Category Archives: கட்டுரைகள்

இசைவானதொரு இந்தியப் பயணம் – 3 (தொடர்ச்சி)

பிரவரி 3ந்தேதி: தட்சண சித்ர காட்சியும் பிற அனுபவமும்.

இன்றைய உலகில் எல்லாம் பணம்- பணம் மட்டுமே அலகுகள். எதையும் அளக்கும் வல்லமை சார்ந்தவை. பண்பாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. தட்சணசித்ர ஓர் எடுத்துக்காட்டு. பண்பாடு இங்கே விலைக்குக்கிடைக்கிறதென்கிறபோதும், நியாயமான வணிகம். கொடுத்தவிலைக்கும், நுகர்வோர் பெறும் பயன்பாட்டிற்கும் அதிக ஏற்ற தாழ்வுகளில்லை. சென்னையின் கிழக்குப்பகுதி உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரை எனபெருமக்குரிய தென்கிறார்கள். உண்மையில் முதலாவது பெரிய கடற்கரை என்று ஒன்றிருக்கிறதா என்று  தேடிபார்த்தேன். அவரவர்க்கு பிடித்ததை சிலாகித்திருக்கிறார்களேயன்றி உருப்படியான ஆதாரங்களில்லை. தமிழர்களைத் தவிர்த்து வேறுயாரும் இரண்டாவது பெரிய கடற்கரையென்று சென்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களாவென்று தெரியவில்லை.

கிராமவாசி ஒருவர் புதிதாக நகரத்திற்கு வந்திருக்கிறார். கணிகையொருத்திவீட்டுக்கு நண்பரும் அவருமாக சென்றிருக்கிறார்கள். அவருடைய தலையிருந்தக் கோலத்தைப் பார்த்து ஒழுங்காய் முடிவெட்டிக்கொண்டுவந்தால்தான் உள்ளேவரலாம் என்றார்களாம். மறு நாள் நண்பரும் அவருமாக நகரெங்கும் அலைந்து ஒரு முடி திருத்தும் நிலையத்தைக் கண்டிபிடித்திருக்கிறார்கள். கடையின் பெயர்பலகையில் ‘உலகின் நெம்பர் 1’ முடிதிருத்தும் நிலையம் என்றிருந்ததாம். பரவாயில்லை இதுதான் முடிவெட்டிக்கொள்ள உகந்த இடமென தீர்மானித்தும் விட்டாராம். எதற்கும் இன்னும் கொஞ்சதூரம் நடந்து பார்த்து உறுதி செய்துகொள்வதென நண்பருடன் நடந்திருக்கிறார். சிறிது தூரம் சென்றதும் அங்கே வேறொரு முடிதிருத்தும் நிலையம். கடையின் முகப்பில் ஊரிலேயே நெம்பர் 1 முடிதிருத்தும் நிலையம் என்று எழுதிப்போட்டிருந்ததாம். கிராமவாசிக்கு சந்தேகம் வர கடைகாரரைக்கேட்டிருக்கிறார். உலகிலேயே நெம்பர் ஒன் கடை இந்த ஊரில்தானிருக்கிறது ஆனால் ஊரிலுள்ள கடைகளில் எங்கள் கடைதான் நெம்பர் 1எனில் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என்றாராம். தெருவில் நின்று,  இந்த இரண்டுக் கடைகளில் எந்தக்கடையில் முடிவெட்டிக்கொள்ளலாமென குழம்பிக்கொண்டிருந்த கிராமவாசியிடம் அவரது நண்பர் எதிலிருந்த முடிவெட்டும் கடையைக் காண்பித்திருக்கிறார். அக்கடையில் இந்தத் ‘தெருவிலேயே நெம்பர் 1’ முடிதிருத்தும் நிலையமென பெயர் வைத்திருக்க, அந்தக் கடைதான் பெரியகடையென்று கிராமவாசியும் அவர் நண்பரும் நுழைந்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால், கிராமத்தில் ஒழுங்காக தொழில் செய்யப் போதாதென்று தகப்பனால் விரட்டிவிடப்பட்ட அவர்கள் கிராமத்து நாவிதன் மகன் திறந்திருக்கும் புது கடையாம் அது.  சென்னை கடற்கரையை ஒப்பிட இரண்டொரு இந்திய கடற்கரை நகரங்களையேனும் சென்று பார்த்தால் உண்மை தெரியவரும்.

சென்னையின் கிழக்கு கடற்கரை மெரீனா, சாந்தோம்; மெரீனா கசந்த காதலர்களுக்கு குறிப்பாக கனமான பர்சும், ஜாவா -லாம்ரெட்டா வாகன வசதிகளையும் கொண்ட எழுபதுகளின் காதல் ஜோடிகளுக்கு மகாபலிபுரமும் துணைபுரிந்தது அந்தக்காலம். காலத்திற்கேற்ப கிழக்குக் கடற்கரை நீளத்தில் வளர்ந்தது. வி.ஜி.பி கோல்டன்பீச், எம்.ஜி.எம் தீம் பார்கென முளை விட்டன. கொஞ்சம் ரசனை கூடியவர்களுக்கு சோழமண்டல ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் கிராமமும், தென்னிந்திய பாரம்பரியத்தைக் பார்வைக்கு வடித்திருக்கும் தட்சன சித்ரவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியர் ஒருவரை மணந்த அமெரிக்கப் பெண்ணின் யோசனையில் ‘தட்சன சித்ர’ உதித்ததென்று நண்பர் இந்திரன் கூறினார்.

நாங்கள் அகவெளியிலிருந்து புறப்பட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் தட்சிண சித்ரவை அடைந்திருந்தோம். நுழைவு வாயிலில் தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. பிறகு தமிழன்பர்களின் உபயோகத்திலுள்ள மகிழ்வூர்திகள் – இறந்தவர்களையும், விபத்தில் சிக்கியவர்களையும் ஏற்றிசெல்கிறபோது கூட இவை மகிழ்வூர்திதானா? என்பதை யாரேனும் விளக்கினால் தேவலாம். தட்சிண சித்ர பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தின், மேல் தட்டு வகுப்பினரென்பதை பார்க்கும்போதே புரிந்தது. அது தவிர கண்களுக்குக் கவசமிட்டு அழைத்து வரப்பட்டிருந்த வெளிநாட்டினர், இரண்டொரு காதல் ஜோடிகள், வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை தங்கள் சொந்த வாகனத்தில் தலை விதியேயென அழைத்துவந்தவர்களையும் கான நேர்ந்தது.

இதமான வெயில், குளிர் தரும் நிழல், சோம்பல் முறிக்கும் பணியாளர்கள். சார் இங்கே பெருசா வரும்படியில்லை ஐந்தோ பத்தோ கையிலிருப்பதை கொடுங்கள் என மறவாமல் கேட்கிற செய்முறை விளக்கக் கலைஞர்கள், அவர்களின் சோர்ந்த வேர்வை உறைந்த முகங்கள் போன்ற கொசுறு காட்சிகளும் தட்சிண சித்ரவில் உண்டு. இலத்தீன் அமெரிக்கப் பாணியில் கட்டப்படிருந்த நுழைவாயிலிலேயே முதல் அதிர்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தியர்களுக்கு ஒரு கட்டணம் வெளிநாட்டினருக்கு ஒரு கட்டணமென நுழைவுச் சீட்டு சேவை வழங்கியவர்களிடமிருந்து எந்திரக் குரல். கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்த அறத்தை இந்தியர்கள் கடைப்டிக்கிறார்களென்பது சில அனுபவங்களூடாக விளங்கிக்கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் எந்த நாட்டிலும் இந்தியர்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வாங்குவதாகத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் நீங்கள் எங்கள் எஜமானர்களாக இருந்தவர்களில்லையா அதனால்தான் இந்த உயர்ந்த கட்டணமென்று கூறி என்னைக்காட்டிலும் பதினைந்து மடங்கு பணம்கொடுத்து நுழைவுச் சீட்டுவாங்கிய பிரெஞ்சு நண்பரின் சினம் காத்தேன்.

நுழைவுச்சீட்டினைப் பரிசோதிக்க ஆட்களில்லை. பிரபுதேவாவோட நயன தாராவுக்குச் சண்டையாமே என்று கேட்டபடி திரும்பிய பெண் ஊழியையிடம் எங்களுக்குச் செய்தி எட்டவில்லை, என்றேன். நுழைவாயிலை அடுத்து வலப்புறம் ஒரு செமினார் ஹால். அடுத்துத் திரைப்பட அரங்கம். எட்டிபார்த்தோம் தென்னிந்திய மொழியில் எடியூரப்பா குரலில் (?) இரண்டு பொம்மைகளைக் காட்டி ஓரு கலைஞர் என்னவோ¡ கூறிக்கொண்டிருந்தார். வெளியில் வந்து குச்சி ஐஸ¤டன் எதிர்பட்டப் பையன்களை அரைபார்வையுடன் கடந்தோம். இரு புறமும் கடைவிரித்திருக்க கால்வாய்போல ஓடிய நடைபாதையில் மீண்டும் சீருடையில் பள்ளி மாணவ மாணவிகள். கடைகளில் வடகிழக்கிந்திய கலைஞர்கள், அவர்கள் கைவண்ணத்தில் உருவான, விசிறிகள், கைக்குட்டைகள், தலையணை விரிப்புகள், ஓலை நறுக்குகளில் கஜுராஹொ பாணியிலான சித்திரக் கீறல்கள். மார்பிள் யானைகள், சிறு சிறு பெட்டிகள். எதையும் வாங்கவில்லை. இவற்றையெல்லாம் விளக்கமாகவே எழுதமுடியும், பிரான்சிலிருக்கும் எனது கடையிலும் இவற்றை விற்கிறேன் அவற்றின் நதிமூலம் ரிஷிமூலமெல்லாம் தெரியும். திருவண்ணாமலை, போளூர் பக்கமிருந்து வந்திறங்கியிருந்த நறிக்குறவர்களின் பாசிமணிகளையும் பார்க்க முடிந்தது.

அவற்றைப் பொறுமையுடன் கடந்து பள்ளி மாணவியரின் சலப்புகளையும், கூச்சல்களையும் அவர்களை இடைக்கிடை ஆங்கிலத்திலும் தமிழிலும் அடக்கிவிட்டு சோர்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த டீச்சர்களையும் சகித்துக்கொண்டால்:

கேரளப்பிரிவில் மாட்டுக்கொட்டகை, இந்துக்களின் வீடு,  சிரியன் கிறிஸ்டியன்களின் வீடென சாட்சிக்கு ஒன்றென பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அவசியம் பார்க்கவேண்டியவை. கேரளவீடுகள் முழுக்க முழுக்க மரத்தாலானவை. தேக்கு மற்றும் கருங்காலி மரத்தில் கதவுகள், ஜன்னல்கள் உத்தரங்கள் என்று வழக்கமான உபயோகங்களிருக்கட்டும் வீட்டின் சுவர், தடுப்பு, தரை அறைகள், திண்ணைகள், கதவுகளின் இயக்கத்தை வழிநடத்திய முளைகள்,  தாழ்ப்பாள்கள்  ஆகிய அனைத்தும் மரம் மரம் மரம்… பழைய வீட்டை விலைக்கு வாங்கி அப்படியே பிரித்து எடுத்துவந்து தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள். எல்லாமே வசதிபடைத்த மேல்தட்டு கிராம மக்களின் குடியிருப்புகள். அவர்கள் வீட்டு பண்ணை ஆட்களின் குடிசைகளை காட்சிபடுத்தவில்லை. ஒரு கிராமத்தில் ஒருவரோ அல்லது இரண்டுபேரோ வாழ்ந்த வாழ்க்கை இந்தியப் பாரம்பரியத்தைப் பேசுகின்றன. சிறிய தாழ்வான வாயில், உள்ளே வெக்கையைத் தணிக்கும் ஒளிமங்கிய அறை இருள் பார்வையாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கின்றன. தேக்குமரக்கட்டிலைப் பார்க்கிறபோது சுந்தரன் ஞானும் சுந்தரி நீயும் பாடல் தொண்டைக்குள் அடங்கிப்போனது. மழைநீரை தேக்கி குடிநீராய் உபயோகிக்கும் ஞானம், வீட்டு சுவற்றோடு இணைத்த கிணறு. அழகோ அழகு. இன்றைக்கும் இப்படியான வீடுகள் கேரளாவில் இருக்கின்றனவா?

தமிழ் நாட்டுப்பிரிவில் பெரிய தூண்களும், கிளிகள், பூக்களென செதுக்குவேலைகொண்ட நிலைவாயில்களும் நடை, வாசல், தாழ்வாரம், முன்கட்டு பின்கட்டென வாழ்ந்த மரபான செட்டிநாடு வீடொன்றும்,  தஞ்சாவூர் வளப்பமான விவசாயி ஒருவரின் வீடும், செங்கல்பட்டுப் பகுதியைசேர்ந்த வீடொன்றும் இருந்தன. இளைஞரான செங்கல்பட்டு குயவரொருவர் உழக்குகள் செய்கிறார்.  பத்து ரூபாய் கொடுத்தால் நம்மையும் ஒன்றிரண்டு உழக்குகளை உடைக்க அனுமதிக்கிறார். நான் உருப்படியாக ஒன்றை செய்தேன். பிரெஞ்சு நண்பர் உடைத்தார். அய்யனார் கோவிலில் இரண்டொரு நிழற்படங்களை எடுத்துக்கொண்டோம். ஆந்திராவையும் கர்நாடகாவையும் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாமென தீர்மானித்து புறப்பட்டுவிட்டோம். பசி வந்திட இரண்டும் பறந்துபோயின.

