Category Archives: கட்டுரைகள்

பத்ரிக் மொதியானொ: நினவுகளை கலை நுட்பத்துடன் எடுத்துரைக்கக் கூடியவர்

France Nobel Literature” நோபெல் பரிசும் பிரெஞ்சு இலக்கியமும் இணைபிரியாதவை, ஏனெனில் பிரெஞ்சு இலக்கியம், நோபெல் பரிசு என்கிற ஒளிப்பிரபைக்குள் வருகிறது” -என ‘பத்ரிக் மொதியானொ’வின் பெயரை 2014ம் ஆண்டு நோபெல் இலக்கிய பரிசுக்குத் தேர்வு செய்து முடிவை அறிவித்த தினத்தில் பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். அவருடைய நாட்டின் இலக்கியபுகழ் குறித்து பெருமிதம்கொள்ள அமைச்சருக்குக் காரணங்கள் இருக்கின்றன. உலக நாடுகளில் நோபெல் பரிசை அதிகம் வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது – இது நாள்வரை பதினைந்து பரிசுகள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 1964 ஆம் ஆண்டு தமக்களிக்கப்பட்ட பரிசை ழான் போல் சார்த்துரு மறுக்கவில்லையெனில் பரிசுபெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமெனவும் பிரெஞ்சு மக்கள் தெரிவிக்கிறார்கள். ழான் போல் சார்த்ருவின் மறுப்பு நோபெல் பரிசுத் குழுவினரைச் சீண்டியதாகவும், கோபமுற்ற பரிசுக்குழுவினர் இருபது, ஆண்டுகள் பிரெஞ்சு இலக்கியவாதிகளைத் தண்டித்தத்தாகவும்(?) பேச்சு. 1985ம் ஆண்டு குளோது சிமோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்குப் பரிசினை அளித்ததின் மூலம் பிணக்கு முடிவுக்கு வந்ததாகப் பிரெஞ்சு மக்களிடையே பரவலாக எண்ணமிருக்கிறது. 2008ல் கிளேசியோவுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கிடைத்த ஆறாண்டுகள் இடைவெளியில் மற்றுமொரு பரிசு எந்பதால் பிரெஞ்சு இலக்கிய உலகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, தங்கள் எதிர்காலம் ஆரோக்கியமானதென நம்பிக்கைக்கொண்டிருக்கிறது.

” நான் எழுதிய நூல்களைக் குறித்து குழப்பமே மிஞ்சுகிறது. ஓரே ஒரு புத்தகத்தைத்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன். ( 30ம்க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன). நடப்பது அனைத்துமே உண்மை அல்லாதது போலவும், கனவில் நிகழ்வதுபோலவும்; என்னைப்போன்ற பிறிதொருவருக்கே பரிசும், புகழும் வந்தடைந்திருப்பதுபோலவும். நினைக்கத் தோன்றுகிறது. எனது பெயர், பரிசுபெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறதென்று சொன்னார்கள், ஆனால் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. நான் போற்றிய,வியந்த எழுத்தாளர்களுக்கு இணையாக நானும் வைக்கப்படுவேன் என நினைத்ததில்லை. ” -இவை, தேர்வுக்குழு தமது பெயரை அறிவித்த நாளில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கூறியவை, அவரை அறிந்தவர்களுக்கு இப்பதில் வியப்பினை அளித்திருக்க வாய்ப்பில்லை.

“பத்ரிக் மொதியானொவா, யார் அந்த ஆள்?” எனக் “தி கார்டியன்” இதழ் பத்திரிக்கையாளர் கேட்டதாக ஒரு செய்தி பிரெஞ்சு தினசரியொன்றில் வெளியாகி இருந்தது. அவர் கோபத்திற்குக் காரணம், அமெரிக்க எழுத்தாளர் ‘பிலிப் ரோத்’ திற்கு பரிசு கிடைக்காதது. இல்லை என்றானதும் கோபம் பத்ரிக் மொதியானொ மீது திரும்பியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அளவிற்கு ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் மொதியானொ நன்கறியப்டாத பெயாராம். அமெரிக்காவில் இதுவரை மோதியானாவின் மூன்று நூல்களே வந்திருப்பதாகவும் அவையும் பிற பிரெஞ்சு எழுத்தாளர்களைக்காட்டிலும் விற்பனையில் தேக்க நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நோபெல் பரிசு அக்குறையைக் களைந்து விடுமென பிரெஞ்சு இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

பத்ரிக் மொதியானொ எப்படி? பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை, நோபெல் பரிசு அளிக்காமல் இருந்திருந்தாலுங்கூட ஓர் முக்கியமான எழுத்தாளர். என்றைக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகு தங்கள் நாட்டின் அதிமுக்கியம்வாய்ந்த “கொன்க்கூர் பரிசை” அளித்தார்களோ, அன்றிலிருந்தே அவர் ஓர் முக்கிய எழுத்தாளர். பிரான்சுக்கு வந்த புதிது, பிரெஞ்சு இலக்கியத்தில் அதிகம் அக்கறை கொள்ளாத தொடக்க காலம். ஒரு நாள் இரவு ‘ஆண்ட்டென் 2′ என்ற பிரெஞ்சு சேனலின் வாரம் ஒருமுறை நடபெறும் இலக்கிய நிகழ்விற்கு பத்ரிக் மொதியானொ’ வந்திருந்தார். நல்ல உயரம், அதற்கேற்ற உடல் வாகு. நிகழ்ச்சியை நடத்திய மொழிவிற்பன்னர் ‘பெர்னார் பீவோவும் கிட்டத்தட்ட அவரைப்போலவே இருந்தார். ‘பெர்னார் பீவோ’வின் கேள்விகள் சுருக்கமாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அவற்றைப் புரிந்துகொள்வதில் சங்கடங்கள் இருந்தன. மாறாக பத்ரிக் மோதியானோவின் பதில்கள் எளிதாகப் புரிந்தன. ஒவ்வொரு பதிலையும் நிறுத்தி நிதானமாகக்கூறினார். அவருடைய பதில் நீளமாக இருந்தபோதிலும் எளிமையான சொற்களைக் கையாண்டார். ஆனால் அதைக் கூறிய விதம், அவரை முன்பின் அறிந்திராத என்னை நகைக்கச் செய்தது. பாதி வாக்கியத்தை கூறுவார், பல நொடிகளை தயக்கத்துடன் கழித்த பிறகு, மீதி வாக்கியத்திற்கு வீட்டிற்கு சொல்லியனுப்பி இருப்பதுபோலக் காத்திருப்பார், வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டவர்போல மிச்சமிருக்கும் வாக்கியம் வெளிப்படும்.. அப்பதிலும் திரும்பத் திரும்பவரும், ‘கீறல் விழுந்த இசைத்தட்டு’ போல. நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் வந்திருந்த பார்வையாளர்களுக்கும் மொதியானொவின் பதில்கள் எப்படி இருந்தனவோ தெரியாது. எனக்கு அன்று இரண்டொரு பிரெஞ்சு சொற்கள் கற்க வாய்பாக அது அமைந்தது. தொண்ணூறுகளில் இருந்துதான் பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென்று சொல்லவேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் பாடத் திட்டத்தில் நவீன இலக்கியங்களிலிருந்து சில பகுதிகளைப் பிரசுரித்து எளிமையான கேள்விகளுடன் விளக்கம் சொல்லப்பட்டிருக்கும். பல நவீன எழுத்தாளர்கள் அப்பாடநூல்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தார்கள். அவர்களில் பத்ரிக் மொதியானொ¡வும் ஒருவர். இவர்களுக்கெல்லாம் நோபெல் பரிசு கிடைக்குமென சில பெயர்கள் பிரெஞ்சு இலக்கிய உலகில் அவ்வப்போது வதந்திகளாக பரவும்: ஹூல்பெக், மரி தியய், பஸ்க்கால் கிஞ்ஞார் எனப் பெயர்கள் அடிபடும், மொதியானோவின் பெயரும் அதிலுண்டு, பட்டியலில் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ வருவார். ஒருவேளை மற்றவர்களை மொதியானொ முந்திக்கொண்டதற்கு வயது அல்லது அவரது சுவீடன் உறவு காரணமாக இருந்திருக்கலாம் என்ற வதந்தி தற்போது.

பத்ரிக் மொதியானொ¡விற்கு நோபல் பரிசினை வழங்கியிருப்பதன் மூலம் பிரெஞ்சு இலக்கிய உலகின் தனித்துவம் மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதென்றே நம்பவேண்டியிருக்கிறது. உலகிற்கு பிரெஞ்சு இலகியத்தின் பங்களிப்பைக் குறைத்து பதிப்பிடமுடியாது. எடுத்துரைப்ப்பிலும், கதைசொல்லலிலும் வடிவத்திலும் ஒரு மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுகளாக ‘Ecriture de soi’ எனப்படுகிற ‘தன்னை எழுதுதல்’ பிரெஞ்சு இலக்கிய உலகை ஆளுமை செய்கிறது. கட்டுரை, சிறுகதை, புதினம் எனும் எடுத்துரைப்பின் அனைத்துவடிவங்களிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது. மொதியானொவின் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை எழுதுதல் வகைமை சார்ந்தவை. அவருடைய கதைகள், கட்டுரைகள் நாவல்கள் அனைத்துமே அவர் வாழ்க்கையை, அவர், குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவர் சந்தித்த மனிதர்களை, அவர் குடியிருந்த வீட்டை, அந்த வீடிருந்த கட்டிடத்தை, அக்கடிதம் இருந்த வீதியைத் திரும்பத் திருப்ப அலுக்காமல் பேசுபவை. அவருடைய தன்னை எழுதலில்: சுய வரலாறும் உண்டு, சுய புனைவும் உண்டு. அவருடைய சுயபுனைவுகள் வித்தியாசமானவை, எடுத்துரைப்பில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலின்று வெற்றியும் பெற்றிர்ருக்கின்றன. கதைக் களனை அவர் பயன்படுத்திக்கொள்ளும் விதமும், எளிமையான கதைசொல்லலும், தேடலும், மொதியானோவை தனித்து அடையாளப்படுத்துகின்றன.

Un pedigree என்பது அவருடைய சுயவரலாறு, 2005ல் வெளிவந்தது. இலக்கிய விமர்சகர்களின் கருத்துப்படி அதொரு hetro-biography, auro-biography அல்ல. அதாவது தன்னை பிறனாகப் பாவித்து எழுதப்பட்ட சுயவரலாறு. இங்கே நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த: “பரிசு அறிவிப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் எனக்கல்ல, என்னைபோன்ற ஒருவருக்கு அளித்ததாகவே பார்க்கிறேன்” என்ற கூற்றை நினைவு கூர்தல் வேண்டும். பத்ரிக் மொதியானொவின் சுயவரலாறு இப்படித் தொடங்குகிறது; ” ஜூலை மாதம் 30ந்தேதி 1945ம் ஆண்டு பூலோஜ்ன் – பில்லியான்-கூர்- ல், எண்-11, மார்கரீத் சந்தில் பிறந்தேன்” காலச் சுவடு வெளிவந்திருக்கும் ‘உயிர்க்கொல்லி’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்ரிக் மொதியானொவின் சிறுகதை ‘சேன் நதியில்’ கதை சொல்லியும், மதாம் பிளாஷ் மகளான சோனியாவும் பிறந்தது பூலோஜ்ன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது, வீட்டு எண்ணை மட்டும் தவிர்த்திருக்கிறார். அவருடைய சுயவரலாற்றில், ” மொதியானோவின் தாய் நாடகபட்டறையில் பயிற்சிபெற சேர்ந்ததும், தன்னைச் (மொதியானோவை) சரியாகக் கவனிப்பதில்லை” – என்றும் வருகிறது. ‘சேன் நதி’க் கதையிலும் நாடகப் பட்டறையில் தொழில்முறை கலைஞராக பயிற்சி பெறும் சோனியா தனது மகளை கவனிப்பதில் அக்கறைகொள்வதில்லை. அதுபோலவே மொதியானொவின் சுயவரலாற்றில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வீட்டுத்தளவாடங்களை அபகரிக்க நீதிமன்ற உத்தரவுடன் அரசாங்க பிரதிநிதி வரப்போகிறார் என்றறிந்து, வீட்டுத் தளவாடங்களை இரவோடிரவாக எழுத்தாளரின் தந்தை வேறிடத்திற்கு அனுப்பியதாகக் கூறியிருப்பார், “வீடு வெறிச்சோடிக்கிடக்கும்”, என சொல்லப்பட்டிருக்கும். இக்காட்சியையும் “சேன்நதி” சிறுகதையில் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுபோலவே சுயவராற்றில், ” மூன்றாவது மாடியில் எந்நேரமும் விருந்தினர்களின் சிரிப்பும் கும்மாளமும் அமர்க்களப்படும், நாங்கள் ( மொதியானொவும் அவரது சகோதரரும்) அதைக் காதில் வாங்கியிருக்கிறோம். நாங்கள் கவனிப்பாரற்று இருக்க பக்கத்து அறையில் அவரது சினேகிதர் சினேகிதைகளுடன் அம்மா கொண்டாட்டத்தில் இருப்பார்கள்” என்பதெல்லாம் ‘உயிர்க்கொல்லித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “சேன் நதி”க்கதையில் அப்படியே இடம் பெறுகின்றன. இவ்வுண்மை அவருடைய அனைத்துப் புனைவுகளுக்கும், எடுத்துரைப்பிற்கும் பொருந்தக்கூடியது. எனவே பத்ரிக் மொதியானொ பிரெஞ்சு எழுத்தாளர்களையும் பார்க்க ஒப்பீட்டு அளவில் கூடுதலாக ‘தன்னை எழுதுதலில்’ முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர் எனத் தெரிவிக்கலாம். நோபெல் பரிசு பத்ரிக் மொதியானொவிற்குக் கிடைத்தது என்பதைவிட ‘தன்னை எழுதுதலுக்குக்’ கிடைத்தப் பரிசு எனக் கூறினால் மிகையில்லை.

