Category Archives: கட்டுரைகள்

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

ஸ்ட்ராஸ்பூர்

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில் எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள். அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும் இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

Strasbourg Christmas market: http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676

—————

———————————————–

கதையல்ல வரலாறு1-6

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள்  மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி,  வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார். ஹெஸ்ஸின் சொந்த யோசனையா? அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு  இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:

” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.

“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”

“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.

பீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:

– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா?

– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.

பீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்

பீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதகமாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும்  நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.

இப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.

ஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை இட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன.  முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார்.  அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா·வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேடிக்கை!’ என அலுத்துக்கொண்டிருக்கிறார்.

நாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.

இச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா?” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா?”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”,  எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு  ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, ·பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட  ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவருக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு  சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.

சம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான  நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் ·ப்ரிட்ச்  டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ?” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா?, என்றாராம்.

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள்.  1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.

ருடோல்·ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.

இச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா? ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா? அவர் இறப்பு தற்கொலையா? கொலையா?

நம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர்  அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.

– முற்றும் –

———————————————————-

 

1. Leasor, J. (1962). Rudolf Hess : the uninvited envoy. London: Allen & Unwin [©1962]

கதையல்ல வரலாறு1-4

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

ஹெஸ், ஹௌஸ்ஷோபெர் சந்திப்பு நடந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. 1941ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஹெஸ் தமது பாதுகாவலர் கேப்டன் கர்லைன் பின்ஷ்(Karlheinz Pintsch)ஐ அழைத்துக்கொண்டு ஆக்ஸ்பூர்க்கிலிருந்த சிறிய விமான தளமொன்றிற்கு வந்தார். அங்கு மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் என்ற பெயரில் யுத்த விமான தயாரிப்பு நிறுவனமொன்று இருந்தது. நிறுவனத்தின் முதலாளி விலி மெஸ்ஸெர்ஸ்மிஷ்ட்டும் ஹெஸ்ஸ¤ம் முதல் உலகப்போரில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்ற வகையில் இருவரும் நெருங்கிய சகாக்கள். அவ்வப்போது நண்பரிடம் இரவல் கேட்டு அவர்களுடைய மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் யுத்த விமானத்தில் ஆக்ஸ்பூர்க் எல்லைப் பகுதிகளில் வானில் பறப்பது வழக்கம். கேட்பவர்களிடம், பறப்பது தம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள உதவுகிறதென்று கூறிவந்தார்.

அப்போதைய அதிநவீன யுத்த விமானமாகக் கருதப்பட்ட ME110 ரகத்தை ஜெர்மன் விமானப்படையில் சேர்த்துக்கொண்டபிறகு முதன்முதலாக அதனை ஓட்டிப்பார்க்க அனுமதிக்கப்பட்டவர்களில் ஹெஸ்ஸ¤ம் ஒருவர். ME110 நட்பு நாடுகளின் படைகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கும் நம்பகமான யுத்த விமானமென்று பெயரெடுத்திருந்தது. ஆனால் விமானத்தின் எரிசக்தி அதிகபடியான நிலப்பரப்பில் தாக்குதலை நடத்த போதுமானதல்ல என்று போர் வல்லுனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அத்தகைய விமர்சனத்தை வைத்தவர்களில் ‘ஹெஸ்’ ஸ¤ம் ஒருவர். ஹெஸ்ஸின் வற்புறுத்தலுக்கிணங்க பின்னர் மற்றொரு எரியெண்ணெய் கொள்கலத்தை ME110 ரக விமானத்தில் சேர்த்தார்கள்.

அன்றைக்கு பிற்பகல் விமான தளத்திற்கு வந்த ஹெஸ் வழக்கத்திற்கு மாறாக கையுடன் துண்மணிகள் வைக்கிற சிறிய பெட்டியொன்றை கொண்டுவந்திருந்தார். தமது பாதுகாவலரிடம்: இண்றைக்கு வெகு நேரம் வானில் பறக்க இருக்கிறேன், எனக் கூறியிருக்கிறார். இரண்டு கடித உறைகளையும் பாதுகாவலரிடம் கொடுத்துள்ளார். இரண்டிலொன்று  பாதுகாவலருக்கும், மற்றொன்று ·ப்யூரெருக்கென்றும் எழுதப்பட்டிருந்தது. அடுத்த நான்கு மணிநேரத்திற்குள் தாம் திரும்பவில்லையெனில் பாதுகாவலர் தனக்கென்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துபார்க்கலாமெனவும், மற்றதை இட்லரிடம் கைப்பட ஒப்படைக்கவேண்டுமெனவும் சொல்லப்பட்டது. பாதுகாவலரை அறிவுறுத்தியபிறகு எஞ்சின் உறுமியது, ஓட்டுனர் இடத்தில் ஹெஸ் அமர்ந்தார், சாவியை ஒருமுறை சுழட்டித் திருப்பினார், அடுத்த சில நொடிகளில் யுத்த விமானம் வானில் பாய்ந்தது. பாதுகாவலர் பின்ஷ் விமானம் வானில் மறையும்வரை காத்திருந்தார். ஒவ்வொரு மணிநேரமும் ஒரு யுகம்போல கழிந்தது. பிற்பகல் கரைந்து, பொழுதும் சாய்ந்தது. ஹெஸ் கூறியிருந்த நான்கு மணி நேர கெடுவும் முடிந்தது. ஹெஸ் திரும்பவில்லை. பாதுகாவலர் இரண்டு கடிதங்களும் பத்திரமாக இருக்கின்றனவா என சட்டை பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டார். தம்முடைய கடித்தத்தைப் பிரித்து பார்ப்பதென தீர்மானித்தார். படித்தவர் திகைத்தார். அதிற் சொல்லப்பட்டிருந்த தகவல்களின் தன்மை அப்படி. அவ்வளவும் கற்பனையாக இருக்குமோவென்ற சந்தேகம். “தாம் இங்கிலாந்து திசைக்காக பயணப்பட்டிருப்பதாகவும், பயனத்தின் நோக்கம் இருநாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதெனவும்”, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடிதத்தின் வரிக¨ளை சரியாகக்கூட பாதுகாவலர் உள்வாங்கிகொள்ளவில்லை. மீண்டும் வானில் எஞ்சின் உறுமல். பின்ஷ் தலையை உயர்த்தி பார்த்தார். ME110போல தெரிந்தது, ஆமாம் அதுதான். ஹெஸ் தானா அல்லது வேறு யாரேனுமா என யோசிப்பதற்குள், விமானம் தரை இறங்கியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே காக்பிட் கடவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவர் ஹெஸ்.

பாதுகாவலர் கையில் திறந்திருந்த கடித உறையை பார்த்த மாத்திரத்தில் என்ன நடந்திருக்குமென ஹெஸ்ஸால் ஊகிக்க முடிந்தது.தமது இல்லத்திற்கு பாதுகாவலரை அழைத்துச் சென்று தமது திட்டத்தையும் அதற்கான காரணங்களையும் பொறுமையாக விவரித்தார். பின்னாளில் ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது ஹாமில்டன் பிரபுவிடமும், கிர்க் பட்ரிக்கிடமும் என்ன கூறினாரோ அதை அப்படியே வரிபிசகாமல் தமது பாதுகாவலரிடம் தெரிவித்தார். ஜெர்மனுக்கு ஆபத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தல்ல, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து என்பது அவர் கூறிய தகவலின் சாரம். இங்கிலாந்திடம் சமாதானமாக போவதால் ஜெர்மனுக்கு என்னென்ன நன்மைகளென்று பட்டியலிட்டார். பிரிட்டிஷாரிடம் சுமுகமான உறவைக் பேணமுடியுமெனில் ரஷ்யாவின் விஷயத்தில் அதன் விருப்பம்போல ஜெர்மன் நடந்துகொள்ள இயலுமென்றார். திட்டத்தை ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க விரும்புவதாகவும், அவர்கள் ஏற்கும்பட்சத்தில் ஆங்கிலேயர் விடயத்தில் ஜெர்மன் தலையிடாதென்ற உத்தரவாதத்தை அவர்களுக்குத் தரப்போவதாகவும் பாதுகாவலரிடம் விளக்கினார்.

தமது எஜமானரின் விளக்கத்தை நம்புவதா கூடாதாவென்று பின்ஷ்க்கு குழப்பம். தலை நிமிர்ந்து ஹெஸ்ஸின் முகத்தைப் பார்த்தார். இம் மனிதர் தாய் நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவரல்ல, அவர் எதைசெய்தாலும் அது நாட்டின் நன்மைகருதிய நடவடிக்கையாக மட்டுமே இருக்கு என மனமார நம்புகிறார். ஹெஸ்ஸின் திட்டம் குறித்து எவரிடமும் வாய் திறப்பதில்லையெனவும் பாதுகாவலர் அன்றைக்கு ஹெஸ்ஸிடம் உறுதியளித்ததாகக் கூறுகிறார்கள்.

தமது பாதுகாவலர் துணையுடன் ஹெஸ் பார்த்த ஒத்திகை நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் வழக்கம்போல பின்ஷ் அலுவலகப்பணியில் முழ்கியிருந்தபோது தொலைபேசி அலறியிருக்கிறது. போனை கையிலெடுத்தார், மறுமுனையில் இவரது எஜமானின் குரல்:

– என்னய்யா தயாராக இருக்கிறாயா? திட்டத்தை இன்றைக்குத்தான் செயல்படுத்தபோகிறேன்- என்கிறார் ஹெஸ்.

அன்றைய தினம் சனிக்கிழமை. தேதியை சரியாக சொல்லவேண்டுமெனில் மே 10, 1941.  கிடைத்த கட்டளைப்படி தனது எஜமானரைத்தேடி ஆக்ஸ்பூர்க் விமானதளத்திற்கு பதட்டத்துடன் வந்தார். விமானக்கூடம் மூடியிருந்தது. அன்றைக்கு விடுமுறை. பூட்டை உடைத்து கதவைத் திறந்தார்கள். யுத்த விமானத்தை  இருவருமாக வெளியில் கொண்டுவந்தனர். தமது பாதுகாவலரிடம் ஹெஸ் இம்முறை இடலருக்கென்று வேறொரு கடிதத்தைக் கொடுத்தார். காக்பிட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் வானில் பறந்தார்.

சென்றமுறைபோலவே ஹெஸ் வானில் மறைந்து நான்கு மணிநேரம் கடந்திருந்தது. ஹெஸ்ஸின் பாதுகாவலருக்கு இம்முறை ஹெஸ் திரும்பமாட்டாரென்று புத்தியில் உறைத்திருக்கவேண்டும், அவசரகதியில் விமான கூடத்திலிருந்து புறப்பட்டார். தாமதிக்காமல் நடந்த சம்பவத்தை ·ப்யூரெருக்குத் தெரிவித்துவிடவேண்டும், இல்லையென்றால் தமக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைப்போல இரவுமுழுக்க பயணம் செய்து இட்லரின் அலுவலகம் இருக்கிற பெர்ஷ்ட்காடென்(Berchtesgaden) வந்து சேர்ந்தார்.

இனி ஹெஸ் விவகாரத்திற்கு வருவோம்.

ஹெஸ் பிரிட்டிஷ் எல்லைக்குள் பிரவேசித்து, அவர்களுடைய கடற்பகுதியில் பறந்தபோது பொழுது சாயவில்லை. பகல் நேரத்தில் ஆங்கிலேயரின் விமான எதிர்ப்பு பீரங்கியிடமிருந்து தப்புவதென்பது அத்தனை சுலபமல்ல என்பதை ஹெஸ் நன்றாகவே அறிவார். அப்படியொரு ஆபத்தை எதற்காக விலைகொடுத்து வாங்குவானேன் என்று அவர் யோசித்திருக்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு இரவு பிறக்கட்டுமென வடக்குக் கடலுக்கு மேலாகச் சுற்றித் திரிந்தார். பிறகு   அதற்கான நேரமும் வந்தது வடக்கு கடற்கரையை நோக்கி விமானத்தைச் செலுத்த தயாரானபோது தமக்குமேலே திடீரென்று மேகங்கள் திரள்வதை எதிர்பார்க்வில்லை. இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தவர் இருநூறுமீட்டருக்கும்  தாழ்வாகப் பறக்கவேண்டியிருந்தது.  அதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயரின் ஸ்பிட்பையர் யுத்த விமானமொன்று இவரது விமானத்தை கண்டுவிட்டது. ME 110 விமானத்தின் பின்னே ஸ்பிட்பயர். இரண்டு விமானங்களில் ME110 ஆற்றலை பலரும் அறிவார்கள். “எனது விமானத்தை ஆங்கிலேயர் விமானம் பின்தொடருகிறது என்றறிந்தமாத்திரத்தில் அதிவேகமாக எனது விமானத்தைச் செலுத்தி இடைவெளியைக்கூட்ட முடிந்ததென்று பின்னர் ஹெஸ் தெரிவித்தார். ஹெஸ் தொடக்கத்தில் ஹாமில்டன் பிரபுவின் மாளிகைக்கு எதிரிலிருந்த பூங்காவில் தரையிறங்க முடிவுசெய்திருந்தார். பின்னர் அம்முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பாதுகாப்பாதென யோசித்திருக்ககூடும் நிலா ஒளியில் கிராமமொன்று தெரிந்தது. அக்கிராமம் Eaglesham ஆக இருக்கலாமென்பது அவருடைய ஊகம். இவரது கணிப்பு சரியென்றால் ஹாமில்டன் பிரபுவின் மாளிகையான Dungavel Housem அங்கிருந்து பக்கம் தான் எனமுடிவுக்கு வந்த மறுகணம், எஞ்சினை நிறுத்திவிட்டு பாராசூட்டில் கீழே குதிக்க நினைத்தார். அப்படி அவர் குதிக்கும்போது ME 110 விமானம் தரையில் மோதி வெடித்து சிதறும், ஆங்கிலேயர்கள் தங்கள் ME 110 ரக விமானத்தின் தயாரிப்பு ரகசியத்தை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையாதென்று நம்பவும் செய்தார்.

நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?  ME 110 விமானத்தை அநாயசமாக கையாண்டிருக்கிறார். மிகதுல்லியமாக கனக்கிட்டு விமானத்தை செலுத்தும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவசர காலத்தில் பார சூட்டை எப்படி கையாளுவதென்ற அனுபவம் அவருக்கு இல்லை, அதுபோன்ற சந்தர்ப்பமும் இதற்குமுன்பு அவருக்கு ஏற்படபில்லை. முதந் முறையாக மட்டுமல்ல, கடைசிமுறையாக குதித்ததும் அன்றுதான்.

(தொடரும்)

 

கதையல்ல வரலாறு1-2

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ?

                   தொடர்ச்சி                                                           

ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்.  ராயல் ஏர் ·போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஹாமில்டனுக்குச் சந்தேகம், தகவல் தவறானதாக இருக்குமோவென்ற ஐயம். விமானப்படையில் பொறுப்பினை வகித்த அளவில் மெஸெர்ஸ்மிட் 110 ரக விமானத்தின் பயண தூரத்தின் தகுதி எனவென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷாரின் எல்லையைக் கடந்து தனது பறக்கும் தூரத்தை அதிகரித்து ஆபத்தை தேடிக்கொள்வதற்கான முகாந்திரமில்லை என்பதை அவரது விமாநங்களைப் பற்றிய அறிவு தெளிவுபடுத்தியது.

– அப்படியே முடிந்தாலும் ஜெர்மனிக்குத் திரும்ப அதற்கு எரிசக்தி போதாதே,  என்று சொல்லிக்கொண்டார்.

