Tag Archives: பிராகு

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்

காஃப்காவின் பிராஹா -2

மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.

Prague 038 Prague 039 Prague 041 Prague 057

‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.

பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்

Prague 034ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.

சார்லஸ் பாலம்:

Prague 066பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. Prague 069வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).

(தொடரும்)