1978ம் ஆண்டு மொதியானொ¡விற்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் கொன்க்கூர் பரிசு (Prix Goncourt) அவருடய “Rue des boutiques obscures”( ரோமிலுள்ள தெருவின் பெயரை நாவலின் தலைப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார் ) மொதியானொவை நெருங்கக் காரணமாயிற்று. வாசிப்புத் தேர்வுக்கு இதுபோன்ற பரிசுகளும் நமக்கு உதவுகின்றன. கொன்க்கூர் பரிசுபெறும் நாவல்களை வாங்குவதென்ற முடிவின் அடிப்படையில், பழைய புத்தகக்கடையில் பாக்கெட் நாவல் தரத்தில் வீட்டிற்கு வந்தது. இந் நாவலும் சரி இதற்கு முன்பாக வாசித்திருந்த ஒன்றிரண்டு சிறுகதைகளும் சரி பலரும் கூறுவதைப்போல மொதியானொ கடந்த காலத்தைத் தேடும் மனிதரென்பதை தெரிவிக்கின்றன. எழுத்தாளருக்கு கடந்த காலம் என்பது அவருடைய கடந்த காலம் அல்ல, அவருடன் வாழ்ந்த சக மனிதர்களின் கடந்த காலம். “பிறருடைய கடந்த காலத்தை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்கிறார்”. “Rue des boutiques obscures” நாலை ஆங்கிலத்தில்” Missing person” என்று மொழிபெயர்த்திருந்தது வியப்பை அளித்தது. பிறவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் என்னபெயர் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால் இந்த வியப்பு. கிடைக்கிற தகவல்களை வைத்து பார்க்கிறபோது மோதியானோவின் எல்லா நாவல்களுமே தொலைந்த மனிதர்களைத் தேடுபவைதான் – ‘தொலைத்த காலத்தைத் தேடும்’ மர்செல் ப்ரூஸ்டு போல.

பத்ரிக் மொதியானொவை இன்னார் என்று புரிந்துகொள்ள தமிழில் வந்துள்ள உயிர்க்கொல்லி சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘சேன் நதி ‘ என்ற ஒரு கதை போதுமானது. அவரது படைப்புகளின் பொதுப்பண்புகளாக: அவர் வாழ்க்கையிலும்அவருக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையிலும் குறுக்கிட்ட மனிதர்களின் பழைய நினைவுகளில் ஆழ்தல், அவற்றை மீட்டெடுத்தல், கையில் முகவரியை வைத்துக்கொண்டு அம் முகவரிக்குரிய நபர்களைத் தேடுதல், அவர்களின் அடையாளங்கள், மொதியானொவின் காலம் ( குறிப்பாக பாரீஸ் ஜெர்மன் ஆக்ரமிப்பிலிருந்த நாட்கள்) மொதியானொ காற்பதித்த இடங்கள் ( பாரீஸ் வீதிகள், சந்து பொந்துகள், நதிக்கரைகள், பூங்காக்கள்) இரண்டாம் உலகயுத்தம், ஜெர்மானியர் பிடியிலிருந்த பாரீஸ் நகர மக்களின் துயர வாழ்க்கை ஆகியவைத் திரும்பத் திரும்ப வருகின்றன. நோபெல் பரிசு தேர்வு முடிவை வெளியிட்ட அன்று “கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு புத்தகத்தையே திரும்பத் திரும்ப எழுதிவருவதைப் போன்ற உணர்வும் இருக்கிறது” எனப் பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கருத்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே. எனினும் நினைவுகளை துல்லியமாகவும் கலை நுட்பத்துடனும் சொல்வதில் அவர் நிகரற்ரவர்.
——

மொழிவது சுகம் : நவம்பர் 15 -2014

அ.    இரண்டு லட்சுமிகள்

 

இக்கணத்தில் இரண்டு லட்சுமிகளை நினைவுகூரவேண்டியவாக இருக்கிறேன். எனது புதிய நாவலோடு சம்பந்தப்பட்ட லட்சுமி ஒருவர், மற்றவர் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர். இரண்டு நூல்களுமே விரைவில் வர இருக்கின்றன. இரண்டுமே காலச்சுவடு சம்பந்தப்பட்டவை. ஒன்றுகாலச்சுவடு க்காக நான் எழுதியுள்ள புதிய நாவல், மற்றது காலச்சுவடின் முயற்சியால் பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் இணைந்து பணியாற்றிய மொழிபெயர்ப்பு. மூல நூலின் ஆசிரியர் அம்பை என்கிற மற்றொரு லட்சுமி.

 
உயிர்நிழல் லட்சுமி.

பிரான்சு என்றதும் பல இலக்கியவாதிகளுக்கு பாரீஸில் உள்ள லட்சுமி என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். ‘உயிர் நிழல் லட்சுமி விளம்பரமின்றி, தன்னை ஒளித்து இலக்கியபணி ஆற்றிக்கொண்டிருக்கும் பெண்மணி.  காலச்சுவடு வெளியிட உள்ள எனது நாவலுக்கு சில அத்தியாங்களில் பாத்திரங்களுக்கு ஈழத் தமிழ் சொற்கள் அவசியமாகப்பட்டன. லட்சுமி தகுதந்த ஈழத்தமிழ்ச் சொற்களை இட்டு உரையாடலுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார் நாவல் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  பேசப்படின் அவ்வெற்றியில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது.

 

அம்பை லட்சுமி

வரும் ஜனவரியில் அம்பையின் சிறுகதைகள் De Haute lutte என்ற பெயரில் ZULMA பிரெஞ்சு பதிப்பகம் கொண்டுவருகிறது. Doiminique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் நான் இணைந்து பணியாற்றியது. அம்பையின் சிறுகதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. நாளை இம்மொழி பெயர்ப்பு பேசப்படுமெனில் அம்பையின் கதைகளுக்காக மட்டுமல்ல டொமினிக் என்ற பெண்மனியின் உழைப்பிற்காவும் பேசப்படவேண்டும். டொமினிக் வித்தாலியோ மலையாளம் ஆங்கிலம் இரண்டிலிருந்தும் பல இந்திய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

 

ஆ. புதிய நூல்கள்
இவ்வருட தொடக்கத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து எனது நான்கு நூல்கள் வருகின்றன. நாவலொன்றையும் இலக்கிய கட்டுரைகளையும் காலச்சுவடு கொண்டுவருகிறது. சிறுகதைத் தொகுப்பையும் பயணக்கட்டுரைகள் தொகுப்பையும் நற்றிணை பதிப்பகம் கொண்டுவருகிறது.

நாவல் – எனது பிராஹா பயணத்தின் தாக்கம் என்று சொல்லவேண்டும், பெயர் முடிவாகவில்லை, முடிவானதும் அறிவிக்கிறேன். காலச்சுவடு வெளியிட உள்ள மற்றொரு நூலான கட்டுரை தொகுப்பின் பேயர் ‘தத்துவத்தின் சித்திர வடிவம்’. நற்றிணை வெளியிட உள்ள சிறுகதை தொகுப்பு: மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்’. பயணக்கடுரைகள் தொகுப்பிறகு ‘காப்காவின் பிராஹா – (பயணக்கட்டுரைகள்)’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்.

 
இ. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை

தமிழ்நாட்டில் பொய்யான காவலதிகாரியாக, சுங்க அதிகாரியாக, இலஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பின்னர் கைதான மனிதர்களைப்பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். இம்மனிதர்களின் தேர்வு தமிழ்நாட்டில் மேற்கண்ட சிலதுறைகளை மட்டுமே குறிவைக்கிற காரணத்தை, பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவர்கள் தண்டிக்கபட்ட வழக்குகளும் தெரிவிக்கின்றன.  மனிதர்கள் இயல்பும் தேடும் பொருளின் குணமும் இவ்வினையை எழுதுகின்றன. இதற்கான ஆதாரங்களை மனித மனங்களில்தான் தேடவேண்டும். இரு பூதவியல் விஞானிகளில் ஒருவர் ஆக்கத்திற்கும் மற்றவர் அழிவிற்கும் உதவுகிறார். எனக்குத் தெரிந்த, பிரான்சில் வாழ்ந்த ஒரு தமிழர் நல்ல வேலையில் இருக்கவேண்டியவர், தமது தொழில் நுட்ப அறிவை தவறான காரியங்களில் முதலீடு செய்து சிறைதண்டனை பெற்றார். சிலர் கள்ள நோட்டு அடிப்பதில்லையா? மனித மனங்களை வளைப்பவை அவர்களுக்கமையும் சந்தர்ப்ப சூழல்கள்தான், அதனடிப்படையில் அவர்கள் விதியைத் தீர்மானிக்கறபொறுப்பை அவர்கள் சொந்த அறிவு எடுத்துக்கொள்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு தினசரியில் வந்த செய்தியும் அப்படியொரு தேர்வை பற்றியதுதான். பிரெஞ்சு ஆசாமி குறிவைத்த துறைவேறு, நாட்டைப்பொறுத்து குற்றங்கள் தேர்வும் அமையும் போலிருக்கிறது. அவர் பாரீஸ் நகரசபையில் பணியாற்றுகிறவர், சாலை பராமரிப்பில் ஊழியம். சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது கலை இலக்கியங்கள், இசை பண்பாட்டிற்கென சேவைசெய்துவரும் அரசு வானொலியின் (France Culture) பத்திரிகையாளராக (பொய்யாக) தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பாடகர்கள், நாடக- திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர்களை நெருங்கவில்லை. பேட்டி அளித்தவர்கள் தாங்கள் பேட்டி அளித்தபின் சம்பந்தப்பட்ட வானொலியில் அந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பரப்பாகிறதா என்பதில் அக்கறை காட்டுவதில்லை. “என்னுடைய பேட்டி இதில் வருகிறது அதில் வருகிறது” என மெனக்கிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களும் இல்லை என்பதால் பேட்டிக்குப் பிறகு என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாமலேயே போயிருக்கிறது. இது தவிர பிரான்செங்கும் கலை விழாக்கள், இசைவிழாக்கள், திரைப்படவிழாக்கள் நடக்கிறபொழுது பத்திரிகையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள்போல நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்புப் பயணம் போன்ற சலுகைகளை விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்பதில்லை, சாதாரண ஓட்டல்கள், இரண்டாம் வகுப்பு பயணம் என அடக்கிவாசித்திருக்கிறார். தவிர எந்த ஏற்பாட்டாளராவது இவருடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையின் ஒரிஜினலைக் கேட்டால் நழுவி விடுவாராம். ஒரு முடிவு இருக்குமில்லையா எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும், மற்றொரு பத்திரிகையாளர் சந்தேகப்பட்டு போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்படியொரு தவறான தேடலைத் தொடங்கியது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ஆம் ஆண்டு. ஏன் அப்படி நடந்துகொண்டார்? நடச்சத்திர மனிதர்களை நெருங்குவதற்கும் அவர்களுடன் கூடுதலாக நேரத்தைச் செலவிடவும் வேறுகாரணங்கள் தனக்குக்கிடைக்கவில்லை என்கிறார்.

 
நேற்றுவரை நாம் எதைத் தேடினோமோ அதுதான் நம்மைக் கட்டமைத்திருக்கிறது. நமது ‘இன்று’ நேற்றைய தேடலால் கிடைத்தது. ஒரு கும்பலில் ஆறுமுகத்தைத் தேடினால் ஆறுமுகம்தான் கிடைப்பார், அங்கே ஆறுமுகம் இல்லையேன்றால் வெறும் கையோடு திரும்பவேண்டியதுதான். ஆறுமுகத்தைத் தேடிவிட்டு ராமசாமி கிடைக்கவில்லையே எனப்புலம்புவதால் எவ்வித பயனுமில்லை. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை என்பதொரு சொலவடையுண்டு, தான் தேடியது எதை, அல்லது தேடுவது எதை என்பதில் தெளிவு வேண்டும். ஐம்பது வயதிலும் அறுபதுவயதிலும் உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அல்லது போதாமல் மிஷெல் ஒபாமா மாதிரி மனைவி அமைந்தால், அவர் பிள்ளைகள்போல எனக்குப் பிள்ளைகள் அமைந்தால், அந்தத் தேதியில் பிறந்திருந்தால் அமெரிக்க ஜானாதிபதியாகியிருப்பேன், சூப்பர் ஸ்டாராராகி இருப்பேன் என்பதெல்லாம் அபத்தம். ஒபாமாவும், ஏ. ஆர் ரஹ்மானும் ஜெயகாந்தனும் எதைத் தேடினார்களோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நாளோ, கோளோ, மனைவியோ, சுற்றமோ நட்போ அவர்களுக்கு உச்சத்தை கொடுப்பதில்லை.
—–

நாம் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!