சில நொடிகளுக்குப்பிறகு இரண்டாவது முறையாக தொலைபேசி ஒலிக்கிறது. கையிலெடுத்து தகவலை உள் வாங்கிக்கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப்போனது. வான் குடை உதவியுடன் குதிந்திருந்த ஜெர்மன் ஆசாமி தனது பெயர் ஆல்·ப்ரெட் ஹொர்ன் என்று தெரிவித்துக்கொண்டதாகவும், அவரைச் உடனே சந்திக்க விரும்புவதாகவும் இம்முறை தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவர்கள் கீறியிருந்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பெயரை தனக்குள் அவர் முனுமுனுத்துக்கொண்டபோதிலும் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவரால் வர இயலவில்லை. அப்படியொரு பெயரை இதற்கு முன்பு கேட்டிருந்த ஞாபகமில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது வியப்பினை தந்தது. மறுநாள்காலை கிளாஸ்கோவுக்கு நேரில் செல்வதென்று தீர்மானித்தார். விடிந்தது. திட்டமிட்டதுபோல மறுநாள் கிளாஸ்கோ மருத்துவமனையொன்றில் பிரிட்டிஷ் படைப்பிரிவொன்றின் பலத்தக் காவலுடன் சேர்க்கப்பட்டிருந்த ஜெர்மானிய விமானியை சந்திக்கவும் செய்தார். ஆனால் ஜெர்மன் ஆசாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திபோடுவானென அவர் கிஞ்சித்தும் நினைத்து பார்த்தவரல்ல.

பரஸ்பரம் முகமனுக்குப் பிறகு, ஜெர்மன் ஆசாமி பேசினான்.

– நான் ருடோல்ப் ஹெஸ், என் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீங்க

– ருடோல்ப் ஹெஸ்?

– ம்… மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குதவ வந்திருக்கேன்.

உண்மைதான், ஹாமில்டன் பிரபுவிடம் ஹெஸ்ஸைப் பற்றிய கேள்விஞானங்கள் ஏராளம். ஆனால்  இப்படி இரத்தமும் தசையுமாக  அந்த மனிதரை அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமென கனவு கண்டவரல்ல. எனினும் கண்முன்னே நடப்பதை நம்புவதா? கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ? நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ? என்றெல்லாம் கேள்விகள்கேட்டு தலையிலடித்து கொள்ளாத குறை.

 

ஹாமில்டன் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ருடோல்ப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்நபரை இப்படி யுத்த காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்கநேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாடமுடியுமென்றோ நினைத்துப்பார்த்ததில்லை. இவைகளெல்லாம் கேலிகூத்தென்று மனதிற் தோன்றியது. இருதரப்பிலும் ஒருவர்கூட இதை நம்பமாட்டார்களென்ற அப்போதைய அவரது தீர்மானத்தை பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் பலரும் அப்படியொரு முடிவுக்குத்தான் எவரும் வரமுடியுமென்று எழுதினார்கள். ஹாமில்டன் குழப்பத்திலிருக்க நமது ஜெர்மானிய கதாநாயகனுக்குப் பொறுப்புகள் கூடின. தம்மைப் யாரென்று நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார்.

– மிஸ்டர் ஹாமில்டன் உங்களுக்கு ஹௌஸ்ஷோபரைத் தெரியுமில்லையா? அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உங்கள் தரப்பில் எனது விருப்பங்களை, யுத்தத்தைப் பற்றிய எனது கருத்துக்களை புரிந்துகொள்ளகூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்று அடித்துக்கூறினார். நாமிருவரும் சந்திக்க வேண்டுமென்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23ந்தேதி, உங்களுக்கு கடிதங்கூட போட்டிருந்தாரே, மறந்து விட்டீர்களா என்ன?

– இல்லை. ஆனால் உங்களைச் சந்திப்பதுபற்றிய யோசனை எதையும் அக்கடிதம் தெரிவிக்கவில்லையே!

– கடந்த டிசம்பருக்குப் பிறகு இங்கே வருவதற்கு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். நான்காவது முறைதான் முடிந்தது. கடந்தகால முயற்சிகளின் போது ஒவ்வொரு முறையும் கைவிட நேர்ந்ததற்கு மோசமான வானிலைதான் காரணம். மோசமாக இருந்ததால் திரும்பிப்போக நேர்ந்தது. அடுத்து லிபியா போரில் நீங்கள் வெற்றிபெற்றிருந்த நேரத்தில் உங்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசுவதும் சரியல்ல. ஜெர்மானியர்களான நாங்கள் பயந்துவிட்டோம் அதனாற்தான் சமாதானம் பேசவந்திருக்கிறோமென நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இப்போது வடக்கு ஆப்ரிக்காவில் எங்கள் கை மேலோங்கி இருப்பதுடன், கிரேக்க நாட்டையும் எங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறோம். ஆக உங்களுடன் சமாதானம் பேச இதுதான் நல்ல தருணம். ஜெர்மானிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நான் நேரில் வந்திருப்பதைவைத்து அமைதியை நிலைநாட்டுவதில் எனக்குள்ள அக்கறையையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறேன். ·ப்யூரெர்(இட்லர்), யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாய் இருக்கிறார். போரில் இறுதிவெற்றியைத்தான் கணக்கில்கொள்ளவேண்டும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரலாறு எங்கள் வெற்றியை உறுதிசெய்யும். எனினும் ய்நாம் யோசிக்கவேண்டும். தேவையின்றி உயிரிழப்பு எதற்கு. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்.

ஹாமில்டன் பிரபுவுக்கு குழப்பம் நீங்கியிருந்தது. எதிரே உட்கார்ந்திருப்பவனை நம்பத்தான் வேண்டும். கார்ல் ஹௌஷோபெர் என்ற மந்திரச் சொல் அவர் நினைவுப்பெட்டகத்தைச் சட்டென்று திறந்தது. கடந்த கால காட்சி கண்முன்னே விரிந்தது. 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம், உண்மையாகவே அவர் பெயருக்குப் பிரத்தியேக கடிதமொன்று வந்திருந்து.  ஹௌஷோபெர் என்ற ஜெர்மானிய ராணுவ ஜெனரல் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு எழுதிய ஞாபகம், வேறு குறிப்பிட்டுச்சொல்லுபடி அக்கடிதத்தில் எதுவுமில்லை. ஆமில்டன் ஹௌஷோபெர் மகனை 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில்¢ல் சந்தித்திருந்தார். அக்கடிதத்தை தனக்கு மேலே உள்ளவர்களிடம் அனுப்பிவைத்தார். அத்துடன் எல்லாம் முடிந்தது. அச்சம்பவத்தைச் சுத்தமாக அதன்பின்  மறந்திருந்தார். ஆக ஹெஸ் வந்திருப்பற்கு காரணமிருக்கிறது, நம்பத்தான் வேண்டும். அதிலும் இது ஹௌஷோபெர் சம்பந்தப்பட்ட விஷயம். மனிதர் சாதாரண ஆளல்ல ”Lebensraum” (வாழ்வாதாரம்),1 என்ற கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர், பின்னாளில்  இட்லரின் அபிமானத்தைப் பெற்று நாஜிப்படையினர் பிற நாடுகள்மீது படையெடுக்க வழிவகுத்தக் கொள்கை. ஹௌஷோபெர் அறிவு ஜீவியுங்கூட. வெர்சாய் உடன்படிக்கைக்கு மாறாக ஜெர்மானிய எல்லைகளை விரிவுபடுத்த இட்லர் தீர்மானித்தபோது கார்ல் ஹௌஷோபெர் சிந்தனைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஹௌஷோபெர் தகவலோடு வந்திருப்பது உண்மையாவென்று அறிவதற்குமுன்னால், ஏதிரே அமர்ந்திருக்கும் நபர் ஜெர்மானிய ராணுவ அதிகாரி ருடோல்ப் ஹெஸ்தானா என்று நீருபிக்கப்படவேண்டும். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது. வந்திருந்த ஆசாயின் பேச்சில் அதிகாரத்தின் வாள்வீச்சுகளை நிறையவே ஆமில்டன் உணர்ந்தார்.

– அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்புவகிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, அமைதியை திரும்பக்கொண்டுவருவது குறித்த யோசனைக்குத் தக்க பதிலை நீங்கள் சொல்லவேண்டும்.

– போர் தொடங்கியதிலிருந்து இங்கே இவர்தான் அவர்தானில்லை, பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள்.

– இனி நம் இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தமென்று ஒன்று வரக்கூடாது என்பதுதான் இட்லரின் எதிர்பார்ப்பு. அதற்கு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்.

– எப்படி?

– முதலாவது ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடென்று தலையெடுக்கும் எந்த நாட்டையும் எதிர்ப்பதென்கிற தமது புளித்துப்போன கொள்கையை பிரிட்டன் கைகழுவவேண்டும்.

– இப்போது சமாதானமாகப் போனாலும், வருங்காலத்திலும் நாம் சமாதானமாக வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

– ஏன்? எதற்காக நமக்குள்ள யுத்தம் வருமென்று சந்தேகிக்கறீங்க?

– இதை முன்பே உணர்ந்திருக்கவேண்டும். நமக்குள் பகமையை வளர்த்தாயிற்று. அமைதியை விரும்பிய எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம், இந்த நிலையில் எந்தவிதமான ஒப்பந்தம் இனி உடனடியாக அமைதியை நிலைநாட்ட உதவுமென நினைக்கிறீங்க.

ஹெஸ் யோசிப்பதுபோல இருந்தது அல்லது ஆமில்ட்டனின் ஆங்கிலம் விளங்கியதாவென்று தெரியவில்லை. தாம் சொல்லவந்ததை எதிராளிக்குப் புரியவைக்கும் அளவிற்கு இருந்த ஜெர்மானிய அதிகாரி, பிரிட்டிஷ்காரரின் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளத் தடுமாறினார். அவசியமென்றால் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்யட்டுமாவென்று ஹாமில்டன் கேட்க, செய்யுங்கள் என்பதுபோல தலையாட்டினார். ஏற்பாடு செய்யப்பட்டது.

– தவிர, இவ் விஷயத்தில் அதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியவைகளென சில உள்ளன. ஆயுதமெதுமின்றி, தன்னிச்சையாக நான் வந்திருப்பதை பிரிட்டிஷ் மன்னர் ஏற்கும்படி உணர்த்தவேண்டும், அடுத்து ஜூரிச்சிலிருக்கும் எனது குடும்ப முகவரிக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். தவிர பத்திரிகையாளர்களுக்கு எனது வருகைக் குறித்து எவ்வித தகவலும் இப்போதைக்குக் கசியக்கூடாது.

– மன்னிக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க இயலாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை, என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர் காலதமதமின்றி தமது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்த பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்குகளில்லை. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலராகவிருந்த சர் அலெக்ஸாண்டர் கடொகார் என்பரிடம் தகவலைக் கொண்டுபோக நினைத்தார். பலதடவை முயற்சி செய்து கடைசியில் அலெக்ஸாண்டரின் தனிச்செயலர் கிடைத்தார். அவரிடம் மிக முக்கியமானதும் அவசரமானதுமான ஒரு பிரச்சினைக்கு அலெக்ஸாண்டரிடம் பேசவேண்டுமென்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவருடைய வேண்டுதலை ஒருவரும் மதிக்கவில்லை. முக்கிய பணிகளன்றி வேறு காரணங்களுக்காக வெளிவிவகாரதுறை துணை செயலரிடம் பேசவியலாதென்று அமைச்சகத்தின் தனிச் செயலர் கறாராகக் கூறிவிட்டார். வேண்டுமானால் பத்து நாளைக்குப் பிறகு ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்பு அவரைச் சந்திக்க இயலாது என்பது அவரது பதில்.

ஹாமில்டனுக்குப் பொறுமையில்லை. அங்கே இங்கேயென்று தொடர்புகொண்டு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து பொறுமையாக விளக்கி ஒருவழியாக வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தை நெருங்க முடிந்தது. பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் அலுவலகம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்; பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. தமது அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு பிறபகல் நார்த்ஹோ¡ல்ட் என்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரிடம் அதிகாரி கொடுத்த முத்திரையிட்ட ரகசிய உறையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருக்கும் கிட்லிங்க்டன் வருமாறு சொல்லப்பட்டிருந்தது. தமது வார இறுதியைக் கழிப்பதற்கென்று பிரிட்டிஷ் பிரதமர் டிஷ்லிபார்க்கை சேர்ந்த மாளிகைக்கு வந்திருந்தார். ஆகக் கிட்லிங்டனிலிருந்து வேறொரு காரில் டிஷ்லி பார்க்கிற்கு ஆமில்டன் அழைத்துச் செல்லப்பட்டார். டிஷ்லிபார்க்கைக் கார் அடைந்தது. இரண்டாயிரம் ஹெக்டார் கொண்ட நிலப்பரப்பு. பிரமுகர்களை வரவேற்பதற்கென்று மாத்திரம் ஏழு விசாலமான கூடங்கள். இருபத்து நான்கு படுக்கை அறைகள். பத்து குளியல் அறைகள், 30 காட்டேஜ்களென்று வால்ட்டர் ஸ்காட்டால் வர்ணிக்கபட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய மாளிகை.

உள்ளே நுழைந்ததுமிருந்த கூடத்திற் பொறுப்பிலிருந்த பெண்செயலாளர் தொலைபேசியில் தெரிவித்துக்கொண்டிருந்த செய்தி, நாடு இதுவரை காணாத போர்த்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறதென்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடகூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆட்களுக்கும் பற்றாகுறை. ஒரே நேரத்தில் பல முனை தாக்குதகள். ஹாமில்டனை சர்ச்சிலிடம் அழைத்துபோனபோது, இரவு உணவை முடித்திருந்தார்.

– சொல்லுங்க, இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உங்களுக்கென்ன என்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அப்படியென்ன தலைபோகிற அவசரம்.

– மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்டர்- அதை நான் உங்கள் உதவியாளர்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. நாமிருவரும் தனியே பேசவேண்டிய தகவல்.

சர்ச்சில் சுற்றியிருந்த மனிதர்களைப்பார்த்தார், புரிந்துகொண்டவர்களைபோல அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். வான் வெளியைக் கவனித்துக்கொண்ட சர் ஆர்ச்சி பால்ட் சென்கிளேரை உரையாடலில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஹாமில்டன் நடந்ததனைத்தையும் விளக்காமாக பிரதமரிடம் தெரிவித்தார். கடைசியில், ஜெர்மனிய விமான அதிகாரியின் புகைப்படமொன்றையும் பிரதமரிடம் காணபித்தார். உண்மைதான் வந்திருக்கிற ஆள் சாதாரண நபரல்ல, இட்லருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மன் அதிகாரக் கட்டிலில் இருக்கும் ஹெஸ் என்பவர்தான், சந்தேகமில்லை. இப்பிரச்சினையில் தனது கருத்தென்று எதையும் சொல்லாதது ஆமில்டனுக்கு ஆச்சரியம். பின்னர் ஒரு முறை இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமில்டன், ‘ ஏதோ நான் உளறுகிறேன் என்பதைப் போல அன்றைய தினம் சர்ச்சிலுடைய பார்வை இருந்தது.’ என்று கூறுகிறார்.

– நல்லது, ஹெஸ் பற்றிய பிரச்சினையை இப்போதைக்கு எடுக்கவேண்டாம். மார்க்ஸ் சகோதரர்கள்(2) பார்க்க போகணும்.

