோது ஒளிந்துகொள்கின்றன. அவர் மறைந்ததும், வேறொருவர் கிடைக்கிறபோது  இல்லாத மனிதர் அடித்துத் துவைக்கப்படுகிறார். இப்படி சகட்டுமேனிக்கு மற்றர்களை விமர்சிப்பதற்கு சாமிவேல் லெப்பார்த்தியெ  ( Samuel Lepastier) என்கிற மற்றொரு உளப்பகுப்பாய்வாளர்  கூறும் காரணம், ஒன்று மற்றவர்களை குறை கூறி பேசுவதன்மூலம், நம்மை உயர்த்திக்கொள்ள முனைவது; இரண்டு நம்மிடம் கூடாதென்று நினைக்கும் அவதூறை மற்றவர்கள் தலையில் இறக்கிவைப்பது.

—————————————————————

மொழிவது சுகம் – செப்டம்பர் – 14

பாரீஸில் கம்பன் விழா:

1. இன்றும் நாளையும் (செப்.14, 15 -2013 ) பாரீஸ் கம்பன் கழகம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடத்தும் நிகழ்ச்சி. கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசன்குறித்து  ஏற்கனவே இவ்வலை தளத்தில் எழுதியிருக்கிறேன். அவருடைய தமிழ்ப் பற்று அளப்பதற்கரியது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலிருந்து இன்றைய சிறந்த பேச்சாளர்களை அழைத்து மிகச்சிறப்பாக நடத்துகிறார். இரண்டு நாள் விழாக்களில் பொதுவாக கம்பன் விழாக்களில் என்ன நடக்குமோ அதனை எதிர்பார்க்கலாம். இவ்வருடம் தமிழ்நாட்டிலிருந்து முனைவர் பர்வீன் சுல்தானா கலந்துகொள்வதாக அவர்கள் அழைப்பு தெரிவிக்கிறது

நிகழ்ச்சி நடைபெறும் இடம்
சனி மாலை 2.30லிருந்து
ஞாயிறு மாலை 10.00 மணியிலிருந்து
L’Espace Associatif des Doucettes
Rue du Tiers Pot
95140 Garges les Gonesse
———————————————————-
2. மனதிற் பதிந்த கவிதை: ஒரு யானை அங்குச தாரியாகிறது – ஆதவன் தீட்சண்யா

அண்மைக் காலங்களில் பல நேரங்களில் கவிதைகள் என்ற பெயரில் பல அபத்தங்களை வாசிக்க நேர்ந்திருக்கிறது.  சிற்றிதழ்கள்கூட பக்கத்தை நிரப்ப கவிதைகள், என்ற போக்கில் பிரசுரமாவதைக் கண்டு இந்த வேதனை. மாறாக அண்மையில் தீராநதியில் வந்த கவிதைத் தெம்பை அளித்தது.  எழுதியவர் ஆதவன் தீட்சண்யா.

ஒரு யானை அங்குசதாரியாகிறது
– ஆதவன் தீட்சண்யா

யானையின் நிறம்
கருப்பு, சாம்பல், கருஞ்சாம்பலெனக் குழம்பி
எலிபண்ட் ப்ளாக் எனச் சொல்லி
மாவுத்தனே நழுவும்போது
யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்
அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை

அந்தஸ்துக்காக அரசர்கள் வைத்திருக்கும்
யானையை
அன்னாடங்காய்ச்சிகள்

தூர இருந்து பார்க்கலாம்
தொடை நடுங்காதிருந்தால்
தொட்டும் தடவலாம்
வளர்க்க ஆசைபட்டு வாங்கினது கெடுவினை

கொஞ்சுவதற்கும் ஏவுவதற்கும் தோதாக
கைக்கடங்கிய வளர்ப்பு மிருகங்கள்
எத்தனையோ இருக்க
ஒரு யானையை இழுத்துவந்த தவறுக்கான
விலையை
நீங்கள் கொடுத்துத்தானாக வேண்டும்

காற்சங்கிலி
இரும்பிலா தங்கத்திலா
கட்டிவைப்பதெனில்
மரத்தடியிலா மாட்டுத் தொழுவிலா
கட்டாந்தரையிலேயே காற்றாட விட்டுவிடுவதா
கவரிவீசி கண்மூட வைப்பதா
ஏசியில் உறங்குமென்றால்
எந்த ஓட்டலில் ரூம் போடுவதென
எதையுமே யோசியாது யானையை
வாங்கிவிட்டீர்

