Tag Archives: நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்

ஆப்பரேஷன் மகா சங்காரம்

( 2010 ல் வெளிவந்த சிரிக்கிற ரோபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் புனைகதை தொகுப்பிலிருந்து)

நீங்க எப்படிப் பட்டவர்? ரோம் பத்தி எரிஞ்சதுக்கோ, காவிரிப்பூம் பட்டினம் கடலில் மூழ்கிப்போனதற்கோ, நாசகாகி வெந்து துடித்ததற்கோ அல்லது அதற்கும் முன்னாலே இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதற்கோ வருந்தும் ரகமா அப்படியானால் உங்களால் உதவ முடியும். இந்தப் பூமியைக் காப்பாற்றமுடியும்.

வரவிருக்கும் ஆபத்து இங்கே மேலே குறிப்பிட்ட அல்லது சொல்ல மறந்த எல்லாத்துக்கும் பெருசு, ரொம்ப பெருசு. எதிரிகள்- அந்நிய மனிதர்கள்-உறவுகள் உயிர்களுக்கு மட்டுமல்ல, விலை மதிக்க முடியாத உங்கள் உயிருக்குங்கூட ஆபத்து காத்திருக்கிறது. அபிஷேக ஆராதனை, மெழுகுவர்த்தி பிரார்த்தனை, ஐந்து வேளை தொழுகைங்கிற வழக்கமான உத்திகள், உங்களை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றிவிடாது. ஓடியாகணும். ஓடி, சம்பந்தப்பட்டவங்களுக்கு நிலைமையை நீங்க புரியவைக்கணும். போர்க்கால அவசரத்துடன் செயல்பட்டாகணும்.

இச்செய்தியின்மீது  உங்களுக்குள்ள நம்பகத்தன்மையின் சதவீதம் எவ்வளவு என்பதனை என்னாலே ஊகிக்க முடியலை. முடிந்தமட்டும் உங்கள் அவநம்பிக்கையை குறைக்கின்ற வகையில் பிரச்சினையைத் தெளிவாகவும் ஆனால் எனக்கிருக்கும் ஆபத்து காரணமாகச் சுருக்கமாகவும் சொல்லப் பார்க்க்¢றேன். எதற்கும் நீங்களும் ஒருமுறை இதனை வாசிப்பதற்கு முன்னால் பாதுகாப்பான இடத்தினை தேர்வு செய்துகொண்டு வாசித்தல் நலம். அமெரிக்காவென்றால் உயர்ந்த கட்டிடங்களையும், இஸ்ரேலென்றால் பேருந்துகளையும், அரபு நாடுகளென்றால் திறந்த வெளிகளையும், இந்தியாவென்றால் காவல் நிலையங்களையும் தவிர்க்கவும்.

எம்பேரு ஆ.லெ. வள்ளியப்பன். அதாவது ஆத்தங்குடி லெட்சுமண செட்டியார் (அப்பா பிறந்தது நாகர்கோவிலென்பதால் ‘ல’, ‘லெ’ யாகி விட்டது) சீமந்த புத்திரன் வள்ளியப்பன். வான சாஸ்திரத்தையும், உதவிக்கு கணினி அறிவையும் 3:1 என்ற விகிதாச்சாரத்தில் மூளையில திணிச்சுக்கிட்டவன். அப்பா கொடுக்கும் பாக்கெட் மணியில் பகலானால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என அலைஞ்சுட்டு ராத்திரியானா வாலிபவயது உடல் உபாதைகளுக்காக யூதரினத்து வெள்ளைக்கிளி நீல் எத்ரியாவை கணினியிலிருந்து நிழலாக வரவழைச்சு, அவளோட இல்லை அதோட கெட்ட காரியங்களை செஞ்சிகிட்டிருந்தேன்(ஒரு காதற் குறிப்பு: கொஞ்சலுக்கு ஹீப்ரு மொழி உகந்ததல்ல).

கேனையன், பின்னால் இந்தப் பெண்ணால் எனக்கும் உங்களுக்கும் ஏற்படவிருந்த ஆபத்தைப் பற்றி அறிந்துணரும் விவஸ்தையில்லாமலேயே, கேப்பையில் நெய்வடிகிறதென்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். அப்பா சொன்னபடி என் மாமாவின் ஏகபுத்திரி ஆவுடை நாயகியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளது தகப்பனார் பதிப்பகத்தில் “காற்றில் தண்ணீர் பிடிப்பதெப்படி”, “கழுதையை குதிரையாக்குவதெப்படி” மாதிரியான புத்தகங்களைப் பதிப்பித்து நாலு காசு பார்த்திருக்கலாம். எல்லாம் விதி. கடந்த பத்து வருடமா நீல் எத்ரியாவின் மாய வலையில் விழுந்து, இன்றைக்கு ஏதோவொரு கிரகத்தின், பேர்வைக்காத கோளொன்றில் சிக்கித் தவிக்கிறேன்.

நீல் எத்ரியாவுடன் எனக்கேற்பட்ட சிநேகிதம் எப்போதுண்ணு நாள் கிழமையோட ஞாபகத்திலில்லை. ஆனால் சூரக்குடிச் சந்தைக்குப் போயிருந்த அப்பா மென்பொருள் செயலியொன்றை வாங்கி வந்திருந்த அன்று ஆரம்பித்தது என்பது மட்டும் உறுதி. அப்பா வாங்கி வந்திருந்த செயலியைக் கணினியில் இணைத்தவன், விசைபட்டனை அழுத்திவிட்டுக் கைகள் துறுதுறுக்கக் காத்திருந்தேன். திரை விழித்துக்கொண்டது, அங்கேயிங்கேயென்று அலறியடித்துக் கொண்டோடி ராம், ரோம் என இருக்கின்ற கணினியின் நினைவு எல்லைகளை ‘பிட்’ பிட்டாக மிதித்துத் திரும்பி அப்பாடா என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு நிற்கின்றது. திரைக்குள் முப்பரிமாண முகமொன்று தோன்றுகிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் உதடுகள் மேலும் கீழும் முன்னும் பின்னுமாய் அசைய, எச்சிலில்லாத வார்த்தைகள் வந்து விழுகின்றன.