சர்ச்சில் குணத்தை அறிந்தவர்களுக்கு, அவரது நடத்தையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. படம் திரையிடப்படவிருந்த கூடத்திற்கு சர்ச்சிலும் ஆமில்டனும் பிறரும் வந்தார்கள். இருக்கையில் உட்கார்ந்த மறுகணம் ஆமில்டனுக்கு நல்ல உறக்கம். விழித்தபோது நல்லிரவு கடந்திருந்தது. திரைப்படமும் முடிந்திருந்தது. திரைப்படம் சர்ச்சிலுக்கு அன்றைய பிரச்சினைகளிடமிருந்து சற்றுநேரம் விடுபட உதவியிருக்கவேண்டும். சற்று முன்புவரை அவரிடமிருந்த சோர்வுகள் இப்போதில்லை. ஹாமில்டனிடம், ஜெர்மானிய அதிகாரி ஹெஸ்குறித்து இரண்டு மணிநேர உரையாடலை சர்ச்சில் நடத்தினார். இன்னதென்றில்லை பல கேள்விகள், கற்பனைக்கெட்டாத கேள்விகள். அவ்வளவிற்கும் பொறுமையாக முடிந்த அளவு தமக்குத் தெரிந்த தகவல்களைப் பதிலாக ஆமில்டன் கூறினார். அடுத்து சர்ச்சில் இப்பிரச்சினையில் ஹாமில்டன் கருத்தென்ன என்பதையும் அக்கறையுடன் கேட்டார்.

– ஹெஸ்தானா? நன்றாகத் தெரியுமா?

 

– அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஹௌஷோபெர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-ம் அப்போ பழத்தில் புழு வந்து சேர்ந்ததுபோல- சர்ச்சில் முனுமுனுக்கிறார்.

மறுசாள் காலை சர்ச்சில், ஹாமில்டன் பிரபு, அதிகாரிகளென்று ஒரு சிறுகுழு இலண்டன் புறப்பட்டது. பத்துமணிக்கெல்லாம் 10, டௌனிங் தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குத் தகவல் போயிற்று. நண்பகல் சர் அலெக்ஸாண்டர் கடோகர், இவான் கிர்க்பட்றிக்கை தொலைபேசியில் பிடித்தார், உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு வரும்படி கட்டளை பிறந்தது. கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குனராக பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினின் இருந்திருக்கிறார். நாஜி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தமது பணிக்காரணமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக அவருக்கு ‘ஹெஸ்’ ஸ¤ம் அறிமுகமாகியிருந்தார். ஹெஸ்ஸை சந்திக்குபடி கிர்க்பட்றிக் கேட்டுக்கொள்ளபட்டார்.

– உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா?

– நிச்சயமா, -கிர்க்பட்றிக்.

கிர்க் பட்றிக்கிற்கும், ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஓன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரகூடநேரமில்லை. தொலைபேசி மணி, மறுமுனை குரல்

– ஜெர்மன் வானொலியில் ஹெஸ் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவரை உடனடியாக நீங்கள் இருவரும் சென்று பார்க்கவேண்டும்.

– அவர் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனை பக்கத்திலில்லை.

– என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, உடனடியாக உங்கள் அறிக்கை எங்கள் கைக்கு வந்தாக வேண்டும்.

ஆமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தபோது நல்லிரவுக்கும் மேல் ஆகியிருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிற எல்லா நோயாளிகளையும் போலவே பைஜாமாவுடன் இரும்பு கட்டிலொன்றில் ருடோல்ப் ஹெஸ் படுத்திருந்தார். கிர்க்பாட்றிக்கை பொறுத்தவரை ருடோல்ப் ஹெஸ்போன்றவர்களை எப்பொழுதுமே ஆடம்பரமும் அதிகாரமும் கலந்த சூழலில் பார்த்து பழகியிருந்தார். “ஹெஸ்ஸ¤டன் பொருந்தாத எளிமையும் அமைதியும் நிலவிய மருத்துவமனையின் சூழலை ஏற்றுக்கொள்ள தடுமாறினேன்”, பின்னர் தெரிவித்திருந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதிலும் ஜெர்மன் நாட்டு அதிகார மையத்தின் ஆளுமை தற்போதைக்கு இங்கிலாந்தில் கைதி. “உறக்கத்திலிருந்த அந்த மனிதர் எழுப்பப்பட்டதுமே என்னை யாரென்று புரிந்துகொண்டார்” என்றார் கிர்க்பட்றிக்.

ஆமில்டனுக்கும், கிர்க்பட்றிக் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. கைதியருகே அமர்ந்தார்கள். ஹெஸ் பத்திரமாக தம்வசம் வைத்திருந்த ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பாரென நினைக்கிறீர்கள் 90 நிமிடம், ஒன்றரை மணிநேரம் இட்லர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெல்லாம் வருத்தங்கள். ஆமில்டனோ, கிர்க்பட்றிக்கோ இடையில் குறுக்கிடவில்லை. அமைதியாக தங்கள் வியப்பினைமுகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேட்டபடி  இருந்ததனர். இடையில் அவசரமாக தொலைபேசி. கிர்க் பத்ரிக்கை அழைப்பதாக செய்தி.

– என்ன நடக்கிறது சந்தித்தீர்களா இல்லையா?

– சந்தித்தோம். மனிதர் ஹெஸ் என்பது உறுதி. சந்தேகமேயில்லை

– அவர் முடிவாக என்னதான் சொல்லவருகிறார்?

– கடந்த ஒன்றரை மணிநேரமா நாங்க அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் முடிவை எட்டவில்லை.

மீண்டும் கிர்க்பத்ரிக் ஹெஸ் இருந்த அறைக்குத் திரும்பினார். இம்முறை ஹெஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஏழாம் எட்வர்டை பற்றிய நூலொன்றை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக வாசித்ததாகவும், நேர்மையாக சார்பற்று எழுதப்பட்டிருந்த அந்நூல் அவரது மனமாற்றத்திற்குக் காரணமென்றும் கூறினார். அடுத்தடுத்து இங்கிலாந்து செய்யும் தவறுகளே ஐரோப்பிய பிரச்சினைகள்அனைத்துக்கும் காரணமென்றார்: 1904லிருந்தே இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. 1914ல் தொடங்கிய யுத்தத்திற்கு இங்கிலாந்துதான் காரணம், ஜெர்மனல்ல. 1939ம் ஆண்டு இங்கிலாந்து மாத்திரம் போலந்து நாட்டை ஜெர்மனுக்கு எதிராக தூண்டாடாமல் இருந்தால், அவர்கள் தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டிருப்பார்கள். எனவே இரண்டு யுத்தங்களுக்குமே இங்கிலாந்துதான் காரணமென்று இட்லர் நினைப்பதாக ஹெஸ் கூறினார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்தத்தில் தோற்பது நிச்சயம். எங்கள் வசமிருக்கிற விமானங்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அமெரிக்கா, இங்கிலாந்து என சேர்ந்துவந்தாலும் ஈடு செய்யமுடியாது. எங்களிடமுள்ள பயிற்சிபெற்ற விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகம். இப்போதைக்கு விமானப் படை பலத்தில் எங்களை வெல்லும் நிலையில் நீங்களில்லை. எனினும் இட்லர் பொறுமை காத்தார். 1940ல் ஜெர்மன் எல்லைக்குள் நீங்கள் விமானப்படை தாக்குதலைத் தொடங்கியபொழுது ஓரிரு நாட்களில் நிறுத்திக் கொள்வீர்களென நினைத்தார். தவிரவும் இட்லருக்கு பிரிட்டிஷ் புராதன மற்றும் கலாச்சாரச்சின்னங்களை மீது பற்றுதலுண்டு. பதில்தாக்குதலைத் தொடுக்க பல வாரங்கள் நாங்கள் காத்திருந்ததையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. எங்கள் கப்பல் படை வலிமையும் இளப்பமானதல்ல. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மன் கப்பல் கட்டுந்தளங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்களில் உங்கள் நாட்டிற்கான அனைத்து கடல்வழிகளும் அடைக்கப்படும். என்ன செய்யபோகிறீர்கள். ஆனால் ஜெர்மனில் நிலைமைவேறு. உணவுப் பொருள்களென்றாலும், அத்தியாவசியப் பொருள்களென்றாலும் கணிசமாக சேமிப்பில் இருக்கின்றன. உள்நாட்டில் திட்டமிட்டு உற்பத்தியிருப்பதோடு, எங்கள் ஆக்ரமிப்பில் உள்ள நாடுகளிலிருந்தும் கொண்டுவரபட்ட பொருள்கள் கையிருப்பில் உள்ளன. அடுத்து ஜெர்மன் மக்களும் தங்கள் தலைவனை முழுமையாக நம்புகிறார்கள். ஆக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் கை ஓங்கியிருக்கிறது.

– பிறகு எதற்காக இங்கே வந்தீர்கள்.

– சொல்கிறேன். போரினால் என்ன லாபம் சொல்லுகுங்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்பலியையும், எளிதில் சீரமைப்பபடமுடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம். நான் இங்கே வந்திருப்பது எங்கள் ·ப்யூரெருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாக போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர இட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்துமீது எவ்வித தப்பான எண்ணமுமில்லை. உலகமனைத்தையும் ஜெர்மன் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணமெல்லாம் பலரும் நினைப்பதுபோல எங்களுக்கில்லை. எங்கள் ஆர்வமனைத்தும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவின் நலன்களன்றி வேறு கனவுகளில்லை. குறிப்பாக நாளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு வீழ்ச்சியெனில் முதலில் வருந்துவது அவராகத்தானிருக்கும்.

(தொடரும்)

 

—————————————————————

1. http://en.wikipedia.org/wiki/Lebensraum

 

2. Marx Brothers –  – ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க சகோதர்கள் நடிப்பில் வெளிவந்த திரைபடங்கள் நகைச்சுவைக்குப் பெயர்பெற்றவை.

 

 

 

கதையல்ல வரலாறு 1-1

“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங்,  -பிரெஞ்சு வரலாற்றாசிரியர்

வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் மனைவி மீது நம்பிக்கைக்கொள்வதுபோல அல்லது மனைவி தன் கணவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒப்பானது அது. சந்தேகித்தால் வரலாற்றையும் மூக்கைப்பிடித்துகொண்டு வாசிக்கவேண்டியிருக்கும். தவிர இன்னொன்றையும் மறந்துவிடமுடியாது, எதையும் அறிவுகொண்டு தீர்மானிக்கும் இனம் மனித இனமென்றாலும், அந்த அறிவையும் புலன்களே பெரும்பாலும் வழி நடத்துகின்றன. அறிவு ஜீவிக்கவேண்டுமெனில் புலன்களின் அவாக்களை பூர்த்திசெய்யும் நிர்ப்பந்தமுமிருக்கிறது, எனவே வரலாற்று உண்மைகள் என எழுதபட்டபோதிலும் வரலாறெல்லாம் உண்மைகளா என்றால் இல்லை. ஒன்றிரண்டு விழுக்காடுகள் திரித்தும், உண்மையை மறைத்தும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. செஞ்சியைப் பற்றி நாவலொன்று எழுதுவதற்கான தகவல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தேடிச் சேகரித்து வருகிறேன். கடந்தவருடம் அதன் ஓர் அங்கமாக பாரீஸிலுள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்திற்கு சென்றபோது அந்த ஒன்றிரண்டு விழுக்காடுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நண்பரொருவரின் புதிய இதழொன்றில் இத்தொடரை எழுதவும் விரும்பினேன். என்ன காரணத்தாலோ அவ்விதழ் முதல் இதழிலேயே முடங்கிப்போனது. பல மாதங்களுக்குப் பின்னர் செஞ்சியைப்பற்றிய நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் அத்தொடரை எழுத விரும்பினேன்.

நாகரத்தினம் கிருஷ்ணா

 1. ருடல்·ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன்

 11-5- 1941. தேதியைக்கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி. பெஷ்ட்ஸ்காடன் ஆல்ப்ஸ்மலையின் மார்பில் வாய்திறந்திருந்த ஓர் அழகு சிற்றூர். வசந்தகாலத்திற்கென்றே பிரத்தியேக கவனமெடுத்து தகிக்கும்  சூரியனால் பொன்முலாம் பூசப்பட்ட ஆல்ப்ஸ் ஜொலிக்கிறது. நமக்கு ஆல்ப்ஸ் மலையோ, அதன் அழகோ முக்கியத்துவமல்ல புனைகதையெனில் ஓர் அரைபக்கத்தை ஆல்ப்ஸ் மலைக்காக மட்டுமே ஒதுக்க முடியும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும்  அவ்விடம் அசாதாரணமானது. அன்றைய தேதியில் காற்றுகூட அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது.  பெரிய கூடம். ஐரோப்பாவின் மத்தியிலுள்ள பிற பிரதேசங்களைப்போலவே மரங்களின் அவ்வளவு உபயோகத்தையும் செவ்வனே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விசாலமான கூடம்; விலையுயர்ந்த சிவப்பு நிற சலவைக் கற்கள் பதித்த தரை; அதற்கு அழகு சேர்த்ததுபோல சாதுவாக தரையிற் கிடந்த விலைமதிப்பற்ற இரத்தின கம்பளம். ஆகஅந்தக் கூடமும், அதன் எழிலங்காரமும், விலை மதிப்பற்ற இரத்தின கம்பளமும் இடத்தின் சொந்தந்தக்காரர்களையும் புழங்கும் மனிதர்களையும் அவர்களின் தராதரத்தையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவலாம் .  உங்கள் ஊகத்தை உறுதிபடுத்த மேலும் சிலபொருட்கள்: நீள்சதுர மேசையொன்று அதன் மீது அவ்வப்போது அந்நபரின் கைபட்டு சுழலும் பூகோள உருண்டை.. நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரை தெரிகிறதா? உலகனைத்தையும் கட்டி ஆளவேண்டுமென கனவுகண்ட ·பூரெர்: தலைவன், வழிநடத்துபவன் –  தேவ பாஷையில் சொல்லவேண்டுமெனில் அசுரன். அடோல்ப் இட்லர்

உறையிலிருந்த கண்ணாடியை எடுத்தணிந்த அடோல்·ப் இட்லர் உறையிலிருந்த கடிதத்தை எடுத்த வாசிக்கலானார். எதிரில் எந்த நேரமும் தமது உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற குலை நடுக்கத்தில் ருடல்·ப் ஹெஸ்ஸின் முதன்மைப் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸ் பிண்ச் (Karlheinz Pintsch). ருடல்·ப் ஹெஸ்(Rudolf Hess). நாசிஸ ஜெர்மனியின் மூன்றாவது முக்கிய பிரதிநிதி. அடோல்·ப் இ¢ட்லரின் உயிர்த் தோழன். நம்மவர்களை கேட்டால் விதிப்படிதான் நடக்குமென்பார்கள், அதற்கான சாத்தியங்கள் பிறருக்கு எப்படியோ. ருடோல்ப் ஹெஸ்ஸை அறிந்தவர்கள் விதி வலியதென துண்டைப்போட்டு தாண்டுவார்கள். இரண்டாவது உலகப்போரை நிறுத்துவதற்காக தமது சுயமான முடிவின்படி இங்கிலாந்திற்கு யுத்த விமான மொன்றில் பறந்துசென்றுள்ளதாக தெரிவித்துக்கொண்ட அக்கடிதம், “எனது இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான  சாத்தியங்கள் குறைவு, பலனில்லாமலும் போகலாம் என்பதை அறிந்தே இருக்கிறேன், விதி எனக்கெதிராக ஒருவேளை இருந்தால் அதன் விளைவுகள் ஜெர்மன் நாட்டுக்கோ, உங்களுக்கோ பாதகமாக இருக்ககூடாது என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று மறுக்கவோ அல்லது என்னை ஒரு பைத்தியக்காரனென விமர்சனம் செய்யவோ…”  தொடர்ந்து கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த வரிகளை முழுவதுமாக இறுக்கமான முகத்துடன் இட்லர் வாசித்து முடித்தார்.

சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் தமது வலதுகைபோலிருந்த ஹெஸ், பிரிட்டனுடன் சமாதானம் பேசலாம் என்று சென்றிருப்பதை அறிந்த இட்லரின் உண்மையான மனநிலையை விளங்கிகொள்வதில் நாஜி அரசாங்கத்தின் பிற தலைவர்களுக்கே மிகவும் கடினமாக இருந்தது. மேசையிலிருந்த அழைப்பு மணியை பலம்கொண்டமட்டும் தட்டினார், அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரது அலுவலகம் களேபரத்தில் மூழ்கியது. ரைஷ்மார்ஷல் (Reichmarschall)- தலைமைத் ராணுவ தளபதி- கோரிங் (Goering) என்பவரையும், வெளிவிவகார அமைச்சர் யோவாரின் வொன் ரீபந்த்ரோப்பையும் (Joachin von Ribbentrop) உடனே தம்மை வந்து பார்க்க ஏற்பாடு செய்யும்படி தமது பாதுகாவலர் ஒருவரிடம் ஆணை பிறப்பித்தார். இத்தனை களேபரத்திற்கிடையிலும், அடோல்ப் இட்லர் கோபமின்றி அமைதியாக இயங்கியது ஹெஸ் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸை வியப்பிலாழ்த்தியது. உடனடியாக தனது தலைக்கு ஆபத்தில்லை என்று எண்ணிக்கொண்டார். இட்லரின் ஒருசில கேள்விகளுக்கு அவரிடம் பதில்களிருந்தன. முதல் நாள் மாலை ஆறுமணி பத்து நிமிட அளவில் அவுஸ்பூர் என்ற ஊரிலிருந்து ஸ்காட்லாந்திற்கு அவர் பறந்து சென்றதையும், அங்கு ஆமில்ட்டன் பிரபுவை சந்திப்பதென்ற அவரது நோக்கத்தையும் கார்ல்ஹைன்ஸின் சுருக்கமான பதிலிருந்து ·பூரெர் பெற முடிந்த தகவல்கள்.

அன்றையதினம் அடுத்துவந்த சந்தர்ப்பங்களில் அடோல்ப் இட்லரின் குணம் வேறாக இருந்தது. செய்தியை அறிந்தபோது இருந்த இட்லர் வேறு என்பதற்கொப்ப  பிற சம்பவங்கள் அமைந்தன. தளபதி கேத்தெல் (Keitel) என்பவரிடம் இட்லர், ஹெஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றாக மறுத்தார், அது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றார். 1946ம் ஆண்டு நூராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி குற்றவாளிகளைக்குறித்த வழக்கு விசாரணையின்போது சம்பவத்தை நினௌகூர்ந்த கேத்தெல், “அன்றைக்கு ·பூரெரை அவருடைய மிகப்பெரிய குடியிருப்பில் சந்தித்தது நினைவிருக்கிறது, கால்களை எட்டிவைத்து நடந்தபடியிருந்தார். அவரது சுட்டுவிரல்முனை நெற்றிப்பொட்டிலிருந்தது. இப்படியொரு காரியத்தைச் செய்ய அந்த ஆளுக்கு(‘ஹெஸ்ஸ¤க்கு) பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். அவரது மூளைக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. தனது நடவடிக்கைக் குறித்து நமக்குத் தெரிவித்திருக்கும் கடிதத்தினைவைத்து அப்படியொரு முடிவிற்குதான் என்னால் வரமுடிகிறது என்று சொன்னதை இன்னமும் நான் மறக்கவில்லை”, என்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பங்களில் இன்றளவும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிர் நாஜி ஜெர்மனியின் தலைமை பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பின்வாசல்வழியாக எதிரி நாட்டில் இறங்கியது. அப்படிச்சென்றவர் ஏதோ நாஜி ஜெர்மனியின் கெஸ்ட்டாப்போவால் தேடிக் கைதுசெய்யப்படவேண்டியவர்களில் ஒருவருமல்ல. கடிதத்தை முதலில் பார்த்தபோது இட்லர் நடந்துகொண்டவிதத்திற்கும் பின்னர் அவர் நடந்துகொண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடோல்·ப் இட்லரின் நெருங்கிய சகாக்களில் ஒருவர், போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி தன்னிச்சையாக ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துவருகிறேன் எனப் புறப்பட்டுப்போகமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. நடந்ததெதுவும் எனக்குத் தெரியாதென்ற இட்லரின் சொற்களை எந்த அளவிற்கு நம்புவது? பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம்  நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்ன?அவர் மனைவி என்ன சொல்கிறார்? ·பூரெர் சுற்றியிருந்தவர்களில் குறிப்பாக கேப்டன் பிண்ச், பேராசிரியர் கார்ல் ஹௌஸ்ஷோ·பர் அவரது மகன், ஹெஸ் பயணித்த மெஸ்ஸெர்ஷ்மித் விமானத்தை உருவாக்கியவர் ஆகியோரின் கருத்து இறுதியில் ஆங்கிலேயர்கள் பங்களிப்பென்று அனைத்தையும் சார்பற்று பார்க்கவேண்டியிருக்கிறது.

*                                  *                                  *                                       *

டேவிட் மக் லீன் என்ற விவசாயிக்கு அன்றையதினம் வரலாற்றில் தனது பெயரும் போகிறபோக்கிலே குறிப்பிடப் படுவதற்கான வாய்ப்பு அமையப்போகிறது என்பதை உணராமலேயே வழக்கம்போல உறங்குவதற்காக தனது அறைக்குத் திரும்பும் நேரம். விமானமொன்றின் எந்திர சத்தம் வெகு அண்மையில்கேட்கவே திகைத்து நின்றான். காரைபூசிய ஆவனது வீடு பூகம்பத்திற்கு உள்ளானதுபோல அதிருகிறது. அதிர்ச்சியிருந்து மீளாமலேயே யுத்தகால வழக்கின்படி முன்னெச்சரிக்கையாக விளக்கினை அணைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று சன்னல் திரையை விலக்குகிறான். மூர்ச்சையாகாத குறை. பாராசூட்டுடன் ராணுவ அதிகாரிபோலிருந்த ஒருவன் குதிப்பதை முதன்முதலாகப் பார்க்க அவனுக்கு அதிசயமாகவும் இருக்கிறது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அடுத்த நொடி சுய நினைவுக்குத் திரும்பிய மக் லீன் அவசர அவசரமாக உடையை அணிந்துகொண்டு, தமது தாய் படுத்திருந்த அறைக்காய் குரல்கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்தான்.

பாராசூட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அதிகாரி முயன்றுகொண்டிருப்பது தெரிந்தது.

– யார் நீ?- மாக் லீன்

பாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன், முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். காலெடுத்துவைக்கையில் தடுமாறினான், இலேசாகத் தாங்கி நடக்கிறான். மெல்ல அடியெடுத்து வைத்து இவனிடம் நெருங்கி வந்தவன் நிதானமாக யோசித்துப் பேசிய ஆங்கிலத்தில்:

– நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். எனதுபெயர் அவுட்மன் ஆல்·ப்ரெட் ஓர்ன். டங்காவெல் அவுஸ் வரை செல்லவேண்டும், ஆமில்டன் பிரபுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். – என்றான்.

இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஜெர்மானியன் ஒருவன் கிரேட் பிரிட்டனுக்குள் வந்திருக்கிறானென்பதை நம்புவதற்கு பிரிட்டிஷ் விவசாயி தயாராக இல்லை. விமான இரைச்சலைக்கேட்டு அதிர்ந்துபோய் அதற்குள் மற்றுமொரு விவசாயியும் வந்து சேர்ந்திருந்தான் பெயர் கிரேக். இப்படியான சிக்கலை இதற்கு முன்பு சாதாரணக் குடியானவர்களான மாக்லீனும், கிரேக்கும் சந்திக்க நேர்ந்ததில்லை. இருவருமாக கலந்தாலோசித்தார்கள். மாக்லீ, ஜெர்மானியனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பாதுகாப்பதென்றும், கிரேக் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையின் வான் சமிக்ஞைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த சில விநாடிகளில், பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் மாக் லீன் வீட்டுக்குள் குவிந்துவிட்டார்கள். அவர்களின் தலைவனான வில்லியம்ஸன் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் நன்கு குடித்திருந்தான். எனினும் ஜெர்மன் அதிகாரியை முதுகில் துப்பாக்கியை முனையை அழுத்திப்பிடித்தபடி அழைத்துச்செல்ல போதுமான நிதானத்துடன் இருந்தான். அவந் கீழிருந்த ராணுவ அதிகாரிகள் ஜெர்மானிய உயரதிகாரி குதிகால் வலியால் துடிப்பதை அறிந்து அருகாமையிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

ஜெர்மானிய கைதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவன் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டான்.

– இந்த ஆளை எங்கோ பார்த்தஞாபகம். சண்டைக்கு முன்பாக ஜெர்மனியில் உண்மையில் பார்த்திருக்கிறேன். அநேகமாக அவர் ருடோல்ப் ஹெஸ்ஸாகத்தான் இருக்கக்கூடும், இட்லருக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அடுத்த கணம் அங்கிருந்த பிறஅதிகாரிகள் வாய்விட்டு சிரித்தனர். “ஆனாலும் உனக்கு கற்பனை அதிகம் ஐயா”, என்றனர்.

(தொடரும்)

 

 

 

 

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -10

 கொன்க்கூர் இலக்கிய பரிசு:

எட்மண்ட் டெ கொன்க்கூர் (Edmond Huot de Goncourt)  என்பவரின் மரணத்திற்கு பின்பு அவரது உயிலின் அடிப்படையில் அவரது சகோதரர் ழூய்ல் கொன்க்கூர் (Jules Huot de Goncourt) பெயரில் 1900 ம் ஆண்டில் ஏற்படுத்தபட்டதே கொன்க்கூர் இலக்கிய பரிசு. சகோதரர்கள் இருவருமே எழுத்தாளர்கள். இணைந்தும் தனித்தனியாகவும் இவர்களுடைய படைப்புகள் பிரெஞ்சில் உள்ளன. இவ்வமைப்பு கவிதைகள், கட்டுரைகள் என்று பிற படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறபோதிலும் புனவுகளுக்கு வழங்கப்படும் பரிசே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சில் இன்றுவரை பல இலக்கிய பரிசுகள் இருப்பினும், கொன்க்கூர் இலக்கிய பரிசு என்பது ஓர் எழுத்தாளனை சிறந்த படைப்பாளியாகவும் பரிசுபெற்ற படைப்பின் விற்பனையை அதிகரிக்கவும் துணைநிற்கிறது. பிரெஞ்சு மொழியில் பரிசுக்கான ஆண்டில் வெளிவந்த நாவல்களைக் கணக்கிற்கொண்டு தேர்வு செய்கிறார்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுத் தகுதி போட்டிக்கான ஆண்டில் ‘உரைநடையில் வெளிவந்த மிகச்சிறந்த புனைவு’ (‘le meilleur ouvrage d’imagination en prose, paru dans l’annளூe’). போட்டியை நடத்துபவர்களே – (l’Acadளூmie Goncourt) தேர்வுக்குரிய நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். படைப்பாளரோ, பதிப்பகமோ தங்கள் நூல்களை அனுப்பவேண்டியதில்லை, அனுப்பவுங்கூடாது. ஒருமுறை பரிசுபெற்றவரை மறுமுறை தேர்வுசெய்வதில்லை.

நான்கு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. முதற் கட்டத் தேர்வில் (செப்டம்பர் முதல் வாரம்) 15 நூல்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் 8 நூல்கள் ( அக்டோபர் முதல்வாரம்) மூன்றாம் கட்டத் தேர்வில் நான்கு நூல்கள் (அக்டோபர் இறுதிவாரத்தில்) என முடிவு செய்கிறார்கள் ஆக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவில் (அக்.25) 2011 நவம்பர் மாதம் 2ந்தேதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தேர்வுக்குத் தகுதியானவையென நான்கு படைப்புகளை தெரிவு செய்துள்ளனர்.

1. Sorj Chalandon –  Retour தூ Killybegs – Grasset
2. Alexis Jenni –  L’Art franவூais de la guerre – Gallimard
3. Carole Martinez –  Du Domaine des Murmures – Gallimard
4. Lyonel Trouillot – La belle amour humaine – Actes Sud

1. Retour à Killybegs – கில்லிபெக்கிற்கு திரும்புதல்  என்ற நூல் அயர்லாந்து விடுதலைப்படை (IRA)- என்ற தீவிர தேசிய அமைப்பில் பங்குபெற்று பின்னர் அந்த அமைப்புக்கு எதிராக அரசுடன் சேர்ந்து செயல்பட்ட  Tyrone Meehan என்பவரின் செயபாட்டில் உள்ள அரசியலையும், மனித குணபண்பையும் இந்த மனிதனின் ஊடாக  ஆசிரியர் சாற்பற்ற விவாதத்தை எழுப்புகிறார். இலங்கை நண்பர்கள் இப்படியொரு நாவலை கருணாவை மையமாகக்கொண்டு எழுதலாம் ஆனால் சார்பற்று சொல்லப்படவேண்டும். வெறும் அரசியல் சார்ந்து சொல்லாமல் மனித மனங்கள் முரண்களை பற்றுவதற்கான கணங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சொல்ல உளவியல் அடிப்படையிலான கண்ணோட்டம் அவசியம். Sorj Chalandon: நூலின் ஆசிரிரியர். Liberation தினசரியில் பத்திரிகையாளர். இவரது 4வது நாவலே மேலேகுறிப்பிடப்பட்டது. இதற்கு முன்பு  மூன்று நாவல்கள் வந்துள்ளன. மூன்றுமே இலக்கிய பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளன. இந்நாவல் கடந்த செப்டம்பர்மாதம் வெளிவந்தது.

2-L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்லது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.

3.- முனகலின் வெளி (Du Domaine des Murmures). இடைக்காலத்தைப்பற்றி பேசும் புனைவில் உண்மை புனைவு இரண்டுமுண்டு. பன்னிரண்டாம் நூற்ராண்டுக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறகதை. முழுக்க முழுக்க புனைவை வடிப்பதைக்காட்டிலும், உண்மை வரலாற்றை புனைவிற்கொண்டுவருவதற்கு உழைப்பு வேண்டும். உரிய சான்றுகள் வேண்டும் அதை உண்மையா என பலமுறை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், காலத்தை வரையறுப்பதிலும் வரிசையிடலிலும் கவனம் வேண்டும். செஞ்சியைப்பற்றி எனது நாவலில் சீர்காழியில் நடைபெறும் முலைப்பால் உற்சவத்தின் மாதமும், கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கும் கால வரிசையில் பிறழ்ந்து இருப்பதைக் கவனித்து திரும்பவும் எழுதவேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு இரட்டைசடை என எழுதி பின்னர் அதைத் தைத் திருத்த வேண்டியிருந்தது. இதுபோன்று சின்ன சின்ன அவதானிப்புகள் தேவையாகின்றன. அதற்கான மொழிகள் வேறு உடை, உணவுமூறை, வைத்திய மென்று இன்றுள்ள சித்த ஆயுர்வேதத்தை போகிற போக்கில் மறுபதிவுசெய்யலாமா? அவற்றை எவைகளெல்லாம் உண்மையிலிருந்தன. என்கிற கேள்விகள் வரலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டை முன்வைத்துசொல்லப்பட்டுள்ள இந்நாவல் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கினேன். இதற்குப் பரிசு கிடைக்கவேண்டும் என்பதென் விருப்பம்.