 

நமது பெருமைகளெல்லாம் கடந்த காலத்துக்கு உரியவைகாளாகிவிட்டன. ‘தமிழ் பேசும் நிலப்பரப்பு’ கடந்தபகுதிகளில் தமிழர் பெருமைச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதைக்குறித்த வெட்கமோ அவமானமோ நமக்கில்லை. எங்கள் ஊரில் ‘காந்தி ரெஸ்ட்டாரெண்ட்’ என்ற பெயரில் ஓர் உணவகம் இருக்கிறது அதை முதலில் நடத்திவர் ஒரு பாகிஸ்தானியர். தற்போது இலங்கையைச்சேர்ந்த தமிழ்ச் சகோதரர் ஒருவர் நடத்துகிறார். பாகிஸ்தானியர் நடத்தியபொழுது அந்த உணவு விடுதியில் மாமிச உணவு விற்கக்கூடாதென ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார். யாரென்று நினைக்கிறீர்கள்? எதிர்த்தது எந்த இந்தியரும் அல்ல (என்னையும் சேர்த்துத்தான்). நமக்கேன் வம்பு? என்ற நடுநிலையாளர்களின் குணம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அதிலும் ‘பிழைக்க வந்த இடத்தில்’ எதற்கு வம்பு என்கிற புத்தி சாதுர்யத்துடன் நாங்கள் இருக்கிறபொழுது, இதுபோன்ற கூடாத காரியங்களை எப்படி செய்வது? இந்தியர்கள் எங்களைப் பற்றி ஐரோப்பியர்கள் என்ன நினைப்பார்கள்?. ஆக இந்த அறத்தின் பேரால் நாங்கள் வாய்மூடி இருந்தோம். எதிர்ப்புத் தெரித்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர், காந்திய அபிமானி. சட்டபடி அவரால் அதை ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. ( உங்களில் சிலரைப்போலவே, எங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? என்று அந்த வெள்ளையரை விமர்சித்த இந்தியப் பெருந்தகைகள் உண்டு.) ஐரோப்பிய நாட்டர்வர்களும் அண்மைக்காலங்களில் சைவத்துக்கு மாறிவருவது உண்மையென்றாலும், இன்றளவும் 99 விழுக்காடு மக்கள் மாமிசப் பிரியர்கள்தான். உணவக உரிமையாளரான பாகிஸ்தானியருக்கு ஜின்னா என்ற பெயரைக்காட்டிலும் காந்தி என்ற பெயருக்கு வாடிக்கையாளரை ஈர்க்கும் சக்தி அதிகமென்ற ‘வணிக சாதுர்யத்தை தாண்டி வேறுகாரணங்கள் இருக்கமுடியாது.

 

கடந்த வாரத்தில் வேறொன்று நடந்தது. பிரெஞ்சு நண்பர் ஒருவர் இங்குள்ள பத்திரிகையொன்றில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவர் என்னுடன் இந்தியா வந்திருந்தார். அவர் பெயரிட்ட செய்தி ஆங்கில தினசரியொன்றில் அப்போது வந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்களாக போடும் செய்திகள் ஒருபக்கம், கவர்கொடுத்து தனதுபெயரை பத்திரிகையில் போட்டுக்கொள்வது இன்னொரு பக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக ஆங்கில தினசரியில் வந்த செய்திக்கு அவர்காரணமல்ல. அவரைவைத்து தன்னை முன்னிருத்த முனைந்த ஓர் ஆசாமியின் யுக்தி அது. பிரெஞ்சு நண்பர் புதுதில்லியில் காந்தி அருங்காட்சியகத்தில் வைத்திருந்த படங்களில், காந்தியின் கண்களை மாத்திரம் (ஓர் இருபது இருபத்தைந்து படங்கள் )எடுத்துவந்திருந்தார். இந்தியாவிலிருந்து வந்ததுமுதல் அந்த ஆங்கில தினசரியை வாரத்தில் ஒன்றிரண்டு முறை வாசிக்கிறார், குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில். அதிலும் காந்தியைப் பற்றிய செய்தியெனில் மிகவும் உன்னிப்போடு வாசிப்பார். அவர்தான் அண்மையில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். நானும் வாசித்திருந்த செய்தி அது.

 

செய்தி தெளிவாகவே இருந்தது. இருந்தும் என்னிடம் கருத்தைக் கேட்டார். தண்டிக்கபட்டத் தங்கள் தலைவரை விடுவிக்கவேண்டுமென புது தில்லியில் காந்திசிலைக்கு முன்னால், செஞ்சோற்று கடனுக்காக போராடிய சம்பந்தப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படமும் செய்தியும் சம்பந்தப்பட்ட விஷயமது. நல்லவேளை அந்த பிரெஞ்சு நண்பர் தமிழர் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. இந்தியர்கள் காந்தியை அவமதித்ததுபோல ஆகாதா? எனக்கேட்டார். அவருக்கு இப்படி சொன்னேன்:” இந்தியன் தனிநபராக இருக்கிறபோது உலகத்தில் எல்லோரையும்போல (சமாளிக்க வேறு வழி?) நல்லவன். எண்ணிக்கையில் கூடுகிறபோது தவறிழைக்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. காந்திபோன்ற தனி நபர்கள், தங்கள் தூய சிந்தனையை அழுக்கில்லாமல் பார்த்துகொண்டவர்கள். அழுக்கடைநேரும்போதும் அதை வெளுத்து உடுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது. தங்களை வேலியிட்டுக் காத்ததால், ஆடுமாடுகளின் மேய்ச்சலை தவிர்க்கமுடிந்தது. விலங்குகளின் அத்துமீறலைத் தடுத்து நீதியையும் தங்களையும் காப்பாற்ற முடிந்தது. அது மகாத்மாக்களுக்கு மட்டுமே சாத்தியம்” – என்றேன்.

 

பிற இனத்தைக் காட்டிலும் நம்மிடம் மந்தைகளாகத் திரண்டு கல்லெறியும் நாகரீகம் கூடுதலாக இருக்கிறது. தமிழ்த்துறையில் முனைவர் ஆய்வு செய்பவர்கள் இப்படியொரு தலைப்பை எடுத்துக்கொண்டு கொஞ்சம் சிங்கப்பூருக்கு, திருவனந்தபுரத்திற்கு, கல்கத்தாவிற்கு, மும்பைக்கு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யவேண்டும்- இதில் வேறொரு உண்மையும் அடங்கியிருக்கிறது கல்லெறிவதில் கூட்டமாகவும், வளர்ச்சியில்- அதாவது இந்த நூற்றாண்டின் பிழைக்கத் தெரிந்த வளர்ச்சியில் தனித்தன்மையுடனும் இயங்கும் மனோபாவம் அது. வீழ்ச்சிக்கு, உண்மைக்கு மாறான, சிற்றில் சிதைத்தலில் ஆர்வமுள்ள சிறுபிள்ளைத்தன இனமாக நாம் இருப்பது காரணம். நமது தலைவர்கள் இறைவன் கொடுத்த வரமல்ல கையூட்டின் அடிப்படையில் வாக்களித்துப்பெற்ற தலையெழுத்து.

 

பிரான்சுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஒரே ஒரு யூரோ கையூட்டாக கொடுத்த அனுபவமில்லை. அதாவது சராசரி குடிமகனுக்கு இங்கே கையூட்டுக்கொடுக்கும் அனுபவங்களுக்கு வாய்ப்பில்லை. இங்கே தலைவர்களெல்லாம் யோக்கியமாவென்றால்? இல்லை இல்லையென நூறு தரம் சத்தியம் செய்யலாம். அவர்கள் வரி ஏய்ப்பு, அன்னியச்செலவாணி, பிறநாடுகளுடனான ஒப்பந்தத்தில் கமிஷன், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்குச் சலுகைகள் என்பதுபோன்ற குற்றங்களுக்குசொந்தக்காரர்கள். Perfect crime என்று ஒன்று கிடையாது நீதிக்கு முனைப்புடன் செயல்படவேஎண்டும் அவ்வளவுதான். தமிழர்களை இருபெரும் பிரிவில் எளிதாக அடக்கிவிடலாம். தண்டிக்கபட்ட குற்றவாளிகள், தண்டிக்கப்டாத குற்றவாளிகள். ‘பிழைக்கு’ அஞ்சிய காலம்போக ‘பிழைக்கத் தெரிந்தவன்’ என பிறர்கூறக் கேட்க தேன் வந்து பாய்கிறது, நீதிகூட தமிழரல்லாத மண்ணில்தான் கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை. “நாம் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என நம்மை நாமே கேட்டுக்கொள்ளதவறினால் இது தொடர்கதையாகும். . வாழ்கத் தமிழ்! வளர்க தமிழர் பெருமை!
————————

கனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து

“ஈழத் தமிழின் நபீனக் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்” – கவிஞர் சேரன்
தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன” – கவிஞர் சுகுமாரன்

 

கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கத் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. ‘எனக்குத் தொழில் கவிதை’ அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.

‘பரிசில் வேண்டும் பாடாண் திணை’ கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ‘காதல்’ சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ”கேழ்வரகில் நெய் வடிகிறது” என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் ‘தனிமனிதன், சமூகம்’ இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் ‘சரஸ்வதி’ என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட ‘தொழுவ லட்சுமி’யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் ‘குடும்பப் பெண்’களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.

அனாரின் கவிதை மொழி

“பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வர்ணம், “எனக்குக் கவிதை முகம்” என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அன்னாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் “சோதிமிக்க நவ கவிதை’ என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, ” படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்”. கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: “நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது.” (போகும் ரயில்). “காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்” ( கருமை). “இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்” ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆனக் கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் “சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்” கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை ‘ஒரு சோறு’ பதமாக எடுத்துக்கொண்டேன்:

“…..நினைவுப் பந்தலின் கீழ்
காட்டுமல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது.”

அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:

“தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ”
…………………………….
……………………………..

” என பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்” (நிலாக் குட்டி)

 

கனவுப்பெண்

 

அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது “கனவுகள் காண ஏங்கும் கனவு நான்” (சுலைஹா); “கனவுகளின் பாளைகளில் சேரும் ‘கள்’ என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை” (குடுவையில் நிரையும் இரவு); “படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்” (மண்புழுவின் கண்); “இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்” (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); “கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்” (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); ” வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); ” முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சுயுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு”(வெறித்தபடி இருக்கும் என்கனவு).

தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுராதப் பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மா¡ர்தட்டும் அப்பெண்ணுக்குள் “கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்” கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது ‘போகும் இரயில்’ கவிதையும், ‘கருமை’ என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் ” கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்”(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.

“பெண் உடல் பூண்ட இயற்கை நான் ”

“காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்” (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)

என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. ‘ஆண்’ பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆனாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட “கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா”, என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.

ஈழ யுத்தம் குறித்து அனார்

அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் ‘மாபெரும் உணவுமேசை’ ஓர் உதாரணம்:

“சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது)
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது”

“………………………………..
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக” (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)

இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.

“நான் பாடல் எனக்குக் கவிதை முகம்”

நன்றி – காலச்சுவடு, செப்டம்பர் 2014
———————————————————————-

பிரம்மிப்பூட்டும் பிரெஞ்சு சிறுகதைகள் – க. முத்துகிருஷ்ணன்

நாகரத்திNew Imageனம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து வித்தியாசமான ஐந்து சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நவீன உத்திகளைப் பின்பற்றி இந்தச் சிறுகதைகள் அமைந்துள்ளன. காலசுவடு பதிப்பித்திருக்கிறது.

எவ்லன் காலன், பத்ரிக்மோதியானோ, மார்கெரித் துராஸ், லெ கிளேஸியோ மற்றும் அலென் ஸ்பீஸ் ஆகியோரின் சிறுகதைகள் அவை.

இந்த ஐந்து கதைகளுமே மனித மனங்களில் உறங்கிக்கிடக்கும் உள்ளுணர்வுகளை உணர்வுபூர்வமான வார்த்தைகளில் விவரித்து சொல்கின்றன. இக்கதைகளில் வரும் கதை என்ன? சொல்ல இயலாதவை, படித்து மட்டுமே சிலாகிக்ககூடியவை. மனித மனங்களின் ஊடாடும் உணர்வுகளை உள்ளது உள்ளபடி இக்கதைகள் விவரிக்கின்றன.

ஒளிரும் சிவப்பும் ஓர் நிறமே என்ற எவ்லன் காலனின் கதையில் ஒரு பெண்ணின் உள்மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் எழிலார்ந்த தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.

சேன்நதி என்ற பத்ரிக் மோதியானோவின் கதையில் தன் உதிரத் தொடர்பற்ற ஒரு குழந்தையின் பிரிவால் ஏற்படும் துயரினை உரித்து காட்டுவதோடன்றி படிப்பவர்களின் மனதில் உணர்வதிர்வலைகளை உண்டுபண்ணுகிறது.

படிப்பவர்களை முன்னிறுத்தி மனித மனம் உடல் ரீதியாக உணர்வுகள் ஓங்குதலையும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனாலும் நிலை நிறுத்தி விடுகின்ற இயல்புத் தன்மைகளை விவரிக்கிறது மார்க்கரித் துராஸ் எழுதிய உயிர்க்கொல்லி என்னும் கதை. இதுவே நூலின் தலைப்பு.

பாசத்திற்காக ஏங்கித் தவித்து ஒவ்வொரு கிளைகள் போன்ற சமூக அமைப்பினரின் பிரதிநிதிகளிடம் தஞ்சம் புகுந்து ஒரு ஆன்மீகத் தேடலையோ அதற்கும் மிஞ்சிய ஒரு சொல்லவியலாத தேடலைத் தேடி அலைகிறான் மோந்தோ என்ற அனாதைச் சிறுவன். இக்கதை லெ கிளேஸியோவால் எழுதப்பட்டுள்ளது. எதையோ தேடி அலைவது அந்த மோந்தோ சிறுவன் மட்டுமல்ல, இந்த உலகம், இந்த நாடு, இந்த மக்கள், ஏன் நாமும்கூட. மோந்தோ என்ற தலைப்பில் மிக அற்புதமான உயிர் விரவிய கதை.