“வணக்கம் டியர்! உனக்கு அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதை தெரியுமா? இன்றைய தினத்திலிருந்து, நீயுமோர் அளவான அதிகாரங்களுள்ள அலாவுதீன். உன்னுடைய ஏவல்களை நிறைவேற்றவென்று ஏற்படுத்தப்பட்டுள்ள பைனரி(Binary) பூதம் நான். வேண்டுமென்றால் உன்னுடைய விருப்பத்திற்கேற்ப என்னை உருமாற்றம் செய்து கொள்ளலாம். விரும்பிய பேரால் அழைக்கலாம், வேண்டியதைக் கேட்டுப்பெறலாம்” என்று சொற்களால் தூண்டில் போட, சனி பிடித்தது.

ஆவுடை நாயகி மீதிருந்த கசப்பில், உலக அழகிகளைப் பக்க வரிசையில் கணினியில் நிறுத்தி, பிடித்த உடற்பாகங்களை இரவல் பெற்று முப்பரிமான நிழலுக்குக் கொடுத்து, நடக்கவிட்டுக் கீழே பார்த்ததில்… (வேண்டாம் அதையெல்லாம் இங்கே சொல்லுவது நாகரீகமாகாது) அமெரிக்க இணைய தளங்களைத் தேட கிடைத்த பெயர் ‘எத்ரியா’. இந்த யூதபெயருக்குப் ‘பலமானவள்’ என்பதாய் அர்த்தமாம். ‘நீல்’ எனது விருப்பத்தின் பேரில் ஒட்டிக்கொண்ட அவளது ‘கற்பனைத் தகப்பன்’ பெயர். வாய் கொள்ள ‘நீல் எத்ரியா’ என்று அழைத்தேன். புகை மண்டலத்தை எழுப்பிக்கொண்டு என்னருகில் வந்து நின்றாள்.

“டியர்!.. இனிமே நான் உங்கள் நிரந்தர அடிமை”, காதருகே கிசுகிசுக்கிராள். அவள் கையைப்பிடித்துக்கொண்டு, கிரகங்கள்தோறும் நானுனக்கு அடிமை என்கிறேன். அவள் சிரிக்கிறாள். எத்ரியாவின் பணிகளை இன்னதென்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் எழுதுவது, கோப்புகளை வரிசை படுத்துவது -நிராகரிப்பது-அழிப்பது, பைரவி ராகத்துலே பாம்பே ஜெயஸ்ரீ குரலில்’மனதில் உறுதிவேண்டும்’ என்பது, சாப்பிடவைப்பது, தூங்க வைப்பது, டாய்லெட் பேப்பரை உபயோகித்து என்…பதென்று நிறைய வினைச் சொற்களை எனது மனதைப் படித்து, அவள் விரையம் செய்ததில் அவளில்லாமல் ஆ.லெ. வள்ளியப்பனில்லை என்றாகிவிட்டேன்.

ஒருநாள் கொஞ்சம் அதிகப்படியான மையலில் பிதற்றிக்கொண்டிருக்கிறேன். அவள் எனது காதினை மெல்லக் கடித்துவிட்டு, “வள்ளியப்பன் நமக்கு அதிஷ்டம் வந்திருக்கிறது” என்றாள்.

“எப்படி?”ன்னு கேட்கிறேன்.

“எங்க ஆட்களுக்கொரு சா·ப்ட்வேர் நாம எழுதணும். அப்படி எழுதினா எங்களுக்கும் இலாபம். உங்களுக்கும் இலாபம். என்ன சொல்றீங்க?

“எத்ரியா.. என்னிடம் நிக்கோலஸ் கோபர்னிகஸ் குறித்து கேளு. கிரகங்களின் எண்ணிக்கையைக் கேளு. அவற்றின் வழித்தடங்களைக் கேளு. அந்தக் கிரகங்களுக்குள்ள வெப்பத் தன்மையையும் அவற்றுக்கான வண்ணங்களையும் கேளு. கிரகங்களுக்கிடையே உள்ள தூரத்தை வானியல் அளவில் கேளு. அதைவிடுத்து சா·ப்ட்வேர் எழுதணும்னு சொல்ற. ஏதோ மீயுரை(HTML) குறியீட்டில் சில வரிகள் எழுதுவேன். அதை வச்சு பெருசா எதையாவது கனவு காணாதே. சத்தியமா சொல்றேன். சா·ப்ட்வேர் பற்றி எனக்கு ஒரு மசுரும் தெரியாது.”

“பயப்படாதே. உன்னோட வான சாஸ்திர அறிவுதான் எங்களுக்கு வேணும். மற்றபடி சா·ப்ட்வேர் எப்படி எழுதணுகிறதை நான் வழி நடத்துவேன். இதை மட்டும் நீ எழுதிமுடிக்க உதவுவாயென்றால் உனக்குப் பெரிய புதையல் காத்திருக்கிறது.

“என்ன அது? இந்தியாவைத் தூக்கி என்கையில் கொடுக்கப் போகிறீர்களா?”