ஓர் இளம்பெண் – Esclarmonde- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்கிற நமது ஆண்டாள் வழிவந்தவள். பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தை மறுக்கிறாள். ஆழ்வார் ஆண்டாளை அரங்கனோடு சேர்த்துவைக்கிறார். இங்கே Esclarmonde  கோட்டையொன்றில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு வெளியுலக்தொடர்பு என்பது ஒரு சிறிய சன்னல். அவளுடைய சிறை அவளுக்குக் கட்டப்படுள்ள சமாதியென்று தெரியாமலே அங்கிருக்கிறாள்;  இப்புதிய தனிமைக்கும் அவள் நேசித்த தனிமைக்கு பாரிய இடைவெளிகொண்டதென்கிற உணரத்தொடங்குகிறபோது, செத்த உயிர்களோடு கைகோர்க்க நேரிடுகிறது தான் உயிருள்ள ஜென்மமா, இறந்த ஜென்மமா எனத் தெரியாமல் தடுமாறுகிறாள். தந்தையின் அதிகாரம் கழுத்தை நெரிக்கிறபோது அவளுடைய சுதந்திரக்குரல் அல்லது ஈனஸ்வரம் அவளுடைய எம்பிரான் வாழும் புனிதஸ்தலத்தில் (இஸ்ரேல்)எதிரொலிக்கிறது. இநாவல் குறித்து தனிக்கட்டுரை எழுதவேண்டும். Carole Martinez என்ற பெண்நாவலாசிரியருக்கு இது இரண்டாவது நாவல். அவரது முதல் Le Cஞூur cousu, Paris, னditions Gallimard மூன்று பரிசுகளை வென்ற நாவல்.

4. ஓர் இனிய மானுடக் காதல் -( La belle amour humaine)  Lyonel TROUILLOT என்கிற ஹைத்திநாட்டைச்சேர்ந்த படைப்பாளியின் கதை. மேற்கிந்திய தீவு ஒன்றிர்க்கு தனது தந்தையைத் தேடிவரும் மேற்கத்திய இளைஞனின் உளவியல் தேடலை விவரிக்கும் புனைவில் இன்றைய உலகவாழ்க்கைக்கு மனிதனின் எந்த அவதாரம் உகந்ததென்கிற கேள்விக்கு விடைதேடுகிறது. நாவலாசிரியருக்கு இது மூன்றாவது நாவல். .

——————————————————

இரசனையில் நேர்ந்த தவறு – ஓர் இளம்பெண்ணின் முதல் நாவல்.

ஆயிரம்பேர் வலியுடன் வந்தால்  ஐந்துபேரைகூட அனுமதிப்பதில்லை என்கிற விதிமுறையைக் கறாராகப் பின்பற்றுகிறவர்கள் மேற்குலக பதிப்பகங்கள். எழுத்தாளர்கள் நல்ல செய்திவராதா என காத்திருக்கிறார்கள். அனுமதித்து சுகப்பிரசவம் என்ற செய்திக்கிடைக்கிறது. தாயும் சேயும் நலமென்கிறார்கள். அடுத்து வேறொருவர் வருகிறார். இவருக்கு விமர்சகர் என்று பெயர். பிறந்த குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியம் ஆகியவற்றைப்பற்றிய பாரபட்சமற்ற குறிப்பை எழுதுகிறார். இவர்கள் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆரோக்கியமான குழந்தை மரிப்பதில்லை. தாய்க்கும் சந்தோஷம். ஒரு புதிய எழுத்தாளனுக்கு இலக்கிய இதழ்தரும் ஆதரவென்பது அவனது முதல் நூலுக்கு விமர்சகர்கள் தரும் மதிப்பெண்களை பொறுத்தது. இந்த புண்ணியவன்கள் கொண்டாடவும் தெரிந்தவர்கள், காலில்போட்டு மிதிக்கவும் அறிந்தவர்கள்.  ஒரு புதிய எழுத்தாளனை, எந்த வரிசையில் நிறுத்தலாம், அவன் யாரைபோல எழுதுகிறான், எதிர்கால இலக்கிய உலகில் அவன் பங்கு என்ன? என்றெல்லாம் தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பிரான்சை பொறுத்தவரை 99 விழுக்காடு விமர்சகர்கள் எழுத்தாளர்களல்ல. எனவே சார்பற்ற அவர்களின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இருக்கின்றன.

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

La faute de goût (இரசனையில் நேர்ந்த தவறு) என்ற நாவல், பிரெஞ்சில் அண்மையில் வந்துள்ள ஒரு புனைவு. ஆசிரியர் ஓர் இளம் பெண்படைப்பாளி, முதல் நாவலுங்கூட. பெயர் கரோலின் லுனுவார். புனைவின் நாயகி மத்தில்து. அவள் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர். தற்கால இளம்பெண்ணுக்குரிய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் நேரத்தை ஒதுக்கியதுபோக அவ்வப்போது எப்படி போக்குவதென்று தெரியாமல் சில பொழுதுகளும் அவருக்குக் கிடைக்கின்றன – (எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருமுறை கொஞ்சம் நேரம் கிடைத்தது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்திற்காக மெழுகுத்திரியை ஏற்றினேன், என்றார்) இப்பெண்ணுக்கும் அதுபோல நேரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகஸ்டுமாதம் 15ந்தேதி கிடைத்த வாரவிடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதென்று வந்திருக்கிறாள். செல்வாக்கான அக்குடும்பத்தைச்சேர்ந்த பலரும் கூடியிருந்த அம்மாளிகை குடுபத்தின் மூத்த உறுப்பினரான பாட்டி மற்றும் அவளுடைய சகோதரிகளின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இடைக்கால பிரபுத்துவ மன நிலையில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்வை நகர்த்தும் குடும்பம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஏவலாட்கள், பணிப்பெண்கள், பணியாட்கள், தோட்டக்காரர், சமையல்காரரென ஒரு பட்டாளமே வீட்டிலிருக்கிறது.

மாளிகையின் நீச்சல் குளத்தில் குளிக்க வருகிறவளுக்கு புத்தனுக்கு உதித்ததுபோல ஞானோதயம். புத்தியில் ஏதோ உரைக்கின்றது. உலக நடப்புகளில் அக்கறையின்றிருக்கும் தனது வாழ்க்கை குறித்து கேள்வி எழுகிறது. ஓய்வு கிடைக்கிறபொழுது இவளுக்கும் எதையாவது எதிர்த்துபோராடலாம், கலகக்குரல் கொடுக்கலாம் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. ஆனால் எதற்கு எதிராக பேராடுவதென்ற கேள்வி எழுகிறபோது பதிலின்றி தடுமாறுகிறாள். இன்றைய இளைஞர் அல்லது இளம்பெண்களின் போராட்டம் எதற்காக இருக்கக்கூடும்? உறங்கும் நம் உணர்வுகளை உசுப்பக்கூடிய பிரச்சினைகள் எவை? தனது குடும்பம் தனது சுற்றமென்று செல்லரித்த குறியீடுகளிலன்றி பிறவற்றில் நாட்டமின்றியிருக்கும் பெண்ணொருத்தியின் இலட்சியத்தை வளர்த்தெடுப்பது எப்படி? ‘பதினான்காம் லூயிகாலத்து ஒரு ஜோடி நாற்காலிகள் (அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள நடத்திய யுத்தங்கள்), ஒரு நிலைக்கடிகாராம், இளமைமாறாதிருக்கும் ஒரு நிழற்படமென்று உருமாறிப்போன பாட்டியின் வழித்தடத்தில் இவளும் பயணிக்கபோகிறாளா?  என்ற கேள்விகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆசிரியர் குறிக்கோளின்றியும் உயிர்ப்பின்றியும் வாழ்க்கையை நகர்த்தும் சக வயதினரை அங்கதத்துடன் விளாசுகிறார். முதல் நூலென்றாலும் சுருங்கக்கூறி விளங்கவைப்பதென்கிற முடிவை எடுத்திருக்கவேண்டும். கதைக்களன்,  மாளிகையை விட்டு வெளியிவரவில்லை, எதைச்சொல்லவேண்டுமோ அதைசொல்லியிருக்கிறார். பொதுவாக முதல் நாவல் எழுதுகிறபோது படித்தனைத்தையும் சொல்லிவிடத் துடிப்போம். சொந்தத் தொழிலுக்காக சட்டம்பயின்றதை தவிர நாவலில் ஆசிரியரின் வேறு ஞானங்களை சந்தியில் நிறுத்தும் முயற்சிகளில்லை. எண்ணி நூறே நூறுபக்கங்கள். போதுமா? போதும். பக்கங்களில் என்ன இருக்கின்றது. சொல்வதில் இருக்கிறது சொல்லப்படும் பொருளில் இருக்கிறது. ஓடும் நீரில் துரும்புபோல மீள முடியாத தனதுவாழ்க்கைதேர்வுகுறித்த மத்தில்து பெண்ணின் கவலையை நாமும் புரிந்துகொள்கிறோம் அவள் கையாலாதத்தனத்தைக்குறித்து எரிச்சல் அடையவோ பரிதாபப் படவோ எந்தத் தகுதியும் நமக்கில்லையென்றுதான் சொல்லவேண்டும்.

இப்புனைகதைக்கு பிரான்சின் தெற்கு பகுதியில் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பொன்றில் நிகழ்ந்த சம்பவமும் அதை தினசரியில் வாசிக்க நேர்ந்ததும் காரணமென ஒரு பேட்டியில் நாவலாசிரியர் தெரிவிக்கிறார்.  அச்செய்தியின் படி காலனிவாசியொருவர் குடியிருந்தவர்களுக்குப் பொதுவான நீச்சல் குளத்தில், காவல் பெண்மணியொருத்தியை குளிக்க அனுமதிக்கப்போக பிற காலனிவாசிகள் அதை எதிர்த்து உடனடியாக செயற்குழுவைக்கூட்டி கண்டிக்கிறார்கள். இச்சம்பவம் தன்னிடத்தில் ஏற்படுத்திய ஏன்? எதற்காக? என்ற கேள்விகளுக்கான விடை தேடலே நாவலுக்கு மூலமென்பது அவர் தரும் விளக்கம்.

பொதுவாக நடுத்தர ஏழைவர்க்கத்தைசேர்ந்த குடும்பங்களில் இளம்வயதினருக்குள்ள இடம் செல்வந்தர் குடும்பங்களில் இருப்பதில்லை. அபரிதமான செல்வமும் அதைச் சம்பாதித்த அல்லது கட்டிக்காத்த வகைமையும் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளையாக பெண்ணாக இருப்பதே  உகந்தவாழ்க்கை என்ற அடிமைச்சிந்தனைக்கு செல்வந்தர் பிள்ளைகள் தங்களை ஒப்படைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஒரு குடும்பத்தின் தலைமுறையாக, கதாநாயகியை நிறுத்தி கலகக்குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ஒன்றை எடுத்துச்செல்வதில் நேர்கிற உணர்வு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி? இணங்கிப்போவதா முரண்படுவதா? மனிதம் எட்டிய உயர்வு இணங்கியதால் நேர்ந்ததல்ல முரண்களால் உற்றது. மரபு -நவீனம்; பழமை -புதுமை இவற்றினை எதிரெதிர் நிலையிலிருந்து ஆதரிப்பதைத்  தவிர்த்து, வெற்றி பெற்றவனாக உலாவர இவை இரண்டிற்குமிடையிலுள்ள தடத்தின் மேடுபள்ளங்களை அறிந்து நடக்கத்தெரிந்த சாதுர்யம் மட்டுமே போதுமா? இவற்றையெல்லாம் இயற்கை எழுதிய விதியென சொல்லிவிட்டு உண்பது, உறங்குவதென்று காலத்தைத் தள்ளலாமா? என்பதுபோன்ற வினாக்களுக்கு செக்குமாட்டின் வாழ்க்கையை பற்றிய உண்மைகளை கதைப்படுத்தி ஆசிரியர் விடைதேடுகிறார்.

——————————————————

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -9

பாகிஸ்தானையும் இந்தியாவையும் போலவே இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக இணக்கமிருப்பதில்லை. அவர்கள் இடம் போனால் இவர்கள் வலம் போவார்கள். அது உண்மையுங்கூட. இங்கிலாந்தில் வாகனங்கள் சாலையில் இடப்புறம் செல்லும் பிரான்சில் வலப்புறம் செல்லவேண்டும். உலகமெங்கும் இதுதான் நடைமுறை காமன்வெல்த் நாடுகளைத் தவிர்த்து. மெட்ரிக் முறையை பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டாலும் ஆங்கிலேயருக்கு பவுண்டும், அவுன்சும் விடக்கூடாதவை. ருக்பி(Rugby)யை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சுக்கார்கள் கிரிக்கெட் எனில் முகம் சுளிப்பார்கள்.

இந்தியா பாகிஸ்தான் மனக்கசப்பென்பது 1947 பிரிவினைக்குப்பிறகு வலுப்பெற்றதெனில் இங்கிலாந்து பிரான்சு மனக்கசப்பென்பது பதினோறாம் நூற்றாண்டில் நொர்மாண்டி பிரதேச பிரெஞ்சுமக்கள் (The Normans) ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் (the Battle of Hastings-1066AD) ஆங்கிலேயர்களை தோற்கடித்ததில் தொடங்கி நூறாண்டுபோராக பின்னர் ஊதி பெருத்தது. ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் இழந்த மானத்தை ஆங்கிலேயர்கள் வாட்டர் லூ சண்டையில் மீட்டெடெடுக்க வேண்டியிருந்தது. இரு நாடுகளுக்கிடையேயான காலனி யுத்தங்களை வரலாறு தெரிவிக்கிறது. இருவரின் சண்டையில் காலனிநாடுகள் பாதித்த சரித்திரத்திற்கு நாமே சாட்சி. வரலாற்று சம்பவங்கள் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்ததாகச் சொல்கின்றன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும்(English East India Company,-1600) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் (Compagnie des Indes orientales-1664 (France) இந்தியாவுக்குள் நுழைந்த வகையில் 64 ஆண்டுகள் வித்தியாசம், அன்றைய தாமதம் இன்றும் பிரெஞ்சுக்காரர்களிடம் எல்லாவற்றிலுமுண்டு.  இரண்டாம் உலகப்போரின்போது பிரெஞ்சு ராணுவத்தின் ஜெனரலாகயிருந்த தெகோல் (Charles de Gaulle) ஜெர்மன் ஆக்ரமிப்பின்போது, இங்கிலாந்திற்குத் தப்பியோடி அங்கிருந்து ஜெர்மன் ஆக்ரமிப்பிற்கு எதிராக சுதந்திரப்போரை தொடங்கவேண்டியிருந்தது. எந்த நொர்மாண்டி பிரதேசம் முதன்முதலாக ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் கசப்பினை ஏற்படுத்தித் தந்ததோ அதே நொர்மாண்டியில் வந்திறங்கிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்தான் பிரெஞ்சுக்காரகளை ஜெர்மனியரிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது நகை முரண்.

