Category Archives: கட்டுரைகள்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “மொழிவது சுகம்” – நூலை முன்வைத்து

– பேரா.க.பஞ்சாங்கம்,

(கீற்று இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு – கீற்று இணைய தளத்திற்கும் நண்பர் பஞ்சாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றி)

நாகரத்தினம் கிருஷ்ணாவை இந்த ஆண்டு ஏப்ரலில் நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் மூலமாகச் சந்தித்துப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது; பிரான்சில் வாழும் அவர் அடிக்கடித் தனது சொந்த மண்ணுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்; ஆனால் இந்தத் தடவைதான் அவரோடு உரையாடுகிற அனுபவம் கிட்டியது. மனிதர்களுக்கிடையேயான உறவுகளைக் கூடச் சந்தர்ப்பங்கள்தான் நிர்ணயிக்கின்றன போலும். அவரது எழுத்துக்கள் சிலவற்றைக் காலச்சுவடு போன்ற சிறுபத்திரிக்கையில் வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக எதையும் வாசித்ததில்லை. அந்த வாய்ப்பும் இப்பொழுது கிடைத்தது. செஞ்சி நாயக்கர் வரலாற்றைக் களமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவலை, செஞ்சியிலே வெளியிட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பொருட்டு நாவலை வாசிக்க வாசிக்க அவருடைய எழுத்துக்குள்ளேயே வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு எடுத்துரைப்புப் பாணியில் எழுதியுள்ளார். அந்நாவலைக் குறித்து ஒரு மதிப்புரையும் எழுதியுள்ளேன். இப்பொழுது இங்கே நான் சொல்ல வந்தது அவருடைய மற்றொரு நூலான “மொழிவது சுகம் (சிந்தனை மின்னல்கள்)” என்பது குறித்தாகும். 24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசையில் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார்;

கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பியச் சூழலில் வாழ்ந்தாலும், தமிழ் மண்ணையும் அதன் வாழ்வையும் குறித்துப் பெரிதும் அக்கறையோடு சிந்திப்பவராகவும், அதனால் பாரம் சுமப்பவராகவும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார்; எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் தமிழ்ப் பின்னணி, ஐரோப்பிய பின்னணி என்ற இரண்டு களத்திலும் நின்று கொண்டு அலசுவதால் அவர் எழுத்துப் பளிச்செனத் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது.

‘பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ எனச் சொல்லும் எழுத்தாளர் மரிதியய் (Marie NDiay) என்பாரை அறிமுகப்படுத்த முயலும் கிருஷ்ணா, தமிழ்நாட்டில் நிகழும் வாரிசு அரசியலை, வாரிசு சினிமா உலகத்தை எல்லாம் முதலில் கேலி செய்கிறார்; நல்லவேளை எழுத்தாளர் உலகத்தில் அந்த வாரிசுத்தொல்லை இல்லை என அமைதி அடைகிறார்; இதற்கும் காரணம் எழுத்தாளனை அடையாளப்படுத்தப் பயன்படுகின்ற “தரித்திர சூழல்தான்” என்கிறார்; இங்கேயும் “பெட்டி பெட்டியாய்ப் பணத்திற்கும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால்” வாரிசுகள் உற்பத்தி ஆகிவிடுவார்கள் என்று கேலிமொழியைக் கையாளும்போது வாசிப்பதும் மொழிவது போலவே சுகம் பெறுகிறது. தொடர்ந்து அங்கே எவ்வாறு தர்க்கப்பூர்வமாகத் தேர்வுக் குழுவினர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கொண்டே போகும்போது, இங்கே எப்படிப் பரிசு என்பது தரம் சார்ந்து இல்லாமல், ‘வேண்டியவர்’ என்ற தளத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற நம் இலக்கிய உலகின் இழிநிலையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். இன்னொரு முக்கியமான தகவலையும் தருகிறார். 2007 – ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராக நிக்கோலாஸ் சர்க்கோசி அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆள் ஒரு மிருகம், இனவாதி, அவரது ஆட்சியின்கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை” என்று வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெர்லினில் வாழ்ந்து வருகிறாராம் அந்த 43 வயது பெண் எழுத்தாளர்; ஆனாலும், பிரெஞ்சு இலக்கிய உலகம் அவருக்குத்தான் 2009-இல் கொன்க்கூர் இலக்கியப் பரிசை அளித்து மரியாதை செய்கிறது. நம் தாய்ப்பூமியில் இது நிகழுமா?

அங்கேயும் வலது, இடது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் பெருமையைப் போற்றவில்லை; பிரான்சு நாட்டு அதிபரையும் நாட்டையும் சிறுமைப்படுத்திப் பேசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்; ஆனால் தேர்வு செய்த படைப்பாளிகள் அவர் என்ன எழுதியிருக்கிறாரெனப் பார்த்துதான் பரிசளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப் பார்த்துப் பரிசளிக்கவில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழியப் பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படிப் பேசக்கூடாது, அப்படிப் பேசக்கூடாதென்று தெரிவிப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்?” என்றும் அரசாங்கத்தைப் பாரத்துக் கேட்டிருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லேம்’ என்று இந்தக் கடடுரைக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். கூடவே அதிபருக்கு விசுவாசமாக இருந்த இடதுசாரி அமைச்சரை ”ஐம்பது பைசாவிற்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ என்று கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரியை எடுத்துப் போட்டு விமர்சிக்கும்போது இவருக்குள்ளும் வினைபுரியும் சுதந்திரயுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வோடு சாதிவெறி காரணமாக உத்தபுரத்தில் எழுந்த சுவரை இணைத்தொரு கட்டுரை இட்லராவது தனது இனத்தை நேசித்தான்; ஆனால் ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல என்கிறார்; 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மன் விழ்ந்து சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் (20லட்சம்) பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்ற தகவலைத் தந்துவிட்டு, நாஜிப்படைகளைவிட இம்மியளவும் தரத்தில் ‘செம்படைகள்’ குறைந்ததல்ல என்கிறார். போரினால் ஜெர்மன் கிடைத்தது; இரண்டு ஏகாதிபத்தியங்களும் அதைக்கூறு போட்டுக் கொண்டன. ஆனால் சோவியத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கத்தியரின் அரவணைப்பில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் (2-7 மில்லியன் மக்கள்) இதைத் தடுப்பதற்காகத்தான் 1961 – இல் பெர்லினை இரண்டு துண்டாக்கும் சுவர் எழுப்பப்பட்டது. 165 கி.மீ நீளம் 302 காவல் அரண், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி, தானியங்கி துப்பாக்கிப் பொருத்தப்பட்ட காவல் தூண்கள், குறி பாரத்துச் சுடுவதில் வல்ல காவலர் – இப்படிக் கட்டப்பட்ட சுவர் 1989 – ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் தமிழ்நாட்டின் உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக உயர்சாதியினர் சுவர் எழுப்புகிறார்கள். இதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்ரமித்ததோடு மட்டுமல்லாமல் 2005 – ஆம் ஆண்டில் இருந்து சுவரும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காலத்தின் முன்னால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போல இவைகளும் இடிக்கப்படும். இலங்கைத் தமிழினமோ பாலஸ்தீனமோ உத்தபுரமோ ஒடுங்கிவிடாது என்கிறார். இதோடு நின்றுவிடாமல், அப்போதும் எங்கோ வேறு இடத்தில் வேறொரு சுவர் எழுந்துகொண்டுதான் இருக்கும் என்று கிருஷ்ணா எழுதும்போது மனிதவாழ்வு குறித்த அவரது புரிதல் ஆழமாகப் பரவுகிறது.

பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சமூகமென அனைவரும் வளரும் குழந்தைகள் போல் நிகழ்த்திக் காட்டும் வன்முறைதான், பின்னால் அவர்கள் மழலையர் பள்ளிகளில் கடித்துக் கொள்வதற்கும், தொடக்கப் பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலைப் பள்ளிகளில் ரவுடிகள் போல் நடந்து கொள்வதற்கும் பருவ வயதில் பெண்களைச் சீண்டுவதற்குப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிற பிரான்சு நாடடுக் குழந்தை நல மருத்துவர் ‘எட்விஜ் ஆந்த்தியே’ என்பார் கூற்றை எடுத்துக்காட்டி ‘அடித்து வளர்க்காத பிள்ளை உருப்படாது’ என்கிற நம்முடைய அணுகுமுறையைக் குப்பைத் தொட்டியில் தலைகுப்புறத் தூக்கிப் போட்டுப் புதைத்தொழிக்கக் சொல்லுகிறார். இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ‘ஊடகங்கள்’ இந்தத் திசையில் திரும்பினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த ஹைத்தியில் நடந்த நிலநடுக்கம் 15 லட்சம் மக்களை அனாதை ஆக்கியதும், 70000 உயிர்களுக்கும் இறந்த தேதியில் ஒற்றுமை என்பதும் கொடுமை”  “உயிரற்ற உடல்களின் மௌனத்தினைச் சகித்துக் கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல் என்னை அச்சுறுத்துவன (31 – 32) என்பது.. புர்க்காவும் முகமும் என்ற கட்டுரையில் முகத்தின் மொழியைக் குறித்துப் பேசுகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற கட்டுரையில் 1960 –இல் கார் விபத்தில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் அல்பெர்கமுய் – யின் உடலை ஒரு தேவாலயத்திற்கு மாற்றுவது என்ற பிரெஞ்சு அதிபரின் யோசனையை அ.சமுய்-வின் மகன் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் என்கிற தகவலைத் தரும் கிருஷ்ணா, அதையும் ஆளும் வர்க்கத்தினை விமர்சிப்பதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஒளியும் நிழலும் என்ற கட்டுரை எழுத்துலகில் நடக்கும் பல மோசடிகளில் ஒன்றான கோஸ்ட் ரைரட்டர் பற்றிய கட்டுரை.  புகழ்பெற்ற அலெக்ஸாந்தரு துய்மாவிற்கு இருந்த கோஸ்ட் ரைரட்டர் ஒகுய்ஸ்த் மக்கே பற்றிய கட்டுரையில் பல தகவல்களைச் சுவைபடச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி எழுதுகிறார்!. “இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்”.. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவில் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா? அல்ல அரசு அதிகாரத்தின் பொருட்டா?

அந்தமான் நிக்கோபார் தீவில் வாழ்ந்த போவா(Poa) இன மூதாட்டி (85-வயது) இறந்து போனாள்; அவளோடு இந்தியாத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்து ‘போ’ மொழியும் இறந்துபோய்விட்டது. இப்படி எத்தனை மொழிகள் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 1635 மொழிகளில் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகும்; இதில் தமிழும் ஒரு மொழியாகிவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார் ” நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றான பிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்” என்றொரு அடிப்படையான, மிக முக்கியமான கேள்வியைத் தமிழர்கள் முன்வைக்கிறார்.

நமக்குள் இருக்கும் இன்னொருவனாகிய ஏமாற்றுப் பேர்வழி குறித்து ஒரு கட்டுரை பல அரிய மேனாட்த் தகவல்களுடன் (66 – 72) அமைந்துள்ளது,

நம்மிலுள்ள அந்த ஒன்றரை பேருக்கு நன்றி’ என்ற கட்டுரை” எஜமான மனங்களைக் காட்டிலும் சேவக மனங்கள், ஆபத்தானவை” என்பதையும் நம்மில் பலரும் அதிகாரத்திற்கு வளைந்து போகிறவர்கள்தாம்; மேலும், அதிகார ஆதரவு உண்டெனில் எவரையும் கொலை செய்யவும் – தயாராக இருக்கிறவர்கள்தாம் என்பதையும் உளவியல் சோதரென அடிப்படியில்ல் விளக்கிவிட்டு, இதையும் மீறி சிலபேர் மானுட அறத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காலகட்டதிலேயும் முன் வருகின்றனர். காந்தியடிகள் போல; தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஸ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதர்களைப் போல.

புன்முறுவல் செய்ய 17 தசைகளில் ஒத்துழைப்பு தேவை என்ற அறிவியல் உண்மைகூறி, திருமுகத்து அழகு குறுநகையை விதந்தோதுகிறார். பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தைப் பல மேற்கத்தியர் நீது? என்ற கட்டுரையும் பிரான்சு சாட்டின் பண்பாட்டு அரசியல் என்ற கட்டுரையிலும் நுட்பமாக அலசிவிடுகிறார். “அரசியல் வரலாறு என்பதே ஆதிக்க வரலாறுதான் காலனிய வரலாறுதான் தடியெடுத்த சிறுகூட்டத்தின் வரலாறுதான்” என்றெல்லாம் பேசும் கிருஷ்ணா, பிரெஞ்சு கலை இலக்கிய உலகமும் இன்றைக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடுமபோது எவ்வளவு பின்தங்கி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கட்டுரையில் நீதி, தண்டனை, சிறை, ஆதிக்க அரசு குறித்தெல்லாம் பிரான்சு நாட்டுப் பின்னணியில் விளக்கமாக எடுத்துரைத்துவிட்டு, சமுதாயத்தின் நலம், நீதி போன்ற சொற்களைத் தந்திரமாகக் கையாளும் அணியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை உலுக்குகின்றன” என்று வருத்தப்படுகிறார்.

மிலென் குந்தெராவையும் குண்ட்டெர் கிராஸையும் எழுத்தும் அரசியலும் என்ற பொருளில் அறிமுகப்படுத்திவிட்டுத் தமிழர்களின் எழுத்தாளர்கள் எவ்வாறு பரிசுக்கும் பொருளுக்கும் புகழுக்குமாகத் தம்மை விற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்டுகிறார்.