“இல்லை எத்ரியாவை, உனக்கே உனக்கென்று கொடுக்கப் போகிறார்கள்”

“எனக்குப் புரியலை”

“உன்னுதவியால் எழுதப்படவிருக்கும் மென்பொருள் செயலி எங்கள் எதிர்பார்ப்பின்படி அமையுமானால், இனி ந, இந்த முப்பரிமாண எத்ரியாவுடன் கொஞ்ச வேண்டிய அவசியமில்லை. அசலான எத்ரியாவுடனேயே காதல் செய்யலாம். நான் சொல்வதெல்லாம் சத்தியம். ஏதாவதொரு கோளில், கோட்டையை எழுப்புவோம். அங்கே நமக்கென்ற தொரு அரண்மணை, உப்பரிகை, நந்தவனம், அந்தபுரம், சப்பிரமஞ்சம், ஓய்வு நேரங்களில்புஷ்பக விமானம் என்று ஏற்பாடு செய்துகொண்டு தேவையான எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்று நம்முடைய இனத்தை விருத்தி செய்வோம் சம்மதமா?”

“மூட்டை மூட்டையாய் சம்மதம். எப்போ புறப்படலாம்?”

“இப்போதில்லை. நாளைக்குக் காலையில் பயணம். பூலோகத்திலிருந்து புவர்லோகம் போகணும். வழியில் மூணு அல்லது நான்கு கிரகங்களில் தங்க வேண்டியிருக்கும்.”

“எதிரியா சொன்னதுபோலவே, வழியில் இரண்டொரு கிரகத்தில் தங்கி எங்கள் வாகனத்திற்கு எரிசக்தியை நிரப்பிக்கொண்டு, அவள் குறிப்பிட்டிருந்த புவர்லோகத்துக் கோளொன்றில் எழுப்பியிருந்த அந்தக் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் கம்பெனியை அடைய ஒரு மாதம் பிடித்திருந்தது.

முதலிரண்டு கிழமைகளும் வேலைகளேது மில்லாமல் கேப்ஸ்யூல்களை விழுங்கிக்கொண்டு அத்தியாவசியமான கடன்களின் நிர்ப்பந்தமின்றி இருந்தேன். ஆனால் நாட்கள் ஆக ஆக எத்ரியாவைக் காணாமல் நான் தவிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ராஜாக்களுக்கான உடை அலங்காரத்துடன் அசப்பில் என் மாமா மாதிரியான ஒருவன்  தானழைத்துவந்த பெண்மணியை லாபியில் உட்காரவைத்துவிட்டு எனது பக்கத்து ஆசாமியிடம், வெகுநேரம் பேசிவிட்டுப் போனான்.  எனக்கு என் மாமாதான் மோப்பம் பிடித்து ஆவுடை நாயகியை இவ்வளவுதூரம் அழைத்து வந்திருப்பாரோ என்ற சந்தேகம். அந்தப் பெண்மணியைப் பார்க்க லட்சணமாகயிருக்க சந்தேகம் தீர்ந்தது. ஆனாலும் வந்த நபரை யாரென்று அறிந்து கொள்ளும் ஆவலில் பக்கத்து ஆசாமியிடம் கேட்டுவிட்டேன்.

“யார் இந்த ஆள்? ஏதோ நாடகத்திலிருந்து மேக்கப் கலைக்காமல் வந்தவன் மாதிரி இருக்கிறானே? அவனுக்கு இங்கென்ன வேலை?”

“மெல்லப்பேசு. நாடகத்து ராஜாயில்லே. நிஜராஜா. இலங்கை ராச்சியத்தின் அதிபதி. பேரு இராவணன். அவன் இந்தியாவைச்சேர்ந்த அயோத்தி மன்னன் ராமனின் மனைவியான சீதையைக் கடத்தியிருப்பவன். இலங்கைக்குத் திரும்பற வழியிலே இங்கு வந்திருக்கிறான்.”

“என்னவாம்?”

“அனுமன் சீதையைத் தேடிகொண்டு இலங்கைக்கு வருகிற பாதையை மாத்தணுமாம்”

“முடியுமா?”

“அடடே! உனக்கு நம்ம கம்பெனியின் பிராஜெக்ட் பற்றி எதுவும் தெரியாதா? இன்றைக்கு மதியம் இரண்டு மணிக்கு நம்ம பிராஜக்ட் லீடர் மிஸ்டர் சாரங்கன் இங்கே வரார். அவர் விளக்கமாச் சொல்வார். பிரம்ம லோகத்துலே வேலை பார்த்தவரை நம்ம கம்பெனிதான் எத்ரியா டெக்னிக்கைப் பயன்படுத்தி இங்கே அழைச்சுவந்தது.”

“எத்ரியா டெக்னிக்கா?”

“ஆமாம் உன்னையும் என்னையும் அழைத்துவர உபயோகப்படுத்திய தந்திரம். மிஸ்டர் சாரங்கன் இங்கே வந்து சேர்ந்ததும் அப்படித்தான்.”

” ஆனா எத்ரியா என்ற பேரு நான் வச்சதுதானே?”

“இல்லை! அப்படி உன்னை நம்ப வச்சிருக்காங்க. நடந்ததெல்லாம் ஆப்பரேஷன் மகா சங்காரத்தின் முதற்படி. இரண்டு மணிக்கு எத்ரியா பிராஜக்ட் லீடரோட வருவா. எல்லாம் தெரியவரும் அதுவரை அமைதியாயிரு. “

பகல் இரண்டுமணிக்கு பக்கத்து ஆசாமி சொன்னதுபோல எத்ரியா வந்தாள். அவளோடு உச்சித் தலை குடுமியும், நெற்றியில் திருநீறும், மார்பில் முப்புரியும், இடுப்பில் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக ஒரு மனிதர்.