மூங்கிக்குத்துகளையும் கருப்பங்காடுகளையும்
இஷ்டம்போல் தின்று வளர்ந்த யானை
நீங்கள் தரும் கூபா புற்கட்டுக்கு
பசியடங்காமல்
வேலியைப் பிய்த்தெறிந்து
விளைச்சலைத் தின்னும்
விரட்டத் துணிந்தோரை
மிதித்தே கொல்லும்

கழுதை குதிரை எருமை எருதென
எதன்மீதும் சவாரிபோக முடியாதபோது
காலொடிய நடந்தகதை மறந்து
உங்களைச் சுமக்குமென ஓட்டிவந்த
யானையை

நீங்கள் சுமக்கத் தொடங்கிய தலைகீழ்
நொடியிலிருந்து
உங்கள் நெற்றி புடைத்து மந்தகமாகிறது
அங்குசமோ அதன் தும்பிக்கையில்.

நன்றி : தீராநதி ஆகஸ்டு 2013

3. அப்பாவின் துப்பாக்கி – ஹினெர் சலீம்
– பிரெஞ்சிலிருந்து தமிழில் – வெங்கட சுப்புராய நாயகர்

Appavin thuppâkki
பிரெஞ்சு லிருந்து நண்பர் வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்துள்ள நாவல். நம்மில் பலருக்கு குர்தின மக்களின் அவலமான நிலமை தெரியாதிருக்கலாம். துருக்கியில் ஆரம்பித்து, ஈரான், ஈராக், சிரியா என மேற்கு ஆசியா முழுவது பரவிக் கிடக்கும் குர்தின மக்கள் அகதிகளாக உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறவர்கள். சொந்த நாடொன்றிற்கு ஏங்குகிற ‘கவனிப்பாரற்ற பிள்ளைகள்’. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு, இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை, ‘எங்கள் வாசலில் வந்து நில்லுங்கள் மிச்சமிருந்தால் போடுகிறோம் என்கிற’ பரந்த மனப்பாண்மைதான் அவர்கள் காட்டும் பரிவு. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்கிற வாய்ச்சொல் வீரர்களுக்கு அமெரிக்கா என்கிற பூச்சாண்டி கனவில் வராதவரை திடுக்கிட்டு எழுவதில்லை என்ற கோட்பாடு  இருக்கிறது. அரபு நாடுகளின் ஷேக்குகளுக்கோ வேறு கவலை: ஆசியப் பெண்களை மைதுனத்திற்கும், ஐரோப்பிய மாடல்களை படுக்கைக்குமென இறக்குமதிசெய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது, பாலஸ்தீனியர்கள் விஷயத்திலேயே அக்கறை செலுத்தாதவர்கள் அதிகச் சிக்கலுள்ள குர்திஸ்தான் பிரச்சினையிலா?…

குர்திஸ்தான் மக்களும் சுதந்திர நாடென்கிற கானல்நீருக்கு ஏங்குகிறார்கள். கனவில் கூட அது சாத்தியமில்லையென தெரிந்தும் போராடுகிறார்கள், உரிமைக்குரல் எழுப்புகிறார்கள் அவர்கள் போராட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் திட்டிவாசல்தான் அப்பாவின் துப்பாக்கி. ஹினெர் சலீம் (Hiner Saleem) என்ற குர்தினத்தைச் சேர்ந்த எழுத்தாளரின் புனைவு. ஈராக் நாட்டிலிருந்து சதாம் உசேன் காலத்தில் தப்பிவந்த அறிவு ஜீவி. பிரான்சு நாட்டில் வாழ்கிறார். பல திரைப்படங்களையும் எழுதித் தயாரித்திருகிறார். ஒரு வகையில் இந்நாவல் அவருடைய சுயகதை. நண்பர் நாயகர் வழக்கம்போலவே மிக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார். வாசகர்கள் தாகசாந்தி செய்வதுபோல நூலை வாசித்துப் போகலாம், அப்படியொரு அனுபவத்திற்கு வழியுண்டு. தானொரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளன் என்பதை நாயகர் மீண்டும் தமது உழைப்பூடாக தெரிவித்திருக்கும் சாட்சி. பணத்தையும் புகழையும் எளிமையாக சம்பாதிக்க என்ன வழி என அலைகிற ஆசிரியர்களுக்கிடை இப்படி அக்கறைகாட்டுகிற நாயகர் போன்றவர்களை உற்சாகப்படுத்தும் வாய்ப்பினை நாம்தான் உருவாக்கித் தரவேண்டும்.

