ஏர் இந்தியா- மோன் பிளாங் – இரண்டரை கோடி ரூபாய்?
மோன் பிளாங்(Mont -Blanc), அல்லது பாரதி மொழியில் சொல்வதெனில் வெள்ளிப் பனிமலை. இத்தாலிக்கும் பிரான்சுக்கும் சிறிது தூரத்தில் சுவிட்சர்லாந்துக்கு இடையில் கூன்போட்டு படுத்திருக்கும் மலை. 2013 செப்டம்பர் மாதம் அம்மலையின் அடிவாரத்திலிருக்கும் ஷமோனி( Chamonix ) கிராமத்து மலையேற்றத்தில் ஆர்வம்கொண்ட மனிதருக்கு இந்த வெள்ளிப்பனி மலையில் கிடைத்தப் பயணக் கைப்பெட்டியொன்றில் ஐரோப்பிய யூரோவில் 300000 பெறுமான விலையுயர்ந்த கற்களுடன் ஒரு பை கிடைத்திருக்கிறது.
இம்மலையில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன, இரண்டுமே ஏர் இந்தியாவுக்குச் சொந்தம். முதலாவது ஒரு போயிங் 707 கஞ்சன்சங்கா என்று பெயர். ஜெனீவா (சுவிஸ்)விமானநிலையத்தில் இறங்க இம்மலையை கடந்து செல்லவேண்டும். 108 பயணிகள், 11 விமான ஊழியர்கள். இவ்விபத்தில் மாண்டனர். விபத்து நடந்த ஆண்டு 1966. இதற்கு முன்ப்பாக இதே மலையில் 1950ல் ஏர் இந்தியாவின் மலபார் இளவரசி தமது பயணிகள் விமானஓட்டிகள் ஊழியர்களுடன் விபத்துக்குளாகியது. ஆக இரண்டில் ஒரு விமானத்திற்கு இப்புதையல் சொந்தம். இதற்கு முன்பாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான, மற்றும் அதிகாரபூர்வமாக உரிமை கோரிய பொருட்கள், ஆவணங்கள் – மலையேறிகளுக்கு கிடைத்தவற்றை பிரெஞ்சு அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு ஒப்படைத்திருக்கிறது. இவ்விலையுயர்ந்த கற்கள் வாஷிங்டனுக்கு ப் போகவிருந்த உயர்மட்ட தூதரக அதிகாரியின் கைப்பெட்டியில் இருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் அமெரிக்காவிற்கு சுவிஸ் வழியாக ஏன் செல்லவேண்டுமென்பது கேள்வி. இக்கேள்வி பதிலின்றி இருக்க விலையுயர்ந்த கற்களை பனிமலையிலில் கண்டெடுத்த பிழைக்கத் தெரியாத மனிதர் கொண்டுபோய் போலீஸ்காரர்களிடம் கொடுக்க அவர்கள் பிரெஞ்சு அரசாக்கத்திடம் கொடுக்க எட்டாண்டுகள் காத்திருப்பிற்கு(2021) பிறகு பிரெஞ்சு அரசாங்கம் மலையேறியின் ஊரான ஷமோனி மேயரிடம் ஒப்படைக்க , அவர் மலையேறியின் குடும்பம் உடபட ஊர்வாசிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இதிலிருந்து தெரியவரும் நீதி இந்திய அமைச்சர்கள் அமலாக்கத்துறைக்குப் பயந்து சுவிஸ்பயணம் மேற்கொள்ளவேண்டாம், ஆபத்தில் முடிய வாய்ப்புண்டு.