அடுத்த ஒரு மணி நேரம் ஓட்டலில் கழிந்தது. கிரிக்கெட் பார்த்த நேரம்போக வாடிக்கையாளர் ஞாபகம்வந்தால் அங்கே பரிமாறுகிறார்கள். வரும் வழியில் எங்கள் வாகனம் வேக அளவை மதிக்கவில்லையாம். தமிழ் நாட்டு காவல்துறையினரும் மிகப் பொறுப்பாக அபராதம் விதித்தார்கள். உருப்படியான பணி. போட்கிளப்பில் சந்தியா நடராஜன் இரவு டின்னர் கொடுத்தார். இந்திரன், பிரெஞ்சு நண்பர், கி.அ. சச்சிதானந்தம் பிறகு நடராஜன் எல்லோருமாக பசியாறினோம்.  இரவு பத்துமணி ஆகிவிட்டது. இந்திரன் வீட்டிற்குத் நாங்கள் திரும்பவந்தபோது அன்றையதினம் பிரான்சிலிருந்து வரவிருந்த நண்பர்களை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்திருந்த கார் வந்திருந்தது. அங்கிருந்து மீனம்பாக்கம் ஏற்போர்ட்டிற்குச்சென்று அதிகாலை ஒருமணிக்கு விமானத்தில் வந்திறங்கிய நண்பர் மனேவையும் அவருடைய துணவியாரையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டபோது அதிகாலை இரண்டரைமணி.
————————————

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது.

மார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த மாஸ்க்கோவாசி ஒருவர் வானொலியைத் திருப்ப, முதன்முறையாக அச்செய்தியைக் காதில்வாங்க நேரிடுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவுடமை கனவில் திளைத்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்க்கோவானொலி அறிவிப்பாளர் தெரிவித்த செய்தி: “ஸ்டாலின் உடல்நிலை கவலைதரும்வகையில் உள்ளது”

காலை 6மணி 21: நாட்டின் பிரதம தளபதிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று மீண்டும் மாஸ்கோ வானொலி உறுதி செய்தது.

காலை 6மணி 25: “ஸ்டாலின் இதயத் துடிப்பில் சீரடையவில்லை. சுவாசிக்க மிகவும் சங்கடப்படுகிறார்”, என்ற செய்தியை சோவியத் நாட்டின் செய்தி ஸ்தாபனம் ‘தாஸ்’ (Tass) தெரிவிக்கிறது.

காலை 6மணி 36: தளபதியின் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று செய்தி.

காலை 6மணி38: தளபதியின் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகவும், இதயத்துடிப்பு நிமிடத்திற்கு  38 ஆகவும் இருப்பதாக அறிவிக்கிறார்கள்.

காலை 6மணி 55: ‘நமது இயக்கத்திற்கும் மக்களுக்கும் பெருஞ்சோதனை ஏற்பட்டுள்ளது, தோழர் ஸ்டாலின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்ற செய்தியை சோவியத் அரசாங்கத்தின் அமைச்சகமும் கட்சியின் செயற்குழுவும் சேர்ந்தே வெளியிட்டிருந்தன. தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கைகள்.

மார்ச் மாதம் இரவு 2ந்தேதி சம்பந்தப்பட்ட முதல் அறிக்கை தோழர் ஸ்டாலின் அன்றிரவு அவரது சொந்த குடியிருப்பில் இருந்ததாகவும் திடீரென மூளை இரத்த நாளங்கள் சிதைந்து இரத்த கசிவு ஏற்பட சுயநினைவை இழந்ததாகவும் வலது காலும், வலது கையும் செயலிழந்ததோடு பேசும் சக்தியையும் அவர் இழக்க நேர்ந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து வழக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த விபரமும் அதில் கண்டிருந்தது. அதாவது உயர்மட்ட மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஸ்டாலினை வைத்திருந்திருக்கிறார்கள்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி அதிகாலை செய்தியில், கிரெம்ளின் குடியிருப்பில் முந்தைய இரவு 9 மணி50நிமிடத்திற்கு ஸ்டாலின் இறந்தாரென அறிவித்தார்கள். “தோழர் லெனின் கனவுகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை நனவாக்க தொடர்ந்து உழைத்த பொதுவுடமைக்கட்சியின் தலைவர் தோழர் ஸ்டாலின் இதயம் நின்றுபோனது” என அந்த அறிக்கை தெரிவித்தது.

“தோழல் ஸ்டாலின் இறப்பு சோவியத் நாட்டின் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகமனைத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மரணச்செய்தி சோவியத் தொழிலாளர்கள்; தரைப்படை, கடற்படை வீரர்களுக்கு மட்டுமின்றி உலகமெங்கும் இலட்சகணக்கான தோழர்களின் இதயதிலும் தாங்கொணாத வலிதரகூடியது”, என்றும் அறிக்கை இருந்தது.

இச்செய்தியை உலகமெங்கும் கேள்விகளேதுமின்றி ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன. இரும்புத்திரை நாடு என்ற பெயர்பெற்றிருந்த சோவியத் யூனியனிடமிருந்து இதுபோன்ற செய்தி கசிந்ததே அப்போதைக்குப் பெரிய விடயம். ஆனால் ஆண்டுகள் ஆக ஆக உண்மைகள் வேறாக இருந்தன.

1952ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 7மணி. கிரெம்ளினில் பொதுவுடமைகட்சி தொழிலாளர்அமைப்பின் 19வது மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தபோது பங்குபெற்ற 1500 உறுப்பினர்களும் எழுந்து நின்று வானளாவப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. மாநாட்டில் பலரும் மாலென்கோவ் மற்றும் குருஷ்சேவ் இருவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படுமென பலரும் நினைத்தார்கள். வந்திருந்த பலருக்கும் மாநாடு தொடங்கிய சிற்சில நிமிடங்களிலேயே,  மாநாட்டிற்கு ஒரே ஒரு மனிதர்தான் பிரதான கதாநாயகராக இருக்கமுடியுமென்றும் அந்த ஒரு மனிதரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவருமில்லையென்பதும் தெளிவாயிற்று. அதை மனதிற்கொண்டே மாநாட்டு செயல்பாடுகள் வரையரைச் செய்யப்பட்டிருந்தன, அதை ஸ்டாலினே முன்னின்று செய்துமிருந்தார். மூலதன நூலின் அடியொற்றி ஸ்டாலின் ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கியிருந்தார். இம்மாநாடு அவரது புதிய பொருளாதாரகொள்கையின் அடிப்படையில் எடுக்கவிருந்த நடவடிக்கைகளுக்கு முன் மாதிரி எனலாம். குருஷ்சேவும் மலென்கோவும் கவனிப்பாரற்றவர்களாக நடத்தப்பட்டார்கள். குருஷ்சேவ் பொதுவுடமைக் கட்சியின் செயல்பாடுகள்பற்றிய ஆண்டறிக்கையை வாசிக்க அனுமதித்து மனதை சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. மாநாடு கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. பொலிட்பீரோவு(Politburo of the Central Committee of the Communist Party of the Soviet Union)க்குப் பதில் மத்திய குழுவின் புரவலரமைப்பு (The Presidium of the Central Committee of the Communist Party) என்றவொன்று உருவானது. இப்புதிய அமைப்பில் பொலிட் பீரோவிலிருந்த 12 நிரந்தர உறுப்பினர்களுக்குப் பதிலாக 25 நிரந்தர உறுப்பினர் 11தற்கால உறுப்பினர் பதவிகள் உருவாயின. முன்பிருந்த பொலிட்பிரோ உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரத்தை குறைப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு. கட்சியிலோ அரசு செயல்பாட்டிலோ உருப்படியாக பங்காற்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. கட்சியின் தலைமைச் செயலகம் ஒருவகையில் பழைய பொலிட்பீரோவினை ஒத்திருந்தது. அதுகூட முக்கியத்துவமிழந்து ஒரு துணை அமைப்பு என்கிற தகுதியைப் பெற்றிருந்தது. பத்துபேர்கொண்ட கட்சியின் தலமைச்செயலக உறுப்பினர்களில் மாலென்கோவ், குருஷ்சேவ் ஆகியோரும் அடக்கம். எனினும் எல்லோருமே உண்மையில் அதிகாரத்தில் சமநிலையிலிருந்தனர், அதாவது முதல் செயலரைத் தவிர்த்து. முதல் செயலர் ஸ்டாலின். மீண்டும் சர்வாதிகாரி ஸ்டாலினின் அதிகாரவரம்பினை உயர்த்தும் வகையிலேயே இம்மாற்றங்கள் நிகழ்ந்தன.

1952ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி சோவியத் யூனியனின் பொது உடமைக்கட்சியின் மாநாட்டில் மேடையேறிய ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தார். கம்பீரமான உடல் எப்போதும்போல ராணுவ சீருடையில் அதிகம்பொருந்தாமல் முகத்தில் எவ்வித பாவமுமின்றி விறைத்துக்கொண்டு நின்றது. ஜியார்ஜியா பகுதியைச்சேர்ந்த விவசாயிக்கேயுரிய பிரத்தியேகத்தோற்றம், கைகொள்ளும் அளவிற்கு தடித்த மீசை. அவர் மேடையேறுகிறபோது 74வயதென்று கணிப்பது மிகவும் கடினம் என்பதுபோலவே உடல் ஆரோக்கியத்துடனிருந்தது. மாநாட்டில் பங்குபெற்ற ‘மக்கள்வழிகாட்டிகள்’ என்று நம்பப்பட்ட இத்தாலி, ஜெர்மன், சீனா, கொரியா, அங்கேரியென வந்திருந்த தோழர்களுக்கு முகமன் கூறினார். அளித்த உரையிலும் தடுமாற்றங்களில்லை.

மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி ஒரு சில வாரங்கள் கடந்திருந்தன. அந்நிலையில் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. இச்சம்பவங்களின் காரணகாரியங்கள் வியப்புக்குறியவை, வரலாற்றாசிரியர்களுக்கு விளங்காதவை. அவற்றின் பின்னே இருந்த புதிர்களும் அவைகளுக்கான விடைகளும் எதிர்கால சம்பவங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தன.

முதலாவது சம்பவம்: கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் மாஸ்கோ நகரை அலங்கரிப்பதுண்டு. அவற்றின் வரிசையில் தலைவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை வைத்து தலைவர்களின் இருப்பை சோவியத் பொதுவுடமைக் கட்சியில் தீர்மானித்துவிடலாம். பொதுவாக ஸ்டாலின், மொல்டோவ் (Moltov), மலென்க்கோவ்(Malenkov) எனத் தொடரும் அவ்வரிசையில் பேரியா (Beria) என பெயர்கொண்ட காவல்துறை தலைவருக்கு எப்போதுமே நான்காவது இடமுண்டு. மாறாக 1952ம் ஆண்டு குளிர்காலத்தில் அலங்கரித்த உருவப்படங்கள் வரிசையில் 6வது இடத்தில் பேரியா இருந்தார். மாஸ்கோவாசிகள் புருவத்தை உயர்த்தினார்கள். ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் பிறந்தன.

இரண்டாவது சம்பவம்: இதிலும் சுவாரஸ்யத்தின் விழுக்காடு கிஞ்சித்தும் குறையாமலிருந்தது. சோவியத் யூனியன்கீழிருந்த அன்றைய உக்ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேருக்கு மரன தண்டனையும், அக்கூட்டத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு வருடக்கணக்கில் சிறைதண்டைனையும் அளித்தனர். அவர்கள்  புரட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை வழங்கியிருந்தனர்.   தண்டனையை வழங்கியது, இது போன்ற குற்றங்களை கையாளக்கூடிய ராணுவ நீதிமன்றம். அவர்கள் மேலிருந்த குற்றமென்று பின்னர் தெரியவந்தது, உணவுப்பங்கீட்டுத் துறை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றார்கள் என்பதாகும். செய்திருக்கும் குற்றத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது ராணுவ நீதிமன்றங்களில் தண்டிக்கபடவேண்டியவர்களே அல்ல. இதனை விசாரணை செய்தவர் ஆரம்பத்தில் காவல்துறை தலைவராக இருந்த பேரியா. ஆனால் அவரிடமிருந்த வழக்கினை ராணுவத்தின் கீழ் கொண்டுவந்திருந்தனர். இக்குற்றவாளிகள் அனைவரும் அனஸ்த்தாஸ் மிக்கோயான் என்ற பொலிட்பீரோ உறுப்பினர் கீழிருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், உயர்மட்டத்திலிருந்த ஒரு சிலரின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததென்ற வதந்தியும் உலாவிற்று.. பின்னர் உணவுப்பங்கீட்டுதுறை அமைப்புகள் குருஷ்சேவ் வசம் ஒப்படைக்கபட்டன. இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் யூதர்கள்.