அப்பாவின் துப்பாக்கி ஒரு “காலச்சுவடு” வெளியீடு.

————————————

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2013.

1. லெ.கிளேசியோ – விசாரணை

எனது மகன் குடும்பமும், இளையமகளும், லாஸ் ஏஞ்ஜெல்ஸில் வசிக்கும் எனது பெரிய மகளைப்பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவருமே ஹவாய்த் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். எனது மனைவியுடன் செல்ல விருப்பமிருந்தது. கிளேஸியோ தடுத்துவிட்டார்? கடந்த இரண்டுமாதமாக வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக பணி, நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ.கிளேசியோவின் முதல் நாவலும் அவருக்கு பிரெஞ்சு படைப்புலகின் மிகப்பெரிய கொன்க்கூர் பரிசை பெற்றுத் தந்த “Le Proces -Verbal’ நாவல் காலச்சுவடு பதிப்பகத்திற்காக தமிழில் வருகிறது. அதன் நுட்பமான சொல் தேர்விற்கும், நெஞ்சை லுக்கும் சொல்லாடலுக்கும் புகழ்பெற்றது. முடிந்தவரை அதன் அடர்த்திக்குப் பங்கமின்றி மொழிபெயர்த்து களைத்திருக்கிறேன்.

2. அம்பை – சிறுகதைகள் – பிரெஞ்சில் வருகின்றன.

நண்பர் கண்ணன் முயற்சியால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் வருகின்றன. புகழ்பெற்ற பிரெஞ்சு பதிப்பகம்   வெளியிடுகிறது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவருடன் இணைந்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லாம் ஒழுங்காக நடந்தால் 2014 ஜனவரியில் அம்பை சிறுகதைத் தொகுப்புகளை எதிர்வரும். ஜனவரியில் பிரெஞ்சுப் புத்தககக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.

3. ஆக்கமும் பெண்ணாலே – முனைவர்  எ. இராஜலட்சுமி.

முனைவர் எ. இராஜலட்சுமியைப் பற்றி  என்னிடம் முதலில் குறிப்பிட்டவர், அவருடன் பணியாற்றும் புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் நண்பர் மு.இளங்கோவன்.  உங்கள் ‘ மாத்தா ஹரி நாவலைப் பற்றி முனைவர் எ. இராஜலட்சுமி தனது நூலொன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார், தாங்கள் புதுச்சேரிவந்தால் தெரிவிக்கும்படி சொன்னார், தங்களை சந்திக்க விருப்பமாம் என்றார். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், புதுவையில் இலக்கியம் புத்தகக் கடை நடத்தும் நண்பர் சீனு தமிழ் மணி. பொதுஉடமை, பெரியார், பசுமையைப் போற்றுதல் என்பதை ஆரவாரமற்று செய்பவர். அவரது ஏற்பாட்டின்படி பேராசிரியை எ. இராஜலட்சுமியை அவரது புத்தகக்கடையில் சந்தித்தேன். ஒன்றிரண்டு நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். ஒன்று ‘ஆக்கமும் பெண்ணாலே’ மற்றொன்று ‘நீயும் நானும் நாமும்’ என்ற கவிதைத் தொகுப்பு. இரண்டைப் பற்றியும் எழுதலாம் எழுதவேண்டும். ஒருவேளை மாத்தாஹரி பற்றி அவர் எழுதவில்லையெனில், அவர் யாரோ நான் யாரோ? எனக்கு அவர் எழுத்துகள் பற்றிய எந்த அறிமுகமும் நிகழ்ந்திருக்காது. ஓரளவு அறிமுகமானவற்றைத் தேடிப்படிக்கிறோம். தமிழில் நெட்வொர்க் இருந்தால் அல்லது இருநூறு ரூபாயை என்வலோப்பில் வைத்துக்கொடுத்தால் அல்லது பூசாரிகளைக் கவனித்தால் அவ்வைக்குப்போகவிருக்கும் நெல்லிக்கனியையும் தட்டிப் பறிக்கலாம். மேடைக்கும் மாலைக்கும் ஏற்பாடு செய்து  சந்தோஷப்படலாம். முனைவர் எ. இராஜலட்சுமிபோல கேட்பாரற்ற படைப்பாளிகள் தமிழ் நாடெங்கும் இருக்கிறார்கள்.