ஒரு மனநலம் பாதித்தவன், மன நல காப்பகம் ஆகியன உள்ளார்ந்த வாழ்வு நிகழ்வுகளை ஏக்கமான பரிதாபக்குரலில் எடுத்துரைக்கிறது அலன் அஸ்பிஸ் எழுதிய ஏன் என்ற கதை.

ஐந்து கதைகளும் வெவ்வேறு வகையான உள்ளீடுகளை உணர்வுகள் என்ற தொனி என்கிற அஸ்திவாரங்களில் மிக எளிமையாக, மிக அருமையாக அமைகின்றன. இக்கதைகளில் உலவி வாழும் கதை மாந்தர்கள் மனம் விட்டுப் பேசுவதை படிப்பவர்களாகிய நாம் நிச்சயம் கேட்டு உணரமுடியும்.

நன்றி சிற்றேடு ஜூலை – செப்டம்பர் 2014

காஃப்காவின் பிராஹா -4

மே -10 -2014Prague 211

இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு, (கொடுத்துள்ள தலைப்பிற்கும் ) வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

Prague 131செக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 130060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.

Prague 185
நேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குரிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி?” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.

மே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது

வெல்ட்டாவா படகு சவாரி

Prague 145வெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசனையைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். Prague 151உடலை வருத்தாத வெயில், Prague 167நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. Prague 159                                            Prague 164அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: Prague 156‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா! எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம்! என நினைத்துக்கொண்டேன். நண்பர்களே! பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.Prague 193

 

Prague 132படகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. Prague 199இங்கும் வழியெங்கும் Prague 194நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்குஎதிராகக் குரல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus)  என்பவரின் நினைவுசின்னம் இருக்கிறது. Prague 201அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன்.

காஃப்கா பிறந்த வீடு

Prague 212நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா? ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா? தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். Prague 2141883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். Prague 197நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும்காஃப்காவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
———————————-

 

 

 

காஃப்காவின் பிராஹா -2

மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.

Prague 038 Prague 039 Prague 041 Prague 057

‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.

பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்

Prague 034ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.

சார்லஸ் பாலம்:

Prague 066பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. Prague 069வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).

(தொடரும்)

 

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

புலம்பெயரியத் தமிழிலக்கியம் : சில உட்பொருண்மைகள் – தமிழவன்

Tamizavan(எதிர்வரும் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் மூன்று நாட்கள்கோயம்புத்தூரில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு என்று கலந்துகொள்ளும் நிகழ்வு. அதுபற்றிய  விபரத்தினை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு இங்கு வெளியிடுகிறேன். இந்த ஆய்வுக் கட்டுரை  சிங்கப்பூரில் நவம்பர் 2011ல் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்னாள் ஆந்திர திராவிடப் பல்கலைகழக தமிழ் துறை தலைவரும், இலக்கிய விமர்சகரும், அமைப்பியல்வாதியும், பின் நவீனத்துவத்துவ முதன்மை படைப்பிலக்கியவாதியுமான முனைவர் தமிழவன் வாசித்தது, அவர் ஓப்புதலுடன் இங்கே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. )

 அறிமுகம்

தேச அமைப்புகள் உருவாகி அதன் பல்வேறு  பரிமாணங்களையும் பெறும்போது புலம்பெயர்தல் தேச அமைப்பை ஏதோ ஒருவகையில் மீறுவதாகும். உள்நாட்டுபோர், பஞ்சம் பட்டினி, அல்லது வேலையின் பொருட்டு , அல்லது சரித்திரக் காரணங்களின் (இதில் நாடுகள் சுதந்திரம் பெறுவதும் புதிய ஆட்சி ஏற்படுவதும் கூட அடங்கும்) பொருட்டுத் தேசத்தையும் பிறந்த மண்ணையும்விட்டுப் பெயர்தல் ஏற்படுகிறது.  இவ்வாறு நிலம் பெயர்ந்து வாழ்தல் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு புதிய உண்மைகளையும் உருவாக்குகிறது. இப்படி பெயர்பவர்கள் புதிய மண்ணில் வாழ்க்கையை, தமது குடும்பத்தை நிலைநாட்டும்போது புதுப்புது உணர்வுகள், மனநிலைகள், வரலாறுகள்? ஞாபகங்கள்? உலகப் போக்குகள் படைக்கப்படுகின்றன. (இவற்றை ஆங்கிலச் சொற்களாம் தங்களுக்குள் Diaspora, International, Expatriate, Exile என்று எல்லாம் பறிமாறிக்கொள்கிறார்கள் ஆய்வாளர்கள்.)

இத்தகைய புலம்பெயர் நிலைமை பற்றிய ஆய்வுகள் தமிழில் இல்லை. சமீபகால பல்கலைக் கழக ஆய்வாக மானுடவியல், அரசியல், வரலாறு, இலக்கியவியல் துறைகளில் இது மேற்கில் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்பெறுகின்றது. எனினும் புலம்பெயர் நிலைமைக்குத் தமிழ்ச்சமூகம் பல காலமாக ஆளானது என்பது உண்மை. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கும் தென் ஆப்ரிக்கா, பிஜி, மேற்கிந்திய தீவுகள், பர்மா, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதுபோல அடுத்தகட்டமாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று தென்னிந்தியாவிலிருந்தும் தமிழீழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தார்கள்.

இந்தப் புலம்பெயர் நிலைமை பற்றிய இலக்கியங்கள் இன்று போதிய அளவில் எழுதப்பட்டுள்ளன அவற்றைப் பற்றிய இந்த ஆய்வில் ஈடுபடுமுன்பு நாம் சில கருத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும். வலைப் பின்னல்களில் பொதுவாய்ப் பலராலும் பலவிதமான புரிதல்களுடன் புலம்பெயர் நிலமைசார்ந்த கருத்தாடல்கள், விவாதங்கள், வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இக்கட்டுரை இவற்றில் வெகுசில வரையறைககளையே பயன்படுத்தித் தன்கருத்தியல் உலகை முன்வைக்கிறது. பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய சர்ச்சைகள் கீழ்வரும் கருத்தாடல்களை முன்வைப்பதுண்டு.

புலம் பெயரியம் பற்றிய சர்ச்சைகள்

குவலயமாக்கம் (Globalsation) வேறு; புலம்பெயர்தல் வேறு. குவலமயமாக்கத்தில் பொருளாதார அலகுகள் (economic units) மற்றும் தொழில் நுட்பக்கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது புலம் பெயரியத்தில்ஒரு வாழ்வியக்கம் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்ற வரைவிலக்கணம் பயனுள்ளது. அதாவது ஒரு நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஞாபகம், கனவு, மீள்நினைவு (Nostalgia) பிரிவால்  மன உளைச்சல், புதிய நாடுகள் தரும் ஆசைகள், புதிய அனுபங்கள் இப்படி ஒரு கலப்பான மன எதார்த்தம் தோன்றுகிறது.

இதுபோல வேறொரு அம்சமும் தொழில்படுகிறது புதிய உலகம்  அல்லது புதிய நாடு  தனது அல்லது தனது குடும்பத்தின் எதிர்காலத்தோடு இணைக்கப்படும்போது அங்கு ஒரு மேல்-கீழ்  என்ற தாரதம்மியம் (Hierarchy) ஏற்படுகிறது. அதில் தனது புதியநாடு ஒளியாகவும் தன் பழைய நாடு அல்லது பிறப்பிடம் ஓரளவு இருளாகவும் மனதில் பதிவுறுகின்றன. தனது குழந்தைகள் ஒளிரும் நாட்டிலும் தனது தாய் தந்தை மற்றும் உறவுகள் தன் இருள் சூழ் நாட்டிலும் வாழ்வது தெரிகிறது. ஆகப் பிறப்பிடம் கடந்து போனதாகவும் வாழ்விடம் நிகழ்காலமாகவும் ஆகிறது. அதாவது காலம் தனது பரிமாணத்தைப் பழையது/புதியது என்று பிரித்து எதிரிணையைப் படைக்கிறது. நாடு இரண்டுபடுகிறது. எனவே இந்தப் புலம்பெயரியல் ஆய்வு எப்போதும் தவிர்க்கவியலாமல் இரண்டு நாடுகளின் குடிமகனைப் (Dual Citizenship) பற்றிப் பேசும் புது சிந்தனையாகிறது. இவ்வித ஆய்வு அர்ஜுன் அப்பாத்துரை போன்ற ஆய்வாளர்களுக்குக் கற்பனை (imagination)யிலிருந்து மிகவும் வேறுபாடுள்ளதல்ல. (1)

 பல சிந்தனையாளர்கள் புலம்பெயரியம் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு முன்னாலும் பின்னாலும் முகங்கொண்டு பார்க்கிற கிரேக்கத் தேவதையான ஜேனஸ் பற்றிப் பேசுவதை இங்கு நாம் நினைவுகொள்வது நம் சிந்தனைக்கு ஓர் அகில உலக முக்கியத்துவத்தைத் தரும். இந்த உருவகம் (Metaphor) ஒற்றைமுக கருத்தாக்கங்களால் நாடு கடந்த உண்மைகளைப் பேசுவதில் உள்ள கஷ்டத்தைச் சுட்டிக்காட்டும். எனவே இந்தத் துறையில் ஆய்வுகளின் முறையியல் (Methodology) கூட புதியதாக இருக்க வேண்டுமென்பது முக்கியமாகிறது.

அடுத்ததாக இடம் பற்றிய பெயர்ப்புப் (Dislocation of site) பற்றி யோசிக்கவேண்டும். அதாவது இடம், தனது முந்தைய காலத்தோடும் அதுபோல் தனது இன்றைய காலத்தோடும் முதன்முதலாகத் தொடர்கிறது. அதனால் மனித உணர்வு, அதன் வரலாறு அதன் ஞாபகம், கற்பனை முதலியன எந்த முன்மாதிரியும் அற்றதாகிறது. அதாவது முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் நாடு பெயர்ந்தவன். இது புரிதலுக்கு ஓர் இருண்மையையும் வளைவு நெளிவுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. ஒன்று இன்னொன்றோடு சதா முரண்பட்டுக்கொண்டே (perpetual contestation) இருக்கிறது. இறுகிப்போன கருத்தாங்களாய் எதையும் பார்க்கக்கூடாது.

நம் கவனத்திலிருந்து தப்பக் கூடாத இன்னொரு சிந்தனை தன்னிலைகள் (Subjectivities) பற்றியது. தன்னிலை என்பது மனித ஆன்மா அல்ல. மனிதனின்/ மனுஷியின் உள் ஆளுமை அது. அது முக்கியமாக, பொருள்மயமானதென்றனர் அமைப்பியல் சிந்தனையாளர்கள். நாம் பேசுகின்ற மொழிகளின் பொது அமைப்பால் உருவானது தன்னிலை. இந்தத் தன்னிலை எழுதப்படுகிற பிரதியில் (text) அமைந்திருக்கின்ற விதம் பற்றிய ஆய்வு புதிய உண்மைகளைப் பிரதிகளிலிருந்து நமக்குக் கொண்டுவந்து தருகின்றது.

பியர் மாஷெரி (Pierre Machery) போன்ற பிரெஞ்சு நாட்டு சிந்தனையாளர்கள் எழுத்தை ஒருவித உற்பத்தியாகப் பார்த்தனர். அதுபோல புலம்பெயர்வியல் ஆய்வாளர்கள் புலத்தில் உள்ள வாழ்வு என்பதை ஒரு கலாசார உற்பத்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது பெயர்ந்து வாழ்வது என்பது ஒரு கலாசாரத்தைவிட்டு இன்னொரு கலாசாரத்தைத் தழுவுதல் அல்ல. இரண்டு கலாசாரங்களும் முடிந்து போனவையோ, கல் போன்று இறுக்கமானவையோ அல்ல. மனிதர்கள் அந்தக் கலாசாரத்தில் உயிர்வாழும்போது அவ்விரு கலாசாரங்களும் தம்மை உற்பத்தி செய்கின்றன. அவை ஒரு செயலில் இருக்கின்றன. இது முக்கியமான காரியமாகும். இதனை நாம் புலம்பெயர்ந்தவன் எழுதும் எழுத்தில் எதிர்கொள்கிறோம். கலாசாரம் எப்படி உற்பத்தியாகிறதென்று அறிகிறோம்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள பண்புகளைப் பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய கருத்தாக்கங்களாக இன்றைய அகில உலகச் சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்தப் பின்புலப் பரிச்சயத்துடன் தமிழ்மொழியில் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம் எப்படி வடிவமைப்புக்கொண்டு  வருகிறதென்பதைப் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம்.

