Tag Archives: நீ வரவில்லையெனில்

நீ வரவில்லை எனில்

Désert du Thar, l’indienne blanche – YouTube

நீ வரவில்லை எனில்

அவர் பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்த பெண். கட்டட வடிவமைப்பாளர் துறையில் கல்வி,. இந்தியாவின் வடமேற்கு பகுதிக்கு – இராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா பயணியாக வருகிறார். பயணத்தின் ஒரு பகுதியாக பிற பயணிகளைப்போலவே ஜெயசல்மீர் அருகே ஒட்டகச் சவாரி செய்தவர், இவருடைய ஒட்டகப் பாகனாக உடன் வந்த தலித் இளைஞர் ஒருவரிடம் மனதை இழக்கிறார். இளைஞர் மனைவியை பிரிந்து அவர் விட்டுச்சென்ற நான்கு குழந்தைகளுக்குத் தந்தை. இளைஞரை மணந்த பிரெஞ்சுப் பெண்ணுக்கு இன்று ஓர் ஆண் மகன், ஆக ஐந்து குழந்தைகளுக்கு இன்று அவள் தாய். இந்த ஐந்து பிள்ளைகளோடு ஏழைக் கணவரின் உறவினர் பிள்ளைகளும் தற்போது இத்தம்பதிகளுடன் வாழ்கின்றனர். வீட்டில் மின்சாரமில்லை. தண்ணீருக்கு வெகுதூரம் செல்லவேண்டும். காய்கறிகளோ, பிற சமையல் பொருட்களோ கிடைப்பது அரிது என்பதால் தீயில் வாட்டிய ரொட்டியும் ஊறுகாயுமே பெரும்பாலான நாட்களில் உணவு. தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி பெறவேண்டி ஒவ்வொரு நாளும் வாகனத்தில் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார், கணவரின் உறவுடகளுடனும் சுற்றத்துடனும் தார்ப் பாலைவனத்தில் அநாமதேய கிராமம் ஒன்றில் இன்று நாட்கள் கழிகின்றன. இவைகளெல்லாம் பெண்பற்றிய வீடியோவை எதிர்பாராமல் காண நேர்ந்து எனக்குத் தெரிய வந்தவை. அவற்றைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

மனிதர்களில் இரு தரப்பினர், மனத்தேவைக்கு முக்கியம் கொடுப்பவர்கள் ஒரு வகை, உடற்தேவைக்கு முக்கியம் கொடுப்பவர்கள் இன்னொரு வகை. உடற்தேவைக்கு முக்கியம் அளித்து மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோல பாவனை செய்கிறவர்கள் பிரிதொருவகை. பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை என்கிறது தமிழ். இப்பெண்ணின் கண்களில் உக்கிரம் இல்லை, மாறாக நித்தம் நித்தம் வாழ்க்கையில் காடு மேடென்று அலைந்து நாவறண்டு தவித்த உள்ளங்களுக்கு அன்பும், பரிவும், கருணையும் சுனை நீராகப் பெருகித் தாகத்தைத் தணிக்கிறது. மாட மாளிகை, ராஜபோக வாழ்க்கை, காலில் விழும் அரசியல்வாதிகள் எனவாழும் ராஜரிஷிகளுக்கு மத்தியில் இப்படியும் சில தேவதைகள், தேடல்கள்.

விளம்பரத்தையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கூட்டத்திடை இப்பெண் போன்றவர்கள் தேடுவது எது? முதியவர், நோயாளி, இறந்த உடல், துறவி இவர்களை எதிர்கொள்ள நேர்ந்ததே அரசவாழ்க்கையைத் துறந்த கௌமதமர் தேடலுக்குக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இத் தேவதை எவற்றைக் கண்டு அல்லது எதற்காக இந்த எளிய வாழ்க்கை தேடினாள்? என்ற தேடலுடன் எழுதத் தொடங்கிய நாவல் ” நீ வரவில்லை எனில் ” (பெயர் பழைய பாடல் ஒன்றின் உபயம்). என் மனைவியை நல்ல மூடுடன் எதிர்கொள்கிற போதெல்லாம் என்னுள் அசையும் இந்த வரி நாவலுக்கும் பொருந்தும் என தோன்றியது.