இறப்பும் அனுதாபமும் என்ற கட்டுரையில் டயானா கார் விபத்தில் இறந்தபோது ஐரோப்பிய வெள்ளை இன அரசுகள் அனுதாபச் செய்திகளை எப்படி வெளியிட்டன அதேநேரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் என்ற பெரும் இசைக்கலைஞன் இறந்தபோது அவைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுக் காட்டி இறப்பில்கூட நிறவெறி ஐரோப்பியாவில் வெளிப்படுகிறது; அதுபோலவே இந்தியாவில் ஆந்திரமுதல்வர் விபத்தில் இறந்தபோது போட்டிப்போட்டுக் கொண்டு எட்டுத் திசைகளிலும் இருந்தும் அனுதாபச் செய்திகள் பறந்தன. இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அனுதாபச் செய்திகளில் ஒன்றுபடாத தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட ஆந்திரமுதல்வர் இறந்துபோது ஒன்றுபோல் அனுதாபச் செய்திகளை அனுப்பித் தங்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டனர். தமிழர்கள் தமிழர்களுக்காக ஒன்றுபடுவார்களா? எனக் கேட்கிறார். ஒரு கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி நிகழ்கிறது என்பது இருக்கட்டும். இந்தியாவிற்குள் நிலவும் நிறவெறியை என்ன சொல்வது எனக் கேட்கிறார். நமது ஊடகங்களும் விளம்பரங்களும் சிவப்புத் தோலைத்தானே அழகு அழகென முன்னிறுத்துகின்றன. இந்த அடிமைத்தனத்திற்கும் பெயரென்ன?

உலக அளவில் நடக்கும் பிள்ளை கடத்தில் பற்றியும் ஒரு கட்டுரை. தொண்டு நிறுவனம் என்ற பேரில் நடக்கும் மோசடி குறித்தெல்லாம் புள்ளிவிவரத்தோடு பேசுகிறார்; உலகமயமாதல், என்ற பொருளாதாரச் சூழலில் தாம் செழிக்கலாம் என்று கருதிய ஐரோப்பியாவும் அமெரிக்காவும் எப்படி இடர்ப்பாடுக்குள் சிக்கிக் கொண்டன என்பதையும் இச்சூழலைச் சீன எவ்வாறு வெற்றிக்கரமாகக் கையாண்டு இன்றைக்கு மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது என்பதையும் ‘ஆறாவது கதவு’ என்ற கதையில் நுணுக்கமாக எடுத்துரைக்கிறார். எல்லாக் கட்டுரைகளிலுமே அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிரான ‘குரல் பதிவாகிக் கொண்டே போவதால் அவரது அலைவரிசையும் நம் அலைவரிசையும் ஒரே நேர்கோடடில் வந்துவிடுகிறது அதானல் சுகமான வாசிப்பு வாய்த்துவிடுகிறது. மிகச் சிறப்பாக அலிகாரை எடுத்து வெளியிட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். கிருஷ்ணா எழுத்து பல்வேறு பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையின் மேல் நடந்தாலும், வாசிப்பதற்கு இதமான எழுத்தாக அது மாறுவதற்குக் காரணம் அவர் கையாளும் மொழியும் கேலி கலந்த முறையும் கூடவே அடிப்படையில் அழமாக இயங்கும் அறச்சீற்றமும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

முட்டாள்களைக் குறித்துப் பேசும் ஒரு கட்டுரை அவரது கல்லூரிக் கால நிகழ்வை ஒன்றைப் பதிவு செய்கிறது. அடுக்குமொழியானால் கழக உறுப்பினர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை விளக்குகிறது அந்த நிகழ்வு. கல்லூரி விழாவிற்குப் பேச வந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ‘அடுக்குமொழி மோகத்தால்’ சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம். என்று பேசினாராம். பேச்சினூடே, நான் என்ன சொல் வருகின்றேன் என்றால்என்று அவர் பேசும்போது எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் மாணவர்கள், சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினீர்கள் என்று எதிர்ப்பாட்டுப்பாட , விழா மோதலில் முடிதந்தாம். மொழிபெயர்ப்பைக் குறித்தும் கிருஷ்ணா சில நுட்பமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பேயே ‘மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை’ என்று தொடங்கும் அந்தக் கட்டுரை, மொழிபெயர்ப்பாளன் என்பவன் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற ஓர் எழுத்தாளன் என்ற ஜார்ஸ் ஆர்த்தர் கோல்ட்ஸ்மித் கூற்றை எடுத்துக்காட்டி விளக்குகிறது. ஒரு மாநில மொழியாலான படைப்பு நிகழ்கிறது என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார்ஸ“நல்ல வாசகனை மொழிபெயர்ப்பாளன் வாசிப்பின் முடிவில் தனது உணர்வுகளுக்குச் செவிச் சாய்க்காது பொதுமதிப்பீட்டிற்கு உட்பட்டு மொழிபெயர்ப்புக்கான நூலைத் தேர்வு செய்கிறான்” என்கிறார்.

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘மொழிவது சுகம், (சிந்தனை மின்னல்கள்)’ அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.11, 2012. விலை. ரூ.90/- பக். 152

– பேரா.க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

உலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்

ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)AVT_Jorge-Semprun_3796

ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து  பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர்.  மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.

சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத்  (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து  – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள்  ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.

ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.

 

ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம்,  இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என்  அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’  (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று  அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய  தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.

அவரது முக்கிய படைப்புகள்:

1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)

————————————————–

வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்

Na.krishna -New books3 001

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.

செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.

இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.

இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.

மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?

என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.

மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.

அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.

கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.

இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.

வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளைமதப் பிரிவுகளைக்கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலைஅவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.

இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.

ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.

நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (.65/140), விவசாயிகளின் நிலைமை (.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.

அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013

——————————————————————————–

உலக எழுத்தாளர் வரிசை -3

 மிலேனா அகுஸ் (Milena Agus)Milena Agus

ஆறாண்டுகளுக்கு முன்புவரை அதிகம் அறியப்படாத எழுத்தாளர். 2005ல் இத்தாலியில் அவருடைய முதல் நாவல் வந்தபோது பதிப்பித்து வருகிற எல்லா நாவல்களையுமே வாசிப்பது என்றிருக்கிற வாசகர்கள் மட்டுமே மிலேனாவை அறிந்து வைத்திருந்தார்கள். நன்கு புகழ்பெற, தமது இரண்டாவது நாவல்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது, அந்த இரண்டாவது நாவல் Mal de Pierres(பிரெஞ்சு மொழி பெயர்ப்பில்). இநாவல் வெளிவந்ததும் மடமடவென்று அவரது புகழ் இத்தாலிக்குள்ளும் வெளியிலும் உயர்ந்தது, இன்றது தொடர்கதை ஆகியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இத்தாலிய இலக்கிய உலகில் மந்திரம்போல உச்சரிக்கப்படுகிற ஒரு பெயர். நடுநிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் 52 வயதான இப்பெண்மணி இதுவரை ஐந்து நாவல்களை மட்டுமே எழுதி யிருக்கிறார். சர்தீனியா மத்தியதரை கடலிலுள்ள சிறு தீவு, இத்தாலியின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. பூகோள அமைப்பில் மட்டுமல்ல இலக்கிய வரைபடத்திலும் சர்தீனியா தனக்கென எல்லைகளை வடிவமைத்துக்கொண்டு சமூக அமைப்பு, மொழி, பண்பாடு,  உணர்வுகளை வெளிப்படுத்துவது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு, இப்பெண் எழுத்தாளர் ஓர் உதாரணம். இத்தாலிய படைப்பிலக்கியத்தில் சர்தீனிய எழுத்தாளர்களின் பங்களிப்பும் தாக்கமும் நிறையவே உண்டு என்கிறார்கள். 1926ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்ற Grazia Deledda, Salvatore satta ( இவருடைய  The day of Judgment  முக்கியமானதொரு நாவல்) என பலர் இப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

எண்பதுகளில் சர்தீனியத் தீவை சேர்ந்த பல எழுத்தாளர்கள் இத்தாலிய மொழியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.  Sergio Atzeni, Mercello Fois, Salavatore Mannuzu  என நீளும் தன்மையது அப்பட்டியல். மிலேனாவும் இப் பலமான இனவரலாறு, நிலக்கோட்பாடென வகுத்துக்கொண்டு செயல்பட்ட படைப்புலகைச் சேர்ந்தவர்தான். இத்தாலிய ஆதிக்கத்தின்கீழ் கட்டுண்டு கிடப்பதாக உணர்ந்த இவ்வெழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் அச்சுதந்திரத்தின் தேவையை உணர்ந்திருக்கவேண்டும், அவர்கள் எழுத்துகளில் அது முழுவதுமாக வெளிப்பட்டது. முழுக்க முழுக்க சர்தீனிய அடையாளம் சார்ந்து செயல்பட்ட இவ்வெழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழியான சார்துமொழியை உரையாடலில் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். மிலேனா எழுத்துக்களிலும் சர்தீனிய தேசியம் சுட்டெரிக்கிறது(அந்நியர்களுக்கு?). ஆனால் அதே வேளை பிற சர்தீனிய எழுத்தாளர்களைப்போல  (தங்களை அடையாளப்படுத்த படைப்பில்  அவர்கள் அடிக்கடித் திகட்டும் அளவிற்கு வட்டார சொற்களையும், உரையாடலையும் கலப்பதுண்டாம்)  வட்டார மொழியை அதிகம் கையாளுவதில்லையாம், குறைவென்கிறார்கள்.

ஸ்பானீஷ் எழுத்தாளர்களின் படைப்புலகம் வேறு, ஒருவித மயக்கத்தில் கதை சொல்லல் நிகழும், கதைமாந்தர்கள் பனிமூட்டத்திற்கிடையில் ஊர்ந்துகொண்டிருப்பார்கள், ஒரு வித பைத்தியக்கார உலகம். இத்தாலியர்கள் எதார்த்தத்தை விறுவிறுப்பாகச் சொல்ல தெரிந்தவர்கள்.  மிலேனாவின் கதை சொல்லலும் அதற்கு விதிவிலக்கல்ல. 2005 இவர் முதல் நாவல் Quand le requin dort ( சுராமீன் உறங்கும் வேளை) வெளிவந்ததைத் தொடர்ந்து விமர்சனங்களும் வந்தன. விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டி இருந்தனர். இருந்தபோதும் பெரிய வெற்றியென்று இல்லாதது அப்போதைய குறை. முதல் நூலைப் பதிப்பித்தவர்களும் இத்தாலியில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இல்லையாம். அந்தக் குறையை அடுத்துவந்த Mal de Pierres தீர்த்திருக்கிறது.  இதற்குங்கூட ஆரம்பத்தில் சிவப்புக் கம்பளம் ஏதுமில்லை. குலம் கோத்திரம் பார்க்காமல் எழுதப்படுகிற விமர்சனங்களால் பின்னர் அடையாளம் கிடைத்திருக்கிறது, பிறகு அடுத்தடுத்து மூன்று நாவல்கள், ” Battement d’ailes, la Comtesse de Ricotta இறுதியாக Sttospra. இம்மூன்று நாவல்களுமே ‘Best sellers’  வகைமைச் சார்ந்தவை.

Mal de Pierres நாவலில், பேர்த்தி தனது பாட்டியின் கதையை சொல்கிறாள். இரண்டாம் உலகப் போர் சூழலில், காதலின்றி, திருமணம் சம்பிரதாயமாக நிறைவேறுகிறது. கடனேயென்று மணம் செய்துகொள்கிறாள். திருமண பந்தம்,  வாழும் சமூகத்திற்காக உருவாகிறது. சர்தீனிய சமூகத்தின் சராசரி ஆண்வர்கத்தின் பிரதிநிதி கணவன். புகைபிடிக்கிறான், பெண்களைத் தேடிபோகிறான். மனைவியும் பரத்தைபோல நடந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்ககிறான், அவள் மறுப்பதில்லை. தினசரி வாழ்வாதாரங்கள் நெருக்கடியைச் சந்திக்கிறபோது, அவனுடைய விட்டேத்தியான வாழ்க்கையில் ஒழுங்கை வற்புறுத்துகிறாள். எல்லாம் இருந்தும் பல ஆண்டுகளாக அவள் மனம் தேடிஅலையும் காதல் மாத்திரம் அவளுக்கு வாய்க்காமல் கண் பொத்தி விளையாடுகிறது. மூத்திரப்பையிலுள்ள கற்களுக்காக நிவாரணம் தேடிபோன இடத்தில் அக்கற்களே அவள் வாழ்க்கையின் ஔவடதமாக உருமாற்றிகொண்டு அவளுக்கு உதவ வருகின்றன. அவள் தொட்டதெல்லாம், அவள் வேண்டியதெல்லாம் கிடைக்கிறது.  மாத்தா ஹரி நாவலை இதனுடைய தாக்கத்தில்தான் எழுதினேன்.

—————————————–

உலக எழுத்தாளர் வரிசை -1

மாரியோ வார்கஸ் லோஸா ((Mario vargas Llosa)

mario-vargas-llosa1                                                                                                        உலகின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்களென ஓர் இருபதுபெயரை குறிப்பிட்டால் அதில் முதல் வரிசையில் நினைவுக்கு வருபவர் பத்திரிகையாளர், கட்டுரையாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 2010ம் ஆண்டு பெற்றவர், அவருடைய ஒவ்வொரு நாவலும் வித்தியாசமான கதை சொல்லலுக்கும், உண்மைப் பாத்திரங்களை புனைவுடன் கலந்து எது நிஜம் எது நிழல் என பிரித்துணர முடியாத கதையாடலுக்கும் பெயர் பெற்றவை.