காலனி ஆட்சியின்போது காலனிமக்களை இரு தரப்பினருமே சுரண்டினாலும், இந்தியாவை பொறுத்தவரை பிரிட்டிஷ் ஆட்சி கல்வி, தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஓரளவு அக்கறைகொண்டு செயல்பட்டதென்பதை மறுக்க முடியாது. ஆனால் பிரெஞ்சு காலனி நாடுகளில் சுரண்டியது அதிகம். அல்ஜீரியா நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியபொழுது அந்நாட்டை சேர்ந்தவரென்று ஒரு மருத்துவர்கூட இல்லையென்கிறார்கள். அவர்கள் அதிகபட்சமாக அங்கே உருவாக்கியது கல்விக்கூடமென்று ஒரு உயர்நிலைப்பள்ளி அவ்வளவுதான். பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த எல்லா காலனிகளுக்கும் இது பொருந்தும். இருவருமே எஜமான வக்கிரத்தில் திளைப்பவர்களென்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் சேவகனுக்குள்ள கற்பூர அறிவைக் கண்டுபிடித்து கணக்கனாக உத்தியோக உயர்வு கொடுக்கத் தெரிந்தவர்கள். பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிமக்களை கடைசிவரை எடுபிடிகளாக மட்டுமே பார்ப்பவர்கள்.  இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளில் சிலவற்றை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் பிரான்சு நாடு இன்றளவும் காலனியக்கொள்கையையே அம்மக்களுக்கு எதிராக கடைபிடித்து வருவதற்கு அண்மை உதாரணம் மய்யோத். கடந்த சில நாட்களாக கருப்பரின மக்கள் அங்கே போராடிவருகிறார்கள். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வாய்கிழிய பேசும் பிரெஞ்சு அரசாங்கம் அதுபற்றி வாய் திறப்பதில்லை. தொலைகாட்சிகளும் பிரெஞ்சு இதழியல்களும் இருட்டடிப்பு செய்கின்றன. அவர்களுக்கு உள்ளூர் சோஷலிஸ்டு கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முதல் சுற்று முக்கியம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்குள்ள அரசு பிரெஞ்சு குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இனி பிரெஞ்சு மொழியில் டிப்ளமா பெற்றிருக்கவேண்டுமென்று குடியுரிமைக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. அது அவர்கள் உரிமை. ஆனால் மனித உரிமையாளர்கள் எழுப்பும் கேள்வி இரண்டாம் உலக யுத்தத்தில் காலனிய நாடுகளிலிருந்து யுத்தத்திற்கு ஆள்பிடித்தீர்களே அப்போது அவர்கள் டிப்ளோமா வைத்திருக்கிறார்களா என்று பார்த்தீர்களா? அல்லது உள்ளூரில் படிப்பறிவற்ற பிரெஞ்சுகாரர்களின் குடியுரிமையை பறித்து நாடுகடத்துவீர்களா என்பதாகும். உண்மையில் பிரெஞ்சு ராணுவ ஜெனரல் தெகோல் பிரிட்டிஷாரின் தயவில், வானொலியில் ஜெர்மனுக்கு எதிராக யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது காலனிநாடுகளிலிருந்து – புதுச்சேரி உட்பட-  சமூகம் மற்று பொருளாதாரக் காரணங்களால் நலிந்திருந்த காலனிய மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களில் 99 சதவீதம் எழுத்தறிவற்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, மிச்சமுள்ள ஒரு சதவீதத்தினர் பள்ளி இறுதிவகுப்புவரை படித்திருக்கலாம். அவர்கள் சொல்தாக்கள் அல்ல சரியாகசொல்வதெனில் எஜமான விசுவாசத்துடன் இடம்பெயர்ந்த கூலிப்படை.
——————————————————

இரவு- அகத்திணை – எமிலிஜோலா

‘J’aime la nuit avec passion’  ‘இரவு’ சிறுகதையில் கி மாப்பசான் -வாக்கியம். இரவை ஆராதிக்க இத்தனை பொருத்தமாக சொற்கள் அமையாது. இரவுவேளைகளில் ஆணோ பெண்ணோ மற்றவருக்காக காத்திருக்கின்ற தவிப்பும் மெல்லியப் பதற்றமும் விநோதமான உடல்மொழி. மாப்பசான் போலவே ஆர்வத்துடன் இரவைவெகுவாக நேசித்திருக்கிறேன், காத்திருந்திருக்கிறேன். திருமண வீட்டிற்குப் போன இடத்தில் இரண்டுநாள் பழக்கத்தில் ஒரு பெண்ணிடம் வைத்த கெஞ்சுதலுக்கு, அவள் தலையாட்டலையும், சமிக்கைகளையும் புரிந்துகொண்டதற்கு இலட்சணமாய் எனது சகோதரி வீட்டு, மோட்டர் ஷெட்டினைத் திறந்துவைத்துக்கொண்டு விடிய விடியகாத்திருந்ததும், நீர் இறைக்க அதிகாலையில், எந்திரத்தை இயக்கவந்த ஆசாமி கதவை திறந்துக்கிடப்பதைப் பார்த்து, நீர் இறைக்கும் எந்திரத்தை திருட வந்தவனென்று தப்பாக எண்ணி சத்தம்போட அவனைத் தடுத்து சமாதனப்படுத்த வேண்டியிருந்தது. பெண்ணிடம் என்ன நடந்ததென காலையில் விசாரித்தால், ‘உங்களை வெகு நேரம் தேடிபார்த்துட்டு நீங்கள் இல்லைண்ணு தெரிஞ்சதும் கொண்டுபோயிட்டேன், என்றாள். என்ன சொல்கிறாளென யோசித்துக்கொண்டிருக்க, உள்ளே சென்றவள் திரும்பவும் வந்தாள், பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகக்கூறி ‘ஒரு லட்டையும் இரண்டு மைசூர்பாகையும்’ கொண்டுவந்தாள். இனிப்பைக்கொடுத்து என்னை ஏளனம் செய்த இரவை இன்னமும் மறக்கவில்லை. மிக பொல்லாத இரவு அது.

இதே அனுபவம் முத்தொள்ளாயிர அப்பாவிக்கும் நேர்ந்திருக்கிறது இரவில் வருவதாகச் சொல்லியிருக்கிறான் தலைவன். அவ்வாறே பாவிப்பயல் வந்துமிருக்கிறான். வீட்டு நாய் குரைத்ததோ, அடைகாத்த கோழி இறக்கைகட்டி பறந்ததோ, ஏதோ நடந்தது. தலைவியும், தலைவி என்றொருத்தி உண்டென்றால் தோழியும் வேண்டுமில்லையா அவளுமாக அவன் வருகையை உணர மறந்திருக்கிறார்கள். மறுநாள் வந்த தலைவன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததைக்கூறி வருந்தியிருக்கிறான். தோழியும், “இங்கே பாரு எங்க தரப்பிலும் அதுதான் நடந்தது. ஊரே உறங்கியிருந்தது, உனக்காக இரவெல்லாம் காத்திருந்தோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஏழில் குன்றத்தின் மேல் உள்ள நொச்சியின் அழகு மிகுந்த மெல்லிய கிளைகள் உதிர்க்கும் பூக்கள் விழும் ஓசையையும் நன்றாகக் கேட்டு உறங்காமலிருந்தோமே, நீதான் வரவில்லை வீணாக எங்கள்மேலே பழிசொல்லாதே”, என்றாளாம். “கொன் ஊர்துஞ்சினும் யாம் துஞ் சலமே” என ஆரம்பிக்கிறது அக்குறுந்தொகை பாடல். பகற்பொழுதுகளில் வாய்கிழிய சாதிபேசும் நாட்டாமைகள், பின்னிரவில் சாதிமறந்த உடலின் எதார்த்தம் சார்ந்த தேவைக்கு  பனியில் நனைவார்கள், அவை சாதி இரண்டொழிய வேறில்லையென சாதிக்கும் இரவுகள்.

பேய் பிசாசுகளுக்கிடையிலும் இளைஞர்களுக்கென்றால் மோகினிப் பிசாசுவை இரவு சிபாரிசு செய்கிறது, ஆக இரவு துர்த்தேவதைகளுக்கானதல்ல என்பது வாலிபம் தந்த அனுபவம். இளமைகாலத்து  கிராமத்து இரவு ஒரு தேனடைபோல மனதிற் ஒட்டிக்கிடக்கிறது. திருமணக் காலங்களில் மணப்பெண் ஊர்வலமாகட்டும்,  திருவிழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவரும் நேரமாகட்டும், இருள் வெருட்டும் ஆகாச வாணமும்; முன்னூரும் தீப்பந்தமும், பெட்ரோமாக்ஸ் ஒளி வில்லைகளும்; உறக்கத்தை கலைக்கும் தவிலின் டமடமாவும் நாதசுவரத்தின் மல்லாரியும் பகலுக்கு வாய்க்காத ஒன்று. தீபாரதனைக்காக சுவாமி நிற்கிறபோது தீப்பந்த ஒளியில் கன்னமும் கண்களும் மினுங்க தெருவாசலில் இரவு பூத்ததுபோல நிற்கிற பெண்கள் தேவதைகள்! நாதஸ்வரம் வாசிக்கும் உள்ளூர் இளைஞன் எங்கள் விருப்பத்தை ‘ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே’ என பூர்த்திசெய்வான். இளமை வேகத்தில் எழுதிப் பகிர்ந்துகொண்ட வரிகள் இன்றும் நினைவில் அசைபோடுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழியும்/ உறக்கம் பதுக்கி, உறவில் பதுங்கி இரவை விலக்கி எழுந்து வருவாய்/ ஒவ்வோர் அடியிலும் உனக்குள் அச்சம்/ காரணம் அறிவேன்/ நீ கால்களைப் பதிப்பது என் கண்களில் அல்லவா?… ஓ! எத்தனை ரம்மியமான இரவுகள் அவை!

எமிலி ஜோலாவின் ‘காதல் இரவொன்றிர்க்காக'(Pour une nuit d’amour)  என்ற நெடுங்கதை இரவின் மௌனத்தையும், தாபத்தையும், ஏமாற்றத்தையும், இருட்டோடுகூடிய காதல் வெக்கையுடன் விவரிக்கிறது.

P**** என்றொரு சிற்றூர், ஊருக்குள் நுழைய ஷான்கிளேர் என்ற சிற்றோடைமீது அமைந்த பாலத்தைக் கடந்துசெல்லவேண்டும். உள்ளூர் முதிய ஆசாமிகளுக்குப் பாலமே கதைபேசுமிடம். பாலத்தைத் தாண்டினால் ‘போ-சொலெய்’ வீதி. வீதியின் முடிவில், மிகப்பெரிய சதுக்கம். உறக்கத்திலிருப்பதுபோல குடியிருப்புகள். தோட்டக்கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில், மிகப்பெரிய அறையில் நமது கதைநாயகன் ஜூலியன் வாடகைக்குக் குடியிருக்கிறான் அல்லது  அடைந்துகிடக்கிறான். வயது 25. பெற்றோரை இளம்வயதிலேயே பறிகொடுத்திருந்த ஜூலியனுக்கு அஞ்சல் அலுவலகத்தில் ஊழியம்.  ஊதியம் சுமார் என்கிறபோதும், சிக்கன பேர்வழி. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளுமில்லை கனவுகளுமில்லை. நெடு நெடுவென்று நல்ல உயரம், எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க முரடன்போல தெரிவான் ஆனால் ரொம்ப ரொம்ப சாது. கதாநாயக இலட்சனங்களின்றி இருப்பது அவனுக்குப் பெருங்குறை. பெண்கள் தன்னைச் சீந்தமாட்டார்களென்று நம்பியதால் அவர்களைக் கண்டு ஓடி ஒளிவான். அவனது தினசரி அலுவல்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாற்றமின்றி, சீராக  நடந்துவந்தன. காலையில் அலுவலகம், முதல் நாள் முடிக்காதவேலையை மறுநாள் தொடரவேண்டும், பிறகு மதிய உணவென்று ஒரு துண்டு ரொட்டி, மீண்டும் அலுவலகம், மாலை வீடு, இரவு உணவு, பிறகு தூக்கம். என்றைக்காகவது கொஞ்சம் மகிழ்ச்சியை விரும்பினால் இரவு உணவுக்குப் பிறகு காலாரப் ‘போ-சொலெய்’ வீதியில் நடப்பான், பாலம் வரை செல்வான், கட்டை சுவரில் உட்காருவான். நீருக்கு மேலே கால்களை தொங்கவிட்டபடி ஓடும் நீரின் ஆழகை ரசிப்பான். ஒர் ஊமையன் சினேகிதமுமுண்டு. விடுமுறை நாட்களில் இருவரும் கைகோர்த்துகொண்டு உரையாடலின்றி நடந்து அலுத்து திரும்புவதுண்டு. பிரியமாக வளர்த்த நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது வெகுவாக அவனைப் பாதித்திருந்தது, அதுமுதல் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கும் ஆசைகளில்லை. ஜூலியனுக்கு அவனது அறையே சொர்க்கம். இவ்வுலகத்தில் அவனை ஆதரித்து அடைக்கலம்கொடுக்கிற ஒரே ஒரு போக்கிடம் அறையென்பதால் அதனை மிகவும் நேசித்தான். வாசிப்பதில் ஆர்வமில்லை, புத்தகங்களுக்கு நடமுறைவாழ்வைப்பற்றிய ஞானம் குறைவென்று நினைத்தான். எழுத்திலும் ஆர்வமில்லைஅலுவலகத்தில் எழுதுவதே போதுமானதாக இருந்தது. இப்படிப்பட்டவனுக்கு புல்லாங்குழல் வாசிப்பதில் மட்டும் மிகுந்த ஆர்வம். ஒருமுறை பழம்பொருட்கள் விற்கிற கடையில் புல்லாங்குழலொன்றைக் கண்டான், கையில் பணமிருந்தும் கடைக்குள் நுழையவோ, பேரம் பேசவோ வெட்கம். ஒரு நாள் துணிச்சலுடன் கடையில் நுழைந்து எவர்கண்ணிலும் படாமல் எப்படியோ அறைக்கும் புல்லாங்குழலைக் கொண்டுவந்தாயிற்று. அறைக்குள் நுழைந்ததும், கதவு சன்னல்களென்று அனைத்தையும் இறுக மூடினான், இருந்தும் வாசிப்பைக்கேட்டுப் பிறர் கேலி செய்யக்கூடுமென அஞ்சி முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்தான். மெல்ல மெல்ல பழகிக் கொண்டான். எல்லாமே எளிமையான, பழமையான இசைக்குறிப்புகள். நூலகமொன்றில் கிடைத்த இசை நூல்களும் அவனுக்கு உதவின. ஓரளவு வாசிக்கவந்ததும் சன்னற் கதவுகளை திறந்துவைத்து இசைத்தான். அப்போதுகூட ஊரெல்லாம் அடங்கியபிறகு, இரவில், வீட்டில் விளக்கைக்கூட அணைத்துவிட்டு இசைப்பது அவன் வழக்கம். சன்னல் அருகே வானத்தை பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டு பொதுவாக வாசிப்பான். வீதியில் நடந்துபோகிறவர்கள் தலையை உயர்த்திமேலே பார்ப்பார்கள், அலைஅலையாய், இவ்வளவு இனிமையாய் இசை எங்கிருந்து மிதந்து வருகிறதென யோசிப்பார்கள், பிறகு குழப்பத்துடன் நடப்பார்கள். அண்டை அயலார்கள், இவனது வாசிப்பை தொல்லையாக நினைப்பார்களோ என்ற அச்சமும் இவனுக்குண்டு. அண்டை மனிதர்களில் ஒருவர் பத்திரம் எழுதுபவர், மற்றொருவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இருவருமே ஒன்பது மணிக்கெல்லாம், உறங்கப்போய்விடுவார்களென்பதால், அவர்களிடத்தில் இவனுக்கு பயமில்லை. மாறாக, நேரெதிரே இருந்த பங்களா வீட்டுக்காரர்களை நினைத்தால்தான் அச்சம். மர்சான் என்றபெயர்கொண்ட பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த குடும்பமது. பங்களாவின் மாடியில் பத்து சன்னல்களிருந்தன, பத்து சன்னல்களும் திறப்பதும் மூடுவதும் ஒரே நேரத்தில் நடக்கும். சன்னல்களின் பின்னே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? ஒன்றையும் அறியாதபடி தடித்த சன்னல் திரைகள். பங்களா குடும்பத்தினரைப் பற்றியும், அங்கு வந்துபோகும் விருந்தினர்களைப் பற்றியும், அவர்கள் செல்வநிலை குறித்தும் ஊர்முழுக்க வதந்திகள் உலாவின. பங்களாவுக்குள் நுழைந்து அதன் மர்மங்களை விளங்கிக்கொள்ளும் ஆவல் இவனுக்கும் நிறைய இருந்தது. இவனுடைய குடியிருப்பு திசைக்காயிருந்த பெரிய நுழைவாயில் எந்நேரமும் மூடியபடியே இருந்தது. ஓர் ஆத்மாகூட அவ்வழியை உபயோகித்து இவன் பார்த்ததில்லை. மற்றொரு சந்தொன்றில் இன்னொரு வழியிருந்தது, அநேகமாக அதுதான் உபயோகத்திலிருக்கவேண்டும். மாளிகையைபார்க்க ஏதோ கவனிப்பாரற்ற கல்லரைபோல அவனுக்குத் தோற்றம்தந்தது. அநேகதடவை, உறங்கச்செல்வதற்கு முன்னால் மெழுகுத்திரியை அணைத்துவிட்டு சன்னலருகில் நின்று எதிரிலிருக்கும் மாளிகையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதாவென பார்ப்பான், மாளிகையை அவதானித்தபடி குழலூதவும் செய்வான்.

