Tag Archives: ரெ.கார்த்திகேசு

மொழிவது சுகம் ஜூலை 26 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள்

                   ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது?

 2. காஸா பிரச்சினை
காஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம். இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

டாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

மருந்துக்கு ஒரு உதாரணம்:

 

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

“வலிக்குது மவனே
சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

“இறக்கி வைத்தேன் அம்மா
கவிதைகளாக
அதற்குள்ளும்
அழுகின்றன அம்மா
நமது வலிகள்.”
—-

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்
மருத்துவ கேள்வி-பதில்
ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

உமா பதிப்பகம், கோலாலம்பூர்
umapublications@gmail.com
——————————
நன்றி: திண்ணை 27/07/2014

மொழிவது சுகம் -ஜூன் 22 2014

1. Procrastination அல்லது தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல் என்ற சொல்லை நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு மன நோய்தான். இம்த மனநோய்க்கு நானும் பலியாகி இருப்பதின் அடையாளம் தான் எனது எழுத்தில் உள்ள தொய்வுக்கான காரணம். கடந்த காலங்களைப் பார்க்கிறபோது இவ் வருடத்தில் எழுதியது குறைவுதான். 2013 ஆரம்பத்திலிருந்து 8 சிறுகதைகளோடு ஒரு தொகுப்பு நிறைவுறாமல் இருக்கிறது.  வெகு நாட்களுக்குப்பிறகு சொல்வனம் நண்பர் கிரிதரன் அன்பினால் அவர்களுக்கு ஒரு சிறுகதையை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எனது கடைக்கு வருகிற மொரீஷியஸ் வாடிக்கையாளர்கள் அவர்கள் நடத்தும் ‘மாரியம்மன் கஞ்சி’ என்ற பண்டிகைக்கு அழைத்திருந்தார்கள். வருடத்தில் மூன்று பண்டிகைகள் நடத்துவார்கள்; எல்லா பண்டிகைகளுக்கும் போக முடிவதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அல்லது முன்னிரவுகளில் அவற்றை நடத்துகிறார்கள். குறைந்தது 3 மணிநேரம் அந்நிகழ்ச்சிக்கு ஒதுக்கவேண்டும். கடைவைத்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மனங்கோணக்கூடாது எனப் போகவேண்டியிருக்கிறது ஒரு சிறுகதைக்கான கரு கிடைத்தது.  உடனே எழுதாமற் தள்ளிப்போட்டுவந்தேன்.  சிறுகதைத் தொகுப்பைப்போல,  பிரெஞ்சு இலக்கியத்தைப்பற்றிய கட்டுரைத் தொகுப்பும் முடியாமல் இருக்கிறது. கூடுதலாக நான்கைந்து கட்டுரைகள் எழுதினால் முடித்துவிடலாம். போன வருடத்தில் அம்பை சிறுகதைகளை மொழி பெயர்க்க உட்கார்ந்ததில் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியதாயிற்று. பிரெஞ்சு பெண்மணியோடு இணைந்து செய்வதால் நேரம் பிடித்தது.  மொழி பெயர்ப்பு எனது படைப்புத் திறனை (?) கூர்மையைத் சிதைப்பதாக உணர்கிறேன்.  சோம்பலுக்கும் தள்ளிபோடும் மனநோய்க்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணம். காலூன்றி இருக்கிற வலைத்தளங்களிலும்ங்கூட அவற்றின் தாக்கம் எதிரொலிக்கிறது. தள்ளிபோடும் மனநோயிலிருந்து விடுபடவேண்டும் என நினைப்பதே  நல்ல அறிகுறிதான். ஆனால் அதையும் தள்ளிப்போடக்கூடாதல்லவா?

சொல்வனம்  இணைய இதழ் 16-6-2014

இந்த இதழ் சிறுகதை இதழாக வந்துள்ளது. நாஞ்சில் நாடன்மொழியில் சொல்வதெனில் ‘அரைக்கோட்டை விதைப்பாடு வேணும்னாலும் எழுதித் தரலாம்” அப்படி வாச்சிருக்கு. நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், குட்டி ரேவதி வ.ஸ்ரீனிவாசன், ரெ. கார்த்திகேசுவின் படைப்புக்களோடு, மொழி பெயர்ப்புளும் உள்ளன.

வல்விருந்து – நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை.