91 இறுதியில் சொந்தமாக ஏதேனும் தொழில்  செய்வதென ஆரம்பித்து வாடகைக்கு ஓர் இடத்தைப் பிடித்து ஓர் சிறிய இந்திய அங்காடியை ஆரம்பித்தேன். எங்கள் கடைக்குப் பின்புறம் Association ‘Amérique Latine என்ற ஓர் அமைப்பு ஒன்றிருந்தது. 95ல் கடையை விரிவாக்க நினைத்து,  அருகிலேயே சொந்தமாக ஓர் இடத்தை வாங்கி மளிகைக் கடையை புதிய இடத்திலும், பழைய இடத்தில் இந்தியக் கைவினைப்பொருட்கள், படக்கொப்பிகள், அகர்பத்திகள் என விற்பனையை நடத்தினோம். ஆனால் அக்கடை இலாபகரமாக இயங்காததால் மூட நினைத்து வெளியேற நினைத்தபோது. அமெரிக்க லத்தீனியர் சங்கம் தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டது. அவர்கள் அங்கே ஓர் நூலகமொன்றைத் திறக்கபோவதாகக் கேட்டதும், இடத்துக்குச் சொந்தக்காரர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அதைக்கூறி ஏற்பாடு செய்தேன். ஒரு முறை நூலகத்தில் நுழைந்து பார்த்தேன். நூல்கள் மொத்தமும் ஸ்பானிய மொழியில் இருந்தன. நூலகப்பொறுப்பாளரிடம் கேட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கான நூலகம், வேறு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்த்தீர்கள்? என்று அதற்கான நியாயத்தை விளக்கினார். பிரேசில் நீங்கலாக தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஸ்பானிய மொழியை அரசாங்க மொழியாக ஏற்றுக்கொண்டவை. அதனால்தானோ என்னவோ பிரெஞ்சு மொழிக்கு அடுத்து ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிய மொழி இலக்கியங்கள் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. முழுத்தேங்காயைப் புரட்டுவதுபோல ஸ்பானிய மொழியில் இருந்த அப்புத்தகங்களை தடவி பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

நூலகத்திற்குள் 2002ல் ஒரு காப்பி பார் திறந்தார்கள், போகும் சந்தர்ப்பம் வாய்த்தது, போனேன். என்னை வியப்பில் ஆழ்த்துவதுபோல பிரெஞ்சில் சில புத்தகங்கள் இருந்தன. சங்கத்தின் உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகங்கள் தருவதில்லையென நூலகப் பொறுப்பாளர், பொறுப்பாக பதிலளித்தார். ஆனால் இம்முறை அங்கிருந்த சங்கத்தின் தலைவர் தமது பொறுப்பில், இதை வாசித்துப்பாருங்கள் நன்றாக இருக்குமெனக் கூறி “La ville et les Chiens” (The Time of the Hero) நூலை இரவலாகத் தந்தார். அப்போதெல்லாம் நான் அறிந்த ஒரே ஸ்பானிஷ் எழுத்தாளர், கப்ரியெல் கார்சியா மட்டுமே. ஆனால் கார்சியாவைக்காட்டிலும் மரியோ வார்கஸை,  இந்நூலை வாசித்த நாள் முதல் நேசிக்க ஆரம்பித்தேன். அவரது கதைசொல்லும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் தவிர தொடக்கத்தில் பிடெல் கஸ்ட்ரோவை ஆதரித்து பின்னர் அலுப்புற்ற ஆசாமி. கம்யூனிஸம் ஏட்டு சுரக்காய் என புரிந்துகொண்ட புத்தி ஜீவி என்பதும் ஒரு காரணம்.

மாரியோ வார்கஸ் லோஸா நூல்களில் தவறாமல் வாசிக்க வேண்டியவை: Captain Pantoja and the Special Service, Aunt Julia and the Scriptwriter, The Way to Paradise. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசிக்க நேர்ந்த Le Rêve du Celteம் ஓர் முக்கிய மான நாவல். தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நாவலுங்கூட. இந்நாவலில் ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடக்கும் கெல்ட்டியர் இனப்பிரிவைச்சேர்ந்த புகழ்பெற்ற ரோஜெர் காஸ்மெண்ட்தான் (Roger Cassement – 1864-1916) கதை நாயகன். முரண்பாடான ஆசாமி. அயர்லாந்து பூர்வீகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியபோதிலும் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் காங்கோவின் வளத்தை உறிஞ்சியதோடல்லாமல் அங்கே உள்ளூர் மக்களுக்கு இழைத்தக் கொடுமையை   வெளிப்படையாக விமரிசிக்கிறார், ஓர் அறிக்கையாகத் தயாரித்து, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அதனை அனுப்பியும் வைக்கிறார். அதுவே பின்னர்அவரை அயர்லாந்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் காரணமாக அமைந்தது. அடிப்படையில் அவரொரு பிராட்டஸ்டண்ட், எனினும் பிராட்டஸ்டண்ட்கள் கையில் அயர்லாந்து போவதை விரும்பவில்லை. உள்ளூர் மக்களை ஆளும் நிர்வாகத்திற்கு எதிராகத் திரட்டினார், முதல் உலகப்போரின்போது ஜெர்மானியருடன் இணைந்துகொள்ளவும் தயங்கவில்லை. கடைசியில் பிரிட்டிஷ் அரசு தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி அவரைக் கொலை செய்தது. முரண்பாடுகளையே கையாளுவதில் தேர்ந்த மாரியோ வார்கஸ் லோஸாவுக்கு, ரேஜெர் காஸ்மெண்ட் போன்ற முரண்பாடான ஆசாமிகள் தமது கதையாடலுக்குப் பொருத்தமான ஆசாமியாகத் தெரிந்திருக்கவேண்டும்.

அவரது சுயகதை எனச்சொல்லப்படும் Aunt Julia and the Scriptwriter அவருடைய நாவல்களிலேயே மிகசிறந்ததென்கிறார்கள். எனக்கென்னவோ இங்கே குறிப்பிட்ட எந்தப்படைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. சிறிது கவனத்துடன் வாசிக்கவேண்டும், ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் முக்கியம். ஒரு வகையில் இரட்டைப் பிறவிகளான குழந்தைகள் ஒன்றையொன்று துரத்திவிவிளையாடுவதைப்போல உண்மையும் புனைவும் ஒன்றை மற்றொன்று துரத்திசெல்கின்றன. சந்தோஷத் தவிப்புடன் அவர்களை மடக்கிப் பிடித்து கட்டி அணைத்து கிளர்ச்சியுறும் தாயின் நிலையில் நாம் – வாசகர்கள். பதினெட்டு வயது, முதிராத இளைஞன், விதவை ஒருத்தியிடம் காதல் கொள்கிறான். இதிலென்ன தப்பு என்பீர்கள், பிரச்சினை அதுவல்ல, அவள் வயது. அவள் பெண்ணல்ல பெண்மணி. 32 வயது. 14 வருடங்கள் மூத்தவள். அதுவும் தவிர அவனுக்கு சித்தி முறை. நெருக்கடியான பதின் பருவத்தைக் கடக்க மட்டுமல்ல, சுற்றியுள்ள சமுதாயத்தை எதிர்கொள்ளவும் அவனைத் தயார்படுத்துவதும் ஜூலியாதான். புனைவை மையமாகக்கொண்ட அத்தியாயங்களில் (‘வானொலித் தொடராக ஒலிப்பரப்பப்படுகின்றன) ஒவ்வொரு பாத்திரமும் விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள்போல,  தனித்தனியாக கதை சொல்கின்றன, போஜராஜன்போல நமக்கும் விடைதேடவேண்டிய கேள்விகள், ஐயுறு வினாக்கள் அதிலிருக்கின்றன.

பொதுவாகவே மரியோ வார்கஸ் கதைசொல்லலில் ஒரு வேகமுண்டு, ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன்பாக, வரும் வாக்கியத்தின் முதற் சொல் உங்கள் மனதிற்குள் சரிந்திருக்கும். இறுதிப்பக்கம்வரை பிரமை பிடித்தவர்கள்போல ஓடுகிறோம். சமுதாயப் பெருவெளியின் மேடு பள்ளங்கள் கால்களில் அல்ல நம் கண்களில் இடறுகின்றன. சமகால வாழ்வியல் அவரது வார்த்தை எள்ளலில் கூனிக்குறுகுகிறது, வார்த்தை விளையாட்டில் அவர் நிகழ்த்தும் சித்து, வியப்பூட்டுகிறது. இன்றைய உலக இலக்கியப்போக்கை அறியாதவர்கள் கூச்சல் இரைச்சலென பேர்சூட்டலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல அவர் எழுத்தில் உள்ள எள்ளலும், நீர்ப்பரவல்போன்ற நடையும், வார்த்தைச் சித்தும் சாதாரண மனிதர்களையும் நிகழ்வுகளையும் அசாதாரண மனிதர்களாக, அபூர்வ நிகழ்வாக மாற்றிக்காட்டும் ரஸவாதக் கலை வேறு படைப்புகளில் வாசிக்கக் கிடைக்காதது.

ரோஜெர் காஸ்மெண்ட் பட்டுமல்ல, Pantaléon et les visiteuses (Captain Pantoja and the Special Service) நாவலில் கதை நாயகனான  பாந்தலெயோன் பாந்த்தொஜா ஆகட்டும்,  La tente Julia et le scribouillard (Aunt Julia and the Scriptwriter)ல் வருகிற லெ பேடரோ  கமாச்சோ ஆகட்டும் மாரியோ வார்கஸ் லோஸாவின் கதைநாயகர்கள் முக்காலே மூணுவீசம்  முரண்பாடுடைய மனிதர்கள்தான். இங்கே முரண்பாடு எவரிடமில்லை. எல்லோரும் ஏதோஒருவிதத்தில் முரண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான். கொந்தளிக்கும் கடலும், வெடித்து சிதறும் எரிமலையும் நேற்றுவரை அமைதியாக இருந்தவைதான். கொரில்லா யுத்தமும் பயங்கரவாதமும் எவரிடம் பிறந்தது, ஏன் பிறந்தது? சந்தர்ப்பமும் சூழலும் வேறாகிறபோது காந்திமகன் கூட சந்தியில் நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனைதான் கற்றாலும், ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்கப்போகிறேன் என்றாலும் பல நேரங்களில் உணர்ச்சி அறிவை சுலபமாய் வென்றுவிடுகிறது, அன்பாய் இருக்கிற மனவியிடம் கையோங்கிவிட்டு அவள் கைவருடலில் கலங்கவேண்டியிருக்கிறது. மனிதர்கள் அனைவருமே மகாத்மாக்கள் இல்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிற மகாதமாக்களிடமும் ஓர் பத்துசதவீதம் முரண்கள் இருக்கலாம்.  இதுதான் எதார்த்தம், இதுதான் இயற்கை.

————————————-

மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி

“இன்னும் நல்லா இழு”

“எனக்கு முடியலைடா”!

” தோ பாரு! நல்லா உதடுகளை முன்தள்ளிக்குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து பீடிக்கு ஒரு கிடுக்கிப்பிடியிட்டு புகையைத் தம்கட்டி இழுக்கணும்.

” இழுத்தால்”?

” நாளைக்கே என்னைப்போல பெரிய மனுஷன் நீ!” -சொல்லிவிட்டு கலகலவென்று சிரிக்கிறான். அப்போ என்ன வயசிருக்குமென்று நினைவிலில்லை. ஏழாம் வகுப்பு கோடைவிடுமுறையென்று ஞாபகம். வாள் கொண்டு மரம் அறுப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டிவைத்திருந்தார்கள். பள்ளத்தின் இருகரையையும் பிடிமானமாகக்கொண்டு நீள்வாக்கில் மரம் போடப்பட்டிருக்கும் பள்ளத்தில் ஒருவரும் மேலே ஒருவரும் நின்றுகொண்டு மேலும் கீழுமாக சீரான கதியில் வாளை இழுப்பார்கள். அப்பள்ளந்தான் முதலும் கடைசியுமாக பீடியைக் குடித்துப்பார்க்க எனக்கு பயிற்சிகளமாக அமைந்தது. எனக்குக் குரு மண்ணாங்கட்டி.

அவன் பெயர் பதிவேடுகளில் சின்னத்தம்பி என்றிருந்தாலும், அவனுடையை பெற்றோர் மண்ணாங்கட்டியென்றே அழைக்க எங்களுக்கும் அது பழகிப்போயிற்று. அவன் அப்பா ராசு கவுண்டருக்குக் கடைசிகாலத்தில் பிறந்த ஒரே வாரிசு. கிராமத்தில் அப்போது ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில்கூட எதுவுமில்லை. எங்கள் கிராமத்திலிருந்து அரை கி.மீ தள்ளியிருந்த மற்றொரு கிராமத்திற்குச் செல்லவேண்டும். முதல் இரண்டு வகுப்புகள் அவனுடன் படித்திருப்பேன் பின்னர் நானும் எனது சகோதரரும் இரண்டு ஆண்டுகள் தாத்தா கர்ணமாக இருந்த அனுமந்தையென்ற ஊரிலும், பின்னர் ஐந்தாம் வகுப்பிலிருந்து எங்கள் பாட்டி சமைத்துப்போட புதுச்சேரியிலும் படிப்பைத்தொடர்ந்தோம். மண்ணாங்கட்டி பக்கத்து ஊரில் தொடர்ந்து படித்துவந்த ஞாபகம். பிறகு எட்டாம் வகுப்பிலிருந்து  எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீட்டர் தூரத்திலிருந்த புதுச்சேரி மாநிலத்தைத் சேர்ந்த காலாப்பட்டு என்ற ஊரில் படிப்பைத் தொடர வேண்டியதாயிற்று. மண்ணாங்கட்டியுடனான நட்பு தொய்வின்றி தொடர்ந்தது.