மூன்றாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தை ஒத்ததென்றே இச்சம்பவத்தை வர்ணிக்கவேண்டும். 1953ம் ஆண்டு ஜனவரி 13ந்தேதி ஒன்பது பேர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரை கைது செய்தனர்; அவர்களில் 6பேர் யூதர்கள். அவர்கள் இழைத்த குற்றம் “மருத்துவர்களின் சதி” -Doctors’ plot என பெயர்பெற்றது. . இவர்களில் முதல் குற்றவாளி ஒரு பெண் மருத்துவர் – திமாஷ¤க் (Timashuk) என்று பெயர். குளிர்காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டாலின் நெஞ்சுவலி கண்டார். வெகுநாட்களாகவே இதயத்  தமணிகளில் அடைப்பிருந்ததாகச் சொல்கிறார்கள். உடனடியாக மாஸ்கோவின் முன்னனி மருத்துவர்கள் அழைக்க பட்டார்கள் அவர்களில் இதய மருத்துவத்தில் வல்லுனரான வினோக்ராதோவ் (Vinogradov) என்பவரும் ஒருவர். சோவியத் யூனியன் மருத்துவ அகாதமியின் முக்கிய உறுப்பினர் என்பதோடு, மருத்துவ சேவையில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய லெனின் விருதையும் வென்றவர். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ” அவருக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல, அதுபோன்ற கட்டத்தையெல்லாம் அவர் தாண்டிவிட்டார்” என்றார்கள்.  மருத்துவர்களின் முடிவைக் காதில் வாங்கிய ஸ்டாலின் மெதுவான குரலில்,  உலக மருத்துவத்தோடு ஒப்பிடுகிறபொழுது ரஷ்யர்கள் மருத்துவதுறையில் முன்னேறி இருக்கிறார்களா இல்லையா? என கேட்கவும், இதிலென்ன சந்தேகம், நமது நாடு மருத்துவத்தில் முன்னேறியது என்பதை மறுக்கவா முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அப்படியெனில் என்னை குணப்படுத்த வழியென்னவென்று பாருங்கள். சோவியத் யூனியனுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் நான் தேவைப்படுகிறேன், என்பது ஸ்டாலின் தரும் பதில். மருத்துவர்கள் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதுபோல, “உங்களுக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல”, என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். அவர்கள் சென்றதும் அருகிலிருந்த ‘பேரியா’விடம் ஸ்டாலின், ” பார்த்தாயா பேரியா,  அதிகாரத்திலிருந்து என்னை அகற்ற முடிவு செய்திருக்கிறார்களென நினைக்கிறேன்”, என்றார்.

இங்கே பேரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் தொடர்வதில் பயனில்லை. சோவியத் யூனியனின் மிக மர்மமான மனிதர்களுள் ஒருவரென அறியப்பட்ட பேரியா ஸ்டாலினைபோலவே ஜியார்ஜியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்புலம் அவர் மளமளவென்று உயர்பதவிகளை எட்ட உதவியது என்பதும் உண்மை.  ஸ்டாலினைப்போலவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கக்கூடியவர். உள்துறை அமைச்சராகவும், இரகசிய காவற்படையின் தலைவராகவும், அணு உலைக் கழகத்தின் இயக்குனராகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர். சோவியத் சிறை முழுக்க இவரது கண்காணிப்பின் கீழிருந்தது. தோற்றத்தில் சாதுவான மனிதராகவும், சராசரி அரசு அதிகாரிபோலிருந்த அவருக்குள் அடக்குமுறையில் தேர்ச்சிபெற்ற இரத்தவெறி பிடித்த கொடிய மிருகம் ஒளிந்துகொண்டிருந்ததாக மாஸ்கோவாசிகள் நம்பினார்கள். தமது கட்டளையை எவ்வித தயக்கமின்றி நிறைவேற்றும் பேரியாவை ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஆனல் எங்கே விட்டால் நமது தோளில் சவாரி செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்ற எச்சரிக்கையும் அவரிடத்தில் இருந்தது. ஸ்டாலின் கட்டளை இடத்தேவையில்லை. அவர் உள்மனதை வாசித்ததுபோல பேரியாவின் நடவடிக்கைகள் இருக்கும். Night of the Long Knives சம்பவத்தை அறிந்தவர்கள் அடால்·ப் ஹிட்லர், எர்னெஸ்ட் ரோம் (Ernst Rohm) பிரச்சினையை ஒத்தது ஸ்டாலின் பேரியா உறவு என்கிறார்கள்.

ஜனவரி மாதம் 13ந்தேதி டாஸ் செய்தி ஸ்தாபனம், ” தவறான மருந்தை வழங்கி மருத்துவர்களில் சிலர் தோழர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி” என்று செய்தியை வெளியிட்டிருந்தது. அரசு தரப்பில் வெளிவந்த இச்செய்தியும் அது தொடர்பான நடவடிக்கையும் கீழ்மைத்தனமானவை என்பதை 1958ம் ஆண்டு குருஷ்சேவ் 20 வது காங்கிரஸின்போது வாசித்த அறிக்கை தெரிவிக்கிறது. விசாரனையின் போது வெளிநபர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படி நடந்துகொள்ளவேண்டியிருந்ததென மருத்துவ பெண்மணி திமாஷ¤க் கூறியிருந்ததைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அப்பெண்மணி எழுதியிருந்த “மருத்துவர்களில் சிலர் கூடாத வைத்தியபராமரிப்பைத் தோழர் ஸ்டாலினுக்கு அளிக்கிறார்கள்”, கடிதம் ஸ்டாலின் தனது மூர்க்க குணத்தை கட்டவிழ்க்க போதுமானதாக இருந்தது. சோவியத் யூனியனின் முக்கிய மருத்துவர்களை கைது செய்யுமாறு கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க எப்படியெல்லாம் விசாரனைக்குழுவினர் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதையும் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். வினோகிராடோவ் கடைசிவரை கைவிலங்கிடப்பட்டிருக்கவேண்டும், மற்றொரு மருத்துவரை சித்திரவதை செய்யவும் தயங்கவேண்டாமென்று கட்டளை. சித்திரவதைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியேவ் முன்னிலையில் நடந்தன. அவரிடம் “உண்மையை வரவழைக்காதுபோனால், உங்கள் தலை இருக்காதென” ஸ்டாலின் எச்சரித்திருந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் யோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் எளிதான யோசனை. உண்மையை வரவழைக்க கைதிகளை நன்கு புடைக்குமாறு சொல்லப்பட்டது. ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு கிடைத்த  வழக்கு சம்பந்தப்பட ஆவணங்கள் அவ்வளவும் ஜோடிக்கபட்டவையென தெரியவந்ததென குருஷ்சேவ் அறிக்கைமூலமாக பின்னர் தெரிந்து கொள்கிறோம்.

சோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ப்ராவ்டாவும், பிற தினசரிகளும் “இஸ்ரேலியர்களான இம்மருத்துவர்கள் அனைவரும் யூதமதத்தின் தீவிரநம்பிக்கைகொண்ட சியோனி(Sionis)ஸ்ட்டுகளென்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் கைக்கூலிகளென்றும்”, எழுதின. அனைவருக்கும் தெளிவாயிற்று. ஸ்டாலின் மீண்டுமொரு கொலைகளத்தினை உருவாக்கும் பணியிலிருந்தார். இம்முறை இனவாதம் அவருக்கு உதவிற்று. சோவியத் யூனியனின் உயர்மட்டத்திலிருந்த பல தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் தலை என்றைக்கு உருளுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். மத்திய குழுவின் புரவலரமைப்பில் இருந்த மூத்த தலைவர்களுள் ககனோவிச்(Kaganovitch) ஒரு யூதர், ஸ்டாலினுடைய முன்னாள் மனைவியின் சகோதரர், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருங்கூட; மற்றொரு மூத்த தலைவர் மொல்ட்டோவ் யூதப்பெண்ணொருத்தியை மணந்திருந்தார்; பிறகு குருஷ்சேவ்க்குங்கூட ஆபத்திருந்தது, அவரது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த மகள் யூதர் ஒருவரை மனந்திருந்தாள்; பேரியாவுக்கும் ஆபத்திருந்தது. அவரது தந்தை ஜியார்ஜியர் என்றாலும் தாய் யூதப்பெண்மணி.

ஸ்டாலினின் அவ்வளவு கோரதாண்டவத்திற்கும் ஆரம்பத்தில் லாவ்ரெண்ட்டி துணைநின்றார். ஒவ்வொரு நாளும் தினரசிகளில் புதுப்புது ஊழல்கள், துரோகங்கள். குற்றவாளிகள் கைதும், அவர்கள் உண்மைகளை ஏற்பதும் தொடர்ந்தன. அவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் வணிக அமைப்புகளை சார்ந்தவர்களாக இருப்பார்கள், மருத்துவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள், நடிகர்களாக இருப்பார்கள், வழக்கறிஞர்களாக இருப்பார்கள். குறிப்பாக குருஷ்சேவ் மாநிலமான உக்ரைன் பகுதியிலேதான் இக்கைது நடவடிக்கைகள் அதிக அளவில் இருந்தன. ஸ்டாலினை சுற்றியிருந்த தலைவர்களை ஆபத்து அதுவரை நெருங்கவில்லை என்றபோதும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குருஷ்சேவ் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். பேரியாவின் காவல் துறை பல இடங்களில் தவறிழைத்திருக்கிறதென சொல்லப்பட்டது. மிக்கோயனும் பாதித்திருந்தார் அவரின் கீழ் இருந்த பலர் ஏற்கனவே தண்டிக்கபட்டிருந்தனர். மோல்ட்டோவ்க்கும் அச்சமிருந்தது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுவரை மாஸ்கோவில் பயமில்லை என்றிருந்ததுபோக டாஸ் செய்தி ஸ்தாபனத்தின் இயக்குனர் திடீரென்று மாயமானார். மொல்ட்டோவ் நண்பர் கைது என்று செய்திவந்தது. திருமதி மொல்ட்டோவ் கைதுக்குப்பிறகு என்னவானார் என்று தகவலில்லை. மாஸ்கோ பல்கலைகழக கைதுகள், அறிவியல் அகாதெமியைச்சேர்ந்தவர்களின் கைதுகள் ஏன் மத்திய குழுவின் புரவலர் அமைப்பைச்சேர்ந்தவர்களேகூட கைதுசெய்யப்பட்டனர். ஆக யூதர்கள்..யூதர்களை குறிவைத்து நடவடிக்கைகள் இருந்தன.

மார்ச் மாதம் முதல் தேதி. ஞாயிற்றுக்கிழமை. குளிர்காலம் அதன் குணத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமலிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த தமது குடியிருப்பில் உறங்காமல் குருஷ்சேவ் விழித்திருந்தார். முதல் நாள் இரவு தலைமைக் காரியாலயத்தில் தோழர் ஸ்டாலினோடு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை சேர்ந்து உண்டணர். கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அனவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வின்போது ஸ்டாலின் சந்தோஷமாகவே இருந்தார், நாங்களும் அவருடன் மகிழ்ச்சியாக சந்திப்பைக் கழித்தபின் வீடு திரும்பினோம் என்றார் பின்னொருநாளில் குருஷ்சேவ். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக ஸ்டாலின் கட்சி பொறுப்பில் இருக்கிற சகாக்களுடன் தொலைபேசியில் நிர்வாகம் சம்பந்தமாக உரையாடுவது வழக்கம். ஆனால் இன்றென்னவோ அந்த நிமிடம்வரை அழைப்பில்லை. திங்கட்கிழமைகளில் அவசியம் இருந்தாலொழிய மாஸ்க்கோவில் ஸ்டாலினை சந்திப்பதில்லை. தொலைபேசி உரையாடலுக்கும் வாய்ப்புகளில்லை. ஆனால் இன்று அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலினிடமிருந்து வரவேண்டிய தொலைபேசி அழைப்பு வராதது ஏன் என்றகேள்வி அவர் மனைதைப்போட்டு குடைந்தது.

எத்தனை நேரம் குருஷ்சேவ் யோசனையில் ஆழ்ந்திருப்பாரோ திடீரென தொலைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டவராய் வேகமாய்ச்சென்று எடுத்த குருஷ்சேவ் மறுமுனையில் யாரென்று தெரிந்துவிட்டது. தோழர் ஜோசெப் ஸ்டாலினுடைய தலைமைப் பாதுகாவலர்.

– நீங்க உடனே புறப்பட்டு தோழர் ஸ்டாலினுடைய தாட்சா (Datcha-பண்ணை வீடு)வுக்கு வரவேண்டுமென்று கட்டளை – என்கிறது  மறுமுனையின் குரல்.

