Tag Archives: நாகரத்தினம் கிருஷ்ஷ்ணா

மானுடம் காலாண்டிதழ்: அறத்தின் குரல்

மானுடம் காலாண்டிதழ் நண்பர்கள் அண்மையில் தங்கள் இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை அனுப்பிய நண்பர், அறந்த்தின் குரல் என்ற பெயரிட்டே அவற்றை மின் அஞ்சலில் அனுப்பியும் வைத்தார்.

மானுடம் என்பது, நிற இன வேற்பாடுகளைக்கொண்ட மனிதர்கூட்டம் முழுமைக்கான சொல் என்கிற போதும் அறத்தின் குரல் தேசத்துக்குத் தேசம் வேற்படுகிறது, அவரவர் பண்பாடு, சமூகம், சார்ந்து ஒலிப்பது. இந்தியாவின் அறமும் பாகிஸ்தானின் அறமும் ஒன்றல்ல. கீழைநாடுகளின் அறமும் மேற்கத்திய நாடுகள் அமைத்துக்கொண்ட அறமும் ஒன்றல்ல. ஈரான் அறம் வேறு, அமெரிக்காவின் அறமும் வேறு வேறு, கற்காலத்தின் அறம் வேறு இருபதாம் நூற்றாண்டின் அறம் வேறு, கண்ணகிக்கும் மாதவிக்கும் வேறு வேறு அறங்கள். அறிவியல் உண்மையின் அடிப்படையில் அது எழுதப்படுவது அல்ல அவரவர் பார்வையின் உண்மையில் எழுதபடுவது. மானுடம் என்ற உயிரியின் உறுப்புகள் என்கிறபோதும் புலனுக்கு வகுக்கப்பட்ட  அறத்தின் வழி ஒழுக கடமைபட்டுள்ளன. ஆம் அறம்,  பெற்ற ஞானம், உற்ற அனுபவம்,  சார்ந்த சமூகம் என்கிற அடிப்படைகளின் உண்டியல் சேமிப்பு. அவை கடமை, செஞ்சோற்றுக் கடன், மூடத்தனம் இதுபோன்ற திசைமானிகளால் வழி நடத்தப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

தமிழில் பருவ இதழ்கள் ஏராளமாக வருகின்றன. தமிழ், மொழி, இலக்கியம், சமூகம், மனித வாழ்க்கை அது சார்ந்த  ஆய்வுகள் கருத்துக்கள், விசாரணைகள், விவாதங்கள் அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இலக்கிய திங்களிதழ், மாத இதழ், காலாண்டிதழ், என்றபெயரில் அச்சிலும், காலத்தோடு இணைந்து மின்னிதழ், இணைய இதழ்களும் வருகின்றன. புரட்டுகிறபோதே அவற்றின் வாசனைகளை முகர்ந்துவிடுகிறோம், அவற்றில் சுகந்தம் துர்நாற்றம் இரண்டுமுண்டு. குழுவின் குல தெய்வ இலக்கியத்திற்கு  பிரார்ந்த்தனைகளை நிறவேற்றவேண்டிய கடமைகள் ஒருசிவலவற்றிற்க்கு  இருக்கின்றன. புரவலர்கள், ஆயுள் சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் எடைக்கேற்ப பால் காவடி, பன்னீர்காவடி, தீ மிதித்தல், அலகு குத்துதல், செடல் தேர் இழுத்தல் உண்டு. உக்கிரத்தைப்பொறுத்து கோழியோ, ஆடோ காவு வாங்கியபின் மலையேறி திரும்ப பாதைக்கு வரலாம்.

‘மானுடம்’ எவ்வித ஒய்யாரங்களுமின்றி இலக்கியபணி ஆற்றுகிற, அக்காலத்திய  டி.ஸ். பட்டணம்பொடி போல  காரசாரமான கட்டுரைகளுடன் வருகின்றன. பெரும்பாலானவை புருவத்தை உயர்த்தவைக்கின்றன, மனித இனம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிகள் அவை. இதழ்கள் ஒவ்வொன்றிலும் பேராசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் எனபலரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதழ்களைப் புரட்டும்போது கலைக் களஞ்சியமொன்றை புரட்டும் அனுபவம்.

இக்கட்டுரைகள் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, ஆய்வு மாணவர்களுக்கு உதவக் கூடியவை. தமிழை வளர்ப்பதென்பது, தமிழ் அறிவை வளர்ப்பதென்பது இது போன்ற இதழ்களை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வதில் இருக்கிறது. மானுட த் தேரை தமிழிலக்கிய வெளியில் வலம்வரச் செய்ய உழைக்கும் நண்பர்களைப் பாராட்டுகிறேன்.