பிரான்சு நிஜமும் நிழலும் – 2 இடைக்காலம் தொடர்ச்சி

‘படைப்பு’,  ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்  பதின்மூன்றாம் நூற்றாண்டில்  வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி  கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம்,  மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.  இந்த இரண்டாவது வகையினர்  பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும்,  பிரபுக்கள்  அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.  இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’   என்கிற குதிரைவீரர்கள்  இருந்தனர்.   இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன.  இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம்.  இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால்  முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

  1. சிலுவைப்போர்கள் (les croisades)
Signol Emile (1804-1892). Versailles, ch‚teaux de Versailles et de Trianon. MV360.

நிலமானிய சமூகம் மூன்று அடுக்குகளைக்கொண்டது :  முதலாவது அடுக்கு மதகுருமார்களையும், திருச்சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இரண்டாவது அடுக்கில் ‘les Guerriers’  என்கிற சத்திரிய வர்க்கத்தில்  நிலப்பிரபுக்களும் குதிரை வீரர்களும் அடங்குவர் ; மூன்றாவது அடுக்கென்பது  les travailleurs எனும் தொழிலாளர்வர்க்கத்தில் குடியானவர்களும், கைவினைஞர்களும் அங்கம் வகித்தனர். இம்மூவரும் ஒருவரையொருவர் சார்ர்ந்திருந்தனர். ஒரு வர்க்கம் பாதிக்கப்பட்டால் மற்றவர்க்கம் உதவவேண்டும்  என்ற நிலை.  புனிதத் தலத்தை அல்லது புண்ணிய பூமியை(la terre sainte) மீட்பதென்ற  சிலுவைப்போரில் ‘les chevaliers’ எனும் குதிரைவீரர்களின் பங்களிப்பு அவசியமாயிற்று.

  1. நயப்பண்பு (la courtoisie). ‘ courtois’ என்ற பிரெஞ்சுசொல்லுக்குப் பொதுவெளியில் நாகரீகமாக நடந்துகொள்வதென்று பொருள். இங்கே பிரபுக்கள் அவையில் அதிலும் பெண்களும் இடம்பெற்றிருக்கிற அவையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியதே நயப்பண்பு என்கிற ‘la courtoisie’. அதிலும் இடைக்காலத்தின் பிற்பகுதியில் (குறிப்பாக பதினோராம் நூற்றாண்டில் இன்றைய பிரான்சு நாட்டின் தென்பகுதியிலும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடபகுதியிலும்) நிலமானிய  சமூகத்தில் பிரபுக்கள் அவையில் உருவான இப்புதிய வழக்கின்படி உயர்குடிப்பெண்கள் இடம்பெற்ற  அவைக்களத்தில் இப்பெண்களின் நன்மதிப்பினை பெறவும்,  அவர்கள் காதலைச் சம்பாதிக்க்கவும்  குதிரைவீரர்கள் முனைப்பு காட்டினர். அவர்களின்  பார்வைக்கும், வார்த்தைக்கும், அன்பிற்கும், நயப்பண்பு அவசியமாயிற்று, அப்படி நடந்துகொண்ட குதிரைவீரர்கள், அரசவை சீமாட்டிகளின் அபிமானத்தைப் பெற்றதால், அவர்களுக்கு நட்சத்திர தகுதி கிட்டியது. விளைவாக பரணிபாடல்களில் குதிரைவீரர்கள்  கதை நாயகர்கள் ஆனார்கள்.

இப்’பரணி’ வகைப் (la chanson de gestes) பாடல்களின் பொதுப்பண்புகள் :

அ. கதைநாயகர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஆ. உலகம் நல்லது கெட்ட து என எதிரெதிர் நிலையில்வைத்து கையாளப்பட்டது

இ. ஈட்டும் வெற்றி எதிர்காலத்திற்குரியதாக  இருந்த து.

ஈ. அரசர், பிரபுக்கள் ஆகியோரிடம் தீவிர விசுவாசத்தை வற்புறுத்தின .

உ. கதை நாயகர்கள் சமூகத்தின் முன்னுதாரணங்கள் எனக் கருதப்பட்ட னர்.

முக்கிய நூல் ‘La Chanson de Roland’   பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் அநாமதேயக் கவிஞரால்  பாடப்பட்ட து. ரொலான்  என்ற வீரனின் புகழப்பாடும் நூல். இருபதாயிரம் படைவீரர்களோடு ஒருலட்சம் படைவீரர்களைக்கொண்ட எதிரியோடு மோதி பலியானபின், அங்குவரும் மன்னன், ஷார்ல்மாஜ்ன்(Charlemagne)  எஞ்சியிருந்த எதிரிப்படையின்  மூன்று இலட்சம் வீரர்களை  முற்றாக அழிக்கிறான். இறுதியில் தேவதூதன் கப்ரியல் ரொலானுடைய ஆத்மாவை சொர்க்கத்திற்குக் கொண்டுபோகிறான்.

 ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில்  ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம் , அக்காலகட்ட த்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய மக்களிடமிருந்து விலகி அரசவை, திருச்சபை, மேட்டுக்குடியினர் ஆகியோருக்கு உரியனவாக க் கருதப் பட்டன.  இந்நிலையில் இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த ‘ரொமான்’ எனும் சாமானியர்மொழியில் சொல்லப்பட்ட இலக்கியங்கள் ‘ரொமான்’ என்று அழைக்கப் பட்டன.  தமிழைப்போலவே தொடக்க காலத்தில் பண்பளவில் வெவ்வேறு அடையாளங்களுடன் இருந்த போதும் அவை கவிதைவரிகளில் சொல்லப்பட்டன. புதினம் என்றப் பொருளில் கையாளப்படும் பிரெஞ்சு ‘ரொமான்’ அந்நாளில்  பிற இலக்கிய பிரதிகளைப்போலவே (ஏற்கனவே கூறியதைப்போல) படைத்தவர் கற்பனைக்கு முழுமையாக உரியவை அல்ல. ஓர் எழுத்தாளர் தம்முடையதென முழுமையாக ஒரு படைப்புக்கு உரிமை கோரமுடியாது. இச்செயல்பாட்டிற்கு அந்நாளில் வழக்கிலிருந்த பெயர், « ரொமான் மொழிக்கு கொண்டு போதல் (mettre en roman) »அதாவது  « ரொமான் மொழியில் செய்தல் அல்லது படைத்தல் (faire en roman »  அல்ல. இலத்தீன் மொழியில் சொல்லப்பட்ட படைப்புகளை கொண்டுவருதல் அல்லது ரொமான் மொழிக்குப் பெயர்த்தல்  என்ற வகையில் அது நடைமுறைபடுத்தப் பட்ட து. ‘ரொமான்’ எனும் வெகு சன மொழியில் தொடக்கத்தில் சமயகுருமார்களின், திருச்சபை குருக்களின் உண்மை வாழ்க்கை வரலாறு  சொல்லப்பட் ட து . இதன் பின்புலத்தில் சமயம் இயங்கியது. புனைவுக்கு அந்த  இட த்தை அளித்தவர் கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) என்ற கவிஞர்.

.

கிரெத்தியன் தெ த்ருவா(Chrétien de Troyes) : s et பிரெஞ்சு ரொமான் வகமையின் முன்னோடி, கற்பனாவாதத்தின் அவான் – கார்ட் (avant-garde) என அழைப்பதிலும்  தவறில்லை. ‘படைப்பு’ என்கிற சொல்குறித்த விவாத த்தை முதன்முதலில் தொடங்கிவைத்தவரும் இவர்தான். ஒழுங்கு, விரிசல் இரண்டையும் கதை சொல்ல லில் உள்ளடக்கி சம்பவங்களுக்கிடையே ஓர் ஒத்திசைவைக் கையாண்டவர். தொனி, அங்கதம், கதைமாந்தர்களிடமிருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளல்  ஆகியவை இவருடைய படைப்புகளின் சிறப்புக் கூறுகள். காதலும் வீரமும் மையப்பொருள்கள். காதல் மணவாழ்க்கையை அடிப்படையாக் கொண்டது.  ஆயுதத்தை நெறியுடன் உபயோகிக்க வேண்டுமென்றார். சமூகத்தைக் குறித்த குறிப்பாக மேட்டுக்குடியினரைப்பற்றிய விமர்சனங்களும் உண்டு.  ஐந்து ரொமான்களை அல்லது புதினங்களை (கவிதை வடிவில்)  எழுதியிருக்கிறார், அனைத்துமே பிரத்தொன் பிரதேசத்தில், வழக்கிலிருந்த செவிவழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை.

இடைக்க்காலத்தில் மூன்றுவகை ‘ரொமான்கள்’ இருந்தன. 1. தொன்மக்கால வீரர்களின் சாகசங்களைச் சொல்பவை  தொன்ம ரொமான்(le roman antique) என்றும் ; 2. பிரபுக்களின் அவையிலோ, அல்லது கல்விமானகள் பலர்கூடிய அவையிலோ சொல்லப் பட்டவை பிரெத்தோன் வகை ரொமான்(le roman breton  என்றும் ; கீழைநாடுகளின் கதைகளை ஒரியண்ட்டல் ரொமான் (le roman oriental) என்றும் வகைபடுத்தப்பட்டிருந்தன.

த்ரிஸ்த்தானும் இஸேவும்(Tristan et Iseut) இடைக்கால நூல்களில் முக்கியமான ரொமான். பிரெத்தோன் பிரதேச கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாக க்கொண்ட து. கிரெத்தியென் தெ த்ருவா கூட இப்பெயரில் புதினமொன்றை அதாவது ரொமான் ஒன்றை எழுதியாகச் சொல்லப்படுகிறது. தற்போது  இப்பெயரில் இரண்டு ஆசிரிரியர்கள் எழுதியுள்ள நூல்கள் கிடைத்திருக்கின்றன.  ஒருவர் பெரூல் (Béroul) மற்றவர் தொமா தங்கலெத்தெர் (Thomas d’angleterre). ராஜா, இளவரசன், அழகான இளம்பெண், அரக்கன், சூனயக்காரி ஆகிய கதைமாந்தர்களைக்கொண்டு, காதலையும் வீரத்தையும் சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.  கதையின் முடிவில் கதைநாயகனும் கதைநாயகியும் காதலில் தோல்வியுற்றபோதும், மரணத்தில் இணைகிறார்கள் என்கிற கற்பனாவாத இலக்கணத்திற்குப் பொருந்துதுவது ரொமான் அல்லது புதினம்.

பின்னூட்டமொன்றை இடுக