இவர் பதில் தேவையில்லை என்பதுபோல மறுமுனையில் உரையாடல் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் கடுங்குளிரில் மாஸ்க்கோவிற்கு வெளியே தொண்ணூறு கி.மீ தூரம் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்லவென்று குருஷ்சேவுக்குத் தெரியும் தொலைபேசி மணியின் அழைப்பொலிகேட்டு விழித்திருந்த திருமதி குருஷ்சேவ் அவரை பார்த்தாள். நீனாபெட் ரோவ்னா ஓரளவு நிலமையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளுக்கு இது முதல் அனுபவமல்ல. இதற்குமுன்பும் ஸ்டாலினிடமிருந்து நேரங்கெட்ட நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அவரும் புறப்பட்டு போயிருக்கிறார். குருஷ்சேவ் மறுமுறையும் தொலைபேசியை எடுத்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு உடையை அணிந்தார். உறைபனிகுளிருக்கு வேண்டிய ஆடைகளையும் கையுறைகளையும் மறக்காமல் கணவர் அணிகிறாரா என்று பார்த்தார். ஆடையை அணிந்து முடித்ததும் குளிரைச்சமாளிக்க அப்பெண்மணியே சென்று வோட்கா பாட்டிலை எடுத்துவந்து கோப்பையை நிரப்பினார். இன்னொரு கோப்பை குடிக்கவும்  வற்புறுத்தினார். குருஷ்சேவ் மறுத்தார்.

– நாயைக்கூட வெளியில்விட பலமுறை யோசிக்க வேண்டும் என்பது போல குளிர் இருப்பதால் ஒருகோப்பை கூடுதலாக வோட்கா எடுப்பது நல்லதென்றாள்.

அவர் மறுத்தார். புறப்படுவதற்கு முன் மனைவியை பலமுறை தழுவி முத்தமிட்டார். ஸ்டாலின் நள்ளிரவில் அழைக்கிறபோதெல்லாம் இதை நடமுறை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சகாக்களில் பலர் ஸ்டாலின் அழைத்தார் என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பவந்து மனைவியைப் பார்த்தவர்களில்லை. குருஷ்சேவும் தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமலே போகலாமென்று நம்பினார்.

” அவளிடம் பதில் ஏதுமின்றி முத்தமிட்டேன். ஸ்டாலின் அழைக்கிறபோதெல்லாம் உயிரோடு திரும்பமுடியாமற்போகலாம் என நானும் என் மனைவியும் நம்பினோம், அதற்கு வலுவூட்டும் சாட்சியங்கள் ஏற்கனவே உண்டென்பதை இருவரும் அறிவோம்”, என்கிறார் குருஷ்சேவ்.

(தொடரும்)

 

 

 

இசைவானதொரு இந்தியப் பயணம்- 3

பிப்ரவரி 3

விழித்தபோதுதான் இந்திரலோகத்தில் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். “என்ன சார் நன்கு தூங்கினீர்களா? ” என நண்பர் இந்திரனின் விசாரிப்புடன் காலை தொடங்கியது. நன்கு உறங்க முடிந்தால், எல்லாம் கைவரப்பெற்றிருக்கிறோமென்று பொருள். படுத்தால் கணத்தில் உறங்கவும், முடிந்தபோது எழுந்திருக்கவும் வரம் வாங்கியிருக்கவேண்டும். சிலருக்கு இவ்வரம் கூடுதலாகவே அமைந்துவிடும். அவர்களுக்குத் தேவை பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல்..

இன்றைய காலையும் தென்னிந்திய காலையாக திருமதி இந்திரன் தயவில் வயிற்றுக்கு அறிமுகமானது. காலையிலேயே சூரிய பகவான் வேண்டுமான வெப்ப புன்னகையை பாரபட்சமற்று விநியோகித்துக்கொண்டிருந்தார். நீர், காற்று , ஆகாயம், தீ, பூமி என அனைத்துமே பொதுவில்தான இருந்தன. பூமியும் நீரும் இன்று தனியுடமையாகியிருக்கின்றன எதிர்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் தனியுடமை ஆக்கப்படலாம், ஆமென்.

இந்திய பெருநகரங்களுக்கேயுரிய மக்கள் வெள்ளம், வாகனப்பெருக்கம், வெப்பம், அனற்காற்று, இரைச்சல், மூர்க்கம், தன்னை தன்னை மட்டுமே தற்காத்துக்கொள்ளத் துடிக்கும் மனித உயிர்களென்ற இடிபாடுதல்கள், நெருக்குதல்கள், ஊமுள், நெருஞ்சிமுற்களென்ற வதைகளில் தினசரியைக் கடக்கும் (குறிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்கும்) இந்தியர்களை வணங்கவேண்டும். இந்தியாவில் நியாயமாக வெற்றி பெறமுடிந்தவன் அண்டார்ட்டிக்கில் வாழ நேர்ந்தாலும் சுலபமாகப் பிழைத்து கொள்வான். இந்தியச்சாலைகளில் வாகனமோட்ட தனிப்பயிற்சி வேண்டும் எவ்விதிகளுக்கும் அடங்காதவர்கள். தங்கள் கால்கள், தங்கள் கைகள், தங்கள் வாகனம், தங்கள் சாலை, தங்கள் உயிர் ஆகியவற்றில் அக்கறைகொண்டு சாலையை உபயோகிப்பவர்கள். நண்பர் இந்திரனின் வாகன ஓட்டி கொஞ்சம் விதிவிலக்கு: நல்ல சுறுசுறுப்பு. வாகனத்திற்கென ஒதுக்கப்பட்ட சாலைகளைப் பெரும்பாலும் பாதசாரிகள் ஆக்ரமித்துக்கொள்ளும் இந்தியாவில் அவர்கள் சாலையை தயவு பண்ணுகிறார்களாவென கவனித்து வாகனத்தைச் செலுத்தவேண்டும்.  இளைஞரான நண்பர் இந்திரனின் வாகனஒட்டி மன்மோகன் சிங்கைக்காட்டிலும் திறமைசாலி. எனக்கெதுவும் தெரியாதென்று கூறி இடித்து வாகனத்தை நிறுத்திய அனுபவம் நிகழவில்லை.

கிழக்குக் கடற்கரை சாலையின் திசைக்காக பயணித்தபோது இரண்டு கருத்துகள் குறித்து விவாதித்தோம். முதலாவது ஒரு கலைஞரின் படைப்புரிமை தொடர்பானது.  சிற்பமொன்றை சுட்டிக்காட்டி நண்பர் இந்திரன் இன்னாருடையதென தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அக்கலைஞரை ஓவியர் என்ற வகையிலேயே அறிவேன். அதனை நண்பரும் உறுதிசெய்தார். எனக்குள்ள வியப்பு அவரால் எப்படி ஒரு சிற்பத்தை வடிவமைக்க முடிந்ததென்பது. உரையாடலின் தொடர்ச்சி எனது ஐயத்தைப்போக்கியது. அக்கலைஞர் தீட்டிய ஓவியத்தின் அடிப்படையில் வேறொரு சிற்பி சிற்பத்தை உருவாக்கியிருந்தார் என்பது செய்தி. ஆனால் அச்சிற்பத்தை உருவாக்கினதாக ஓவியர் பெயர் இடம்பெற்றிருந்ததே தவிர அதன் வடிவமைப்பில், ஆக்கத்தில் ஓவியனின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கொரு relief கொடுத்த கலைஞனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. தஞ்சாவூர்க்கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான் என்பதுபோல, மாமல்லசிற்பங்களை பல்லவர்களின் பெயர்களால் கொண்டாடுவதுபோலவென்று வைத்துக்கொள்ளுங்கள். நல்லவேளை நவீனயுகத்தில் ஓவியர்களும் சிற்பிகளையும் அடையாளப்படுத்தத்தொடங்கியுள்ளனர். கலைஞர் வடித்தது, ஜெயலலிதா தீட்டியதென்று சொல்ல முனையவில்லை. அவர்களுடைய அபிமானிகள் கூறத் தயாரென்றாலும் பிறர் ஏற்கமாட்டார்கள்.  பத்துபேர் சேர்ந்து உருவாக்கும் திரைப்படத்தில் இவர் கேமராமேன், இவர் எடிட்டர், இவர், பாடகர், அவர் இசைக்கலைஞர் என்று பெயர்களைப்போட தயாராக இருக்கும்போது ஓவியரின் மூளையில் உதித்திருந்தாலும் அந்த ஓவியத்தை வடித்த சிற்பியின் பெயரையும் அங்கே பொறித்திருக்கவேண்டாமா? இவருடைய திறமைமட்டுமே போதுமானதாக இருந்தால்; அம்மி பொளிபவனோ ஆட்டுக்கல் பொளிபவனோ சிற்பம் வடிக்கபோதுமென்று அவ்ர்களிடத்தில் தமது ஓவியத்தை சிலைவடிக்க ஒப்ப்டைத்திருப்பாரா?  சம்பந்தப்பட்டச் சிற்பி அவனே எனக்குப் பெயர் வேண்டாம் எனது பசியைப்போக்க உதவினாற்போதும் எனக்கூறியிருந்தாலும், ஒரு கலைஞன் மற்ற கலைஞனின் ஞானத்திற்கு உரிமை கோரமுடியுமா? அப்படிகோருகிரபோது கூச்ச உணர்வு இருக்காதா?

அடுத்த விவாதப் பொருள் பிரெஞ்சு நண்பரால் உருவானது. உண்மை சத்தியம் குறித்து கீழைநாட்டவர்களின் பார்வை என்னவென்று அவர் கேட்கப்போய் பதில் சொல்லவேண்டியிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுநீதிச்சோழனின் சிலைகுறித்து விளக்கப்போக ஒரு பெரிய விவாதத்தை நடத்தினோம். அதே பார்வையில் இப்போதும் கேள்வி பிறந்தது. உண்மை, அறம், நீதி போன்றவற்றை வெவ்வேறு அலகுகொண்டு கிழக்கும் மேற்கும் அளக்கின்றன என்பதை எனது மேற்குலக வாழ்க்கைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது. தவிரவும் பல நேரங்களில் நம்மை ஜப்பான், சீனா போல முற்றுமுதலாக கீழைதேசத்தவர்கள் எனச்சொல்லிக்கொள்வதில் தயக்கமுண்டு. இந்திய வரலாற்றை அறிந்த நண்பர்கள் இந்த எனது தயக்கத்தை ஏற்பார்களென நினைக்கிறேன். இந்தியப்பண்பாடு படையெடுப்புகளாலும், பிற மக்களின் ஆதிக்கத்தாலும் காலங்கள்தோறும் சிதைந்துவந்திருக்கிறது அல்லது மாற்றத்திற்குள்லாகிவந்திருக்கிறது. இதுபற்றி தனியாக விவாதிக்க வேண்டும்.  அதுபற்றி எழுத ஆரம்பித்தால் கிளைக்கதையாகிவிடும். இப்போதைக்கு அதை மறந்தவனாக எடுத்துக்கொண்ட பிரச்சினைக்கு வருகிறேன். பிரெஞ்சு நண்பர் ‘உண்மை’ குறித்து நாம் என்ன நினைக்கிறோமென்று கேட்ட கேள்விக்கு வருகிறேன். நண்பர் இந்திரன் தயங்கவில்லை: பாவமன்னிப்பு தொடர்பான ஓர் உணமைச்சம்பவத்தில் பங்குத் தந்தையொருவருக்கு நேர்ந்த சோதனையையும் அவர் நடந்துகொண்ட விதத்தையும் விளக்கிக்கூறி, அவரது நடத்தை விதி திருவள்ளுவரால் எழுதப்பட்டதென்கிற விவரத்தையும் கூறினார்.  “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த/ நன்மை பயக்கும் எனின்” என்கிற குறளையும் சுட்டிக்காட்ட நண்பர் தவறவில்லை. பிரெஞ்சு நண்பருக்கு வாய்மையிடத்தில் பொய்யை நிரப்பலாம் என்பதில் உடன்பாடில்லை.  மனிதர் வாழ்க்கையை உலகமயமாக்கல் என்ற கோளுக்குள் குடி அமர்த்திய பிறகு இதுபோன்ற விடயங்களில் மேற்குக் கிழக்கு பார்வைகள் தேவையில்லை. தனிமனிதன் அவன் சுதந்திரம் என்கிற பார்வையை முன் வைத்து இயங்கும் மேற்கத்தியர் ஒரு புறம்; பண்பாட்டை சமூகம் சார்ந்து சிந்தித்து அச்சமூகத்தின் தமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுகும் இந்தியர்கள் ஒரு புறம். நமது பார்வைக்கும் மேற்கத்தியர் பார்வைக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. நம்மிடம் போலிகள் அதிகம். பகவத் கீதையையும் பைபிளையும், குர்ரானையும் ஏற்று நடக்கவேண்டியவன் எதிர்வீட்டுக்காரனேயன்றி நாமல்ல என்ற நினைப்பு என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கும் இருக்கிறது. கீழைநாடுகள்Xமேற்கு நாடுகள் என்ற விவாதத்தில் இந்தியாவை பெருக்கல் குறிக்குள் நிறுத்தவேண்டும். இது பற்றியும் ஆரோக்கியமானதொரு விவாதம் தேவை.

