ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)
ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர். மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.
சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத் (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள் ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.
ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.
ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம், இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என் அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.
ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.
அவரது முக்கிய படைப்புகள்:
1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)
————————————————–