எங்கள் வீட்டில் அவனோடு சேராதே என்று உத்தரவு. இருந்தும் வீட்டிற்குத் தெரியாமல் அவனைத் தேடிபோய் பழகுவேன். எனக்கு அப்போது சிவாஜிபடங்கள் என்றால் பிடிக்கும் அதற்கு இரண்டுகாரணங்கள். அப்பா காங்கிரஸ்காரர் என்பது ஒரு காரணம். மற்றது மண்ணாங்கட்டி. சிவாஜிபோல வசனம் பேசுவான். கிராமத்தில் தெருக்கூத்தோ, நாடகமோ நடந்தால் மறுநாள் அதில் வரும் முக்கிய பாத்திரங்களாக மாறி என்னைப்போல பையன்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நடித்துக்காட்டுவான். தவலையைத் தலைக்குப்புற கவிழ்த்து நீச்சலடித்துக்கொண்டு மறுகரைக்கு போய்வருவான். பெண்கள் முன்னால் திடீரென்று காற்சட்டையை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக இடுப்பை ஒடித்து ஆடுவான். அவர்கள் ‘எடு துடைப்பக் கட்டையை! ‘எனக்கூவிக்கொண்டு துரத்துவார்கள், நின்று சிரிப்பார்கள், இவனும் பதிலுக்குச் சிரிப்பான். எனக்கு மட்டுமல்ல விடலைப்பருவத்தில் என் வயது பையன்கள் பெண்கள் என எல்லோருக்கும் அவன்தான் ஹீரோ. ஒருநாள் உள்ளூர் குளத்தில் வெகு நேரம் ஆட்டம்போட்டுவிட்டு கரையேறியபோது அவன் போடவிருந்த கால் சட்டையிலிருந்து பீடியொன்று விழுந்தது.

– ஐய்யயோ நீ பீடியெல்லாம் பிடிப்பாயா? எனக்கேட்டேன்.

– நான் பெரியமனுஷன் ஆயிட்டேன் பிடிக்கிறேன்

– எனக்கும் பிடிக்கணும்போல இருக்குது கொடேன்.

– இல்லை ஒரு பீடிதான் இருக்குது, நாளைக்கு உங்க வீட்டுலேயிருந்து காசு எடுத்துவா. பீடி புடிக்கக் கற்றுதரேன்- என்றான்.

மறு நாள் மரமறுக்கும் பள்ளத்தில் அவன் பீடிபிடிக்க எனக்குக் கற்றுதந்தபோது, பதட்டமாக இருந்தது. முதற்புகையைவிட்டபோது அவன் கூறியதைபோலவே சட்டென்று வளர்ந்து பெரிய மனுஷன் ஆன நினைப்பு. ஆனால் வீட்டிற்குத் திரும்பும்போது அச்சம் நெஞ்சுகொள்ள இருந்தது. யாராவது பார்த்திருப்பார்களோ என்ற கவலை. அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவாரென்று தெரியும். அவருக்கு அது மகா பெரிய தப்பு. ரொம்பக் கோபக்காரர். அன்றைக்கு ஒளிந்து புகைவிட்டபோது அப்பா முகத்தில் விட்டதுபோலத்தான் இருந்தது. அப்பாவை ஜெயித்துவிட்டதாக உணர்ந்தேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது வீட்டிற்கு நுழைந்ததும் நான்செய்த முதல் காரியம், அப்பாவின் கதர்த் துண்டை வாய்க்கு நேராகவைத்து, வாயில் இன்னமும் புகை பத்திரமாக இருப்பதைப்போல அதில் பலமுறை ஊதிய ஞாபகம். விடலைப்பருவம் அன்றையதினம் மனதிற் ஏற்படுத்திய இரசவாதத்திற்கு ஒப்பீடுகளில்லை.

*                         *                                       *                                     *

– அப்பா என் பிரண்டுக்கு பிறந்த நாள்.

– நான் காரில் கொண்டுபோய் விடவா.

– இல்லை அவள் அம்மா வந்து அழைத்து போவாங்க, நிகழ்ச்சிக்குப்பிறகு அவங்களே கொண்டு வந்து விடுவாங்க..

-*                                     *                                             *                          *

– பன்னிரண்டு மணி ஆகப்போகுது கம்ப்யூட்டர்ல என்ன பண்ற? வேளையா படுக்கணுமென்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்.

*                                    *                                       *                                    *

– ஒரு நண்பர் வீட்டுலே திருமணம், வீட்டுக்கு வந்தவங்க உன்னையும் தானே அழைச்சாங்க வாயேன்.

– இல்லை நான் வரலை. நீங்க போயுட்டு வாங்க, எனக்கு யாரையும் அங்கே தெரியாது.

*                              *                                     *                              *-

மேற்கண்ட உரையாடல்கள் எனக்கும் எனது இளையமகளுக்கும் ஆனது. அவளை இலேசாக கண்டித்தால் போதும், சட்டென்று அழுதுவிடுவாள். அவள் அம்மா, “இன்றைக்கு உனது பிறந்த நாளாயிற்றே, வேண்டுமென்பதைச் சொல்லேன், செய்துதரேன்”- என்பாள். எங்களுக்குக் கிடைக்கும் அவளுடைய எதிர்வினை தோளைக்குலுக்கி, உதட்டை பிதுக்குவது. ஏறக்குறைய இதேபோன்றதொரு உரையாடலை, அனுபவத்தைக் கடந்த காலத்தில் எனது பிற பிள்ளைகளுடன் பெற்றிருப்பேன்.

எனது பெற்றோர்களுக்கும் எனக்குமான விடலைப்பருவ உறவு எப்படி?  அப்பா நடைவாசலில் நுழையும்போதே, வீட்டைவிட்டு ஓடிவிடுவேன். அப்பாவின் மூர்க்கம் ஊரறிந்தது. அம்மாவிடம் அப்பா சொல்லுவது, ‘உனக்கு சமைக்கமட்டுமே தெரியும்’. அதையே கொஞ்சம் மாற்றி எங்களிடம், ” நீங்க சின்னப்பையன்கள், உங்களுக்கு ஒன்றும் தெரியாது” -என்பார். இதில் என்னைவிட மூன்று வயது பெரியவராக இருந்த அண்ணனிடத்தும் இதே அபிப்ராயத்தை வைத்திருக்கிறாறே என்பதில் எனக்கு சந்தோஷம். கொஞ்சம் தைரியத்துடன் அவரிடம் நாங்கள் பேசிவிட்டால் போதும், பிறகு இரண்டொரு மாதத்திற்கு  மறக்க முடியாதென்றாகிவிடும்.  தலைமுடி எப்படியிருக்கவேண்டும், சட்டை எப்படி இருக்கவேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம், வீட்டில் என்ன சமைக்கலாம் எல்லாம் அவர்.. அவர்.. அவர். எனது விடலைப்பருவம் அப்பா நிழலில் மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி.

சொல்லப்போனால் விடலைப்பருவத்தை உடல் ஏற்றுக்கொண்ட தருணம் தொடங்கி அதன் இயல்புக்குகந்த சில எதிர்வினைகளை நடத்தியிருக்கிறது. உடல், மனம் இவற்றிலேற்பட்ட மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையில்லை. விரல் முனையில் ஊடகங்கள் இல்லாதகாலம்.  என்னைச்சுற்றியிருந்த மனிதர்களின் தாக்கமும் குறைவாகவே இருந்தது. எனது தந்தையின் முரட்டு சுபாவத்திற்கு எதிரான குணம் கொண்டிருந்தவர்களை அல்லது அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்புவர்களைத் தேடிச்சென்று பழகினேன். எங்கள் வீட்டிற்கு வந்தால் தயங்கி நிற்பவர்கள் இல்லங்களைத்தேடி  அவர்களுடைய வீட்டுத் திண்ணையில் சென்று அமருவேன். விடலைப்பருவத்தில் முரட்டு அப்பாவிற்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளால் கொடி பிடித்ததாக நினைப்பு. அப்பா பழுத்த காங்கிரஸ்காரர். எங்கள் ஊர் தமிழாசிரியர் உள்ளூர் எம்.ஜி.ஆர். ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிராமத்தில் முதன் முறையாக தி.மு.க கொடியை ஏற்றிவிட்டார். அப்பா அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். கொடிக்கம்பமும் சின்னாபின்னமானது. நான் தி.மு.க அனுதாபியானது அப்படித்தான். அப்பாவின் மேலிருந்த கோபம் தமிழாசிரியரைக் கொண்டாட உதவிற்று, அவர் வீட்டிற்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அவருக்கு விடலைப் பருவத்தில் ஒரு பெண் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

முதன் முதலாக எனது குமர பருவம் உணர்த்தப்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அப்போதெல்லாம் அமெரிக்க அரசாங்கம் இந்திய பள்ளி மாணவர்களுக்கு பால் மாவும், மக்காச்சோள மாவும் CARE என்ற அமைப்பின் கீழ் இலவசமாக வழங்கிவந்தார்கள். இரண்டுமாதத்திற்கு ஒரு முறை, யூனியனுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்துவரவேண்டும். ஒருவாரமாக பெய்து கொண்டிருந்த மழையில் ஏரிகுளங்களெல்லாம் நிரம்பிவழிந்தன, கலிங்கல் வழிந்து ஓடையில் இடுப்பளவு தண்ணீர். கிராமத்திற்கு வந்திருந்த நான், உள்ளூர் பையன்களுடன்  கேர் பொருட்களைக்கொண்டுவர அவர்களுடன் தயாரானேன். ஆசிரியை முன்னால் போய்க்கொண்டிருக்கிறார். பையன்கள் நாங்கள் அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தோம்.

– என் பின்னாலேயே வரவேண்டும், ஆங்காங்கே தண்ணீர் குளம்போல நிற்கிறது, நீங்கபாட்டுக்கு எங்கேயாவது போய் தண்ணிரில் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள் என்று ஆசிரியை எச்சரித்திருந்தார்.

எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஆசிரியை திடீரென்று ஒரு புதர் மறைவில் ஒதுங்க நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பின்னால் போய் நிற்க, அவர் பதற்றத்துடன் எழுந்து எங்களை முறைத்ததையும், “- ஏண்டா தடிப் பசங்களா ஒரு பொம்மனாட்டி அவசரத்துக்கு ஒதுங்கிறதைப் புரிஞ்சுங்க மாட்டீங்களா? எனக்கேட்டுச் சிரித்ததையும் ஜென்மத்திற்கு மறக்கமுடியாது.

அப்போதும் மண்ணாங்கட்டிதான் பதில் சொன்னான்:

– நீங்கதானே டீச்சர் உங்க பின்னாடியே வரச்சொன்னீங்க!

– நீ பிஞ்சிலேயே பழுத்தவனாயிற்றே என்பது ஆசிரியையிடமிருந்து வந்த பதில். அவள் சொன்னவாக்கு கூடிய சீக்கிரம் பலித்தது. நான் பத்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தபோது, அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, நான் புமுகவகுப்பு படிக்கிறபோது இரண்டு குழந்தைக்கு அவன் தகப்பன். நான் கல்லூரியில் சேர்ந்தபோது இறந்துபோனான்.

எட்டாவது வகுப்பில் ஆரம்பித்து கல்லூரியில் புகுமுக வகுப்புவரை எனது குமரப்பருவம் நீடித்ததாகச் சொல்லலாம். துளசி என்ற ஆசிரியர் எங்கள் ஊரில் தங்கி பக்கத்து ஊர் பள்ளியில் பணியாற்றினார். வெகு சன பத்திரிகைகள் பலவும் அவர் வீட்டிற்கு வரும். அவர் படித்து முடித்த மறுகனம் அவற்றை வீட்டிற்குக்கொண்டுவந்து படிப்பேன். விடலைப்பருவ இச்சைகளை, தேடல்களை கூர்தீட்டியவை அவை. ஜெயராஜ் படங்களுக்காகவே சுஜாதாவை வாசிக்க நேர்ந்ததும் விடலைப்பருவத்தில் நிகழ்ந்ததுதான்.  ஒரு முறை வீட்டில் திதி கொடுக்கவேண்டுமென்று மாவிலையும் சுள்ளியும் ஒடித்துவரசொல்கிறார்கள்.  கையெட்டும் தூரத்தில் சுள்ளிகள், மாங்கொத்து. ஒடிக்கமுடியும் என்கிறபோதும், உறவுக்கார கன்னிப்பெண்ணொருத்தியைக் பார்த்த வேகத்தில் எவரெஸ்டில் ஏறுவதாக நினைத்துக்கொண்டு மடமடவென்று மரத்தில் ஏற, தாங்கிய கிளை முறிய, விழுந்ததைத் தொடர்ந்து  கட்டுபோட ஒரு மாதம் புதுச்சேரில்லருகில் ஓட்டேரிப்பாளையம் என்ற ஊருக்குப் போய்வந்ததற்கும் பருவக்கோளாறுக்கும் சம்பந்தமிருக்கிறது. விடலைப்பருவம் உடைகள் விஷயத்தில் அக்கறைகொள்ளவைத்திருக்கிறது. சொற்களை கவனமாக உச்சரிக்கவைத்திருக்கிறது. ஆசிரியர்களைக்காட்டிலும் ஆசிரியைகளிடத்தில் கூடுதலாக மரியாதை செலுத்தவைத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆசிரியர்கள் எங்கள் வகுப்புத் தோழிகளிடம் கடலைபோட்டிருக்கிறார்கள்.

அவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். அவள் எங்கள் வகுப்பு தோழி. எப்போது பாடினாலும் பி. சுசீலாவின் ‘நீ இல்லாத உலகத்திலே’ என்றபாடலை இனிமையாகப் பாடுவாள்.  அவள் பாடியதெல்லாம் அந்த அறிவியல் ஆசியருக்காகவென்று பின்னர்தான் தெரிந்தது. இருவருமாக சேர்ந்துகொண்டு பையன்களாகிய எங்களை நன்றாக ஏமாற்றியிருந்ததை காலம் தாழ்ந்தே புரிந்துகொண்டோம். அவள் வயதென்றாலும் எங்களை அவர் விடலைப்பையன்களாகக்கூட நடத்தவில்லை. அதற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்புவரை எங்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தவர் ஓர் ஆசிரியை, திருமணம் ஆகாதவர். அவர் அறிவியல் பாடங்களுக்கு கையேட்டில் படம் வரைகிறபோதெல்லாம் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறதென்று எழுதுவார். அவரும் நல்ல சிவப்பு, அழகுவேறு.  எனக்கும் நித்தியானந்தம் என்றொரு சக நண்பனுக்கும் அவரிடம் பாராட்டைப்பெறுவதில் கடுமையான போட்டி இருந்தது. ஆசிரியருக்குப் பதிலாக ஆசிரியைகளாக இருந்து பாடமெடுத்திருந்தால் எல்லாவற்றிலுமே கூடுதலாக மதிப்பெண்பெற்றிருப்போமென நினைக்கிறேன்.

விடலைப்பருவத்தை எப்படிக் கடந்துவந்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எபோது ஆரம்பித்தது எப்போது முடிவுக்குவந்ததென்பதைத் துல்லியமாக நூல் பிடித்து பிரித்துணர்ந்த அனுபவம் எனக்கில்லை. ஆனாலும் இதுவும் அதுவுமாக அலிஸ்ஸ¤க்குத் திறந்த விந்தையுலகம் எனக்கும் திறந்து வண்ணமயமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது. குமரப்பருவத்தில் புதுவீடுகட்டி குடித்தனம்போனதுபோல ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்து, கதவைத் திறந்து, காலெடுத்துவைத்து, பாய்போட்டோ போடாமலோ உட்கார்ந்து, எழுந்து, நடந்து, வாசங்களை நுகர்ந்து, கடந்த தருணங்களும் சிதைந்த கனவுகளும் எத்தனையெத்தனை?

அன்ன போழ்தினிலுற்ற கனவினை

அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? (பாரதி)

————————-

 

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2013.

1. லெ.கிளேசியோ – விசாரணை

எனது மகன் குடும்பமும், இளையமகளும், லாஸ் ஏஞ்ஜெல்ஸில் வசிக்கும் எனது பெரிய மகளைப்பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவருமே ஹவாய்த் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். எனது மனைவியுடன் செல்ல விருப்பமிருந்தது. கிளேஸியோ தடுத்துவிட்டார்? கடந்த இரண்டுமாதமாக வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக பணி, நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ.கிளேசியோவின் முதல் நாவலும் அவருக்கு பிரெஞ்சு படைப்புலகின் மிகப்பெரிய கொன்க்கூர் பரிசை பெற்றுத் தந்த “Le Proces -Verbal’ நாவல் காலச்சுவடு பதிப்பகத்திற்காக தமிழில் வருகிறது. அதன் நுட்பமான சொல் தேர்விற்கும், நெஞ்சை லுக்கும் சொல்லாடலுக்கும் புகழ்பெற்றது. முடிந்தவரை அதன் அடர்த்திக்குப் பங்கமின்றி மொழிபெயர்த்து களைத்திருக்கிறேன்.

2. அம்பை – சிறுகதைகள் – பிரெஞ்சில் வருகின்றன.

நண்பர் கண்ணன் முயற்சியால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் வருகின்றன. புகழ்பெற்ற பிரெஞ்சு பதிப்பகம்   வெளியிடுகிறது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவருடன் இணைந்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லாம் ஒழுங்காக நடந்தால் 2014 ஜனவரியில் அம்பை சிறுகதைத் தொகுப்புகளை எதிர்வரும். ஜனவரியில் பிரெஞ்சுப் புத்தககக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.

3. ஆக்கமும் பெண்ணாலே – முனைவர்  எ. இராஜலட்சுமி.

முனைவர் எ. இராஜலட்சுமியைப் பற்றி  என்னிடம் முதலில் குறிப்பிட்டவர், அவருடன் பணியாற்றும் புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் நண்பர் மு.இளங்கோவன்.  உங்கள் ‘ மாத்தா ஹரி நாவலைப் பற்றி முனைவர் எ. இராஜலட்சுமி தனது நூலொன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார், தாங்கள் புதுச்சேரிவந்தால் தெரிவிக்கும்படி சொன்னார், தங்களை சந்திக்க விருப்பமாம் என்றார். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், புதுவையில் இலக்கியம் புத்தகக் கடை நடத்தும் நண்பர் சீனு தமிழ் மணி. பொதுஉடமை, பெரியார், பசுமையைப் போற்றுதல் என்பதை ஆரவாரமற்று செய்பவர். அவரது ஏற்பாட்டின்படி பேராசிரியை எ. இராஜலட்சுமியை அவரது புத்தகக்கடையில் சந்தித்தேன். ஒன்றிரண்டு நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். ஒன்று ‘ஆக்கமும் பெண்ணாலே’ மற்றொன்று ‘நீயும் நானும் நாமும்’ என்ற கவிதைத் தொகுப்பு. இரண்டைப் பற்றியும் எழுதலாம் எழுதவேண்டும். ஒருவேளை மாத்தாஹரி பற்றி அவர் எழுதவில்லையெனில், அவர் யாரோ நான் யாரோ? எனக்கு அவர் எழுத்துகள் பற்றிய எந்த அறிமுகமும் நிகழ்ந்திருக்காது. ஓரளவு அறிமுகமானவற்றைத் தேடிப்படிக்கிறோம். தமிழில் நெட்வொர்க் இருந்தால் அல்லது இருநூறு ரூபாயை என்வலோப்பில் வைத்துக்கொடுத்தால் அல்லது பூசாரிகளைக் கவனித்தால் அவ்வைக்குப்போகவிருக்கும் நெல்லிக்கனியையும் தட்டிப் பறிக்கலாம். மேடைக்கும் மாலைக்கும் ஏற்பாடு செய்து  சந்தோஷப்படலாம். முனைவர் எ. இராஜலட்சுமிபோல கேட்பாரற்ற படைப்பாளிகள் தமிழ் நாடெங்கும் இருக்கிறார்கள்.

ஆக்கமும் பெண்ணாலே

இக்கட்டுரைத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. மொத்தக் கட்டுரைகளும் பெண்படைப்பாளிகளின் படைப்புகளை முன் வைத்து எழுதப்பட்டவை, வெண்பொங்கலில் கல் சேர்ந்ததுபோல ‘இடையில் மாத்தா ஹரி’ என்ற எனது நாவலைப்பற்றிய கட்டுரை, ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சங்ககாலம் தொட்டு பெண்படைப்பாளிகளின் படைப்புகள் மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலை எங்கனம் திடப்படுத்திக்கொண்டனர் என்பதை அப்படைப்புகளைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். கட்டுரையாளர் ஒரு தமிழ்ப் பேராசிரியை, முனைவர் வீ. அரசுவின் வழ்காட்டுதலில் உருப்பெற்றவர் என்பதால்  பத்தாம் பசலித்தனமான பழங்கதை பேராசிரியர்களின் ஊசல்வாடையும் ஊத்தை நெடியும் கொண்ட சிறைச் சவ்வை வெகு எளித்தாகக் கிழித்துக்கொண்டு சங்கத்தமிழ் நவீனத் தமிழில் இரண்டிலும் சம நிலையில் கால் ஊன்ற முடிகிறது.

பொதுவாகப் பெண்கள் சமூகம் சார்ந்தும், பொருள் சார்ந்தும் பாலின வரிசையில் இரண்டாம் இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ள கொடுமை இன்று நேற்றல்ல வெகுகாலம் தொட்டு, இப்பூமியில் எல்லாப் பரப்பிலும், எல்லா ஜீவராசிகளிடமும் -( தேனிக்கள் வாழ்க!) இருக்கிறது. நான் என் மனைவியை அதிககமாக நேசிப்பதாலோ என்னவோ ஆண் சமூகம் சார்ந்து இக்குற்ற உணர்விற்கு அவ்வப்போது, (நெடுக அப்படியொரு உணவுக்கு இடம் அளிப்பதில்லை நானும் ஒரு ஆண்தானே?) ஆளாகிறேன். இதில் வாசிக்கிற உங்களிலும் சிலர் நானாக இருக்கலாம். பெண்களிடம் ‘அவ்வப்போது’ அனுசரணையாக நடந்துகொள்ளும் விழுக்காடும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வாழ்நிலையைத் துணிச்சலாக எதிர்கொள்கிற பெண்களும் இச்சமூகத்தில் குறைவு. ஆணாதிக்க சமுதாயத்தை முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது மேற்கத்திய உலகம் என நினைத்துக்கொண்டிருக்க ஆசிரியர்  நமது சங்ககால பெண்கவிஞர்களை கை காட்டுகிறார். அவர்களை (பெண்களை) ஓர் அற்ப உயிரியாக பார்த்த சமூகம், அவர்கள் விருப்பத்தையும் வெளிகளையுங்கூட கண்ணியம், கட்டுப்பாடென்ற அலகுகளால் முடக்கிவைத்த நூற்றாண்டு அது, எனினும் துணிச்சலாக “சமூகக் கட்டுபாடுகள், மரபான கருத்தாக்கங்கள், சூழல் ஆகிய அனைத்தும் இறுகிக் கிடந்தபோதும்” தங்கள் கருத்தை முன் நிறுத்த முனைந்த பெண்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் உணர முடிகிறது: பரத்தை வீடுகளுக்குச் சென்று திரும்பும் தலைவனின் நடத்தையைக் கண்டிக்கும் பாடல்; உடன்கட்டை ஏறுதலுக்கு, கைம்மை நோன்பிலுள்ள சங்கடங்களைக் காரணமாக முன் வைக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஆகியவற்றை சமூக இயக்கத்தில் இயங்கியல் ரீதியான வரையறைகளை மீறி வெளிப்படும் குரல்கள் என்கிறார் கட்டுரையாளர்..

மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியம் – புதுக்கவிதை பெண்படைப்பு வெளியை இணைக்கும் முயற்சிக்கான களத்தை சீர் படுத்துவதில் முனைகிறது. சில சங்க கால கவிதைகளோடு தற்கால கவிதைகள் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்லப்படிருக்கிறது. அதன் பிறகு சமகால பெண் கவிஞர்களின் பல்வேறு விதமான படைப்புக் குரல்களைக் கேட்கிறோம். திரிசடை (‘பனியால் பட்ட பத்து மரங்கள்), “கவிதைகள் பூராவும் தேடிப்பார்த்துடேன் ம்ஹீம்..ம்  மருந்துக்குக்கூட ஒரு யோக்கியமான ஆண்பிள்ளையைக் காணோம்” என சுஜாதாவின், சந்தோஷக் குட்டுபட்ட ரோகினியின் கவிதைத் தொகுப்பு, தேவமகளின் ‘முரண்’, இவரா,  சுபத்ரா, இளபிறை மணிமாறன், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா என்று என்று ஆரம்பித்து தி.பரமேஸ்வரி, பாலபாரதி, அழகு நிலா, தாராகணேசன், லீனா மணிமேகலை, அ. வெண்ணிலா, கனிமொழி என நீளும் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியனையும், மாலதி மைத்ரியையும் ஆசிரியர் வேண்டுமென்றே தவிர்த்ததுபோல தெரிகிறது. கட்டுரையாளர் நவீனக் கவிதைப்போக்கில் குறிப்பாக 2000த்திற்குப் பின்னர் எழுதப்படும் கவிதைகளில் அதிகம் நிறைவுகாணாதவராக இருக்கிறார். அதற்கு ஒருவகையில் இதழ்களும் பொறுப்பென்பது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

கட்டுரையாளர் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் மனதிற்கொள்ளவேண்டியவை:

1. ஆணின் சிறப்புகளை அங்கீகரிக்கும் தன்மையும், தனக்கு இன்னல் தரும்போது ஆணை விமர்சிக்கும் மனப்பாங்கும் சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன (பக்கம் -43)

2. உணர்வை மட்டுமே மையப்படுத்தி, அதற்கேற்ப மொழியை கையாண்டமையினாலேயே இன்றும் சங்கப் பாடல்கள் உயிர்ப்போடு விளங்குகின்றன. வெற்று சொற்களின் கோர்வையாக எழுதி உடனடிக் கவனத்தை கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்க்குரியவை மட்டுமன்று, ஆபத்தானந்துங்கூட. (பக்கம் 43) -பெண்கவிஞர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல, ஆண் கவிஞர்களுக்கும் உரியதுதான்.