சுமார் பதினோரு மணிக்கு தென் அமெரிக்கப்பாணியில் கட்டப்பட்டிருந்த  ஒரு தேவாலயத்தின்முன் எங்கள் வாகனம் வந்து நின்றது. பிரெஞ்சு நண்பரை அத்தேவாலயம் ஈர்த்ததெனலாம். அவர் தமக்கு அதீத மத நம்பிக்கையில்லையெனக் கூறிக்கொண்டாலும் உள்ளுக்குள் கூடுதலாக தமது மதத்தின்மீது நம்பிக்கை வைத்திருப்பவரென்பதை நன்கறிவேன். எனவே அவரது நடவடிக்கைகளில் எனக்கு வியப்புகளில்லை. இது போன்ற தேவாலயங்கள் அண்மைக்காலங்களில் ஆங்காங்கே இந்தியாவில் காளான்கள் போல ஏராளமாக முளைத்திருக்கின்றன. இந்து மதவியாபாரிகள் கோவில்கட்டி வர்த்தகம் செய்வதுபோல கிறித்துவ வியாபாரிகளின் வர்த்தக பிரிவில் இவை அடங்கும்.

காலை பதினோருமணிக்கு சோழமண்டலமென்கிற கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் இயங்குகிற கலைகிராமத்திற்கு வந்தோம். தமிழ்நாட்டின் தென்முனையிலிருந்து கிராமமக்கள் சென்னையைப்பார்த்து வாய்பிளக்க அக்காலத்தில் அண்ணா சமாதி, மெரீனா, எல்.ஐ.சி. உயிர்காலேஜ் செத்தகாலேஜ் போன்றவைகள் உபயோகத்திலிருந்தன. இப்போதும் அவைகள் அதே தகுதியுடன் இருக்கின்றனவாவென தெரியாது. ஆனால் வெளிநாட்டினருக்கு மகாபலிபுரம், காஞ்சிபுரம் பட்டியலில்  சோழமண்டலம் கிராமம், தட்சிணசித்ரா ஆகியவைகளும் உள்ளன. கே.சி பணிக்கரென்கிற கலைஞனின் அரிய முயற்சியால் உருவான இக் கிராமம் ஓவியம் சிற்பமென இரு துறைசார்ந்த பெருமக்களையும் இணைத்து ஒரு மிகப்பெரிய கூட்டு குடும்பமாக இயங்குகிறது. ஏற்கனவே சென்றதுண்டு என்றாலும் முதல் முறையாக இப்போதுதான் சோழமண்டலத்தை புரிந்து பார்த்தேன்.  நண்பர் இந்திரனுக்கு நன்றிகூறவேண்டும். காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவற்றை தீட்டியவர்கள், செதுக்கியவர்கள்;  அவர்களுடைய பாணி; வாழ்க்கைவரலாறு; அவர்களது குரு யார்? மானாக்கர்கள் யார்யார்? என்றெல்லாம் எங்களுக்கு அவர் பாடம் நடத்தினாரென்று சொல்லவேண்டும்.  அங்கிருந்த ஒவ்வொரு கலைஞனின் திறனும் பிறருக்குப்போய்ச்சேரவேண்டும் என்கிற உண்மையான ஆர்வம் அவருக்கிருந்ததை அன்று கண்டேன். தனபால், ராய் சௌத்ரி, பெருமாள், முனுசாமி, ராமானுஜம் அல்போன்ஸாஅருள்தாமஸ்; ஏ.வி. இளங்கோ, வீர சந்தானமென்று சிறுபத்திரிகை உலகில் நான் வாசித்திராத கலை அகாதமி உலகில் மட்டுமே கோலோச்சுகின்ற பலரை இந்திரன்மூலமே அறியநேர்ந்தது.

அங்கிருந்து வளசரவாக்கத்தில் கார்த்திகேயனும் அவருடை நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் அகவெளியென்ற கலையுலக கனவின் பரிச்சயம் வாய்த்தது. கலைஞர்களும் படைப்பாளிகளும்  எவ்வித இடையூறுமின்றி உண்டு உறங்கி படைப்பு வினையாற்றிட சோழமண்டலம்போன்ற சூழலை ஏற்படுத்திதருதல் நண்பர்களின் திட்டம். பின்புலத்தில் இந்திரனின் வழிகாட்டுதலும் உள்ளதென்பது புரிந்தது. எங்கள் அமைப்பும் இவர்களோடு இணைந்து செயல்பட, நானும் கனவுகண்டு கொண்டிருக்கிறேன்.

பிற்பகல் தட்சிணசித்ரா சென்ற அனுபவத்தைத் தனியாக எழுதுகிறேன்
———————————————————–

பிரான்சைத் தெரிந்து கொள்ளுங்கள்- ஜனவரி 20

 

 

Saint Germain -Des -Prés

பாரீஸின் நகரின் 6வது வட்டத்தில்( 6 ème arrondissement) சேன் நதியின் தென்னண்டையில் உள்ள புகழ்பெற்ற பகுதி Saint Germain -Des -Prés. பிரெஞ்சு படைப்புலகத்தின் புனித பூமி. நமது படைப்புலக நண்பர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்தால் கட்டாயம் பார்க்கவேண்டியவை பட்டியலில் இதற்கென கொஞ்சம் நேரத்தை ஒதுக்கவேண்டும்.

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் மொழி, இலக்கியம், கலைதவிர வேறு சுவாசங்களில்லை என்றிருப்போர் அவ்வப்போது வந்து இளைப்பாறும் பகுதியாக இருந்து வருகிறது. முதலில் மாண்டெல் காப்பிக் கடையில் ( Café Landelle) ஆரம்பித்து வைத்த அறிவுஜீவிகளின் சந்திப்பு இன்றைக்கும் ப்ரோக்கோப் காப்பிக் கடையில் (Café Procope)முகமன்கள், நலன் விசாரிப்புகள், இலக்கிய புதினங்கள், கேலி பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள், விவாதங்கங்கள்; அமைதியாகவும் – உரத்த குரலிலும் தெருவில் போவோர் வருவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும்படியாகவும்; பிரெஞ்சு மக்களின் பண்பாட்டினை சுண்டியவண்ணமும் தொடர்கின்றன. பிரெஞ்சு புரட்சியின் கர்த்தாக்கள்: Danton, Marat, Guillotin (கில்லெட்டின் புகழ்?) போன்றவர்கள் புரட்சிக்கு முன்பாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். பிரெஞ்சு படைப்புலகைச்சார்ந்த பலருக்கும் எழுத்தாளர்களென்ற தகுதியை இங்கே பெற்றால்தானுண்டு, அவர்களுக்கு பிற விருதுகள் பரிசுகள் இரண்டாம் பட்சம். வோல்த்தேர், ரூஸ்ஸோ, சார்த்த்ரு, சிமோன், கிளேசியோ, ஹ¥ல்பெக் கென்று இங்கே கோட்டையும் தொப்பியையும் கழற்றிவிட்டு காப்பிக்கடையின் காலியான மேசைகளைத்தேடி அலையாதவர்கள் எவருமில்லை. கோடைகாலத்தில் காபியை உறிஞ்சியபடி ப்ரோக்கோப் காப்பிக்கடையின் வெளியில் சுவாரஸ்யமாக உரையாடுபவர்களில் இன்றைய கவால்டாவோ, கிஞ்ஞாரோ இருக்கக்கூடும். காப்பிகடைகளோடு, இரவு விடுதிகளுக்கும் பங்குண்டு. படைப்புலக அறிவுமாந்தர்களின்றி திரைப்படம், நாடகம் சார்ந்து இயங்கும் மனிதர்களும், படைப்பில் ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளும் வந்துபோவதுண்டு. முன்னாள் பிரெஞ்சு அதுபர் பிரான்சுவா மித்தராண்ட் தமது அதிபர்காலத்தில் இதற்கென நேரத்தினை ஒதுக்கி இலக்கிய நண்பர்களைத் தேடி (குறிப்பாக Duras) வந்து போவதுண்டாம்.

சென்னைக்கருகே சந்தடிகளற்ற இடத்தைத் தேர்வு செய்து எழுத்தாளர்கள் வந்துபோக, கலந்துரையாட ஓரிடத்தை உருவாக்கலாம். நம்மால முடிந்தது ஏக்கத்தோடு கூடிய பெருமூச்சொன்றுதான்.. அண்ணா நூலகம் படும்பாட்டை பார்க்கிறபோது தமிழனுக்கு இதுபோன்ற பேராசைகள் கூடாது. அதுவும் தவிர  நமது நண்பர்கள் அநேகமாக ஒரு பாரை (Bar) தேர்வுசெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நான்கு பேர் சேர்ந்து சந்திப்பதென்றால் அதற்கு வேறு பொருள். அந்நோய் தமிழ்நாட்டில் படைப்புலகையும் விட்டுவைக்கவில்லை. கூடுவது குடிப்பதற்கென்றானபிறகு ஊர்வம்புதான் அரங்கேறும். இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது?

———————————

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். அவ்வரிசைகளில் தொடர்ந்து ஏன் எதற்கென்று தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதலாமென்று திட்டம்:

பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
————————————————

பெனுவாத் க்ரூல்ட்

‘பெண்ணியம் ஒருவரையும் கொன்றதில்லை, கொல்லவும் கொல்லாது, ஆணாதிக்கத்திற்கோ அதுதான் அன்றாடத் தொழில்.’-பெனுவாத் க்ரூல்ட்

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. புகழ்பெற்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம்.- உ.ம். Picasso, Picabia, Jouhandeau, Paul Morand மற்றும் பலர். தாயாரின் வழிகாட்டுதலில், இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம், பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஞானம், ஆங்கிலத்திலும் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலில் ஆர்வம் காட்டினார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1978ம் ஆண்டில் குளோது செர்வன் என்பவரோடு சேர்ந்து பெண்களுக்கான F. Magazine என்கிற இதழொன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1982ம் ஆண்டுமுதல் Femina இதழின் ஜூரிகளுள் ஒருவராக இருந்துவருகிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை உண்டாக்கவென்று, இலக்கண வல்லுனர்கள், மொழியாளர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். மூன்று முறை திருமணமானவர்.  முதல் கணவர் காச நோயில் 1945ம் ஆண்டு இறந்தபின்னர், இரண்டாவதாக பத்திரிகை செய்தியாளரை மணந்து இரு பெண்களுக்குத் தாயாரானார். அம் மணவாழ்க்கையும் கசப்பில் முடிய மூன்றவதாக ஓர் பிரபல எழுத்தாளரை (Paul Guimard) மணக்க நேர்ந்தது. திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி ‘•புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவலான ‘இருவர் வாசித்த செய்தித்தாள்’ (JOURNAL A QUATRE MAINS) 1958ம் ஆண்டில் வெளிவந்தது, தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற ‘வாழ்க்கையின் சில உண்மைகள்’ (LA PART DES CHOSES-1972,) ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE -1972) என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பல நாவல்கள் குறிப்பாக ‘முக்கால்வாசி நேரம்'(LES TROIS QUARTS DU TEMPS), ‘தமனியும், சிரையும்'(LES VAISSEAUX DU COEUR) அவற்றுள் முக்கியமானவை. பிறகு பெண்ணியல் வாதிகளான ‘பொலின் ரொலான்(Pauline Rolland), ஒலிம்ப் தெ கூழ் (Olympe de Gouge) ஆகியோரது வாழ்க்கைவரலாறுகள், ‘ஒருவிடுதலையின் வரலாறு'( Histoire d’une evasion) என்கிற பேரிலே 1997 வெளிவந்த அவரது சொந்த வாழ்க்கை மீதான பார்வையும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை.

பெனுவாத் வாழ்க்கையும், எழுத்தும், இன்றைய நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்த முனைவதல்ல, ஆணுக்கு நிகரென்று, அழுந்த உரைப்பது, எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்துவது. அவளுடைய வாழ்வியல் நித்தியங்களை நிதரிசனப்படுத்துவது: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம், பெண்ணினம் மற்றும் அவள் சார்ந்த கருத்தியல்கள் அதில் பதிவுசெய்ய்யப்பட்டன. தற்போது அதற்கான வயதில் – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார், அதன் மேன்மைக்கு வாதிடுகிறார். பெண்கள், பெண்ணியம் என உழைத்துவருகிற இவரது சமீபத்திய படைப்பு,(2006) ‘நட்சத்திர ஸ்பரிசம்’- விற்பனையில் சாதனை செய்துவருகிறது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்ஷம் 3000 பிரதிகள். மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டுமென்பது இந்நாவலில் வெளிப்படுத்தப்படும் அவரது ஆதங்கம். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிஸத்திற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது பிடிவாதம்..

(Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது. சிமோன் தெ பொவார்க்கு ‘பெண்ணென்ற  இரண்டாமினம்’ ( Deuxieme sex) எப்படியோ, பிரான்சுவாஸ் பத்துய்ரியேவுக்கு (PARTURIER, FRANCOISE)’ஆண்களுக்கு ஓரு வெளிப்படையான கடிதம்(‘Lettre ouverte aux hommes) எப்படியோ, அப்படி ‘பெனுவாத் க்ரூல்ட்க்கு ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE). இன்றுவரை பத்து இலட்சம் பிரதிகள் விற்பனைச் செய்யபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரது எழுத்துக்களில் பெண்ணியத்தின் தாக்கங்கள்: காதலர்கள், கணவன்மார்கள், அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்துச் சொல்லபட்டிருக்கின்றன. சமீபத்தில் இவரைக் குறித்த ஓர் ஆவணப்படத்தினை மற்றோர் பெண்ணியல்வாதியும் இயக்குனருமான ஆன் லா•பான்(Anne Lenfant) ‘அவளுக்கென்று ஓர் அறை (Une chambre a elle) என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

———————————————————————————

* ‘Le feminisme n’a jamais tue personne – le machisme tue tous les jours’

(Ainsi soit-elle) கட்டுரைத் தொகுப்பிலிருந்து                                                                         பெனுவாத் க்ரூல்ட்

பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக ‘அவளது விதிப்படி ஆகட்டும்’ வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் ‘இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென’ நினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக ‘மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக்கொள்ளுமென்று எவரும் நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலை’ பேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு ‘மகப்பேறு கொள்கை’ அடிப்படையில் ஒரு சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் ‘பெத்தேன்'(Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3) பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென சட்டம் கொண்டுவந்திருந்தும், பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால் அதிர்ச்சிதருகிறது.

தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த  ‘ இரண்டாம் பாலினம் (Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு ஜீவிகளுடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் ‘சிமோன் தெ பொவாரு’க்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர் கையாண்டவிதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில் நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் ‘சிமோன்’ வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில்  ‘லிட்ரேலுடைய'(Maximilien Paul Emile Littre) அகரமுதலியில்  ‘பெண்ணியம்’ என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும் ‘வரையறையைத் தாண்டிவிட்டதெனக்’ குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட ‘பெண் விடுதலை’ சிந்தனையும், எழுப்பிய ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும், ‘பெண்ணென்ற  ஓர் இரண்டாமினத்தில்’ சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge) பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert), மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம் செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்•ப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் – பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.

உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். ‘பண்டை வழக்குகள்’ நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்; காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு. நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யபட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்தது’ என நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்’ எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1792ம் ஆண்டில் ‘ஒலிம்ப் தெ கூர்ழ்'(Olympe De Gourge) உரத்து குரல்கொடுத்ததைபோல: ‘ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது’,  அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால் அவர் சிரம் வெட்டபட்டது.

அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த ‘பொவாருடைய'(Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர். ‘உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று'(La plus massive survivance de l’esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.

பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு போகிறது.  அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை, எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது,’இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.’ சட்டென்று அவளுக்கு ஓரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டாண்டுகள் கழித்து அது கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய்  முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென சட்டம் இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.

‘அவள்’(Elle) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர், மார்கெரித் துராஸ், பிரான்சுவாஸ் தோபோன், எவ்லின் சுல்லெரோ, பெனுவாத் மற்றும் •ப்ளோரா க்ரூல்ட், மொனிக் விட்டிக், சிமொன் தெ பொவார், லூயீஸ் வைஸ், அர்லெத் லகிய்யே, ழிஸேல் அலிமி, டெல்பின் செரிக், லிலியானா கவான்னி, மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் ‘மகளிர் ஆண்டாக’ அறிவித்தது. ‘அன்னையர் தினம்’ என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. ஷந்தால் ஷவா•ப் ‘பெண்ணைப்’ பற்றியும், ‘வீழ்ந்த பெண்கள்’ என்று எரென் பிஸ்ஸேவுல், ‘சூதக இரத்தம்’ என்று மரி கர்டினல் என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான ‘அவள் விதிப்படி ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.

இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்’ என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். ‘பெண் விடுதலை இயக்கம்’ இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது, பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்’ என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன. ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O)என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர். வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென சொல்லிவருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்'(DEUXIEME SEX) மிகப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற ‘உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்ல’ என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

——————————————————————————————————————————–

**.  1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.

1. மே -ஜூன் -1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது, ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)

3.. REGIME DE VICHY(1940 – 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு ‘பெத்தேன்'(Petain)என்ற ராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிருவாகம்

4. Charle DE GAULLE (1890-1970) -இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.

———————————————————————————————

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -14

‘La Bûche de Noël’

அநேகமாக ஆங்கிலத்தில் ‘Yule Log’ என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். பிரெஞ்சில் La Bûche de Noël-லா பூஷ் தெ நோயெல்- என்பார்கள். கிருஸ்துமஸ் பண்டிகையை அறிந்தவர்களுக்கும் அல்லது மேற்கண்ட சொற்களை பண்டிகை நாட்களில் சொல்லக் கேட்டவர்களுக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மரத்துண்டு வடிவிலான கேக். இக்கேக்கை பண்டிகை விருந்தின் முடிவில் ‘Dessert’ ஆக தின்பார்கள்(உணவிற்கு முன்பாக ‘Starter’ எப்படியோ அப்படி உணவிற்குப் பின்பு ‘Dessert'(இதைப்பற்றித் தனியாக பின்பு ஒரு ஒருமுறை எழுதுகிறேன். உண்மையில் ‘La Bûche de Noël’ சடங்கொன்றின் குறியீடு.

இம்மரத்துண்டு அல்லது மரக்கட்டை உபயோகம் கிருஸ்துமஸ் பண்டிகைச் சடங்கின் ஒரு பகுதி. பொதுவாக இம்மரத்துண்டு செரீஸ் அல்லது ஆலீவ் மரங்களிலிருந்து பெறப்படவேண்டுமென்பது ஐதீகம். பிரான்சு நாட்டின் தென் கிழக்குப் பிரதேசமான புரொவென்சால் பகுதிகளில் இன்றளவும் ஒரு மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் இரவன்று பெரிய விருந்திற்கு (Gros Souper) முன்பாக வீட்டின் மூத்த உறுப்பினரும், இளைய வயதினரும் மரத்துண்டைக் கொண்டுவருவார்கள். பின்னர் இருவருமாக  விருந்து மேசையை மூன்றுமுறை மரத்துண்டுடன் வலம் வருவார்கள். அம்மரத்துண்டின் மீது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட -Vin cuit- சிவப்பு ஒயினை மூன்று முறை பன்னீர்போல தெளித்து, அதனை வரவேற்பறையின் கணப்பு அடுப்பிலிட்டு தீயிடுவார்கள். அதன் பின்னர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் Gros Souperக்காக சென்றமர்வார்கள்.

இச்சடங்கு இடத்திற்கிடம் வேறுபடும். சிலருக்கு மரத்துண்டு 3 நாட்கள் எரிந்தால்போதும். வேறு சிலருக்கோ ஆங்கிலப் புத்தாண்டு முதல்நாள்வரை எரியப்படவேண்டும். இரண்டாவது வகையினர் நள்ளிரவில் தீயை அணைத்து மறுநாள் மாலை மீண்டும் தீ மூட்டுவதால் ஒருவாரத்திற்கு அவர்கள் சொல்வதுபோல மரத்துண்டை எரியவைக்க முடிகிறது. பண்டிகை முடிந்தபின்பு சாம்பலைசேகரித்து வீட்டில் மேசை நாற்காலி, கட்டில், அலமாரிகளின் அடியிற் போடுவதும், வீடெங்கும் சாம்பலைத் தெளிப்பதும் தீவிபத்திலிருந்து வீட்டைக் காப்பாற்றுமென்றொரு நம்பிக்கை நிலவுகிறது.  தமிழ்நாட்டிலுள்ள எங்கள் கிராமத்தில் சொக்கப்பனை சாம்பலை இது போன்ற நம்பிக்கையில் உபயோகிப்பது வழக்கம். இப்போதும் தொடர்கிறதாவென்று தெரியாது.
———————–

கதையல்ல வரலாறு -2-4

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது.  தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம்.

முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை

இரண்டாவது: தந்தை நைநியப்பிள்ளையின் நேர்மையில் மகன் குருவப்பாபிள்ளை வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை.

மூன்றாவது: ஒரு பேராசைபிடித்த கவர்னர், குற்றமிழைக்காத தமது தந்தையை தண்டித்து தமது தந்தைக்கும் தமது குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார், இந்த அவப்பெயரை துடைக்காமல் நாடுதிரும்பமாட்டேனென்ற மகனுக்குள்ள இயற்கையான வீம்பும் காரணமாக இருக்கலாம்

நான்காவது: இது ஒரு கௌரவ பிரச்சினையுங்கூட. உள்ளூர் பிரமுகர்கள் மத்தியிலும் புதுச்சேரியிலும் நைநியப்பிள்ளைக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும் பறிபோன தரகர் பதவியும் அக்குடும்பத்தின் செல்வாக்கை வெகுவாக குறைத்திருந்தன. என்பதும் ஓர் காரணமே.

ஐந்தாவது: பாரீஸ் சென்று நீதிகேட்கும் அளவிற்கு குருவப்ப பிள்ளையிடம் போதிய பணபலம் இருந்ததும். நைநியப்பிள்ளையைத் தண்டித்திருந்த கவர்னர் கியோம் எபேருக்கு புதுச்சேரி காலனியிலும் சரி, பிரான்சு தேசத்திலும் சரி, அரசியல் எதிரிகள் நிறைய இருந்தார்கள் என்ற உண்மை கூட ஒரு காரணமாகிறது.

மேற்கண்ட ஐந்து காரணங்களைத் தவிர்த்து ஆறாவதாக ஒன்று பிரெஞ்சு முடியாட்சியில் குருவப்பபிள்ளைக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

பதினைந்தாவது லூயி முடிசூடியிருந்தார். நன்மை பதினைந்தாம் லூயி வடிவில் ஏற்படவில்லை. அவரது சிறிய தகப்பபன் வடிவில் குருவப்பாவைத் தேடிவந்தது. பதினைந்தாம் லூயி பதவிக்கு வந்தபோது அவர் ஆறு வயது சிறுவனென்ற நிலையில் உருவான காபந்து அரசுக்கு பதினைந்தாவது லூயியின் சகோதரர் ஓர்லயான் பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கவனித்துவந்த பிரபு ஒருவர் பொறுப்பேற்கிறார். சிறுவனாக இருந்த பதினைந்தாம் லூயி பெயரளவில்தான் மன்னர். ஆட்சி உண்மையில் ஓர்லயான் பிரபுவின் கைக்குள் இருந்தது. ஆட்சித் தலமைக்கு வருகிற எவரும் தமது முந்தைய ஆட்சியில் செயல்பாடுகளை முந்த வேண்டுமென நினைப்பதும், தமது ஆட்சி முந்தய ஆட்சிக்கு மேம்பட்டதென்கிற கருத்தினை மக்களிடம் ஏற்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதும் இயல்பு. அவ்வாறே ஓரலயான் பிரபுவுக்கும் தமது பெரிய தந்தையார் செய்தவை விவேகமற்ற செயல்கள், அநீதிகள். எனவே அரசியல் அமைப்பை திருத்த வேண்டும், மக்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தந்து சமூகத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென நினைத்து மும்முறமாக செயல்பட்டார்.

குருவப்பா விண்ணப்பத்தை பரிசீலித்த மன்னரின் ஆலோசனை சபை 1718ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம்தேதி  முழுமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. அத்தீர்மானம் நைநியப்பிள்ளை வழக்கில் வாக்குமூலங்கொடுத்த சாட்சிகளை மறு விசாரணை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

இராண்டாண்டுகாலம் நீடித்த மறுவிசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்தார்கள். 1720ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தது. நைநியப்பிள்ளை குற்றமேதும் இழைக்கவில்லை அவர் தண்டிக்கப்பட்டது தவறு என்றதில் கூறப்பட்டிருந்தது.  அரசு தரப்பில் அதற்குரிய இழப்பீட்டைத் தரவேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

நைநியப்பிள்ளையின் சொத்துக்களை ஏலம் போட்டுக் கிடைத்த 10060 வராகன்களை தமது கருவூலத்தில் பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் சேர்த்துக்கொண்ட நாள் முதல் பத்து சதவீதம் வட்டியுடன் சேர்த்து அசலையும் வட்டியையும் நைநியப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு செலுத்தவேண்டும் அது தவிர நைநியப்பிள்ளை குடும்பத்திற்கு ஏற்படுத்திய அவமரியாதையை  சீரமைக்கும் வகையில் அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 20000 வராகன் கூடுதலாக தரவேண்டுமென்ற உத்தரவு ம் முடியாட்சியிடமிருந்து புதுச்சேரி கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு வந்தது.

குருவப்பா பிள்ளை தம் முயற்சியின் பலனை முழுவதுமாக அனுபவித்தார் என்றே சொல்லவேண்டும். செவாலியே பட்டத்தையும் அவருக்கு பிரெஞ்சு அரசாங்க சூட்டி மகிழ்ந்தது. பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் முடியாட்சியின் உத்தரவுப்படி அவரது தந்தையின் தரகர் பதவிக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட கனகராய முதலியாரை தரகர் பதவிலிருந்து நீக்கி அப்பதவிக்கு குருவப்பா பிள்ளையை நியமனம் செய்தது.  தரகர் பணியோடு தபலியோம் (Registrar) வேலைக்கும் அவரும் அவர் சகோதரர்களும், வாரிசுகளும் தலைமுறைதலைமுறையாய் சாசுவதமாகின்றார்கள் என்றும் அந்த நியமன அறிக்கை தெரிவித்தது.