வழக்கம்போல மனிதர் சிலம்பம் சுழற்றுகிறார். நாஞ்சிலார் எழுத்து. ஒப்பிடமுடியாதது. லாசாரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சு.ரா. என சேர்ந்ததொரு கலவை. கும்ப முனியின் எண்ணைகுளியலை ஓர் பத்துதடவையாவது வாசித்திருப்பேன். எதையாவது எழுதி கிச்சு கிச்சு மூட்டுவதென்பது வேறு. பிறரைக் காயப்படுத்தாத நக்கலும், கேலியும், குத்தலும், கோபமும் எத்தனை படைப்பாளிகளுக்குச்சாத்தியம். அவர் வீட்டில் கட்டுதறி இருக்குமென்றால் களவாடிடணும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாவே இருந்துவருகிறது.

குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அ·தென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.
– (வல் விருந்து- சொல்வனம் 16-6-20014)
இடுக்கிகோல்ட். -குட்டி ரேவதி.

கதைசொல்லலிலும் தாம் வல்லவர் என்பதைக் குட்டி ரேவதி நிரூபித்திருக்கும் சிறுகதை. அவருடைய படைப்பாற்றலை – மொழிக்கும் அவருக்குமான பிணைப்பை ஒருவரும் குறைசொல்லிவிடமுடியாது. சில பகுதிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. அது ஒரு குறைதான். எனினும் அவர் எழுத்தாற்றல் பிரமிப்பதாக இருக்கிறது. தக்க தருணத்தில் தமது இருப்பை உறுதிசெய்திருக்கும் ஆக்ரோஷமான எழுத்து. பிரெஞ்சில் துராஸ் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு கவிதையை ஒதுக்கிவிட்டு உரைநடைபக்கம் வாங்களேன் என்ற கோரிக்கையை தாராளமாக நாம் வைக்கலாம்.

சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை”(இடுக்கிகோல்ட் – சொல்வனம் 16-6-20014)

“கவிதை எழுதுகிறவர்கள் உரைநடயிலும் ஜெயிக்கக்கூடும்” என்று சொல்வதுண்டு – இச்சிறுகதை உதாரணம்.

பிற சிறுகதைகளில் யுவன் சந்திரசேகரின் “உலகளந்த நாயகி” ரெ.கார்த்திகேசுவின் ‘வேளைவந்துவிட்டது’ வ.ஸ்ரீனிவாசனின் ‘தீட்டு’ ஆகியவை வாசித்துள்ள பிற சிறுகதைகள். மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தி.கசியை நினைவுகூரும் வித்தியாசமான இருகட்டுரைகள். பெரியவர் வெங்கட் சுவாமிநாதனும், சுகாவும் தந்திருக்கிறார்கள். அசோகமித்திரனின் ‘இரண்டு விரல் தட்டச்சு’ம் இருக்கிறது. மூவருமே நன்றாகசொல்ல க்கூடியவர்கள் என்பதால், படிக்க சுவையாக இருக்கிறது.

குன்னி முத்து : இந்த வாரம் படித்து முடித்த நாவல். அரசியல்விமர்சகரின் நாவல்போல இருந்தது. அரசியல்கட்சிகள், இந்துமதம், கிறித்துவ மதத்தின் உட்பிரிவுகள் (இஸ்லாமை கவனமாகத் தவிர்த்துவிட்டு) விமர்சனத்திற்குள்ளாகின்றன. நாவலில் வரும் இருளி, சுந்தரி, கிரேசி, என அவ்வளவுபேரும் விரும்பியோ விரும்பாமலோ சோரம்போகின்றார்கள். அதிக எதிர்பார்ப்புடன் படித்ததாலோ என்னவோ பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அது இலக்கியம். இதையே குட்டி ரேவதியோ அம்பையோ எழுதினால் அவர்கள் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் தந்திரம்.  இதில் வலிந்து சொல்லப்பட்டவை அதிகம். ஒருவேளை நமக்குத்தான் இவர்களின் இலக்கிய அரசியலெல்லாம் பிடிபடவில்லையோ என்னவோ?
—————————

 

 

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1

 Panjangakm.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும்-பாராட்டுதலும்என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது  பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில்  எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை.  மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம்.  ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால்.  இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு.  ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ஒருபாற் கோடாமை மனத்துடன் உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல்எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும்வீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.

(தொடரும்)  

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கிய வேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

(மல்லியும் மழையும்)

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைகள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப் பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

– வேஸ்ட் ஓ·ப் டைம்

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441

e.mail: umapublications@gmail.com

———————————-