“மிஸ்டர் வள்ளியப்பன்! மீட் மிஸ்டர் சாரங்கன். நம்ம பிராஜெக்ட் லீடர்.” மூவரும் மாற்றி மாற்றிக் கை குலுக்கிக்கொண்டு அறிமுகம் முடிந்தபின் நாற்காலியில் அம்ர்ந்தோம்;

“வள்ளியப்பன் நேரடியாக விஷயத்துக்கு வறேன்; இந்த பிராஜக்டுக்குப்பேரு ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’. இந்த யூ.ஸ்.பி. கியில் உள்ள தகவல்களைப் பிரம்மலோகத்திலிருந்து தந்திரமாக கொண்டுவந்திருக்கோம். இந்தக் கோப்பிலே உள்ளபடிதான் ‘உலகத்தில் நடந்ததும் நடக்கவிருப்பதும்’ என்று நம்பப்படுகிறது. இதைத்தான் நாம மாற்றி எழுதணும். அப்படி மாற்றி எழுதமுடியும்னா, நம்ம கம்பெனி எம்.டி.தான் அடுத்த பிரம்மா. எப்படிங்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம். முடியும் நம்மால் முடியும். கிரகங்களின் பாதையை மாற்ற முடியும்னா உலகத்தின் தலையெழுத்தையும் மாற்ற முடியும்னு நம்பறோம். இதற்கொரு சா·ப்ட்வேர் நாம் எழுதப்போறோம். அதன் மூலமா கிரகங்களின் பாதையை மாற்றுவதென்று தீர்மானிச்சுருக்கோம்.

“புரியலை?”

“இந்த உலகம் பூகம்பம், புயல், கடல் கொந்தளிப்பால் சிறு அழிவுகளைச் சந்தித்து அழிந்தும் தோன்றியும் வருகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால் உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழியுமென்றால் அதற்கு மகா சங்காரம் என்று பெயர். அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு நம்ம பிரம்மா உருவாக்குகிற உலகில் குறையற்ற மனிதர்கள் தர்ம ஆத்மாக்கள் மாத்திரமே ஜனிப்பார்கள்.”

” அய்யய்யோ … அப்படியானால் மகா சங்காரத்தின்போது அழிவு எல்லா உயிர்களுக்குந்தானே?”

“அப்படியில்லை. மகா சங்காரத்தின் முடிவில் மாயையில் இறைவன் ஒடுங்குகிறான். பிரம்மனுக்கு அழிவில்லை. அதாவது மகா சங்காரத்தின் கர்த்தராகிய நம்ம எம்.டி.க்கு அழிவில்லை. அழிவின் முடிவில் முதல் ஜனனம் நாமதான். அவரது வார்த்தைகளை பரிபூரணமா நம்பலாம். அதற்கான உத்தரவாதங்களை எனக்குக் கொடுத்திருக்கார். மகாசங்காரத்தை நாம் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உலகத்தைத் தயார் செய்யணும். “இதுவரை நடந்ததையும் இனி நடக்கவிருப்பதையும்” புரட்டிப்போடணும்”. வரிசையாக நாம செய்யப்போற காரியங்களையும் வரிசைபடுத்தி உங்களிடம் கொடுத்த யு.எஸ்.பி கீயில் குறிச்சி வச்சிருக்கேன்.  அப்போதுதான் அழிவினை வேகமாக நெருங்கமுடியும். மிஸ்டர் வள்ளியப்பன் மிகவும் ஜாக்கிரதையாக எழுதவேண்டிய செயலி. எங்காவது எசகுபிசகாக நடக்குமானா நம்ம எல்லோரையும் கோளுக்கு வெளியே உதறிவிடுவார்கள். முதலில் நீங்க பிராஜக்டோட மாடலிங் சா·ப்ட்வேரை எழுதுங்க. அதன் பிறகு பிராஜக்ட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். இனி மிஸ் எத்ரியா இந்த நிமிடத்திலிருந்து ஆப்ரேஷன் மகாசங்காரம் சா·ப்ட்வேரை எழுதிமுடிக்கும்வரை உங்களோடுதானிருப்பாள். நான் வரட்டுமா?”

குடுமிக்கார கிழவன் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் எத்ரியா என்பக்கத்திலிருந்தாள்.

“சாரி டியர்! இரண்டு வாரமாக உங்களை ரொம்பவே காயப்போட்டுட்டேன். அதற்குப் பரிகாரமாக ஏதேனும் செஞ்சாகணும். எங்கே வச்சுக்கலாம்?”

“போடி…..எக்குதப்பா ஏதாவது சொல்லிடப்போறன், எனக்கு முதலில்  மூத்திரம்போகணும் என்று கத்திவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்துகொண்டேன். பாக்கெட்டிலிருந்த கைகணினியில் யு.எஸ்.பி.கீயை செருகி அவசரகதியில் தரவுகளில், பூமியில் நீங்கள் வாழும் காலத்திற்குப் பொருந்துகின்றத் தகவல்களை மாத்திரம் அனுப்பிக்கொண்டிருக்கீறேன்.

இதுவரை ஆப்பரேஷன் மகா சங்காரத்திற்கு ஆதரவாக இந்தக் கூட்டம் தீர்மானித்திருப்பவை.

75690 நவம்பர் 2002 சீனாவில் சார்ஸ் நோயினைப் பர்வச் செய்தல்…

75689 செப்டம்பர் 6 2002 ஈராக் மீது அமெக்க பிரிட்டிஷ் விமானங்களின் தாக்குதல்…

75688 செப்டம்மர் 11 2001 அன்று  அமெரிக்க இரட்டைகோபுரங்…….