இக்கட்டுரை புலம் பெயர்ந்த எழுத்தாளர்களாக எஸ். பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி, மெலிஞ்சி முத்தன் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களையும் அதுபோல் காஞ்சனா தாமோதரன் என்ற அமெரிக்கா வாழ் எழுத்தாளரையும் நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பாரீஸ் வாழ் எழுத்தாளரையும் அணுக விழைகிறது. இவர்கள் அத்தனைபேரும் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய உரைநடை வடிவங்களைப் பயன்படுத்தி எழுதக்கூடியவர்கள். எனவே மிகக் குறுகிய இரண்டு இலக்கிய வடிவங்களைக் கையாளும் எழுத்தாளர்கள் – அதுவும் பரிமாணம் கொண்ட ஒரு புதிய வாழ்முறைத் தன்மையை எப்படி உருவம் பெற வைக்கிறார்கள் என்ற நோக்கில் இக்கட்டுரை ஆய்கிறது.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருநாடுகளுக்கிடையில் நடத்தும் ஒரு இருதலைக் கொள்ளிவாழ்க்கை நிலை ஏற்பட்டிருப்பது மிக மேம்போக்காக்கப் பார்ப்பவர்களுக்கே தெளிவாகும். இந்த இருவகைநாடுகளும் ஒரே தரத்தனவாக எழுத்தாளர்களிடம் இல்லை. பிறந்த நாடு என்பது ஒருவகை விதைபோல் இவர்களிடம் செயல்படுகின்றது. இங்குக் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் ஈழமும்  அதுபோல இந்தியாவின் பகுதியான தமிழ்நாடு என்ற மாநிலமும் (காஞ்சனா தாமோதரன்) பாண்டிச்சேரி மாநிலமும் (நாகரத்தினம் கிருஷ்ணா) இந்தத் தாய்பூமி (Home land) எனும் விதை நிலமாகின்றன. ஒரேவிதை இருவித நிலங்களில் வேறுபட்டு வளர்வதுபோல தாய் நிலத்தின் உறவும் ஞாபகமும் பிள்ளைப் பருவமும் சரித்திரமும் எதார்த்தமும் அது பற்றிய கனவும் அது பற்றிய படிப்பறிவும் அங்கு நடக்கும் தற்கால வாழ்வும் போராட்டமும் சமாதானமும் இன்னொரு நாட்டின் தற்சமயத்துடன் பின்னிப்பிணைகின்றன. இரு நாடுகளின் உறவும் சரளமானதோ, கொள்வினை கொடுப்பினை உறவோ, பயணி ஒருவரின் உறவோ இல்லை. ஆங்கிலத்தில் இன்று பலர் எழுதுவதுபோல (ஸல்மான் ருஷ்டி, ஷ்யாம் செல்லதுரை, நைப்பால், சிவானந்தன், ரோஹிண்டன் மிஸ்ரி முதலியோர்) அமையாமல் இரு தேசங்களில் காலூன்றி இதயத்தின் மொழியான தாய்மொழியில் எழுதும் எழுத்து  அகில உலக முக்கியத்துவமுள்ள புது மனோநிலைகளைக் கண்டுபிடிக்கும் காரியமாகும். தமிழர்கள் என்ற பழம் பெருமைகொண்டு காலம் காலமாகத் தனது பிறந்த பூமியை மறக்கமால்  அப்பூமியின் நினைவிலிருந்து தன் வாழ்வுக்கு ஒரு புது உந்துதலையும் புதுப்பொருளையும் காணும் இனம் ஒன்று நிலம் பெயர்ந்து வாழ்வில் அடையும் அனுபவம் வெறும் இலக்கியத்துறை ஆய்வுப் பொருண்மை மட்டுமல்ல. இவ்வெழுத்தாளர்கள் சென்று வாழும் நாடுகள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்றவையாதலால் இது அனைத்துலகப் பண்பு மாற்றம் பற்றிய ஆய்வில் முக்கியமான தரவாகவும் அமைகிறது. எனவே இலக்கிய வரையறைகளை மட்டும் கருத்தில் கொண்டு அத்துறையின் குணவியல்புகளுக்கு ஏற்ப மாற்றம் பற்றிய ஓர் ஆழமானதும் பொருள் பொதிந்ததுமான ஆய்வாகவே அது அமையும்.

இங்குப் பெருவாரி எழுத்தாளர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களாக இருந்தாலும் அமெரிக்காவிற்குப் பணியின் பொருட்டுப் புமபெயர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் புது இலக்கிய பரப்பும் ஆழமும் இவரை ஒரு அனைத்துலகப் புலம் பெயரிய எழுத்தாளராக (ஆனால் எழுதுவது தமிழில்) அடையாளம் காணத் தூண்டுகிறது. அதுபோலவே நாகரத்தினம் கிருஷ்ணாவும் பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சுநாட்டுக் காலனி ஒன்றின் தமிழ் எழுத்தாளராய் இன்றைய அனைத்துலகப் பரிமாணம் கொண்டு விளங்குகிறார். அனைத்துலக இலக்கிய அடையாள அள்வுகோலால் அவரை அளக்க வேண்டியதன் தேவையைத் தமிழரங்குக்குக் கொண்டு வருபவராய் தனித்து விளங்குகிறார். இவ்விருவரில் எழுத்துகள் பற்றிய சர்ச்சையோ முக்கியத்துவமோ இன்றைய தமிழிலக்கிய சூழலில் இல்லாதது இவ்விருவரின் எழுத்தின் கோட்பாட்டு அறிவு தமிழிலக்கிய சூழலில் இல்லாததால் என்றும் கூறலாம். எனவே “தமிழ்ப் புலம்பெயரியம்” ஒரு கோட்பாடாய் வடிவப்படுத்தப்படவும் அதை ஒரு பொது இலக்கிய விவாதத்திற்குக் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்துவதும் இன்றைய தமிழின் நிலையை அனைத்துலக மட்டத்திற்குக் கொண்டுவருவதும் ஒன்று இன்னொன்றோடு பிணைந்ததாகும். இவ்விரு படைப்பாளிகளில் காஞ்சனா அவர்கள்(2) எதார்த்த இலக்கிய நடை மூலம் உச்சமான இடங்களைத் தொடுவதும் கிருஷ்ணா பன்மைக் கதையாடல் ( Multilevel Narration) மூலம் தன் நாவலைத் தொடங்கி மேலெடுத்துச் செல்வதும் காணக்கூடியதாகும்(3). அ. முத்துலிங்கம்(கனடா) நாவல் (பார்க்க முன்னுரை) என்று அழைத்து ஒருவித கதைக் கோர்வையை உண்மைகலந்த நாட்குறிப்புகள்  என்ற பெயரில் தந்துள்ளார்(4). எஸ்பொ. அவர்கள் (ஆஸ்திரேலியா) மாயினி என்ற நாவலாய் ஒரு இலங்கை சரித்திரத்தை மறுவரைவு செய்கிறார்(5). ஷோபாசக்தி தனது நாவல் மூலம் இலங்கையின் தமிழ்ப்போரை உள்ளடக்கமாக்குகிறார்(6) கருணாமூர்த்தி பல்வித வடிவங்களில் ஈழத்தையும் தமிழகத்தையும் பெருவாரியாய் எழுதுகிறார்(7) மெலிஞ்சிமுத்தன் என்ற எழுத்தாளர் தான் கண்ட புது உலகையும் ஈழத்தையும் கதை என்னும் புது அறிதலாய் மாற்றுகிறார்(8). இங்கு குறிப்பிட்ட இவர்களின் எழுத்துகள் இக்கட்டுரையில் பல்வேறு உட்பொருண்மைகளாய் ஆயப்படுகின்றன.

இங்கே குறிப்பிட்ட ஆசிரியர்களை மையமாக்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு மேலே சென்று கற்றல்(study) மேற்கொள்வதும் தேவை இல்லை. எஸ்.பொ. அவர்கள் பிறந்து தன்னாளுமையை உருவாக்கிய நாட்டில் இருக்கும்போதே பல படைப்பாக்கங்களுக்கு ஆசிரியர். அவரே பிற்காலத்தில் வேறொருநாடு சென்று எழுதும்போது அப்படைப்பு எவ்வாறு புலம்பெயரிய படைப்பாகுமென்று சிலர் கேட்கலாம். இங்கு மாயினி நாவலின் சிறப்பு ஒன்றைச் சுட்டலாம். மிகை எளிமைக்குட்பட்ட கதைசொல்லல் முறை இருந்தாலும் இன்றைய பின் நவீனத்துவ அகில உலகக் கதை உத்தியைத் தமிழில் உள்ளிருந்தே மாயினி என்ற பிரதி பெற்றுள்ளது. அதாவது வெளியில் இப்படியொரு உத்தி இருக்கிறதென்று தேடிச்சென்று அதைக் கற்காமலேயே தன் புலம்பெயர் ஆதங்கத்திலிருந்து (Expatriate anxiety) உள்முகமாகத் தன் கதைச்சொல்லல் உத்தியை நிறுவியுள்ளது இந்த நாவல். இலங்கையின் சிங்கள ஆட்சி குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் கதையைப் பிரதியாக்கம் (textualize) செய்கிறது மாயினி. இது போலவே ஏற்கனவே தமிழ் எழுத்தாளராய் ஈழத்தில் வாழ்ந்த அ.முத்துலிங்கம் உண்மை கலந்த நாட்குறிப்புகள்மேற்கொள்ளும் பிரதியாக்க முறை அதனைப் புலம்பெயர் நுட்ப உணர்வுகளை உள்வாங்கிய ஒரு பிரதியாய்க் கருத வைக்கிறது. அந்நாவல் வேறு நாவல்கள் போன்று எழுதப்பட்டதல்ல . நாற்பத்தாறு இயல்களும் நாற்பத்தாறு அனுபவங்கள்போல தொகுக்கப்பட்டவையாகும். நாற்பத்தாறு இயல்களும் ஒரு நபர் (அதாவது அது முத்துலிங்கமா?) அனுபவமாய் வருகின்றன. நாவலில் கதைசொல்லியின் அனுபவம் வேறு; எழ்துபவரின் அனுபவம் வேறு. நாவல் என்று அழைக்கப்படும் இந்த நூலும் சுய அனுபவங்களைத் தாண்டி இன்னொருவராய் எழுதுபவரைக் காட்டக்கூடிய தொனிகளுடன் பல இயல்களை அமைத்திருக்கிறது. உதாரணமாய் இயல் 41இல் அமைந்துள்ள கதையில் கதைசொல்லி (ஆசிரியனல்ல) ஒரு பாலஸ்தீனியரை முதன்முதலாய் சந்திக்கும் செய்தி வருகிறது. கற்பனையும் உண்மையும் சேர்ந்து எழுதப்பட்ட நாட்க்குறிப்புபோன்ற  இந்த நூல்  பாலஸ்தீனியரை ஒரு கற்பனையாகவும் படைக்கமுடியும். இந்தச் சாத்தியப்பாடு நாட்குறிப்புபோன்று கட்டமைக்கப்பட்ட பிரதியை நாட்குறிப்பின் உண்மைத்துவத்திலிருந்து நாவலின் கற்பனைக்குள் கொண்டு செலுத்துகிறது. இந்த உண்மை/ கற்பனைதான்  தேசக்கற்பனையின் தோற்றுவாய் என்கின்றனர் பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றோர்(9).

மற்ற எழுத்தாளர்களின் உந்துதல் நிலம் பெயர்ந்த வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்கனவே எதுவாக இருந்தார்களோ அதற்குமான முரணினிலிருந்து தோன்றியவை எனலாம். எழுத்தாளுமை நிலம் பெயரியக்கத்திலிருந்து  இங்கு முகிழ்க்கிறது. இதில் பல்வேறுவகை மாதிரிகளை ஒவ்வொரு எழுத்தாளரும் முன் வைக்கிறார்கள்.

 எழுத்தாளுமை – பல்வேறுவகை மாதிரிகள்

பொ.கருணாகரமூர்த்தி, மெலிஞ்சி முத்தன், ஷோபா சக்தி போன்றோரிடத்தில் தாங்கள் பிறந்த நாடுகள் பற்றிய கதைகளே தங்கள் கதைகளாக வெளிப்படுகின்றன. கருணாகரமூர்த்தியின் கதையாகிய சிநேகிதனைத் தொலைத்தவன்என்ற கதையில் பாலசந்திரன் என்ற பழைய நண்பனைத் தேடிக்கொண்டுவரும் கதைசொல்லி தனது பள்ளிக்கால நண்பனைக் கண்டு பிடிக்கறதில் பெரிய மகிழ்ச்சி அடைகிறான். கடைசியாகப் பாலச்ந்திரனைக் கண்டு இளம்வயதில் இருவரும் கழித்த நாட்களை நினைவூட்டும் கதைசொல்லியை நோக்கிப் பாலசந்திரன் தனக்கு யுத்தத்தில் இடப்பெயர்வு ஏற்பட்டதாலும் யுத்தத்தின் விளைவாலும் ஞாபகமறதி அடிக்கடி ஏற்படுவதைக் கூறி தன் வாழ்வின் துயரை மறைமுகமாய் தெரிவிக்கிறான். கதைசொல்லி ஜெர்மனியிலிருந்து வந்து தனது நாட்களைப் பழைய ஞாபகத்தில் திளைக்கவிட்டுத் திரும்ப நினைக்கயில் யார் மச்சான் நீஎன ஒரு கேள்வியைப் போடுகிறான் பாலசந்திரன்.

மெலிஞ்சி முத்தனின் ஒரு கதையின் பெயர் பனி மூடிய நதி‘  என்பது. வெளிநாட்டில் நடந்து திரிகிற கதைச்சொல்லி தான் எதற்கு வீட்டிற்குப் போகவேண்டும் என்று யோசிக்கிறான். நிலம் முழுக்க பனி கொட்டி வெள்ளை வெளீரெண்டு கிடக்கேக்க ஏதோ ஒரு பிரச்சினையுமில்லாத வெள்ளை உலகத்தில் நடந்து திரிகிற உணர்வு தான் எனக்குள வருதுஎன்று கூறும் கதைச்சொல்லி தன் கிராமத்தை நினைக்கிறான். பள்ளிக்கூட நாட்களில் அவனும் அம்மய்யாவும் சேர்ந்து காணி துப்புரவாக்கியதும் அவர் ஆசீர்வதித்துத் தந்த உப்பை மோட்டுவளையில் கட்டியதும் ஞாபகம் வருகிறது. சிவன் கோயிலடியில் ஆமிஇறங்கி வாறான் என்று கேட்டு இடம் பெயர்கிறார்கள். கடைசியில் அம்மய்யாவின் மனப்பிறழ்வுடன் தன் வாழ்க்கையும் ஒரு மனப்பிறழ்வுதான் என ஞாபகம் கொண்டு கதை முடிகிறது.

