மொழிவது சுகம் – ஏப்ரல் 27

Rosemary’s baby -Roman Polanski

அண்மையில் Arte என்கிற பிரெஞ்சு தொலைகாட்சியில் புகழ்பெற்ற ரோமன்போலெஸ்க்கியின் ரோஸ்மரியின் குழந்தை (Rosemary’s baby) படத்தை காணநேர்ந்தது. ரோஸ்மரி நாடகங்களில் துணைநடிகராக நடிக்கின்ற அவரது கணவர் இருவரும் நியூயார்க் நகரில் ‘Bramford’ என அழைக்கப்படும் தொகுப்புவீடொன்றில் குடியேறுகிறார்கள்.அவர்களுக்கு அண்டைவீட்டினராக அறிமுகமாகும் வயதான தம்பதியினர்  இளம் தம்பதினியினர் மீது காட்டும் அளவற்ற பாசம் ரோஸ்மரிக்கு சந்தேகத்தைக்கொடுக்கிறது. தொகுப்பு வீடு, அவ்வீட்டில் வசிக்கும் பிற குடித்தனகாரர்கள், வயதான தம்பதியினர் என ஒரு மர்ம முடிச்சில் திரைக்கதையை மிக துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். ரோஸ்மரியாக நடிக்கும் மியா ·பரோ (Mia Farrow) வின் நடிப்பு அபாரம். நம் வீட்டுபெண்போல இருக்கிறார். தொடக்கத்தில் சாதுர்யமானவளாகவும், கெட்டிக்காரியாகவும் அறிமுகமாகிறவள்  பின்னர் பரிதாபமாக தோற்று துவளும்போது எரிச்சல் வருகிறது. சாத்தான் அபிமானிகளான கூட்டத்தின் சிலந்தி வலையில் சிக்குண்டு மெல்ல மெல்ல இரையாவது கொடுமை. மறக்க முடியாதபடம். படத்தின் மூலம்  Ira Levin என்பவரின் விற்பனையில் சாதனை படைத்த திகில் நாவலான  Rosemary’s baby க்குச் சொந்தமானது. எனக்கென்னவோ Roman Polansky படங்களிலேயே சிறந்தது இதுவாகத்தான் இருக்குமென்று அபிப்ராயம் ( அவரது மற்ற படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் வரை). இதன் தொடர்ச்சியாக The Tenant, மற்றும்  ஒரு படம் (பெயர் நினைவிலில்லை) வந்தன. பிறகு இருக்கவே இருக்கிறது ரோமான் போலஸ்கியின் பெயரைக் கொண்டாடவென்று The China Town.  எனக்கென்னவோ ஸ்பீல் பெர்க்கை காட்டிலும் ரோமன் போலஸ்கி திரைக்கதையில் மன்னர். உண்மை கற்பனையைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்பதற்கு அவரது வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகள்.  1969ல் இலண்டனுக்கு படப்டிப்பிற்கு சென்றிருந்த பொழுது அவரது கர்ப்பினி மனைவியும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் சிலரும்  ஹிப்பி கூட்டமொன்றால் கொடூரமாக கொலையுண்டதே கூட ஒரு திகில் நாவலுக்கு ஈடான சம்பவங்களைக் கொண்டது.  நேரம் கிடைக்கும்போது ரோமன் போலஸ்கி பற்றி எழுதுகிறேன்.
————————————-

எரியுங்கள் உங்கள் ஓவியத்தை – அவர்கள் இரக்கமில்லாதர்களென்று.

அரசாங்கம் தமது நிதியில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக கலை மற்றும் பண்பாட்டுதுறைக்கு ஒதுக்கியிருக்கிருப்பது எரிச்சலூட்டியிருகிறது நவீன ஓவியங்களின் அருங்காட்சியக இயக்குனர் ஒருவருக்கு. கோபமுற்ற அவர் தமது காட்சிகூடத்திலிருந்த ஓவியங்களை அதை படைத்த அல்லது வரைந்த ஓவியர்கள் சம்மதத்துடன் அவர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு தெருவில் போட்டு எரித்திருக்கிறார், தொடர்வாரென்றும் தெரிகிறது.

மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி அரசாங்கம், கலை பண்பாட்டு துறைக்கு எப்படி நிதியை ஒதுக்க முடியும் என அரசாங்கம் கேட்க, அருங்காட்சி அகத்தின் இயக்குனரோ’ அடப்பாவிகளா, இத்தாலி நாட்டின் பொருளாதாரமே கலையையும் பண்பாட்டையும் ஆதாரமாகக்கொண்டதாயிற்றே அதை அலட்சியம் செய்தால் உருப்படுவீர்களா? எனக் கேட்கிறார். இயக்குனர் பெயர் Antonio Manfredi நேப்பிள் அருகில் கசோரியா என்ற இடத்திலிருக்கும் சமகால ஓவியகூடத்தின் இயக்குனர். எரிக்கப்பட்ட முதல் ஓவியம் ஒரு பிரெஞ்சு ஓவியருக்குச் சொந்தமானது, பெயர் Séverine Bourguignon. அருங்காட்சியக இயக்குனர் எங்களிடம் இருக்கும் உங்கள் ஓவியத்தை எரிக்கபோகிறேன் எனக்கூறியபோது அதற்கென்ன சந்தோஷமாக நடத்திக்கொடுக்கிறேனென தீப்பெட்டியுடன் வந்திறங்கினாராம். ஒன்றிரண்டல்ல 200 ஒவியங்கள், எல்லாவற்றையும் எரித்துவிட்டுதான் பிறவேலைகள் என்கிறார் இயக்குனர். எரித்தபிறகு அவருக்கு அங்கென்னவேலை?

ம.லெ. தங்கப்பா  கவிதை

நண்பர் அ. பசுபதி தங்கப்பா  கவிதை ஒன்றை மடலிட்டிருந்தார். அவருடைய வலைப்பூவில் இக்கவிதை இருக்கிறதாம் தங்கப்பாவைவை போலவே எளிமையும் அழகும் ஆழமும் கொண்ட கவிதை:

ஆடு மேய்க்கலாம் – வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் – கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் – போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் – ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் – தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் – பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் – தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் – நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் – தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே – நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் – தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் – கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட – எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)
——————————–

பின்னூட்டமொன்றை இடுக