Tag Archives: ந. முருகேசபாண்டியன்

மூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேசபாண்டியன்

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
ந. முருகேசபாண்டியன்

Naa.mu
பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014

மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

மொழிவது சுகம் ஏப்ரல் 15

1. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி கருத்தரங்கம்

வரும் ஞாயிறு அன்று  செஞ்சியில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வரலாறு புதினம் தொடர்பாக நண்பர் புதுவை ‘இலக்கியம்’ சீனு. தமிழ்மணியும், செஞ்சியைச் சேர்ந்த நறுமுகை என்ற நண்பரும் குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் ஓர் கருத்தரங்கையும்,தொடர்ந்து கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இடம்: செஞ்சி- திருவண்ணாமலை சாலை, ஏ.என்.ஏ சிற்றரங்கு,

நேரம்: காலை 9.30  அளவில்.

சிறப்பு விருந்தினர்:
திருவாளர்கள்: பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி
ந. முருகேசபாண்டியன், திருச்சி
மீனா, திருவண்ணாமலை

நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1 (1)

2. இந்தியப் பயணம்:

கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருக்கிறேன், வெகுகாலத்திற்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம். விமான சேவை நன்றாகவே இருந்தது. புறப்பாடும், அடைதலும் உரிய நேரத்திலிருந்தன. லூ·ப்தான்சா வைக் காட்டிலும் அனைத்திலும் மீசுரமெனச் சொல்லவேண்டும். ஸ்ட் ராஸ்பூர்(Strasbourg) நகரில் வசிப்பதால் எனக்கு ஜெர்மன் – பிராங்பர்ட்நகரம் பக்கமென்பதால்,ஜெர்மன்நாட்டு விமானமான லூப்த்தான்சா (Lufthansa)வில் (இந்தியா வருவதென்றாலும், அமெரிக்கா போவதென்றாலும்)பயணிப்பதுண்டு. இம்முறை திடீரென பயணிக்க நேர்ந்ததால் லூப்த்தான்சாவில் எதிர்பார்த்த வகுப்பு பயணசீட்டு கிடைக்கவில்லை. 800 யூரோவுக்குமேல் ஓரு நபருக்கு கொடுக்கப் பொருளாதாரம் ஒத்துழைக்காதென்பதால்
ஏர் இந்தியாவில் பயணம் செய்வதெனத் தீர்மானித்தோம். ஆயிரம் யூரோவில் மனைவியும்நானும் பயணம் செய்ய முடிந்தது. எட்டாம் தேதியே காரில் பாரீஸ்வந்தாயிற்று. ஒன்பதாம்தேதிமாலை பாரீஸ்-டில்லி பயணம். பத்தாம் தேதி காலை இந்தியநேரப்படி காலை 9.30க்கு புதுதில்லி வந்தடைந்தது. அங்கிருந்து 12.30க்கு மாற்றுவிமானத்தில் சென்னைக்குப் பிற்பகல் 3.30க்கு வந்தடைந்தோம். மாலை 7மணிக்கெல்லாம் புதுச்சேரிக்கு வந்தாயிற்று.

3. காலச்சுவடு கலந்துரையாடல்

ஏப்ரல் 12,13, 14 மூன்று நாடகள் காலச்சுவடு நண்பர்களிடையே கன்னியாகுமரியில்  ஓர்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இரயில் பயணச்சீட்டினை முன்னதாகவே எனது புதுவை முகவரிக்கு அனுப்பியிருந்தனர். முதல்வகுப்பு ஏ.சி கோச், பெர்த் வசதியென சொல்லப்பட்டாலும் எனக்கு உறக்கமில்லை. வசதியான பயணமில்லை. கன்னியாகுமரி அடைந்தபோது காலை 6.50. முதல்நாள் விழுப்புரத்தில் மாலை 8.15க்கு ஏறியது. இரயில் நிலையத்திற்கு கண்ணனும், நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். நான் பயணம் செய்தசென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சலபதி, யுவன்சந்திரசேகரர், மகாலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்துகொண்டேன். பி.எ.கிருஷ்ணன், சுகுமாரன், சலபதி, பெருமாள் முருகன், மோகனரங்கன், குப்புசாமி,தேவிபாரதி, யுவன் சந்திரசேகரர், பழ.அதியமான் எனபல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. பதின்மூன்றாம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4மணிக்கு விழுப்புரம், பின்னர் புதுச்சேரிக்கு காலை 6 மணிக்கும் வந்து சேர்ந்தேன்.

4. 14 மற்றும் 15 ஏப்ரல்

இரண்டுநாட்களும் சகோதரர் மகன் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. வழக்கம்போல புதுவைஇலக்கிய நண்பர்களுடன் வெயில் தணிந்தநேரங்களில் சந்திப்பு எனப்போய்க்கொண்டிருக்கிறது.
மற்றவை அடுத்த மடலில்….