ஷோபாசக்தியின் லைலாஎன்ற கதையும் தனது நாட்டைப்பற்றிய ஞாபகத்தில் புனையப்பட்ட ஒரு கதைதான். இந்தக் கதையானது கதைசொல்லியின் புலம் பெயர் வாழ்க்கையைப் பற்றிக்கூறிவிட்டு ஈழ போராட்ட குழுக்களில் இருந்த ஒரு பெண் பற்றிய கதையைச் சொல்கிறது. “பிரான்சில் ஆப்ரிக்கர்களும் அரபுக்களும் சிந்திரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்துவாழும் பகுதியில் ” கதைச்சொல்லி பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி சுத்திகரிக்க ஆசைப்படும்பொரு நபராய் வாழ்கிறான். அவன் வாழ்வது பதின்மூன்று மாடிகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. கதைசொல்லி ஒருநாள் வெள்ளை நாயுடன் ஒரு பெண்னை லிப்டில் பார்க்கிறான். பின்பு அவள் முன்பு ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவள் என்று கதை விரிவடைகிறது. கதை முடியும்போது இறந்து இரண்டு மூன்று நாள் ஆன பிணத்தைப் போலீஸ்வந்து எடுத்து செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு பாரிஸில் நடக்கும் ஒரு போராட்டத்தில் பிரபாகரன் படத்துடன் பிரஞ்சு மொழியில் உரக்க முழங்குகிறாள் அப்பெண். போராட்ட இயக்கம் பற்றிய கதாசிரியனின் நுட்பமான கிண்டல் வெளிப்பட எழுதப்பட்ட கதை இது. இக்கதை புலம்பெயர் எழுத்துகள் ஒரு பார்வை உடையன அல்ல என்பதை விளக்குவதுபோல் எழுதப்பட்டுள்ளது(10).

இதுபோன்று பல கதைகளாகக் கொண்டு வந்து பல மலர்களால் கட்டப்பட்ட மாலைபோல் அமைக்கப்பட்ட புத்தகமான உண்மை கலந்த நாட்குறிப்பில்ஒரு கதை எழுத்தாளரின் / கதை சொல்லியின் தந்தை சொன்ன ஒரு வாசகத்தை மையமாக்குகிறது. இலங்கையில் மவுண்லவினியா என்ற, கொழும்புவிற்குச் சற்று தூரத்தில் இருந்த ஊரில் 1958ம் ஆம் ஆண்டு மே மாதம் பண்டாரா நாயக்கா தனிச் சிங்களம் சட்டத்தைக் கொண்டு வந்ததால் அதனைத் தமிழர்கள் எதிர்த்த போது நடந்த கலவரத்தில் கதை சொல்லியின் குடும்பத்தை ஒரு சிங்கள்வர் பாதுகாக்கிறார். பின்பு கதைசொல்லியின் குடும்பம் அகதி முகாமுக்குப் போகிறது. சிறுவனான கதைசொல்லிக்குக் கிடைத்த நான்குபேர் நுழையக்கூடிய பெரிய சட்டையுடன் முகாமில் தஞ்சமடைகிறான். பின்பு நாலுநாள் கப்பல் பயணம் செய்து “தங்கள் தேசத்துக்குச்” (யாழ்ப்பாணம்) செல்கிறார்கள். கதை சொல்லி தான் அகதிமுகாமுக்கு விரட்டப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட ராபின்சன் குருசோ நாவலைக் கப்பல் சத்தத்துக்கிடையே படித்தபடி இருக்கிறான். குருசோ தனியாய் தாஅள் இல்லாத தீவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவன். மீண்டும் கதை சொல்லி கொழும்புபோகப் புறப்படுகையில் அவரது தந்தை ஒருதடவை அடித்து ருசிகண்டவன் திரும்பவும் அடிப்பான். இது பாதுகாப்பான நாடு இதை யாரும் பறிக்கமுடியாது என்கிறார் யாழ்ப்பாணம் பற்றி.  கதை கேர்ணல் கிட்டு விளக்கத்துடன் முடிகிறது. கதையின் தலைப்பு “ஐயா சொன்னது” .

இங்குக் குறிப்பிடப்பட்ட நான்குவித கதையுண்மைகளிலும் பல்விதமான கருத்தம்சங்கள் பின்னியுள்ளன. “சிநேகிதனைத் தொலைத்தவன் கதையில் ஞாபகம் பற்றிய உள்ளடக்கத்தோடு புலம்/பிறப்பிடம் என்ற எதிரிணை தொடர்பு கொள்கிறது பிறப்பிடத்தின் யுத்தம் பின்னணிக் கரு ஆகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை புலத்தில் ஏற்படும் நினைவுப்பிறழ்வுடன் பிறப்பிடத்தின் கொடூர யுத்தத்தால் ஏற்படும் அம்மபய்யனின் நினைவுப் பிறழ்வுடன் சம்பந்தப்படுகிறது. “லைலா” கதை இன்னும் சுவாரஸ்யமாய் யுத்தத்தில் (ஓர் இயக்க செயல் பாட்டாளியாய் இருந்ததால்) இலங்கை நாயகி தன் அழிவை உள்ளேற்று ஒரு நாள் பாரிஸின் ஒரு மூலையில் கதைசொல்லியின் கேலிக்குள்ளாகிப் பிணமாய் நாறுகிறாள். முத்துலிங்கம் கதையில் கதைசொல்லியின் ஞாபகத்தில் ஐயா சொன்ன வாக்கியம் அடிப்பதில் ருசிகண்டவன் நிறுத்தமாட்டான் என்பது தனது தாயக நினைவாகிறது. எல்லா கதைகளிலும் (ஜெர்மனி-ஈழம்; கனடா-ஈழம்; பிரான்சு-ஈழம்) இரு நாடுகளுக்கு மத்தியில் அலைபடும் நினைவு-நினைவினமை, உடல்(புலத்தில்) – உயிர் (ஈழத்தில்) என்ற இரு முக மன முரணில் (Tension) ஏற்படும் பலவித இழைகள் கதையாடலாகின்றன. கோட்பாட்டளவில் அறிஞர்கள் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் மனமுறுகல், உரையாடல் தீர்வுகள் (Negotiation) என்று விவரணப் படுத்தப்படும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களில் எவ்வாறு இன்னும் ஆழம் பெறுகின்றன என்பதை இந்த நான்கு கதைகளை உதாரணமாய் வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

வேறுபட்ட புலம் பெயரியம்

புலம்பெயரிய இலக்கியம் (Diaspora or Transnational Literature) என்று தமிழ்ச்சூழலில் வழக்கமாய் பேசும்போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்துக்களை மட்டுமே மனத்தில்வைத்து எழுதுகிறார்கள். இன்றைய தமிழ் எழுத்துச் சூழல் மிகவும் ஆழமானதாகவும் அகலமானதாகவும் உள்ளது. தமிழ்த்துறைகள் பழைய இலக்கியங்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்தும் தற்கால இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து செயல்படுவதால் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் பற்றிய அறிமுகம் இல்லாதிருக்கும் சூழலில் இரண்டு முக்கியமான புலம்பெயர் எழுத்தாளர்கள் காஞ்சனா தாமோதரன் மற்றும் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவர்.

இவ்விருவரும் முற்றிலும் வேறுபட்ட புலம்பெயர் அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தின் கலாசார மற்றும் எழுத்துச்சூழலைப் பெரும்பாலும் உள்வாங்காமல் புலம்பெயர்ந்தபின்பு ஏற்பட்ட பன்முக உந்துதலில் இருந்து இலக்கியத்தை ஒரு வாழ்நிலைச் சட்டகமாய் (Life Paradigm) இயல்பில் கண்டிருப்பவர்கள். இது இவர்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்று தருகிறது. ஈழத்தவர்களின் புலம்பெயரியம் வேறு, இவர்களின் புலம்பெயரியம் வேறு என்று சொல்லுமளவிற்கு இவர்களின் எழுத்துக்களின் தத்துவ பின்னணி மாறுபட்டதாகவுள்ளது.

முதலில் இவ்விருவரின் புனைகதைகளின் ஒட்டுமொத்த வடிவமைப்பே வித்தியாசமாகவுள்ளது. காஞ்சனா அவர்களின் “மரகதத்தீவு” என்ற கதைத் தொகுப்பும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஒரு நாவலும் (மாத்தா ஹரி) இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்களின் புலம்பெயர்க் காரணமும் வேறு. தாயகத்தில் எந்த இனயுத்தமுமில்லை. இவ்வாறு முற்றிலும் வேறான புலம்பெயரியம் இவர்களின் வாழ்விலும் எழுத்திலும் காணப்படுவதை மறக்காமல் இவர்கள் எழுத்துக்களைப் பார்க்கவேண்டும். இலக்கியம் என்பது எழுதப்பட்ட பிரதி(written text) மாத்திரமே என்ற நிலைபாட்டை புலம்பெயரிய ஆய்வாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும். இலக்கியத்தையும் வாழ்வையும் சேர்த்து ஒரு பிரதியாகக் கருதி அணுக வேண்டும். இலக்கியம் எழுத்துக்கு வெளியில் வந்து பரவுகிறது. வாழ்வால் அது ஒரு புதுத் தன்மை அடைகிறது. அது ஒரு நிகழ்த்தலாகிறது.

மரகதத்தீவு” தொகுப்பில் புலம் எவ்வாறு கட்டமைக்கபடுகிறது? அத்தொகுப்பின் ஐந்து நீண்ட கதைகளும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்து ஆவணமாகத் தெரிகின்றன. “மரகதத் தீவு” என்ற 42 பக்கக் கதையும் ஒரு மிக வித்தியாசமான கதைசொல்லலை அறிமுகப்படுத்துகின்றன. கெல்லி என்ற இளம்பெண் அமெரிக்காவுக்கு அயர்லாந்திலிருந்து  வந்து குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்து பிறந்தவள். அவள் கீழ்நிலைப் படிப்பை முடித்துவிட்டுப் பல்கலைக்கழகத்துக்குப் போகையில் தந்தை வாங்கிக்கொடுத்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி அயர்லாந்து செல்கிறாள். அந்த  மண்ணையும் தன் தந்தையின் குடும்பத்தையும் முதன்முதலில் பார்க்கும் பரவசய்த்தையும் அங்கு அவள் கண்டு லேசாகக் காதல் கொண்ட இளைஞனை மீண்டும் அமெரிக்காவில் காண்பதையும் கதை கூறுகிறது.

அடுத்த கதையான கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியில் வாழ்ந்த க்யூபர்களைப் பற்றியது. ஒபாமாவுக்கு ஓட்டுப்போடும் தலைமுறையைச் சார்ந்த கூப இளைஞர்களும் இளம்பெண்களும் பிறந்த பிறகு மீண்டும் புரத்ட்சிகர க்யூபாவைத் தேடிச்செல்லும் க்யூபர்களையும் படம் பிடிக்கிறது கதை. அவர்களின் பழக்க வழக்கங்கள், சாப்பாடு; நம்பிக்கை, ஆட்டம் பாத்தம் என எல்லாம் மிகத் துல்லியமாய்ச் சொல்லுகிற கதை.

 இந்த இரு கதைகளையும் சொல்வதற்குக் காஞ்சனா இரு புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் கதை வேறொரு களத்தில் புலம்பெயர்த் தத்துவத்தோடு பயணிக்கிறது. தமிழிலக்கியத்தில் ஒரு புது -இதுவரை இல்லாத அம்சத்தைத் தொட்டு ஒரு உயரத்தை எட்டுகிறது. கதை சொல்லிகளான இந்தப் பிரத்தியேகமான பாத்திரங்கள் மூலம் காஞ்சனாவும் தமிழ்க் கலாசாரத்தின் புலம்பெயர் அம்சம் பற்றிய வேறொரு விஷயத்தை நம் முன் வைக்கிறார். ஒரு எழுத்தாளர் தன் வாழ்விலிருந்து தன் மொழிக்குள் ஒரு பிரத்திதேக வழிப்பயனத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் புலன் அனுபவத்திற்குள் தன்னைப்போன்று இன்னும் சிலகாலத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்தவர்களின் உகலத்துக்குள் அவர்களிடமிருந்து வந்த ஒரு கதைசொல்லியின் மூலம் புகுகிறார். தமிழ் என்பது ஓர் உலகளாவியப் பரந்த வேர்ப்பற்றைக்கொண்டதென  சொல்லாமல் சொல்லும் கதைசொல்லலாகிறது. வெறும் எதார்த்த நடையில் புனையப்ட்ட இக்கதைகள் கண்ணுகுத் தெரியாத ஆழமான அர்த்தங்களைப் படைக்க வல்லனாவாகின்றன. இவ்விரு வந்தேறி சமூக இளஞர்களாய், காஞ்சனாவின் உள்ளே இருக்கும் தமிழ்க்குணம் பரிவர்த்தனை அடைகிறது. தமிழ் என்பது குறுகியதல்ல. அகில உலகத்தின் மூலை முடுக்குகளிலுள்ள தாய் நிலத்துக்குத் தமிழனின் தாய்நிலைப்பற்று இட்டுச்செல்லும்  என்று கதையமைப்பு மூலம் புரியவைக்கிறார். இதில் உள்ள ஆச்சரியம் கதை எந்தக் கருத்தையும் வலியுறுத்தவில்லை. கதையின் அமைப்பே வாசகனுடன் பேசுகிறது.