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-4

அவனோட கணக்கு

கதை பிறந்தகதை: இக்கதைக்கு காரணம் சொல்ல என்ன இருக்கிறது. உலக நடப்புகளை பார்த்துவருகிறோம். எத்தனை கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். இனத்திற்கு கொள்ளிவைத்துவிட்டு இனத்தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். கை இரத்தம் உலரும் முன்பாக காந்தி சிலைக்கு மாலை போடுகிறார்கள். நாத்திகனென்று சொல்லிக்கொள்பவன்கூட அவனவன் வழியில் பிராயசித்தம் தேடுகிறான். சலவைக்குத் துணிபோடும்போதுகூட சட்டைப்பயை ஆயிரம்முறை பரிசோதிக்கும் அரசியல் வாதி, இலவசத்தை வாரிவழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்பதை யோசித்ததால் பிறந்த கதை. காந்தி, காமராஜ், அண்ணா மன்னிப்பார்களாக! இக்கதை திண்ணை இணைய இதழில் மார்ச் 9 -2003ல் பிரசுரமானது.

அவனோட கணக்கு

அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்சரசுத்தமாக. ‘நான்’ என்ற  மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும் அப்போதைக்கப்போது நினைவைத் தொட்டுக் கண்ணாமூச்சி ஆடின.

காலையில் காபியைக் குடித்துவிட்டு, காலில் விழுந்த கட்சித் தொண்டர்களை எழுப்பியது நிஜம். பின்னர் தலைமைச்செயலர், போலீஸ் கமிஷனர், மூணாறு வேணுகோபால் ஜோஸ்யர் என கலந்தாலோசித்துவிட்டுத் தலமைச் செயலகத்துக்குப் புறப்பட இருந்ததும் நிஜம். முதலும் கடைசியுமாக மார்புவலி அந்தச் சமயத்தில் அவருக்கு வந்ததும் நிஜம். ட்ராபி·கை ஸ்தம்பிக்கச் செய்து ஓடவைத்த ஆம்புலன்ஸ், தமிழ்நாட்டின் முதற்தர மருத்துவ மனை, நாட்டின் தலைசிறந்த டாக்டர்கள், மருத்துவ செலவுக்கு அரசு கஜானாவைத் திறந்துகொள்ள முடிந்த சாமர்த்தியம், மத வேற்றுமையின்றிப் பிரார்த்தனையென எல்லாமிருந்தும் அவரது ஆயுளைக் கூட்டமுடியவில்லை. அதற்குப்பிறகு நடக்க வேண்டியவை நடந்து முடிந்து, இங்கே வந்திருந்தார்.

பெரிய மாளிகையில் வண்ண ஓவியங்களால் நிரப்பப்பட்ட விதானம், சிற்பங்கள் நிறுத்திவைக்கப்பட்ட கூடம். தீபங்கள் குறைந்து பின்னர் வளர்ந்து, வரிசையில் முடிவின்றித் தொடர்கோடாய் எரிய, சாளரங்கள் வழியே ஊதற்காற்று ஆக்ரமித்துக் கொண்டிருக்க வரிசையாக இருக்கைகள். ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்ற மக்கள். கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு எனக் கதம்பச் சாயலில், முகம் சோர்ந்து தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் 235767 எண்ணுள்ளவரை கூப்பிட்டிருந்தார்கள். இவரது அட்டையைப் பார்த்துக் கொண்டார். வரிசை எண்:4563980 என்றிருந்தது. இங்கே காத்திருப்பதில் நேரம்கழிவதை உணர்வது கடினமாக இருந்தது. எனினும் அறிமுகமற்ற அந்த இடத்தின் மீதும், மனிதர்கள் மீதும் எரிச்சல். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தார். திடீரென அவரது எண் அழைக்கப்பட எழுந்து சென்றார்.

விஸ்த்தாரமான பெரிய அறையில் ஏஸி முணுமுணுக்க, இன்டர் காம், கம்ப்யூட்டர் என ஒரு நவீன அலுவலகத்தின் சகல சம்பத்துகளும் சூழ நடுநாயகமாக அந் நபர். அவர் உட்கார்ந்திருந்த தோரணை இவரது ரத்தத்தில் உஷ்ணமேற்ற, எச்சிலைக்கூட்டி வெறுப்பினை விழுங்கிக் கொண்டார்.

– வா! உட்காரு, சிவசாமிதானே உன்பேரு? – எடுத்த எடுப்பில் ஏக வசனத்தில் பெயர் சொல்லி அழைக்கப்பட  ஆடிப்போய்விட்டார்.

–  இருக்கலாம், சரியா ஞாபகம் இல்லை. போகட்டும் நீ சித்திரகுப்தன் தானே ? தன் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பி, எதிர்க்கேள்வியை வைத்தார்.

–  மிஸ்டர் சிவசாமி! இங்கே நான் உன்பேரைச் சொல்லலாம், நீ என் பேரைச் சொல்லி அழைக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரையில் மாரைடைப்புண்ணு சொல்லி வந்திருக்கிற உயிர்கள்ல நீ 705 வது ஆள். கொஞ்சம் இரு. உன்னைப் பற்றி என்ன பதிவாயிருக்குண்ணு பார்க்கிறேன்’, அவன் விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட்ல ‘கட கட ‘ வென்றது. பிரிண்டரை ஆன் செய்து அச்சிட்ட காகித்தைக் கிழித்து எடுத்து கண்களின் நேர்கோட்டின்கீழ் சற்றுத்தள்ளி வைத்துப் படித்தவன், மெல்லிய சீழ்க்கையில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டான்.

– பெயரைத் தெரிஞ்சுகிட்ட. மற்றத் தகவல்கள் வேண்டாமா ? கேளு! என்று சொல்லிவிட்டு, இவரது பதிலை எதிர்பார்க்காமலேயே கடகடவென ஒப்புவிக்க ஆரம்பித்தான்:’தொழில்: அரசியல்வாதி. குடும்பநிலை:பிரம்மச்சாரி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை. ஊழல் செய்து சம்பாதித்த சொத்து உலகமெங்கும் பரவியிருக்கு, தொடர்ந்தான்.