ஒரு ஞாயிற்றுகிழமை தேவாலயத்தின் எதிரே, அஞ்சலக சக ஊழியனொருவன் ஜூலியனுக்கு முதிய தம்பதிகளிருவரை அறிமுகப்படுத்தி இவன் வீட்டெதிரே குடியிருக்கிற மாளிகைவாசிகள், என்றான். அவர்கள் இருவருக்கும் மகளொருத்தி இருப்பதாகவும், விடுதியொன்றில் தங்கி படிப்பதாகவும், பெயர் தெரெஸா மர்சென் என்றும், பத்திர எழுத்தாளரிடம் உதவியாளராக இருக்கிற குள்ளன் கொலொம்பெல் அவளுக்கு வளர்ப்புச்சகோதரனென்றும் அடுத்தடுத்து ஜூலியனுக்குக் கிடைத்தக் கூடுதல் தகவல்கள். குள்ளன் கொலொம்பெலுக்கும் ஜூலியனுக்கும் ஆகாது. ஜூலியனை கொலம்பெல் ஒருமுறை கேலி செய்யப்போக இருவரும் கட்டிபுரண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அது நிகழ்ந்தது. அன்றிரவு மிகவும் வெக்கையாக இருந்தது, நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானம். வழக்கம்போல விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் சன்னலருகே அமர்ந்தபடி புல்லாங்குழல் வாசித்தான், கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்தது. எதிரிலிருந்த மாளிகையின் சன்னலொன்று திறக்க இருட்டுக்கிடையில் குபீரென்று ஒளிவெள்ளம், இமைக்க மறந்தவனாய் ஜூலியன் பார்த்துக்கொண்டிருந்தான். இளம்பெண்ணொருத்தி நடந்துவந்தாள். கைகளை ஊன்றிக்கொண்டு பார்த்தாள். அவள் முகத்தை தனித்து அடையாளப்படுத்த இயலவில்லை, தலைமயிர் கற்றையாய் சரிந்து கழுத்தில் இறங்கி பிரிந்திருந்தது. அவள் கேட்பது இவன் காதில் விழுந்தது, ‘ஏதோ இசையென்று நினைக்கிறேன், உனக்குக் கேட்கிறதா? தனது வளர்ப்புத் தாயிடம் கேட்கிறாள். ‘அநேகமாக குயிலாக இருக்கும்!’ வளர்ப்புத்தாய் பிரான்சுவாவின் பதில். பங்களாவைச்சுற்றி அடர்த்தியாக மரங்களிருந்ததால் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும். வளர்ப்புத்தாய் இளம்பெண்ணிடம், “இராக்கால விலங்குகளிடத்தில் கவனமாக இருக்கவேண்டும்”, எனவும் எச்சரிக்கிறாள். தொடர்ந்து திறந்த சன்னல் மூடப்படுகிறது. அருகிலிருந்த மரங்களில் குயிலிருக்கவேண்டுமென நம்பும் பெண்ணின் மனது இவனுக்குள் சந்தோஷத்தை விதைக்கிறது.

மறுநாள் அஞ்சல் அலுவலகத்தில் மர்சான் குடுபத்தில் இளம்பெண் தெரெஸா விடுதியிலிருந்து திரும்பியிருந்ததைப் பற்றிய பேச்சு. ஜூலியன் சன்னல் வழியாக அவள் கூந்தலையும், கழுத்தையும் காண நேர்ந்ததை வாய் திறக்கவில்லை. அத்தரிசனம் அவனை பாதித்திருந்தது, அவளைத் திரும்பவும் பார்க்கநினைத்தான். அவன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இப்போது அவனது அறை கூட அந்நியமாகத் தோன்றியது. அவனுக்குப் பொதுவாகவே பெண்களென்றால் வெறுப்பு, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடத்திலேதான் அவனைக்கண்டதும் கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. வெகு நேர யோசனைக்குப்பிறகு எதிர்வீட்டுப்பெண்ணை அவன் வெறுப்பதாகப்பட்டது. ஒவ்வொரு நாளும் அறைவாழ்க்கை பதுங்கு வாழ்க்கைபோல கழிந்தது, இதற்கிடையில் சன்னல் திறக்காதாவென ஏங்கவும் ஆரம்பித்தான். இரவு பத்துமணி அளவில் எப்போதாவாது சன்னற் கதவுக்கூடாக அறையில் ஆள் நடமாட்டம் இருப்பதன் அறிகுறியாக வெளிச்சம் தெரியும், பின்னற் சட்டென்று அதுவும் அணைந்துவிடும். தனது அறையிலிருந்துகொண்டே கரிய இருளின் ஊடே சன்னலை அவதானிப்பான். ஒவ்வொரு நாளும் தவறாமல் வேவு பார்த்தான். சன்னல், வெளிச்சம், காலடிகள், இளம்பெண்ணின் முகமென சதா கனவுகளில் மிதந்தான். ஒரு நாள் காலை சன்னலை திறந்தபொழுது எதிர்வீட்டு பெண் நிற்கிறாள், வெகு நேரம் சிலைபோல நிற்கிறாள், யோசிப்பதுபோல தெரிந்தது, முகம் வெளுத்திருந்தது, கண்களில் ஒளியில்லை, உதடுகள் நன்கு சிவந்து, வீங்கியிருப்பதுபோல பட்டது. ஏதோ துயரத்தில் இருக்கிறாள். அவளுடைய கவலையை இவனுடையதாக கற்பனை செய்துகொண்டு வருந்தினான்.

பிரச்சினை என்னவெனில், இதுவரை எதிர்வீட்டு பெண் இவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவனை ஒருபொருட்டாகவே அவள் கருதவில்லை. அப்படித்தான் இருக்கவேண்டும், அவனை பார்த்தவுடன் பலரும் என்ன நினைப்பார்களென அவனுக்குத் தெரியாதா என்ன? எனினும் இவனுக்கு அவள் மீது தீரா காதல் இருந்தது. அவள் வேண்டும், இவனது சரீரம் அதற்கு உதவாது. இசை, இசை மட்டுமே அதைசெய்ய முடியும். எனவே நிலவில்லா இரவுகளை தேர்வுசெய்து நீண்ட நேரம் வழக்கம்போல மெழுகுத் திரியைக்கூட அணைத்துவிட்டு இருளில் திளைத்தபடி அவளுக்காக குழலிசைத்தான். ஒருநாள் இரவு மீண்டும் வெண்ணிற உடையில் சன்னல் அருகே தேவதைபோல வந்து நிற்கிறாள். இசையைகேட்டே வந்திருக்கவேண்டும், புரிந்ததும் வாசிப்பதை நிறுத்திவிட்டு, இருட்டுபோதாதென்று சன்னல் திரையில்  தன்னை முற்றாக மறைத்துக்கொண்டான்.

“பிரான்சுவாஸ்! நீ நினைப்பதுபோல எந்தப் பறவையின் குரலுமல்ல!”

“உண்மைதான் வெளியே யாரோ இசைக்கலைஞன் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்”

“சன்னற் கதவைத் சாத்து, மழைவரும்போலவிருக்கிறது

எதிர்வீட்டில் பேசுவது, இவனுக்கு நன்றாகக் கேட்கிறது. அன்றிலிருந்து மிகவும் அக்கறையெடுத்துக்கொண்டு வாசிக்கலானான். ஒவ்வொரு இரவும் இவனது அறையின் சன்னற்கதவுகளை விரிய திறந்துவைத்து இருளில் பதுங்கியபடி குழலை சளைக்காமல் ஊதினான். ஒருநாள் காலை ஆறுமணி. தனது புல்லாங்குழலை உறைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் எதிர்வீட்டு சன்னல் திடீரென்று திறக்கிறது. காலையில் இதுநாள்வரை எட்டு மணிக்கு முன்னால் எதிர்வீட்டு சன்னல் திறக்கப் பார்த்ததில்லை. ஜூலியனுக்கு அதிசயமாக இருந்தது. தெரெஸா குளித்துமுடித்த ஆடையில் இருந்தாள், வழக்கம்போல கூந்தல் கழுத்தை சுற்றிக்கொண்டிருந்து. ஜூலியன் கற்சிலையாக சமைந்து போனான். கைவசமிருந்த புல்லாங்குழலை அவள் பார்த்துவிடக்கூடாதென நினைத்து மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அவளுடையை பார்வையும் இவன்மீது ஒருமுகபடுத்தப்பட்டிருந்தது, ஒன்றிரண்டு நொடிகளில் முடிவுக்குவந்ததுபோல முதுகைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். இவனுக்குப் பெருத்த ஏமாற்றம், தமது தோற்றம் அவளுக்குக் கசந்திருக்கவேண்டுமென நினைத்தான். கால்கள் சோர்ந்துபோயின. நிலை தடுமாறி சோபாவில் விழுந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு கலங்கினான். காதல் முடிந்ததென்று நினைத்தான். அதற்குப் பிறகு பலமுறை சன்னலருகில் கையூன்றிகொண்டு அவள் நின்றபோதெல்லாம் இவனை வேண்டுமென்றே அலட்சியபடுத்துவதுபோலிருந்தது. ஒரு நாள் ” என்ன வாசிக்கிறான், தப்பு தப்பாய் கேட்கக் கொடுமையாக இருக்கிறது” என அவள் கூறுவது காதில் விழுந்தது. இனி புல்லாங்குழலைத் தொடுவதில்லையென ஜூலியன் தீர்மானித்தான்

ஒரு வருடம் கழிந்திருந்தது. தெரெஸாவுக்காகவே தனதுயிர் தரித்திருக்கிறதென்பதாக ஜூலியன் நினைத்தான். அவனுடைய இதயம் குளிரில் உறைந்துகிடந்த மாளிகையைச் சுற்றிவந்தது. திறந்திருக்கும் சன்னலை தரிசிக்க நேர்வதே அவனுடைய உயிருக்கு ஆதாரமாக இருந்தது. காலையில் சன்னற்கதவும் திறக்கப்படும்போதும், முன்னிரவில் சாத்தும்போதும் அவளைச் சந்திப்பது அவனது தினசரிகளின் முக்கிய தருணங்கள். இருமுறை பெண்ணின் திசைக்காய் முத்தங்களை காற்றில் அனுப்பிவைக்கவும் துணிந்தான். அவள் பார்வையை அகற்றவில்லை, சன்னலைவிட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து தொடர்ந்து அந்திசாய்ந்ததும்  சன்னலைத் திறப்பதும், பின்னர் மூடுவதுமாக கழிந்தது. பிறகு வெகுநாட்கள் சன்னற்கதவுகள் திறக்கப்படவில்லை. கார்காலத்தில் ஒருநாள் எதிர் வீட்டு சன்னல் திடீரென்று திறக்க இவனுக்கு உயிர் வந்தது. கண்ணீர்விட்டான். அன்று காலை நல்ல மழை பெய்திருந்தது, பங்களாவுக்கு அருகிருலிருந்த செஸ்ட்நட் மரங்கள் இலைகளை உதிர்த்திருந்ததில் ஒருவித பிணவாடை எங்கு வீசியது. எப்படியும் எதிரிலிருக்கும் மாளிகையின் சன்னற் கதவுகள் திறக்குமென ஜூலியன் காத்திருந்தான். கதவுகள் திறந்துகொண்டன. தெரெஸா நிற்கிறாள், கண்கள் வழக்கத்தைக்காட்டிலும் பெரிதாக தெரிந்தன, தலைமயிர் கட்டவிழ்ந்து கழுத்தில் கிடந்தது. சன்னலை ஒட்டி நேராக நின்றாள். அவளுடையை பத்துவிரல்களையும் வாய்மீதுவைத்து ஜூலியன் திசைக்கு முத்தத்தை அனுப்பினாள். இவன் மயக்கமடையாதகுறை, இவன் தனது மார்பினை வலதுகையைக் குவித்துத் தொட்டுக்காட்டி, முத்தம் எனக்கா என்றுகேட்டான். இம்முறை சன்னல் விளிம்பில் மடிந்து சாய்ந்தவள் மீண்டும் பத்துவிரல்களையும் உதட்டில் தொட்டு உறுதிபடுத்துகிறாள். அவளனுப்பிய செய்தி அவனை எட்டிவிட்டதென்பதன் அடுத்தகட்டமாக, வாயேன் என்றாள். இவன் இறங்கிச் சென்றான். நெடுநாளாக திறக்கப்படாதப் பங்களாவின் கதவு இவனுக்காக ரகசியமாக திறக்கிறது. அவளைத் தொடர்ந்து மாடியில் தினமும் அவளை காண நேர்கிற அறைக்கு இருவருவருமாக வந்தார்கள். இவனெதிரே இதுநாள் வரை எவளுக்காக ஏங்கினானோ அவள் .

– என்னை காதலிக்கிறாய் இல்லையா?

– ம்ம்.. இவனுக்கு நா குழறுகிறது

– இப்போ என்னை உனக்கு கொடுத்தால், எனக்காக எதுவும் செய்வாயில்லையா? இவனிடத்தில் பதிலில்லை. ஆனால் அவள் தரப்பிலிருந்து ஒரே ஒரு முத்தமென்றாலும், தன்னையே இழக்க தாயாரென்ற நிலையில் அவன்.

– நல்லது எனக்காக ஒன்று செய்யவேண்டும்

இம்முறையும் அவன் பதிலின்றி இருந்தது அவளை எரிச்சலடைய செய்திருக்கவேண்டும்.

– இப்படி நின்றால் என்ன அர்த்தம். நீ எனக்காக எதையும் செய்வேனெனறு சத்தியம் பண்ணு -அவள்

– சத்தியம், சத்தியம். நீ எதை சொன்னாலும் செய்வேன்

அவள் கிடு கிடுவென்று நடந்தாள். அவள் அறையில் மெத்தையும், தலையணைகளும் சிதறிக்கிடந்தன, கட்டில் துணிகளோடு கலந்து ஒர் ஆணின் பிணம்.