3. ” பாலியல் தொடர்பான செய்திகளின் வெளிப்பாட்டில் எழுத்தாளன் உணர்வுகளாகவே அவற்றை அடையாளம் காணக்கூடிய ஆபத்து இருப்பதால் பலரும் இத்தலைய உணர்வுகளைத் தாமே தணிக்கை செய்துகொண்டு எழுதுகின்றனர்” (ஹரி விஜயலட்சுமி 2003:37) -தொகுப்பில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இக்கட்டுரைத் தொகுப்பு ஓர் ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது, ஆங்காங்கே தக்கச் சான்றுகளுடன், ஆழமான விவாதங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நல்ல பல கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கையாண்டிருப்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகவில்லை என்பதையும், கவிதை அழகியலில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் தெரிவிக்கின்றன.

கடைசியாக இந்நூலில் இடம்பெற்றிருந்ததொரு கவிதை:

“புதுக்கடை திறக்கு முன்
மாமா விளம்பரமளித்தார்
சுறுசுறுப்பான அழகான
விற்பனை பெண்கள் தேவை
மாமி ஆட்சேபித்தாள்
மாமா சொன்னார்
பையன் திருடுவான்
தம்மடிக்கப்போவான்
சட்டம் பேசுவான்
தனிக் கடைபோடுவான்
பொட்டை புள்ளைக
சிவனேன்னு
கொடுத்த காசுக்கு உழைக்கும்
வாரவனுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியா
கூட்டம் குறையாது
மாமா சொல்லாதது
அப்பப்ப நானும்
தொட்டுப் பார்த்துக்கலாம்”

– ‘தேவமகள் (1981:64)

—————————————————
ஆக்கமும் பெண்ணாலே

ஆசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமி

முரண்களரி பதிப்பகம்
34/25 வேதாச்சலம் தெரு, காந்தி நகர்
சின்னசேக்காடு, மணலி, சென்னை-600 068
அலைபேசி:9841374809

————————————

பின் – பின்நவீனத்துவம்

நண்பர் தமிழவனுடன் ஒரு முறை உரையாடியபோது, பொதுவில் இன்றைய தமிழ் கதையாடல்கள் மேற்கு உலகோடு இணைந்து பயணிக்கவில்லை என்றேன். கிழக்குக்கென்று (நமக்கென்று?) ஒரு மரபு, பண்பாடு, இருந்தது. எண்ணமும் சிந்தனையும் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்த காலமொன்றும் இருந்தது. இன்று பழங்கதைகளாகிவிட்டன. எஞ்சி இருப்பவற்றை விதந்தோதக்கூட மேற்கத்திய மொழிகளும் மேற்கத்திய உத்திகளும் தேவை என்கிறபோது ஒப்பீடல் தவிர்க்க முடியாததாகிறது. தமிழில் ‘புதினம்’ என்று நாம் பொருள் கொண்டிருக்கிற சொல் நாவல் (Novel) ஆங்கிலச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. பிரெஞ்சு மொழியில் அதனையே ரொமான் (‘Roman) என்கிறார்கள். இடைக்காலத்தில் மேட்டுக்குடிகள்,  கல்வியாளர்கள், மதகுருமார்களுக்குரிய மொழி லத்தீன். அதேக்காலத்தில் சாமான்ய மக்களுக்கென எழுதப்பட்டவை ‘ரொமான்’ அல்லது ‘புதினம்’. பதினாறாம் நூற்றாண்டில் வெகுசனத்திற்கென எழுதப்பட்ட ‘புதினங்களுக்கு’ இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. எதார்த்த உலகை முன்னெடுத்துச்சென்ற பாத்திரங்களைக்கொண்டு புனையப்பட்டவை அவை. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேட்டுக்குடியினரும் இணைந்துகொள்ள, பிற எழுத்துகளைப்போலவே  அறத்தைப்போதிக்கப் ‘புதினங்களுக்குப்’ பரிந்துரைக்கப்படுகிறது. வடிவமைப்பில் மாற்றங்கள் நுழைகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அண்மைக்காலம் வரை புறத்திலும் அகத்திலும் பல மாற்றங்களுக்கு மேற்கு நாடுகளில் புதினங்கள் உள்ளாயின.

எனினும் புதின உலகில் இருபதாம் நூற்றாண்டு தனித்துவம் பெற்றது: கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் படைப்பிலக்கியவாதிகள்  உலகம், சமூகத்தின் அமைப்பு, அவற்றில் மனிதர்களின் பங்களிப்பு முதலானவற்றை – எதார்த்த பார்வையில் சொல்லவேண்டுமென்கிற கோட்பாட்டுடன் இயங்கினார்கள். சார்த்துரு (Sartre), செலின்(Céline), ப்ரூஸ்டு(Proust) போன்றவர்கள் அவர்களில் சிலர். உண்மையில் இவர்களுடைய பார்வைக்கு எல்லைகற்களற்ற நிலையில், இப்படைப்பிலக்கியவாதிகளின் புதிய முயற்சிகள் எதார்த்தம் பற்றிய பொதுஅறிவைக் கேள்விக்குட்படுத்தின.  இருபதாம் நூற்றாண்டில் அடுத்து வந்தவர்கள் வேறுவகையானவர்கள். வாய் வேதாந்தத்தில் நம்பிக்கைக் கொண்ட கூட்டமிது. கற்பனையில் வாழ்ந்த உளப்பிணியாளர்கள் என அழைப்பதிலும் தவறில்லை. முன்னோடிகள் என அழைக்கப்படும் அவான் – கார்டிஸ்டுகள் (avant-gardiste) என சொல்லப்பட்ட இவர்களே மீஎதார்த்தம்,  நவீன புதினம் என்கிற le nouveau- roman முதலான வகைமைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், நிகழ்காலத்திலும் பிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறதென்பதை அறிவதற்கு முன்பாக புதினங்களின் வடிவமைப்புகளையும், அவற்றின் கட்டுமானத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

வடிவங்களைப்பொறுத்தவரை பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் அவை மூன்றுவகை:

1- மரபு வழி புதினங்கள் (The traditional novel): ‘அந்தக் காலத்திலே’, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு’ அல்லது நேற்று நடந்ததென ஆரம்பித்து கதை சொல்லலை தொடங்குவது. இறந்தகால சம்பவங்களை நிகழ்காலபடுத்துவது. இங்கே பாத்திரங்கள் நாய், பூனையாகக்கூட இருக்கலாம், அவை அறிவு ஜீவிகள். கதைசொல்லல் படர்க்கையில் அமைய எழுத்தாளன் தூண் துரும்பு எங்குமிருப்பான். மேற்கத்திய உலகைப்பொறுத்தவரை, இவ்வடிவம் அருகிவருகிறது.

2. சுய சரிதை புதினங்கள் (The autobiographical novel):  உண்மையும் புனைவும் கலந்தது – கதைசொல்லியின் வரலாறு, அனுபவங்கள், எதார்த்த உலகத்திடம் அவனுக்குள்ள முரண்கள், பிணக்குகள்.. முதலானவை தன்மையிற் வெளிப்படும். கதைசொல்லி ஆசிரியனாகவும் இருக்கலாம், துணைமாந்தர்கள் அவனுடைய உறவுகள் நண்பர்களாகவும் இருக்கக்கூடும். கடந்தகாலம், நிகழ்காலமென்று எதையும் கதைப்படுத்த முடியும். இவ்வகையான சுயசரிதை புதினங்களை ஒருவனுடைய சுயத்தைப் பேசும் எழுத்துக்கள் என்றவகையில் பிரெஞ்சு மொழியில் ‘Les écritures de soi’, என்கிறார்கள். பெரும்பாலான இன்றைய புனைவுகள் சுயசரிதைகளுக்குள் அடங்குபவை. இவற்றில் பல உட்பிரிவுகளுண்டு: சுயபுனைவு என்கிற Autofiction, புற உலகுடனான மோதலிலுறும் தனது அகவய வலிகளுக்காகப் புலம்பிக்கொண்டே, பிறர்சார்ந்த தனது வாழ்க்கையை  நியாயப்படுத்தும் சராசரி மந்தர்களைப்பற்றிய Auto mythobiographie, பிறகு நாம் பலரும் அறிந்த Curriculum vitae அவற்றுள் சில. இவற்றைப் பற்றி விரிவாக தமிழ் படைப்புலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும்.

3. கதைக்குள் கதை இதனைப் பிரெஞ்சில் ‘le Roman à tiroirs’ அன அழைக்கிறார்கள். பிரதானக் கதையாடலுக்கிடையே உபகதைகளை சேர்ப்பது. இவ்வடிவம் இந்திய மரபிற்குப் புதிதல்ல.

புனைவுகள் வடிவங்கள் அடிப்படையில் வேறுபடுவதைப்போலவே அவற்றின் கட்டுமானத்தின் அடிப்படையில் வேறுபடுத்தலாம்

1. படைப்பிலக்கிய இயக்கங்களோடு தொடர்புடையவை (Le Classicisme, le Symbolisme, le Surréalisme etc..).

2. மனக்கிளர்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளை மையயமாகக்கொண்ட ரொமாண்டிக் புதினங்கள்

3. எதார்த்தவகை புனைவுகள். நடைமுறை உலகை, கருப்பொருளாகக்கொண்டு எழுதப்படுபவை

4. கதை சொல்லலில் புதிய நுட்பங்களையும், வழமைக்கு மாறான புதிய முயறசிகளையும் மேற்கொள்ளும் ‘நவீன புதினங்கள்’ – le Nouveau- Roman..

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்- இருபத்தோராம் நூற்றாண்டில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவும் பிரெஞ்சு படைப்புலகம் வடிவத்திலும், கட்டுமானத்திலும் இறுதியாகசொல்லப்பட்ட இரண்டின் வழிமுறைகளையே தேர்வு செய்து இயங்குகின்றன. இலக்கியகோட்பாடுகளையெல்லாம் உதறிவிட்டு வடிவத்திலும் கதை சொல்லலிலும் கடந்த 30 ஆண்டுகளாக விட்டேத்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள் நுழைந்திருக்கிறார்கள்.  இவர்களில் சிலருக்கு அகவயமும், நடப்பியல் வாதமும் கூடாப்பொருட்கள். கடந்தகாலத்தில்  மானுடவியல், மொழியியல், உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இலக்கிய மாந்தர்களெல்லாம் இலக்கிய உற்பத்திகளேயன்றி படைப்புகளல்ல என்பது இவர்கள் வாதம். இங்கே கவிஞரும், மெய்யியல் அறிஞருமான போல் வலெரி கூறுவதுபோல அவான்-கார்டிஸ்டுகளின் படைப்புகள், ” காகிதக் குடல்களாலான மனித உயிரிகள்(1). இந்நிலையில் எதார்த்தம், அகவயம் பற்றிய இலக்கியங்களைப் படைக்கிறோம் என்பதெல்லாம் ஒருவித ஏமாற்றுவேலை. இவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் அடைப்புக்குறிக்குள் இயங்கவேண்டிய மொழி அதாவது அல்ஜீப்ராகணிதத்தின் சூத்திரத்தைப்போல; அதுவன்றி தன்னைப்பார்த்துக்கொள்கிற கண்ணாடியாகவும், தனக்குரிய விருப்பமான களமாகவும், நேரங்காலமின்றி எதையாவது தோண்டிகொண்டிருக்கிற தனது கட்டுமானப்பணி கேந்திரமாகவும் இலக்கியத்தை அமைத்துக்கொள்வதென்பது இவர்களின் தேர்வு, அவற்றில் கடந்தகால வரலாறுகளும் இருக்கலாம், சொந்தக் கதைகளும் இருக்கலாம். விமர்சனங்களைக் குறித்தோ, இலக்கிய சூத்திரங்களைக்குறித்தோ துளியும் அக்கரையற்றவர்களாய், செயல்படுகிறார்கள்.  வேண்டாமென்கிறபோதும் இலக்கிய விமர்சகர்கள் விடுவதாக இல்லை, இப்புதிய படைப்பிலக்கியத்தை ‘செயப்படுப்பொருள் குன்றா வினை சார்ந்தது’ (Transitive), என அழைக்கிறார்கள், அதாவது செயப்படுபொருளை அனுமதிக்கும் வினைச்சொல்லின் செயல்பாட்டுடன் இப்புதியவகை படைப்புகளைப் பொருத்துகிறார்கள்.

இப்புதிய அணியின் வரவு 1979 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை தாங்கள் ஒவ்வொருவரும் தனித்தவர், மற்றவரிடமிருந்து வேறுபட்டவரென தங்கள் இருத்தலை உறுதிசெய்தது. அலென் ரோப் கிரியே (Alain Robbe Grillet ) நத்தாலி சர்ரோத் (Nathalie Sarraute), மார்கெரித் துராஸ் (Marguerite Duras), குளோது சிமொன் (Claude Simon) ஆகியோர் அவர்களில் முக்கியமான ஒரு சிலர். இன்றைக்கு அவர்கள் கிளேசியோ (Clèzio), மிஷெல் ஹ¥ல்பெக் (Michel Houellebecq)  பத்ரிக் மொதியானோ (Patrick Modiano, மரி தியாய் (Mari Ndiaye) என வேறுபெயர்களில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இவர்களின் நூல்களை வாசித்தவர்கள் நிகழ்ந்த மாற்றத்தை உணருகிறார்கள். இப்படைப்பிலக்கியவாதிகளின் எழுத்துக்களில் முந்தைய படைப்பாளிகளின் சாயலில்லை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிரெஞ்சு படைப்புலகத்தை ஆட்டிப்படைத்திருந்த ‘சடங்கிய விதி’களைத் தளர்த்திக்கொண்டு , பதிலாக ‘தனிமனித இருப்பு, ‘குடும்பம்’ சமூக அமைவு ஆகியனவற்றினை ஊடுபாவாகக்கொண்டும், பிரெஞ்சு இலக்கிய உலகம் பாராமுகமாக இருந்த துறைகளிலும் அக்கறை காட்டுகிறார்கள். வேடிக்கை என்னவெனில் இல்லாத ஒன்றையும் இவர்களுக்கு எழுத்தாக்க முடிவது, தமிழிற் சொல்வதுபோல மணலில் கயிறு திரிக்கவும் இவர்கள் அறிந்தவர்கள். எழுத்தாளரும் விமர்சகருமான பியர் ழூர்து (Pierre Jourde), “இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே, எல்லாவகையான வரைமுறைகளையும்”, கடந்து எழுதிக்கொண்டிருக்கிறோம்”, என்கிறார். இந்திய இலக்கிய மரபை அறிந்த நமக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. படைப்புலகில் இருவகையான எழுத்துகள் இன்றுள்ளதாய் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதிலொருவகை நுட்பமும், அழகியலும் இணைந்த புனைவு; மற்றது வெகுசன இரசனைக்குரியவை. மேற்குலகைப் பொறுத்தவரை இவை இரண்டுமே கலந்ததுதான் இன்றைய இலக்கியம் என்கிறார் பியர் ழூர்து.