– ஆனால் அதற்காக கடவுள்களுக்கு நிறைய செஞ்சிருக்கன். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை எந்தக் கோவிலையும் விட்டதில்லை. காணிக்கை, நாள் கிழமைகள்ல உபவாசம், முடிஞ்சப்பல்லாம் யாகம்’. இதெல்லாம் அதுல குறிப்பிட்டிருக்கணுமே ? ‘ இடையில் குறுக்கிட்டு சந்தேகத்தை எழுப்பினார்.

– ம்…அப்படி எதுவும் உன்னோட ‘பயோடட்டாவில’ இல்லையே! பற்களுக்கிடையில் பென்சிலை கொண்டுபோய்க் கடித்துத் துப்பிவிட்டுச் சொன்னான்.

– சிவசாமிக்குத் தைரியம் வந்தது. முதன் முறையாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.

– என்னோடக் கணக்குப்படி  சொர்க்கந்தான் கொடுத்திருக்கணும். என்னோட காணிக்கைக்கும் செய்திருக்கின்ற யாகத்திற்கும், இக் கும்பலில் உட்கார வைத்திருக்கவே கூடாது. ஆரம்பத்திலேயே சொர்க்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கணும்.

– இப்படி குறுக்கே பேசக்கூடாது. இங்கே நாந்தான் பேசணும். உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். இப்போதைக்கு நீ மறுபடியும் கீழே போகவேண்டியிருக்குது, – சித்திர குப்தன் தொடர்ந்தான்..

– கீழேன்னா?

– பூமிக்கு.

– அப்ப எனக்கு மறு பிறவின்னு சொல்லு.. ‘நேற்று ‘நான் எப்படி இருந்தங்கறத கவனத்துல வச்சுகிட்டு செஞ்சா சரி. – சிவசாமி முதன் முறையாக அடக்கி வாசித்தார்.

– ம்.. உன்னோட ‘நேற்று’ மட்டுமல்ல ‘இன்று’ ‘நாளை’ கூட நாங்க அறிஞ்சதுதான். பிறப்பு அதனையொட்டிய கர்மா, ஊழ் எல்லாமே நாங்க தீர்மானிக்கறதுதான். இதுல உன்னோட பங்கு நீ எப்படி அதனைச் சந்திக்கிறங்கிறது அல்லது செயல்படுத்தறங்கிறதுதான்.’

-என்னவோ சொல்லி குழப்புற. முடிவா என்ன சொல்ல வர?

– இன்றைய தேதியில உனக்கு சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லைன்னு சொல்லவந்தேன்.. கைலாயம் வைகுண்டம் இரண்டுமே உன்னை ஏத்துக்க முடியாதுண்ணு கையை விரிச்சுட்டாங்க. நீ கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தங்கற. நான் முன்னமே சொன்ன மாதிரி, உன்னோட புண்ணிய லிஸ்ட்ல அதனைப் பற்றிய எந்த அடையாளமும் இல்லை. அதற்கான காரணத்தைக் கடவுள்கள் கிட்டத்தான் கேட்கணும் ‘

இடையே இண்டர்காம் ஒலிக்க அவரை அமைதிப்படுத்திவிட்டு, சித்திரபுத்திரன் ரிசீவரைக் கையிலெடுத்தான்.

– சார் இங்கே, ஆப்ரிக்காவில் மனித மாமிசம் சாப்பிடும் ஒருவனைச் சிங்கம் அடித்துக் கொன்றதால், அவசர பிரிவுக்குக் அழைத்து வந்திருக்கிறார்கள், என்ன செய்யலாம் ?

– நல்ல மனிதன், அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்து சொர்க்கத்துக்கு அனுப்பி வை!

– என்ன இது அநியாயமாயிருக்குது. மனிதனை உயிரோடு சாப்பிடுபவனுக்கு சொர்க்கமா?

– ஆமாய்யா!.. அப்படித்தான் எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. உங்களை விட அவன் தேவலாமாம். உனக்கு மறு பிறவியான்னு கேட்ட, சொல்லப்போனா பூமிக்கு உன்னை மறுபடியும் அனுப்புவது, தண்டனைக்காகன்னு சொல்லலாம்.

– எப்படி ?

– அப்பாவி வாக்காளனா.

————————————————————————————————————————-

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-1

எனக்குப்பிடித்த எனது சிறுகைதைகளில் முக்கியமானவற்றை மீண்டும் நண்பர்களுக்காக அவ்வப்போது மீள் பிரசுரம்செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

நாளைபோவேன்

கதை எழுந்த கதை:

காரணம் எதுவாயினும் புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஏக்கம் பின்னிரவு கனாக்களாக மட்டுமின்றி பகற்பொழுது உரையாடல்களில் கூட வந்துபோகும். ஒவ்வொரு நாளும்,  வந்ததற்கு ஏதோ கொஞ்சம் பணம் திரட்டிக்கொண்டு  ஊர் திரும்பிவிடமாட்டேனா? என அவர்கள் ஓயாமல் கூறியதை நீங்களும் காதுகொடுத்துக் கேட்டிருப்பீர்கள். தோட்டமென்ன, காணி என்ன? ஆற்றின் சலசலப்பு என்ன, ஆத்தா வைக்கும் குழம்பு ருசியென்ன என்கின்ற இவர்கள்தான் வந்த ஊரின் வசதிகள், தரும் சௌகரியங்கள், கூரையைப்பிரித்துக்கொட்டிய தளுக்கான வாழ்க்கை, பதியமிட்ட புதுநிலத்தில் தளிர்விடும் சந்ததிகள் இவற்றை பிரிய மனமின்றி சொந்த மண்ணுக்குத் திரும்புவதை ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டு பின்னர் தம் மனதை சமாதானப்படுத்த புதுப்புதுக்காரணத்தை தேடிக்கொண்டிருப்பார்கள்.  இந்தியாவில் குக்கிராமமொன்றில் பிறந்து பொருளாதாரக் காரணத்திற்காகவே புலம்பெயந்த எனது வாழ்க்கையும் கனவும் அதற்கு விதிவிலக்கல்ல.