” இவன் என்னுடைய காதலன், இரண்டுபேருக்குமிடையில் நடந்த விளையாட்டுச்சண்டையின் முடிவில், அவன் இறந்துட்டான். பிணத்தை நீதான் இங்கிருந்து அகற்றியாகணும். ” என்கிறாள்

இதற்குமேல் கதை அவ்வளவு முக்கியமல்ல, இருந்தாலும் இறந்திருந்த காதலன் அவளுடைய வளர்ப்பு சகோதரன் கொம்பெல் என்ற செய்தியும், இருவரும் பால்யவயதிலிருந்தே நண்பர்கள் என்பதும், இளம்பெண் தெரெஸா மனப்பிறழ்வு கொண்டவளென்பதும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள். நம்முடைய ஜூலியன் என்ன ஆனானென தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? தனது காதலுக்காக  பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் எறிவதற்குச் சென்றவன், பிணத்தை எறிகிறபோது இவனைச் சுற்றியிருந்த கைகளை பிரிக்க இயலாமல் உடன் விழுந்து சாகிறான். இளம்பெண் மூன்றுமாதத்திற்குப் பிறகு பிரபு ஒருவனை மணந்துகொள்கிறாள். மணக்கோலத்தில் அவளைப்பார்க்க தேவதைபோல இருந்தாளாம். ஆபத்தான இரவு தேவதை.

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே வாழ்வின் முழு பரிமாணத்தையும் எட்டிவிடுவதென்ற நோக்கத்தைக் பெற்றிருந்திருக்க வேண்டும். நமது புலன்களும் அறிவும் அதற்கான உபகரணங்கள். உணர்வில் வளர்ச்சி, அல்லது மோன நிலையை எட்ட மனம் நிறைவடைய வேண்டும். இரவு அவரவர் புலன்களின் தேடலுக்கொப்ப வழிநடத்துகிறது. பகல் அறிவை வளர்த்துக்கொண்டுபோக உதவலாம் அதனை நெறிபடுத்த உணர்வும் இரவும் தேவை:

சினம் இறக்கக் கற்றாலும்  சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே (தாயுமானவர்-பராபரக்கண்ணி)

பகற்பொழுது, காலத்துக்கு இணையாக ஓடிக் களைத்துபோகும் பொழுது. மூர்க்கத்துடன் நாளை முட்டித் தள்ள வேண்டியிருக்கிறது. புறவாழ்க்கையான பகல் இறைச்சலும் கூச்சலும், ஓட்டமும் நடையும், வெப்பமும் வேர்வையுமாக கழிகின்ற பொழுது. அந்திச் சாய்ந்ததும் அமைதியும் தொடர்ந்து வருகிறது, இரவென்ற பெயரில். இரவென்பது அகவாழ்வு. “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார்..இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.” என்பது அகத்திணைக்கான விளக்கம். உறவு தரும் இன்பம் மாத்திரமல்ல, பிரிவும் தரும் துன்பமும் இரவுக்காலங்களில் பெரிதுதான். தலைவனைப் பிரிந்துவாழும் தலைவிக்கு,  இரவில் தலைவனின் நினைவு அதிகமென்று கூறாத இலக்கியங்கள் உலகில் எங்குமில்லை. அத் துன்பம் நெடியது. குறும்பொழுதுக்குரியதல்ல. தலைவனில்லாத தனிமையின் இரவு நத்தைபோல ஊர்வதை – அவள் உணர்கிற அத்துன்பத்தை வெளிப்படுத்தும்பொழுது, ‘நெடிய கழியும் இரா’ என்று இரவின் மேல் பழி சுமத்துகிறாள்.

கொடியார் கொடிமையின் தாம் கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா (குறள்)

மேற்கத்திய நாடுகளில் ஆரம்பித்து, கீழைநாடுகளிலும் பரவியுள்ள ‘The night concept’ (கள்ளும் காமமும் பொய்யுமான) வியாதியை புரிந்துகொள்ள முடிகிறது. நெடிய இரவின் தனிமையில் வருந்தக்கூடிய நேற்றைய தலைவனோ தலைவியோ இன்றில்லை என்பதற்கான சாட்சியங்கள் அவை. இரவோடு இணைந்த சொற்களை வரிசைப்படுத்தினால்: பெண்ணில் ஆரம்பித்து நிலா, குளிர்ச்சி, கனவு, களவு, பதற்றம், அச்சம், புணர்ச்சி… சூன்யம் வரை இரவு சிமிழுக்குள் எதுவும் அடங்கும். உயிர்த்தெழும். பிரபஞ்சத்தின் மூச்சே இரவு. உலகம் இருமைப் பண்புகளாலானது. பகலென்று எழுத இரவு வேண்டும், ‘உண்டென்று’ சொல்வதற்கு ‘இல்லை’ வேண்டுமென்பதுபோல. இரவற்ற பகலை, உயிர் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே இயலாது. இந்தியாவின் மக்கள்பெருக்கத்தினை குறைப்பதற்குச் சாத்தியமற்ற யோசனையொன்றை வைத்திருந்தேன். ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்பதுபோல ஓர் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை இரவிலிருந்து விடுவித்தால் மக்கத்தொகையைக் கணிசமாக குறைத்துவிடலாமென்பது எனது கணக்கு. மனித உயிர் தொழிற்சாலையின் உற்பத்தி நேரமல்லவா இரவு. சரீரமும், புலன்களும், மூளையும் பகலில் பிறருக்காகவும் இரவில் தமக்காவும் ஜீவிக்கின்றன. இரவொன்று இல்லையேல் ஓய்வின்றி உழைத்து மூளையும் புலன்களும் வெடித்து சிதறிவிடும். இரவுபெண் பொதுவில் பலரும் நினப்பதுபோல துர்த்தேவதையே அல்ல அவள் ரொம்பச் சாது. அடக்கமானவள், அமைதியானவள், புதிரானவள் மர்மங்கள் சூழ்ந்தவள், சூட்சமங்கள்நிறைந்தவள். மீண்டும் மாப்பசான் நினைவுக்கு வருகிறான். அவனைப்போலவே கண்கள் அவளைத் தரிசிக்கின்றன, நாசி அவளை சுவாசிக்கிறது, காதுகள் அவள் இசைக்கும் ‘அமைதியைக் கேட்கின்றன, சரீரம் அவள் தழுவலில் சுகம் பெறுகிறது.

——————————————————————————————–

உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

‘தேனும் திணை மாவுங்கொண்டு’ விருந்தினர்களை உபசரித்த காலமொன்றுண்டு. ‘தேன்’ என்பதற்கு மதுவென்றும், கள்ளென்றும் பொருள். அருந்தேன், பைந்தேன், நறுந்தேன் என எழுதிக் கை சோர்ந்தவர்களையும் தமிழில் கண்டிருக்கிறோம். ”செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”. எங்கெல்லாம் இனிமையின் அடர்த்தியும், செறிவும் கொழகொழப்பும் இடம்பெறவேண்டுமோ, அங்கெல்லாம் படிமமாக தேன் இடம் பிடித்துவிடும். ஈழத்திற்கும் ‘மீன்பாடும் தேன் நாடு’ என்றபெயருண்டு. தமிழின் இனிமைக்கு வலு சேர்க்கவும், வக்காலத்தாகவும் மரபு இலக்கியங்களில் தேன் புறங்கை வழிய எடுத்தாளப்பட்டிருக்கிறது. தேனில் அறுபது வகைகளுண்டா, இருக்கலாம் இல்லாமலுமிருக்கலாம், யாமறியேன் பராபரமே! துளியை வெள்ளமாகவும், துகளை மலையாகவும் பருத்துப்பார்த்துப் பழக்கப்பட்ட தமிழருக்கு உயர்வு நவிற்சி அந்நியமே அல்ல. அறிந்தவகையில் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன், புறக்கடை தேன்கூட்டில் எடுத்தத் தேன் புற்றுத் தேன் என்றும் சொல்லக்கேள்வி. ஆக எனது ஞானத்தின்படி நான்குவகைகள். மிச்சமுள்ள ஐம்பத்தாறுவகைக்குக் கண்ணதாசனின் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் என்ற பாடலை கணக்கிற் சேர்த்துக்கொண்டால்தான் உண்டு, அப்போது கூட அறுபது  தேறாதென்றுதான் நினைக்கிறேன்.

தேனின் மணத்தைக்கொண்டு கொம்புத்தேனா, மலைத்தேனா எனக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள். எங்கள் கிராமத்தில் சித்திரை வைகாசிமாதங்களில், குறவர்கள் சும்மாடில் தேன் குடத்தைச் சுமந்துகொண்டு வருவார்கள், ‘சளுக் என்று சுண்டுவிரலையும் மோதிரவிரலையும் தேனில் நனைத்து, ‘மோந்து பாருங்க சாமி’ என்பார்கள். அப்படித்தான் ஒருமுறை மலைத்தேன் என்று கூவி விற்றுக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து, அம்மா தேனை வாங்கிக்கொண்டிருந்தார். அங்கே வந்த என் அசட்டு மாமா ஒருவர், “எங்கே தேனைக் கொடு முகர்ந்து பார்க்கணும்” என்றார். அவளும் அளந்து ஊற்றிக்கொண்டிருந்த மாகாணியை என் மாமாவிடம் நீட்டினாள். மூக்கை நீட்டிய மாமாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே, இருக்கின்ற குடல்மொத்தத்தையும் வெளியிற்கொண்டுவந்து விடும் யோசனையில் ‘உவ்வே’ என்றார். குறத்தியிடமிருந்து, “அய்யா! நீங்க தப்பா எடுத்துகாதீங்க, சித்தேமுன்னே அணிப்பிள்ளையை உரிச்சேன், அதுதான் கையிலே வாசம், மற்றபடி மலைத்தேனுன்னு எங்க சாமி சத்தியமா சொல்லமுடியும்”, என்று அப்பிராணியாக பதில் வந்தது.

மலைத்தேன் எடுக்க வில்லும் அம்புமாக புறப்பட்டுப்போவார்கள். கொம்புத்தேனுக்கு தீப்பந்தம் உதவியதைப் பார்த்த அனுபவம், சுயமுயற்சியாக தேனெடுக்க என்னைத் தூண்டியது. வீட்டுப் பின்புறத்திலிருந்த புளியமரத்தினடியில் நான்கைந்து நண்பர்கள் சகிதம் தாழ்வாக இருந்த கிளையைப்  பிடித்து தொங்கியபடி ஆட்டம்போட தலைக்கு மேலே அடுத்திருந்த கிளையில் தேன்கூடொன்று இருந்தது. தேனிக்கள் ஏதுமில்லை. ஒரு குச்செடுத்து தட்டினால் கீழே விழுந்துவிடுமென்று எங்கள் கும்பலில் ஒருவன் சொல்ல, அவன் பேச்சை நம்பி, பக்கத்திற் கிடந்த சவுக்கு மிலாரை எடுத்து உறியடித் திருவிழா விளையாட்டை நடத்த அடுத்த ஐந்து நிமிடத்தில் தேனடையோடு தேனிக்களும் சேர்ந்தாற்போல முகத்தில் மொத்தென்று விழுந்தன. பயந்து அலறினேன். பையன்களுக்குக் கொண்டாட்டம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முகம் பூசனிப்பழம்போல ஊதிப்பெருத்ததின் காரணமாக மூன்று கல் தொலைவிலிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தின் கம்பவுண்டர் போட்ட ஊசியின் வலி தேனீக்கள் கொட்டியதைக்காட்டிலும் அதிகம், இன்னமும் நோஸ்ட்டால்ஜியாக கையிலிருக்கிறது.

தேனடையில் மொய்த்திருக்கும் தேனீக்களை, இலட்சமிருக்குமா கோடியிருக்குமா என தோராயமாகக் பந்தயங்கட்டி, அந்த உதவாக்கரை மாமாவை கூட்டிவைந்து எண்ண வைத்திருக்கிறேன், அவரும் வேலைமெனகெட்டு எண்ணிக்கொண்டிருப்பார். எனக்குப் பிடிபடாத மர்மம். இடமில்லை திரும்பிப்போ என்று சொல்லும் வகையில் அவை நடந்துகொண்டதாகவோ, தேனடைவரை வந்து இடமின்றி ஏமாற்றத்துடன் திரும்பும் தேனிக்களைக் கண்டதாகவோ நினைவில்லை, அவைக்களுக்குள் இருக்கிற பரஸ்பஸ ஒற்றுமை வியப்பில் ஆழ்த்துகிறது. தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?/ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!/தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்/ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!” என்பது இறைவன் முகவரியை தொலைத்தவர்களுக்கு திருமூலர் தருவது முகவரித்தேன். தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ? தெரியாது, ஆனால் தேனின் நிறத்தை மேற்கத்தியர்கள் ‘Blonde’ என்று கூறுகிறார்கள். ஐரோப்பிய பெண்களின் அழகு ரகசியம் இந்த ‘Blonde’ல் அடங்கி கிடக்கிறது, கருங்கூந்தலில் ஜொலிப்பதில்லை. பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது தேன்மொழி எந்த நாடாக இருந்தாலும்.

யூசு·ப் ஆறுவயது சிறுவன், தனது பெற்றோர்களுடன் குக்கிராமமஒன்றில் வசித்துவருகிறான். தந்தைக்கு தேன் எடுத்தல் தொழில். ஊரையொட்டிய காடு அவனது அதிசய உலகம், தேனெடுத்து விற்கும் தொழில் புரியும் தந்தையுடன் காட்டிற்குச்சென்று, வானளாவிய மரங்களில் அவர் தேனெடுக்கும் அழகை கண்கள் விரிய அண்ணாந்து பார்த்தபடி வியந்து நிற்கவேண்டும், அதில் பையனுக்கு மிகவும் சந்தோஷம். ஒருநாள் பள்ளியில் பையனிடம் ஒரு பிரதியைக்கொடுத்து வாசிக்கச்சொல்ல, பையன் திக்குகிறான், கேலிசெய்யும் பையன்கள் அது முதல் அவனை தங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. நாளுக்கு நாள் தேனடைகளின் கண்ணிற்படுவது அரிதாகிபோக அடர்ந்தகாட்டிற்குள் தந்தையும் மகனும் வெகுதூரம் இப்போது ஆபத்தான மலைகளில் தேன்கூடுகளைத்தேடி செல்லவேண்டியிருக்கிற நிலையில் உணர்வுகள் உறைந்துபோக ஊமையாகிறான். ஒளிக்கரைசலில் தெப்பமாக மிதக்கும் அசல் உலகமும்; பதுங்கிய ஒளியும், பசுமையும், குளுமையும் அடர்த்தியாய் விரவிக்கிடக்கிற கானகமும் ஒன்றல்ல வேறுவேறு என மொழியப்படும் உண்மை அவனை மீளமுடியாத அதிர்ச்சியில் நிறுத்துகிறது. அண்மையில் ‘Miel'(தேன்) என்ற பெயரில் பிரெஞ்சில் மொழிபடுத்தப்பட்டு வந்திருக்கும் இத் துருக்கி திரைப்படம் ஒரு கவிதை. குறிப்பாக பையனின் தந்தை எதிர்பாராவிதமாக குதிரையிலிருந்து விழுந்தனால் நிகழும் திடீர் மரணம் சிறுவன் அவனது அம்மா இருவரின் தினசரி வாழ்க்கையில் பறிக்கும் குழியும், இன்மையும் வலிகளைத் தருகின்றன- படத்தின் இயக்குனர் Semih Kaplanoglu.

கசப்பான பூக்களிலிருந்தும் தேனெடுக்கமுடிந்த தேனிக்களாக மனித மனம் இருக்கவேண்டுமென்கிறார் போலந்து எழுத்தாளர் ஒருவர், இயற்கையில் எதுவும் நடக்கலாம், எனக்கு முடிந்ததில்லை, முடவன், கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படமுடியாது.

——-