– நன்றி -மீண்டும் அகரம்

———————————————————————————–

1. “être aux entrailles de papier” Cd. page 14, la littérature française aujourd’hui- Dominique Viart et Bruno vercier

மொழிவது சுகம் ஜூலை -27 2013

குறவர்கள், ஜிப்ஸிகள், ழித்தான்கள்(Gitans): தென் இந்தியா  – ஐரோப்பா: ஓர் உறுத்தும் உண்மை

முழங்கால் முட்டியைத் தாண்டாத சிறுகட்டங்களிட்ட நிறமங்கிய பாவாடை, மார்புகளின் பாரத்தை மறக்க அடிவயிற்றையும், மேற்கைகளையும் கடித்து சமாளிக்கும் இரவிக்கை, வெத்திலை சாறில் ஊறி காவியேறிய மஞ்சள் பற்கள் கத்திரிவெயிலில் வேர்ப்பதும் உலர்வதுமாக இருக்கிற பின்கழுத்து, செம்பொன்நிறப் புழுதிவாடை தணியாத  கொண்டை, கடுகளவுமணிகளின் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், காவி வண்ண அலங்கார அணிவகுப்பு, தோளில் தொங்கும் தூளியில் ஈக்கள் மொய்க்கும் குழந்தை, தலைச் சும்மாடில் ஒரு கோரைப்பாய் என வருடங்கள் தோறும்  சித்தேரிக்கரையில் புளியமரங்களுக்கடியில் டால்டா டின்களுடன் வந்திறங்கும் குறத்திகள், வெக்கை சூடிய பரதேவதைகள்.

கிராமத்து நண்பணிடம் அப்போது நடத்திய உரையாடல் பசுமையாக நினைவில் இருக்கிறது. பூனையாக இருந்த நாம நாயாக அலையறோமே இது தேவையா? என்ற எனது கேள்விக்கு, ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்த அவன் பதில், நாம எப்போது பூனையாக இருந்தோம்?

அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில், படித்த நூல்களில் ஆர். எல். ஸ்டீவன்ஸன் என்று நினைவு. நூலில் பெயர் Kidnapped அல்லது The Black arrow வாக இருக்கலாம், அல்லது இரண்டுமே அல்லாத வேறொரு நூலாக இருக்கலாம், ஜிப்ஸி பெண்ணொருத்தி வருவாள். வயதான பெண்மணி என்றாலும் அவளை எனக்குப் பிடித்திருந்தது. பிறகு ‘ஷோலே’ இந்திப்படத்தில் ஜட்கா ஒட்டுகிற பெண்ணாக வந்து வளவளவென்று பேசியே கவனத்தை ஈர்க்கிற ஹேமாமாலினி உடை அலங்காரம், ஜிப்ஸிபெண் தோற்றத்தில் அத்தனை ரம்மியம், எந்தக் காரணத்திற்காக ‘ஷோலே’ படம் சக்கைபோடுபோட்டதோ எனக்குத்தெரியாது, நான் ஐந்துமுறை படத்தைப்பார்க்க ஹேமாமாலினி என்கிற ஜிப்ஸி தேவதை ஒரு காரண அருவம். அண்மையில் ஜெய்ப்பூரில், முழங்கை மறைத்த சட்டையும் கண்ணாடிச்சில்லுகள் பதித்த மஞ்சளும் அரக்குவண்ணமும் கலந்த கணுக்கால் பாவாடையும், முலைக்காம்பைக் கவ்வியிருந்த குழந்தையை பக்கத்திலிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ப்ரும்ப்ரும்ர்ர்ர்ம்.. என்று முழங்கிய மேளத்திற்கு, இராஜஸ்தானியா இந்தியா என்ற  குழப்பமானதொரு மொழியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிக்குப் பாட்டுபாடினாள்.

பிரான்சு நாட்டிற்கு 1985ல் வந்தேன். பிரான்சு நாட்டில் எல்லா நாட்டினரும், எல்லா மதத்தினரும், எல்லா நிறத்தினரும் இருக்கிறார்கள், அவர்களில் தனித்த ஒரு கூட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. கணுக்கால்வரையிலான பாவாடை, மார்புகள் புடைத்திருக்கும் சோளி, முன் தள்ளிய வயிறு, நைலான் ஸ்கார்பிற்குள் பத்திரப்படுத்தப்பட்ட தலை. இருபது முப்பது வாகனங்களில் அநேகமாக பென்ஸ், பிம்டபுள்யு, காரவான் என விலையுயர்ந்த வாகனங்களாக இருக்கும், நகராட்சி இவர்களுக்கென தண்ணீர் வசதி, மின்சாரவசதி ஏற்பாடு செய்துள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார்கள், அநேகமாக நகரத்தில் திருடு, கொள்ளை என்று நடந்தால் போலீஸ்காரர்கள் நேராக இவர்களைத்தான் தேடிவருவார்கள். பிரெஞ்சு மொழியில் இவர்களை ‘Gitanes’கள் என அழைக்கிறார்கள். இதே பெயரில் குறைந்தது மூன்று பிரெஞ்சு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. என்பங்கிற்கு ஒரு சிறுகதையை எழுதினேன். காரணம் இருக்கிறது.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த கதைபோல ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்து வந்த கதையொன்று இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு  அங்கேரி நாட்டைச்சேர்ந்த வயி இஸ்தவன் (Valyi Istvan) என்ற இளைஞர் இறையியல் படிக்க லேய்து (Leyde) பல்கலைகழகத்தில் சேருகிறார். ஊரில் அவர் குடும்பத்திற்கு பெரியதொரு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் Tsigans (Gitans) உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் நாடோடிமக்கள் வேலை செய்தார்கள். அவர்கள் பேசும் மொழிக்கும் அதே பல்கலைகழகத்தில் சகமாணவர்களாகவிருந்த மலபாரிகள் பேசிய மொழிக்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டாராம். ஆயிரம் மலபாரி சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து தனது பண்ணை ஆட்களிடம் -Tsigans- காட்டியிருக்கிறார். அவர்கள் அச்சொற்களின் பொருளை சரியாகச் சொன்னார்களாம். இப்பட்டியல் எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் ப்ரே (George Pray) என்கிற பல்கலைக்கழக ஆசாமி ஒருவரிடம் சிக்க  அவர் 1776ம் பல்கலைகழக ஜர்னல் ஒன்றில் பதிசெய்ததாக ஒரு கிளைக்கதையும் உண்டு. .

1990 ஆண்டு இயான் ஆன்கோக் (Iyan Hancock) என்ற டெக்ஸாஸ் பல்கலைக் கழக ஆசிரியர் ஒருவர், ரொமனிகளைப் பற்றி நிறைய ஆய்வு செய்தவர், ரொமானியர். ருமேனிய நாட்டில் இந்நாடோடிமக்களுக்கு ரொமானிகள் என்றுபெயர். இன்றும் ஐரோப்பாவெங்கும் பயணிக்கிற இந்நாடோடிமக்கள் (Gitans) அதிகம் வசிப்பது ருமேனிய நாட்டில்தான். இயான் ஆன்கோக், வயி இஸ்தவன் ஆய்வு செய்ய நினைத்தார். உண்மையில் அப்படி ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. லேய்டு பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். பல்கலை ஆவணங்களை ஆய்வுசெய்ததில் அப்பெயரில் எவருமே அங்கே படித்ததில்லை என்ற உண்மையைக் கண்டறிகிறார். அவ்வுண்மை தெளிவற்ற பல பதில்களுக்குக் காரணமாயிற்று. பல்கலைகழக மாணவராக இல்லாமலிருந்து அங்கு அவ்வப்போது வந்துபோனவராக இருக்கலாமென்று சிலரும், அக்கண்டுபிடிப்பே அவருடையது இல்லை என்பவர்களும் இருக்கின்றனர்.

எது எப்படியிருப்பினும் இந்நாடோடிகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பூர்வீகப்பந்தம் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடபெற்றுவருகின்றன.  மொழிவகையில் ஒற்றுமைகள் இருக்கின்றனவாம். உதராணமாக ‘சூரி’ (கத்தி), நாக் (மூக்கு) போன்ற சொற்கள் அதே பொருளில்  ரொமானி மொழியிலும் உபயோகத்தில் இருக்கிறது என்கிறார்கள். அதேபோல பீஸ் (இருபது) என்ற சொல்லும் ரொமானி மொழியில் இருக்கிறதாம். இவற்றைத் தவிர வேறு வார்த்தைள் இல்லையெனவும் நினைக்கிறேன். நான் சந்தித்த ழித்தான்கள் (நாடோடிகள்) இரண்டு மூன்று பேர் , எங்களுக்கு இந்தியா பூர்வீகமென்று கூறிவிட்டு இச்சொற்களை மட்டுமே நினைவுபடுத்துகிறார்கள். ‘ஷோலே படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள், இந்திப்படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். தவிர இந்நாடோடிமக்களில் ஒரு பிரிவினரின் பெயர் சிந்திகள்.

அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்பதற்கு ஆதாரமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவர்கள் ஓரிடத்திலும் நிலையாக இருப்பவர்களில்லை என்பதால், இந்தியாவின் வடமேற்குபகுதிகளில் குடியேறி சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போயிருக்கலாம், என்கிறார்கள். ஆனால் அரபு மொழியின் தாக்கமேதும் அவர்களிடத்தில் இல்லையென்பதால் குறுகிய காலத்திலேயே அங்கிருந்து பைஸாண்ட்டின் பேரரசு ஊடாக ஐரோப்பாவிற்குள் வந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

அங்கேரிய நாட்டு மொழியியலாளர் ஜோசெப் வெக்ரெடி (Jozef Vekredi)யின் ஆய்வுப்படி (1988) இவர்கள் குற்றபரம்பரையினரென்றும் 7ம் நூற்றாண்டில் அரசாண்ட இந்திய மன்னர்களுக்கு வேண்டாதவர்களாகிஇருக்கலாம் என்கிறார். மாறாக அமெரிக்கப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கென்னத் ப்ளாசு (Kenneth Blachut) 2005ல் வரையறுத்துள்ள முடிவின்படி, இவ்வெளியேற்றம் 6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம். கி.மு. 1500ல் தென் இந்தியாவிலிருந்து வெளியேறி (அவரது கருத்தின்படி ஆரியர்கள் இப்பிரதேசத்திற்கு வந்ததும், இவர்கள் வெளியேற்றமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாம்.) பஞ்சாபில் பலகாலம் வசித்துவிட்டு அதன் பின்னர் ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள்.

ஆன்கோக் வேறொரு கருத்தையும் முன்வைக்கிறார். கஜின்யின் படையெடுப்பால் இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவர்கருத்து. அவரால் கைது செய்யப்பட படைவீர்கள் (ஷத்திரியர்கள்) பின்னாளில் துருக்கியருடன் கலந்து ரொமானி என்ற இனத்தவ்ர்களாக மாறியிருக்கலாம் என்கிறார்.

ஆனால் இன்று Tsigans, Roms, Gypsys, Gitans என பலபெயர்களில் அழைக்கப்படும் இம்மக்கள் ஐரோப்பியர்களுக்கு வேண்டாதவர்கள். நாடற்றவர்களான இவர்கள் இரண்டாம் உலகப்போரில் யூதர்களைவிட அதிக எண்ணிக்கையில் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டபோதிலும், இவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை.அண்மையில் பிரான்சுநாட்டின் ஒரு நகரத்தின் மேயர் தனது நகரத்தில் இம்மக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதென்று சொல்லவந்தவர், ‘இட்லர் இன்னும் அதிகம்பேரைக் கொன்றிருக்கலாம், அப்படிக்கொன்றிருந்தால் நமக்கு இவர்களால் பிரச்சினகள் வந்திருக்காது’ – எனத் தெரிவிக்கப்போக, மனித உரிமைகள் அமைப்பு வழக்குபோட்டிருக்கிறது, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்ளது.