17-6-2001ல் கல்கியில் வெளியான இச்சிறுகதையை ஆனந்தவிகடன், கல்கி இருவருமே தேர்வு செய்திருந்தார்கள். கல்கியிடமிருந்து முதலில் பிரசுரத்திற்குத் தேர்வுசெய்து கடிதம் வந்ததால் விகடன் திரு. வீயெஸ்விக்கு உரிய நேரத்தில் கடிதம் எழுதி தவிர்க்கவேண்டியதாயிற்று.

நாளைபோவேன்

வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது.

இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக இவனுக்குள் தீர்மானம். இயற்கைகூட தமது காரியங்களை அட்டவணைபடுத்திச் சாதிக்கிறதோ? முன்னதாக் கணிக்கப்பட்டு காரியங்கள் ஆற்றப்படுவதில், எதிர்பார்த்தபடி நடைபெறுவதில் சுவாரஸ்யமில்லையென்பது அவன் எண்ணம். வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அத்தியாயங்களால்  எழுதப்படவேண்டும். சந்தோஷமோ துக்கமோ சொல்லிக்கொண்டு வரக்கூடாது. பிறப்பைப்போல இறப்பைப்போல ‘இன்றோ நாளையோ’ எனும் நிகழ்வுகளால் அமையவேண்டும்.

திரைச்சீலையை விலக்கி, சன்னலின் இரட்டைக் கண்ணாடியினூடே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்ற நிகழ்ச்சி.  இந்நிகழ்வில் இவனுக்குள் முரண்பாடு. எந்தத் திட்டமிடலை எதிர்க்கின்றானோ, அதனிடமே சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போகிறான். புறவாழ்க்கையை உடைத்துக்கொள்ள சிந்தனை அவசரப்படுவதும், அந்நேரங்களில் அதனை அமைதிப்படுத்துகிறவகையில், போதும் இந்த வாழ்க்கைபோதும் என தீர்மானிப்பான். இந்த பொம்மலாட்ட வாழ்வு வேண்டாம் இக்கயிற்றிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

வானிலிருந்து இரைச்சலாக சப்தம். அவன் உள்ளத்தைபோல இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் விமானம். அதனுடைய காரியங்கள்கூடத் திட்டமிடப்பட்டவை. புறப்படும் இடம், சேர இருக்கிற இடம், எடுத்துக்கொள்ளும் நேரம், பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என எல்லாமே. இரைச்சலிடும் இவ்விமானம் போகும் ஊர் எந்த ஊராக இருக்குமென்பதனை அவனுடைய பூகோள அறிவு விடை தராமலேயே  தேடுதல் சுவாரஸ்யத்தைக் கலைக்காமல் ஒளிந்துக்கொண்டது.

காலை ஆறுமணி. அதிகாலை விழிப்பினை ஐரோப்பா அறியாதது. இவன் மட்டும் விழித்திருந்தான். காலை ஐந்துமணியிலிருந்து சன்னலை ஒட்டி நிற்கிறான். அதிகாலையில் எழுந்திருக்கிற பழக்கம் அவனுக்கு இந்தியாவில்தான் வந்தது. மார்கழித் திங்களில் சின்னவயதில், காலையில் எழும்பி, கிணற்று நீரை வாளி வாளியாக உடம்பில் கொட்டிக்கொண்டு, பஜனை பாட ஓடியதும், பஜனையின் முடிவில் சுண்டலைத் தின்று சட்டையில் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவில் வந்து போயின. அன்றைக்கு பஜனைக்குக்கூடும் பையன்களில் யார் முந்திக்கொள்வதென்பதை முன்னிட்டு பிறக்கும் உற்சாகம் இன்றைக்கில்லை. என்றாலும், ஐரோப்பிய மண்ணிலும் காலையில் விழிப்பு பிறக்கிறது. தனதில்லத்தில் பிறர் காலை பத்து மணிவரை உறக்கத்தை அனுபவிப்பதைக் கண்டு எரிச்சலும் கோபமும் வருகிறது.  இந்த எரிச்சலும் கோபமும் எதிர்தரப்பிலுள்ள அந்தப் பிறருக்கும் உண்டு.

பிரேமா- அவன் மனைவி எழுந்தவுடன் அவளிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தான்.