மாத்தா ஹரி” என்ற நாவலின் புனைவும் ஒரு முக கதைச்சொல்லலைப் பல்வேறு தளங்களில் நகர்த்துகிறது. ஒரு தளத்தில் மாத்தா ஹரி என்ற பெயரில் அக்காலத்தில் பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளில் பேசப்பட்ட ஒரு பெண்ணைப்பற்றி விளக்குவதும் இந்த நாவலின் கதாநாயகியான பவானி என்ற வழக்கறிஞர் பெண்மணியை மாத்தா ஹரியுடன் இன்னொரு தளத்தில் ஒப்பிடுவதும் நாவல் கதைக்கு வேறு பொருள்களைத் தருகின்றன.

இந்த நாவலின் புனைவுவழியாக பல நபர்கள் பேசுகிறார்கள்; கிழக்கத்தியர் பேசுகிறார்கள்; மேற்கத்தியர்கள் பேசுகிறார்கள்; மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் பேசுகிறார்கள்; பல்வேறு காலங்கள் பிரதிக்குள் நுழைந்து பேசுகின்றன. புலம் என்பது ஒரு பெரிய வாசல்போல் திறக்கப் பல அறைகள் உள்ளே இருப்பது தெரிகிறது. ஓரிடத்தில் நாவலாசிரியனும் ஒரு பாத்திரம்போல் நாவலின் பிரதியியல் வெளியில் (textual space) நுழைந்து இப்படி சொல்கிறான்.

பவானி நீ இன்னுமா இங்கே இருக்கிறாய்? போகவில்லை?

….இது நான் கேட்கவேண்டிய கேள்வி. அகால நேரத்தில் இப்படி எழுந்து உட்கார்ந்துகொண்டு..

வேண்டுமானால் இன்னொருமுறை படித்துபார்க்கிறாயா? நீ நினைக்கிறமாதிரிதான் மாத்தா ஹரியைப் பத்தி சொல்றதான்னு குழம்பிப்போறேன்.”

இந்த இடத்தில் இருநாடுகளின் சரித்திரங்கள், கதை சொல்முறைகள், ஒரு நாட்டின் காலனியம், அதுபோல் காலனியத்திலிருந்து விடுபட்டாலும் அதன் ஞாபகத்திலிருந்து விடுபடாமை, காலனியத்தின் ஆச்சரியங்கள் , ஏமாற்றங்கள், குற்றங்கள், மன்னிப்புகள் எல்லாம் கதையின் இழைகளாய் ஆகின்றன. இரண்டு தேசங்கள் வெறு வரை படங்களல்ல. அடுத்த தலைமுறையான ஹரிணி (பவானியின் மகள்) கதையை இழுத்துக்கொண்டு பல்வேறுநபர்களை ஒருமுனைபடுத்தியபடி பாரீஸில் அலைகிறாள். நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் மாறுபட்ட புலம்பெயர் இலக்கியம் உருவாவதை இங்கு அறிகிறோம். புனைவை ஒரு அந்நியப்பெண்ணின் பெயரில் மையப்படுத்தி நாவல் அவள் பெயரான மாத்தா ஹரியைத் தலிழுலகுக்குப் பறை சாற்றுகிறது. காஞ்சனாவின் புலம்பெயரியம் ஒருவிதமென்றால் இருநாடுகளை ஊடாடவிட்டுக் கதையமைப்பைக்கொண்டு வந்த நா.கிருஷ்ணா இன்றும் ஒரு காலை பாரீஸிலும் இன்னொரு காலை புதுச்சேரியிலும் ஊன்றியுள்ள தமிழினக் கதையாடலைத் தருகிறார்.

காஞ்சனா தன் கதையாடலை ஓர் உலகப் பொது ஓர்மையோடு (எல்லோரும் வந்தேறிகள்) இணைக்கிறார். தன்னதிலிருந்து பிறத்தியாரை நோக்கிய அக்கறை அங்கு முகிழ்க்கிறது ஆனால் நா.கிருஷ்ணாவிடம் தனதும் பிறரதும் பின்னிப் பிணைந்திருக்கும்  எதார்த்தத்தின் பல்வேறு கண்ணிகள் முடிச்சவிழ்ப்பதற்காய் வேண்டுகோள் விடுக்கின்றன. புலம்பெயரியம் எவ்வளவு வேறுபட்ட உலகத்தையெல்லாம் திறந்து விடுகின்றது என்று ஆச்சரியப்படுகிறோம்.

புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளனின் கதைகளில் தன் தாய் நாடு பற்றிய தேட்டம் அவனை முதுகுக்குப் பின்னாலிருந்து தள்ளி உந்துவதுபோல இன்னொரு அம்சமும் அவனை விரட்டுகிறது. தனது அன்றைய வாழ்நிலையோடு பிணைந்திருக்கிறது எதிர்காலம், எனவே சென்ற நாட்டை அறிந்துகொள்ளவும் தனது வாழ்வை வளமாக்கவும் விரும்பும்போது அந்த மண்ணில் காலை ஊன்ற விரும்புகிறான். அதனால் ஒன்று சேர்ந்த மண்ணையும் அவனால்/ அவளால் விட்டுவிட முடியவில்லை. பொ. கருணாகரமூர்த்தியின்  “ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்” என்றொரு கதையும் “முட்டர்பாஸ்”  என்ற ஜெர்மன் மொழித் தலைப்பைக்கொண்ட கதையும் ஜெர்மன் நிலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கதையாக வனைகின்றன. முதல் கதை ஒரு நகைச்சுவைக்குரிய வெளியைத் (space)  தன் எழுத்தில் ஏற்படுத்துகிறது. இது தன் தாயகத்தைத் தவிர எதுவும் தெரியாமல் புலத்தில் வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை  மறுக்கிறது. கஞ்சத் தனத்துடன் வாழும் ஜெர்மன் வகுப்புத் தோழி பற்றி ஒரு ஈழ மாணவி (காருண்யா) ஞாபகப்படுத்துவதுபோல கதை அமைந்திருக்கிறது. காருண்யா ஈழக்குடியேறியின் மகளாய் ஜெர்மன் மாணவியைக் கஞ்சத்தனமானவள் என்பது புலம்பெயர்ந்தவர்கள் தமக்கான ஒரு வெளியை (நகைச்சுவை உணர்வுடன்) உருவாக்குகிறார்கள் எனக் காட்டுகிறது. மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” என்ற கதை “எனது ஆடைகளைக் களைந்தார்கள்; நாக்கை உயர்த்தி ஆவெனும்படிக் கட்டளையிட்டார்கள்…” என்று தொடங்கி, ஐரோப்பாவில் தான் எப்படி அலைய நேரிட்டது எனக்கூறும் பாத்திரத்தை மையமாகக்கொண்டு விளக்குகிறது. பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ என்று அலைகிற புலம்பெயர்ந்த அகதி வாழ்க்கையைக் கூறுகிறது. நான் படுத்து கிடக்கிறேன் எனது மார்பகங்கள் வீங்கிக்கொண்டே வருகின்றன. எனது ஆண்குறியின் கீழே ஒரு பெண்குறியும் முளை விடுகிறது..என்று கதைசொல்லி பாலின அடையாளமற்றவனாக மாறுகிறான்.

புலம் பெயர்ந்தவன் தன் தாயை நினைப்பதுபோல் தாய் மண்ணை நினைக்கிறான். அப்படி புலம்பெயர்ந்தும் தன் தாய் மண்ணைப்பற்றி எழுதாத எழுத்துகளில் ஒன்றில் நகைச்சுவை தோன்றுகிறது. அல்லது கதை சொல்பவனின் உடல் ஆணாகவும் பெண்ணாகவுமின்றி மாற்றமடைகிறது.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலை பயணம்” என்றொரு கதையைக் காஞ்சனா தாமோதரன் எழுதுயுள்ளார். இக்கதையையும் ஆசிரியரின் உள்ளடக்கக் கவனம் பிற கதைகள் போல் ஐயர்லாந்து என்றோ க்யூபா என்றோ இல்லை. இக்கதைஆசிரியர் வாழும் அமெரிக்கா பற்றிய கதை. சுமார் 50 பக்கங்களுள்ள இக்கதை நியுயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துபோன மணி என்பவனின் காதலி மனைவியின் அனுபவமாய் விரிகிறது. அவள் ஓவியம் வரைபவள். அவள் அமெரிக்காவின் உடப்பரப்பையும் காலத்தின் நீட்சியை அளந்து அதன் ஆதிவாசிகள் மூகம் அம்மண்ணின் ஆதியையும் தொடுகிறார். பழையனவும் புதியனவுமாய் எல்லாரின் கடவுள்களும் கை கோர்த்து உலாவுகிற அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 11 மீண்டும் வருகிறது. இந்தியப் பெண் தனது அமெரிக்கா வாழ் புலம்பெயர் வாழ்வில் ஓரளவு அமெரிக்கனாகி விடுவதாய்  நம்மைப்போன்ற  இந்தியர்களுக்குப் படும்போது கதை முடிகிறது. அல்லது அயர்லாந்து கதைசொல்லியாக மாறும் தமிழ் மனம் அமெரிக்கனாக/ளாக மாறுவதில் முரண் ஏதும் இல்லை என்று கூறலாமா? ஆனால் கதை எழுத்து அசாத்தியமான வலுவுடன் அமைந்து நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

முட்டர்பாஸ்என்ற கதையில் மகிமாவும் ஆனந்த சிவனும் கணவன் மனைவியாய் வாழமுடியாமல் பிரிகிறார்கள். அவர்களின் இருபெண்குழந்தைகள் தந்தையோடு ஒரு கார் சவாரி செய்கின்றனர். குழந்தைகள் பிங்கலையும்  சாதனாவும் வழியில் போகிற அதியுல்லாச டிரக் வண்டியை ஜெர்மன் மொழியில் திட்டுகின்றன, பிரிந்துபோன அம்மா கொடுக்கும் இட்லியைச் சாப்பிட்டுவிட்டுப்போகலாமா எனத் தொலைபேசியில் பிங்கலை கேட்கிறாள். ஆனந்தகுமார் சரி என்ற பின் புறப்பட்டு பயணம் வரும் வழியில் குழந்தைகளிடம் ஒரு ஆண்ட்டியுடன் பேசிவிட்டுவருகிறேன் என்று கூறி அவன் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கிறான். அவள் இவன் பெயரின் அர்த்தம் பற்றிக் கேட்டபோது சதா உல்லாசமாக இருப்பவன் என்று கூறி அவள் உடலைச் சேர்த்து இறுக்குகிறான். பின்பு அவனது மகள் தாய்க்கு இவன் மூலம் பிறக்கப்போகும் மூன்றாவது குழந்தைக்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கேட்கச்சொல்கிறாள் என்கிறாள்.. அதற்குப் பார்க்கலாம் என்கிறான் ஆனந்த சிவன்.

இங்குப் புதிய நாட்டின் மூலம் தமிழ் பண்பாட்டில் வந்துசேரும் முற்றிலும் புதிதான வாழ்க்கைமுறையும் ஆனந்த சிவனின் குழந்தைகளிடம் அவன் காட்டும் சாவகாசமும் பொ.கருணாகர மூர்த்தியால் எழுதப்படுகின்றன. மொத்தத்தில் இந்த கதை உலகத்தில் ஜெர்மன் மாணவியின் கஞ்சத்தனம், ‘வேருலகுகதையின் ஆண்-பெண் பாலின மாற்றமாய் விளக்கப்படும் அலைதல், ‘முட்டர்பாஸ்கதையில் வெளிப்படும் புதிய தாம்பத்தியம், நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்த கணவைன் துக்கம் தாளாமல் அமெரிக்காவை அதன் ஆதிக்குடிகளின் வழி தன் ஓவிய மனத்தில் பதிவு செய்யும் தமிழ்ப்பெண் – இவர்கள் எல்லோரும் தங்கள் பிறந்த இடத்திலிருந்து கொண்டுசென்றவற்றை(பழக்கமாகவோ, நியதியாகவோ, விழுமியங்களாகவோ, நாகரிகமோ இருக்கலாம்) மட்டும் மீண்டும் வாழவில்லை. இவர்கள் சென்ற இடத்தில் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறார்கள். ஏதோ ஒரு புது அம்சத்தை தம்முடையதாகப் படைத்திருக்கிறார்கள். தாம் கொண்டுவந்ததும் அங்கு பெற்றதும் ஓர் உற்பத்திப் பண்பை பெற்றுள்ளன. பழைய உலகமும் புதிய உலகமும் இங்கு ஓர் உரையாடலை மேற்கொள்கின்றன. 21ம் நூற்றாண்டில் தமிழுலகம் விரிவடைந்து  அகில உலக நாகரிகத்தில் தனக்கும் ஒருபங்கு இருக்கிறதென காட்டுகிறது. யாப்பு உடையாக் கவிதையைக் கைவிட்டு புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டதுபோல் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பேசிய சமூகம் உலகின் எல்லா தலை நகர்களிலும் தன் காலைவைத்து நடமிட ஆரம்பித்துள்ள போது அதுவரை நினைத்து பார்க்காத வாழ்வை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. இச்சமூகம் அதற்குத் தயார் என்று கூறுகிறது.