ஆக்கமும் பெண்ணாலே

இக்கட்டுரைத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. மொத்தக் கட்டுரைகளும் பெண்படைப்பாளிகளின் படைப்புகளை முன் வைத்து எழுதப்பட்டவை, வெண்பொங்கலில் கல் சேர்ந்ததுபோல ‘இடையில் மாத்தா ஹரி’ என்ற எனது நாவலைப்பற்றிய கட்டுரை, ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சங்ககாலம் தொட்டு பெண்படைப்பாளிகளின் படைப்புகள் மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலை எங்கனம் திடப்படுத்திக்கொண்டனர் என்பதை அப்படைப்புகளைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். கட்டுரையாளர் ஒரு தமிழ்ப் பேராசிரியை, முனைவர் வீ. அரசுவின் வழ்காட்டுதலில் உருப்பெற்றவர் என்பதால்  பத்தாம் பசலித்தனமான பழங்கதை பேராசிரியர்களின் ஊசல்வாடையும் ஊத்தை நெடியும் கொண்ட சிறைச் சவ்வை வெகு எளித்தாகக் கிழித்துக்கொண்டு சங்கத்தமிழ் நவீனத் தமிழில் இரண்டிலும் சம நிலையில் கால் ஊன்ற முடிகிறது.

பொதுவாகப் பெண்கள் சமூகம் சார்ந்தும், பொருள் சார்ந்தும் பாலின வரிசையில் இரண்டாம் இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ள கொடுமை இன்று நேற்றல்ல வெகுகாலம் தொட்டு, இப்பூமியில் எல்லாப் பரப்பிலும், எல்லா ஜீவராசிகளிடமும் -( தேனிக்கள் வாழ்க!) இருக்கிறது. நான் என் மனைவியை அதிககமாக நேசிப்பதாலோ என்னவோ ஆண் சமூகம் சார்ந்து இக்குற்ற உணர்விற்கு அவ்வப்போது, (நெடுக அப்படியொரு உணவுக்கு இடம் அளிப்பதில்லை நானும் ஒரு ஆண்தானே?) ஆளாகிறேன். இதில் வாசிக்கிற உங்களிலும் சிலர் நானாக இருக்கலாம். பெண்களிடம் ‘அவ்வப்போது’ அனுசரணையாக நடந்துகொள்ளும் விழுக்காடும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வாழ்நிலையைத் துணிச்சலாக எதிர்கொள்கிற பெண்களும் இச்சமூகத்தில் குறைவு. ஆணாதிக்க சமுதாயத்தை முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது மேற்கத்திய உலகம் என நினைத்துக்கொண்டிருக்க ஆசிரியர்  நமது சங்ககால பெண்கவிஞர்களை கை காட்டுகிறார். அவர்களை (பெண்களை) ஓர் அற்ப உயிரியாக பார்த்த சமூகம், அவர்கள் விருப்பத்தையும் வெளிகளையுங்கூட கண்ணியம், கட்டுப்பாடென்ற அலகுகளால் முடக்கிவைத்த நூற்றாண்டு அது, எனினும் துணிச்சலாக “சமூகக் கட்டுபாடுகள், மரபான கருத்தாக்கங்கள், சூழல் ஆகிய அனைத்தும் இறுகிக் கிடந்தபோதும்” தங்கள் கருத்தை முன் நிறுத்த முனைந்த பெண்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் உணர முடிகிறது: பரத்தை வீடுகளுக்குச் சென்று திரும்பும் தலைவனின் நடத்தையைக் கண்டிக்கும் பாடல்; உடன்கட்டை ஏறுதலுக்கு, கைம்மை நோன்பிலுள்ள சங்கடங்களைக் காரணமாக முன் வைக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஆகியவற்றை சமூக இயக்கத்தில் இயங்கியல் ரீதியான வரையறைகளை மீறி வெளிப்படும் குரல்கள் என்கிறார் கட்டுரையாளர்..

மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியம் – புதுக்கவிதை பெண்படைப்பு வெளியை இணைக்கும் முயற்சிக்கான களத்தை சீர் படுத்துவதில் முனைகிறது. சில சங்க கால கவிதைகளோடு தற்கால கவிதைகள் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்லப்படிருக்கிறது. அதன் பிறகு சமகால பெண் கவிஞர்களின் பல்வேறு விதமான படைப்புக் குரல்களைக் கேட்கிறோம். திரிசடை (‘பனியால் பட்ட பத்து மரங்கள்), “கவிதைகள் பூராவும் தேடிப்பார்த்துடேன் ம்ஹீம்..ம்  மருந்துக்குக்கூட ஒரு யோக்கியமான ஆண்பிள்ளையைக் காணோம்” என சுஜாதாவின், சந்தோஷக் குட்டுபட்ட ரோகினியின் கவிதைத் தொகுப்பு, தேவமகளின் ‘முரண்’, இவரா,  சுபத்ரா, இளபிறை மணிமாறன், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா என்று என்று ஆரம்பித்து தி.பரமேஸ்வரி, பாலபாரதி, அழகு நிலா, தாராகணேசன், லீனா மணிமேகலை, அ. வெண்ணிலா, கனிமொழி என நீளும் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியனையும், மாலதி மைத்ரியையும் ஆசிரியர் வேண்டுமென்றே தவிர்த்ததுபோல தெரிகிறது. கட்டுரையாளர் நவீனக் கவிதைப்போக்கில் குறிப்பாக 2000த்திற்குப் பின்னர் எழுதப்படும் கவிதைகளில் அதிகம் நிறைவுகாணாதவராக இருக்கிறார். அதற்கு ஒருவகையில் இதழ்களும் பொறுப்பென்பது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

கட்டுரையாளர் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் மனதிற்கொள்ளவேண்டியவை:

1. ஆணின் சிறப்புகளை அங்கீகரிக்கும் தன்மையும், தனக்கு இன்னல் தரும்போது ஆணை விமர்சிக்கும் மனப்பாங்கும் சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன (பக்கம் -43)

2. உணர்வை மட்டுமே மையப்படுத்தி, அதற்கேற்ப மொழியை கையாண்டமையினாலேயே இன்றும் சங்கப் பாடல்கள் உயிர்ப்போடு விளங்குகின்றன. வெற்று சொற்களின் கோர்வையாக எழுதி உடனடிக் கவனத்தை கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்க்குரியவை மட்டுமன்று, ஆபத்தானந்துங்கூட. (பக்கம் 43) -பெண்கவிஞர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல, ஆண் கவிஞர்களுக்கும் உரியதுதான்.

3. ” பாலியல் தொடர்பான செய்திகளின் வெளிப்பாட்டில் எழுத்தாளன் உணர்வுகளாகவே அவற்றை அடையாளம் காணக்கூடிய ஆபத்து இருப்பதால் பலரும் இத்தலைய உணர்வுகளைத் தாமே தணிக்கை செய்துகொண்டு எழுதுகின்றனர்” (ஹரி விஜயலட்சுமி 2003:37) -தொகுப்பில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இக்கட்டுரைத் தொகுப்பு ஓர் ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது, ஆங்காங்கே தக்கச் சான்றுகளுடன், ஆழமான விவாதங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நல்ல பல கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கையாண்டிருப்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகவில்லை என்பதையும், கவிதை அழகியலில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் தெரிவிக்கின்றன.

கடைசியாக இந்நூலில் இடம்பெற்றிருந்ததொரு கவிதை:

“புதுக்கடை திறக்கு முன்
மாமா விளம்பரமளித்தார்
சுறுசுறுப்பான அழகான
விற்பனை பெண்கள் தேவை
மாமி ஆட்சேபித்தாள்
மாமா சொன்னார்
பையன் திருடுவான்
தம்மடிக்கப்போவான்
சட்டம் பேசுவான்
தனிக் கடைபோடுவான்
பொட்டை புள்ளைக
சிவனேன்னு
கொடுத்த காசுக்கு உழைக்கும்
வாரவனுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியா
கூட்டம் குறையாது
மாமா சொல்லாதது
அப்பப்ப நானும்
தொட்டுப் பார்த்துக்கலாம்”

– ‘தேவமகள் (1981:64)

—————————————————
ஆக்கமும் பெண்ணாலே

ஆசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமி

முரண்களரி பதிப்பகம்
34/25 வேதாச்சலம் தெரு, காந்தி நகர்
சின்னசேக்காடு, மணலி, சென்னை-600 068
அலைபேசி:9841374809

————————————