சன்னலில் பார்க்கிற காட்சிகள் மாறவேண்டும். காகம் கரைதலைக்கேட்கவேண்டும். கூரைவேய்ந்த வீடுகளைக் கடந்துசெல்லும் புகை மூட்டத்தைக் காணவேண்டும். காலைப்பேருந்துகளில் ‘மார்க்கெட்’டிற்கு கொண்டுபோவதற்காக இறக்கப்படும் காய்கறி மூட்டைகளில் ‘தொபீர்’களைக் கேட்கவேண்டும். போர்வையை விலக்காமல் கலைந்த தலையும் கண்களில் தூக்கமுமாக டீக்கடைக்குள் நுழையும் ‘என் முகங்களைக்’ காணவேண்டும். மழையில் நனைந்த சோர்வை வெளிக்காட்டாமல், சாராயத்திற்கு வழி பிறந்ததென்ற தெம்பில் ரிக்ஷாவின் பெடல்களை அழுந்த மிதிக்கும் ‘என் கால்களைக்’ காணவேண்டும். தண்ணீரில்  நனைத்த விரல்களைக் சொடுக்கிக் காம்புகள் வலிக்காமல் கால் இடுக்கில் குவளையைத் தொற்றவைத்துப் பால் கறக்கிற ‘என் கைகள்’ வேண்டுமென சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஊரில் நிறையபேர் இருந்தனர். ஆனால் அதுதான் எப்போது? என்றைக்கு? நாளையா? நாளை மறுதினமா? அடுத்த மாதமா? அடுத்த வருடமா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்து எல்லாவற்றிலும் பிரம்மித்தது நிஜம். அந்தப் பிரம்மிப்பு இப்படித் தன்னை இவ்வளவு சீக்கிரம் குறுக்கிக்கொள்ளும் என்று அவன் நினைத்ததில்லை. தீர்மானித்துவிட்டான். இன்றைக்கு இதற்கொரு முடிவு கட்டியாகவேண்டும். ஸ்டீரியோவைத் திருப்பினான். சி.டியி யில் நித்யஸ்ரீ யின் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்ற பாடல். சிரித்துக்கொண்டான். பிரேமா எழுந்துவிட்டாள். கட்டிலைச்சரி சரி செய்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் கேட்பாள் என்னங்க கப்பூசீனாவா? ஹார்லிக்ஸா? இக்கேள்வியைக்கூட அவள் மாற்றினால் தேவலாம்.

பூசனிப்பூவும் கோலமுமில்லாமல் இங்கே மார்கழி விழித்துக்கொள்வதில் அவனுக்குள் கசப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இவனது வாரிசுகள் அறைகளில் “குளோஸ் ஆல் மை ஐஸ்” ஸோ அல்லது விட்னி ஹ¥ஸ்டனின், “மை லவ் ஈஸ் யுவர் லவ்”வோ ஒலிக்கத் தொடங்கும். இவன் தேடுகிற தருமபுரம் சுவாமிநாதனுக்குகோ, சின்ன மௌலானாவுக்கோ இங்கே இடமில்லை என்கிற்போது மனதுக்குள் புழுக்கம் கூடிவிடும்.

முகத்தைத் திருத்திக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள் அவன் மனைவி.

“பிரேமா! கொஞ்சம் சாக்லேட் அதிகமாகவிட்டு கப்புச்சீனோதான் கொண்டுவா, உன்னோட பேசணும்”

” உங்களுக்கு ஞாயிற்றுகிழமையானா இந்தியா ஞாபகம் வந்திடுமே. இன்றைக்கே இந்தியாவுக்குக் கிள்ம்பவேண்டும்னு காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு குதிப்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டதே?”

“அப்படியில்லை பேரேமா! இன்றைக்குத் தீர்மானமா இருக்கேன். இப்படி உட்கார்.”

” எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” சென்றவள் வங்கியிலிருந்து கடந்த மாத இறுதியில் வந்திருந்த நிலவரத் தாள்களை மேசையிற் பரப்பினாள்.

அவசர அவசரமாக அவற்றைப் புரட்டினான். எத்தனை முறை புரட்டினாலும் அதில் இருப்பதுதான் இருக்குமென்ற அடிப்படை உண்மையில் நம்பிக்கையற்றுப் புரட்டினான். எண்களும் பூஜ்ஜியங்களும் கண்ணாமூச்சி ஆடின.

இங்கே வந்த ஆரம்பத்தில் இந்தியப் பெரியவர்களைப் பார்த்து அவன் கேட்கிற கேள்வி:

“ஏங்க..! எப்படி இந்த ஊர்ல இருக்கறீங்க? ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நம்ம ஊருபோல வருமா?”

“என்ன செய்வது தம்பி? நம்முடைய தலைவிதி அது. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கணும்னுதான் வரோம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளைகள் இச்சூழலில் வளரும்போது, அவர்களோட நாமும் இங்க வாழவேண்டிய நிர்ப்பந்தம்.”

“இல்லைங்க.. அப்படிச்சொல்லாதீங்க! எனக்கு மட்டும் தேவையான பணம் கெடைச்சுதுன்னா ஊருக்குத் திரும்பிவிடுவேன்.”

பெரியவர் சிரித்தார்.

அவனுக்கு அந்தத் ‘தேவையானப் பணத்தை’ நிர்ணயிப்பதில்தான் சிக்கலே. வந்த புதிதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வரித்துக்கொண்டு ‘தேடுதலைத்’ தொடங்கியவன் இன்றுவரை நிறுத்தியபாடில்லை. வருடங்கள் கூடக்கூட அவன் மனதில் வரித்தத் தொகை தனது நீள அகலத்தை, பரிமாணத்தைக் கூட்டிக்கொண்டு உச்சுகொட்டியது. கைக்கெட்டிய சுகங்கள் அவனுக்குத் திகட்டவில்லை. பதிலாக இன்னும் இன்னும்.. என்ற ஏக்கத்தை வளர்த்தன.

வங்கித்தாள்களில் விடுபடமுடியாமல் தலையைச் சொறிந்துகொண்டான்.

“பிரேமா?”

“கூப்பிட்டீங்களா?”

“ஆமாம். நம்ம வங்கிக்காரனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும். இந்தியாவிலேயே இன்னுமொரு வீடோ அல்லது இங்கேயே இன்னுமொரு அப்பார்ட்மெண்ட்டோ வாங்கணும்.”

“அப்போ.. இந்தியாவுக்கு எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“இப்போதைக்கு இல்லை” சலித்துக்கொண்டு பதில் வந்தது.

அடுத்த ஞாயிற்றுகிழமையும் சன்னல் திரையை விலக்கி வைத்துக்கொண்டு, ஐரோப்பிய வாழ்க்கையைச் சாபமிடுவான். இந்தியாவிற்குப்போக நாள் குறிப்பான்.

——————————