நன்றி :  Courrier International le 18 juillet 2013, Cidif
———————————————————————-

எழுத்தாளன் முகவரி -15 : தன்மைக் கூற்று கதை சொல்லல்

இன்று, ‘அம்மா இறந்திருக்கிறார்’, ஒருவேளை சம்பவம் நடந்தது நேற்றாகக் கூட இருக்கலாம். ‘அம்மா இறந்தது  இன்றா? ஒருவேளை நேற்றா? என்னிடத்தில் பதில் இல்லை. காப்பகத்திலிருந்து தந்தி வந்திருந்தது, “அம்மா இறந்துவிட்டார்கள்”, நாளை அடக்கம் – ஆழ்ந்த அனுதாபத்துடன்” என்கிற வாசகங்களில் என்ன பெரிதாய் புரிந்துகொள்ள இருக்கிறது. ஒருவேளை நேற்றுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு. முதியோர் காப்பகம் ‘அல்ஜீயஸ்’ நகரிலிருந்து 80. கி.மீ தூரத்திலிருக்கும்  ‘மராங்கோ’ வில் உள்ளது. அதிகாலை இரண்டுமணி பேருந்தைப் பிடித்தால், பிற்பகல் அங்கிருக்க முடியும், ஆதலால் ‘அடக்கத்தை’ முடித்துக்கொண்டு நாளை மாலை ஊர் திரும்பலாம். முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறேன், இதுபோன்ற காரணத்திற்கு விடுமுறையை அவரால் மறுக்க முடியாது. மனிதரிடத்தில் சந்தோஷமில்லை. ‘தவறு என்னுடையதல்ல’, என்றேன். மனிதர் வாய் திறக்கவில்லை. அப்படி சொல்லியிருக்கக்கூடாதென நினைத்தேன்.  இவ்விவகாரத்தில் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியவன் நானில்லை, அவர்.  தனது வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் அவர்தான் இருந்தார். நாளை மறுநாள் அடக்கத்திற்குப் பிறகு, துக்கச் சடங்கைக் கடைபிடிக்கிற சூழலில் என்னை சந்திக்கிறபோது தெரிவிப்பாரென நம்பலாம். இதைக் கொஞ்சம், தற்போதைக்கு அம்மா இறக்கவில்லை’  என்பதாக வைத்துக்கொள்ளலாம். அடக்கத்திற்கு பிறகு நிலமை வேறு, அது முடிந்தபோனதொரு விடயம், அவ்வளவிற்கும் உத்தியோக பூர்வமானதொரு புதிய வடிவம் கிடைத்துவிடும்.” – ‘அல்பெர் கமுய் எழுதிய ‘அந்நியன்’  நாவலின் தொடக்க வரிகள் இவை.

இவ் வரிகள் சொந்தத் தாயின் மரணச் செய்தியைக்கேட்ட, பிள்ளையின் கூற்றாக வருகின்றன. இவ்வரிகளை படர்க்கைக் கூற்றாக எழுதிப் பாருங்கள். என்ன சொல்ல முடியும் என யோசித்துப் பாருங்கள். படைப்பாசிரியனுக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே உள்ள இலட்சுமணக்கோட்டை உங்களால் உணரமுடிகிறதா? அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா? படர்க்கையில் கதைசொல்ல முற்படுகிறபோது ஆசிரியர் எதை எழுதுவார்?

– தந்தியைபடித்த கதைநாயகனின் கண்ணீரை, சிவந்த கண்களை, மூடிய இமைகளை, உதடுகளின் அதிர்வுகளை, கன்னக்கதுப்புகள், முகவாய் இரசாயண மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம் எழுதலாம்.

கதை மாந்தனின் புற உலகின் முள்வேளியை தாண்டமுடியாத ஒரு கணம் அங்கே வரும், அந்நேரத்தில் படைப்பாசிரியர், கதைநாயகனின் சமூகம் அதன் பண்புகள், மரபுகள், வழக்காறுகள், வாழ்க்கை நெறிகள் ஆகிய சட்டப்புத்தகங்களைப் புரட்டி அதன் அடிப்படையில் கதைநாயகனைப் புரிந்துகொள்ள நம்மைக் கூவி அழைப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகம், புறம் என்ற இரண்டு இயக்கங்கள் உள்ளன. புறவாழ்க்கை நமது அக உணர்வுகளைத் தண்டித்தே வாழப் பழகியிருக்கிறது, பெண் என்ற பிறப்பு ஆணுக்கென்று பழகிக்கொண்டதுபோல. அதன் சுதந்திரமெல்லாம் அடுக்க¨ளைவரை என்கிற ஆணாதிக்கத்திற்கேயுரிய அறமும், கோட்பாடும் செல்நெறியும், மனித வாழ்க்கையின் புற உலகு அரசியலோடு பெரிதும் பொருந்தக்கூடியது. இந்த அகமென்ற அடுக்களை பெண்ணை எப்படி புரிந்துகொள்வது, எளிதான வழி அவளாக வாழ்ந்து பார்ப்பது, அவளாகச் சிந்திப்பது, அவளை பேச வைப்பது, அவளை செவிமடுப்பது, அவளை செயல்படவிடுவது. அதைத்தான் தன்மைக்கூற்றில் கதை சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் செய்கிறார்கள். ‘அந்நியன்’ கதை நாயகன் என்ன சொல்கிறான் எனக் காதைக் கூர்மைப்டுத்திக் கேளுங்கள்; அச்சொற்களை மூளையின் உணர்வுதளத்தில் இசைகோர்வையை எடைபோடுவதுபோல இரசியுங்கள், அதன் துடிப்பும் சுவாசமும் சொல்லவருவதென்ன என்பது எளிதாக விளங்கும். ‘அம்மா இறந்துவிட்டாள் இன்றா நேற்றா என்றைக்கு நடந்ததென்ற ஒரு கேள்வி? தந்தி வந்திருக்கிறதே போய்த்தானே ஆகவேண்டுமென்பதுபோல பேருந்து பிடித்து அடக்கத்தில் கலந்துகொண்டு நாளை திரும்பிவிடுவேன் என, சமூக எதிர்பார்ப்பிற்கு, சமூக நியதிகளுக்காக ஒரு பதிலை வைத்திருக்கிறான். சொந்தத் தாயின் இறப்பு அவனுள் எவ்வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற ஓர்மை நாவலின் தொடக்கத்தில், ஒரு சித்தன் போல உரைப்பதில் தெளிவுபடுத்தப்படுக்கிறது. சொல்லப்படவிருக்கும் நாவலில் கதைமாந்தனின் பிரம்மாண்டமான ‘இருப்பை’ அவ்விருப்பில் ‘நாடா புழுக்களாக நெளியும்’ முரண்களுக்கு, கதைமாந்தனின் ஆரோக்கியத்தில் உள்ள பங்கை கோடிகாட்டிவிடுகிறது. வாசகன் முதல் வரியைப் படித்ததும் அதிர்ந்து போகிறான். கா·ப்காபின், ‘விசாரணை’ நாவலையும் தன்மைக் கூற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பன்மைக்கூற்றில் பொதுவாக என்ன நடக்கிறது. கதைமாந்தர்களிடையே கூடுபாய்ந்து விவரணையைகூட்ட முடியுமென்கிற பொதுவானதொரு உண்மையைத் தவிர, கிடைக்கும் பிறபலன்கள் என்ன? என்ற கேள்வியை நானும் பலமுறைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, ஆக அதற்கேற்ப ஒரு தந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாகப் பன்மைக்கூற்றில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். வேணியோ வாணியோ ஒருத்தியை கூடுதலாகவோ குறைத்தோ – பெண்னென்றால் குறைத்து என்பதற்கு சாத்தியமில்லை, எழுதுகிறோம் முதல் அத்தியாயத்தில் என்றில்லாவிட்டாலும் மூன்று அத்தியாயங்களுக்குள் கூந்தலை முடித்துக்கொண்டோ  முடியாதவளாகவோ வந்துவிடுவாள், அவள் கதை நாயகனை அலுவலகத்திலோ, பேருந்து பிடிக்கிறபோதோ சந்திக்கலாம், தற்போது கதைநாயகி ஊடாக ஆசிரியர் கதைநாயகனின் மகோன்னதங்களை எழுதுவார். படைப்பாளி ஆணாக இருந்தால் கதை நாயகனை முதலிலும், படைப்பாளி ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை முதலில் அறிமுகப் படுத்துவது நடைமுறையில் உள்ளது.

வாசகராக இருந்து இதற்குப் பதில் நேடுவோம். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரம்; நான் நிறைய வாசித்திருக்கிறேன், எனக்கு எல்லாவற்றையும் குறித்து அபிப்ராயங்கள் இருக்கின்றன, அதுபற்றி சொல்லப்போகிறேன்:. கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் நல்லது, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பிற்கோ, கொத்ஸ¤ செய்து சாப்பிடாலோ அத்தனை ருசி; அடுத்து இந்தத் திராவிடக் கட்சிகளெல்லாம் குப்பை தமிழர்களின் மூளையை பிரச்சாரமொழிக்குப் பழக்கி, வெட்கமின்றி பிறர்காலில் விழவைத்துவிட்டன; மார்க்ஸ் மூலதனம் நூல் ஓர் பழங்கதை என்று எதையாவது மூச்சுவிடாமற் பேசிக்கொண்டிருக்கலாம், பேசுவதை அல்லது நினைத்ததை எழுத படைப்பாளிக்கு பூரண உரிமை இருக்கிறது, ஆனால் வாசகனாகிய நாம் இதனைச் சகித்துக்கொள்வோமா?

சில எழுத்தாளர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும் படர்க்கையில் சொல்லப்படுகிற படைப்புகள் வெற்றி பெறாமலா இருக்கின்றன, உலகமெங்கும் நாள் தோறும், பல மொழிகளில் வரத்தான் செய்கின்றன, வாசகர்களால் வாசிக்கவும் படுகின்றன. வியாபார அளவில் போட்டமுதலை எடுக்கவே செய்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் நூலக ஆ¨ணைகிடைத்தால் போதாதா, அதை நம்பித்தானே பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் படர்க்கையில் சொல்லப்படுவது கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலவென்றும் அது வெளிப்புற காட்சிகளை படம் பிடிக்க மட்டுமே உதவும், பாத்திரங்களுக்குள் உள்ளே நுழைந்து அவர்கள் மனங்களை எடைபோட அவ்வெழுத்துக்கு இயலாது என ‘டொனால்டு ஹாமில்டன் என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறுகிரார். இவர் தீவிர இலக்கியவாதி அல்ல, குற்றபுனைவுகளையும், வட அமெரிக்காவின் மேற்குலகு மரபு கதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு நல்ல வாசகன் கங்காரு வகை எழுத்தை ( ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவும்), அதாவது படர்க்கையில் சொல்லப்படும் எழுத்தை இரசிப்பதில்லை என்கிறார். தனது எழுத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லவிரும்பும் எந்த எழுத்தாளனும் தன்மை கதைசொல்லல் வகையையே தேர்வு செய்வார்கள் என்கிறார்.  கா·ப்கா, அல்பெர் கமுய், துராஸ், பிரான்சுவா சகாங், குந்தெரா  தன்மைக்கூற்று எடுத்துரைப்பை தேர்வு செய்து, படைப்பை சாசுவதப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சங்ககால கவிதைகளிலேயே இம்மரபுக்கு வித்திடப்பட்டுள்ளது.

உண்மையைச் சொல்வதெனில் தன்மைக்கூற்று கதை சொல்லலில் சில நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெல்ல தனித் திறமையும் பயிற்சியும், ஆழ்ந்த உளவியல் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இவற்றில் எத்தனை விழுக்காடுகள் நீங்கள் தேர்ச்சி பெற்றவரோ அதற்கு நேர்மறை விகிதத்தில் உங்கள் படைப்பும் சோபிக்கும், எழுத்தும் வெற்றி பெறும். தன்மைக்கூற்று எடுத்துரைப்பில் உள்ள தலையாய பிரச்சினை விளிம்பையும் மையத்தையும் கையாளும் திறன். இத்தன்மைக் கூற்றில் ஒற்றை உயிரியை  முதன்மைப்படுத்துகிறோம் அதாவது மையம்; பிற பாத்திரங்கள் விளிம்புகள், மையக்கோளைச் சுற்றிவருபவை.  இவ்விளிம்புநிலை பாத்திரங்கள், மையத்தை நம்பி இருக்கின்றன, இவற்றின் இருப்பும் அசைவியக்கமும் மையத்தினால் தீர்மானிக்கப்பட்டவை – ஆக விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளி இம்மையத்தின் ஊடாக விளிம்புகளைப்பார்க்கிறான். ஒருவித ஒற்றை பார்வை, எதேச்சதிகார நோக்கு- எனக்கு முன்னால் நீங்கள் (விளிம்புகள்) எல்லாம் குப்பைகள் என்ற பார்வை. இச்சர்வாதிகாரபோக்கு பிறமனிதர்களை -பிற உயிரிகளை பருண்மை அற்றவைகளாக -செல்லாக் காசுகளாக மாற்றிவிடுகின்றன.

இந்த அபாயத்திலிருந்து தப்பவும், இந்த ‘உப’ பாத்திரங்களுக்கு சாப விமோசனம் தரவும் எனது நாவல்களில் அப்பாத்திரங்களுக்கு அவ்வப்போது தன்மைக்கூற்றின் குரலை இரவல் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன், இவ்வுபாயம் ஓரளவு வெற்றியையும் ஈட்டியுள்ளது.படர்க்கையில் சொல்லுகிறபோதும் எனக்கென ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவுகிறபோதும் அங்கே ஆசிரியனாகிய என்னை ஒளித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாத்திரங்களே கதையை நடத்துவதுபோல கொண்டு செல்வேன். வாசக நண்பர்களுக்கு ஒரு படர்க்கை கதை சொல்லலில் தன்மைக்கூற்று எடுத்துரைப்பிலுள்ள அத்தனை நன்மைகளையும் அளிக்க முயற்சிக்கிறேன்.

——————————————-