பிழைக்கத் தெரியணும் கிளியே – நா. கிருஷ்ணா

                (அழுவதும் சுகமே (1980) தொகுப்பிலிருந்து)

பட்டு நூல்களைத் தொட்டு, உணர்வு

இட்டுக் கற்பனைக் கோர்த்து

ஒட்டும் வண்ணத்துப்பூச்சி, அழகு

இட்டு படைத்தவன் அங்கே !             

இட்டச் சேலைகள் காட்டி, எங்கள்

இதயம் பூத்திட வைத்தீர், எனப்

பட்டமும் பெருமையும் பெற்று,  நல்ல

துட்டு சேர்ப்பவர் இங்கே !

வாட்டும் நெருப்பில் வெந்து, நல்ல

வாய்க்கினிய கறிகள் செய்து, சுகம்

ஊட்டும்  சுவைபல சேர்த்து, நள

விருந்து சமைப்பவன் அங்கே !

கோட்டும் சூட்டுமாய் வந்து, நன்கு

கேட்டு வாங்கி மிக உண்டு, ஏப்பம்

மீட்டும் இடைவெளியிற் சற்றே, விருந்து

வீட்டை புகழ்பவர் இங்கே !

பாட்டு தந்தவன் ஒருவன், வண்ணப்

படம் பிடிப்பவன் ஒருவன், மெருகு

ஊட்டும் திரைக்கதைக்கொருவன், எனக்

கூட்டு முயற்சிகள் அங்கே !

சாட்டை சொடுக்கும் அழகும், நடிகன்

சண்டை போடும் அழகும், கண்டு

கூட்டம் புரளுது இங்கே, அவனைக்

கும்பிட உருளுது இங்கே !

தஞ்சை பெரிய கோயில், அழகு

தாஜ் மகால் ஒத்த சான்றும், எழ

நெஞ்சைப் பிளந்தவர் கோடி, அவர்

நினைவில் நிற்பதில்லை கிளியே !

உழைக்க மட்டும் தெரிந்தால்-உன்னை

ஒதுக்கி மிதித்துப் பிறர் உயர்வார்

பிழைக்கத் தெரியவேணும் கிளியே நன்கு

பேசத் தெரிய வேணும் கிளியே !

  • நா. கிருஷ்ணா

பின்னூட்டமொன்றை இடுக