ஆக நைநியப்பிள்ளை மீது பழிசுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர் மகன் குருவப்பா பிள்ளை பிராயச்சித்தம் தேடினார் என்பது உண்மைதான். பிரெஞ்சுக் காரர்களின் நீதிக்குறித்தும் இவ்வழக்கின் அடிப்படையில் இக்கட்டுரையினைப் படிக்கின்ற நண்பர்கள் வியந்தோதக்கூடும். ஆனாலுங்கூட உங்களில் ஒரு சிலருக்கு காலனி அரசுகளின் மனப்பாங்கினை அறிந்தவர்களென்ற வகையிலும், பிரெஞ்சின் முடியாட்சியில் சேசு சபயினருக்குள்ள செல்வாக்கை இக்கட்டுரையிலேகூட  ஏற்கனவே வாசித்திருக்கின்ற வகையிலும் சில கேள்விகள் இருக்கலாம்.

நைநியப்பிள்ளைக்கு பதிலாக வேறு தரகர் நியமனம் செய்யப்படவிருந்தபோது ஒரு கிறுஸ்துவரே தரகராக நியமனம் செய்யவேண்டுமென்று கறாராக இருந்த சேசுசபயினர் -(நைநியப்பிள்ளை இடத்திற்கு நியமிக்கப்பட்ட கனகசபை ஒரு கிருஸ்துவர் என்றும் ஏற்கனவே கூறியிருந்தோம்.)- எப்படி குருவப்பபிள்ளை என்ற இந்துவை தரகராக நியமனம் செய்ய சம்மதித்தார்கள் என்பது முதலாவது கேள்வி

பிரெஞ்சு காலணி அரசாங்கத்திற்கு நியாயத்தை வழங்குவதில் அப்படியொரு அக்கறையா? என்பது இரண்டாவது கேள்வி.

நன்கு யோசித்திருப்பீர்களெனில் இரண்டுக்கும் விடையொன்றுதான். அந்த விடையை ஊகிக்க முடிந்தவர்களில் ஒருவராக   நீங்கள் இருப்பீர்களென நம்புகிறேன். உங்கள் ஊகம் சரி. அறமும் நெறியும் சம்பத்தையோ குபேர பலனையோ அழைந்துவந்ததாக கதைகளில் படிக்கலாம் ஆனால் வரலாற்று உண்மை என்பது வேறு. குருவப்பாபிள்ளை தந்தைக்காக நீதியை நிலைநாட்ட பிரான்சுக்குப் பயணித்தபோது ஆறுகாரணங்கள் இப்பகுதியின் தொடக்கத்தில் ஊகங்களாகச் சொல்லப்பட்டிருந்தன. அந்த ஆறுகாரணங்களையும் கடந்து நீதி தமக்குக் கட்டாயம் வழங்கப்படும் என்பதற்கு ஏழாவதாக ஒரு காரணத்தை தனயன் குருவப்பாபிள்ளை வைத்திருந்தார். அக்காரணம் கிருஸ்த்துவத்தை தழுவுவதென்று அவரெடுத்த முடிவு. பிரான்சுக்குச்சென்றதும் அவர் செய்த முதல்வேலை கிருஸ்துவராக மாறியது. அவரது ஞானத் தந்தை ஒர்லயான் பிரபு, ஞானத் தாயார் இளம் வயது அரசரின் (பதினைந்தாம் லூயியின்) தாயார். ஆக இந்தப் புதிய தகுதி பிரெஞ்சு நீதியின் கதவுகளை திறக்க வழிகோலின. தந்தை நைநியப்பிள்ளைக்கு தனயன் குருவப்பாபிள்ளை கிருஸ்துவத்தைத் தழுவி நீதியை நிலைநாட்டிவிட்டார்.

பி.கு. குருவப்பா பிள்ளையின் இறப்புக்குப்பிறகு கனகராயமுதலியார் தரகராக நியமிக்கபடுகிறார். அவருக்குப்பின் குருவப்பாபிள்ளையின் மைத்துனர் திருவேங்கிடம்பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப்பிள்ளை தரகராக நியமிக்கப்பட்டார். இவர் நைநியப்பிள்ளை வழிவந்தவரல்ல. குருவப்பா பிள்ளைபோல மதம் மாறி தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டவருமல்ல. நவீன தமிழில் பிழைக்கத் தெரிந்தவர் என்பதற்கு ஆனந்தரங்கப்பிள்ளையென பொருள்கொள்ளலாம். சாதுர்யமான எஜமான விசுவாசமும், தரகுத் தொழிலில் அவருக்கிருந்த திறனும் சேசுசபையினரையே வாயடைக்கச்செய்திருந்தது.

—-

கதையல்ல வரலாறு -2-2

 நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள்.

– முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் தேவையின்றி கூச்சலிடவேண்டும். உங்களுக்கு மனக்குறை இருப்பின் தரகரிடமே அதைத் தெரிவித்திருக்கலாமே, என்றார்.

அப்போது தரகர் கூட்டத்தில் ஓரளவு துணிச்சலுடன் பேசக்கூடிய ஆசாமி கொஞ்சம் முன்னால் வந்து தரகரை வணங்கிவிட்டு நிலமையை எடுத்துக்கூறினார்:

– உன்மையைச் சொல்லுகிறோம். முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகன் என்று எடுத்த முடிவு தன்னிச்சையானது.  மணங்குக்கு 110 வராகனைக் கொட்டிக்கொடுத்துவிட்டு நாங்களென்ன வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு போவதா? நாங்கள் கேட்டதொகைக்கு குவர்னரை சம்மதி பண்ணால் எங்களுக்கு லகுவாயிருக்கும், அதுவன்றி இத்தொழிலில் தொடர்ந்து எங்களால் ஜீவிதம் செய்யமுடியாது. தாங்கள் கிருபை பண்ண வேணும்.

அடுத்து ஆளாளுக்கு கூச்சலிட்டார்கள். முத்தியாலு முதலியாருக்கேற்பட்ட அனுபவம் நைநியப்பிள்ளைக்கும் ஏற்பட்டது. அவருக்கு நிலமை தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. நடந்து முடிந்த வியாபாரத்தில் உள்ளூர் தரகர்களுக்கு உண்டான இழப்பை புரிந்துகொண்டார். ஆனால் பணி நீக்கம் செய்யபட்ட முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகனுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இப்போது நான்கு வராகனை மணங்குக்குக் குறைத்தால் கவர்னர் எப்படி எடுத்துக்கொள்வானோவென்ற சந்தேகம். எனினும் உள்ளூர் வியாபாரிகளின் மனதை வருத்தி வியாபாரத்தை நடத்தமுடியாதென்று புரிந்துகொண்ட நைநியப்பிள்ளை குவர்னரை மீண்டும் சந்தித்து, தமது கருத்தைப் பக்குவமாக எடுத்துக்கூறி மணங்குக்கு இருதரப்பிற்கும் பொதுவாக 108 வராகனென்று முடித்தார்.

முத்தியப்ப முதலியார் தரகு வேலையிலிருந்து நீக்கப்பட்ட தகவல் பாரீஸ¤க்குத் தாமதமாகப் போய்சேர்ந்தது. அக்காலங்களில் தகவல் தொடர்புதுறை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளுக்குக் கோபம் வந்தது. கியோம் எபெர் கும்பெனியின் நலனைக்காட்டிலும் தமது சொந்த நலனில் அக்கறை காட்டுகிறாரோ என சந்தேகித்தவர்கள் அரசரின் முக்கிய ஆலோசகர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். மன்னரும், மூத்த ஆலோசகர்களும், கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கூடி விவாதித்தார்கள். விவாதத்தின் முடிவில் புதுச்சேரி கவர்னர் குற்றவாளியென ஏகமனதாகத் தீர்மானிக்கிறார்கள். எபேர் செய்தக்குற்றம் மணங்குக்கு நான்கு வராகன் ஆசைப்பட்டதோ, மேலிடத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக முத்தியப்ப முதலியார் பதவியைப் பறித்து வேறொருவரை தரகராக நியமித்ததோ அல்ல மாறாக அவர் தரகராக நியமித்திருந்தது ஒர் இந்து. முத்தியப்ப முதலியார் என்ற கிறிஸ்துவர் இடத்தில் ஓர் இந்துவை நியமனம் செய்தது மன்னரின் ஆலோசர்கள் அவையில் இடம் பெற்றிருந்த சேசுசபையினருக்குக் குற்றமாகப் படுகிறது. அதன் விளைவாக 1711ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி புதுச்சேரியின் கவர்னருக்குக்குப் புதிய உத்தரவு ஒன்றை  பிறப்பித்தார்கள், அதன்படி:

கியோம் ஆந்தரே எபேர் உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று. அவருக்குப்பதில் பியேர் துலிவியே(Pierre Dulivier) கவர்னர் பொறுப்பேற்கிறார். புதிய கவர்னர் உடனடியாக நைநியப்பிள்ளை பதவிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் முத்தியப்ப முதலியாரையோ அல்லது ஒரு கிறிஸ்துவரையோ இடைத்தரகராக நியமனம் செய்யவும் அந்த அரசாணையில் கண்டிருந்தது.

புதுச்சேரியில் வந்திறங்கிய பியேர் துலிவியே அரச கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று யோசித்திருக்கவேண்டும்.   மேல் ஆலோசனைச் சபையை உடனடியாகக் கூடும்படி கேட்டுக்கொள்ளபட்டது அரசாணையை நிறைவேற்றுவதிலுள்ள சாத பாதகங்கள் குறித்து சமை அங்கத்தினர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு இருந்தது:

“நைநியப்பிள்ளை தரகராய் நியமிக்கப்பட்ட காலமுதல், பிராஞ்சுகாரருடைய தரணி என்கிற மேரையில், மொகாலியரிடத்திலும் (மொகலாயரிடத்திலும்) இந்தியா மற்றப் பிரஜைகளிடத்திலும் செல்வாக்கு பெற்றுவிட்டார். இந்த உண்மையை அநேக சந்தர்ப்பங்களிலும், சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தாலும் அறிந்துகொண்டோம். நபாப் புதுச்சேரி மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் பிராஞ்சுகாரருக்குச் சுதேசமன்னர்களால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட சகல இடங்களையும், கிராமங்களையும் திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமென்றும், அவற்றின் வரும்படிக்காக 8000 ஷக்கார் கொடுக்கவேண்டுமென்று தாகீது அனுப்பினார். கிராமங்களை வசப்படுத்திக்கொள்ளவும், பணத்தை வசூலிக்கவும் குதிரைவீரர்களை அனுப்பிவைத்தார். சமாதானம் செய்யும்படி அனுப்பப்பட்ட நைநியப்பிள்ளை, ஒரு காசுகூட செலவில்லாமல் குதிரை வீரர்களைத் திருப்பிப்போகும்படி செய்தார். அவர் தரகராய் அமர்ந்தது முதல், மொகாலியர் களால் ஏற்பட்ட சகல சங்கடங்களிலிருந்து புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார்.”

“பிராஞ்சு சங்கத்தின், உள் விஷயங்களையும் வெளிவிஷயங்களையும் நன்கறிந்தவரானபடியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி, தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன், மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தைத் தேடிவிடுவார்.

“இதுவுமன்னியில், கிராமங்களின் குத்தகைகாரர்களுக்கும், புகையிலை வெற்றிலை காசுக்கடை குத்தகைகாரர்களுக்கும், அவரே புனையானபடியால் மொகாலியர் செய்யப்போகும் முதல் அசைவுக்கே குத்தகைகாரர்களும் பெரிய சுதேசி வியாபாரிகளும் ஓடிவிடுவார்கள். கூட்டுறவு சங்கத்திற்குப் பெருத்த நஷ்டம் உண்டாகும். சோழமண்டலகரையில் அவரை ஒத்த சாமர்த்தியசாலி வேறு ஒருவருமில்லையென்கிற கியாதியையும் பெற்றிருக்கிறார்.”

“ஐரோப்பிய ஜனங்களுக்குச் சுதேசமன்னர்களால் கொடுக்கப்பட்டிருக்கும், சகல இடங்களையும், கிராமங்களையும் பிடுங்கிவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மொகாலியர்களிடத்தில் சமாதானஞ்செய்ய கிரிஸ்துவர்களில் தற்சமயம் ஒருவருமில்லை. சவரிமுதலியார் ஒருவரே, கிரிஸ்துவர்களுக்குள் ஐரோப்பியரிடத்தில் உண்மையான விசுவாசி, அன்புள்ளவர். அவருடைய நேர்மையில் தடையின்றி நாம் நம்பிக்கை வைக்கலாம். நைநியப்பிள்ளையோடு அவர் வேலைசெய்தால்  கொஞ்சத்துக்குள் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, பிரஜைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாகலாம். அப்போது தனியாய் தரகுவேலையைத் திறமையாய்ச் செய்வார். கிருஸ்துவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களை வியாபாரத் துரையில் ஈடுபடுத்துவார்.”

“ஆனதை முன்னிட்டு, நைநியப்பிள்ளையும் சவரிமுதலியாரையும் சங்கத் தரகர்களாக நியமிக்கிறோம். தங்களுக்குள் முதலவர், இரண்டாமவர் என்கிற வித்தியாசமில்லாமல் அந்நியோன்னியமாய் சகல சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் அவர்கள் தரகு வேலையைக் கவனிக்க வேண்டியது.”(1)

பியேர் துலிவியே தலமையின்கீழ் வந்த கிழக்கிந்திய பிரெஞ்சு கம்பெனி அரசாங்கம் நைநியப்பிள்ளையை தரகர் பொறுப்பில் மேலும் சிறிதுகாலம் வைத்திருக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்ததை மேற்கண்ட மேல் ஆலோசனை சபை முடிவு விளக்குகிறது. அதே நேரத்தில் பிரெஞ்சு முடியாட்சியின் கட்டளையையும் குறிப்பாக சேசுசபையினரின் அவாவையும் பூர்த்திசெய்யவேண்டும், எனவே கிருஸ்துவரான சவரி முதலியாரை நைநியப்பிள்ளைக்குத் துணையாக நியமித்தார்கள். மேல் சபையின் தீர்மானத்தினை திரும்பவும் ஒருமுறை வாசித்தால் நைநியப்பிள்ளையின் பதவிக்காலம் சவரிமுதலியார் தரகர் பணியின் நெளிவுசுளிவுகளை அறிகின்ற வரையில் என்பதை புரிந்துகொள்ளலாம். இங்கே எபேர் கவர்னராக இருந்தபோது பணிபுரிந்த முத்தியப்ப முதலியாரின் மருகர் சவுரி முதலியார் என்ற கொசுறுச் செய்தியையும் சொல்லிவிடவேண்டும்.

நைநியப்பிள்ளையின் விதி வேறாக எழுதப்பட்டிருந்தது. அவ்விதி சவரி முதலியார் என்ற பெயரில் அவருடைய இடைத் தரகர் பிழைப்பைக் கெடுத்ததுடன், அவர் உயிர் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.

(தொடரும்)

—————————————————————————————-

1.1714ம் ஆண்டு மார்ச் 9ந்தேதி மேல் ஆலோசனைசபை விவாதத்திற்குப்பின் எடுத்துக்கொண்ட முடிவுகளின் தொகுதி 1வது புத்தகம் பக்கம் 139 cd.ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்று  பக்கம் 8

 

கதையல்ல வரலாறு -2-1

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்படவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

நைநியப்பிள்ளை செய்திருந்த குற்றமென்ன? தண்டனையின் தீவிரத்தைப் பார்க்கிறபொழுது குற்றம் அசாதாரதனமானதென்கிற முடிவுக்கு எவரும் வரமுடியும். இழைக்கப்படும் குற்றமும் வழங்கப்படும் தண்டனையும் எப்போதுமே சமன் செய்யப்பட்டதாக வரலாறில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டுமல்ல நீதியுங்கூட.  இங்கே நைநியப்பிள்ளை குற்றம் சாட்டப்படவர் என்றால், அவரை விசாரனை செய்யும் அதிகாரத்திலும் நீதி வழங்குமிடத்திலும் இருந்தவர்கள் அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள்: ஒருவர் கியோம் ஆந்தரே எபெர், மற்றவர் அவருடைய மகன்: குளோது ஆந்தரே எபேர்.

புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் முதல் கவர்னராக  இருந்தவர் பிரான்சுவா மர்த்தேன். திருச்சிராப்பள்ளியின் அப்போதைய நிர்வாகியாக இருந்த ஷெர்க்கான் லோடி, பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் புதுச்சேரியில் நிரந்தரமாய்த் தங்கி வியாபாரம் செய்யவும், சரக்குக்கிடங்குகள் கட்டிக்கொள்ளவும் 1673ம் வருடம் ஜனவரி மாதம் 2ந்தே அனுமதி வழங்குகிறார். பிரான்சுவா மர்த்தேனுக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடைத்தரகராகயிருந்து செயல்பட்டவர் சென்னையிலிருந்து பிரான்சுவா மர்த்தேனால் அழைத்து வர்ப்பட்டிருந்த தானப்ப முதலியார். பின்னாளில் தரகு தானப்ப முதலியார் என்றழைக்கபட்ட இம்மனிதரின் உழைப்பும், திட்டமிடலும் புதுச்சேரியை மட்டும் கட்டி எழுப்ப உதவவில்லை. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவில் நிலைபெற்று தங்கள் பங்காளிகளைப்போலவே காலனி ஆதிக்கத்தை பிரெஞ்சுக் காரர்கள் கட்டி எழுப்பவும் அவை உதவின.. 1691ம் ஆண்டு தானப்ப முதலியார் இறக்கிறார். எல்லாக் காலங்களையும் போலவே  அப்போதும் தந்தைக்குப்பிறகு மகனுக்கு உத்தியோகத்தை வழங்குவதென்பது ஒரு சம்பிரதாயமாக இருந்துவந்திருக்கிறது. எனவே பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் தரகராக தானப்ப முதலியார் மகன் முத்தியப்ப முதலியார் நியமிக்கப்படுகிறார்.

33 ஆண்டுகள் புதுச்சேரிகவர்னராக இருந்த மர்த்தேன் – இடையில் ஆறாண்டுகாலம் (1693-1699)புதுச்சேரி ஆலந்து நாட்டினர் வசமிருந்தது – 1706ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தே தேதி இறக்கிறார். அவருக்குப் பின் புதுச்சேரி கவர்னராக பதினான்காவது லூயியினால் நியமனம் செய்யப்பட்டவர் கியோம் ஆந்தரே எபேர் (Guillaume Andre Hebert).

இவரைபற்றி ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்றின் முன்னுரையில் அறிஞர் ஞானு தியாகு, “அந்த மனிதன் ஒரே முழுக்கில் கூடை மண் வாரவேண்டுமென்கிற எண்ணமுடையவர். எவ்வளவு சுருங்கின கால அளவில் திரண்ட ஆஸ்தியைச் சம்பாதிக்கமுடியுமோ, அவ்வளவையும் சம்பாதிக்கிற எண்ணத்துடன் புதுச்சேரிக்கு வந்தார்”, என்றெழுதுகிறார்.

ஆகவே வந்தவர், கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பணம் காய்க்கும் மரங்கள் எவையெவையென பட்டியலிட்டார். அதில் மாட்சிமைமிகுந்த மன்னராட்சிக்கு என்ன இலாபமென பார்ப்பதற்கு முன்னால் தம் பங்கிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியுமெனவும் கணக்கிட்டார். அதனை அதிகரிப்பதற்கு செய்யவேண்டிய வழிமுறைகளும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும் பற்றி நன்கு யோசித்து வரையறுத்தவர் செயலில் இறங்கவும் தயங்கவில்லை. வந்தவர் கவனத்திற்கு முதலில் தெரிய வந்த தகவல், கூட்டுறவு சங்க வர்த்தகத்தில் முத்தியப்ப முதலியாருக்கிருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும்.

*     *

– உள்ளூர் வியாபாரிகள் வந்தார்களா?

– முத்தியப்ப முதலியார் ஊரில் இல்லையாம்.

*     *

– விலை எப்படி? குறைத்து கேட்டிருக்கலாமே?

– அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால் முத்தியப்ப முதலியார்தான் நியாயமான விலை, கொடுக்கலாம் என்கிறார்.

*     *

– தவக்கமில்லாமல் சரக்கு நாளை கப்பலில் ஏற்றப்பட சாத்தியமுண்டா

– தோணி செலுத்தும் செம்படவர் முத்தியப்ப முதலியார் வந்தால்தான் கடலில் இறங்குவார்களாம்

*     *

முத்தியப்ப முதலியார்மீது தேவயின்றி கோபம் வந்தது. முன்பிருந்த கவர்னர் இந்த மனிதரைத் தேவையின்றி வளர்த்துவிட்டாரோ என்ற சந்தேகம். காப்ரிகளை எப்படி வைத்திருக்கவேண்டுமென ஆந்த ஆளுக்கு ஏன் விளங்காமல் போயிற்று எனக் கோபப்பட்டார். இதை இப்படியே விடக்கூடதெனத் தீர்மானித்தவராய், முத்தியப்ப முதலியாருக்கு துணையாக இருக்கும் கணக்கனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவரும் தலையை சிலுப்பிக்கொண்டு வந்து நின்றார்.

– சிப்பாய் ஒருவனை உடனடியாக அனுப்பி முத்தியப்ப முதலியாரை என்னை வந்து பார்க்கசொல், என்றார்.

போன கணக்குப்பிள்ளை இரண்டு மணி நேரத்தில் குடுமியை முடிந்துகொண்டே திரும்பவும் வந்தார். இன்றைக்கு அவரது தாயாருக்கு திதியாம். வீட்டில் அவசியம் இருந்தாகவேண்டுமாம். நாளை வந்து பார்க்கிறேன், என்று முதலியார் கூறியதாகத் தெரிவித்தார். அவர் வேறொன்றையும் தெரிவித்திருக்கவேண்டும். எதற்காக வீண் வம்பென நிறுத்திக்கொண்டார். வரமாட்டேனென்று கூறிய முதலியார், “ஏண்டா மாடு பன்றிகளை தின்கிறவனுக்குத்தான் புத்தியில்லை, உங்க கணக்கனுக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டிலே விசேஷம்ணு அவனுக்குத் தெரியுமே, எப்படி சொல்ல மறந்தான்? என இடக்குத்தனமாக முதலியார் கேள்வியெழுப்பியதையும் சிப்பாய் சொல்லியிருந்தான், கணக்குப்பிள்ளை அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை உணர்ந்திருக்கவேண்டும், கவர்னரிடம் கூறாமல் தவிர்த்தார்.

– சரி சரி நீ போ, என்ற கவர்னர் ஆந்தரே எபெருக்குக் கோபம். உடனே முத்தியப்ப முதலியாரை கட்டி இழுத்துவந்து சந்தியில் தூக்கில் போடலாமா என்று கூட நினைத்தார். அவர் மூளை வேறுவிதமாக யோசித்திருந்தது. இந்தக் காட்டுமிராண்டிகளை மேய்த்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பும்போது முடிந்த அளவு செல்வத்தை அள்ளிபோகவேண்டும், அதற்கு வேண்டிய தந்திரங்களை கையாளவேண்டும் என்பதை புரிந்துகொண்டவுடன் கவர்னரின் கோபம் அன்றைக்குத் தணிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கவர்னர் எபெர் தரகர் முத்திய முதலியாரை அழைத்திருந்தார். முத்திய முதலியாரும் கவர்னரின் உத்தரவை மதித்து கவர்னர் சமூகங்காண உடனடியாக வந்திருந்தார். வந்த முத்திய முதலியாரிடம் கவர்னர் ஐம்பது பேழைகளைக் கொடுத்தார். பேழைகள் ஒவ்வொன்றிலும் நன்கு சிவந்த பவழங்கள் இருந்தன.

– என்ன பார்த்தீரா?

– பார்த்தேன்.

– அவ்வளவும் ஜாதி பவழங்கள் எனக்குப் பரிசாக வந்தவை. அவற்றை விற்கலாமென தீர்மானித்திருக்கிறேன்.

– நல்லது.

– மணங்கு ஒன்றுக்கு 120 வராகன் போகுமென்று சொல்கிறார்கள். விற்க ஏற்பாடு செய்யுங்கள்.

சரக்கினைப் பெற்றுக்கொண்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகளை வரவழைத்து பவழங்களைக் காட்டியபோது, அவர்கள் சரக்குகளை பரிசோதனை செய்து சரக்குகள் நல்ல ஜாதியில்லை என்றார்கள். மணங்குக்கு 106 வராகனுக்குமேல் ஒரு குண்டுமணிகூட பெறுமதி இல்லையென தெரிவிக்கின்றனர். கவர்னர் எபெர் குறைந்தது 110 வராகனாவது வேண்டுமென பிடிவாதமாக இருந்தார். முத்தியப்ப முதலியார் வியாபாரிகளை சமாதானம் செய்து மணங்கிற்கு 110 வராகன் என முடித்துவைத்தார். சம்மதித்த வியாபாரிகள் போகிறபோது சண்டையிட்டுக்கொண்டுப் போனது கவர்னரின் காதிற்கு எட்டியது. கவர்னர் பிரச்சினைகள் அனைத்திற்கு தரகர் முத்தியப்ப முதலியாரே காரணமென நினைத்தார். முதலியார் நினைத்திருந்தால் மணங்கொன்றிர்க்கு தமக்கு 120 வராகன் விற்றுத் தந்திருக்கலாம், தவிர வியாபாரிகளை எப்படி வழி நடத்துவதென்பதைக்கூட அவர் அறியாமலிருக்கிறார் என்றெண்ணி தரகர் பதவிக்கு அவர் சரியான ஆளல்ல என்ற முடிவெடுத்து தமக்கு விசுவாசமாக இருக்கிற நைநியப்பிள்ளையை அன்றுமுதல் தரகராக நியமிக்கிறார்.

(தொடரும்)