இத்தகைய புலம்பெயர் எழுத்தாளர்கள் தம் தாய்மண்ணைப் பற்றி எழுதாதபோது வாழ இடம் கொடுத்த நாட்டைப்பற்றி எழுதுகிறார்கள். முட்டர்பாஸ்கதையில் நிறைய ஜெர்மன் மொழி சொற்களும் வாக்கியங்களும் வருகின்றன. அதுபோல் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் நிறைய பிரெஞ்சு மொழி சொற்களும் வாக்கியங்களும் உள்ளன. இது தமிழ் மொழி அமைப்பையும் அதன் உலகப்ப்ரவலின் போது ஏற்படும் உலகமொழிப் பாதிப்பையும் காட்டுகின்றது. இப்படி மெதுமெதுவாகத் தமிழ் பேசப்படும் மனங்களில் புதிய உலக, மொழிஅனுபவக் கூறுகள் நுழைவது ஆய்வுக்குறியதாகும். அதுவும் சமஸ்கிருதம், பர்ஷியன், அராபிக், ஆங்கிலம் என்ற வரிசையில் இப்போது ஜெர்மனும் பிரஞ்சும் சேர்ந்துகொள்கின்றன. அமெரிக்கா வாழ் காஞ்சனா கதையில் ஆங்கில மொழி எழுத்துக்கள் கதைக்குள் வருவதற்குப் பதில் கதையாடலில் உடலுக்குள் கதைவித்தை மூலம் அமெரிக்கா மனத்துள் நடத்தும் பாய்ச்சல் கவனிப்புக்குரியதாகும்.

இன்னொரு சிந்தனையாகப் புலம் பெயர் எழுத்துக்களில் காணப்படும் தாய் நாட்டின் அழிவு என்னும் ஒருவகை பேரழிவு சார் உருவகம் (Holocauste Trope) பற்றிக் குறிப்பிடவேண்டும்^. இது பொ.கருணாகரமூர்த்தியின் பதுங்கு குழி‘  என்ற கதையில் வெளிப்படுகிறது. சிங்களப்படைகள் பதுங்கு குழியில் யுத்தத்திற்குப் பயந்து ஒளிந்த மக்களை மண்போட்டு புல்டோசரால்மூடி நிரவிவிட்டு அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடியது என்ற வாக்கியத்தில் கதை முடிகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை (“பேர்த்தோக்கள் எப்போதாவது வருகிறார்கள்”) பிரேதங்களுக்கு வாழ்வுபற்றிய பயம் இருக்காதென்னும் நினைப்பு எனக்குள்ளிருந்து எழுவதால் நான் இன்னமும்  பிரேதமாகவில்லையென நினைக்கிறேன்என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது.  அதிகமும் கதை அம்சம் இல்லாத கதை இந்த ஈழ எழுத்தாளரின் மன நெருக்கடிபோல்  பசி மற்றும் பிணங்கள்  என்ற இரண்டு நினைவுகளையே சுற்றிசுற்றி வருகிறது. நான் மரணித்த பின்னர்என்னுடலைத் தின்பீர்களா? என்று கேட்கும் கதை சொல்லியின் குரல் தெளிவடையும்போது புலத்திலிருந்து இங்கே இப்பொ பத்து மணியாக இருக்கலாம் ஈழத்தில் இரவாக இருக்கும்என்று பிறந்த மண்ணின் காலத்தைத் தன் ஆன்மாவிலிருந்து மறக்க முடியாமல் நினைக்கிறது. கடைசியாக யுத்தங்களை நிறுத்துங்கள்‘  என் குரலை தயவு செய்து மொழி பெயருங்கள், மனித இனம் பிரபஞ்ச பேரியக்க பெருவட்டத்தின் சத்திய ஞான தளத்தில் பரிணமிக்க வேண்டியிருக்கிறதுஎன்ர விண்ணப்பத்தை முன்வைத்து கதை முடிவடைகிறது. இது கதையா கதைபோன்ற மனதின் கூக்குரலா என்று கூறமுடியவில்லை. அதாவது மெலிஞ்சி முத்தனின் சிறுகதை வடிவம் உணர்ச்சிக்கொந்தளிப்பால் வடிவ ஞாபகத்தை மீறியே செல்கிறது. இதுபோல் ஊரின் யுத்தத்தைப் புராண படிமங்கள், பேய்கள், ராட்சசர்களை ஞாபகங்களாகப் பார்க்கிர வேறு கதைகளையும் இவர் எழுதுயுள்ளார். (பார்க்க: கூட்டிச் செல்லும் குரல்‘(11) . பேய்களுக்கும் யுத்தத்துக்கும் உள்ள உறவு புறநானூற்றிலிருந்தும், கலிங்கத்துப் பரணியிலிருந்தும் தொடர்கிறது. இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் காஞ்சனாவின் ஒரு கதை ஏற்கனவே பார்த்ததுபோல் தாய்நாடுபற்றிய விபரீதத்தை ஈழத்திலிருந்து சென்றவர்கள் பேசுவதுபோல் புகலிட நாட்டின் இரட்டைக் கோபுரத் துயரத்தை கதை வடிவமாக்கியிருப்பதாகும். அதாவது புகலிட ஞானத்தில் (Expatriote Memory) இந்த பேரழிவு உருவகம் தவிர்க்கவியலாததாக இருக்கிறது.

இலக்கிய கதையாடல் வழி உணர்வுருவங்கள்

இனி இத்தகைய இலக்கிய கதையாடல்கள் (Literary Narratives) வழியாக ஊடி பரவிச் செல்லும் உணர்வுருவங்கள் பற்றிய விளக்கத்துக்குப் போகவேண்டும். பல இலக்கிய பிரதிகளில் ஒருவிதமான தோற்றம் தேடுதல் (search for the origin) உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் வரும் ஹரிணி பாரிஸில் இயற்கையாய் தன்னை இடம் பெயர்த்து வைக்கிறாள். அவளுக்கான தோற்றம் புதுச்சேரியில் உள்ளது. தன் தாயையும் அவளது வரலாற்றையும் மாத்தா ஹரியைப் பற்றி ஐரோப்பா தேடுவதுபோல் தேடுகிறாள். கடைசியில் கிருஷ்ணாவின் கதையாடல்தான் அதன் மூலம்-தோற்றம் என்று வாசகர்கள் நம்பும்படி கதை முடிகிறது. ஹரிணி தேடுகிறவளும் தேடப்படுகிரவளுமாகிறாள். அ. முத்துலிங்கத்தின் கதைசொல்லி தனது தன்மையை (அகம்-நான்) மீண்டும் மறு கட்டமைப்பு(Reconstitue) செய்ய முடியாமல் அமைவதால் வெறும் உதிரி நாட்குறிப்புகளாகவே முடிக்கிறார். தன் தோற்றம் (நாடு) பற்றிய கண்டுபிடிப்புத் தனது நாவலெழுத்தாய் மாறுகிறது. எஸ்.பொ.வின் எதிர்வரலாறு (Anti-history)  அதீத சக்தி படைத்த மருந்து ஒன்றால் வரலாறு கடந்து எப்போதோ இறந்துபோன மனிதர்களோடு உரையாடல் மேற்கொண்டு மனம் மகிழ்கிறது.  அதாவது எதார்த்தமும் புனைவும் மீண்டும் மீண்டும் வித்தியாசமில்லாமல் இணைகின்றன. இந்த இடத்தில் காஞ்சனாவின் இதுவரைக் குறிப்பிடாதக் கதையைக் கொண்டுவரவேண்டும். “சியர்ரா நெவாடா”  என்ற தலைப்பு கொண்ட கதையில் பனிமலையேறும் உள்ளடக்கம் வருகிறது. பல நூறுவருடங்களுக்கு முன்பு மலையேறிய ஒரு பெண்ணின் உடல் பனிக்கிடையில் கண்டுபிடிக்கப்டுவது கதையாகிறது. நவீனகாலத்தைச் சேர்ந்த ஒருவன் கடைசியாய் வந்து பார்க்கும்போது குகைக்குள் பெண்ணுடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட பைக்குள் ஒரு காகிதப் புத்தகத்தில் பழைய ஆங்கில எழுத்துரு காணப்படுகிறது. அங்குக் கிடப்பவள் பனிக்கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண். இந்தக் குறிப்பிட்ட மலையுச்சியில் நீர் வீழ்ச்சி இருந்திராத காலத்தைச் சார்ந்த பெண் அவள். நிலம் கண்டங்களாய் பிரிந்து கிடந்த காலத்தைச் சார்ந்த பெண். அதாவது இக்கதையின் முக்கியத்துவம் ஒரு மிகப்பழைய பெண்ணின் கோணத்தில் கதைச்சொல்லி கதையை அமைத்ததாகும். புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் தன் நாட்டின்  மொழியின் பழமையைத் தன் கதையின் கதைசொல்லிக்கு மறு அடையாளமாய் (Made-up Identity) வழங்கியுள்ளார். தோற்றத்தைத் தேடுதல் என்பது புனைவு தந்திரோபாயமாகிறது.

முடிவுரை

இதுவரை பார்த்தக் கருத்துகளிலிருந்து அகில உலகச் சிக்கல்கள், நாகரிகப் போக்குகள், மனோநிலைகள் போன்றவை சார்ந்த அளவைகள் தமிழின் வழியும் செல்லக்கூடியனவாக உள்ளன என்றறிகிறோம். தமிழ்ச் சமூகம் எங்கோ தென்னாசியாவின் ஒரு மூலையில் தன் பழமை என்னும் ஓட்டுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உள் சுருங்கி தனக்குள் மட்டும் பார்த்துக்கொண்டு முடங்கிப்போன சமூகமல்ல என்றறிகிறோம். ஐயர்லாந்தின் பிரச்சினையும் பிரான்சின் பிரச்சினையும் க்யூபாவின் பிரச்சினையும் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் கொண்டிருப்பதுபோல் தமிழ் பேசுவோரின் பிரச்சினையும் இவற்றோடு இணைகின்றன. தன் சமூக அழிவு விபரீதத்தை மறக்க முடியாவிட்டாலும் புதிய -தனது கலாசாரத்துக்குச் சம்பந்தமே இல்லாத – சமூகங்களோடு உரையாடத் தமிழ் சமூகம் கற்றுள்ளது என்பதை அறிகிறோம். பிறரைக் கேலிசெய்வதுபோல் தன்னையும் கேலிசெய்யக் கற்றுகொண்டுவருகிறது இச்சமூகம் அந்த வகையில் முட்டர்பாஸ்காதை பல பிரச்சினைகளோடு முகம் கொடுக்கிற கதையாகிறது.

தனது பழமையான மொழியைவைத்துக்கொண்டே மிக நவீனமான சமூகங்களில் கண்டுகொண்ட மொழிச்சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமல்லாமல் நினைவுகளையும் விழுமியங்களையும் அறிய முயல்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தமிழிலக்கிய உலகில் அதிக பிராபல்யம் பெறாததும் நம் விவாதத்துக்கு உட்படவேண்டும். தமிழ் சினிமா அளவு இன்னொரு கலை வெளிப்பாடான தற்கால இலக்கியம் தமிழர்களிடம் கால் கொள்ளாததோடு  அனைத்துலக அடையாளங்களையும்  சிக்கல்களையும் பற்றிப் பேசும் உலக மட்டத்தில் அமைந்துள்ள காஞ்சனா மற்றும் நாகரத்தினம் எழுத்துக்கள் தமிழர்களாலேயே கண்டுகொள்ளபடாதிருப்பது நமக்கு வியப்பைத் தரலாம். முத்துலிங்கம் மற்றும் எஸ்.பொ. எழுத்துக்கள் ஈழ வாசகர்களிடமின்னும் அதிக பிராபல்யம் பெற்றிருக்கின்றன என்ற கூற்று உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதாகும்.

இன்று அகில உலகமும் வர்த்தக அடிப்படைகளை அடையாள அடிப்படைகளாக மடைமாற்றிச் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆஸ்லோவில் நடந்த ஓர் இளைஞனின் செயல் உலகைத் திகைக்க வைத்துள்ளது. மரபான சமூகங்கள் இருக்கக்கூடிய நாடுகளில் இனங்கள், மதங்கள், மொழிகள் எவ்வாறு ஒன்று இன்னொன்றோடு இணைந்தும் பிணக்குண்டும் செயல்படுகின்றன எனவும் இவற்றிற்கிடையேயுள்ள இயக்கியலும் ஆயப்படுகின்றன. இந்த ஆய்வும் அத்தகையதே.

குறிப்புகள்

 1. Appadurai, arjun Ed. Globalization, Duke University  Press 2001

2. தாமோதரன், காஞ்சனா, மரகதத்தீவு, உயிர்மை, 2009

3. கிருஷ்ணா, நாகரத்தினம், மாத்தாஹரி, எனி இந்தியன் பதிப்பகம் 2008

4. முத்துலிங்கம்.அ. உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை 2008

5. பொன்னுதுரை எஸ். மாயினி, அர்ச்சுனா பதிப்பகம் 2007

6. ஷோபா சக்தி லைலா காலம் 36 2010

7. கருணாமூர்த்தி பொ. பதுங்குகுழி, உயிர்மை 2009

8. முத்தன், மெலிஞ்சி வேருலகு, உயிர்மை 2009

9. Anderson, Benedict Imagined communities, Verso

10. ஷோபா சக்தி லைலா காலம் 34 2010

11. காலம் 34, 2010

————————————————————

 

 

 

‘உலக எழுத்தாளர் வரிசை – 6: டுயோங் த்யூயோங்

Duong Thu Huong - Viet Nam two

டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong) வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris